பொதுமக்களில் சிலர் செயற்கை முறை கருவூட்டல் இயற்கைக்கு எதிரானது என்பது போல கருதுகிறார்கள். பொதுவாக அதிக பால் உற்பத்தித் திறனுக்கான மரபணுக்களைக் கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை மிகக் குறைவே ஆகும். இவைகளை மட்டும் கொண்டு இயற்கை முறையில் இனவிருத்தி செய்வது என்பது முடியாத காரியம் ஆகும். இதன் பொருட்டு வந்தது தான் செயற்கை முறை கருவூட்டல் என்பது. இதில் சில எண்ணிக்கையிலான காளைகளின் விந்துக்கள் சேகரிக்கப்பட்டு அவைகள் பல பசுக்களை கருத்தரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

cow 339

இது தவிர காளைகளை இயற்கை முறை கருவூட்டலுக்காகப் பயன்படுத்தும் போது குறைந்த மரபுத் திறனுள்ள சந்ததிகளை உருவாக்கி விடும் வாய்ப்புள்ளது. ஆனால் செயற்கை முறை கருத்தரிப்பில் காளைகள் முதலில் சந்ததி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அவைகளின் விந்துக்கள் பயன்படுத்தப்படுவதால் எதிர்கால சந்ததிகளின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதில்லை. இன்றளவும் இந்தியா பால் உற்பத்தியில் முதலாவது இடத்தில் இருப்பதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய காரணமாகும்.

காளைகளிடமிருந்து விந்தணுக்களை சேகரிப்பதற்காக பிரத்தியோக பொலிகாளைப் பண்ணைகளை அரசாங்கமே அமைத்துள்ளது. அங்கு காளைகளின் விந்து சேகரிக்கப்பட்டு அவைகளின் தரத்தை ஆய்வு செய்த பின்னர் அவைகளை முறையாக செயற்கைமுறை கருத்தரிப்பில் கால்நடை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

விவசாயத்தில் எந்திரமயமாக்கலால் காளை மாடுகளுக்கு வேலை இல்லாமல் போய் விட்டது. இது மேலும் காளைகளின் பங்கை சமுதாயத்தில் குறைத்து விட்டது. ஒரு பக்கம் அதிக பால் தேவை, மறுபக்கம் காளைகளுக்கு வேலையின்மை. இவையிரண்டும் சேர்ந்து காளைகளின் மேல் ஒரு வித பச்சாதாபத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகத் தான் பொதுமக்களில் சிலர் செயற்கை முறைக் கருவூட்டலை இயற்கைக்கு எதிராகப் பாவித்து, அது தவறு எனப் பொருள் கொள்கிறார்கள். செயற்கை முறை கருவூட்டல் தொழில்நுட்பம் உலகெங்கிலும் பயன்பாட்டில் உள்ள ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிகாளைப் பண்ணைகளில் காளைகளின் விந்தணுக்களின் கருத்தரிப்புத் திறனை உறுதி செய்வது ஒரு சவாலான காரியமாகும். ஏனெனில் இங்கு விந்தணுக்களை காளையிடமிருந்து சேகரித்து அதை ஆய்வகத்தில் முறையாக உறைவிந்து குச்சியில் அடைத்து கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக விந்துக்களை நாம் கையாள வேண்டியிருக்கிறது. இதனால் தான் செயற்கை முறைக் கருவூட்டலில் இயற்கைமுறை கருவூட்டலை விட கருத்தரிப்புத் திறன் குறைவாக உள்ளது. இதை அதிகப்படுத்துவது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.

பசுக்களில் செயற்கைமுறை கருவூட்டல்

காளைகளிடமிருந்து விந்துவை சேகரிக்கும் போது மிகவும் கவனமாக சேகரிக்கப்பட வேண்டும். மேலும் காளைகளை பசுவிடமிருந்து பிரித்து பராமரிக்கப் படவும் வேண்டும். இதைக் காரணம் காட்டி பொது மக்களில் சிலர் இது இயற்கைக்கு எதிரானது என கூறுகின்றனர். காளைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு கையாளப்பட வேண்டும் என்பதே அறிஞர்கள் உள்ளிட்ட அனைவரது விருப்பமும் ஆகும்.

