தொல்காப்பியம்:

 தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக்கொண்டது. தொல்காப்பியம் தமிழ்மொழிக்கான இலக்கணநூல் எனினும், இந்நூல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வுக்கான இலக்கண நூலாகவும் திகழ்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலைப் பேசும் இதன் பொருளதிகாரம் கீழ்க்கண்ட ஒன்பது இயல்களைக்கொண்டது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியன அவை. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு அறிவியல் அடிப்படையை வழங்கிய தொல்கபிலரின் எண்ணியச்சிந்தனையைக் கொண்டதாக தொல்காப்பியம் விளங்குகிறது. இவ்வுலகத்திற்கான அடிப்படையாக விளங்கும் முதன்மைப்பொருட்கள் இடம், காலம் ஆகிய இரண்டும்தான் என்பதை விளக்குகிறது இதன் பொருளதிகாரத்தின் நாலாவது பாடல்.

kaniyan balan book on tamil history “முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

 இயல்புஎன மொழிப இயல்பு உணர்ந்தோரே” (அகத்திணையியல் - 4).

நவீன அறிவியல் இதனை வெளி, காலம்(TIME&SPACE) எனக்கூறுகிறது. எண்ணியச் சிந்தனைப்படி ‘வெளி’ என்பதுதான் ‘இடம்’ என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 507ஆம் பாடல், கரும நிகழ்ச்சியை இடம் எனக் கூறுகிறது.

 ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்

 கரும நிகழ்ச்சி இடம்என மொழிப (செய்யுளியல் – 197)

 ஒரு நிகழ்ச்சி நடப்பதை இடம் எனக்கூறும் தொல்காப்பியரின் அடுத்த பாடல்(செய்யுளியல்-18), நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது காலம் எனக்கூறுகிறது. ஆகவே இடம், காலம் ஆகிய இரண்டும் கரும நிகழ்வுகளுக்கு அடிப்படை என்பது தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்தியலாக இருந்துள்ளது. அதனால்தான் அவையிரண்டும் உலகத்திற்கான முதற்பொருளாக தொல்காப்பியரால் சொல்லப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 244ஆம் பாடல் நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் காலமும் இல்லை என்கிறது.

 இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

 அவையில் காலம் இன்மை யான (பொருளியல் – 52; கடைசிப்பாடல்)

 நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார். ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம் எனப்படும் வெளி, காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாக ஆகிறது. இவைகளின் மூலம் இவரது கருத்துக்கள், வெளி - காலம் குறித்த நவீனச்சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை குறித்து முன்பே முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 உலகாயதத்தின் ஐம்பூதக்கருத்துக்களை விளக்குவதாக பொருளதிகாரத்தின் 637ஆம் பாடல் இருக்கிறது.

 நிலம் தீ நீர் வளி விசும் போடு ஐந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும் (மரபியல் – 91)

 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு எனும் வெளி ஆகிய ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். உயிரினங்களின் தோற்றத்துக்கான அறிவியல் அடிப்படையாக விளங்கும் பரிணாமக்கொள்கையைக் குறிப்பதாக பொருளதிகாரத்தின் 575ஆம் பாடல் இருக்கிறது.

 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

 இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

 மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபியல் – 27)

 தொடுதல் உணர்வு மட்டும் கொண்டவை ஓரறிவு உயிர் எனவும் அதனுடன் நாக்குச்சுவை கொண்டவை ஈரறிவு உயிர் எனவும், அத்துடன் மூக்கால் நுகரும் தன்மை கொண்டவை மூவறிவு உயிர் எனவும், இவையோடு கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டவை நான்கறிவு உயிர் எனவும், இந்த நான்குடன் செவியால் கேட்கும் திறன் கொண்டவை ஐந்தறிவு உயிர் எனவும், இந்த ஐந்துடன் மனம் கொண்டு அறியும் திறன் கொண்டவை ஆறறிவு உயிர் எனவும் இப்பாடலில் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.

 எல்லா உயிர்களும் இன்பத்தை அடைவதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் இன்பவியல் கோட்பாட்டை பொருளதிகாரத்தின் 219ஆம் பாடல் பேசுகிறது.

 எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

 தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். (பொருளியல் – 27)

அறம் சார்ந்த வாழ்வு:

 தனது பொருளதிகாரத்தின் 214ஆம் பாடலில் இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்.

 அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே

 வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).

 பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்தமுறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

 காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் – 51)

 இப்பாடல் துறவறம் குறித்தோ வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்தமுறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப்படைப்புகளில் இடம்பெறுவதைக்கூட ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத்தெரிவிக்கிறார். இலக்கியப்படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் அறத்தைக்கடைப்பிடித்தல் என்பது மிகமிக முக்கியமானதாக பழந்தமிழர்களால் கருதப்பட்டது எனலாம். ஆனால் வட இந்தியர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்விட வீடு என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். ஆனால் பழந்தமிழர்கள் வீடு என்பது குறித்தோ, இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தோ கவலைப்படவில்லை. அவர்கள் இந்த உலக வாழக்கையின் அனைத்து நடைமுறைகளிலும் அறத்தைக்கடைப்பிடித்து, பொருள் சேர்த்து, இன்பம் நுகர்ந்து வாழ்வதற்கே முக்கியத்துவம் தந்தனர்.

இன்பவியல் கோட்பாடு:

            தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,

            எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

            தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

            என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்

            தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

            தாமரைக் கண்ணா னுலகு      -காமத்துப்பால், 1103.

            எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(1).

ஐம்பூதம்:

            தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. புறநானூற்றின் 2ஆம் பாடல்,

 மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்

 விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும்

 தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல

 என ஐம்பெரும்பூதத்து இயற்கை என்ற, இயல்புக்கோட்பாட்டை விளக்கும். ஐம்பெரும்பூதங்களை ஆய்வு செய்ததால் பூதவாதம் எனவும், உலகின் தோற்றத்தைப்பற்றி ஆராய்ந்ததால் உலகாய்தம் எனவும் இக்கோட்பாடு அழைக்கப்படுகிறது. உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர்கள்; உணவால் ஆனதுதான் உடம்பு; நிலத்தொடு நீர் சேருவதுதான் உணவு; ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்கள் உடலையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர் என்கிற பொருள்தரும் பாடலை குடபுலவியனார் என்ற புலவர் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனிடம் கூறி அவனை நிலமும் நீரும் இணையத் தேவையான ஏரி, குளம், குட்டைகளை உருவாக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்

 உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

 நீரும் நிலனும் புணரியோர் ஈன்று

 உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” (புறம்:18, வரி: 19-23)

 இப்பாடலின் கருத்துக்கள் எண்ணியச் சிந்தனையின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிய ஐம்பூதக்கோட்பாட்டின்படி அமைந்தவைகள் ஆகும். திருமூலரும் உடம்பே உயிருக்கு அடிப்படை என்ற பொருளில் ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ எனக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்களுக்கு மூல ஊற்றாய் அமைந்த தந்திர மரபுக்குரியவை எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

 ஐம்பெரும்பூதங்களின் ஒன்றிணைப்பால் உருவாகும் வேதியல் மாற்றத்தால் தோன்றுவதுதான் உயிர் என்பதே பூதவாதிகளின் கருத்தாகும். சாரக சம்கிதை அறிவுப்புலங்களால் அறியப்படும் ஐம்பூதங்களை, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என வரிசைப்படுத்தும். இவ்வரிசை முறை உலகத்தோற்றம் குறித்த தமிழியக்கோட்பாடாகும். பரிபாடலின் 2ஆம் பாடல்,

 “கருவளர்வானத் திசையுடன் தோன்றி

 உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

 உந்துவெளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்

 செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையில்

 ஊண்முறை வெள்ள் மூழ்கி ஆர்தருபு

 மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்

 உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” -

என அண்டவெளியின் தோற்றம் குறித்துப் பேசுகிறது. இப்பாடல் சங்கம் மருவிய காலத்துக்குரிய பாடலாகும். “அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் கரு நிலையில் இருந்த போது பெரிய வெடியோசையுடன் அவ்வணுக்கரு வெடித்துச் சிதறியது. அதுவே முதல் ஊழி எனப்படும். அந்நிகழ்வே வெளியின் தோற்றத்துக்குக் காரணமாக ஆகியது. அதன்பின் பொருள்களை இயக்கும் காற்று தோன்றி கிளர்ந்து வீசிய இரண்டாம் பூதத்து ஊழியும், அடுத்து சிவந்த ‘தீ’ சுடர் வீசி எறிந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அடுத்து பனியோடு குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும் அடுத்தடுத்துத்தோன்றின. இறுதியாக அந்நான்கு பூதங்களின் ஊடே வெள்ளத்தே முழுகிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள், மீளவும் ஆற்றல் அதிகரித்துச் செறிந்து திரண்டு, முக்கூறிய நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்து ஊழியும் எனக்கூறப்பட்ட ஊழிகள் தோன்றின” இதுவே இப்பாடலின் பொருளாகும். இதன்படி வரிசைமுறை என்பது பெருவெடிப்பு, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என அமைகிறது. சரக சம்கிதை கூறும் இவ்வரிசைமுறை தொன்மைக்கால எண்ணியத்திற்கு உரியதாகும். எண்ணிய மெய்யியலின் ஒரு கூறாகவே மருத்துவம் தோன்றி வளர்ந்தது எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(2). மருத்துவம் மட்டுமின்றி பிற அறிவியல் துறைகளும் எண்ணியக் கருத்துக்களை அடித்தளமாக் கொண்டே பழந்தமிழகத்தில் உருவாகி வளர்ந்தன.

மெய்ப்பாடுகள்:

 தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் மெய்ப்பாட்டியலில் உள்ள சில மெய்ப்பாடுகள் குறித்தும், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றில் ‘நூல்’ குறித்து சொல்லப்பட்டுள்ளவை குறித்தும் இங்கு காண்போம். இவ்விடயங்கள் தொல்காப்பியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் எனலாம். மெய்ப்பாடுகள் என்பன உடல்வழியாக வெளிப்படும் மன உணர்வுகள் ஆகும். அடிப்படை மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு மெய்ப்பாடுகளைக்கொண்டவை என்பதால் மொத்தம் 32 மெய்ப்பாடுகள் உள்ளன. அவை

1.நகை : எள்ளல், இளமை, பேதமை, மடன்.

2.அழுகை : இழிவு, இழவு, அசைவு, வறுமை.

3.இளிவரல்: மூப்பு, பிணி, வருத்தம், மென்மை.

4.மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.

5.அச்சம் : அணங்கு, விலங்கு, கள்வர், இறை.

6.பெருமிதம்: கல்வி, தறுகண், புகழ்மை, கொடை.

7.வெகுளி : உறுப்பறை, குடிகோள், அலை, கொலை.

8.உவகை : செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு.

 நகை என்ற மெய்ப்பாடு நான்கு வகையில் வெளிப்படும். பிறரை இகழும்போது தோன்றுவது எள்ளல், இளமையாக இருந்து முதியவரைக் கண்டு நகைப்பது இளமை, ஒருவரின் அறிவின்மை கண்டு நகைப்பது பேதமை, ஒன்றை உள்ளவாறு உணராமல் தவறாக உணரும் மடமை கண்டு நகைப்பது மடன். இவ்விதமாக எட்டு வகை மெய்ப்பாடுகளுக்கும் மேலே சொல்லப்பட்ட 32 மெய்ப்பாடுகளும் தோன்றும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 245 முதல் 255 வரையான பாடல்கள் (மெய்ப்பாட்டியல்:1-11) இவை குறித்துப் பேசுகின்றன. அதன் 256ஆம் பாடல் (மெய்ப்பாட்டியல்-12) இந்த 32 முதன்மை மெய்ப்பாடுகள் போக மீதி உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துப்பேசுகிறது. முதலில் உள்ள 32 முதன்மை மெய்ப்பாடுகள் உடம்பின் வழியாக உணர்வை வெளிப்படுத்துபவை. துணைமை மெய்ப்பாடுகள் என்பன மன அளவில் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.

 சான்றாக ‘உடைமை’ என்ற முதல் துணைமை மெய்ப்பாடு என்பது ஏதாவது ஒரு பொருளை உடமையாகப் பெறும்பொழுது மனதில் தோன்றும் மகிழ்ச்சி என்ற மன உணர்வைக் குறிக்கும். இப்படியாக உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துத் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆகவே மொத்தம் 64 மெய்ப்பாடுகள் உள்ளன எனலாம். இந்த மெய்ப்பாடுகள் குறித்த கருத்துக்கள் தனது முன்னோர்களால் சொல்லப்பட்டவை என்பதையும் தொல்காப்பியர் ‘என்ப, மொழிப’ என்பதன் மூலம் கூறுகிறார். வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ இவைகளுக்கு இணையான மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளது. அவை இரசங்கள் எனப்படுகின்றன. ஆனால் இந்த பரத நாட்டிய சாத்திரம் தமிழ் மூலத்திலிருந்து தோன்றிய ஒரு வழி நூல் ஆகும்(3). ஆகவே இந்த மெய்ப்பாடுகள் அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குச் சொந்தமானவை.

 தலைவி, தலைவனைக்காண்பது முதல் கூடி மகிழ்வது வரையும் அதன் பின்னரும் ஆன உணர்வு நிலைகள், 24 மெய்ப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, பொருளதிகாரத்தின் 257 – 262 வரையான பாடல்களில்(மெய்ப்பாட்டியல்:13-18) சொல்லப்பட்டுள்ளன. இளம்பூரணர் தலைவிக்குரிய இந்த 24 மெய்ப்பாடுகளையும் ‘அவத்தை’ எனக்குறிப்பிடுகிறார். இவை போக பெருந்திணைக்குரிய 20 மெய்ப்பாடுகள் பொருளதிகாரத்தின் 266ஆம் (மெய்ப்பாட்டியல்-22) பாடலில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே இந்த மெய்ப்பாடுகள் குறித்த விளக்கம், பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை நுட்பமான முறையில் வகைப்படுத்தி, தொகுத்து வைத்தவர்கள் என்பதையும், தொல்காப்பியரின் நுண்மான் நுழைபுலச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

நூல்:

 பொருளதிகாரத்தின் எட்டாவது இயல் செய்யுளியல் ஆகும். இந்த செய்யுளியலில் ‘மாத்திரை’ முதல் ‘இழைபு’ வரையான 34 செய்யுள் உறுப்புகள் குறித்து பொருளதிகாரத்தின் 310ஆம் பாடல்(செய்யுளியல்-1) பேசுகிறது. அதன்பின் அவைகளுக்கான விளக்கம் அச்செய்யுளியல் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 34 உறுப்புகளில் ‘அளவியல்’ என்ற உறுப்பு பற்றிய விளக்கத்தில் ‘நூல்’ குறித்துப் பேசுகிறார் தொல்காப்பியர். நூல் குறித்த விளக்கத்தை பொருளதிகாரத்தின் 471ஆம் பாடல் தருகிறது.

