உலகத்தைச் சுற்றிவிட்டு தனது மாலுமிகளுடன் மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்றான் கொலம்பஸ். அதன்பிறகு தான் ‘சிபிலிஸ்’ என்ற கொடிய பாலியல் நோய் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்கா எது நினைத்தாலும் அது உலகமெங்கும் பரவும்!. அந்த வகையில் தான் தற்போது இந்தியாவுக்குள் பரவி வருகிறது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் வகைகள். இதற்கு மத்திய அரசும், குறிப்பாக மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவாரும், பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் கட்டளைகளை நிறைவேற்ற ஒற்றைக்காலில் தவம் இருக்கின்றனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

அது என்ன மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகள்? அதனால் என்ன ஆபத்து?

உணவுக்குத் தேவை விதை. விதைகளை கட்டுப்படுத்தினால் உணவு உற்பத்தியை கட்டுப்படுத்தி விட முடியும். பாரம்பரிய விதைகளில் ஏற்படுத்தப்பட்ட ரசாயன மாற்றத்தின் விளைவாக வீரிய ஒட்டு ரக விதைகள் உருவாயின. ஒரே இனத்தைச் சேர்ந்த 2 விதைகளை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்பட்டன. பாரம்பரியமான விதைகள் மேம்படுத்தப்பட்டு அதே விதைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு போட்டி அதிகமாக இருந்தது. இந்த போட்டியை குறைக்க விதைகளை காப்புரிமை செய்யும் கம்பெனிகள் யோசனை செய்தன. இதன் பின்னணியில் உருவானது தான் மரபணு மாற்ற விதைகள். அதாவது பி.டி. பயிர் வகைகள். இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளையும். மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு அப்படி என்ன தான் சிறப்பு?

பூச்சிக் கொல்லி சுரக்கக்கூடிய மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். களைக்கொல்லியாக செயல்பட்டு பூச்சிகளை அழிக்கும். அதாவது இது பயிர்களை தாக்கும் வண்ணத்துப்பூச்சி குடும்பத்து பூச்சிகளை அழிக்கும். போசிலஸ் சுருண்சியன்சீஸ் என்ற பாக்டீரியா செலுத்தப்பட்டதால் தான் இந்த விதைகள் பூச்சிகளை அழிக்கும் திறன்கொண்டவையாக இருக்கின்றன. இந்த பாக்டீரியா விஷத்தன்மை கொண்டது. பருத்தி, வெண்டை, கத்தரி என பல்வேறு பயிரினங்கள் தற்போது இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தியாவில் 98.5 சதவீத பி.டி.பருத்தி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் நாட்டு பருத்தி விதைகள் எல்.ஆர்.இ., ஸ்ரீவில்லிபுத்து£ர் ரக விதைகள் கிலோ ஒன்றிற்கு ரூ.40 என்ற அளவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் ஏக்கர் ஒன்றிற்கு 10 குவிண்டால் பருத்தி மட்டுமே விளைச்சல் பெற முடியும். ஆனால் மான்டோசாவா போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் பி.டி பருத்தி விதை ரகங்கள் ஜாடு, மல்லிகா, மைக்கோ, புல்லட், ஆங்குஷ், பிரம்மா போன்றவை 450 கிராம் ரூ.920க்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 450 கிராம் விதை இருந்தாலே போதும். 20 குவிண்டால் அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். இதன் காரணமாக தான் பெரும்பாலான விவசாயிகள் பி.டி.பருத்தியை விதைக்கின்றனர்.

ஆனால், இந்த பி.டி ரக விதைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் விவசாயிகள் அடுத்த தலைமுறைக்கு விதைகளை பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தான் விதையை வாங்க வேண்டும். பாரம்பரிய விதைகளை எடுத்து வைத்து பயன்படுத்துவது போன்று பயன்படுத்த முடியாது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் தான் பி.டி ரக பயிர் வகைகளுக்கு வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும், இயற்கை விவசாயிகளிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. உண்மை நிலவரத்தை ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆய்வுக்குழுவும் மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை விவசாய கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரசலு£ர் இரா.செல்வம் நம்மிடம், "மரபணு மாற்றம் குறித்த புரிதல் நம்முடைய விஞ்ஞானிகளுக்கு குறைவு. 50 வருடத்திற்கு முன்பு தான் மரபணு பற்றிய விவரம் நமக்கு தெரியும். 1954ல் மரபணு கோட்பாடு உருவாக்கப்பட்டது. ஒரு மரபணு ஒரு புரதத்தை உருவாக்கும் என்பது தான் அந்த கோட்பாடு. மாறிவரும் -------இயற்கை நிலையில் அறிவியல் கோட்பாடுகளை தொழில்நுட்பங்கள் மாற்றத் தொடங்கின. பி.டி பருத்தி குறித்து மான்டாசோவா என்ற பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்தி தந்த விளக்கத்தை தான் அனைவரும் ஏற்றுள்ளனர். இது தவறானது. மரபணு குறித்த விவாதம் 2002ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கியது. 2001ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட பி.டி. பருத்தியை பிடுங்கி போட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. அதன்பின்னர் படிப்படியாக பி.டி.பயிர் வகைகள் நுழைந்து விட்டன. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் நல்லதா? கெட்டதா? என்று முடிவு செய்து அறிக்கை கொடுப்பது சம்பந்தப்பட்ட பன்னாட்டு விதை நிறுவனம் தான். முதன்முதலாக பி.டி.கத்திரிகாய் என உள்ளே நுழைந்து இப்போது 54 வகையான பி.டி.பயிர்கள் இந்தியாவினுள் வந்துவிட்டன.

இந்த நிலையில் தான் அருணா ரோட்ரிகேஸ் என்பவர் உச்சநீதி மன்றத்தில் பி.டி பயிர்களுக்கு எதிராக வழக்கு போட்டார். அப்பேது வேளாண் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ், இதுபற்றி ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவை உருவாக்கினார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த பசுதேவ் ஆச்சர்யா எம்.பி., தலைமையில் 28 எம்.பி.,க்கள் கொண்ட குழு ஆய்வு செய்தது. இதில் காங்கிரஸ் எம்.பி.க்களும் இடம் பெற்றிருந்தனர். பி.டி.பயிர் வகைகள் இந்தியாவுக்கு ஏற்றதா? இதனால் ஏற்படும் சாதகம் என்ன? பாதகம் என்ன--? என்பனவற்றை மக்களிடம் இருந்தும், வேளாண் விஞ்ஞானிகளிடம் இருந்தும் ஆய்வு செய்து மேற்கண்ட குழு ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

பாராளுமன்ற நிலைக்குழு நடத்திய ஆய்வின் படி பி.டி.பயிர் ரகங்கள் இந்தியாவுக்கு ஏற்றதல்ல. அது விதை சுதந்திரத்தை அழித்து விடும் என்று அறிக்கை கொடுத்தது. ஆனால், இந்த அறிக்கையை தற்போதைய வேளாண் அமைச்சர் சரத் பவார் ஏற்க மறுக்கிறார். மேலும், வேளாண் விஞ்ஞானிகள், பி.டி.பயிர் வகைகளுக்கு அனுமதி கொடுப்பதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன என்றும் கூறினர். மேலும், கம்பெனிகள் கொடுக்கும் ஆராய்ச்சி முடிவுகளை சரியானது என்று ஏற்க முடியாது எனவும், பி.டி. பருத்திக்கு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். ஆனால், இந்த அறிக்கையையும் மத்திய அரசு ஏற்கவில்லை. மாறாக பிரதம மந்திரியின் அறிவியல் ஆலோசனைக்குழு, உணவு உத்திரவாதத்திற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அவசியமானவை என்று முடிவெடுத்துள்ளது.

