கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க ஒற்றையாளாகப் போராடியவர் சதீஷ் பாஸ்கர். உயிரினங்களின் வரைபடத்தில் இருந்து ஒரு உயிரினம் மறைந்து போவதைத் தடுக்க பூமியின் வரைபடத்தில் இல்லாத தீவுகள் தேடியலைந்த ஆய்வாளர் என்று வர்ணிக்கப்படும் இவர், கடந்த 2023 மார்ச் 22 அன்று பெங்களூரில் காலமானார்.
ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவில்
லக்ஷ தீவில் மனித வாசம் இல்லாத சுஹேலி (Suheli) தீவில் இருந்து பருவ மழைக்காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்தி, சென்னையில் இருந்த தன் மனைவிக்கு அவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.கேரளக் கரை அல்லது கோவா கரைக்கு அடித்துச் செல்லப்படும் அந்த பாட்டில் கடிதத்தை யாரேனும் கண்டுபிடித்து சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று சதீஷ் நினைத்தார். ஆனால் 1982 ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், 24 நாட்கள் 800 கிலோமீட்டர் கடலில் பயணம் செய்து ஸ்ரீலங்காவிற்குப் போனது. அந்தோணி டமேஷியஸ் என்ற மீனவர் கையில் கிடைத்தது. கடிதத்தில் இருந்த வாசகங்கள் அந்த மீனவத் தொழிலாளியை நெகிழச் செய்தது.
தான் யாரென்பதையும், அந்தக் கடிதம் தன்னை எந்த அளவிற்குப் பாதித்தது என்பதையும் எடுத்துக் கூறி ஒரு கவரிங் கடிதத்தை தன் குடும்பப் புகைப்படத்துடன் சேர்த்து அவர் அந்த கடிதத்தை சென்னைக்கு அனுப்பினார். “நீங்கள் குடும்பத்துடன் ஒரு தடவை ஸ்ரீலங்காவிற்கு வர வேண்டும்” என்றும் கவரிங் கடிதத்தில் நேசத்துடன் அவர் அழைப்பு விடுத்தார்.
தனிமையில் அந்தத் தீவில்
அந்த மழைக்காலத்தில் கடலுக்கு நடுவில் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழும் கணவரின் கடிதத்தை வாசித்த மனைவி பிருந்தாவால் கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.
சதீஷ் பாஸ்கர் என்ற மனிதன் அந்த பெருமழைக்காலத்தில் எந்த நவீன வசதியும் இல்லாத அந்த தொலைதூர ஒற்றைத் தீவில் தனியாக வாழ்வது எதற்காக என்பதைப் புரிந்து கொண்ட பிரபல பத்திரிகையாளர் ஹாரி மில்லர், கடலில் மிதந்து வந்த அந்த கடிதத்தின் விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாக வெளியிட்டார். செய்தியின் தலைப்பு “ராபின்சன் சதீஷ் பாஸ்”.
மனைவி பிருந்தாவையும், பிறந்து மூன்று மாதமே ஆன பெண் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, மழைக்காலத்தில் முட்டையிட வரும் க்ரீன் கடல் ஆமைகளைப் பற்றி அரபிக்கடலில் லக்ஷ தீவின் தொலைதூரத் தீவிற்குச் சென்று ஐந்து மாதம் தங்கியிருந்து சதீஷ் ஆராய்ந்தார்.
அவர் தங்கிய சுஹேலிக்கு மிக அருகில் மனிதர்கள் வாழும் தீவு கவரெட்டி தீவு. இந்தக் குட்டித் தீவில் இருந்து 52 கிலோமீட்டர் பயணம் செய்தால் மட்டுமே கவரெட்டியை அடைய முடியும். மழைக்காலத்தில் மழை பெய்யும்போது அங்கிருந்து ஒரு படகும் சுஹேலிக்கு வராது. அதனால்தான் சதீஷ் மனைவிக்கு எழுதிய கடிதத்தை பாட்டிலில் அடைத்து கடலலைகள் வழியாக அனுப்பி வைத்தார்!
ஒற்றைக் கதாநாயகன்
இந்தியாவில் கடல் ஆமை ஆய்வுகளின் வரலாற்றில் இது போல ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் வெறும் கதைகள் இல்லை. சாகசம் நிறைந்த அபூர்வமான உண்மைச் சம்பவங்கள்! கதைகள் பல இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சதீஷ் பாஸ்கர் என்ற இந்த நல்ல மனிதரே கதாநாயகன். இந்தியக் கடற்கரைகளிலும், தொலைதூரத் தீவுகளிலும் கடல் ஆமைகளின் போக்கையும், வரவையும் பற்றி ஆராய அலைந்தார்.
இந்தியாவில் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளை இருபது ஆண்டுகளாக ஒற்றையாளாக செயல்பட்டு தன் தோளில் சுமந்தவர் அவர். ஒரு பள்ளிக் குழந்தையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் வாழ்க்கை கட்டுக்கதை போலத் தோன்றும் என்று ஒரு முறை அவர் தெற்கு கோவாவில் தன் வீட்டில் இருந்தபோது கூறினார். 7500 கிலோமீட்டர் நீளம் உடைய இந்தியக் கடற்கரையின் பல இடங்களுக்கும் கால்நடையாகப் பயணம் செய்து ஆராய்ந்தார்.
