மாறி வரும் சூழ்நிலையில் இன்று வேளாண்மைத் துறை எதிர்கொள்ளும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று வனவிலங்குகள் வயல்களுக்குள் புகுந்து பயிரை நாசமாக்கும் செயல். இதைத் தடுப்பதற்கு சில வழிகள் உள்ளன.

பொதுவாக யானைகள் பச்சை மிளகாய், இஞ்சி போன்ற பயிர்களை விரும்பி உண்பதில்லை. குறிப்பாக பச்சை மிளகாய் யானைகளால் வெறுக்கப்படும் ஒரு தாவரம். வடகிழக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான காரத்துடன் கூடிய மிளகாய் வகைகளைப் பயிரிடுகிறார்கள். வைக்கோலை ஒரு பந்தைப் போல சுருட்டி, அதனுள் காய்ந்த சிவப்பு மிளகாய்த் தூளை போடுகிறார்கள். அந்தப் பந்தில் இருந்து வருகின்ற புகையை யானைகள் வெறுக்கின்றன. இந்தப் புகை ஏற்படும்போது, யானைகள் அரண்டு மிரண்டு வேறுபக்கம் போய் விடுகின்றன. இது அந்த மாநில விவசாயிகளின் அனுபவம் கற்றுத் தந்த பாடம் ஆகும்.

கூட்டமாக வருகிற யானையை விட எப்போதும் தனியாக வரும் யானையே அதிக ஆபத்தானது. யானைகள் குட்டிகளுடன் இருந்தால் அவை அதிக தாக்குதல் உணர்வோடு இருக்கும். அதனால் யானை குட்டிகளுடன் இருக்கும்போது எந்த ஒரு காரணம் கொண்டும் அருகில் செல்வதைத் தவிர்க்க வேன்டும்.elephants at paddy fieldஇப்போது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலோருக்கும் சர்க்கரை நோய் வருகிறது. அதனால் வனப்பகுதியைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் விடிகாலை நேரத்திலேயே எழுந்து நடைபயிற்சி செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இதைத் தவிர்த்து, விடிந்தபிறகு செல்வது நல்லது. இதனால் சில சமயங்களில் யானைகளால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இருட்டில் நடைபயிற்சி செய்யச் செல்லும்போது யானை அருகே சென்று, அதனால் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்கின்றன. யானைகள் வயல்வெளிக்குள் அல்லது ஊருக்குள் நுழையும் இடங்களில் தேனீ வளர்க்கலாம். யானை வராமல் தடுப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. தேனீக்கள் சேகரிக்கும் தேனை விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம். சூழலையும் பாதுகாக்கலாம். செடிகளில் மகரந்த சேர்க்கை செய்யவும் இது உதவும். விளைச்சலும் இதனால் அதிகமாகும். உயிரியல்ரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.

யானைகளுக்குப் போதுமான நீரும், உணவும் கிடைக்காமல் போகும்போது, அவை பெரும்பாலும் வனங்களுக்குள் இருந்து வெளியே வருகின்றன. கோடை காலங்களில், வறட்சியால் யானைகள் பாதிப்பு அடையாமல் பாதுகாப்பதற்கு சிமெண்ட் தொட்டிகளைக் கட்டி அவற்றில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். ஊர் எல்லைகளிலும் இது போல அமைக்கலாம். அப்போது யானைகள் ஊருக்குள் நுழையாமல், நீரைக் குடித்துவிட்டு மனிதர்களுக்கு எந்தவிதமான தொந்தரவையும் தராமல் திரும்பிச் சென்று விடுகின்றன.

வனத்துறையினரும் யானைகளுக்குப் பிடித்தமான மர வகைகளை வனங்களுக்குள் பயிர் செய்து வளர்க்க முயல வேண்டும். பலா, வாழை, கரும்பு போன்ற பயிர் வகைகளும், வேறு சில இனிப்புசுவை உடைய மர வகைகளும் இன்று வனங்களில் இல்லாததால் யானைகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியை சுற்றிலும் திறந்தவெளியாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் திறந்தவெளியில் தாங்கள் வருவதை மற்றவர்கள் பார்த்து விடுவார்கள் என்ற பயத்துடனேயே வனத்துக்குள் அவை இருக்கும்.

தற்போது பல இடங்களிலும் யானைகளை விரட்டுவதற்கு வெடிகளை வெடிக்கிறார்கள். முரசுகளை அறைந்து பேரொலியை எழுப்புகிறார்கள். விசில், அலாரம் போன்றவையும் பயன்படுகிறது. ஆனால், இந்தச் செயல்கள் எல்லாம் நீண்ட கால நன்மைகளைத் தருவதில்லை.

சில வெளிநாடுகளில், ஒவ்வொரு யானையின் கழுத்திலும் ரேடியோ காலர் என்னும் மைக்ரோசில்லியைப் பொருத்தி, அதன் மூலம் யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள். அதன் வரவை முன்கூட்டியே கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இதனால் அவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். இது உயிர் பாதுகாப்புக்கும், உடைமை பாதுகாப்புக்கும் உதவுகிறது.