செந்தமிழ்ச் செல்வன்

Pin It

இன்று நாம் காணும் கறிக்கோழி மற்றும் முட்டைக் கோழி அடிப்படையில் ரெட் ஜங்கிள் பவுல் எனும் காட்டுக் கோழியிலிருந்து வந்ததே ஆகும். இதில் பரிணாமத்திற்கும் மிக முக்கிய பங்குள்ளது. மேலும் மனிதனின் உணவுத் தேவைக்காக அவைகள் இனவிருத்திக்கு உட்பட்டு இன்று நாம் காணும் கறிக்கோழியாகவும், முட்டைக் கோழியாகவும் உருவெடுத்துள்ளது. வணிகக் கோழியின் உற்பத்தித் திறன் அதன் மூதாதையரை விட அதிகமாகும்.         

desi chicken

நாட்டுக் கோழி (Native / Desi Chicken)

அடிப்படையில் இந்த காட்டுக் கோழிகள் வீட்டு விலங்காக காலப் போக்கில் மாற்றப்பட்டப் பின்னர், அறிவியலின் புரிதலால் அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு அவைகள் மனிதனின் தெரிவுக்கு உட்படுத்தப்பட்டது. அதாவது மனிதன் விரைவாக வளரும் கோழிகளை மட்டும் தேர்ந்தெடுத்து அவைகளை இனவிருத்திக்கு உட்படுத்தினான். அடுத்த தலைமுறையில் கோழிகளின் வளர்ச்சி முந்தைய தலைமுறையைக் விட கூடியிருந்தது. இப்படி அதிக வளர்ச்சிக்கான மரபணுக்களைக் கொண்டு உருவானதே இன்று நாம் காணும் கறிக் கோழிகள்.

Deep Litter System

ஆழ்கூள முறையில் (Deep Litter System) கறிக்கோழி வளர்ப்பு

இதைப் போலவே தான் முட்டைக் கோழிகளும். ஆரம்ப தலைமுறைகளில் சில கோழிகள் அதிக எண்ணிக்கையில் முட்டையிடுவதையும், அதிக குஞ்சு பொறிக்கும் திறனையும் பெற்றிருப்பதை கண்டுகொண்ட மனிதன், அந்தக் கோழிகளை மட்டும் அடுத்த தலைமுறையை உருவாக்குமாறு செய்தான். இப்படி செய்ததன் விளைவாக புதிதாக வரும் சந்ததிகள் அதிக உற்பத்திக்கான பண்புகளைப் பெற்றிருந்தன. அதன் விளைவாக அதிக விளைச்சலை மனிதன் பெற்றான். இந்த உற்பத்தி சார்ந்த இனவிருத்தி முறை இன்றளவும் நடைபெற்று கொண்டுள்ளன.

ஆரம்பத்தில் 100 முட்டைகளுக்கும் குறைவாக இருந்தவை இன்று 300 முட்டைகளை இடும் வகையில் முன்னேறியுள்ளது. இது மனிதனின் புரதத் தேவையை பூர்த்தி செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. கறிக்கோழியும் இன்று ஆறு வாரங்களில் இரண்டு கிலோ எடையை அடையுமாறு அதன் வளர்ச்சித் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Cage System

(கூண்டு முறையில் (Cage System) முட்டைக் கோழி வளர்ப்பு)

இந்த முன்னேற்றத்தில் இனவிருத்தி, மேலாண்மை மற்றும் நோய்த் தடுப்பு போன்ற துறைகளுக்கு முக்கிய பங்குள்ளது. இயற்கை திடமான கோழிகளை மட்டும் ஆதரிக்கும். ஆனால் மனிதனின் தொழில்நுட்பம் உற்பத்தித் திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அந்தக் கோழிகளை மட்டும் ஆதரிக்கும். மேலும் தற்போது உற்பத்தியுடன் கோழியின் திடம் சார்ந்த பண்புகளும் முக்கியம் என்பதை மனிதன் உணர்ந்துள்ளான்.