 நூல்எனப் படுவது நுவலுங் காலை

 முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

 தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

 உள்நின்று அகன்ற உரையோடு பொருந்தி

 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே (செய்யுளியல்-162).

 நூல் என்பதில் தொடக்கமும் முடிவும் மாறுபாடில்லாமல் தெளிவாக இருக்கும்; தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும்; தன்னுள் அடங்கிய தெளிவான, விரிவான உரையைப் பெற்றிருக்கும். இறுதியாக நூல் என்பது அந்நூலின் தன்மைக்கு ஏற்ப நுட்பமான பொருளை உணர்த்தும் பண்பைக்கொண்டது. இவை நூல் குறித்து தொல்காப்பியர் கூறுவதாகும். நூல், உரை, பிசி எனும் விடுகதை, பழமொழி எனும் முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி ஆகிய ஆறு இலக்கிய வகைகளுக்கும் அடி வரையரை கிடையாது என்பதை அதற்கு முந்தைய பாடலில்(செய்யுளியல்-161) தொல்காப்பியர் கூறுகிறார்.

 இலக்கிய வகைகளுள் ஒன்றான நூல் எனப்படுவது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளைக்கொண்டது. பொருள் எளிதில் அறியும் வகையில் யாப்பியல் நெறியில் அமைக்கப்படுவது சூத்திரம் ஆகும். ஒரே இனமாக வரும் பொருளை ஒருசேர வைத்துப் புனையப்படுவது ஓத்து(இயல்) ஆகும். ஒரு பொருள் நெறி என்றில்லாமல் பலவகைப்பட்டு விரவி வரும் பொருள்களை எல்லாம் தொகுத்துப் பொதுவாக அமைப்பது படலம் ஆகும். சூத்திரத்தின் ஒரு பொருளும், ஓத்தின் ஒரே இனப்பொருளும், படலத்தின் விரவிய பலபொருள்களும் சேர்த்துத் தொகுத்து அமைப்பது பிண்டம் ஆகும். இவை பொருளதிகாரத்தின் 472-477 வரையான 6 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நூல் என்பது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளையும் கொண்டதாக அமையும் எனலாம்.

 செய்யுளியலில் நூல் என்பது நான்கு வகையான பாகுபாடுகளைக் கொண்டது எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், பொருளதிகாரத்தின் மரபியலில் முதல் நூல், வழிநூல் என இருவகையான நூல்கள் உண்டு என்கிறார். வினைகள் நீங்கிய அறிவு முதிர்ந்த முனைவனால் ஆக்கப்படுவது முதல்நூல் ஆகும். முதல் நூலை அடிப்படையாகக்கொண்டு அதனைப்பின்பற்றி ஆக்கப்படுவது வழி நூல் ஆகும். வழி நூல் தொகுத்து அமைத்தல், விரித்துக்கூறுதல், தொகுத்தும், விரித்தும் அமைத்தல், மொழிபெயர்த்தல் ஆகிய நான்கு நிலைகளில் அமையும். பத்துவகைக் குற்றங்களும் இல்லாது, 32 வகை உத்திகளும் பெற்று, உண்மைப்பொருள் விளங்கக் கூறுவதே நூல் ஆகும். பொருளதிகாரத்தின் 643-649 வரையான பாடல்கள்(மரபியல்:95-99) இவை குறித்துப் பேசுகின்றன. இலக்கண நூலின் அமைப்பு, நூற்பாவின் இலக்கணம், காண்டிகை உரை, உரைநூல் ஆகியன குறித்துப் பொருளதிகாரத்தின் 648-654 வரையான 7 பாடல்கள்(மரபியல்:100-106) ஓரளவு விரிவாகப் பேசுகின்றன.

 பொருளதிகாரத்தின் 658ஆம் பாடல்(மரபியல்-110), நூலில் ஏற்படும் பத்து வகையான குற்றங்கள் குறித்துப் பேசுகிறது. 1.கூறியது கூறல், 2.மாறுகொளக்கூறுதல், 3.குன்றக்கூறல், 4.மிகைபடக்கூறல், 5.பொருள் இல் மொழிதல், 6.பொருள் மயங்கக்கூறல், 7.கேட்போருக்கு இனிமை தராதவகையில் கூறல், 8.பழிமொழியால் இழுக்கு வருமாறு கூறல், 9.தொன்மையைவிட்டு விலகி தானே ஒன்றைக்கூறல், 10.படிப்போருக்கு விளங்காத வகையில் கூறல் ஆகியன அந்த பத்து வகையான குற்றங்கள் ஆகும். இந்தப்பத்து வகையான குற்றங்களும் இல்லாமல் படைக்கப்படும் படைப்புதான் நூல் என்ற தகுதியைப்பெறும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர்.

 நூலை எழுதும்பொழுது கையாள வேண்டிய உத்திகள் என்பன 32 எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 660ஆம் பாடல்(மரபியல்-112), அந்த 32 உத்திகளையும் வரிசைப்படுத்திக்கூறுகிறது. அவை ‘நுதலியது அறிதல்’ முதல் ‘உய்த்துக்கொண்டு உணர்த்தல்’ வரை 32 உத்திகள் ஆகும். நுதலியது அறிதல் என்பது ‘சொல்லக்கூடிய கருத்தைப் பிறர் தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு கூறுதல்’ ஆகும். அதுபோன்றே, உய்த்துக்கொண்டு உணர்த்தல் என்பது ‘தெளிவில்லாத கருத்தை உய்த்து உணர்ந்து பொருந்தும் வகையில் விளக்கிக்கூறுதல்’ ஆகும். இப்படியாக நூல் எழுதுவதற்கான 32 உத்திகளையும் தொல்காப்பியர் பட்டியலிட்டுள்ளார். இந்த 32 உத்திகளையும் பின்பற்றி, முன்பு கூறிய 10 குற்றங்களையும் நீக்கிப் படைக்கப்படும் படைப்பு மட்டுமே நூல் என்ற தகுதியைப் பெறும். இந்த விலக்கப்படவேண்டிய 10 குற்றங்களும், பின்பற்றப்பட வேண்டிய 32 உத்திகளும் தமது முன்னோர்கள் கூறியிருப்பவை என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இவை அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியவை என ஆகிறது.

 தொல்காப்பியரால் நூலுக்குரிய இலக்கணமாகக் காட்டப்படும் 32 உத்திகள், பத்துவகைக்குற்றங்கள், சூத்திரம், காண்டிகை உரை, உரைநூல் முதலியன தருக்கவியலுக்குரியன எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். இந்த உத்திகள், குற்றங்கள் முதலியன குறித்து வடமொழியில் உள்ள சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் பேசுகிறது. அவற்றை அது பேச்சுக்கலைக்குரியதாகக் கூறுகிறது. ஆனால் அந்த மருத்துவ நூலும் தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல்தான் ஆகும்(4).

 பொருள்முதல் சிந்தனையாளர்கள் மூல எண்ணியத்திற்கும்(ORIGINAL SAMKYA), தொடக்ககால சிறப்பியத்திற்கும்(வைசேடிகம்) உரியன எனவும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை எனவும் எவற்றைக் குறித்துள்ளனரோ அவற்றை எல்லாம் தொல்காப்பியர் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறார் எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். மேலும் படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION), ஐம்பூதக்கோட்பாடு(THEORY OF UNIVERSE), அளவையியல் கோட்பாடு(THEORY OF REASONING AND LOGIC), காரணகாரியக் கோட்பாடு(THEORY OF CAUSE AND EFFECT), இன்பியல் கோட்பாடு(THEORY OF HEDONISM) ஆகிய அறிவியல் துறைகளை தொல்காப்பியர் குறிப்பிடுவதோடு, அவை தமது முன்னோர்கள் கூறியுள்ளவை என்பதையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(5). மேலே சொல்லப்பட்டவைகளின் மூலம், தொல்காப்பியர் ஒரு தத்துவ அறிஞரும், அறிவியல் மேதையும் ஆவார் என்பதோடு அவர் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் ஆகிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் சிற்பிகளில் ஒருவராக அவரை ஆக்குகிறது.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை:

 வட இந்தியாவில் 16 சனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், எண்ணியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட எண்ணியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் கி.மு. 1000க்கு முன்பே கிரேக்க நகர அரசுகள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான குறியீடுகள் என்ற ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1500 வாக்கில் நடை பெற்றுவிட்டது எனலாம். அப்பண்பாட்டுப் புரட்சி அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.

            பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் எண்ணியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணிய அடிப்படையிலான சிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும்.

 ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியம் எனப்படுகிற எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்துத் தற்காலத்திற்குரிய, ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் எனலாம்.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை - வேறுபாடுகள்:

1.தமிழிய சிந்தனையின்படி பூதவாதம் எனப்படும் உலகாயதத்தில் நீர், நிலம், தீ. வளி, வெளி ஆகிய ஐந்து பூதங்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனையில் வெளி இல்லாத நான்கு பூதங்களே உண்டு.

2.எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் தமிழியச்சிந்தனைப்படி 24 கூறுகள் மட்டுமே உண்டு. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி 24 கூறுகளுடன் புருடன் என்பது சேர்க்கப்பட்டு மொத்தம் 25 கூறுகள் உண்டு.

3.சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்தில் தமிழியச்சிந்தனைப்படி ஏழு பொருள்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனைப்படி ‘இன்மை’ இல்லாமல் ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.

4.தமிழ் மரபு மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டதாக உள்ளது. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி இந்த மூன்றுடன் வீடு என்பது சேர்க்கப்பட்டு மனித வாழ்வு நான்கு அடிப்படைகளைக்கொண்டதாக உள்ளது.

5.தொழில் முதல்நிலை எனப்படும் காரியாபினிவிருத்தி என்பது ஒரு தொழிலைச்செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு ஆகும். இது தமிழியச்சிந்தனைப்படி 8 வகைகளைக்கொண்டதாக உள்ளது. வட இந்தியச் சிந்தனைப்படி இந்த 8 வகைகளோடு முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து 10 வகைகளைக்கொண்டதாக அது உள்ளது.

6.தந்திர உத்திகள் என்பவை தமிழியச்சிந்தனைப்படி நூலுக்கான உத்திகளாக 32 உத்திகளைக் கொண்டுள்ளன. வட இந்தியச்சிந்தனைப்படி இவை பேச்சுக்கலைக்கான உத்திகளாக 36 உத்திகளைக் கொண்டுள்ளன.

 தமிழியச்சிந்தனைகளில் இருந்து தான் பெரும்பாலான அறிவியல், பொருள் முதல்வாத வட இந்தியச் சிந்தனைகள் உருவாகின என்பது முன்பே பலவிதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் கூட தமிழியச்சிந்தனைகளின் அறிவியல், தத்துவார்த்த அடிப்படைகளை ஆழ்ந்து புரிந்துகொள்ளாததன் விளைவேயாகும் என்பதும் முன்பே சொல்லப் பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் தமிழியச் சிந்தனைகளின் அறிவியல் அடிப்படையிலான பொருள் முதல்வாத மெய்யியலை உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

பார்வை:

1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:34-36

  1. “ “ “ பக்: 41-42.
  2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: பக்: 839, 840.
  3. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:145.

5.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 33, 34.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

தொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு

 தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர் வடமொழியில் வைசேடிகம் எனப்படும் சிறப்பியத்தைத் தோற்றுவித்தவர். வைசேடிகச் சூத்திரம் என்ற வடமொழிநூல் இவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவரது சிறப்பியம், அணுவியம் குறித்துப்பேசும், “அகத்திய தருக்க சூத்திரம்” என்ற 20 இரு அடி பாக்களைக்கொண்ட, தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுநூல் கிடைத்துள்ளது. இதனைத் தமிழ் மெய்யியலுக்குக் கிடைத்த ஒரு அரிய செல்வம் எனலாம். தமிழில் நிறைய மெய்யியல் நூல்கள் இருந்துள்ளன என்பதற்கு இது ஒரு சான்றாகத் திகழ்கிறது.

இந்திய வரலாற்றில் பகவத் கீதை - பிரேம்நாத் பசாசு:

 திலகர், காந்தி முதல் இராசேந்திர பிரசாத் வரையான இந்திய அரசியல் தலைவர்களும், விவேகானந்தர், அரவிந்தர் முதல் டாக்டர் இராதாகிருசுணன் வரையான இந்திய அறிஞர்களும் பகவத் கீதையைத்தான் தங்களது வாழ்க்கை வழிகாட்டி நூலாகக் கருதி செயல்பட்டு வந்துள்ளனர். இந்திய அளவில் புகழ்பெற்ற அந்நூல் குறித்து “இந்திய வரலாற்றில் பகவத் கீதை” என்ற ஆய்வு நூலை பிரேம்நாத் பசாசு என்பவர் எழுதியுள்ளார். அவர் அந்நூலின் முன்னுரையில் கி.பி. 4ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் கீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம் பெற்றது எனவும் கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்தான் இந்தியா இருண்டகாலத்தில் மூழ்கியது எனவும் குறிப்பிடுகிறார். கிறித்துவிற்குப்பின் வந்த முதல் 1000 ஆண்டுகளை இரண்டாகப் பிரித்த நேரு அவர்கள் முதல் 500 ஆண்டுகாலத்தில் பண்பாடு, தத்துவம், இலக்கியம், நாடகம், நுண்கலை, அறிவியல், கணிதம் ஆகிய பல துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்தது எனவும் ஆனால் அதற்குப்பிந்தைய 500 ஆண்டுகளில் உள்ளார்ந்த பலவீனத்துக்கு இந்தியா ஆட்பட்டது எனவும் அப்பலவீனம் இந்தியாவின் தகுநிலையை மட்டுமல்ல அதன் படைப்புத்திறனையும் பாதித்தது எனவும், கி.பி. 1000 க்குப்பின் உச்சிவேளையின் உன்னதமான ஒளி கடந்த காலமாகியதோடு, இந்தியாவின் இதயம் உறைந்து போய் அதன் இதயத்துடிப்பு குறைந்து கொண்டே வந்தது எனவும் அதன் காரணமாக அறிதலின் மீதிருந்த ஆர்வமும், சாதனை புரிய வேண்டும் என்ற மன எழுச்சியும் இருந்த இடத்தை நீக்குப்போக்கற்ற கட்டுப்பாடுகளும், வறட்டுவாதமும் எடுத்துக்கொண்டன எனவும் நேரு அவர்கள் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார்(1).

 premnath book on gitaகீதை இந்துக்களின் புனித நூலாக ஏற்றம்பெற்ற பின்தான் இந்தியாவின் வீழ்ச்சியும் ஆரம்பமானது என்பதை நான் மட்டுமல்ல நேருவும் ஒப்புக் கொள்கிறார் என்கிறார் பசாசு. (கீதை மட்டுமல்ல சமற்கிருதமயமாக்களையும், பார்ப்பனியத்தையும் கொண்ட இந்துத்துவா ஏற்றம்பெற்ற காலகட்டம் அது. அன்றே இந்தியாவின் வீழ்ச்சியும் தொடங்கிவிட்டது எனலாம்). இந்துக்களின் புனித நூலான கீதை குறித்து, “உயர்தரமான சில கோட்பாடுகளை அது கூறுகிறது என்பது உண்மைதான். விழுமிய சிந்தனைகள் சிலவற்றை அது கொண்டுள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. மன எண்ணங்களை ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான சில நல்லொழுக்கங்களையும் அது கற்பிக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மனித முன்னேற்றத்தைப் பாழ்படுத்துவதற்கும் சமூகத்தீமைகளை வளர்ப்பதற்குமே கீதையின் போதனைகள் பயன்பட்டு வருகிறது. உரிமைகள் பறிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களிடம் கிடைப்பதில் மனநிறைவு பெற்று, எதிர்த்துக் கேள்வி கேட்காது அமைதியுடன் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துவிடவும், விரக்தியுற்றுப்போன சமூகத்தைக் கிளர்ந்து எழவிடாமல் அடக்கி வைத்துக்கொள்வதற்கும் உயர் வர்க்கத்தினரால் ஆயுதமாகப் பயன்படுவதே கீதையின் தத்துவம்”. என்கிறார் பிரேம்நாத் பசாசு(2).

