கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நெருங்கிச் செல்லச் செல்ல இயற்கை நம்மை அற்புதப்படுத்தும். இயற்கையின் படைப்பில் வாழும் ஏராளமான உயிரினங்களில் தவளைகளும் ஒன்று. பூமியில் அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்களே முன்னணியில் உள்ளன. 41% ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினங்கள் இன அழிவின் விளிம்பில் வாழ்கின்றன. கேரளாவின் பல பகுதிகளில் 190 ஊர்வன வகை விலங்குகள் வாழ்கின்றன. மழைக்காலம் வந்துவிட்டால் தொடர்ச்சியாக இடைவெளி விடாமல் பாட்டு பாடும் தவளைகள் இதில் ஒன்று.
இவற்றில் மிக மோசமான இன அழிவை மலபார் தவளையினம் (Anaimalai Flying Frog/ False Malabar Gliding Frog) எதிர்கொள்கின்றன. இந்த சின்னஞ்சிறிய உயிரினங்களைக் காக்க கேரளா இடுக்கி மூணாறில் வாழும் ஹேட்லி ரஞ்சித் (Hadlee Renjith) என்பவர் ஒரு குளத்தையே உருவாக்கியிருக்கிறார். இப்போது இதில் இந்தத் தவளையைத் தவிர பூமியில் இருந்தே அழியும் ஆபத்தில் இருந்த 6 தவளையினங்கள் வாழ்கின்றன. இவற்றின் இரை தேடல், இணை சேர்தல், இனப்பெருக்கம் இங்கு நடக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் தவளையினங்கள் அதிகம் வாழும் செழுமையான பகுதி.
ஐம்பதிற்கும் மேற்பட்ட புதிய தவளையினங்கள் மூணாறில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல இனங்களும் பூமியில் இங்கு மட்டுமே காணப்படுபவை. 2000ம் ஆண்டில்தான் ரஞ்சித் இயற்கையை அறிந்தார். ஊரில் வேலையில்லாமல் இருந்தபோது சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிய ஒரு நிறுவனம் அவரை அழைத்தது. வெறுமனே போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் சென்றார். இயற்கையை, மூணாறைப் பற்றி அப்போது அவருக்கு எதுவும் தெரியாது.வருகை தந்தவர்களில் பெரும்பாலோனோரும் வெளிநாட்டவரே. ஆரம்பத்தில் தகவல்களை கூகுளில் இருந்து எடுத்தே ரஞ்சித் இடங்கள் பற்றிய விவரங்களைக் கூறி வந்தார்.
அப்போதும் அவருக்கு அதிக காலம் அந்த வேலையில் இருப்போம் என்ற நம்பிக்கை இல்லை. இதற்கு இடையில் ஏராளமான ஆய்வாளர்கள் மூணாறுக்கு வருகை புரிந்தனர். இவர்களில் பலர் சொல்லி ரஞ்சித் தவளைகளைப் பற்றி புரிந்து கொண்டார். பறவைகள், பாலூட்டிகள் பற்றித் தெரியும் என்றாலும் தவளைகள் பற்றி எதுவும் தெரியாது. வழிகாட்டிகளில் இருந்தும் விவரங்களைச் சேகரித்தார். சிறிய உயிரினங்களைப் பற்றிய அறிவும் தவளைகள் பற்றிய ஆர்வமும் இதனால் ஏற்பட்டது.
தவளையினங்களும் மூணாறும்
மூணாறில் மிக மோசமான இன அழிவை சந்திக்கும் 15 தவளையினங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. பாம்புகள், புழுக்களும் இங்கு அதிகமாக வாழ்கின்றன. இங்கு ஏலத்தோட்டத்திற்கு நடுவில் பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தப்படாத 60 ஏக்கர் பரப்பில் விண்ட்மயர் எஸ்டேட்டுக்குள் தவளைகளுக்கான இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு தவளைகளின் எண்ணிக்கை அதிகம்.
வழிகாட்டியாக பணி புரியும்போது ரஞ்சித் முதல்முறையாக மலபார் தவளையைப் பார்த்தார். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குளத்தில் நீர்வரத்து குறைந்தபோது அங்கு வாழ்ந்த தவளைகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இதன் பிறகு தவளைகளுக்காக தனியாக ஒரு குளம் உருவாக்க ரஞ்சித் திட்டமிட்டார். முதல் குளத்திற்கு தவளைகள் வரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து அடுத்த குளத்தையும் இவர் வெட்டினார். தார்ப்பாலின் விரிப்பைப் பயன்படுத்தியே இந்த இரு குளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
பறக்கும் தவளை
பறக்கும் திறன் உடையவை என்பதால் இவை பறக்கும் தவளைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பச்சை நிறத்தில் இருக்கும் இதன் உடலின் மேற்பகுதியில் சிறிய கறுப்புநிறக் கோடுகள் காணப்படுகின்றன. மற்ற இனத் தவளைகளுடன் ஒப்பிடும்போது இவை அளவில் பெரியவை. இவற்றில் பெண் தவளைகள் 7 முதல் 8 செண்டிமீட்டர் நீளமுடையவை. இவை இணைசேரும் இயல்பு சுவாரசியம் நிறைந்தது. நீண்டது. மாலை ஆறு மணிக்குப் பிறகு பெரும்பாலான ஆண் தவளைகளும் பெண் தவளைகளை கவர்வதற்காகப் பாடத் தொடங்கி விடும்.
பெண் தவளைகள் இலைகளிலேயே பெரும்பாலும் முட்டையிடுகின்றன. முட்டையிட வசதியாக பெரிய இலைகள் கிடைக்கவில்லை என்றால் சிறிய இலைகளை பரப்பி வைத்து பெரிதாக்கி அதன் மீது முட்டையிடுகின்றன. பெண் தவளை ஒரு திரவத்தை சுரந்து அதன் மீது தன் காலை வைத்து பரப்பியபிறகு அதில் முட்டையிடுகிறது.
