அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பிரதிபலிக்கும் தன்மையுடைய செயற்கைக்கோள் கண்ணாடிகள் தூக்கம் மற்றும் சூழலைப் பாதிக்கின்றன. இந்தக் கண்ணாடிகளைக் கொண்ட செயற்கைக் கோள்கள் மற்றும் தாழ் புவிச் சுற்றுப்பாதைகளில் ஒரு மில்லியன் வரை செயற்கைக் கோள்களைச் செலுத்துவதற்கான திட்டம், மனிதனின் ஆரோக்கியம் மற்றும் சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தூக்கம் மற்றும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடு பற்றி ஆராயும் முன்னணி நிபுணர்கள் கூறுகின்றனர்.
செயற்கைக்கோள் பிரதிபலிப்பு கண்ணாடிகள்
- பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் கடிதம்: ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கம் (European Biological Rhythms Society - EBRS), சீரிசைகளுக்கான உயிரியல் ஆய்வு சங்கம் (Society for Research on Biological Rhythms), ஜப்பானிய கால உயிரியல் சங்கம் (Japanese Society for Chronobiology), கனடா கால உயிரியல் சங்கம் (Canadian Society for Chronobiology) ஆகிய நான்கு பன்னாட்டு அறிவியல் சங்கங்களின் தலைவர்கள் யு.எஸ். ஃபெடரல் தகவல் தொடர்பு கமிஷனுக்கு (Federal Communications Commission - FCC) இது பற்றிக் கடிதம் எழுதியுள்ளனர்.
- கால உயிரியல் ஆய்வு: கால உயிரியல் ஆய்வு என்பது விழிப்பு மற்றும் தூக்கத்தின் சுழற்சி, சீரிசைகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவாகும். முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,500 விஞ்ஞானிகள் இந்தச் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் கவலையைக் கடிதம் மூலம் வெளியிட்டுள்ளனர்.
- ஒழுங்குமுறை அமைப்பின் முன் உள்ள திட்டங்கள்: ஒழுங்குமுறை அமைப்பிற்கு முன், பிரதிபலிக்கும் கண்ணாடிகளுடன் உள்ள செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி பூமியின் பகுதிகளை இரவில் ஒளியூட்டத் திட்டமிட்டிருக்கும் 'ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல்' (Reflect Orbital) என்ற தொழில்முனைவோர் நிறுவனத்தின் முன்மொழிதல் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் எண்ணற்ற செயற்கைக்கோள்களைப் புவித் தாழ் சுற்றுவட்டப் பாதையில் அனுப்ப அனுமதி கோரும் மனுவும் உள்ள நிலையில் இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
- உயிர்க்கடிகாரம் பாதிப்பு: எண்ணற்ற செயற்கைக்கோள் தொடர்களை விண்வெளிக்கு அனுப்புவதால், புவி முழுவதும் இயற்கையான இரவு நேரச் சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்று இந்தச் சங்கங்களின் தலைவர்கள் கூறுகின்றனர். ஒளி-இருள் சுழற்சியை மாற்றினால் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் விழிப்பு, தூக்கம், ஹார்மோன்களின் சுரப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் உயிர்க்கடிகாரத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
- சூழலியல் மறுபரிசீலனை தேவை: மேலும், அது இரவு நேரத்தில் இரை தேடும் விலங்குகளின் வலசை, தாவரங்களின் பருவகாலச் சுழற்சிகள் மற்றும் கடல்சார் உணவு வலையில் தாவர மிதவைகளின் சீரிசைகளை மாற்றியமைக்கும். அதனால் இது குறித்த முழுமையான சூழலியல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும், செயற்கைக்கோள் கண்ணாடிகளின் பிரதிபலிப்பு மற்றும் அதிகரிக்கும் இரவு நேரப் பிரகாசத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஒப்புதல் வழங்கப்படும் முன்பு தயவுசெய்து இது பற்றிச் சிந்திக்க வேண்டும்.”