யானைகள் போல அதிக பிரச்சனை தருவது காட்டுப்பன்றிகள். இவை திருவண்ணாமலை, தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன. இவை விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்துகின்றன. சில விவசாயிகள் தாங்களாகவே பல நூதனமான வழிகளைக் கண்டுபிடித்து இதை சமாளித்து வருகிறார்கள். சிறிய வெடிகளை உருளைக்கிழங்கிற்குள் மறைத்து வைத்து வயலில் போட்டு விடுகிறார்கள். அவற்றை பன்றிகள் வந்து கடிக்கும்போது அவை வெடித்து பன்றிகள் இறந்து விடுகின்றன. ஆனால், எந்த ஒரு வனவிலங்கையும் கொல்வதற்கு நமக்கு உரிமை கிடையாது. அதனால் இவ்வாறு செய்வது வனவிலங்கு சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இவை வயலுக்குள் நுழையாத வண்ணம் வயலைச் சுற்றிலும் ஆழமான குழிகளைத் தோண்டி இரும்புவேலிகளை அமைக்கலாம். இவற்றின் மூக்கிற்கு நீளம் அதிகம். இதனால் அவை சுலபமாக மண்ணை நோண்டிவிடும் திறன் பெற்றவை. இதனால் இவை ஆங்கிலத்தில் digger என்றும் அழைக்கப்படுகின்றன. உருளைக்கிழங்கு, காரட் போன்ற பயிர்களை ஆழமாகத் தோண்டி தின்றுவிடும். அதனால் வேலியை ஆழமாகப் போட வேண்டும்.

காட்டு எருமைகள் பெரும்பாலும் கூட்டமாக வரும் இயல்பு உடையவை. பார்ப்பதற்கு ஒரு சாதாரண எருமை போலவே இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நாம் அருகில் சென்றால் அது உடனடியாக நம்மைத் தாக்க முற்படும். இந்த வனவிலங்கை தடுப்பதற்கும் ஒரே வழி இரும்புவேலியை அமைப்பதுதான். எந்த வனவிலங்குப் பிரச்சனை ஒரு பகுதியில் இருக்கிறதோ அதற்குப் பிடிக்காத உணவு வகைகளை நாம் தேர்வு செய்து அவற்றை அங்கு பயிரிடவேண்டும். இவ்வாறு செய்யும்போது விவசாயிக்கும் நஷ்டம் ஏற்படாத பயிரைத் தேர்வு செய்ய வேண்டும்.

வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளில், இப்போது கிராமங்களில் ஆடுகளையும் செம்மறி ஆடுகளையும் வளர்க்கிறார்கள். சிலர் வெள்ளாடுகளையும் மாடுகளையும் வளர்க்கிறார்கள். அவற்றைத் திறந்தவெளிகளில் கட்டி வைக்கிறார்கள். கன்றுக் குட்டிகள், வெள்ளாடுகள் போன்றவை சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இரைகள். நாய்கள் கூட சிறுத்தைகளுக்குப் பிடித்த ஒரு உணவாகவே கருதப்படுகின்றன. சிறுத்தையைப் பிடிப்பதற்கு ஆட்டைக் கூண்டில் கட்டி வைப்பதை விட நாயை கூண்டில் கட்டினால் சிறுத்தை சுலபமாக மாட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு சிறுத்தைக்கு நாய் பிடித்தமான உணவாக இருக்கிறது. இது போன்ற விலங்குகளை நாம் வனங்களை ஒட்டிய பகுதிகளில் வளர்க்கும்போது, வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தான் செய்யும். பறவைகள் இருந்தால் வனப்பகுதியில் இருக்கும் பாம்புகள் கண்டிப்பாக அவற்றைத் தேடி வரும். அதற்காக ஆடு, மாடு, பறவைகள் போன்றவற்றை வளர்க்கவே கூடாது என்பது இல்லை. எந்த ஒரு விலங்கை வளர்த்தாலும் உரிய பாதுகாப்பை அவற்றுக்குக் கொடுக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகள் இருக்கும் இடங்கள் எந்த ஒரு வனவிலங்கும் சுலபமாக உள்ளே நுழையாத வண்ணம் சரியான பாதுகாப்பைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்கு அவை உறுதியாக கட்டப்பட்டிருக்க வேண்டும்.

மயில்களும், கிளிகளும் கூட வயலை நாசப்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு பளபளப்பான காகிதங்களைக் கட்டிவிட வேண்டும். அவை காற்றில் பறக்கும்போது எழுப்பும் ஒலியைக் கேட்டு இவை பயந்து வயல்பக்கம் வராமல் போய்விடும். பழைய ஒலிநாடாக்களையும் இதற்காக நாம் பயன்படுத்தலாம். வயலைச் சுற்றிலும் ஒரு வேலியைப் போல இதைக் கட்டிவிடும்போது, இதனால் ஏற்படும் சத்தத்தைக் கேட்டுப் பயந்து, இத்தகைய பறவைகள் வயல்கள் இருக்கும் பகுதியில் நுழையாமல் சென்று டுகின்றன.

புறாக்களும் கூட சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில இடங்களில் இதைச் சமாளிப்பதற்காக தொடர்ச்சியாக சைரன் ஒலிப்பதைப் போல மெல்லிய ஒலியை எழுப்புவதற்காக, ஒரு சங்கை அமைத்தனர். இந்தச் சங்கு தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் ஒலித்துக் கொண்டே இருந்தது. இதைக் கேட்ட புறாக்கள் அதற்குப் பிறகு, அந்தப் பக்கம் வரவில்லை. இதுபோன்ற புதுமையான முறைகளையும் விவசாயிகள் கையாள்கிறார்கள்.