முட்டைக்குப் பாதுகாப்பு
சுமார் இரண்டு மணிநேரம் பெண் தவளையின் உடலைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆண் தவளை பிறகு பிடியை விட்டுவிட்டு நகர்ந்து செல்கிறது. பெண் தவளை இலையில் முட்டையிட்டு வேறு இலைகளை எடுத்து அதை மறைத்து வைக்கிறது. மெல்ல இதை மூடி ஒரு புனல் போலாக்குகிறது. ஆறேழு மணிநேரம் இந்த இரண்டு இலைகளும் நன்றாக ஒட்டியிருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு பெண் தவளை அந்த இடத்தை விட்டு செல்கிறது.
தலைப்பிரட்டையாக இருக்கும்போது இதன் தலை ஒரு கடுகின் அளவே உள்ளது. இதனுடன் வெள்ளை நிறத்தில் ஒரு வால்பகுதியும் உருவாகிறது. இது இலைக்கூட்டில் இருந்து விடுபட்டு மெதுவாக நீரில் விழுகிறது. ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து குளத்தில் இருக்கும் இவை வெளியில் வருகின்றன. முதலில் பின்னங்கால்களும் பிறகு முன்னங்கால்களும் உண்டாகின்றன. ஒரு மாதத்தில் இவை தவளையாக மாறுகின்றன.
பச்சைப்புலி
புதிதாகப் பிறந்த தவளைக் குஞ்சின் வெளிப்பகுதியில் இலையின் வெளிப்புறத்தில் காணப்படுவது போல சிறிய கறுப்பு கோடுகள் இருக்கும். வயதிற்கு வரும்போது இந்த கோடுகள் நுணுக்கமாகப் பார்த்தால் மட்டுமே தென்படும். இவை மங்கலானதாக இருக்கும். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். பச்சை நிறத்தில் கறுப்புக் கோடுகள் உள்ளதால் இது பச்சைப்புலி (green tiger) என்றும் அழைக்கப்படுகிறது.
இந்திய வன உயிரிகள் அறக்கட்டளையின் (WTI) தவளைகளுக்கான முதல் திட்டம் இது. இதுவே ரஞ்சித்தின் முதல் திட்டமும். பறவைகள், பாலூட்டிகளைப் பாதுகாக்க இந்த அறக்கட்டளை ஏற்கனவே பல திட்டங்களை மேற்கொண்டுள்ளது. பறக்கும் மலபார் தவளை போன்ற அழிந்துவரும் தவளையினங்களைக் காப்பாற்ற வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தி ரஞ்சித் அறக்கட்டளையின் உதவியை நாடினார். திட்டம் வெற்றி பெறுமா என்று அறக்கட்டளையினர் கேள்வி எழுப்பினர்.
கடைசியில் நிதியுதவி கிடைத்தது. ஒரு வார கால உழைப்பின் முடிவில் குளம் வெட்டப்பட்டது. அருகில் இருக்கும் அருவியில் இருந்து நீர் எடுத்து வரப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு தவளை குளத்திற்கு வந்தது. பிறகு குளத்தைச் சுற்றி வண்ணத்துப்பூச்சிகள், புழுக்கள், சிலந்திகள் போன்றவை வரத் தொடங்கின. குளம் வெட்டப்பட்டு ஏறக்குறைய ஒன்பது மாதங்கள் கழித்து மலபார் தவளையினமும் குளத்திற்கு வந்து சேர்ந்தது. இப்போது குளத்தைச் சுற்றி வேறு பல இனங்களைச் சேர்ந்த தவளைகள் இங்கு வாழ்கின்றன.
காணாமல் போகும் இயற்கையும் உயிரினங்களும்
இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து அறக்கட்டளையினர் இப்பகுதியில் வாழும் தவளைகளைக் கண்காணித்து அறிய மூன்று ஆய்வாளர்களை அனுப்பியுள்ளது. வாழிட இழப்பே பெரும்பாலான தவளையினங்களின் அழிவிற்குக் காரணம். காடுகள் பல துண்டுகளாக மாறிவிட்டன. தேங்கிக் கிடக்கும் நீர் இல்லை. அப்படியே இருந்தாலும் அது அசுத்தமான நீரே. இதனால் தவளைகளின் அடைக்கல பூமியாக ஒரு காலத்தில் இருந்த இடங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன.
மூணாறில் முன்பு பல புல்வெளிப்பிரதேசங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவற்றில் பல அழிக்கப்பட்டு அந்த இடங்களில் பல தேயிலைத் தோட்டங்கள் செயல்படுகின்றன. இதனால் இங்கு வாழ்ந்து வந்த பல தவளையினங்கள் காணாமல் போயின. இது தவிர இப்பகுதியில் சிறியதும் பெரியதுமான பல சோலைவனங்கள் இருந்தன. இந்த வனங்கள் அழிக்கப்பட்டு பல யூகலிப்டஸ் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுவும் இந்த உயிரினங்களின் வாழிட இழப்பிற்குக் காரணம்.
காலநிலை மாற்றம், வாழிட இழப்பு போன்றவற்றால் இதுபோன்ற சின்னஞ்சிறிய உயிரினங்கள் பூமியில் இருந்தே ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகின்றன. இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதால் இவை சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றன. இவை காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதும் இத்தகைய விபத்துகளால் குறைகிறது. இதனால் இவற்றின் நடமாட்டம் குறைக்கப்படுகிறது.
