கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
15 டிகிரி செல்சியஸில் நுண் பிளாஸ்டிக்குகளை உண்ணும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆல்ப்ஸ் மற்றும் ஆர்க்டிக்கில் இருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சியில் இது திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல நுண்ணுயிரிகள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும் அவை 30 டிகிரி செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பநிலையில் மட்டுமே இயங்குபவை.
இந்த நுண்ணுயிரிகள் தொழிற்சாலைகளில் இவற்றைப் பயன்படுத்த அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இது அதிக செலவு பிடிக்கக் கூடியது. தொழிற்சாலை நடைமுறையில் இது கார்பன் நடுநிலைத் தன்மையற்றது. ஆனால் இப்போடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும்
சுவிஸ் பெடரல் கழகத்தின் (WSL) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை, Frontiers in microbiology என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிஸ் கழகத்தின் டாக்டர் ஜோல் ரூத்தை (Dr Joel Ruthi) மற்றும் அவரது குழுவினர் 19 பாக்டீரியா, 15 பூஞ்சை மாதிரிகளை க்ரீன்லாந்து, ஸ்வால்பார்டு (Svalbard) மற்றும் சுவிட்சர்லாந்தில் ஓராண்டு காலம் மண்ணில் புதைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் வளர்த்து ஆராய்ந்தனர்.
திசு வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணுயிரிகள் உட்கொள்ளும் பல்வேறு வகை நுண் பிளாஸ்டிக்குகள் ஆராயப்பட்டன. இந்த நுண்ணுயிரிகள் 13 ஜெனரா (13 genera) வகையைச் சேர்ந்த பைலோ ஆக்டினோ பாக்டீரியா (Phyla actinobacteria), ப்ரோட்டோ பாக்டீரியா (Proteobacteria) ஆகிய பாக்டீரியா வகைகளைச் சேர்ந்தவை.
10 ஜெனரா வகையைச் சேர்ந்த பைலோ அஸ்காமிகோடா (Phyla ascomycota), மியூக்கோராமிகோடா (Mucoromycota) பூஞ்சையினங்களும் ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டன.
பிளாஸ்டிக் வகைகள்
மக்கும் தன்மையற்ற பாலி எத்திலீன் (PE), மக்கும் தன்மையுடைய பாலியெஸ்ட்டர், பாலி யூரித்தேன் (Poly Urethane PUR) மற்றும் வணிகரீதியாகக் கிடைக்கும் பாலி ப்யூட்டிலின் அடிபேட் தெரிஃப்ப்தேலேட் (Polybutylene adipate terephthalate PBAT) பாலி லேக்டிக் அமிலம் (PLA) ஆகியவை கலந்த கலவை பயன்படுத்தப்பட்டன.
எந்த நுண்ணுயிரி வகையும் 126 நாட்கள் வைக்கப்பட்டிருந்த பிறகும் பாலி எத்திலீனை மக்கச் செய்யவில்லை. ஆனால் ஆராயப்பட்டதில் 56% நுண்ணுயிரிகள் அதாவது 11 பாக்டீரியாக்கள் மற்றும் 9 பூஞ்சையினங்கள் 15 டிகிரி செல்சியஸில் பாலி யூரித்தேன் பிளாஸ்டிக்குகளை உண்டன. 14 பூஞ்சைகள், 3 பாக்டீரியாக்கள் பாலி ப்யூட்டிலீன் அடிபேட் தெராஃப்ப்தலேட் மற்றும் பாலி லேக்டிக் அமிலம் கலந்த பிளாஸ்டிக் கலவையை உட்கொண்டன.
குறைந்த செலவில் மறுசுழற்சி
இதன் மூலம் நொதித்தலால் நடைபெறும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஆகும் செலவு மற்றும் சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆராயப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகை நுண் பிளாஸ்டிக்கை உட்கொண்டன. மேலும் விஞ்ஞானிகள் Nneodevriesia, Lachnellula ஆகிய பூஞ்சையினங்கள் பாலி எத்திலீனை தவிர மற்ற எல்லா வகை நுண் பிளாஸ்டிக்குகளையும் உட்கொள்கின்றன என்று கண்டறிந்தனர்.
