கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தீவிற்குள் பாம்புகள் நுழைந்ததால் அழிந்துபோன ஓர் அபூர்வப் பறவையை மீட்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா கேன்சஸில் (Kansas) 3,000 விலங்குகளைக் கொண்ட புகழ் பெற்ற செட்விக் கவுண்டி விலங்குகாட்சி சாலையில் (Sedgwick County Zoo) கப்பல் சரக்குப் பெட்டகத்தில் பார்வைக்கு வித்தியாசமான வாகனத்தைப் போல தோற்றமளிக்கும் பேழைகள் காட்சி தருகின்றன. இப்பேழைகளே விஞ்ஞானிகளுக்கு இந்தப் பறவையினத்தைக் காக்கும் முயற்சியில் உதவும் முக்கிய பொருட்கள்.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாம் (Guam) தீவில் தற்செயலாக இரண்டாம் உலகப் போரின் இறுதியில் நுழைந்த பழுப்பு நிற மரப் பாம்புகள் (Brown tree snakes) காலப்போக்கில் அங்கு வாழ்ந்து வந்த எண்ணற்ற பறவையினங்கள், பாலூட்டிகள் மற்றும் பல்லியினங்களை முற்றிலுமாக அழித்தன. அழிந்த பறவையினங்களில் குவாம் மீன்கொத்தி (Guam King fisher), குவாம் ரயில் (Guam rail) மற்றும் குவாம் ஈ பிடிப்பான் (Guam fly catcher) ஆகியவை அடங்கும்.
நான்கிலிருந்து ஒன்பது
பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் குவாம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து சிஹெக் (Sihek) என்றும் அழைக்கப்படும் வண்ணமயமான குவாம் மீன்கொத்தியினத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். குஞ்சுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்க பேழைகள் பயன்படுகின்றன. அமெரிக்காவின் மற்ற விலங்குகாட்சி சாலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகள் பொரிந்து உருவான நான்கு பறவைகள் இங்கு இப்போது பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் எண்ணிக்கை விரைவில் ஒன்பதாக உயரும் என்று இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள செட்க்விக் கவுண்டி விலங்குகாட்சிசாலை மற்றும் ஸ்மித்சோனியன் உயிரியல் கழக ஆய்வாளர்களுடன் இணைந்து பணியாற்றும் விப்ஸ்னேட் (Whidsnade) விலங்குகாட்சி சாலையின் ஆய்வாளர் க்ளேர் மக்ஸ்வீனி (Claire McSweeney) கூறுகிறார்.
வரும் ஒரு சில ஆண்டுகளுக்கு இத்தகைய செயல்பாடுகள் தொடரும். பறவைகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமானவுடன் அவை காட்டில் அவற்றின் இயற்கையான வாழிடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். 1970, 1980கள் வரை பழுப்பு நிறப் பாம்புகள் தீவின் உயிரினங்களை அழிக்கும் வேகம் மெதுவாகவே இருந்தது. பிறகே இந்த ஆக்ரமிப்பு உயிரினங்கள் இங்கு மட்டுமே வாழ்ந்த பல உயிரினங்களைக் கொல்ல ஆரம்பித்தது.
அப்போதே இதன் தீவிரம் உணரப்பட்டது. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை ஆபத்தான அளவிற்கு குறைவது சூழலியலாளர்களை விழிப்படையச் செய்தது. இந்தப் பாம்புகள் மரமேறுவதில் நிபுணர்கள். நாளின் பெரும்பாலான நேரமும் இவை மரக்கிளைகளின் உச்சியிலேயே குடியிருக்கும். இவை பறவைகள், அவற்றின் முட்டைகள், சிறிய பாலூட்டிகளை உண்டே அழித்தன. இது தீவின் உயிர்ப் பன்மயத்தன்மையை மோசமாகப் பாதித்தது.