புறக்கணிக்கப்படும் சிறிய உயிரினங்கள்
சாலையின் குறுக்கே யானை இருந்தால் வாகன ஓட்டிகள் கவனிக்கின்றனர். ஆனால் தவளை, பாம்புகளை எவரும் கவனிப்பதில்லை. இலட்சியம் செய்வதுமில்லை. இரவு பயணம் செய்யும்போது சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்த தவளைகளை ஏராளமாகக் காணலாம். இப்பிரச்சனைகள் சிறிது கவனம் வைத்து செயல்பட்டால் தீர்க்கப்படும்.
பூச்சிக்கொல்லிகள் மற்றொரு பிரச்சனை. இந்த உயிரினங்கள் அவற்றின் தோல் வழியாகவே சுவாசிக்கின்றன. இதனால் நீர் அவற்றிற்கு அவசியம் தேவைப்படும் ஒன்று. மழைக்காலங்களில் இவை சுறுசுறுப்பாக செயல்படக் காரணமும் இதுவே. ஆனால் தேயிலைத் தோட்டங்கள், மற்ற இடங்களில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவது அதிகமாக இருந்தால் அவற்றை சுவாசிப்பதன் மூலம் தவளைகள் கொல்லப்படுகின்றன.
இந்த நச்சுப்பொருட்களின் பயன்பாடு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. மாதத்திற்கு மாதம் புதிது புதிதான நச்சுப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. பகல் நேரத்தில் இவை அதிகம் வெளியில் காணப்படுவதில்லை. செடிகளுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. நச்சுப் பூச்சிக்கொல்லிகள் இந்த உயிரினங்களின் உடலில் நேரடியாகச் சென்று பாதிக்கின்றன. உடன் மழை பெய்தால் இவை அதிகம் பாதிக்கப்படுவதில்லை. இல்லையெனில் இவை உயிரிழக்க நேரிடுகிறது.
சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்படவேண்டும். இன்று புலிகளுக்கு பாதுகாப்பு திட்டம் இருக்கிறது. புலிகள் இப்போது மூவாயிரத்திற்கும் கூடுதலாக உள்ளன. ஆனால் கேரளாவில் புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் ஒரு தவளையினம் இப்போதும் வெறும் 300 மட்டுமே இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது.
வருமானத்தில் ஒரு பகுதி
புலிகள் போல உள்ள பெரிய உயிரினங்களைப் பாதுகாப்பது போல தவளைகள் போன்ற சிறிய உயிரினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். சுற்றுலா மற்றும் வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் பல செயல்கள் இயற்கையை அழிக்கிறது என்று கூறும் ரஞ்சி தன் வருமானத்தில் ஒரு பகுதியை இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஒதுக்கி வைக்கிறார்.
நாம் அலட்சியமாகக் கருதும் தவளைகளைப் பாதுகாக்க பாடுபடும் இந்த மனிதர் தன் செயலால் சூழல் பாதுகாப்பில் உயர்ந்து நிற்கிறார். சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கப் போராடும் இவர் போன்ற போராளிகள் இருக்கும்வரை இயற்கைக்கு அழிவில்லை என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் ஏற்படுகிறது.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
“எல்லா உயிரினங்களும் மறைந்து போய்விட்டால் ஆத்மார்த்தமான சூன்யத்தில் சிக்கி மனிதன் மரணமடைவான். உயிரினங்களுக்கு சம்பவிப்பது எல்லாவற்றையும் மனிதனும் அனுபவிப்பான். எல்லாம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை. பூமிக்கு வருவது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் வரும்” - ஒரு அமெரிக்கப் பழங்குடியினப் பழமொழி.
அருணாசலப் பிரதேசம் இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான இடம். இன்று காடுடன் சேர்ந்து வாழும் சில ஆதிவாசிப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும், பறவை விலங்குகளின் விற்பனையை நடத்தி வரும் கடத்தல்காரர்களுக்கும், உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கப் போராடும் ஆர்வலர்களுக்கும் இடையில் அருணாசலப் பிரதேசம் போராடிக் கொண்டிருக்கிறது.
பசுமை எழில் கொஞ்சும் மாநிலம்
இம்மாநிலத்தின் நிலப்பரப்பில் 80% வனப்பகுதியே. பசுமை மாறாக் காடுகள், உயரமான மண் மேடுகள், நதிகள், பள்ளத்தாக்குகள் இவற்றுடன் இமயமலைச் சிகரங்கள் நிறைந்து காணப்படும் இங்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் செழிப்புமிக்க அடையாளங்களாக ஐநூற்றிற்கும் மேற்பட்ட பறவை இனங்கள், ஆயிரக்கணக்கான அபூர்வ தாவரங்கள் வாழ்கின்றன. அனைவரையும் இங்கு ஈர்ப்பது பறவைச் சுற்றுலா.மேற்கு காமெங் (Western Kameng) மாவட்டத்தில் உள்ள கழுகு முட்டை சரணாலயம், பாசிகட் (Pasighat) மாவட்டத்தில் உள்ள டேயிங் எரிங் (Daying Ering) நினைவு வனவிலங்குகள் சரணாலயம், நம்தப்பா (Namdapha) தேசிய பூங்கா உட்பட எட்டு வன உயிரி சரணாலயங்கள், ஒரு அலங்கார மலர்ப் பூங்கா, இரண்டு தேசியப் பூங்காக்கள் உள்ளன.
