கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
ஆழ் விண்வெளிப் பரப்பில் கொதிக்கும் கடலுடன் உள்ள நீரின் உலகை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி (James Webb space telescope (JWST)) கண்டறிந்துள்ள இந்தக் கோளின் மேற்பரப்பின் நிலை பற்றி ஆய்வாளர்களிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. முழுமையாக நீரால் சூழப்பட்ட இந்த தொலைதூர உலகம் உற்றுநோக்கி அறியப்பட்டது.
உயிர்கள் வாழ உதவும் அடையாளங்களான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடுடன் உள்ள வளி மண்டலம் மற்றும் நீராவி இந்தக் கோளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொலைதூரக் கோளின் சுற்றளவு பூமியைப் போல இரண்டு மடங்கு. இது 70 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த வேதிப்பொருட்களின் கலவை நீருள்ள உலகால் சூழப்பட்டுள்ளது. இது ஹைடிரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்றாலும் இந்த கடற்பரப்பு மென்மையானதாக இருக்காது என்று கருதப்படுகிறது. “மேல்நோக்கிய அமைப்புடன் உள்ள இந்த கடல் நூறு டிகிரி செல்சியர்ஸ் அல்லது அதற்கும் மேல் உள்ள வெப்பநிலையைக் கொண்டதாக இருக்கலாம்” என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் நிக்கூ மதுசூதன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார். மிக அதிக வளி மண்டல அழுத்தத்தில் உயர்ந்த வெப்பநிலையுடன் உள்ள இந்த கடல் நீர் திரவ நிலையில் இருக்கலாம்.
ஆனால் இங்கு உயிர்கள் வாழ இயலுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கடிதங்கள் (Astronomy and Astrophysics Letters) என்ற இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் டி ஓ ஐ 270 டி (TOI-270 D) என்று பெயரிடப்பட்டுள்ள இதே கோளை ஆராய்ந்த கனடா ஆய்வுக் குழுவினர் இந்த கருத்தை மறுத்துள்ளனர். அவர்கள் அங்கு இதே வேதிப்பொருட்களின் கலவையைக் கண்டறிந்தனர்.
ஆனால் இந்தக் கோள் மிக வெப்பமான கடலைப் பெற்றிருப்பதால் இங்கு நீர் திரவமாக இருக்க முடியாது. மாறாக இந்த கடலில் பாறைகள் நிறைந்த அடிப்பகுதியும் அதற்கு மேல் நம்ப முடியாத அளவு அடர்த்தி மிகுந்த ஹைடிரஜன், நீராவி உள்ள மேற்பரப்புடன் கூடியதாக இருக்கலாம் என்று அந்த ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர். இதில் எந்த கருத்து வெற்றி பெற்றாலும் நாசாவின் தொலைநோக்கி மூலம் நம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் உள்ள கோள்களின் தன்மை பற்றிய வியப்பூட்டும் தகவலை இக்கண்டுபிடிப்பு தந்துள்ளது என்பது உறுதி.
இந்த தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு நட்சத்திரத்தின் ஒளியை பிடித்து அனுப்பியது. இந்த ஒளி சுழலும் கோள்களின் வளி மண்டலங்கள் வழியாக பயணிக்கும்போது வடிகட்டப்பட்டது. இது வேதிப்பொருட்களின் கலவையில் உள்ள தனிமங்கள் பற்றிய விரிவான விவரங்களை அறிய உதவியது. இதைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிர்கள் இங்கு வாழ முடியுமா என்பது பற்றியும் கோளின் தரைப்பரப்பின் படத்தையும் உருவாக்க முடியும். அமோனியா வாயு இல்லாததால் இங்கு கடல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடல் சூழ் உலகம்
வழக்கமாக ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்தில் அமோனியா இயல்பாக உருவாகும் ஒரு வேதிப்பொருள் என்று அடிப்படை அறிவியல் கூறுகிறது. ஆனால் இந்த வாயு நீரில் அதிக அளவு கரையக்கூடியது. அதனால் இந்த வளி மண்டலத்திற்கு கீழ் கடல் இருந்தால் அமோனியா அதில் கரைந்திருக்கலாம். இந்தக் கோள் ஒரு கடல் சூழ் உலகம் (hycean world) என்ற கருத்தும் உள்ளது. ஹைசியன் உலகம் என்ற சொல் ஹைடிரஜன் செறிந்த நீருள்ள கடலுடன் கூடிய வளி மண்டலத்தைக் குறிக்கிறது.
அதனால் இங்குள்ள நிலை பூமியில் இருந்து மிக வேறானது. இந்தக் கோள் ஈர்ப்பு அலைகளால் தாய் விண்மீணால் ஈர்க்கப்பட்டுள்ளதால் இதன் ஒரு பக்கம் எப்போதும் தாய் நட்சத்திரத்தை நோக்கியும் இன்னொரு பக்கம் எப்போதும் முடிவில்லாத இருளிலும் மூழ்கியுள்ளது. இது இங்கு அதிதீவிர வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் இங்கு மிக உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது.
இரவு நேரம் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இங்கு நிலவலாம். ஆனால் பூமியின் வளி மண்டல அழுத்தத்தைப் போல ஆயிரம் மடங்குக்கும் அதிகமான அழுத்தம் இங்கு உள்ளது. இதனால் கடலை விட்டு நீராவி வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள கடல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழமுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாறைப் பரப்புகளுடன் உள்ள மேல் தோடு பகுதிக்கு மேல் அமைந்துள்ள கடலின் அடித்தட்டு மிகுந்த அழுத்தமுடையதாக காணப்படுகிறது.
“நீராவி இருப்பதாலும் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதாலும் இங்கு நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நீருள்ள கடலுக்கான வாய்ப்பு இங்கு இல்லை. கடலின் தரைப்பரப்பில் வெப்பநிலை 4,000 டிகிரி செல்சியர்ஸ் அளவுக்கு இருக்கலாம். அதனால் நீர் இங்கு மிக மோசமான நிலையில் காணப்படும். அதனால் திரவ மற்றும் வாயு நிலையை வேறுபடுத்தி காணும் வாய்ப்புகள் மிக மங்கலாக உள்ளன. இங்குள்ள கடல் அடர்த்தியான, சூடான நிலையில் காணப்படலாம்” என்று இதே கோளை கூடுதலாக ஆராய்ந்த கனடா மாண்ட்ரீல் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் பியெர்ன் பெனக் (Prof Björn Benneke) கூறுகிறார். இரண்டு குழுக்களும் இங்கு பூமியின் உயிரி செயல்முறைகளுடன் தொடர்புடைய கார்பன் டை சல்பைடு இருப்பதைக் கண்டறிந்தது. இந்த வாயு வேறு வழிகளிலும் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆனால் உயிர்கள் வாழ்வதன் அடையாளமாகக் கருதப்படும் டை மீத்தைல் சல்பைடு (dimethyl sulphide) காணப்படவில்லை. “உயிரி செயல்முறைகளுடன் கார்பன் டை சல்பைடை தொடர்புபடுத்த முடியாது. ஹைடிரஜன் செறிந்த வளி மண்டலத்தில் இந்த வாயுவை உருவாக்குவது எளிது. இந்த மூலக்கூற்றை மதிப்பிட முடிந்தால் அது பூமிக்கு அப்பால் உயிர்கள் வாழத் தகுதியான கோள்களைக் கண்டறிவதில் பெரிதும் உதவும்” என்று மாத்யூ கூறுகிறார்.
