crow 349

பசுமையைப் பேணும் இயற்கை விரும்பி

       மரத்தில் கூடு கட்டும் காகங்கள், காலையில் இரை தேட கிளம்பி மதியத்திற்குள் அதே மரத்தை வந்தடைகின்றன. தான் கூடு கட்டி வாழும் மரத்திற்கு கீழே கூட்டிலிருந்து விழும் காகத்தின் எச்சங்கள் மரத்திற்கு சிறந்த உரமாகப் பயன்படுகின்றன. அதனால் மரங்கள் செழிப்பாக வளர்வதுடன் பிற தாவரங்களும் செழிப்பாக வளர்வதற்கு காரணமாக அமைகின்றது.

எச்சத்தின் மூலமாக மண்ணில் பதிந்த விதைகள் மழைக்காலங்களில் முளைக்கத் தொடங்குகின்றன. இவ்வாறு விதைகள் ஆங்காங்கே பரவி மரங்கள் உற்பத்தியாக இயற்கை விதைத்தூவியாக காகங்கள் விளங்குகின்றன.

மேலும் மரத்தின் கனிகளிலிருந்து நேரடியாகப் பெறப்பட்ட விதையின் முளைப்புத் திறன், காகத்தின் எச்சத்திலிருந்து பெறப்பட்ட விதையின் முளைப்புத்திறனை விட குறைவாக இருப்பதும் ஆய்வுப் பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

விலங்குகளின் உற்ற தோழன்

       ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கு மிகுந்த தொல்லையைத் தருவது உண்ணிப் பூச்சிகளாகும். அவ் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளைத் தாங்க முடியாமல் ஆடு, மாடுகள் அவற்றினுடைய உடம்பை பாறை, சுவர், மரம் போன்ற பொருட்களின் மீது உராய்ந்து உண்ணிப்பூச்சிகளின் தொல்லையைக் குறைக்க முயல்கின்றன.

ஆடு மேய்ப்பவர்கள் வளர்ப்பு ஆடுகளின் காது மடல்களை முக்கால்வாசி வெட்டி விடுவர். காரணம் என்னவென்றால், ஆடுகளின் காது மடல்கள் மடங்கி இருப்பது காதுமடல்களில் அதிகளவு உண்ணிப்பபூச்சி இருந்து ஆடுகளின் இரத்த்த்தை குடித்துவிடுகின்றன. அதனால் ஆடுகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றன. காது மடல்களை வெட்டிவிட்டால் காகங்கள் ஆடுகளின் கழுத்துப் பகுதியில் அமர்ந்து கொண்டு காதுக்குள் இருக்கும் உண்ணிப்பூச்சிகளை எளிதில் எடுத்து விடுகின்றன. இதனால் ஆடுகள் உண்ணிப்பபூச்சிகளின் தொல்லைகளிலிருந்து எளிதில் விடுபடுகின்றன.

இயற்கை துப்புறவாளர்

crow 340 copyமனிதனால் கொல்லப்பட்டு வீதியில் எறியப்பட்ட விலங்குகள், இறைச்சிக்கடை வியாபாரிகளால் கொட்டப்படும் விலங்குகளின் இறைச்சிக்கழிவுகள், மனிதன் உண்ட பின்பு வீதியல் எறியப்படும் எச்சில் உணவுப் பதார்த்தங்கள் போன்றவை சுகாதாரக்கேட்டினை ஏற்படுத்துகின்றன. சுகாதார நலனுக்கு அச்சுறுத்தலாக அமையும் மேற்கண்ட மனிதர்கள் செய்யும் சுகாதாரக்கேட்டினை அப்புறப்படுத்தும் இயற்கைத் துப்புறவாளராக காகம் இருந்து வருகின்றது.

