கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- விஞ்ஞானி க.பொன்முடி
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழகத்தின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் நில அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 10.08.2009 அன்று அந்தமான் தீவில் ரிக்டர் அளவில் 7.6 அளவிலான நிலஅதிர்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது சென்னையிலும் அதிர்ச்சி உணரப்பட்டது. ஆனால் இன்று அந்தமான் தீவில் நில அதிர்ச்சி எதுவும் ஏற்படாத நிலையில் ராமேஸ்வரத்தில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம்?
இதே போன்று இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான அசாம் மேகாலாயா மிசோரம் பகுதியில் நேற்று ரிக்டர் அளவில் 4.9 அளவிலான நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும் இந்தியாவின் தென் கோடிப் பகுதியான ராமேஸ்வரத்தில் இன்று ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் தொடர்பு இல்லை.
குறிப்பாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு அந்தந்த இடங்களில் பூமிக்கு அடியில் உள்ள பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். பூமி தோன்றிய காலத்தில் முழுவதும் பாறைக் குழம்புக் கோளமாக இருந்தது. அதன் பிறகு கோடிக் கணக்கான ஆண்டுகளாக படிப் படியாகக் குளிர்ந்து இறுகியதால் புற ஓடு உருவானது. இந்தப் புற ஓடு அடர்த்தி குறைவானதாக இருப்பதால் அவைகள் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பின் மேல் மிதக்கிறது.
இன்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிக் கொண்டிருப்பதால் பூமிக்கு அடியில் புதிய பாறைத் தட்டுகள் உருவாகின்றன. பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு படிப் படியாகக் குளிர்ந்து இறுகிப் புதிய பாறைத் தட்டுகள் உருவாகும் பொழுது அதிலிருந்து நீரும் வாயுக்களும் பிரிவதால் பூமிக்கு அடியில் இருக்கும் அடர்த்தி அதிகமான பாறைக் குழம்பில் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் பாறைத் தட்டுகளின் கன அளவும் அதிகரிக்கின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன.
இவ்வாறு பூமிக்கு அடியில் புதிதாக உருவாகி உயரும் அடர்த்தி குறைந்த பாறைத் தட்டுகள் அப்பகுதியில் ஏற்கனவே உருவாகி இருக்கும் பழைய பாறைத் தட்டுகளை மேல் நோக்கி தள்ளுகின்றன. இதனால் அந்த இடத்தில பூமிக்கு அடியில் இருந்து பாறைத் தட்டுகள் உயருகின்றன. இவ்வாறு ஒரு இடத்தில பாறைத் தட்டுகள் உயரும் பொழுது உயரும் பாறைத் தட்டுகளின் விளிம்புகள் அப்பகுதியில் உள்ள மற்ற பாறைத் தட்டுகளின் விளிம்புகளுடன் உரசுவதால் நில அதிர்ச்சி ஏற்படுகிறது.
மற்றபடி சில ஆராய்ச்சியாளர்கள் கூறுவது போல் பாறைத் தட்டுகள் பக்கவாட்டில் நகருவதால்தான் நில அதிர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மையென்றால் இந்தியாவில் எல்லா இடத்திலும் ஒரே நாளிள் நில அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள்
1679 ஜனவரி 28 அன்று சென்னை கோட்டையில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 6 அன்று ஆவடி பூந்த மல்லி பகுதியில் சிறு நில நடுக்கம்.
1807 டிசம்பர் 10 அன்று சென்னையில் நில நடுக்கம்.
1816 செப்டம்பர் 16 அன்று சென்னையில் லேசான நில நடுக்கம்.
1822 ஜனவரி 29 அன்று வந்தவாசியில் நில நடுக்கம்.
1823 மார்ச் 2 அன்று ஸ்ரீ பெரும்புதூரில் நில அதிர்ச்சி.
1859 ஜனவரி 3 அன்று கடலாடி போரூர் ஆகிய இடங்களில் நில நடுக்கம்.
1867 ஜூலை 3 அன்று விழுப்புரம் வளவனூர் பகுதியில் நில நடுக்கம்.
1881 டிசம்பர் 31 அன்று அந்தமானில் நில அதிர்ச்சி ஏற்பட்டபொழுது சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1882 பிப்ரவரி 28 ஊட்டியில் நில நடுக்கம்.
1900 பிப்ரவரி 8 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1841 ஜூன் 26 அந்தமானில் ஏற்ப்பட்ட நில அதிர்ச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் லேசான நில அதிர்ச்சி.