இந்தியாவில் இருக்கும் சுமார் 670 தீவுகளுக்கு கடல் ஆமைகளைத் தேடிச் சென்றபோது கொலையாளித் திமிங்கலச் சுறாக்கள் வாழும் பல கடற்பகுதிகளை நீந்திக் கடந்துள்ளார். பல சமயங்களில் கொடிய நஞ்சுடைய ஸ்டோன் பிஷ் உட்பட பல நச்சுப்பாம்புகள், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவருடைய நிஜவாழ்க்கை கட்டுக்கதைகள் கூட தோற்கும் விதத்தில் அமைந்தது.
வரைபடத்தில் இல்லாத தீவுகளுக்கு
கடல் ஆமைகள் இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற மனித வாசம் இல்லாத பகுதிகளுக்கே அதிகம் வருகின்றன. 400 மீட்டர் நீளம் 90 மீட்டர் அகலம் உள்ள தீவுகள் பூமியின் வரைபடத்தில் கூட காணப்படுவதில்லை. தங்கள் இனம் அழியாமல் இருக்க கடல் ஆமைகள், இது போன்ற உலகம் அதிகம் அறியாத சிறுதீவுகளையே சார்ந்து வாழ்கின்றன. குடிக்க சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காத இத்தகைய சிறு தீவுகளிலேயே சதீஷ் தன் ஆய்வுகளை மேற்கொண்டார். 1977ல் இவரது ஆய்வுகள் தொடங்கின.குஜராத் கடற்கரை முதல் அதிகம் அறியப்படாத நாட்டின் மிகத் தொலைவில் இருக்கும் பிரதேசங்களில் ஒன்றான மெரோ (Meroe) தீவு வரை பயணித்தார். இந்தோனேஷியாவில் நியூ கினி போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் கடல் ஆமைகளைத் தேடிப் பயணம் செய்தார். 1984-85 காலத்தில் உலக வன நிதியத்தின் (WWF) இந்தோனேஷியா பிரிவின் அழைப்பை ஏற்று, நியூ கினியின் மேற்கு மூலையில் இருக்கும் பொகல்ஹோஃப் கடற்பகுதியில் ஆய்வுகளை நடத்தினார். கடல் ஆமைகள் எங்கே, எத்தனை, எந்தெந்த இனங்கள் எங்கிருந்து வருகின்றன, இனப்பெருக்க காலம் எப்போது போன்ற விவரங்களைக் கண்டுபிடித்தார்.
கடலைக் காதலித்த ஆய்வாளர்
தந்தை பாஸ்கரன், தாய் பத்மினி தம்பதிகளுக்கு ஒரே மகனாக 1946 செப்டம்பர் 11 அன்று கேரளா எர்ணாகுளம் மாவட்டம் சிராய் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணிபுரிந்தார். இந்தியாவில் பல இடங்களில் ஆரம்பக் கல்வி கற்றார். ஷில்லாங் செயிண்ட் எட்மண்ட் கல்லூரியில் இருந்து இண்டர் மீடியட் தேர்ச்சி பெற்றார். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மின் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.
சென்னையில் இருந்தபோது கடல் மீது ஏற்பட்ட காதலே சதீஷின் வாழ்க்கையை மாற்றியது. சென்னை பாம்புப் பண்ணையின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற ஊர்வன பிரிவு ஆய்வாளர் ராமுலெஸ் விட்டேகருடன் (Romulus Whitaker) பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு இந்தியாவின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வின் தலையெழுத்தையே மாற்றியது. பொறியியல் படிப்பிற்குப் பதில் சதீஷின் கவனம் முழுவதும் பாம்புப் பண்ணை மீதே இருந்தது.
பொறியியல் நூல்களுக்கு பதில் உயிரியல் நூல்களே அவர் மனதைக் கவர்ந்தது! விட்டேகர் அந்த நேரத்தில் முதலைகளின் ஒரு பிரிவு (alligator) பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். 2010ல் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளுக்காக ஓர் ஆய்வாளரை அப்போது அவர் தேடிக் கொண்டிருந்தார். கடலைக் காதலிக்கும் சதீஷ் பாஸ்கரே அந்த பணிக்காக கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறியியல் படிப்பை முடிக்காமல் கடல் ஆமைகளின் இரகசியங்களைத் தேடி அந்த இளைஞர் புறப்பட்டார்.
சென்னை பாம்புப் பண்ணையின் கள அலுவலர் என்ற நிலையில் செயல்படத் தொடங்கினார். பிறகு இந்திய வன உயிரி நிதியம் (WWF) அவரை பணிக்கு அமர்த்தியது. பாம்புப் பண்ணையில் செயலாளராக இருந்த பிருந்தா பிரிட்ஜிக்க்கை 1981 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைலா, ஐலின், சந்தியா என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
உலகில் உள்ள எட்டு கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரெட்லி, க்ரீன், ஹாக்ஸ்பில் (hawksbill), லோஹர் ஹெட், தோல் முதுகு உள்ளிட்ட இனங்கள் இந்தியக் கரைக்கு வருகின்றன.