இத்தகைய அற்புதப் பணிகளைச் செய்து வரும் காக இனங்கள் மனிதனின் செயல்களால் அழிந்து வருகின்றது. எலித்தொல்லையை கட்டுப்படுத்த மனிதன் உணவில் விஷம் வைத்துக் கொல்கிறான். விஷ உணவை உண்ட எலிகள் இறந்தவுடன், இறந்த எலியை வீதியில் தூக்கி எறிகிறான். இதனை உண்ட காகமும் இறந்துவிடுகிறது. மேலும் மனிதன் வயல் வெளியில் உள்ள எலிகளை ஒழிக்கும் பொருட்டு அவிக்கப்பட்ட நெல்லில் விஷம் கலந்து அவற்றை வீட்டின் மாடிகளில் உலர வைக்கின்றான். அவற்றை உணவுப் பொருட்களாக நினைத்து, இரை எடுத்த காகங்கள் அழிகின்றன.

காக இனத்தின் அற்புத செயல்களை நினைத்து காகங்கள் அழிபடாமல் காத்தால், நம் சுற்றுப்புறம் தூய்மை ஆவதுடன் நமது நலன்களும் பாதுகாக்கப்படும் என்பது திண்ணம்.

- இரா.முத்துசாமி எம்.ஏ.,பி.எட்., தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடையநல்லூர். அலைபேசி 9994531009

Pin It

காடழிப்பானது பல் வகையான உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதுடன் நீண்ட காலப்போக்கில் மனித இனத்துக்கு கேடு விளைவிப்பதாக அமையும். இவ் அயன மழைக்காடுகள் அழியும் இடங்களாக பிரேசலின் அமேசன் காடுகள், ஆபிரிக்காவின் கொங்கோ காடுகள், மலகாசி, கெய்ட்டி, பிலிப்பைன்ஸ், இலங்கையில் சசிங்கராஜவனம், சுமாத்திரா, யாவா, பனாமா, நைஜீரியா, இந்தோனேசியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, காபோன், கிழக்கு அவுஸ்திரேலியா போன்றவற்றில் நடைபெறுகின்றது. காடுகளின் சீரழிவு/தரமிழப்பு என்பது பொதுவாக தாவர போர்வைகளின் இழப்பு என்று கருத முடியாது.

amazon forest

இன்றைய புவி மேற்பரப்பில் 2/5 பங்கு காடுகளினால் மூடப்பட்டுள்ளது. இது மொத்த நிலப்பரப்பில் பயிர்ச்செய்கை அடங்கியுள்ள பகுதியிலும் பார்க்க 3.5 மடங்கு அதிகமாகும். உலகளாவிய ரீதியில் சராசரியாக 4499 million ha ஆக காணப்பட்ட காட்டு வளத்தில் அயன மண்டல காடுகள் சராசரியாக 2346million ha ஆக காணப்படுகிறது. இக் காடுகளில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 4 million ha வரை இடைநிலை காடுகளாக மாற்றமடைந்து வரும் அதேவேளை 1945 இன் பின் வளர்முக நாடுகளில் இக்காடழிப்பின் விகிதாசாரங்கள் அதிகரித்து உள்ளதோடு மத்திய அமெரிக்காவில் சராசரியாக 38% காடுகளும் ஆபிரிக்காவில் 24% காடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவ் அயனமண்டல காடழிப்பானது பூகோளத்தில் வருடாந்தம் 6.5 million ha காணப்படுகிறது. இது மொத்த நிலப்பரப்பில் 0.6% ஆகும். இவ்வாறு காடழிப்புகள் அயன வலயப்பகுதிகளில் நடைபெற்று வருகின்றபொழுது தற்பொழுது ஆசிய பிராந்தியத்தில் 25% தென்கிழக்காசியாவிலும் 57% அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இவ் அயன காடுகளின் சராசரியான அடர்த்தி 1202 million ha ஆகும்.

இவ் அயனமழைகாடுகளின் சீரழிவிற்கான காரணங்கள் என்ற ரீதியில் நாம் பார்க்கின்ற போது பல காரணிகளை குறிப்பிடலாம். அமிலமழைத்தாகத்தினை உற்றுநோக்கும் போது அயனக்காடுகள் பரம்பல் அடைந்துள்ள பகுதிகளில் அமில மழையானது பொழிகின்ற போது அம் மழையின் தாக்கத்திற்கு பசும்போர்வைகள் ஆளாகி கருகி அழிவடைந்து செல்கின்ற நிலை காணப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசிய காட்டுப்பகுதி, அமேசன் காட்டுப்பகுதிகளில் இதனை அவதானிக்கலாம்.