 மேலும் அவர், பழைய பூசாரிப் பிழைப்புக்கான அத்தனை சாத்திரங்களும் சடங்குகளும், நீர்தெளிக்கப்பட்டு கீதையில் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன எனவும் வாசகர்கள் குற்றம் சொல்ல முடியாதபடியும், குறைகாணாத அளவிலும் பார்ப்பனிய நச்சுக்கொள்கைகள் தேன் தடவித்தரப்பட்டுள்ளது எனவும் பார்ப்பனிய சாத்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் கீதையில் கவிதையாக்கப்பட்டு நிலைத்திருக்க வைக்கப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். இந்தியச்சமூகத்தின் சாபக்கேடான சாதிப்பிரிவினை குறித்து, நான்கு வருணங்களையும் கிருட்டிணபரமாத்மாதான் படைத்தார் எனவும் நான்கு சாதிக்கான பட்டயங்களும் பிறவியிலேயே தீர்மானிக்கப்படுகின்றன எனவும் இவ்வியற்கையான சாதிப்பிரிவு மாற்றப்பட முடியாதது எனவும் கீதை சொல்வதாக ஆசிரியர் கூறுகிறார்(3). இறுதியாக பார்ப்பனியம் நிலைநாட்டப்படுவதற்குத் தேவையான கந்தலாகிப்போன பழைய பார்ப்பன நம்பிக்கைகளையும், சடங்கு முறைகளையும் சாத்திரங்களையும் ஒன்றுவிடாமல் கீதையில் பாடிவைத்து புறக்கடை வழியாக பார்ப்பனியம் நுழைய வைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் குற்றஞ்சாட்டுகிறார்(4)

வேதப்பாடல்கள் - பிரேம்நாத் பசாசு:

 இந்திய ஆரியரது காலத்துக்குச் சிறிது முன்போ அல்லது பின்போ உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த, வேறு சில பழங்குடிகளும், ஏறக்குறைய வேதப்பாடல்களில் காணப்படும் கருத்துக்களைக் கொண்ட பாடல்களைப் பாடி இருக்கிறார்கள். சுமேரியருடைய திருமுறைகள்(கி.மு. 2200), பாபிலோனிய புலம்பல் பாடல்கள், சீனர்களது வேள்விப்பாடல்கள், கிரேக்கர்களது இறைவேண்டல்பாடல்கள் எல்லாம் அறிவுத்தேடலின் வெளிப்பாடுகளே. இந்தோ ஆரியர்களது உணர்வுகள் அதுபோன்ற அறிவுத்தாகத்தால் தூண்டப்பட்டிருந்தாலும், அவர்களது சிந்தனைகள் பேதமை நிறைந்ததாகவும், பொருளற்றதாகவும், சிறுபிள்ளைத்தனமானதாகவும் இருக்கின்றன. அறிவிலும், பண்பாட்டிலும் வளர்ச்சிபெற்ற சமூகங்கள், நேரம் வந்தபொழுது அவர்களது பழங்கடவுள்களைத் தூக்கி எறிந்தார்கள். பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரு கடவுள் கொள்கைக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால் இந்தியர்கள் இன்றுவரை மூடநம்பிக்கைக்கு காரணமான, சமூக வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிற பழங்கடவுள்களையே போற்றிக்கொண்டு இருக்கிறார்கள். வேத நாகரிகம் ஏனைய பழைய நாகரிகங்களைவிட நனி சிறந்தது, தனித்தன்மை வாய்ந்தது, உலகுக்கு வழிகாட்டப் பிறர் கேட்டறியாத ஒன்றைத் தன்னுள்ளே கொண்டுள்ளது என்றெல்லாம் நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுவனவாகும்(5). இந்த வேதப்பாடல்களையும், பழங்கடவுள்களையும் கொண்டுதான் பார்ப்பனர்கள் தங்களை அன்று முதல் இன்று வரை உயர்ந்தவர்களாக, வலிமையானவர்களாக, செல்வாக்குமிக்கவர்களாக, அறிவும் திறமையும் கொண்டவர்களாக ஆக்கிக்கொண்டார்கள்.

கடவுளுக்கும் மேலானவன் பார்ப்பனன்- பிரேம்நாத் பசாசு:

 வேத காலத்தில் மதிப்புக்குரியவர்களாக இருந்து, பின்பு ஆதிக்க வர்க்கமாக உயர்ந்த பார்ப்பனர்கள், அதிகாரத்தைக்கைக்கொண்டு, அதையே தங்களைப்பாதுகாக்கும் அரணாகச் செய்துகொண்டார்கள். ஆதிக்கவர்க்கமாக அதிகாரவர்க்கமாக என்றென்றும் நிலைத்திருப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதே அவர்களது முழுநேரச் சிந்தனையாக இருந்தது. அதற்காக பிராமணங்கள் என்ற புதியவகையான நூல்களை எழுதினார்கள். யாகங்கள் செய்வதற்கான, செய்விப்பதற்கான, விரிவான விளக்கங்களின் தொகுப்புதான் பிராமணங்கள் ஆகும். இந்த பிராமணங்கள் பார்ப்பனப் புரோகிதர்களின் தகுநிலையை எட்டாத உயரத்துக்கு ஏற்றிவைத்ததோடு கடவுள்களுக்குச் சமமாகவும் இருக்கவைத்தது. அதன்பின் கடவுள்களுக்கும் மேலாக, படைப்பின் முதல்வனாகத் தன்னை உயர்த்திக்கொள்ளப் பிராமணங்களில் மேலும் சிலமந்திரங்களை இடைச்செருகல்கள் செய்துகொண்டனர். “பார்ப்பனன் பண்டைய முனிகளின் மரபில் வந்தவன். எனவே அவன் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள், அதாவது அனைத்துக் கடவுள்களும் அவனுள் அடக்கம்” என சதபத பிராமணம் கூறுகிறது. பண்பாட்டு வரலாற்றில் பூசாரிக்கும்பலின் மூர்க்கத்தனம் எவ்வாறு நம்மைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு மீறி இருக்கிறது என்பதுமட்டுமல்ல, மத்திய காலத்துக்கு முந்தைய இந்திய வரலாறு முழுவதிலும் நமக்குக்காணக்கிடைக்கும் முக்கிய வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் இந்தக் கூற்றுகள் முன்னோடியாக அமைந்தன எனவும் வின்டர்நிட்சு கூறுவதைக் குறிப்பிடுகிறார் பிரேம்நாத் பசாசு(6).

 பார்ப்பனர்கள் சொத்து மீது மன்னர்கள்கூட உரிமை பாராட்ட முடியாது. மன்னர்கள் தங்கள் நாட்டையே இழந்தாலும் பார்ப்பனர்களின் சொத்துக்களில் கைவைக்கக் கூடாது. பார்ப்பனர்கள் மீது மன்னர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என பார்ப்பனர்கள் இறுமாப்புடன் கூறினார்கள். பார்ப்பனனால் ஒருவன் கொலை செய்யப்பட்டால் அதைக் கொலைக் குற்றமாகக் கருதக்கூடாது. சூத்திரன் நினைத்தவுடன் கொல்லப்பட வேண்டியவன். இவை பிராமணங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளாகும். லேவி என்பார், “பிராமணங்களின் இறையியல் கருத்துகளைவிட, பண்பற்ற, பகுத்தறிவற்ற, ஆன்ம இழிநிலையை வெளிப்படுத்தும் வேறு ஒன்றைக்காண்பது அரிதினும் அரிது. பிராமணங்கள் கூறும் இறையியலில் ஒழுக்கப்பண்புக்கு இடமே இல்லை”(7) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. பி.கே. கோசு “இந்துத்துவத்தில் ஏதாவது அருமைபெருமை இருக்குமானால் அவை இரிக் வேதத்தில் குறிப்பால் உணர்த்தப்பட்டன. அதேவேளையில் இந்துத்துவத்தில் உள்ள அத்தனை இழிவுகளும் அருவருக்கத் தக்கவைகளும் பிராமணங்களில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளன”(8) எனக்கூறுவதாகத் தெரிவிக்கிறார் பசாசு. மேலும் தேவையான பொழுது வேதப்பாடல்களில் மாற்றங்களும் இடைச் செருகல்களும் செய்யப்பட்டன என்கிறார் அவர்.(9) இந்த வேதப் பாடல்களிலும், பிராமணங்களிலும் பார்ப்பனன் குறித்துச் சொல்லப்பட்ட உயர்வான கருத்துக்களும், வர்ணாசிரமம் போன்ற பிற்போக்கான இந்து சமூகக் கருத்துக்களும் மிகநுட்பமான முறையில் கீதையில் புகுத்தப்பட்டன என்பதைப் பசாசு பலமுறை தெரிவிக்கிறார். ஆகவே கீதை பார்ப்பனியத்தை மிக நுட்பமாக உயர்த்திப்பிடிக்கிறது என்பதே அவரது முடிவாகும்.

பார்ப்பனர்கள் - தாழ்ந்த குலத்தவர்கள், கீழ்ச்சாதியினர் - ரைசு டேவிட்சு:

 பார்ப்பனர்கள் தாழ்ந்த குலத்தவர்களாக மதிக்கப்பட்டு கீழ்ச்சாதியினராக நடத்தப்பட்டனர் என ரைசு டேவிட்சு கூறுகிறார். “மன்னர்கள் முன்னிலையிலும், சான்றோர் அவையிலும், பார்ப்பனர்களைச் சுட்டுவதற்கு “தாழ்ந்த குலத்தான்” என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சாதியின் அடிப்படையிலும், பூசாரி என்ற அடிப்படையிலும், சான்றோர் அவையில் பார்ப்பனர்கள் கைகட்டி நின்றதோடு கீழ்ச்சாதியினராகவே நடத்தப்பட்டனர்” என ரைசு டேவிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு(10). “செவ்வியல் அறிவுடன் திகழ்ந்த தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் இருந்தார்கள். வேடனும், இறைச்சி விற்பவனுமாகிய சால்புடைய தர்ம வியாதன், பார்ப்பனனாகிய கவுசிகனுக்கு ஒழுக்கநெறி பற்றியும் தத்துவ இயல் பற்றியும் கற்றுக்கொடுத்தான். பிறப்பினால் ஒருவன் பார்ப்பனன் ஆவது இல்லை. மாறாக சான்றாண்மையோடு ஒழுகுவதால்தான் ஒருவன் பார்ப்பனன் ஆகிறான் என்ற உண்மையையும் கவுசிகனுக்கு எடுத்துரைத்தான். அதுபோன்று வீதிகள்தோறும் சென்று, தலைச்சுமை வியாபாரம் செய்து பிழைப்பு நடத்திய துலாதரன் என்பவன் சாசாலி என்ற பார்ப்பன முனிவருக்கு ஆசிரியராக இருந்தான்”(11) என வின்டர்நிட்சு கூறுவதாகத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பசாசு. ஆகவே இவைகளின்மூலம் காலங்காலமாக பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவோ, கற்றறிந்த அறிஞர்களாகவோ இருக்கவில்லை என்பதையும், பல்வேறு கீழ்நிலைப் பணி செய்தவர்களும்கூட, கற்றறிந்த அறிஞர்களாகவும், பார்ப்பன முனிவர்களுக்கே ஆசிரியர்களாகவும் இருந்துள்ளனர் என்பதையும் அறியமுடிகிறது.

மறைமங்களில் பகுத்தறிவும், பொருள்முதல்வாதமும்:

  சுவம்ச வேத மறைமம் பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளுக்கான எதிர்ப்பையும் கொண்டுள்ளது. “மறுபிறப்பு என்ற ஒன்று இல்லை. மெய்யறிவு என்ற ஒன்று இல்லை. கருத்துக்கள், உரையாடல்கள், ஒழுக்கநெறி என்பதெல்லாம் வெறும் மாயை, அவதாரம் என்ற ஒன்று இல்லை, கடவுள் இல்லை, சொர்க்கம் நரகம் என்றெதுவும் இல்லை. பரம்பரையாக வந்துகொண்டிருக்கும் புனித நூல்கள் யாவும் மூடர்களால் இயற்றப்பட்ட ஏமாற்றுக்கற்பனைகளே. ஆக்கும்சக்தியான இயற்கை, அழிக்கும் சக்தியான காலம் இவை இரண்டும்தான் எல்லாவற்றையும் ஆட்சி செய்கின்றன. இந்த இருவரும் மனிதனின் நன்னெறி அல்லது தீயநெறி இவற்றைப்பார்த்து அவர்களுக்கு இன்பமோ, துன்பமோ கொடுப்பதில்லை. மக்கள் தவறான வழிகளில் இழுக்கப்பட்டு கடவுள், கோவில், பூசாரி என அலைகிறார்கள். உண்மை என்னவென்றால் விசுணுவுக்கும், வீதிநாய்க்கும் எந்த வேறுபாடும் இல்லை” என சுவம்ச வேத மறைமம் கூறுகிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு. தைத்தரிய மறைமம், “பருப்பொருளே பிரும்மம். ஏனெனில் பருப்பொருளிலிருந்தே யாவும் தோன்றுகின்றன. தோன்றியபின்பு பருப்பொருள்களால் அவை வாழ்கின்றன. வாழ்வு முடிந்தவுடன் அவை பருப்பொருளாக மாறுகின்றன” எனக் கூறுகிறது. பிருகதாரண்ய மறைமம் “தனிமங்களிலிருந்து தோன்றுவன எல்லாம் அழிந்தபின் தனிமங்களில் கலக்கின்றன” என்கிறது. “பழமையான பருப்பொருள்களிலிருந்து உலகம் தோன்றியது” என கடம் மறைமம் கூறுகிறது. ஆகவே பொருள்முதல்வாதம்தான் தோற்றத்திற்குக்காரணம் என்பது மறைம முனிவர்கள் பலரின் கருத்தாக இருந்துள்ளது எனக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(12).

