கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கழிவுகள் ஒரு நீர் நிலையின் ஜீவனை நிலைநிறுத்தும் என்று கேட்கும்போது நெற்றி சுளிப்பவர்களுக்கு கென்யா சாவோ (Tsavo) தேசியப் பூங்காவில் உள்ள எம்சிமா அருவி (Mzima Spring) அந்த கருத்து தவறு என்பதற்கு ஒரு வலுவான ஆதாரம். இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்களான நீர் யானைகளே இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். பகல் முழுவதும் எம்சிமாவில் தூங்கி, கொண்டாடி, நீந்தி மகிழும் இந்த உயிரினங்களின் கழிவுகள் நீரில் கலக்கும்போதே இந்த அருவி ஜீவனுள்ளதாகிறது!
நீர் யானைகளின் கழிவுகள் எம்சிமாவை (Mzima Springs) கண்ணாடி போல பாதுகாக்கிறது. கழிவில் அடங்கியுள்ள சத்துகளுக்கு அப்பால் எம்சிமாவைத் தவிர அதில் வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் அருகில் உள்ள பரந்து விரிந்த பழக்காடுகள், புல் மேடுகளுக்கு இந்த அருவி ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் தருகிறது. நீர் நிலையின் நிலைநிற்பிற்கு இது இன்றியமையாததாக மாறுகிறது. இதுவே இந்தப் பூங்காவின் அற்புதம்.
ஆறு மாத காலம் நீண்டு நிற்கும் கடுமையான வறட்சி. ஒரு துளி நீருக்காக நான்கு பக்கமும் ஓடும் விலங்குகள். வற்றி வறண்ட ஆற்றில் குழி தோண்டி தூய்மையான நீரை சேகரிக்கும் பிரம்மாண்ட யானைகள். நீர் தேடி மைல் கணக்கான தொலைவுகளில் இருந்து பறந்து வரும் பறவைகள். இதற்கு நடுவிலும் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றிகரமாக வாழ்பவர்கள்! அவர்கள் சாவோவில் உண்டாக்கிய புரட்சிகரமான மாற்றங்களே இந்தக் கதையின் சாராம்சம்.
கென்யாவின் பழமையான தேசியப் பூங்காவான சாவோவில் உள்ள உயிரினங்களின் அசாதாரண வாழ்க்கையே இந்த அழகான கதை! 13,747 சதுர கிலோமீட்டர் பரப்பில் பரந்து விரிந்து உள்ள கென்யா தேசியப் பூங்காவே சாவோ பூங்கா. நீர்யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள் உள்ளிட்ட பல தரப்பட்ட விலங்குகளும் பல அபூர்வ தாவர வகைகளும் வாழும் இந்தப் பூங்கா வன உயிரினங்களின் தியேட்டர் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வாழும் எண்ணற்ற உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ள பல நீரருவிகளில் எம்சிமாவும் ஒன்று. நீர் யானைகளின் சத்துகள் நிறைந்த கழிவுகள் இந்த அருவியை வளமாக்குகிறது. இந்த நீர் வளத்தை மட்டுமே நம்பி வாழும் ஏராளமான நுண்ணுயிரிகள், மீன்கள் இங்கு உள்ளன. கழிவுகளை உண்ணும் நுண்ணுயிரிகள் இங்குள்ள நீரை நச்சுத் தன்மையற்றதாக மாற்றுகிறது. இவற்றை உண்டு வாழும் மீன்களும் இங்கு உள்ளன. அருகில் இருக்கும் பழக்காடுகளுக்கும் இந்த நீர்நிலையே ஆதாரமாக உள்ளது.
ஈச்சை, அத்தி, நாவல் போன்றவை நீர்நிலைக்கு அருகில் பழங்களின் சொர்க்கபூமியை உருவாக்குகின்றன. இந்த பழங்களை உண்டு உயிர் வாழும் வெல்வெட் குரங்குகள் போன்ற உயிரினங்களுக்கும் இந்த நீர்நிலை ஆதாரமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் பேருக்கு மட்டுமே வாழ்ந்த நீர் யானைகளின் மீள்வரவு இப்போது இந்த வனப்பகுதி முழுவதையும் செழுமையடையச் செய்துள்ளது. சூலு (hyulu) குன்றுகளுக்குக் கீழ் இயற்கை உண்டாக்கிய நீர்த்தேக்கம் என்று எம்சிமா அழைக்கப்படுகிறது.
தாகம் போக்கும் சிவப்பு யானைகள்
கென்யாவில் எம்டீட்டே ஆண்டேவில் (Mtito Andei) இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் சாவோ பூங்காவின் தெற்குப் பகுதியில் எம்சிமா அருவி அமைந்துள்ளது. உலகின் தூய்மையான நீர்நிலைகளின் பட்டியலில் இந்த அருவியும் உள்ளது. மலைத்தொடர் பாறைகளில் உண்டாகும் பல துவாரங்கள் வழியாக அருவிக்கு நீர்வரத்து நடைபெறுகிறது. இதனால் கடும் வறட்சியிலும் இங்கு மட்டும் நீர் வற்றுவதில்லை.
தினம் 50 மில்லியன் கேலன் நீர் மலை உச்சியில் இருந்து இங்கு வருகிறது. நீர் யானைகள் தவிர நைல் முதலைகளும் இந்த இடத்தின் நிரந்தர குடியிருப்பாளர்கள். இங்கிருந்து மற்ற நீர்நிலைகள் வெகு தொலைவில் அமைந்திருப்பதால் இந்த உயிரினங்களுக்கு இந்த அருவியே முக்கியமான வாழிடம். அருவியுடன் தொடர்புபடுத்தி நீர் யானைகள் உண்டாக்கிய இயற்கை விதிகள் மற்றும் உணவுச் சங்கிலியின் கதை மகத்தானது.