மிஞ்சியிருந்தவை
குவாம் தீவின் மீன்கொத்தியினமே கிட்டத்தட்ட அழிந்து போய்விட்ட நிலையில் மிஞ்சியிருந்த 29 பறவைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இதன் பலனாக பாதுகாக்கப்பட்ட நிலையில் இவற்றின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கிடைத்த முட்டைகள் செட்விக் காட்சிசாலைக்கு அனுப்பப்பட்டு பொரிக்கப்பட்டு இளம் குஞ்சுகள் வரும் ஆண்டில் காட்டில் விடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று இதில் பணிபுரியும் லண்டன் விலங்கியல் சங்க காட்சிசாலையின் (ZSL) சூழலியலாளர் மற்றும் மீன்கொத்தி மீட்புக் குழு உறுப்பினர் ஜான் யூவன் (John Ewen)கூறுகிறார்.
மக்ஸ்வினி மற்றும் அவரது குழுவினரே முட்டைகள் பொரித்து குஞ்சுகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் பணிக்குப் பொறுப்பானவர்கள். இந்த இன மீன்கொத்தியின் முட்டை பெரிதாக இருப்பதில்லை என்பது இதில் ஒரு சிக்கல். குஞ்சுகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. அவற்றின் ஆரோக்கிய நிலை கவனிக்கப்படுகிறது. நோய்களற்ற நிலையில் உள்ளது உறுதி செய்யப்படுகிறது. வனத்திற்கு செல்வதற்குரிய தயார் நிலையை அடையும்வரை இவை பராமரிக்கப்படுகின்றன. வளர்ச்சி அடைந்தவுடன் இவை குவாமிற்கு அனுப்பப்படாது.
பமைரா
குவாமில் இன்னமும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாம்புகள் வாழ்கின்றன. இதனால் ஆய்வாளர்கள் இப்பறவைகளை ஒரு புது வீட்டுக்கு குவாமில் இருந்து 6,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பமைரா (Palmiera) தீவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளனர். இப்பசுபிக் தீவு இப்பறவைகளுக்கு பாதுகாப்பான இடம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடம் மீன்கொத்திகளுக்கு எதிரிகள் இல்லாத பகுதி. இங்குள்ள மழைக்காடுகள் பறவைகள் கூடு கட்டத் தேவையான பொருட்களை அளிக்கும். உணவும் உள்ளது.
மீன் உண்ணாத மீன்கொத்திப் பறவை
குவாமில் வாழும் இந்த இனப்பறவைகள் இவற்றின் பிரிட்டிஷ் சொந்தக்காரரைப் போல மீன்களை உண்பதில்லை. பூச்சிகள், பல்லிகளையே உண்கின்றன. அதனால் இப்பறவைகள் பமைரா தீவில் பாதுகாப்புடன் வாழும். இனப்பெருக்கம் செய்ய அவசியமான இணைகளை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. பாம்புகளின் ஆக்ரமிப்புப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் இவற்றின் எண்ணிக்கை போதுமான அளவு உயரும்போது இவற்றின் தாயகமான குவாமிற்கு இவற்றைத் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
வண்ணமயமான இந்தப் பறவைகள் குவாம் தீவின் நீல நிற வானில் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் முன்பு போல மீண்டும் பறக்கும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன் ஆய்வாளர்கள் காத்திருக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடலிற்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் மூலம் பவளப் பாறைகளைக் காப்பாற்றும் முயற்சியில் பிஜி தீவு ஈடுபட்டுள்ளது. நாகுலா (Nacula) தீவில் கடலுக்கு அடியில் நிறுவப்பட்டுள்ள கலைச்சிற்பங்கள் ஆழ்கடல் நீரில் மிதந்தபடி காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் புதிய பவள உயிரினங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. எழில் கொஞ்சும் நீலக்கடல் நீரும், அழகிய கடற்கரை மணற்பரப்பும், எஃகு சிற்பங்களில் வளர்ந்துள்ள பவள உயிரினங்களுடன் கடலின் தரைப்பகுதியும் காட்சி தருகின்றன.
