வடக்கு மினிசோட்டா நன்னீர் பாதுகாப்பு மற்றும் சூழல் மண்டலப் பாதுகாப்பிற்கு நீர்நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து மினிசோட்டா டுலூப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் எப்போகிராபி (Epography) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

மினிசோட்டாவில் நீர்நிலைகளின் வளமான வாழ்விற்கு இவை முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. ஐந்து வெவ்வேறு இடங்களில் 70 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் நடத்திய நீண்ட ஆய்வுகளின் முடிவில் இது கண்டறியப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பு மற்ற பல ஆய்வாளர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமையும் என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் ஆய்வு மாணவர் டாம் காபிள் கூறியுள்ளார்.ottersமனிதர்கள் மூலம் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளில் இருந்து கரையேற நீர்நாய்களை ஒரு உயிரி அறிவியல் கருவியாக பயன்படுத்த முடியும் என்பது பற்றியும் ஆய்வுக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. மற்ற உயிரினங்களுக்கும் இவற்றின் செயல்கள் நன்மை அளிப்பதாக அமைந்துள்ளது. முக்கிய சூழல் மண்டலங்கள் எல்லாவற்றிலும் இதுபோன்று அவற்றைப் பாதுகாக்கும் உயிரினங்கள் வாழ்கின்றன.

இவை வாழும் இடங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் கெடுதிகளைத் தடுத்து நிறுத்த இவற்றால் முடியும். சூழல் பாதுகாப்பாளர் என்ற நிலையில் நீர்நாய்களின் செயல்கள் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது. வடக்கு மினிசோட்டாவில் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் சூழல் சீரழிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் இவை நன்னீர் சூழல் மண்டலங்களின் பன்மயத் தன்மையையும், அவற்றின் பாதுகாப்பையும் வளமூட்டும் முதன்மை சாளரங்களாக செயல்பட முடியும்.

இதன் மூலம் இந்த இடங்களின் செழுமை அதிகரிக்கும். வடக்கு மினிசோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பிரதேசங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில் நீர்நாய்களின் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டன என்றாலும் இவை வாழும் நீர்நிலைகளில் நீரின் அளவு, தரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டன.

மனிதன் தவிர பூமியில் வாழும் பாக்டீரியாக்கள் முதல் பாண்டாக்கள் வரை அனைத்து உயிரினங்களும் இயற்கையில் இருந்து பெறுவதைத் திரும்பிக் கொடுத்து வாழ்கின்றன. இவை சூழலிற்கு நன்மை செய்யாவிட்டாலும் சீரழிவை ஏற்படுத்துவதில்லை. மனிதன் செய்ய வேண்டிய சூழல் பாதுகாப்புப் பணியை நீர்நாய்கள் போன்ற சில உயிரினங்கள் செய்கின்றன.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

திமிங்கலங்களை வணிக நோக்கங்களுக்காக வேட்டையாடும் ஒரு சில நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. இந்நாடு இப்போது 2024ம் ஆண்டுடன் இதை முழுவதும் கைவிடத் தீர்மானித்துள்ளது. திமிங்கல இறைச்சியின் மீதுள்ள மக்களின் ஆர்வம் குறைந்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நார்வே மற்றும் ஜப்பான் ஆகியவை இதுபோல திமிங்கலங்களை வேட்டையாடும் மற்ற உலக நாடுகள்.

2019-2023 காலகட்டத்தில் நீலத் திமிங்கலங்கள் தவிர அளவில் பெரிய 209 பின் இனத்தைச் சேர்ந்த திமிங்கலங்களையும், அளவில் மிகச் சிறிய இனமான 217 மிங்க் வகை திமிங்கலங்களையும் வேட்டையாட அரசு ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தது. இது இக்காலகட்டத்திற்குரிய வருடாந்திர ஒதுக்கீடு. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக வேட்டைக்காக உரிமம் பெற்றிருந்த இரண்டு கம்பெனிகள் வேட்டையாடுவதை நிறுத்திக் கொண்டன.whaleஇந்த காலகட்டத்தில் 2021ல் ஒரே ஒரு மிங்க் திமிங்கலம் மட்டுமே வேட்டையாடப்பட்டது. இந்த வேட்டையாடல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களில் மிகப் பெரிய பாலூட்டிகள் வகையைச் சேர்ந்த திமிங்கலங்களின் பாதுகாப்பிற்காக இங்கிலாந்து நாட்டைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச திமிங்கல பாதுகாப்பு சங்கத்தின் (International Whaling Commision IWC) உறுப்பினர் பதவியையும் ஐஸ்லாந்து ராஜினாமா செய்தது.

