ஏழைகளின் ஆப்பிள் தக்காளி என்பது போல, ஏழைகளின் மரம் என்ற பெருமைக்குரியது மூங்கில். புல் இனத்தைச் சேர்ந்த இந்தத் தாவரம் அண்டார்டிகா, ஐரோப்பா தவிர உலகம் எங்கும் காணப்படுகின்றது. பூமியில் 190 வகைகளில் 1600 இனங்கள் உள்ளன. இதில் 138 இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதிவேகமாக வளரும் இவை எடை குறைவு, உறுதித்தன்மை, மினுமினுப்பு போன்ற பண்புகளால் கட்டுமான செயல்களுக்கு உகந்தவையாக உள்ளன.

கூட்டமாக வளர்தல், வலுவான கணுக்கள், நார்ப்படலம் போன்ற பண்புகள் சூழல் பாதுகாப்பிற்கு மூங்கில் மரங்களை உகந்தவையாக மாற்றுகின்றன. குன்றின் சரிவுகள், வயலோரங்கள், மலைகளில் குறைந்த பராமரிப்புடன் வேகமாக வளர்வதால் இந்த மரங்களை ஒரு விளைபயிராகவும் விவசாயிகள் வளர்க்கின்றனர். நல்ல விலை, மரத்திற்கு மாற்றாக பல வேலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதால் இது பரவலாக வளர்க்கப்படுகிறது.

2 செமீ மட்டுமே அளவுள்ள ராடியெல்லா ரமன்சே என்ற பிரேசிலியன் இனம் முதல் 50 மீ உயரம் வரை நம் நாட்டில் வளரும் டெண்ட்ரோகிளாமஸ் ஜைஜான்ண்டிஸ் என்ற பிரம்மாண்ட இனம் வரை இவை பல தரத்தில் உள்ளன. ஒற்றை மூங்கில், சீன மூங்கில், தோட்ட மூங்கில், அலங்கார மூங்கில் என்று பல வகைகள் உள்ளன. திருவனந்தபுரம் பாலோடு என்ற இடத்தில் ஜவஹர்லால் நேரு வெப்பமண்டலப் பயிர்களுக்கான பூங்காவில் (JNTBGRI) மூங்கில் பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன.bamboo 427தோட்டப் பயிர்களுக்கான ரகங்கள் திசு வளர்ப்பு முறையில் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. இதற்காக இங்கு 20 ஏக்கர் பரப்பில் 63 இனங்கள், 45 கலப்பினங்கள் அடங்கிய 1200 மூங்கில் மரக்கூட்டங்களின் தோட்டம் (மூங்கில் சிப்பம்) உள்ளது. மூங்கில்கள் மண் இடிந்து விழுதல், மண் சரிவு, மண் அரிப்பு, நதிக்கரை பாதுகாப்பு, சூழல் மீட்பு (eco restoration), பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்களைத் தடுக்க உதவுகின்றன.

காற்று மண்டலத்தில் வெளியிடப்படும் கார்பனின் அளவைக் குறைக்க, இதன் மூலம் வாயு மாசின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இவற்றிற்கு நீர்மாசுக்களை உறிஞ்சி எடுக்கும் ஆற்றல் உண்டு. நட்டது முதல் உயிருள்ளவரை வெட்ட வெட்ட கிளைகள் மீண்டும் மீண்டும் வளர்வதால் இவற்றை மறுஜென்மம் எடுக்கும் மரங்கள் என்று சொல்லலாம். இவை இனத்திற்கு ஏற்ப 20 முதல் 120 ஆண்டுகள் வரை வாழ்கின்றன. ஒரு வித்திலைத் தாவரங்களான இவை ஆயுள் முடியும்போது ஒன்றுசேர்ந்து பூக்களை மலரச் செய்கின்றன.