ஆக சுருக்கமாகக் கூறுவதென்றால் காட்டுக் கோழிகள் வணிகக் கோழிகளாக மாறியதில் மனிதனின் செயற்கை முறை தெரிவும், தொழில்நுடபம் மிகுந்த மேலாண்மை, நோய்த் தடுப்பு முறைகளும் குறிப்பிடத் தக்கவை. கோழிகளின் நலன் பாதிக்காமல் அதன் உற்பத்தியை எப்படி அதிகரிப்பது என்பது தான் அறிஞர்களின் முன் உள்ள சவாலாகும்.

செந்தமிழ்ச் செல்வன்

Pin It

acacia tree

ஜல்லிக்கட்டு நடத்தி நாட்டுப் பசுக்களை காப்பாற்றிய தன்னார்வலர்கள், தமிழரின் மரபுசார் விளையாட்டில் கலந்துகொண்டு ஆங்காங்கே இறந்துகிடக்கும் இளைஞர்களின் பிணத்தை எந்த சலனமும் இல்லாமல் தாண்டிச் சென்று, இன்று சீமைக்கருவேல மரத்தைப் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளனர்.

சீமைக்கருவேல் தண்ணீரை ஏகத்துக்கும் உறிஞ்சி வறட்சியை உண்டாக்குகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அந்த அளவுக்கு அதை அகற்றும் பணியில் நடைமுறை சிக்கல்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல் நடைபெற்று வரும் கூத்துகள்.

நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் தமிழகத்தில் எதுவுமே நடக்கும் என்ற ஒரு புதிய வகையான மக்களாட்சி முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும், அந்தந்த துறைசார் வல்லுனர்கள், அதிகாரிகள் என்ற இனம் அருகி தன்னார்வலர்களே மருத்துவர்களாக, நீரியல் நிபுணர்களாக, மண்வள வல்லுநர்களாகி விட்டனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி காட்டன் சைஸிங் ஆலைகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களின் பாய்லர்கள், கரியில் எரியும் தேநீர் அடுப்புகள், இஸ்திரி கடைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே எரிபொருள் சீமைக்கருவேல் மரம்தான். ஒரு கிலோ மூன்று முதல் நாலரை ரூபாய் மட்டுமே என்பதோடு மிகக்குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள்.

இந்த விலை குறைவான firewood-க்கு மாற்று இல்லாததால் தமிழகத்தின் பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். அதில் கடுமையாக பாதிக்கப்படப் போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு. மின்சாரத்தை நெருப்புக்கு மாற்றாகப் பயன்படுத்த த.நா.மி.வா இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது.

ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகளிடம் மிகப்பெரிய அளவில் தேங்கியுள்ள Fuel oil எனப்படும் Furnace oil பெரும் மானியத்துடன் சந்தையில் இறக்கிவிடப்பட்டபோதிலும் சீண்டுவாரில்லாமல் கிடக்கிறது. இருக்கும் எரிபொருள்களிலேயே அதிகபட்ச (கிட்டத்தட்ட 4%) கந்தகத்தை மாசாக வெளியிடக்கூடியது. 25 டிகிரிக்கு குறைவான வெப்பநிலையில் உறைந்துவிடும் என்பதால் குளிர்காலத்தில் தொட்டியிலிருந்து உறிஞ்சுவதற்கு மின்சார வெப்பமூட்டி வேண்டுமென்பதால்தான் பெரிய பெரிய தொழிற்சாலைகள் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைப் பயன்படுத்தி வருகின்றன. டெல்லியில் 2000 சிசி-க்கும் அதிக சக்தியுடைய டீசல் மகிழ்வுந்துகளைத் தடை செய்த பின்னரும் காற்று மாசு குறையாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை; பக்கத்து மாவட்டங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதுதான் காரணம் என்று முட்டு கொடுக்கப்பட்டபோது தலைநகரத்தில் எத்தனை ஆலைகளில் நாள்தோறும் எத்தனை ஆயிரம் லிட்டர் ஃபர்னேஸ் ஆயில் எரிக்கப்படுகிறது, அதன் மானிய விழுக்காடு குறித்த தகவல்களை CSE-யின் சுனிதா நாராயண் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மாற்று எரிபொருள் தேவைகள் குறித்து பல மேலைநாட்டு தொழில் வர்த்தக சபைகள் அக்கறை காட்டி பேசிவரும் சூழலில் பெட்ரோலிய சுத்திகரிப்பின்போது ஃபர்னேஸ் ஆயிலுக்கு கொஞ்சம் மேலே நிற்கும் பெட் கோக் எனப்படும் petroleum coke-இன் அமெரிக்காவுக்கான இந்திய இறக்குமதி குறித்து சுனிதா நாராயண் ஆரம்பித்து வைத்திருக்கும் சர்ச்சைகள் முக்கியத்துவம் பெறுகிறது. சில நேரங்களில் CSE-யின் உட்டாலக்கடி டேட்டாக்கள் வாட்சப்பில் வருவதைவிட பயங்கர அபாயகரமானது என்பதையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அப்படியெனில் தமிழகத்தின் மலிவான விறகு எரிபொருளை திட்டமிட்டு அழித்து மிக அதிக மாசைப் பரப்பும் ஃபர்னேஸ் ஆயிலை விற்க அமெரிக்க இலுமினாட்டிகள் செய்யும் சதியா என்ற சாதாரண வாட்சப் வாசகனின் கேள்விக்கு இப்போது என்னிடம் பதிலில்லை.

சரி, தமிழகத்தில் சீமைக்கருவேல் அனைத்தும் வேரோடு பிடுங்கி எரியப்பட்டுவிட்டதாக வைத்துக்கொள்வோம். அதன் உடனடி விளைவு வரும் மழைக்காலத்தில் என்னவாக இருக்கும்? வேரும், மரமும் விறகுக்காக எடுத்துச் செல்லப்பட்டபின் அதன் நுனிக்கிளைகள் அனைத்தும் அப்படியேதான் வீசப்பட்டிருக்கின்றன.

acacia tree 1

ஓர் உயிர்சூழலில் ஒரு மரத்தினை முற்றிலுமாக அகற்றும்போது அடுத்த வலுவான தாவர இனம் அந்த இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பது இயல்பு. ஆனால் கோடை ஆரம்பிக்கும் தருவாயில் அவற்றை அப்புறப்படுத்துகையில் கோடை முடிந்து அடுத்த மழை வரும்வரை அந்த இடம் கட்டாந்தரையாகவே கிடக்கும் என்பது தன்னார்வலர்களுக்கும் தெரியும். கன மழை வரும்போது மாற்று மரங்களோ, செடிகொடிகளோ இல்லாத நிலையில் ஏற்படப்போகும் கடுமையான மண் அரிப்பு, அதனால் மேல் மண்ணில் ஏற்படும் சத்துக்கள் இழப்பு, வெட்டி வீசப்பட்ட நுனிக்கிளைகள் நீர்வழிப்பாதைகளில் சென்று வாய்க்கால்களை, மதகுகளை அடைத்து அதனால் உண்டாகப் போகும் கரை உடைப்புகள், அதன் மேற்படி சேதம் எல்லாம் மனித திட்டமிடலில் உள்ள தவறால் நிகழக்கூடியவை.

