கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதச் செயல்களால் பூமியில் அழிந்த பறவைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 120,000 ஆண்டுகளில் மட்டும் 12% பறவையினங்களை மனிதன் அழித்துள்ளான் என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. இது முன்பு கணக்கிடப்பட்டதை விட இரு மடங்கு அதிகம். 1,430 பறவையினங்கள் 120,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ப்ளெஸ்ட்டோசின் (Pleistocene) காலத்தில் இருந்து மனிதனின் செயல்களால் இன அழிவை சந்தித்துள்ளன.
இது குறித்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதைபடிவ தரவுகள், இதர ஆவணங்கள் மூலம் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை 640 என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் அழிவு பற்றி எந்த விவரமும் பதிவு செய்யப்படாதவையும் அடங்கும். இவற்றை விஞ்ஞானிகள் இருள் இன அழிவு (dark extinction) என்று அழைக்கின்றனர்.
“டோடோ (dodo) போன்ற நன்கறியப்பட்ட பறவையினங்களின் அழிவு பற்றி நமக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பறவையினங்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ள இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் இங்கிலாந்து சூழல் மற்றும் நீரியல் மையத்தின் (Centre for Ecology&Hydrology) சூழலியல் மாதிரி வடிவமைப்பாளருமான டாக்டர் ராப் குக் (Dr Rob Cooke) கூறுகிறார்
இது வரை அறியப்படாத பறவையினங்களின் அழிவை கணக்கிட குக் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினரும் புள்ளியியல் மாதிரியைப் பயன்படுத்தி, அழிந்தது பற்றி தெரிந்த (known extinct) 640 பறவையினங்களை விரிவுபடுத்தி ஆராய்ந்தனர்.
நமக்குத் தெரியாமல் அழிந்த பறவையினங்களே இல்லாத நியூசிலாந்து நாட்டின் இனங்களை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இது வரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள், பறவை உற்றுநோக்கல்களை அடிப்படையாகக் கொண்டு அழிந்த பறவையினங்கள் பற்றிய முழுமையான விவரங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ள நியூசிலாந்தை சுழிநிலைப்புள்ளியாகக் (zero point) கொண்டு அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஆவணப்படுத்தப்படாத, உற்றுநோக்கப்படாத எந்த ஒரு பறவையினமும் அந்நாட்டில் இல்லை.
நியூசிலாந்து தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுக் குழுவினர் ஒரு தீவில் வாழ்ந்திருக்கக்கூடிய பறவையினங்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டனர். பிறகு ஆய்வுக் குழுவினர் இந்த எண்ணிக்கையில் இருந்து அழிந்தது பற்றி தெரிந்த மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பறவையினங்களின் எண்ணிக்கையைக் கழித்து அழிந்தவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டனர். இதன் மூலம் இன அழிவிற்கு உள்ளான கண்டுபிடிக்கப்படாத இனங்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
தீவு வாழ் பறவைகள்
தீவுகளில் வாழும் வலசை மேற்கொள்ளாத பறவைகள் சுலபமாக வெளியில் செல்ல முடியாது என்பதால் இந்த ஆய்வுகள் அவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. இன அழிவைப் பற்றி அறிய தீவுகளே மிகச் சிறந்த இடங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செல்ல வேறு இடங்கள் இல்லையென்பதால் 90% இன அழிவும் தீவுகளிலேயே நிகழ்ந்துள்ளது. ”வன அழிவு, மிதமிஞ்சிய வேட்டையாடுதல், அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு உயிரினங்களே பறவையினங்கள் அழிய முக்கிய காரணம்.
"இந்த ஆய்வில் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ள 1,430 பறவையினங்கள் மிகக்குறைவான கணிப்பே. இந்த அளவு இரண்டாயிரமாக இருக்கலாம்” என்று குக் கூறுகிறார். இயற்கையான இன அழிவுகளின் வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக மனிதச் செயல்களால் கிழக்கு பசுபிக்கில் முதுகெலும்பி உயிரினங்களின் பேரழிவு அலை வீசிய 14ம் நூற்றாண்டில் முக்கிய முதன்மை இன அழிவு சம்பவங்கள் நடந்தன. இது மனிதக் குடியேற்றங்களால் ஏற்பட்ட காடுகளின் அழிவு, ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அறிமுகம் போன்றவற்றால் உண்டானவை.
அதிக எண்ணிக்கையிலான பறவையினங்களின் அழிவு, அந்த இனங்கள் பற்றிய நமது புரிதல், அவற்றின் உயிர்ப் பன்மயச் செழுமை, சூழல் பன்மயத்தன்மை, பரிணாம வரலாற்றிற்கு பேரிழப்பு என்று ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. “நாம் உணர்வதைக் காட்டிலும் உலகம் இப்போது வெறுமையாக உள்ளது. இழக்கப்பட்ட இவை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது” என்று குக் கூறுகிறார். பரந்து விரிந்த சூழலில் இவை ஆற்றும் முக்கிய பங்கும் இழக்கப்பட்டு விட்டது.