விதை உற்பத்தி செய்தபிறகு மண்ணுடன் மண்ணாக மறைந்து போகின்றன. குறைந்த நீர்த்தேவை, பராமரிப்பு, பன்மயத்தன்மை, குறைவான முதலீடு போன்றவற்றால் இவை தாய்த்தாவரங்களின் மரம் என்று அழைக்கப்படுகின்றன.

கைவினைப் பொருட்கள், ஆயுதங்கள், மருந்துகள், வீட்டு உபகரணங்கள், இருக்கைகள், வேளாண் கருவிகள், சமூகப் பயன்பாட்டிற்குரிய உபகரணங்கள், வீட்டு கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு நீடித்த மூலப் பொருளாக மூங்கில் பயன்படுகிறது. மூங்கில் வீடுகள் சூழலுக்கு நட்புடையவை, குறைந்த செலவிலானவை. மூங்கிலின் அரிசி, பூ மொட்டுகள் உணவாகப் பயன்படுகின்றன. இதன் தடி ஒரு எரிபொருள், நீர் சுத்திகரிப்பான்.

பல உயிரினங்களின் உணவாகவும், வாழிடமாகவும் உள்ளன. பெரிய பாண்டா, சிவப்பு பாண்டா, வௌவால்கள், மூங்கில் எலி போன்றவை சில எடுத்துக்காட்டுகள். 2009 முதல் செப்டம்பர் 18 உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.

காடுகளில் வனவிலங்குகள் சாலைகளைக் கடக்கும்போது விரைந்து செல்லும் வாகனங்களின் மோதி உயிரிழப்பதைத் தடுக்க மூங்கில்கள் கொண்டு அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் பயன்படுகின்றன. இந்த பாலங்கள் கோவை அருகில் உள்ள ஆனைக்கட்டி, கேரளா, உத்ராகண் போன்ற இடங்களில் எண்ணற்ற வன உயிரினங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

புல்லாங்குழல் தரும் மூங்கில்கள் உள்ளுக்குள் எதையும் மறைத்து வைத்துக் கொள்வதில்லை. உள்ளீடற்ற அப்பகுதி வெறும் சூன்யமே! வெட்ட வெட்ட வளர்ந்து பயன் தருகிறது. உயிருள்ளவரை மற்றவர்களுக்காக வாழ்கிறது. மரணத்திலும் பூ பூத்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் மறைகிறது. மூங்கில் போல வாழ்வோம். நம் வாழ்வையும் மகத்துவமாக்குவோம். அவற்றில் இருந்தும் சில இராகங்களை மீட்டெடுத்து நமக்குள் இசைப்போம். மனோகர இராகங்கள் அவற்றில் இருந்து உயரட்டும்!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உயிர்ப் பன்மயத் தன்மையை பாதுகாப்பதில் தேனீக்கள் மகத்தான பங்கு வகிக்கின்றன. உணவு, சூழல் பாதுகாப்பிற்கு இந்த சின்னஞ்சிறிய உயிரினங்கள் ஆற்றும் சேவை அற்புதமானது.

தேனீக்களுக்காக ஓர் உலக நாள்

நவீன தேனீ வளர்த்தலின் தந்தை என்று அழைக்கப்படும் ஆண்டன் ஜாக்சா மத்திய ஐரோப்பா ஸ்லோவேனியா நாட்டில் 1734 மே 20 அன்று பிறந்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 20 உலக தேனீக்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. மகரந்த சேர்க்கை மூலம் உணவுப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் தேனீக்கள், பல சிறிய பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையில் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் அவை இந்த நாளைக் கொண்டாடுகிறது.

