புலி உள்ள காடே வளமான காடு. வளம் உள்ள காடுகளால் தான் நிலத்திலுள்ள மனிதன் வாழ்கிறான்.

இங்கு எல்லாமே சுழற்சி. ஒன்றிலிருந்து தொடங்குவது தான் இன்னொன்று. அதன் நீட்சி தான் மானுடம் தழைக்கச் செய்த மந்திரமாகி இருக்கிறது. எங்கோ படபடக்கும் பட்டாம்பூச்சியின் அசைவில் இருந்து தான் வேறெங்கோ நிகழும் பூகம்பத்தின் தொடர்ச்சி நிகழ்கிறது என்று சொல்லும் கேயாஸ் தியரி தான் இந்த உலகம். பிரபஞ்சத் துகள் பூமி என்றால் பூமிக்குள் நிகழும் எல்லாமும் துகள்களின் அசைவு தான்.

tigers 600காடு.. புலி.... பல்லுயிர்.... என்று சூழலியல் பற்றிய சிந்தனை தொடர்ந்து ஓடுவதால்.... புலி பற்றிய சில பகிர்தல்கள் இங்கே.

சிறுத்தை மீது எப்போதும் வசீகரம் இருந்தாலும் புலி மீது வியப்பிருக்கிறது. யானைகள் காட்டின் பிரம்மாண்டம் என்றால் புலிகள் காட்டின் வேலிகள். புலி இயல்பிலேயே கூச்ச சுபாவம் உடையவை. அவை பசித்தால் மட்டுமே வேட்டையாடும். அதுவும் வயிற்றில் குட்டிகள் கொண்ட எதையும் தாக்காது என்பது மிருக விதி போல. மீறாது தான் போல.

எத்தனை பசித்தாலும்... எந்த குட்டிகளையும் அது ஒன்றும் செய்வதில்லை. ஒரு காணொளியில் கூட மான் குட்டியைத் தூக்கிக் கொண்டே செல்வதையும்...... கிட்டத்தட்ட அது தான் அதை வளர்ப்பதையும் கண்டோம். அதன்பிறகு வேறொரு பார்வை புலி மீது கொண்டோம். புலியை இன்னும் கொஞ்சம் விரட்டி நெருங்கி கவனிக்க...... இந்த புலி இனம் உலகிலேயே மிகப்பெரிய பூனை வகைமையைச் சார்ந்த இனம் என்று தெரிய வருகிறது. 3.3 மீட்டர் நீளமும் 670 பவுண்ட் எடையும் சராசரியாக இருக்கும் என்று ஆய்வு சொல்கிறது. ஒரு புலியின் வாழ்நாள் சராசரியாக 20 இருந்து 26 வருடம் இருக்குமாம். இந்த புலி இனம் பூமியில் தோன்றி 20 லட்சம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படிப்பட்ட புலி ஒன்று உயிர் வாழ 1000 சதுர மீட்டர் காடு வேண்டும் என்கிறது புள்ளி விபரம். காடுகளின் வாழ்வு புலி என்னும் வேலியில் தான் இருக்கிறது. ஒவ்வொரு புலியும் ஒரு மைல்கல் காடுகளுக்கு. அது எப்படி புலிக்கும் காடுக்குமான தொடர்பு என்றால்... சுவாரஷ்யங்களின் கூட்டு தான் இந்த பூமியின் சுழற்சி. முன்பே சொன்ன கேயாஸ் தியரி தான் இங்கும் மிக மெலிதாக தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு புலி இறந்தால் தஞ்சை டெல்டாவில் பத்தாயிரம் ஏக்கர் நிலம் தரிசாக போய் விடும் என்று "பூவுலக நண்பர்க"ளில் ஒருவர் எழுதிய- ஒரு கட்டுரையில்- இந்த சொற்றொடர் தூக்கி வாரிப் போட்டது. அதன் நீட்சியில் அந்த கட்டுரை சொல்லும் செய்திகள் மூலம்... புலி வால் பிடித்த கதை தான் இங்கே நடக்கும் எல்லாக் கதைகளும் என்று புரிய நேர்ந்தது.

முன்பே சொன்னது போல இந்த உலகம் உயிக்ச் சங்கிலியின் வழியாகத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்றிலிருந்து முளைக்கும் இன்னொன்று. ஒன்றின் வினையால் ஏற்படும் இன்னொன்றின் எதிர்வினை. இங்கு இது இருப்பதால் தான் அங்கு அது இருக்கிறது போன்ற சமன்பாடுகள்... அப்படி... ஒவ்வொரு புலியும் காடுகளின் காவலாளி என்றால் மிகை இல்லை.