வேட்டைத் திருவிழா
இங்கு வாழும் ஒரு சில ஆதிவாசி இனங்கள் வேட்டைத் திருவிழாக்கள் நடத்துகின்றன. வேட்டைத் திருவிழாவில் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் வரிசை வரிசையாகத் தொங்க விடப்படுகின்றன. பறக்கும் அணில், கலீச் பெசண்ட், சிவப்பு செம்போத்து (Red pheasant), மான், கீரி போன்றவை இன அழிவை சந்திக்கும் அபூர்வ உயிரினங்கள். இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆதிவாசி இனமான ஆதி (Adi) இன மக்களுக்கு நவம்பரில் டோரங், மார்ச்சில் உனைங் ஆரான், ஜனவரியில் டிஷாங் ஆகியவை முக்கியத் திருவிழாக்கள். இவற்றுடன் திருமண விழாக்களும் முன்காலம் முதலே இவர்களால் வேட்டையாடலுடன் கொண்டாடப்படுகின்றன.
முன்பு மூங்கில் பொறிகளைப் பயன்படுத்தி உயிரினங்கள் பிடிக்கப்பட்டன. பிறகு ஏர் கன் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்கள் வேட்டையாடினர். இதனால் நிமிட நேரத்திற்குள் ஏராளமான உயிரினங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. இதனுடன் சேர்ந்து வன உயிரினங்களின் இறைச்சிக்கான சந்தையும் வளர்ந்தது. இவர்களின் வேட்டையாடும் திறனைச் சுரண்ட வன உயிரினங்களைக் கடத்துபவர்களும் வரத் தொடங்கினர்.
வேட்டையாடுதலில் இருந்த பாரம்பரிய நம்பிக்கையின் கட்டுப்பாடுகளை சில ஆதிவாசிகள் பணத்திற்காக காற்றில் பறக்கவிட்டனர். இவர்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் உலா வந்தனர். குழந்தைகள்கூட குறைந்த காசுக்காக கண்ணில் தென்பட்ட பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.
மௌனமான கிராமங்கள்
பறவைகள் இல்லாத கிராமங்கள் நிசப்தமாயின. உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அவை வம்சமிழந்து அழிவை நோக்கிச் சென்றன. 2002-2005ல் 53 இனப் பறவைகள் மிதமிஞ்சிய வேட்டைக்கு இரையாகின என்று மேற்கு அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மூன்று ஆதிவாசி சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின.
வெப்ப மண்டலச் சூழலியல் (Journal of Tropical ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின்படி வேட்டையாடப்படுபவற்றில் ஐந்து இனங்களைச் சேர்ந்த பறவைகள் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலிலும், ஐந்து இனங்கள் வருங்கால ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும், ஓர் உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளவற்றின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவை.
புதிய முயற்சி
வனமும் வனப்பொருட்களும் ஆதிவாசிகளின் உரிமை. காட்டை தங்கள் சொந்த வீடாகக் கருதும் ஆதிவாசிகளை அங்கிருந்து விரட்டாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தி காட்டின் காவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். ஆதிவாசி இனத் தலைவர்களின் ஆய் பானே கபாங் குழுவுடன் வேட்டைக்கு எதிரான பேச்சுகள் நடந்தன.
2015ல் இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி இனத் தலைவர்கள் மாநில வனத்துறையினரால் அஸ்ஸாம் காசிரெங்கா சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆதிவாசித் தலைவர்கள் பழமையான சம்பிரதாயங்களைக் கைவிட முடிவு செய்தனர். கிராமங்களின் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காப்பாற்ற உறுதி எடுத்தனர்.
இருவாயன் கூடுகளை தத்து எடுக்க வாருங்கள்
இருவாயன் அல்லது இருவாய்ச்சி பறவை (hornbill) உள்ள ஒரு காடு முழுமையுடையது என்று சொல்லப்படுவதுண்டு. பழங்களைத் தின்று விதைகளை வெகுதூரம் வரை பரவச் செய்வதால் இவை காட்டின் விவசாயிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 1972 வன உயிரிப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இப்பறவை அருணாசலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை.
2018ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. இப்பறவைகளின் அழிவிற்கு இம்மாநிலத்தின் முதன்மை ஆதிவாசி நைஷி (Nissi) இனத்தவரின் வேட்டையாடலே காரணம். இவர்களின் தலைப்பாகையில் இப்பறவையின் அழகான பெரிய மஞ்சள் நிற அலகு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. பறவையின் இறைச்சி, இறகுகளை இவர்கள் பயன்படுத்தினர்.
பறவைக்கூடு
வேட்டைக்காரர்களையே பாதுகாவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். இதன் பலனாக 2011ல் இருவாயன் பறவைக்கூடு தத்து எடுக்கும் திட்டம் (Hornbill Nest Adoptation Programme HNAP) தொடங்கப்பட்டது. இதற்காக நைஷி ஆதிவாசித் தலைவர்களின் கோரா-ஆபே சங்கம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation) பாடுபட்டது.
சூழலியலாளர் அபராஜிதா தத்தா 1995 முதல் இப்பறவையைக் குறித்து நடத்திய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டது. பறவையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட ஆதிவாசிகளுக்கு அறக்கட்டளை பிரதிபலன் தரத் தொடங்கியது. 2020ல் பாதுகாக்கப்பட்ட 40 கூடுகளில் இருந்து 152 பறவைக் குஞ்சுகள் பிறந்தன!
யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம்
இம்மாநிலத்தில் இப்பறவைகளின் கூடுகளை யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். இதற்குக் கட்டணம் மாதம் ரூ 6000. பாதுகாக்கப்படும் பறவையின் குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் ஆண்டுதோறும் அனுப்பப்படும். இத்திட்டம் கூடுகளைப் பாதுகாக்கும் ஆதிவாசிக் குடும்பத்திற்கு சம்பளம் கொடுக்க அறக்கட்டளை கண்டுபிடித்த வழி.