பூச்சிகள் குடும்பத்தைச் சேர்ந்த தேனீக்களை வளர்ப்பதற்கேற்ற சூழ்நிலை தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இவற்றிற்குத் தேவையான ஆற்றல் தேனில் இருந்தும், வளர்ச்சிக்கு அவசியமான புரதம் மகரந்தத் தூளில் இருந்தும் கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வெவ்வேறு காலங்களில் பூக்கும் மரங்கள், குத்துச் செடிகள் தேனீக்களுக்கு தேன், மகரந்தத் தூளை சேகரிக்கும் மூல ஆதாரமாக விளங்குகின்றன.beesகேரளா, தமிழகத்தில் முக்கிய பயிரான தென்னை தேனீக்களுக்குத் தேவையான மகரந்தத்தை வழங்குகிறது. தேனீக்களின் வளர்ச்சிக் காலமான ஆகஸ்ட், டிசம்பர் மாதங்களில் தேனீக்களின் காலனிகளை தென்னந்தோப்புகளில் அமைத்து வளர்க்கலாம். இரப்பர், ஏலம் உள்ளிட்ட பல பயிர்கள் வளரும் தோட்டங்களில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் விளைச்சலையும் அதிகரிக்கலாம். இவற்றின் மகரந்த சேர்க்கை மூலம் விவசாயப் பயிர்களில் 20 முதல் 40% விளைச்சல் அதிகரிக்கிறது.

தேனீக்கள் மூலம் மகரந்த சேர்க்கை நிகழ்ந்து அதில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கள் தரம் மிக்கவையாக உள்ளது. விதைகளின் எடையும் அதிகமாகக் காணப்படுகிறது. எண்ணெய்ப் பயிர்களில் இருந்து எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. சமீபத்தில் கேரள விவசாயப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் சிறுதேனீக்கள் கொண்டு நடத்தப்பட்ட மகரந்த சேர்க்கையில் வெள்ளரியின் விளைச்சல் 60% அதிகரித்துள்ளது. பொதுவாக வேளாண்மையில் இந்தியத் தேனீக்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

தேனீ என்னும் அமுதசுரபி

 தேனீக்களில் இருந்து தேன், மெழுகு, மகரந்தத் தூள், நஞ்சு, ராயல் ஜெல்லி, புரோப்போலிஸ் போன்ற விலை மதிப்பிட முடியாத பொருட்கள் கிடைக்கின்றன. பூக்களில் இருந்து சேகரிக்கும் தேனை தேனீக்கள் தங்கள் வயிற்றுப் பகுதியில் சுரக்கும் திரவங்களைப் பயன்படுத்தி குளுக்கோஸ், பிரக்டோஸ் என்னும் எளிய சர்க்கரை மூலக்கூறுகளாக மாற்றுகின்றன. பிறகு தேனில் கலந்துள்ள நீரின் அளவைக் குறைத்து தேனீக்கள் தேனை அடைகளில் சேகரிக்கின்றன.

தனிச்சிறப்பு மிக்க ஓர் உணவான தேன் முன்கூட்டியே பாதியளவு செரிக்கப்பட்டதால், நம் உடலில் வேகமாக இரத்தத்துடன் கலக்கிறது. பல அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, சி, இரும்பு, கால்சியம் போன்ற தாதுக்கள் தேனில் உள்ளது. இதனால் ஆயுர்வேதம், சித்தா போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளில் தேன் ஒரு முக்கியப் பொருளாகப் பயன்படுகிறது.

திரவ வடிவில் உள்ள தேன் (liquid honey/extracted honey), அடைத்தேன், ஜங்க் தேன், கிரீம் தேன் போன்ற பல்வேறு வடிவங்களில் தேன் கிடைக்கிறது. மனிதரின் தொடுதல் இல்லாமல், தானே வடிவமைத்து நீரின் அம்சத்தைக் கட்டுப்படுத்தி நொதிகள், அமிலங்கள், உயிர்ச்சத்துகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் கலந்து தேனீக்கள் உருவாக்கும் தேனடை/அடைத்தேன் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ளது.