1950களில் இருந்தே பிளாஸ்டிக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தாவர செல்களில் இருக்கும் சில அமைப்புகளை நுண்ணுயிரிகள் ஒத்திருப்பதால் அவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. தாவர செல் சுவர்களை உடைக்கும் செயலின்போது நுண்ணுயிரிகள் பாலிமர்களை மக்கச் செய்யும் நொதிகளை உற்பத்தி செய்கின்றன என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் பீட் ஃப்ரே (Dr Beat Frey) கூறுகிறார்.
பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கும் பூஞ்சைகள்
தாவரங்களில் கிருமிகளை உண்டாக்கும் பூஞ்சைகள் பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கின்றன. இப்பூஞ்சைகள் க்யூட்டினேசிஸ் (Cutinases) என்னும் பொருளை உற்பத்தி செய்யும் திறண் பெற்றுள்ளன. இது தாவரங்களில் இருக்கும் க்யூட்டின் போன்ற பாலிமரை ஒத்திருப்பதால் இவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் 4 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை நன்கு வேலை செய்கின்றன.
பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்யும் நொதிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரி வகைகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் மாசைப் பெருமளவில் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/may/10/microbes-digest-plastics-low-temperatures-recycling?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கோஸ்ட்டரிக்காவில் 16 ஆண்டுகள் ஆண் துணையில்லாமல் வாழும் கன்னி முதலை முட்டையிட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டை 99.9% தாயின் மரபியல் அம்சங்களுடன் கூடிய முழு வளர்ச்சி அடைந்த கருவுடன் உள்ளது. விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உயிரியல் கடிதங்கள் (Journal Biology letters) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
டைனசோர் முட்டை
முதலைகளின் பொதுவான மூதாதையர்களான டைனசோர்களும் ஒரு காலத்தில் இவ்வாறே ஆணின் துணையில்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு சுயமாக இனப்பெருக்கம் செய்வது Facultative parthenogenesis என்று அழைக்கப்படுகிறது. பறவைகள், மீன்கள், பல்லிகள், பாம்புகளின் சில இனங்களில் கன்னித் தன்மையுடன் புதிய வாரிசுகள் உருவாகியுள்ளது பற்றி முன்பே அறியப்பட்டுள்ளது. ஆனால் முதலையினத்தில் இது நிகழ்வது இதுவே முதல்முறை.ஆண் இனத்தின் விந்தணு உதவியில்லாமல் முட்டை கருவுறுவதையே இந்த நிகழ்வு குறிக்கிறது. க்ராக்கடிலஸ் அக்யூக்கஸ் (Croccodylus Acucus) என்ற இந்த முதலை இரண்டு வயதாக இருக்கும்போது பிடிக்கப்பட்டு கோஸ்ட்டரிக்கா விலங்கு காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக இது தனிமையில் வாழ்கிறது.