வேட்டை சமூகத்தில் இந்த மானுடம் இருந்த போது தண்ணீரின் தேவை மிகக் குறைவாக இருந்தது... அதுவே அவன் உழைத்து விதைத்து வாழத் தொடங்கிய பிறகு.... தேவைக்கதிகமான நீரை அபகரிக்க ஆரம்பித்தான். முன்பு சொன்ன சுழற்சியில் நீரின் பங்கு தான் முக்கால்வாசி என்றறிவோம். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் சொன்ன வலுவான செய்தி தான் காலத்துக்கு காலர் தூக்கி நிற்கிறது. சுழலும் பூமியின் சூத்திரம் இது தான். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற ‘பூங்குன்றன்’ கொளுத்திப் போட்ட புதிர் தான் புலிக்கும் மனிதனுக்குமான சங்கிலி; யானைக்கும் நமக்குமான பந்தம்; நீருக்கும் நெருப்புக்குமான இணக்கம்; காற்றுக்கும் வெளிக்குமான விசேஷம்; நமக்கும் நமக்குமான இடைவெளி.

எல்லா உயிரினங்களுக்கும் ஆதாரம் நீர். அந்த நீர் எப்படி உருவாகும். ஒரே வழி மழை. அந்த மழைக்கு எது காரணம்... வெயில். அந்த வெயிலுக்கும் மழைக்குமான இடைவெளியை இட்டு நிரப்பும் சில பல வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ளும் புலிகளை நாம் சாக விடலாமா? எப்படி அதன் பங்கென்று பார்த்தோமானால்... காடுகளில்... தாவரத்தை தின்று உயிர் வாழும் பன்றி... முயல்... மான் என்று சில சிறிய விலங்குகளுக்கு வேலையே வயிறு முட்டத் தின்பதும்.... இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் தான். அப்படி ஈன்றெடுக்கும் குட்டிகள் மீண்டும் உணவுக்கு தாவரங்களைத் தான் தின்னும். தாவரங்கள் தான் காடு. அவையே காலியானால் ஒரு முறை உருவான காடு மீண்டும் உருவாக காலக்கணக்கில் ஆகி விடும். ஒவ்வொரு காடும் சாதாரணமாக உருவானது இல்லை. அதில் பறவைகளின்.... தேனீக்களின்...... அயராத உழைப்பிருக்கிறது. முன்பே சொன்ன...... இங்கு இது நிகழ்ந்தால் தான்.... அது அங்கு நிகழும் என்பது. அப்படி ஒவ்வொரு பறவையும் ஒரு மரத்தை தூக்கிச் சென்று விதைக்கிறது. மகரந்த சேர்க்கை என்ற மகத்துவம் தேனீக்கள் இல்லை என்றால் எப்படி நிகழும். தேனீக்கள் இல்லாத உலகில் நான்காண்டுகளில் மானுட இனமே அழிந்து போகும் என்கிறது அறிவியல்.

ஆக....... தாவரப் பட்சிகள் தாவரங்களை பெருமளவு உண்டு தீர்க்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு புலிகளுக்கு உண்டு. அவைகளை புலிகள் அடித்துத் தின்று விடுவதால்... தாவரங்கள் காக்கப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் வீழும் அத்தனை அருவிகளும் எங்கிருந்து வருகின்றன? மழைக்காலங்களில் ஸ்பாஞ் போல இருக்கும் புல்வெளிகள் உறிந்து கொண்ட நீர்த் துளிகள் தான் கொஞ்ச கொஞ்சமாக எல்லாக் காலங்களிலும் உருட்டி விடப்பட்டு...... அது ஓடையாக...... வாய்க்காலாக..... சிறு நதியாக.... அருவியாக விழுகிறது. ஆக...... நீரை அடை காக்கும் புற்களை மான்கள் மேய்ந்து விட்டால்...... நீர் எப்படி சேகரமாகும்? நீண்ட நெடிய தோற்றத்துக்கு அதன் ஓட்டம் எங்ஙனம் நடக்கும்? ஆறு இல்லாத சமூகத்தில்...... நாகரீகம் எங்ஙனம் பிறக்கும்?