அறிவியலின் புனைக்கதை இல்லை
- தாவரங்களுக்கும் இரவு தேவை: “உலக உணவுப் பாதுகாப்பையும் இது பாதிக்கும். தாவரங்களுக்கு இரவு நேர இருள் அவசியம். நம்மால் இதைத் தவிர்க்க முடியாது” என்று ஐரோப்பிய சீரிசைகளுக்கான உயிரியல் சங்கத்தின் (EBRS) தலைவரும் லெஸ்டர் (Leicester) பல்கலைக்கழகத்தின் மரபணுவியல் விஞ்ஞானியுமான பேராசிரியர் சாரலம்போஸ் கைரியாக்கு (Prof. Charalambos Kyriacou) கூறுகிறார். ஒளியின் பகல்-இரவு மாற்றம் என்பது பூமியில் மிகப் பழமையான வாழ்க்கைக்கோட்பாடு.
- ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் திட்டம்: ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல், பூமியில் 5 முதல் 6 கிலோமீட்டர் அகலத்திற்குச் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளைச் செயற்கைக்கோள்களில் பொருத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்ணாடிகளின் பிரகாசத்தை முழு நிலவு முதல் நண்பகல் வரை இருக்குமாறு மாற்றியமைக்கலாம். இதன் மூலம் மாலை நேரம் வரை சூரிய ஆற்றலை நீட்டிக்கலாம். கட்டுமானத் திட்டங்கள், பேரிடர் செயல்பாடுகள், வேளாண்மை போன்றவற்றிற்கு இதன் மூலம் ஒளி வழங்க முடியும்.
- ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் திட்டம்: உள்ளூர் கவுன்சில்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மட்டும் ஒளியூட்டல் செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. சுற்றுப்பாதையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் கணினி வலைப்பின்னல்களுக்குப் பயன்படும் ராட்சச சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய ஸ்பேஸ்எக்ஸ் ஒரு மில்லியன் செயற்கைக்கோள்கள் வரை ஏவத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தரைப்பகுதி தரவு மையங்களுக்கான ஆற்றல் சேமிப்பு மற்றும் குளிரூட்டும் தேவைகளைக் குறைக்க முடியும் என்று ஸ்பேஸ்எக்ஸ் கூறுகிறது.
- சாத்தியமான உண்மைகள்: “செயற்கைக்கோள் கண்ணாடிகள் சூரிய ஒளியைப் பூமியில் பாய்ச்சுதல் அல்லது பூமியில் உள்ள தரவு மையங்களின் பயன்பாட்டிற்காக ஒரு மில்லியன் வரை மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்களை ஏவுதல் போன்ற திட்டங்கள் அறிவியல் புனைக்கதைகள் போலத் தோன்றலாம். ஆனால் இவை அனைத்தும் நடைமுறையில் சாத்தியமான உண்மைகள்.
- டார்க்ஸ்கை நிறுவனத்தின் எச்சரிக்கை: இப்போது சுற்றுப்பாதைகளில் சுற்றிவரும் செயற்கைக்கோள்களே இரவு நேரப் பிரகாசத்தையும் வானத்தின் இயல்பான இருளையும் சுமார் 10% அளவிற்கு ஏற்கனவே குறைத்துவிட்டன என்று ஆய்வுகள் கூறுகின்றன” என்று டார்க்ஸ்கை இன்டர்நேஷனல் (DarkSky International) என்ற இரவு வானின் இயற்கையான இருளைப் பாதுகாக்கச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும் செயல் இயக்குநருமான ரஸ்கின் ஹார்ட்லி (Ruskin Hartley) கூறுகிறார்.
தொலைநோக்கிப் படங்களில் வண்ணக்கோடுகள்
- இரவு வானில் ஏற்படும் பாதிப்புகள்: “செயற்கைக் கோள்கள் இரவு வானத்தை இரண்டு முக்கிய வழிகளில் பாதிக்கின்றன. தனிச் செயற்கைக் கோள்கள் தொலைநோக்கிப் படங்களில் வண்ணக் கோடுகளை ஏற்படுத்துகின்றன. செயற்கைக் கோள்கள் பிரதிபலிக்கும் சூரிய ஒளி மற்றும் இடிபாடுகள் வானத்தைப் பிரகாசமாக்குகின்றன. இது இரவு வானத்தின் பிரகாசத்தை ஒரு சதுர மீட்டருக்கு மூன்று முதல் எட்டு மைக்ரோகேண்டெலா (Microcandela) வரை அதிகரிக்கிறது.