“சூரிய மண்டலம் போன்ற ஒரு அமைப்பு இல்லாத இத்தகைய புதிய சூழலில் சிறிய கோள்கள் பற்றிய இந்த ஆய்வுகள் பரவசமூட்டுபவை. பல தொலைதூரக் கோள்களிலும் நீராவி இருப்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்த இரண்டு ஆய்வுக் குழுக்களும் இங்கு ஒரே வகை வேதிப்பொருட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியலாளர் டாக்டர் ஜோ பார்ஸ்ட்டோ (Dr Jo Barstow) கூறுகிறார்.
சூரிய மண்டலத்திற்கும், பூமிக்கும் அப்பால் உயிர் வாழத் தகுதியான இடத்தை கண்டுபிடிக்கும் இடைவிடாட மனித முயற்சியில் இந்த ஆய்வு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
1739 மார்ச் 13 அன்று இரவு வில்லியம் ஹெர்ஷல், பாத் (Bath) நியூ கிங் தெருவில் (New King Street) உள்ள தன் வீட்டின் புறக்கடைத் தோட்டத்தில் தொலைநோக்கியைக் கொண்டு வானை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஜீட்ட டோரி (Zeta Tauri) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் மங்கலான ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். அதை பல இரவுகள் உற்று நோக்கியபோது அது நட்சத்திரங்களின் பின்புலத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் முதலில் நினைத்தார். ஆனால் அது தொலைவில் உள்ள ஒரு கோள் என்று பிறகு தெரிந்தது. பல காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அதற்கு அவர் யுரேனஸ் (Uranus) என்று பெயர் வைத்தார். இந்த சாதனை அவருக்கு ராயல் சங்க உறுப்பினர் பதவி, நைட்ஹுட் பட்டத்தைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து நடந்த ஆய்வுகள் இந்தக் கோள் தனித்துவமானது என்பதை எடுத்துக் காட்டியது.
வில்லியம் ஹெர்ஷல் இந்த கோளை ஆராய்ந்ததன் 200ம் ஆண்டு நிறைவின் நினைவாக அவரது இல்லத்தில் நினைவுக் கல் நாட்டும் திட்டம் உள்ளது.
ஹெர்ஷல் ஆகஸ்ட் 25 1822ல் காலமானார். அவரது நினைவாக அவருடைய இல்லத்தில் உள்ள கண்காட்சியில் அவர் யுரேனஸை உற்றுநோக்கி எழுதிய குறிப்புப் புத்தகம் மற்றும் வால் நட்சத்திரங்களை கண்டுபிடித்தவரும் விஞ்ஞானி என்ற நிலையில் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியுமான அவரது சகோதரி காரலைன் (Caroline) எழுதிய விண்மீன்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.
அகச்சிவப்புக் கதிர்களின் முதல் கண்டுபிடிப்பு, செவ்வாய் கோளின் துருவ முனைகள் பற்றிய ஆய்வு, முன்பு உற்றுநோக்கப்படாத சனியின் நிலவுகள் பற்றிய ஆய்வுகள் போன்றவை ஹெர்ஷலின் சாதனைகளாகப் போற்றப்படுகின்றன. என்றாலும் யுரேனஸை கண்டுபிடித்ததே அவரது மிக பெரிய சாதனை என்று கருதப்படுகிறது.
வில்லியம் ஹெர்ஷல், அவரை ஆதரித்த மூன்றாவது ஜார்ஜ் மன்னரிருக்கு நன்றி சொல்லும் விதம் ஜியார்ஜியன் விண்மீன் அல்லது ஜியார்ஜியன் சிடஸ் (Georgium Sidus) என்று பொருள் தரும் பெயரை யுரேனஸ் கோளிற்கு வைக்க முதலில் விரும்பினார். என்றாலும் இப்பெயர் இங்கிலாந்திற்கு வெளியில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால் யுரேனஸ் என்ற பெயர் ஏற்கப்பட்டது. இந்தப் பெயர் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவில்லை.
நம் சூரிய குடும்பத்தின் மற்ற கோள்கள் நுனி முதல் அடிவரை உள்ள அச்சில் சுழலும்போது யுரேனஸ் அதன் பக்கவாட்டில் சுழல்கிறது. சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்றாலும் இது சூரியக் குடும்பத்தின் மிகக் குளிர்ச்சியான கோள். அதிதீவிர பருவநிலைகளைக் கொண்டது. இதன் ஒவ்வொரு துருவமும் முழு இருளில் பல காலங்களுக்கு மூழ்கும் முன் பல பத்தாண்டு கால சூரிய ஒளியில் தொடர்ந்து வெந்து உருகுகிறது.
அங்கு துருவப்பகுதிக்கு அருகில் சூரியன் மறையும்போது பிறக்கும் ஒரு மனிதன் இலையுதிர்கால இருளில் காணாமல் போவார். முதல் வசந்தகால சூரியனைக் காண அவர் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்தக் கோளே ரோமானியக் கடவுளின் பெயருக்கு பதில் கிரேக்கக் கடவுளின் பெயரைப் பெற்ற முதல் கோள். கிரேக்க புராணத்தில் இது ஜூஸ் (Zeus) என்ற கடவுளுடைய தாத்தா பெயரைக் குறிக்கிறது. இது போல பல தனித்துவமான சிறப்புகள் இருந்தாலும் இதை ஆராய வியப்பூட்டும் வகையில் மிகக் குறைந்த முயற்சிகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது வரை ஒரே ஒரு ஆய்வுக்கலன் மட்டுமே யுரேனஸை ஆராயச் சென்றுள்ளது. 1986 வாயேஜர் 2 விண்கலன் சூரிய மண்டலத்தை ஆராயும் சுற்றுலாவின்போது இதைக் கடந்து சென்றது. அப்போது இது பொருண்மை நிறைந்த, தனக்கென்று சிறப்புப் பண்புகள் எதுவுமற்ற, ஹைடிரஜன், ஹீலியம், மீத்தேன் வாயுக்கள் உள்ள வளிமண்டலம், செழுமையான நிலவுகள் அடங்கிய, காந்தப்புலம் அதிகமாக காணப்படும் வெளிர் நீல உலகைக் கொண்டது என்று தெரியவந்தது.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி வரும் பத்தாண்டில் யுரேனஸை ஆராய விண்கலனை அனுப்ப நாசாவிற்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த அகாடமி ஒவ்வொரு பத்தாண்டிலும் அமெரிக்கா முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்களைப் பரிந்துரை செய்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் வெளியிடப்படும் ஆய்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விவரங்களுடன் இருக்கும். “இது மகிழ்ச்சி தரும் செய்தி. யுரேனஸ் போல சூரியக் குடும்பத்தில் மிகக் குறைவாக அறியப்பட்டவை மிக சிலது மட்டுமே. வியாழன், சனி, மிகத் தொலைவில் உள்ள ப்ளூட்டோ (Pluto) போன்றவற்றுடன் உட்பகுதியில் உள்ள கோள்களை ஆராய பல மின்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது போன்ற வானியல் வேறுபாடுகளே நம் சூரிய மண்டலத்தை உருவாக்கியுள்ளது” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோளியல் விஞ்ஞானி லீஃப் ஃப்ளெட்சர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.