பொதுவாகவே தாவரப் பட்சிகள் மரத்திற்கு ஊடாக இருக்கும் செடி கொடி கிழங்குகளைத் தின்ன வேண்டும். அப்போது தான்.. அடர்ந்த மரங்களுக்கிடையே உருவாகும் இடைவெளியில்... சூரிய ஒளி புகுந்து பூஞ்சைக்காளான்...... சிறு செடி..... கொடிகளுக்கு உயிர் அளிக்க முடியும். அப்படித்தான் வனம் உயிர்ப்பிக்கப் பட்டுக் கொண்டே இருக்கிறது என்று அந்த பூவுலக நண்பரின் கட்டுரை விரிகிறது. அளவுக்கு மிஞ்சினால் தாவரப் பட்சிகளும் ஆப்பு தான் என்பது இயற்கைக்கு தெரிந்திருக்கிறது. அதனால் தான் அதை விட பெரிய அகப்பையை புலி வடிவத்தில் உலவ விட்டது இயற்கை. அதன் நீட்சியில் மானுடம் என்ற வகைமை பூமியில் தழைத்தோங்க முடிந்தது.

நரி, சிறுத்தைகள் எல்லாமே புலியோடு சேர்ந்து வசிக்க பல கால கட்டங்களில் புலி அனுமதிக்கும் என்ற செய்தி அதன் மீதான வியப்பை இன்னும் இன்னும் அதிகப்படுத்துகிறது. பிறந்த புலிக்குட்டிகளுக்கு ஒன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு கண்கள் தெரியாது... என்பது நம் கண்களை அகல திறக்கும் செய்தி. ஒரு புலியின் வேகம் ஒரு மணி நேரத்துக்கு 65 கி மீ வேகம் என்பது திக் திக் செய்தி. எல்லாம் தாண்டி புலியைப் பற்றிய இன்னொரு செய்தி ஆச்சரியப்படுத்தியது. எப்படி நமக்கு காதில் சுரக்கும் ஒரு வகை லிக்யுட் தான் நம்மை சரிந்து விடாமல் நிற்கச் செய்கிறதோ அப்படி புலியின் வால் தான் அதனை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறதாம். புலி பிறந்து 6 மாதங்களிலேயே எப்படி வேட்டையாடுவது என்று கற்றுக் கொள்ளுமாம். வேட்டை அதன் ரத்தத்தில் இருக்கிறது. வேகம் அதன் யுத்தத்தில் காணலாம். பல புலி இனங்கள் அழிந்து விட்ட இக் கால கட்டத்தில் இருக்கும் புலிகளையாவது காத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் இக்கட்டுரையின் செய்தி.

ஏன் கோவில்களில் முதல் சிற்பமென புலியின் சிற்பம் இருக்கிறது என்று இப்போது புரிகிறதா? திருவிழாக்களில் ஏன் ஆட்டங்களில் முதல் ஆட்டம் புலி ஆட்டம் என்று இப்போது தெரிகிறதா? தஞ்சை தொல்குடிகள் புலியை கடவுளாக வணங்கினார்கள்....... என்றால் ஓடும் ஒவ்வொரு நதிக்குப் பின்னும் புலிகளின் உழைப்பிருக்கிறது. நாம் குடிக்கும் ஒவ்வொரு சொட்டு நீருக்குப் பின்னும் புலியின் வியர்வை இருக்கிறது... என்பதை அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள். நாமும் புரிந்து கொள்ள வேண்டும். காட்டில் என்ன இருக்கிறது என்று என்றோ கேட்ட நண்பனுக்கும் இது தான் பதில்.... காட்டில் தான் எல்லாம் இருக்கிறது.

நீருக்கு ஆதாரம் செடி, கொடி, புல், பூண்டு, மரங்கள். நீரின் அவதாரம் அவைகளைக் காக்கும் புலிகள். ஆக... காடுள்ள நாடே வளமாகும். அதற்கு வளமான காடே பலமாகும்.

- கவிஜி

நன்றி : செய்திகள் - பூவுலக நண்பர்கள் மற்றும் இணையம்

Pin It

forest 360இதமான சிலுசிலு காற்று வீசத் தொடங்கி இருக்கும், மரத்தின் இலைகளின் நிறம் மாறிக் காட்சியளிக்கும், சிறிது காலத்தில் நிறம் மாறிய இலைகள் கீழே விழத் தொடங்கும். இவ்வறிகுறிகள் எல்லாம் குளிர்காலத்தை நோக்கிய பயணம். பூமி சூரியனை விட்டு விலகி சுற்றும் என்பதைக் காட்டும்.