சாவோ பூங்காவின் மேற்கு எல்லையில் உலகிலேயே மிக உயரத்தில் இருந்து எரிமலைக் குழம்பு ஓடிவரும் யாட்டா (Yatta) பீடபூமி உள்ளது. 290 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஓடிவரும் இந்த குழம்பே கடினமான காலநிலையிலும் இங்கு இயற்கையாக உருவாகியிருக்கும் சில நீர் நிலைகளுக்கு நீரைக் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆறு மாதகாலம் கூட நீண்டு நிற்கும் கடும் வெப்பத்தில் இவை உயிரினங்களுக்கு நீர் கொண்டு வந்து சேர்க்கிறது.
பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் சிவப்பு யானைகளுக்கும் இந்த இடத்தின் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு உள்ளது. யானைகள் கடும் கோடையில் குடிக்க நீர் தேடி அலையும் விலங்குகளின் தாகம் போக்கும் சேவையை செய்கின்றன. வறண்டு போன நதியில் குழி தோண்டி நீரை சுரக்கச் செய்கின்றன. இவை மற்ற யானைகளுக்கு இல்லாத நீண்ட தந்தங்களையும் தும்பிக்கையையும் இதற்கான ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றன.
இவை பல பகுதிகளிலும் குழிகளை உண்டாக்கி நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கின்றன. நீரைத் தேடி பூங்காவின் எண்ணற்ற சிறு உயிரினங்கள், பறவைகள் வருகின்றன. இந்த யானைகளுக்கு நீர் உள்ள இடத்தை கண்டறியும் திறன் உள்ளது. இரும்பின் அம்சம் அதிகமாக உள்ள பூங்காவின் மண் மற்றும் தூசுக்களே இங்கு வாழும் யானைகளுக்கு சிவப்பு நிறத்தைத் தருகிறது. வெப்பத்தை சமாளிக்க சேற்றைப் பூசி நீரில் குளிப்பதால் இவற்றின் உடல் சிவப்பாக மாறியது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனிதனைக் கொன்று தின்ற இரட்டைச் சிங்கங்கள்
புள்ளிவிவரங்களின்படி 13,000 யானைகள் இங்கு வாழ்கின்றன. சூப்பர் டஸ்க்கர் (Super tusker) என்று அழைக்கப்படும் யானைகள் இதில் வியப்புக்குரிய அம்சம். இந்த இடம் 10 முதல் 13 அடி வரை உயரம் உள்ள இவற்றின் முக்கிய வாழிடம். இவற்றின் உடல் எடை 45 கிலோ. இவற்றின் தந்தங்கள் தரை வரை தொடும். அதனால் இவற்றுக்கு சூப்பர் டஸ்க்கர் என்ற பெயர் ஏற்பட்டது.
உலகில் இன்று மிச்சம் இருக்கும் இத்தகைய 30 யானைகளில் ஒரு சில இப்போது சாவோவில் வாழ்கின்றன. இவை ஆப்பிரிக்க யானைகளில் மரபணு ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களால் தோன்றின. காலநிலை மாற்றம், வேட்டையாடல், மனித வன விலங்கு மோதல் போன்றவை ஆப்பிரிக்க யானைகளின் வாழ்வை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. ஜிம்பாப்வே, போட்ஸ்வானா போன்ற நாடுகள் இந்த யானைகளை வேட்டையாட அனுமதிக்கின்றன.
ஆனால் கென்யா இதை அனுமதிப்பதில்லை. 2022 நவம்பர் 21 அன்று இங்கு வாழ்ந்த சூப்பர் டஸ்க்கர் யானைகளில் ஒன்றான லுகார்டு (Lugard) யானை பூங்காவின் மேற்குப் பகுதியில் இறந்தது. இது கடும் வறட்சியால் மரணமடைந்தது என்று அதன் உடலைப் பகுப்பாய்வு செய்த நிபுணர்கள் கூறினர்.
உயிரிழந்தபோது இதன் வயது 53. அதே மாதம் தித (Dida) என்ற மற்றொரு சூப்பர் டஸ்க்கர் யானையும் இறந்தது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று சாவோ சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை கூறுகிறது. இவை இறந்தபோது இவற்றின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. லுகார்டின் இறந்த உடல் அது இறந்து மூன்று நாட்களுக்குப் பிறகே கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட தந்தமும் எடுப்பான முகமும் லுகார்டின் தனித்துவமான பண்புகள். வருகையாளர்கள் மற்றும் வனட் துறையினரிடமும் அன்பாகப் பழகி வந்த லுகார்டின் உயிரிழப்பு பூங்காவிற்கே பெரிய நஷ்டமாக கருதப்பட்டது.
சாதாரணமாக சிங்கங்கள் மனிதர்களை வேட்டையாடுவதில்லை. ஆனால் இந்தப் பூங்கா இந்தக் கூற்றை மாற்றி எழுதிய ஒரு சரித்திரம் உள்ளது. 1898ல், ஒன்பது மாதங்களில் 135 பேரை இங்கு வாழ்ந்த இரட்டை ஆண் சிங்கங்கள் வேட்டையாடின. பிடரி இல்லாத இந்த ராட்சத சிங்கங்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. இது பற்றி ஆழமாக ஆராயப்பட்டது.