தரமேன்மை உள்ள இது திரவ வடிவில் உள்ள தேனைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் தேன் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியில் ஒருவர் சராசரி ஓர் ஆண்டில் 10 முதல் 15 கிலோ தேன் சாப்பிடுகிறார். இதில் வெறும் 8.4% மட்டுமே இந்தியாவில் உட்கொள்ளப்படுகிறது. தேனின் மகத்துவத்தை இந்தியர்கள் இன்னும் உணரவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

தேன் மெழுகு

14 நாட்கள் வயதுள்ள வேலைக்காரத் தேனீக்கள் அவற்றின் வயிற்றுப் பகுதியின் அடியில் உள்ள சுரப்பிகளில் இருந்து தேன்மெழுகை உற்பத்தி செய்கின்றன. ஒரு கிலோ மெழுகை உற்பத்தி செய்ய ஏறக்குறைய 6.5 முதல் 8.5 கிலோ தேன் ஒரு தேனீ காலனிக்குத் தேவைப்படுகிறது. தேன் மெழுகில் முதன்மையாக மோனோ எஸ்டர்கள் அடங்கியுள்ளன.

செயற்கைத் தேனடைகள், கியூசெல்கப் போன்றவற்றை உருவாக்க, தேன் சேகரிக்கப் பயன்படுத்தப்படும் டிரம்கள், பேரல்களின் உட்புறப் பூச்சிற்காக தேன் மெழுகு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. உடற்செல்களை மென்மைப்படுத்த, புனரமைக்க உதவும் என்பதால் தேன் மெழுகு அழகு சாதனங்களில் ஒரு முக்கிய பொருளாகப் பயன்படுகிறது.

நீர்க்காப்பு துணிகள் (water proof fabrics) தயாரிப்பு, தோல் பொருட்களின் பூர்த்தி செய்யும் தொழில் (finishing works), சூழலிற்கு நட்புடைய காலனித் தொழிலில் இது அதிகமாகப் பயன்படுகிறது. இது தவிர வண்ணப்பூச்சுகள், உதட்டுச் சாயங்கள், மெழுகு பொம்மைகள், இசைக்கருவிகள், குழந்தைகள் பயன்படுத்தும் வண்ண மெழுகு பென்சில்கள் (cryons) ஆகியவை தயாரிக்க தேன் மெழுகு பயன்படுகிறது. ஒரு கிலோ மெழுகு சந்தையில் இப்போது ரூ.450 முதல் 550 வரை விற்கிறது.

மகரந்தத்தூள்

மகரந்தத் தூள் தேனீக்களின் முக்கிய மாவு சத்து உணவு. மருத்துவ குணத்துடன் அதிக மதிப்பு கூட்டப்பட்ட பொருளான இது பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 25% மாவு சத்துடன் அமினோ அமிலங்கள், தாதுக்கள், நொதிகள், வைட்டமின் பி, சி, டி ஆகியவை உள்ளன.

வேலைக்காரத் தேனீக்கள் பூக்களில் இருந்து துகள்களை அவற்றின் பின்கால்களில் உள்ள போலன் கூடைகளில் (polen baskets) நிறைத்து சிறிய உருண்டைகளாக மாற்றி கூட்டிற்கு கொண்டு வருகின்றன.

ஒரு முறை ஒரு லோடு தூளைச் சேகரிக்க ஒரு தேனீ ஏறக்குறைய 50 முதல் 100 பூக்களில் சென்று அமர்கின்றது. இவ்வாறு தினம் 5 முதல் 50 முறை ஒரு தேனீ கூட்டை விட்டு வெளியில் செல்கிறது. கேரளப் பல்கலைக்கழகத்தில் செயற்கையாக மகரந்தத் தூளை சேகரிக்க புதியதொரு மகரந்தத் தூள் வலை (polen trap) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கேரளா வெள்ளாயினி விவசாயக் கல்லூரி துணைப் பேராசிரிய & அகில இந்திய தேனீக்கள் மூலமான மகரந்த சேர்க்கை ஆய்வுத் திட்டத்தின் (All India Project on Bee Polination) முதன்மை ஆய்வு விஞ்ஞானி (Chief investigator) டாக்டர் வி எஸ் அமிர்தா கூறுகிறார்.