ஒரு சில விவசாயிகள், வயலைச் சுற்றிலும் தகர டப்பாக்களை கயிற்றில் கட்டித் தொங்க விடுகிறார்கள். இந்த டப்பாக்கள் காற்றில் ஆடும்போது அவை எழுப்பும் ஒலியைக் கேட்டு யானைகள் கூட்டமாக வந்தாலும், வயலுக்குள் நுழைவதில்லை. வனவிலங்குகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் எந்த ஒரு முறையையும் நாம் பின்பற்றி பயிர்களைப் பாதுகாக்க முயல வேண்டும். அவற்றுக்கு உடல்ரீதியாகவோ அல்லது அவற்றின் உயிருக்கோ ஆபத்து ஏற்படுத்தாத வண்ணம் நாம் மேற்கொள்ளும் செயல் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதற்குப் பதிலாக விஷம் வைத்து புலியையும், சிறுத்தையையும் கொல்வது போன்ற செயல்கள் வனவிலங்கு சட்டத்தின் படி குற்றம் ஆகும்.

குரங்குகளைப் பொறுத்தமட்டும் நாம் பல நேரங்களிலும், அவை பாவம் என்று நினைத்து அவற்றுக்குக் கடலைப்பருப்பு போன்ற அவை விரும்பி உண்ணும் உணவு வகைகளைப் போடுகிறோம். அவ்வாறு செய்யும்போது நமக்குத் தேவையான உணவு இவர்களிடம் இருந்து கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு அந்தக் குரங்குகள் மனிதர்களுக்கு அருகில் வர ஆரம்பிக்கின்றன. அப்போது அவற்றை குச்சியை எடுத்து அடிப்பதாலும், கல்லால் அடிப்பதாலும் அவற்றின் மனதில் ஒரு முரட்டு சுபாவம் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. அதனால் அதன் பிறகு அது யாரைப் பார்த்தாலும் அருகில் வருவோரை எல்லாம் தாக்க ஆரம்பித்து விடுகிறது. எந்த ஒரு வனவிலங்குக்கும் நாம் செயற்கையாக உணவை கொடுக்கக்கூடாது. அதற்குத் தேவையும் இல்லை.

இந்த வழிமுறைகளை மனதில் வைத்துக் கொண்டு நாம் செயல்படும்போது வனங்களும், அவற்றில் வாழும் வனவிலங்குகளும் காக்கப்படுவதுடன் நம் வேளாண்மையும் பாதிப்பு அடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உலகில் மிகப் பெரிய உயிரினம் எது? நீலத் திமிங்கலமா? இல்லவே இல்லை. அது ஒரு காளான். அமெரிக்காவில் ஆரிகான் தேசியப் பூங்காவில் மனி நதியில் 8.8 சதுர கிலோமீட்டர் பரவியிருக்கும் ஹனி பூஞ்சை அல்லது ஆர்மிலேரியா ரெஸ்டியின் நுண் உயிரிகளின் வலையமைப்பே அது. அங்கு மரத்தில் வளரும் நாய்க்குடைகளைக் காணலாம். மண்ணில் வாழும் பூஞ்சைகள் சுற்றுப்புறம், வயல்வெளி, வனங்களில் உள்ள உயிரிக் கழிவுகளை மக்கவைத்து மண்ணிற்கு வளம் சேர்க்கின்றன.

90% மரம் செடி கொடிகள்

இயற்கையில் 90% மரம் செடிகள் பூஞ்சைகளுடன் பரஸ்பர தொடர்புடையவை. மண்ணின் அடியில் மைக்ரோரைஸா பூஞ்சைகள் நுண் உயிரினங்களின் ஒரு வலையமைப்பை உருவாக்கி, தங்கள் வாழிடப் பரப்பை அதிகரிக்கின்றன. செடிகள் ஒளிச்சேர்க்கை நடத்தி உருவாக்கும் கார்போஹைடிரேட்டை உணவாக்கும் பூஞ்சைகள் பதிலிற்கு செடிகளின் வளர்ச்சிக்கு உதவும் சத்துகள், மூலகங்களை மண்ணில் இருந்து உறிஞ்சி அளிக்கின்றன.

காடுகளின் வலையமைப்பு

இத்தொடர்பு மர வலை (wood wide web)/காடுகளின் வலையமைப்பு (Internet of forests) எனப்படுகிறது. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் தோன்றினான். ஆனால் பூஞ்சைகள் (fungus) பூமியில் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானவை. மண்ணிற்கு அடியில் வாழும் இவை இனப்பெருக்கம் செய்யும்போது உருவாகும் புதிய தலைமுறையே நாம் காணும் நாய்க்குடைகள். இவை திடீரென்று தோன்றுபவை. ஒரு இடி இடித்து மழை பெய்தால் அடுத்த நாள் இவை தென்படுகின்றன.Mushrooms 600மண்ணில் இருந்து உயிர்த்தெழும் உயிரினம்

இயல்பாக எதிர்பாராதவிதமாக மண்ணில் இருந்து உயிர்த்தெழும் இந்நிகழ்வே mushrooming என்ற சொல் பிறக்கக் காரணம். சுற்றுப்புற வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவை இவற்றின் இனப்பெருக்கத்தை நிர்ணயிக்கும் அம்சங்கள். இதனால் காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வு இவற்றைப் பாதிக்கிறது. மனிதனின் உணவுமுறை, கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய இவை பாரம்பரிய நாட்டறிவுகள், சடங்கு சம்பிரதாயங்கள், நாட்டுப்புறப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

கலாச்சாரத் தொடர்புகள்

சைபீரியாவில் இவை சாமூக் சடங்குகளில் முக்கிய பங்கு வகித்தன என்று 1690களில் அந்நாட்டில் கைதியாக இருந்த பொலிஷ் குடிமகன் குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் குளிரில் அமானிட்டா மஸ்காரியா என்ற அறிவியல் பெயரில் அறியப்படும் ப்ளை அபாரிக் நாய்க்குடைகளில் இருந்து திரவப் பொருட்களை சைபீரியா மக்கள் உருவாக்கி பயன்படுத்தி வந்தனர். இதில் அடங்கியிருந்த ரசாயனப் பொருட்கள் போதையூட்டுபவை.