இரயில் பாதை அமைப்பும் சிங்கங்களின் வேட்டையாடலும்
1898ல் கென்யா உகாண்டா இரயில் பாதை அமைக்கும் வேலை தொடங்கியது. இதற்கு ஆசியாவில் இருந்து வந்தவர்களை 1889 மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள காலத்தில் இந்த இரட்டைச் சிங்கங்கள் கொன்று தின்றன. இவை பிறகு சுட்டுக் கொல்லப்பட்டன என்றாலும் பூங்காவின் வரலாற்றில் இந்த நாட்கள் பீதி ஏற்படுத்துபவையாக இருந்தன.
கென்யா 1889 மார்ச்சில் சாவோ நதிக்குக் குறுக்கே இரயில் பாதை அமைக்கும் வேலையை ஆரம்பித்தது. முகாம்கள் 13 கிலோமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டன. பாதை அமைப்பதற்காக இந்தியத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்தனர். வேலை ஆரம்பித்ததுடன் சிங்கங்களின் தாக்குதலும் தொடங்கியது. இரவில் இவை பல தொழிலாளர்களை இழுத்துச் சென்று உண்டன. வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு பேரை இவை கொன்றன.
சிங்கங்களைக் கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு தலைவராக லெப்டினண்ட் கர்னல் ஜான் ஹென்றி பேட்டர்சன் (John Henry Patterson) இருந்தார். சிங்கங்களைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன. ஆனால் பலன் ஏற்படவில்லை. இருபது பேர் அடங்கிய குழு கர்னல் இதற்காக உருவாக்கப்பட்டது. பல முயற்சிகளுக்குப் பிறகு டிசம்பர் 9 அன்று இரண்டு சிங்கங்களில் ஒன்று கொல்லப்பட்டது. இருபது நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சிங்கமும் கொல்லப்பட்டது. பிறகு இவற்றின் தோல் 1924ல் சிகாகோவில் ஃபீல்டு அருங்காட்சியகத்தில் 5,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இவையே வரலாற்றில் மிக அதிகமான மனிதர்களைக் கொன்றவை. இவற்றின் மண்டையோடு மற்றும் உடலின் தலைப்பகுதி ஆராயப்பட்டன. பற்கள் சேதமடைந்திருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு வேளை இவற்றின் கொலை வெறிக்குக் காரணமாக இருக்கலாம்.
அற்புதங்களின் முடிவில்லாத கதை சொல்லும் தேசியப் பூங்காக்கள்
ஒவ்வொரு தேசியப் பூங்காவிற்கும் சொல்வதற்கு என்று ஏராளமான ஆச்சரியங்கள், அற்புதங்களின் கதைகள் உண்டு. மனிதனைத் தவிர காடும் மலையும் கடலும் இயற்கையின் பங்குதாரர்கள் என்பதை இத்தகைய பூங்காக்கள் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின் வெற்றி போராட்டங்களின் அனுபவப் பாடங்கள். அந்தக் கதைகளை இவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இயற்கையை காக்க வேண்டிய பொறுப்பு மனிதனுக்கு உண்டு என்பதை இவை நினைவுபடுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றில் அதிக வெப்பமுடைய ஆண்டாகவே நம்மைக் கடந்து செல்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் எல்நினோ போன்ற நிகழ்வுகளும் புவி வெப்ப உயர்வும் மீளமுடியாத பேரிடரை நோக்கியே நம்மை இழுத்துச் செல்கிறது. இந்நிலையில் இத்தகைய இடங்கள் பேரிடர்களின் தீவிரத்தைக் குறைக்க நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
உலகை ஆச்சரியப்படுத்திய சாவோ பூங்காவின் கதையும் இதையே நமக்கு ஞாபகப்படுத்துகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
அதிதீவிர காலநிலையில் ஒற்றை மர வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் காடுகளை விட பலவகை மரங்கள் உள்ள காடுகள் நிலைத்து நிற்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. ஒரே ஒரு மர இனம் மட்டும் உள்ள காடுகளைக் காட்டிலும் 35% அதிக ஆற்றலுடன் இரண்டு அல்லது மூன்று மரவகைகள் உள்ள காடுகள் காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகளை சமாளித்து நிற்கின்றன.
மனித முயற்சியில் தோட்டங்களாக உருவாக்கப்படும் காடுகளில் உயரமாக வளரும் ஊசியிலை போன்றவையே அதிகமாக வளர்க்கப்படுகின்றன. ஆனால் இந்த மரங்கள் புயல் போன்ற அதிவேகத்துடன் வீசும் காற்றால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் மெதுவாக வளரும் ஓக் போன்ற கடினத் தன்மையுடைய மர வகைகள் அதிவேக காற்றால் சேதமடைவதில்லை.
வெப்பமான காற்று அதிக ஈரப்பதத்தை பிடித்து வைத்துக் கொள்வதால் புயல்கள் உருவாகின்றன. காலநிலை பாதிப்பால் உயிரிழப்புகள், சேதம், மின் வெட்டு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இடர்களை ஏற்படுத்திய பிரிட்டனைத் தாக்கிய இஷா (Isha) போன்ற அதிதீவிர புயல்கள் இனியும் அடிக்கடி ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மர மேலாண்மையும் காடுகளின் ஆரோக்கியமும்
புயல்களால் காடுகளில் மரங்கள் அழிவதால் வனங்களுக்கும், வனத்துறையினருக்கும் பிரச்சனைகள் அதிகமாகிறது. 2021ல் பிரிட்டனில் குளிர்காலத்தில் வீசிய புயலால் 12,000 ஹெக்டேர் காடுகள் அழிந்தன.
“பொருளாதாரரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும் பைன் போன்ற ஒரே ஒரு வகை மரங்கள் மட்டும் வளரும் காடுகள் புயல்களால் அதிகம் சேதமடைகின்றன. புயலால் மரங்கள் அழிவதை தடுக்க வனங்களில் மர மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் வனங்கள் காப்பாற்றப்படும்” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரும் பிரான்ஸ் விவசாயம், உணவு மற்றும் சூழல் ஆய்வுகளுக்கான மையத்தின் (Inrae) ஆய்வாளருமான டாக்டர் ஜூலியன் பேரர் (Dr Julien Barrere) கூறுகிறார்.
வெப்பமான, வறண்ட மத்திய தரைக்கடல் பகுதி, குளிர் நிறைந்த வட ஸ்காண்டிநேவியா நாடுகளில் இந்த மரப் பன்மயத்தன்மையால் (tree diversity) அதிக பயன்கள் ஏற்படும். இது பற்றிய ஆய்வுக்கட்டுரை செயல்பாட்டு சூழலியல் (Functional Ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதிதீவிர காலநிலை நிகழ்வுகளின்போது காடுகள் எவ்வாறு அதை சமாளித்து வாழ்கின்றன என்பது பற்றி அறிய ஐரோப்பாவில் இருக்கும் தொன்னூறாயிரத்திற்கும் மேற்பட்ட உண்மையான காட்டுப்பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டன. இது வெறும் செயல்முறை பரிந்துரை மட்டும் அல்ல. அறிவியல்ரீதியாக நடத்தப்பட்டு இந்த உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை மேலும் வலுப்படுத்த கள ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
என்றாலும் ஆய்வாளர்களின் இந்த ஆய்வுகள் 2021ல் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் வீசிய ஆர்வன் புயலால் (Storm Arwen) மில்லியன் கணக்கான ஊசியிலை மரத்தோட்டங்கள் அழிந்தது பற்றிய முந்தைய ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்துகிறது.
அழிந்தவை பெரும்பாலும் ஊசியிலை மரம் போன்ற ஒரே வகை இன மரங்கள். உள்ளூர் மர இனங்களை விட புயற்காற்றால் பலவீனமடைந்து சுலபமாக கீழே விழுந்த இவை அனைத்தும் ஒரே வயதுடையவை என்று 2021 ஆய்வு கூறியது.
கிளைகளை தாழ்த்தி வளரும் வயதான மரங்கள்
“பல இன மரங்கள் உயிரி தாவரத்தொகுப்பை (Bio mass) அதிகப்படுத்துவதுடன் அவற்றால் உருவாக்கப்படும் காடுகள் புயல் போன்ற பாதகமான சூழ்நிலை ஏற்படுத்தும் தாக்கத்தில் இருந்து தப்பிக்கின்றன. ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போடக்கூடாது என்ற பழமொழிக்கேற்ப பல இன மரங்கள் வளரும் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். இயற்கையான காடுகளில் ஒரே இன மரங்கள் வளர்வதில்லை. பல இன மரங்கள் உள்ளன” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் மார்ட்டின் லூக்கக் (Prof Martin Lukac) கூறுகிறார்.
பழமையான ஓக் மரங்கள் வயதாகும்போது தங்கள் உறுதித்தன்மையை அதிகரிக்க கிளைகளை கீழ்நோக்கி தாழ்த்தி வளர்கின்றன. இந்த கிளைகளை சூழலியலாளர்கள் வெட்டுவதில்லை, அப்படியே விட்டுவிடுகின்றனர். அதிக இறந்த, வன உயிர்ச் செழுமை வாய்ந்த மரப்பகுதிகள் மூலம் புயல்கள் காடுகளின் உயிர்ப் பன்மயத்தன்மையை அதிகரிக்கின்றன. இது மரத் தோட்டங்களில் அதிக இன வேறுபாடுகளை உருவாக்குகிறது.
ஒரே ஒரு இன மரங்கள் மட்டுமே வளரும் காடுகளை விட 1999ல் பிரான்சில் உள்ள வாஸ்ஜிஸ் (Vosges) காடுகளை தாக்கிய புயலிற்கு பிறகு அங்குள்ள மரங்கள் அதிக நிலைப்பு தன்மையுடையதாக மாறின.
“இன்று நிலவும் மோசமான சூழலில் இந்த ஆய்வு மிகப் பொருத்தமானது. காடுகளின் மர பன்மயத்தன்மையை அதிகரிக்க இப்போது செயல்பட்டால்தான் மரங்கள் வளர்ந்து உரிய பலன் தர சில பல பத்தாண்டுகள் ஆகும்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் ஜான் மேக்கே (Prof John MacKay) கூறுகிறார்.