கடல்நீர் வெப்பமடைவதால் அழிந்துவரும் பவளப் பாறைகளைக் காக்க இந்தப் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பஞ்கள் கடலின் உப்புநீரால் அரிக்கப்படாத வகையில் உருவாக்கப்பட்டு கடல்நீரில் நீண்ட காலம் கெடாமல் இருக்கும் எவர்சில்வரால் செய்யப்பட்டுள்ளன. இத்தகைய 137 சிற்பங்களில் இப்போது முப்பது வகை பவளப்பாறை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்த வடிவங்கள் மாற்றி அமைக்கப்படக் கூடியவை. பவள உயிரினங்களிடம் இருந்து மரபணு பொருட்களை சேகரிக்கும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.சிற்ப வடிவங்களில் வளரும் உயிரினங்கள்
காலநிலை மாற்றத்தை வெற்றி கொண்டு வாழும் பவள உயிரினங்களை உருவாக்க இது உதவும். உலகின் முதல் சிற்ப வடிவ பவள உயிரினங்களுக்கான வங்கி (Scultpural Coral Bank) என்று வர்ணிக்கப்படும் இந்த சிற்ப அமைப்புகள் லாபநோக்கமில்லாத பவளப் பாறைகளைக் காக்கும் அமைப்பு (Not-for-profit group Counting Coral) என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்கு வாழும் பவளப்பாறைகள் அனைத்தும் தூய்மையானவை. ஆனால் காலம் செல்லச் செல்ல சூழல் சீரழிவால் இவை மெல்ல மெல்ல உயிரிழந்தன. இது தனக்கு அதிர்ச்சி அளித்ததாக இந்நிறுவனத்தின் தோற்றுநர் ஜாலியன் காலியர் (Jolyon Collier) கூறுகிறார்.
2023ன் முதல் பாதியில் வீட்டி லெவு (Viti Levu) என்ற பிஜியின் பெரிய தீவு மற்றும் நாட்டின் சில பகுதிகளில் இந்த உயிரினங்கள் வேகமாக அழிந்து வருகின்றன என்று பவளப் பாறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு (Coral Reef Watch) மற்றும் பிஜி வானிலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து எச்சரித்தன.
மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்த கடல்
பிஜி நாட்டின் 75% மக்கள் கடலோர வாழ்வுடன் பின்னிப் பிணைந்தே வாழ்கின்றனர். கலாச்சாரம், நல வாழ்வு, நாட்டின் அடையாளத்தில் கடல் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. பவளப்பாறைகளின் முக்கியத்துவம் பற்றி பிஜி மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இந்த வடிவங்கள் ஒரு நூலகம் போல பவளப் பாறைகளின் மரபணு விவரங்களை சேகரித்து இந்த உயிரினங்களுக்கான ஒரு மரபணு வங்கியாக செயல்படுகிறது.
இந்த உயிரினங்களில் இருந்து வருங்காலத்தில் புவி வெப்ப உயர்வு, கடல் நீர் சூடாதல், காலநிலை மாற்றம் போன்றவற்றைத் தாங்கி வளரும் சூப்பர் உயிரினங்களை உருவாக்க முடியும். எவர்சில்வர் கூடுகளில் வளர்க்கப்பட்டவற்றில் பல மரபணு வலிமையில்லாத பவளப்பாறை உயிரினங்கள் அழிந்து விட்டன. வெப்ப அலைத்தாக்குதல், சூடான கடல், புயல்கள், மாறும் பருவநிலைகளில் வலுவான உயிரினங்களை நட்டு வளர்ப்பது சவால் நிறைந்ததுதான் என்றாலும் வலிமையான சிற்ப வடிவங்கள் மாறி வரும் சூழலை சமாளிக்க உதவுகின்றன.
பாசிகளால் நீல நிறமாதல், புயல்கள் போன்றவற்றை சமாளித்து வாழும் உயிரினங்கள் வலுவாக வளரும்வரை பவளப்பாறைகள் இந்த அமைப்புகளில் தொடர்ந்து நட்டு வளர்க்கப்படுகின்றன. இந்தக் கூடுகளில் இருக்கும் உயிரினங்களின் எண்ணிக்கை இடைவேளைகளில் கணக்கிடப்படுகிறது. பெரிதாக வளர்ந்தபின் அவை இந்த அமைப்புகளில் இருந்து நீக்கப்படுவதில்லை. மாறாக கூடுகளின் இணைப்புகள் தளர்க்கப்பட்டு வளர்ந்த உயிரினங்கள் நாற்றங்கால்களுக்கு கொண்டு சென்று பராமரிக்கப்படுகின்றன.
