கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இராமாயணம் தொடர் விதைத்த மதவெறி
- சமூகப் போராளிகளை இனம் காண்போம்... கொண்டாடுவோம்!
- மாசி வீதியின் கல் சந்துகள் - கவிதை நூல் விமர்சனம்
- மணாளனே மங்கையின் பாக்கியம் (புரூவச் சக்கரவர்த்தி கதை)
- நான்கு கணங்கள்
- ஊழலுக்கு எதிராக செயல்பட்ட மனித உரிமைக் காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறித் தாக்குதல்
- திரு உலா
- பிரபஞ்ச ஒளி பூக்கட்டும்
- பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
வரலாறு
- விவரங்கள்
- செந்தலை ந.கவுதமன்
- பிரிவு: தமிழ்நாடு
நடராசன் (1919 – 15.1.1939)
தமிழக மொழிப்போர் வரலாற்றில் முதல் களப்பலியானவர் நடராசன்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த இவர் 1999இல் பிறந்தவர். வீட்டின் ஒரே மகன். திருமணமாகாதவர். சென்னை பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வாழ்ந்தவர். தந்தையர் பெயர் இலட்சுமணன்.
இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த முதல் மொழிப் போர் 3.6.1938 ஆம் நாள் தொடங்கி 21.2.1940 ஆம் நாள் வரை நடந்தது.
சென்னை இந்து தியாலசிகல் பள்ளியின் முன் அரப் போர் மறியல் அன்றாடம் நடந்து வந்தது. இந்தி எதிர்ப்பு மறியல் போரில் 5.12.1938 ஆம் நாள் நடராசன் பங்கேற்றுச் சிறை சென்றார். ஆறுமாதச் சிறையும் அய்ம்பது உருபா தண்டத்தொகையும் இவருக்கு வழங்கப்பட்ட தண்டனை வழக்குமன்ற நடுவர் அபாசு அலியால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவருக்கு உடல்நலம் குன்றியது. கடுங்கால் கொடுமையினால் காய்ச்சல் கண்டு சென்னை மருத்துவமனையில் 30.12.1938-ஆம் நாள் சேர்க்கப்பட்டார்.
உயிருக்குப் போராடிய அவரிடம் "மன்னிப்பு எழுதித் தந்தால் விடுதலை செய்கிறோம்" எனக் கூறி மன்னிப்புப் கடிதம் கேட்டது ஆச்சாரியார் அரசு.
மன்னிப்பு கேட்டு மண்டியிடாத நடராசன் 15.1.1939 ஆம் நாள் உயிரிழந்தார். மொழிகாக்க உயிர் துறந்த முதல் வீரன் நடராசன்! அவர் இறந்த காரணம் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதம் வந்தது.
முதலமைச்சர் சி.இராசகோபாலாச்சாரியார் அப்போது இழிவாகச் சொன்னார். "நடராசன் படிப்புவாசனை இல்லாதவர். எழுதப்படிக்கத் தெரியாத அரிசன். அதனால் தான் இறந்தார்".
நடராசன் படிப்பறிவு உள்ளவர். சென்னை ஏழுகிணறு மலையப்பன் தெரு மாநகராட்சிப் பள்ளியில் படித்தவர். உண்மைக்கு மாறான செய்தியை முதலமைச்சர் சட்டமன்றத்தில் கூறினார்.
இந்திக்குச் செல்வாக்கு தேடுவதன் மூலம், வடவர் வல்லாண்மைக்குத் தலைவணங்கச் செய்யும் முயற்சி தமிழ் நாட்டில்தான் தொடங்கியது. 1938 இல் தொடங்கிய இந்த அழிவு முயற்சியை அடையாளம் காட்டும் ஒளிவிளக்கானார் நடராசன்.
தமிழ்வீரன் நடராசன்
பாவேந்தர் பாரதிதாசன். (பாவேந்தம் -18 பக்கம் 174.)
இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான்
இளங்காளை நடராசன் சென்னை வாசி
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்!
இடரான இந்திமொழி வீழ்க வீழ்க
என்றுரைத்தான் தமிழரிடம் தமிழ்நாட்டின்கண்!
அடாதசெயல் இது என்றார் இந்தி சர்க்கார்.