இதனிடையே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சராலினி என்பவர் நீண்ட கால ஆய்வு ஒன்றை எலியின் வாயிலாக மேற்கொண்டார். 300 நாட்கள் நடந்த அந்த ஆய்வு பெரும் அதிர்ச்சி தகவல்களை தந்துள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்வகைகளை சாப்பிடுவதால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றும், உள்ளுறுப்பில் புண்கள் ஏற்படுகின்றன என்றும் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

இது இப்படி இருக்க, பி.டி.பருத்தி குறித்து வெளித் தேடல் ஆய்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இந்த ஆய்வுக்கு தடை விதித்தன. தங்கள் மாநிலங்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படக்கூடாது என்று கூறின. ஆனால், உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் பி.டி.பருத்தி வெளிப்புற ஆய்வுக்கு அனுமதி அளித்துள்ளார். நம்முடைய உணவு, நம்முடைய விவசாயங்கள் எல்லாம் விலைபோகும் விஞ்ஞானிகளிடம் மாட்டிக் கொண்டுள்ளன. இது எல்லோருக்குமான பிரச்னை.

பி.டி.பருத்தியில் அதிகமாக விளைச்சலும், லாபமும் கிடைக்கிறது என்று கூறுவது தவறானது. நாட்டுரக பருத்திக்கு ரூ.25 ஆயிரம் லாபம் கிடைத்தால், பி.டி.பருத்திக்கு ரூ.50 ஆயிரம் லாபம் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. பி.டி.பருத்தி பயிரிட நிறைய தண்ணீர் தேவைப்படும். மானாவாரி நிலங்களில் பயிரிட்டால் விளைச்சல் குறைவாக தான் வரும். இந்த பி.டி.பருத்தியை பயிரிட்டதால் தான் விதர்பாவில் பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாட்டு பருத்தி பயிரிட்டால் விதையை மறுமுறை பயன்படுத்தலாம். மண் கெட்டுப்போகாது. ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தான் பருத்தி விளைச்சல் அதிக அளவில் இருந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடி ஏற்படுத்தித் தந்த நீர்பாசன வசதிகளினால் அதிக அளவில் பருத்தி பயிரிடப்படுகிறது. தண்ணீர் பஞ்சமாக உள்ள மகாராஷ்டிராவில் தற்போது பி.டி. பருத்தியின் விளைச்சல் குறைந்துள்ளது.

ஆந்திராவில் 35 லட்சம் எக்டேரில் தற்போது இயற்கை விவசாயம் நடக்கிறது. அங்கு எந்த பூச்சிக்கொல்லியும் இல்லை. விவசாயம் சிறப்பாகவே நடக்கிறது. பாரம்பரிய விதைகளை வைத்து நிறைய பயிர்களை விளைவிக்க முடியும். எந்த வகை மரபணு மாற்றமும் தேவையில்லை. இந்திய விவசாயத்தை பன்னாட்டு விதைக்கம்பெனிகளின் சொத்தாக மாற்றும் முயற்சியே மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை மூலம் விவசாயம் செய்தால் செலவை குறைக்கலாம். தஞ்சாவூரில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்ற காரணத்தினால் 13க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், அங்கு ஒரு சில இடங்களில் பாரம்பரிய விதைகளை பயிரிட்டு தண்ணீர் பஞ்சமாக உள்ள இந்த நேரத்திலும் நல்ல அறுவடையை செய்து வருகின்றனர்" என்றார்.

கத்தரிக்காயில் தொடங்கிய மரபணு மாற்றம், பருத்தி, வெண்டைக்காய் என ஊடுருவி தற்போது மக்காச்சோளத்திற்கும் பரவியுள்ளது. ஒரு நாட்டை அழிக்க வேண்டுமானால், அணுகுண்டு போடவேண்டாம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை பயிரிட்டால் போதும் என்கிறார்கள் வேளாண் விஞ்ஞானிகள்.

இந்தியாவுக்கு தேவை அழிவா? ஆக்கமா?

Pin It

சர்வதேச வெளவால் ஆண்டு 2011-2012 சிறப்புக் கட்டுரை

உலகம் சுற்றும் பொடி ஜந்துக்களே,

உங்களுடைய காலடிச் சின்னங்களை, எனது

சொற்களிலே விட்டுச் செல்லுங்கள்

-    தாகூர் 

ஒரு முன்னிரவில் என் இல்லத்தின் முன்பு அமர்ந்திருந்தேன். அப்போது தரையில் ஏதோ ஒரு பூச்சி ஊர்ந்து செல்வது போல் இருந்தது. அது வழக்கமாகப் பார்க்கும் பூச்சிகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான வடிவில் இருந்ததால், அருகே சென்று குனிந்து பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால் அது ஒரு வெளவால் குட்டி.

ஒரு வெளவால் குட்டி இவ்வளவு சிறியதாக இருக்கும் என்று நான் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. சுமார் ஓர் அங்குல நீளமே இருந்தது அது. அநேகமாக வெகு அண்மையில்தான் அது பிறந்திருக்க வேண்டும். தரையில் தன் குட்டி இறக்கையை இரண்டு புறங்களிலும் சற்று பரப்பியவாறே ஊர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது. அந்தக் குட்டி வெளவாலை கையில் எடுத்தால், அதன் சின்னஞ்சிறிய மென் உடலுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, ஒரு சிறிய விளக்குமாற்று குச்சியை எடுத்து அதன் பின்னங்கால்களுக்கு அருகே வைத்தேன். நான் எதிர்பார்த்தது போல், அது தன் பின்னங்கால்களால் விளக்குமாற்றுக் குச்சியை கவ்விப் பிடித்துக் கொண்டது, அப்போது அந்தக் குச்சியை மெல்ல நான் மேலே தூக்கினேன். வெளவால்களுக்கே உரிய இயல்பூக்கத்தோடு அந்தக் குட்டி தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

இப்போது அதை என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே அதை விட்டுவிட்டால், ஏதேனும் ஓர் இரைகொல்லிக்கு இரையாக நேரிடலாம். வெளவால்கள் விளக்கை அணைத்த பிறகுதானே பறக்கத் தொடங்குகின்றன. எனவே, சற்று இருட்டாக இருந்த சுவரின் மேல் பகுதியில் அக்குச்சியோடு அதை வைத்துவிட்டேன். அந்தக் குட்டி அகஒலியை எழுப்பி தன் தாயை வரவழைத்து விடக்கூடும் என்பதே என் நம்பிக்கை. அக்குட்டியின் மேல் இந்த அளவுக்கு எனக்கு பரிவு ஏற்பட்டதற்குக் காரணம், வெளவால்களைக் குறித்து நான் தெரிந்து வைத்திருந்த ஒரு தகவல்தான். ஒவ்வொரு முறையும் வெளவால் ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈனும் என்பதே அந்த முக்கியமான செய்தி.

இப்படி வெளவால்கள் ஒரே ஒரு குட்டியை ஈனுவதற்குரிய காரணத்தை அறிந்து கொள்ள, அதன் பரிணாம வளர்ச்சிப் பாதையில் பின்னோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். முழுமையாக வளர்ச்சியடைந்த வெளவால்களின் புதை படிவங்கள் ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பாறை இடுக்குகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால், இதுவோர் மிகப் பழைமையான உயிரினம். பறவைகள் தோன்றி பல காலத்துக்குப் பிறகு பாலூட்டிகளுள் சில சிற்றினங்கள் காற்றில் சறுக்கிப் பறக்கும் (Gliding) ஆற்றலைப் பெற்றன. இவை கொலுகோ (Colugo) என்று அழைக்கப்பட்டன. ஆரம்ப கால பூச்சியுண்ணிகள் தங்கள் பரிணாம வளர்ச்சியின்போது, ஒரு குறிப்பிட்ட இடைநிலையைக் கடந்துதான் மேற்சொன்ன கொலுகோவாக மாறியிருக்கின்றன. மேற்சொன்ன கொலுகோவுக்கு உதாரணம், போர்னியோ காடுகளில் காணப்படும் பறக்கும் லீமர் (Flying Lemur) ஆகும்.

பார்ப்பதற்கு பறக்கும் அணில்களைப் போல காணப்படும் இவை, வெளவால்களை போலவே தலைகீழாக தொங்கும் தன்மையுடையவை. இந்த கொலுகோதான், உண்மையான பறக்கும் பாலூட்டிகளாக, அதாவது வெளவால்களாக மாறின என்பது உயிரியலாளர்கள் கருத்து.