புதிய தலைப்பாகை
காட்டுடன் நைஷி இனத்தவருக்கு இருந்த ஆத்மார்த்தமான உறவு புரிந்து கொள்ளப்பட்டது. தலைப்பாகையில் பறவையின் அலகிற்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டதால் இத்திட்டம் வெற்றி பெற்றது. இதில் இந்திய வன உயிரி அறக்கட்டளையினர் (Wildlife Trust of India WTI) பெரும்பங்கு வகித்தனர்.
பறவையின் அலகு போலவே தோற்றமளிக்கும், ஆனால் அதைவிட நீண்டநாள் உழைக்கக்கூடிய கண்ணாடி நாரிழையால் ஆன அலகுடன் கூடிய தலைப்பாகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறையில் அலகுகள் தயாரிக்கும் தொழில் ஆதிவாசிகளின் வருமான மார்க்கமாக மாற்றப்பட்டது.
மாநிலத்தின் பகே (Pakke) புலிகள் காப்பகத்திலும் அருகில் உள்ள காடுகளிலும் இன்று இப்பறவையின் கூடுகளை தாராளமாகக் காணலாம். இரவு நேரங்களில் இவற்றின் நூற்றுக்கணக்கான பறவைகளை இன்று சர்வசாதாரணமாகக் காண முடியும். கூடுகளைப் பார்க்க, அவற்றைப் படமெடுக்க ஏராளமானோர் இங்கு வருகின்றனர். சூழல் சுற்றுலாவின் மூலம் ஆதிவாசிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.
துப்பாக்கி ஒப்படைக்கும் திட்டம்
வேட்டையாடுவதைத் தடுக்க அரசு 2021ல் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதுவரை 2400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்குள் கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வீடுகளுக்கு அருகிலும், காட்டிலும் பறவைகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மைனா, கிளி, குயில், புல் புல், குருவி, புறா, பருந்து போன்றவை கூட்டமாக வந்தன. காட்டில் பறவைகளின் சங்கீதம் கேட்க ஆரம்பித்தது.
வன உயிரினங்களைக் கொல்வது, பிடித்து வைப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. வேட்டை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, நஞ்சு வைத்து மீன்களைக் கொல்வது சட்டவிரோதம். ரூ 25,000 வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதிவாசிகளிடையில் கல்வியறிவு பெற்ற சூழல் விழிப்புணர்வு உள்ள புதிய தலைமுறையினர் வேட்டைக்காரர்களைப் பிடிக்க, உட்காடுகளில் காவலிற்குச் செல்ல தாமே முன்வந்து தயாராகின்றனர்.
வன அழிவு
2002-2019ல் அருணாசலப்பிரதேசத்தில் 1,100 சதுர கி மீ பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன என்று உலக வனக் கண்காணிப்பு அமைப்பு (Global Forest Watch) 2020 அறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுதல், பழங்குடியினருக்கு இடையில் ஏற்படும் கலவரங்கள், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், வனங்களை பணப்பயிர் தோட்டங்களாக மாற்ற அழித்தல் போன்றவை இதற்குக் காரணம்.
2021ல் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் நிற அலகு பாஃப்லர் (Greybilled babblar), 2022ல் கண்டுபிடிக்கப்பட்ட ரோஸ் பிஞ்ச் (three banded rose pinch , பகன் லியாச்சியா (Bugun Liochchiya) உள்ளிட்ட பல புதிய பறவையினங்கள் சமீபத்தில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
அன்பு செலுத்தும் இயற்கையின் அம்சங்களான மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளை மனிதன் நேசிக்கத் தொடங்கினால் இயற்கையும் அவனை நேசிக்கும். உயிரினங்கள் இல்லாத உலகில் மனிதனும் உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால் பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாட்டின் பெயரைக் கொண்டுள்ள கானமயில் (Great Indian Bustard) என்ற இந்தப் அரிய வகைப் பறவை இந்தியாவில் இப்போது வெறும் 150 மட்டுமே உள்ளன. 1994ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இவை சேர்க்கப்பட்டன. மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முன்பு இவை வாழ்ந்து வந்தன. இன்று இரண்டு மாநிலங்களில் மட்டுமே இவை அதிகம் காணப்படுகின்றன என்று கருதப்படுகிறது.
இவற்றின் எண்ணிக்கை குறைய பல காரணங்கள் உள்ளன. மின்சாரக் கம்பிகளில் மோதி ஏற்படும் மரணங்களே அதிகம் நடந்துள்ளன. வேட்டைக்காரர்களை அடையாளம் காண இவற்றிற்கு பக்கவாட்டில் மட்டுமே அதிக பார்வைத் திறன் உள்ளது. இதனால் வேட்டை விலங்குகளையும், முன்னால் இருக்கும் மின்சாரக் கம்பிகளையும் இவை துல்லியமாகக் காண முடிவதில்லை.