முதலில் வளர்ந்த பவளப்பாறைகள் எவர்சில்வர் வடிவங்களில் விடப்படுகின்றன. அவை ஒவ்வொரு புதிய இணைப்புடன் சேர்க்கப்படும்போது மேலும் மேலும் அடர்த்தியாக வளர்கின்றன. இவற்றிற்கு அவ்வப்போது முடித்திருத்தம் செய்யப்படுவது போல கூடுதல் வளர்ச்சியடைந்தவை அகற்றப்பட்டு ஒருசில ஆண்டுகளுக்கு அப்படியே விடப்படுகின்றன. இதனால் இவற்றின் அடிப்படை மூலக்கூறு அடர்த்தியாகி வலுவடைகிறது. தீவு மக்களுக்கு இத்திட்டம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கடலோரத்தில் வலை வீசி மீன் பிடித்த முன் தலைமுறையினர்
முந்தைய தலைமுறையினர் கடலோரத்தில் வலைகளை வீசியே மீன் பிடித்தனர். ஆனால் இப்போது அப்படியில்லை. கடலிற்கு சென்றே மீன் பிடிக்க வேண்டியுள்ளது. இப்புதிய முயற்சியின் மூலம் எங்கள் முன்னோர் வாழ்ந்த காலத்தில் இருந்த செழுமையான பவளப்பாறைகள் நிறைந்த கடல்வளத்தை எங்களால் மீண்டும் பெற முடியும் என்று நம்புவதாக தீவுவாசியும் சூழல் பிரச்சாரகருமான லேபன்னா இவால்யு (Laben Naivalu ) கூறுகிறார்.
தீவு மக்கள் மற்றும் Blue lagoon resort ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கடலுக்கடியில் மிதக்கும் உலோகச் சிற்பஞ்கள் இப்பகுதிக்கு வருவோர் எவரையும் ஒரு நிமிடம் நிnறு, கவனித்து, கண்டு, மகிழ்ந்து, மற்றவரிடம் செய்தியைp பகிரும் வகையில் உள்ளன.
இத்திட்டம் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய ஆழ்கடல் உலகைக் காட்டித் தருகிறது. சிற்ப வடிவங்கள் அமைத்து பவளப்பாறை உயிரினங்களை வளர்க்கும் தனிச்சிறப்பு மிக்க, புதிய சிந்தனையுடன் செயல்படும் இத்திட்டம் சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும், பவளப்பாறைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும் என்று பிஜி சுற்றுலா வளர்ச்சித்துறை தலைமைச் செயல் அலுவலர் ப்ரண்ட் ஹில் (Brent Hill) கூறுகிறார்.
மரபணு வங்கியின் மூலம் பவளப்பாறை உயிரினங்கள் காப்பாற்றப்படும். இது கடல்சார் சூழல் மண்டலத்தையும் காக்க உதவும். இதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கு இது குறித்த உணர்வை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/world/2023/aug/05/fiji-underwater-sculptures-coral-reef-restoration?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கரடிகள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் மனிதர்கள் மூலம் நடைபெறும் வேட்டையாடலே. பெரும்பாலான கரடி வகைகளும் இன்று சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) பட்டியலின்படி இன அழிவைச் சந்திக்கின்றன. மார்ச் 23 சர்வதேச கரடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கரடிகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் இன்றும் அது தொடர்கிறது.
செல்லப்பிராணிகள் வணிகத்திலும் கரடிகள் பெருமளவில் விற்பனைப் பொருளாக்கப்படுகின்றன. துருவப்பகுதிகளில் பனி உருகுவதால் இவை வேட்டையாட முடியாமல் பட்டினி கிடக்க நேரிடுகின்றன. அமெரிக்காவில் வாழிட இழப்பினால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. சிறிய வாலுள்ள ஊண் உண்ணிகளான இவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் காணப்படுகின்றன.