ரிக் வேதத்தில் தேவர்கள் உண்டாக்கிய சோமரசத்தில் இவை இருந்தன என்று கூறப்படுகிறது. இவ்வகை உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் பற்றி கூறும் அறிவியல் பிரிவு தொல் மைக்காலஜி (ethano mycology). உலகளவில் சீனா மற்றும் மெக்சிகோ இவற்றின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கின்றன. சீனாவில் 51 இனங்கள் உள்ளன. இதில் 23 இனங்களில் இருந்து 1020 வகை காளான் உணவுகள் உருவாக்கப்படுகின்றன.

புராதன காலத்தில் இருந்தே சீனாவில் இவை நாட்டு சிகிச்சையில் பயன்படுகின்றன. 2018 புள்ளிவிவரங்களின்படி இவற்றின் உலக உற்பத்தியில் 75% சீனாவில் இருந்தே வருகிறது. இந்தியாவில் இருந்து இது வெறும் 2% மட்டுமே. ஆண்டுதோறும் இவற்றின் ஏற்றுமதி மூலம் சீனா 100 இலட்சம் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டுகிறது. இதில் கும்மிங், நார்ப்புவா ஆகிய பிரதேசங்கள் முதலிடம் பிடிக்கின்றன.

உலகில் விலையுயர்ந்த காளான்கள்

மாக்சி டாக்கி, டபில்கள் உலகில் விலையுயர்ந்த வகைகளாகக் கருதப்படுகின்றன. மாக்சிடாக்கி ஒன்றின் விலை $80. டபில்கள் மண்ணில் அடியில் வளர்பவை. சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மூலமே இவை கண்டறியப்படுகின்றன. லகோட்டோ ரொமோனியோலோ என்ற இனத்தின் விலை $3000 முதல் 5000 வரை. ஒரு கிலோ டபிலின் விலை $80 முதல் 4000. மிதமிஞ்சிய சுரண்டலால் சீனாவில் 1990 முதல் இந்த இரு இனங்கள் அச்சுறுத்தலை சந்திக்கின்றன.

சீனாவின் முன்மாதிரித் திட்டம்

இப்பிரச்சனையை நேரிட சீனா வன மறுசீரமைப்பு கொள்கை (Forest ownership reformation) என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. தனி நபருக்கு நிலத்தை சொந்தமாக்காத நாட்டில் இயற்கை வளங்கள் பாதுகாப்பில் பங்காளிகளாக இவற்றைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு சட்டரீதியான உரிமை கொடுக்கப்பட்டது. அங்கு மட்டுமே வளரும் இனங்கள் பற்றி அறிய சோதனைரீதியில் காப்பு வனங்கள், தோட்டங்கள் அமைக்கப்பட்டன.

மெக்சிகோவில்

மெக்சிகோ உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிக்க ஒரு நாடு. 32 மாகாணங்கள் உள்ள இங்கு ஆதிவாசிகள் அதிகம் வாழ்கின்றனர். காளான்கள் பற்றிய அறிவு இவர்களிடையில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. 480 காளான் உணவுவகைகள் இங்கு உருவாக்கப் படுகின்றன. பன்னாட்டு அளவில் 120 வகை காளான் பொருட்கள் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆசியாவில் சந்தை படுத்தப்படுகின்றன. மைக்கோ கேஸ்ட்ரானமி (Mico gastronomy) என்பது உணவு, கலை மற்றும் அறிவியல்ரீதியாக இவற்றை சந்தைப்படுத்தும் வாய்ப்புகள் குறித்த கல்விப் பிரிவு.

சிவப்புப் புத்தகத்தில்

1948ல் ஐநாவால் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு யூனியன் (IUCN) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு 160 நாடுகளில் செயல்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது, தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அழியும் நிலையில் இருக்கும் காளான் வகைகளை சிவப்புப் புத்தகத்தில் வெளியிடுகிறது. உலகில் முதல்முதலாக 1984ல் தேசிய அளவில் அழியும் இனங்களை ஜெர்மனி சிவப்புப் புத்தகத்தில் வெளியிட்டது.

இன்று சிவப்புப் புத்தகத்தில் உள்ள 1,41,000 உயிரினங்களில் இன அழிவை சந்திக்கும் காளான்கள் 285. ஐம்பது இலட்சம் வகைகள் இருப்பதாகக் கருதப்படும் இவற்றில் 285 என்பது 1 சதவிகிதத்திற்கும் குறைவு. 

பூஞ்சைகளுக்கும் வேண்டும் அங்கீகாரம்

2022 டிசம்பரில் கனடா மாண்ட்ரீலில் நடக்கவிருக்கும் ஐநா காப் 15 உயிர்ப் பன்மயத்தன்மை உச்சிமாநாட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்குகள் போல இவற்றையும் தனிப்பெரும் வளமாக என்று வகைப்படுத்த வேண்டும் என்று பூஞ்சையியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தவுள்ளனர்.