இயற்கை இடர்களினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் நடைபெறுகின்ற அயனச்சூறாவளி, மட்சரிவு,காட்டுத்தீ உள்ளிட்ட இயற்கை இடர்களினால் பசும் போர்வைகள் அழிவிற்கு உட்படுகிறது. குறிப்பாக 2008 அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2011களில் அவுஸ்திரேலியாவில் விடோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, 2013 களில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீ போன்றவற்றினை குறிப்பிடலாம்

அயனச்சூறாவளியினை பார்க்கும்போது புவி மேற்பரப்பில் தாழமுக்க இறக்கம் ஏற்படுகின்ற பகுதிகளினை மையமாக கொண்டு தோற்றம் பெறுகிற அயனசூறாவளிகளினால் சுழிப்பு வலயமானது ஓர் பிரதேசத்தில் பிரசன்னமாகிறது. இதனால் அயன மழைக்காடு தாவரங்கள் அடி வேரோடு பெயர்க்கப்பட்டு அழிவடைகின்றது. குறிப்பாக 2012 களில் ஜனவரி மாதத்தில் அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து மாநிலத்தை 300km/h வேகத்தில் தாக்கிய யாசி சூறாவளியின் போது பல மரங்கள் அழிக்கப்பட்டன.

மட்சரிவினை அவதானிக்கின்றபோது மலைநாட்டு பகுதிகளில் திணிவுஅசைவு செயன்முறையின் பிரகாரம் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்டு உயரம் குறைந்த பகுதிகளை நோக்கி அடி வேரோடு மரங்கள் முறிந்து விழுகின்றமையால் காடுகள் அழிப்பு குறிப்பாக இலங்கையில் கடந்த 2014 oct களில் கொஸ்லாந்தை பகுதிகளில் ஏற்பட்ட மட்சரிவு காரணமாக மரங்கள் வீழ்ந்து இடிந்து 9m உட்பகுதி மண்ணினுள் புதையுண்டன.

அதிகரித்து வருகின்ற சனத்தொகையினை பார்க்கின்ற போது வளர்முக நாடுகளில் அதிகரித்த சனத்தொகையினால் குடியிருப்பு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் கைத்தொழில் மையம் போன்றவற்றினை நிர்மாணிப்பதற்கு போதியளவு இடவசதி இன்மையினால் மேற்பரப்பு பசும்போர்வை அழிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக 2013களின் தரவின்படி இந்தோனேசியாவில் 249 million சனத்தொகையும், பிரேசிலில் 201 million சனத்தொகையும் இலங்கையில் 21.6million சனத்தொகையும் இந்தியாவில் 1.23 billion சனத்தொகையும் சீனாவில் 1.31 billion சனத்தொகையும் காணப்படுமிடத்து உட்கட்டுமானஅபிவிருத்தி செயற்பாடு காரணமாக இங்கு காடுகள் துரிதமாக அழிக்கப்படுகின்றன எனலாம்.

விவசாய ரீதியான செயற்ப்பாடுகளினை அவதானிக்கின்ற போது புவி மேற்பரப்பில் விவசாயரீதியான நடவடிக்கைகள் என்னும் போர்வையில் பெருந்தோட்ட பயிர் உற்பத்திகளினை முன் எடுத்து கொள்வதற்காகவும் அடர்ந்த காடுகள் பற்றைக்காடுகள் காணப்படும் பகுதிகளில் அவற்றை எரித்து சாம்பலினை உழுது மண்ணை பண்படுத்துகின்ற சேனைப்பயிர் செய்கையாலும் பசும் போர்வைகள் அழிக்கப்பட்டு குறித்த பயிர் உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெருந்தோட்டப்பயிரான தேயிலை இறப்பர் தெங்கு போன்றனவற்றுக்காக இலங்கை, இந்தியா, சீனா போன்றவற்றிலும் சேனைப்பயிருக்காக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா, இலங்கை, இந்தியா போன்றவற்றிலும் காடுகள் அழிக்கப்படுகின்றன.