இனப் பன்மயத்தன்மை காடுகளின் பெருகிவரும் களைகளின் கட்டுப்பாடு, வறட்சி போன்றவற்றை தாக்குப்பிடித்து தாவரங்கள் வளர உதவுகிறது என்று முந்தைய ஆய்வு கூறியது. “பல பத்தாண்டுகள் மற்றும் அதற்கும் அப்பால் நீடித்திருக்கும் கண்ணோட்டத்துடன் தாவரங்கள் வளர்க்கப்பட வேண்டும். நகர்ப்புற காடுகளில் மரபணு மற்றும் இனப் பன்மயத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கு லண்டன் க்யூ (Kew) ராயல் சங்க பூங்கா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மோசமாகி வரும் காலநிலையை எதிர்த்து வளர்பவை மட்டும் இல்லாமல் சரியான மரத்தை சரியான இடத்தில் சரியான நேரத்தில் நட்டு வளர்க்க வேண்டும். இதனால் நோய்கள் கட்டுப்படுத்தப்படும். களைகள் இல்லாமல் தாவரங்கள் வளரும். இன்றைய சூழலில் இந்த ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது” என்று லண்டன் க்யூ (Kew) ராயல் தாவரவியல் பூங்காவின் மர சேகரிப்புப் பிரிவு தலைவர் கெவின் மார்ட்டின் (Kevin Martin) கூறுகிறார்.
மரங்கள் வாழ்ந்தால்தான் மனிதன் வாழ முடியும். மர வளர்ப்பில் இந்த ஆய்வு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் இறக்கைகள் நிறம் மாறுகிறது. இதனால் அவை இணையை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இது அவற்றின் இனப்பெருக்க வாழ்க்கையைப் பாதிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குளிர்ச்சியான காலநிலையில் பிரகாசமான நிறமுள்ளவற்றை விட இருண்ட நிறமுள்ள பதுங்கு பூச்சிகள் (ambush bug) தன் இணையைக் கண்டுபிடிப்பதில் உண்டாகும் தடங்கல்களை வெற்றி கொள்கின்றன.
மற்ற இனங்கள் அப்போதும் தங்களை தயார் செய்து கொண்டிருக்கும்போது இருண்ட நிறமுடைய ஆண் பதுங்கு பூச்சிகள் தங்கள் உடலை சுலபமாக வெதுவெதுப்பாக்கி சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகின்றன. ஆனால் வெப்பநிலை உயரும்போது இது பாதிக்கப்படுகிறது. இதனால் அவற்றின் இணை சேரும் திறன் பாதிப்படைகிறது என்று சூழலியல் மற்றும் பரிணாமம் (Ecology and Evolution) என்ற ஆய்விதழில் இது பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
மனிதத் தூண்டுதலால் நிகழ்ந்துவரும் காலநிலை மாற்றத்தால் பூச்சிகளின் இனப்பெருக்க வாழ்க்கை வருங்காலத்தில் எவ்வாறு பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்கின்றனர்.
“ஒரு பக்கம் பூச்சிகள் எவ்வாறு காலநிலை மாற்றத்திற்கு பதில் வினை புரிகின்றன என்றும் இதை பற்றி கவலைப்படாமல் மகிழ்ச்சியடையலாம் என்றும் நினைக்கிறோம். ஆனால் மறுநாள் காலையில் விழித்தெழும்போது இன்னொரு பக்கம் ஓர் இணையைக் கண்டறிய உதவும் முக்கிய நிறங்களை அடையாளம் காணும் திறனை இழந்ததால் இந்த உயிரினங்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை எண்ணி பெரும் கவலை நமக்குள் எழுகிறது!” என்று ஆஸ்திரேலியா சிட்னி மாக்வெரி (Macquarie) பல்கலைக்கழக சூழலியளாலரும் ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களில் ஒருவருமான மாரியல்லா ஹெர்பெஸ்ட்டைன் (Mariella Herberstein) கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தால் தட்டான் பூச்சிகள் இறக்கைகளின் அலங்காரங்களை இழக்கின்றன என்று முந்தைய ஆய்வு கூறியது.
“முன்பு வெப்பநிலை உயரும்போது பூச்சிகள் மெலனின் (Melanin) நிறமிகளை குறைவாக உற்பத்தி செய்யும் பாரம்பரியப் பண்பை பெற்றிருந்தன. இந்நிறமிகள் அவற்றின் இறக்கை நிறத்தை ஒழுங்குபடுத்துகின்றன. இதனால் இறக்கைகள் பிரகாசமான மற்றும் பிரகாசமற்ற நிறங்களைப் பெறுகின்றன. பொதுவாக அடர்ந்த இருண்ட நிறம் உள்ள பொருட்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சுகின்றன.
வெளிர் நிறமுடைய பொருட்கள் அவற்றின் மீது விழும் நிறக்கதிர்களை அதிகமாகப் பிரதிபலித்து வெளிவிடுகின்றன. இதனால் அப்பொருட்கள் நீண்ட நேரம் குளிர்ச்சியாக இருக்கின்றன. 2016ல் நடந்த ஒரு ஆய்வின்படி வட அமெரிக்க மலைப்பகுதிகளில் வாழும் மீட்ஸ் சல்ஃபர் வண்ணத்துப் பூச்சிகளின் (Mead’s sulphur butterflies) இறக்கை நிறங்கள் வெப்பநிலை அதிகரிக்கும்போது காலப்போக்கில் வெளிறி மங்கலாக மாறுகின்றன.
அப்போது அவற்றின் சல்ஃபர் மஞ்சள் நிற இறக்கைகள் வெளிர் நிறமாக மாறின. 1980-2000 காலகட்டத்தில் சிவப்பு நிறத்தில் இரண்டு புள்ளிகள் உள்ள லேடி ஃபக் பூச்சிகள் (Lady bugs) கறுப்பு நிற புள்ளிகளாக மாறுவது குறைந்தது. லேடி ஃபக் என்பவை இங்கிலாந்தில் லேடி பேர்டு (Lady bird) என்றும் அமெரிக்காவில் லேடி பஃப் அல்லது லேடி சீ கவ் (Lady Sea cow) என்றும் அழைக்கப்படும் ஒரு வகை பூச்சியினம்.