 பார்ப்பனச் சிந்தனையாளர்கள் திட்டமிட்டு பகுத்தறிவையும், பொருள்முதல்வாதத்தையும் பேசிய மறைமங்களைப் புறக்கணித்தனர். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பிரபலப்படுத்தினார்கள். கருத்துமுதல்வாதத்தைப் பேசிய மறைமக் கருத்துக்கள் தொகுக்கப்பட்டு வேதாந்தம் என்ற பெயரில் வைதீக இறையியல் தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டது. இந்தியச் சிந்தனைகளையும், பண்பாட்டையும் மிகச்சிறிய அளவில்தான் இந்த இறையியல் பிரதிபலிக்கிறது என்கிறார் பிரேம்நாத் பசாசு(13).

கணாதரும் கபிலரும்:

 கீதையின் தாக்கம் குறித்து ஒரு விரிவான ஆழமான ஆய்வைச்செய்த பிரேம்நாத் பசாசு அவர்கள் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் மாபெரும் சிற்பிகளான தொல்கபிலர் குறித்தும், கணாதர் குறித்தும் அதேநூலில், “இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குக் கணாதரும், கபிலரும் முன்னோடிகளாயினர். இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இரண்டு மாமனிதர்கள் தோன்றினார்கள். அவர்கள் இருவரும், அவர்களின் வழிவந்த திண்ணிய மனம் படைத்த சிந்தனையாளர்களும் எந்தவிதமான சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லை. வேதக்கடவுளர்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்தார்கள். பார்ப்பன வழிமுறைகள், யாகங்கள், மந்திரங்கள், சடங்குகள், மறைமங்கள், செவிகிழியப் பேசப்பட்ட எல்லாம் வல்ல பிரும்மம் ஆகிய அனைத்தையும் தூக்கி எறிந்தார்கள்” என்கிறார் பிரேம்நாத் பதாசு(14). ஆக இந்திய மெய்யியல் வளர்ச்சியடைவதற்குத் தமிழர்களான கபிலரும், கணாதருமே முக்கியக் காரணம் என உறுதிபடத் தெரிவிக்கிறார் பிரேம்நாத் பதாசு. ஆனால் அவர்கள் வடமரபைச் சாராத தமிழர்கள் என அவர் அறியார்.

நகர அரசுகளும் அறிவியல் சிந்தனைகளும்:

 உலகம் முழுவதும் ஆரம்பகால நகர வணிக அரசுகள்தான் புதிய சிந்தனைகள், முக்கியமாக அறிவியல் அடிப்படையைக்கொண்ட பொருள்முதல்வாதச் சிந்தனைகள் வளர்ச்சி அடைவதற்கு ஒரு முக்கிய காரணிகளாக இருந்தன என்ற நமது கருத்தியலுக்கு வட இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதே உண்மை. கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வடஇந்திய அளவில் தோன்றிய சிறு குறு நகர அரசுகள் ‘நாடோடிகள்’ எனப்படும் புதிய சிந்தனையாளர்களுக்கு எப்படி ஆதரவு அளித்தன என்பதற்கு பசாசு அவர்கள் தனது நூலில் தரும் சில செய்திகள் சான்று பகர்கின்றன.

 “மக்கள் தேடும் புதிய நம்பிக்கைகள் பற்றி உரை நிகழ்த்த வரும் நாடோடி(சிந்தனையாளர்கள்)களுக்காக அரங்கங்களும் மேடைகளும் கட்டப்பட்டன. சாவாதி நகர அரசி மல்லிகாவின் பூந்தோட்டத்தில் பெரியதோர் அரங்கம் கட்டப்பட்டது. லிச்சாவி குலத்து மன்னன் தனது தலைநகரான வைசாலியில் உயர்ந்தவகை மரத்தில் முகடு வேய்ந்த அரங்கம் கட்டினான். இந்த அரங்கத்தில் நாடோடிகள்(பரிவிராசகர்கள்) வந்து தங்கிச்சென்றார்கள். ஊர்களுக்கு அருகிலுள்ள தோப்புகளில் நாடோடிகளுக்குத் தங்குமிடம் கட்டித் தரப்பட்டது. சாம்பா நகரில் காக்கிரா அரசி ஏரிக்கரையோரமாக உள்ள இனிமையான சாம்பாலா தோப்பில் அரங்கம் கட்டினாள். இராசகிருகத்தில் மயில்கூட்டம் ஆடித்திரியும் மோரா நிவப்பா என்ற இடத்திலுள்ள தோப்பில் அரங்கம் கட்டப்பட்டது” என்கிறார் பிரேம்நாத் பசாசு(15). ஆகவே சிறு நகர அரசுகள் அறிவியல் சிந்தனைகள் வளர்வதற்கு ஊக்கமளித்தன என்பதற்கு இவை சான்றுகளாகின்றன. மேற்கண்ட சான்றுகளின் மூலம், உலகம் முழுவதும், அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் கொண்ட சிந்தனைகள் வளர்வதற்கு நகர அரசுகள் காரணமாக இருந்துள்ளன என்பதற்கு மிகப்பண்டைய சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளோடு, தமிழக நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும், மறுமலர்ச்சிக்கால இத்தாலிய நகர அரசுகளும், இறுதியாக வட இந்தியாவின் சனபதங்கள் எனப்படும் சிறு சிறு நகர அரசுகளும் காரணமாக இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.

 கி.மு. 7, 8 ஆம் நூற்றாண்டுவாக்கில் வட இந்திய அளவில் இருந்த பரிவிராசகர்கள் எனப்படும் நாடோடிகளில் முக்கியமானவர்கள் யாரும் பார்ப்பனர்கள் இல்லை எனவும் இவர்களின் உரைகளுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்தது எனவும், மன்னர்கள், சான்றோர்கள், அரசு அலுவலர்கள், கைவினைஞர்கள், உழவர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இவர்களை வரவேற்று மதிப்பளித்தனர் எனவும் ரைசு டேவிட்சு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(16). இக்காலத்தில் இந்தியாவில் மீமாம்சம், வேதாந்தம், சிறப்பியம், நியாயம், எண்ணியம், ஓகம் ஆகிய 6 சிந்தனைப்பள்ளிகள் நிலவின. இவை இரண்டிரண்டாக பிற்காலத்தில் இணைக்கப்பட்டன என்பதோடு வேதம் சார்ந்தவையாகவும் ஆக்கப்பட்டன. அவை மீமாம்சம்-வேதாந்தம், சிறப்பியம்-நியாயம், எண்ணியம்-ஓகம் ஆகிய மூன்று இணைகளாகும். இவைகள் குறித்து பிரேம்நாத் பசாசு அவர்கள் தனது ‘இந்திய வரலாற்றில் பகவத்கீதை’ என்ற நூலில் கூறியவைகளைச் சுருக்கமாக அறிவது அவசியம்.

மீமாம்சம் - பிரேம்நாத் பசாசு:

 மீமாம்ச சிந்தனைப் பள்ளியை நிறுவியவர் சைமினி ஆவார். அவரது மீமாம்ச சூத்திரம் என்ற நூல், 2621 சூத்திரங்களுடன், 890 பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. யாகங்கள் செய்வதும், செய்விப்பதும், சடங்குகளை நிறைவேற்றுவதும், வேத மந்திரங்கள் ஓதுவதுமே முக்திக்கான ஒரே வழி என்பதுதான் மீமாம்சகர்களின் கோட்பாடு. பொய்மையை நாடித்தேடி அதையே மெய்ம்மை என்று பொய்யாகக் கற்பிப்பதே மீமாம்சம் கூறும் அறிவுக்கோட்பாட்டின் முக்கியமான திரிபுவாதம் எனவும், அவர்கள் சம்கிதைகளின் மாறாத்தன்மையையும், நிரந்தரத்தன்மையையும் நிலை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதப்பாடல்களிலும், வேத மந்திரங்களிலும் மந்திர சக்தி இருப்பதாகவும், கடவுளர்கள் மொழிந்த வேதத்தை வழிமொழிவதற்கு சமற்கிருதமே சிறந்தமொழி எனவும், வேதங்களின் மெய்ப்பொருள் வேறு மொழிகளின் வழியாக வெளிப்பட்டிருக்க முடியாது எனவும், வேதங்கள் இறைத்தன்மை வாய்ந்தவை எனவும், வேதங்களின் முன்பு கடவுளர்கள் கூட அற்பமானவர்கள் எனவும், வேதங்களும், பிராமணங்களும் மனிதனுக்குத் தேவையான அனைத்து மெய்யறிவையும் கொண்டுள்ளன எனவும் சைமினி கூறுவதாகவும், ஆனால் மீமாம்ச சிந்தனையில் மெய்யறிவு என்பது சிறிதளவுகூட இல்லை எனவும், ஒரு இந்துவின் எல்லாவிதமான சமயச்சடங்குகளும், குடும்ப விழாக்களும் மீமாம்சம் சார்ந்தே உள்ளன எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

வேதாந்தம் - பிரேம்நாத் பசாசு:

 வேதங்கள் கூறும் மந்திரங்களை ஆராய்வதற்கும், நடைமுறைப்படுத்துவதற்குமாக நிறுவப்பட்ட இந்த சிந்தனை மரபைச் சேர்ந்தவர்கள் பிரும்மத்தைச் சுற்றியே வலம் வருகின்றனர் எனவும் தொடக்க காலங்களில் இயற்றப்பட்ட மறைமங்களில் பிரும்மம் என்ற கருத்துரு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது எனவும் இதுபோன்ற ஒருசில மறைமக் கருத்துக்களே இந்த வேதாந்தப்பள்ளியின் அடித்தளமாக அமைகின்றன எனவும் இந்நிலையில் அகிலம் அனைத்திற்குமான தனித்தன்மையான ஆன்மீகச் சிந்தனைகளின் தொகுப்புதான் வேதாந்தம் என அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்வதாகவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 பிரும்மம் பருப்பொருட்களால் ஆனதல்ல. அதைப் புலன்களால் உணர இயலாது. உள்ளத்தால் மட்டுமே உணர இயலும். உலகிலுள்ள அனைத்தும் பிரும்மத்திலிருந்தே தோன்றுகின்றன. உலகம் நிலையற்றது; பொய்யானது; அழிவுறும் தன்மையுடையது. ஆனால் பிரும்மம் மெய்யானது; அழிக்க முடியாதது; என்றும் நிலைத்திருப்பது. பரமாத்மாவின் ஒரு பகுதியே சீவாத்மா எனவும், சீவாத்மா தன்னைத் தானே உணர்ந்துகொள்ளும் நிலையில், அது பிரும்மத்துடன், அதாவது பரமாத்மாவுடன் இணைந்து இரண்டறக் கலந்து விடுகிறது. அதன்பின் ஆத்மாவுக்கு மறுபிறப்பில்லை. இவைகளைப் புரிந்து கொள்வதையே மறைமங்கள் ஆத்மா குறித்த அறிவு எனக் கூறுகின்றன என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 தன்னைத் தானே அறிந்து கொள்ளாத சீவாத்மா வழிதவறிச் சென்று, பரமாத்மாவிடமிருந்து பிரிந்து விடுகிறது. தவறான வழியிலிருந்து மீண்டுவரும் சீவாத்மா பரமாத்மாவுடன் இணைந்து விடுகிறது. இவ்வாறு மனிதன் வழிதவறிச்செல்வதற்கு மாயைதான் காரணம். மாயையில் கட்டுண்ட மனிதன் மெய்ம்மை பற்றிய அறியாமையில் மூழ்கி விடுகிறான். இந்த மாயையிலிருந்து விடுபட்டு பிரும்மத்தோடு இணைவதைத்தான் முக்தி அடைவது என வேதாந்தம் கூறுகிறது. முக்தி அடைவதற்கு மூன்று வழிகளை வேதாந்தம் கூறுகிறது. அவை ஞானமார்க்கம்(மெய்யறிவின் பாற்பட்ட வழி), பக்திமார்க்கம்(வழிபடும் கடவுளிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொள்வது), கரும மார்க்கம்(யாகச்சடங்குகளை முழுமையாக நிறைவேற்றிக் கரும வினையாற்றலின் மூலம் தன்னை உணர்தல்) ஆகியன.

 மூன்று வழிகளும் கடினமானவை என்பதால் வேதாந்திகள் முக்திக்கு ஞானமார்க்கமே(மெய்யறிவின் பாற்பட்ட வழி) சிறந்தது என பரிந்துரை செய்கிறார்கள் எனவும், ஆனால் வேதாந்திகள் கூறும் மெய்யறிவு என்பது சுதந்திரமான சிந்தனையின் வெளிப்பாட்டினால் பெறப்படும் மெய்யறிவு அல்ல எனவும், வேதாந்தத்தின் அடிப்படை வாதங்களோடு முரண்படும் எல்லாவிதமான சிந்தனைப்போக்குகளையும் அவர்கள் தடை செய்தார்கள் எனவும், முழுமையான புரிதலுக்குத் தர்க்கவாதம் முற்றான வழிமுறையாகாது என்பதும், மெய்யியல் கற்கும் காலத்தில் வேதாந்தக் கோட்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தும் சிந்தனைகளில் ஈடுபடக்கூடாது என்பதும் அவர்களின் சட்டம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 வேதாந்தம் உள்ளடக்கத்தில் மீமாம்சத்திலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டது அல்ல. அதனால்தான் மீமாம்சமும் வேதாந்தமும் இணை சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய வரலாற்றில் பூசாரிகளின் ஆட்சிக்கு வழியமைத்துக் கொடுத்ததில் வேறெந்தப் பழமைவாதச் சிந்தனைப் பள்ளிகளையும்விட வேதாந்தம் தீவிரமான பங்கு வகித்தது, இன்றும் வகித்து வருகிறது. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும்(18). மறைமத்தில் உள்ள ஆன்மீகம் சார்ந்த 555 சூத்திரங்களைக்கொண்டு பாதராயணரால் எழுதப்பட்ட ‘பிரம்ம சூத்திரம்’ என்ற நூல்தான் வேதாந்தத் தத்துவத்துக்கான அடிப்படையாகும். மறைமத்தில் எண்ணியம் சார்ந்த பொருள்முதல்வாதக் கருத்துக்களும் இருக்கின்றன. ஆகவே மறைமக் கருத்துக்களின் தொகுப்பு என பிரம்ம சூத்திரத்தைக் கருத இயலாது.