அழகியோன் தான்தன்னைச் சிறையில் கண்டான்
வஞ்சமிலாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரம்தான் கண்டதுவாம் அதுநாள் தோறும்
மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம்
தனக்கென்று வாழாத தமிழா என்று
தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!
தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
தமிழுக்குப் பெற்றோம்என் றகம்ம கிழ்ந்தார்
தன்னலத்தை எண்ணிஎண்ணித் தமிழர் நாட்டைத்
தரைமட்டம் ஆக்குகின்றார் அவர்போல் இன்றி
இன்தமிழில் கல்விகற்றான் நடரா சச்சேய்
எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான்.
- புலவர் செந்தலை ந.கவுதமன் (சூலூர், பாவேந்தர் பேரவை, கோவை)
(தொடரும்...)
- விவரங்கள்
- செந்தலை ந.கவுதமன்
- பிரிவு: தமிழ்நாடு
இரண்டாம் மொழிப்போர் 1948 - 1952
ஆங்கிலேயரிடம் அடிமையாய் இருந்த 1938-ஆம் ஆண்டிலேயே, தமிழரை அடிமைப்படுத்தும் முயற்சியை இந்தி வெறியர்கள் தொடங்கிவிட்டனர். எதிர்ப்பின் வலிமையால் கைவிடப்பட்ட, 'கட்டாய இந்தித் திணிப்பின்' விடுதலை பெற்ற இந்தியாவில் மீண்டும் தொடங்கினர்.
பள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என 20.6.1948 இல் மறுபடி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மதம், சாதி, கட்சி கடந்து தமிழினம் எழுப்பிய எதிர்ப்புப் புயல், அன்றைய கல்வியமைச்சரைப் பதவி விலக வைத்தது. கட்டாய இந்தி ஆணை மறுபடி திரும்பப் பெறப்பட்டது.
புதிய கல்வியமைச்சர் பொறுப்பேற்றார். 2.5.1950 இல் மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் அதே முயற்சியைத் தொடங்கினார். எதிர்ப்புப்புயல் மீண்டும் எழுந்தது. இந்தி கட்டாயப்பாடம் என்னும் அரசாணையைத் திரும்ப பெற்றுக் கொண்டு, 'இந்தி விருப்பப் பாடம்' என்ற முகமூடி அறிவிப்பு வந்தது.
இந்திய அரசியல் சட்டம் இந்திக்குத் தரும் தனிச் சலுகையைக் கண்டிக்கும் வகையில், தொடர்வண்டி நிலைய இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் 1.8.1952 இல் தொடங்கியது. தொடர்ந்து கறுப்புக் கொடிப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
'இந்தி திணிக்கப்பட மாட்டாது' எனக் குடியரசுத் தலைவரும் தலைமையமைச்சரும் அறிவித்தபின் போராட்ட அலை அடங்கியது.
மூன்றாம் மொழிப்போர் - 1965
தமிழக மொழிப்போர் வரலாற்றில் முற்றிலும் வேறுபட்ட வகையில் நிகழ்ந்தது 1965 மொழிப்போர்! பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை எதிர்த்து நடந்தவை இதற்கு முந்தைய மொழிப்போராட்டங்கள்.
'இந்தி மட்டுமே 26.1.1965ஆம் நாளிலிருந்து இந்திய ஆட்சி மொழியாக இருக்கும்' என்னும் அரசியல் சட்டத்தின் 243 ஆம் விதியைத் திருத்த வலியுறுத்தி நடந்தது மூன்றாம் மொழிப்போர்.
மாணவர்களே திட்டமிட்டு, மாணவர்களே ஒருங்கிணைத்து, மாணவர்களே செயல்படுத்திய மிகப் பெரும் மாணவர் போராட்டம்! உலக வரலாற்றில் இப்படியொரு மொழிப் போராட்டம் இதற்கு முன் நடந்ததாகச் செய்தியில்லை.
தீக்குளித்து மாண்டார்கள்! நஞ்சுண்டு மாண்டார்கள்! குண்டடிபட்டு மாண்டார்கள்! இறந்தவர்கள் எண்னிக்கை ஆயிரத்திற்கும் மேல்! உலக நாடுகள் ஒன்றிய (ஐ.நா) சபையில் பேசப்பட்டது, 1965 ஆம் ஆண்டு மொழிப்போர்!
