கடந்த மூன்று பத்தாண்டுகளில் வேதிப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 50% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாற்றாக பசுமை வழியில், சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒட்டும் தன்மை தந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் தாவரங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை அழிக்கிறது.

தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உணவு எண்ணை துளிகள் பூச்சிகளைப் பிடித்து அழிப்பதால் செயற்கைப் பூச்சிக்கொல்லிகள் போல இவை மனிதர்களுக்கும் சூழலிற்கும் தீமை செய்வதில்லை. டி எஸ் (Ts) என்று அழைக்கப்படும் இது வேதிப் பூச்சிக்கொல்லிகளுக்கு ஒரு பசுமை வழி மாற்று என்று புதிய ஆய்வு கூறுகிறது. உணவு எண்ணைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பசை வடிவ பூச்சிக்கொல்லி பனிப் பூண்டு (sundews) என்ற துரோசீரா போன்ற பூச்சி உண்ணும் தாவரங்கள் இரை பிடிக்கும் தந்திரத்த்தின் மூலம் கிடைத்த உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது.

நச்சுத்தன்மை உள்ள பூச்சிக்கொல்லிகள் போல இல்லாமல் மிகப் பெரிய உடலமைப்பைப் பெற்றிருக்கவேண்டும் என்பதால் தீங்கிழைக்கும் பூச்சிகள் இயற்கை வழியிலான இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்பாற்றலை சுலபமாகப் பெற முடிவதில்லை. நன்மை செய்யும் தேனீக்கள் போன்ற அதிகப் பயன்தரும் பூச்சிகள் இந்தத் துளிகளால் பிடிக்கப்படுவதில்லை என்பது இந்த பசுமை வழி பூச்சிக்கொல்லியின் மிகப் பெரிய பயன்.

மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவுக்கான தேவை உலகளவில் அதிகரித்துவருகிறது. ஆனால் பூச்சிகள் பெருமளவிலான உணவுப் பொருட்களை அழிக்கின்றன. இயற்கை மற்றும் வன உயிரினங்களுக்கும் சில சமயங்களில் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதனால் சில நாடுகள் செயற்கை பூச்சிக்கொல்லிகளை அதிக அளவில் தடை செய்துள்ளன. பூச்சிகளைக் கொல்ல உதவும் வேளாண் நட்புடைய சில பூச்சிகளை விவசாயிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

என்றாலும் இந்த புதிய ஒட்டும் தன்மையுடைய துளிகள் உயிரி வழியில் மக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளுக்கு முதல் எடுத்துக்காட்டு. இந்த துளிகள் காய்கறிகள், பழங்கள், அலங்கார செடிகள் உட்பட ஐநூறிற்கும் மேற்பட்ட இனங்களை தாக்கும் மேற்கித்திய மலர் த்ரிப் (western flower thrip) என்ற பூச்சியில் பரிசோதிக்கப்பட்டன. விவசாயத்தை பாதிக்கும் ஒரு முக்கிய பூச்சியான இது வட அமெரிக்கா மற்றும் மேற்கித்திய ஐரோப்பாவில் இருந்து வந்தது.

ஆனால் இது இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சோதனை நடைபெற்ற இரண்டு நாட்களுக்குள் இந்த பூச்சிக்கொல்லி 60 சதவிகிதத்திற்கும் அதிகமான த்ரிப் பூச்சிகளை அழித்தது. ஆனால் துளிகள் பல வாரங்கள் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இந்த பூச்சிக்கொல்லி த்ரிப் பூச்சிகளை அசையவிடாமல் பிடித்துக்கொண்டது. “இந்த பூச்சிக்கொல்லி பற்றி ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

தாவர எண்ணையில் இருந்து உருவான பூச்சிக்கொல்லி

“இந்த பூச்சிக்கொல்லி உள்ளூர் சூழலை பேரழிவு ஏற்படுத்தும் வகையில் பாதிப்பதில்லை. மனிதர்களுக்கு தற்செயலான நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதில்லை” என்று நம்புவதாக” நெதர்லாந்து வேஜன்இன்ஜன் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி (Wageningen University & Research) பிரிவின் சுய பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது பற்றி ஆராய்யும் டாக்டர் தாமஸ் கோட்ஜெர் (Dr Thomas Kodger) கூறுகிறார். வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உணவு உற்பத்தி குறைகிறது. பசுமை மாற்று பூச்சிக்கொல்லிகளும் குறைவாகவே உள்லன.

இந்த புதிய பூச்சிக்கொல்லி பற்றிய கண்டுபிடிப்பு தேசீய அகாடமியின் அறிவியல் முன்னேற்றங்கள் (Proceedings of the National Academy of Sciences) என்ற ஆய்ழிதழில் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஒரு தாவர எண்ணையை ஒட்டும் தன்மையுடையதாக்க அதை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தனர். அதை ஒரு பசை நாடா போல ஆக்கினர். இந்த செயல்முறை தீவிரமான வறுத்தலுக்கு ஒப்பானது. பிறகு அதை நீர் மற்றும் சிறிதளவு சோப்புடன் கலந்து துளிகள் ஒன்றுசேர்ந்து ஒட்டிக்கொள்ளும் இயல்புடையதாக மாற்றினர்.