1972 ஜூன் 26 அன்று கோவையில் நில அதிர்ச்சி.
1988 ஜூலை 7 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் பாதிப்பு.
1993 டிசம்பர் 6 மன்னார் வளைகுடாவில் நில நடுக்கம்.
2000 டிசம்பர் 12 அன்று கேரளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் லேசான நில நடுக்கம்.
2001 ஜனவரி 7 அன்று தமிழகத்தில் தென் மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 ஜனவரி 26 குஜராத்தில் ஏற்ப்பட்ட கடுமையான நில நடுக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் லேசான நில அதிர்ச்சி.
2001 செப்டம்பர் 26 அன்று புதுவை கடலோரத்தில் லேசான நில நடுக்கம்.
2001 செப்டம்பர் 26 அன்று சென்னையில் இரண்டு முறை நில நடுக்கம்.இரண்டு பேர் பலி.
2001 அக்டோபர் 28 அன்று கேரளத்தில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் நாகர்கோவிலில் லேசான நில அதிர்ச்சி.
-மூலம்: இணையம்.
மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் இரவில் திடீரென்று நில அதிர்ச்சி ஏற்பட்டது பாத்திரங்கள் உருண்டன, டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினார்கள்.(தினத்தந்தி-19.07.2009)
தமிழகத்தின் மத்தியப் பகுதியில் மட்டும் நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அந்த இடத்தில மட்டும் பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் மேல் நோக்கி உயர்ந்ததே காரணம். எனவே நில அதிர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏற்படுகின்ற ஒரு இயற்கை நிகழ்வு என்பது புலனாகும். சில சமயங்களில் ஒரு இடத்தில் பெரிய அளவில் நில அதிர்ச்சி ஏற்படும் பொழுதுதான் அதன் அதிர்ச்சி மற்ற இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
மற்றபடி பாறைத் தட்டு பக்கவாட்டில் நகர்கிறது என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
- விஞ்ஞானி.க.பொன்முடி (
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
வேட்டையாடி பிழைத்துவந்த வாழ்க்கையை விட்டு வேளாண்மை செய்து பிழைக்கும் நிலைக்கு மனிதன் வாராதிருந்தால் நாடு, நகரம், அறிவியல் தொழில் நுட்பம் என்று எதுவுமே ஏற்பட்டிருக்காது. பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதன் வேட்டைக்காரனாகத் தானிருந்தான். அவனது பற்களின் பலத்தையும், பெரிய தாடையின் அளவையும் இன்றைய மனிதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நவீன மனிதனின் பற்கள் வெறும் அவலுக்கு சமம். தாடை கூட சிறியதாகி உள்வாங்கிக் கொண்டிருக்கிறது.
பல்துலக்காமல் இருந்தும், பல்சொத்தையில்லாமலேயே வேட்டை மனிதன் வாழ்ந்தான். இன்று பல்லுக்கென்று மனிதன் எத்தனை நேரத்தையும் பொருளையும் செலவு செய்கிறான்! இந்த மாற்றத்திற்குக் காரணம் வேகவைத்த அரிசி, கோதுமை உணவை சாப்பிடுவதுதான். அதிக கார்போஹைட்ரேட் மிகுந்த உணவின் மூலம் நாம்பெற்ற தீமைகள் இவை. வேலைக்காக மனிதன் பெருங்கூட்டமாக நகரத்தில் வாழ ஆரம்பித்ததும்தான் சிப்பிலிஸ், காசநோய், தொழுநோய் போன்ற நோய்களும் தோன்ற ஆரம்பித்தன. நாகரிகத்தில் முன்னேறிச் சென்றால், ஆரோக்கியம் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இனி எவரையும் கண்ணில் இரத்தம் இல்லாதவர் என்று அழைக்காதீர்கள்! அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த உயிரினங்களுக்கு கண்ணில் இரத்தம் உண்டு என்பது மட்டுமல்ல வேண்டுமென்றால் அவை இரத்தத்தை கண்ணின் வழியே பீய்ச்சியடிக்கவும் செய்யும்! ப்ரைனொசோமா (Phrynosoma) என்ற இனத்தைச் சேர்ந்த இவை கொம்புள்ள பல்லிகள் (Horned lizards) என்று அழைக்கப்படுகின்றன. அவற்றின் தலையில் ஏராளமான கொம்புகள் உள்ளன.