இதுதவிர மற்ற தடைகள் மீது மோதி ஏற்படும் மரணங்களும் நிகழ்கின்றன. இந்திய வன உயிரி அறக்கட்டளை (Wildlife Trust of India WTI) 2017- 2020 காலத்தில் தார் பிரதேசத்தில் இவ்வாறு நடந்த 6 மரணங்களைப் பற்றி செய்தி வெளியிட்டது.புலிகள் பாதுகாப்பு திட்டம் போல ஒன்று
இவற்றின் பாதுகாப்பிற்காக உச்ச நீதிமன்றத்தின் தலையீடுகள் பல முறை ஏற்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மின்கம்பிகள் மீது மோதுவதால் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பூமிக்கடியில் கம்பிகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. புலிகள் பாதுகாப்பிற்காக புலி பாதுகாப்புத் திட்டம் (Project tiger) நடைமுறைப்படுத்தப் பட்டது போல இவற்றைப் பாதுகாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்தது. இதன் பலனாக 2012ல் கானமயில் பாதுகாப்புத் திட்டம் (Project Bustard) என்ற பெயரில் ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்போது இவை 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் இவற்றை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி இவற்றின் வாழிடங்களை தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களாக அறிவிக்கும் திட்டம் உள்ளது. ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் வனத்துறை மற்றும் இந்திய வன உயிரி அறக்கட்டளையின் உதவியுடன் இவற்றிற்காக சிறப்பு இனப்பெருக்க மையங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் மாநிலப் பறவை
இது ராஜஸ்தானின் மாநிலப் பறவை. உலகில் இப்போது உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள 200 பறவைகளில் 96 சதவிகிதமும் இம்மாநிலத்திலேயே வாழ்கின்றன. நாட்டில் உள்ள 150 கானமயில்களில் 126 பறவைகளின் வாழிடம் இந்த மாநிலமே. 1960களில் 1260 பறவைகள் இருந்தன. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு இடையில் இந்த எண்ணிக்கையில் 75% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்பு இந்தியாவில் 11 மாநிலங்களில் இவை வாழ்ந்து வந்தன.
என்றாலும் இன்று இவை ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்படுகின்றன. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இவை சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன. பறவைகள் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும் பறப்பதில் இவை நிபுணர்கள் இல்லை. 15 கிலோ வரை வளரும் இயல்புடையவை. உடல் எடை கூடுதலாக உள்ள, அதிகம் பறக்க இயலாத பறவைகளில் முதலிடத்தில் உள்ளன.
ஆணும் பெண்ணும்
பொதுவாக இவற்றின் நீளம் நான்கு அடி. பெண்களை விட ஆண் பறவைகளே அதிக எடையுடையவை. இறக்கைகளின் நிறத்தை வைத்து ஆண், பெண் பறவைகள் அடையாளம் காணப்படுகின்றன. பெண் பறவைகளில் கறுப்பு நிற க்ரீடம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. பிராந்திய மொழியில் இவை கோடாவன் என்று அழைக்கப்படுகின்றன.
1972ல் வேட்டையாடப்படுவது தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை இவை பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடியே அழிக்கப்பட்டன. 1980ல் இவற்றின் எண்ணிக்கை 1000. 150 என்ற மோசமான நிலைக்கு இப்போது இவற்றின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கம்பிகள் இடித்து ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 18 பறவைகள் உயிரிழப்பதாக இந்திய வன உயிரி அறக்கட்டளை கூறுகிறது.
உடல் எடை 15 கிலோ என்பதால் மின்சாரக் கம்பிகள் குறுக்கிடும்போது உடனடியாக இவற்றால் தங்கள் வழியை மாற்றிக் கொள்ள இயல்வதில்லை. இது இவற்றின் இறப்பு விகிதம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். முன்னால் உள்ளதைப் பார்க்கும் திறனும் இவற்றிற்குக் குறைவு என்பதால் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் அதிகரிக்கின்றன. இந்திய அரசின் 2009 மீட்பு மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் இவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.
கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம்
ராஜஸ்தானில் ஜைசல்மீரில் கூட்டில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. இங்கு இதற்காக வனப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 25 குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. வரும் மூன்று ஆண்டுகளில் இவை இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை அடையும். அப்போது இவை காடுகளில் கொண்டு சென்று சுதந்திரமாக விடப்படும். மறுவாழ்வு வசதிகள் செய்யப்படும்.
என்றாலும் இதனுடன் தொடர்புடைய 50% செயல்பாடுகள் மட்டுமே உரிய முறையில் நடந்தன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இவை அணைத்துண்ணிகள் (omnivores). கிடைப்பதை உண்ணும் இயல்புடையவை. சிறிய பிராணிகள், ஊர்வன, புழுக்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
இவற்றின் இனப்பெருக்கம் மழைக்காலத்தில் நடக்கிறது. வித்துகள், நிலக்கடலை போன்றவை குளிர் மற்றும் வறட்சி அதிகமுள்ள காலங்களில் இவற்றின் முக்கிய உணவு. வயது வந்த பறவைகளுக்கு பருந்துகள், எகிப்திய வல்லூறுகள் போன்றவை முக்கிய எதிரிகள். சாம்பல் நிற செந்நாய்கள் இவற்றை வேட்டையாடுவது உண்டு. பசுக்கள் மேயும்போது இவற்றின் முட்டைகள் மிதிபடுவதால் அவை அழிந்து போவதும் உண்டு.
ஆண்டுதோறும் புதிய கூடுகள்
மார்ச் முதல் செப்டம்பர் வரை இனப்பெருக்க காலம். இனப்பெருக்கத்தைப் பற்றிய விவரங்கள் ஆராயப்பட்டுள்ளன என்றாலும் இவை கூடு கட்டுவது மற்றும் இவற்றின் இணை சேரும் சுபாவம் பற்றி இன்னும் அதிகம் ஆராயப்படவில்லை. ஒருமுறை இனப்பெருக்கத்திற்காக கட்டிய கூடுகளை இவை மறுபடியும் பயன்படுத்துவது இல்லை. ஆண்டுதோறும் புதிய கூடுகளைக் கட்டுகின்றன.
முந்தைய ஆண்டுகளில் மற்ற கானமயில்கள் கட்டிய கூடுகளை இவை சில சமயங்களில் பயன்படுத்துவதுண்டு. மண்ணில் சிறிய குழிகளைத் தோண்டி கூடு கட்டுகின்றன. ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட பறவைகளுடன் இணை சேர்கின்றன. ஆண் பறவைகள் மற்ற பெண் பறவைகளுடன் அதிகமாக இணை சேர்கின்றன. பெண் பறவைகள் ஒரு பிரசவத்தில் ஒரு முட்டையை இடுகிறது. ஒரு மாத காலம் அடை காக்கும் பருவம்.