பூஞ்சைகளை அங்கீகரித்த முதல் உலக நாடு

2012ல் உலகில் முதல்முறையாக இந்த உயிரினங்களுக்கு தேசிய அளவில் சட்டப் பாதுகாப்பை தென்னமெரிக்கா சிலி அளித்தது. அணைக்கட்டுகள், சாலைகள், வீடுகள், தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைப்பது பூஞ்சைகளின் வாழிடம், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே நடக்கிறது. டாக்டர் ஜூலியானா கொச்சி என்ற இளம் சிலி பூஞ்சையியல் விஞ்ஞானியின் இடைவிடா முயற்சியால் இது சாத்தியமானது.

இந்த அதிசய உயிரினங்களின் உலகை அறியும் ஆர்வத்தில் 1999ல் அவர் தனது 20வது வயதில் பூஞ்சைக்கான தன்னார்வ அறக்கட்டளையை (Fungi Foundation) நிறுவினார்.

இந்தியாவில்

இந்தியாவிலும் பல மருத்துவ குணங்கள் உடைய பூஞ்சைகள் உள்ளன. அதில் ஒன்று கேரளா பாலக்காடு பகுதியில் காணப்படும் இள மாங்காய். இது ஒரு நாய்க்குடை இனம். இது நாட்டு வைத்தியத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

பூஞ்சை உணவுச் சுற்றுலா

இந்த உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாக்க கேரள உயிர்ப் பன்மயத்தன்மை பாதுகாப்பு வாரியம் (Kerala Biodiversity Board) முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பூஞ்சை நாய்க்குடைகள் பற்றி சான்றிதழ் படிப்பு ஒன்றைத் தொடங்கியிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளை வரவேற்று விருப்பமுள்ளவர்களுடன் இணைந்து இவை வளரும் வாழிடங்களுக்கு நேரில் சென்று, அவற்றைக் கண்டு, ஆரோக்கியமான உணவு சமைத்துக் கொடுக்கும் மைக்கோ சுற்றுலாவிற்கான திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. மிதமிஞ்சிய பயன்பாட்டினால் இந்த அதிசய உயிரினங்கள் அழியாமல் பாதுகாப்போம்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

பூக்கள்தோறும் பாடி நடந்து, பூமி முழுவதைம் வர்ண ஜாலமாக்கும் வண்ணத்துப் பூச்சிகளை விரும்பாதவர்களாக இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கவிஞர்களும், இலக்கியவாதிகளும் பாடிப் பாடி, இந்த வண்ண அழகுகளை நம் தோழர்களாக மாற்றியுள்ளனர். பல வண்ணங்களிலும், அளவுகளிலும் வாழும் இவை பூச்சிகள் என்று சொல்லப்படுகின்றன. என்றாலும் இறக்கைகளில் காணப்படும் பலவித வண்ணங்கள், அவை அமைக்கப்பட்டுள்ள விதம் போன்றவை என்றுமே நம்மைக் கவர்வன.

இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பே பூமியில் வண்ணத்துப் பூச்சிகள் தோன்றியதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவில் ப்ளோரிசன் ஏரிக்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட லிம்பாலிடே வண்ணத்துப் பூச்சியின் படிவம் “fossil” 4 கோடி வருடங்களுக்கு முந்தையதாகக் கருதப்படுகிறது. 1973ல் பிரான்சில் கண்டெடுத்த புதைபடிவப் பொருள்களின் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இவை, ஆர்த்ரோபோடா என்ற வகையைச் சேர்ந்தவை. உயிரினங்களின் வகைப்பாட்டில், அதிக உயிரினங்கள் அடங்கிய பிரிவு இது. ஆர்த்ரோபோடா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் பல பகுதிகள் இணைந்து உருவான காலுள்ள உயிரினங்கள். இவை அடங்கியுள்ள பூச்சிகள் (insectae ) பிரிவில்தான் பிராணிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக எண்ணிக்கையில் உள்ளவை பூச்சிகள் (insects). 29 பிரிவுகளில் 627 குடும்பங்கள் இதில் உள்ளன. இதில் லெப்பிடோட் டிரா குடும்பத்தில் வண்ணத்துப் பூச்சிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.

1735ல் கார்ல் லினயஸ் இப்பெயரை வழங்கினார். வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன. முட்டை, லார்வா, பியூப்பா, வண்ணத்துப் பூச்சி. இணை சேர்ந்ததற்குப் பிறகு, பெண் வண்ணத்துப் பூச்சிகள் முட்டை இடுவதுடன் வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி ஆரம்பிக்கிறது. நான்காவது நிலையில் வண்ணத்துப் பூச்சி வெளியே வருகிறது. வண்ணத்துப் பூச்சிகளில் ஆண், பெண் வேறுபாட்டை அறிந்து கொள்வது கடினம். பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன் இணை சேரும் வண்ணத்துப் பூச்சிகளும் உள்ளன.butterfly 433முட்டையில் இருந்து வெளியே வரும் லார்வாக்கள் சாப்பாட்டுப் பிரியர்கள். இவற்றின் முதல் உணவு முட்டையின் ஓடு. பின், தொடர்ச்சியாக இலைகளைத் தின்னத் தொடங்குகிறது. வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் இவை தோலை உரித்துவிடும். அதனால் எது ஆண், எது பெண் என்று கண்டுபிடிப்பது கடினம். சிலந்திகள், குளவிகள், பிராணிகள், ஓணான்கள் போன்றவை இவற்றின் லார்வாக்களை உண்ணும் முக்கிய எதிரிகள். இவைகள் உணவு உண்ணும் வேட்கையுடன் லார்வாக்களின் அருகில் வரும். சில லார்வாக்கள் சிக்கிக் கொள்ளும். வேறு சில தந்திரமாகத் தப்பித்துக் கொள்வதும் உண்டு. சில லார்வாக்கள், சிறிய பாம்பு போல தங்களின் சுபாவத்தை மாற்றிக் கொள்ளும்போது, வேறு சில பறவைகளின் எச்சத்தைப் போல நடிக்கும். துர் நாற்றம் வீசி எதிரிகளை அருகில் நெருங்க விடாமல் செய்யும் லார்வாக்களும் உண்டு. ஆனால், இவை தோற்றுப் போவது மனிதரிடம்தான். விளைந்ததை எல்லாம் ஒட்டுமொத்தமாகக் கூட்டம் கூட்டமாகத் தின்னும் புழுக்களைத் துரத்த மனிதன் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறான். வண்ணத்துப் பூச்சிகளாக மாறி, மகரந்தச் சேர்க்கை செய்து இவை நம்மை வாழ வைக்கின்றன. இவற்றின் அழிவு நமக்கே ஆபத்தை விளைவிக்கிறது.