இவற்றில் மிகச்சிறிய இனம் சன் கரடிகள் (Sun bear). இவற்றின் எடை ஐம்பது கிலோவிற்கும் குறைவானது. மிகப்பெரியவை துருவக்கரடிகள் (Polar bear) மற்றும் கோடியாக் கரடிகள் (Kodiak bear). இவற்றின் உடல் எடை 720 கிலோ வரை. கரடிகள் எட்டு இனங்களில் காணப்படுகின்றன. இதில் கருங்கரடிகள் அமெரிக்கா, கனடாவில் அதிகமாக வாழ்கின்றன.பாண்டாவும் கரடியும்
பொதுவாக தாவர உண்ணிகள் என்றாலும் துருவக்கரடிகள் போன்றவை சீல்-ஐ உணவாக உட்கொள்கின்றன. ராட்சச பாண்டாக்களுக்கும் (giant panda) கரடிகளுக்கும் இடையில் பரிணாமரீதியில் சொந்தம் உண்டு என்று கருதப்படுகிறது. சீனாவில் மட்டுமே வாழும் இந்த வகை பாண்டாக்கள் மூங்கிலையே உணவாக உண்கின்றன. பார்ப்பதற்கு பருமனான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் இவற்றால் வேகமாக இடம் பெயர முடியும்.
மோப்பம் பிடித்தே கரடிகள் இரை தேடுகின்றன. இரையைத் தாக்குவதில் கருங்கரடிகள் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன. கரடிகள் சிறந்த நீச்சல்காரர்கள். எடுத்துக்காட்டு துருவக்கரடிகள். ஆபத்து வந்தால் முனகுவது போன்ற ஒலி எழுப்பும் என்றாலும், ஓசைகள் வழியே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது இவற்றிடம் குறைவாகவே காணப்படுகிறது. இரை தேடும்போதும் இது போல ஓசைகளை எழுப்புவதுண்டு. மீன்கள், சீல்கள், பன்றிகள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
குகை உறக்கம்
சன் கரடிகள் தேனை விரும்பிக் குடிக்கும் இயல்புடையவை என்பதால் இவை தேன் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அமெரிக்கன், ஏசியாட்டிக் (Asiotic bear) குளிர்காலத்தில் வயிறு நிறைய உணவு உண்ட பிறகு குகைகளில் நீண்ட உறக்கத்தில் ஆழ்கின்றன. ஆண் கரடிகள் இணை சேர்ந்த பின் பெண் கரடிகளை விட்டுவிட்டு சென்று விடுகின்றன.
பிறகு குட்டிகளை வளர்க்கும் வேலையை பெண் கரடியே செய்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை பிரசவம் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான கரடி இனங்களிலும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிரசவம் நடக்கிறது. பிறக்கும் கரடிக் குட்டிகளின் உடல் எடை அரை கிலோகிராம் மட்டுமே. பெரும்பாலும் இரட்டைகளாகவே பிறக்கின்றன. என்றாலும் ஒரு பிரசவத்தில் ஐந்து குட்டிகள் வரை பிறக்கின்றன.
குட்டிக்கரடிகள் அடுத்த பிரசவம் நடக்கும்வரை தாய்க்கரடியுடன் வாழ்கின்றன. குட்டிகள் மூன்று முதல் ஆறு ஆண்டுகளில் வயதுக்கு வருகின்றன. ஆறு மாத வயதில் தனியாக நிற்கப் பழகிக் கொள்கின்றன. இயற்கையான வாழிடங்களில் 15 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் இவை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அதிக காலம் உயிர் வாழ்கின்றன.
அதிக உணவு உண்ணும் இயல்புடைய பெரிய உடலமைப்பு கொண்ட கரடிகளுக்கு இயற்கை எதிரிகள் இல்லை. குட்டிக்கரடிகள், குள்ளநரிகள் போன்ற விலங்குகளுக்கு இரையாவதுண்டு. உணவு கிடைப்பதைப் பொறுத்தே இவற்றின் வாழிட எல்லை அமைகிறது. உணவு கிடைக்கும் இடத்தின் பரப்பு குறைவாக இருந்தால் இவற்றின் வாழிட எல்லையின் பரப்பும் அதிகரிக்கும். சிறிய வயதில் பிடித்து வரப்படும் கரடிகளை பழக்கப்படுத்துவது எளிது. ஒரு காலத்தில் இவற்றை சர்க்கஸ்களில் தாராளமாகக் காண முடிந்தது.