இந்த வலை அக்கீல் என்ற விரிப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. இந்த உபகரணம் தேனீக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கூட்டின் நுழைவாயிலில் கட்டப்படுகிறது. இதன் மூலம் செயல் திறனுடன் தூய்மையான தூளை சேகரிக்க முடியும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட தூளை நுண்ணுயிரிகளிடம் இருந்து பாதுகாக்க தூளில் உள்ள நீரின் சதவிகிதம் 5 முதல் 8% வரை இருக்குமாறு செய்யப்படுகிறது. 

புரொப்போலிஸ் (propolyse)

எப்பிஸ் (Epis) வகையைச் சேர்ந்த இந்திய, இத்தாலியத் தேனீக்கள், சிறுதேனீ ஆகியவை இதனை சேகரிக்கின்றன. ஐரோப்பியத் தேனீக்களுடன் ஒப்பிடும்போது இந்தியத் தேனீக்கள் மிகக் குறைந்த அளவே புரோப்போலிசை சேகரிக்கின்றன. குளிர்காலங்களில் இந்தியத் தேனீக்கள் இந்த மதிப்புமிக்க பொருளை அதிகமாக சேகரிக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. தேனீக்களின் கூட்டில் சட்டங்கள், இடைவெளிகளை அடைப்பதற்காக இதனை தேனீக்கள் பயன்படுத்துகின்றன.

மரங்களின் தோல் பகுதி, நுனிக் கிளைகளில் உள்ள அரக்கு போன்ற பொருளாக மாற்றி தேனீக்கள் இதைத் தயாரிக்கின்றன. இது தேனீக்களால் தேன் கூடுகளில் பாதுகாத்து வைக்கப்படுகிறது. இதில் 50% ரெசின், 30% மெழுகு உள்ளது. புராதன காலத்தில் எகிப்தில் இறந்தவர் உடல்களைப் பாதுகாக்க இது பயன்படுத்தப்பட்டது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள புரோப்போலிஸ் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்த உதவும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இது தவிர தோலில் தடவும் கிரீம், சுவிங்கம், பற்பசை போன்றவற்றில் இது முக்கிய பொருள். பிளாஸ்டிக் வலையைப் பயன்படுத்தி ஒரு தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 300 கி புரோப்போலிசை ஓர் ஆண்டில் தயாரிக்கமுடியும். 28 கி புரோப்போலிஸின் இன்றைய விலை ரூ.500. வெளிநாடுகளில் குழாய் மாத்திரை, மாத்திரை, டிங்க்ச்சர், எண்ணெய் (oil extract) என்று பல வடிவங்களில் புரோப்போலிஸ் விற்பனை செய்யப்படுகிறது.

ராயல் ஜெல்லி

6 முதல் 12 நாட்கள் வயதான ஒரு வேலைக்காரத் தேனீயின் ஹைப்போபிரிஞ்ஜில் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்தை மேண்டிகுலர் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் திரவத்துடன் துல்லியமான அளவில் கலந்து தேனீ ராயல் ஜெல்லியைத் தயாரிக்கிறது. இது இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிற அடர் திரவம்.

முட்டையில் இருந்து பொரிந்து வெளிவரும் வேலைக்காரத் தேனீ, ஆண் தேனீ ஆகியவற்றின் புழுக்கள் முதல் மூன்று வாரம், ராணித் தேனீயின் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இதனை உணவாக உட்கொள்கின்றன. இதில் ஏறக்குறைய 67% நீர், 12 முதல் 15% புரதம் உள்ளது. விலைமதிப்பு மிக்க சத்துக்கள் நிறைந்த ராயல் ஜெல்லி மனிதர்களில் இளமை, கவர்ச்சியான தோற்றத்தை நிலைநிறுத்துவதற்கு உதவுகிறது. இது இரத்த கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கப் பயன்படுகிறது.