துறைசார்ரீதியான வேலைவாய்ப்புகளுக்காக அயன காடுகளானது வெட்டுமர ஏற்றுமதி, கடுதாசி உற்பத்திக்கான மரத்தூள் சேகரித்தல், காடுபடு திரவியங்களை பெற்று கொள்ளல் போன்ற செயன்முறைகளுக்காக பசும்போர்வை அதிகம் அழிக்கப்படுகிறது. குறிப்பாக தாய்லாந்து, இந்தோனேசியா, கிழக்கு அவுஸ்திரேலியா, இலங்கை போன்றவற்றில் இவ்வாறு நடைபெறுகின்றது.

இதை தவிர மந்தைவளர்ப்பு, எரிபொருள் தேவை, வர்த்தகநோக்கு, நீர்மின்சாரதிட்டம் போன்றவற்றுக்காக இக்காடுகள் இன்றுவரை அழிக்கப்படுகிறது. இதனால் இன்று பல்வேறு சூழல், காலநிலையியல் சார் பிரச்சனைகள் உருவாகின்றது. குறிப்பாக உயிர்ப்பல்வகைமைகள் பாதிக்கப்படல், மண்வளம் இழக்கப்படல், சூழலில் காபநீரோட்சைட் பெறுமானம் அதிகரித்தல், பழங்குடி மக்களின் வதிவிடங்கள் அருகி அழிவடைதல், சூழலியல் சுற்றுலாத்துறை பாதிக்கப்படல் போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன எனலாம். இன்றைய உலகில் காலநிலை மாற்றத்துக்கு ஏதுவான ஒரு பிரதான காரணியாகவும் காணப்படுகிறது எனலாம்.  

- எஸ்.கீர்த்தி, சண்டிலிப்பாய், இலங்கை

Pin It

                மாறிவரும் விஞ்ஞான யுகத்தில் பழமையை நாளுக்கு நாள் மறந்து வருகிறோம். அவ்வகையில் மறந்த மரங்களுள் பனைமரமும் ஒன்று. மனிதன் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாறுதவற்கும், நிலம், வீடு, மனை போன்றவைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கும் மிக முக்கியமான காரணி எழுத்தாணி என்று அழைக்கப்படும் பேனா. அதன் பின்னர் பால்பாயிண்ட் எனப்படும் பந்து முனைப் பேனாக்கள் ஜெல் என்னும் திரவத்தை தாங்கி வருகிறது. இத்தகைய அறிவியல் முன்னேற்றத்திற்கு முன்னர் ஆணி கொண்டு பனை ஓலையில் எழுதினார்கள். இப்பொழுதுள்ள நவீன யுகத்தில் பனை ஓலையில் எழுதினார்கள் என்று கூறினால் நம்மை வியப்புடன் தான் பார்ப்பார்கள்.

panaiபனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பனை ஓலையை எழுதுவதற்கேற்றவாறு பதப்படுத்தவேண்டும். பதப்படுத்துதல் என்ற‌ அறிவியல் தொழில் நுட்பத்தை சரியாக தெரிந்து வைத்திருந்தார்கள் நம் பண்டைய தமிழர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஓலைச்சுவடிகள் அப்படியே இன்னும் அருங்காட்சியகத்தில் உள்ளதற்கு பதப்படுத்துதலே காரணம். நமது முன்னோர்கள் எழுதுவதற்காக நல்ல அகலமான ஓலைகளை எடுத்து சீராக நறுக்கி அதனை தண்ணீரில் நன்கு வேகவைத்து பிறகு உலர்த்தி அதன் பின்னர் இந்த ஓலைகளின் பாதுகாப்பிற்காக இரண்டு மரச்சட்டங்களை சுவடிகளின் மேலும் கீழும், வைத்து கட்டி ஆவணப்படுத்துவார்கள்.