பதினான்கில் ஒன்று
2018 ஜனவரியில் காட்சி சாலை ஊழியர்கள் முதலை வாழும் இடத்தில் 14 முட்டைகளைக் கண்டுபிடித்தனர். இவை எவையும் பொரியவில்லை. ஆனால் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
கருவில் இருந்த உயிரியின் இதயத்திசுக்கள் தாயின் ஓட்டில் உள்ள செல்களுடன் ஒப்பிட்டு மரபியல் ரீதியாக ஆராயப்பட்டது. கருவில் இருந்த சிசு தாயைப் போலவே 99.9% ஒத்திருந்தது. இதன் மூலம் ஆண் துணையில்லாமலேயே இந்த கரு முட்டை உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வகை சுய இனப்பெருக்கம் மிக அரிதாகவே நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு உயிரினம் சாதகமற்ற சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும்போது இணையில்லாத நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு ஆளாகின்றன. அப்போது இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சிங்கம் பல உலகக் கலாச்சாரங்களில் சக்தி, வலிமை, கம்பீரம், அதிகாரம் மற்றும் செழுமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. தங்கள் கூட்டத்தில் இருப்பவர்களை, தாங்கள் வசிக்கும் பகுதியின் எல்லையைப் பாதுகாப்பதில் எப்போதும் முனைப்புடன் இருப்பதால் இவை பல நாடுகளின் அடையாளச் சின்னங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
ஆப்பிரிக்கா, இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் வாழ்ந்துவந்த இவை இப்போது ஆப்ப்ரிக்காவின் சில பிரதேசங்கள், இந்தியாவில் குஜராத் கிர் வனங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கின்றன. இன அழிவைச் சந்திக்கும் அச்சுறுத்தல் உள்ள ஒரு வனவிலங்கு என்றாலும், இவை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு இவற்றின் உடற்பாகங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கூண்டில் சிங்கங்கள்
2016-2019ல் 3,300 சிங்கங்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றின் எலும்புகள், உடற்பகுதிகள் வியட்நாம், லாவோஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பெரும்பகுதியும் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடனேயே நடந்தது. ஒரு ஆண்டிற்கு 1500 உடல் பாகங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா முழுவதும் வாழ்ந்த இவற்றின் 80 சதவிகிதமும் இப்போது சஹாராவிற்கு தெற்கில் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி டான்ஜானியாவில் வாழ்கின்றன. இங்கு வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை 15,000. சமீபகாலத்தில் ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் இருந்து மறைந்த இவை, இன அச்சுறுத்தல் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய வைத்தியத்தில் புலியின் எலும்புகளை கொதிக்க வைத்து அதில் இருந்து உண்டாக்கப்படும் மருந்துகள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வாதம், மூட்டுவலிக்கு மருந்தாகவும், இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் இல்லை.
1900களில் இலட்சக்கணக்கில் இருந்த புலிகளின் எண்ணிக்கை குறைந்து வெறும் 1,000 ஆகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் புலியின் உடற்பாகங்களை ஏற்றுமதி செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் புலிக்குப் பதில் சிங்கத்தின் எலும்புகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. இப்போது ஆப்பிரிக்க சிங்கங்கள் இன அழிவை எதிர்நோக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்க சஃபாரி
தென்னாப்பிரிக்கக் காடுகளில் இப்போது இயற்கைச் சூழலில் 3,500 சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. கூண்டுகளில் வளர்க்கப்படும் இவற்றின் எண்ணிக்கை சுமார் 10,000. ஜொஹானஸ்பர்க் மற்றும் பிற இடங்களில் சஃபாரி பூங்காக்களில் இவற்றிற்கு தீவனம் போட, படமெடுக்க, சிங்கக்குட்டிகளை கொஞ்சி விளையாட, அவற்றுடன் நடக்க சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா உரிமையாளர்கள் பணம் வசூலிக்கின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் செயல்படும் 300 பண்ணைகளில் தனி நபர்களின் கைவசம் இருக்கும் இந்த சிங்கங்களை சுட்டுக் கொல்ல, அவற்றின் தலை, தோல், எலும்புகள், நகங்கள் போன்றவற்றை வேட்டையாடுபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பரிசுப் பொருட்களாகக் கொண்டு செல்ல உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கின்றனர்.
போலி சமாதானம்
சட்டப் பின்துணையுடன் இவ்வாறு வளர்த்து விற்பதால் காட்டில் இருக்கும் சிங்கங்கள் திருட்டுத்தனமாகப் பிடிக்கப்படாமல் பாதுகாப்புடன் வாழும் என்று வேட்டையை நடத்துபவர்கள் வாதாடுகின்றனர். ஆனால் இதற்கு எதிர்மாறாகவே செயல்கள் நடக்கின்றன. பன்னாட்டுத் தேவைகள் அதிகரிப்பதற்கேற்ப இதற்கு தடைகள் விதிக்கப்படாமல் இருக்கும் காலம் வரை காடுகளில் இருந்தே இவை பிடிக்கப்படுவது தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
2007ம் ஆண்டிற்குப் பிறகு இவற்றின் எலும்பு ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இதனுடன் சேர்ந்து வளர்க்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. விலங்குநல ஆர்வலர்களிடம் இருந்து சிங்கங்களை வளர்ப்பதற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றதுடன் 2021ல் இவற்றை வளர்க்க முழுமையான தடை விதிக்கப்படும் என்று தென்னாப்பிரிக்க சூழல் அமைச்சரகம் அறிவித்துள்ளது.