- அலகு விளக்கம்: cd () என்ற குறியீட்டுடன் அழைக்கப்படும் கேண்டெலாவின் (Candela) நுண் அலகான மைக்ரோகேண்டெலா என்பது ஒளியின் அடர்த்தியை அளக்கப் பயன்படும் அனைத்துலக அலகு ஆகும். மேலும் இது குறிப்பிட்ட திசையில் வெளிவிடப்படும் ஒளியின் ஆற்றலையும் குறிக்கிறது. 2035-இல் இது ஐந்து முதல் ஒன்பது மைக்ரோகேண்டெலா வரை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலை வானியலாளர்களுக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
- உலகளாவிய பிரச்சினை: கூடுதலான இந்தப் பிரகாசம் நிலவொளியை விட மிகக் குறைவாக உள்ளது என்றாலும், இந்நிகழ்வு உண்மையானது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். இது உலகளாவியது; மிகத் தொலைதூரத்திற்கு உள்ள இடத்திற்குச் சென்றாலும் இதிலிருந்து தப்ப முடியாது. செயற்கைக் கோள்களின் ஏவுதல் மற்றும் இடிபாடுகளை அதிகமாக ஏற்படுத்தும் இன்றைய நிலை தொடர்ந்தால் வரும் பத்தாண்டுகளில் இதன் அளவு அதிகமாகும்.
- மாதிரிகள் உறுதி செய்கின்றன: இதற்கான மாதிரிகள் இதை உறுதி செய்கின்றன” என்று பிராட்டிஸ்லாவா (Bratislava) ஸ்லோவாக் அறிவியல் அகாடமியின் (Slovak Academy of Sciences) டாக்டர் மிரோஸ்லாவ் காஸிஃபேஜ் (Dr. Miroslav Kocifaj) கூறுகிறார். “பூமியில் வாழ்வைப் பாதிப்பது எது என்பது பற்றிய கேள்வி வரும்போது, நிலவொளியுடன் ஒப்பிட்டால் இதன் உண்மையான பிரச்சினை பிரகாசமில்லை; மாறாக உயிரியல் செயல்முறைகளால் இதைக் கண்டறிய முடியுமா என்பதே கேள்வி.
- நுண்ணிய உணர்திறன்: மனிதர்கள் உணர்வதை விட மிகக் குறைவாகவே உயிர்க்கடிகாரத்தின் செயல்முறைகள் பிரகாசத்துடனான உணர்திறன் கொண்டதாக உள்ளன. இரவு வானம் நிரந்தரப் பிரகாசத்துடன் இருந்தால், நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத சூழல் மண்டலங்களின் விளைவுகளை அது சுருக்கி விடும்” என்று கனடா கால உயிரியல் சங்கத் தலைவரும் கெல்ஃப் (Guelph) பல்கலைக்கழக விஞ்ஞானியுமான பேராசிரியர் டாமி மார்ட்டினோ (Prof. Tami Martino) கூறுகிறார்.
பூமியின் பழமையான கோட்பாடுகளில் ஒன்று
- உடலியல் சார்ந்த பாதிப்புகள்: உயிர்க்கடிகாரத்தில் ஏற்படும் இடையூறுகள் வெறும் ஒரு அசௌகரியம் மட்டும் இல்லை; அது மிக மோசமான ஆரோக்கியப் பாதிப்புகளை ஏற்படுத்தும் உடலியல் ரீதியான செயல்முறை. நாங்கள் விண்வெளி கண்டுபிடிப்புகளுக்கு எதிராக வாதாடவில்லை. பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றம், கடல் அமிலமாதல் போன்ற மற்ற சூழல் பிரச்சினைகளைப் போலவே இரவு வானை மாற்றுவதையும் தீவிரப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒளி மற்றும் இருளின் மாற்றம் வெறும் ஒரு அற்பமான பின்புல வேறுபாடு மட்டும் இல்லை.
