கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
மனித பண்பாட்டின் வளர்ச்சியானது விலங்குகளை அவன் வடிவமைத்த கருவியால் வேட்டையாடி நெருப்பில் சுட்டு உணவை உண்ட காலகட்டத்தில் இருந்து தொடங்கலாம். அதோடு வட்ட வடிவில் சுழலும் ஓர் கருவியை உருவாக்கி அதன் மூலம் நகரும் ஓர் போக்குவரத்து மூலத்தை கண்டறிந்தான்.
பறவைகள் போல ஏன் நாமும் பறக்க முடியவில்லை என்ற சிந்தனை தோன்றியிருந்தாலும், நமக்கு ஆதாரமாக இருப்பது பண்டைய கிரேக்க எகிப்திய பண்பாட்டின் சிற்பங்கள், ஓவியங்களே. மனிதனுக்கு இறக்கை இருப்பது போலவும் பறப்பது போலவும் பல சிற்பங்கள் ஓவியங்கள் நம்மிடம் இன்று உள்ளன.கிரேக்க எகிப்திய பண்பாட்டில் இயற்கையாக கிடைக்கும் ஆற்றலை பயன்படுத்தி மனித வளர்ச்சியை மேம்படுத்தி இருக்கிறார்கள். அவர்களின் சிந்தனை தோற்றம் அதோடு நின்றுவிடவில்லை. கிரேக்க வானியல் அறிஞர்கள் பலர் வானில் நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய தொடங்கினார்கள்.
கிரேக்க தத்துவ ஞானி ஃபிளாட்டோ பூகோளம் தட்டை வடிவில் இல்லை அது வட்ட வடிவில் உள்ளது எனவும் அது சுழன்று கொண்டிருக்கிறது அவர் சொன்னபோது கத்தோலிக்க மதத் தலைவர்கள் அவரை கொலை செய்யவும் வகை தோண்டினார்கள்.
17 -ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் பெசோ நகரில் பிறந்த வானியல், இயற்பியல் அறிஞர் கலிலியோ விண்வெளியை பல கோணங்களில் ஆய்வு செய்தார். அவர் உருவாக்கிய தொலைநோக்கியில் கோள்களை கண்டறிந்து வரைந்து காட்டினார். அண்டவெளியில் பூகோளம் நடுவில் இல்லை, சூரியனை தான் பூகோளம் சுற்றி வருகிறது என்று ஆணித்தரமாக கருத்துக்களை வைத்தார். அவரது கருத்துக்களை கத்தோலிக்க திருச்சபை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னாளில் கத்தோலிக்க திருச்சபை மன்னிப்பு கோரியது என்பது தனிக்கதை. பின் அறிவியல் வானியல் ஆய்வுகளின் தந்தை என்று கலிலியோ அறியப்பட்டார்.
புதிய அறிவியல் வளர்ச்சியின் காலம் 18 -ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதன் விளைவாக அந்நூற்றாண்ணிடின் இறுதியில் தொழிற்புரட்சி ஏற்பட காரணமாக அமைந்தது. 19 -ஆம் நூற்றாண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடக்ககால வளர்ச்சி தொழிற்புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. சில ஐரோப்பிய நாடுகளில் பொறியியல் அறிஞர்கள் வானூர்தி இயந்திரம் படைப்பில் கவனம் செலுத்தினார்கள்.
1900 ஆண்டின் தொடக்கத்தில் ரைட் சகோதரர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய இயந்திர வடிவமைப்பு பறக்கும் திறனை பெற்றது, பின்னாளில் அதுவே முதல் பறக்கும் வானூர்தி என்று வரலாற்றில் எழுதப்பட்டது.
அவர்களின் சிந்தனையில் உருவான இயந்திர வடிவமைப்பு வானூர்தி படைப்பிற்கு உந்துதலை கொடுத்தது. இறக்கைகள் கொண்ட தேவதூதர்கள் பற்றிய புனைவுகளை படித்த காலகட்டத்தில் மனிதனை பறக்க வைக்க 1903 -ஆம் ஆண்டில் அவர்கள் இருவரும் முதல் வானூர்தியை வானத்தில் பறக்க விட்டார்கள். அது மனித சிந்தனையில் உருவான அறிவியலின் அபார வெற்றி.
இன்று நாம் உலகம் முழுவதும் குறைந்த நேரத்தில் எளிதாக பயணம் மேற்கொள்ள வானூர்தியின் சேவை இன்றியமையாததாக உள்ளது. நாளுக்கு நாள் வானூர்தியின் வடிவமைப்பில் மாற்றங்கள் காண்கிறோம்.
20 ஆம் நூற்றாண்டை தொழிற்புரட்சியின் 2.0 என்று அழைத்தால் அது மிகையாகாது. மாபெரும் தொழிற்சாலைகள், இருப்பூர்தி சேவைகள், வாகன உற்பத்திகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
இதே நூற்றாண்டில் தான் விண்வெளி துறையிலும் மனிதர்கள் கால்பதிக்கத் தொடங்கினார்கள்.
விண்வெளித் துறையில் 20 -ஆம் நூற்றாண்டு என்பது விண்வெளியின் தொடக்ககால நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
முதன் முதலில் விண்வெளி துறையில் கால்பதித்தது சோவியத் ஒன்றியத்தின் அரசு. சோவியத் ஒன்றியம் விண்வெளி ஆய்வுக்கு தனியே துறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவும் விண்வெளி துறைக்கான தனித் துறையை உருவாக்கி பல ஆய்வுகள் மேற்கொள்ள தொடங்கினார்கள்.
அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் விண்வெளி துறையில் கோலோச்சிய காலத்தில் அந்நாடுகள் மாறி மாறி வானில் விண்கலம் ஏவி செயற்கை கோள்களை நிறுத்தவும் செய்தார்கள். விண்வெளியில் பிற கோள்களை ஆய்வு செய்த நேரத்தில் இந்தியாவும் தனக்கென்று விண்வெளித் துறையை உருவாக்கியது அதில் போதிய வெற்றியையும் பெற்றது.
1960 -களுக்குப் பிறகு அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் தனக்கென்று ஓர் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கினார்கள். விண்வெளியை ஆய்வு செய்ய புவியீர்ப்பு விசை இல்லாத சுற்றுவட்டப் பாதையில் பன்னாட்டு விண்வெளி (International Space Station) நிலையம் அமைத்தார்கள். தொடர்ச்சியாக விண்கலம் மூலம் விண்வெளி அறிஞர்களை அனுப்பி சோதனைகள் செய்தார்கள். ஆய்வுகள் முடிந்ததும் மீண்டும் விண்வெளி அறிஞர்கள் பூகோளம் திரும்பினார்கள். இவ்வாறான விண்வெளி போக்குவரத்து தொடர்ச்சியாக நடந்து கொண்டிருந்தது.
விண்வெளி ஆய்வின் அடுத்த கட்டமாக நிலவின் மேற்பரப்பில் மனிதர்களை கால் பதிக்க செய்தது அமெரிக்கா. தனது கொடியை பறக்கவிட்டு புகைப்படங்கள் எடுத்தது.
ஒருபுறம் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் நிலவில் யார் ஆதிக்கத்தை செலுத்துவது என்று போட்டி போடத் தொடங்கினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
நிலவை கவிதை வரிகளால் பிடிக்கும் மற்றோர் போட்டி
நம் கவிஞர்கள் சிந்தனையில் ஓடியது என்றால் அதற்கு நம்மிடம் எடுத்துக்காட்டுகள் உள்ளன.
"அந்த நிலாவத் தான் நான்
கையில பிடிச்சேன்"
என்று தொடங்கிய வரிகள்
"அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்"
என்று அறிவிலை கவிதையில் கொண்டு வந்தார் கவிப்பேரரசு.
விண்வெளித் துறையின் 2.0;
இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு காலத்தை வாழ்ந்து கடந்து வந்திருக்கிறோம். பல துறைகளில் பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அது விண்வெளி துறையிலும் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள நாசா வடிவமைத்து செயல்படுத்திய விண்கல வானூர்தியான (Space Shuttle) - Enterprise, Endeavor, Discovery, Challenger, Atlantis, Columbia போன்றவைகள் மாறி மாறி விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வந்திருக்கிறது. முறையே அனைத்து பயணங்களும் வெற்றியுடன் முடிவடையவில்லை.
2003 சனவரி 16 ஆம் நாள் STS-107 என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு பயணத்தில் இந்திய குடும்ப வழி வந்த விண்வெளி அறிஞர் (Astronaut) கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்ல Space Shuttle Columbia -ல் பீறிட்டுக் கொண்டு விண்ணை நோக்கி ஏவப்பட்டது. முறையே STS -107 என்பது நாசாவின் 113 -ஆவது Space Shuttle program ஆகும், அதோடு இதே விண்கல வானூர்தியின் (Space Shuttle Orbiter Flight) 28 ஆவது பயணம் ஆகும்.
பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 16 நாட்கள் தங்கியிருந்து சோதனைகள் மேற்கொண்டார்கள். திட்டமிட்டபடி பிப்ரவரி முதலாம் நாள் பூமியின் நிலப்பரப்பில் விண்கல வானூர்தி தரையிறங்க பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து பயணம் தொடங்கியது. தரையில் இறங்க வெறும் 16 நிமிடங்கள் மீதி இருந்த நேரத்தில் டெக்சாஸ் - லூசியானா வான் பரப்பில் அது வெடித்துச் சிதறியது.
அந்த நிகழ்வு உலகையே உலுக்கியது. வெடித்துச் சிதறிய பாகங்களை பல மாதங்களாக தேடப்பட்டு அதில் சில சிதைந்த பாகங்கள் மட்டுமே கிடைத்தது.
நாசா இதற்கென தனி விசாரணை ஆணையம் அமைத்து எங்கே தவறு நிகழ்ந்தது என்பதை அறிய முழுவீச்சில் இறங்கியது.
விபத்து நடந்து இரண்டாண்டுகளுக்கு மேலாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் எந்த ஆய்வுகளையும் செய்யவில்லை. சரியாக 29 மாதங்கள் கடந்த பிறகு மீண்டும் மனிதர்களை ஏற்றிச் செல்லும் முடிவினை எடுத்தது நாசா. 2005 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் நாள் STS-114 என்றழைக்கப்பட்ட வரிசையில் Space Shuttle Discovery மூலம் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள். வெற்றிகரமாக மீண்டும் தரையில் வந்து இறங்கினார்கள்.
ஆனால் மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி (Space Shuttle Orbiter Flight) சேவையை விரைவில் நிறுத்த முடிவு செய்திருந்தது நாசா. அதற்கு சரியான நேரமாக 2011 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது.
STS-135 என்று அழைக்கப்பட்ட விண்வெளி பயணத் திட்டத்தில் Space Shuttle Atlantis விண்கல வானூர்தி தனது இறுதி பயணத்தை 2011 சூலை 8 ஆம் நாள் மேற்கொண்டது. முறையே இதிலும் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு சென்று 12 நாட்கள் ஆய்வுகள் மேற்கொண்டு சூலை 21 ஆம் நாள் நிலப்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதுவே இத்திட்டத்தின் கடைசி விண்கல வானூர்தி என்று அருங்காட்சியகத்தில் அதனை காட்சிப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.
வணிக விண்வெளி போக்குவரத்தை ஊக்குவித்த நாசா
மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கல வானூர்தி திட்டத்தை நாசா நிறுத்தி இருந்தாலும் நாசாவின் விண்வெளி அறிஞர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் Soyuz Capsule உதவியுடன் அங்கு சென்று கொண்டிருந்தார்கள். இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவினாலும் விண்வெளி துறையில் அறிவியல் ஆய்வுகளில் ஒருவருக்கொருவர் உதவினார்கள் என்பது தான் உண்மை.
ஆனால் ரஷ்யா உதவியுடன் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்க விண்வெளி அறிஞர்களை செலுத்துவதில் அமெரிக்காவுக்கு உடன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தான் நாசா தனியார் வாடகை விண்கல சேவையை அமெரிக்காவில் தொடங்க திட்டம் தீட்டியது.
2010 -ஆம் ஆண்டே தனியார் விண்வெளி விண்கல வானூர்தி திட்டத்தை ஊக்குவிக்க பல மில்லியன் டாலர்களை செலவிட்ட இருக்கிறது . Commercial Crew Program என்ற பெயரில் அந்த திட்டம் அமைக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் நிதியுதவி பெற்று பங்கெடுத்தது. அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களை ஏற்றிச் செல்லவும் எதிர்காலத்தில் மனிதர்களை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பி வருதல் என்பதே அத் திட்டத்தின் நோக்கம். இதில் Blue Origin, Boeing, Paragon Space Development Corporation, Sierra Nevada Corporation, and United Launch Alliance இந் நிறுவனங்கள் பங்கெடுத்தன.
திரைப்படங்களில் இரண்டாம் பாதியில் புதிய நாயகன் உருவாகுவது போல அமெரிக்க விண்வெளி துறையில் புதிய நாயகனாக ஈலான் மாஸ்க் பிறந்து வந்தார். சொல்லப்போனால் நாசா அவரது நிறுவனத்தை ஊக்கப்படுத்தியது.
அமெரிக்காவில் தனியார் விண்கலம் ஏவுதல் முறை தொடங்கப்பட்டது. பல நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து முயற்சிகள் மேற்கொண்டனர்.
விண்வெளி துறையில் தனிப்பட்ட விருப்பங்கள் கொண்டிருந்த ஈலான் மாஸ்க் 2002ல் தொடங்கிய Space Exploration Technologies Corporation சுருக்கமாக 'SpaceX' நிறுவனம் விண்வெளிக்கு விண்கலம் ஏவுதல் மூலம் செயற்கைக்கோள்களை நிறுத்தும் வேலைகளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தது. அப்போதே செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியிருப்பு அமைப்பது பற்றி ஈலான் மாஸ்க் பேசியிருக்கிறார்.
ஒரே பாடலில் உச்சகட்ட வெற்றி என்பது போல ஈலான் மாஸ்க் அண்ணாச்சிக்கு எட்டப்படவில்லை. 2008 -ல் SpaceX நிறுவனம் மூடப்படும் நிலைக்கு போனது. அதாவது ஆய்வுகளுக்கு நிதிப் பற்றாகுறை ஏற்பட்டது. பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கருவிகள் கொண்டு செல்ல விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அவசியம் என நாசா அப்போது $1.6 பில்லியன் டாலர்களுக்கு Spacex உடன் ஒப்பந்தம் செய்து நிதியுதவி செய்ததும் ஒரு புதிய தொடக்கம்.
2010 ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் SpaceX உருவாக்கிய Falcon - 9 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சோதனைக்காக ஏவப்பட்ட முதல் விண்கலம் வெற்றிகரமாக பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது.
"We got our falcon 9 rocket to orbit" - Elon Musk. தங்களின் வெற்றியை அந்நாளில் டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார் ஈலான் மாஸ்க்.
2012 -ல் Falcon 9 விண்கலம் ஏந்திச் சென்ற சோதனை Dragon Capsule வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தொட்டு நிலை நிறுத்தப்பட்டது.
இதே ஆண்டின் இறுதியில் நாசாவின் விண்வெளி கருவிகளை SpaceX விண்கலம் மூலம் அங்கு (Cargo Delivery) கொண்டு சென்றார்கள். 2013 மார்ச் 26 -ல் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து சுமார் 600 கிலோ கிராம் எடையுள்ள பல்வேறு கருவிகளை சுமந்து கலிபோர்னியா அருகே பசுபிக் பெருங்கடலில் (Splashdown) இறங்கியது Dragon Capsule.
இதற்கு பிறகு SpaceX தொழில்நுட்ப காட்டில் மட்டும் தங்க மழை பெய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. (https://www.spacex.com)
பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு போயிங் நிறுவனமும் விண்வெளி பயணம் மற்றும் சேவைகள் வழங்க துடிப்புடன் செயல்பட்டது. இதற்காக போயிங் நிறுவனத்திற்கு நாசா 2014ல் $2.6 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகள் சோதனைகளுக்கு பிறகு 2020 டிசம்பர் மாதத்தில் தான் Boeing's Starliner Capsule விண்ணில் ஏவ சரியான நேரம் கிடைத்தது. டிசம்பர் 20 ஆம் நாள் Starliner Capsule வெற்றிகரமாக United Launch Alliance -ன் விண்கலத்தில் பொருத்தி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏனோ அது பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு செல்லவில்லை. இருந்தாலும் அது போயிங் நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்பட்டது. இரண்டு நாட்களில் கழித்து மீண்டும் Starliner Capsule அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில பாலைவனத்தில் அது தரையிறங்கியது.
இதற்கிடையில் SpaceX நிறுவனத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது 2020 ஆம் ஆண்டு மே மாதம் 30 அன்று அமெரிக்க விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பொருத்தப்பட்ட Falcon 9 விண்கலம் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது. 19 மணி நேர பயணத்திற்குப் பிறகு இருவரும் வெற்றிகரமாக பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்குச் சென்றார்கள். அன்றைய நாள் அமெரிக்கா நாடே பெருமிதம் கொண்டது.
இதே ஆண்டின் இறுதியில் நவம்பர் 15 ஆம் நாளில் மேலும் நான்கு விண்வெளி அறிஞர்களை Crew Dragon Capsule பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது அவர்கள் ஆறு மாத காலம் அங்கு பணியாற்றினார்கள். மீண்டும் அதே Crew 2 Dragon Capsule - வழியே ஜப்பானிய விண்வெளி அறிஞர் உட்பட நான்கு அறிஞர்களை 2021, மே 2 ஆம் நாள் இரவு 8;35 க்கு கிளம்பியது. சுமார் ஏழு மணி நேர பயணத்திற்கு பிறகு அது மெக்சிகோ வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாமல் விழுந்தது (Splashdown). (குறிப்பு - Gulf of Mexico is now called Gulf of America)
SpaceX நிறுவனம் ஈலான் மாஸ்க் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்தது. நாசாவின் பிற தேவைகளை அது முழுமை செய்வதாக அமைந்தது.
மற்றொரு புறம் Boeing நிறுவனத்தின் Starliner Capsule பல சோதனைகளுக்கு பிறகு இந்திய வழி வந்த விண்வெளி அறிஞர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு அமெரிக்கா விண்வெளி அறிஞர் Butch Wilmore இருவரையும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள முழு அளவில் தேர்ந்திருந்தது. சொல்லப் போனால் SpaceX என்ற ஒற்றை நிறுவனத்தை மட்டும் நம்பி இருக்கத் தேவையில்லை, இன்னொரு நிறுவனமும் வேண்டும் என்பதற்காக தான் இரு அறிஞர்களையும் மேலே அனுப்ப திட்டம் தீட்டியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2024 சூன் 5 ஆம் நாள் இருவரும் விண்ணை நோக்கி சென்றனர். இந்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அவர்கள் இருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் வந்தடைந்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் அதே Starliner Capsule வழியே பூமிக்கு திருப்புவது தான் அவர்கள் திட்டம். ஆனால் Starliner Capsule ல் ஏற்பட்ட ஹீலியம் கசிவால் அவர்கள் திரும்புவது தாமதம் ஏற்பட்டது.
பல மாதங்கள் ஆகியும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எனினும் நாசா Starliner Capsule ஐ ஆளில்லாமல் பூமிக்கு திரும்ப கட்டளை பிறப்பித்தது. செப்டம்பர் 6ஆம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து ஆளில்லாமல் பூமிக்கு திரும்பியது Starliner.
அவர்கள் இருவரையும் மீண்டும் கொண்டு வர SpaceX நிறுவனத்தின் Dragon Capsule செலுத்தப்படும் என்றது நாசா. 2025 பிப்ரவரி மாதத்தில் அவர்கள் பயணம் மேற்கொள்வார்கள்.
2024ல் SpaceX நிறுவனம் மேலும் ஓர் புதிய அறிவியல் உச்சத்தை எட்டியது. இதுவரையில் விண்ணில் ஏவப்படும் விண்கலத்தின் சில பகுதிகள் (Super Heavy Booster) எல்லாம் ஒரு கட்டத்தில் எரிந்து ஒரு கட்டத்தில் சிதறி விழுந்து விடும். அதன் பாகங்கள் மறுபடியும் பயன்படுத்த முடியாது. இதனை முறியடித்து காட்டியது SpaceX.
2024 அக்டோபர் 13 ஆம் நாள் சோதனை வடிவில் Starship Vehicle விண்ணில் ஏவப்பட்டு அது மீண்டும் தான் ஏவிய இடத்திற்கு திரும்பியது. இந்த முயற்சி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
21 ஆம் நூற்றாண்டின் கால் நூற்றாண்டு வரை விண்வெளி துறையில் நிகழ்ந்த ஓர் புதிய முயற்சி நீண்டு கொண்டே போகிறது.
பூமியில் வாழும் மனிதர்களுக்கும் பிற கோள்களில் ஒருவேளை உயிர் வாழு வழி இருந்தால் அல்லது அங்கு மனிதர்கள் வாழ்ந்து வந்திருந்தால் அவர்களுக்கும் நமக்கும் இடையே இணைப்பு ஏற்படுத்துவது கவிதைகள் மட்டுமே. ஆம் கடந்த ஆண்டு நாசா விண்ணில் ஏவிய SpaceX Falcon விண்கலம் ஒன்று ஜூபிடர் கோளின் யுரோப்பா என்ற நிலவுக்கு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலவில் முழுவதும் பனி சூழ்ந்து இருக்கிறது. அதில் அமெரிக்க கவிஞர் (அமெரிக்க மெக்சிகர்) Ada Limon எழுதிய "In Praise Of Mystery" கவிதைகளை மடித்து உள்ளே வைத்திருக்கிறார்கள்.
Source: (https://www.npr.org/2024/10/13/nx-s1-5151788/spacex-starship-booster-caught-first-launch)
Space.com
21 நூற்றாண்டின் விண்வெளித் தொடர் தொடரும்.
- பாண்டி
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் வீரர்கள் பயணிக்கும்போது அவர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் ஆடைகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். அறிவியல் புனைகதையால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆடைகள் வரவுள்ள நிலவுப் பயணங்களில் நீண்ட விண்வெளி நடத்தங்களை மேற்கொள்ள வீரர்களுக்கு உதவும். டுயூன் (Dune) என்ற புனைவில் வரும் ஆடைகளின் (stillsuits) மாதிரியில் செயல்படும் இது சிறுநீரை சேகரிக்கிறது, தூய்மைப்படுத்துகிறது. ஐந்து நிமிடங்களில் வீரர்கள் நீரருந்தும் குழாய்க்கு குடிநீராக மாற்றி அனுப்புகிறது.
புதிய ஆடை
டுயூன் என்ற கற்பனை பிரபஞ்சத்தில் முழு உடலையும் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் வாழ இயலாத அங்கு இவ்வாடைகள் உடல் திரவங்களை சேகரித்து வடிகட்டி மறுசுழற்சி செய்து தருகிறது. இதில் இருந்து உள்ளுணர்வு பெற்றே இப்புதிய ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
The new spacesuit design (illustrated) that collects urine and recycles it into drinking water weighs around 8 kilograms and can purify half a liter of water in five minutes. Freman Space Team (illustration), NASA
பூமிக்கு வெளியில் இன்னொரு உலகில் வீரர்கள் வாழ பயிற்சி பெற உதவும் இவ்வாடைகள் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் வரவிருக்கும் நாசாவின் ஆர்ட்டிமிஸ் (Arttemis) திட்டத்தில் பயன்படுத்தப்படும் என்று இதன் வடிவமைப்பாளர்கள் நம்புகின்றனர். “ஒரு வெளிப்புற வடிகுழாய் அலகு முன்பின் இயங்கும் ஒரு ஆஸ்மாசிஸ் அலகுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய வகையில் நீரை இவ்வமைப்பு தொடர்ந்து விநியோகிக்கும். பல அடுக்கு பாதுகாப்பு செயல்முறைகளை உடைய இது வீரர்களின் நலனை உறுதி செய்கிறது” என்று வொயில் கார்னெல் மருத்துவம் (Weill Cornell Medicine) மற்றும் கார்னெல் பல்கலைக்கழக Cornell University) ஆய்வாளரும் ஆடையின் இணை வடிவமைப்பாளருமான சோபியா எட்லின் (Sofia Etlin) கூறுகிறார். நாசா நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆராயும் ஆர்ட்டிமிஸ் iii பயணத்தை 2026ல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அங்கிருந்து 2030ல் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பி ஆராய்வது இப்பயணத்தின் முக்கிய நோக்கம். பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) வீரர்களின் சிறுநீர், வியர்வை ஆகியவை மறுசுழற்சி செய்யப்படுகிறது. இது போன்ற ஒரு செயல்முறை வீரர்களுக்கு ஆய்வுப் பயணங்களின்போது அவசியம். இப்போது விண்வெளி வீரர்கள் தங்கள் ஆடையுடன் ஒரு லிட்டர் நீரை மட்டுமே எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இது 10 அல்லது அவசர சமயங்களில் 24 மணி நேரத்திற்கு நீளும் விண்வெளி நடத்தங்களில் (Space walk) போதுமானதாக இருக்காது. ஆனால் இந்த புதிய கருவி அடக்கமானது. விண்வெளி ஆடையில் பொருத்தப்பட்டு வீரர்கள் தங்கள் முதுகில் எடுத்துச் செல்லும் அளவுக்கு எடை குறைவானது. இப்போது உள்ள அதிகபட்ச கழிவு உறிஞ்சும் ஆடையில் (maximum absorbency garment (MAG) கழிவு மேலாண்மை செயல்முறையில் கழிவகற்ற பயன்படும் மிருதுவான, கெட்டியான அரைக்கச்சையில் பல குறைபாடுகள் உள்ளன.
இவை கசியக்கூடிய, வசதியற்ற, சுகாதாரமற்றவை என்று சொல்லப்படுகிறது. இதனால் வீரர்கள் விண்வெளி நடைக்கு முன்பு குறைந்த அளவே உணவையும் குடிநீரையும் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் இதனால் சிறுநீரகத் தொற்று (UTIs) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அரைக்கச்சையில் கசிவுகள் ஏற்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் கழிவாக வருவது சிறுநீரா அல்லது வியர்வையா என்று வீரர்களால் சொல்ல முடிவதில்லை.
ஆடையின் உள்ளமைப்பு
“புதிய ஆடைகள் வீரர்களுக்கு பயனுடையது” என்று ஆய்வுக்கட்டுரையின் மூத்த ஆசிரியரும் வொயில் கார்னெல் மருத்துவ அமைப்பின் பேராசிரியருமான கிறிஸ்ட்டோபர் மேசன் (Prof Christopher Mason) கூறுகிறார். புதிய ஆடையில் பிறப்புறுப்பை சுற்றி அணியும் வகையில் சிலிகானால் ஆன ஒரு கோப்பை உள்ளது. இதன் வடிவமும் அளவும் ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இந்த அமைப்பு பல அடுக்குகளுடன் கூடிய நெகிழ்வான துணியால் செய்யப்பட்டது.
சிலிகன் கோப்பை ஈரத்தன்மையால் தூண்டப்படும் ஒரு வெற்றிட பம்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் சிறுநீர் கழிக்க ஆரம்பித்தவுடன் கருவி தானியங்கி முறையில் செயல்படத் தொடங்குகிறது. சிறுநீர் சேகரிக்கப்பட்டு வடிகட்டும் அமைப்புக்குச் சென்று அங்கு 87% செயல்திறனுள்ள தூய நீராக மாற்றப்படுகிறது. இதில் ஒரு சவ்வூடு பரவல் முறையில் (Osmosis) இயங்கும் கருவி சிறுநீரில் இருந்து நீரைப் பிரித்தெடுக்கிறது.
நீரில் இருந்து உப்பை பிரித்தெடுக்க ஒரு பம்ப் உள்ளது. 500 மில்லி லிட்டர் நீரை சேகரிக்க, சுத்தப்படுத்த ஐந்து நிமிடங்களே ஆகிறது. நடைமுறைக்கு வரும்போது தூய்மையாக்கப்பட்ட இந்நீர் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும் எலக்ட்ரோலைட்டுகளுடன் சேர்த்து வீரர்களுக்கு ஆற்றல் தரும் ஒரு பானமாக கொடுக்கலாம். இந்த கருவி 38/23/23 செண்டி மீட்டர் அளவுள்ளது. இதன் எடை சுமார் எட்டு கிலோகிராம்.
இக்கருவி விண்வெளி ஆடையுடன் எடுத்துச் செல்ல அடக்கமானது, லேசானது. வரும் இலையுதிர் காலத்தில் நியூயார்க்கில் நூறு தன்னார்வலர்கள் மூலம் விண்வெளியில் முக்கிய அம்சமான மைக்ரோ ஈர்ப்புவிசை நிலையில் இதன் செயல்திறன் பரிசோதிக்கப்படும். விண்வெளிப் பயனங்களில் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு இந்த சோதனைகள் கருவியின் செயல்திறனை உறுதி செய்யும். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை விண்வெளி தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் (Frontiers in Space Technology) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
இந்த புதிய உள்ளாடைகள் விரைவில் நிலவுக்குச் செல்லும் வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் நாளை விண்ணில் ஒரு கோளில் குடியேறுவதைக் கனவு காணும் மனித குலத்திற்குப் பெரிதும் உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
&
https://www.sciencenews.org/article/dune-spacesuit-astronaut-pee-drinking-water
&
https://timesofindia.indiatimes.com/home/science/spacesuit-designed-for-nasas-artemis-program-can-convert-urine-into-drinkable-water-in-5-minutes/articleshow/111685425.cms
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
உலோகங்களை உருக்கும் அளவு வெப்பம், நச்சுத் தன்மையுடைய, போர்வை போல மூடியிருக்கும் வளி மண்டலத்தைக் கொண்ட வெள்ளி கோள், சூரிய மண்டலத்தில் உயிர்கள் வாழ இயலாத கோள்களின் பட்டியலில் உள்ளது. ஆனால் விண்வெளியியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்த இரண்டு வாயுக்கள் அதன் மேகங்களில் அலைந்து திரிவது அங்கு உயிரின் வடிவங்கள் வாழலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.வெள்ளியின் மேகங்களில் பாஸ்பின்
இங்கிலாந்து ஹல் (Hull) என்ற இடத்தில் நடந்த தேசிய விண்வெளி அறிவியல் கூட்டத்தில் (national astronomy meeting) சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் வெள்ளியில் எரிச்சலை ஏற்படுத்தும் வாசனை உடைய பாஸ்பின் (phosphine) வாயு இருப்பதை வலுவான ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது. இந்த வாயுவின் இருப்பு அதிக சர்ச்சைகளுக்கு உள்ளானது.
பூமியில் உயிரியல் செயல்பாடுகள், தொழில்துறை செயல்முறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அமோனியா வாயு அங்கு இருப்பதை மற்றொரு ஆய்வுக் குழுவினர் கண்டுபிடித்தனர். பாஸ்பின் வாயுவின் இருப்பை வைத்து வெள்ளியில் நாம் முன்பே அறிந்த வளி மண்டலத்தை, புவியின் செயல்கள் போல அங்கும் நிகழக்கூடிய செயல்களைப் பற்றி நம்மால் விவரிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாகக் கருதப்படும் இந்த வாயுக்கள் வெள்ளியில் இருப்பதை வைத்து நாம் அதை அந்நிய கிரக வாசத்திற்குத் தகுதியான கோளாகக் கருத முடியாது. ஆனால் இந்த உற்றுநோக்கல்கள் அந்தக் கோள் மீதான ஆர்வத்தை தீவிரப்படுத்தும். அதன் வளி மண்டலத்தின் ஒரு சில இடங்களில் சமீப கடந்த காலத்தில் தற்காலிகமாக உயிர்கள் உருவாகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
“வெள்ளிக் கோள் வெதுவெதுப்பும் ஈரப்பதமும் உள்ள சூழ்நிலையைப் பெற்றிருந்தால் அதன் ஆரோக்கியமான பகுதிகளில் மட்டும் உயிர்கள் தோன்றியிருக்கலாம். இதை வெள்ளியின் மேகங்கள் எடுத்துக் காட்டுகின்றன” என்று இலண்டன் இம்பீரியல் கல்லூரி விண்வெளி இயற்பியலாளர் டாக்டர் டேவ் க்ளமெண்ட்ஸ் (Dr Dave Clements) கூறுகிறார். ஈயம், துத்தநாகம் போன்ற உலோகங்களை உருக்கும் அளவு வெள்ளியின் தரை மேற்பரப்பு 450 டிகிரி செல்சியர்ஸ் வெப்பத்தைக் கொண்டுள்ளது.