இதே பாணியில் அமைந்துள்ள ஆர்க்டிக் துணைக் கண்ட இலை வண்டுகளின் (Leaf beetle) பின்புறப்பகுதியில் காணப்படும் அடர் நிறமுள்ள புள்ளிகளின் நிறத்தின் அடர்த்தி சூடாகும் வசந்த காலத்தில் குறைகிறது. இம்மாறுதல்கள் எப்போதும் ஒரே மாதிரி அமைவதில்லை என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். 1953 முதல் 2013 வரை அருங்காட்சியகங்களுக்காக 800 மீட்ஸ் சல்ஃபர் வண்ணத்துப்பூச்சி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சில பகுதி மாதிரிகளில் வெளிர் மஞ்சள் நிற இறக்கைகள் காலப்போக்கில் அடர் நிறமாக மாறின. வாக்கிங் ஸ்டிக் (walking stick) பூச்சி குடும்பத்தில் ஒரு இனம் வெப்பநிலை அதிகமானபோது காலப்போக்கில் பசுமையாகவும் அடர் நிறமாகவும் மாறின. 2018ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் வெப்பநிலை அதிகமானபோது கொம்புப்பூச்சிகள் (planthopper) உயரமான மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது தெரிந்தது.
“வரையறுக்கப்பட்ட தரவு தொகுப்புகளை மட்டுமே பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாலும் இந்த சிறிய தரவு விவரங்கள் ஒரே மாதிரியான இடங்களில் வாழும் ஒரே வகை பூச்சிகள் பற்றிய ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் பூச்சிகளின் இறக்கை நிறம் மாறக் காரணமாக உள்ள செயல்முறை பற்றிய இந்த ஆய்வு முடிவுகள் தெளிவற்றதாக உள்ளது; குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று மாக்வரி பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர் டான் மாய் ஹாக் (Tonmoy Haque ) கூறுகிறார்.
“மெலனின் நிறமி வெப்பத்தோடு மட்டும் தொடர்புடைய செயல் இல்லை. இந்த நிறமி நோய் எதிர்ப்பு செயல்கள் மற்றும் சூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிரியக்கத்தை தடுக்க பூச்சிகளுக்கு உதவுகிறது. இணையைக் கவர்வதில், இரை பிடி அல்லது இரையாகும் உயிரினங்களிடம் இருந்து ஏமாற்று வித்தை காட்டி தப்பிப்பதில், ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் ஓர் உறுப்பினர் மற்ற இனங்களை அடையாளம் காண்பதில் பூச்சிகளின் இறக்கை நிறங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் இந்த பண்பு வெப்பநிலை உயர்வினால் மாற்றமடையலாம். இது அவற்றின் இனப்பெருக்க ஆற்றலைப் பாதிக்கிறது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைகிறது. நம்பகத் தன்மை பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது” என்று ஹெர்பெஸ்ட்டைன் கூறுகிறார்.
வெப்பம் மிகுந்த இடங்களில் ஆண் தட்டான்பூச்சிகளின் இறக்கைகள் நிறமில்லாமல் போனதைப் பற்றி 2021ல் ஆராய்ந்த கொலராடோ டென்வர் பல்கலைக்கழக ஒருங்கிணைந்த உயிரியலாளர் மைக்கேல் மூர் (Michael Moore) “பூச்சிகளின் இறக்கை நிறமாற்றம், அவற்றின் இனப்பெருக்க ஆற்றல் பாதிப்பு பற்றிய இந்த புதிருக்கு விடை காணப்பட்டால் பூச்சிகள் எவ்வாறு காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழ்கின்றன என்று நம்மால் அறிய முடியும்” என்று கூறுகிறார்.
இயற்கையின் தாளம் தப்பாமல் பாதுகாக்கும் உயிரினங்கள் அழிந்துவிட்டால் மனிதனின் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும். வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தி இயற்கையுடன் இணைந்து வாழ முயல்வோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/article/2024/jul/13/climate-insect-colours-sex-lives-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பல கோயில் நுழைவாயில்களில் தும்பிக்கையை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டியபடி அசைந்தாடும் யானையப் பார்த்திருப்போம். அவற்றின் நிலை பற்றி நாம் என்றேனும் சிந்தித்திருக்கிறோமா? அவர்களின் தலைவிதி என்று மாறும்? ஆண்டுதோறும் மனிதன் தீர்மானித்துக் கொண்டாடும் பல தினங்களில் யானைக்கும் ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர இவற்றின் மீது நாம் உண்மையான அக்கறை காட்டுகிறோமா?
யானைகளின் இடம் நாடு அல்ல; கோயில் வாசல் அல்ல; காடுதான். மனிதர்கள் போல அவைகளும் சமூக விலங்குகளே, கூட்டமாக வாழ்பவை. ஒன்றுக்கொன்று உதவி செய்து வாழ்க்கை நடத்துபவை. ஊரில் உற்றவர்கள், உடையவர்கள், பங்காளிகள், நண்பர்கள், குழந்தைகளுடன் வாழும் மனிதன் ஒரே ஒரு நாள் காட்டில் தன்னந்தனியாக வாழ வேண்டி வந்தால் அப்போது ஏற்படும் மனநிலையை அவனால் ஊகிக்க முடியும்.