மேலும் பறவைகளுக்கு ஒரு மாற்றாக இப்படி வெளவால்களை உருவாக்க வேண்டிய அவசியம் இயற்கைக்கு இருந்தது. பறவைகள் பகலில் பறந்து பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இதனால் இரவு நேரப் பூச்சிகள் பெருகின. எனவே, இவற்றை கட்டுப்படுத்த வேண்டியே, இத்தகையதொரு பரிணாம மாற்றம் நிகழ்ந்தது. இருப்பினும் பறவைகளுக்கு இல்லாத ஒரு பிரச்சினையை வெளவால்கள் சந்திக்க நேர்ந்தது.

பறவைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை. வெளவால்களின் மூதாதைகளோ பாலூட்டிகள். பாலூட்டிகள் வழிவழியாக நஞ்சுக் கொடியை பெற்றிருப்பவை. பரிணாமக் கடிகாரம் என்பது எப்போதும் பின்னோக்கி சுழல்வதில்லையே! எனவே, வெளவால்கள் பறக்கும் தன்மையை பெற்று விட்டன என்பதற்காகவே, முட்டையிடும் இயல்புக்கு திரும்பிச் செல்ல முடியாது. ஆகவே, ஒரு வெளவால் சூலுற்ற நிலையில் குட்டியின் எடையும் தொடர்ந்து அதிகரிப்பதால், அதன் எடை கூடிவிடும். இதனால் பறப்பது மிகுந்த சிரமமாகிவிடும். இதனால்தான் இயல்பிலேயே ஒரே ஒரு குட்டியை மட்டுமே வெளவால் ஈனுகிறது (மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரண்டு குட்டிகளை ஈனுவது உண்டு). இந்த வகையில்தான் அந்த வெளவால் குட்டி மிக முக்கியமானதாக எனக்குப் பட்டது.

ஆனால் பொதுவாக பார்த்தால், எல்லோருக்கும் வெளவால்களை குறித்து ஒரு வெறுப்பு மனநிலையே காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக, மேற்கு நாட்டினருக்கு அது ரத்தப் பிசாசாகவே காட்சியளிக்கிறது. இதற்கு வாம்பயர் (Vampire) என்ற ஒரு வகை வெளவாலே காரணம். இது 10 செ.மீ. அளவேயுள்ள ஒரு சிறிய வகை வெளவால். இந்த வகை வெளவாலின் எச்சிலில் ரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு வகை எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே, இது தூங்கும் விலங்கின் தோலில் கடிக்கும்போது தன் எச்சிலையும் கலந்து விடுவதால், வெளிவரும் ரத்தம் இயல்பாக உறைவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு தொடர்ந்து வெளி வந்த படியே இருக்கும். இப்படி ஒழுகும் ரத்தத்தை இந்த வெளவால் உறிஞ்சிக் குடிக்கிறது. இது ஏறக்குறைய ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் அட்டையை போன்றதுதான். சமயங்களில் உறங்கும் மனிதனும் இந்த சிறிய வெளவாலின் கடிக்கு ஆளாகிவிடுவதால், இவை ரத்தக் காட்டேரியாக மாற்றப்பட்டு விட்டன. இதைத் தவிர வேறு எந்த வகை வெளவாலும் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை, பெரும்பாலும் பூச்சியுண்ணிகளே.

வெளவால்களில் ஏறத்தாழ ஈராயிரம் வகைகள் இருக்கின்றன. இவற்றில் இந்தியாவில் 73 வகைகள் இருக்கின்றன. இருந்தாலும் வெளவால்களை குறித்த முழுமையான ஆய்வு இன்னமும் நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆனால் எல்லா வகை வெளவால்களும் சூழலியலுக்கு தனக்குரிய பங்கை செலுத்திக் கொண்டே இருக்கின்றன. அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படும் வெளவால்களில், அமெரிக்காவில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை வெளவால்கள் மட்டும் ஆண்டுக்கு 20,000 டன் எடையுள்ள பூச்சிகளை உட்கொள்கின்றன என்கிற செய்தியே, வெளவால்கள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற செய்தியை நமக்கு உணர்த்துகின்றது.

இந்த பூச்சியுண்ணி வகை வெளவால்களைப் பற்றி குறிப்பிடும்போது, கொமந்தோங் குகை என்ற பெயரை தவிர்க்க இயலாது. உலகிலேயே அதிக வெளவால்கள் வசிக்கும் இடம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒரேயரு குகையில் மட்டும் சுமார் இருபது லட்சம் வெளவால்கள் வசிக்கின்றன. போர்னியோவில் உள்ள இந்த குகையில் மாலை நேரத்தில் ஒரு கரும்புகை நாடாவைப் போல், இந்த வெளவால்கள் வெளியேறி வானில் பரவும் பரவசக் காட்சி கட்டாயம் காண வேண்டிய ஓர் அற்புத காட்சி. இந்த வகை வெளவால்கள் ஒவ்வொன்றும், ஓர் இரவில் மட்டும் தன் உடல் எடைக்கு நிகரான அளவுக்கு பூச்சிகளை சாப்பிடுகிறதாம். அப்படியெனில் இத்தனை லட்சம் வெளவால்களும் ஓர் இரவில் மட்டும் எத்தனை டன் பூச்சிகளைச் சாப்பிடும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். இத்துடன் சூழலுக்கு நஞ்சூட்டும் பூச்சிக் கொல்லிகள் இல்லாமல், இவை ஆற்றும் நன்மைகளை நாம் ஒரு நிமிடம் நினைவுகூர வேண்டும்.

எல்லா வகை வெளவால்களும் பூச்சிகளை உண்பதில்லை. சில வகை வெளவால்கள் பூந்தேன், பூந்தாது ஆகியவற்றை உண்ணுகின்றன. இத்தகைய வெளவால்களுள் ஒன்றுதான் விடிகாலை வெளவால்கள் (Dawn bats). இந்த வகை வெளவால்களின் நாக்கு மிக நீளமாக அமைந்திருக்கும். இதனால் அது பூவுக்குள் தன் நாக்கால் துழாவி தேனை உண்ண முடிகிறது. விலை உயர்ந்த பழ வகைகளில் ஒன்றான டுரியன், இந்த வெளவால்கள் இல்லாவிட்டால் இனவிருத்தி செய்ய இயலாது. ஏனெனில் இதன் மலர்கள் நள்ளிரவில் மலர்ந்து விடியலில் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டவை. எனவே, அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் மகரந்தச் சேர்க்கை நடக்க வேண்டியது அவசியம். இம்மலர் பூத்தவுடன் அதன் வாசனையை முகர்ந்து இவ்வகை வெளவால்கள் விரைந்து விடுகின்றன. பப்பாளி, வாழை போன்ற தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நடைபெற வெளவால்கள் உதவுகின்றன.

வெளவால்களில் மிகப் பெரியது பழந்தின்னி வெளவால்கள். இறக்கையை விரித்தால் சுமார் ஒன்றரை மீட்டர் நீளம் வரை இருக்கும். இதை நாம் எல்லோருமே நன்கு அறிவோம். மற்ற வெளவால்களுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இவை அகஒலி துணை கொண்டு பறப்பவை அல்ல என்பதுதான். சூழலியலில் பழந்தின்னி வெளவால்களின் முக்கியத்துவம் அளப்பரியது. ஏனெனில், விதைப் பரவலில் வெளவால்கள் அந்த அளவுக்கு தன் பங்கை ஆற்றுகின்றன. அமேசான் காடுகள் அழிக்கப்பட்ட இடங்களில் செயற்கையான வெளவால் வாழிடங்களை ஏற்படுத்தி நடத்திய ஓர் சோதனையில், வெளவால்கள் மட்டுமே அறுபது வகையான தாவரங்களை அழிந்து போன அந்தக் காட்டில் மீண்டும் முளைக்க வழி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை வெளவால்களின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் பாடம்.

இருந்தாலும் வெளவால்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்பது நமது துரதிருஷ்டம். இதைப் போக்க ஐ.நாவின் சி.எம்.எஸ். (Convention of Migratory Species) அமைப்பு 2011&2012ஆம் ஆண்டுகளை சர்வதேச வெளவால்கள் ஆண்டுகளாக அறிவித்துள்ளது. இதை முன்னிட்டு வெளவால்களின் அவசியத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதை அழிவிலிருந்தும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, சுண்ணாம்புப் பாறைக் குன்றுகள் அழிக்கப்படுவது விடிகாலை வெளவால்களின் வாழ்விடத்தையும், பெருமரங்கள் அழிக்கப்படுவது பழந்தின்னி வெளவால்களின் வாழ்விடத்தையும் கேள்விக்குறியாக்கி விடுகின்றன.