இவற்றைத் தவிர உடல் முழுவதும் முட்களும் உள்ளன. மேலோட்டமாகப் பார்த்தால் தேரைகளுடன் (toads) ஒப்பிடக்கூடிய உடலமைப்பு உள்ளவை. அதனால் இவற்றுக்கு ப்ரைனொசோமா என்ற அறிவியல் பெயர் ஏற்பட்டது. தேரை போன்ற உடலமைப்பு உள்ளவை என்பதே ப்ரைனொசோமா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள். இவற்றின் வால் மிகச் சிறியது. மெக்சிகோ, அமெரிக்கா, கனடாவில் இவற்றின் இனத்தைச் சேர்ந்த 21 வகை உயிரினங்கள் இது வரை கண்டறியப்பட்டுள்ளன.இவற்றின் நீளம் 6-20 செண்டி மீட்டர். எல்லா இனங்களும் வறண்ட அல்லது பாலைவனப் பகுதிகளில் வாழ்கின்றன. சில இனங்கள் முட்டையிடுகின்றன. வேறு சில குட்டி போடுகின்றன. எறும்புகளே இவற்றின் முக்கிய உணவு. சில வகை பச்சோந்திகள் போல இவை சுற்றுப்புறத்தில் உள்ள நிறத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவை. இவற்றில் எட்டு இனங்கள் கண்ணின் வழியே இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன.
இரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்த உயிரினத்தைப் (sacred-toad) பற்றி மெக்சிகோதான் உலகிற்கு முதல் முதலில் தெரிவித்தது. அது நம் கதாநாயகனான கொம்புள்ள பல்லிதான். ஆனால் கேட்டவர் எவரும் இந்தக் கதையை நம்பவில்லை. 1892ல் வாஷிங்டன் தேசிய அருங்காட்சியகத்தில் ஓ பி ஹே (OP. Hay) இந்த உயிரினம் பற்றி கூறியபோதுதான் இது உண்மை என்று உலகிற்குத் தெரிந்தது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள். ஒரு கொம்புப் பல்லி தன் தோலை உரிப்பதற்கு (moulting) தயாராகிக் கொண்டிருந்தது. அது அசாதாரணமாக காய்ந்து போயிருந்ததால் அது தன் தோலை உரிக்க கஷ்டப்படுவதாக அவருக்குத் தோன்றியது. அதன் உடலை லேசாக ஈரப்படுத்தினால் உதவியாக இருக்கும் என்று கருதி அவர் அதைப் பிடித்து தண்ணீரில் போட்டார். “முதலில் அதிர்ச்சியுற்றது பல்லியாக இருக்கலாம். ஆனால் அடுத்த அதிர்ச்சி எனக்குதான்” என்று அப்போது கண்ட காட்சியைப் பற்றி அவர் விவரித்துள்ளார். நீரூற்றப்பட்ட பாத்திரத்தில் எங்கேயிருந்து என்று கண்டுபிடிக்க முடியாத அளவு இரத்தம் போன்ற ஒரு திரவத்தின் துளிகள் தோன்ற ஆரம்பித்தன. மொத்தம் 90 துளிகள் உண்டாயின. நுண்ணோக்கியின் மூலம் பரிசோதித்தபோது அது இரத்தம்தான் என்பது உறுதியானது.
“அடுத்த நாள் அதைப் பிடித்து பெருவிரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் சுண்டுவிரலால் அதன் தலையை வருடும்போது ஒரு துளி இரத்தம் தெறித்தது. அதன் கண்ணில் இருந்துதான் அந்த இரத்தம் வந்தது” என்று ஓ பி ஹே தன் ஆய்வைப் பற்றி எழுதியுள்ளார். பல ஆய்வாளர்களும் பிறகு அவர் கூறியதை உறுதி செய்தனர்.
இரத்தக் கண்ணீருக்குப் பின்னால் இருக்கும் இரகசியம்
ஓ பி ஹே தவிர 1892ல் அண்டர்வுட் (Underwood) என்ற அறிவியல் அறிஞரும் 1907ல் டிட்மார்ஸ் (Ditmars) என்ற அறிஞரும் இது பற்றி விரிவாக ஆராய்ந்தனர். இரத்தத்தை பீய்ச்சியடிப்பதற்கு சற்று முன்புள்ள சூழ்நிலை, அதன் அளவு, பீய்ச்சியடிக்கப்படும் வேகம், பீய்ச்சியடிக்கப்படும் வழி, தொடர்ச்சியாக இரத்தத்தை அவற்றை எத்தனை முறை பீய்ச்சியடிக்கச் செய்யலாம் போன்ற அம்சங்களில் மூன்று விஞ்ஞானிகளுக்கும் ஒத்த கருத்து நிலவியது.