இலையுதிர் காலத்தில் அனைத்து மரங்களின் இலைகளும் நிறம் மாறி உதிர்ந்து கீழே விழும் என்பதல்ல, இதில் சில மரங்கள் மட்டும் விதிவிலக்கு. ஆம், "சைப்ரஸ் மரங்களில் பாடும் பறவை என்னிடம் சொன்னது ஐ லவ் யூ" என்று ஜீன்ஸ் படத்தில் வரும் கவிப்பேரரசுவின் வரிகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால், உங்களுக்கு ஒரு சல்யூட்.

Conifer வகையைச் சேர்ந்த மரங்களின் இலைகள் (ஊசி இலைகள்) இவைகளின் நிறம் மாறுவதில்லை அதேபோல் உதிர்ந்து கீழே விழுவதும் இல்லை. Pine tree, cedar, cypress trees, fire, junipers, kauris, larches, redwoods, spruces, yews இவ்வகை மரங்கள் எல்லாம் gymnosperm என்ற அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது.

நமது வழக்காடு மொழியில் அவைகள் எல்லாம் கிறிஸ்துமஸ் மரங்கள். பொதுவாக இந்த மரங்கள் எல்லாம் கூம்பு வடிவில் விதைகளைக் கொடுக்கும். டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதற்கு உணவாக இவ்வகை மரங்கள் இருந்துள்ளது. இவ்வகை மரங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டாலும் குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.

சூரிய ஒளி இல்லாத காலத்திலும், மிகக் கடுமையான குளிர் பிரதேசங்களில் இவ்வகையான மரங்கள் தங்களின் இலைகளை அப்படியே பாதுகாத்துக் கொள்கிறது. அதன் வடிவமைப்பு கூட்டாக ஊசியை போல் அமைந்திருப்பதே அதற்குக் காரணம்.

குளிர் காலத்தில் இதன் metabolism குறைவாக மற்ற மரங்களைப் போலவே இதற்கும் இருக்கிறது. வெண்பனியின் மேல் விழுந்து வரும் அதிகப்படியான சூரியக் கதிர்வீச்சால், இது தனது சக்தியைப் பெற்றுக் கொள்கிறது. அதாவது நேரடியான சூரிய ஒளி தேவையில்லை, வெளிச்சம் இருந்தாலே அதற்குப் போதுமானது. (https://academic.oup.com/bioscience/article/54/1/41/234579)

இலைகளின் நிறம் மாறுதல் மற்றும் இலைகள் உதிர்தலை 'deciduous trees' என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். உதாரணமாக நம்மூரில் காணப்படும் அரச மரம், ஆலமரம், வேப்பம் மரம், போன்ற மரங்களை குறிப்பிடலாம். வட,தென் துருவ நாடுகளில் அதிகம் காணப்படும் Oak trees, Elm trees, Maple trees, போன்று இவைகளைக் குறிப்பிடலாம்.

இலைகளின் நிற மாற்றம்:

பூமி சூரியனை விட்டு விலகி செல்வதால் நமக்கு பகல் பொழுது குறைவாகவும் வெப்பநிலையும் குறையும், இரவு பொழுது நீண்டும் காணப்படும். எதிர்வரும் குளிர் காலத்தை நோக்கி சில விலங்குகள் தனக்கான உணவை ஆயத்தப்படுத்திக் கொள்ளும். குளிர்காலம் முடியும் வரை விலங்குகள் வெளியே வராது இதனை ஆங்கிலத்தில் hibernate என்கிறோம். இது போன்ற நிகழ்வு தான் மரங்களிலும் நிகழ்கிறது. மரங்களும் குளிர் காலத்தை நோக்கி ஆயத்தம் ஆகின்றன.

மரம் உயிர் வாழ சூரிய ஒளி தண்ணீர் கார்பன் டை ஆக்சைடு இவை அனைத்தும் தேவை என நாம் சிறுவயதில் பாடப் புத்தகத்தில் படித்து இருக்கிறோம். இதை 'Photosynthesis' என்று அழைப்பார்கள். இலையுதிர் காலத்தில் சூரிய ஒளி குறைவாக கிடைக்கப் பெறுகிறது. அதாவது சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் சக்தி குறைவாக கிடைப்பதால், photosynthesis நிகழ்வை குறைத்துக் கொள்கின்றன.