இவற்றில் லோஹர் ஹெட் இந்தியாவில் எந்த இடத்திலும் முட்டையிடுவதாக இதுவரை அறியப்படவில்லை. மற்றவற்றில் ஆலிவ் ரெட்லி இனமே இந்தியாவிற்கு அதிகம் வருகை தருகின்றன. உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இவை ஒரிசா கஹீர்மாதா கரையோரப் பகுதிக்கு இனப்பெருக்கம் செய்து முட்டையிட வருகின்றன. ஆனால் 17 ஆண்டு பணியில் சதீஷ், ரெட்லி இன ஆமைகள் பற்றிய ஆய்வுகளில் அதிகம் ஈடுபடவில்லை.
இந்தியாவில் ரெட்லி ஆமைகள் பற்றி பலர் ஆய்வு செய்கின்றனர். ஆனால் மற்ற இனங்கள் பற்றி இவரைத் தவிர வேறு எவரும் அப்போது அதிக கவனம் செலுத்தவில்லை. இதற்குக் காரணம் மற்ற இனங்கள் ஆள் அரவம் இல்லாத தொலைதூரத் தீவுகளுக்கே வருகின்றன. அந்த இடங்களே இவரின் செயல் தளமாக இருந்தது. இந்தியக் கடற்கரையில் க்ரீன் கடல் ஆமைகள் முட்டையிடுவதை 1982ல் லக் ஷதீவு சுஹேலி தீவில் முதலில் ஆராய்ந்தவர் இவரே.
தோல் முதுகு ஆமைகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வருவதை இவரே முதலில் கண்டுபிடித்தார். 1978ல் இந்த இன ஆமைகள் இப்பகுதி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வருவதைக் கண்டறிந்து கூறினார். 1991-1995 காலத்தில் அந்தமானில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுத்ரீக் தீவில் பல மாதங்கள் தொடர்ந்து தங்கி இருந்து கடல் ஆமைகளின் இனப்பெருக்க முறைகளைக் கண்டறிந்தார்.
பிற்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய ஆய்வுகளுக்கு இதன் மூலம் அவர் அடிப்படை அமைத்துக் கொடுத்தார். சென்னை பாம்புப் பண்ணையே 1990களில் இவருடைய ஆய்வுப் பணிகளுக்கு நிதி வழங்கியது. காலப்போக்கில் நிதி குறைந்ததால் 1995ல் சதீஷ் தன் ஆய்வுகளை இடையிலேயே கைவிட வேண்டி வந்தது. கடல் ஆமைகள் ஆராய்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதே ஆண்டு குடும்பத்துடன் கோவா சென்று வாழ ஆரம்பித்தார்.
விருதுகளும் அங்கீகாரங்களும்
தொழிற்ரீதியாக இவர் உயிரியல் படிக்கவில்லை, பட்டப்படிப்பும் இல்லை. ஒரு அமெச்சூர் ஆய்வாளராகவே வாழ்ந்தார். ஆனால் 1979 நவம்பரில் கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து வாஷிங்டன் டி.சி.யில் முதல் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் சதீஷ். கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளின் அங்கீகாரமாக 1984ல் ரோலக்ஸ் விருதுடன் ஒரு கைக்கடிகாரமும் பரிசாக இவருக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச கடல் ஆமைகள் சங்கத்தின் (International Sea Turtle Society - ISTW) 30வது ஆண்டு மாநாடு 2010 ஏப்ரலில் கோவாவில் நடந்தபோது அந்த அமைப்பால் அந்த ஆண்டிற்கான ISTW சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன அழிவில் இருந்து ஒரு உயிரினத்தைக் கைப்பிடித்து உயர்த்துவதற்கு, ஒரு மனிதர் அந்த உயிரினத்துடன் அதன் சூழல் மண்டலத்துடன் கொண்ட அர்ப்பணிப்பும் ஆர்வமும் எவ்வாறு உதவும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சதீஷ் பாஸ்கர் என்ற மகத்தான இந்த சூழல் போராளி!
** ** **
& https://www.seaturtlesofindia.org/satish-bhaskar/
& https://en.m.wikipedia.org/wiki/Sea_turtle
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆதிவாசி மக்களுக்காக விறகொடித்துக் கொடுக்கும் யானைகள்; தண்ணீர் தேடி அலைபவர்களுக்கு மண்ணுக்கு அடியில் நீர் இருப்பதைக் காட்டி உதவும் யானைகள்; ஒற்றைப்பட்டுப் போகும் குட்டி யானைகளுக்கு வயிறு நிறைய பால் கொடுக்கும் ஆதிவாசிப் பெண்கள்; கென்யாவில் சாம்புரு (Samburu) வனப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்கும், யானைகளுக்கும் இடையில் காலம்காலமாக இருந்து வரும் ஆத்மார்த்தமான சொந்தத்தின் கதை இது.