வண்ணத்துப் பூச்சியின் வாழ்வில், ஒவ்வொரு நிலையும் அதிசயமானது. இலைகளிலும், பூக்களிலும், செடிகளின் தண்டுகளிலும் இவைகள் முட்டை இடுகின்றன. சில பல முட்டைகள் முதல் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடுகின்ற வண்ணத்துப் பூச்சிகள் வரை உண்டு. பியூப்பாவில் இருந்து வெளிவந்தவுடன், இவை முட்டை இடுவதற்கான செடிகளைக் கண்டுபிடிக்கின்றன. மற்ற உயிரினங்கள் முட்டை இடாத துளிர் இலைகள்தான் இவற்றுக்குப் பிடிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவ்வாறு செய்வதால், பியூப்பாவிற்குத் தேவையான உணவு கிடைக்கும். துளிர் இலை முதிர்ச்சியடைய, உதிர்ந்து போக பல நாட்கள் ஆகும். ஆள் அரவம் இல்லாத இடமாக இருப்பதால் எதிரிகளின் நடமாட்டத்தைத் தவிர்க்கலாம். மற்றொரு அதிசயம் வண்ணத்துப் பூச்சிகள் எறும்புப் புற்றுகளிலும் முட்டையிடும். இது ஒன்றுக்கொன்று உதவும் செயல். முட்டையை எறும்புகள் பாதுகாத்துப் பராமரிக்கும். பியூப்பா விரிந்து வரும்போது பியூப்பாவின் வெளியில் இருக்கும் இனிப்புத் திரவம் எறும்புகளுக்கு உணவாகும்.

வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பத்தில் மிகவும் பெரியது அட்லஸ் மவுத் என்ற வண்ணத்துப் பூச்சி. இந்தியக் காடுகளில் மிக அரிதாகக் காணப்படும் இவற்றின் இறக்கை அளவு 30 செ.மீ. குவின் அலெக்சான்டர்ஸ் பேர்டு விங் (Queen Alexandras Birdwing ) உலகில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி. இதன் இறக்கையின் அளவு சுமார் 250 மி.மீ. இந்தியாவில் காணப்படும் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சி சர்தர்ன் பேர்டுவிங் (Southern Birdwing). இதன் இறக்கை அளவு 140 முதல் 200 மி.மீ வரை. பாப்பிலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த ப்ளூ மார்மோன், ரெட் ஹெலன் ஆகியவை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வண்ணத்துப் பூச்சிகள்.

வண்ணத்துப் பூச்சிகளைப் போலவே பட்டாம்பூச்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இரவில் மட்டுமே வெளியே வருகின்றன. என்றாலும் அபூர்வமாக பகலிலும் இவை வெளியே வருவதுண்டு. வண்ணத்துப் பூச்சிகளைக் காட்டிலும் அற்புதங்கள் நிறைந்தது இவற்றின் உலகம். நம் வீட்டிலும் வண்ணமயமான இந்த அதிசய உயிரினங்கள் விஜயம் செய்ய வேண்டும் என்றால் நம் வீட்டையே ஒரு வண்ணத்துப் பூச்சிகளின் நந்தவனமாக நம்மால் மாற்ற முடியும். அவற்றிற்கு அவசியமான செடிகளை நம் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்க வேண்டும். புல்லினத்தைச் சேர்ந்த செடிகள், எலுமிச்சை, கொய்யா, நெல்லி, ஏலம், மல்பெரி, அகத்தி போன்றவை வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் செடிகள். ஈரத்தன்மை உள்ள சூழல், நல்ல சுற்றுப்புறம் ஆகியவை இருந்தால், நம் வீட்டுத் தோட்டம் வண்ணத்துப் பூச்சிகளின் சொர்க்கமாக மாறும்.

வலசை செல்லும் பறவைகளைப் போல வலசை போகும் வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. 3000 கிலோமீட்டருக்கும் கூடுதலாக, இவர்களின் ஆகாயப் பயணம் அமைகிறது. மொனார்க் பிரிவைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள் இதில் திறமையானவை. வேனில்காலத்தில் வடஅமெரிக்காவில் காணப்படும் இவை, குளிர்காலத்தில் தென்னமெரிக்காவை நோக்கிப் பறக்க ஆரம்பிக்கின்றன. கலிபோர்னியா, மெக்சிகோ, க்யூபா ஆகிய இடங்களில் அடைக்கலம் தேடும் இவற்றைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் இந்த இடங்களுக்கு வருகை தருகிறார்கள். வயிறு நிரம்ப தேன் சாப்பிட்டால் சராசரி 1000 கி.மீ வரை இவற்றால் பறந்து செல்ல முடியும். ஓய்விற்குப்பின் மறுபடியும் பயணம் தொடரும். அமெரிக்காவில் மொனார்க்குகள் போல ஐரோப்பாவில் பெயின்ட்டெட் லேடி பிரபலமானவை. குளிர்காலம் ஆகும்போது வட ஆப்பிரிக்காவிற்கு கூட்டத்துடன் இவை பறந்து செல்லும். பறந்து சென்று அடையும் இடங்களில் முட்டையிடும். வேறொரு பருவ காலத்தில் இவற்றின் புதிய தலைமுறை, மற்றொரு வலசைப் பயணத்தை மேற்கொள்வதும் உண்டு. ஒரே நிறத்தில், இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறக்கும் காட்சி, அற்புதமான ஒன்று. ஒன்றரை நூற்றாண்டிற்கு முன்பு ஒரு சூடான் பயணி தன் வண்ணத்துப் பூச்சி அனுபவங்களைப் பின்வருமாறு வர்ணித்துள்ளார்.

“நான் சூடான் வழியாக ஒட்டகத்தின் மீது அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன். கடுமையான வெப்பத்தால் என்னையும் அறியாமல் லேசாகக் கண் அயர்ந்தேன். கண் திறந்து பார்த்தபோது எட்டிப் பிடிக்கும் தூரத்தில் எனக்கு முன்னால் ஏதோ ஒரு இனம் புரியாத காட்சி என் கண் முன்னால் விரிவதை உணர்ந்தேன். வேகமாக ஒட்டகத்தில் இருந்து இறங்கிப் பார்த்தபோது பியூப்பாவில் இருந்து வெளியே வந்த இலட்சக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் பறந்து விண்ணை நோக்கி உயர்ந்து செல்வதை நான் கண்டேன். வெறும் அரை மணிநேரத்திற்குள் அவை எல்லாம் கண் பார்வையில் இருந்து மறைந்து போயின”.

தென்னிந்தியாவில், பொதுவாக 5 வகை வண்ணத்துப் பூச்சிகள் காணப்படுகின்றன. குறிப்பாக இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டி அமைந்துள்ள கேரளாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. வீடு, வயல்வெளிகள், வனப்பிரதேசங்கள், நிழல் பிரதேசங்கள், நகரங்களின் எல்லைப் பகுதிகள் போன்றவை இவற்றின் சூழல் மண்டலங்கள். பின் இறக்கைகளில் சிறு வால்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளும் உண்டு. இந்தியாவில், மிகப் பெரிய வண்ணத்துப் பூச்சி இனமான கருட வண்ணத்துப் பூச்சி இனம் இன்ரு அழியும் அபாயத்தில் உள்ளது. பல வண்ணத்துப் பூச்சிகள் அடங்கிய ஒரு குடும்பம் மஞ்சள் வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பம். மஞ்சள், வெள்ளை நிறங்களில் இவை காணப்படுகின்றன. உலகில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள வண்ணத்துப் பூச்சிகளின் குடும்பங்களும் உள்ளன. இத்தகையவை தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. முன்கால்கள் மிகவும் சிறியதாக அமைந்த, தூரிகையின் நார்கள் போன்ற உரோமங்களால் மூடப்பட்டவை உரோமக்காலுள்ள வண்ணத்துப் பூச்சிகள். வாசனையை நுகர்வதற்கும், தேனுள்ள செடிகளை அறிந்து கொள்வதற்கும் இவற்றின் கால்கள் உதவுகின்றன. தவிட்டு நிறம், கறுப்பு நிறம், ஆரஞ்சு தவிட்டு நிறம் கலந்த வண்ணத்துப் பூச்சிகள் துள்ளிச் செல்லும் இயல்புடையவை. அளவில் சிறியவையான இவை, சுறுசுறுப்புடன் துள்ளித் துள்ளிச் செல்லும்.

சூழல் நலம்பெற, வண்ணத்துப் பூச்சிகள் நலமுடன் வாழ்வது அவசியம். வண்ணத்துப் பூச்சிகளுக்கான கிராமங்களை உருவாக்கி, அவற்றிற்குரிய சூழல் மண்டலங்களை அமைத்து, வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்பவர்கள், இயற்கையின் இந்த அற்புதப் படைப்புகள் பூமியிலிருந்து அழிந்து விடாமல் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார்கள். மும்பையில் உள்ள பாம்பே இயற்கை வரலாறு அறக்கட்டளை (BNHS), கோழிக்கோடு இயற்கை வரலாற்றுச் சங்கம், திருவிதாங்கூர் இயற்கை வரலாற்றுச் சங்கம், போன்ற பல அமைப்புகள் வண்ணத்துப் பூச்சிகள் உலா வர உதவி செய்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளைத் தேடிய நம் பயணங்கள் நிச்சயம் இதற்கு உதவும். பூக்களே இறக்கை முளைத்து செடிகளிலிருந்து உயர எழும்பிப் பறப்பதைப்போலப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக் குழந்தைகளுக்குக் காட்டிக் கொடுத்து, இவை பற்றிய ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் உருவாக்குவோம். இனி வாழ்வில் ஒவ்வொரு நாளும், இவற்றின் எழில்மிகு தோற்றத்துடன் நம் பொழுதுகள் விடியட்டும். எல்லாமுமாக விரிந்து பரந்திருக்கும் இயற்கை அன்னையின் நேசப்பிணைப்பில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளுடன், வாருங்கள் நாமும் ஒவ்வொரு நாளும் பயணிப்போம்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கடல் கடந்து புகழ்பெற்ற ஜார்ஜ்