பெரும் செலவில் வளர்க்கப்படும் சிங்கங்கள்
மருத்துவ செலவு, ஊழியர் சம்பளம், மின் வேலி செலவு ஆகியவற்றைத் தவிர ஒரு சிங்கத்தை வளர்க்க 5000 டாலர் செலவாகிறது. எவ்வாறென்றாலும் வளர்த்து விற்பவர்களுக்கு இவற்றின் எலும்புகள் மட்டுமே அவசியம். இதனால் இவற்றின் ஆரோக்கியத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.
இந்த ஏற்றுமதி சட்டப்பூர்வமாகத் தொடரும் வரை அதன் மறைவில் ஏராளமான எலும்புகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்றுமதி செய்யப்படும் என்பது நிச்சயம். சட்ட அங்கீகாரத்துடன் சேர்ந்தே இந்த வியாபாரம் நடக்கிறது என்பதே இதை தடை செய்ய உள்ள பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவில் சிங்கங்களைக் கொல்லும் இடங்கள் யாரும் அங்கு செல்ல முடியாத அளவில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
விலங்குநல சட்டங்கள் எல்லாவற்றையும் இங்கு காற்றில் பறக்கவிட்டு இந்த இடங்கள் செயல்படுகின்றன. பல இடங்களில் சட்டம் அனுமதித்துள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக விலங்குகள் ஒரே இடத்தில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் அடைத்து வைக்கப்படுகின்றன. பல நோய்கள் பாதித்து எலும்பும் தோலுமாக வாழ்கின்றன. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவை வளர்க்கப்படுகின்றன.
மனித விலங்கு மோதல்
சிறிய குட்டிகள் கூட தாயிடம் இருந்து பிரித்து வளர்க்கப்படுகின்றன. டான்ஜானியாவில் மனித விலங்கு மோதல் அதிகம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒட்டி அமைந்துள்ள மனிதர்கள் வாழும் இடங்களில் விலங்குகள் நுழைகின்றன. உயிர் மற்றும் உடமையைக் காப்பாற்றிக் கொள்ள இவை பிடிக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களும் பன்னாட்டு வணிக மையங்களில் விற்கப்படுகின்றன.
வனவிலங்கு மோதல் நடக்கும் இத்தகைய 77 சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 96% சமூகங்கள் சிங்கங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதிகள். இவர்களில் பாதி பேர் தங்களைத் தாக்கும் சிங்கங்களைத் திருப்பித் தாக்கிக் கொல்கின்றனர். மொசாம்பிக்கில் கள்ளத்தனமாக நடக்கும் சிங்க வேட்டையே அங்கு வாழும் இவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவில் ஒரு காலத்தில் இந்த உயிரினங்கள் வளர்ப்பு விலங்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தன.
சிங்கத்தின் பாதங்களும் பற்களும்
மனித விலங்கு தாக்குதலின் போது கொல்லப்படும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் பிராந்திய நாட்டுப்புற வைத்தியம், பன்னாட்டு வணிகச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இவற்றின் பாதங்கள், பற்கள் பெருமைக்குரிய சின்னங்களாக வீடுகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. 2010 முதல் மொசாம்பிக்கில் இருந்து பிடிக்கப்பட்ட உடற்பாகங்களில் 50% வியட்நாம், தென்கிழக்கு ஆசியாவிற்கு கடத்தப்பட இருந்தவை.