இந்த மொழிப்போரில் தான் முதன்முறையாக இராணுவம் வந்தது. முதன் முதலாய்த் தமிழர்கள் குவியல் குவியலாய்க் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் நடந்தது. உலக வரலாற்றிலேயே மொழிக்காக முதன் முதலாய்த் தீக்குளித்த துயரம் நிகழ்ந்தது. முதன் முதலாய்த் தமிழகம் ('உள்நாட்டுப்போர்' என அறிவுக்கும் வகையில் )பதினெட்டு நாள்கள் செயலிழந்து நின்றது.
கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காகத் தன்னைச் சாம்பலாக்கிக் கொண்ட அவல நிகழ்ச்சி 25.1.1964ஆம் நாள் திருச்சியில் நடந்தது. நாட்டை நடுங்க வைத்த அடுத்த சனவரி 25 ஆம் நாளில், (ஓராண்டிற்கு பின்) 25.1.1965இல் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போர் தொடங்கியது. தொடங்கிய மொழிப்போர் 15.3.1965ஆம் நாள்வரை (50 நாள்)தொடர்ந்து நடந்தது.
ஐம்பது நாள்களும் இரத்தம் சிந்திய நாள்கள்!
அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லை.
- கோரிக்கைப் பேரணி
- அமைதிப் பேரணி
- உண்ணா நோன்பு
- அஞ்சலக மறியல்
- தொடர் வண்டி மறியல்
- பொது வேலை நிறுத்தம் - என மாணவர்களே திட்டமிட்ட போராட்ட வடிவங்கள்! நாடுதழுவி ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம்! "தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு" என மையப்படுத்தப்பட்ட அமைப்பு, அரசின் கவனத்தை ஈர்க்கப் படிப்படியாய் எடுத்த முயற்சிகள்!
"தமிழை இழக்க மாட்டோம்" எனத் தமிழ்ச் சமூகத்தின் இல்லாத தரப்பினரும் தம்மை இழக்க முன் வந்து 1965இல் போராடினர்"
இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி, 1965 மொழிப்போர் ஒத்திவைக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைமுறைக்கு வரஇருந்த ஆட்சிமொழிச்சட்டம், மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது மட்டும்தான் கண்ட பலன்!
‘ஆட்சிமொழி’ என்பது பயிற்று மொழி, தேர்வு மொழி, அலுவல் மொழி, தொடர்பு மொழி, எனும் நான்கு கூறுகளை உள்ளடக்கியது.
‘இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நடுவண் அரசால் பயன்படுத்தப்படும்’ என்னும் திருத்தச்சட்டம் 1968இல் கண் துடைப்பாகச் சேர்க்கப்பட்டது.
இந்தியுடன் ஆங்கிலம் நடுவணரசின் 16 துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறது அந்தத் திருத்தச் சட்டம்! உண்மையில் நடுவண் அரசிடம் இருப்பதோ 97க்கு மேற்பட்ட துறைகளுக்கான அதிகாரம்! வழங்கிய திருத்தத்தில் உயிரில்லை.
உயிரை இழந்து நடத்திய போராட்டத்தால், உயிரில்லாத திருத்தத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.
எந்த மொழியின் செல்வாக்கு ஆட்சித் துறையில் ஓங்குகிறதோ, அந்த இனத்தின் வல்லாண்மையும் மதிப்பும் ஓங்கி விடும். சமத்துவம் மொழிகளுக்கிடையே நிலவும்போது, சமுதாயத்திலும் நிலவ முடியும்.
மொழிப்போர் நினைவில் கண்கள் கலங்கி நெஞ்சம் கசிவோர், நடுவண் அரசின் வழியாக இப்போது நிறைவேற்ற வேண்டிய உடனடிச் செயல்கள் உள்ளன.
- இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள 22 தேசிய மொழிகளையும் சமமாய் நடத்த வேண்டும்.
- இந்தியைத் 'தேசிய மொழி' என்றும் தமிழை 'வட்டார மொழி' என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பாகுபடுத்தும் போக்கைக் கைவிட வலியுறுத்த வேண்டும்.
- அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளையே முழுமையான ஆட்சிமொழி ஆக்க வேண்டும்.
- (இந்தியை 1983 -இல் ஏற்றுக் கொண்டதுபோல்) 22 தேசிய மொழிகளையும் திட்டக்குழுவின் திட்டப்பொருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது இந்தியைத் திட்டப் பொருள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
- 1976க்கு முன்பு இருந்ததுபோல், கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு வழங்க வேண்டும்.
செல்ல வேண்டிய திசையை அறிந்து நடைபோடட்டும் நமது கால்கள்!
தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர்
‘வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பபற் றெங்கே? விழிப்புற் றெழுக!'
- எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாட்டால் கேள்வி எழுப்பித் தமிழுணர்வை எழுப்பினார்.
வாழ்வால் கேள்வி எழுப்பி, நம்மை விடை காணச் சொல்கிறது மொழிப்போர் வீரர்கள் வரலாறு!
சிறையில் மாண்டோர்
15.1.1939 - நடராசன்
12.3.1939 - தாளமுத்து
தீக்குளித்து மாண்டோர்
25.1.1964 - கீழப்பழுவூர் சின்னச்சாமி
26.1.1965 - கோடம்பாக்கம் சிவலிங்கம்
27.1.1965 - விருகம்பாக்கம் அரங்கநாதன்
27.1.1965 - கீரனூர் முத்து
11.2.1965 - அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்
11.2.1965 - சத்தியமங்கலம் முத்து
15.3.1965 - மயிலாடுதுறை சாரங்கபாணி
துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர்
27.1.1965 - சிவகங்கை இராசேந்திரன்
10.2.1965 - கோவை, குமாரபாளையம், வெள்ளக்கோவில், திருப்பூர். கரூர், மணப்பாறை முதலிய 40 இடங்களுக்கு மேல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 பேருக்குமேல் இறந்தனர்.
12.2.1965 - ஒரே நாளில் நூற்றுக்கனக்கானோர் இராணுவத்தால் சுடப்பட்டு, குவியல் குவியலாய் உடல்கள் குழிக்குள் தள்ளி மறக்கப்பட்ட ஊர் பொள்ளாச்சி.
நஞ்சுண்டு மாண்டோர்
25.2.1965 - விராலிமலை சண்முகம்
2.3.1965- கோவை பூளைமேடு தண்டபாணி
வாளெடுத்துக் கொள்ளுங்கள்
தோளெடுத்துப் பொங்குகின்ற தமிழ்மறவீர்!
இந்தியினைத் தொலைத்தற் கென்றோர்
நாளெடுத்துக் கொள்ளுங்கள்; தாய்மனைவி
மக்கள்முன் தமிழைக் காக்கச்
சூளெடுத்துக் கொள்ளுங்கள்; வடவர்நெறி
மேன்மேலும் சூழின், கூர்த்த
வாளெடுத்துக் கொள்ளுங்கள்; வந்தமையும்
செந்தமிழ்த்தாய் வாழ்வும் அன்றே!
- கனிச்சாறு. பெருஞ்சித்திரனார்
- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர், பாவேந்தர் பேரவை, கோவை
(தொடரும்...)
- விவரங்கள்
- செந்தலை ந.கவுதமன்
- பிரிவு: தமிழ்நாடு
‘தமிழக மொழிப்போர் ஈகியர் வரலாறு
பிறமொழிச் செல்வாக்கு
விடுதலை வீரர் டி - வேலரா அயர்லாந்து நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரிடம் ஆங்கிலேய அரசு கேட்டது, 'உங்களுக்கு மொழி வேண்டுமா? நாடு வேண்டுமா?'
'எங்களுக்கு முதலில் மொழி வேண்டும். பிறகு நாடு!'
தெளிவாய்ச் சொன்னார் டி. வேலரா (Éamon de Valera).
மொழி உரிமை ஓர் உந்து விசை. அது ஒவ்வோர் உரிமைக்கும் உந்தித் தள்ளும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
மொழியைக் காப்பாற்றும் உணர்வுள்ளோரிடமும், மொழி பேசும் இனத்தையும் இனம் வாழும் நாட்டையும் காப்பாற்றும் உணர்வு கட்டாயம் இருக்கும்.