இதனாலேயே இலைகளின் நிறங்கள் மாறத் தொடங்குகின்றன. மரங்கள் எல்லாம் ஏதாவது ஒரு வழியில் சூரிய ஒளியை தேடும். அது அவற்றின் இலைகளின் வழியே நடைபெறும். இலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வேலை செய்யும் இதை 'Pigments inside the leaves' நிற மானிகள் எனலாம். அதாவது இலைகளின் நிற மானிகள் சூரிய ஒளியைப் பெற முயற்சிக்கும்.

இலைகளுக்குள் பலவகையான நிற மானிகள் அடங்கி இருக்கும் சூரிய வெளி கிடைப்பதைப் பொறுத்து இலைகளின் நிறம் மாறத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் பசியுடன் அவ்வகை மரங்கள் வாழும் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

சரி முதலில் பச்சை நிறம் எவ்வாறு வருகிறது என்பதை பார்ப்போம். மரங்கள் அதிகப்படியான சூரிய ஒளியைப் பெறும் போது இலைகளில் உள்ள Chlorophyll பச்சையம் (பச்சை நிறம்) அதிகமாக வெளிப்படும். இது கோடைகாலம் தொடங்கி இலையுதிர் காலம் வரை அதிக அளவில் சூரிய ஒளி கிடைப்பதால் இலைகள் பச்சையாகவே காணப்படுகிறது.

இந்த பச்சை Chlorophyll தான் இலைகளின் Pigmentsல் அதிகம் காணப்படுகிறது முறையே இது தான் photosynthesis சுழற்சிக்கு உதவியாக இருக்கிறது. பருவநிலை மாற்றம் நிகழும் போது 'Environmental cues' இந்த நிற மாற்றம் நிகழ்கிறது. Cues என்றால் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்கு மாறுதல். குறைவான சூரிய ஒளி மற்றும் குளிர்ந்த வெப்பநிலை இதை மாற்றுகிறது.

இலைகள் நிற மாற்றத்தின் முதல் வடிவம் Pigment Carotenoids இளம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறம். பச்சை தன்மையுடைய Chlorophyll இழக்கும் போது, மஞ்சள் நிறமுடைய Carotenoids வரத் தொடங்கும். சிறிது காலம் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். பின்னர் இலைகள் தனது அடுத்த கட்ட நிலையான anthocyanins நிலைக்கு மாறிவிடும். இது தான் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் இலைகள் தோற்றமளிக்கக் காரணம்.

இந்த Pigment -ன் நிறம் மாற்ற நிகழ்வுகள் முடிந்த பின்னர் இலைகள் தாமாகவே உதிர்ந்து விடும். தமக்குள் சேமித்து வைத்திருந்த சக்திகள் எல்லாம் முடிவுக்கு வந்தது run out of the pigments. ஆனால், மரம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது.

ஏன் இவ்வாறு இலைகளின் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன என்பதை நாம் முன்னரே பார்த்ததுபோல, குளிர்காலத்தில் தனக்குத் தேவையான ஆற்றலை சேமித்து கொள்ளவே இவ்வாறு தனக்குள் நடைபெறுகிறது.

இலையுதிர் காலத்தை முன் வைத்தே பல நாடுகளில் சுற்றுலா நிகழ்சிகள் மிகவும் சிறப்பாக செயல்படும். 'Fall colours வந்து இருக்கிறது பார்த்தீர்களா' என்று நண்பர் செய்தி அனுப்பி இருந்தார். வானொலியில் இலையுதிர் காலத்தில் மரங்களின் நிறம் ஏன் மாறி காட்சியளிக்கிறது என்ற தொகுப்பு ஒலித்துக் கொண்டிருந்தது.

சாலையின் ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு இருபுறங்களிலும் மரங்களின் நிறங்கள் மாறி காட்சி அளித்ததை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆங்காங்கே பழுத்த இலைகள் கீழே விழுந்து கிடந்தன.

வாருங்கள் நண்பர்களே நாமும் சமூக வலைத்தளங்களை சற்று ஒதுக்கிவிட்டு, இலையுதிர் காலத்தில் மரங்களின் பழுத்த இலைத் தழைகளை கண் குளிர பார்த்து ரசிப்போம.

(நன்றி: https://www.npr.org/2020/10/21/926278247/micro-wave-why-do-leaves-change-color-during-fall)

- பாண்டி

Pin It

honey beeதேனீ மாதிரி உழைக்கணும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஓய்வில்லா உழைப்பிற்கு அடையாளமாக விளங்குகிறது தேனீ. உழைப்பதில் மட்டுமல்ல சுறுசுறுப்பு, தலைமைக்குக் கட்டுப்படுதல், கூட்டு முயற்சி ஆகியவற்றிக்கும் தேனீயே அடையாளமாக இருக்கின்றது.

