முகவுரை:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வரலாற்று ஆதாரங்களின் படி இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாண எல்லைப்பரப்பை விடப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்படுகின்றது. வடகீழ் மாகாணம் 18,333 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் 558 சதுரகிலோமீற்றர் உள்நாட்டு நீர்ப்பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு என்பன வடமாகாணத்தினுள்ளும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகாணத்தினுள்ளும் அமைகின்றன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவசாயமே பாரம்பரியப் பொருளாதார நடவடிக்கையாக, நீண்டகாலமாக பெரு மாற்றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. பிற்காலத்தில்; விவசாயத்துறையில் புகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவி உள்ளன. இதில் மாற்றுவிவசாயம், விவசாய உள்ளீடுகள், நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப முறைகள் குறிப்பிடத்தக்கவை.

நிலப்பயன்பாடு:-

தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடக்கியுள்ள வடக்கு – கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.

01) தோட்டச்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

02) நெற்செய்கையோடு தொடர்பான விவசாய நிலப்பயன்பாடு

இப் பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.43 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைக்கீழ் நீர்வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவினதான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச்செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிரச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுர மைலுக்கு 3000க்கு மேற்பட்டோர் வாழ்கி;ன்றனர்.

யாழ்ப்பாண குடாநாடு 1025 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்கு பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப்பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.

இப்பகுதித் தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், பழ வகைகள் என்பன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவுத்தேவையின் கணிசமான பங்கு யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே யுத்தத்திற்கு முன்னர்  பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்கு உட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக் குடாநாடே அடக்கியிருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில் நுட்பமுறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம், செயற்கை உரம், களைநாசினி, கிருமி நாசினி என்பன பெருமளவு பயன்படுத்தப்பட்டு விவசாய உற்பத்தி உயர்வடைந்த நிலை காணப்பட்டது.

யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியின் நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு, மேட்டு நிலப்பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும் புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாகப் பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள்ளன. முன் காடுகளாக இருந்து தற்போது நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டன.

1935 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராம விஸ்தரிப்புத் திட்டம், மத்திய வகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும், நிலமற்றோருக்கு நிலமளிக்கவும், வேலையற்றிருந்தோருக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநெச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், திருகோணமலையில் கந்தளாய் குளத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிசசைக்குளத்திட்டம், அம்பாறையில் கல்லோயாத்திட்டம் என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். பிற்;காலங்களில் இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உபஉணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை மேட்டு நிலப்பயிர்களை ஊக்குவிப்பனவாகவும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாய அபிவிருத்தி திட்டங்களாகவும் அமைந்தன.

இவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளைஞர் திட்டம், கிளிநெச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு, இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவனவாக விருத்தியடைந்திருந்தன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டேயர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் பரப்பில் 31.3 வீதமாக அமைகின்றது. இப் பிரதேசத்தின் மொத்த நெல் விளை பரப்பில் 62 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கியுள்ளது. மொத்த நெல் விளை நிலத்தில் 33 வீதம் பருவ கால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசன வசதியுடைய நிலங்கள் சிலவற்றிலே வருடத்திற்கு இருதடவை நெல் விளைவிக்கப்படுகின்றது. வருடத்திற்கு இரு தடைவ நெல் விளைவிக்கப்படும் விளைபரப்பு 28 வீதமாக அமைகின்றது.

பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல் விளைபரப்பு பருவ மழையை நம்பியதாகையால் பருவமழை பெய்துவரும்; காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந் நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இருபோகச் செய்கையை மேற்கொள்ளவும் ஏற்கனவே பயிர்செய் பரப்பாகப் பயன்பட்டு வரும் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரித்தல் வேண்டும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர்வளம், பாசன வாய்ப்புகள் பற்றி தெளிவு அவசியமாகும்.

நீர்வளமும் நீர்ப்பாசனமும்

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுக்கு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைந்துள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருக்கு (75 அங்குலம்) குறைந்த மழைவீழ்ச்சி பெறும் இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் வருடச் சராசரி மழைவீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள்ளன. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்தளவான 750 மி.மீ முதல் 1000 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் மேற்குப் பகுதிகள்  உயர்ந்தளவான 2000 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சியை பெறுகின்றன. எனினும் 1000-2000 மி;மீ வரை (50- 75 அங்குலம்) மழை பெறும் பரப்பளவே தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் அதிகமாகும். அதாவது யாழ்ப்பாணம், கிளிநெச்சி, வவுனியா, திருகோணமலை மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை ,மட்டக்களப்பு  மாவட்டங்களின் பெரும் பாகமும் 1000 மி.மீ முதல் 2000 மி.மீ வரை மழை பெறும் பகுதிகளாக அமைகின்றன.

இப்பகுதி வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர், முதல் ஜனவரி வரையிலான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இப்பகுதியில் வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70 வீதம் மேற்படி நான்கு மாத காலத்திற்குள்ளாகவே பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் மழை நீரில் 20-25 வீதம் புவி மேற்பரப்பு ஓடு நீராகக் கடலையடைகின்றதெனவும் 40–45 வீத நீர் ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்றதெனவும், எஞ்சிய நீரே பயன்பாட்டிற்குரியதாக அமைகின்றதெனவும் சில கணிப்பீடுகளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில் மழைவீழ்ச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவி மேற்பரப்பு நீராகவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப் பாசனப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர் வளங்களை இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) புவி மேற்பரப்பு நீர்வளம்

02) தரைக்கீழ் நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர்வளம்

புவி மேற்பரப்பு நீர் வளமே யாழ்ப்பாணக்குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப்பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வளமாய் உள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கியமாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாசனத்திற்குப் பயன்படுகின்றது.

புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பவற்றில் தேக்கப்படும் நீரினைக் குறிக்கும். இப்பிரதேசத்தில் மகாவலி தவிர ஏனையவை வறண்ட பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் ஆறுகளேயாகும். பருவ காலங்களில் மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீர் வளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுகளையோ கிளை ஆறுகளையோ அவற்றின் வடிநிலப்பரப்பில் தடுத்து அணைகட்டி குளங்களாக உருவாக்கியுள்ளனர். ஒரு சில ஆறுகள் திசைதிருப்ப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பாசன நாகரிகம் கிறீஸ்து காலத்திற்கு முன்பாகவே தமிழர் பிரதேசங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிப்பிடுகின்றது. குவேனி விஜயனைச் சந்தித்தபோது இவ்வாறான குளமொன்றின்  அணைக்கட்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். எனவும், அக்குளம் மன்னார் பிரதேசத்தில் அமைந்திருந்ததெனவும் மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகள் சிலவற்றிலிருந்து தெரிய வருகின்றது.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும் குளங்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.

01) சிறு குளங்கள்( இவை 200ஏக்கர் பரப்பளவுக்கு உட்பட்டவை)

02) நடுத்தரக் குளங்கள்(200-1500 ஏக்கர் பரப்பளவுக்கு இடைப்பட்டவை)

03) பாரிய குளங்கள் ( 1500 ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்டவை)

இவற்றுள் சிறு குளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்திடம் உள்ளது. ஏனையவை நேரடியாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களமே இந் நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு நீர்ப்பாசனத்திட்டங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது.

1959 இல் நீர்ப்பாசனத்திணைக்களம் இலங்கைத்தீவின் உள்ளார்ந்த நீர்வளம் பற்றிய குறிப்புகளுடன் படம் ஒன்றினை வெளியிட்டது. இதில் இலங்கையிலுள்ள 103 ஆற்று வடிநிலங்கள் பலவற்றில் பெருந்தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள், அமைத்து பாசன அபிவிருத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் விபரமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நீர்ப்பாசனத்திணைக்களம், வடிகால் விருத்தியையும் நீர் வெளியேறும் அளவையையும் கருத்தில் கொண்டு ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கப்பெறும் நீரின் ஆண்டுச் சராசரி அளவை மதிப்பிட்டுப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி வவுனியாவையும் ஆனையிறவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் அளவானது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏக்கர் அடி நீராகக் குறைந்து செல்வதையும் கோட்டிற்கு கிழக்காக முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பிரதேசம் வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும் படம் காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒரு சதுரமைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500 ஏக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதிலிருந்து வடமாகாணத்தை வடகிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடிய நீரின் அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும் நீரின் அளவும் கணிக்கப்படின், தேக்கிப் பயனபடுத்தத்தக்க நீர்வளத்தின் அளவை மதிப்பிட்டு பாசனத்தை அபிவிருத்தி செய்தல் இலகுவானதாகும்.

பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பாசன அபிவிருத்திக்கு உள்ளார்ந்த நீர் வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளங்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எண்ணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகாணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக் கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிக்கக்கூடிய அமைப்புக்களுடனும் காணப்படுகின்றன. இவ் இணைப்பானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகால் இணைக்கும் வகையிலும் அமைக்கப்படலாம். இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிலத்தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் உள்ளன.

தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருத்தி செய்யக்கூடிய உள்ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு. இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.

01) ஏலவேயுள்ள விளை நிலங்களில் விளைவை அதிகரித்தல்

02) புதிய நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல்

ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளைவை அதிகரிப்பதற்கு பசுமைப்புரட்சி அளித்த நவீன விவசாய அபிவிருத்தி செய்முறையினை நல்ல முறையில் பரவச் செய்தல் வேண்டும் நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றப்படுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் அக்கறையான விஞ்ஞானப+ர்வமான முறையிலான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை.

விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகங்கள் நெற்செய்கை மேற்கொள்வதாகும். இது நீர்ப்பாசன வசதிகள் அதிகரிக்கப்பட்டால் சாத்தியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைப்போகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப்பகுதியில் பலர் வெற்றி கண்டுள்ளனர்.

புதிய நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கவேண்டும் என்ற கருத்தை மனதிற் கொண்டு திட்டமிட்ட முறையில் புதிய விவசாய குடியேற்றத்திட்டங்களை இப் பகுதிகளில் ஏற்படுத்தலாம். ஏலவேயுள்ள குடியேற்றத்திட்டப் பகுதிகளை விஸ்தரித்தலிலும் சாத்தியமே. இந் நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசன வசதிகளைத் திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண்டும். இப்பிரதேசத்தில் ஏலவே அபிவிருத்தி செய்யப்பட்ட நீர்ப்பாசனக்குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, நடுத்தர, சிறு குளங்களை இணைப்பதன் மூலமும், முடிந்தால் வடிநிலத் திசைதிருப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீர்ப்பாசன வளங்களை அதிகரித்து விவசாய நிலப்பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 60 வடிநிலங்களில் சிலவே இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளன. பல பயனபடுத்தக்கூடிய உள்ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமமாகும் பறங்கியாறு இதுவரை பாசன வசதிக்காக  முறையாகப் பயனபடுத்தப்படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர்கள் கருத்துகின்றனர். இதுபோன்றே வவுனிக்குளத்திட்டத்தின் கீழ் உள்ள பாலியாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரியப் பிரதேச பிரதான நிலப்பகுதியில் முறையான திட்டமிடல் நடவடிக்கைகள் மூலம் பாரம்பரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.