சாகசப் பயணி கிறிஸ்டின் அமுலிவார்
ஆப்பிரிக்க கண்டத்தில் பயணம் செய்த பிரெஞ்சு சாகசப் பெண் பயணி கிறிஸ்டின் அமுலிவார், தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை வெளியுலகிற்கு எடுத்துச் சொன்னபோதுதான் இதைப் பற்றி உலகம் தெரிந்து கொண்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெர்ப்ளானெட் எர்த் (Herplanet Earth) என்னும் தொண்டு அமைப்பை கிறிஸ்டின் தலைமையேற்று நடத்தி வருகிறார். வீரசாகசங்களின் பெண் உருவம் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
இவர் தலைமையேற்று நடத்திய பெண்களின் பயணக் கதைகள் புதிய சரித்திரம் படைத்தன. ஆர்க்டிக்கிலும், அண்டார்டிக்கிலும் உறைய வைக்கும் கொடும் குளிர்காற்றையும், ஜோர்டான் பாலைவனத்தில் வெப்பக் காற்றையும், அது உருவாக்கும் புகைப்படலத்தையும் சமாளித்து பெண்கள் பயணம் செய்தனர். இவருடைய பயண அனுபவங்களை வன அறிவு (Wild wisdom) என்ற பெயரில் பெங்குயின் புத்தக நிறுவனம் நூலாக வெளியிட்டபோது, அதுவரை உலகம் அறியாத பல நெகிழ வைக்கும் வனக்காட்சிகள், வியப்பூட்டும் அனுபவங்களை உலக மக்கள் அறிந்து கொண்டனர்.ஆத்மார்த்தமான சொந்தம்
கென்யாவில் சாம்புரு ஆதிவாசிகள் இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றனர். சிறிது கூர்மையாக்கி செவிமடுத்தால் காட்டு யானைகளின் இதயத் துடிப்பைக்கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆதிவாசி மக்களின் மனது யானைகளுக்கும் தெரியும். காட்டில் விறகு சேகரிக்க ஆதிவாசிப் பெண்கள் செல்லும்போது அவர்களுக்காக யானைகள் மரங்களில் இருக்கும் காய்ந்துபோன குச்சிகளையும் கிளைகளையும் ஒடித்து தரையில் போட்டிருக்கும். அதை கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து செல்கிறார்கள் ஆதிவாசிப் பெண்கள். இதைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்!
தண்ணீர் தேடி
பாலைவனம் போன்ற பகுதிகளில் ஒரு துளி நீருக்காக மனிதர்களும் வன விலங்குகளும் அலைந்து திரிவது வாடிக்கையான ஒண்று. மனிதனைப் போல தங்களுக்கும் ஆறாவது அறிவு இருப்பது போல அந்த சமயத்தில் யானைகள் செயல்படும். சில பிரதேசங்களில் தன்ணீர் இருக்கும் இடம் தெரியும்போது அங்கே யானைகள் கூட்டமாகக் கூடி நிற்கும்.
ஆதிவாசி மக்களுக்கு யானைகளின் மொழி நன்றாகத் தெரியும். ஒட்டகங்கள் மேல் ஏறி ஆயுதங்களுடன் அங்கு சென்று குழி தோண்டிப் பார்ப்பார்கள். அதிசயம்! யானைகள் காட்டித் தந்த இடத்தில் நீர் இருக்கும். ஆதிவாசி மக்களுக்கு நீர் விலைமதிப்பு மிக்கது.
இரவும் பகலும் வனப் பயணம்
2019ல் கிறிஸ்டினின் கென்யப் பயணம் நடந்தது. பகலில் வனக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு நடப்பார்கள். காட்டில் பயணம் செய்யும்போது பயன்படும் தனிச்சிறப்புமிக்க கூடாரங்களில் இரவு தங்குவார்கள். கூடாரம் கட்டத் தேவையான பொருட்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சுமந்து கொண்டு பெண்கள் குழுவுடன் ஒட்டகங்கள் பயணம் செய்யும். பகல் முழுவதும் கடுமையான வெப்பமும், இரவில் நடுங்க வைக்கும் குளிரும் நிலவும் காலநிலை. வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஆதிவாசிகள் குழுவினருடன் செல்வர்.
பதவியைப் பொறுத்து ஆதிவாசி மக்கள் மாலைகளையும் ஆபரணங்களையும் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஆப்பிரிக்காவில் நில அமைப்பில் பல மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆதிவாசி மக்களின் நலனுக்காக இவரது குழு நிதி சேகரித்து வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் குழுவினர் ஆதிவாசிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
பாடும் கிணறுகள்
நீருக்காக மக்கள் ஆழமான கிணறுகளைத் தோண்டுவர். நீர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தால் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம்தான். அவர்கள் ஆனந்த நடனமாடுவர். பாட்டும் தாளமேளங்களுடன் களை கட்டும்போது தூரத்தில் இருந்து பசுக்களும் வரும். அந்தப் பாட்டுகள் அவற்றிற்கு வழக்கமானவை. தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தால் யானைகள் அந்த இடத்திற்கு துல்லியமாக வந்து நிற்கும். இதெல்லாம் இந்த வனப்பகுதியில் சாதாரணக் காட்சிகள்.
யானை பராமரிப்பு இல்லம்
சில சமயம் குட்டி யானைகள் குழியில் விழுந்துவிட்டால் அவற்றை வெளியில் எடுக்க பெற்றோர் யானைகள் முன்வருவதில்லை. ஆனால் ஆதிவாசி மக்கள் அவற்றை மீட்டு, ரெட்டேட்டி என்ற யானைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்வர். பால் கொடுத்து அவற்றைக் கவனித்துக் கொள்ள, சிறப்பு பயிற்சி பெற்ற ஆதிவாசிப் பெண்கள் அங்கு உள்ளனர்.