இதே காலத்தில் டான்ஜானியாவில் கடத்தல்களில் 1,555 உடற்பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலானவை இவற்றின் பாதங்களே. பன்னாட்டு அழுத்தம் காரணமாக இவற்றை வளர்ப்பது தடை செய்யப்பட்டால் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
மாற்றம் கொண்டு வருமா அமெரிக்காவின் தடை?
பொழுதுபோக்கிற்காக இவற்றை சுட்டுக்கொன்று தலை மற்றும் இதர உறுப்புகளை பரிசுப்பொருட்களாக (trophy) கொண்டு வர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. சிங்க வேட்டையைக் குறைக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வரும் வேட்டைக்காரர்கள் அரை லட்சம் டாலர் வரை கட்டணமாகக் கொடுத்து வேட்டையாடி சிங்கத்தின் தலையைக் கொண்டு செல்வது நிறுத்தப்படுவதால் இவற்றை வளர்ப்பது அதிக லாபம் தராத தொழிலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.
காட்டுக்கு அரசன் என்ற பெருமையுடன் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த இந்த கம்பீரமான உயிரினம் இன்று மனிதச் செயல்களால் கூண்டுகளில் அடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உயிருக்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாறும் என்று நம்புவோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவில் உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். இங்கு பூமியில் வேறெங்கும் காணப்படாத அபூர்வ உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் தவளையினமும் ஒன்று. இவற்றில் ஒரு சில வியப்பூட்டும் தவளையினங்களைப் பற்றி இங்கு காண்போம்.
பர்ப்பிள் தவளை
இதன் அறிவியல் பெயர் நாசிகபட்ராகஸ் சக்யாத்ரென்சிஸ். இது கேரளாவில் பாதாளத் தவளை என்றும், மகாபலி தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொதுவான பெயர் பர்ப்பிள் தவளை (Purple frog). கோடை மழையின் கடைசி இரண்டு வாரங்களில் இவை மண்ணிற்கடியில் இருந்து வெளிவருகின்றன. இணை சேர்வதற்காக மட்டுமே பூமியில் இருந்து வெளியில் வரும் இவற்றை சாதாரணமாக எல்லோரும் பார்க்க முடியாது.
இதில் பெண் தவளையை பதால் என்றும், ஆணை குறுவன் என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இது தவிர, இதற்கு பன்றி மூக்கு தவளை, ஆமைத் தவளை என்று பல பெயர்கள் உண்டு. இடுக்கி, கட்டப்பனை என்ற இடத்தில் முதல்முறையாக இந்த இனத்தவளையை டாக்டர் சத்யபாமா தாஸ் பிஜு மற்றும் பெல்ஜியம் ஆய்வாளர் பிராங்கி மோசிட் ஆகியோர் கண்டுபிடித்து அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இக்கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை 2003ல் நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த விசித்திர தவளையின் இனப்பெருக்க முறை பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.
வனவிலங்குகள் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை மீது ஆர்வம் ஏற்படுத்த, அவற்றின் சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த, பாதுகாக்க உதவும் வகையில் மாநில மலர், விலங்கு, மரம், பறவை என்பது போன்ற அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. பதவிகள் வழங்கப்படுகின்றன.மணவாட்டி தவளை
பலருக்கும் தவளைகள் மீது அருவருப்பும் பயமுமே இன்றும் உள்ளது. பர்ப்பிள் தவளை போலவே மற்றொரு அபூர்வ தவளையினமே மணவாட்டி அல்லது மணப்பெண் தவளை. இது இன அழிவை சந்திக்கும் இனம். ஆனால் இவை பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு மலபார் பிரதேசத்தில் லாட்டரைட் நில அமைப்புடன் இணைந்ததே இவற்றின் வாழ்க்கை. செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் உட்புறங்களிலும், குளியலறைகளிலும் ஒரு காலத்தில் இவை சாதாரணமாகக் காணப்பட்டன.
வீடுகளின் உட்புற அமைப்புகள் மாறியதுடன் இவை காணாமல் போகத் தொடங்கின. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளா முதல் மும்பை வரை உள்ள பகுதிகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இவை ஃபங்காய்டு தவளை (Fungoid frog), மலபார் மலைத் தவளைகள் என்றும் அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவை.
பெயர் மாற்றம்
1883ல் முதல்முதலில் இவை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அன்று இவை ரானா மலபாரிகா (Rana Malavarica) என்று பெயரிடப்பட்டன. பிறகு இது ஹைலா ரானா மலபாரிகா (Hylarana Malabarica) என்று மாற்றப்பட்டது. இப்போது ஹைட்ரோபிலாக்ஸ் மலபாரிகஸ் (Hydrophylax Malabaricus) என்று அழைக்கப்படுகிறது. மணப்பெண் போல உடல் அலங்காரங்கள் காணப்படுவதால், பழைய வீடுகளில் இருண்ட அறைகளில் வாழ்கின்றன. இதனால் இவற்றிற்கு மணப்பெண் தவளை என்ற பெயர் ஏற்பட்டது.
ஊர்தோறும் பல பெயர்கள்
வடக்கு கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் பாரம்பரிய நாட்டிய முறையான தைய்யம் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும் அணிகலன்கள், அலங்காரங்கள் போல இருப்பதால் இவை தைய்யம் தவளை என்றும், காசர்கோடு மாவட்டத்தினரால் அழைக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தினர் இதை பாறைத்தவளை என்று அழைக்கின்றனர்.
செங்கல் பரப்புகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் இலைகளுக்கு நடுவில், பழங்கால குகைகள், பொந்துகளில் இவை வாழ்கின்றன. இணை சேர மட்டுமே இவை நீரில் இறங்குகின்றன. இவற்றின் உடலமைப்பு வண்ணமயமான ஆடைகளை அணிந்த கல்யாணப் பெண் போல அழகானது. அதிகம் குண்டு இல்லை. அழகான மெலிந்த உடல்வாகு.
வண்ணஜாலம் காட்டும் உடலமைப்பு
உடல் மற்றும் தலையின் மேற்பகுதி பளபளக்கும் செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் கறுத்த பொட்டுகள் காணப்படும். மற்ற உடற்பகுதிகளில் கறுப்பு கலந்த அடர் பழுப்பு நிறத்தில் அகலமான அடையாளம் காணப்படுகிறது. அப்பகுதிகளிலும், கை கால்களிலும் வெள்ளை நிற வரிகள் உள்ளன. வயிற்றுப் பகுதி நல்ல வெள்ளை நிறம்.
ஆண் பெண் தவளைகளுக்கு இடையில் உருவம் மற்றும் அமைப்பில் பெரிய வேறுபாடு இல்லை. உடலின் அடிப்பகுதி மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. முறைத்துப் பார்ப்பது போன்ற கண்களின் பின்புறத்தில் இதே அளவில் உள்ள கேட்கும் திறனுக்கான பகுதி (டிம்பானா) அமைந்துள்ளது. பழைய வீடுகளில் இவை பூசை அறைகளில் கிண்டியின் மீதும், சமையலறையில் கஞ்சிக்கலயத்தின் அருகிலும் காணப்படும்.
ஒரு வீட்டில் பத்து பதினைந்து வரை வாழ்ந்தன. ஆணும் பெண்ணும் சேர்ந்து வீட்டில் நிரந்தரமாக வசிக்கும். ஈரமும் இருட்டும் உள்ள சாணம் மெழுகிய படுக்கையறைகளை இவை தங்கள் சொந்த இடமாக மாற்றிக் கொண்டு வாழும். இவை வருடக்கணக்கில் ஒரே வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும்! வீட்டில் இருந்து வெளியில் விரட்டினாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மறுபடியும் அதே இடத்துக்கு திரும்ப வரும். தொலைதூரத்திற்கு கொண்டு போய் விட்டாலும் இவை நம்மை விடாது. வீட்டைத் தேடிப்பிடித்து திரும்ப வந்து சேரும்.