விதை பரவல், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் எச்சங்கள் மூலம் பவளப்பாறைகளையும் நிலத்தையும் வளப்படுத்துவதில் பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தாவரங்களின் அமைப்பு, உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் மண்டல இயக்கம் ஆகியவற்றிற்கு உதவும் பெருமளவில் தாவரங்களை உண்டு வாழும் மடகாஸ்கரைச் சேர்ந்த யானைப் பறவையினத்தைச் (elephant birds) சேர்ந்த ஈபியோனிர்த்திடி (Aepyornithidae) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், வானில் பறந்து இரை பிடித்து உண்ணும் ஹாஸ்ட் ஈகிள் (Haast eagle) என்ற இனத்தைச் சேர்ந்த ஹயராயெடிஸ்மூரே (Hieraaetus moorei) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், விதை பரவ உதவும் செஷல்ஸ் பாரகீட் (Seychelles parakeet) என்ற இனத்தைச் சேர்ந்த சிட்டாகுலா வார்டி (Psittacula wardi) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம் போன்றவை அழிந்த இனங்களில் அடங்கும்.
“பெரும்பாலான பறவைகள் மிகச் சிறிய எலும்புகளையே பெற்றுள்ளன. எளிதில் புதைபடிவமாவதில்லை. பல தீவுகளில் புதைபடிவங்கள் உருவாக உகந்த சூழ்நிலை இல்லை. பல இடங்களில் ஆய்வாளர்களில் பலர் பறவைகளின் புதைபடிவங்களைத் தேடுவதில்லை என்பதால் இது வரை ஆய்வாளர்கள் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கையைத் தவறாக மதிப்பிட்டதில் வியப்பேதுமில்லை” என்று மான்செஸ்ட்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக உயிர்ப் பன்மயத்தன்மை பிரிவின் மூத்த கல்வியாளர் (Reader) டாக்டர் அலெக்சாண்டர் லீஸ் (Dr Alexander Lees) கூறுகிறார்.
மெல்லுடலிகளின் அழிவும் பறவையினங்களின் அழிவும்
அழிந்த பறவையினங்களின் மதிப்பீடுகள் அழிந்த மெல்லுடலி (mollusk) உயிரினங்களின் அழிவு பற்றி சமீபத்தில் கண்டறியப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒத்துள்ளது. “இது அழிந்த இனங்களின் எண்ணிக்கையைப் பற்றி தோராயமாக அறிய, நாம் எவற்றை இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்” என்று லீஸ் கூறுகிறார். இப்போது போல மனிதன் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வருங்காலத்தில் இதே போன்ற இனப் பேரழிவுகள் நமக்குத் தெரியாமலேயே தொடரும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
அதிகரிக்கும் காலநிலை மாற்றம் செலுத்தும் அழுத்தம், உணவு வளங்கள் மறைந்து கொண்டிருப்பது, காடுகளின் அழிவால் வரும் ஒரு சில நூறாண்டுகளில் 669 முதல் 739 பறவையினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று இதே ஆய்வுக்குழு முன்பு நடத்திய ஆய்வு முடிவுகள் எச்சரித்தன. உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் பறவைகளின் வாழிட மீட்பு போன்றவற்றின் மூலம் அழியும் இனங்களை நம்மால் காப்பாற்ற முடியும். பறவைகளின் எதிர்காலம் மனிதர்களாகிய நம் கைகளிலேயே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு அவற்றை நம்பியில்லாமல் தன்மகரந்த சேர்க்கை முறைக்கு மாறுகின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது பிரான்சில் பூக்கும் காட்டுப்பூக்கள் சிறிய அளவில், குறைவான தேனை உற்பத்தி செய்யும் பூக்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சுருங்கும் பூக்கள், குறையும் தேன் உற்பத்தி
மகரந்த சேர்க்கை நடைபெற உதவும் பூச்சிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்து விட்டதால் இவை தங்கள் அளவைக் குறைத்து சிறிதாக பூக்கத் தொடங்கி விட்டன. பாரிஸ் நகருக்கு அருகில் இருக்கும் பூந்தோட்டங்களில் வளரும் பான்சீஸ் (Field pansies) எனப்படும், வயோலா ஆர்வென்சிஸ் (Viola arvensis)) என்ற அறிவியல் பெயருடைய பூக்கள் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் பூத்ததை விட இப்போது 10% சிறிதாக பூக்கின்றன. 20% தேனை குறைவாக சுரக்கின்றன.