ஒரு துளி தண்ணீரை உதட்டில் நனைத்து வறட்சியைப் போக்கக் காத்திருந்தாலும் ஆதிவாசிகள் தண்ணீரைக் கண்டுபிடித்தால் அதை யானைகளும் மற்ற வன விலங்குகளும் அருந்த விட்டுக்கொடுப்பர். விலங்குகளிடம் அந்த அளவு கருணை மிக்க மக்கள். மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் இருக்கும் ஆத்மார்த்தமான சொந்த பந்தத்தை எடுத்துக்காட்டும் காட்சிகள் இவை.
அனாதைகளான குட்டி யானைகளை அபயம் கொடுத்து தாங்கள் பெற்ற குழந்தையைப் போல மக்கள் அவற்றை பராமரிக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குட்டி யானைகளைப் பார்த்துக் கொள்ள பெண்கள் அடங்கிய தன்னார்வலர் குழு அந்த இல்லத்தில் செயல்படுகிறது. ஆப்பிரிக்காவில் யானைகளை பராமரிக்கும் சேவையில் பெண்கள் தன்னார்வத்துடன் பணிபுரியும் முதல் யானை பராமரிப்பு மையம் இதுவே.
இன்று உலக நாடுகளில் சாகசப் பயணத்தின் அடையாளமாக கிறிஸ்டின் கருதப்படுகிறார். அவர் நடத்தும் ஹெர்ப்ளானெட் எர்த் என்ற அமைப்பு இப்போது சர்வதேசப் புகழ் பெற்றுள்ளது. 2012ல் சிங்கப்பூருக்கு வந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆறாவது பெண் வீராங்கணை வலேரி பாபி என்ற பெண்மணியை கிறிஸ்டின் சந்தித்தபோது, அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. பிறகு கிறிஸ்டின் தன் வாழ்வை சாகசப் பயணங்களுக்காகவும், பெண்கள் நல முன்னேற்றத்திற்காகவும், வனப் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணித்தார். இதன் பலன் இன்று பல உலகம் அறியாத மனித விலங்கு நல அனுபவங்களாக வெளிப்படுகின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஜோர்டான், ஓமான், அரபு எமிரேட்டுகள், கத்தார், பஹரின் நாடுகளின் தேசிய விலங்கு அரேபியன் ஒரிக்ஸ் (Arabean Oryx) என்று அழைக்கப்படும் பெரிய கொம்புடைய மான் இனம். நடுத்தர அளவுடையது. 1800களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் அரேபியப் பாலைவனங்களில் மேய்ந்து திரிந்து வாழ்ந்தன.
பாலைவனத்தில் ஈட்டியையும், வாளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடுவது சுலபமாக இல்லை. ஆனால் நவீன வாகனங்கள், ஆயுதங்களின் வரவுடன் 1930களில் இளவரசர்களும் எண்ணெய்க் கம்பெனிகளின் முதலாளிகளும் வாகனங்களையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடத் தொடங்கினர். சில நேரங்களில் வேட்டையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
ஆபத்தாக மாறிய கொம்புகள்
அரேபிய துணைக்கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இந்த இனம் 1970களின் ஆரம்பத்தில் அவற்றின் இயற்கை வாழிடங்களில் இன அழிவை சந்திக்கத் தொடங்கின. இவற்றின் நீண்டு வளர்ந்திருந்த கொம்புகள் வேட்டையாடுபவர்களுக்கு டிராபிகளாகக் கொண்டு செல்ல விருப்பமான பொருளாக மாறின. கொம்புகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்று அப்பகுதி நாட்டு வைத்தியத்தில் மூட நம்பிக்கை இருந்தது.இவற்றை வேட்டையாடுவது சில கலாச்சாரங்களில் பதவி மற்றும் செல்வச்செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டபோது இவை காடுகளில் இருந்து முற்றிலுமாக மறையத் தொடங்கின. சில தனியார் விலங்குக் காட்சி சாலைகள் மற்றும் காப்பகங்களில் மட்டுமே இவை உயிர் பிழைத்து வாழ்ந்தன.
மீட்பின் தொடக்கம்
எப்படியாவது இந்த உயிரினங்களை அழிவில் இருந்து மீட்க வேண்டும் என்று சர்வதேச தளத்தில் குரல்கள் உயர்ந்தன. 1962ல் அமெரிக்காவின் மிகப் பெரிய விலங்குக் காட்சி சாலையான பீனிக்ஸ் காட்சி சாலையும், சர்வதேச தாவர மற்றும் விலங்கு பாதுகாப்பிற்கான அமைப்பும் (Flora & Fauna International) இணைந்து உலக வனநிதியத்தின் (WWF) நிதியுதவியுடன் பீனிக்ஸ் காட்சி சாலையில் இவற்றின் இனவிருத்திக்கான நடவடிக்கைகளைத் தொடங்கின.