ஏராளமான அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தி செய்ய இது உதவுகிறது. சரியாகப் பராமரிக்கப்படும் ஒரு தேன் கூட்டில் இருந்து ஐந்து, ஆறு மாதங்களில் 500 கி வரை இதனை சேகரிக்கலாம். இதற்காக செயற்கையாக ராணித் தேனீயை உருவாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. 3 முதல் 4 நாள் வயதுள்ள ராணித் தேனீ அறையில் இருந்து சேகரிக்கப்படும் புழுக்களிடம் இருந்தே அதிக அளவில் ராயல் ஜெல்லி கிடைக்கிறது. ஒரு ராணித் தேனீயின் அறையில் இருந்து 200 முதல் 300 கி வரை ராயல் ஜெல்லி கிடைக்கிறது.

நன்கு மூடப்பட்ட குப்பிகளில் சேகரித்து இதை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்கலாம். இன்று இதன் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பது சீனா. ஒரு அவுன்ஸ்/28 கி ராயல் ஜெல்லியின் சர்வதேச சந்தை விலை ரூ.4000. திரவ வடிவிலும், குழாய் மாத்திரை வடிவிலும் இது சந்தைப்படுத்தப்படுகிறது.

நஞ்சு (Epi toxin)

எதிரிகளிடம் இருந்து தேனீக்களுக்கு இயற்கை வழங்கிய ஒரு தற்காப்புப் பொருளே தேனீயின் நஞ்சு. வேலைக்காரத் தேனீயின் வயிற்றில் உள்ள தனித்தன்மை கொண்ட சுரப்பியில் இருந்து இது உற்பத்தி செய்யப்படுகிறது. நஞ்சுப்பையில் இது சேகரிக்கப்படுகிறது. தேனீ கொட்டும்போது அதன் கொடுக்கு வழியாக இது வெளியே செலுத்தப்படுகிறது. இரண்டு நாள் வயதான வேலைக்காரத் தேனீயில் இருந்து அதிக நஞ்சு கிடைக்கிறது.

இந்த நஞ்சைப் பயன்படுத்தி அளிக்கப்படும் சிகிச்சை தேனீ நஞ்சு சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. பல தரப்பட்ட பெப்டைடுகள் (Peptides) அடங்கிய இதில் மெலிட்டின் என்ற வேதிப்பொருள் அதிகமாகக் காணப்படுகிறது. மூட்டு வலி (tomotraid arthritis) குறைபாட்டிற்கு இந்த நஞ்சு ஒரு நல்ல மருந்து. செப்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட சட்டங்களில் (Copper frames) 12 வோல்ட் மின்சாரத்தை செலுத்தி தேனீக்களை தூண்டி இந்த நஞ்சு சேகரிக்கப்படுகிறது.

இந்தக் கருவியின் பெயர் நஞ்சு சேகரிப்பு பேடகம் (P venum clucter). இந்த முறையில் ஒரு இந்தியத் தேன் கூட்டில் இருந்து ஏறக்குறைய 30 நிமிடத்தில் 25 கி வரை நஞ்சை சேகரிக்க முடியும். இது ஒரு கண்ணடிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கிராம் தேனீ நஞ்சின் விலை 50 முதல் 60 டாலர். தேனீ நஞ்சு உற்பத்தியில் சீனா உலகில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவைக் கண்டறிய உதவும் தேனீக்கள்!

மகத்தான தேனீக்களின் நற்பண்புகளுக்கு சிகரம் வைத்தாற்போல சமீபத்தில் ஒரு வியப்பூட்டும் செய்தி வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ்கள் உள்ள மாதிரிகளை அடையாளம் காண தேனீக்களுக்கு பயிற்சி வழங்கி ஆய்வுகள் நடைபெற்றன. இது வெற்றி கண்டுள்ளது. வாண்டல்பால் என்ற டச்சு விஞ்ஞானியின் தலைமையில் இந்த ஆய்வுகள் நடந்தன.