காட்டில் கூட்டமாக வாழும் யானையை மனிதன் தன் வாழிடத்திற்கு அழைத்து வந்தபோது அதனால் அதற்கு தாங்க முடியாத தனிமையையும் மனப் போராட்டங்களையும் சந்திக்க வேண்டி நேரிட்டது. அவை தினமும் இருபது மணி நேரத்திற்கும் மேல் செலவழித்து காடு முழுவதும் அலைந்து திரிந்து பத்துக்கும் மேற்பட்ட மரங்களின் இலைகளை உண்டு வாழ்ந்தன. இவற்றின் முக்கிய உணவு இலைகள், பழங்கள், புற்கள், வேர்கள். காட்டில் வாழும் யானை இருபது மணி நேரம் எடுத்து உண்கின்றன.
ஆனால் இது போல நாட்டிற்கு வரும் யானைக்கு உணவு கொடுக்கப்படுவதில்லை. தென்னை ஓலை, பனை மட்டைகள் மட்டுமே அவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகிறது. உணவின் அளவைக் குறைப்பது, நீண்ட நேரம் ஆகாரம் கொடுக்காமல் இருப்பது அவற்றுக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உரிய அளவில் நீர் கொடுக்க வேண்டும். ஒரு வளர்ந்த யானைக்கு தினமும் சுமார் 2050 லிட்டர் நீர் தேவை. குடிக்க கொடுக்கப்படும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும்.
யானைகள் கிலோமீட்டர் தூரம் நடக்கும் ஒரு உயிரினம். அதனால் அவற்றை ஒரு இடத்தில் கட்டி வைப்பது பல ஆரோக்கியப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றை திருவிழாக் காலங்களில் நீண்ட நேரம் ஒரு இடத்தில் நிறுத்தி வைப்பதை விரும்புவதில்லை.
காட்டில் வாழ்பவை போல் இல்லாமல் நாட்டில் அவை மனிதனின் கட்டுப்பாட்டில் வாழ்கின்றன. காட்டு யானைகள் கிலோமீட்டர் தூரம் ஒவ்வொரு நாளும் நடந்து உணவைத் தேடி சாப்பிடுகின்றன. ஆனால் நாட்டில் உள்ளவை அளவு குறைந்த இடத்தில் வாழ வேண்டி நேரிடுகிறது. அவற்றுக்கு மனிதர்கள் கொடுக்கும் உணவு மட்டுமே கிடைக்கிறது. விழாக் கொண்டாட்டங்களில் யானைகளைப் பயன்படுத்தும்போது அவற்றுக்கு அது மிகக் கொடிய அனுபவத்தையே தருகிறது. பெரிய சத்தங்களை அவை சகித்துக் கொள்வதில்லை. வியர்வை சுரப்பிகள் குறைவாக உள்ளதால் அதிக வெப்பத்தை அவை தாங்குவதில்லை.
சாலையில்... சுட்டுப் பொசுக்கும் வெய்யிலில்... பயமுறுத்தும் தீப்பந்தங்களுக்கு அருகில்... பேரிரைச்சலை எழுப்பும் வாத்திய மேளங்களுக்கு நடுவில்... நிற்க வேண்டி ஏற்படும் யானைகளின் தலைவிதியை நாம் என்று உணரப் போகிறோம்? பழைய கணக்குகளின்படி யானைகள் இயல்பாக 60 - 62 வயதில் மரணமடைந்தன. ஆனால் இப்போது 33-34 வயதில் இறந்து விடுகின்றன.
பொருந்தாத உணவுகளை அவற்றுக்கு கொடுப்பதால் பல ஆரோக்கியப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு அளிக்கப்படும் தவறான சிகிச்சையாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனுடன் ஒற்றைப்படல், பயம், மன அழுத்தம் ஆகியவை சேர்ந்து பாதிப்பதால் அவை இளம் வயதிலேயே உயிரிழக்கும் அவல நிலை ஏற்படுகிறது. அவை கூட்டமாக நடக்க விரும்பும் வன உயிரினங்கள். அதனால் அவற்றை தனியாக நீண்ட நாட்கள் கட்டி வைத்திருப்பது விவேகமில்லாதது.
யானை ஒரு வன உயிரினம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் பல மோதல்களையும் தவிர்க்கலாம். படுத்திருக்கும் நிலையில் யானையின் இதயத்துடிப்பு அதிகமாக உள்ளது. அதனால் அவை அதிக நேரம் நிற்பதை விரும்புகின்றன. ஆரோக்கியமான ஒரு யானை இரண்டு மணி நேரம் சுகமாகத் தூங்கும் இயல்புடையது. நீண்ட தூரம் செல்லும் யானைகள் நின்று கொண்டும் தூங்குவதுண்டு. படுத்து எழுந்து நிற்க கஷ்டப்பட்டால் அது யானையின் மோசமான ஆரோக்கியத்தைக் குறிக்கிறது.
மனிதனால் கேட்க முடியாத அகச்சிவப்பு அலைகளைப் பயன்படுத்தி அவை தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. யானைகளால் மிதமிஞ்சிய சத்தம், சகிக்க முடியாத பிரகாசத்தைத் தாங்க முடிவதில்லை.