நம் முன்னோர்கள் குளங்களை கோடையில் குடிமராமத்து செய்து அந்தந்த ஊர் மக்களே பாதுகாத்தனர் என்ற தகவலை வாட்சப் மூலம் அறிந்துகொண்ட தன்னார்வத் தமிழர்கள் குளங்களைப் பாதுகாக்க ஜேசிபி-யை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டனர். புற்கள், புதர்கள், செடிகொடிகள், சிறு மரங்கள், பெரிய மரங்கள், காய்ந்த சருகுகள் என அனைத்தும் சேர்ந்துதான் உயிர்ச்சூழல். ஏரி, குளம் என்றாலே அபார்ட்மென்ட்வாழ் தமிழர்கள் பொச்சு கழுவ ஊருக்கு நடுவில் தண்ணீரைத் தேக்கிவைக்கும் பெரிய மண்ணாலான தொட்டி என்ற புரிதலோடு ஜேசிபி-யுடன் நின்று போஸ் கொடுக்கும் குரூர மனங்கொண்ட சகமனிதர்களுடன் வாழப் பழகிவிட்டிருக்கிறோம். கடும் மழைக்காலத்தையும், கோடை காலத்தையும் தாங்கித்தான் தேரை, நத்தை முதல் யானைவரை வாழ்கின்றன. ஒரு நிலத்தை அறுத்து எடு்த்துவிட்டு எதை பாதுகாக்கப் போகிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் வாழ வேண்டியிருக்கிறது. பலவருட வண்டலை, குளங்களில் முற்றிலும் மண்தெரிய ஒரே ஆண்டில் தோண்டுவதுதான் தூர்வாருதல் என்றால் களைக்கொல்லிகளைத் தெளித்துவிட்டு இரண்டு வாரங்கள் கழித்து தீ வைத்துவிடலாம. இரண்டும் ஒரேமாதிரியான விளைவுகளைத்தான் உண்டாக்கும் என்றாலும் பின்னது மிகவும் செலவு குறைவான ஒன்று. உயிரிச்சூழலாவது, வெங்காயமாவது.

திராவிட ஆட்சிகள்தான் தமிழகத்தின் இயற்கை வளங்களை சூறையாடிவிட்டன என்று இராஜஸ்தான் மார்பில்ஸ் பதிக்கப்பட்ட கக்கூஸில் அமர்ந்துகொண்டு பலர் தொடர்ந்து பதிவு எழுதி ஒருவகையான மனப்பிறழ்வுக்கு ஆளாகி வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். திராவிடக் கட்சிகள் இல்லாத மாநிலங்களில் மார்பில்ஸ் என்பது ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் மரத்தில் காய்க்கிறது, டைல்ஸ் எல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நாட்டுக் கோமாதாவின் பாலிலிருந்து நெய் எடுப்பதுபோல லேசாக ஆப்பையை விட்டு கிளறி எடுக்கப்படுகிறது என்று எண்ணுகிறார்கள் போலும்...!

- ஆர்.எஸ்.பிரபு

Pin It

ஒரு தேசத்தின் வளத்தை அந்த தேசத்தில் வாழும் உயிரினங்களை வைத்து அறிந்து கொள்ளலாம். இந்தியாவைப் போல பல்லுயிர் தன்மை கொண்ட ஒரு தேசத்தைக் காண்பது இயலாது. ஒவ்வொரு உயிரினமும் அது வாழ்வதற்கென்று ஒரு சூழல் வேண்டும். அந்த சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரிணாம வளர்ச்சி அடைந்து வாழும் எண்ணற்ற உயிரினங்கள் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு உயிரினமும் சூழலை சமநிலையில் வைக்கவும், இயற்கையைக் காக்கவும் உதவி புரிகின்றன. ஒவ்வொரு உயிருக்கும் சூழலை முறையாகக் கட்டமைப்பதில் ஒரு பங்கு உண்டு. இந்த கட்டமைப்பு தான், இன்று வரை இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை இந்த கட்டமைப்பு நல்ல நிலையில் இல்லை. மனிதனின் சுய தேவைகளுக்காக இந்த காடமைப்பு வேகமாக உடைக்கப்படுகிறது.

elephants

உலகில் இரண்டு கண்டங்களில் மட்டுமே யானைகள் வாழ்கின்றன. ஆசியாவைப் பொருத்தவரை யானைகள் அதிகம் இருப்பது இந்தியாவில் தான். யானைகள் பொதுவாக ஒரே இடத்தில வாழ்வதில்லை. அவற்றுக்கென வலசை பாதை உண்டு. அந்த பாதையைத் தான் அவை தொடர்ந்து பயன்படுத்துகின்றன. தனது குட்டிகளுக்கும் போதிக்கின்றன. தற்போதைய பிரச்சினையே இந்த வலசைப் பாதைகளை அது இழந்து வருவது தான். இந்தப் பாதைகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுமானால் யானைகள் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும். யானைகள் இல்லாமல் நம் காடுகள் கிடையாது. காடுகள் இல்லாமல் மழை கிடையாது. மழையின்றி வேளாண்மை கிடையாது.