இந்தப் பூக்களில் இருக்கும் தேனை அருந்த பூச்சிகள் முன்பை விட குறைவாகவே வருகின்றன. அதிக தேனைச் சுரந்து பெரிய வடிவத்தில் பூத்து தங்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க இப்போது அவசியமில்லை. இதனால் பூக்கள் இந்த பரிணாம மாற்றம் அடைகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.“பான்சீஸ் பூக்கள் பூச்சிகளை விட்டு விலகுகின்றன. அவற்றின் மகரந்த சேர்க்கை செய்யும் முறை மாறுகிறது. பூச்சிகளின் உதவியில்லாமல் தன் மகரந்த சேர்க்கை செயல்முறையைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு பூவும் தமக்குள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த செயல்முறை குறைந்த காலத்திற்கு சரியாக இருக்கும். ஆனால் வருங்கால சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன் இதனால் அவற்றிடம் குறையும்” என்று பிரான்ஸின் அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான பியர் ஆலிவியா செப்டு (Pierre-Olivier Cheptou) கூறுகிறார்.
பூச்சிகளுக்காக பூக்கள் தேன் சுரக்கின்றன. இதற்குப் பதில் பூச்சிகள் மகரந்தத்தூளை அதே இனத்தைச் சேர்ந்த மற்ற பூக்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன. ஒருவருக்கொருவர் பயனுள்ள விதத்தில் உதவி செய்து வாழும் இந்த சக உதவி வாழ்க்கை பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரிணாம மாற்றத்தால் நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூக்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களும் இப்போது ஒரு தீய சுழற்சியில் (vicious cycle) சிக்கிக் கொண்டுள்ளன.
தாவரங்கள் குறைவாக தேன் சுரப்பதால் இருக்கும் பூச்சிகளுக்கு கிடைக்கும் உணவு குறையும். இதனால் உணவு உற்பத்தி குறையும். இந்தப் பூக்கள் துரிதமாக இத்தகைய பரிணாம மாற்றத்தை அடைவது வியப்பை ஏற்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1999 முதல் 2016 வரையுள்ள காலத்தில் பொறிகளில் சிக்கிய பூச்சிகளின் ஒட்டுமொத்த எடை 75% குறைந்துள்ளது என்று ஜெர்மனியில் உள்ள இயற்கை வள மையங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
"தாவரங்கள் ஏற்கனவே தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டதால் மகரந்த சேர்க்கை செயல்முறையில் நிகழும் இந்த மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் எளிதில் மீட்க முடியாதவை. அயல் மகரந்த சேர்க்கை குறைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் மாண்ட்பிலியர் (Montpellier) பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவர் சாம்சன் அக்கோக்காபிடல் (Samson Acoca-Pidolle) கூறுகிறார்.
1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் தேசிய தாவரவியல் சேகரிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பான்சீஸ் செடிகளின் விதைகளை நட்டு வளர்த்து முளைக்கச் செய்யப்பட்டன. இந்த முறை உயிர்த்தெழுதல் சூழலியல் (“resurrection ecology” என்று அழைக்கப்படுகிறது. வயோலா ஆர்வென்சிஸ் பூக்களின் நான்கு இனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர்.
பூக்களில் நிகழ்ண்ட மாற்றம் தவிர அவற்றின் இலை அளவு, தாவரத்தின் ஒட்டுமொத்த அளவு போன்ற பண்புகள் மாறவில்லை என்று புதிய தாவரவியலாளர்கள் (journal New Phytologist) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இது குறித்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பூக்கள் பூச்சிகளைக் கவர்வதை நிறுத்திவிட்டால் பிறகு ஒரு தாவரம் பெரிய அளவில் பூக்களை பூக்க வைப்பதிலும் அவற்றில் அதிக தேனை சுரப்பதிலும் ஆற்றலை வீணாக்குவதில் பொருளில்லை. இதை உணர்ந்தே தாவரங்கள் இவ்வாறு செய்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்த வகை பூக்களில் தன்மகரந்த சேர்க்கை 25% அதிகரித்துள்ளது என்று முந்தைய ஆய்வு கூறுகிறது. “பரிணாம மாற்றம் நம் கண் முன்பே நிகழ்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. முன்பு மகரந்த சேர்க்கை நிகழ உதவிய உயிரினங்கள் ஏராளமாக இருந்தன. இன்று குறைந்து விட்டன. இதனால் பூக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு அவசியமான மகரந்த சேர்க்கை வழிமுறையை மாற்றிக் கொண்டுள்ளன. இது திடுக்கிட வைக்கும் ஒன்று. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம மாற்றத்தின் மூலம் நிகழ்ந்து கொண்டிருந்த ஒன்றை கடந்த ஐம்பதாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தாவரங்கள் அதை நிறுத்திக் கொண்டு விட்டன” என்று லங்கஸ்ட்டர் (Lancaster)) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் பிலிப் டாங்கர்ஸ்லி (Dr Philip Donkersley) கூறுகிறார்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இது பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. என்றாலும் உலகம் முழுவதும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறையின் உருகும் மேற்பகுதியைப் போன்றதே இது. தாவர உயிர்ப் பன்மயச் செழுமை நிறைந்த இடங்களில் காட்டுத் தாவரங்கள் பலவும் இது போல தங்கள் மகரந்த சேர்க்கை வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கலாம்.