தரைக்கீழ் நீர்வளம்

தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மனித வாழ்வுக்கும் வளத்திற்கும் வரலாற்றுக்காலம் முதல் அடிப்படையாக இருந்து வருகின்றது. வட மாகாணத்தின் மொத்தக் குடித்தொகையில் 70 வீதத்தினர் யாழ்.குடாநாட்டில் செறிந்திருப்பதற்கும் குடாநாடு செறிந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக்கும் தரைக்கீழ் நீர்வளமே காரணமாகும்.

புத்தளத்தில் இருந்து பரந்தன், முல்லைத்தீவை இணைத்து வரையப்படும் கோட்டிற்கு வடமேற்காகவுள்ள பகுதிகள் மயோசின்காலச் சுண்ணாம்பு பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்து வைக்கக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். சுண்ணக்கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்புகவிடும் இயல்பை அதிகளவு கொண்டவையாகவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்படும் நீர் இப்பகுதிகளில் இலகுவாக உட்புகுந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதிகளிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும் போது இவ் வில்லையின் தடிப்பு அதிகரித்துச் செல்லுகின்றது. ஆகக்கூடிய தடிப்பு 100 அடி முதல் 110 அடி வரை உள்ளது. இந்த வில்லையானது யாழ்ப்பாணக் குடாநாட்டின் நடுவேயுள்ள உவர் நீர் ஏரிகளினால் துண்டுகளாக்கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீர் வில்லை துண்டுபடாது தொடராக அமையும்.

சுண்ணக்கற் பாறைப் படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ் பாகத்திலும் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகப் பகுதியிலும் காணப்படுகின்றன. இதனால் அதிகம் ஆழமற்ற கிணறுகளை தோண்டுவதன் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின்றது. மாறாக புத்தளம், பரந்தன், முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற்காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண்ணக்கற்படை ஆழமானதாகக் காணப்படுகின்றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செலவில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக்கீழ் நீரைப் பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.

கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தோண்டப்பட்டன. யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே ஆரம்பமாகிறது. அக்காலத்தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக்கீழ் நீரைக் குடிப்பதற்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளமைக்கான சான்றுகள் நிறைய உண்டு. கிணறுகளில் இருந்து மனித சக்தியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளுர் சூத்திர முறையாலும் நீரானது பாசனத்திற்குப் பெறப்பட்டு வந்துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை பிற்பட்ட கால கட்டங்களில் உப உணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவானதும் நவீனத்துவமானதுமான பயிர்ச்செய்கை முறையாக மாறிய பின்னர் நீர் இறைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது.

இவற்றினால் அண்மைக் காலங்களில் குடாநாட்டின் பல பகுதிகளில் தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சனைகள் தோன்றியுள்ளன. இது அபாயகரமானதோர் நிலைமை என்பதில் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறையில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளார்ந்த தரைக்கீழ் நீர்வளம், அதன் பாவனை, அவற்றின் முகாமைத்துவம், அபிவிருத்தி என்பவைகள் பற்றி நுண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965 இல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வளசபை வடபகுதி தரைக்கீழ் நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருத்தி செய்யும் வாய்ப்புகள் பற்றியும் சில ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும் இன்றுவரை அவை முறையாக வெளியிடப்படவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வளம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் முன்னெப்போதுமி;ல்லாதவாறு இன்றைய காலகட்டத்தில் மிக அக்கறையுடன் சிந்திக்க வேண்டியவர்களாகவுள்ளோம். திட்டமிட்ட முறையில் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டிய தேவையும் உண்டு. மேல் விபரித்த அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய்ய வேண்டிய பணிகள், ஆலோசனைகள் என்பன இங்கு அனைவரதும் அக்கறையான கவனத்திற்கு முன்வைக்கப்படுகிறது.

சில அபிவிருத்தி ஆலோசனைகள்

யாழ்ப்பாணத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும் போது அவற்றின் அபிவிருத்தி அம்சமே முன்னுரிமை பெறுகின்றது. யாழ்ப்பாணக்குடாநாட்டில், இனிமேலும் நாம் விவசாய விரிவாக்கத்தை: முக்கியமாக விளைபரப்பை அதிகரித்து மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுவது தவறாகும். இது “உள்ளதையும் கெடுக்கும்” ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும் விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலானதாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைகளிலும் நவீனத்துவத்தை கையாண்டு நல்ல முறையில் பாசன முகாமைத்துவத்தைப்  பேணி வீண் விரயமாதலைத் தடுத்து ஏலவே உள்ள விவசாய நிலப்பயன்பாட்டை உச்ச வருமானம் தரத்தக்கதாக மாற்றி அமைப்பதே சிறந்த வழியாகும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்பயன்பாடு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாக மாற்றப்பட வேண்டும். அதிக செலவில் விவசாயம் செய்யும் இப்பகுதியில் ஒவ்வொரு அங்குல நிலமும் உச்ச பயன் தரத்தக்கதாக அமைதல் வேண்டும். விவசாய அபிவிருத்தி விவசாய வர்த்தக முறையிலமைந்ததாக அமையப்பெற வேண்டும். யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் நெற்பயிர்ச்செய்கை தவிர்க்கப்பட்டு அதிக வருமானம் தரத்தக்க பணப்பயிர்ச்செய்கை விருத்தி செய்யப்பட வேண்டும். உப உணவு, காய்கறி, பழச்செய்கை, பானப்பயிர் செய்கை, எண்ணை வித்துப் பயிரச்;செய்கை போன்றனவாக இவை அமைய வேண்டும். உற்பத்திகளில் சில விவசாய கைத்தொழில்துறை விருத்திக்கு மூலப்பொருள்களை வழங்குபவையாகவும் இருக்கவேண்டும். உண்மையில் இப்பகுதியில் புகையிலை செய்கை, காய்கறி செய்கை, திராட்சைப் பழச்செய்கை என்பன ஊக்குவிக்கப்படுதல் வேண்டும். ஏனெனில் இவை செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர் வளத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் தருவதோடு விவசாய கைத்தொழில் விரிவாக்கத்திற்;கும்  உதவுவதாகும். தேயிலை, இறப்பர் ஏற்றுமதியில் இலங்கை அந்நியச்செலாவணி பெறுவது போல் நாம் இவற்றால் அந்நியச்செலாவணியை பெறலாம்.

நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் விவசாயச் செய்கை நகரச் சந்தையின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய்யக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படுதல் வேண்டும். சந்தை நிலமைக்கேற்பவும் யாழ்ப்பாண விவசாயம் மாற்றமுறுதல் வேண்டும். இவ்வகையான நிலப்பயன்பாட்டு மாற்றமே யாழ்ப்பாண பகுதியில் வேண்டப்படுவதாகும்

மழை நீரை தேக்குதலும் குளங்களின் தூர் அகற்றுவதும்.

யாழ்ப்பாணக் குடாநாடு தரைக்கீழ் நீரின் மீள்நிரப்பும் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்பதில் பலர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இங்கு குறுகிய காலத்திற் கிடைக்கப்பெறும் ஒரே ஒரு மீள் நிரப்பியான மழை வீழ்ச்சியால் கிடைக்கும் நீரை மேற்பரப்பில் ஓடி வீணே கடலை சென்றடைய விடாது தடுத்து அவற்றைத் தரைக்கீழ் நீராகச் சேமிப்பதற்கு சகல வழிகளிலும் நாம் முயலுதல் வேண்டும். யாழ்ப்பாணக் குடிhநாட்டின் சுண்ணக்கற் புவியமைப்பின் காரணமாக சுண்ணக்கற் கரைசலால் ஏற்பட்ட 1050 குளங்கள் காணப்படுகின்றன. இக்குளங்களில் நிறையும் தண்ணீரில் பெரும்பகுதி தரையின் கீழ்ச் சென்று நீர்வளத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இவ்வாறான குளங்கள் குப்பை, கூழங்கள் கொட்டப்படுவதாலும் தூர் சேர்ந்தமையாலும் நீரினை உட்செலுத்தும் தன்மையில் குறைவடைந்து காணப்படுகின்றன. இவ்வாறான குளங்களைத் துப்புரவு செய்தலும் தூர் அகற்றுதலும் அவசியம.; இங்கு இவ்வறான முயற்சிகள் அரிதாகவே இடம்பெறுகின்றன.

தோட்டங்களை இணக்குவதற்கு குளங்களின் மண், மக்கி, எடுக்க அனுமதிக்கும் முறை இங்கு உண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீர்ப்பீடம் வெளித்தெரியக் கூடியளவிற்கு ஆழமாக்க விடுதல் கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள் மூலம் தரைக்கீழ் நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப்பிட்ட ஆழம் வரையே மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில பகுதிகளில் சுண்ணக்கல் நிலத்தோற்றத்தில் ஒன்றாக தரைக்கீழ் நீர் ஓடும். குகைகள் சில மேற்பரப்பு இடிந்த நிலையில் காணப்படுகின்றன. நிலாவரைக்கிணறு, குரும்பசிட்டி பேய்க்கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, கீரிமலைக் கேணி, அல்வாய் மாயக்கைக் குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊறணிக்கிணறுகள், யமுனா ஏரி என்பன இவ்வகையில் அமைந்த குகைப் பள்ளங்கள் ஆகும். இவற்றில் சில பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொண்ட பின் பயன்படுத்தத்தக்க வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.

நிலாவரைக்கிணற்றில் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி நாள் ஒன்றிற்கு  10 மணித்தியாலங்களில் 30,000 – 40,000 கலன் நீர் தோட்டப் பாசனத்திற்காக அக் கிணற்றில் இருந்து எடுக்கக்கூடிய தன்மை தெரிய வந்தது. இவற்றைப் பாசனத்திற்காக மாத்திரமன்றி, மழைக்காலங்களில் பெருமளவு நீரைத் திட்டமிட்ட அடிப்படையில் தரைக்கீழ்நீர் மீள் நிரப்பியாக உட்செலுத்துவதற்கும் பயன்படுத்த இயலும். இது இப்பகுதிகளின் தரைக்கீழ் நீர்வளத்தை பெரிதும் அதிகரிக்கக்கூடியதாக அமையும் என துணியலாம்.

தரைக்கீழ் நீர் குகைவழிகள் மூலம் நீரானது கடலைச் சென்றடையும் நிலையும் இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும்  நீர் இதற்கு உதாரணம் ஆகும். தரைக்கீழ் நீரைக் கடலில் கலக்க வைக்கும் குகை வழிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்டறியப்பட்டு அவற்றை நிலத்தின் கீழாக அணைகட்டித் தடுக்கவேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டிருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற்சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

நன்னீர் ஏரித்திட்டம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர்கால வாழ்வுக்கும் வளத்திற்கும் இன்றியமையாத திட்டம் பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல் நீரேரிகளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திட்டம் பற்றிச்  சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரேரித் திட்டங்களால் யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும் நீர் தரைக்கீழ் நீரின் மீள் நிரம்பியாக மாறும். குடாநாட்டுத் தரைக்கீழ் நீர் வில்லைகள் துண்டுபடாது தொடராகவே இருக்கும். குடாநாட்டின் உவர்நீராதல் பிரச்சனைகள் கணிசமான அளவு குறையும். உவர் நிலங்கள் வளமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாட்டின் நிலப்பரப்பும் நன்னீர் பரப்பும் அதிகரிக்கும். இவ்வாறு பல நன்மைகள் நன்னீர் ஏரியாக்கும் திட்டம் எமக்கு வழங்குமெனத் துணியலாம். உண்மையில் இப்பகுதிக் கடல்நீரேரிகளை  நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றிய சிந்தனை நூறு வருடம் பழமை வாய்ந்தது. 1922இல் இரணைமடுக் குளத்தேக்கம் பாரிய அணை கட்டி உருவாக்கப்பட்டபோது ஆனையிறவுக் கடல் நீரேரியை நன்னீரேரியாக்கும் திட்டம் பற்றியும் கூறப்பட்டிருந்தமை மனங்கொள்ளத்தக்கது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் நன்னீரேரிகளாக மாற்றப்படக்கூடிய 13 கடனீரேரிகளும் நடைமுறையிலுள்ள 33 உவர்நீர்த்தடுப்புத் திட்டங்களும் உள்ளன. மேற்படி 13 கடனீரேரிகளில் நான்கு கடனீரேரிகளை அதிக செலவின்றி நன்னீரேரிகளாக மாற்றமுடியும். அவையாவன.