ஆண் பறவைகள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் இனப்பெருக்க வயதை அடைகின்றன. பெண் பறவைகள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இனப்பெருக்க பருவத்தை அடைகின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் 12 முதல் 15 ஆண்டுகள். இறக்கைகளின் அளவு 210 முதல் 215 செண்டிமீட்டர்.
கானமயில் பாதுகாப்புத் திட்டம்
இணை சேரும் காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் இவை வலசை செல்லும் இயல்புடையவை. எண்ணிக்கையில் பெரும் குறைவு ஏற்பட்டதால் 2011ல் இவை அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினமாக அறிவிக்கப்பட்டன. வாழிட அழிவு இவை சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனை. 2012ல் இந்திய அரசு இவற்றின் பாதுகாப்பிற்காக கானமயில் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. என்றாலும் இத்திட்டத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை. இனி வரும் காலத்திலேனும் இந்த உயிரினங்கள் அழிவின் ஆபத்தில் இருந்து காப்பாற்றப்படுமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல்வாழ் பாலூட்டி விலங்குகளான சீல்களில் (Seal) சில, உண்ணும் உணவில் கலந்திருக்கும் நஞ்சை சமாளித்து உயிர் வாழும் திறன் பெற்றுள்ளன. இந்தத் திறன் பற்றிய ஆய்வு மனிதர்களுக்கான மருத்துவத்தில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஹ்ஃவான் ஃபெர்னாண்டஸ் மிருது உரோமம் உள்ள சீல்கள் (Juan Fernandez fur seal) மிக ஆபத்தான காட்மியம் உள்ளிட்ட உலோகத்தை உணவுடன் சேர்த்து உண்கின்றன என்றாலும் அவற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மனிதனின் செயல்களால் பூமியில் இருந்தே அழிந்து விட்டன என்று கருதப்பட்ட இந்த உயிரினம் இப்போது சூழலில் கலந்திருக்கும் மிக மோசமான உலோக நச்சுகளை சமாளித்து வாழ்கின்றன. ஆர்த்தோஸ்பேலஸ் பிலிப்பியை (Arctocephalus Philippii) என்ற விலங்கியல் பெயர் கொண்ட இவை உலகின் மிகத் தனிமைப்பட்ட இடங்களில் வாழ்பவை.
இவை காட்மியம், பாதரசம் போன்ற நச்சு உலோக மாசுகளை உண்டு ஆபத்தில்லாமல் உயிர் வாழ்கின்றன. பிலிப்பியை என்ற இந்த இனம் உலகின் இரண்டாவது மிகச்சிறிய மிருது உரோம சீல் வகையைச் சேர்ந்த இனம். இவை சிலி நாட்டின் கரையில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹ்வான் ஃபெர்னாண்டஸ் வளைகுடா மற்றும் அதற்கு அருகில் இருக்கும் ஒரு சில பசுபிக் கடல் தீவுகளில் மட்டுமே வாழ்கின்றன.இங்கு இவற்றின் வாழிடத்தை அலெக்சாண்டர் செல்கர்க் (Alexander Selkirk) என்ற கடற்பயணி 1704-1709 ஆண்டுகளுக்கு இடையில் கடலில் மூழ்கி ஆராய்ந்து அறிந்தார். இந்நிகழ்வு டானியல் டிஃபோ (Daniel Defoe) என்பவரால் ராபின்சன் க்ரூஸோ (Robinson Cruso) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இதனால் இந்த வளைகுடாப் பகுதியின் முக்கியத்தீவு ராபின்சன் க்ரூஸோ என்று பெயரிடப்பட்டது.
ஆனால் அதன் பிறகு இந்த விலங்குகள் மிகத் தீவிரமாக அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இப்பகுதியில் இருந்த நான்கு மில்லியன் உயிரினங்கள் கொல்லப்பட்டன. இதனால் 19ம் நூற்றாண்டில் இவை இப்பகுதியில் இருந்து முற்றிலுமாக அழிந்து போயின. 1960களில் இவற்றின் சிறிய காலனி இத்தீவுப்பகுதியின் ஒரு குகைக்குள் மீண்டும் கண்டுபிடிக்கப்படும்வரை இவற்றின் இனம் அழிந்து விட்டது என்றே கருதப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட உயிரினம்
இதன் பின்னர் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் இவற்றின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. மிக சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இப்போது இத்தீவின் பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் இவற்றின் எண்ணிக்கை 80,000.
வளர்ச்சியடைந்த சீல்கள் கடலில் வாழ்கின்றன. நவம்பர் டிசம்பர் மாதங்களில் குட்டிகள் மிருதுவான கறுப்பு நிற உரோமத்துடன் பிறக்கின்றன. பிறகு இந்த நிறம் சில ஆண்டுகளில் மங்கி பழுப்பு நிறமாக மாறுகிறது. இந்த உயிரினங்கள் பற்றி விஞ்ஞானிகள் சமீப காலத்தில் ஆராயத் தொடங்கும் முன்புவரை இவை பற்றி மிகக் குறைவான விவரங்களே அறியப்பட்டன. இத்தகைய ஆய்வுகளின்போதே நஞ்சு உண்டாலும் பாதிக்கப்படாத இவற்றின் அதிசயிக்க வைக்கும் ஆற்றல் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றின் மலம் ஆராயப்பட்டபோது அதில் மிக அதிக அளவு காட்மியம், பாதரசம் மற்றும் பிற நச்சு உலோக மாசுக்கள் இருப்பது தெரியவந்தது. இது மிகுந்த வியப்பை ஏற்படுத்திய கண்டுபிடிப்பு. காட்மியம், பாலூட்டிகளுக்கு நச்சுத் தன்மையை தரக் கூடியது. ஆனால் இந்த சீல்கள் இந்த நஞ்சை எவ்வாறு செரிக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக உள்ளது.