விண்வெளியியலாளர்கள் சூரியக் கோள்களை மூன்று அடிப்படைப் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். பாறைகள் நிறைந்த உட்பகுதிக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வெளியில் ராட்சச வாயுக் கோள்களான வியாழன், சனி ஆகியவை ஒரு பிரிவு. பெரும்பாலான பிரம்மாண்ட உலகங்கள் ஹைடிரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆக்கப்பட்டுள்ளன. சூரிய மண்டலத்தின் விளிம்பில் யுரேனஸ், நெப்டியூன் (Neptune) ஆகியவை உள்ளன. இவை இரண்டும் சூரியனிடம் இருந்து முறையே வெகுதொலைவில் அமைந்துள்ள இரண்டாவது மற்றும் முதலாவது கோள்கள்.
வியாழன், சனிக்கோள்கள் போல யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பெரியவை இல்லை என்றாலும் அவை பனிப்பொருட்களால் ஆக்கப்பட்டவை. அதனால் அவை பனிக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோள்களின் வளிமண்டலத்திலும் உட்பகுதியிலும் மிதமிஞ்சிய மீத்தேன், நீர் மற்றும் பனிக்கட்டியை உருவாக்க உதவும் மூலக்கூறுகள் உள்ளன. இது தவிர 2006ல் கோள் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு குள்ளக் கோள் என்று பன்னாட்டு வானியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ப்ளூட்டோ போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்தப் பண்புகள் சுவாரசியமானவை என்றாலும் கவனத்தைக் கவரும் வகையில் புதிரானவை அல்ல. இவை போல மற்ற கோள்களையும் சூரிய மண்டலத்திற்கு வெளியில் விண்மீன்கள் சுற்றி வருகின்றன. “இயற்கை இந்த வடிவமைப்பில் கோள்களை உருவாக்க விரும்புகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் ராட்சச பனிக்கோள்கள் ஏன் அதிகமாக உள்ளன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று சாந்தா குரூஸ் (Santa Cruz) கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனதன் ஃபாட்னி (Jonathan Fortney) கூறுகிறார்.
யுரேனஸ் சூரியனிடம் இருந்து 1.8 பில்லியன் மைல்/2.8 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றுகிறது. நெப்டியூன் 2.8 பில்லியன் மைல்/4.5 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுகிறது. இதில் சூரியனுக்கு அருகில் இருப்பதால் யுரேனஸ் மீது விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியுள்ளது. வழியில் இருக்கும் வியாழன் கோளை தாழ்வாகச் சுற்றிவந்து அதன் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி யுரேனஸ் கோளுக்கு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிர்களுக்கு விடை கிடைக்குமா?
இதனால் ஆய்வுக்கலன் அதிக கருவிகள், எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும். இது நீண்ட கால ஆய்வுக்கு உதவும். வியாழன் கோளுக்குச் செல்ல 2031 அல்லது 2032 ஆகிய ஆண்டுகள் சிறந்தது என்று வானியல் தரவுகள் கூறுகின்றன. இத்திட்டம் ஐரோப்பிய விண்வெளி முகமை போன்ற மற்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். கோளை ஆராயும்போது அதன் நிலவுகளுக்கு அருகில் சென்று அவற்றையும் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள் இதன் மிதமிஞ்சிய குளிர்ச்சி, இதன் பக்கவாட்டு சுழற்சி, மற்ற கோள்களுக்கு மைய அச்சு துருவப்பகுதிகளில் உள்ளபோது இதன் அச்சு பக்கவாட்டில் இருப்பதற்கு காரணம் போன்ற பல புதிர்களுக்கு விடை தரும் என்று நம்பப்படுகிறது.
“தோன்றியது முதல் இதன் உட்பகுதியில் வெப்பம் இல்லை. இதுவே இதை சூரிய மண்டலத்தில் இதை மிகக் குளிர்ந்த கோளாக மாற்றுகிறது. நெப்டியூன் சூரியனிடம் இருந்து பெறும் வெப்பத்தை விட குறைவான அளவு வெப்பத்தை உமிழ்கிறது. ஆனால் யுரேனஸில் இவ்வாறு நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் பிரம்மாண்ட விண்கல் கடந்த காலத்தில் மோதியதாக இருக்கலாம். இதனால் இதன் வெப்பம் முழுவதும் வெளித்தள்ளப் பட்டிருக்கலாம்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியர் பாட்ரிக் எர்வின் (Prof Patrick Irwin) கூறுகிறார்.
சூரிய மண்டலத்தின் புதிர் நிறைந்த கோளாகக் கருதப்படும் யுரேனஸை ஆராயும் இத்திட்டம் விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2022/jul/16/uranus-mission-space-exploration-nasa?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
தேவைப்படும் நேரத்தில் கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் புதிய திட்டத்திற்காக விண்கலன்களை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். ப்ரோப-3 (Proba-3) என்ற இந்த இரட்டை ரோபோட் செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொலைவில் பூமியைச் சுற்றும். சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இடையூறுகளை ஆழத்தில் அறிய இதில் ஒன்று மற்றொன்றில் இருந்து பார்க்கும்போது சூரியனை ஆராய முடியும்.
An impression of the European Space Agency’s double-satellite Proba-3 mission. Photograph: ESA-P. Carril
இவற்றில் லேசர்கள், ஒளி உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் பல மணி நேரம் நீளும் சூரிய கிரகணத்தை உருவாக்க முடியும். இந்த கிரகணங்களை ஆராய்வதன் மூலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளில் ஒரு மாற்றம் ஏற்படும். சூரியனால் ஆற்றல் தொடர்புகள், வழியறியும் செயற்கைக்கோள்கள் மற்றும் புவி சார் தொழில்நுட்பங்களில் ஏற்படுத்தும் பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஈர்ப்பு அலைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், கருந்துளைகளை ஆராய இது ஒரு முன் மாதிரியாக அமையும். “தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் நிறைந்தது. இதை சரியாகச் செய்வது சுலபமானதில்லை. ஆனால் அதிக பயன் தருவது” என்று இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் (UCL) சேர்ந்த சூரியனை ஆராயும் இயற்பியலாளர் பிரான்சிஸ்கோ டியேகோ (Francisco Diego) கூறுகிறார்.
ஒன்றுடன் மற்றொன்று சேர்ந்து செல்ல வசதியாக இவ்விரு ஆய்வுக்கலன்களும் துல்லியமாக ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்க உதவும் பல சிக்கலான உணரிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இத்திட்டப் பணிகளை முழுமை செய்ய பத்தாண்டுகள் ஆனது. ஒன்றில் இருந்து மற்றொன்று 144 மீட்டர் தூரத்தில் இருக்கும்படி இவை பூமியைச் சுற்றி வரும். இதனால் இவை 144 மீட்டர் நீளமுள்ள ஒற்றை ஆய்வுக்கலனாக செயல்படும்.
“இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் அவற்றின் சரியான சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து தெளிவாகத் தெரியும் வகையில் சூரியனை மறைக்கும் விதத்தில் முதல் செயற்கைக்கோளில் இருந்து ஒரு வட்டு (disc) வெளிப்படும். இதனால் சூரியன் மறையும். இதை இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து ஆராயலாம். இதன் விளைவாக உருவாகும் கிரகணம் ஒரு நாளில் ஆறு மணிநேரம் நீடிக்கும்” என்று திட்ட மேலாளர் டேமியன் கலானோ (Damien Galano) கூறுகிறார்.
நிலவு சூரியனைக் கடந்து செல்லும்போது பூமியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்போது நிலவு, கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. வெப்பம் மிகுந்த கரோனாவை மட்டும் தெரியும்படி செய்கிறது. கரோனா என்பது சூரியனின் புலனாகும் பரப்பிற்கு மேல் அதன் வளிமண்டலத்திற்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வெளிப்புற அடுக்கு. இத்திட்டத்தின் உதவியுடன் கரோனாவை நன்கு ஆராய முடியும்.
வானில் இருந்து கிரகண ஆராய்ச்சி
துரதிஷ்டவசமாக முழுமையான சூரிய கிரகணம் பூமியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சராசரியாக நிகழ்கிறது. இதைக் காண விஞ்ஞானிகள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. வானிலையின் கருணையால் மட்டுமே கிரகணத்தை நன்கு பார்க்க முடியும். அதை ஒரு சில விநாடிகள் மட்டுமே உற்றுநோக்க முடியும். விரிவான ஆய்வுகளுக்கு இந்த நேரம் போதுமானதாக இல்லை.
வான் தொலைநோக்கிகளுடன் இணைத்து கிரகணத்தை ஏற்படுத்தி சூரிய ஒளியை நேரடியாகத் தடுக்கும் கரோனாகிராஃப் (Coronagraph) போன்ற கருவிகளால் உட்புற கரோனாவை விரிவாக ஆராய முடிவதில்லை.
“உயர் வெப்பநிலை நிலவுவதால் உட்புற கரோனாவை ஆராய்வதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சூரியனின் பரப்பில் வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி. கரோனாவில் வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி. இது ஒரு முரண்பாடு. சூரியனிடம் இருந்து விலகும்போது வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை” என்று கரோனா பரிசோதனைப் பிரிவுக்கான முதன்மை ஆய்வாளர் ஆண்ட்ரே ஜூக்கோவ் (Andrei Zhukov) கூறுகிறார். உட்புற கரோனாவை அதிக நேரம் ஆராயும்போது சூரியனின் பரப்பு மிகுந்த வெப்பமாகவும் கீழ்ப்பகுதிகள் குறைந்த வெப்பத்துடன் இருப்பது ஏன் என்பதற்கும் விடை கிடைக்கும்.
விண்வெளி வானிலை, வழியறியும் தொழில்நுட்பம், ஆற்றல் பகிர்மானம், மற்ற தொழில்நுட்பங்களை சூரியன் பாதிக்கிறது. “சூரியனை நன்கறிவது வருங்கால ஆய்வுகளுக்கு முக்கியமானது. அரிதாக சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டம் பெற்ற வாயு மற்றும் காந்தப்புல மேகங்கள் வெடித்து சிதறுதல் (coronal mass ejection) ஏற்படுகிறது. அப்போது சூரியனால் பெருமளவில் ப்ளாஸ்மா விண்வெளியில் வெளித்தள்ளப்படுகிறது.
இது பூமியின் மேல்வளிமண்டலத்தை அடையும்போது அரோரா என்னும் துருவ வெளிச்சங்களை ஏற்படுத்துகிறது. அரிதாக இது ஆற்றல் பகிர்மானத்தை பாதிக்கிறது. பொதுவாக நாம் பூமியின் வளி மண்டலம் மற்றும் பூமியைச் சுற்றியுள்ள ஆற்றல் மிக்க கதிரியக்கப் பட்டைகளான வான் ஆலன் பட்டைகளால் (Van Allen radiation) பாதுகாக்கப்படுகிறோம்” என்று டியோகோ கூறுகிறார்.
ஒரு புதிய அத்தியாயம்
ஆனால் ஆழ் விண்வெளியில் கதிரியக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. மனிதனை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பும்போது சூரிய கரோனாவின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் விண்வெளி வீரர்களை தீங்கு தரும் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். இந்த ஆய்வு சூரிய இயற்பியலுக்கும் அப்பால் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
பறத்தல் பற்றிய ஆய்வு விவரங்களுக்கு இத்திட்டம் ரோபோட்டிக் கலன்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும். இதன் மூலம் மிகச் சில சிறிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி ராட்சச செயற்கைக் கோளின் வேலைகளைச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கைக்கோள் குழுக்கள் மூலம் கருந்துளைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், ஈர்ப்பு அலைகளை ஆராயலாம்.