ஈஷாவின் செயல்பாடுகள் யானைகளை நிச்சயம் பாதிக்கக்கூடியது. பல நேரங்களில் காடுகளை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் அத்துமீறல்களே கூட விலங்குகளுக்குப் பாதகமாக முடியும். முக்கியமாக ஒலி மாசு (NOISE POLLUTION). மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சத்தம் விலங்குகள் மற்றும் பறவைகள், தங்களிடையே தகவல் பரிமாற்றத்திற்கு உருவாக்கும் சத்தங்களை விட அதிகமாக இருப்பதால் அவை பாதிக்கின்றன. கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். யானைகள் வந்து செல்லும் பாதையில் ட்ரம்ஸ் மணி தனது அதிரடி இசையை வெளிப்படுத்துகிறார். இதை யானைகள் விரும்புமா? யானைகளுக்கு இது அவசியமா?

ஈஷா மட்டுமே இங்கே பிரச்சனை இல்லை. ஈஷாவைப் போல எண்ணற்ற நிறுவனங்கள் காடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கின்றன. வலசைப் பாதை தொலைத்த யானைகள் வாகனங்களிலும் ரயில்களிலும் அடிபட்டு சாகின்றன. இதற்கெல்லாம் யார் காரணம்? என்ன தீர்வு? அரசின் நடவடிக்கைகள் என்ன? சென்ற ஆண்டு மட்டும் 86 யானைகள் தமிழகத்தில் இறந்துவிட்டன. இந்த ஆண்டும் இது தொடந்து கொண்டே இருக்கிறது. காடுகளுக்குள் போடப்படும் குப்பைகளை உண்ணும் யானைகள் மற்றும் அணைகள் கட்டியதால் ஆற்றில் நீரோட்டம் இன்றி தேங்கி இருக்கும் நீரை புழுக்களோடு குடிக்கும் யானைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மனிதர்களால் உண்டாக்கப்படும் காட்டுத்தீ, புதிய புதிய சாலைகள், மின் வேலிகள், அகழிகள், ஒலி மாசு என பல காரணங்களால் யானைகள் துரத்தப்படுகின்றன.

யானைகளின் பிரம்மாண்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. யானைகளைப் பார்க்கும் போதெல்லாம் நமக்குள் ஒரு புத்துணர்ச்சி உருவாகிறதே ஏன்? இந்திய கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக யானைகள் இருக்கின்றனவே எப்படி? யானைகளை இழப்பது, இயற்கையை இழப்பது போல் இல்லையா? பரிணாம வளர்ச்சியில் உருவான இத்தனை பெரிய உயிரினம் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ இல்லை, நம்மூரில் இருக்கின்றன. பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது இல்லையா?

"யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்பது மனித சுயநலத்தில் உண்டான பழமொழி. யானைகளை பணத்தால் மதிப்பிட முடியாது. யானைகளின் சாணத்தில் உள்ள உப்பை உறிஞ்சி வாழும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்கை செய்வதன் மூலம் புதிய பழங்களை உருவாக்குகின்றன. அந்தப் பழத்தை உண்ணும் யானை முளைப்புத் தன்மை கொண்ட விதைகளை உருவாக்குகிறது. இதையெல்லாம் மனிதர்களால் செய்து கொண்டிருக்க முடியாது. இந்தப் பூமியில் மனிதர்களுக்கு வாழும் உரிமையை விட யானைகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே இருக்கிறது. இதை நம் உணர மறுத்தால் இயற்கை உணர்த்தும்.

- பா.சதீஸ் முத்து கோபால்

Pin It