சரி, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் நான் கூறிய அந்த வெளவால் குட்டியை சுவற்றின் மேல் விட்ட மறுநாள் காலை விடிந்ததும், நானும் என் குடும்பத்தினரும் அதைத் தேடிப் பார்த்தோம். அந்த விளக்குமாறு குச்சி மாத்திரமே அங்கு இருந்தது. அந்தக் குட்டி வெளவால் எங்குமே தென்படவில்லை. தாய் வெளவால்தான் அதை கொண்டு சென்றிருக்கும் என்று நாங்கள் நம்பினோம், நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அப்படித்தானே நம்புகிறீர்கள்?

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

Pin It

உறங்கும் பறவைகளைத் தாங்கும் கூடு போலவே,

மௌனம் உனது குரலைக் காப்பாற்றும்

- தாகூர்

தமிழகம் எங்கும் காணப்பட்டு வந்த சிட்டுக்குருவி (House sparrow) இனம் அண்மைக்காலமாக கோவை, ஈரோடு, பழனி, மதுரை, சேலம் போன்ற பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்பகுதிகளில் நகரங்கள் மட்டுமன்றி கிராமப்பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது.

சிறுதானியங்களான தினை, கம்பு, சாமை, வரகு, வேலியில் சிறு விதைகளுடைய செடிகள் போன்றவற்றை பயிரிடுவது குறைந்துவிட்டதாலும், சிறு விதைகளுடைய செடிகள் இல்லாமல் வீடுகள் நவீனமடைவதாலும், வீட்டுச் சிறு கிணறுகள் மூடப்படுவதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளால் சிறு புழு பூச்சிகள் குறைந்து வருவதாலும், வளர்வதற்கேற்ற சூழ்நிலை இல்லாததாலும் வீட்டுச்சிட்டுகள் முற்றிலுமாகக் குறைந்து வருகின்றன.

இன்றும் திருநெல்வெலி மாவட்டப் பகுதிகள், நீலகிரி மாவட்டப் பகுதிகள், கோத்தகிரி பகுதிகளில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் அவை காணப்படுவதற்கு பழைய அமைப்பு கொண்ட வீடுகள், சிறு விதைகளைக் கொண்ட பல வகை செடிகள் இன்றும் அங்கு இருப்பதுதான் முக்கிய காரணம். குருவிகள் வளர்வதற்கேற்ற சூழ்நிலை எங்கு அமைந்துள்ளதோ அங்கெல்லாம் அச்சிட்டுகள் இயல்பாகக் காணப்படுகின்றன .

மைனா, காகம் போன்று சிட்டுக்குருவிகளின் உணவுப் பழக்கமும், கூடு கட்டும் பழக்கமும் சூழ்நிலைக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ள முடியாததும் அவை குறைந்து, அழிந்து வருவதற்கு முக்கிய காரணம். உதாரணத்துக்கு காகம், தேன்சிட்டு போன்ற பறவைகள் கம்பிகளில்கூட கூடுகட்டுகின்றன.

வீட்டுச்சிட்டின் அளவுடைய பறவைதான் மஞ்சள் தொண்டைச் சிட்டு. (Yellow throated Sparrow). இச்சிட்டை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இச்சிட்டைப் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. இவை வேகமாக அழிந்து வருகின்றன. காலப்போக்கில் தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிடுவதற்கும் வாய்ப்புள்ளது.

இது சிறு தானியங்கள் மட்டுமன்றி சோளத்தை மிகுதியாக விரும்பி உண்ணக் கூடிய பறவை. சோளம் விளைந்த காடுகளிலும், கதிர் அறுத்த களத்திலும் சிறுசிறு கூட்டமாக ஆங்காங்கே முன்னர் பரவலாகக் காணப்பட்டு வந்த நிலைமாறி, தற்போது இவற்றைக் காண்பது அரிதாகிவிட்டது. ஓராண்டுக்கு முன் தாராபுரம் பகுதியில் கடைசியாக இச்சிட்டைப் பார்த்தேன். அன்பர்கள் யாராவது மஞ்சள் தொண்டை சிட்டை பார்க்க நேர்ந்தால் தெரிவிக்கவும்.

வீட்டுச்சிட்டை போன்ற இயல்பைக் கொண்டதாக இருந்தாலும் நகர்ப்புறங்களில் இதைப் பார்க்க முடியாது. வனத்தை ஒட்டிய திறந்தவெளிப் பகுதிகளிலும், தானியங்கள் விளைந்த திறந்த காட்டுப் பகுதிகளிலும் மட்டுமே காணக்கூடியது.

இதன் கூடும் வீட்டுச்சிட்டைப் போன்ற அமைப்புடனே இருக்கும். வீட்டுச்சிட்டு ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும். ஆனால் இவை பிப்ரவரி, மே மாதங்களில் முட்டையிடுகின்றன. மரப்பொந்துகளில் 8 முதல் 40 அடி உயரம் வரை கூடு கட்டுகின்றன. ஒரு முறை திறந்த வெளியில் சோளக்காட்டுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 12 அடி நீளமும் ஒன்றரை அங்குல விட்டமும் கொண்ட இரும்புக் குழாயின் முகத்துவாரத்திலிருந்து அரை அடி உள்ளே குச்சிகளையும் சருகுகளையும் கொண்டு அடைப்பு ஏற்படுத்தி இது கூடு கட்டியிருந்ததைப் பார்த்தேன். சாதாரணமாக 3&4 முட்டைகள் வரை இடும்.

இதன் முக்கிய எதிரி யாரென்று கேட்டால், மனிதன்தான். சிறுவர்கள் விளையாட்டாக உண்டி வில் கொண்டு அடிப்பது மட்டுமில்லாமல், சிலர் உணவுக்காகவும் இதை அழிக்கின்றனர். வளர்ப்புப் பூனை, காகம், சிறிய வல்லூறுகளான சின்ன வல்லூறு , சிவப்பு வல்லூறு போன்ற பறவைகளாலும் இதற்கு ஆபத்து ஏற்படுகிறது.

இப்பறவைகளை அழிவிலிருந்து பாதுகாக்க, இவை இருக்கும் இடத்தில் வாழ்பவர்கள் அவற்றை பாதுகாக்க முயற்சிக்க வெண்டும். சிறு தானியங்களான தினை, வரகு, ராகி போன்று இவை உண்ணக்கூடியவற்றைத் தேர்ந்தெடுத்து நாள்தோறும் வெளியே தூவி பழக்கினால் இவை முற்றிலும் அழிவதிலிருந்து பாதுகாக்க முடியும்.

கட்டுரையாளர் முகவரி: டி.ஆர்.ஏ. அருந்தவச்செல்வன், 414, ஆண்டவர் காம்ப்ளெக்ஸ், கிராஸ் கட் சாலை, கோவை 641 012, மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

சாலிம் அலியை உருவாக்கிய சிட்டு

உலகப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலி, பறவைகளின் மீது ஈடுபாடு கொண்டதற்கு அடிப்படையாக அவரது சிறு வயதில் ஒரு சம்பவம் நடந்தது.

அந்தக் காலத்தில் பலரது வீடுகளில் "ஏர் கன்" எனப்படும் குருவி சுடும் துப்பாக்கிகள் இருந்தன. சாலிமுக்கும் அப்படி ஒரு துப்பாக்கி பரிசாகக் கிடைத்திருந்தது. ஒரு நாள் தொண்டைப் பகுதியில் மஞ்சளாக, சற்று புதுமையாக இருந்த ஒரு குருவியை சாலிம் அலி சுட்டார். அந்தக் குருவியை அதற்கு முன் அவர் பார்த்ததில்லை. அது முற்றிலும் புதிதாக இருந்தது. நம்மிடம் உள்ள பறவைகளில் இருந்து இது மாறுபட்டிருக்கிறதே என்று அவருக்குத் தோன்றியது. அவரது மாமாவுக்குத் தெரிந்த சிலர் பி.என்.எச்.எஸ் எனப்படும் பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் இருந்தார்கள். பறவைகள், உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வது, சூழலை காக்க முயற்சிப்பதுதான் அந்த நிறுவனத்தின் வேலை. மஞ்சள் தொண்டைச் சிட்டு பற்றி அறிந்து கொள்வதற்காக, சாலிம் அந்த நிறுவனத்துக்கு சென்றார். அங்கு நிறைய பறவைகள் பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டன, அருங்காட்சியகங்களில் வைத்திருப்பதைப் போல. அப்பறவைகளால் கவரப்பட்ட சாலிம், தனக்குள்ளே இப்படி முணுமுணுத்துக் கொண்டார் "பறவைகளைப் பற்றி என்னவெல்லாம் முடியுமோ, அவற்றைப் பற்றி ஒரு நாள் படிப்பேன்" என்று.