இத்தொழில்நுட்பம் வருங்கால விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: விண்வெளி
விண்வெளியில் மனிதர்கள் சுற்றிப்பார்க்க பூகோளத்திற்கு அருகில் இருக்கும் ஒரே இடமென்றால் அது நிலவு மட்டுமே. 1960 காலகட்டத்திற்குப் பிறகு சோவியத் ஒன்றியமும், அமெரிக்காவும் நிலவில் காலடி வைத்து காலனி அமைக்க முயன்று கொண்டிருந்தனர். அமெரிக்கா அப்பல்லோ திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது, சோவியத் ஒன்றியம் லூனா (Luna - என்பதற்கு லத்தீன் மொழியில் நிலவு என்று பொருள்) என்ற திட்டத்தின் பெயரில் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டு இருந்தது. இவ்விரண்டு வல்லரசு நாடுகளுக்கும் நிலவில் யார் முதலில் காலடி வைப்பது என்ற புவிசார் அரசியல் போட்டி அப்போது நிலவியது. ஒருவகையில் 'நான் தான் முதலில் செல்வேன்' என்ற மேன்மை (prestige) மிகுந்த போட்டியும் அவர்களின் பனிப்போருக்கு நடுவில் சூடுபிடிக்க நடந்தது.அப்போட்டியின் விளைவாக மனிதன் வடிவமைத்த கருவி (Probe) ஒன்று 1959 -ல் நிலவில் தரை தொட்டு இறங்கியது, அதனை முதலில் செய்து காட்டியது அன்றைய சோவியத் ஒன்றியம்.
இதுவரையில் அமெரிக்க விண்வெளி அறிஞர்கள் மட்டுமே நிலவில் காலடி வைத்திருக்கிறார்கள். 1969ல் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்தார் அவரைத் தொடர்ந்து Buzz Aldrin இறங்கினார், Michael Collins என்பவர் கட்டுப்பாட்டு பெட்டகத்தின் உள்ளே இருந்தார். அங்கே அவர்கள் புகைப்படங்கள் எடுத்து அமெரிக்க கொடியை நட்டு இருக்கிறார்கள்.
"We choose to go to the Moon" மிகவும் புகழ்பெற்ற இந்த சொற்றொடரை கூறினார் அன்றைய அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் கென்னடி. உலகெங்கும் 650 மில்லியன் மக்கள் நிலவில் இறங்கிய காட்சியை தொலைக்காட்சியில் கண்டு களித்தனர்.
ஆனால், அமெரிக்கா அறிஞர்கள் நிலவில் தரையிறங்கிய காட்சிகளை ரஷ்யா நம்ப மறுக்கிறது என்பது வேறு விடயம். ஹாலிவுட்டில் ஏதோ செட் போட்டு படம் எடுப்பது போல எடுத்து விட்டார்கள் என்ற நம்பிக்கை ரஷ்யா மக்களிடையே இருக்கிறது.
இன்றளவும் சில அமெரிக்க மக்கள் கூட இதனை நம்ப மறுக்கிறார்கள். காற்று இல்லாத ஓரிடத்தில் எப்படி கொடி பறக்க முடியும், நிலவில் அவர்கள் எடுத்த புகைப்படத்தில் ஒரு விண்மீன் கூட ஏன் தெரியவில்லை? என்பது சிலரது கேள்விகளாக இன்றும் உள்ளது. நிலவில் எடுத்த புகைப்படத்தில் அமெரிக்க கொடி காற்றில் அசைவது போல எடுக்கப்பட்டிருக்கும். (உண்மை சரிபார்ப்பு தகவல்கள் - BBC/ conspiracy theories.)
நிலவை முதலில் தொட்டது ஆம்ஸ்ட்ராங் இல்லை என்று நம் தமிழ் கவிஞர்கள் கூட வேறு விதத்தில் நம்ப மறுத்தார்கள்.
"சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்டராங்கா?
சத்தியமாய் தொட்டது யார்
நான் தானே!"
என்று கதாநாயகியை நிலவாக கற்பனை செய்து கதாநாயகன் நிலவைத் தொடுவது போல் சத்தியம் செய்து பாடல் வரிகள் எழுதினார் கவிப்பேரரசு.
நிலாவில் மனிதன் காலடி வைப்பதற்கு முன் நிலாவில் ஆயா வடை சுட்ட புனைவு கதைகள் நம்மூரில் இருந்தது.
நடிகர் விவேக் வேடிக்கையாக காதல் கிசு கிசு திரைப்படத்தில் இவ்வாறு பேசுவார்.
"வெளிநாட்டுக்காரன் நிலாவுல கால் வச்ச நேரத்துல, ஒரு ஆயா நிலாவுல கால் நீட்டி உக்கார்ந்து வடை சுட்டுக்கிட்டு இருக்கு ன்னு சொல்லி கொடுத்து தான் எங்களுக்கு சோறு ஊட்டி விட்டாங்க.
அமெரிக்கா கார்ன் கம்யூட்டர் கண்டுபிடிச்ச அதே நேரத்தில நாங்க நோட்புக்குல மயில் இறக்கைய வச்சி அது குட்டி போடுமா ன்னு பாத்துக்கிட்டு இருந்தோம் ஐயா"
அன்றைய 80, 90 -களின் காலகட்டம் நமக்கு அப்படி தான் இருந்தது என்பது ஆணித்தரமான உண்மை.
உலகெங்கும் நாடு பிடிக்கும் போட்டியில் ஆதிக்கத்தை சொலுத்திய அக்மார்க் ஆண்டப் பரம்பரை ஐரோப்பிய நாடுகள் தங்களின் காலனியை தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா என் அனைத்து கண்டங்களிலும் விரிவு படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ஏனோ நிலவில் மட்டும் ஓர் காலனியை ஏற்படுத்தும் போக்கு அவர்களுக்கு எடுபடவில்லை என்பது இன்றுவரை நமக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.
கடைசியாக டிசம்பர் 14,1972 -ல் நிலவில் இருந்து மனிதர்கள் வெளியேறினார்கள். அதாவது அமெரிக்காவின் அப்பல்லோ-17 விண்கல வானூர்தி நிலவில் இருந்து பூகோளத்திற்கு திரும்பிது. இதற்கு பிறகு நிலவுக்கு மனிதர்கள் செல்லவில்லை.
எழுபதுகளில் தொடங்கி முப்பது ஆண்டுகள் வரை மாறி மாறி நிலவுக்கு விண்கலம் செலுத்திய அமெரிக்காவும், ரஷ்யாவும் சற்றே ஓய்ந்திருந்தார்கள். இவர்களைத் தவிர மூன்றாவதாக உலகில் எந்த நாடும் மனிதர்கள் உருவாக்கிய கருவிகளை நிலவுக்கு ஆய்வுகள் செய்ய அனுப்பவில்லை.
21ஆம் நூற்றாண்டில் வேகமெடுத்த நிலா தொடும் போட்டி;
விண்வெளித் துறையில் தனக்கென்று தனியே ஆய்வுகளைச் செய்ய விண்வெளித் துறையை உருவாக்கிய சீனா (China Academy Of Space Technology சுருக்கமாக CAST.) யாருமே எதிர்பார்க்காத வகையில் நிலவைத் தொடும் திட்டங்களை தொடங்கி இருந்தது.
அக்டோபர் 24, 2007 -ல் சீனா ஏவிய Chang'e-1 probe என்ற விண்கல கருவி நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பறந்து புகைப்படங்கள் எடுத்தது.
சீன விண்வெளி அறிஞர்கள் அனுப்பிய சீன பாடல்களை அங்கு ஒலிக்க விட்டது. Chang'e 1 probe என்பது நிலவில் தரையிறங்கும் திட்டம் கிடையாது. இரண்டு மாதங்கள் கழித்து அந்த கருவி நிலவின் மேற்பரப்பில் முட்டி விழுந்தது. அந்நேரத்தில் சீனாவின் அம்முயற்சி மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். அப்போது அத்திட்டத்தின் மதிப்பு 180 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
சீனா ஒருபுறம் நிலவின் ஆய்வுகளை செய்ய தொடங்கிய நேரத்தில் இந்தியாவும் நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வதற்கு இஸ்ரோ சந்திராயன் (Chandrayaan-1) திட்டத்தை தீட்டியது. (சந்திராயன் என்பது சமஸ்கிருத சொல்)
22, அக்டோபர் 2008 -ல் இந்தியா ஏவிய விண்கலம் நிலவில் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்தது. பல இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். சந்திராயன் திட்டம் உலகெங்கும் பேசு பொருளாக மாறியது. சந்திராயன்-1 திட்டத்தின் இயக்குனராக தமிழ் வழியில் பயின்ற டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை இருந்தார் என்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.
இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் '21ஆம் நூற்றாண்டின் விண்வெளி தொடக்கம்' என்றே கருதினார்கள். சந்திராயன்-1 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 85 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. இதே ஆண்டில் இந்தியா ஏவிய விண்கலம் ஒன்று 10 செயற்கை கோள்களை ஏவிச் சென்றது. அதற்கு அடுத்த ஆண்டில் இந்தியாவில் விண்வெளி திட்டத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் நிதி ஒதுக்கியது இந்திய ஒன்றிய அரசு.
இந்தியாவில் மக்கள் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நிலையில் உள்ளார்கள், மனித கழிவுகள மனிதர்களே அகற்றும் நிலை உள்ள நாட்டில் அதற்காக இயந்திரங்கள் கண்டுபிடிக்கவில்லை. கழிவுநீர் வடிகால்களை தூய்மை செய்ய இன்றளவும் மனிதர்கள் உள்ளே இறங்கி வேலை செய்யும் நிலை இருக்கிறது. ஆனால், விண்வெளித் துறைக்கு இவ்வளவு பெரிய தொகை செலவிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.
சந்திராயன்-1 விண்கல வானூர்தியில் (Spacecraft) இந்திய அறிஞர்கள் செலுத்திய கருவிகள் மட்டும் பயணம் செல்லவில்லை. அதில் நாசாவின் அளவிடும் கருவியான Moon Mineralogy Mapper உட்பட 11 அறிவியல் கருவிகளை ஏந்திச் சென்றது. இக் கருவிகள் எடுத்த புகைப்படங்கள், மற்றும் நிலவின் மேற்பரப்பை அளவிட்ட மாதிரிகளை ஆய்வு செய்த அறிஞர்கள் நிலவில் தண்ணீர் மூலக்கூறுகள் (Hydroxyl Molecules) இருக்கிறது என்பதை உறுதி செய்தார்கள். அதாவது நிலவின் மேற்பரப்பில் மிகவும் நுண்ணிய அளவில் தண்ணீராக இல்லாமல் மூலக்கூறு படிவங்களாக உள்ளது.
இதற்கு முன்னர் அப்பல்லோ மற்றும் லூனா திட்டங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் நிலா ஒரு வறண்ட நிலப்பரப்பு என்றே கருதினார்கள். அந்த ஆய்வுகளின் போக்கை மாற்றிக் காட்டியது சந்திராயன் திட்டம். சில மாதங்கள் கழித்து அதன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
சீனாவின் முயற்சி நீண்டு கொண்டே போனது. Chang'e என்ற திட்டத்தின் பெயரில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. டிசம்பர் 14, 2013ல் Chang'e 3 probe நிலாவில் மிகவும் மென்மையாக (Soft Landing) தரையிறங்கியது. நிலவில் தரையிறங்கிய மூன்றாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. கிட்டத்தட்ட இது 40 ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சாதனையை முறியடிக்கப்பட்டது.
சந்திராயன்-1 திட்டத்தைத் தொடர்ந்து அதன் அடுத்தகட்டமாக நிலவில் தரையிறங்கும் திட்டமிடலாக Orbiter, Lander and Rover போன்ற இயந்திர ஊர்தி கருவிகளுடன் சந்திராயன்-2 திட்டம் முழு வீச்சில் நடைபெற்றது.
இறுதியாக சந்திராயன்-2 நிலவில் கால் பதிக்கும் திட்டமாக 22 சூலை 2019 -ல் விண்ணில் ஏவப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவில் அரசியல் நிலையும் மாறி இருந்தது. சந்திராயன்-1 ன் மனநிலையை விட சந்திராயன்-2 க்கு சமூக வலைத்தளங்களிலும் வரவேற்பு உயர்வாக இருந்தது. சந்திராயன்-2 விண்வெளியில் ஏவப்பட ஒரு வாரத்தில் அதன் பயணத்தை நிறுத்தி இருந்தது இஸ்ரோ. சரியாக ஒருமாத கால பயணத்திற்கு பிறகு செப்டம்பர் 7ஆம் நாளில் நிலவின் சுற்றுப்பாதையில் இருந்து மெதுவாக நிலவில் இறக்குவது என பரபரப்பான நிலையில் பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாடு நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்தார்கள் பொறியாளர்கள்.
இந்த பரபரப்புகளுக்கு நடுவே இந்தியாவின் நிலவைத் தொடும் காட்சிகளை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பெங்களூர் கட்டுப்பாடு அறையின் பார்வையாளர்கள் பகுதியில் அவரது புகைப்பட கலைஞர்கள் புடைசூழ நேரடியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
நிலவின் மேற்பரப்பை தொடுவதற்கு வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில் இருந்த நிலையில் Lander தனது கட்டுப்பாட்டை இழந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஏதோ ஒன்றை இழந்ததை போன்ற மனநிலையை அடைந்தது. இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கண்ணீர் விட்டு சந்திராயன்-2 திட்டம் தோல்வியடைந்தது என்றார். அவருக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார். அன்றைய நாளில் சந்திராயன்-2 சரியாக நிலவில் தரையிறங்கி இருந்தால் அது நிலவில் இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை அடைந்திருக்கும்.
நிலவில் தரையிறங்கும் தொழில்நுட்பம் மிகவும் சிக்கலானது. நிலவுக்கு பூகோளம் போல் வளிமண்டல அழுத்தம் கிடையாது. ஆதலால் அங்கே காற்றழுத்த வான்குடை மிதவை (parachute) மூலம் எதையும் இறக்கிவிட முடியாது. ஆதலால் நிலவில் தரையிறங்கும் ஊர்தியை மிகவும் குறைந்த வேகத்தில் மெதுவாக இயக்க வேண்டும் இதனை ஆங்கிலத்தில் Powered descent அழைக்கபடுகிறது. மேலிருந்து கிடைமட்டமாக ஊர்தி இயக்கப்படுகிறது.
விக்ரம் லேண்டர் எந்த இடத்தில் விழுந்து நொறுக்கியது என்பது குறித்த தகவல் அப்போது யாருக்கும் தெரியாது. இரண்டு மாதங்கள் கழித்து நம் சென்னைய சேர்ந்த IT guy சண்முக சுப்பிரமணியன் என்பவர் நாசாவின் நிலவு புகைப்படங்களை வைத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் விக்ரம் லேண்டர் கிடக்கிறது என்றார். அதனை நாசாவும் உறுதி செய்தது.
சந்திராயன்-2 திட்டத்தின் செலவு 140 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் பார்வையில் இந்த செலவு என்பது மிகவும் குறைந்த செலவு. ஹாலிவுட்டில் ஒரு விண்வெளித் திரைப்படம் எடுக்கவே 140 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவு ஆகும்.
சந்திராயன்-2 தோல்வியில் இருந்து பல தகவல்களை சேகரித்து கொண்டு உடனடியாக சந்திராயன்-3 திட்டத்தை தொடங்கிவிட்டது இந்தியா.
நிலவில் மனிதர்களை மீண்டும் தரையிறங்க வைக்கும் நாசாவின் புதிய Artemis திட்டம்;
விண்வெளியில் உள்ள பிற கோள்களில் உயிர் வாழ வழி இருக்கிறதா, அண்டவெளியில் வேறெங்காவது பூகோளம் போல அமைப்பு உள்ளதா என்ற சிந்தனை விண்வெளி ஆய்வில் பங்கெடுக்கும் நாடுகளுக்கு இல்லாமல் இருந்ததில்லை.
சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நிலவுக்கு மீண்டும் மீண்டும் விண்கலம் ஏவ தொடங்கிய காலத்தில் அமெரிக்காவும் தனது பழைய திட்டத்தை தூசி தட்டி புதுப்பிக்க தொடங்கியது. அப்பல்லோ திட்டம் நிறைவடைந்து 50 ஆண்டுகள் கழித்து நிலவில் நகரும் ஊர்திகள் மற்றும் மனிதர்களை மீண்டும் அழைத்துச் செல்லும் திட்டத்தை தீட்டியது.
21ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நிலவுத் திட்டத்திற்கு Artemis என்ற புதிய பெயரை வைத்தது நாசா. Artemis என்பது கிரேக்க புராணத்தில் வேட்டையாடும் ஓர் பெண் கடவுளின் பெயர்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தொழில்நுட்பம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. புதிதாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் செயல்பட தொடங்கியது நாசா. எடுத்த எடுப்பிலேயே நிலவில் மனிதர்களை கால் பதிக்கும் திட்டம் தற்போது இல்லை. Artemis I, II, III, IV என நான்கு கட்டங்களாக செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
முதலாவதாக Artemis-I திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும். அது ஆளில்லா விண்கல வானூர்தி சோதனை திட்டம் என்று அழைக்கப்படும்.
பிறகு இரண்டாவதாக Artemis-II திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule உள்ளே விண்வெளி அறிஞர்கள் அமர்ந்து பயணம் செய்வார்கள் ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இது நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிவிட்டு மீண்டும் பூகோளம் திரும்பிவிடும் என்பது தான் திட்டம். இவ்விரண்டாவது திட்டம் 2025ல் ஏவப்படுவதாக இருந்தது ஆனால், தற்போது அது 2026 -க்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக Artemis -III திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft Capsule -ல் பயணம் மேற்கொள்ளும் விண்வெளி அறிஞர்கள் SpaceX வடிவமைத்து கொடுக்கும் 'Starship Human Landing System' மூலமாக நிலவின் தென் துருவத்தில் காலடி வைப்பார்கள் (Moonwalk) மீண்டும் அதே Starship Human Landing System மூலம் நிலவின் சுற்றுப்பாதையில் நிற்கும் Orion Spacecraft Capsule திருப்பி விடுவார்கள். பிறகு அங்கிருந்து பூகோளப் பயணம் மேற்கொள்ளப்படும்.
நான்காவதாக ஏவப்படும் Artemis-IV திட்டத்தில் ஏவப்படும் விண்கலத்தின் Orion Spacecraft ல் செல்லும் அறிஞர்கள் சில காலம் நிலவில் தங்கியிருந்து ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அதாவது பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் தற்போது நடப்பது போன்ற ஒரு சூழல் உருவாக்கப்படும்.
Artemis திட்டத்தில் நிலவுக்குச் செல்ல நான்கு விண்வெளி அறிஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தற்போது பயிற்சி அளித்து வருகிறது நாசா.
Artemis-II Commander Reid Wiseman
Artemis-II Pilot Victor Glover
Artemis-II Missions Specialist Christina Koch and Canada's Jeremy Hanson.
அந் நால்வரில் ஒருவர் பெண், ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்காக Space Launch System - SLS என்ற மிகப்பெரிய திறன்மிக்க விண்கலத்தை (Rocket) வடிவமைத்தது நாசா. இதன் மூலம் நிலவுக்கு மட்டும் இல்லாமல் ஆழ்ந்த விண்வெளி ஆய்வுகளுக்கும் (Deep Space Exploration) இதனை பயன்படுத்த முடிவு செய்தது.
SLS (Space Launch System) திறன் வாய்ந்த விண்கலத்தின் உற்பத்திக்கு பல தனியார் நிறுவனங்கள் பங்கெடுத்தன. மொத்தம் 1,100 தனியார் நிறுவனங்கள் (Rocket Assembly and Configuration) இதற்காக வேலை செய்தன. "ஆயுர்வேத மூலிகையாலே உள்நாட்டிலே தயாரானது" என்ற விளம்பர பாடல் வரிகளுக்கு ஏற்ப நாசா பெருமை கொண்டது.
நாசாவின் Space Launch System கீழ்க்கண்டவாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
Core Stage
RS-25 Engines
Boosters
Integrated Spacecraft/Payload Element
Exploration Upper Stage
The SLS Team
இதன் முதன்மை பாகங்கள Core Stage -ஐ போயிங் நிறுவனம் செய்து கொடுக்கிறது. இதில் 4 விண்கல உந்துவிசை இயந்திரங்களை (RS-25 Engine) L3 Harris Technologies நிறுவனம் வடிவமைத்தது. இவ்வகை இயந்திரங்கள் தரையில் இருந்து ஏவப்பட்ட எட்டாவது நிமிடத்தில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சென்றுவிடும்.