ஒன்பது விலங்குகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆபரேஷன் ஓரிக்ஸ் (Operation Oryx) திட்டம் வெற்றி பெற்றது. 240 பிரசவங்கள் நடந்தன. இங்கிருந்து விலங்குகள் மற்ற காட்சி சாலைகளுக்கும் பூங்காக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 1968ல் அரேபியாவில் ஓமானில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கென்றே அல் ஐனில் காப்பகம் உருவாக்கப்பட்டது.
காட்டுக்குத் திரும்பிய மான்கள்
1980ல் இந்த விலங்குகளை காடுகளில் சுதந்திரமாக வாழவிடும் அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. சாண்டியாகோ காட்சி சாலையில் இருந்து இவை முதலில் ஓமானில் காடுகளில் சுதந்திரமாக வாழ அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது பல மேற்காசிய நாடுகளிலும் இவற்றைக் காண முடியும். 2000 மான்களைக் கொண்ட இவற்றின் மிகப் பெரிய கூட்டம் சௌதி அரேபியாவில் மகாசாட் அஸ்-சையது வனப்பாதுகாப்பகத்தில் வாழ்கின்றன.
சுற்றும் வேலி கட்டி பராமரிக்கப்படும் இந்தப் பிரதேசத்தின் பரப்பு திருவனந்தபுரம் மாவட்டத்தின் பரப்பிற்கு சமமானது. 2011ல் 1500 ஓரிக்ஸ் மான்கள் அவற்றின் இயல்பான வாழிடங்களில் நிறைந்தன. மற்ற பாதுகாப்பகங்களில் 6000 மான்கள் வாழத் தொடங்கின. சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) அழிந்துவிட்ட உயிரினங்களின் பட்டியலில் இருந்து இன அழிவைs சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றிய உலகின் முதல் உயிரினம் இவையே.
மீண்டும் ஆபத்து
பிறகு ஓமான் பாதுகாக்கப்பட்ட பகுதியின் 90 சதவிகிதத்தையும் எண்ணெய்க் கம்பெனிகளுக்கு விற்றது. இதனால் அங்கு இருந்த அரேபியன் ஓரிக்ஸ் சரணாலயத்தை ஐநா தன் பாரம்பரிய பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. இங்கு 1996ல் இருந்த 450 மான்கள் வேட்டையாடல் மற்றும் உயிருடன் பிடித்தல் போன்ற விவேகமற்ற செயல்களால் 2007ல் 65 ஆகக் குறைந்தன.
பூமியில் வாழும் நான்கு ஓரிக்ஸ் இன மான்களில் அரேபியன் இனமே மிகச்சிறியது. ஓரிக்ஸ் இன மான்களில் இவை மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியில் வாழ்கின்றன. இவற்றுக்கு மணலும், காற்றும் நிறைந்த சூழலை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது. பளபளப்புடன் மின்னும் உடலின் மேற்பகுதி சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் கொளுத்தும் வெப்பத்தின் கொடுமையை இவை சமாளித்து வாழ்கின்றன.
பிளவுபட்ட குளம்புகள் மணலில் சுலபமாக நடக்க இவற்றிற்கு உதவுகின்றன. தண்ணீர் குடிக்காமல் நீண்ட காலம் வாழும் திறனுடைய இவை புதிய மேய்ச்சல் நிலங்கள் தேடி தொலைதூரம் வரை பயணம் செய்கின்றன. காலை மற்றும் மாலையில் சுறுசுறுப்புடன் செயல்படும் இவை பகல் நேரத்தில் கடும் கோடையைச் சமாளிக்க நிழல் இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குளம்புகளால் மணலைத் தோண்டி குளிர்ச்சியான இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமையும் இவற்றிற்கு உண்டு.
தேசிய சின்னமாக வாழும் மான்
30 மான்கள் வரை கூட்டமாக வாழும் இவை சாதகமற்ற சூழ்நிலையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றன. அப்போது ஆண் மான்கள் கூட்டத்தை விட்டு வெகுதொலைவுகளுக்கும் செல்வதுண்டு. வளைகுடா நாடுகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தேசிய சின்னங்களில் இந்த மானின் படங்களைப் பார்க்கலாம். கத்தார் ஏர்வேஸில் உள்ள அடையாளச் சின்னம் (logo) இந்த மானே. ஓமானில் அல்-மகா விமான நிறுவனம், அல்-மகா பெட்ரோலிய நிறுவனத்தின் அடையாளச் சின்னமும் இதுவே.
ஒற்றைக் கொம்பா இல்லை இரண்டு கொம்புகளா?
பக்கவாட்டிலும் சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தும் இவற்றைப் பார்க்கும்போது இவற்றின் ஒரே அளவுடைய இரண்டு கொம்புகளும் ஒன்று போலத் தோன்றும். வேறு காரணங்களால் ஒரு கொம்பு இல்லாமல் போனால் அது மீண்டும் வளராது என்பதால் அந்த இடம் வெறுமையாக இருக்கும். ஒருவேளை இது புராணங்களில் வர்ணிக்கப்படும் குதிரையின் உடலும் ஒற்றைக் கொம்பும் உடைய யூனிகோன் என்ற விலங்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இவை பாலைவனத்தின் யூனிகோன் என்றும் அழைக்கப்படுகின்றன.