சிறப்பியம்(வைசேடிகம்) - பிரேம்நாத் பசாசு:

 கணாதரின் சிறப்பியம் இயற்கை நிகழ்வுக்கான காரணங்களை இயற்கையோடு இணைத்துப்பார்க்கும் துணிகரமான முயற்சியை மேற்கொண்டதால் அது சிறப்பானது எனப்பொருள்தரும் சிறப்பியம் என்கிற வைசேடிகம் எனப்பட்டது. அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது. கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது.

 பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப் பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகி உள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் பொருட்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை கொண்டனவாகவும் இருக்கின்றன எனவும், பல்வேறு பொருட்களால் உருவாகிய உலகிற்கு முதலும் முடிவும் உண்டு எனவும் சில குறிப்பிட்ட அணுக்களின் இணைப்பால் விளைவதுதான் உணர்வு எனவும், ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் எனவும் சிறப்பியம் கருதுவதாக பசாசு கூறுகிறார்.

 முறைசெறிந்த அறிதலை, புலனுணர்வு, நினைவாற்றல், தேற்றம், உள்ளுணர்வு என நான்கு வகையாகச் சிறப்பியம் பிரித்தது. அக உலகின் உணர்வுகள், புற உலகின் தோற்றம் இவைகளுக்கிடையேயான ஒத்திசைவே மெய்மைக்கான அளவுகோளாகக் கொள்ளப்படவேண்டும் எனச் சிறப்பியம் கருதியது. இவை புரட்சிகரமான கருத்துக்கள் ஆகும். அணுக்கள் இணைவதற்கும், செயல்படுவதற்கும் ‘அதிருசுடி’ காரணியாக அமைகிறது என்ற திணிக்கப்பட்ட கருத்து தவிர கணாதருடைய கருத்துநிலை முற்றிலும் பொருள்முதல்வாத அடிப்படையிலானதே எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 இயற்கைப்போக்கிலேயே அணுக்கள் இணைகின்றன எனவும், தொடக்க காலத்திலிருந்த பொருட்கூறுகளின் உள்ளார்ந்த பண்புகளால்தான் பருப்பொருட்கள் உருவாயின எனவும் கணாதர் கோட்பாடுகளின் உரையாசிரியர் உபாசுகர் குறிப்பிடுகிறார். ஆதலால் ‘அதிருசுடி’ என்ற கருத்து தேவையில்லாமல் திணிக்கப்பட்டதே என பிரேம்நாத் பசாசு உறுதிபடத் தெரிவிக்கிறார். பிரும்மம் நிலைத்தது என்ற பார்ப்பனியக் கோட்பாட்டிற்கு எதிராக இயற்கை மாறும் தன்மையுடையது என சிறப்பியம் கூறியதால், இதனை அழிவிற்கு இட்டுச்செல்லும் வேதமறுப்புக் கோட்பாடு என பார்ப்பனர்கள் கடுமையாகச்சாடினர் என்கிறார் பிரேம்நாத் பசாசு.

 கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானியான டிமோகிரிடிசு அவர்களைக் கணாதரோடு ஒப்பிடுவோர் உண்டு எனவும் டிமோகிரிடிசு அவர்களின் அணுக்கொள்கையை விடக் கணாதரின் அணுக்கொள்கை தன்னிலே முழுமையானதாக இருக்கிறது எனச் சிலர் கருத்துரைக்கின்றனர் எனவும் டிமோகிரிடிசின் கோட்பாடுகளில் அரிட்டாட்டில் சுட்டிக்காட்டிய குறைபாடுகள் ஏதும் கணாதரின் அணுக்கொள்கையில் இல்லை எனவும் பசாசு கூறுகிறார். இயற்கை மதத்திலிருந்து பொருள்முதல்வாதக் கருத்தியல் நோக்கித் துணிவுடன் முன்னேறுவதற்கு ஏற்ற சமுதாய அமைப்பு கிரேக்கத்தில் இருந்தது எனவும் ஆனால் இந்தியாவில் அதுபோன்ற சமூக அமைப்பு அன்றுமுதல் இன்றுவரை இருக்கவில்லை எனவும் பசாசு குறிப்பிடுகிறார்.

 கிரேக்கத்தில் பூசாரிக் கூட்டம் அழித்து ஒழிக்கப்பட்டது போன்று இந்தியாவில் அவை அழித்தொழிக்கப் படவில்லை எனவும் இந்தியாவில் அறிவுலக வாழ்க்கை என்பது பார்ப்பனப் பூசாரிகளின் ஏகபோக உரிமையாக இருந்துவந்தது எனவும் பசாசு குறிப்பிடுகிறார். இவை சிறப்பியம் குறித்தும் கணாதர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுபவைகளாகும்(19). தமிழகத்தில் கிரேக்க சமூகத்தில் இருந்தது போன்ற நகர, நகர்மைய வணிக அரசுகள் 1000 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தன. இந்த நகர, நகர்மைய வணிக அரசுகளே பொருள்முதல்வாதக் கருத்துக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தன(20). பழந்தமிழகத்தில் கிரேக்கத்தைப் போன்றே பூசாரிக்கூட்டம் அழித்தொழிக்கப் பட்டிருந்தது. சங்ககாலத்திற்குப் பின்னரே அதாவது கி.மு. 50க்குப்பின்னரே அவர்களின் கருத்துக்கள் செல்வாக்கு பெறத்தொடங்கின. தமிழகத்தில் பக்திகால கட்டத்தில்தான் பூசாரிக்கூட்டம் வலிமைமிக்கதாக ஆகியது.

நியாயம் - பிரேம்நாத் பசாசு:

 நியாயம் என்பதற்கு தருக்க முறையில் காரணகாரியங்களைப் பகுத்தாய்தல் எனப்பொருளாகும். நியாய மரபினர் உலகப்பொதுமைச் சிந்தனைகளையும், முக்கூற்று(SYLLOGISM) முறையையும் வளர்த்தனர். சிறப்பியர்களின் அணுக்கொள்கை, இயற்பியல், அனுபவஅறிவுக்கொள்கை முதலியவனவற்றை நியாய சூத்திர ஆசிரியர் கவுதமர் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாகவே சிறப்பியமும், நியாய சூத்திரமும் ஓரிணையாகக் கருதப்பட்டன. கவுதமரின் நியாய சூத்திரத்தில் 16 மெய்விளக்கங்கள் உள்ளன. முதல் 9 விளக்கங்கள் உறுதியான தருக்கமுறை தொடர்பானதாகவும், அடுத்த 7 விளக்கங்கள் பிழை நீக்குவதற்கும், அதனைத் தவிர்ப்பதற்குமான காரணிகளாகவும் இருக்கின்றன. சரியான முடிவை எட்டுவதற்கு விவாதங்களும், மறுப்புரைகளும் முக்கியமானவைகள் என நியாய சூத்திரம் கருதுகிறது. வேதங்கள் என்றுமுள்ளவை என்ற மீமாம்சகர்களின் கோட்பாட்டையும், கடவுள் இருக்கிறார் என்ற கொள்கையையும் கவுதமர் ஏற்றுக் கொள்ளவில்லை. இவை பிரேம்நாத் பசாசு கூறுபவையாகும். பிற்காலத்தில் “வைசேடிகமும், நியாயமும் ஒன்றிணைந்தபோது, இறைமைக் கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் பருப்பொருட்களைப் படைத்தவன் என்ற நோக்கில் அவர்களது இறைக்கோட்பாடு இருக்கவில்லை” எனக்கார்பே கூறுவதாகப் பிரேம்நாத் பசாசு தெரிவிக்கிறார்(21)

எண்ணியம்(எண்ணியம்) - பிரேம்நாத் பசாசு:

 எண்ணியம் குறித்தும் கபிலர் குறித்தும் பிரேம்நாத் பசாசு கூறுவதை இங்கு சுருக்கமாகக் காண்போம். உலகினுடைய ஒழுங்கமைதியுடன் கூடிய படிமுறைச் செயல்பாடுகளை ஆழ்ந்து நோக்கி, அதற்கானத் தெளிவான விளக்கத்தைக் கூறியதால், இந்தியச்சிந்தனை மரபில் எண்ணியம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. எண்ணியத்தத்துவம் என்பது மெய்யறிவுச் சிந்தனை(METAPHYSICAL) மட்டுமல்ல. பிரபஞ்சத்தின் ஆற்றல்களை மாற்றுதலும், அழித்தலும், திரட்டலும் பற்றிய அறிவியல் அடிப்படையிலான விளக்கமும் ஆகும். மெய்யறிவுத்தத்துவ உலகில் எண்ணியச்சிந்தனை ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. போதாயனம் என்ற சாத்திரத்தை இயற்றியவர், கபிலரை அசுரர் எனக்குறிப்பிடுகிறார். கபிலர் எண்ணியச் சிந்தனைகளை அசுரர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாகப் பாகவதம் குறிப்பிடுகிறது. மக்கள் கபிலரை மாபெரும் சிந்தனையாளர் என்றும் மனிதவாழ்வை ஈடேற்றம் செய்வதற்குப் பிறந்தவர் என்றும் போற்றிப் புகழ்ந்தார்கள். இலங்கையில் உள்ள அனுராதபுரக் குடவறைக்கோயிலில் கபிலரின் சிற்பம் ஒன்று உள்ளது.

 கபிலர் ஒரு தீவிரமான பட்டறிவுவாதி(EMPIRICIST). அவரது சிந்தனை, மனித இனத்தின் பட்டறிவு பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது. பரிணாமக்கோட்பாட்டின்(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. புலனுணர்வு(SENSATIONALISM) அடிப்படையில் கருத்துரு வாக்கம் ஏற்படுகிறது என்ற அவரது கோட்பாடு இந்தியத்தத்துவ இயலுக்கு ஒரு மாபெரும் கொடையாகும். புலனுணர்வு, கருத்தேற்றம், சான்றுறுதி போன்றவை உறுதியான எண்பிக்கும் முறைகள் என அவர் கூறினார். புலனுறுப்புகள் இயற்கையின் உருவாக்கமே எனவும், புலனுறுப்புகள் புறவுலகு பற்றிய உண்மையான தோற்றத்தை அப்படியே நமக்குப் புலப்படுத்துகின்றன எனவும் கபிலர் திட்டவட்டமாகக் கூறினார்(22).

பெர்னார்டு:

 “அறிவுக்குட்பட்ட, காரணகாரியத்துடனான, விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் கூறுகிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத் தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என பெர்னார்டு என்பவர் எண்ணியம் குறித்துக் கூறுவதாகப் பசாசு கூறுகிறார்(23).

 இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக்கொள்கையாகும். ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது. இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் வளர்ச்சியில் பருப்பொருட்கள் வகிக்கப்போகும் பாத்திரத்தை கபிலர் அன்றே எதிர்நோக்கினார் எனவும், மனம்வேறு உடல்வேறு அல்ல என்ற ஒருமைக்கோட்பாட்டைக்கொண்டது எண்ணியம் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

கார்பே:

 எண்ணியம் கடவுள் பற்றிச்சிந்திக்கவே இல்லை. எண்ணியத் தத்துவத்திற்கு எல்லாம்வல்ல ஒருவனின் தேவையும் இருக்கவில்லை. இதுபற்றி கார்பே என்பவர், “எண்ணியக்கோட்பாடு கடவுள்மறுப்புக் கொள்கையைக் கொண்டுள்ளது. அதன் அடிப்படை, வேதப்புரட்டுகளுக்கு எதிரானது. நமக்குக் காணக் கிடைக்கும் எண்ணியச் சூத்திரங்களில், சுருதிகளின் கருத்திசைவை நாடுவது போன்று எழுதப்பட்டிருக்கும் பகுதிகள் அனைத்தும் பின்னாட்களில் இடைச்செருகல் செய்யப்பட்டவைகளே. எண்ணியச் சூத்திரத்தோடு வந்து ஒட்டிக்கொண்ட வேதப்பகுதிகள் அனைத்தையும் வெட்டி எறிந்தாலும் எண்ணிய மூலத்துக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது. எண்ணியத்தத்துவம் தற்சார்புடையது. தனித்தன்மை வாய்ந்தது,. அதன் மூலப்படிவத்தின் உள்ளடக்கம் இந்நாள் வரையிலும் மாற்றமின்றி இருந்து கொண்டிருக்கிறது. அது வேதத்திற்கும் பார்ப்பன மரபிற்கும் புறம்பானது“ எனக்கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(24).

 பகுத்தறிவு – இயற்கைவாதம் என்று கூறத்தக்கதான ஒரு மெய்யறிவு மரபை எண்ணியச்சிந்தனை வளர்த்தெடுத்தது. இயல் உலகின் புறவயமான மெய்ம்மையை ஏற்றுக்கொண்டதே கபிலர் தத்துவத்தின் உண்மையான சிறப்புக்கூறாகும். உலகுக்குப் புறவயமான இருத்தல் ஏதும் இல்லை, கருத்து அல்லது எண்ணத்தில் மட்டுமே அது உள்ளது என்ற கோட்பாட்டைக் கபிலர் வன்மையாக மறுத்தார் எனவும், இருத்தலைக் கண்ணுற்ற பின்பே கருத்து உருவாகிறது என்ற நவீனகாலப் பொருள்முதல்வாதச் சிந்தனையோடு கபிலரின் கோட்பாடுகள் ஒத்துப்போகின்றன எனவும் கூறுகிறார் பசாசு.

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா:

 சிறப்பியம் பொருள்முதல்வாதத்தின் பக்கம் நாடியது. எண்ணியம் கடவுள்மறுப்பு – இயற்கைவாதத்தோடு இணைந்துகொள்ள விழைந்தது. மனிதன் இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்டு, அதைச்சரியாகப் புரிந்து கொண்டால் இயற்கையை வெற்றிகொள்ளமுடியும் என்று எண்ணியவாதிகள் வலியுறுத்தினார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச்செல்லும் இது போன்ற சிந்தனைத்தெளிவு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது குறித்து “எண்ணியத்தின் மூலப்படிவம் சமரசமற்ற கடவுள்மறுப்பும், பொருள்முதல்வாதமுமே ஆகும். கடவுளற்ற ஆதிமூலப்பொருள் தத்துவம் என்றே எண்ணியம் நீண்டகாலமாக அழைக்கப்பட்டு வந்தது. இக்காரணத்தால்தான் அறிவியல் முன்னேற்றத்திற்கான சிந்தனை மரபாக எண்ணியம் இருக்க முடிந்தது. பருப்பொருள் கோட்பாடு; வினைக்கும் விளைபயனுக்குமான காரணத்தொடர்பு; மெய்யறிவு; பரிணாம முறை முதலியன எண்ணியக்கோட்பாட்டின் முக்கியமான கூறுகள் ஆகும்” என தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா கூறுவதாகக் கூறுகிறார் பசாசு(25).