01) ஆனையிறவு மேற்கு கடனீரேரி

02) ஆனையிறவு கிழக்கு கடனீரேரி

03) உப்பாறு மற்றும் தொண்டைமானாறு கடனீரேரி

மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிகளாக  மாற்றும் திட்டங்கள் பல உருவாக்கப்பட்டு அவற்றில் சில பகுதிகள் செயற்படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோ வழிகளில் கடல்நீரை உள்ளே வர விடுவதனால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக்காதுள்ளன. இத் திட்டங்களை நல்ல முறையில் செயற்படுத்துதல் இன்றியமையாததாகும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருள் செலவின்றி நன்னீரேரியாகக் கூடிய வாய்ப்பு உண்டு. உதாரணமாக மண்டை தீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். மற்றும் பண்ணைத் தாம்போதியையும் அராலித் தாம்போதியையும் முற்றாக மூடுவதன் மூலம் யாழ்.நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் பாரிய நன்னீரேரித் தேக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வளம் பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கப்பட்டு அவற்றை வளமான விளைநிலங்களாக மாற்றமுடியும். இது நில, நீர் பற்றாக்குறையால் அல்லல்படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமெனலாம்.

கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.

01) சூழல் மாசடைதல் தொடர்பானது

கடல் நீரேரிகளில் நீர்வரத்து தடைப்பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும் காலங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீது வேகமாக வீசும் காற்றினால் (சோழக்காற்று) புழுதி வாரி வீசப்படுமென்றும் இதனால் இத்திட்டம் சுற்றுப்புறச் சூழல்மாசடையும் அபாயத்தை கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்றார்கள். இந்த அபாயத்தை இலகுவாக சமாளிக்கலாம். நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற்றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிகளில் திட்டமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சனையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புகள் பெருமளவு மீட்கப்பட்டு புல் வளர்ப்பிற்கு உட்படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத்திக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.

02) கடல் நீரேரிகளில்  மீன்பிடித் தொழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற்துறை பாதிப்புறும் என்ற கருத்து

இத்திட்டத்தால் பாதிப்புறும் மக்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான வேறு கரையோரப்பகுதிகளில் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது இயலக்கூடியதே. குடாநாட்டு பரவைக் கடற்பரப்புகளில் மீன்பிடித் தொழில் ஈடுபடுவதைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வைப்பது பொருளாதார அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை விளைவிப்பதாக அமையும். எனவே பாதிப்புறும் மக்களை குடாநாட்டின் அல்லது பிரதான நிலப்பகுதியின் கிழக்கு கரையோரமாகக் குடியேற்றி ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிக்கலாம். இம்மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும் நீண்ட கால பிரதேச அபிவிருத்தி நோக்கில் அதிக நன்மை பயக்குமென நம்பலாம்.

பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர்ப்பாவனை

யாழ்ப்பாணப் பகுதிகளில்  நீரிறைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்களுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாக கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சனைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண்மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத்தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீர் தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தைக் அதிகரிக்கச்செய்கின்றது. இதனை தடுப்பதற்கு இஸ்ரேல் நாட்டில் காணப்படும் பாசன முறைகளான விசிறல் பாசன முறைமை, பல குழாய் வழி இணைப்புகள் மூலம் பயிருக்கு அடியில் நீரைச் செலுத்துதல், ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பை தடுப்பதற்கு சில இரசாயணங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற முறைகளைப் பின்பற்றி ஒருதுளி நீரும் வீணாகாமல் பாசன முகாமைத்துவ முறைகளை மக்கள் பின்பற்றும்படி செய்தல் வேண்டும்.

நீர்வள அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலுக்கு பல்வேறு தரவுகள் தேவை. இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரிதவியல், மண்ணியல், பொறியியல், விவசாய அறிவயல் போன்ற துறை சார் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள நிலையங்களாக முதலில் வகுக்கப்படுதல் வேண்டும். ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றை அவதானித்து நீர்ப்பீட ஆய்வு செய்து அவற்றின் உவர்த்தன்மை, ஆவியாக்கம், ஆவியுயிர்ப்பு, ஊடுவடித்தல், போன்ற அம்சங்கள் யாவும் கணிக்கப்பட்டு நீர் வள வலயங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படைத் தரவுகளின் துணையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் வெற்றி பெறுமென நம்பலாம்.

பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப்படவில்லை. இப்பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புனருத்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளளவைக் கூட்டலாம். தெளிவான ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலமைகள் பாதிக்கப்படாதவகையில் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கலாம். 1980-81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புதுமுறிப்புக் குளம், போன்றவற்றின் கொள்ளளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலியாறு, என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக்கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.

பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்ப்பாசன வளங்களை அதிகரிப்பதன் மூலம் அங்கு உபஉணவுச் செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று நீர்ப்பாசன வசதிகளுடன் உப உணவு உற்பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள. (உ.ம் முத்தையன் கட்டு, விசுவமடு, வவுனிக்குளம்) இவ்வாறான ஏற்று நீர்ப்பாசன திட்டங்களில் பணப்பயிர் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல் வேண்டும்.  ஏற்று பாசனமுறை அதிக செலவிலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய்கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.

முடிவுரை

தமிழரின் பாரம்பரியப் பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபிவிருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதற்கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதேசங்கள் அவ்வப் பகுதி வாழ் மக்களின் நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப்போது தான் தங்கு தடையின்றி உள்நோக்கம் எதுவும் அற்ற விவசாய பாசனஅபிவிருத்தி திட்டங்களை உருவாக்கலாம். இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாத்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.

Pin It

அறிமுகம்

இலங்கையின் வடகீழ் மாகாணம் தமிழரின் பாரம்பரிய பிரதேசமெனக் கொள்ளப்படுகின்றது. தமிழர் பாரம்பரியப் பிரதேசம் பரந்த பிரதேசமெனவும் இது மேற்கே மகா ஒயா (வாய்க்கால் ஆறு) தொடக்கம் தென்கிழக்கே கும்புக்கன் ஆறுவரை பரந்துள்ள கரையோர நிலப்பகுதி என்றும் பல்வேறு தகவல்களிலிருந்து தெரியவருகின்றது. எனினும் இவ் ஆய்வு வடகீழ்மாகாணமே தமிழர் பாரம்பரியப் பிரதேசமெனக் கொள்கிறது.

தமிழர் இலங்கையில் ஒரு தனித்தேசிய இனம். அவ் இனத்துக்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அவர்களுக்கொரு பாரம்பரியத் தாயகம் உண்டு. எனவே எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்யவேண்டிய பொறுப்பும் கடமைப்பாடும் நம்மவர்களுக்கு குறிப்பாக அறிவுப்புலத்தினுள்ளோர்க்கு உண்டு. வடகீழ் மாகாணத்தை தன்நிறைவான நிலைத்து நிற்கத்தக்க அபிவிருத்திக்கு இட்டுச்செல்லும் பல்வேறு கூறுகளில் மாற்றுச் சக்தி வளம் பற்றி இவ் ஆய்வு பேசுகின்றது. இவ் ஆய்வின் நோக்கம் நிறைவான மாற்றுச் சக்திவளம் எமது பிரதேசத்தில. உண்டு என்பதை நிரூபிப்பதும் அது பற்றிய சிந்தனையை பல்வேறு துறைசார் புலமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்துவதுமாகும்.

வடகீழ் மாகாணம் 18,323 சதுர கிலேமீற்றர் (7157சதுரமைல்) பரப்பளவு கொண்ட பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.4 வீதமாக உள்ளது. இப்பிரதேசம் நிர்வாக வசதிக்காக இரு மாகாணங்களாகவும் எட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. வடகீழ்மாகணத்தின் மொத்த குடித்தொகை 1981இல் 21இலட்சம் பேராகக் காணப்பட்டது. (20,87,943). இலங்கையின் மொத்தக்குடித்தொகையில் இது 14.1 வீதமாகும். வடகீழ் மாகாணத்தின் மொத்தக்குடித்தொகையில் வடமாகாணம் 53.2 வீதத்தையம் கிழக்கு மாகாணம் 46.8 வீதத்தையும் கொண்டுள்ளது. வடமாகாணத்தின் மொத்தக்குடித்தொகையின் 74.8 வீதத்தினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்றனர். வடகீழ் மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் கொண்ட யாழ்ப்பாணக்குடாநாடு வடகீழ்மாகாணக் குடித்தொகையின் 35 வீதத்தினரைக் கெண்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் குடியடர்த்திப் பண்பானது கடற்கரையோரம் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. கிழக்குப் பிரதேசத்தில் இப்பண்பினைத் துல்லியமாக அவதானிக்க முடிகின்றது.

சக்திவளங்கள் (Energy Resources)

1.1 சக்தியை வழங்கும் மரபுரீதியான வளங்கள் அதிவிரைவாக அழிவடைந்து செல்லும் தன்மை கொண்டவை. ஆதி காலம் முதல் இன்று வரை உலகத்திலே பரவலாகத் தாவரங்களே பெருமளவுக்கு எரிபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இடைக்கால கண்டுபிடிப்பான நிலக்கரி, பெற்றோலியம் என்பன கைத்தொழில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமன்றி, நவீன உலகின் எரிபொருட் தேவையின் பெரும்பங்கை வழங்கின. அதிக பயன்பாட்டின் காரணமாக இவை படிப்படியாக அழிவடைந்து சென்று இன்னும் 50-75 வருடங்களில் முற்றாக அற்றுப்போய் விடும்நிலை காணப்படுவதாக ஆய்வாளர் கருதுகின்றார்.

1.2 எதிர்கால உலகின் சக்திவளத் தேவைகள் அழிவடையாத அல்லது குறைவுபடாத சக்திவளங்களான சூரியசக்தி, காற்றுச்சக்தி, உயிர்ச்சுவட்டு எரிபொருள் சக்தி, கடல் சக்தி, புவி வெப்பசக்தி என்பன மூலமாகவே பெறப்பட முடியுமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேற்படி மாற்றுச் சக்திவளங்கள் பலவற்றினை வடகீழ் மாகாணத்தில் பயன்படுத்க்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளன.