                இந்தப் பனை ஓலையில் கூர்மையான ஆணி கொண்டு எழுதுவார்கள். ஆணிகள் இரும்பால் இருக்கும். சில வேளைகளில் வேறு உலோகங்களில் கூட செய்யப்பட்டிருக்கும். பண வசதி படைத்தவர்கள் தங்கத்தால் ஆன எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

                நம்முடைய பாரம்பரிய இலக்கியம், மருத்துவம், சிற்ப சாஸ்திரங்கள் எல்லாம் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். முதலில் எழுதுபவர்கள் ஒரு பிரதியை எப்படியும் எழுதி முடித்து, அதன் பின்னர் பல பிரதிகள் வேண்டும் என்றாலோ அல்லது வணிக ரீதியாக எழுதவேண்டும் என்றால் எழுதுவதற்கு தனியாக ஒரு தெருவை அமைத்து எழுத்தாணிகாரத்தெரு என்ற தெருவில் வைத்து எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் நினைவாக இன்றும் பல ஊர்களில் எழுத்தாணிக்காரத்தெரு என்ற தெரு உள்ளது. பனை மரங்களை நினைவுபடுத்தும் விதமாக பனப்பாக்கம், கட்டப்பணை, பனங்குடி, பனை மரத்துப்பட்டி, பனஞ்சாடி, பனைவடலி, திருப்பனந்தாள் போன்ற ஊர்கள் உள்ளன‌. எழுத்து என்ற வரலாற்றின் முன்னோடியாகத் திகழ்ந்த பனை மரங்கள் இன்று காலச்சூழ்நிலையில் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகிறது.

                பூக்கும் பருவத்தை அடையாத பனை மரத்தை வடலி எனவும், குறும்பனை எனவும் பனை மர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல்கொண்ட குறும்பனை பெயர் இப்போதும் குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

                பண்டைய காலத்தில் சேர மன்னர்களுக்கு அடையாள மாலை 'போந்தை' அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அரிப்பு முதலிய இயற்கைச் சீற்றத்திலிருந்து நாட்டை காப்பதற்குக் கடற்கரையில் வளர்ந்த பனைமரக் கூட்டம் பெரிதும் உதவியாக இருந்தது.

                அழிந்த பனை மரங்களை விடுத்து அழிய‌விருக்கின்ற பனை மரங்களைக் காப்பது நமது கடமையாகும்.

- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

பரபரப்பு மிகுந்த தற்காலச் சூழலில் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வானத்தை அண்ணாந்து பார்ப்போமா?

இரவில் மின்னும் நட்சத்திரங்களையும் பகலில் வட்டமிடும் பறவையினங்களையும் ஒரு ரசனையோடு பார்த்து ரசிப்பவர்கள் எத்தனை பேர்?

கோழியின் ஆக்ரோஷமான எதிர்ப்புகளுக்கிடையில் குஞ்சுகளை லாவகமாக தூக்கிச் செல்லும் பருந்துகள் எங்கே?

'க்விக்' 'க்விக்' எனும் ஒலிகளோடு நம் வீட்டு சிலந்தி வலையிலிருக்கும் சிலந்திகளை பிடித்துத் தின்றுவிட்டு 'விருட், விருட்' டென்று பறக்கும் சிட்டுக்கிருவிகள் மறைந்த மாயமென்ன?

தாவித் தாவி கொசுக்களைப் பிடித்து உண்ணும் தவளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததின் காரணம்தான் என்ன?

கண்ணைக் கவரும் செந்நிறம் இருந்தாலும் 'நறுச்', ' நறுச்' என கடிபடும் பேரிக்காய் போன்று அல்லாமல் மாவு போன்று மென்மையாக சுவை தந்த ஆப்பிள் ரகங்களை எந்த ஏவாள் கவர்ந்து சென்றாள்?

இன்னும் பல கானுயிர்கள் அருகிக் கொண்டிருப்பதன் காரணம் என்ன என்று கேட்பதும், அதற்கான பதிலும் ஒன்றே ஒன்றுதான். அது மனிதன். மனிதனன்றி வேறு எவர்/எது காரணமாக இருக்க முடியும்?