இந்தத் துளிகள் பின்னர் செவ்வந்தி தாவரங்களின் இலைகள் மீது தெளிக்கப்பட்டன. நெதர்லாந்தின் மிகப் பெரிய வணிகப்பயிரான இந்த தாவரம் த்ரிப் பூச்சிகளின் முக்கிய உணவு. ஸ்ட்ரா பெர்ரி இலைகளிலும் இந்தத் துளிகள் தெளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்கான தெளிப்பு கருவிகள் விவசாயிகள் முன்பு வயல்களில் பயன்படுத்தியவை போலவே வடிவமைக்கப்பட்டவை. ப்ளை பேப்பர் (Fly paper) எனப்படும் காகிதங்கள் இந்த வகை பூச்சிகளை அழிக்க பயன்படுவதில்லை.

பொறிகள் பூச்சிகளைப் பிடிக்க சிறந்த முறையில் உதவுகின்றன. ஆனால் அவை மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்களையும் பிடித்து அழித்துவிடுகின்றன. இந்த மில்லி மீட்டர் அளவே உள்ள துளிகள் மீது அதை விட பெரிய உடலைக் கொண்ட தேனீக்கள் ஒட்டிக்கொள்வதில்லை. இந்தத் துளிகளுடன் நறுமணப் பொருட்களை சேர்ப்பது பற்றி ஆய்வுக் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.

இதனால் சிறிய கடற்கொள்ளையன் பூச்சி எனப்படும் ஓரியஸ் லீவிகாட்டஸ் (Orius laevigatus) போன்றவை திரிப்கள் அல்லது தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளை அதிகமாகக் கவர முடியும். சிறிய கடற்கொள்ளையன் பூச்சி வேட்டையாடுவதன் மூலம் பயிர்களை பாதுகாக்க உதவுகிறது. இது டிரிப்ஸ், சிலந்தி பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்ற சிரிய பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் லார்வாக்களையும் உணவாக உண்கிறது.

நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் இயற்கை வழி பூச்சிக்கொல்லிகள்

பருத்திப் பூச்சிகள் அல்லது மலர்ப் பூச்சிகள் எனப்படும் பைரட் ஃபக் (pirate bug) திரிப் மற்றும் சிறிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த முன்பிருந்தே பயன்படுகின்றன. இந்த புதிய பொருளின் மக்கும் தன்மை மற்றும் ஒட்டும் தன்மை நீடிக்கும் காலம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர். ஆனால் பல தோட்டப் பயிர்கள் பயிர் செய்யப்படும் பசுமை வீடுகளில் இதன் ஒட்டும் பண்பு நீடிக்கும் காலம் முக்கியப் பிரச்சனையாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விலை மலிவான கழிவு எண்ணையில் இருந்தே இந்த சூழல் நட்புடைய பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படுகிறது. இது பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் எந்த அளவிற்கு எவ்வளவு கால இடைவேளைகளில் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி ஆராயப்பட்டுவருகிறது. இந்தப் பொருளை வணிகரீதியில் உற்பத்தி செய்ய ஆய்வுக் குழுவினர் காப்புரிமை கோரியுள்ளனர். “செயற்கைப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.

இயற்கை எண்ணைகள் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் நீடித்த நிலையான வளர்ச்சி ஏற்படும். இந்த பூச்சிக்கொல்லி சூழல் மீதும் இலக்காகக் கொண்டிராத நச்சுத்தன்மையற்ற பூச்சிகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி மேலும் ஆராயப்படவேண்டும். இந்தப் புதிய பொருள் நம்பிக்கயளிப்பதாக உள்ளது” என்று யு கே பூச்சிக்கொல்லி செயல்பாடு (Pesticide Action Network UK) அமைப்பின் நிக் மோல் (Nick Mole) கூறுகிறார்.

“நச்சுத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றான புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும் புதிய ஆய்வு அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கவை. நச்சுப் பூச்சிக்கொல்லிகளால் நம் நாட்டுப் புறங்கள் நீண்ட காலமாக நஞ்சாகிவருகிறது. இவை மகரந்த சேர்க்கை செய்யும் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகிறது.

இருந்தாலும் புதிய மாற்றுப் பொருட்கள் மற்ற இலக்காகக் கொண்டில்லாத உயிரினங்களும் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை தீவிரமாக மதிப்பீடு செயல்முறைகளுக்குப் பிறகே பதிலீடு செய்யப்படவேண்டும்” என்று முதுகெலும்பற்ற பூச்சிகளுக்கான அறக்கட்டளையின் கிரேக் மகாடம் (Craig Macadam) கூறுகிறார். “புதிய பொருட்கள் அனைத்தும் அனுமதி வழங்கும் நபர்களால் மறுக்கப்படுகின்றன என்று பயிர் வளர்ப்போர் கருதுகின்றனர். சூழலிற்கு உகந்த இவற்றிற்கு அனுமதி கோரி போராடவேண்டியுள்ளது.

நாம் வாழும் காலத்திலேயே இந்த புதிய கண்டுபிடிப்புகள் உலகை மாற்ற உதவுவது பெருமைக்குரியது” என்று கோட்ஜெர் கூறுகிறார். வருங்காலத்தில் இத்தகைய புதிய மாற்றுப் பொருட்கள் சூழலையும் மனித குலத்திற்கு உணவூட்டும் விவசாயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்