அந்நிய மொழிக்கு ஆதரவான மனநிலையை உருவாக்கிக் கொண்ட இனத்தை எளிதாக அடிமைப்படுத்திவிடலாம்.
அடுத்தவர் மொழியைச் சார்ந்து வாழப் பழகியோர், 'தமது மொழி தமது நாடு' என்னும் அக்கறையை இழந்து விடுவர்.
இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் முதலிய அந்நிய மொழிகளுக்கு இங்கே செல்வாக்கு தேடும் முயற்சி தொடர்வதன் காரணம் அது தான்!
வழிகாட்டும் வங்கமொழி!
தாய்மொழி காக்கப்படவேண்டும் என உலக நாடுகள் ஒன்றியம் (ஐ.நா) வலியுறுத்துகிறது. பிப்பிரவரி 21 ஆம் நாள் 'உலகத் தாய்மொழி நாள்' என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் ஆண்டுதோறும் அதைக் கொண்டாடி வருகின்றன.
முதல் மொழிப்போரில் (1938) கட்டாய இந்தி கைவிடப் பட்ட நாள் பிப்பிரவரி 21 . அந்த வகையில் நாமும் உலக மொழிப்போரை ஆண்டுதோறும் நினைவுகூர அந்த நாள் உதவும்.
வங்க மொழியைக் காக்க 1957 ஆம் ஆண்டில் நான்கு பேர் உயிரிழந்த நாள் பிப்பிரவரி 21 .வங்கமொழிக்காக நான்கு பேர் இறந்த நாளை 'உலகத் தாய்மொழி நாள்' என உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழ்மொழியைக் காப்பதற்காகப் பல நூறுபேர்களைப் பலி கொடுத்துள்ளோம் நாம்!
தமிழின வீர வரலாறு உலகத்திற்கு உணர்த்தப்பட வேண்டும் .
உயிர்காக்க உயிர்தந்தோர்
சமற்கிருதக் கறைபடியாத ஒரே இந்திய மொழி தமிழ்! தமிழின் எதிர்காலத்தைக் காப்பதற்காக தங்கள் எதிர்காலத்தை இழக்கத் துணிந்த மாவீரர்களைத் தமிழினம் மறக்கக் கூடாது.
தமிழ் காக்கும் மொழிப்போரில் தீக்குளித்தும் நஞ்சுண்டும் குண்டடிபட்டும் பலியான தமிழர்கள் பல நூறு பேர்!
நான்கு மொழிப்போர்களைத் தமிழகம் நடத்திவிட்டது.
1938 - 1940: முதல் மொழிப்போர்
1948 - 1952: இரண்டாம் மொழிப்போர்
1965 - ஐம்பது நாட்கள் - மூன்றாம் மொழிப்போர்
1986 - நூற்று நாற்பத்து நான்கு நாட்கள் - நான்காம் மொழிப்போர்
மொழிப்போரும் வரலாறு வழங்கும் வெளிச்சத்தில் புலப்படும் உண்மைகள் பல.
முதல் மொழிப்போர் 1930 - 1940
கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து எழுந்தது முதல் மொழிப்போர்! பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டு 21.4.1938 இல் அரசாணை வெளி வந்தது அரசாணை வெளிவரவுதற்கு முன்பே, இந்தித் திணிப்பை எதிர்க்கும் முதற்குரல் 27.8.1937 ஆம் நாள் தஞ்சையில் எழுந்தது. மறியல் போராட்டம் தொடங்கியது. சென்னைச் சிறையில் நடராசன் தாலமுத்து இருவரும் களப்பலியானார்கள்.
3.6.1938 இல் தொடங்கிய சிறை நிரப்பும் போராட்டம் 21.2.1940 இல் முடிவுக்கு வந்தது.கட்டாய இந்தித் திணிப்பு அரசாணையை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது கட்டாய இந்தித் திணிப்பு கைவிடப்பட்ட பிப்பிரவரி 21, இன்று உலகத் தாய்மொழி நாள்!