வணிக நோக்கங்களுக்காக இந்த உயிரினங்களை வேட்டையாட அனுமதி கிடைத்ததுடன் மக்களிடையில் இவற்றின் இறைச்சிக்கான தேவையும் குறைந்தது. 2006ல் அரசு முதல் முதலில் திமிங்கலங்களை வேட்டையாட அனுமதி அளித்தது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்யப்படும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன.

சூழலியலாளர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மீன் பிடி தடை உள்ள கடலோரப் பிரதேசங்களின் (no fishing coastal zones) பரப்பு அதிகமானது. இதனால் திமிங்கலங்களைப் பிடிக்க வெகுதூரம் செல்ல வேண்டியதாயிற்று. இது வேட்டைக்கான செலவை அதிகரித்தது.

ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தர மதிப்பீடு உயர்த்தப்பட்டதுடன் இந்த உயிரினங்களின் இறைச்சி ஏற்றுமதியும் குறைந்தது.

இதனால் இப்போது அங்கு இந்த அற்புத உயிரினங்களின் வேட்டை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தப்பிப் பிழைத்தன திமிங்கலங்கள்!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

மழைக் காடுகள் மண்டிக் கிடக்கும் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனீரோ நகரத்தில் முதலைகளையும் பாம்புகளையும் குரங்குகளையும் தெருக்களில் பார்ப்பது சாதாரண காட்சியாகி வருகிறது. நம் ஊர்த்தெருக்களில் நாய்களும், மாடுகளும் அலைந்து திரிவது போல இங்கு வனவிலங்குகள் தெருவில் அலைந்து திரியும் பரிதாபக் காட்சியை சாதாரணமாகக் காணலாம்.

தெருவிலங்குகளாகும் வனவிலங்குகள்

வனங்களில் வாழும் விலங்குகள் இங்கு தெருவிலங்குகளாக்கப்படும் அவலம் நடந்து வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு இவ்வாறு தெருக்களில் அலையும் விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நகரத்திற்கு அருகில் இருக்கும் நீர் இடுக்குகள், நதிகளில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் வாழ்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.monkey 624வாழ இடமில்லை உண்ண உணவில்லை

நகரமயமாக்குதலும், வனப்பிரதேசங்களின் ஆக்கிரமிப்புமே தெருக்களில் இவை அதிகமாக நடமாடக் காரணம் என்று கருதப்படுகிறது. இதனால் மனித வனவிலங்கு மோதல் சம்பவங்கள் ரியோ டி ஜெனீரோவில் அதிகரித்து வருகிறது. இதற்கு சூழல் சீரழிவும், மாசுபடுதலும் ஒரு காரணம். மாசுபட்ட சூழ்நிலையில் வனவிலங்குகளின் இயல்பான உணவு ஆதாரங்கள் மறைந்து விட்டன.

அழியும் பன்மயத்தன்மை

மாசுபடுதல் மூலம் பிரதேசத்தில் காலம் காலமாக இருந்து வந்த உயிர்ப்பன்மயத்தன்மை நாசமாகி வருகிறது.

2020ல் தீயணைப்புப் படையினர் 2,419 வனவிலங்குகளை மனிதர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளில் இருந்து பிடித்தனர். 2021ல் இந்த எண்ணிக்கை 3,534 ஆக அதிகரித்தது. முதலைகள் தவிர குரங்குகள், பாம்புகள், பறவைகள் போன்றவையும் பிடிக்கப்பட்டன. 2022ல் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1,203 வனவிலங்குகள் நகரத் தெருக்களில் இருந்து பிடிக்கப்பட்டன.