பொதுவான இத்தகைய உற்றுநோக்கல்கள் தவிர ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஓ பி ஹே ஆராய்ந்தபோது பல்லி அதன் தோலை உரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அண்டர்வுட் ஆராய்ந்தபோது இரத்தத்தை வெளியேற்றிய பிறகு பல்லி களைப்புடன் சோர்வுற்று ஏழு நிமிடங்கள் அளவுக்கு செத்தது போல ஆடாமல் அசையாமல் கிடந்தது. டிட்மார்ஸின் உற்றுநோக்கல் வேறொன்றாக இருந்தது.
இரத்தம் பீய்ச்சியடிக்கும்போது பல்லி அதன் தலையை லேசாகத் தூக்கி கழுத்தை வில் போல ஆக்கி கண்களை வெளியில் தள்ளியது. ஒரு வித்தியாசமான சத்தத்தை ஏற்படுத்தியது. இந்த உயிரினங்கள் எவ்வாறு இரத்தத்தை கண்ணின் வழியாகப் பீய்ச்சியடிக்கின்றன என்பது பற்றி மூன்று விஞ்ஞானிகளுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. பல்லியின் தலையின் இரண்டு பக்கங்களிலும் இரத்தம் நிறைந்த ஓ அறை இருக்கலாம். இதன் சுவரின் ஒரு பகுதி கண்ணிமையின் அடிப்பகுதியில் அமைந்திருக்கலாம்.
அறையைச் சுற்றி தசைகள் காணப்படலாம். இவை சுருங்கும்போது இமையின் மெல்லிய சுவரில் விரிசல் ஏற்பட்டு இரத்தம் தூரத்தில் தெறித்து விழலாம். விரிசலடைந்த சுவர் வெகுவிரைவிலேயே பழைய நிலைக்கு திரும்பக்கூடும். உயிருடன் உள்ள பல்லியின் மேல் பகுதியில் உள்ள இமையை லேசாகத் தூக்கிப் பார்த்தால் அதன் அடிப்பகுதியில் இரத்தம் நிறைந்த மெல்லிய சுவருடன் ஒரு குழல் உள்ளது போல தோன்றுகிறது. இதனால் இந்த அறை தலையின் உட்பாகத்தில் ஆழத்தில் பரவி அமைந்திருக்கலாம்.
பல்லியின் பாதுகாப்பு தந்திரம்
1907ல் புரூனர் (Bruner) என்ற விஞ்ஞானி இது பற்றி ஆராய்ந்து ஹே கூறியது சரி என்று உறுதிப்படுத்தினார். ஹே சுட்டிக்காட்டிய கண் அறைகளையும் ((circumocular sinuses) தசைத்திசுக்களையும் அவர் கண்டுபிடித்தார். அறைகள், அவற்றிற்கு அருகில் உள்ள இரத்தக் குழாய்களையும் (eins) அமுக்கி அழுத்தத்தை அதிகரிப்பது இந்த தசைகளே என்று அவர் கண்டறிந்தார்.
அழுத்தம் அதிகரிப்பதற்கேற்ப கண்கள் வெளியில் தள்ளப்படுகின்றன. இதன் பிறகே சுவர் உடைந்து இரத்தம் வெளியில் பீய்ச்சியடிக்கப்படுகிறது. 1942ல் பேர்லசன் (Burleson) புரூனரின் இந்த கருத்தை எதிர்த்தார். அறைகளில் இருந்து சுவர் உடையாமல்தான் இரத்தத்துளிகள் இமைகளுக்குச் செல்கின்றன என்று அவர் கூறினார். பயம், பல தரப்பட்ட பாதிப்புகளை சமாளிக்கவே இவ்வுயிரினங்கள் இவ்வாறு செய்கின்றன என்று ஆரம்ப கால ஆய்வாளர்கள் கருதினர்.
விரல்களால் குத்தும்போது, பிடிக்கும்போது, தலையை வருடும்போது மட்டுமே இவை இரத்தத்தை வெளித்தள்ளுகின்றன. இந்த கருத்தில் பல வேறுபாடுகள் உள்ளன. எதிரிகளை அச்சுறுத்தவே இந்த செயல் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. எதிரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இரத்தத்தில் உள்ளனவா, அது துர்நாற்றம் அடிக்கிறதா அல்லது எதிரிகளை திசை திருப்ப மட்டும் அவை பயன்படுகின்றனவா?