வடகீழ் மாகாணத்தில் வருடத்துக்கு சராசரியாக 55-60 நாட்களே மழை நாட்கள். எனவே சூரிய சக்தியை பயன்படுத்தும் வாய்ப்பு இங்கு அதிகம்.  சோளக்காற்றும் வாடைக்காற்றும் வருடத்தின் நீண்டகாலத்திற்கு காற்றுவீச்சுச் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அளிக்கவல்லன. இங்கு பெருமளவு கால்நடை வளம் காணப்படுவதால் அவற்றின கழிவுகளிலிருந்து உயிர்வாயுச்சக்தி பெறப்படலாம். வற்றுப் பெருக்குத்தன்மை கொண்டதும் நுழைகழிப்பகுதிகளை பெருமளவு கொண்டதுமான இப்பிரதேசத்தின் நீண்டகடற்கரையோரப் பகுதிகளிலே சில அணைத்தடுப்புகளை அமைப்பதன் மூலம் கடல்வற்றுப்பெருக்கு நிகழ்வை சக்தி பெறுவதற்குப் பயன்படுத்தமுடியும். கடல் நீரோட்டமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து நீரோட்ட விசையிலிருந்தும், கடலினுள் காணப்படும் வெப்ப மாறுபாட்டிலிருந்தும் சக்தி பெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டு. மேலும் அண்மைய ஆய்வு ஒன்று கடற்சேற்றுப்பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் ‘மீத்தேன்’ வாயுப்படிவுகள், சில கடலடித்தளங்களில்  பெருமளவு படிந்துள்ளது என்றும் அமுக்க, வெப்ப நிலைகளில் மாறுபாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு சக்தி பெறப்படலாமென்றும் கூறுகின்றது. இவை தவிர கிழக்கு கரையோரப் பிரதேசங்களில் பரந்து காணப்படும் இல்மனைற், மொனோசைட் படிவுகளைப் பயன்படுத்தி அணுசக்தியை உருவாக்க முடியுமென விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா, றன்கிரியா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலுள்ள கப்பூரல்ல, மகாஒயா, கிவுலகம போன்ற இடங்களில் காணப்படும் வெப்பநீருற்றுக்களிலிருந்து புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்படலாம்.

மேற்படி மாற்றுச்சக்தி வளங்களிலே

01 சூரியசக்தி

02 காற்றுச்சக்தி

03 உயிர்ச்சுவட்டு எரிபொருள் சக்தி

04 கடற்சக்தி

05 புவிவெப்ப சக்தி

போன்றவற்றை எமக்குப் பொருத்தமான வழிமுறையில் எவ்வகையில் பயன்படுத்தலாமெனப் பார்ப்போம்.

 சூரிய சக்திவளம் (Solar Energy Resource)

சூரியனே சக்தியின் ஆதாரம். சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பெறவதற்கு இன்று புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 20 ஆம் நூற்றாண்டில் சூரிய சக்தியை உலகம் பெருமளவு பயன்படுத்துமென விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மரபு ரீதியான சக்திவளப்பயன்பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபடும் பிரச்சனை இவ் வளப்பயன்பாட்டால் இல்லாதொழிந்துவிடும். சூரிய சக்தியை இரு வகைகளில் பயன்படுத்தலாம்.

01. சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்துவது.

02. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற்றிப் பயன்படுத்துவது.

சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தும் முறை எமக்கு பழக்கமான பாரம்பரிய முறையே. உணவுப்பொருட்களை உலர வைத்துப் பயன்படுத்தும் முறையை நீண்டகாலமாகவே நாம் அறிவோம். ஆனால் சிறிது தொழில்நுட்ப அறிவை புகுத்துவதன் முலம் சூரிய வெப்பத்தைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தமுடியும். ‘கருமையாக்கப்பட்ட பொருளின் மீது சூரிய வெப்பம்  பெருமளவு ஈர்க்கப்படும்’ என்ற விஞ்ஞான மெய்மையைப் பயன்படுத்தி பெருமளவு பயன்பாட்டை பெற்றுக்கொள்ளலாமெனினும் குறைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எமக்கு பொருத்தமான சூரிய அடுப்புக்களையாவது நாம் தயாரித்துக்கொள்ளமுடியும். இந்தியாவிலே இவ்வகை அடுப்புகள் கூடை போன்ற வடிவத்திலும் இன்னும் சில பெட்டி போன்ற வடிவத்திலும் தயாரிக்கப்படுகின்றன. கண்ணாடிகளையும் கண்ணாடி வில்லைகளையும் பயன்படுத்தி சூரிய வெப்பத்தை குறிப்பிட்ட இடத்தில் குவியச்செய்யும் வகையில் இவ் வகை அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரியிலும் சிந்தாமணிக் கூட்டுறவு அங்காடியிலும் சூரிய அடுப்புகள் தயாரிக்கப்பட்டு மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இவ்வகை அடுப்புகள் மூலம் அரைமணி நேரத்தில் 1350C வரை வெப்பத்தை ஈர்க்க முடிகின்றது. இவ்வகை மாதிரிகளைப்பெற்று எமக்குப் பொருத்தமான சூரிய அடுப்புகளை நாம் தயாரித்துக் கொள்ள முடியும். எமக்குப் பெரும் பிரச்சனையாகவுள்ள எரிபொருட்பற்றாக்குறையை ஓரளவுக்கு இதன் மூலம் நிவர்த்திக்க முடியும்.

சில பொருட்களின் மீது சூரிய ஒளி படும் போது ஒரு வகை மின்னோட்டம் உண்டாகின்றது என பிரான்சிய விஞ்ஞானி எட்மண்ட் பெக்கல் என்பவர், 1839 இல் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பை தொடர்ந்து ‘செலினியம்’ என்ற கனிமத்திலிருந்து திருத்தமற்ற சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்பட்டன. இவ்வாய்வுப்பணி மேலும் தொடர்ந்தது. 1954 இல் நியுஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுகூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘சிலிக்கன்’ எனும் கனிமத்தைப் பயன்படுத்தி சூரியமின்கலம் தயாரிக்க முயன்று வெற்றி பெற்றனர். 1960களில் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவுக்குமிடையே ஏற்பட்ட விண்வெளிப்பயணம் தொடர்பான போட்டி நிலை சூரியமின்கலத்தயாரிப்பை ஊக்கப்படுத்தியது. ஏனெனில் செயற்கைக்கோள்கள் இயங்குவதற்கு சூரிய மின்கலங்களே தேவைப்பட்டன.

‘சிலிக்கன்’ என்பது உலகில் மிகவும் மலிவாகவும் அதிகமாகவும் கிடைக்கும் கனியமாகும். இது புவியில் மண்ணுடன் கலந்துள்ளது. இக்கனிமம் 14000Cஅளவுக்கு வெப்பமேற்றுவதான் மூலம் உருக்கப்பட்டு படிகவார்ப்புகள் பெறப்படுகின்றன. இவற்றிலிருந்து தனித்தனிச் சில்லுகளாக சிலிக்கன் சீவி எடுக்கப்பட்டு சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன. சூரிய மின்கலங்களின் உற்பத்திச் செலவு இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால் எதிர் காலத்தில் குறைந்த விலையில் இவற்றை உற்பத்தி செய்யமுடியுமென விஞ்ஞானிகள் நம்புகின்றனர். 1973 இல் ஏற்பட்ட பெற்றோலிய நெருக்கடிக்கு பின்னர் சூரிய மின்கலங்களின உற்பத்தியில் உலக நாடுகள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளன. 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்ரேலியா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் சூரியமின்கலங்களை உற்பத்தி செய்வதில் தீவிர அக்கறை காட்டிவருகின்றன. பல தனியார் கம்பனிகள் இவ் உற்பத்தியை சர்வதேச வர்த்தகமாக மாற்றியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சூரிய மின்கலங்களின் விலை கணிசமாக குறையக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. மரபுரீதியாக சக்தியைப் பயன்படுத்தி மின்சாரமயமாக்கப்பட்ட கைத்தொழில் நாடுகளையும், நகரங்களையும் சார்ந்த மக்களைவிட மூன்றாம் உலக கிராமிய மக்களே சூரிய மின்கலங்களால் அதிக பயனை பெற்றுக்கொள்ளமுடியும். மூன்றாம் உலக கிராமமக்கள் சூரியமின்கலங்கள் மூலம் பின்வரும் பயன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

வீட்டுப்பாவனைக்கு மட்டுப்படுத்தப்பட்;ட மின்சாரத்தைப் பெறல்.

சிறிய அளவிலான விவசாய நிலங்களுக்கு நீரிறைத்தல்.

கிராமிய வைத்தியசாலைகளில் குளிரூட்டிகளை இயங்கச் செய்தல்.

கலங்கரை விளக்குகள், வீதி விளக்குகள் பொருத்துவதற்கு பயன்படல.;

கிராமத்திற்குத் தேவையான நீரை வெப்பமேற்றிச் சுத்திகரித்தல்.

தொலைத்தொடர்புச் சாதனங்களை இயங்கச்செய்தல்.

வாகனங்கள், படகுகளிற்குரிய மின்கலங்களிற்கு மின்ஏற்றம் செய்தல்.

 

தற்பொழுது நாம் எதிர்நோக்குகின்ற எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பிலிருந்து ஒரளவு விடுபடுவதற்கு சூரிய மின்கலங்களைப் பாவிக்க முடியும். வீட்டுப் பாவனைக்கேற்ற சூரியமின்கலங்கள் பல்வேறு அளவுகளில் எமது வர்த்தகநிலையங்களில் கிடைக்கின்றன. (இவை 10w முதல் 120wவரையான மின்சக்தியை வழங்ககூடியன) ஒரு சூரியமின்கலத்தினை 15 வருடங்களுக்கு பாவிக்கமுடியும். இவற்றில் ஒன்றைப் பெற்று சூரிய ஒளிபடும் கூரையின் மீது வைத்து கார் பற்றறி (12V) ஒன்றுடன் அதனை இணைத்துவிடுவோமாயின் பகலில் மின் ஏறும். பற்றறியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை எமது தேவைக்கு ஏற்ப பகலிலும் இரவிலும் பயன்படுத்தமுடியும். சிறிய அளவிலான மின்குமிழைப் பொருத்துவதன் மூலம் வீட்டிற்கு தேவையான மின் ஒளியை நாம் பெற்றுக்கொள்ளமுடியும். வானொலி, தொலைக்காட்சி, சிறிய மின்விசிறி, ஓடியோ, வீடியோசாதனங்கள் என்பவற்றையும் இயக்கமுடியும். மீள் மின்னேற்றம் பெறத்தக்க டோர்ச் பற்றறி, பென்டோர்ச் பற்றறிகளிற்கும் மின் ஏற்ற முடியும். சிறிய அளவிலான குளிர்சாதனப்பெட்டிகளையும் இயங்கவைக்க முடியும்.

சூரியமின்கலங்களின் பாவனை பற்றிய விழிப்புணர்வை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் வீட்டை ஒளி பெறச்செய்யமுடியும். எமது மாநகரசபை, கிராமசபைகளும் ஏனைய மக்கள் நிறுவனங்களும் வீதிகளில் சூரிய மின்கல விளக்குகளைப் பொருத்தும் வாய்ப்புகள் பற்றி சிந்திக்கலாம். எமது பிதேசத்தில் பரந்துள்ள வெண் மணல் குறிப்பாக மணற்காட்டுமண் சூரிய மின்கலங்கள் தயாரிக்கக்கூடிய ‘சிலிக்கா’ கனிமத்தைப் பெருமளவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மக்கள் தொகையில் 48 வீதத்தினர் முக்கியமாக கிராமப்புற மக்கள் இதுவரை மின் இணைபபை பெறவில்லை. எனவே சூரியமின்கலங்களை குறைந்த விலையில் அல்லது தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்தி அறிமுகப்படுத்துவதில் ‘செல்கம்பனி’ உதவி வழங்கிவருகின்றது. இதற்கு திருவாளர்கள் விவின் பெரேரா, லலித் குணவர்த்தனா, பிரதீப் ஜெயவர்த்தனா (ஜே.ஆர் இன் பேரன்) போன்றோர் 1986 முதல் ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றார்கள்.

காற்றுச் சக்திவளம் (wind Energy Resource)

பல ஆண்டுகளுக்கு முன்னரேயே குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் காற்றாடியின இயக்க சக்தியினால் ஆறு, குளம் கிணறுகளில் இருந்து வயல் நிலங்களுக்கு நீரிறைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது. அண்மைக்காலங்களில் புகுத்தப்பட்ட புதிய தொழில் நுட்பங்களில் காற்றாடியினை இலகுவாகச் சுழலச் செய்தல் சாத்தியமாகி உள்ளது. இதனால் மெல்லிய காற்று விசையிலும் காற்றாடியை இலகுவாக சுழலச் செய்ய முடிவதோடு மின்சாரத்தைப் பெறுவதற்குரிய ஜெனரேட்டர்களையும் இயங்கச் செய்ய முடியும். வீடுகள் கட்டிடங்களை விட உயரமாக கற்றாலைகளை அமைப்பதற்கு உலோகச் சட்டங்கள் பயன்படுத்த வேண்டுமாகையால் ஆரம்பச்செலவு அதிகமாக உள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு எந்தச்செலவுமின்றி பயனை நுகரக்கூடியதாக உள்ளது. கடலால் சூழப்பட்டு சமவெளிகளைக் கொண்ட நாடுகளில் காற்று சக்தியினைப்பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாகும்.

டென்மார்க், நெதர்லாந்து ஜேர்மனி, சுவீடன், பிரித்தானியா போன்ற ஜரோப்பிய நாடுகளிலும் சோமாலியா, இந்தியா, சீனா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் காற்றுச்சக்திவளம் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைப் பரவலாகவும் மலிவாகவும் பயன்படத்த வழிகாணும் ஆய்வுகளும் தொடர்கின்றன.  உலகில் 2001 ஆம் ஆண்டில் காற்றலை மூலம23,300 மெ.வாட்ஸ் மின்சாரசக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இன்று காற்றலைச்சக்தி வளப்பாவனையில் ஜேர்மனி முதலிடம் வகிக்கின்றது. 2003ஆம் ஆண்டில் 12500 மெ.வா உற்பத்தியை பெறுவதற்கான திட்டம் தீவிரமாக இங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் எழுபது நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. டென்மார்க்கில் தேசிய மொத்த சக்தி நுகர்வில் 18 வீதம் காற்றலை மூலம் பெறப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் தேசிய மொத்த சக்தி நுகர்வில் 2010 ஆம் ஆண்டில் 12 வீதம் காற்றலை சக்தி மூலம் பெறப்படவுள்ளதாக கணிப்பிட்டுள்ளார்கள்.

காற்றலைகளை நிறுவக்கூடிய உள்ளார்ந்த வளங்களை உலகிலேயே அதிகளவு கொண்ட நாடாக ஜக்கிய அமெரிக்காவே விளங்குகின்றது. ஜக்கிய அமெரிக்காவின் மூன்று மாநிலங்களான வடடகோட்டா, கன்சாஸ், ரெக்ஸாஸ் என்பவற்றில் காற்றலை அமைத்துப் பெறக்கூடிய சக்திவளம் ஜக்கிய அமெரிக்கா முழுமைக்கும் மின்சார சக்தியை வழங்கப் போதுமானது என கணிப்பிட்டுள்ளார்கள். இந்தியாவும் காற்றாலைகளை நிறுவி சக்திவளம் பெறத்தக்க பல திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கன்னடம், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் காற்றாலைகளை உருவாக்கப் பொருத்தமான பகுதிகளை கொண்டுள்ளதோடு இம் முயற்சியில் பெரிதும் ஈடுபாடும் காட்டிவருகின்றன. நாடொன்றின் காற்றுச்சக்திவளப்பயன்பாட்டுத் திட்டத்திற்கு உள்ளுர் காற்றின் தன்மை, வேகம், காற்று வீசும் திசை, உயரம் போன்றன துல்லியமாக அளவிடப்படுதல் வேண்டும். இவை காற்றுப் பற்றிய தரவுகளாக அமையும். இத் தரவுகளைக் கொண்டு காற்றுக்காலநிலைத் தேசப்படம் உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும். எமது பிரதேசத்தில் அமைநதுள்ள வளிமண்டலவியல் நிலையங்கள் இத்தரவுகளையும் முறையாகத் திரட்டி வருதல் வேண்டும்.

எமது பிரதேசத்தில் பெரும் பரப்பு சம தரையாக விளங்குகின்றது. கடற்கரையோரப் பகுதிகளிலேயே பெருமளவு குடித்தொகை செறிந்துள்ளதோடு குறிப்பிடக்கூடிய நகரங்கள் பலவும் கடற்கரையோரமாகவே பரந்துள்ளதை அவதானிக்கலாம். இவ் அம்சங்கள் காற்றாலைகளை அமைப்பதற்குச் சாதகமானவையாக உள. மேலும் வடகீழ் மாகாணங்களில் மே முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு மொன்சூன் காற்று வேகம் கொண்ட வரண்ட காற்றாக வீசுகின்றது. இது வடக்கே சோளக் காற்று என்றும் கிழக்கே கச்சான் காற்று என்றும் வழங்கப்படுகின்றது. டிசெம்பர் முதல் பெப்ரவரி வரை இப் பிரதேசங்களில் வடகீழ் மொன்சூன் காற்று வீசுகின்றது. இவற்றுக்கு இடைப்பட்ட மாதங்களாகிய ஒக்டோபர், நவம்பர், மார்ச், ஏப்ரல் மாதங்களில் காற்று வீச்சு குறைவு எனினும் இம் மாதங்களில் சூறாவளிக்காற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் ‘கொண்டல்’ காற்றும் இடை இடையே வீசுகின்றன.

மேற்படி காற்றுவீச்சைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தில் ஆங்காங்கே காற்றாலைகளை அமைக்க முடியும். இதனைத் தேச சக்திவள நிர்மாணத்திட்டத்துடன் இணைந்து உருவாக்குதல் நல்ல பயன் தருமென துணிந்து கூறலாம். குளங்கள், கிணறுகளிலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரிறைப்பதற்கும், நகர கிராம மின்சார உற்பத்திக்கும் காற்றலை அமைப்புக்கள் உதவிட முடியும். முயற்சியுள்ளோர் தனிப்பட்ட வீடுகளில் கூட சிறிய காற்றாலைகளை அமைத்து நீரிறைப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டளவில் வீட்டு மின்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.

உயிர்ச்சுவட்டு(திணிவு) எரிசக்தி வளம் (Biomass,Biogas Energy Resources)

 

நறேசா (NARESA) ) நிறுவன ஆய்வொன்றின்படி இலங்கையில் அடிப்படை எரிசக்தி நுகர்வில் 70 வீதம் உயிர்ச்சுவட்டு (திணிவு) எரிசக்தி (விறகு)மூலமே பெறப்படுவதாக தெரியவருகின்றது. கிராமிய, தோட்டத் துறையில் 90 வீதம் உயிர்ச்சுவட்டுத் திணிவே எரிசக்தித் தேவையை நிறைவு செய்கின்றது. பொதுவாக சூழலியலாளர் குற்றம் சுமத்துவது போல் மேற்படி எரிபொருள் பாவனைக்காக காடுகள் அழிக்கப்படுவது அரிதே. அவ் அப் பிரதேசங்களில் பயிராகும் பயன்தரு தாவரங்களின் உப உற்பத்திகளே விறகுக்காக பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலைச் செடியின் காய்ந்த தடிகள், இறப்பர் மரத்தின் எச்சங்கள் என்பனவும் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் பனை மரத்தின் உப உற்பத்திகளான ஓலை, மட்டை, ஊமல், போன்றனவும் எரிபொருளாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தென்னை மரத்தின் உப உற்பத்திகள் கறுவா, கரும்பத்தடி என்பனவும் அவை பெருமளவு காணபபபடும் பிரதேசங்களில் விறகுக்காகப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.

காட்டுத்தாவரங்களை விறகுக்காக உற்பத்தி செய்து எரிபொருளாகப் பயன்படுத்தும் வழிமுறைகளையும் பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. இதற்காக ஆமணக்கு, சூரியகாந்திச்செடி, போன்றன பெருமளவு உதவுகின்றன. எண்ணெய் தாவரங்களிலிருந்து உயிரியல் டீசல் உற்பத்தி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன. உயிரியல் தொழிலநுட்ப அறிஞர்கள் பிரதேச ரீதியாக இவை உற்பத்தி செய்யப்படும் சாத்தியம் பற்றி சிந்திக்கலாம்.

ஓப்பீட்டளவில் எம்மால் குறைந்த செலவில் பெறக்கூடிய சக்திவளமாக உயிர்வாயுச் சக்தி விளங்குகின்றது. பொதுவாக தாவர, மனித, மிருக கழிவுகளிலிருந்து உயிர்வாயு பெறப்படலாம். இவ்வகை கழிவுச் சேதனப் பொருட்கள் காற்றில்லாத சூழ்நிலையில் சில நுண் உயிர்களின் (மீதேனிக் பக்ரீறியா) தாக்கத்தினால் பிரிகையடைந்து நொதிக்கும் போது உண்டாகும் வாயுவே உயிர் வாயு ஆகும். பொதுவாக மீதேன்வாயு என வழங்கப்படும் இவ் வாயு ஒரு வாயுக்கலவையாகும். இதிலே மிதேன் ;(Methane CH4) 55-65 வீதமும், காபனீரொட்சைட்;(Co2) 35-45 வீதமும், நைதரசன் ((N2)3 வீதமும், ஜதரசன் (H2)ஒடசிசன்(O2) ஜதரசன் சல்பைட்;(H2S) என்பன ஒவ்வொரு வீதத்திலும் அடங்கியுள்ளன.

உயிர்வாயுவை மிருகக்களிவுகளிலிருந்து, குறிப்பாக சாணத்திலிருந்து பெற்றுக்கொள்வது எமக்குப் பொருத்தமானதாகவும் இலகுவானதாகவும் அமையும். இதனால் இவ்வாயுவை கிராமிய விவசாய மக்கள் சாண எரிவாயு என வழங்குகின்றனர். இந்தியாவிலும், சீனாவிலும் இதன் பயனபாடு பழைய காலம் முதலாக இருந்து வருகின்றது. பிலிப்பைன்ஸ், கொரியா, ஆகிய நாடுகளிலும் இவை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சமயலுக்காக சாணவிறாட்டியைப் பயன்படுத்தும் வழக்கம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகும். விறகுத்தட்டுப்பாடே அங்கு இதனை ஊக்குவித்துள்ளது. இந்தியக்கிராமங்களில் குறிப்பாக தமிழ் நாட்டுக்கிராமங்களில் சாண எரிவாயுச்சக்திப் பயன்பாடு ஆனது அரசினால் திட்டமிடப்பட்ட முறையில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. பெரும் தொகையான கிராமிய மக்கள் இதன் பாவனையால் பெருமளவு பயன் பெற்றுவருகின்றார்கள். எமது கிராமிய விவசாய மக்களும் தமது அன்றாட வீட்டுத் தேவைக்கான எரிசக்தியைச் சாண எரிவாயுவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு சாண எரிவாயுவை உற்பத்தி செய்யக்கூடிய வழி பற்றிய தொழில்நுட்ப அறிவை அவர்களுக்கு நாம் வழங்கவேண்டும்.

பொதுவாக எமது வீடுகளிலே ஒளி பெறுவதற்கும் சமையல் செய்வதற்குமே கூடுதலான எரிபொருள் தேவைப்படுகின்றது. எரி பொருட்களின விலையேற்றம் விறகுப் பற்றாக்குறை என்பன தீராத பிரச்சினைகளாகத் தொடரவுள்ளன. இப்பிரச்சனைக்குரிய பொருத்தமான மாற்று வழிகளில் ஒன்று கிராமம் தோறும் சாண எரிவாயுவை வீட்டிற்கு ஒளியேற்றவும் சமையல் செய்வதற்கும் பெருமளவு பயன்படுத்தும் வழியைக் காண்பதேயாகும். சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு விற்பனையாகும் எல்.பி வாயுவை நகரப்புற மக்கள் சமையலுக்காகப் பெருமளவு பயன்படுத்தி வருகின்றார்கள். சாண எரிவாயு எல்.பி வாயுவுக்கு நிகரான எரிச்சக்தியை வழங்கவல்லதாகும். அத்துடன் பெற்றோல்மக்ஸ் விளக்கை இவ் வாயுவைப் பயன்படுத்தி எரியச்செய்ய முடியும். இவை தவிர இவ் வாயுவின் துணையுடன் இயந்திர மோட்டர்களை இயங்கச்செய்ய முடியுமாகையால் ஒளியேற்றவும், நீர் இறைக்கவும், மின்சாரம் பெறவும் இதனைப் பயன்படுத்தமுடியும்.

சாண எரிவாயு எரியும் போது கரி படியாத சுவாலை வெளிவருவதால் சமையல் பாத்திரங்களில் கரி படிவதில்லை. புகை குறைவாகையால் வளி மாசடைவதில்லை. மேலும் எரிவாயு பெற்றபின் எஞ்சும் சாணம் கூடுதலான பயிர் போசனையைக் கொண்டது. இது கிருமிகள் களைகள் அற்றதாகவும் காணப்படுகின்றது. இச் சாணத்தை உரமாக பயன்படுத்தும் போது விவசாய உற்பத்தி அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

நாம் பின்பற்றத்தக்க சாண எரிவாயு உற்பத்திச் சாதனங்கள் இரு வகைப்படும்.

1. மிதக்கும் வாயுக் கொள்கலனுடன் கூடிய இந்திய முறைச்சாதனம்

2. அமுக்க கொள்கலனுடன் கூடிய சீன முறைச்சாதனம்.

இந்தியமுறை ‘ஹேபர்காஸ்’ முறையெனவும் இந்தியாவில் ஏழுபேர் கொண்ட ஒரு குடும்பத்தின் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய சாண எரிவாயுச் சாதனத்தை 20,000 ரூபா செலவில் அமைத்துக்கொள்ள முடியுமென்கின்றனர்.

சீன முறையிலான எரிவாயுச் சாதனம் இந்திய முறையை விட சிக்கனமானதும் சுலபமாக அமைக்கக்கூடியதுமாகும். இந்தியச் சாண எரிவாயுச் சாதனத்தை விட அரைப்பங்கு செலவில் இதனை அமைத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை துப்பரவுப் பராமரிப்புப் பணியை மேற்கொண்டால் போதுமானது.

இரண்டு அல்லது மூன்று மாடுகளிலிருந்து நாளொன்றிற்கு 15 கிலோ சாணம் பெறப்படுகின்றதெனக் கொள்வோம். இதிலிருந்து பெறப்படும் எரிவாயுவானது ஒரு கன மீற்றராக (2.4 கன அடியாக) இருக்கும். ஒரு கன மீற்றர் எரிவாயுவின் பெறுமதி பின்வருமாறு.

2.0 கிலோகிறாம் விறகு

0.6 லீற்றர் மண்ணெண்ணெய்

0.5 லீற்றர் பெற்றோல்

0.4 லீற்றர் டீசல்

3 பேருக்கு 3 வேளை சமைப்பதற்கான எரிசக்தி

ஒரு மணித்தியாலத்திற்கு 6 ‘பெற்றோல்மக்ஸ்’ விளக்குகளை  எரிவூட்டுவதற்குப் போதுமான வலு.

ஒரு மணித்தியாலத்திற்கு 40W ஒளிசக்தி கொண்ட 25 மின்குமிழ்களை ஒளிவூட்டுவதற்கு போதுமான வலு.

ஆகிய சக்திக்குச் சமனானதெனக் கணிக்கப்பட்டுள்ளது.

எமது பிரதேசத்தின் விவசாய உற்பத்தியானது பயிர்ச்செய்கையுடனும் விலங்கு வளர்ப்புடனும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படும் பண்பு கொண்டதாக பாரம்பரியமாகவே இருந்து வருகின்றது. எமது பாரம்பரியத்தில் மாடுகளை செல்வ வளமாகக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதனால் எமது பிரதேசத்தில் வாழ்கின்ற கிராமிய விவசாய குடும்பங்கள் ஒவ்வொன்றும் மாட்டு வளர்ப்பில் அக்கறை கொண்டுள்ளன. பலர் பட்டிமாடுகளைக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.  எனவே சாண எரிவாயுச் சக்தியை கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பெறச் செய்வது இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டமேயாகும்.

கடல் சக்தி வளம் ( Oceanic Energy)

புவிக்கோளத்தின் 70 வீதம் கடல் பரப்பாக காணப்படுகின்றபோதிலும் மனிதன் கடல்வளத்தை இன்றுவரை முறையாகவும் திறமையாகவும் பயன்படுத்தவில்லை என்பது நிதர்சனம். உணவின்றி மனித உயிர்கள் மடியும் வறுமைநிலை பரவலாக உலகெங்கும் காணப்படும் நிலையிற் கூட கடல்வளத்தை உணவுத்தேவைக்காகப் பயன்படுத்தும் அபிவிருத்தி நுட்பம் அரிதாகவே வளர்ந்துள்ளது. புவியில் பரந்துள்ள கடல் பரப்பிலிருந்து உணவாகப் பெறத்தக்க உள்ளார்ந்த வளம் 100 எனக் கொண்டால் மனிதன் இன்றுவரை அதில் 1 வீதத்தையே பயன்படுத்துகின்றான் என்பது வியப்பளிக்கும் தகவலாகும். இது போன்றே கடலினைச் சக்தி தரும் வளமாக பயன்படுவதும் மிக அரிதாகவே உள்ளது. ஆனால் இதற்கான வாய்ப்புகளோ அதிகம்.

கடலில் இருந்து நான்கு வழிகளில் சக்தி பெறப்படலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

1. கடல்வற்றுப் பெருக்கு நிகழ்வுகளை பயன்படுத்தி சக்திபெறும் வழி.

2.கடல் அலைகளில் இருந்து சக்தி பெறும் வழி

3.ஆழ் கடலில் காணப்படும் நீரோட்டத்தைப் பயன்படுத்தி சக்தி பெறும்வழி

4.கடல் ‘மீதேன்’ வாயுப் படிவுகளிலிருந்து சக்தி பெறப்படும் வழி

கடல் வளத்திலிருந்து மேற்படி நான்கு வழிகளிலும் சக்தி பெறும் வாய்ப்புகள் எமது பிரதேசத்தில் சாதகமாக உள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கும் போது இங்கு சுண்டிக்குளம் முதல் ஆனையிறவு, பூநகரி, கச்சாய், குருநகர், பண்ணை, அராலி, ஊர்காவற்றுறை ஆகிய பகுதிகளை உள்ளடக்கும் குடாக்கடற்பரப்பு வாய்ப்பான கடல் நீரோட்டத்தைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. இப் பகுதிகளில் பருவகாலத்திற்குரிய வற்றுப் பெருக்கு, நாளாந்த வற்றுப்பெருக்கு என்பவற்றை அடையாளம் காணலாம். இங்கு வற்றுப் பெருக்கு காலம், உயரம் என்பன நன்கு அவதானிக்கப்பட்டு சக்திபெறும் வழிகள் கண்டறியப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதியையும் இணைக்கும் யாழ்ப்பாணக் குடாக்கடலை மேவி அமைக்கப்பட்ட பண்ணைப் பாலத்தை அவதானிக்கும் போது பாலத்திற்கு மேற்கே கடல்நீர் ஓடி மேற்குப்பகுதி பெருகிக் காணப்படுவதையும் வற்றும் போது கிழக்குப் பகுதி நோக்கி கடல் நீர் வடிந்து வருவதையும் ஒரு நாள் பொழுதில் அவதானிக்க முடியும். இவ்வாறு கடல் பெருகும் போது கடல்நீரை மறித்துத் தேக்கமாக உருவாக்கி பின்னர் வற்றும் போது சிறிய துரிசுகள் மூலம் நீரை வடியவிடும் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். துரிசுப்பகுதிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சுழலிகளைப் பொருத்தி விடுவோமாயின் அதில் இருந்து மின்சக்தியைப் பெறமுடியும்.

இவ்வாறு பொருத்தமான கடலை அண்மித்த பல பிரதேசங்கள் இங்கு உள்ளன. இவற்றை நன்கு ஆராய்ந்து கண்டறிந்து கடற்பெருக்கு நீர்த்தேக்கங்களை உருவாக்கமுடியும். எமது பிரதேசத்தை நேசிக்கும் பொறியியலாளர்கள் இவ் வழிமுறைபற்றிச் சிந்திக்கவேண்டும்.

கடல் அலைச் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நுட்பம் சிங்கப்பூரில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள், துறைமுகப் பிரதேசங்களில் மிதக்கவிடப்பட்டுள்ளன. சிறிய மின் உற்பத்திச் சாதனங்கள் அப் பிரதேசத்தின் கடல்பரப்பை ஒளியூட்டிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அலையின் வீச்சில் கடலில் மிதக்கும் மின் உற்பத்தி சாதனத்தின் சுழலி சுழற்றப்பட்டு மின் உற்பத்தி கிடைக்கின்றது.

யாழ்ப்பாணக் குடாக்கடலில் அலைகள் குறைவு, ஆனால் வடமராட்சிப் பகுதி திருகோணமலை உள்ளிட்ட கிழக்குப் பகுதிகளில் பாரிய அலைகள் தோன்றுகின்றன. இப் பகுதிகளில் மேல் விபரித்த வகையான சாதனங்களைப் பொருத்துவது பற்றி ஆராயலாம்.

ஆழ்கடல் நீரோட்டம் என்பது கடல்நீரில் ஏற்படும் அடர்த்தி மாறுபாட்டால் நிகழ்வது. குளிர்ந்த கடின உப்புநீர் கீழேயும், வெப்பமான உவர்நீர் மேலேயும் காணப்படும் கடல் நீர்ப்பரப்புகளில் ஆழ்கடல் நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கடல் மேல் நீரை காற்று அடித்துச் செல்லுமாயின் கீழ் இருக்கும் குளிர் நீர் வேகமாக மேற்பரப்புக்கு வருகின்றது. இந் நிகழ்வு சில கடற்பரப்புகளில் அதிகமாக இடம் பெறுகின்றது. பேரு நாட்டின் கடல் பரப்பில் ‘எல்நினோ’ தோன்றுவதற்கு இவ்வாறான கடல் நீரோட்டமே காரணமாக அமைகின்றதெனத் தெரிகிறது. எமது பிரதேசத்தில் குறிப்பாக திருகோணமலை கடற்பரப்பில் ஆழ்கடல் நீரோட்டம் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இவை இன்னமும் நன்கு ஆராயப்படவில்லை. அவை ஆராயப்பட்டு நன்கு திட்டமிடப்பட்டு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுமாயின் எமது பிரதேசத்திற்கு சக்தி வழங்கக்கூடிய இலகுவான வழியைக் கண்டறிந்தவர்களாவோம்.

அண்மைக்கால ஆய்வு ஒன்று பொதுவாக, கடற்கரைகளில் ஆழமற்ற சேற்றுப்பகுதிகளில் ‘மீத்தேன்’ வாயுப் படிவுகள் பெருமளவிற்கு படிந்துள்ளதாக தெரிவிக்கின்றன. கடலோரங்களில் ‘மீத்தேன்’  வாயு வெளியேறி சில சமயங்களில் தீப்பிழம்புகளை உருவாக்குவதை நாம் அறிவோம். அதுபோன்று கடற்கரையோரங்களில் மாத்திரமன்றி ஆழமற்ற கடலடித் தளங்களிலும் இப்படிவுகள் பெருமளவிற்கு படிந்துள்ளன. ஒரு குறிப்பிட்ட அமுக்க, வெப்ப நிலைகளில் இவை இயங்காமல் உள. இவ் அமுக்க வெப்பங்களில் சில மாறுபாடுகளை உருவாக்குவதன் மூலம் இவற்றிலிருந்து பெருமளவு ‘மீத்தேன்’ வாயு பெறப்படலாமென அண்மைய ஆய்வு வெளிப்படுத்துகின்றது. மேற்படி வாயு பெறப்படும் வழிமுறை - நுட்பம் எமக்கு கிடைக்கும் பட்சத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் தெற்குப் பகுதிகளில் இதனைப் பெருமளவு பெற்றுக்கொள்ள முடியுமென நம்பலாம்.

புவி வெப்பசக்தி ((Geo Thermal Energy)

தரைக்கீழ் நீரானது புவியின் உட்பாகத்தில் கொதிக்கும் நிலையிலுள்ள ‘மக்மா’(magma) படையின் வெப்பத்தால் வெப்மூட்டப்படுவதனால் ஏற்படும் சக்தி வெளிப்பாட்டையே புவிவெப்பசக்தி என வழங்குகின்றோம். பெரும்பாலும் இவ்வகை சக்தி வெளிப்பாடுகள் எரிமலை வலயங்களிலே காணப்படுகின்றன. சக்தியை வெளிவிடும் வழிமுறையைக் கொண்டு இவற்றை இரு பிரிவாக வகைப்படுத்துவர்.

1. நீராவியை வெளியேற்றும் மையங்கள(Geyser

2. வெப்ப நீரூற்றுக்கள்(Hot Springs)

 

புவியிலுள்ள சில துவாரங்கள் ஊடாக வெப்பநீரும் நீராவியும் அடிக்கடி வெளிவரும் மையத்தையே கீசர்(geyser) என வழங்குவர். இதனை நீராவியை வெளியேற்றும் மையங்கள் என தமிழில் கூறலாம். புவியின் கீழ் உள்ள பாறைகுகைகளில் சிக்கியுள்ள தரைக்கீழ் நீர் மக்மாப்படை வெப்பத்தால் வெப்பமேற்றப்பட அங்கு வெப்பமும் அமுக்கமும் அதிகரிக்கினறது. இதனால்  புவி மேலோட்டையும் உட்பாகத்தையும் இணைக்கும் துவாரத்தின் ஊடாக மிகவும்  வேகமாக கொதிக்கும் நீராவி வெளியேறுகின்றது. நீராவி வெளியேற தரைக்கீழ்நீர் குகைக்குள் வருகின்றது. இது மீண்டும் வெப்பமேற்றப்படுகிறது. இதனால் மீண்டும் நீராவி வெளியேற்றப்படுகின்றது. இந் நிகழ்வு சுழற்சி முறையிலே இவ் வகையான அமைப்புக் காணப்படும் பிரதேசங்களில் செயற்படுகின்றது. இச் செயற்பாட்டினை புவி வெப்பசக்திப் பயன்பாடாக மாற்றி மனிதன் பயன்படுத்தமுடியும்.. 1965 இல் ஜக்கிய அமெரிக்கா கலிபோணிய மாநிலத்தில் மேற்படி சக்தியை பயன்படுத்தத்தக்க வகையில் வலுவழங்கும் சாதனம் உருவாக்கப்பட்டது. இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஜஸ்லாந்து குளிர்கால நிலை நிலவும் நாடாகையால் அங்கு வீடுகள், கட்டிடங்களுக்கு வெப்பமேற்றுவதற்கு  இந்த புவி வெப்பசக்தியை பெருமளவு பயன்படுத்துகின்றார்கள். இவ்வாறு பெறப்படும் வெப்பமேற்றுகையைப் பயன்படுத்தி ‘பச்சைவீட்டு விளைவு’ முறையில் காய்கறி, பழவகை, என்பன உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்காலத்தில் பனிமூடியுள்ள புவிப்பகுதிகள் புவி வெப்பசக்திப் பாவனையால் குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படலாம் என அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

வெப்ப நீருற்றுக்கள் புவியின் எரிமலை வலயப்பகுதிகளில் மாத்திரமன்றி புவி மேற்பரப்பில் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவையும் புவிவெப்ப சக்திவளங்களே.

இலங்கையில் 225 மேற்பட்ட வெப்ப நீரூற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதிலே 120 இற்கு மேற்பட்டவை மலைநாட்டுப் பகுதிகளில் பரந்துள்ளன. வடகீழ் மாகாணத்திலும் வெப்ப நீரூற்று மையங்கள் பரந்துள்ளன. திருமலையில் உள்ள கன்னியாநீருற்று பிரசித்தி பெற்றதாகும். மட்டக்களப்பு, அம்பாறை, மாவட்டங்களில் கப்பூரல்ல, மகாஒயா, கல்லோயா, கிவுலகம, போன்ற இடங்களில் வெப்ப நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவை பற்றிச் புவிச்சரிதவியலாளர்கள் ஆய்வு செய்தமை குறைவே. இவை நன்கு ஆராயப்பட்டு புவி வெப்ப சக்தியைப் பயன் தரும் வளமாக மாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

ஏனைய சக்திவளங்கள்

அணுசக்தி மூலம் மின்சாரம் பெறும் நோக்கில் தமிழ்நாட்டில் கால்பாக்கம், கூடங்குளம் போன்ற பகுதிகளில் அணுஉலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் அணு உலைகளால் இந்தியாவில் 2700மெ.வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அணு உலைகளின் உருவாக்கம் ஆபத்து நிறைந்தது எனவும் மிக அதிக செலவிலேயே இதனை அமைக்க முடியுமெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும் உலகில் பல நாடுகள் அணுசக்தியை தனது சக்தித்தேவைக்காக எதிர்காலத்திலே பெருமளவு பயன்படுத்தவுள்ளன என அறிஞர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

எமது பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக கொக்கிளாய், புல்மோட்டைப்பகுதிகளில் ஆறு கிலோமீற்றர் நீளத்துக்குப் பரந்துள்ள இல்மனைற் மொனோசைட் படிவுகளில் அணு உற்பத்தி செய்யத்தக்க கனிமங்கள் காணப்படுவதாக தெரிகின்றது. இவை ரேடியோ கதிர்வீச்சைக் கொண்ட கனிமங்களாகும். கடந்த பல வருடங்களாக ஜப்பான் மேற்படி கனிமத்தை மேலே குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்து பெற்றுவருகின்றது. இதன் முழுமையான பயன்பற்றி எமது புவிச்சரிதவியலாளர்கள் முறையாக ஆராயவில்லை. ஆனால் அணுசக்தியை இக் கனிமத்திலிருந்து பெருமளவு பெறலாம் எனக் கூறுகின்றனர். எமது இவ் வளத்தை நாமே பயன்படுத்தத் தக்க வழிமுறைகள் விரைவில் எய்தப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் மன்னார், பரந்தன், முல்லைத்தீவு, இணைக்கும் கோட்டிற்கு வடக்கே உள்ள பகுதிகள் மயோசின் சுண்ணாம்புப் பாறைகளை அடித்தளப் பாறைகளாக கொண்டவையாகும். இவ்வாறான அமைப்புள்ள புவிப்பரப்புகளில் பெற்றோலிய வளம் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இப் பகுதிகளிலும் பெற்றோலிய வளம் காணக்கூடிய வாய்ப்புகள் உள. 25-30 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டு பகுதிகளில் வெளிநாட்டு புவிச்சரிதவியலாளர்கள் புவியதிர்வு ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டமையும் நாம் அறிந்த செய்தியே. இவற்றையெல்லாம் மனங்கொண்டு நாம் மீண்டும் புவிஅதிர்வு ஆய்வுகள் மூலம் பெற்றோலிய வளத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கவேண்டும். சில சமயங்களில் இவ் ஆய்வின் பெறுபேறாக எமது சக்திவளத் தேவையை நிறைவு செய்வது மாத்திரமல்ல சக்திவள ஏற்றுமதி பிரதேசமாக எமது பிரதேசம் மாறக்கூடிய நிலமை தோன்றக்கூடும் என்ற நம்பிக்கையை நிராகரிக்க முடியாது.

முடிவுரை

வடகீழ் மாகாணம் மாற்றுச் சக்திப்பயன்பாட்டிற்கு ஏற்ற பலவளங்களைத் தன்னகத்தே கொண்ட பகுதியே, இவ்வளங்கள் பற்றிய விபரங்கள் விஞ்ஞான முறையில் திரட்டப்படுதல் வேண்டும். அவற்றின் வகை, பிரதேசப்பரம்பல் உள்ளார்ந்ததன்மை, பயன்படுத்துவதற்கான மதிப்பீடு போன்றவை தரவுகளாகப் பெறப்பட்டு மாற்றுச்சக்திவள தேசப்படம் தயாரிக்கப்படுதல் அடிப்படை முதற் தேவையாகும். இவற்றின் அடிப்படையில் துறைசார் அறிஞர்களால் நுண்ணாய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். பின்னர் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உட்படும் போது எமது பிரதேசம் மாற்றுச்சக்தி வளத்திலும் தன்னிறைவு கொண்ட பூமி என்ற மெய்மை உறுதிப்படும்.

உசாத்துணை:

01)Cleard, Seamus (1998) Renewing the Earth: London: CAFOD.

 

02)Erie W.Danielson and Edward J.Deneeka, JR, Earth Science, London: Macmillan.