ஐரோப்பிய பழுப்பு கரடிகள் (Eurasian brown bear) மற்றும் அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை மனிதர்களைத் தாக்கியுள்ளன. ஏசியாட்டிக் கரடிகள், அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை வயல்களை நாசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. துணிவகைகளைத் தயாரிக்க இவற்றின் தோல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
பெண் கரடிகளை விட ஆண் கரடிகள் அளவில் பெரியவை. பனிப்பாறைகளில் காலூன்றி நடக்க வசதியாக துருவக்கரடிகளின் பாதத்தின் அடிப்பகுதியில் உரோமங்கள் உள்ளன. இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் பட்டியல்படி அமெரிக்கன் கருங்கரடிகள் மற்றும் பழுப்பு கரடிகள் அழியும் ஆபத்தைக் குறைவாக எதிர்கொள்கின்றன.
இந்தியாவில் கரடிகளின் நிலை
இந்தியாவில் ஏசியாட்டிக் கருங்கரடிகள் (Asiotic Black), சோம்பல் கரடிகள் (Sloth bear), சன் கரடிகள் மற்றும் இமாலயப் பழுப்பு கரடிகள் என்று நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை 1972 வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பித்தநீர் (bear bile) மருந்து போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள நான்கு கரடி வகைகளும் இன அழிவை எதிர்கொள்கின்றன. 2011 முதல் சர்வதேச துருவக்கரடிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வன உயிரி பாதுகாப்பு அமைப்பு (wild life S O S) இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து 2022ல் இந்தியாவில் சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அக்டோபர் 12 சர்வதேச சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினம். சோம்பல் கரடிகள் இந்தியக் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்றான கரடிகளை அழியாமல் பாதுகாப்போம்.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகில் மிக விலையுயர்ந்த, தேவை அதிகம் உள்ள, உணவுடன் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றே வெள்ளை டிரஃபிள் (White truffle) எனப்படும் இந்தப் பூஞ்சை. இந்த அதிசயப் பூஞ்சை தெற்கு ஐரோப்பாவில் காணப்படுகிறது. இது மிக அதிக நறுமணம் மற்றும் தீவிர ருசிக்குப் புகழ் பெற்றது. டுயூபரேசி என்ற பூஞ்சைக் குடும்பத்தில் டியூபர் மக்னாட்டம் (Tuber magnatum) என்ற அறிவியல் பெயருடைய இது வெள்ளை டிரஃபிள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஐந்து அங்குலம் வரை வளரும் இவை அரை கிலோ வரை எடை உடையவை. 2009ல் ஒரு கிலோ பூஞ்சை பத்து இலட்சத்திற்கும் மேல் விலை விற்றது. 1.9 கிலோ வரை எடையுள்ள பூஞ்சை 2021ல் நியூயார்க்கில் 50.68 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மண்ணில் ஒருசில அங்குலம் முதல் அரை மீட்டர் வரை ஆழத்தில் வளரும் இதை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இவற்றை காடுகளில் இருந்து சேகரிக்க முடியும். ஓக், அசல் நட், ஓக்லர் போன்ற மரங்களின் அடியில் வேர்களில் இருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு பூமிக்கடியில் வளரும். இவை வளரும் மரத்தைப் பொறுத்து இவற்றின் வாசனை வேறுபடும். சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களைக் கொண்டே இப்பூஞ்சை கண்டுபிடிக்கப்படுகிறது.
நாய்களுக்கு சிறு வயது முதலே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்காக நாய்க்குட்டி பால் குடிக்க ஆரம்பிக்கும்போது தாய் நாயின் முளைக்காம்பில் டிரஃபிள் தடவி குட்டிக்கு அதன் வாசனை கற்றுத் தரப்படுகிறது. முன்பு பூஞ்சையைத் தேட பன்றிகளும் பயன்படுத்தப்பட்டன. பூஞ்சை கிடைத்தால் பன்றி அதைத் தின்னாமல் இருக்க அதன் மூக்கைச் சுற்றி ஒரு வளையம் பொருத்தப்படும். பூஞ்சை கிடைக்குமிடத்தை ஒவ்வொருவரும் பரம இரகசியமாகப் பாதுகாக்கின்றனர்.ஏன் விலைமதிப்புமிக்கது?