பிற்காலத்தில் அவர் பறவையியல் அறிஞராக இந்தச் சம்பவமே காரணம். பின்னர் அவர் பி.என்.எச்.எஸ்ஸின் தலைவராக உயர்ந்தார். பி.என்.எச்.எஸ் தீவிரமான பணிகளில் ஈடுபடக் காரணமாக இருந்தவர் சாலிம் அலியே.

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

Pin It

தமிழகம் இழந்த, இழக்கப் போகிற அரிய உயிரினங்கள் - ஒரு பார்வை

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியின் மூலம் மரபணுவிலேயே தகவமைப்பைப் பெற்று தனித்துவம் மிக்க உயிரினங்கள் உருவாகின்றன. ஆனால் இயற்கை இப்படி பார்த்துப் பார்த்துச் செதுக்கிய உயிரினங்கள், மனிதர்களால் ஒரு சில ஆண்டுகளில் ஓர் இடத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக அழிந்து போகின்றன. இப்படி நாம் இழந்தது அநேகம். இழக்கப் போவதன் எண்ணிக்கையும் குறைச்சலாக இல்லை. கடந்த 6.5 ஆண்டுகளில் ஆறாவது மிகப் பெரிய உயிரினப் பேரழிவு நடந்து கொண்டிருக்கிறது என்று உயிரின பாதுகாவலர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்?...

இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது. நவீனமாகவும், நகர்மயமாகவும் உருமாறி வரும் அதன் வளர்ச்சிகள் இன்னும் 8 ஆண்டுகளில் நாட்டை வல்லரசாக்கி விடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருகிறார்கள். ஆனால் அதற்குள் நாம் எத்தனை உயிரினங்களை, மீண்டும் இயற்கையில் உருவாக்க முடியாத உயிரினங்களை, பறவைகளை, தாவரங்களை இழந்திருப்போம் என்று தெரியவில்லை.

ஒரு பக்கம் மக்கள்தொகை வளர்ச்சி, மற்றொரு பக்கம் அதைவிட வேகமாக வளர்ந்து வரும் நவீன வாழ்க்கை முறை, அத்துடன் நமது அரசுத் திட்டங்களும், தொழிற்சாலைகளும் முன்னெடுக்கும் வளர்ச்சி முறை ஆகியவற்றின் காரணமாக ஒட்டுமொத்தமாக சின்னாபின்னமாவது நமது இயற்கைதான். கண்ணுக்குத் தெரியாத ஓர் இயந்திரம் போல, உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் உய்விக்க ஒவ்வொரு கணமும் உழைத்துக் கொண்டிருக்கும் இயற்கை முற்றிலுமாக சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“மனிதன் பேராற்றல் மிக்கவன்” என்ற அடைமொழியுடன் இயற்கையை கட்டுப்படுத்தி, துய்த்து, தனக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வதை நவீனமயம் ஆதரிக்கிறது. ஆனால் இப்படிச் செய்யும்போது ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி, அது கவலைப்படுவதில்லை. மனிதகுல வரலாற்றில் இல்லாத வகையில் உயிரினங்களும், தாவரங்களும் நம் கண் முன்னாலேயே பெருமளவில் அழிந்து வருகின்றன.

வளர்ச்சி ஏற்படுத்தும் நெருக்கடிகள், காட்டில் பழங்குடிகள் அந்நியப்படுத்தப்படுதல், குறுகிய நோக்கம் கொண்ட கொள்கைகள், மக்களின் தேவை அதிகரிப்பு, பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களின் சரிவு ஆகியவற்றுடன் மக்கள்தொகை வளர்ச்சி, அது சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்தும் இயற்கையை கபளீகரம் செய்து வருகின்றன.

சிவிங்கிப்புலி ஏற்கெனவே அற்றுப்போய்விட்டது. புலி, யானை, பனிச்சிறுத்தை, சோலைமந்தி (சிங்கவால் குரங்கு), கடல்ஆமைகள், கானமயில், ஆசிய சிங்கம், செந்நாய்கள், இமாலய ஐபெக்ஸ் (காட்டாடு) போன்றவை அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இவற்றில் பல உயிரினங்கள் குறிப்பிட்ட ஒரு சூழல் அமைப்பின் வளத்தை வெளிப்படுத்துபவை. எனவே இவற்றின் அழிவு, ஒட்டுமொத்த சூழல் அமைப்பு அழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. வாழிட அழிவுதான் உயிரினங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது பல்வேறு காரணங்களால் நடைபெறுகிறது. எளிதில் சிதைந்துவிடக் கூடிய இந்த வாழிடங்கள் காப்பாற்றப்பட்டால்தான், மண்வளமும், தண்ணீரும் பாதுகாக்கப்படும், வேளாண் உற்பத்தி சரியாமல் தொடரும். சுருக்கமாகச் சொல்வெதென்றால் மனிதன் உயிர்வாழ இந்த வாழிடங்கள் மட்டுமின்றி, அந்த உயிரின வலைப்பின்னலின் முக்கிய அங்கமான உயிரினங்களும் அவசியம்.

உயிரினங்களின் அழிவுக்கு வாழிட அழிவுதான் முக்கிய காரணம் என்பதற்கு சிறுத்தையும், யானையும் சந்தித்து வரும் நெருக்கடி நேரடி உதாரணம். மனிதர்களைப் போல இவற்றின் எண்ணிக்கை எந்த வகையிலும் கட்டுப்பாடில்லாமல் உயரவில்லை, மாறாக சரிந்தே இருக்கிறது. ஆனால் முன்பு இருந்ததைவிட குறுகிய பரப்புக்குள் வாழ இவை நிர்பந்திக்கப்படுகின்றன. அதன் காரணமாகவே, அவை காட்டின் எல்லைப் பகுதிகளுக்கு வருவதும், அவற்றை ஏதோ எதிரிகள் போல மனிதர்கள் பாவிப்பதும் தொடர்கிறது.

“காட்டுக்குள் பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், வெளியே இருக்கும் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் புலிகளையும் யானைகளையும் காப்பாற்றச் சொல்கிறீர்களே, இது என்ன நியாயம்?” என்று மனிதஉரிமை ஆர்வலர்கள் கேட்கிறார்கள். புலிகளும் யானைகளும் முந்தைய காலத்தில் இருந்த அதே எண்ணிக்கையில்தான் இன்றைக்கும் இருக்கின்றனவா, அல்லது குறைந்திருக்கின்றனவா? பழங்குடி மக்களின் எண்ணிக்கையும், அவர்களது வாழ்க்கை முறையும் பழையபடியேதான் தொடர்கின்றனவா என்ற கேள்விகளுடன் இணைத்தே இதைப் பார்க்க வேண்டும்.

பழங்குடிகள் அன்றைக்கு வாழ்ந்த அதே வாழ்க்கையை வாழ்கிறார்களா, எந்த நவீன அறிவியல் வளர்ச்சியையும் காட்டுக்குள் பயன்படுத்தவில்லையா என்பதையும் சேர்த்தே இந்தக் கேள்விகளுக்கு பதில் தேட முயற்சிக்க வேண்டும். “பழங்குடிகளுக்கு நல்ல காற்று கிடைக்கிறது, நல்ல சுற்றுச்சூழல் கிடைக்கிறது. அவற்றைத் தடுக்க வேண்டும்“ என்பதற்காக அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று உயிரின பாதுகாவலர்கள் யாரும் வாதாடவில்லை. அவர்களது வாழ்வுரிமையை பறித்து, காட்டை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறவில்லை. இது மிகவும் சிக்கலான பிரச்சினை. இதில் உணர்ச்சிவசமாகவோ, மனித மதிப்பீட்டு ரீதியிலோ மட்டும் பேசுவது ஒட்டுமொத்த சமநிலைக்கு உகந்தது ஆகாது.

நமது காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல், வகை பிரிக்கப்படாமல் எத்தனையோ உயிரின வகைகள், தாவர வகைகள் உள்ளன. இதற்கு நல்ல உதாரணம் வடகிழக்கு மாநிலங்கள். தவாங் மக்காக் என்ற குரங்கு இனம், கறுப்புக் கேளையாடு, புகுன் லியோசிக்லா என்றொரு பறவை, எண்ணிலடங்காத தவளை இனங்கள் என இந்தப் பட்டியல் நீள்கிறது. இப்படி பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே ஓர் இயற்கைச் சூழல் அழிக்கப்பட்டால், இது போல ஓர் உயிரினம் இருந்ததும், அந்தச் சூழலில் அது செலுத்தி வந்த தாக்கமும் சுத்தமாகத் தெரியாமல் போய்விடும் ஆபத்து இருக்கிறது.

இந்த இடத்தில் கேலபாகஸ் தீவுகளில் ஒரே வகை உயிரினங்களிடம் கண்ட வேறுபாடுகளை வைத்தே “உயிரினங்களின் தகவமைப்புக் கொள்கையை” (Adaptation Theory) சார்லஸ் டார்வின் முன்மொழிந்தார் என்பதை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். பரிணாமவியல் கொள்கையின் உருவாக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே வகையான உயிரினம் வேறொரு சூழலில் வாழும்போது, அதற்கேற்ப தகவமைத்துக் கொள்கிறது. இல்லாதபட்சத்தில் அழிந்து போகிறது என்பதே தகவமைப்புக் கொள்கை. எனவே, இயற்கையில் வாழும் ஒவ்வொரு உயிரினமும், முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது.

டைனோசர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் உலகிலேயே பிரம்மாண்ட உயிரினமான அந்த டைனோசர்கூட தனக்குத் தேவையான உணவுக்காக இரைகளை மட்டும் கொன்றதே ஒழிய, உலகையோ, மற்ற உயிரினங்களையோ அழிக்கவில்லை.

நமது பாரம்பரிய வளம் என்று எதைஎதையோ சொல்லிக் கொள்கிறோம். வெப்பமண்டலப் பகுதி என்பதாலேயே இயற்கை நமக்கு வாரி வழங்கியுள்ள அரிய வளங்களையும், செல்வங்களையும் அழிப்பதும், அழிய விடுவதும் எப்படி அறிவுடைமை ஆகும்? கடந்த காலத்தில் நம்மிடம் இருந்த மரபுசார்ந்த விழுமியங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் நெருக்கடிகள் மிகுந்த இன்றைய நவீன உலகில் மறக்கப்பட்டுவிட்டன. அவற்றை மீட்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.

பழங்குடிகளுக்கு காடு சார்ந்த, உயிரின நிர்வாகம் சார்ந்த பாரம்பரிய அறிவு குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. அவர்களுடன் அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் இணைத்து நமது காடுகளையும் உயிரினங்களையும் காப்பாற்றலாம். பழங்குடிகளுடன் ஒருங்கிணைக்காமல் காட்டையோ, உயிரினத்தையோ காப்பாற்ற முடியாது என்ற கருத்தை மறுப்பதற்கில்லை. அழியும் ஆபத்தில் உள்ள உயிரினங்கள், அவற்றுக்கு அருகே வாழும் பழங்குடிகள், இயற்கையான வாழிடங்கள் இவை மூன்றும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்பு கொண்டவை, ஒன்றையன்று சார்ந்தவை என்பதை மறந்துவிடக்கூடாது.

அழிந்துபட்ட தமிழக உயிரினங்கள்:

பாலூட்டிகளில் நான்கில் ஒன்றும், பறவைகளில் எட்டில் ஒன்றும் இன்று அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் அநேகம்.

 “மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற அர்ஜுனன் தவம் சிற்பத்தில் ஒரு பெண் சிங்கம் 2 குட்டிகளுக்கு பால் கொடுப்பது போல் இருப்பதையும், சிங்கநல்லூர், சிங்கம்புணரி போன்ற ஊர் பெயர்களையும் குறிப்பிட்டு, ஆசிய சிங்கம் தென்னிந்தியாவில் இருந்தது” என்று சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் முன்பு வாழ்ந்து தற்போது அழிந்துவிட்ட உயிரினங்கள் பற்றிய அவரது பதிவுகள்:

சென்ற நூற்றாண்டு நடுப் பகுதி வரை தமிழகத்தில் உலவிய சிவிங்கிப்புலி (Cheetah) இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவிலும் இல்லை. இதை ஆப்பிரிக்காவில் இருந்து மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்கிறது (இது சிறுத்தை (leopard) அல்ல). மோயாறும் பவானி நதியும் சேரும் இடத்திலுள்ள புதர்க்காடுகளில் சிவிங்கிப்புலி இருந்த விவரம் அரசு ஆவணங்களில் பதிவாகியுள்ளது. 1876இல் மதராஸ் ராஜதானியில் 135 சிவிங்கிப்புலிகள் இருந்ததாக ஓர் ஆவணம் குறிப்பிடுகிறது. சிவிங்கியை எப்படிப் பிடிப்பது, அதை வேட்டைக்குப் பழக்கும் முறைகள், மருத்துவம் பார்க்கும் முறைகள் பற்றி படங்களுடன் விளக்கும் நூல் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கிறது. 

சிவிங்கிப்புலிக்கும் தற்போதும் நம் காடுகளில் வசிக்கும் சிறுத்தைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிப்படை வேறுபாடு, சிவிங்கிப்புலிக்கு தோல்போர்வையில் புள்ளிகளே இருக்கும். ஆனால் சிறுத்தைக்கு கறுந்திட்டுகள் இருக்கும். சிவிங்கிக்கு கண்ணுக்குக் கீழே கறுப்புக்கோடு இருக்கும். கால்கள் நீண்டவை. உலகிலுள்ள இரைகொல்லிகளில் வேகமாக ஓடக்கூடியது. ஏறக்குறைய 100 கி.மீ. வேகத்தில் ஓடும். 1950களில் இது அற்றுப்போய்விட்டது.

ஒளவையார் எழுதியதாக கூறப்படும் மூதுரை பாடல் ஒன்றில்

“கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானுமதுவாகப் பாவித்து தானுந்தான்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கல்வி” மூதுரை 14

என்றொரு செய்யுள் இருக்கிறது. இதில் குறிப் பிடப்படும் கானமயில் ஆண் பறவை வாலை விசிறி போல விரித்து, இறக்கைகளைப் பரப்பி, ஆடுவதுண்டு. அது வான்கோழியை நினைவுபடுத்தும். இந்தப் பாடல் ஒளவையார் எழுதியது இல்லை என்றும் கூறப்படுகிறது. புகழ்பெற்ற இந்தச் செய்யுளில் கூறப்படும் கானமயில் (The Great Indian Bustard) என்ற பறவை ஒகேனக்கல் அருகேயுள்ள புதர்காடுகளில் இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு அருகேயும் இருந்ததாம். தமிழகத்தில் முற்றிலும் அழிந்துவிட்ட இப்பறவை, இன்றைக்கு ராஜஸ்தானிலும் மகாராஷ்டிரத்திலும் ஆந்திரத்திலும் தென்படுகிறது. வறண்ட புதர்க்காடுகளில் தரையில் முட்டையிட்டு அடைகாக்கும் பறவை இது. அதேபோல வரகுக்கோழி (Lesser Florican) என்ற மற்றொரு தரைவாழ் பறவையும் தமிழகத்தில் இருந்து அழிந்துவிட்டது. செங்கம் அருகே சுடப்பட்ட ஒரு வரகுக்கோழி, பாடம் செய்யப்பட்டு சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தப் பறவை தமிழகத்தில் இருப்பதாக பதிவுகள் இல்லை. தமிழகம் ஏற்கெனவே இழந்துவிட்ட உயிரினங்கள் இவை. இது தியடோர் பாஸ்கரன் கூறும் செய்திகள்.

அதேபோல தமிழக பகுதிகளிலும், தேசிய அளவிலும் பிணந்தின்னிக் கழுகுகள் பெருமளவு அழிந்துவிட்டன. இதற்கு Diclophenac  என்ற வலிநிவாரணியே காரணம். இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து இந்த மருந்து கழுகுகளின் உடலுக்குள் சென்று, அவை அழியக் காரணமானது. இப்போது இந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டாலும் கழுகுகள் அழிவின் விளிம்புக்குச் சென்றுவிட்டன.

ஒரு காலத்தில் சிவிங்கிப்புலியின் இரையாக இருந்த, சென்னையிலும், தமிழகத்தின் பல வறண்ட காட்டுப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்த வெளிமான் இன்றைக்கு ஒரு சில இடங்களில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் எஞ்சியிருக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம், சென்னை ஐ.ஐ.டி. கிண்டி தேசிய பூங்காவின் ஒரு பகுதியை அழித்துத்தான் ஐ.ஐ.டி கட்டப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி வளாகத்துக்குள் இன்றைக்கு வெளிமான்கள் மிக மிகச் சொற்பம்.

இப்படி தற்போதும்கூட பல உயிரினங்கள் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை சிங்கவால் குரங்கு என்று பரவலாக அறியப்படும் சோலை மந்தி. மற்றொன்று தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு.

உலகில் அழியும் ஆபத்திலுள்ள உயிரினங்களை சிவப்புப் பட்டியல் (Red List) என்ற பெயரில் ஐ.யு.சி.என். (IUCN - International Union for Conservation of Nature) என்ற அமைப்பு பட்டியலிடுகிறது. ஒரு எச்சரிக்கையாகவே இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களும், ஆர்வலர்களும் அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி முற்றிலும் அற்றுப்போகும் முன் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்தப் பட்டியலின் நோக்கம். அந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக உயிரினங்கள்:

1. வரையாடு (Nilgiritragus hylocrius)

தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் காடுகளின் 5 சதவீதப் பகுதியில் வாழ்ந்து வருகிறது. 1970&80களில் 2000& 2,500 வரை இருந்த இவற்றின் எண்ணிக்கை 2008 வாக்கில் 1,800&2,000 ஆகக் குறைந்துவிட்டது. மலை முகடுகள், புல்வெளிகள், திறந்த வெளிகளில் வாழும் இந்த ஆடு அதிகாலையிலும், பிற்பகல் நேரத்திலும் இரை தேடும். சராசரியாக 3.5 ஆண்டுகளே வாழும். வாழிட அழிவும், கள்ள வேட்டையும்தான் இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம்.

2. சோலை மந்தி (Macaca silenus)

சிங்கவால் குரங்கு என்று அழைக்கப்பட்டாலும் சோலை மந்தி என்பதே சரியான பெயர். மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழ்கிறது. இவற்றின் எண்ணிக்கை 4,000 ஆக இருந்தாலும், முதிர்ந்த விலங்குகள் 2,500தான் எஞ்சியிருக்கின்றன. வாழிட அழிவு, வேட்டையாடல் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஆனைமலை பகுதியில் சுமார் 500 சோலை மந்திகள் வாழ்கின்றன. இது வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடுகளின் தாவரவிதானப் பகுதியில் வாழக்கூடியது. அனைத்துண்ணி. வாழிடம் துண்டாதல் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். வெட்டுமரத் தொழில், தேயிலை, காப்பி, தைல மரத் தோட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டதே இவற்றின் அழிவுக்கு முதன்மைக் காரணம்.

3. மலபார் புனுகுப் பூனை (Viverra civettina)

உலகின் அரிய பாலூட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. இரவாடியான இந்த விலங்கு, மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே வாழும் உயிரினம். மரங்கள் அடர்ந்த சமவெளிகள், பசுமைமாறா மழைக்காடுகளின் மலைச்சரிவுப் பகுதிகளில் வாழும். காடழிப்பும், வணிகத் தோட்டங்களுமே இதற்கு மிகப் பெரிய எதிரிகள். இந்த உயிரினத்தின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை.

4. பெரிய பாறை எலி (Cremnomys elvira)

இந்தியாவில் மட்டுமே வாழக்கூடியது பெரிய பாறை எலி அல்லது எல்விரா எலி. இடைப்பட்ட அளவு கொண்ட, வளை தோண்டி வாழும் இரவாடி விலங்கு இது. பாறைப் பகுதிகள் கொண்ட வெப்பமண்டல வறண்ட புதர்க்காடுகளில் வாழக்கூடியது. தமிழகத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளில் இது வாழ்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழிட அழிவு, காட்டை சீர்திருத்துதல், விறகு சேகரிப்பு போன்றவை இதற்கு அச்சுறுத்தல்.

5. வெண்முதுகுக் கழுகு (Gypsbengalensis)

இந்தியாவில் மொத்தமுள்ள ஒன்பது பிணந்தின்னிக் கழுகு வகைகளில் வெண்முதுகுக் கழுகு White-backed Vulture (Gypsbengalensis), செந்தலைக் கழுகு - Slender-billed Vulture (Gyps tenuirostris), கோடாங்கிக் கழுகு - Long-billed Vulture (Gyps indicus) ஆகிய மூன்று வகைகளும் 99 % அழிந்துவிட்டன. சிவப்பு பிணந்தின்னிக் கழுகு (Sarcogyps calvus) சமீப காலத்தில் அதிவேகமாக அழிந்துவிட்டது. முன்பு இந்தியா முழுமையும் காடுகள், கிராமங்களில் இந்தக் கழுகுகள் சாதாரணமாக காணப்பட்டன. 

பிணந்தின்னிக் கழுகுகள்தான் இயற்கை துப்புரவாளர்கள், காட்டில் இறந்த விலங்குகளை உண்டு வாழ்வதன் மூலம் சுற்றுச்சூழல் தூய்மையையும் பாதுகாப்பையும் இவை உறுதி செய்கின்றன. டைகிளோஃபெனாக் வலிநிவாரணி கால்நடைகளுக்கு வகைதொகை இல்லாமல் கொடுக்கப்பட்டது இவற்றின் அழிவுக்கு முதன்மை காரணம். கால்நடைகளுக்கு வலிநிவாரணியாக மாட்டு டாக்டர்களால் தரப்பட்ட டைகிளோஃபெனாக் என்ற மருந்து இறந்த கால்நடைகளின் உடலில் இருந்து, இந்த கழுகுகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றின் ரத்தத்தில் டைகிளோஃபெனாக் அளவு அதிகரித்த நிலையில் கழுத்து சரிவது, கீல்வாதம் போன்ற நோய்கள் அதிகரித்து கடைசியில் கழுகுகள் கூட்டங்கூட்டமாக அழிந்து போயின.

இக் கழுகுகளின் அழிவு காரணமாக இறந்த விலங்குகள் சுத்தம் செய்யப் படாமல் போவதால் ரேபிஸ், ஆந்த்ராக்ஸ் போன்ற நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளது. அத்துடன் பார்சிகளின் அமைதி கோபுரத்தில் சடலங்கள் இடப்படும் சடங்கையும் இது பாதிக்கிறது.

6. கரண்டிவாய் உள்ளான் (Eurynorhynchus pygmeus)

இந்தியாவுக்கு வலசை வரும் பறவைகளுள் ஒன்று கரண்டிவாய் உள்ளான் Spoon Billed Sandpiper - (Eurynorhynchus pygmeus). இது உலகம் முழுவதுமே 150&320 ஜோடிகள்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைக்கு சிறப்புத்தன்மை கொண்ட இனப்பெருக்க மையங்கள் தேவை. இதன் காரணமாகவே இதன் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குளிர்காலத்தில் வலசை வரும் இந்தப் பறவைக்கு தமிழகமும் ஒரு புகலிடம். ஓரளவு தாவரங்கள் உள்ள கடற்கரைப் பகுதிகளே இதன் இருப்பிடம். வாழிட சிதைவு, நிலச் சீர்திருத்தம், மனிதத் தொந்தரவுகளே இவற்றின் இனப்பெருக்கத்துக்கு அச்சுறுத்தல்.