அறிமுகம் இல்லாத ஊரில் இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு நிற்பவனைப்போல் தொழிநுட்ப சுடுகாட்டில் இயற்கையைத் தொலைத்துவிட்டு நின்று கொண்டிருக்கிறோம் நாம்.
மனிதன் தன்னைப் பெற்றவர்களுக்கும் வழிவழிவந்த மூதாதைய‌ர்களுக்கும் தருகின்ற மரியாதையில் ஒரு சிறு அளவையாவது தனக்குமுன்பே தோன்றி இந்த உலகை சேதாரமின்றி நமக்கு விட்டுச் சென்றிருக்கிற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் தரவேண்டும் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறானா ?

புவி தோன்றியபோது நிலம், நீர், காற்று இருந்தன. பின் ஒரு செல் உயிரிலிருந்து பல செல் உயிரிகள் வரை தோன்றத் தொடங்கின. இதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னரே மனித இனத்தின் தோற்றம் நிகழ்ந்திருக்கிறது.

இயற்கையாகத் தோன்றிய புல், பூண்டு, செடி, கொடி, மரம், பூச்சிகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை மனிதனின் உதவியின்றியே உயிர் வாழக் கூடியவை. ஆனால் பிற உயிரினங்களையும் இயற்கை உற்பத்திகளையும் மட்டுமே சார்ந்திருக்கக்கூடிய மனிதனோ உயிரினங்களை வேட்டையாடியும் இயற்கையை சூறையாடியும் தன்னுயிரை நிலைநிறுத்த முயல்கிறான்.

நகரப்பகுதிகளைப் பெருக்கி, காடுகளை அழித்து, வளிமண்டலத்தைக் கிழித்து, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துக் கொண்டே செல்வதால்தான் எப்போதாவது வரவேண்டிய ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், புவிவெப்பமயமாதல் போன்றவை அடிக்கடி வந்து அச்சுறுத்துகின்றன.

நகரப் பெருக்கத்தின் காரணமாக சுருங்கிப் போன குறுகிய வயல் பரப்பில் பேரளவு விளைச்சல் வேண்டி இரசாயனங்களைக் கொட்டுவது என்பது ஒரு விதத்தில் இயற்கையை நமது கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதான ஒரு மூடநம்பிக்கைதான். யானைகள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி 'குடியிருப்புகளாக்கப்பட்ட' பகுதிகளில் நுழைந்து தாக்குவதை 'நாசம்' செய்கின்றன என்று கூறுகிறோம், நாம் செய்த நாசங்களை மறந்துவிட்டு. நீர்வழிப்பாதைகளை மறித்து கட்டடங்களைக் கட்டிவிட்டு பெருவெள்ளத்தில் ஊர் அழிந்தபின் 'பேரழிவு' என்று சொல்கிறோம்.

உயிரினங்களிலேயே முதிர்ச்சி பெற்ற உன்னதமான இனமாக நம்மை நாமே தன்னிச்சையாக அறிவித்துக்கொண்டு செய்கின்ற இயற்கை சூறையாடலுக்கு வரைமுறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையைப் பகைத்துக் கொள்வதற்கும் புறக்கணிப்பதற்கும் மனிதனின் பேராசையும் கொடிய குணங்களுமே காரணம். இயற்கை நமக்கு வழங்கிய எண்ணிலடங்கா கொடைகளை வெட்டியும் வெடிவைத்து தகர்த்தும் ஆழத்தோண்டியும் உறிஞ்சியும் கொள்ளையடிக்கிற மகா கொள்ளையர்களாக இருக்கிறேம்.

பல்லாயிரம் கோடி ஆண்டுகள் வழிவழியாய் இப்புவியில் வாழ்ந்துவந்த உயிரினங்களின் எண்ணிக்கையும் இயற்கைவளங்களும் குறைந்துவரும் அதேவேளையில் குடிநீர்த் தட்டுப்பாடும் இயற்கைப் பேரழிவுகளும் மனிதஇனத்திற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். மனிதர்களின் வளம் காப்பதற்காக வரம்புமீறி செய்யப்படும் இயற்கைவள சுரண்டலால் 'தக்கன தப்பி வாழ்நிலை பெறும்' (survival of the fittest) எனும் சித்தாந்தம்கூட பிழையாகிப் போகலாம்.