 எண்ணில் அடங்காத நன்மைகளை வாரி வழங்கும் இந்த அருமை உயிரினங்களின் வாழ்வை துயரமயமாக்காமல் பாதுகாக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு. தித்திக்கும் தேனைத் தரும் இந்த உயிரினங்களின் வாழ்க்கையை சூழலிற்கு விரோதமான செயல்களால் நாம் கசப்பு மிக்கதாக மாற்றி விடக்கூடாது. தேன் எடுக்க மலர்கள் இல்லாமல், உண்ண உணவு கிடைக்காமல், வாழிடம் பறிக்கப்பட்டு பட்டினி கிடந்து இவை அழிந்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த நிலை நீடித்தால் நாளை நமக்கும் இதே கதி ஏற்படும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா (Arequita) என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீ /14,700 அடி உயரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இதனை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் கண்டுபிடித்தது.Liolaemus Warjantayஅமைப்பும் பரவலும்

இதன் தலை அடர் சாம்பல் நிறத்துடன் உள்ளது. பெண் இனப் பல்லிகள் வெளிறிய மஞ்சள் நிற கண் இமைகளைப் பெற்றுள்ளன. அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழு இந்த இனத்தைக் கண்டுபிடித்தது. இதே வகையைச் சேர்ந்த 280 இனங்கள் பெருவில் உள்ள மத்திய ஆண்டீஸ் பகுதி முதல் தென்னமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள படகோனியா (Patagonia) வரை காணப்படுகிறது.

தகவமைப்பு

இவை தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பல்வேறு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. 2021 ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் இதே பிரிவைச் சேர்ந்த மற்றொரு பல்லியை இதே பகுதியில் 5,000மீ உயரத்தில் கண்டுபிடித்தனர். இதுவே உலகில் மிக உயரத்தில் வாழும் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் என்று அப்போது விஞ்ஞானிகள் கருதினர். இந்த கண்டுபிடிப்பு பூமியில் மனிதன் கண்டறிய வேண்டிய உயிரினங்கள் எண்ணற்றவை உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

அண்டார்க்டிகாவில் மட்டுமே காணப்படும் இரண்டு பெங்குயின் இனங்களில் ஒன்றான எம்பரெர் பெங்குயின்கள் இன்று கடுமையான இன அழிவு அச்சுறுத்தலை சந்திக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மாற்றத்தின் கெடுதியால் வரும் முப்பது முதல் நாற்பது ஆண்டுகளில் இவற்றின் எண்ணிக்கையில் மோசமான அளவில் மாற்றங்கள் ஏற்படும் என்று அர்ஜெண்டினா அண்டார்க்டிகா ஆய்வுக்கழகத்தின் (IAA) நிபுணர்கள் கூறுகின்றனர்.

 பசியும் பட்டினியும்

உணவுப் பற்றாக்குறை போன்ற கடும் பிரச்சனைகளால் இவை இன்று அழிந்து கொண்டிருக்கின்றன. உலகின் இப்பகுதியில் மட்டுமே காணப்படும் இவை பெங்குயின்களின் இனத்தில் மிகப்பெரியவை. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பனிப்பாறைகள் உருகுதல் இவற்றின் இனப்பெருக்க சுழற்சியை பாதிக்கிறது.

emperor penguinகடலில் கரையுடன் தொடர்புள்ள பனிப்பாறைகளில் இவை முட்டைகளை பொரிக்கின்றன. புவி வெப்ப உயர்வு காரணமாக பனிப்பாறைகள் தொடர்ச்சியாக உருகுவதால் இவை ஆண்டுகள் கணக்கில் இனப்பெருக்கத்தில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் இவற்றின் எண்ணிக்கை குறைகிறது. பனிக்கட்டிகள் உருகிய பகுதியில் குளிர்ந்த நீரில் நீந்துவதற்கும் முன்பே இவற்றின் குட்டிகள் நீரில் விழுந்து இறக்கின்றன. இது இவற்றின் இனம் பெருகத் தடையாக உள்ளது.