பொதுவாக யானைகளுக்கு பார்வைத் திறன் குறைவு. அருகில் இருப்பதை மட்டும் ஒரு கண்ணால் இவை காண்கின்றன. என்றாலும் சரியான தொலைவை அவற்றால் மதிப்பிட முடிவதில்லை. இதனால் யானைக்கு அருகில் இருப்பவரால் எளிதில் தப்பிக்க முடியும். இரவில் குறைந்த வெளிச்சத்தில் அவற்றின் பார்வைத் திறன் மேலும் குறைகிறது. இதைப் புரிந்துகொண்டு அதற்கு அவசியமான வெளிச்சத்தை மட்டுமே கொடுத்து அதைக் கட்டுப்படுத்தினால் அவற்றின் சங்கடம் குறையும்.
யானைக்கு நல்ல மோப்ப சக்தி உள்ளது. அதனால் வாசனையை நுகர்ந்து அருகில் இருப்பவரை அடையாளம் காணமுடியும். இதற்காக தும்பிக்கையையும் நாக்கின் சிறப்புப் பகுதியையும் அவை பயன்படுத்துகின்றன. யானைகளின் உடல் வெப்பநிலை மனிதர்களை விட இரண்டு மடங்கு குறைவு. வியர்வை சுரப்பிகளும் குறைவு. காதை ஆட்டுவது, சிறுநீர், மலம் கழிப்பது, சேற்றையும் மண்ணையும் உடலில் வாரி எடுத்து பூசிக் கொள்வதன் மூலம் அவை உடல் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
இதனால் நாட்டு யானைகளுக்கு குளியல் இன்றியமையாதது. கட்டி வைக்கும்போது, நடத்திச் செல்லும்போது நிழல் உள்ள வழிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும். கால்களில் உள்ள தனிச்சிறப்பு எலும்புகளால் அவற்றால் ஓடமுடியாது; தாவ முடியாது.
மேல் உதடும் மூக்கும் சேர்ந்த நீளமான தும்பிக்கையில் 40,000 திசுக்கள் உள்ளன. இதனால் தொலைவில் இருக்கும் பொருட்களை எடுக்க இவற்றால் முடியும். இவை நீரில் நீந்த நன்கு பயிற்சி பெற்றவை.
வயதுக்கு வந்த ஆண் யானைகளுக்கு இணையை கண்டுபிடிக்கும் காலம் வரும்போது அவற்றுக்கு மதம் பிடிக்கிறது. ஆண் உடலில் இருந்து வரும் ஒரு மணத்தை வைத்தே யானைகள் இணையைக் கண்டுபிடிக்கின்றன. வாசனையால் கவரப்பட்ட பெண் யானை ஆண் யானைக்கு அருகில் செல்லும். அப்படிப்பட்ட சமயங்களில் காடுகளில் ஆண் யானைகள் தனியாக நடக்கும். கூட்டத்தில் உள்ள மற்றவை ஒற்றைப்பட்ட யானையிடம் இருந்து விலகி வாழ்கின்றன.
இயற்கை வழங்கும் இணையுடன் சேர்ந்து வாழ வேண்டிய காலம் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வாழும் நாட்டு ஆண் யானைகள் அந்த நேரத்தில் அதிக கோபமடைகின்றன. குறிப்பாக யானைப் பாகன்கள் மீதே அதிகமாக கோபம் ஏற்படுகிறது. அதனால் ஆண் யானையிடம் இருந்து விலகியிருப்பதே நல்லது. மனிதர்களுக்கு ஏற்படும் விரக துக்கத்தை நன்கு அறிந்து வர்ணிக்கும் மனிதர்கள் யானைகளுக்கு ஏற்படும் துக்கத்தைப் பற்றி பேசுவதில்லை. ஒவ்வொரு நாட்டு யானைக்கும் ஆயிரம் கண்ணீர்க் கதைகள் சொல்வதற்கு இருக்கிறது!
பசி எடுத்தால் உணவிற்காக வன்முறையில் ஈடுபடும் யானைகளின் விலங்கு நீதி, இரசிப்பதற்காக மட்டுமே கொடுமைப்படுத்தும் மனிதன் செய்யும் அநீதி, துரோகத்தைவிடவா பெரியது?! இயற்கை படைத்த எந்த ஒரு உயிரினமும் வெறும் காட்சிப் பொருள் மட்டும் இல்லை. பெருமிதத்தின்... கௌரவத்தின் அடையாளமும் இல்லை! ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதற்கென்று ஒரு விலை மதிப்பு உள்ளது.
யானை ஊருக்குள் புகுந்து நாசம் ஏற்படுத்தும்போது அதை மயக்க வெடி வைத்து காட்டிற்கு விரட்ட...போலீஸும் ராணுவமும் ஊடகங்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் சம்பவங்கள் அரங்கேறும்போது அந்த உயிரினத்தின் மனநிலை பற்றி யார் சிந்திப்பது? காட்டில் தன் போக்கில் சுதந்திரமாக வாழும் யானைகளை ஊருக்கு கொண்டு வந்து சொல்லமுடியாத கொடுமைகளுக்கு உட்படுத்தி பக்குவப்படுத்தி அடிமைப்படுத்தும்போது அதை எதிர்க்கவும் போராடவும் மனிதனுக்கு எதிராக ஒரு வெடி வைக்கவும் முடியாமல் பரிதாபமான நிலையில் அவை வாழ்கின்றன!
இனிமேலும் இந்த அற்புத உயிரினங்களை சுரண்டாமல் இருப்போம்... வாழ்வோம், வாழவிடுவோம்.
மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/wild-life/world-elephant-day-1.980806
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்