இந்த கேரளத்துப் புலியின் கதை நமக்குத் தெரியாவிட்டாலும் பிரான்சில் இவன் குழந்தைகளிடம் மிகப் பிரபலமானவன். பிரெஞ்சு எழுத்தாளரும், நடனக் கலைஞருமான லெயர் ல் மிஷேல் என்ற பெண்மணிதான் தன் சிறுகதைகள் மூலம் ஜார்ஜ் என்ற புலியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கடந்த 2021 டிசம்பரில் ஜார்ஜ் மரணத்திற்குக் கீழ்படிந்தான் என்றாலும் கதைகளின் வழியாக அவன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

மிஷேலிற்குக் கிடைத்த ஜார்ஜின் தோழமை

இயற்கைக்கும் விலங்குகளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி ஆராய்வதற்காக ஒரு சில ஆண்டுகளுக்கு முன் மிஷேல் பிரெஞ்சு கலாச்சார மையமான அலியோன்சிஸ் பிரான்சிஸின் விருந்தாளியாக கேரளாவிற்கு வந்தார். ஆய்வுகளின் ஒரு பகுதியாக அவர் மிருகக்காட்சி சாலையில் டாக்டர் ஜேக்கப் அலெக்சாண்டரைச் சந்தித்தார்.

எழுத்தின் தொடக்கம்

அப்போது முதல் மிஷேல் தன் அனுபவங்களை எழுதத் தொடங்கினார். அமைதியாக கூண்டிற்குள் வாழ்ந்து கொண்டிருந்த ஜார்ஜ் என்ற புலியுடன் நேசம் மிக்க தோழமை ஆரம்பித்தது. நாட்டிற்குத் திரும்பியவுடன் “The story of George” என்ற பெயரில் ப்ளாக் (blog) மற்றும் வானொலித் தொடராக இந்தப் புலியின் கதைகள் பிறந்தன. கருத்தும் கற்பனையும் கலந்த ஜார்ஜின் கதைகள் ஜன ரஞ்சகமாயின. மிருகக்காட்சி சாலையின் ஊழியர்கள் இதில் கதாபாத்திரங்களாயினர்.tiger georgeகுழந்தைகள் மனதில் என்றும் வாழும் ஜார்ஜ்

இதுவரை ஜார்ஜின் கதை 38 அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது. சனிக்கிழமைகள்தோறும் பிரான்சில் பிராத்தனேயு டவுனில் நடக்கும் வாசிப்பு இரவுகளில் (reading nights) ஜார்ஜின் கதைகளைக் கேட்க பலர் ஒன்று திரண்டனர். மிஷேல் ஷூட் செய்திருந்த ஜார்ஜின் காணொளிகள் கதை சொல்லலை மேலும் அழகானதாக்கியது. ஜார்ஜுடன் தொடர்புடைய கதைகள், சம்பவங்கள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து பிரார்த்தனேயு டவுன் ஒரு இணையப் பக்கத்தையும் (webpage)ஆரம்பித்துள்ளது.

ஓவியமாக மாறிய புலி

கதை கேட்க வருபவர்களில் குழந்தைகள் ஏராளமாக இருந்தனர். அவர்கள் வரைந்த ஜார்ஜின் 23 ஓவியங்களை ஜனவரி 2022ல் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஓவியங்களைப் பார்த்தபோதுதான் ஜார்ஜிற்கு பிரான்சில் இவ்வளவு இரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 

முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோ

இதற்கிடையில் ஜார்ஜ் கடந்த டிசம்பர் 2021ல் மரணமடைந்தான். இது மிஷேலையும், இரசிகர்களையும் சோகக்கடலில் ஆழ்த்தியது. புலிகள் சாதாரணமாக 16 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும். ஆனால் ஜார்ஜ் இந்த பூமியை விட்டு மறைந்தது அவனுடைய 22வது வயதில். 2015ல் இவன் காட்டில் இருந்து நாட்டிற்குள் நுழைந்தான்.

முப்பதிற்கும் அதிகமான வளர்ப்பு விலங்குகளை வேட்டையாடினான். மலையோர கிராமங்களை ஏழு நாட்கள் நடுங்க வைத்தான். இறுதியில் பிடிக்கப்பட்டான்.

திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரும்போது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. மூக்கின் நுனியும் உடைந்திருந்தது. சிறந்த பராமரிப்பினால் உடல் நலம் தேறினான். அந்த ஆண்டு பிரபலமான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தின் கதாநாயகனின் பெயரும் கிடைத்தது. விலங்குகளை கூண்டிற்குள் அடைத்து வைத்து காட்சிப்படுத்தும் முறைக்கு எதிராக இருந்த மிஷேல் ஜார்ஜைப் பார்த்த பிறகு, அவனுக்குக் கிடைத்த பாசம் மிக்க பராமரிப்பைக் கண்டபிறகு தன் மனதை மாற்றிக் கொண்டார்.

என்றும் வாழும் ஜார்ஜ்

இயற்கையின் படைப்பில் காக்கா குருவி முதல் அணைத்து உயிரினங்களும் அன்பிற்கு அடிமை என்பதையே ஜார்ஜின் கதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அன்பு காட்டினால் பூமரம் முதல் யானை புலி வரை எல்லா உயிரினங்களும் என்றும் நம் நினைவில் வாழும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It