நீரில் மூழ்கி உயிரிழக்கும் பெங்குயின் குட்டிகள்

அண்டார்க்டிகாவில் ஹாலி பே காலனியில் மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக முட்டை பொரிந்து பிறந்த குட்டிகள் முழுவதும் இது போல நீரில் விழுந்து குளிர்ச்சியைத் தாங்க முடியாமல் மூழ்கி உயிரிழந்தன.

சுற்றுலா மற்றும் மீன் பிடித் தொழிலில் ஏற்பட்ட பெருத்த மாற்றங்கள் இவற்றின் எண்ணிக்கை குறையக் காரணமாகிறது. இது உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. கார்பன் டை ஆக்சைடின் உமிழ்வு இன்றுள்ள இதே நிலையில் தொடர்ந்தால் இந்த பெங்குயின்களின் காலனிகளில் 81% வரும் 2100ம் ஆண்டுடன் இன அழிவைச் சந்திக்கும் என்று அண்டார்க்டிகா பற்றிய ஆய்வறிக்கை (Scientific Community of Antarctica Research) கூறுகிறது.

கிழக்கிலும் மோசமான நிலை

கிழக்கு அண்டார்க்டிகாவிலும் பெரிய அளவில் வெப்பநிலை உயர்கிறது. இன்று நிலை அந்த அளவு மோசமானதில்லை என்று தோன்றினாலும் இந்த நூற்றாண்டின் இறுதியுடன் இவற்றின் எண்ணிக்கை இங்கு 31% குறையும் அபாயம் உள்ளது என்று உலக வன நிதியம் (WWF) கூறுகிறது.

எடுத்துக்காட்டாகும் எம்பரெர் பெங்குயின் குடும்பம்

இப்போது அண்டார்க்டிகாவில் 595,000 வயது வந்த எம்பரெர் பெங்குயின்கள் மட்டுமே வாழ்கின்றன. இவற்றை உயிரினப் பாதுகாப்பிற்கான சிறப்புப் பட்டியலில் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெண் பெங்குயின்கள் முட்டையிட்டு ஆண் பெங்குயின்களிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டு உணவு தேடிச் செல்லும். அவை திரும்பி வரும்வரை ஆண் பெங்குயின்கள் முட்டையைப் பாதுகாத்து தன் இணையின் வரவிற்காகக் காத்திருக்கும். இந்த காத்திருப்பு 65 நாட்கள் வரை தொடரும்.

குழந்தை பிறந்தவுடன் பயணம்

இதன் பிறகு ஆண் பெங்குயின் முட்டை விரிந்து பிறக்கும் குட்டியை பையில் வைத்து பாதுகாக்கும். தாய் பெங்குயின் திரும்ப வரும்போது குழந்தையை இணையிடம் திரும்ப ஒப்படைத்துவிட்டு ஆண் பெங்குயின் உணவு தேடிச் செல்லும்.

புவிப் பந்தின் தென் கோடி அழகு என்று வர்ணிக்கப்படும் இந்த அற்புத உயிரினங்கள் பேரழிவில் இருந்து தப்பிப் பிழைத்து வாழ வேண்டுமென்றால் புவியின் வெப்ப உயர்வு குறைக்கப்பட வேண்டும். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு குறைய வேண்டும். இதையெல்லாம் செய்யக்கூடிய ஆற்றல் வாய்த்த பூமியின் ஒரே ஒரு உயிரினம் மனிதன் மட்டுமே. காலநிலையில் நிகழும் மாற்றம் மனித மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துமா?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It