அபிடேயே தேனீ பெருங்குடும்பத்தில் பாம்பஸ் இனத்தைச் சேர்ந்த பம்பிள் தேனீக்கள் (Bumble bees) அல்லது வண்டுத்தேனீக்களால் ஐரோப்பாவில் மகரந்த சேர்க்கை நடைபெறும் ஃபாக்ஸ் க்ளவுஸ் (Foxgloves) என்ற பூக்கும் தாவரம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்டரிக்கா மற்றும் கொலம்பியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இத்தாவரம் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களை நம்பியில்லை. மாறாக இவற்றில் மகரந்த சேர்க்கை இப்போது ஹம்மிங் பறவைகளால் நடைபெறுகிறது.
இத்தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடக்க ஹம்மிங் பறவைகளுக்கு உதவும் வகையில் பூக்களின் வடிவம் மாறியுள்ளது. இது போன்ற நடைமுறையே ஆக்ரமிப்பு உயிரினங்களாக புதிய சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் குடியேறிய பல தாவரங்கள் செய்கின்றன. தன்மகரந்த சேர்க்கை செய்ய இயலாத தாவரங்கள் கூடுதலான மகரந்தத்தூளை உற்பத்தி செய்வது போன்ற வேறு வழிகளைப் பின்பற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்துவிட்ட சூழ்நிலையில் இவை மற்ற தாவரங்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.
இதனால் இனப்பெருக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்த மகரந்த சேர்க்கை செயல்முறையை தாவரங்கள் மாற்றிக் கொண்டுள்ளன. “தன்மகரந்த சேர்க்கை செய்யக்கூடிய தாவரங்களில் இந்த பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழும் இடத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட இனத்தை நிலைநிறுத்த இனப்பெருக்கம் இன்றியமையாதது. இதனால் இவ்வாறு நிகழ்கிறது” என்று க்யூ (Kew) தாவரவியல் பூங்காவின் (Royal Botanic Gardens, Kew) ஆய்வாளர் பேராசிரியர் ஃபில் ஸ்டீவென்சென் (Prof Phil Stevenson) கூறுகிறார்.
பூக்களில் நடைபெறும் திடுக்கிட வைக்கும் இந்த மாற்றம் நாளை மனித வாழ்வை பல வகைகளில் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதர்கள் குப்பைகள் என்று வீசியெறியும் பொருட்களை எடுத்துச் சென்று கூடுகளை அமைக்க பறவைகள் எப்போதுமே தயங்கியதில்லை. ஆனால் நெதர்லாந்தில் ராட்டர்டாம் மற்றும் பெல்ஜியத்தில் ஆண்ட்வெர்ப் (Antwerp) பகுதியில் மரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூடுகள் நகரப் பகுதியில் வாழும் காக்கைகள் மற்றும் மேக்பை (Magpie) பறவைகளை விரட்ட கட்டிடங்களில் அமைக்கப்பட்டிருந்த கூர்முனைகளால் ஆன நீண்ட உலோகக் கீற்றுகளை பயன்படுத்தி வியப்பூட்டும் கை வேலைப்பாட்டுடன் தங்கள் முழு கூட்டையும் கட்டியுள்ளன.
காக்கை கூடுகளும் மேக்பை கூடுகளும்
இது பறவையியல் துறை நிபுணர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேக்பை என்பது காகக் குடும்பத்தைச் சேர்ந்த சில இனங்களைக் குறிக்கும் பொதுப்பெயர். இதில் ஐரோவாசிய மேக்பை என்ற பறவை உலகின் அதிக நுண்ணறிவுள்ள விலங்குகளில் ஒன்று. கண்ணாடி முன்பு நிற்கும் போது தன்னை உணர்ந்து கொள்ளும் திறன் பெற்றுள்ள மிகச் சில விலங்குகளில் ஒன்று.
வண்ணாத்திக்குருவி, கறுப்பு வெள்ளைக் குருவி, குண்டு கரிச்சான், பாலகன் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இது பாடும் பறவை காடுகள், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ்கின்றன. இந்த கண்டுபிடிப்பு ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், லேடண்ட் (Leiden) நேச்சராலிஸ் (Naturalis) உயிர் பன்மயத்தன்மை மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளை இது பற்றி மேலும் ஆராயத் தூண்டியது.இந்த தேடல் க்ளாஸ்கோவிலும் நெதர்லாந்து என்ஸ்கெட் (Enschede) என்ற இடத்திலும் இதே போன்ற கூடுகளைக் கண்டுபிடிக்க உதவியது. ”விரட்ட வைத்திருந்தவற்றை எடுத்து பறவைகள் தங்களுக்கான கூடுகளைக் கட்டுகின்றன. இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று மரங்கள் பராமரிப்பின்போது ராட்டர்டாம் இரயில் நிலையத்திற்கு அருகில் இத்தகைய காக்கை கூடு ஒன்றை கண்டுபிடித்த ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் கீஸ் மோலிகர் (Kees Moeliker) கூறுகிறார்.
ராட்டர்டாம் கூடு காகத்தால் கட்டப்பட்டது. மற்ற மூன்று கூடுகளும் பெரிய குவிமாடம் போல கூடு கட்டும் இயல்புடைய மேக்பை பறவைகளால் கட்டப்பட்டவை. பறவைகளை பயமுறுத்தி விரட்ட அமைக்கப்பட்டிருந்த கூர்முனை பொருட்களை உறுதியான கூடைக் கட்ட உதவும் கட்டுமானப் பொருட்களாக காக்கைகள் பயன்படுத்துகின்றன.
ஆனால் இவற்றின் பயனை நன்கறிந்த மேக்பைகள் கூர்முனைப்பொருட்கள் பெரும்பாலானவற்றையும் கூட்டின் மேற்கூரையை அமைத்துக் கட்டுகின்றன. இதன் மூலம் இவை தங்கள் எதிரிகளான பூச்சிகள், மற்ற பறவைகளை பயமுறுத்தி விரட்டுகின்றன. “இவை கட்டும் கூடுகள் மிக நேர்த்தியானவை” என்று நேச்சராலிஸ் உயிர் பன்மயத்தன்மை மையத்தின் பறவை கூடு ஆராய்ச்சியாளர் மற்றும் உயிரியலாளர் ஆக் ப்ளோரியன் ஹீம்ஸ்ட்ரா (Auke-Florian Hiemstra) கூறுகிறார்.
நகர்ப்புற வாழ்க்கைக்கு தகவமைத்துக் கொள்ளும் பறவைகள்
நகரப் பொருட்களை கொண்டு கட்டப்பட்ட பறவைக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1933ல் தென்னாப்பிரிக்க அருங்காட்சியகம் ஒன்று கடினமான தாமிரம், துருபிடித்தல் மற்றும் நீரால் பாதிக்கப்படாமல் இருக்க துத்தநாகம் போன்ற வெந்நிற உலோகங்களால் பூசப்பட்ட இரும்பு மற்றும் கூர்முனைகளை உடைய உறுதியான கம்பியால் கட்டப்பட்ட காக்கை கூடு ஒன்றைப் பற்றிய செய்தியை வெளியிட்டது.
ஆணிகள், ஸ்க்ரூக்கள், மருந்தேற்று குழல்கள் போன்ற பொருட்களும் இந்த கூட்டில் பயன்படுத்தப்பட்டிருந்தன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கீஸ் மோலிகர் ராட்டர்டாம் துறைமுகத்தில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து ஒரு புறாவின் கூட்டைக் கண்டுபிடித்தார்.
“பசுமை எதுவும் இல்லாத அங்கு தொழிற்சாலை, கான்க்ரீட், மாசுபட்ட காற்று மட்டுமே இருந்தன. அந்த கூடு கிளைகளால் கட்டப்படவில்லை. நார்க்கம்பி வலையால் கட்டப்பட்டிருந்தது. நகர்ப்புற சூழலுக்கு பறவைகள் தங்களை தகவமைத்துக் கொண்டுள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. காக்கை மற்றும் மேக்பை கூடுகளின் கண்டுபிடிப்பு இதை வலியுறுத்துகிறது. இந்த விவரங்கள் ராட்டர்டாம் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் டேன்சி (Deinsea) என்ற வருடாந்திர வெளியீட்டில் விவரிக்கப்பட்டுள்ளது”என்று கீஸ் கூறுகிறார்.
கவர்ச்சிகரமாக மேற்கூரை அமைக்கும் பறவைகள்
குப்பைகளில் இருந்து பழைய கூர்முனை பொருட்கள், கீற்றுகளை சேகரிப்பதற்கு பதில் காகங்களும் மேக்பைகளும் கட்டிடங்களில் அவை பொருத்தப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை அங்கிருந்து கழற்றி எடுத்துச் சென்று பயன்படுத்துகின்றன. இப்பண்பு மற்ற இனப் பறவைகளிலும் காணப்படுகிறது” என்று வாத்துகளுக்கு இடையில் நிகழும் ஓரின நெக்ரோபிலியா (homosexual necrophilia) என்ற நிகழ்வை முதல்முதலில் ஆவணப்படுத்திய மோலிகர் கூறுகிறார்.
சில இன வாத்துகள் இறந்த வாத்துகளுடன் உடலுறவு கொள்ளும் பண்பு ஓரின நெக்ரோபிலியா என்று அழைக்கப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1991 முதல் வழக்கத்திற்கு மாறான முக்கிய பத்து அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் இக் நோபெல் விருது (Ig Nobel prize) வழங்கப்பட்டது.
சிகரெட் துண்டுகள், பிளாஸ்டிக் பைகள், மீன் பிடி வலைகள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்படும் ஆபத்தான கழிவுப்பொருட்களை இருநூறு இனப் பறவைகள் கூடு கட்ட பயன்படுத்துகின்றன என்று ஐரோப்பிய ஆய்வுக்குழு சமீபத்தில் எச்சரித்துள்ளது. “மனிதன் தங்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களை கொண்டே சாதுரியமாக கூடு கட்டும் அறிவாற்றல் காக்கை குடும்ப கோர்விட் (Corvid) இனப்பறவைகளிடமே அதிகம் உள்ளது. கூடுகளின் பாதுகாப்பிற்கு மட்டும் இல்லாமல் இப்பொருட்களை தங்கள் இணையைக் கவர உதவும் கவர்ச்சிப் பொருளாகவும் பறவைகள் பயன்படுத்துகின்றன” என்று ஐரோப்பிய ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக பறவையியலாளருமான டாக்டர் ஜிம் ரெனால்ட்ஸ் (Dr Jim Reynolds) கூறுகிறார்.
நகர்ப்புற பறவைகளுடன் நாம்
இங்கிலாந்து நாட்டின் பிரிஸ்ட்டல் (Bristol) நகரின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள க்ளிஃப்ட்டன் (Clifton) போன்ற இடங்களில் கூர்முனைப் பொருட்கள் கட்டிட முனைகளில் கூடு கட்டுவதையும் புறாக்கள் போன்றவை மரக்கிளைகளில் இருந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் மீது எச்சங்களை இடுவதையும் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
நாம் பறவைகளை அச்சுறுத்தக் கூடாது. அவற்றுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவை புத்திசாலித்தனம் மிகுந்தவை. கடினமான நகர்ப்புற வாழ்க்கைக்கு ஏற்ப பொருந்தி வாழும் வழிகளைக் கண்டுபிடித்து வாழ்கின்றன. காகங்களும் மேக்பைகளும் நம் கதாநாயகர்கள்! பறவைகளிடம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேற்கோள்கள்
&
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூமிக்கடியில் இருந்து வந்து முட்டைகள் இட்டு திரும்பச் சென்றன. ஆனால் மண்ணிற்குள் மறுபடி செல்ல தவளைக் குஞ்சுகள் இல்லை. இந்த பாதாளத் துயரத்திற்கு யார் காரணம்?
வானிலை ஆய்வு நிறுவனங்களூக்கும், விஞ்ஞானிகளுக்கும் மட்டுமில்லை தலைமுறை தலைமுறையாக பூமிக்கடியில் இருந்து துல்லியமாக அறிந்தும், அதை அனுபவித்தும் அதை அனுசரித்து வெளியில் வந்து அடுத்த தலைமுறைக்கு பிறவி கொடுக்கும் பாதாளத் தவளை அல்லது பர்ப்பிள் தவளைக்கும் (Purple frog) இம்முறை பருவமழை கணிப்பு தாறுமாறாகிப் போனது.
காலநிலை கடிகாரம்
மழையில் ஏற்றக்குறைவுகள் உண்டாகலாம் என்றாலும் இந்த உயிரினங்களின் காலநிலைக் கடிகாரம் சாதாரணமாக இவ்வாறு தாறுமாறுவது இல்லை. இயல்பாக கிடைக்கும் பருவமழையின் அறிகுறிகள் இம்முறையும் கிடைத்தபோது மண்வெட்டி கால்களுடன் பர்ப்பிள் தவளைகள் வெளியுலகிற்கு வந்தன. என்றாலும் அது மழைக்காலமாக இருக்கவில்லை.ஆறு கால்வாய் எங்கும் நீர்ப் பெருக்கெடுத்து ஓடியது என்றாலும் அது நான்கு நாட்களில் வற்றி வறண்டு போயின. தென்மேற்குப் பருவமழைக்கு முன் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமும், காற்றடுக்கு சுழற்சியும் சேர்ந்து பெய்த மழை பருவமழை போல பெய்தது. இதுவே இவை வானிலையை தவறாகக் கணிக்கக் காரணம்.
பருவகாலத்தில் பெய்யும் நல்ல மழை என்று நம்பி வெளியில் வந்தபோது காட்சிகள் மாறின. குளிர்ச்சியைக் காட்டிலும் வெப்பம் அதிகமானது. இத்துடன் நெல்லியாம்பதி, பரம்பிக்குளம், அகத்திய மலை, வடக்காஞ்சேரி, பீச்சியில் அருவிகளிலும், காடுகளிலும், வாய்க்கால்களிலும் இவை இட்ட முட்டைகள் உலர்ந்து போயின. இவற்றிற்கு தலைப்பிரட்டையாகத் தேவையான நீர் கிடைக்கவில்லை.
முட்டையிடும்போது நீர் தேவையான அளவிற்கு இருந்தபோதும் பிறகு அது மூழ்கியிருக்க நீர் இல்லாமல் போனபோதுதான் இந்த பாதாளத் துயரம் சம்பவித்தது. நூற்றாண்டுகளாக பூமிக்கடியில் இருந்து குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் புறப்படும் பயணமும், மண்ணிற்கு மேல் முட்டையிட்டு மண்ணுக்கே வேகமாக மீண்டும் செல்லும் வாழ்க்கை முறையையும் கொண்ட இவற்றிற்கு இதனால் பெரும் துயரம் ஏற்பட்டது.
இந்த வாழ்க்கை முறையில் இதுவரை இதுபோல ஒரு மாற்றம் நிகழவில்லை. மலையாள மொழியில் மகாபலி தவளை என்றும் இவை அழைக்கப்படுவதுண்டு. இவற்றின் உயிரியல் பெயர் நாசிகாபட்ரஸ் சகியாக்ரின்சிஸ். குஞ்சுகள் பிறந்தபோதும் அவற்றால் இம்முறை மண்ணிற்கடியில் செல்ல முடியவில்லை. நீர் இல்லாததால் முட்டைகள் அனைத்தும் அழிந்து போயின என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆண்டிற்கு ஒரு முறை பருவமழை காலத்தில் ஏதேனும் ஒரு நாளில் பூமிக்கு மேல் வந்து இவை முட்டையிடுகின்றன. தேர்ந்தெடுத்த ஆண் தவளைகளுடன் இணை சேர்ந்து பெண் தவளைகள் மண்ணில் அடியில் இருந்து வெளியில் வந்து அருவிகள், மற்ற இடங்களுக்கும் செல்கின்றன. வடிவத்தில் சிறிய ஆண் தவளை, பெண் தவளையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு செல்வது போல செல்லும்.
கோடைகாலத்தில் வற்றும் இயல்புடைய நீரூற்றுகள், அருவிகள், வாய்க்கால்கள் போன்றவையே இவற்றின் வாழிடம். இந்த சமயத்தில் முட்டையிடுவதால் மீன்கள் மற்றும் பிற பிராணிகளின் அச்சுறுத்தலில் இருந்து முட்டைகளை இவை காப்பாற்றுகின்றன. அகத்திய கூடம் முதல் கண்ணூர் வரை உள்ள சில இடங்களில் இந்த பருவத்தில் இவை அதிகம் காணப்படுகின்றன.
நெல்லியாம்பதி, அமைதிப் பள்ளத்தாக்கு, இடுக்கி ஆகியவை இவற்றின் விருப்பமான இடங்களில் முக்கியமானவை. ஒரு சமயத்தில் 300 ஜோடி தவளைகள் வரை இவை பூமிக்கும் மேல் வரும் என்று இவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்யுய்ம் கேரள வன ஆய்வு நிறுவனம் (KFRI) மற்றும் லண்டன் விலங்கியல் சொசைட்டியின் ஆய்வாளர் சந்தீப் தாஸ் கூறுகிறார்.
அந்த ஏழு நாட்கள்
ஒரு முறை ஒரு பெண் தவளை நான்காயிரம் முட்டைகள் வரை இடும். இதைத் தொடர்ந்து ஆண் தவளை அவற்றின் மீது விந்துகளைத் தூவும். முட்டை விரிய இது அவசியம். முட்டை விரிந்து தலைப்பிரட்டையாக குறைந்தபட்சம் ஏழு நாட்கள் தேவை. முட்டையைச் சுற்றி நீர் இருக்க வேண்டும். இந்த ஏழு நாட்கள் முட்டையின் வாழ்வில் முக்கிய காலகட்டம்.
ஆனால் இம்முறை இந்த ஏழு நாட்கள் இல்லாமல் போயின. சுமார் 110 நாட்களுக்குள் தலைப்பிரட்டைகள் தவளைக் குஞ்சுகளாக உருமாறி மண்ணிற்குள் செல்வதே வழக்கம். ஆண்டில் ஒரு முறை மட்டுமே பூமிக்கு வருவதால் இவற்றை விலங்குலகின் மகாபலி என்றும் அழைப்பதுண்டு. பெண் தவளை முட்டையிட்டு ஐந்து மணி நேரத்திற்குள் பாதாளத்திற்குச் செல்லும். ஜோடிகளாக, சில சமயங்களில் தனியாகவும் செல்லும். மண்ணை நோண்டி மண்ணிற்குள் செல்வது இவற்றின் வாடிக்கை.
இதற்கு ஏதுவாக இவற்றின் கை கால்கள் மண்வெட்டி போல தடிமனாக உள்ளன. மண்ணிற்கடியில் இரண்டு மீட்டர் ஆழத்தில்தான் இந்த பாதாளவாசிகளின் வாழிடம் என்றாலும் வெளியில் வரும் நேரம் தவிர பூமிக்கடியில் இவை என்ன செய்கின்றன, எவ்வாறு வாழ்கின்றன என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது மிக சுவாரசியமான செய்தி என்றாலும் இது பற்றி ஆய்வுகள் நடந்ததாகத் தெரியவில்லை என்று இதற்கு மகாபலி தவளை என்று பெயரிட்ட சந்தீப் தாஸ் கூறுகிறார்.