 

03) FAO (1990) Sustainable Development and Natural Resource Management, Rome Food and agricultiur organization of United Nations.

 

04)Government of Sri Lanks, (1991) Natural Resource of Sri Lanka: Conciliation and trendsa report prepared for the Natural Resource, and science Authority of Srilanka, Colombo: Government press. (1998) the National Atlas of Sri Lanka Colombo: Survey Department.Department of census and statistics-ministry of plan Implementation, (1998) census of population and Housing Colombo: Government press.

(1985) statistical abstract of the demorcratic socialist republic of Srilanka, Colombo:GovernmentPress.

05) ILO (1987) Linking energy with survival, Geneva ILO.

06) John E Permick and john R stilen(Ed), (1990) sustainable development for a new world agenda, proceeding of a conference, Canada: UNESCO

07) Kathleen Courrierr, (1992) Renewable energy in cities, New York: van Notstand Reinhold Company.

08) Robert L.Lottness (1992), Energy Handbook, New York: van Nostrand Reinhold Company.

09) இரா.சிவசந்திரன், (1976) இலங்கையில் தமிழர் பாரம்பரிய பிரதேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும், யாழ்ப்பாணம்:அகிலம் சமூக அறிவியலாய்வு வெளியீடு.

Pin It

 

இக்கேள்விக்கு விடை தேடுவதற்கு முன்பாக ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிறக் கதிரானது  ஊதா, கருநீலம்,  நீலம், பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு என ஏழு வகையான கதிர்களை உள்ளடக்கியதாகும். ஒவ்வொரு கதிருக்கும் வெவ்வேறு  அலைநீளமும் (wavelength)  அதிர்வெண்ணும் (frequency) உண்டு.  (இதெல்லாம் நீங்கள் சின்ன வயதில் படித்தது தான்!).  சூரியக்கதிர்கள்  அண்டத்தில்  நேர்க் கோட்டில் பயணிக்கும்.  அப்படிப் பயணிக்கும் போது ஒரு மூலக்கூற்றையோ (molecule) தூசியையோ (dust) எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு அல்லவா? அத்தூசியின் தன்மையைப் பொறுத்து கதிர்களின் செயல்பாடு மாறுபடுகிறது.

சூரியக்கதிர்கள் நம் காற்று மண்டிலத்தின் தூசித்துகள்கள் (Dust particles) மீது மோதும் பொழுது அவை பெரும்பாலும் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன. எதிரொளிக்கப்பட்ட கதிர்கள் வெள்ளை நிறத்திலேயே தோற்றமளிக்கும். இதற்குக் காரணம் தூசித் துகள்கள் கதிர்களை உட்கொள்ளாமல் அப்படியே விட்டுவிடுகின்றன.  எனவே கதிர்கள் அப்படியே எதிரொளிக்கப்படுகின்றன.

ஆனால் காற்று மூலக்கூறுகள் (Gas molecules) மீது மோதும் பொழுது, இதற்கு நேர்மாறாகக் காற்று மூலக்கூறுகள்  அதில் பெரும்பான்மையான கதிர்களை உட்கொள்கின்றன. இதில் அதிக அலைநீளம் கொண்ட கதிர்கள்(சிவப்பு) தப்பிப் போய் விடுகின்றன. ஆனால் குறைவான அலைநீளம் கொண்ட கதிர்களை(நீலம்) காற்று மூலக்கூறுகள் விடாமல் உட்கொள்கின்றன.  இவ்வாறு உட்கொள்ளப்பட்ட நீல நிறம் கதிர் வீச்சடைந்து பல திசைகளில் சிதறடிக்கப்படுகிறது. இதனால் தான் நமக்கு வானம் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது.

- அருண்மொழிவருமன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

இன்றைக்கு அறிவியலாளர்கள் சிரமப்பட்டு, கண்டு பிடிக்கும் பல உண்மைகளை நமது சனாதன மதப் பெரியவர்கள் தங்களுடைய தொலைநோக்குக் கூர்ந்த அறிவுத் திறத்தால் அறிந்து கொண்டிருந்தார்கள். அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு பல எளிய நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் இன்றும் நன்மைகளைத் துய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலைநாட்டு அறிவியலாளர்கள் இந்து மதப் பழக்க வழக்கங்களை ஆராயும் போது, அறிவியல் வளராத அந்தக் காலத்திலேயே இப்படியொரு நுணுக்கமான நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்த நமது முன்னோர்களின் மேதைமையை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்ப்போம். மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சோர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது.

          இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி  நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இன்றைய அறிவியலாளர்கள் இது போன்று நம் இந்து மதப் பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் அம்சங்களை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்து மதத்தை அறிவியல் மதம் என்று பாராட்டுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          மேற்கண்ட விளக்கங்களைப் பெறுவதற்கு நீங்கள் பெரிய மதாச்சாரியரையோ மதப் பிரச்சாரகரையோ நாட வேண்டியதில்லை. இந்து மதத்திலுள்ள 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் இவ்விளக்கங்களைச் சரளமாகத் தருகின்றனர். இந்துக்கள் மட்டுமல்ல; இப்பொழுது கிருத்துவர்களும் இவ்விளக்கங்களைத் தர ஆரம்பித்து விட்டனர். மார்கழி மாதம் அதிகாலையில் சென்ற கிருத்துவ பஜனைக் குழுவினரிடம் விசாரித்த போது ஓசோனின் அருமை பெருமைகளைப் பற்றி விரிவாக விளக்கினார்கள். ஓசோனினால் கிடைக்கும் நன்மைகளைப் பங்கு போட கிருத்துவர்களும் போட்டிக்கு வந்து விட்டார்கள்.

          ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? ஓசோன் என்பது ஒரு நச்சு வாயு. அது மனிதனின் சுவாச அமைப்பைப் பாழ்படுத்தும். மனிதனை மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் தீங்கானது. விலங்குகளுக்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் தீங்னானது. தாவரங்களுக்கு மட்டுமல்ல, ஜடப் பொருட்களான ரப்பர், துணிவகைகள் ஆகியவற்றிற்கும் தீங்கானது. அது எப்படி எந்த அளவிற்குத் தீங்கானது என்பது ஆர்.டி.ராஸ் (R.D.Ross) என்பவர் தொகுத்து Van Nostrand Reinhold Company (New york / Cincinati / Toranto / London / Melbourne) வெளியிட்டிருக்கும் Air Pollution and Industries (தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்) என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் உள்ள சில விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 மனிதனுக்குக் கேடு

          1.காற்றில் ஐந்து கோடியில் ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சு திணறத் தொடங்கும்.

          2. காற்றில் ஒரு கோடியில் மூன்று பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சுக் குழாயில் வலி எடுக்கும்; களைப்பு ஏற்படும்; தலைவலி உண்டாகும்.

          3. காற்றில் பத்து லட்சத்தில ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் சிலர் மரணமே கூட அடைந்து விடுவார்கள்.

          4. பொதுவாக ஓசோனைச் சுவாசித்தால் முதுமைத் தன்மை விரைவாக ஏற்படும். (பக்கம் 242)

விலங்குகளுக்குக் கேடு

          மனிதனுக்கு ஏற்படும் கேடுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பொருந்தும். (பக்கம் 44)

தாவரங்களுக்குக் கேடு

          காற்றில் பத்து கோடியில் மூன்று பங்கு ஓசோன் இருந்தால் இலைகள் பழுப்படையும். இலை நரம்புகள் வலுவிழக்கும். (பக்கம் 44,46,49)

ஜடப் பொருட்களுக்கும் கேடு

          காற்றில் பத்து கோடியில் ஒரு பங்கு ஓசோன் இருந்தால் ரப்பரின் மேற்பகுதியில் வெடிப்பு ஏற்படும். நூல் மற்றும் துணிகள் நைந்து விடும். (பக்கம் 25)

           இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் ஓசோன் காற்றில் நிறைய இருப்பதாகவும் அது உடல் நலனுக்கு நல்லது என்றும் எப்படி கதை கட்டினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          அறிவியலும் மதங்களும் என்றைக்குமே எதிரிகள் தான். அறிவியல் உணமையை மேலும் மேலும் ஆராயும். அது கசப்பாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கும். மதங்களோ மூட நம்பிக்கைகளை வளர்க்கத்தான் பாடுபடும். அறிவியல் மூட நம்பிக்கைகளை அடித்து நொறுக்கி முன்னேறிவிட்டால், அதுவரைக்கும் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகளுக்கு மதச் சாயம் பூசி உள்வாங்கிக் கொள்ளும். வரலாறு முழுவதும் இப்படித் தான் நடந்திருக்கிறது.

          ஓசோன் கதை என்னவென்றால், அது மூன்று அணுக்கள கொண்ட உயிர்வளி; வீரியம் மிக்கது என்று படித்தவுடன், ஏமாற்றுக் கலையைத் தவிர வேறு எதையுமே ஆராய விரும்பாத, வேறு எதிலுமே நிபுணத்துவம் பெற விரும்பாத மதவாதிகள் அது உடல் நலுனுக்கு நல்லது என்று தாங்களாகவே முடிவு கட்டி விட்டாரகள். அதை எந்த இடத்தில் மத உரிமை கோருவது என்று தீவிரமாக யோசித்தார்கள். அவர்களுடைய கண்களில் மார்கழி மாத அதிகாலை பளிச்சென்று தென்பட்டது.உடனே மார்கழி மாத அதிகாலையில் ஓசோன் இருக்கிறது; அதைச் சுவாசித்தால் உடலுக்கு நல்லது என்று கதை கட்டி விட்டார்கள். மத நிறுவனர்களின் (முட்டாள்களின்) மேதாவிலாசத்தை மதப் பிரச்சாரகர்கள் (அயோக்கியர்கள்) மதத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் (காட்டுமிராண்டிகளிடம்) சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

          இன்று மிகப் பலர் மார்கழி மாத அதிகாலையில் கோயிலுக்குப் போவது காற்றில் கிடைக்கும் ஓசோனைச் சுவாசிக்கத் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரிடையானது. மார்கழி மாதம் மட்டுமல்ல; எந்த மாதத்திலும் காற்றில் ஓசோன் இருப்பதில்லை. இது மதவாதிகளின் கட்டுக் கதையே.

          இது போல் மதம் அறிவியலைச் சார்ந்து இருக்கிறது என்றும் மதம் அறிவியலை விட மேம்பட்டது என்றும் கூறும் அனைத்து விவரங்களும் அயோக்கியத்தனமான பொய்களே. ஓசோன் விஷயத்தில் மிக எளிதாக விளக்க முடிகிறது. மற்ற விஷயங்களிலும் ஆழமாக ஆராய்ந்தால் மதவாதிகள் செய்யும் புரட்டு தெளிவாகத் தெரியும்.

          அது சரி! மதவாதிகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மக்கள் மதிமயக்கத்தில் இருக்கும் வரையில் தான் சுரண்டல் கொள்ளையை நடத்த முடியும். மக்கள் தெளிவு பெற்றால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து. மதங்கள் எப்பொழுதுமே சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் துணையாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டும் வர்க்கத்தினர் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு இராணுவத்தையும் காவல் துறையையும் விட மதவாதிகளையே அதிகம் சார்ந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் மதவாதிகள் மக்களை மயக்க விதவிதமான புரட்டுகள் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் மதவாதிகள் உங்களுடன் கணக்கு தீர்த்துக் கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It