 இந்தியப்பண்பாட்டு வரலாற்றின் படைப்பாக்கம் நிறைந்த காலகட்டத்தில் இந்தியா கணாதர், கபிலர் என்ற இரண்டு அறிஞர் பெருமக்களை ஈன்றெடுத்தது. எண்ணியம் பகுத்தறிவு, இயற்கைவாத மெய்யறிவு முதலியன பற்றியே தீவிரமாக வலியுறுத்தியது. கணாதர் தீவிரப் பொருள்முதல்வாதி. ஆனால் வேதகாலத்திற்குப் பிந்தைய அறிவு வட்டாரத்தில் எண்ணியத் தத்துவமே மேலாண்மையுடன் விளங்கியது. கருத்துமுதல்வாத தத்துவத்திற்கு விடப்பட்ட முதல் அறைகூவல் எண்ணியமே எனவும், பார்ப்பன மதத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கியதோடு, பழங்கால இந்திய சமூகத்தின் அடித்தளத்தையும் அது ஆட்டி வைத்தது எனவும், பார்ப்பனர்கள் எண்ணியத் தத்துவத்தை வெறுத்து ஒதுக்கித்தள்ளினர் எனவும், எண்ணியத்தின் புரட்சிகரமான கொள்கைகளை உச்சிமுதல் உள்ளங்கால்வரை அவர்கள் எதிர்த்தார்கள் என்பதோடு எண்ணியத்தத்துவ விரிவுரையாளர்களில் வேதப்பார்ப்பனர்கள் ஒருவர்கூட இல்லை எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியத்தத்துவம் கற்றோரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதனால், தவிர்க்கமுடியாத சூழ்நிலையின் காரணமாகவே பார்ப்பனர்கள் எண்ணியத்திற்கு அங்கீகாரம் வழங்கினார்கள் எனவும் ஆனாலும் பார்ப்பனர்கள் கபிலரை மனதளவில் மன்னிக்கவே இல்லை எனவும் கூறுகிறார் பசாசு(26).

 கி.பி. 9ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த ஆதி சங்கரர் எண்ணியத்தைத் தோற்றுவித்தத் தமிழரான தொல்கபிலர் எனப்படும் கபிலர் குறித்து, “ஆபத்தான எதிரியான முதன்மை மல்லனைத் தோற்கடித்ததால், சிறிய எதிரிகளை வெல்வது இலகுவாயிற்று” என்கிறார்(27). ஆகவே தொல்கபிலரின் எண்ணியம்தான் பார்ப்பனர்களுக்கும், வேதாந்தத்திற்கும் மிகப்பெரிய எதிரியாக 3000 வருடங்களாக இருந்து வந்துள்ளது எனலாம். போதாயன சாத்திரத்தின் ஆசிரியர் கபிலரின் மீதான பார்ப்பன வெறுப்பை, “கடவுளர்களோடு போராடிய அவன் இதுபோன்ற வேற்றுமைகளை உருவாக்கினான். விவேகமுள்ளவன் அவன் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்கமாட்டான்” என வெளிப்படுத்துகிறார்(28). பார்ப்பனர்களுக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்த கருத்துக்களுக்கும் மிகப்பெரிய எதிரியாக கி.மு. 1000 முதல் இன்றுவரை தமிழகமே இருந்து வந்துள்ளது. பழந்தமிழகத்தில் தொல்கபிலர் முதல் வள்ளுவன்வரையும், இன்று அயோத்திதாசர் முதல் பெரியார்வரையும் பார்ப்பனியத்துக்கும், வைதீக மதத்துக்கும், வேதாந்தத் தத்துவத்துக்கும் எதிரானவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் தோன்றி வந்துள்ளனர். ஆகவே பார்ப்பனியத்தின் மிகப்பெரிய எதிரிகளை தமிழகமே தோற்றுவித்து வந்துள்ளது எனில் அது மிகையாகாது. இன்றும் அதற்கானத் தேவை இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

 கபிலரின் எண்ணியம் முழுமையான அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவம் எனவும் நவீன அறிவியல் சிந்தனையோடு அது முழுமையாக ஒத்துப்போகிறது எனவும் கூறுகிறார் பசாசு. எண்ணியம் குறித்த பெர்னார்டு அவர்களின் “தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது.” மேலும், உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. “அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும் படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது என்பதை எண்ணிய மெய்மை ஏற்றுக்கொள்கிறது” என்ற இக்கூற்றுக்கள் எண்ணியத்தின் நவீன அறிவியல் தன்மையை முழுமையாகப் பறைசாற்றுகிறது எனலாம். எண்ணியத்தைத் தோற்றுவித்த தொல்கபிலர் ஒரு தமிழர் என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம்.

 தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்து வளர்ச்சியடைந்த நகர, நகர்மைய அரசுகளும், சிறு குறு அரசுகளும் அதன் வேளாண்மை, பொருள் உற்பத்தி, தொழில்நுட்பம், வணிகம் போன்றவற்றில் ஏற்பட்ட உலகளாவிய வளர்ச்சியும்தான் தொல்கபிலர், கணாதர் போன்றவர்களைத் தோற்றுவித்தது என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு தொல்கபிலர், கணாதர் போன்றவர்களின் பங்களிப்பால் பண்டைய தமிழ்ச்சமூகம் அறிவியல், தத்துவம், கலை போன்ற அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இவ்விடயங்களில் ஒரு சிறிய அளவு மட்டும் வடமொழியில்(ஆகமம் போன்றவற்றில்) சேமிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இருந்த அனைத்தும் அழிந்து போயின. வடமொழியில் இருந்த ஆரம்பகால அறிவியல், தத்துவார்த்த, கலை சார்ந்த விடயங்களில் பெரும்பாலானவை தமிழ் மரபுக்குரியவை. சான்றாக சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும், பரதநாட்டிய சாத்திரம் என்ற நாட்டிய சாத்திர நூலும் தமிழ்வழி நூல்கள். ஆனால் தமிழில் இருந்த அவை போன்ற நூல்கள், தடயங்கள் இன்றி இல்லாது போயின. தமிழின், தமிழ்ச் சமூகத்தின் பெருமைக்குரிய தொல்கபிலர், கணாதர் போன்ற அறிஞர்கள் ‘தமிழர்கள்’ என்பதையே அறியாதவர்களாக இன்றையத் தமிழ்ச்சமூகம் இருக்கிறது. இவர்கள் குறித்து நமக்கு அரும்பாடுபட்டு எடுத்துரைத்த முனைவர் க.நெடுஞ்செழியன் பெரும்பாராட்டுக்கும் மதிப்புக்கும் உரியவர் ஆவார்.

பார்வை:

1.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 16, 17.

  1. “ “ “ பக்: 18, 19.
  2. “ “ “ பக்: 329-331.
  3. “ “ “ பக்: 338
  4. “ “ “ பக்: 48-50.
  5. “ “ “ பக்: 58,59 & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 200

7.QUOTED IN BUDDHIST INDIA PAGE: 240 – 241.

8.THE HISTORY AND CULTURE OF INDIAN PEOPLE VOL-1 PAGE: 422

9.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 56-64.

  1. “ “ “ பக்: 77 & BUDDHIST INDIA PAGE: 31, 32.
  2. “ “ “ பக்: 79. & A HISTORY OF INDIAN LITERATURE, WINTER NITZ, VOL 1 PAGE: 415.

12.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 88-92.

  1. “ “ “ பக்: 93.

14.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்: 131

  1. “ “ “ பக்: 132
  2. “ “ “ பக்: 131, 132.
  3. “ “ “ பக்: 95 – 100
  4. “ “ “ பக்: 100 – 105.
  1. “ “ “ பக்: 105 – 110.

20.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்:778-781

21.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:110-114.

  1. “ “ “ பக்; 114-116.
  2. “ “ “ பக்: 116.
  3. “ “ “ பக்: 121, 122. & INTRODUCTION TO TRANSLATION OF ANIRUDHA’S COMMENTS OK SAMKHYA SUTRA P. XX – Xxi.

25.பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122, & LOKAYATA P. 263.

  1. பிரேம்நாத் பசாசு, இந்திய வரலாற்றில் பகவத்கீதை, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், நான்காம் பதிப்பு-சனவரி 2016. பக்:122-124.
  2. “ “ “ பக்: 124
  3. “ “ “ பக்: 124 & LOKAYAT, P. 61.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

தொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா

7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.

 முதன்மைப்பொருள் என்பதன் பொருள் முதன்மையானது, முக்கியமானது என்பதாகும். மேலும் ‘முதல்நிலைப்பொருள்’, ‘முதல் முதலான பொருள்’, ‘பரிணமிக்காத நிலையில் உள்ள பொருள்’ போன்ற பொருள்களைக் கொண்டதாகும். எண்ணியக்கொள்கைப்படி முதல்நிலைப் பொருள் இறுதியான உண்மையாகும் அல்லது உலகக் காரணமாகும். முதன்மைப்பொருள் என்பதற்கு மற்றொரு சொல் பிரகிருதி அதாவது மூலப்பிரகிருதி அல்லது வேர்ப்பிரகிருதி என்பதாகும். பிரகிருதி தவிர புருடன் கொள்கையை எண்ணியம் ஏற்றுக்கொண்டுள்ளது (தமிழ் மூலங்களில் புருடன் இல்லை. ஆகவே மூல எண்ணியம் புருடன் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டோபாத்தியாயா அவர்களின் இக்கருத்து தமிழ் மூலங்களை அறியாததால் ஏற்பட்ட தவறாகும்). புருடன் என்பது பிரகிருதியின் பெருக்கம் எனப்படுகிறது. புருடன் என்பது ஆணைக்குறிக்கிறது. எண்ணியத்தில் புருடன் இரண்டாவது முக்கியமற்ற நிலையில் உள்ளது. பிற்பட்ட எண்ணிய வாதிகள் ஆன்மக்கருத்துக்களை(புருடன் போன்ற) வேதங்களிலிருந்து கடன்வாங்கி எண்ணியத்தில் புகுத்த முயன்றனர். ஈசுவர கிருசுணரும் அதைத்தான் செய்தார். ஆனால் வேதங்களிலிருந்து கடன் வாங்கப்பட்ட புருடக் கோட்பாடு(ஆன்மக்கோட்பாடு) எண்ணிய அடிப்படைக் கருத்துக்களோடு ஒத்திசையவில்லை.

 Deviprasadமுதன்மைப்பொருள், பரிணாமம், பல புருடர்கள் ஆகிய மூன்று அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுப்பதன் மூலம் பிந்தைய எண்ணியவாதிகள் புருடன் என்பதைச் சுத்த உணர்வு எனக்கூறினார்கள். ஆனால் காரிகையின் ஆசிரியராலும் முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கை ஆகியவைகளை விட்டுக்கொடுக்க இயலவில்லை. எனவே புருடன் குறித்த அவருடைய கொள்கை சங்கரருக்கு ஏற்புடையதாக இல்லை. ஆகவே காரிகைக்கும் அப்பால், முதன்மைப்பொருள், பரிணாமக் கொள்கைகளின் அடிப்படையில் மூல எண்ணியத்தை மறுபடைப்பாக்கம் செய்ய வேண்டும். புருடர்கள் பலர் என்பது மூல எண்ணியத்தின் பண்பாகும். புருடன் என்பது பிறப்பு, இறப்பு, புலன் உறுப்புகள் ஆகியன உள்ள தனி மனிதர்களைக் குறிக்கும் என்ற பொதுவான நிலைபாடு காரிகையில் உள்ளது.

 புருடர்கள் பலவாக இருப்பதற்கு உலகம் உண்மை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எண்ணியத்தின்படி காரியம் என்பது உண்மையானது. காரியம் என்பது பரிணாமவாதம் என்பதால், முதன்மைப்பொருளின் பரிணாம வளர்ச்சியின் விளைவாக உருவான உலகமும் உண்மை என ஆகிறது. இவை வேதாந்த நிலைபாட்டிற்கு நேர் எதிரானது. வேதாந்தத்தின்படி காரியமும், உலகமும் உண்மையாக இருக்க முடியாது. காரிகை ஆசிரியர் எண்ணிய தத்துவத்தில் வேதாந்தக் கருத்தான புருடன் என்பதைப் பின்புறமாக நுழைத்தபோது, இந்தச்சிக்கலை விளக்குவதற்கு எல்லாவகையான முரண்பாடுகளுக்கும் ஆளானார்.

 எண்ணியவாதிகளின் கருத்துப்படி இயற்கைவிதிகளின் காரணமாக முதல்நிலைப்பொருள் மாறுதல் அடைந்து உலகம் தோன்றியது. இதில் ஆன்மீகக் கூறுகளுக்கு இடமில்லை. மூல எண்ணியமானது முதன்மைப் பொருள்கொள்கை எனில் அது இயல்புவாதம் ஆகும். இயல்புவாதக்கொள்கை என்பது இயற்கையின் விதிக்கொள்கை எனப்படும். புல், மூலிகைகள், தண்ணீர் போன்றவை எந்த வகையான காரணமும் இன்றி அவற்றின் இயற்கை காரணமாகப் பசுவின் மூலம் பாலாக மாறுகின்றன. புல் போன்றவை மாறுவது அவற்றின் இயல்பு அல்லது இயற்கை என்றே கொள்ள வேன்டும். எனவே முதன்மைப்பொருள் மாறுவதும் இவ்வாறுதான் என ஊகிக்கலாம். இயல்புக்கொள்கையின்படி பாலுக்கான காரணம் புல்மட்டும்தான் என்று ஆகிவிடாது. அது பசுவால் உண்ணப்பட்ட புல் என்ற இயற்கையின் சிக்கலான செயல்முறையாகும். முதன்மைப்பொருள் வாதம் அல்லது பொருள்காரண வாதம் என்ற எண்ணியக் கொள்கை எண்ணிய வாதிகளை இயற்கை விதிகள் பற்றிய அறிவியல் கண்ணோட்டத்தின் முன்னோடியாக ஆக்கியது.

 சரகரது நூல் காரிகையைவிடப் பழமையானது. இதில் எண்ணியத்தை இருவேறு கோணங்களில் காணும்போக்கு இருக்கிறது. முதலாவது கருத்துப்படி புருடன் அல்லது உணர்வு(சேதனம்) ஐந்து பொருள்சார்ந்த மூலகங்களுக்கும் சமமாக உள்ளது. அதாவது புருடனும் ஒரு மூலகம் தான். இங்கு பொருள்முதல்வாதத்தன்மை மிகத்தெளிவாக உள்ளது. இரண்டாவது கருத்துப்படி மனது உட்பட 24 கூறுகள் மட்டுமே உள்ளது. இதில் ஆன்மீகக் கூறுகள் எவற்றுக்கும் இடமில்லை. புருடன் என்ற கருத்தாக்கம் இதில் இடம்பெறவில்லை. ஆகவே இது அதிக அளவில் பொருள்முதல்வாதத் தத்துவமாக உள்ளது. ஆகவே சரகர் 24 கூறுகளை மட்டுமே குறிப்பிட, ஈசுவர கிருசுணர் 25 கூறுகளைக் குறிப்பிடுகிறார். புருடன் 25ஆவது கூறாக உள்ளது(தமிழ் மரபுப்படி 24 கூறுகள் மட்டுமே உள்ளது என புறநானூறு கூறுகிறது. அதில் புருடன் இல்லை). மகாபாரதத்தில் மூன்று போக்குகள் உள்ளன. அவை 24 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். 25 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள், 26 கூறுகளை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாவதில் புருடன் இல்லை. இரண்டாவதில் புருடன் உள்ளது. மூன்றாவதில் புருடனுடன் பரம்பொருள் சேர்க்கப்பட்டுள்ளது.