பூமிக்கடியில் இருந்து நாட்டில் மழைக்காலத்தின் வரவையும், அருவிகளில் நீரின் அளவையும் இவை எவ்வாறு துல்லியமாக அளக்கின்றன என்பது விஞ்ஞான உலகின் வியப்பாகவே இன்றும் உள்ளது. முட்டையிட எல்லாச் சூழ்நிலைகளும் தயார் என்பதையும், முன்கூட்டியே இவை எவ்வாறு இதை புரிந்து கொள்கின்றன என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்கின்றன என்பது தவிர இவற்றின் முக்கிய உணவு என்ன, இவை எவ்வாறு இரை தேடுகின்றன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை. இவற்றின் ஆயுள் குறித்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண் தவளையின் அளவு 30 மில்லிமீட்டர். பெண் தவளை இதுபோல இரு மடங்கு பெரியது. இவற்றின் சத்தம் வரும் இடத்திற்குச் சென்றால் அது மண்ணிற்கடியில் நம்மைவிட்டு விலகி விலகிச் செல்வதை உணரலாம்.
முட்டையிடும் சமயத்தில் மட்டும் சத்தம் குறைவதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாவதற்கு முன்பே இவை இங்கு வாழ்ந்ததாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆப்பிரிக்கத் தவளைகளுடன் இவற்றிற்கு நெருங்கிய சொந்தம் உண்டு என்று இந்திய விலங்கியல் கழகத்தின் நிறுவனர் தாமஸ் நெல்சன் அன்னண்டெயில் தலைமையில் நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியா ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்கள் ஒன்றாக இருந்தன என்ற கோட்பாட்டின் சான்றுகளில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஊதி பெருத்த வடிவத்தைக் கொண்ட தவளை போல இவை தோன்றும் என்றாலும் குணங்கள், மற்ற சிறப்பியல்புகளால் இவற்றிற்கு பரிணாமரீதியில் பல பல சிறப்புகளை இவை பெற்றிருக்கின்றன.
வெளுத்த நிறம், பன்றி போல மூக்குடன் காணப்படும் பல சிறப்பு பரிணாமப் பண்புகளைக் கொண்ட இவை இன்று இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன. அழியும் ஆபத்தில் இருக்கும் உயிரினங்கள் கொண்ட சர்வதேச இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இவை மூன்றாவது இடத்தில் உள்ளன.
கேரளாவின் மாநிலத் தவளை
மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே இவை அதிகம் காணப்படுகின்றன என்பதால் இவற்றை கேரளாவின் மாநிலத் தவளையாக அறிவிக்க மாநில வனத்துறை பரிசீலித்து வருகிறது. முதற்கட்டத்திற்குப் பிறகு சில ஆய்வாளர்கள் இவற்றைக் கண்டனர் என்றாலும், 2004ல் இவை பற்றி ஆராயும் விஞ்ஞானி சுனில் தத்தாரும் அவரது குழுவினரும் இவற்றின் தலைப்பிரட்டைகளைப் பற்றி ஆராய்ந்தபோதுதான் முன்பே இது பற்றி எடுத்துக் கூறிய தாமஸ் அவர்களின் ஆய்வுகள் சரி என்று தெரிய வந்தது.
2003ல் டெல்லி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் விஞ்ஞானி டாக்டர் ஆ பிஜு என்பவரே இந்த அதிசய தவளையைப் பற்றி முதல்முறையாகக் கண்டறிந்து விஞ்ஞான உலகிற்கு விரிவாகக் கூறினார். உலக உயிரினங்கள் வரிசையில் ஊர்வன பட்டியலில் கேரளாவிற்கும், இந்தியாவிற்கும் மிகச் சிறந்த இடம் தேடித் தந்தது இந்த உயிரினமே. 60 முதல் 90 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இவை பரிணமித்ததாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றின் வாழிடம் பூமிக்கடியில் என்றும், இந்தியாவில் வாழும் தவளைகளில் இருந்து இவை முற்றிலும் வேறுபட்டவை என்றும் முன்பு இவை பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். 2017ல் இவற்றின் நெருங்கிய சொந்தக்கார தவளையினத்தை தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜனனி மற்றும் அவரது ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர்.
மற்ற உயிரினங்களைக் காட்டிலும் காலநிலை மாற்றத்தால் இவை பெரும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகியுள்ளன. இதனால்தான் இவற்றின் புதிய தலைமுறைகள் இம்முறை உலர்ந்து அழிந்து காணாமல் போய்விட்டன. வரும் ஆண்டுகளிலேனும் இந்த அற்புத உயிரினங்களின் துயரம் தீருமா?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்
- அழிவின் விளிம்பில் கானமயில்
- நஞ்சு உண்ணும் சீல்கள் மனிதருக்கு உதவுமா?