பகலில் ஓய்வு இரவில் நடமாட்டம்
இரவில் வெளியில் போய் உணவு தேடும். கொசுக்கள், எறும்புகள், சிறிய பிராணிகளே முக்கிய உணவு. பகல் முழுவதும் வீட்டுக்குள்தான் வாசம். பகலில் வீட்டுக்குள் அவ்வப்போது வந்து போகும் பூனைகள், தேரைகள் இவற்றை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆபத்து என்று உணர்ந்தால் அருவருப்பை ஏற்படுத்தும் ஒருவித துர்நாற்றத்தை வெளிவிட்டு எதிரிகளை விரட்டும்.
இணை சேரல்
மழைக்காலம் வந்தவுடன் நல்ல மழை பெய்து வயல்களில் நீர் தேங்கினால் ஆண் தவளைகள் மெல்ல வீட்டை விட்டு வெளியில் இறங்கும். தூரத்தில் வயலில் நீர் தேங்கியிருக்கும் வசதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே முகாமிடும். காதல் உணர்ச்சி பொங்கும் குரலில் இணை சேர பெண் தவளையை அழைக்கத் தொடங்கும்.
தாடைக்கு அருகில் இருக்கும் குரலெழுப்பும் பகுதியை பெரிதாகத் திறந்து உயர் அதிர்வெண் உடைய சத்தத்தை ஏற்படுத்தும். இந்த காதல் கீதம் நாட்கணக்கில் நீளும். சில நாட்கள் ஆன பிறகு பெண் தவளைகள் ஒவ்வொன்றாக வீட்டை விட்டு வெளியில் வந்து சத்தம் வந்த வயலில் நீரை இலட்சியமாகக் கொண்டு பயணம் தொடங்கும். கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி பெண் தவளைகள் இணைக்கு அருகில் செல்லும்.
உரத்த குரலில் ஓசை எழுப்பிய ஆண் தவளையையே தன் இணையாக பெண் தவளையைத் தேர்ந்தெடுக்கும். ஆண் தவளை, பெண் தவளையின் உடலின் மீது ஏறி அதன் உடற்பாகங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நிற்கும். பெண் தவளையின் ஜெலாட்டின் போன்ற அமைப்புடன் உள்ள பகுதியில் இருக்கும் முட்டைகள் கூட்டத்தில் ஆண் தவளை விந்தணுக்களை விடும். இணை சேர்ந்த பிறகும் பெண் தவளைகளே வீட்டிற்கு முதலில் வரும். சில நாட்கள் கழித்து ஆண் தவளைகள் திரும்பி வரும்.
வாசலைத் திறக்க என்ன தாமதம்?
விடியற்காலையில் திரும்பி வரும் இவை வாசற்படியில் பொறுமையுடன் காத்திருக்கும் காட்சி சுவாரசியமானது. வீட்டுக்காரர்கள் வாசலைத் திறந்தால் “என்ன? கதவைத் திறக்க இவ்வளவு தாமதமா என்ன?” என்ற பாவனையில் பதட்டம் கலந்த ஒரு பார்வையை வீசும். பயமும் தயக்கமும் இல்லாமல் சொந்த வீட்டுக்குள் துள்ளிக் குதித்தபடி ஒரே பாய்ச்சலில் தாவி வீட்டுக்குள் ஓடும்.
அருவருப்பும் வெறுப்பும்
வீட்டில் இருப்பவர்கள் இவற்றிடம் அருவருப்பையோ வெறுப்பையோ காட்டுவதில்லை. இதனால் இவற்றை வீட்டில் இருந்து விரட்டியடிக்க யாரும் மெனக்கெடுவதும் இல்லை. மனிதர்களுடன் இந்த அளவிற்கு இணைந்து வாழும் வேறொரு தவளையினமும் இல்லையென்றே சொல்லலாம். லாட்டரைட்செங்கல் குன்றுகளின் மறைவு இவற்றை இன அழிவிற்கு ஆளாக்கும் அபாயம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த தவளையினம் காப்பாற்றப்பட வேண்டும்.
பறக்கும் தவளை
மற்றொரு அபூர்வத் தவளையினம் பறக்கும் தவளை (Flying frog/Rhacophorus) malabaricus. இது மரத்தவளை, க்ளைடிங் தவளை (gliding frog) என்றும் அழைக்கப்படுகிறது. மழைக்காடுகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் மழைக்காலத்தில் இவை காணப்படுகின்றன. இதன் வண்ணமயமான உடலமைப்பு, அதிசயிக்க வைக்கும் அழகு தோற்றத்தினால் பல நேரங்களில் புதிய அற்புத தவளையினத்தை கண்டுபிடித்துவிட்டதாக உள்ளூர் செய்திகளில் இது இடம் பெறுவதுண்டு.
காற்றில் நீந்தும் தவளை
ஒரு கிளையில் இருந்து மற்றொன்றிற்கு இவை காற்றில் நீந்திப் பறக்கக் கூடியவை. இவ்வாறு இவை 9 முதல் 12 மீட்டர் வரை பறக்கும். உடலின் வெளிப்பகுதி நல்ல பச்சை நிறத்துடனும் அடிப்பகுதி மங்கலான மெல்லிய வெள்ளை நிறத்துடனும் காணப்படுகின்றன. பகலில் கண்ணின் மணி கூம்பி ஒரு வரி போலக் காட்சி தரும். பகலில் இலைகளுடன் சுறுண்டு கிடப்பதால் அப்போது இவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இரவில்தான் நடமாட்டம். இரை தேடலும்.
பறப்பது எப்படி?
விரல்களுக்கு இடையில் இருக்கும் சதையை பறக்கும் நேரத்தில் விரிவுபடுத்தி அதிக தொலைவிற்குப் பயணிக்கவும், இறங்கும்போது பாராசூட் மாதிரியில் வேகத்தைக் குறைத்தும் தரையிறங்க இப்பகுதி உதவுகிறது. விரல்களின் நுனியில் இருக்கும் பகுதி இலைகளை, கிளைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. சதைப்பற்றுள்ள பகுதி ஆரஞ்சும், சிவப்பும் கலந்த நிறமுடையது. இதனால் இவை பார்ப்பதற்கு சொக்க வைக்கும் அழகுடையவை.
பார்வைக்கு சாதுவான இவற்றை ஒரு முறை பார்த்தவர்கள் எவரும் பிறகு மறக்க மாட்டார்கள். பச்சை நிறமுடைய உடலும், விரல்களுக்கு இடையில் கடும் சிவப்பு நிறமும் சேர்ந்து இத்தவளைக்கு ஓர் அற்புத அழகைத் தருகிறது. மழையுடன் சேர்ந்துதான் இவற்றின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சில சமயங்களில் இவை அருவிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படாத தோட்டக் குளங்களில் இருக்கும் மரக்கிளைகளின் உச்சியில் இணை சேர்வதுண்டு.
இலை நுனியில் முட்டைகள்
முட்டைகளை இலை நுனிகளில் ஒட்டி வைக்கும். ஈரப்பசை இழக்கப்படாமல் இருக்க, பறவைகள் முட்டைகளைக் கொத்திக் கொண்டு போகாமல் இருக்க இந்த ஏற்பாடு. மழை பெய்யும்போது இலைகளில் இருந்து இறங்கி தண்ணீருடன் சேர்ந்து விரிந்து முட்டைகள் தலைப்பிரட்டைகளாக மாறும். சாதாரணமாக ஒருகாலத்தில் காணப்பட்டன என்றாலும் இவை வாழிட இழப்பு காரணமாக அழியும் ஆபத்தில் உள்ளன. தவளைகளின் உலகில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்! அற்புதங்கள்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்
- மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்
- வலசை என்னும் அதிசயம்
- மகாவா என்ற மகத்தான எலி
- ஜப்பானில் புதிய மலர்
- வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்
- காளான்கள்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
- ஏழைகளின் மரம்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்
- சூழல் காக்க உதவும் நீர்நாய்கள்
- தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!