 ஆகவே சரகசம்கிதை, மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள சான்றுகளின்படி காரிகையில் இடம்பெறும் எண்ணியத்தைவிடப் பழமையான எண்ணியம் இருப்பது தெரிகிறது. இவற்றில் புருடன் என்பது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனக்குறிப்பிடுவது ஒன்று ஈசுவர கிருசுணரது கண்டுபிடிப்பு அல்லது இதனை அவர் வேறு இடத்திலிருந்து கடன் வாங்கினார் எனக் கூறலாம். புருடன் என்பதைச் சுத்தமான உணர்வு எனப்புரிந்து கொள்வது வேதாந்தச்சிந்தனையாகும்.

 பெல்வார்க்கர், இரானடே ஆகியோர் வேத இலக்கியங்களின் மிகப் பிந்தைய பகுதிகளில் கூட புருடன் என்பது மனிதனைக் குறிப்பதாக இருந்ததைத் தெரிவிக்கின்றனர். புருடன் ஆரம்பத்தில் மனிதனுக்குரிய உடல் அமைப்புடன் காணப்பட்டான். அதற்கு வேறு எந்த வகையான ஆன்மீகப்பொருளும் இல்லை. இரிக் வேதத்தின் பிந்தைய காலத்தில்தான் புருடன் என்பதை உலகத் தோற்றத்திற்குக் காரணமான அடிப்படையாக உயர்த்தும் போக்கு தோன்றுகிறது. புருடனைச் சுத்த உணர்வாகக் காண்பதற்கு முன் அதில் இடம்பெற்றுள்ள மானுட விடயங்கள் அகற்றப்பட்டன. அதன்பின் அதனைச் சுத்த உணர்வாக அல்லது சுயமாகக் காண்பது எளிதாக ஆகியது. இவ்விதமாக வேத பாரம்பாரியத்தில் புருடன் என்ற கருத்தாக்கம் வளர்ந்தது எனலாம். இவை சட்டோபாத்தியாயா கூறுபவையாகும்(12). தமிழ் மரபுப்படி, புருடன் இல்லாத 24 கூறுகளே உண்டு. சரக சம்கிதையும் தமிழ் மரபுப்படியான புருடன் இல்லாத 24 கூறுகளைக் குறிப்பிடுகிறது. ஆகவே மூல எண்ணியத்தில் இல்லாதிருந்த, வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை, வடமரபில் வலியச்சேர்த்து எண்ணியத்தை ஆன்மீகமயமாக்க முயன்றதே பல முரண்பாடுகளுக்குக் காரணமாகும். சட்டோபாத்தியாயா அவர்கள் வேதபாரம்பரியத்திற்குரிய புருடனை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், பல புருடக்கொள்கை மூல எண்ணியத்தில் இருந்ததாகக் கருதுகிறார். தமிழ் மூலங்களை அறிந்திருந்தால் இக்குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

8.எண்ணியத்தின் தோற்றம்: சட்டோபாத்தியாயா.

 மூல எண்ணியத்தின் தோற்றத்தினை மறைமங்களில் காணலாம் என ஓல்டன்பர்க் போன்றவர்கள் கருதினர். சுதா மறைமம், சுவேதசுவதார மறைமம், பிரசன்ன மறைமம் போன்ற சிலவற்றில் எண்ணியத்திற்கே உரித்தானக் கலைச்சொற்களும், எண்ணியத்திற்கே உரித்தான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பது உண்மை. ஆனால் இவற்றை எண்ணியத்தின் அடிப்படைகள் எனக் கருத இயலாது. இந்த மறைமங்களின் உண்மையான நோக்கம் மூல எண்ணியத்தின் முதன்மைப்பொருள் முக்கியமானதல்ல என்றும், அது மாயை என்றும் காட்டுவதாகும். எனவே மறைமங்களில் எண்ணியம் பற்றிய குறிப்புகள் இடம்பெறுவது அதனை மறுப்பதற்காகவே ஆகும். மேலும் எண்ணியத்தினை மேற்கோளாகக் காட்டாமல் வேதாந்தத்தினை விளக்கமுடியாது. இந்த மறைமங்களில் எண்ணியத்தினை அடிப்படையாகக் கொண்டு வேதாந்தம் விளக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தினை பாதராயணர், சங்கரர் போன்ற வைதீக தத்துவவாதிகள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே மறைமங்களில் மூலஎண்ணியம் இடம்பெறுகிறது என்று ஓல்டன்பர்க் கூறுவதற்கு எந்தச் சான்றும் இல்லை.

 சாந்தோக்ய மறைமத்தில் சுவேதகேது ஆருண்யா என்பவன் தனது தந்தையான உத்தாலக ஆருணியிடமிருந்து உயர்ந்த ஞானம் பெறும் முறையை கற்றுக்கொள்ளும் கதையில் பொருள்முதல்வாதக் கருத்துக்கள் வருகின்றன. இதனை எண்ணியத்திற்கு முன்னோடி என சாகோபி கூறுகிறார். இக்கதையில் எல்லாவற்றிற்கும் அடிப்படை அல்லது ஆதாரம் என்பது சத் அல்லது இருப்பு எனச்சொல்லப்படுகிறது. இந்த மறைமப்பகுதியில் வெப்பம், தண்ணீர், உணவு என்ற மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் அவை இருப்பின் பகுதிகளாகக் காட்டப்படவில்லை. அவை இருப்பிலிருந்து தோன்றுபவையாகக் கூறப்படுகின்றன. “எல்லாப் பொருள்களுக்கும் இருப்புதான் வேர், இருப்புதான் வீடு, இருப்புதான் ஆதாரம். அதுதான் சிறந்த சாராம்சம். அதுதான் எதார்த்தம்(சத்தியம்), அதுதான் ஆத்மா, அதுதான் நீ.” என சாந்தோக்ய மறைமம் முடிகிறது. ஆகவே எண்ணியத்தின் முதல்நிலைப்பொருளும், சாந்தோக்ய மறைமத்தின் இருப்பும் வேறுவேறு ஆகும். அவை வேறுவேறு உலகக் கண்ணோட்டங்களின் பிரதிபலிப்புகளாகும். ஆனால் சாந்தோக்ய மறைமத்தில் பொருள்முதல் வாதத்தின் தொன்மையான தடயங்கள் உள்ளன. அந்தப் பழங்காலப் பொருள்முதல் வாதத்தின் சிதைவிலிருந்துதான் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவானது என்பதை இந்த மறைமக்கதை காட்டுகிறது. மறைமங்களில் காணப்படும் பழங்காலப் பொருள்முதல்வாதம் ஒரு தத்துவம் என்ற முறையில் மூல எண்ணியத்தைப்போன்று இருந்தது. ஆனால் அதனை எண்ணியத்தின் முன்னோடி என நாம் கருத முடியாது(13). ஆகவே மூல எண்ணியம் மறைமங்களுக்கு முற்பட்டது.

9.எண்ணியமும், ஓகமும்: சட்டோபாத்தியாயா.

 வேத நூல்களில் ஓகம் என்பது ஏரில் பூட்டுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. மேலும் இது மிகப்பழங்காலத்திலிருந்தே உயர்ந்த குறிக்கோளை அடைவதற்காகப் பின்பற்றப்பட்டு வந்த சில நடைமுறைகள் அல்லது பயிற்சிகளைக்குறித்தது. ஓகம், எண்ணியம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு ஒரு பண்டைய பாரம்பரியத்தைச் சேர்ந்தது. இடையே அத்தொடர்பு விடுபட்டுவிட்டது என்பதும், பண்டைய தொடர்பு பிந்தைய காலத்தில் எண்ணிய ஓகமாக உருவானது என்பதும் ஒரு ஊகம்தான் எனவும், இந்த ஊகம் உண்மையெனில் ஓகத்தின் தோற்றத்திலிருந்து எண்ணியத்தின் தொடக்கத்தினை நாம் கண்டுபிடிக்க இயலும் எனவும் கூறுகிறார் சட்டோபாத்தியாயா.

 பதஞ்சலி என்பவர் ஓக சூத்திரத்தை எழுதியவர் எனக் கருதப்படுகிறார். “எண்ணியத்தில் பதஞ்சலியின் பிரிவு என்பது ஓகத்தின் கருப்பொருளாக விளங்குகிறது. பதஞ்சலிதான் பல்வேறு ஓக முறைகளை ஒன்று சேர்த்து எண்ணியத்தின் இயக்கமறுப்புத் தன்மையுடன் இணைத்தார். இன்றைய வடிவமுள்ளதாக ஓகத்தினை மாற்றியமைத்தார்” என்கிறார் தாசுகுப்தா, பதஞ்சலியின் உரை நூலான “வியாசபாசியம்” எழுதிய வாசசுபதியும், விஞ்ஞானபிக்சுவும், பதஞ்சலி ஓகத்தினை உருவாக்கியவர் இல்லையென்றும் அதனைப் பதிப்பித்தவர் என்றும் கூறுகிறார்கள். பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் கடவுட் கோட்பாடு செயற்கையாக அறிமுகம் செய்யப்பட்டது எனவும், ஓக சூத்திரத்தில் கடவுளைப்பற்றிக் கூறும் பகுதிகள் பொருத்தமில்லாமல் இருக்கின்றன எனவும் ஓகத்தின் உள்ளடக்கம், நோக்கம் ஆகியவற்றிற்கு இது முரண்பட்டு இருக்கிறது எனவும் கூறுகிறார் கார்பே.

 மேலும் பண்டைய ஓக கொள்கையின்படி, கடவுள் உலகத்தினை படைப்பதுமில்லை; அதனை ஆள்வதுமில்லை; அவர் மனிதனது செயல்களுக்கு பரிசளிப்பதுமில்லை; தண்டனை கொடுப்பதுமில்லை; மனிதன் தனது இறுதி இலட்சியமாகக் கடவுளோடு ஐக்கியம் ஆகவேண்டும் என்று எண்ணுவதுமில்லை என்கிறார் கார்பே ஆகவே ஓக சூத்திரத்தில் கடவுள்கொள்கை செயற்கையாகப் புகுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு ஓக சூத்திரத்தில் விவரிக்கப்பட்டுள்ள முறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புற உலகிலிருந்து உணர்வை முழுவதுமாக உள்வாங்கி அதனை அகத்தின் மீது ஒருமைப்படுத்திய பின்னர் அகமானது புற உலகத் தொடர்பிலிருந்து விடுதலை பெறுகிறது. புற உலகம் உணர்விலிருந்து முற்றிலுமாக மறைந்து விடுகிறது. ஓக சூத்திரத்தில் இந்த முறையில் ஓக நடைமுறைகள் கருத்துமுதல்வாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆகவே உண்மையான ஓகம் குறித்து பதஞ்சலியின் ஓக சூத்திரத்தில் தேடுவது தவறாகும்.

 ஓக நடைமுறைகளின் உண்மையான நோக்கம் இயற்கையைக் கட்டுப்படுத்துவது ஆகும். தோன்றியத்தில் தொல்பழங்கால மந்திர நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தோன்றியத்தின் உண்மையான நோக்கமும் இயற்கையைக் கட்டுப்படுத்துவதுதான் ஆகும். ஆகவே வேதம் சாராத கருத்தியலின் முக்கிய வடிவமான தோன்றியத்தில்தான் நாம் உண்மையான ஓகத்தைக் காணவேண்டும்(14). ஆக பதஞ்சலியின் ஓக சூத்திரம் ஆன்மீகமாக ஆக்கப்பட்டுள்ளது என்பதால் அங்கு மூல எண்ணியத்தைக்காண இயலாது.

10.புதிய வடிவமும் உள்ளடக்கமும்: சட்டோபாத்தியாயா.

 கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திற்கு எதிராக இருந்ததும், கருத்துமுதல்வாதிகளால் எதிர்க்கப்பட்டதும், காலத்தால் முற்பட்ட உணர்வுபூர்வமானதுமான ஒரு தத்துவம் எண்ணியம் ஆகும். எண்ணியம் பற்றிய நூல்கள் மறைந்துவிட்டதாலும், பழங்காலத்திலிருந்து உரையாசிரியர்கள் காலம்வரை அதில் தொடர்ச்சி இல்லை என்பதாலும் மூலஎண்ணியத்தின் உருவம் அல்லது உள்ளடக்கம் பற்றிய கண்ணோட்டத்தை, அதன் கொள்கையைத் தீர்மானிக்கக் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற வேண்டும். முதன்மைப்பொருள் கொள்கைக்குப் பொருத்தமாக இருப்பவை எல்லாவற்றையும் மூலஎண்ணியத்தைச் சார்ந்தன என்றும், புருடன் பற்றிய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்திலிருந்து தோன்றுபவை அனைத்தையும் மூல எண்ணியத்திற்கு புறம்பானவை என்றும் நாம் கருதவேண்டும்.

 எண்ணியத் தத்துவமானது முழுக்க முழுக்கப் பகுத்தறிவுத்தன்மை உடையது என்கிறார் கார்பே. அதன் காரணமாகத்தான் சங்கரர் அந்தப் முதன்மைப் பொருள்கொள்கை(எண்ணியத்தத்துவம்), மிக ஆழமான பகுத்தறிவுப் போக்கினை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறினார். ஆரம்பகால எண்ணிய தத்துவவாதிகளின் பகுத்தறிவுக் கண்ணோட்டமானது மறைமங்களின் புதிர்வாதத்தை அவர்கள் உணர்வுபூர்வமாக எதிர்த்ததின் விளைவு ஆகும். அதன் காரணமாகவே எண்ணியத்தை மறுக்கும்போது, பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியர் பகுத்தறிவிற்கான சுதந்திரத்தைப் புறக்கணிப்பதற்கு ஒரு தனி சூத்திரத்தை உருவாக்கினார். சங்கரர் பகுத்தறிவை மறுத்து,

 “மனிதனது சிந்தனை தடையற்றது. பகுத்தறிவு புனித நூல்களைப் புறக்கணிக்கிறது. அது தனிநபர் கருத்துக்ககளைச் சார்ந்திருக்கிறது. ஆகையினால் அதற்கு வலுவான அடிப்படை இல்லை.......மனிதர்களது எண்ணங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதன் காரணமாகப் பகுத்தறிவிற்கு உறுதியான அடிப்படை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கபிலர் போன்ற மிகத்திறமையான மனிதர்களது அறிவுபூர்வமான வாதங்களை அடிப்படையாக ஏற்றுக் கொண்டாலும் இந்தச்சிக்கல் தீருவது இல்லை. கபிலர், கணாதர் போன்ற மிகப்பெரிய அறிவாளிகள், பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியவர்கள், ஒருவரை ஒருவர் மறுப்பதை நாம் காண்கிறோம்” எனக் கூறுகிறார்(15). எண்ணியக்கொள்கையின் ஆதரவாளர்கள் பகுத்தறிவின்மூலம் தங்களது கொள்கையை நிலைநாட்ட முயன்றனர். ஆகவேதான் வேதங்களுக்கு ஆதரவாகப் பகுத்தறிவு சிந்தனையை மறுத்து வாதிடுகிறார் சங்கரர். ஆகவே பிரம்ம சூத்திரத்தின் ஆசிரியரும், சங்கரரும் வேதாந்தத் தத்துவத்தைப் பாதுகாக்க, மனிதனது சுதந்திரச்சிந்தனைக்கு, அவனது பகுத்தறிவுச் சிந்தனைக்கு எதிராக இருந்தனர் என்பதை இந்த விவாதங்கள் உறுதி செய்கின்றன.

காரணகாரியப் பரிணாமக் கொள்கைகள்:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய சிக்கல், உலகிற்குரிய முதற்காரணம் என்ற சிக்கலாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான், உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. கௌடபாதர் காரணகாரியக் கொள்கையை ஐந்து கட்டங்களாகப் பிரித்தார். 1.காரியத்தின் தன்மை, 2.குறிப்பிட்ட பொருள் சார்ந்த காரணம் குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தும். 3.எல்லாவற்றையும் எல்லாவற்றைக்கொண்டும் உற்பத்தி செய்ய முடியாது. 4.ஒன்று எது முடியுமோ அதைச்செய்கிறது. 5.ஒரு வகையிலிருந்து அதே வகைதான் தோன்றும்(16). எண்ணியத்தத்துவவாதிகள் இயற்கையை உற்று நோக்குவதன் மூலம் இந்த காரணகாரியக்கொள்கையை உருவாக்கினார்கள் என சங்கரர் கூறுகிறார். காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்.

 “சாந்தம், இராசசம், மந்தம் ஆகியவற்றைக்கொண்டுள்ள சடப்பொருளான இந்த உலகம், சடப்பொருளான ஒன்றிலிருந்துதான் தோன்றியிருக்க முடியும். அதுவும் இதே குணங்களைக் கொண்டுள்ளதாகவே இருக்கும்” என இதனைச் சுருக்கமாகக் கூறுகிறார் சங்கரர். இது குறித்து கார்பே அவர்கள் தரும் விளக்கத்தைக் காண்போம். “பரிணாமத்தின் ஒரு கட்டத்தில் பொருட்காரணத்தின் விளைவாகத் தோன்றுவதுதான் இந்த உலகம் என்ற கொள்கையை எண்ணியம் கூறுகிறது. இந்தக்கட்டத்திலிருந்து முந்திய கட்டங்களை நாம் ஊகிப்பதன் மூலம் இறுதியில் முதல் காரணத்தைக் .கண்டறியலாம். அது முதல்நிலைப்பொருள் ஆகும். இதிலிருந்து உலகமானது காலப்போக்கில் பரிணமித்தது. உலகத்தில் உள்ள பொருள்களுக்கு மூன்று குணங்கள் உள்ளன என எண்ணியம் கூறுகிறது. முதலாவது ஒளி, புகழ், இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும் சாந்தம். இரண்டாவது இயக்கம், சுறுசுறுப்பு, துன்பம் ஆகியவற்றைக்குறிக்கும் இராசசம், மூன்றாவது மந்தநிலை, தடை, சோம்பேறித்தனம் ஆகியவற்றைக் குறிக்கும் மந்தம். இந்தக் குணங்கள் சம அளவில் நிலை மாறாமல் முதல்நிலைப்பொருளில் இருந்தன. இந்த அசையா நிலையில் ஏற்படும் மாறுதல் காரணமாக உலகம் தோன்றியது”(17). முதல்பொருள் குறித்து இவ்வளவு சிறப்பாக விளக்கிய கார்பே, எண்ணியத்தில் உள்ள புருடர்கள் என்ற கொள்கை காரணமாக மூல எண்ணியம் பொருள்முதல் வாதத்தின் ஒரு வடிவம் என்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார் சட்டோபாத்தியாயா அவர்கள்.

 பரிணாமக்கொள்கையானது இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. எண்ணியவாதிகள் முதலில் கூறியபடி இயல்புக்கோட்பாடு என்கிற இயற்கைவிதிக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஆவர். இயற்கை விதிகளின்படி இடம்பெறும் சேர்க்கை, வளர்ச்சி ஆகியவற்றில் நடைபெறமுடியாதது எதுவுமில்லை. முதன்மைப்பொருளை இயக்குவதற்கு இந்த இயற்கை விதிகளே போதுமானவைகளாகும். ஆகவே எண்ணியம் என்பது ஆரம்பத்தில் பொருள்களின் இயக்கத்தினைப்பற்றிய கொள்கையாக இருந்திருக்க வேண்டும். உலகப் பரிணாமம் குறித்தக் கொள்கையை எண்ணியர்கள் எங்கிருந்து பெற்றார்கள் எனத்தெரியவில்லை. ஆனால் மூல எண்ணியத்தில் பரிணாமம் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது. ஆதலால்தான் ஆரம்பகால எண்ணியத் தத்துவங்களில் அதன் கூறுகள் இருந்தன. அவர்களுடைய முதல்நிலைப்பொருள் கொள்கையிலிருந்து இது தானாகவே உருப்பெற்றது எனலாம். இந்த முறையில் முதன்மைப்பொருள் கொள்கை(உலகிற்கு முதல்காரணம் பொருள் என்பது) இந்தியத்தத்துவ வரலாற்றில் எண்ணியத்திற்கு ஒரு சிறப்பான இடத்தை அளித்துள்ளது. தொடக்ககால எண்ணியம் நமது தத்துவப்பாரம்பரியத்தில் நேர்காட்சி அறிவியல்களுக்கான அடிப்படைகளை அளித்துள்ளது(18).

தமிழ் மூல எண்ணியமும் வடமொழி நூல்களும்:

 எண்ணியம் குறித்தத் தமிழ் மூலங்களை வட இந்திய தத்துவவாதிகள் அறிந்து கொள்ளாதிருந்ததன் காரணமாக, மூல எண்ணியத்தில் புருடன் இல்லை என்பது குறித்தத் தெளிவின்மை அவர்களிடையே இன்றுவரை இருந்துவருகிறது. இத்தெளிவின்மை கார்பே போன்றவர்களிடம் மட்டுமல்ல, சட்டோபாத்தியாயா போன்றவர்களிடமும் இருந்துள்ளது என்பதே உண்மை. மூல எண்ணியம் அந்த அளவு, வடமொழி நூல்களில் முழுமையாகத் திருத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது என்பதே காரணமாகும். சரகரின் மருத்துவ நூலான ‘சரக சம்கிதை’ தமிழ் வழி நூல் என முனைவர் க.நெடுஞ்செழியன் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளார். அந்நூல் தமிழ்வழி நூல் என்பதால்தான் அதில் எண்ணியம் 24 கூறுகளைக்கொண்டது என்பதும் அந்த 24 கூறுகளில் புருடன் இல்லை என்பதும் சொல்லப்பட்டுள்ளது. அதே நூலில் புருடனைச்சேர்த்து 25 கூறுகள் எனவும் புருடன், பரம்பொருள் ஆகிய இரண்டையும் சேர்த்து 26 கூறுகள் எனவும் மூல எண்ணியம் திருத்தப்பட்டுள்ளது. பிற்கால நூல்கள் அனைத்திலும் புருடன் சேர்க்கப்பட்டு, 25 கூறுகள் என்பதுதான் சொல்லப்பட்டுள்ளது. 24 கூறுகள் என்பதோ, புருடன் இல்லை என்பதோ சொல்லப்படவே இல்லை. அதனால்தான் சட்டோபாத்தியாயா போன்ற மிகப்பெரிய மார்க்சிய அறிஞர்களிடமும் ஒரு தெளிவின்மை உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம்.

எண்ணியம் (எ) சாங்கியம் – நகர அரசுகளின் கோட்பாடு:

 மூல எண்ணியத்திற்கும் வேதாந்தத்திற்கும் இடையிலான போராட்டம் தீவிரமாக இருந்தது எனவும் இவை இரண்டும் பண்டைக்கால இந்தியாவின் பண்பாட்டு வரலாற்றில் எதிர் எதிர் போக்குகளாக இருந்தன எனவும் இவற்றிற்கு அடிப்படையாக வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையும், மேய்ச்சல் சார்ந்த தந்தைவழி உரிமைமுறையும் இருந்தன எனவும் சட்டோபாத்தியாயா கூறுகிறார். மேலும் அவர் எண்ணியத்தில் இடம்பெறும் பிரகிருதி என்பது முதல்நிலைப்பொருள் என்பதோடு, அது பெண்மைக் கோட்பாடு எனவும் குறிப்பிடுகிறார்(19). அதாவது எண்ணியம் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அவர் கருதுகிறார். ஆனால் எண்ணியம் வளர்ச்சிபெற்ற ஆரம்பகால வணிக நகர அரசுகளின் கோட்பாடாகும்.

 எண்ணியம் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாதச் சிந்தனையைக்கொண்ட ஒரு பகுத்தறிவுக்கோட்பாடாகும். அதற்கு முன் அது தோன்றியக் கருத்துக்களின் தாக்கத்துக்கு உள்ளாகியிருக்கக் கூடும். ஆனால் வேளாண்மை சார்ந்த தாய்வழி உரிமைமுறையின் அடிப்படையில் இருந்து தோன்றியதாக அதனைக்கருத இயலாது. அது வளர்ச்சிபெற்ற வணிக நகர, நகர்மைய அரசுகளில் இருந்து தோன்றிய ஒரு கோட்பாடாகும். எண்ணியம் என்கிற சாங்கியம் தமிழகத்தில் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. கிரேக்க நகர அரசுகளில், தொடக்ககால சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய நகர அரசுகளில் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ந்தது போல்தான் தமிழக நகர அரசுகளிலும் பொருள்முதல்வாத மெய்யியல், உலகாயதம் என்கிற பூதவாதமாக, சாங்கியம் என்கிற எண்ணியமாக, வைசேடிகம் என்கிற சிறப்பியமாக, நியாயம் என்கிற அளவையியலாக வளர்ச்சி பெற்றது எனலாம்.

 எண்ணியத்தின் தோற்றுவாய், வேதங்களின் செல்வாக்கு எல்லைக்கு அப்பாற்பட்ட, பிராமணர்கள் ஆதிக்கம் இல்லாமல் இருந்த நிலப்பகுதிகளில், உலகத்தின் இரகசியம் பற்றியும், நமது இருப்பு பற்றியும் அறிவு பூர்வமாக விளக்க முதல்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் இருந்திருக்க வேண்டும் என்ற கார்பே அவர்களின் கருத்தை சட்டோபாத்தியாயா ஏற்கிறார்(20). இந்த விளக்கங்களின் அடிப்படையிலும், தமிழ் இலக்கியச் சான்றுகள் போன்ற வேறு காரணங்களின் அடிப்படையிலும் அந்நிலப்பகுதி தமிழ்நாடுதான் எனவும், கபிலர் தமிழர்தான் எனவும் க.நெடுஞ்செழியன் அவர்கள் உறுதி செய்துள்ளதை முன்பே குறிப்பிட்டுள்ளோம். பழந்தமிழகத்தில் கி.மு. 1500 முதல் நகர அரசுகள் உருவாகி வளரத்தொடங்கின(ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கிலேயே ஒரு தொழில் நகரமாக இருந்துள்ளது என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது).

 தமிழகத்தில் இருந்த அந்த நகர அரசுகளின் வளர்ச்சியின் ஊடே இந்த அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை தோன்றி வளர்ந்தது. அதன்பின் பல நூற்றாண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிக்குப்பின், கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் தொல்கபிலரால் இச்சிந்தனை ‘எண்ணியம்’ என்ற அறிவியலையும், பொருள்முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மிகச்சிறந்த மெய்யியல் வடிவத்தைப் பெற்றது எனலாம். மேற்கண்ட கருத்துகளை மேலும் உறுதி செய்யும்வகையில் பண்டைய தமிழ்ச்சமூகச் சூழ்நிலை, அதன் வளர்ச்சிபெற்ற உலகளாவிய வணிகம், நகர அரசுகள், அதன் பொருள்முதல்வாத மெய்யியல் முதலியன குறித்துப் “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் பேசுகிறது(21). தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் ‘கீழடி’ போன்ற எதிர்கால அகழாய்வுகள், தமிழகத்தின் நகர அரசுகளையும், அதன் அறிவியல் அடிப்படையிலான பொருள்முதல் வாதச் சிந்தனையையும் வெளிப்படுத்தும் என உறுதிபடக்கூறலாம்.

பார்வை:

1.இந்திய நாத்திகம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் சாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2013, பக்: 76-79, 86, 87.

2.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 72, 73.

  1.  “ “ “ 475
  2.  “ “ “ 476-480

5 “ “ “ 480; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. 189.

6.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 480-484

  1.  “ “ “ 484-486
  2.  “ “ “ 486-489
  3.  “ “ “ 489-492
  4.  “ “ “ 498, GARBE, R.ANIRUDDHA’S COMMENTARY ON THE ORIGINAL PARTS OF VEDANTIN MAHADEVA’S COMMENTARY ON THE SNKHYA SUTRAS. CALCUTTA, 1892.

11.உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 492-500

  1. “ “ “ 501-548.
  2. “ “ “ 548-562
  3. “ “ “ 562-574
  4. “ “ “ 576
  5. “ “ “ 578. TRANSLATIONS USED FROM COLEBROOKE. SANKYAK KARIKA, CALCUTTA, 1887, PAGE: 28.
  6. “ “ “ 579, 580; ENCYCLOPAEDIA OF RELIGION AND ETHICS. (ed) J. HASTINGS. EDINBURGH, 1908-1918, XI. PAGE: 190
  7. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, தமிழில் எஸ்.தோதாத்ரி, NCBH, சூன்-2010, பக்: 574-589
  8. “ “ “ 560, 561.
  9. “ “ “ 498-499.

21.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன் 2016, பக்: 261-269, 778-781, 806-817.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It