இது அபூர்வமானது, கிடைப்பதற்கரியது. சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். தேவை மிக அதிகம். இதனால் இது விலை மதிப்புமிக்கது. இத்தாலியில் அவாலக்ன என்ற இடத்தில் ஆண்டுதோறும் மூன்று முறை இதற்காக திருவிழாக்கள் நடக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்சையில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு கிடைக்கிறது. இங்கிருந்து ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இதற்கான தேசீய கண்காட்சியில் (National truffle fair) இதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும். இத்தாலியின் பிரபல சமையல் நிபுணர்கள் இங்கு வந்து நேரடியாக சமையல் காட்சிகளை (cooking shows) நடத்துகின்றனர். இது இத்தாலியில் நடைபெறும் ஒரு முக்கிய விவசாயத் திருவிழா.
வரலாற்றுச் சிறப்புகள்
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இத்தாலி, பிரான்சில் சமையலிற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் இப்பூஞ்சை ரோமாபுரி காலத்திலேயே பிரமுகர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று என்று நேச்சராலிஸ் ஹிஸ்ட்டாரிகா என்ற நூல் கூறுகிறது. இது விருதாகவும் வழங்கப்பட்டது. மத்திய காலகட்டத்தில் போப் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து சலுகைகளைப் பெற முனிசிபாலிட்டிகள் அவர்களுக்கு இதைப் பரிசாகக் கொடுத்தனர்.
சமையல் சிறப்புகளும் மருத்துவ குணங்களும்
பாஸ்தா, ரிஸோட்டோ, முட்டை, இறைச்சி போன்ற உணவு வகைகளில் சுவையூட்ட இது சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. சமையல் பயன் தவிர, மருத்துவ குணங்களிலும் இது சிறந்து விளங்குகிறது. வீக்கத்திற்கு நிவாரணியாக, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பாற்றல் பெற உதவுகிறது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆண்டி ஆக்சிடெண்ட் குணமுடையது. சமைத்து முடித்த பிறகு சுரண்டி எடுக்கப்படும் இதை மறுபடியும் வேக வைக்க வேண்டியதில்லை.
அதிக காலத்துக்கு இதைப் பாதுகாத்து வைக்க முடியாது. சேகரித்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். முன்பு இது எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி உறுதியான கருத்துகள் இல்லை. புராதன கிரேக்கர்கள், கிரேக்கக் கடவுள் சியூஸ் தேவன் மிக சக்தி வாய்ந்த மின்னல்களை பூமிக்கடியில் அனுப்பும்போதே இது உருவானது என்று நம்பினர். சமீபத்தில் போஸ்னியா ஹெக்ஸோகொவினா பிரதேசத்தில் இது பெருமளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கான தேடல் ஜனரஞ்சகமான ஒரு நிகழ்வாக மாறியது.
பயிர் செய்ய முடியுமா?
இதற்கிடையில் பிரான்ஸில் 2022ல் இதை பயிர் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றன என்று செய்திகள் கூறின. தங்கத்தின் பாதி விலையுள்ள, நாய்களால் மட்டுமே கண்டு பிடிக்கப்படக் கூடிய இந்த அதிஅற்புதமான பூஞ்சை பலவகையான அக்கிரமங்களுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாவதுண்டு.
பயிற்சி பெற்ற நாய்களை கடத்திக் கொண்டு போய் அவற்றை நஞ்சு வைத்துக் கொல்ல வாய்ப்பு உள்ளதால், அவற்றிற்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதைத் தேடிக் கண்டுபிடிக்க அதிக பயிற்சி தேவை. இதனால் இதற்குரிய திறமைகள் தலைமுறைகள் கடந்து இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. சிறிய வயது முதலே குழந்தைகளுக்கு இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பூஞ்சையைக் கண்டுபிடிப்பதற்குள்ள சாத்தியக்கூறில் மூன்றில் ஒரு பகுதி நாயுடையது. மற்றொரு பகுதி தேடும் மனிதருடையது. இன்னுமொரு பகுதி அந்தப் பிரதேசத்தின் இயல்பைப் பொறுத்தது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- நுண் பிளாஸ்டிக் உண்ணும் நுண்ணுயிரிகள்
- ஆண் துணையில்லாமல் முட்டையிட்ட உலகின் முதல் கன்னி முதலை
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்
- மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்
- வலசை என்னும் அதிசயம்
- மகாவா என்ற மகத்தான எலி
- ஜப்பானில் புதிய மலர்
- வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்
- காளான்கள்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
- ஏழைகளின் மரம்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை