தமிழ் மொழியைத் - தமிழிசையைத்-தமிழ்ப் பண்பை வளர்க்கத் தமிழகத்துச் சான்றோர்களையெல்லாம் ஒன்று திரட்டித் ‘தமிழகப் புலவர் குழு’ வை அமைத்தவர். அதன் தலைவராகவும் திகழ்ந்தவர். தமிழ் மாநிலத் தமிழாசிரியர் சங்கத் தலைவராகத் தொண்டாற்றியவர். தமிழன் உயிர்நாடியான இலக்கணத்தில், பிற்காலத்தில் களைகள் எனத் தோன்றிய வழுக்களை நீக்கிய வண்டமிழறிஞர். அதன் தன்மானம் காக்கத் தமிழ்ச் செய்யுள் யாப்பிலக்கண ஆராய்ச்சியில் முதன் முதலில் முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக் கழக ‘ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம்’ வெளிவர அதன் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். தமிழாசிரியர்கள் நலம் பெறப் பாடுபட்டவர். அவர்தான், ‘செந்தமிழ்க் காவலர்’ எனப் போற்றப்படும் டாக்டர் அ. சிதம்பரநாதர்.

                chidambaranathanகுடந்தை நகரில், அமிர்தலிங்கம்-பார்வதி இணையருக்கு 03.04.1907 ஆம் நாள் மகனாகப் பிறந்தார் சிதம்பரநாதர்.

                குடந்தை பேட்டையில் உள்ள தொடக்கப்பள்ளியில் முதலிரண்டு வகுப்புகள் மட்டும் பயின்றார். பிறகு ‘நேடிங்’ உயர்நிலைப்பள்ளியில் இறுதி வகுப்புவரை கற்றுத் தேர்ச்சி பேற்றார்; ‘கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி’-யில் இளங்கலை வகுப்பில் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்துப் பாராட்டைப் பேற்றார்.

                இவர், கல்லூரியில் மாணவர் சங்கச் செயலாளராகச் செயலாற்றியபோதுதான், அதுவரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தி வந்த முறையை மாற்றி, முதன் முதலாக, தமிழில் கல்லூரி அறிவிப்புகளை வெளியிடவும், மாணவர்கள் விரும்பிப் படிக்கவும் ஆவன செய்தார். கல்லூரியில் நடைபெற்ற வரலாற்றுத்துறைப் போட்டியில் கலந்து கொண்டு ‘தமிழ் நாகரிகத்தின் தொன்மை’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதி முதல் பரிசைப் பெற்றார். அக்கட்டுரையில், ‘தமிழ்நாடே உலக நாகரிகத்தின் ஊற்று’ என்று சான்றுகளுடன் நிறுவனார்.

                இளங்கலைத் தேர்வில் தமிழில் 1928 ஆம் ஆண்டு மாநிலத்திலேயே முதன்மை, மாணவனாகத் தேர்ச்சியடைந்ததால், இவருக்கு, சென்னைப் பல்கலைக் கழகம் ‘ஜி.யூ.போப் தங்கப் பதக்கம்’ பரிசாக வழங்கியது. மேலும், அதற்காக ‘பிராங்க்ளின்’ பதக்கத்தையும் இவர் பெற்றார்.

                இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்த பின்னர், சென்னைப் பல்கலைக் கழக அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் சிறிது காலம் எழுத்தராகப் பணி புரிந்தார்.

                சென்னை அரசு முகமதியக் கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பெரியநாயகி அன்பவரை 1933 ஆம் ஆண்டு மணம் புரிந்தார்.

                தமிழ் மீது கொண்ட பற்றால், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் முதுகலை வகுப்பில் சேர்ந்து பயின்று முதலிடம் பெற்றுத் தேர்ச்சியடைந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் தலைவராகவும், பொதுப் பேரவையின் தலைவராகவும், சமூக சீர்திருத்தச் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.

                அண்ணல் காந்தியடிகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்தபோது தமிழில் வரவேற்பிதழ் அச்சிட்டுப் படித்தளித்தார்- என்பது குறிப்பிடத்தக்கது. தான் பயின்ற அதே பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக 1935 ஆம் ஆண்டு சேர்ந்தார்.

                தமிழ் நூல்களைக் கற்றாராய்ந்து பிற மொழியாளரும் அறிய வேண்டுமென்பதற்காக, ஆங்கிலத்தில் ‘திருக்குறட்செய்தி’  என்ற ஆராய்ச்சிக் கட்டுரையைத் தயார் செய்து அனைத்திந்திய கீழைக்கலை மாநாட்டில் சமர்ப்பித்தார்.

                திருவனந்தபுரத்தில், ‘திராவிட மொழிகளில் செயப்பாட்டுவினை’ என்ற தலைப்பிலும், திருப்பதியில் ‘நக்கீரன் சொல்லாராய்ச்சி’ என்றும், காசியில், ‘பழந்தமிழ்ப் புலவர்கள்’ என்றும், அகமதாபாத்தில், ‘பழந்தமிழ் மன்னர்கள் என்பது பற்றியும் நாகபுரியில்,’ ‘இறையனார் களவியல் உரையில் இடைச்செருகல்கள்’ என்றும், அண்ணாமலை நகரில், ‘சிலப்பதிகாரத்தில் காவிய நலம்’ என்றும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆய்வுக் கட்டுரைகள் அளித்தார்.

                பூனாவிலிருந்து வெளிவந்த, ‘நியு இந்தியன் ஒண்டிக்குயரி’, (ஆங்கிலப் பெயர்) கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘இந்திய மொழிக் குழு இதழ்’ (ஆங்கிலப் பெயர்) சென்னையிலிருந்து வெளிவந்த ‘தமிழர் பண்பாடு’ ஆகிய இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

                ‘செந்தமிழ்ச் செல்வி’, ‘செந்தமிழ்’ ‘செந்தமிழ்’ ‘தமிழ்ப்பொழில்’ ஆகிய இலக்கிய இதழ்களில் ஆய்வறிஞர்கள் பாராட்டும் வண்ணம் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வழங்கினார்.

                மதுரை தியாகராசர் கல்லூரியில் 1965 முதல் 1967 வரை முதல்வராகப் பணியாற்றினார்.

                சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித்தமிழ் பயின்றோர் “வித்துவான்’ பட்டம் பெற இயலாத நிலை இருந்தது. தமிழ்ப்படை நூல்களோடு வடமொழியையும் படித்துத் தேர்ச்சி பெற்றால்தான் ‘வித்துவான்’ பட்டம் வழங்கத் தொடங்கினர். ‘வித்துவான்’ என்பதற்குப் பதிலாக ‘புலவர்’ எனப் பட்டம் வழங்கவும் அன்றைக்குப் போராட வேண்டியிருந்தது. போராடியே வென்றனர்!

                சென்னைப் பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பதவிகளையும் பார்ப்பனர்களே பெற்று அனுபவித்து வந்தனர். பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறைகளிலும் பல்வேறு சாதியினரும் இடம்பெற வேண்டும் என ஆட்சிக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்தும், வாக்கெடுப்பு நடத்தச் செய்தும் வென்றார் அ. சிதம்பரநாதர்.

                அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், ‘பார்ப்பனர் - பிறசாதியினர்’- 50:50 என்ற விழுக்காட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது; அதை எதிர்த்து ஆட்சிக் குழுவில் இருந்த பார்ப்பன உறுப்பினர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அதை எதிர்த்தும் வழக்காடியும், முறியடித்தார். அ. சிதம்பரநாதர்! அக்காலத்திலேயே, பார்ப்பனரல்லாதோருக்கு சமூக நீதி கிடைத்திட போராடியவர் சிதம்பரநாதர் என்பது வரலாற்றுச் செய்தி!

                சென்னை, ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் ஆகிய பல்கலைக் கழகங்களில் பாடநூல் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் இடைநிலை, இளங்கலை வகுப்புகளுக்கான பாடநூல்களில் மணிப்பிரவாள நடை இடம் பெற்று இருந்ததை வன்மையாகக் கண்டித்தார். குப்பைகளைப் பாடநூல்களாக வைக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தினார் அ.சிதம்பரநாதர்”!

                இந்திய அரசாங்கத்தால் 1949 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ‘தத்துவமேதை’ டாக்டர்.எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவிடம், “தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும், பயிற்று மொழியாக தாய் மொழியாம் தமிழ் மொழிதான் இருக்க வேண்டும்”- எனக் கருத்துரைத்தார் அ.சிதம்பரநாதர்.

                சாகித்திய அகாதெமியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் சார்பாளராகப் பணியாற்றினார். அப்போது, சாகித்திய அகாதெமியில் வட இந்தியர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஜவஹர்லால் நேரு முன்பு வாதாடினார்.

                நாகப்பட்டினத்தில் 1941 ஆம் ஆண்டு நடைபெற்ற, தமிழ்ச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அ. சிதம்பரநாதர், “தமிழ் எழுத்துக்களில் எந்தச் சொல்லையும் எழுத முடியும் என்றும், ஆங்கிலத்தில் ‘எஃப்’ (கு) என்ற சொல்வரும் இடங்களைத் தமிழில் எழுதும்போது உச்சரிப்புக் குறையாதிருக்க `ஃ’ என்ற ஆய்த எழுத்தைச் சேர்த்து எழுதலாம்” – என்றும் எடுத்துரைத்தார். அன்று முதல் தமிழகத்தில இம்முறை பரவத் தொடங்கியது.

1. நொடி 2. எழுத்து 3. அசை 4. சொல் 5. வரி 6. தொடர்பு 7. வழக்கு 8. இசை 9. ஒலியியைபு 10. நாக்கு 11. செய்யுள் 12. எல்லை 13. இனம் 14. ஒழுகலாறு 15. பேச்சு 16. கேட்போர் 17. களன் 18. காலம் 19. பயன் 20. வெளிப்பாடு 21. விடுபாடு 22. எண்ணத் தொடர்பு 23. பொது இயற்கை 24. துறை 25. சொல் தொடரியல் 26. சந்தம் .

                அ. சிதம்பரநாதர் தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருமுறை பணியாற்றினார். தமிழாசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை, கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்தார். கோவில்களில் உள்ள உண்டியல்களுக்குப் பாதகாப்பளிக்க இரட்டைப்பூட்டு முறை என்பதை நடைமுறைக்குக் கொண்டு வரச் செய்தார். உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வந்த பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக மாற்றம் பெறவும் பாடுபட்டார்.

                மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆர்.பி.டி. இராசன், தலைமையில் தருமபுரத்தில் 28.09.1955-ஆம் நாள் நற்றமிழ் அறிஞர்களின் கூட்டம் நடைபெற்றது அப்போது, தருமையாதீனத் தலைவர், டாக்டர் அ. சிதம்பரநாதரின் நற்றமிழ்ப்பணிகளைப் பாராட்டி, ”செந்தமிழ் காவலர்” என்ற பட்டத்தை அளித்துப் பாராட்டினார்கள்.

                மாணவர்தம், உள்ளங்கொள்ளப் பாடம் நடத்துபவர், மனதில் பதியும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றுபவர் ! காய்தல் உவத்தல் அற்ற ஆய்வாளர் ! பிசிறு தட்டாத மொழி பெயர்ப்பாளர் ! அயல்நாட்டுப் பயணங்களைத் தமிழ், தமிழரின் மேன்மைக்காகவே பயன்படுத்தியர்! கடமையில் கண்டிப்பும் கனிவும் காட்டுபர் ! தமிழே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், அச்செந்தமிழ்க்காவலர் டாக்டர் அ.சிதம்பரநாதர் 26.11.1967-ஆம் நாள் காலமானார்.

                தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அ. சிதம்பரநாதர் அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குடந்தையில் ”சிதம்பரநாதர் பேரவை” தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பாட்டு, பேச்சு, நடனம் ஆகியப் போட்டிகள் நடைபெறுகின்றன, பற்பல பரிசுகள் வழங்கப் பெறுகின்றன. தமிழ் உள்ளவரை ”செந்தமிழ்க் காவலர்” டாக்டர் அ. சிதம்பரநாதரின் நீடு புகழ் நிலைத்திருக்கும்.

               - பி.தயாளன்

Pin It

தொ.மு.சி.ரகுநாதன் தமிழ் இலக்கிய ஆய்வை  இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும்  சமூகநிலை  ஆய்வு என்னும் ஆழமான தளத்துக்குக் கொண்டு சென்று,  இலக்கிய  ஆய்வின் எல்லையை  விசாலப்படுத்தியவர்.

‘ சிறுகதை  மன்னன் ’ புதுமைப்பித்தனுடைய  புரட்சிகர ஆளுமையைத் துலக்கி,  வளர்த்துத்  தமிழ்  இலக்கிய  உலகுக்கு வழிகாட்டும்  வகையில் வடிவமைத்தவர்.  மக்கள்  இலக்கியத்தை  வளர்க்க  ‘ இலக்கியப் பேராசான் ’ ஜீவாவின் வழியில் மக்கள்  திரளைச் சார்ந்து , இலக்கிய  அமைப்புகளின் வழியே  தொண்டாற்றியவர்.  நவீனத் தமிழ் இலக்கிய   விமர்சனத்தை  வளர்த்தெடுத்தவர்.  இலக்கியத்தையே  வாழ்வாகக்  கொண்டவர்.  இலக்கியமாகவே  வாழ்ந்தவர்.  சோசலிச  யதார்த்தப் படைப்பு  முறையைத்  தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

Tho mu si ragunathanசிறுகதையாளராக, நாவலாசிரியராக,  கவிஞராக, இலக்கியக் கோட்பாட்டாளராக,  இளங்கோவடிகள்,  பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் பற்றி ஆய்வுப் பூர்வமாக  அறுதியுட்டுப் பேசும்  தகுதியுடையவராக, விளங்கியவர் தொ. மு. சி. ரகுநாதன்.

ரகுநாதன் இலக்கிய  அமைப்புகளைப்  புறக்கணிக்காதவர் , இலக்கியத்தை விவாதத்துக்குள்ளாக்குவதை விரும்பியவர்.   கூட்டுச் சிந்தனையின்  வலிமையை உணர்ந்தவர்.  இலக்கியத்தைச் சமூகத்துக்கு  எடுத்துச் செல்ல வேண்டிய  கடமையை மதித்தவர்.   சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும்  இடையில் இருக்க வேண்டிய   நல்லுறவின் முக்கியத்துவத்தைப் புரிந்தவர்.  சமூகத்தைத்  தூண்டும்  இலக்கியப் பேராற்றலை அறிந்தவர்.

இருபதாம் நூற்றாண்டு மக்கள் இலக்கியச்  சாதனையாளர்களில் ஒருவர்.  கவியரங்கக் கவிதைக்கு இலக்கிய  அங்கீகாரம் ஏற்படுத்திய  மக்கள் கவிஞர்.  போராடும் தொழிலாளர்களை முதன் முதலாகத்  தமிழ் இலக்கியத்தில் கதாநாயகனாக்கிய  புரட்சிகர எழுத்தாளர்.   புதிய  சமூக  உண்மைகளைக் கண்டடைந்த சாதனையாளர்.  தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்ற உருவாக்கத்தில் பெரும் பங்கு  வகித்த  இலக்கியப் போராளி.  இத்துனை சிறப்புக்குரியவர் ‘நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி’   அவர் தாம்  தொ.மு.சி .ரகுநாதன் !

திருநெல்வேலியில் தொண்டைமான் முத்தையா- முத்தம்மாள் வாழ்விணையருக்கு  20-10-1923 ஆம் நாள் பிறந்தார் ரகுநாதன்.

ரகுநாதன்  தமது  ஆரம்பக்கல்வியை  ஷாப்டர்  பள்ளியில் படித்தார்.  உயர்நிலைப் பள்ளியில்  ஆங்கில  மொழி வழியில்  பாடங்களைப் படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில்  1939 ஆம் ஆண்டு  இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து பயின்றார்.

ரகுநாதன்   தமது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஜவஹர் வாலிபர் சங்கம் ’ என்ற அமைப்பைத் தொடங்கி  பிரிட்டிஷ்  அரசாங்கத்தைக் கண்டித்து பிரசுரங்களை வெளியிட்டார்.    ‘ வெள்ளையனே வெளியேறு ’ இயக்கத்தில்  தீவரமாக ஈடுபட்டார். 1942 ஆம் ஆண்டு  காந்தி ஜெயந்தி  அன்று,  நெல்லை  அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி  மாணவர்களைத் திரட்டி ஊர்வலம்  நடத்தினார்.   ஊர்வலத்தில்  அணி வகுத்துச் சென்ற  மாணவர்கள்  மீது  பிரிட்டிஷ் அரசின் காவல்துறையினர்  கண்மூடித்தனமாக  தாக்குதல் நடத்தினர்.  அப்போது  காவல்துறையினரால்  ரகுநாதன் கடுமையாக தாக்கப்பட்டார்.

நெல்லையில்  1947 ஆம் ஆண்டு   ஜீலை மாதம் ‘ கலைஞர்  கழகம் ’ என்னும் இலக்கிய  அமைப்புத் தொடங்கப்பட்டது.  அதன் தலைவராக ரகுநாதன்,  செயலாளராக  தி.க.சி ,  நா. வானமாமலை, என்.டி. வானமாமலை, சீனிவாசன், கணபதியப்பன், ஜெகநாதன்  முதலியவர்கள்  பொறுப்பாளர்களாக  விளங்கினர்.  கலைஞர் கழகத்தில் ஜீவாவை அழைத்து   உரையாற்றவைத்தனர்.

‘ மின்னல் ’  என்னும் கையெழுத்து  இதழை 1940 ஆம்  ஆண்டு  நடத்தினார்.        ‘ பிரசன்ட விகடன் ’  முதலிய  சிற்றிதழ்களில் அவரது படைப்புகள் வெளிவந்தன.

சென்னைக்குச்  சென்று  ‘தினமணி’  நாளிதழில்  துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.   பின்னர்,  ‘ முல்லை ’ என்னும் இலக்கிய  மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வை. கோவிந்தன் நடத்திய  ‘சக்தி’ என்னும்  இலக்கிய  இதழில்                                கு. அழகிரிசாமியுடன்  இணைந்து  துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

‘ சாந்தி ’ என்னும் இலக்கிய  மாத இதழை  1954 ஆம் ஆண்  டிசம்பர் மாதம் நெல்லையிலிருந்து  வெளியிட்டார்.   அந்த இதழின் ஆசிரியராக  விளங்கினார்.    ‘சாந்தி ’ இதழில் கவிஞர் தமிழ்ஒளி,  சுந்தர ராமசாமி, அகிலன், சி. வி.எஸ். ஆறுமுகம், டி. செல்வராஜ், கு. அழகிரிசாமி, நா. வானமாமலை,  சாமி சிதம்பரனார், கமில்  சுவலபில்,  எஸ். இராமகிருஷ்ணன்,  வையாபுரி பிள்ளை, ஆ. நடராசன்,  வை. கோவிந்தன்,  தி.க.சி., துறைவன், கே.சி. எஸ். அருணாசலம் முதலிய  இலக்கிய  ஆளுமைகளை எழுத வைத்தார்.

நிதி நெருக்கடியின்  காரணமாக  1956 ஏப்ரல் மாதம்  ‘சாந்தி’ இதழ் நின்று போனது.  சென்னையிலிருந்து  வெளிவந்த  ‘சோவியத்  நாடு’  இதழில் 1967 ஆம் ஆண்டு  பணியில் சேர்ந்தார்.

ரகுநாதன்  உயர்நிலைப் பள்ளியில் பயிலும்  போதே கவிதைகள்  எழுதத் தொடங்கி விட்டார்.  ‘திருச்சிற்றம்பலக் கவிராயர் ’ என்ற பெயரில்  கவிதைகள் படைத்து  அளித்தார்.

அன்றைய தமிழகத்தின்  முதல்வராக  இருந்த  ஓமாந்தூர்  ராமசாமி ரெட்டியார் தலைமையில், சென்னை வானொலியில் ‘நம்ம சர்க்கார் ’ என்னும் தலைப்பில்  ‘ யாருக்கு  சுதந்திரம்’  என்ற கருத்தை மையமாகக் கொண்டு கவிதை பாடினார்.

“இருப்பில் உணவிருக்க  இருட்டில்  பதுக்கி வச்சி 

கருப்புக் கடை  நடத்தி காசுதனைச் சேர்த்தோன்

உருப்படியாய் நம்முன்னே  உலா வந்து  போவதையும் ”

என்று தொடங்கி, யாருக்கெல்லாம்  இன்று சுதந்திரம்  இருக்கிறது என அன்றைய அரசியல் சமூக  நிலைமையைக் கடுமையாகத் தமது  கவிதையில்  விமர்சித்தார் ரகுநாதன்.

அப்போது தான் நமது நாடு விடுதலை பெற்றது.  தமிழ்நாட்டில் மிகக்  கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவியது.  பதுக்கலும்,  லஞ்சமும்,  தலைவிரித்தாடின.  பதுக்கல்  எடுப்புப் போரில் கம்யூனிஸ்ட்  கட்சி தீவிரமாக  ஈடுபட்டிருந்த காலம்  அது.

இந்தக்  கவிதையை  வானொலியில் கேட்ட  அறிஞர் அண்ணா, தமது ‘திராவிட நாடு’  இதழில்  மூன்று  பக்கத்தில்  ஒரு மதிப்புரையை   எழுதி  வெளியிட்டார். ‘ நம்ம சர்க்கார் ’  என்னும் இக்கவிதை  ரகுநாதனுக்குப் பெரும்  புகழை ஈட்டித் தந்தது.

ரகுநாதனின் கவிதைகள் ,  விருத்தத்தின்  மிக நெகிழ்ந்த  வடிவம்,  நாட்டுப்புற  மரபின்  சாயல் கொண்டது.   இலக்கண  வரம்பிலிருந்து விலகாதது.  வழக்கில் உள்ள சொற்கள் , சொற்றொடர்கள் கலந்து கேட்போரை வசப்படுத்துவது என இலக்கிய ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர்.

ரகுநாதன்  பாரதி  மீது கொண்ட  அளவற்ற  பற்றால், பாரதி விழா மேடைகளில்  பாரதிப்  பற்றி கவிதை முழக்கங்கள் செய்தார்.

“ சாதிபேதமெனும்    களக்கறுத்து மானிடமாம்

நீதி ஒன்றே தர்மம் என நிலை நாட்டும் சமுதாயம்

            மானிடர்கள்  எல்லோரும் வள வாழ்க்கை  தனைப்பெற்று 

 வானுறையும் தெய்வம் போல் வாழவைக்கும்  சமுதாயம் 

அத்தகைய  சமுதாயம்  அதனைத்தான் நம் கவிஞன்

இத்தரையில் ஒப்பில்லாச் சமுதாயம் என்றுரைத்தான் .” - 

என்று பாரதி தமது  கவிதைகளின் உயிராக நிலை நிறுத்திய  ஒப்பில்லாச்  சமுதாயம் என்னும்  கருத்துக்கு மானுட   நீதியை  அடிப்படையாக்கித் தமது  கவிதை  மூலம்  விளக்கம்  தருகிறார்.

தமிழில்  ஏலாதா என்னும்  பொருள் பற்றி ரகுநாதன் பாடிய கவிதை தமிழர்களை சிந்திக்கத் தூண்டுகிறது. 

 “  தாய்மொழியை தாயகத்தைத் தள்ளி வைத்து  வெள்ளையர்க்கு

நாயடிமை  செய்தவர்கள்  நாத்தடித்துப் போனதனால்,

தன் பலத்தைத்  தானறியா  யானையைப்  போல் ஆங்கிலத்தின்

பின் பலத்தை  நம்புகின்ற   பேடியர்கள் உள்ளதால்

கற்றுவிட்ட  ஆங்கிலத்தைக் கைகழுவ மனமின்றிப்

பெற்றுவிட்ட தாய்மொழிக்கே  பிணக்குழியைத்  தோண்டுவார்..

இடமில்லை ! தாய் மொழியை  இழித்துப் பழிப்பவர்க்கிங்டமில்லை !

தமிழ்  நாட்டில்   அனைத்து  நிலைகளிலும்  தமிழ்   மொழி ஆட்சி செய்ய வேண்டும்.  குறிப்பாகப் பயிற்று  மொழி தமிழாகத்தான்   இருக்க வேண்டும்  என்பதற்காக  கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து  தொடர்ந்து  குரல் எழுப்பி வந்தார் ரகுநாதன்.

ரகுநாதன்  கவிதைகள்,  கவியரங்கக் கவிதைகள், காவியப் பரிசு, தமிழால் ஏலாதா ?  முதலிய  கவிதை நூல்களையும்  எழுதி அளித்துள்ளார்.

அண்ணனும்   தம்பியும்,  பெண்ணாய்ப்  பிறந்தால், மோகினி, மருது பாண்டியர்,  சிலை பேசிற்று, வலி, அத்தான் வந்தார்,  பஞ்சப்பாட்டு முதலிய சமூக  நாடகங்களை படைத்தளித்துள்ளார்.

 ‘ புதுமைப்பித்தன் வரலாறு ’  என்ற  நூலின்  மூலம் புதுமைப்பித்தனின் வரிவான வரலாற்றை தமிழுலகுக்கு  அளித்துள்ளார்.

                ‘ சமுதாய  இலக்கியம் ’  என்ற  நூலின்  மூலம் இலக்கியம் சமுதாய  மாற்றத்திற்கு எவ்வாறு  பயன்பட வேண்டும்  என்பதை வலியுறுத்தியுள்ளார்.

‘ இலக்கிய விமர்சனம் ’ என்னும்  நூலை தமது  இருபத்தைந்தாவது  வயதில் எழுதி  வெளியிட்டார்.   விமர்சனக் கலைப்பற்றி  தமிழில்  வெளிவந்த முதல் நூல் ஆகும்.

முதலிரவு,  கன்னிகா, பஞ்சும் பசியும். புயல்  முதலிய  நாவல்களை தொ. மு. சி. ரகுநாதன்  எழுதியுள்ளார்.

நீயும்  நானும் , சேற்றிலே மலர்ந்த செந்தாமரை, ரகுநாதன் கதைகள், சஷணப்பித்தம் முதலிய  சிறுகதைத் தொகுதிகளை  வெளியிட்டார்.

அக்டோபர்  புரட்சியும் தமிழ் இலக்கியமும்,  இளங்கோவடிகள் யார்?,  முற்போக்கு இலக்கிய  இயக்கங்கள், புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் முதலிய  ஆய்வு நூல்களை எழுதி அளித்துள்ளார்.

பாரதியும்,  ஷெல்லியும்,  கங்கையும்  காவிரியும் ( தாகூரும், பாரதியும்)  முதலிய ஒப்பிலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.

பாரதி-சில பார்வைகள்,  பாரதி காலமும் கருத்தும்,  பாரதியும் புரட்சி இயக்கமும், பாஞ்சாலி சபதம்- உறை பொருளும் மறை  பொருளும்  முதலிய  பாரதி ஆய்வு நூல்களை தமிழிலக்கிய  உலகிற்கு எழுதி வழங்கியுள்ளார்.

புதுமைப்பித்தன்  கதைகள்,  காந்திமதி கலித்துறை அந்தாதி முதலிய  நூல்களை பதிப்பித்துள்ளார்.

தொ.மு.சி. ரகுநாதன், ‘மருது பாண்டியர் ’  என்னும் தமது நாடகத்தில்,   ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ள , நமது நாட்டு மக்களிடையே  சாதிப்  பகைமையைத் தூண்டி,  மோதலை ஏற்படுத்திய  வஞ்சகத்தைப் புறந்தள்ளி, மக்கள் ஒன்றுபட்டு நின்ற கதையை, மையமாக  வைத்து படைத்துள்ளார்.

இவரது  ‘ இலக்கிய  விமர்சனம் ’ என்னும் நூல், தமிழில் வெளிவந்த முதல் இலக்கிய  விமர்சன நூலாகும்.  இந்நூல்  தமிழிலக்கிய  உலகத்தை மகிழ்ச்சியும், அதிர்ச்சியும் அடையச் செய்தது.   அழகியலை  தமிழுக்கு  அறிமுகம் செய்த முதல் நூலகவும்  இது  அமைந்தது . “ இலக்கிய விமர்சனத்தை  விஞ்ஞானப் பூர்வமாக  மாற்றும்  முயற்சி இந்நூல்”  என மதிப்பீடு  செய்துள்ளார் மார்க்சிய  இலக்கியத் திறனாய்வாளர்  கலாநிதி கா.சிவத்தம்பி .

ரகுநாதன்  ‘முதலிரவு’ என்னும் நாவலை 1949 ஆம் ஆண்டு  எழுதி வெளியிட்டார்.  அந்நாவல்  தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.  நாவல் வெளிவந்த சில மாதங்களிலேயே பல பதிப்புகளைக்  கண்டது.   பொறாமை கொண்ட சில  நூல் வெளியீட்டாளர்கள் , அந்த நாவல் ஆபாசமானது என்று  கூறி அரசாங்கத்துக்குப்   புகார்  செய்தனர்.   அப்போது தமிழகத்தின் கல்வியமைச்சராக  இருந்த  அவினாசிலிங்கம்  செட்டியார்,  நாவலில்  ஓரினச் சேர்க்கை, முறை பிறழ்ந்த ஈரினச் சேர்க்கை,  காந்தியப்   பாலியல் நிலைக்கு எதிர்ப்பு எனக் கூறி, புத்தகத்தைத் தடை  செய்து ஆணைப் பிறப்பித்தார்.

இந்தத் தடையாணையை எதிர்த்து,  நீதி மன்றத்தில்  வழக்குத் தொடர்ந்து  வாதாடினார்.  பலனில்லை, கைது செய்யப்பட்டார். பின்னர்  நீதி மன்றம் விதித்த  அபாராதத் தொகையைக் கட்டி மீண்டார்.

அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை  மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தப்படியாக பெருந்தொழிலாக  விளங்கியது கைத்தறி நெசவு,  அரசின் தொழிலாளர்  விரோத நடவடிக்கையினால், கைத்தறி நெசவுத்  தொழிலில்  ஈடுபட்டிருந்த மக்கள் மிகுந்த  வறுமையில் வாடிக்கொண்டிருந்த  காலம்  அது.  பசியும் பஞ்சமும்  மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன.  ஆயிரக்கணக்கான  கைத்தறி  நெசவுத்  தொழிலாளர்கள் கஞ்சிக்கு வழியின்றி செத்து  மடிந்தனர்.  குடி தண்ணீருக்குக் கூட  கடுமையான  பஞ்சம்  நிலவியது.  தெரு  முனைகளில் அரசு திறந்திருந்த   கஞ்சித் தொட்டிகளைச்  சுற்றி ஏழை மக்கள் ஈ, எறும்புகளாக மொய்த்துக் கிடந்தார்கள்.   இச்சமூகப் பிரச்சனையை மையமாக வைத்து ‘பஞ்சும் பசியும்’ என்னும் நாவலை  எழுதினார் ரகுநாதன்.

தமிழகத்தில் பரவலாக  விவாதிக்கப்பட்டது  ‘ பஞ்சும் பசியும் ’  நாவல்.  இந்நாவலால் பெரிதும்  ஈர்க்கப்பட்ட  செக்கு நாட்டுத் தமிழ்ப்  பேரறிஞர்   கமில் சுவலபில்,  அந்நாவலை செக் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.   தமிழ் மொழியிலிருந்து ஒரு அய்ரோப்பிய  மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட  முதல்  நாவல் என்னும்  பெருமையை ‘பஞ்சும் பசியும்’ நாவல் பெற்றது.   மலையாளம்,  தெலுங்கு, வங்காளம், இந்தி,  ஹங்கேரியன், ஜெர்மன், ரஷ்யன், ஆங்கிலம் முதலிய  மொழிகளிலும்  ‘ பஞ்சும் பசியும் ’  நாவல் மொழிபெயர்க்கப்பட்டு  உலகம் முழுவதும் பரவியது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த படைப்பாளர்களும்,  ஆய்வாளர்களும்,  கோவையில் கூடி  1961 ஆம்  ஆண்டு  மே மாதம் ‘ தமிழ்நாடு கலை இலக்கியப்  பெருமன்றம் ’  என்னும் பேரமைப்பை  எற்படுத்தினார்கள்.  இதில்  இலக்கியப்  பேராசான் ஜீவாவுடன் இணைந்து முக்கியப் பங்காற்றினார் ரகுநாதன்.

தமிழகத்தில்  மக்கள்  இலக்கிய  வளர்ச்சி, நாட்டுப்புற இலக்கிய ஆய்வு,  நாட்டுப்புற  கலை வளர்ச்சி,  மக்கள் நிலையிலிருந்து வரலாற்றுப் பார்வை,  சமூக அடித்தளத்தின்  மீது நின்று இலக்கியத்தைப் பார்க்கும் ஆய்வுமுறை, அடித்தள மக்கள் ஆய்வுகள்  முதலியவற்றுக்கெல்லாம்  தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றமே அடித்தளம் இட்டது.

மதுரையில் 1963 ஆம் ஆண்டு நடைபெற்ற  தமிழ்நாடு  கலை இலக்கியப் பெருமன்ற  மாநாட்டில் ரகுநாதன்  மாநிலத் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரகுநாதனின்  பெரும்பான்மையான  மொழி பெயர்ப்புகள்  சமூக  வாழ்வை  மையமாகக்  கொண்டு  படைக்கப்பட்ட  ரஷ்யப்  பேரிலக்கியங்களாகும்.

டால்ஸ்டாயின்  ‘ அக்கினிப் பரிட்சை ’ , இலியா  இஷேன்பர்க்கின் ‘ வசந்தமே வருக ’,  மார்க்சிம்  கார்க்கியின் ‘தாய் ’ , ‘ தந்தையின் காதலி ’, ‘பிரமச்சாரியின் டைரி’  ‘மூன்று  தலைமுறைகள் ’ முதலிய  நாவல்கள் , ‘ சந்திப்பு ’ என்னும் சிறுகதைத் தொகுப்பு, மைக்கல் ஷோலாகோவின்  ‘இதயத்தின் கட்டளை’, ஆர். எல். ஸ்டிவன்சனின் ‘ நான் இருவர்’ , மாயக்கோவ்ஸ்கியின் ‘லெனின்  கவிதாஞ்சலி’  மார்க்ஸ் - ஏங்கல்ஸ் மதத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் , ‘நவசீனக் கதைகள்’  சோவியத்  நாட்டுக் கவிதைகள் என முக்கியமான உலகப் படைப்புகள் பலவற்றை  தமிழில்  மொழி பெயர்த்து அளித்துள்ளார்.

“ ஒரு  மொழியிலுள்ள  கலாசிருஷ்டியை  இன்னொரு  மொழியில் மீண்டும்   சிருஷ்டிப்பதே  அவனது ( மொழிபெயர்ப்பாளரின்) கடமை .   அவ்வாறு  சிருஷ்டிக்கும்  போது,  மூல நூலில்  உள்ள விசயங்களுக்கு  மாறுபடாமல், திரிபுகள் ஏற்படாமல்,  அவற்றிலுள்ள  பாத்திரங்கள், உணர்ச்சிகள், கருத்துகள் முதலியவற்றைச் சிறிதும்  சிதைவுறாதபடி  திரும்பவும் சிருஷ்டிக்கவே  அவன் முயல வேண்டும்.  அதாவது ஒரு இலக்கிய  கலா  சிருஷ்டியின்  மொழி பெயர்ப்பும்,  ஒரு கலா சிருஷ்டியாகத்தான் இருக்க வேண்டும்.   ஒரு  நூலை  மொழிபெயர்க்கும்  போது,  முதலில் அதனை உயிருள்ள  மொழியில், மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு முரணாகாத  முறையில்  மொழிபெயர்க்க முயல வேண்டும்.  அவனது வார்த்தைப்  பிரயோகங்களும் நடை  அமைதியும்  மூல நூலில்  உள்ள பொருளை  நேர்மையுணர்ச்சியுடன்  உணர்த்துவதாக இருக்க வேண்டும்.” என ரகுநாதன்  மொழி பெயர்ப்புக்கான இலக்கணத்தை  வரையறுத்துள்ளார்.

மேலும், “மொழிபெயர்ப்புகளால் மொழிவளமும்,  இலக்கிய வளமும் மேம்படுகின்றன. தேவையை முன்னிட்டுப் புதிய சொல்லாட்சியும் , சொற்சேர்க்கைகளும்  பிறக்கின்றன.  பிற மொழியின் துணை கொண்டு புரிந்து  வந்த  ஒரு விசயத்தைத் தன் மொழியில்  கொண்டுவரும்  முயற்சியால், மொழி வளர்ச்சியில்  புதிய  பாதைகள் திறக்கின்றன.  தனது   மொழியின் கூடியபட்ச வலுவைப் புலப்படுத்தும் சோதனைகள்  தோன்றுகின்றன.   பிற மொழி இலக்கியங்களின் உருவம்,  உள்ளடக்கம், கருத்துச் செறிவு, தத்துவ  விசாரம் முதலியன புதியதொரு மொழியில் இறக்குமதி செய்யப்படுவதால்,  புதிய இலக்கியப்  பரம்பரை  மட்டுமல்லாமல், மக்களிடையே புதிய எண்ணங்கள் தோன்றவும் வழி ஏற்படுகிறது.  இதன் மூலம் பிறநாடுகளுக்கு  நமக்கும் இதயப்  பரிவர்த்தனை எற்படுவதுடன், ஒரு நாட்டினரை இன்னோரு நாட்டினர் புரிந்து கொள்ளவும்  முடிகிறது.”  என மொழிபெயர்ப்பினால்  ஏற்படும்  நன்மைகளை  எடுத்தியம்புகிறார் ரகுநாதன்.

தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர், முற்போக்கு  எழுத்தாளர் சங்கத்தின்  செயலாளர், அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்,  அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சம்மேளனத்தின்  செயற்குழு உறுப்பினர், சாகித்திய அக்காதெமி  ஆலோசனைக் குழு  உறுப்பினர்  மற்றும் நடுவர் குழு  உறுப்பினர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், பாரதி அறக்கட்டளை உறுப்பினர் முதலிய பதவிகளை வகித்தார்.

பாரதி  விழா நிகழ்ச்சிகளிலும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொள்வதற்காக 1956 ஆம் ஆண்டு  ரகுநாதன் இலங்கைக்குச்  சென்று வந்தார்.  மீண்டும் 1983 ஆம் ஆண்டு,  டாக்டர் . எஸ். ராமகிருஷ்ணன், எழுத்தாளர்  இராஜம் கிருஷ்ணன் ஆகியோருடன்  இலங்கைக்குச் சென்று  பல்வேறு  இலக்கிய  நிகழ்ச்சிகளில்  கலந்து  கொண்டார்.

தொ..மு.சி.ரகுநாதன்  தமது  இல்லத்தில் மிகப்பெரும்  நூலகத்தை  உருவாக்கினர்.   தமது இறுதிக் காலத்தில்,  பாரதி மீதுள்ள பற்றால்,  எட்டையபுரம்  பாரதி நூலகத்துக்கு    பல லட்சம் ரூபாய்  மதிப்புள்ள நூல்கலை வழங்கினார்.

“எந்த ஒரு எழுத்தாளனுக்கும்  ஒரு தத்துவ  தரிசனம்  இருக்கத்தான் வேண்டும்.  அதனைத்  தேர்ந்து,  தெளிந்து உருவாக்கிக் கொள்வது  அவனது பொறுப்பு.  எந்தவொரு தத்துவமும் ஒரு  வழிகாட்டிதான்;  விலங்கல்ல.  தத்துவத்தின்  மீது  குருட்டு  பக்தி கொண்டு,  அதனை  விலங்காகத் தரித்துக் கொண்டு, அதற்கு அடிமையாவதைப் போன்ற  கொடுமை  வேறு கிடையாது.   அவ்வாறு  அடிமைப்பட்டுவிட்டால்,  பிறகு  வாய்ப்பாட்டுச்  சூத்திரங்களை  வைத்துக் கொண்டு, எதையும் அளந்து  பார்த்து  ஏமாறும் நிலைதான் ஏற்படும்.  அப்போது அந்தத் தத்துவம்  படைப்பாளிக்குத் தேக்க  நிலையைத்தான் உண்டாக்கும்.    மாறாக,  அவன் அதைக் காலில் கட்டிய விலங்காக்கிக் கொள்ளாமல், கடலில் மிதக்கும் கட்டுமரமாக  மாற்றிக் கொண்டு விட்டால்,  காற்றின் திசையறிந்து  அதைச் செலுத்தவும் கற்றுக் கொண்டு விட்டால்,  பின்னர், அது அவனுக்குப்   பேராக்கத்தை அளிக்கும்.   எந்தக் கடலிலும் அவனால் முன்னேறிச் செல்ல முடியும்”. எனத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு  இலக்கியவாதி எப்படி செயல்பட  வேண்டும் என்பதை  வலியுறுத்தியுள்ளார் ரகுநாதன்.

ரகுநாதன் மொழிபெயர்த்த   ‘ தாய் ’  நாவலுக்கு  1965 ஆம் ஆண்டு  ‘ சோவியத்  நாடு நேரு பரிசு’ வழங்கியது.

‘பாரதி – காலமும் கருத்தும்’ என்னும் ஆய்வு  நூலுக்கு  1983 ஆம் ஆண்டு         ‘ இலக்கியச்  சிந்தனை பரிசு ’  வழங்கப்பட்டது , 1984 ஆம்  ஆண்டு   அதே நூலுக்காக  ‘ சாகித்திய அகாதெமி ’ விருது அளிக்கப்பட்டது.

தஞ்சைத் தமிழ்ப்  பல்கலைக்கழகம்  படைப்பிலக்கியத்துக்கும் திறனாய்வுக்கும்  ரகுநாதன்  ஆற்றிய  பணிக்காக  ‘தமிழன்னை விருது’ வழங்கிச் சிறப்பித்தது.

தமிழக  அரசின்  தமிழ் வளர்ச்சித்துறை  ரகுநாதனின்  மொழிபெயர்ப்பு பணியைப்  பாராட்டி  பாராட்டுப் பத்திரமும் , தலைசிறந்த  எழுத்தாளருக்கான பாராட்டுக்  கேடயமும்  வழங்கியது. 

தமது வாழ்நாள் முழுவதும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுப்பட்ட ரகுநாதன்  31-12-2001 அன்று இயற்கை  எய்தினார்.

“ ரகுநாதனின்  படைப்புகளே அவருக்கான  சரியான  நினைவுச் சின்னங்கள் ” என அவரது படைப்புகள்  குறித்து புகழ்ந்துரைத்துள்ளார் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன்.

“லட்சிய தாகமும், வேகமும் , அன்பும், அடக்கமும்,  உலகளாவிய  பார்வையும், புரட்சிகர சமுதாய  மாற்றங்களில் நாட்டமும்,  புதிய  உலகு, புதிய மனிதன், புதிய கலாச்சாரம் இவற்றைத் தமிழகத்தில்  காண வேண்டும் என்னும் ஆர்வமும் நிரம்பியவர் ரகுநாதன்.” என இலக்கிய விமர்சகர் தி.க.சி. பதிவு செய்துள்ளார்.

“இலக்கியப் போலிகளையும்,  சனாதனிகளையும், நசிவிலக்கியங்களையும் ரகுநாதன்  சாடும் பொழுது, அவரது இலக்கிய  உணர்ச்சியையும், தர்மாவேசத்தையும் தரிசிக்கலாம்.   அண்மைக்காலங்களில்  அத்தகைய  எழுத்துக்கள் மிகக்குறைவே.  எனினும், சக்தி, சாந்தி, தாமரை முதலிய  ஏடுகளில்  காலத்துக்குக் காலம்  அவர் எழுதியிருக்கும்  மதிப்புரைகளையும், விமர்சனங்களையும்  படித்தவர்களுக்கு, அவரின் அப்பழுக்கற்ற  ஆளுமையும்,  அபாரமான இலக்கிய  ஆற்றலும் நன்கு பரிச்சயமானவையாய்   இருக்கும்” என ஈழத்து  மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் கலாநிதி. க. கைலாசபதி  மதிப்பீடு செய்துள்ளார்.

“பெரும்புவி இதனில் வறுமையும்  துயரும்

பிணிகளும் போரும் இருந்திடும் வரையில் 

திரும்பவும் திரும்பவும் பிறப்பேன்- இங்கு

தீமைகள் யாவும் வேரற அறுப்பேன்”.

- என தொ. மு. சி. ரகுநாதன் தமது இலட்சியத் தாகத்தைப் பாடிச் சென்றுள்ளார். 

- பி.தயாளன்

Pin It

"தாங்கொண்ட கொள்கை தழைக்கப் பெரிதுழைப்பார்

தீங்கு வரக்கண்டு சிரித்திடுவார் - யாங்காணோம்

துன்பச் சுமைதாங்கி ! சீவானந்தம் போன்ற

அன்புச் சுமை தாங்கும் ஆள்."

-              பாவேந்தர் பாரதிதாசன்

ஜீவா 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் பட்டன்பிள்ளை என்பவருக்கும், உமையம்மாளுக்கும் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

 Jeevanandamநாடு முழுவதும் பற்றிப் படர்ந்த சுதந்திரப் போராட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தையும் விட்டுவைக்கவில்லை. நாஞ்சில் நாட்டிலும் பல இடங்களிலும் அந்நிய துணிப் புறக்கணிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. பூதப்பாண்டிக்கு அருகில் உள்ள திட்டுவினை என்கிற ஊரில் திரிகூடசுந்தரம் பிள்ளை தலைமையில் நடைபெற்ற அந்நிய துணி புறக்கணிப்புக் கூட்டம் ஜீவாவின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் அந்நியத் துணிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கூட்டத்துக்குச் சென்றிருந்த ஜீவானந்தம்,தான் அணிந்திருந்த அந்நிய துணிகளை தீயில் வீசிவிட்டு கோவணத்துடன் வீடு திரும்பினார். அந்த நாள் முதல் ஜீவா கதர் ஆடையையே அணியலானார். அவரது இறுதிக் காலம் வரையில் ஜீவாவின் உடலைக் கதர் ஆடையே அலங்கரித்தது !

                ஜீவானந்தம் வீட்டை விட்டு வெளியேறிய காலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்திற்கேற்ப 1924 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் தலைமையில் கேரளத்தில் வைதீகக் கோட்டையாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதரத் தொண்டர்களைப் போலவே, ஜீவாவும் இதில் கலந்து கொண்டு பல தொல்லைகளுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இத்தோடு ஜீவாவின் பள்ளிப்படிப்பு முற்று பெற்றது.

 ‘பெண்களும் - விடுதலையும்’ என்னும் பொருளில் ஜீவா உணர்ச்சி கொப்பளிக்க ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு வியந்து போன வ.உ.சி , “அஞ்சுபவர்களும், கெஞ்சுபவர்களும் சுதந்திரத்தைப் பெற முடியாது' ஜீவானந்தம் போன்ற சிலர் இருந்தாலே போதும் நாடு விடுதலை பெற்றுவிடும்” என்று கூறிப் பாராட்டினார்.

காந்தியடிகள் 1927 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜீவா நடத்திக் கொண்டிருந்த ஆசிரமத்துக்கும் வந்தார். ஜீவா தன் கையால் நூற்ற பத்தாயிரம் கெஜம் நூலை அவருக்குப் பரிசாக கொடுத்தார். நூலைப் பெற்றுக் கொண்ட மகாத்மா காந்தி ஜீவாவிடம் உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். "இந்தியா தான் என் சொத்து" என்று பதில் சொன்னார். மகாத்மா காந்தி ,“இல்லை, இல்லை ' நீங்கள் தான் இந்தியாவின் சொத்து” என்று ஜீவாவின் தேச பக்த உணர்வைப் புகழ்ந்து பாராட்டினார்.

                சட்டமறுப்பு இயக்கம் 1932 ஆம் ஆண்டு தீவிரமடைந்தது. காரைக்குடியில் ஜீவா தலைமையில் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. சட்;ட மறுப்பு இயக்க ஆதரவுக் கூட்டங்களில் ஜீவாவின் சொல்வன்மை மக்களை ஆவேசம் கொள்ள வைத்தது. ஜீவா காரைக்குடிக் கூட்டத்தில் 07.01.1932 அன்று சொற்பொழிவாற்றினார். மிரண்டு போன பிரிட்டிஷ் அரசு மறுதினம் முதல் அவர் எங்கும் பேசக் கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டது. ஜீவா, அதை மீறினார். மறு நாள் கோட்டையூரில், தடையை மீறிப் பேசினார். அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே ஜீவாவின் முதல் சிறைவாசம். இந்தச் சிறைவாசம் ஜீவாவின் அரசியல் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சிறையிலிருந்த பொழுது மாவீரன் பகத்சிங்கின் தோழர்களான யோகேஸ்வரதத், குந்தலால் ஆகியோரையும், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியவர்களையும் சந்தித்தார். சோசலிசம், கம்யூனிசம் போன்ற தத்துவங்கள் பற்றியும், சோவியத் யூனியன் பற்றியும் தெரிந்து கொண்டார். பொதுவுடைமை நூல்களையும் படித்தார். காங்கிரஸ்காரனாக 1932 சனவரியில் சிறை புகுந்த ஜீவா, நவம்பரில் பொதுவுடைமைவாதியாக வெளியே வந்தார்.

                தந்தை பெரியார், தோழா.; சிங்காரவேலர், ஜீவா ஆகியோர் பங்கு பெற்ற நாத்திகர்கள் மாநாடு 1933 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை எழும்பூர் ஒயிட்ஸ் மெமோரியில் மண்டபத்தில் நடைபெற்றது.

                பொதுவுடைமை வாதிகள் மீது பிரிட்டிஷ் அரசால் போடப்பட்ட மீரட் சதி வழக்கு மீது, 1933 சனவரி மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பு மிகவும் கொடூரமானது. மனிதாபிமானமற்ற முறையில் அளிக்கப்பட்டது என உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஐன்ஸ்டீன், உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ரோமைன் ரோலன்ட் ஆகியோர்கள் வன்மையாகக் கண்டித்தனர்.

                மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தை பெரியார் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக வெள்ளை ஏகாதிபத்தியம், பெரியாருக்கும், அவரது சகோதரர் கிருஷ்ணசாமிக்கும், மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பிரிட்டிஷ் அரசால் தண்டிக்கப்பட்ட ஜீவா, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து சிறைச் சாலைகளிலும் மாறி மாறி அடைக்கப்பட்டு , அலைக்கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டார்.  தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறைபிடிக்கப்பட்டவர் ஜீவாவாகத் தானிருக்க வெண்டும்.

                நாத்திகப் பிரச்சாரம், குட்டி முதலாளித்துவமும், செவிட்டு அரசும் ஆகிய கட்டுரைகளை 1934 ஆம் ஆண்டு சனவரியில் புரட்சி ஏட்டில் எழுதினார். அக்கட்டுரைகள் ஆட்சேபகரமானவை என்று அரசு நடவடிக்கை எடுத்தது. புரட்சி ஏடு நிறுத்தப்பட்டது.

                சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆரம்பித்து பிரச்சாரம் செய்த பொது பொதுவுடைமைவாதிகள் ஜீவாவை தொடர்பு கொண்டார்கள். காங்கிரஸ்-சோசலிஸ்ட் கட்சியில் ஜீவா சேர்ந்தார்.

                சென்னை மாநிலத் தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பில் 1935 ஆம் ஆண்டு ஜீவா தலைவராகவும், சுந்தரய்யா செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். பின்னர் அச்சங்கத்தின் தலைவரானார் ஜீவா.

                காங்கிரஸ் கட்சியானது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாககுறுதிகளில் ஒன்று, 'குற்ற பரம்பரைச் சட்ட ஒழிப்பு'- என்பதாகும். குற்ற பரம்பரைச் சட்டத்தின்படி முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் யாரும் இரவில் வீட்டில் தங்கக் கூடாது. அவர்களின் ஊரக்குரிய காவல் நிலையத்தில் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டும். மறுத்தால் தண்டனைக்குள்ளாக வேண்டும். காவல் நிலையத்தில் ஆஜரானதற்காக, காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பதிவெட்டில் அவர்கள் ரேகை வைக்க வேண்டும். எனவே, மக்கள் இந்தச் சட்டத்தை ‘ரேகைச் சட்டம்’ என்று அழைத்தனர். மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழும் முக்குலததோரைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இப்படி கொடுமையான சட்டத்தை வெள்ளைக்கார அரசாங்கம் நடைமுறைப் படுத்தயிருந்தது.

காங்கிரஸ் கட்சி 1937 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ரேகைச் சட்டத்தை ரத்து செய்ய மறுத்தது. ரேகைச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜீவா, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி.இராமமூர்த்தி ஆகியவர்கள் காங்கிரஸ் கமிட்டியின் பல கூட்டங்களிலும் வாதாடிப் பார்த்தார்கள். காங்கிரஸ் கமிட்டி சிபாரிசு செய்தும், ராஜாஜி ரத்து செய்ய மறுத்துவிட்டார். இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல மாநாடுகளும், பேரணிகளும் நடத்தப்பட்டன. வெகு மக்களின் போராட்டம் வெடிக்கும் நிலை ஏற்பட்டதால், அடுத்துக் கூடிய சட்டசபைக் கூட்டத்தில் ரேகைச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

1928 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய ரெயில்வே போராட்டத்திற்கு ஜீவா புத்துயிர் ஊட்டினார். திருநெல்வெலி விக்கிரமசிங்கபுரம் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தை 1937 ஆம் ஆண்டு ஜீவா, முன்னின்று நடத்தினார். சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும் தொழிற்சங்கங்களை அமைப்பதிலும், தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் ஜீவா முன்னின்று முனைப்புடன் செயல்பட்டார். மதுரை பசுமலையில் உள்ள மகாலெட்சுமி மில்லில் 1937 ஆம் ஆண்டு தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர்கள் சங்கத்தின் மூலம் போராடினார்கள். ஹார்வி மில் போராட்டத்திற்கு ஜீவா தலைமை தாங்கி நடத்தினார். போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார்.

                ஜீவா அவர்களை ஆசிரியராகக் கொண்டு 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி ஜனசக்தி இதர்; வெளிவந்தது.

                இரண்டாவது உலகயுத்தம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமாயிற்று. அந்த யுத்தத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கடுமையாக எதிர்;க்க வேண்டுமென அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். நாடெங்கும் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் நடைபெற்றன. யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் பிரிட்டிஷ் அரசு 1939 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதி ஜீவாவை கைது செய்தது. இரண்டரை மாதச் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் தமிழகமெங்கும் யுத்த எதிர்ப்புப்; பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் அரசு ஜீவாவை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என நிர்ப்பந்தம் செய்தது. கம்யூனிஸ்ட்கள் மீது அடக்கு முறையை ஏவி விட்டது. ஜீவா தலைமறைவானார்.

                கப்பற்படை எழுச்சிப் போராட்டம் 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது அதற்கு ஆதரவாகக் கம்யூனிஸ்ட் கட்சி அறை கூவல் விடுத்தது. நாடெங்கும் வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர்களின் ஊர்வலத்துக்கு ஜீவா தலைமை தாங்கினார். ஊர்வலம் சென்னை பிரூசி மில்லுக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தது. காவலர் படை ஊர்வலத்தை தடுத்தது. மேற்கொண்டு ஊர்வலம் சென்றால் துப்பாக்கியால் சுடுவோம் என்று எச்சரித்தது. அப்பொது வீராவேசத்துடன் ‘சுடு’ என்று தனது மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்து சென்றது. காவலர் படை பின் வாங்கியது.

ஜீவா தனது தலை மறைவு வாழ்க்கையின் போது சென்னை மாநகரத்தையே அதிர வைத்த மாநகராட்சித் தொழிலாளர்கள் போராட்டம் 18 நாட்கள் நடைபெற்றது. அப்போராட்டத்திற்கு வழிகாட்டியவர் ஜீவா.

                தோழர் பத்மாவதியை; 1947 ஆம் ஆண்டு சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டார் ஜீவா. திருமணத்துக்குப் பின் அவர்களுடைய குடும்ப வாழ்;க்கை சென்னை தாம்பரம் பகுதியில், புறம்போக்கு நிலத்தில் குடிசைவாழ் மக்கள் மத்தியில் நடைபெற்றது. ஜீவா தனது இறுதிக்காலம் வரையில் இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வந்தார்.

                பொதுவுடைமைக் கட்சி 1948 ஆம் ஆண்டு சட்ட விரோதமாக்கப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கட்சியின் ஆணைப்படி ஜீவா தலை மறைவானார். ஜீவா இலங்கைக்கு மாற்றுப் பெயரோடு சென்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாக்டர் விக்கிரம் சிங்காவின் வீட்டில் தங்கினார். தமிழ்ச் சங்கக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றினார். இலங்கை முழுவதும் சென்று தமிழ் இலக்கியம், இந்திய- இலங்கை உறவு குறித்து சொறபொழிவாற்றினார். இலங்கையிலிருந்த பொழுது “சோசலிஸ்ட் தத்துவங்கள்” என்ற நூலை எழுதினார். ஓர் ஆண்டுக்குப் பிறகு தமிழகம் திரும்பினார்.

                கேரளத்தில் இருந்து தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர் வாழும் பகுதியை தமிழ் நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு தலைமறைவு வாழ்க்கையிலிருந்து கொண்டே ஆதரவு திரட்டினார். ஜீவா 1949 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பாதுகாப்புக் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

                சேலம் சிறைச் சாலையில் 15.02.1950 அன்று 22 கம்யூனிஸ்ட்டு கைதிகள் காங்கிரஸ் அரசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுத்ததுமல்லாமல், ஆர்ப்பாட்டமும் நடத்திய ஒரே தமிழகத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா மட்டுமே. மற்ற தலைவர்களும், கட்சிக்காரர்களும் வாய்மூடி மௌனிகளாக வேடிக்கைப் பார்த்து நின்றார்கள்.

                சென்னை சட்டசபைக்கான பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஜீவா, வட சென்னைத் தொகுதியிலிருந்து கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   சட்டமன்ற உறுப்பினாரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜீவா, சட்டமன்றத்தில் தமிழிலேயே பேசினார்.

                சட்டமன்றத்தில் ஜீவா மதுவிலக்குச் சட்டம், தெரிpலாளர்கள் நலச் சட்டம், பண்ணையாட்கள் பாதுகாப்புச் சட்டம், விபச்சாரத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட குரல் கொடுத்தார். மேலும், உயர்நீதி மன்றத்திலும் தமிழ் மொழி தான் கையாளப்பட வேண்டும். கல்வியைப் பொறுத்தவரையில் பல படிகளிலும் தமிழ்மொழியே போதனை மொழியாக இருக்க வேண்டும். தமிழ் தெரிந்தால் போதும், இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர் நீதி மன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப் பேராசிரியர்களாகவும் ஆகலாம் என்ற நிலை உருவாக வேண்டும் என 1955 செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முழங்கினார் ஜீவா!

ஜீவா தனது அரசியல் வாழ்வில் ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலும், காவல்துறை பாதுகாப்பிலும் கழித்தார்.

                ஜீவா, சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராக 1955 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தனது கொள்கை, கோட்பாடு அடிப்படையில் ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 1959 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலக்கியத் திங்கள் இதழாக ‘தாமரை’ ஏடு வெளியிடப்பட்டது. அதன் ஆசிரியராக ஜீவா, இறக்கும்வரை இருந்து செயல்பட்டார.;

                முற்போக்குப் படைப்பாளிகளையும், கலைஞர்களையும் ஒன்றுபடுத்தி தமிழகம் தழுவிய அளவில் 1961 ஆம் ஆண்டு மே மாதம் “தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்” என்ற அமைப்பை ஜீவா ஏற்படுத்தினார்.

                ஜீவா எழுதிய நூல்கள் : 1) பாரதியைப் பற்றி 2) மொழியைப் பற்றி 3) புதுமைப் பெண் 4) மதமும் மனித வாழ்வும் 5) கலையும் இலக்கியமும் 6) சங்க இலக்கியத்தில் சமுதாய காட்சிகள் 7) ஜீவாவின் பாடல்கள் 8) சோசலிஸ்ட் தத்துவங்கள் 9) இலக்கியத்தில் சோசலிச யதார்த்தவாதம் 10) கம்பன் கண்ட தமிழகம் 11) கம்பனும் பாரதியும் 12) இலக்கியச் சுவை 13) பாரதி பாடல்கள் 14) பாரதியின் தத்துவ ஞானம். இதைதவிர்த்து பழமொழிகளையும், வழக்குச் சொல் குறித்த அகராதியையும் தொகுத்து அளித்துள்ளார்.

சமுதாயத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகளையும், சடங்கு சம்பிரதாயங்களையும், கண்மூடித்தனமான மூடப்பழக்க வழக்கங்களையும் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்த்துப் போராடினார். தனது, பாட்டுத் திறத்தாலும் இப்படிப் பாடிச் சாடினர் :-

"சாதிச் சடங்கால் இழிவடைந்தோம்-நிதம்

                சாமிக்கழுது மனமுடைந்தோம்

                வீதிக்கொரு கோயிலைப் படைத்தோம்-வேறு

 வேலையில்லாது பந்தி புரிந்தோம்"

                ஜீவாவுக்கு மார்பு வலி ஏற்பட்டது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்' சிகிச்சைப் பலனின்றி 1963 ஆம் ஆண்டு சனவரி 18 ஆம் நாள் காலமானார். ஜீவாவின் மரணச் செய்தி கேட்டு தமிழகமே பதறியது. ஜீவாவின் உடல் சென்னை துறைமுகத் தொழிலாளர்கள் சங்க அரங்கத்தில் போது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அரசியல் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். ஜீவாவின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மொத்தத்தில், இந்தியாவின் சொத்தாக - தமிழ்ப் பண்பின் வித்தாக, இன்றைக்கும் விளங்குபவர் தோழர் ஜீவா!

- பி.தயாளன்

Pin It