பிற உயிரினங்கள் இன்றி மனிதன் மட்டும் இந்த உலகத்தில் வசதி வாய்ப்போடு கோலோச்சி விடலாம் என்று நினைப்பது ஏகாதிபத்திய மனநிலை மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட. தனிமனித சுதந்திரம் பற்றி பேசிக்கொண்டே உலகிற்கே பொதுவாக இருக்கும் இயற்கையின் சுதந்திரத்திற்கு தொடர்ந்து இடையூறு செய்துகொண்டு இருக்கிறோம்.

வனப்பாதுகாப்புக்கான சட்டம் மட்டும் இருந்தால் போதாது. மனிதனின் மனக்கட்டுபாடுக்கான சுயசட்டமும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்க வேண்டும். அரசின் கடமையும் தனிமனிதக் கடமையும் ஒருங்கிணைத்தால்தான் எந்தத் திட்டமும் வெற்றிகரமாக நடைமுறைக்கு வரும் என்பதைத் தோல்வியடைந்த பல திட்டங்கள் வாயிலாகவே புரிந்துகொள்ளலாம். நகர்ப்புற விரிவாக்கத்திற்கும் கணக்கற்ற கட்டடங்களை கட்டுவதற்கும் அனுமதி அளித்துவிட்டு அதற்குத் தேவையான மணலை 'அள்ளாதே' என்று சொல்வதில் என்ன பலனிருக்கும், ஊழல், கொலை, கொள்ளை இவற்றைத் தவிர.

கடலரிப்பைத் தடுப்பதற்காக கரையோரங்களில் பாறாங்கற்களைக் கொட்டினால், தடுக்கப்பட்ட அலைகளின் ஆக்ரோஷம், கற்கள் கொட்டப்படாத அருகிலிருக்கும் வேறு கரையோர கிராமத்தை பதம்பார்க்கும் இயற்கையின் வலிமையை உணர்ந்து தெளிய வேண்டும்.

பிற உயிரினங்களைப் போல் மனிதனும் இயற்கை மற்றும் உயிரின சமன்பாட்டிற்கு உதவ வேண்டுமாயின் இயற்கையைப் பேணவேண்டும். இயற்கையாக பழுக்கும் வரை காத்திருக்கப் பொறுமையின்றி இரசாயனக் 'கல்' வைத்து மாம்பழங்களைப் பழுக்கவைத்து உடனே 'காசு ' பார்க்க முயலும் அவசரக்காரர்களிடம் நுகர்வோர் எச்சரிக்கையாய் இருந்து தம் உடல் நலனைப் பாதுகாத்து கொள்வதும், அதுபோன்ற செயற்கை உற்பத்திக்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதும் புத்திசாலித்தனம்.

இயற்கையின் சுழற்சியில் ஏதேனும் குள‌றுபடி ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த உயிரினங்களுக்கான உணவுச்சங்கிலியை பாதிக்கும். வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பம் குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளும் அதே வேளையில் அழிந்து வரும் உயிரினங்கள் குறித்தும் கவனமாக சிந்திக்க வேண்டும்.

தற்காலிகமாக வாழ்ந்து விட்டுப் போக வந்திருக்கும் மனிதனுக்கு இந்தப் பூமியை சிதைத்துப் பார்க்க எந்த உரிமையும் கிடையாது. இந்த பூமி மனிதனுக்கு மட்டும் உடையது அல்ல; உயிரிபன்மயத்திற்கு உதவும் எல்லா உயிரினங்களுக்குமானது.

வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த அரிசியை பறவைகளுக்கு அள்ளிவீசி ஆனந்தம் கண்டவன் நம் பாரதி. நாமோ நம்மை அண்டி, மிச்சம் மீதிகளைத் தின்று உயிர்வாழும் பூனைகளை வெறுப்போடு அடித்து துரத்திவிட்டு "வெள்ளை நிறத்தொரு பூனை, எங்கள் வீட்டில் வளருது கண்டீர்" என போலியாகப் பாடுகிறோம்.

ஞாபகமிருக்கட்டும், பூமி நமக்கு அளித்திருக்கும் வாழ்வதற்கான இந்த அரிய வரத்தை எந்த தவத்தாலும் திரும்பப் பெறமுடியாது.

- ஆ.மீ.ஜவகர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It