இதன் வளி மண்டலத்தின் அழுத்தம், பூமியின் அழுத்தத்தை விட 90 மடங்கு அதிகம். அங்கு சல்ஃபுரிக் அமில மேகங்கள் காணப்படுகின்றன. ஆனால் தரைப்பரப்பிற்கு 50 கிலோமீட்டர்/31 மைல் தொலைவிற்கு மேற்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் பூமியில் இருப்பது போல உள்ளன. இந்தச் சூழலில் மிகக் கடினமான நுண்ணுயிரிகள் உயிர் வாழ முடியும். பூமியில் பாஸ்பின் வாயு ஆக்சிஜனற்ற சூழ்நிலையில் பேட்ஜர் கட் (badger gut) போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமோனியா
எரிமலை வெடிப்புகள் போன்ற நிகழ்வுகளால் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளமாக கருதப்படும் இந்த வாயு போதுமான அளவு உற்பத்தியாவதில்லை. 2020ல் பாஸ்பின் வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் அது உறுதி செய்யப்படாததால் இது தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இப்போது கோளின் பகல் இரவு சுழற்சியின் மூலம் பாஸ்பின் வாயு இருப்பதை ஆய்வாளர்கள் ஹவாய் ஜேம்ஸ் க்ளார்க் மேக்ஸ்வெல் விண்வெளி தொலைநோக்கியைப் (James Clerk Maxwell telescope (JCMT)) பயன்படுத்தி உறுதி செய்துள்ளனர். இதனால் இந்த சச்சரவுகள் முடிவிற்கு வந்தன.
“வெள்ளியின் வளி மண்டலம் சூரிய ஒளியின் அதி தீவிர வெப்பத்தால் குளிப்பாட்டப்படும்போது பாஸ்பின் வாயு அழிக்கப்படுகிறது. இந்த வாயு வெள்ளியில் உள்ளது என்பதை மட்டுமே இப்போது நம்மால் கூறமுடியும். இந்த வாயுவை உற்பத்தி செய்வது எது என்று தெரியவில்லை. இதன் பின் உள்ள வேதியியலையும் உயிரின் தோற்றத்தையும் நாம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று க்ளமெண்ட்ஸ் கூறுகிறார்.
கார்டிஃப் (Cardiff) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விண்வெளியியலாளர் பேராசிரியர் ஜேன் க்ரீவ்ஸ் (Prof Jane Greaves) தங்கள் ஆய்வுக் குழுவின் முதன்மை உற்றுநோக்கல்களை கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
க்ரீன் பேங்க் (Green bank) தொலைநோக்கியைப் பயன்படுத்தி ஆராய்ந்தபோது வெள்ளியில் அமோனியா இருப்பதை இந்த ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். பூமியில் அமோனியா தொழில்துறை நடவடிக்கைகள் அல்லது நைட்ரஜனை வேதிவினை புரிந்து அமோனியாவாக மாற்றும் பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
“இது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த மாயாஜால நுண்ணுயிரிகள் வெள்ளியில் வாழ்வதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. அவை அங்கு இப்போது வாழ்கின்றனவா என்பதும் நமக்கு உறுதியாகத் தெரியாது” என்று ஜேன் கூறுகிறார்.
“மூலக்கூறுகள் இணைந்து உயிரைத் தோற்றுவிக்க உதவும் ஆரோக்கியமான சமிஞ்ஞைகள் வெள்ளியில் உள்ளன என்பதை பொதுவான சான்றுகளுடன் இந்த இரண்டு ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. இந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்யப்பட்டால் இது பற்றி வருங்காலத்தில் மேலும் ஆய்வுகள் நடைபெறும்.பாஸ்பின் மற்றும் அமோனியா வாயுக்கள் உயிர்களின் தோற்றத்திற்கு ஆரோக்கியமான முறையில் உதவும். இதன் மூலம் புதிய தகவல்கள் கிடைக்கும். இது எல்லாமே நேர்மறை நம்பிக்கையின் அறிகுறிகளே” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி இயற்பியலாளர் பேராசிரியர் நிக்கு மாட்யுஸஃபன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார்.
“இந்த கண்டுபிடிப்புகள் பரவசப்படுத்துபவை. ஆனால் இது பற்றி மேலும் தீவிர ஆய்வுகள் நடைபெற வேண்டும். இந்த கண்டுபிடிப்புகள் வெள்ளியில் உயிர்கள் வாழ்வதற்கான அடையாளங்களை அல்லது இது வரை அறியப்படாத வேதியியல் செயல்முறைகளை எடுத்துக் காட்டுகின்றன” என்று ராயல் விண்வெளியியல் சங்கத்தின் துணை செயல் இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாசி (Dr Robert Massey) கூறுகிறார்.
இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டும் உண்மைகள் வரும் நாட்களில் நிரூபிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
** ** **
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
விண்வெளி வரலாற்றில் மிகப் புதுமையான, வழக்கத்திற்கு மாறான மரத்தாலான செயற்கைக்கோளை ஜப்பானிய ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். லிக்னோ செயற்கைக்கோள் விண்கலன் (LignoSat satellite) என்ற இந்த சிறிய செயற்கைக்கோள் மக்னோலியா (Magnolia) வகையைச் சேர்ந்த மரத்தால் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அமெரிக்க ஏவுவாகனத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ள இதன் நிலைத்தன்மையும், விரிசல்கள் ஏற்படாமல் இருக்கும் பண்பும் பன்னாட்டு விண்வெளி ஆய்வுநிலையத்தில் (ISS) பரிசோதித்து கண்டறியப்பட்டது.
எல்லா செயற்கைக்கோள்களும் இப்போது உலோகத்தால் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் இவற்றுக்கு மாற்றாக சூழலிற்கு நட்புடைய கலன்களை உருவாக்கும் நோக்கத்துடன் கயோட்டோ (Kyoto) பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமிட்டோமோ வனவியல் மர நிறுவனத்துடன் இணைந்து (Sumitomo Forestry) இந்தப் புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர்.
பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது இன்றுள்ள செயற்கைக்கோள்கள் அனைத்தும் எரிந்து நுண்ணிய அலுமினா துகள்களை உருவாக்குகின்றன. இத்துகள்கள் மேல் அடுக்கு வளிமண்டலத்தில் பல ஆண்டுகள் மிதக்கின்றன. “இந்தத் துகள்கள் பூமியின் சூழலை வெகுவாகப் பாதிக்கும்” என்று கயோட்டோ பல்கலைக்கழக விண்வெளி பொறியியலாளர் மற்றும் விண்வெளி வீரர் டக்கா டாய் (Takao Doi) சமீபத்தில் எச்சரித்தார்.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண கயோட்டோ ஆய்வாளர்கள் ஏவுதலின்போது ஏற்படும் கடுமையான மாற்றங்கள் பற்றியும் நீண்ட காலம் பூமியைச் சுற்றி வரும்போது மரத்தால் கட்டப்படும் செயற்கைக்கோள்கள் எவ்வாறு தாக்குபிடிக்கின்றன என்பதைப் பற்றியும் கயோட்டோ ஆய்வாளர்கள் பல வகை மரங்களை பயன்படுத்தி பரிசோதித்தனர்.
விண்வெளியில் இருப்பது போன்ற சூழ்நிலை செயற்கையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு முதல் பரிசோதனைகள் நடந்தபோது மரத்தின் நிறையில் வேறுபாடு ஏற்படவில்லை. மக்குதல் அல்லது சேதம் ஏற்படவில்லை.
காஃபி கோப்பையின் அளவில்
“விண்வெளிச் சூழலை சமாளிக்கும் மரத்தின் திறன் திகைக்க வைக்கிறது” என்று திட்டத்தின் தலைவர் கோஜி முராட்டா (Koji Murata) கூறுகிறார். சோதனைகள் முடிந்த பின் மரத்தின் மாதிரிகள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டு ஏறக்குறைய ஓராண்டு காலம் வரை அங்கு வைத்து பரிசோதிக்கப்பட்டன. பிறகு பூமிக்குக் கொண்டு வந்து ஆராயப்பட்டபோது விண்வெளியில் ஆக்சிஜன் இல்லை, விண்வெளியில் அவற்றை அழுகச் செய்ய எந்த உயிரினமும் இல்லை என்பதால் அவற்றில் மிகச் சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்தது.
விண்வெளியில் செயல்படும்விதம் போன்ற பல சோதனைகள் ஜப்பானிய செர்ரி மரம் உள்ளிட்ட பல வகை மரங்களில் நடத்தப்பட்டபோது மக்னோலியா மரமே வலுவுடையது என்று கண்டறியப்பட்டது. செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வடிவம் மாறுவதை ஆராய்வது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு திசையில் மரம் உறுதியுடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்கும் என்றாலும், மற்றொரு திசையில் வடிவ மாற்றத்தை அடைந்து விரிசல்கள் தோன்றும் வாய்ப்பு உள்ளது என்பதால் இத்தகைய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
விண்வெளி வரலாற்றில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மர செயற்கைக்கோளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் ஏவு வாகனம் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்த செயற்கைக்கோள் பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விரைவில் செல்லவிருக்கும் ஆர்பிட்டல் சயன்ஸஸ் சிக்னஸ் விநியோக விண்வெளிக் கப்பல் (Orbital Sciences Cygnus supply ship) அல்லது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் டிராகன் (Dragon) வாகனத்தின் மூலம் அனுப்பப்படலாம்.
ஒரு காஃபி கோப்பையின் அளவு உள்ள இந்த செயற்கைக்கோள் விண்வெளியில் ஆறு மாதங்கள் வரை செயல்படும். பிறகு மேலடுக்கு வளிமண்டலம் வழியாக பூமியை நோக்கி பயணம் செய்யும். இந்தத் திட்டம் வெற்றி பெறும்போது பல புதிய செயற்கைக்கோள்களை உருவாக்க ஒரு முக்கிய கட்டுமானப் பொருளாக மரம் பயன்படும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புதிய செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சூழல் நட்புடைய செயற்கைக்கோள்
திரும்பி வரும்போது பூமியின் மேலடுக்கு வளிமண்டலத்தில் இப்போது உள்ள செயற்கைக்கோள்கள் வெளிவிடும் அலுமினியத் துகள்கள் ஏற்படுத்தும் படிவுகள் வருங்காலத்தில் ஒரு முக்கிய சூழல் பிரச்சனையாக மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். இந்த அலுமினா படிவுகளால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பூமியைக் காக்கும் ஓசோன் அடுக்கில் ஓசோன் வாயுவின் அளவு குறையும். வளிமண்டலத்தின் வழியாக பூமிக்கு வரும் சூரியனின் கதிரியக்கக் கதிர்களின் அளவு அதிகமாகும்போது பூமியில் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும்.
ஆனால் லிக்னோ சாட் போன்ற மரத்தால் செய்யப்பட்ட செயற்கைக்கோள்கள் அவற்றின் திட்ட இறுதியில் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது மக்கக்கூடிய மிக நுண்ணிய சாம்பல் தூளை மட்டுமே உருவாக்கும் என்பதால் இந்த பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. மனிதச் செயல்பாடுகளால் குப்பை மேடாகி வரும் விண்வெளியின் சூழலைக் காக்க இந்த புதிய மரச் செயற்கைக்கோள்கள் பெருமளவில் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்
- இரும்பு நிலா
- உயிரின் தோற்றத்தை அறிய உதவுமா பெனு?
- நிலவின் கண்ணாடி மணிகளில் நீர்த்திவலைகள்
- பூமிக்கு வந்த 'பெனு'