முதல் உலகப்போரை வழிநடத்தியவர் தந்தை பெரியார். இந்தித் திணிப்பை எதிர்த்து 1926 முதல் எழுதியும் பேசியும் விழிப்பூட்டியவர் அவர் .
கட்சிக் கண்ணோட்டமின்றித் தமிழர் அனைவரும் பங்கேற்கும் வகையில் 1938 மொழிப் போரை நடத்த பெரியார் திட்டமிட்டார். அதனால் அரசியல் முகமாகப் பெரியாரும் பண்பாட்டு முகமாக மறைமலையடிகளாரும் நாவலரும் ச.சோம சுந்தர பாரதியாரும் மொழிப்போரில் முன் நிறுத்தப்பட்டனர்.
முதல் மொழிப்போர் வெடிக்கக் கருத்துநிலைத் தூண்டுதலாய் இருந்து மூவர் ஈழத்து சிவானந்த அடிகள், புலவர் அருணகிரிநாதர், அறிஞர் அண்ணா.
சென்னையில் இதற்கானப் பணிகளைத் திட்டமிட்டு களம் அமைத்த மூவர் செ.தெ. நாயகம், காஞ்சி மணிமொழியார், சண்முகாநந்த அடிகள்.
முதல் மொழிப்போரின் எழுச்சியால் எழுந்த தமிழகம் 1938 மொழிப்போரை "முதல் தமிழ்த் தேசியப் போர்" என அடையாளங் கண்டது. தந்தை பெரியாரை "தமிழ்தேசியத் தந்தை" எனப் போற்றியது., பாவேந்தர் பாரதிதாசனைத் "தமிழ்த் தேசியத் புரட்சிப் பாவலர்" என அறிமுகப்படுத்தியது.
இருவரைப் பலிகொண்டு முதல்மொழிப்போர் முடிவுற்றது.
எல்லாரும் வாருங்கள்
(1938 ஆம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய இந்தி எதிர்ப்புப் படையின் போர்ப்பாட்டு இது)
இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் – நீங்கள்
எல்லோரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழுக் குத்தீமைவந்த பின்னும் - இந்தத்
தேக மிருந்தொரு லாபமுண்டோ? (- இந்தி)
விந்தைத் தமிழ்மொழி எங்கள் மொழி! – அது
வீரத் தமிழ் மக்கள் ஆவிஎன்போம்!
இந்திக்குச் சலுகை தந்திடுவார் – அந்த
ஈனரைக் கான்றே யுமிழ்ந்திடுவோம்! (- இந்தி)
இப்புவி தோன்றிய நாள்முதலாய் – எங்கள்
இன்பத் தமிழ்மொழி உண்டு கண்டீர்!
தப்பிழைத் தாரிங்கு வாழ்ந்த தில்லை – இந்தத்
தான்தோன்றி கட்கென்ன ஆணவமோ? (- இந்தி)
எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? – இந்தி
எத்தனைப் பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை – அதன்
ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்! (- இந்தி)
எங்கள் உடல்பொருள் ஆவியெலாம் – எங்கள்
இன்பத் தமிழ்மொழிக் கேதருவோம்!
மங்கை ஒருத்தி தரும்சுகமும் – எங்கள்
மாத்தமிழ்க் கீடில்லை என்றுரைப்போம்! (- இந்தி)
சிங்கமென் றேஇளங் காளைகளே – மிகத்
தீவிரங் கொள்ளுவீர் நாட்டினிலே!
பங்கம் விளைத்திடல் தாய்மொழிக்கே – உடற்
பச்சைரத் தம்பரி மாறிடுவோம்!
தூங்குதல் போன்றது சாக்காடு! – பின்னர்
தூங்கி விழிப்பது நம்பிறப்பு!
தீங்குள்ள இந்தியை நாம் எதிர்ப்போம் – உயிர்
தித்திப்பை எண்ணிடப் போவதில்லை!
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை – எமை
மாட்ட நினைக்குஞ் சிறைச்சாலை!
ஏங்கவிடோம் தமிழ்த் தாய்தனையே – உயிர்
இவ்வுடலை விட்டு நீங்கும்வரை!
- புலவர் செந்தலை ந.கவுதமன் (பாவேந்தர் பேரவை, சூலூர்)
(தொடரும்...)