ஸ்லோவினியா நாட்டில் 'தேனியைப் பார்த்து படி' என்ற பழமொழி ஒன்று உண்டு. அந்த பழமொழி மேற்கண்ட காரணத்திற்காகத்தான் வழங்கப்பட்டிருக்க கூடும். வரும் முன் காப்பதில் திட்டமிட்டு செயல்படுவது தேனீயின் குணமாக இருக்கின்றது.

பூக்கள் பூக்காத காலங்களிலும், தங்களுக்குத் தேவையான உணவைச் சேமித்துக் கொள்கிறது தேனீ. அதைத்தான் நாம் தேன்கூடு என்கிறோம். ஆண்டொன்றுக்கு 450 கிலோ மலரின் குளுக்கோஸ், புரோபோலிஸ் எனப்படும் பிசின், நீர் மற்றும் மகரந்தத்தை முன்கூட்டியே சேமித்துக் கொள்கிறது. அதனால் உணவுப் பதப்படுத்துவதில் முன்னோடி எனவும் அது அழைக்கப்படுகிறது.

தேனீக்கள் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருக்கின்றன. பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் தோன்றியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஸ்பெயின் நாட்டில் தேன் சேகரிக்கும் நபரின் உருவம் பொறித்த குகை ஓவியம் காணப்படுகிறது. இது எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பானதாகும். 

தேனீக்கள் ஆறு கால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை ஈ பேரினத்தில் ஒரு வகை. ஈ பேரினத்தில் சுமார் 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) எனும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) எனும் இனத்தைச் சார்ந்தவையாகும்.

மனிதனைப் போலவே தேனீக்களும் கூட்டமாக வாழும் தன்மையுடையது. ஒரு கூட்டத்தில் 30 முதல் 40 ஆயிரம் வரை தேனீக்கள் இருக்கும். தேனீக்களின் மூன்று வகை உண்டு. முதல் வகை இராணித் தேனீ. இதுதான் தேனீக்களின் மிகப் பெரியது. அந்த கூட்டங்களுக்கு தலைமை வகிக்கும். இதன் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். இதன் வேலை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வது ஆகும்.

இரண்டாவது வகை ஆண் தேனீ. இதன் வேலை கூட்டை பராமரிப்பது, இராணித் தேனீயை கவனித்துக் கொள்வது. மூன்றாவது வகை வேலைக்காரத் தேனீ. ஒரு தேனீக் கூட்டத்தில் இதுதான் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இதன் வேலை உணவு சேகரிப்பது, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது போன்ற முக்கியமான அனைத்து பணிகளையும் இதுதான் செய்யும். இதன் ஆயுட்காலம் இரண்டு மாதங்கள் ஆகும்.

தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை சேகரிக்கும்போது அவற்றை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு கடத்துவதால், பூக்களிடையே கருவுற நிலை ஏற்படுகிறது. பிறகு மரச் செடிகள் காய்ந்து விதையிட்டு இனம் பெருக்குகிறது. இதைத்தான் மகரந்தச் சேர்க்கை என்று நாம் சொல்கிறோம். இதனால் நிறைய வனப்பரப்பு உருவாகிறது.

தேனீக்களின் மகரந்த சேர்க்கை நடைபெறவில்லையென்றால் பல பயிர்கள் அழிந்துபோகும். இதனால்தான் தேனீக்கள் அழிந்தால் விரைவில் மனிதகுலமும் அழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். 

அண்மைக் காலமாக தேனீக்கள் வேகமாக அழிந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை சூழலியலாளர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்து, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. நெருப்பு மூட்டி தேன் எடுப்பதாலும் தேனீக்கள் மடிந்து வருகின்றன. இதற்கு மாற்றமான பல வழிகள் இருந்தாலும் அதற்கு யாரும் கவனம் கொடுப்பதில்லை.

தேனீக்கள் நேரிடையாக மிகச்சிறந்த இயற்கை மருத்துவப் பொருளான தேனை நமக்கு வழங்குகிறது. அதேபோல் மறைமுகமாக அயல் மகரந்தச் சேர்க்கையால் பயிர்களை செழிக்க வைக்கிறது. இப்பேற்பட்ட தேனீக்கள் அழிவதை கண்டும் காணாமல் இருப்பது சரியல்ல. தேனீக்களை காப்பதில் அனைவரும் அக்கறை செலுத்திட வேண்டும்.

- வி.களத்தூர் பாரூக் 

Pin It

bacteria seawaterவாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் தற்போது கண்டு பிடித்திருக்கின்றனர். இவை இறைச்சி உண்ணும் டினோசார்களான ஸ்பினோசாரஸ் உலகில் சுற்றித் திரிந்த நாட்களுக்கு முன்பே உருவானவை.

இவை கடலுக்கு அடியில் புதையுண்டதற்க்குப்பின் இந்த உலகில் கண்டங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்திருக்கின்றன; கடல் மட்டங்கள் மேலெழும்பி தாழ்ந்திருக்கின்றன; மனிதக் குரங்குகள் தோன்றியிருக்கின்றன; பின்னர் மனிதனும் தோன்றியிருக்கிறான். இத்தனை காலங்களையும் கடந்து அவை இப்போது விழித்தெழுந்திருக்கின்றன.

உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனும், உணவும் கிடைப்பது மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் உயிர்கள் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு அறிவியல் குழு முனைந்திருக்கிறது.

ஜப்பானின் கடல்சார் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை (Japanese Agency for Marine - Earth Science and Technology - JAMSTEC) அய் சேர்ந்த புவிசார் நுண்ணுயிரி ஆய்வாளர் (geo-mirobiologist) யூகி மொரோனோ (Yuki Morono), ரோட் ஐலான்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவென் டி ஹான்ட் (Steven D’Hondt) என்ற அறிவியல் அறிஞர்கள் தலைமையில், அமெரிக்காவின் யூ.ஆர்.ஐ கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஓஷனோகிராபி (URI Graduate School of Oceanography), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, (National Institute of Advanced Industrial Science and Technology), ஜப்பானைச் சேர்ந்த கொச்சி பல்கலைக்கழகம் (Kochi University), ஜப்பானின் கடல்சார் ஆய்வு நிறுவனம் (Marine Works - Japan) ஆகியவை இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன. JOIDES Resolution என்ற ஒரு துளையிடும் கப்பலை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

அவர்கள் ஆய்விற்காக மேற்கொண்ட பகுதி ஆஸ்திரேலியாவிற்கு கிழக்குப் பக்கமாக உள்ள தென் பசிபிக் சுழல் (South Pacific Gyre) என்று அழைக்கப்படும், பெரும்பாலான கடல் நீரோட்டங்கள் ஒன்றாக இணையும் ஒரு பகுதி. அது கடலின் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. அதாவது அங்கு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் கனிமப் பொருட்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கக் கூடிய பகுதி. எனவே உயிர்கள் வாழத் தகுதியற்ற கடுமையான சூழ்நிலையில் உயிர் நிலைத்திருக்கக் கூடிய தன்மையை ஆராய சரியான இடம் இதுவேயாகும் என்பது அவர்களது கணிப்பு.

10 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் இருந்து பிரித்து அறியப்பட்ட பாக்டீரியாக்களை ஆய்வு செய்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்னும் ஆய்வு-இணையதளத்தில் 2020 ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆய்வு கட்டுரையினை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

களிமண்ணும், மண்ணின் வீழ்படிவுகளும் இணைந்த இந்த மண் மாதிரிகள் கடல் நீர் மட்டத்திலிருந்து 5700 மீட்டர் அடியில், கடல் படுகைக்கு கீழே 74.5 மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறன. வழக்கமாக ஒரு கன சதுர சென்டி மீட்டர் அளவுள்ள இந்த மண் மாதிரிகளில் ஒரு லட்சம் செல்களைக் காணக்கூடிய இடத்தில், இவர்கள் எடுத்த மண் மாதிரியில் ஆயிரம் பாக்டீரியாக்களைக் கூட காண முடியவில்லை.

இந்த நுண்ணுயிரிகள், ஏறக்குறைய தங்களது செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறுத்தி விட்டு இருந்தன. ஆனால் அவற்றுக்கு ஊட்டச்சத்தும், உயிர் வாழத் தேவையானவற்றையும் அளித்தபோது அவை மீண்டும் செயல்படத் துவங்கின.

இந்த பேக்டீரியாக்களை 557 நாட்கள் அடைகாத்தலில் (Incubation) வைத்திருந்து அதற்கு உணவாக அம்மோனியா, அசிட்டேட், அமினோ ஆசிட் ஆகியவற்றை வழங்கியிருக்கின்றனர். செயலற்று இருந்த அவை வளர்ந்து, இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. அவை மிகுந்த அளவில் நைட்ரஜனையும் கார்பனையும் உட்கொண்டு 6,986 என்ற எண்ணிக்கையில் இருந்தது 68 நாட்களில் நான்கு மடங்காக அதிகரித்தன. 