இதில் ஆய்வாளர்களிடையில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. ஓ பி ஹே இரத்தத்தை சுவைத்து ஆராய்ந்தபோது அது வித்தியாசமான, ஒருவித லேசான இனிப்பு சுவையுடன் இருந்ததை அறிந்தார். அது மஸ்க்கி சுவை (musky taste) என்று அறியப்படுகிறது. இரத்தத்தை சுவைத்ததால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் கண்ணில் விழுந்தால் அது அரிப்பை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். ஆனால் எதிரிகளைப் பாதிக்கும் அம்சம் இரத்தத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.
பீய்ச்சியடிப்பதற்கு முன்பு கண்களுக்கு அருகில் இருக்கும் சில சுரப்பிகள் உற்பத்தி செய்யும் வேறு சில திரவங்களும் இரத்தத்துடன் கலக்கப்படலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இதில் உண்மை இல்லை என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. எறும்புகளை உணவாக உண்பதால் இவற்றின் இரத்தம் மற்ற ஊர்வனவற்றில் இருந்து வேறுபட்டு உள்ளது என்று கருதப்படுகிறது.
நாய்களை அச்சுறுத்த
எதிரிகளிடம் இருந்து தப்பவே இரத்தத்தை வெளியேற்றுகின்றன என்றால் எல்லா விலங்குகளுக்கும் எதிராக அவை அவ்வாறு செய்ய வேண்டும். ஆனால் இதில் உண்மையில்லை என்று பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன. 1992ல் மிடண்டோர்ஃப் (Middendorf) மற்றும் ஷெர்ப்ருக் (Sherbrooke) ஆகிய விஞ்ஞானிகள் மனிதர்களை விட இவை நாய்களை சந்திக்கும்போதே அதிக அளவு இரத்தத்தை வெளிவிடுகின்றன என்று கண்டறிந்தனர்.
நாய்களுக்கு எதிராக இரத்தக் கண்னீர் வடித்தபோது அவை பயந்து பின்வாங்கின. நாய் இனத்தைச் சேர்ந்த விலங்குகளுக்கு (Canids) எதிராக இவ்வுயிரினங்கள் இரத்தத்தைப் பீய்ச்சியடிக்கின்றன என்று பல ஆய்வுகள் கண்டறிந்தன. 2024ல் ஷெர்ப்ரூக் மற்றும் கிம்பால் (Kimball) ஆகியோர் நடத்திய ஆய்வில் இருந்து இவற்றின் இரத்தத்தில் போகானோமியமிர்மெக்ஸ் (Pogonomyrmex) என்ற வேதிப்பொருள் இருப்பது தெரிய வந்தது.
என்றாலும் எதிரிகளை நேரிடும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இவை இரத்தக் கண்ணீர் வடிப்பதில்லை. சில விலங்குகளை நேரிடும்போது மற்றும் சில சந்தர்ப்பங்களில் மட்டும் இவை வெவ்வேறான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனவா என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அழியும் ஆபத்தில்...
துரதிர்ஷ்டவசமாக விலங்குகளின் உலகில் இந்த அதிசய உயிரினங்கள் கடும் அச்சுறுத்தலை நேரிடுகின்றன. வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் கட்டுமானங்களால் இவற்றின் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன. தரிசு நிலங்கள் வேளாண் பகுதிகளாக மாற்றப்படுதல், பூச்சிக்கொல்லி பயன்பாடு, வளர்ப்பு நாய்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கிறது.
இது தவிர தென்னமெரிக்காவில் இருந்து வட அமெரிக்காவிற்கு வந்து குடியேறிய சோல்நாப்சிஸ் இன்விக்டர் (Solenopsis invicta) என்ற நெருப்பு எறும்புகளை இவை உணவாக உண்பதில்லை. ஆனால் இந்த எறும்புகளின் ஆக்ரமிப்பால் மற்ற எறும்புகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நெருப்பு எறும்புகளை கொல்லப் பயன்படும் பூச்சிக்கொல்லிகள் மற்ற எறும்புகளையும் அழிக்கின்றன.
இதனால் எறும்புகளை மட்டும் உண்டு வாழும் இவற்றிற்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் இவை உயிர் வாழத் தேவையான உணவு கிடைக்காமல் போகிறது. இந்த பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படாவிட்டால் இந்த அதிசய உயிரினங்கள் அழிவதை நாம் காண வேண்டியிருக்கும் என்று விலங்கு நல விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
- அழியும் உரங்கோட்டான்களை யார் காப்பாற்றுவார்?
- கழிவு நீரை சுத்தப்படுத்தும் அதிசய உயிரினம்
- அழிந்த பறவைகள்
- பூச்சிகளின் அழிவால் மாறும் பூக்களின் மகரந்த சேர்க்கை
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?