7. சிஸ்பாரா மரப்பல்லி (Cnemaspis sisparensis)

இது காட்டில் இருக்கும் ஒரு வகைப் பல்லி. பூச்சியுண்ணியான இந்தப் பல்லி ஓர் இரவாடி. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் மட்டுமே இருக்கும் இந்தப் பல்லி, நீலகிரிப் பகுதியில் உள்ள சிஸ்பாராவில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்தப் பெயரே வைக்கப்பட்டது. வாழிடம் திருத்தப்படுதல், வாழிடம் மாற்றப்படுதல்தான் இவற்றுக்கு எதிரி. இதன் எண்ணிக்கை தொடர்பாக முறையான பதிவுகள் இல்லை.

8. அழுங்காமை (Eretmochelys imbricata)

கடலாமைகளில் அழுங்காமை - Hawksbill Turtle (Eretmochelys imbricata) மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் வலசை செல்லும் பண்பு கொண்ட இந்த ஆமை, உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் முட்டையிடக் கூடியது. இந்த ஆமை இனப்பெருக்க வயதை அடைவதற்கு காலதாமதம் ஆகும். 25&40 வயதுள்ள ஆமைகளே இனப்பெருக்கம் செய்ய முடியும். மேலும் தனித்த, மணல் நிரம்பிய கடற்கரைகளிலேயே முட்டையிடும். தமிழகத்துக்கும் இந்த ஆமை அவ்வப்போது வருவது உண்டு. ஓடு விற்றல், முட்டை சேகரிப்பு, இறைச்சிக்கு கொல்லப்படுதல், எண்ணெய் மாசு, முட்டையிடும் இடம் சிதைவு, தீவனம் அழிப்பு போன்றவை இவற்றுக்கு அச்சுறுத்தல்.

9. பாண்டிச்சேரி சுறா (Carcharhinus hemiodon)

இந்திய துணைக்கண்ட கடற்கரைகளிலும், திட்டுப் பகுதிகளுக்கு அருகிலும் வசிக்கக் கூடிய ஒரு கடல் மீன் இனம் இது. மேலும் மிகவும் அரிய, மிகக் குறைவாக ஆராய்ச்சி செய்யப்பட்ட ஓர் உயிரினம். இந்தியக் கடல் பகுதிகளில் உள்ளது. கடற்கரை பகுதிகளிலும் அது வாழுமிடங்களிலும் முறைப்படுத்தப்படாத மீன்பிடி முறைகள் பெருகி வருவதே இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். இது வலையில் விழுந்தாலும், சந்தை ஆய்வுகளில் பதிவு ஆவதில்லை. வணிகரீதியில் முக்கியத்துவம் இல்லையென்றாலும், மற்ற மீன்களுடன் வலையில் சிக்கிக் கொள்வதாலேயே பெருமளவு அழிக்கப்பட்டது.

10. கூட்டி எட்டுக்கால் பூச்சி (Poecilotheria metallica).

உலோக எட்டுக்கால் பூச்சி அல்லது மயில் எட்டுக்கால் பூச்சி என்று பல பெயர்கள் கொண்ட இந்த எட்டுக்கால் பூச்சி இரும்பு நீல நிறத்தில், ஆரஞ்சு மஞ்சள், கறுப்பு வெள்ளை திட்டுகள் கொண்டது. இது முதன்முதலில் உதகமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாலேயே கூட்டி எட்டுக்கால் பூச்சி என்ற பெயர் வந்தது. ஊட்டிக்கு ரயில்பாதை போட்டபோது இது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது முதல் செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் இது முக்கிய இடத்தைப் பிடித்தது. இதன் குஞ்சுகள் மிகச் சிறியதாக இருப்பதாலும், மனிதர்கள் ஏற்படுத்தும் மற்ற நெருக்கடிகள் காரணமாகவும் அழியும் ஆபத்துக்குச் சென்றுள்ளது. தென்னிந்திய மலைக் காட்டுப் பகுதிகளில் வாழ்கிறது. இந்தியாவில் மட்டுமே இந்த எட்டுக்கால் பூச்சி இருக்கிறது. செல்லப்பிராணிகள் விற்பனைக்கான கடத்தலில் மிக அதிக விலை கொடுத்து வாங்கப்படும் எட்டுக்கால் பூச்சி வகை இது. இவை வாழ்ந்த பெருமளவு காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது விறகுக்காக இவற்றின் வாழிடம் சிதைக்கப்பட்டுவிட்டது. ஆந்திராவில் இருப்பதாக பதிவு உள்ளது.

 11. தேரைத் தோல் தவளை-கேரள இந்தியத் தவளை (Indirana phrynoderma)

கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டருக்கு மேற்பட்ட பகுதியில் வாழக்கூடியது. தோலின் மீது மரு, கழலை, சுரப்பிகளுக்கான மடிப்புகள் போன்றவற்றை முதுகுப் பகுதியில் பெற்றிருப்பதால், தேரைத் தோல் தவளை என்றும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் உள்ள ஆனைமலை பகுதியில் காணப்படுகிறது. தொடர்ச்சியான வெட்டுமரம், விறகு சேகரித்தல் காரணமாக ஏற்பட்ட வாழிட அழிவுதான் இந்த தவளைக்கு பெரும் அச்சுறுத்தல்

12. கிரெய்ட் புதர் தவளை (Raorchestes griet)

இந்த சிறிய புதர்த் தவளை, மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 22.2 செ.மீ. இந்தத் தவளை கடல் மட்டத்தில் இருந்து 600& 1,800 மீட்டர் உயரத்தில்தான் வாழும். கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி, வால்பாறை பகுதியில் தென்படுகிறது. தேயிலை, தைலமரத் தோட்டங்களால் காடுஅழிவும், வாழிடம் துண்டாடப்பட்டதுமே இவற்றின் அழிவுக்குக் காரணம்.

13. பொன்முடி பெரிய புதர்த் தவளை (Raorchestes ponmudi)

இந்தியாவிலுள்ள புதர்த் தவளைகளில் பெரியது. மூக்கு முதல் எச்சமிடும் பின்வாய் வரையிலான நீளம் 4 செ.மீ. கோவை மாவட்டம் ஆனைமலை, வால்பாறை பகுதிகளில் வாழக் கூடியது. சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்கள் விரிவாக்கப்படுவதன் காரணமாக காடழிவு, வாழிட அழிவே இவற்றுக்கு முக்கிய அச்சுறுத்தல்.

14. சுஷில் புதர் தவளை (Raorchestes sushili)

2009ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் வால்பாறை அருகேயுள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடுகளில் இது கண்டுபிடிக் கப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து 600 மீட்டர் உயரத்துக்கு மேல் இது வாழ்கிறது. வால்பாறை பகுதியில் மட்டுமே இந்தத் தவளை வாழ்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனைமலை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடுதல் காரணமாக இதன் வாழிடம் பெருமளவு அழிந்துவிட்டது.

15. ஆனைமலை பறக்கும் தவளை (Rhacophorus pseudomalabaricus)

கடல் மட்டத்தில் இருந்து 1,000 மீட்டர் உயரத்துக்கு மேற்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் தெற்குப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே வாழ்கிறது. வால்பாறை பகுதியில் உள்ள ஆண்டிப்பாறை சோலைக்காடு, புதுத்தோட்டம், ஆனைமலை மலைப்பகுதிகளில் உள்ளது. இந்திரா காந்தி தேசிய பூங்காவுக்கு வெளியே காட்டைத் திருத்தி வயலாகவும், வெட்டுமரக் காடாகவும் மாற்றுவது, உள்ளூர் மக்கள் மரத்தை வெட்டுவதுதான் இதற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்.

(கீழ்க்கண்ட புத்தகங்களில் இருந்து கருத்துகள், தகவல்கள் இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ளன: இன் டேஞ்சர், பவோலா மான்ஃபிரெடி, சு. தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள், கிரிடிகலி என்டேஞ்சர்டு அனிமல் ஸ்பீசீஸ் ஆஃப் இந்தியா, மத்திய வனத்துறை அமைச்சக வெளியீடு - பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)

 

Pin It