Orion Spacecraft Capsule -ஐ வடிவமைத்து வழங்குவது Lockheed Martin நிறுவனம் ஆகும். (அமெரிக்காவின் பிரபல போர் வானூர்திகளான F-35 -ஐ உற்பத்தி செய்யும் நிறுவனம்)
Artemis -I திட்டத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடித்தப் பின், பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 2022 செப்டம்பர் மாதத்தில் Artemis -I விண்ணில் ஏவப்பட நாட்குறிப்பிடப்படது.
கடைசி நிமிடத்தில் திரவ நைட்ரஜன் எரிபொருள் கசிவு கண்டறியப்பட்டது அதனால் விண்கல ஏவுதல் தள்ளிப் போனது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு செல்வதால் இதனை மிகவும் நேர்த்தியாக செயல்படுத்த வேண்டும் என்பதில் நாசா உறுதியாக இருந்தது.
நவம்பர் 16, 2022 அதிகாலை 1:47 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது Artemis-I. விண்வெளிப் பயணத்தை தொடங்கிய ஆறாவது நாளில் Orion Spacecraft Capsule ஆனது நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. பல கோணங்களில் நிலவை புகைப்படங்கள் எடுத்து நாசாவின் கட்டுப்பாடு அறைக்கு அனுப்பியது. விண்கல வானூர்தி செல்ல வேண்டிய உச்சகட்ட தொலைவு 268,563 மைல்கள் வரை சென்றது.
நிலவின் சுற்றுப்பாதையில் ஏதேனும் விண்வெளி கதிர்வீச்சு இருக்கிறதா என்பதை அளவீடு செய்ய 34 Radiation Sensor -களை உள்ளே வைத்திருந்தார்கள்.
25 நாட்கள் நிலவின் அருகில் சுற்றிக்கொண்டிருந்த Orion Spacecraft -ஐ பூகோளம் திரும்ப டிசம்பர் 5ஆம் நாள் கட்டளை பெறப்பட்டது. எந்தவித பாதிப்பும் இல்லாமல் டிசம்பர் 11 நாளில் பாஜா கலிபோர்னியா பசுபிக் பெருங்கடலில் (Splashdown) விழுந்து இறங்கியது.
Artemis -I திட்டத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்திருக்கிறது நாசா.
(தரவுகள்; https://www.nasa.gov/mission/artemis-i/)
நிலவில் வெற்றிவாகை சூடிய சந்திராயன்-3
சந்திராயன்-2 தோல்வியிலிருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்கள் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்திராயன்-3 திட்டத்தின் நிலவு பயணம் சூலை 14, 2023ல் குறிக்கப்பட்டது. இஸ்ரோ விண்கலம் ஏறுவதற்கு முன்னர் இஸ்ரோ அறிஞர்கள் ராகு கேது பெயர்ச்சி காலம் கூட பார்த்தார்கள் என்ற செய்தி கூட உலவியது.
விண்ணில் ஏவப்பட்ட நாற்பதாவது நாளில் ஆகஸ்ட் 23, 2023ல் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மிகவும் மென்மையாக தரையிறங்கியது.
சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் சில கருவிகளையும் ஏந்திச் சென்றது. நிலவின் வெப்பநிலையை அளவிடும் Chandra Surface Thermophysical Experiment sensor.
நிலவு அதிர்வுகளை கண்டறியும் கருவியான Instrument for Lunar Seismic Activity.
நிலவில் உள்ள காலநிலையை அளவிட Langmuir Probe
மற்றும் நாசாவின் விண்வெளி கருவியான Laser Retroreflector Array அதனுடன் சென்றது.
இந்தியாவின் சாதனை உலகெங்கும் பேசுபொருளாக மாறியது. நிலவில் மென்மையாக தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை சேர்த்தது இந்தியா.
சந்திராயன்-2 திட்டத்தை விட சந்திராயன்-3 திட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் மூர்க்கத்தனமான ஆதரவு கூடியிருந்தது. சந்திராயன்-2ஐ நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி சந்திராயன்-3 நிலவைவ் தொட்ட நேரத்தில் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.
"India is on the Moon" என்று பெருமையுடன் கூறினார் பிரதமர் மோடி. மாநாடு முடிந்த கையோடு இந்தியா திரும்பிய பிரதமர் மோடி நேரடியாக இஸ்ரோ தலைமையகம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார். சமூக வலைத்தளங்களில் இஸ்ரோவின் வெற்றிக்காக "Thank You Modi Ji" என்று பிரதமருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் அவரது ஆதரவாளர்கள்.
சந்திராயன்-3 திட்டத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 80 மில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது.
கவிஞர்கள் தங்களின் கற்பனையில் பலவகையான கவிதைகள்/பாடல் வரிகள் நிலவைப் பற்றி எழுதலாம். ஆனால் மனிதர்கள் அங்கு வாழவே தகுதியற்ற இடம் என்பது விண்வெளி ஆய்வுகள் செய்யும் நாடுகளுக்கு தெரியும். அங்கு பெரும் பாறைகளும் பள்ளங்களும் தான் உள்ளன. சூரியன் முழுமையாக தெரியும் நேரத்தில் நிலாவின் பகல் பொழுதின் வெப்பநிலை 127°C எட்டும். இரவு வேளையில் அங்கு வெப்பநிலை -173C° எட்டும். ஆனாலும் அங்கு என்ன இருக்கிறது என்பதை ஆய்வுகள் தொடர்ந்து செய்வதன் மூலமே அது இவ்வுலகிற்கு தெரிய வரும்.
வணிக அடிப்படையில் பார்த்தால் நிலவுக்குச் சென்று ஆய்வுகள் மேற்கொள்வது தேவையற்ற பெரும் செலவு என்றே பொருளாதார அறிஞர்கள் கருதுகின்றனர். இன்னொரு வகையில் பார்த்தால் நிலவில் மனிதர்கள் அனுப்பிய விண்வெளி கலன்கள் ஆங்காங்கே உடைந்து நொறுக்கி (debris) குப்பை போல் கிடக்கின்றது.
தங்கள் நாட்டின் வளர்ச்சியை உலகிற்கு வெளிக்காட்டும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதி தான், நிலாவுக்கு செல்லும் போட்டி விண்வெளியில் நடக்கிறது.
(References; Space.com, Wikipedia, NPR news, NASA, ISRO.)
தொடரும்.
- பாண்டி
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - ஓர் அலசல்
- விண்வெளி வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் உள்ளாடைகள்
- உயிர்கள் வாழ உதவுமா வெள்ளிக் கோளின் மேகங்கள்...?
- சூழல் காக்க உதவும் மர செயற்கைக்கோள்கள்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
- வியாழனின் நிலவில் கார்பனின் கடல்