இன்று இவை இன அழிவைச் சந்திக்கும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் வாழ்ந்து வருகின்றன.
மேற்கோள்கள்: https://en.m.wikipedia.org/wiki/Arabian_oryx
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வாழிடங்களின் ஆரோக்கியம் மனிதர்களின் நலம் மட்டும் அல்ல; எல்லா உயிரினங்களின் நலமும் சேர்ந்ததுதான் அது என்பதை கொரோனா தொற்றுக் காலத்தில் உலகம் புரிந்து கொண்டது. தாவரங்கள், விலங்குகள், பறவையினங்கள் அடங்கிய உயிரினங்களின் உலகைப் பற்றி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் மனிதன் இதுவரை பார்த்த கண்களைக் கொண்டு சுற்றிலும் இருக்கும் உயிரினங்களை இனி பார்க்கக் கூடாது என்பதை உணர்த்துகின்றன.
எல்லா உயிரினங்களுக்கும் உணர்வுகள் உண்டு
மனிதனுக்கும் சுற்றுப்புறத்திற்கும், மனிதனுக்கும் எண்ணற்ற உயிரினங்களுக்கும் இடையில் இருக்கும் உறவை எவ்வாறு நீதியுடன் கையாளலாம் என்பது பற்றியே நவீன அறிவியல் இன்று மனித குலத்திற்கு எடுத்துச் சொல்கிறது. மற்ற உயிரினங்களுக்கும் மனிதனுக்கு இருப்பது போலவே உணர்வுகளும் சிந்தனைகளும் உண்டு என்பதை வெகுகாலம் ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. பாலூட்டிகளுக்கும், மனிதனுக்கு முன் தோன்றிய குரங்கினங்களுக்கும் உள்ள ஆற்றலும் அறிவுக்கூர்மையும் மீன்களுக்கு இல்லை என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது.
இன்றும் பல விஞ்ஞானிகள் மீன்கள் உணர்வு உள்ளவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக தொட்டி மீன்களின் நடத்தை பற்றி ஆராய்ந்து வரும் சிட்னி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த உயிரினங்கள் உணர்வுப்பூர்வமாக வாழ்கின்றன என்று வலியுறுத்திக் கூறுகிறார்கள்.மீன்களின் சிந்தனைகள், அவற்றின் சமூக, வாழ்வியல் முறைகளைப் பற்றி புதிய ஆய்வு முடிவுகள் இதுவரை மனிதகுலம் அறியாத பல வியப்பூட்டும் உண்மைகளைக் கூறுகிறது. ஒரு மீன், மற்றொரு மீனிடம் உள்ள பயம், பதட்டம் போன்ற உணர்வுகளைப் புரிந்து கொள்கிறது. அந்த உணர்வுகளை அது பகிர்ந்து கொள்கிறது என்று சமீபத்தில் சயன்ஸ் (Science) என்ற ஆய்விதழில் வெளிவந்த கட்டுரை கூறுகிறது.
மீன்களின் மூளையில் உள்ள ஆக்சிடாசின் (Oxytocin) என்ற வேதிப்பொருள் இதற்குக் காரணமாக உள்ளது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
ஜீப்ரா மீன்களில் நடந்த ஆய்வுகள்
ஆய்வுக்கூடத்தில் ஜீப்ரா (Zeebra) மீனின் மூளையில் இருந்து இப்பொருள் அகற்றப்பட்டு ஆராயப்பட்டது. அந்த மீன்கள், சக மீன்களின் பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடியாத உயிரினங்களாக (antisocial) மாறிவிட்டன! இப்பொருளை மீண்டும் செலுத்தியபோது அந்த மீன்கள் இயல்பான நிலைக்கு மாறின.
சக மனிதர்களைப் பரிவுடன் நடத்தும் நம் பண்பிற்கு (care) வரலாற்றுக்கால பழமை உண்டு. மனிதர்கள், பாலூட்டிகள், மீன்கள் போன்ற உயிரினங்கள் பரிணாம ரீதியில் தோன்றுவதற்கு முன்பிருந்த காலத்தில் வாழ்ந்த ஆதி உயிரினங்களிடம் இந்தப் பண்புகள் உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நிம்மதியில்லாத வாழ்வு
வளர்ப்பு மீன்களின் வாழிடம், கடல், ஏரி குளங்களைப் போன்றதல்ல. மீன் பண்ணை, ஆய்வுக்கூடம் மற்றும் மீன் தொட்டியில் வாழும் மீன்களுக்கு மின்சார வெளிச்சம் நிம்மதியில்லாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. பளபளப்பு மிக்கக் கண்ணாடிச் சுவர்களை அவற்றால் சகித்துக் கொள்ள முடிவதில்லை.
இயற்கையில் நீர் நிலைகளில் இருக்கும் தாது உப்புகள் தொட்டியில் இருக்கும் நீரில் இல்லை. இதுபோன்ற செயற்கை வாழிடச் சூழல்களில் வாழும் மீன்கள் மன அழுத்தத்தை (stress) அனுபவிக்கின்றன. அவை வேதனை உணர்வை வெளிப்படுத்துகின்றன. சில இன மீன்கள் புதிய சூழ்நிலைகளை விரும்புகின்றன. வேறு சில கூட்டு சேர்ந்து வாழ விரும்புகின்றன.