பூமியில் மனிதகுலம் நலமுடன் வாழ பாக்டீரியா முதல் காண்டாமிருகம் வரை அனைத்து உயிரினங்களும் நலமுடன் வாழ வேண்டும். இதை உணராமல் அழிவு வேலையைத் தொடரும் மனிதன் தன் சவப்பெட்டிக்கு தானே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறான்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. பூனை குடும்பத்தின் மிகப்பெரிய உறுப்பினராக புலி இருக்கிறது. புலியின் சராசரி ஆயுட்காலம் 11 ஆண்டுகள் ஆகும். கடந்த காலங்களில் 9 வகையான புலிகள் இருந்து வந்த நிலையில் தற்போது 6 வகையான புலிகள் மட்டுமே உள்ளன. புலிகளுக்கு வரலாற்றில் எப்போதும் தனித்த ஓர் இடம் இருந்தே வந்திருக்கின்றன. பண்டைய சிந்து நாகரிகத்தின் முத்திரைகளில் புலிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் சோழர்களின் கொடியில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இந்து புராணங்களில் துர்காதேவியின் வாகனமாக புலி அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது. புலியை கடவுளாக கருதும் சமூகங்களும் இந்தப்புவியில் வாழ்ந்து வந்திருப்பதாக வரலாற்றில் அறிய முடிகிறது.

tigers 600சீன நாட்காட்டியின் ஒவ்வொரு 12 ம் ஆண்டும் புலியின் ஆண்டாக குறிப்பிடப்படுகின்றது. அந்த ஆண்டுகளில் பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என சீனர்கள் கருதுகின்றனர். உணவுச் சங்கிலியில் புலி முக்கிய இடத்தை வகிக்கின்றது. புலியின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழிவகுக்கின்றது. புலிகள் ஒரு காட்டின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதில் முக்கிய இடத்தை வகுக்கின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பதால், காட்டின் பல்லுயிர் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி காடுகளின் உற்பத்தியாகும் நதிகளையும் காப்பாற்றுகிறது.

புலி பசித்தால் மட்டுமே வேட்டையாட வேண்டும், வயிற்றில் குட்டி உள்ள எதையும் வேட்டையாட கூடாது என்ற கட்டுப்பாட்டை தனக்குள் வைத்திருக்கும் ஓர் அழகிய உயிரினம் புலி. உலகில் புலி தோன்றி ஒரு இருபது இலட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆராய்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆசியா முழுவதும், துருக்கி முதல் தூர கிழக்கில் ஓகோட்ஸ்க் கடல் வரை, சுமத்ரா, ஜாவா மற்றும் பாலி தீவுகளில்கூட புலிகள் வாழ்ந்ததாக அறிய முடிகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகப் புலிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என மதிப்பிடப்பட்டது. ஆனால் இன்று புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டன.

உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டுமே சுமார் 70 விழுக்காடு புலிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதன்மூலம் உலகில் அதிகமான புலிகள் இருக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. 2018 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2,967 புலிகள் இருக்கின்றன. இவற்றில் 35 விழுக்காடு புலிகள் சரணாலயத்திற்கு வெளியே வாழ்கின்றன.

அழிந்து கொண்டிருந்த புலிகளை காப்பதற்காக இந்தியாவில் 1973 ம் ஆண்டில் ப்ராஜெக்ட் டைகர் எனும் அரசின் அமைப்பின் மூலம் 9 தேசிய புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டது. தற்போது 51 சரணாலயங்கள் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

புலிகள் வசிக்கும் நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010 ம் ஆண்டு ஒன்றுகூடி, 2022 ம் ஆண்டிற்குள் உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக பெருக்குவது என்ற பிரகடனத்தில் கையெழுத்திட்டனர். இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவின்படியே ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலகப் புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கையை இரு மடங்காக பெருக்க வேண்டும் என்ற இலக்கில் இந்தியா வென்றிருக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடித்திருக்கவில்லை. காரணம் இந்தியாவில் புலிகள் இறப்பு எண்ணிக்கை முன்பை காட்டிலும் அதிகரித்து வருவதுதான்.

2021 ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 127 புலிகள் இறந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.கடந்த 10 ஆண்டு கால தரவுகளில் 2021 ம் ஆண்டு தான் அதிக அளவில் புலிகள் இறப்பு பதிவாகியுள்ளது. 2012 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் 987 புலிகள் இறந்துள்ளன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

புலிகள் எண்ணிக்கை குறைவதற்கு அதன் வாழ்விட இழப்பு ஒரு முக்கியமான காரணமாக இருந்து வருகிறது. காடழிப்பு என்பது புலிகளின் சூழலை மட்டுமல்லாமல், அவற்றின் இரையின் சூழலையும் அழித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதன் தனது சுயநலத்திற்காக காடுகளை துண்டாடியும், அழித்தும் வருகிறான். காடுகளின் குறுக்கே சாலைகள், காடுகளின் நடுவே கட்டடங்கள் என காடுகள் தனது இயற்கையான அழகை இழந்து நிற்கின்றன.