முதலில் ஆய்வாளர்களுக்கு நம்ப முடியாததாக தோன்றினாலும், அவர்கள் கண்டறிந்ததில் முக்கியமானது 99.1 சதவீதம் பாக்டீரியாக்கள் 101.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு (சுமார் 10 கோடி ஆண்டுகள்) இந்த மண் படிவுகளில் புதையுண்டதுதான். ஆய்வுகளில், இந்த நுண்ணுயிரிகள் மிக மெதுவாக தனது செயல்படுகளைக் கொண்டிருந்து, அவை இவ்வளவு காலம் உயிரோடு இருந்ததற்கு முக்கிய காரணமாக அறியப்படுவது கடலுக்கு அடியில் ஏற்பட்ட வீழ்படிவு மிக மெதுவாக அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கு இரண்டு மீட்டர் அளவு நிகழ்ந்ததுதான். இது அங்கு ஆக்ஸிஜன் சிறிதளவு எப்போதும் கிடைக்க ஏதுவாக இருந்திருக்கிறது. 

ஆய்வுக் குழு, இந்த மண் மாதிரிகளில் கண்டறிந்ததில் 10 வகையான பரவலாக அறியப்பட்ட பாக்டீரியாக்களும் மற்றவை அந்த அளவுக்கு அதிகமாக அறியப்படாத சிறிய வகை பாக்டீரியாக்களும் அடங்கும். இதில் காணப்பட்டப் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் உப்பு நீரில் காணப்படும் பாக்டீரியாக்களான ஏரோபிக் வகை என அறியப்படுபவை. அதாவது அவை வாழ்வதற்கு ஆக்சிஜன் மிக அவசியத் தேவையாகும். சாதாரணமாக புதையுண்டு இருக்கும் காலத்தில், பாக்டீரியாக்கள் செயலற்ற (dormant) நிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டு தங்களைச் சுற்றி விதை உறையினை (spores) உருவாக்கிக் கொள்ளும். ஆனால் இவை அப்படிப்பட்ட விதை உறைகளை உருவாக்கவில்லை.

ஆய்வின்போது ஒருவேளை பயன்படுத்தும் கருவிகளில் இருந்து ஏதேனும் இந்த மாதிரிகளில் சமீபத்திய பாக்டீரியாக்கள் கலந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களையும், மிக பாதுகாக்கப்பட்ட சூழலையும் கொண்டு இவை ஆய்வு செய்யப்பட்டன.

கடலுக்கு அடியில் கடற்ப் படுகையில் உயிரினங்கள் 15 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றன என்பது ஆய்வாளர்கள் அறிந்ததுதான். ஆனாலும் யூகி மொரோனோ கடுமையான சூழ்நிலைகளில் அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலில் அவற்றின் தாக்குப்பிடிக்கும் திறனை, காலத்தை அறிய முயற்சித்தார்.

இந்த ஆய்வுகள் புவியியலின் காலத்தோடு ஒப்பிடும் போது அவற்றை மிக நீண்ட நாட்களுக்கு முன்தள்ளி இருக்கின்றன. ஏற்கனவே 2000ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட ஒரு முந்தைய ஆய்வில், டெக்ஸாஸில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு படிகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் 250 மில்லியன் பழமையானது எனக் கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. 

இந்த ஆய்வின் முடிவுகள் நுண்ணுயிரிகள் எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் உயிர் வாழத் தகுதியானவை என்பதையே காட்டுகின்றது. இதுவே பரிணாமத்தில் மிக முன்னதாக தோன்றிய நுண்ணுயிர்கள், சாதகமற்ற சூழ்நிலையில் அவற்றுக்கே உரித்தான முறையில் உயிர் வாழ்வதற்கான அவசியமான காரணியாகும்.

அதேபோல சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலோ அல்லது இந்த பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியிலோ உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. நாம் காணும் கோள்களில் மேற்பகுதியில் உயிர் இல்லாவிட்டாலும் அதன் உட்புற பகுதிகளில் உயிர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

(நன்றி: livescience.com, bbc.com, theprint.in, in.reuters.com, sciencedaily.com, sciencemag.org இணைய தளங்கள்)

- இரா.ஆறுமுகம்

Pin It