தொட்டியில் உணவு, சுத்தநீர் போல அவற்றின் வாழிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது. வளர்ப்பு மீன்களுக்காக பொதுவான ஒரு வாழிடச் சூழலை உருவாக்குவது சுலபமானதில்லை. ஒவ்வொரு இன மீனுக்கும் அவசியமான சூழல் வெவ்வேறானது. ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபட்ட வளர்ச்சிக் கட்டங்கள் உள்ளன.
ஈல் இன மீன்கள் குஞ்சாக இருக்கும்போது நதியில் மண்ணிற்கடியில் ஒளிந்து கொண்டு வாழ விரும்புகின்றன. வளர்ந்தவுடன் இந்த குணம் அவற்றிடம் காணப்படுவதில்லை.
நடத்தை ஆய்வுகள்
மீன்களின் நடத்தை ரீதிகள் பற்றிய ஆய்வுகள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. 2007ல் ஆய்வுக்கூடங்களில் அடைக்கப்பட்ட நிலையில் வாழும் உயிரினங்கள் பற்றி நடத்தப்பட்ட எழுநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள் விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டன. இவற்றில் மீன்கள் பற்றிய ஆய்வுகள் 0.1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நடந்துள்ளது.
ஆய்வுக்கூடங்களில் தொட்டிகளில் நீண்டகாலம் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் நிம்மதியில்லாத வாழ்வை நடத்துகின்றன. இதனால் மீன்களின் பதில் வினை புரியும் தன்மை வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் எவ்வாறு உண்மையானதாக இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சால்மன் மீன்கள்
சால்மன் மீன்களின் எண்ணிக்கை குறைந்தபோது மீன் முட்டை பொரிக்கும் கூடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மீன் குஞ்சுகள் நதியில் விடப்பட்டன. ஆனால் அவை அந்த இயற்கை சூழ்நிலையில் வாழ முடியாமல் உயிரிழந்தன. இயற்கையான வாழிடச்சூழல் போல உருவாக்கப்பட்ட பண்ணைகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை, நதியில் விடப்பட்டபோது அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை உயிர் வாழ்ந்தன.
செடிகள், மறைவிடங்கள் இருக்கும் மீன் தொட்டிகளில் இந்த இன மீன்கள், இச்சூழல் இல்லாத தொட்டிகளில் இருக்கும் மீன்களை விட அதிக இனப்பெருக்கத் திறன் பெற்றவையாக இருந்தன. எதுவும் இல்லாத தொட்டியில் சிறிதளவு கற்கள் போடப்பட்டபோது அதில் இருந்த சால்மன் குஞ்சுகளின் மூளை வளர்ச்சி வேகமாக நடந்தது.
மீன் தொட்டியில் பாறைகளும், கற்களும்
நதிகளில் இருப்பது போல பாறைகள், கற்களை தொட்டியில் போட்டபோது இவற்றின் குஞ்சுகளிடையில் மன அழுத்தம் குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய கற்கள், மரக்கிளைகள் போடப்பட்ட தொட்டிகளில் வளர்ந்த மீன்களில் பாக்டீரியா தொற்று குறைவாகக் காணப்பட்டது. மிகச் சிறந்த வாழிடச் சூழலை ஏற்படுத்தினால் வளர்ப்பு மீன்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தமக்கென்று விருப்பு வெறுப்புகள், தேவைகள், சிக்கலான வாழ்வியல் முறைகளை உடைய மற்ற உயிரினங்களை தன்னுடைய தேவைகளுக்காக பயன்படுத்தவே மனிதன் விரும்புகிறான்.
இதனால் மற்ற உயிரினங்களின் சுதந்திரத்தையும், உணர்வுகளையும் மனிதன் ஏற்க மறுக்கிறான், அலட்சியப்படுத்துகிறான், புறக்கணிக்கிறான். இந்த மனப்போக்கு இருப்பதாலேயே மனிதன் பல உயிரினங்களை தன்னை விட தாழ்ந்தவையாகக் காண்கிறான். சில உயிரினங்களை மட்டும் பாசத்துடன் வளர்க்கிறான். பாம்புகள் போன்ற வேறு சிலவற்றை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்கிறான்.
மீன்களும் இனவியல் இரைகளே. நிறவெறி, பாலியல் வேறுபாடு அநீதி போல இனவியல் வேறுபாடும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதிலிருந்து மனித குலம் மீளும் காலமே மற்ற உயிரினங்களுக்கு விடியல் காலமாக இருக்கும்.
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-fishes-and-their-emotional-pain-1.8565835
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்
- மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்
- வலசை என்னும் அதிசயம்
- மகாவா என்ற மகத்தான எலி
- ஜப்பானில் புதிய மலர்
- வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்
- காளான்கள்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
- ஏழைகளின் மரம்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்
- சூழல் காக்க உதவும் நீர்நாய்கள்
- தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!
- வாழ வழியில்லாமல் தெருவில் அலையும் வனவிலங்குகள்
- புலி உள்ள காடே வளமான காடு
- 'காவலன்' புலி
- இலையுதிர் காலத்தின் இலைகளின் நிற மாற்றம்