தங்கள் உடலின் செரிமான உறுப்புகள் வழியாக இவற்றை சீல்கள் செல்ல அனுமதித்தாலும் அதனால் இந்த உயிரினங்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உயிர் வாழ்கின்றன என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சூழல் பாதுகாப்பு ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் கான்ஸ்டண்ச டோரோ-வால்டிவிசோ (Constanza Toro-Valdivieso) கூறுகிறார்.
இந்த உயிரினங்கள் இந்த நஞ்சுகளை எங்கிருந்து பெறுகின்றன என்பதும் ஆய்வாளர்களை வியப்படையச் செய்தது. இத்தீவில் உள்ள மண் மற்றும் சுற்றியுள்ள நீரில் இருக்கும் காட்மியத்தின் அளவு மிகக்குறைவு. இது பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது உணவின் மூலமே சீல்கள் இந்த நஞ்சுகளைப் பெறுகின்றன என்று கண்டறியப்பட்டது.
பெருவட்ட கடல் நீர்ச்சுழற்சி
அண்டார்க்டிக் மிருது உரோம சீல் போன்ற சில சீல் இனங்கள் அவை வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் நீரில் உள்ள மிதவை உயிரினங்களையே (krill) உண்கின்றன. ஆனால் இந்த சீல்கள் ஏராளமான ஸ்குவிட் (Squid) மற்றும் இதர மீன்களை உட்கொள்கின்றன. பெண் சீல்கள் 500 கிலோமீட்டர் வரை கடலில் பயணம் செய்து தங்கள் இரையை வேட்டையாடுகின்றன. இதற்காக இவை தெற்கு பசுபிக் பெருவட்ட கடல் நீரோட்ட சுழற்சியை (Gyre) கடந்து செல்கின்றன.
பெருவட்ட கடல் நீரோட்டச் சுழற்சி என்பது அதிவிரைவாகச் சுழலும் கடல் நீரோட்டம். இச்சுழற்சியில் சகலவிதமான கழிவுகளும் சிக்கிக் கொள்கின்றன. இங்கிருந்தே சீல்கள் காட்மியம் போன்ற நஞ்சுகளை உணவின் மூலம் பெறுகின்றன என்று கருதப்படுகிறது. அதிவேகமாகச் சுழலும் கடல் நீரோட்டத்தில் மனிதன் உருவாக்கும் காட்மியம், பாலிமரால் ஆன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன. இவற்றை ஸ்குவிட் மற்றும் மீன்கள் உணவுடன் உண்கின்றன. இவற்றிடம் இருந்து சீல்களின் உணவில் இந்த நஞ்சுகள் சேர்கின்றன என்று நம்பப்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்த வகை உயிரினங்கள் பற்றி ஆராய்ந்து வரும் வால்டிவிசோ அடங்கிய விஞ்ஞானிகள் குழுவின் இந்த ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் Royal Society open science என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற பாலூட்டிகளுக்கு நஞ்சாக இருக்கும் காட்மியம் போன்றவற்றை இந்த உயிரினங்கள் எவ்வாறு செரிமானமடையச் செய்து அதிக பாதிப்பு இல்லாமல் வாழ்கின்றன என்பது பற்றி தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவற்றின் மலம் தவிர இயற்கையாக உயிரிழந்த இவற்றின் எலும்புகளிலும் நச்சு மாசுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எலும்புகளில் காணப்படும் அதிகப்படியான சிலிகான் காட்மியம் போன்ற நஞ்சுகளை சமாளிக்க இவற்றிற்கு உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது நம் மருத்துவத் துறையில் முக்கியப் பயன்களைத் தரக் கூடியது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மனிதன் அறியாத பல அதிசயங்கள்
நஞ்சை சமாளிக்கும் இதன் பண்பு இதன் உடலில் இருக்கும் மரபணுக்களுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். அல்லது முற்றிலும் மனிதன் அறியாத வேறு காரணத்தால் இவ்வாறு நிகழலாம். இது பற்றி வரும் ஆண்டுகளில் தீவிரமாக ஆராயப்படும் என்று வால்டிவிசோ கூறுகிறார். மனித குலம் அதிகம் அறியாத இந்த உயிரினங்கள் இதுவரை நாம் அறியாத பல அதிசயிக்க வைக்கும் அறிவியல் உண்மைகளை நமக்கு வெளிப்படுத்தலாம்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அன்று வேட்டையாடும் கிராமம், இன்று காவல் கிராமம்
- இயற்கையின் ஆயுதங்கள்
- ஆழ்கடலில் ஓர் அதிசய உயிரினம்
- தாவரங்கள் பேசுகின்றன
- அழிவில் இருந்து மீண்டு வந்த வண்ணத்துப் பூச்சி
- திமிங்கல வேட்டை
- யானைகளுக்கு ஏன் புற்றுநோய் வருவதில்லை?
- யார் காப்பாற்ற வருவார் இந்த உயிரினங்களை?
- மீண்டும் பறக்குமா குவாமின் மீன்கொத்திப் பறவை?
- கடலின் மழைக் காடுகளைக் காப்பாற்றும் கலைச் சிற்பங்கள்
- கரடிகள்
- மண்ணிற்கடியில் ஒளிந்திருக்கும் விலையுயர்ந்த பூஞ்சை
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு