தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற `உப்புக் காய்ச்சும்’ அறப்போராட்டத்தில் இவரும் ஈடுபட்டார்! ஒரு கையில் தமது கைக்குழந்தையுடனும், மறுகையில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்களின் குண்டாந்தடித் தாக்குதலையும் அச்சம் இன்றி எதிர் கொண்டவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

cuddalore anjalaiammal ஆங்கிலேய `நீலன்’ சிலையை அகற்றக் கோரி 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் குடும்பத்தோடு கலந்து கொடு, செல்ல மகள் சின்னஞ்சிறுமி அம்மாக்கண்ணுவுடன் சிறை சென்றார்! சிறுமி அம்மாக்கண்ணு சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம் பெண்கள் சிறையிடடைகப்பட்டார். மகாத்மா காந்தி அப்பொழுது சென்னை வந்தார். சிறையில் அடைக்கப்பட்டவர்களை இராஜாஜியுடன் நேரில் சென்று சந்தித்தார். சிறையில் இருந்த, கடலூர் அஞ்சலையம்மாவையும், மகள் அம்மாக்கண்ணுவையும் காந்தியடிகளிடம் இராஜாஜி அறிமுகம் செய்தார். அப்போது, மிகுந்த மகிழ்ச்சி கொண்ட மகாத்மா, சிறுமி அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அம்மாக்கண்ணுவின் பெயரை, `லீலாவதி’ என்று பெயர் மாற்றம் செய்து, தமது ஆசிரமத்தில் தங்கவைத்துப் பெருமைப்படுத்தினார்.

காந்தியத் தொண்டர்

 கடலூர் அஞ்சலையம்மாள், 1890 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்1921 ஆம் ஆண்டு தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.

 இவரது கணவர் முருகப்பாவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்!

 கடலூர் அஞ்சலையம்மாள் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் அறப்போராட்டத்திலும் பங்கு பெற்றுச் சிறையேகினவர்!

 `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தவுடன் வீரமுடன் அதில் இறங்கியதால் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி முதலிய இடங்களில் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பெண்களை ஈடுபடச் செய்தார். கருவுற்றிருக்கும் போதே சிறையில் அடைக்கப்பட்டார். மகப்பேறு காலத்தில் சில வாரங்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து குழந்தை பிறந்தவுடன் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்றார்.

 சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெண்கள் படையுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் அஞ்சலையம்மாள் `சிறைப்பறவை`யாக வாழ்ந்தார் என்பதே சிறப்புக்குரிய வரலாறு!

 இவர், மிகச் சிறந்த பேச்சாளர். அக்காலத்தில் இவரது பேச்சைச் கேட்பதற்கு கிராமப்புற மக்கள் திரண்டு வந்தனர். இவரது உரை மக்களை வீறுகொண்டு எழச்செய்தது! விடுதலை உணர்வு பெற்றுப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

 கடலூர் அஞ்சலையம்மாள் இல்லத்தில் தந்தை பெரியாரும், மகாத்மா காந்தியும் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்தளவு, அவரது குடும்பம் விடுதலைப் போராட்டத்தின் பாசறையாக விளங்கியது. தமது குடும்பச் சொத்துக்களை விற்று, விடுதலைப் போராட்டத்திற்குச் செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 1929 ஆம் ஆண்டு போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடலூர் சட்டமன்றத்தொகுதிக்கு 1929 முதல் 1952 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ; போட்டியிட்டபோதெல்லாம் வெற்றி பெற்றவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

 வட ஆற்காடு மாவட்டத்தில் புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரரான ஜமதக்னி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஆவார்! பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், வட ஆற்காடு மாவட்டத்தின் செயலாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் விளங்கியவர் ஜமத்க்னி! சிறையிலிருந்த தியாகியான தமது தந்தை முருகப்பாவைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது மகள் லீலாவதி, ஜமத்க்னியையும் சந்தித்தார். அவர்களது சந்திப்பு காதலாக மலர்ந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஜமதக்னியை லீலாவதி மணம் புரிந்து கொண்டார்! ஆம்! தாலிக்குப் பதிலாக அரிவாள் சுத்தியலைக் கொண்ட தங்கத் தகட்டினை அணிந்த திருமணம் புரிந்துகொண்டனர் இப்புரட்சித்தம்பதியினர்! இந்தியதேச விடுதலைப் போராட்டத்தில், கடலூர் அஞ்சலையம்மாள், அவரது கணவர் முருகப்பா அவரது மகள் லீலாவதி, அவரது மருமகன் ஜமத்க்னி ஆகிய நான்கு பேர் ஒரே குடும்பத்திலிருந்து சிறை சென்ற பெருமைக்குரியவர்கள்! இந்திய விடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன அரும்பெரும்தியாகிகள்!

 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 1961 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது பெயர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

Pin It

சிவகங்கை இராசேந்திரன்(16.7.1947 – 27.1.1965)

rasendran hindi agitation

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை இராசேந்திரன், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு முதன் முதல் பலியானார். சொந்த மக்களைக் கொள்வதற்காக இராணுவம் இறக்கப்பட்டதும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும் 1965 ஆம் ஆண்டு தான் தமிழகத்தில் முதன் முதலாய் நடந்தன.

காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான இராசேந்திரன், காவலராய்ப் பணியாற்றியவரின் மகன் தந்தை முத்துக்குமார் சிவகங்கையில் காவலர் முத்துக்குமார் வள்ளிமயில் இருவரின் மகனாக 16.7.1947இல் பிறந்தவர் இராசேந்திரன். உடன் பிறந்தோர், ஆறு பேர் சக்திவேல், மேனகா, தைலம்மாள், சகுந்தலா, சேகர், கீதா.

இந்தி எதிர்ப்பு முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் 3000  பேருக்குமேல் 27.1.1965 காலை சிதம்பரம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். ‘இந்தி அரக்கி’ கொடும் பாவியும் இழுத்துச் செல்லப்பட்டது. ஊர்வலத்தை மரித்த காவல் துறையினர் கற்களை வீசிக் கலைக்க முடியாததால் தடியடி நடத்தினர்.

rasendran hindi agitation 1'தமிழ் வாழ்க' எனும் முழக்கம் கேட்டு ஆந்திரக் காவல் படை ஆத்திரம் கொண்டது. வானத்தில் சுட்டு எச்சரிக்கை செய்யாமல், அநியாயமாய் மாணவர் கூட்டத்தை நேருக்கு நேர் சுட்டது. சிவகங்கை இராசேந்திரனின் நெற்றியில் துப்பாக்கிக்கு குண்டு பாய்ந்தது.

காவல் வெறியாட்டத்தில் மாணவர் இராசேந்திரன் பலியான செய்தி தமிழக மாணவர் உலகத்தைத் துடிக்க வைத்தது. மாணவருலகம் ஏந்தும் தீப்பந்தமானார் சிவகங்கை இராசேந்திரன். மாணவர்களால் எழுப்பப்பட்ட மாணவர் இராசேந்திரன் சிலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டு, இன்றும் திசைகாட்டிக் கொண்டுள்ளது.

எத்தனை நாள் இந்திப்போர்?

எத்தனை நாள் எத்தனை ஆண்(டு)

   எத்தனைப் போர் எத்தனைப் பேர்

         எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?

எத்தனைப்பேச்(சு) எத்தனைத்தாள்?

     எத்தனைப்பா(டு) எத்தனைப் பாட்(டு)

           எத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?

எத்தனைநாள் நாம் பொறுப்ப(து)

     எத்தனைப் பேர் நாமிறப்ப(து)

           எத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?

ஒத்திணையும் எண்ணமிலை;

      ஒன்றிரண்டு பார்த்துவிட

              ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே! 

                                                  - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

                                                        (கனிச்சாறு – 1, பக்கம் – 108)

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை

(தொடரும்...)

Pin It

தேடிவரும் கவிஞர்களின் தேவை அறிந்து வாரி வழங்கும் பெருங்குணம் படைத்தவர், ‘கொடை கொடுத்த வித்தகர்’ எனப் போற்றப்பட்டவர்! காரைக்காலில் வாழ்ந்தவர்! தமிழ், அரபு, மலாய் முதலிய மூன்று மொழிகளிலும் திறம் பெற்றுத் திகழ்ந்தவர்! அவர்தான் ‘சாயபு மரைக்காயர்’ எனும் பெயருடைய பெருந்தகை! தமிழ்க் கவித்திறத்தால் ‘அமுதகவி’ என அழைக்கப் பெற்றார்! ‘கலைவளப் புலவர் போற்றும் காரையில் நிலைவளச் செல்வன், நிறைவளக் கல்வியின் அமுதகவி சாயபு மரைக்காயர்’ எனப் புகழ்ப் பெற்றார்.

பொது மக்களாலும், புலவர் பெருமக்களாலும் மதித்துப் போற்றப்பட்ட அமுதகவி சாயபு மரைக்காயர், இசுலாம் மார்க்கக் கல்வியை ஈடுபாட்டுடன் கற்றார். அமுதத் தமிழ் மொழியில் அப்பெருமகனார் எழுதிய கீர்த்தனைப் பாடல்கள் புகழ் வாய்ந்தவை. தமிழின் அனைத்து வகை யாப்புகளிலும் பாடல்களை இயற்றி அளித்துள்ளார். மேலும், தமிழில் வழக்கொழிந்த, ‘முடுகு வெண்பா’, ‘சவலை வெண்பா’ போன்ற யாப்புகளிலும் பாடல்களை எழுதிப் பரவசம் எய்தியவர்!

இவரது படைப்புகள் அனைத்தும் பாடல் பனுவல்களே! இலக்கணப் புலமையும், இசை நுட்பமும், இசுலாம் மார்க்கத்திடம் கொண்டிருந்த ஈடுபாடும், எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்மொழி மீது கொண்டிருந்த ஈடிணையற்ற பற்றும் காரணமாக விளங்கின.

அமுதகவி சாயபுமரைக்காயரின் பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டவை. குறைந்த படிப்பறிவு கொண்டோரும் பொருளுணர்ந்து கொள்ளும் அருமையும் பெற்றுத் திகழ்வன. “கவிதை, கற்றவரை மட்டும் களிப்படையச் செய்வதால், நோக்கமும், ஆக்கமும் முழுமை பெறுவதில்லை; மற்றவரையும் அதன் மையக் கருத்து மகிழ்ச்சி அடையச் செய்கிறபோதுதான் கவியின் குறிக்கோள் நிறைவு பெறுகிறது” - எனும் கோட்பாட்டின்படி, சாயபு மரைக்காயரின் பாடல்கள் அனைத்து மனங்களையும் பற்றிக் கொள்ளும் தன்மை படைத்தவை!

‘மனோன்மணிக்கும்மி’, ‘உபதேசக் கீர்த்தனம்’, ‘மும்மணிமாலை’, ‘காரை மஸ்தான் காரணக் கீர்த்தனப்பா’, முதலிய நூல்கள் அமுதகவிராயரின் தமிழாற்றலையும், இறையுணர்வையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. அவரது பாடல்கள் சந்தச் சீர்மையும், சொற்களின் கூர்மையும், எந்த மனத்தையும் வயப்படுத்தும் ஆற்றலையும் பெற்றவையாகும். அவரது கவிதைகளை ஒருமுறை படித்தால் போதும் அப்படியே கல் எழுத்தாய் உள்ளத்தில் பதிவாகிவிடும்.

சித்த மருத்துவம், யுனானி மருத்துவம் முதலியவற்றில் சிறந்து விளங்கினார் அமுதகவி. மானுட நேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகத் தம் மருத்துவ திறத்தைப் பயன்படுத்தினார். மருத்துவத் துறையின் பல நுட்பங்களையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்திட, பல நூல்களை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரவழைத்துப் படித்து தமது மருத்துவ அறிவை நாளும் விரிவுபடுத்திக் கொண்டேயிருந்தார். எளிய வைத்திய முறையால், கடுமையான நோய்களையும் போக்கிடும் இயல்புடையவர்.

“புதுச்சேரி மாநிலத்தின் இரண்டாவது பெரு நகரம் காரைக்கால்; காரைச் செடிகள் அடர்ந்த காடாக இருந்ததாலும், உப்பளங்கள் நிறைந்திருந்ததாலும், ‘காரைக்காயல்’ எனப் பெயர் பெற்றிருந்த இப்பேரூர், காலப்போக்கில் மருவி, `காரைக்கால்’ என வழங்கப்பெற்றதாக’’- பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர் கூறுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் நூற்றாண்டிலும் காரைக்காலில் வாழ்ந்த இசுலாமியப் புலவர்கள், தமிழ்மொழிக்குப் புதிய புதிய இலக்கியச் செல்வங்களை வழங்கி உள்ளனர்.

“காரைக்காலில் வாழ்ந்த இசுலாமிய தமிழ்ப் புலவர்களுள் முதன்மையானவராக அமுதகவி சாயபு மரைக்காயரை குறிப்பிட்டுக் கூறலாம்”- என்பார் ‘கலைமாமணி’ கவி கா.மு. ஷெரீப். இசுலாமிய நெறிமுறைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு விளங்கிய லெப்பை மரைக்காயருக்கும் - ஆயிஷா அம்மையாருக்கும் மகனாக, 1873-ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்தார். மார்க்கக் கல்வியை வேலூரில் தங்கிக் கற்றார். புலவர் முகமது மஸ்தானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றார். சிங்கப்பூர் சென்று சிலகாலம் வணிகராக வாழ்ந்தார். அங்கு மலாய் மொழியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றார்.

தமிழிசையின் புகழ் பரவ இருபதாம் நூற்றாண்டின் உதய காலத்தில் அதற்குத் தமது கீர்த்தனைப் பாடல்களால் ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி பேருதவி புரிந்தவர் அமுதகவி சாயபு மரைக்காயர்.

அமுதகவி சாயபு மரைக்காயர் தமிழ்மொழிக்கும், இசுலாம் நெறிக்கும் பெருந்தொண்டாற்றித் தமது எழுபத்திரண்டாம் வயதில் 1950-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘அமுதகவி’யின் தமிழ்ப் பணி சிறப்பிடம் பெற்றுத் திகழும்.

- பி.தயாளன்

Pin It