'புலிகள் மட்டுமின்றி அனைத்து காட்டுயிர்களும் வாழ்விடம் அழிக்கப்படுவது, துண்டாடப்படுவது போன்ற சிக்கல்களில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன. ஒரு காட்டை ஊடுருவிச் செல்லும் சாலையை இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மூடி வைத்தாலே காட்டுயிர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கின்றன. பந்திப்பூரில் அதுதான் நடந்தது. இரவு நேரங்களில் பயணிப்பதை தடை செய்தார்கள். அந்த நேரத்தில் புலிகள் மிகவும் செழித்திருக்க தொடங்கின' என்கிறார் புலிகளின் ஆராய்ச்சியாளர் முனைவர் குமரகுரு.

அதேபோல் புலிகள் சந்திக்கும் இன்னொரு சவால் மின்சார வயர்கள். தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களை பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் சேதப்படுத்துவதை தடுக்க மின்சார வயர்கள் போடப்படுகின்றன. பல இடங்களில் இதில் சிக்கியும் புலிகள் இறந்துவிடுகின்றன. தங்கள் வாழ்வாதாரமான மாடுகளை புலிகள் அடித்து கொன்று விடுவதால், புலிகளுக்கு விஷம் வைத்து கொன்று விடும் போக்கும் நிலவுகிறது. கோவா போன்ற மாநிலங்களில் இது அதிகம் நடக்கிறது. வேட்டைக்காக புலிகளை சுட்டுக் கொல்லும் நிலையும் பல இடங்களில் நிலவுகிறது.

புலி - மனிதன் மோதல் அதிகரித்து வருவதை பல செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. கோடை காலங்களில் தண்ணீர் தேடியும், இரை தேடியும் வெளியில் வரும் புலி கண்ணில்படுபவர்களையெல்லாம் தாக்குகிறது. இதனால் புலிகளால் மனித உயிருக்கு ஆபத்து என்றும், புலிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் பலர் பேசுவதை காண்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்பு கூடலூரில் நான்கு நபர்களை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராடியது நம் நினைவுக்கு வரலாம். இது மிகவும் தவறான ஒரு பார்வையாகும்.

புலிகளின் இடத்தைத்தான் மனிதன் ஆக்கிரமித்திருக்கிறானே தவிர, மனிதனின் இடத்தை புலிகள் ஆக்கிரமிக்கவில்லை. பொதுவாகவே புலிகள் 50 முதல் 1,000 ச.கி.மீ. வரையில் தங்களது வாழ்விடத்தை அமைத்துக்கொள்ளும் என்று சொல்கிறார்கள். துரதிஷ்டவசமாக அதுபோன்ற காடுகள் இன்று அரிதாகிக் கொண்டு வருகின்றன. காடுகள் துண்டாடப்பட்டு வருகின்றன. 'புலிகளின் வாழ்விடங்கள் சுருங்கி விடுகின்றன. விலங்குகள் நடமாட்ட பாதைகள் துண்டு துண்டாக ஆக்கப்படுகின்றன. புலிகளுடன் மற்ற வன விலங்குகள் நடமாடுவதற்கு இடமே இல்லாமல் போய்விட்டது. இப்படியிருக்கையில் மோதல் நடக்காமல் என்ன செய்யும்?' என கேள்வி எழுப்புகிறார் மகாராட்டிரத்தின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அசோக்குமார் மிஸ்ரா.

புலிகளை காப்பது பற்றியும், காடுகளின் சமநிலையை பேணுவது பற்றியும் அதிகமான விழிப்புணர்வு இன்று தேவைப்படுகிறது. காடுகளை காப்பதைப்போல இந்த உலகத்தையும் காத்து நிற்பதில் புலிகளுக்கு தனித்த இடம் இருப்பதை உணர்வது அவசியமாகும்.

- வி.களத்தூர் பாரூக்

Pin It