- கூட்டு அமைப்புகளின் எச்சரிக்கை: அது பூமியின் ஒருங்கிணைக்கப்பட்ட மிகப் பழமையான கோட்பாடுகளில் ஒன்று என்று உலக உறக்க சங்கம் (World Sleep Society), ஐரோப்பிய உறக்க ஆய்வு சங்கம் (European Sleep Research Society), உறக்கத்திற்கான ஆரோக்கிய அறக்கட்டளை (Sleep Health Foundation), ஆஸ்திரேலிய உறக்க சங்கம் (Australian Sleep Association), ஆஸ்ட்ரலேசியன் கால உயிரியல் சங்கத்தின் (Australasian Chronobiology Society) தலைவர்கள் எழுதியுள்ள மற்றொரு கடிதத்தில் கூறியுள்ளனர்.
- இயற்கை வழிசெலுத்தல் பாதிப்பு: செயற்கைக் கோள்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், வேகமாக நகரும் செயற்கைப் பொருட்கள் இரவு வானத்தை ஆதிக்கம் செலுத்தும் ஒரு அம்சமாக மாறும் காலமும் இடங்களும் ஒரு நாள் ஏற்படும். பல பறவைகளும் சில பூச்சிகளும் நட்சத்திரங்களை வைத்தே வழி கண்டறிகின்றன. இதனால் மனிதனின் இரவு வான் அனுபவம் மாறும்.
- புதிய வகை ஒளி மாசு: சுற்றுவட்டப் பாதையில் கண்ணாடிகளை வைத்து ஒளியைப் பிரதிபலிக்கும் செயற்கைக்கோள்கள்—குறிப்பாக அவை பிழையாகச் செயல்பட்டால் அல்லது இலக்கைத் தவறவிட்டால் — ஏற்படும் பொதுநல ஆரோக்கியப் பிரச்சினைகளின் விளைவுகள் குறித்து இதுவரை இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. மேலும் இது ஒரு புதிய வகை ஒளி மாசை அறிமுகப்படுத்துகிறது. ஒளிக் கீற்றுகள் நிலப்பகுதிக்குக் குறுக்கே நகர்வதால் கண்களைக் கூசவைக்கும் அல்லது குருடாக்கும் பளிச்சிடும் ஒளி ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- கவனமாக ஆராய வேண்டும்: இதனால் முன்னெடுத்துச் செல்வதற்கு முன்பு இத்திட்டத்தைப் பற்றி கவனமாக ஆராய வேண்டும் என்று டார்க்ஸ்கை கோருகிறது” என்று ரஸ்கின் ஹார்ட்லி கூறுகிறார். இது பற்றிக் கருத்து தெரிவிக்க ரிஃப்லெக்ட் ஆர்பிட்டல் மறுத்து விட்டது.
கருத்து கூற விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஸ்பேஸ்எக்ஸ் பதிலளிக்கவில்லை என்று புகழ்பெற்ற கார்டியன் (The Guardian) செய்தி நிறுவனம் கூறுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பழுதடைந்த செயற்கைக் கோள்களுக்காக நிலவில் இடம் ஒதுக்கப்படவுள்ளது. கடினத் தன்மை வாய்ந்த இந்த செயற்கைக் கோள்களின் பகுதிகள் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுவதற்கென்று இந்த இடங்கள் பயன்படுத்தப்படும். இந்த இடங்கள் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவில் குப்பை மேடுகள்
நிலவின் வளமற்ற தரைப்பரப்பில் தளங்கள், சுரங்கப் பணிகள், அறிவியல் ஆய்வுக் கருவிகளை நிறுவுதல் போன்றவற்றிற்காக விண்வெளி முகமைகள், தனியார் நிறுவனங்கள் அனுப்பவுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வரும் இருபது ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் பரப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளுக்காக சரியான இடங்களைக் கண்டறிதல், வழி அறிதல் மற்றும் தகவல் தொடர்புக்காக செயற்கைக்கோள் கட்டமைப்புகள் அனுப்பப்பட உள்ளன.
ஆனால் எரிபொருள் தீர்ந்து போகும்போது செயற்கைக்கோள்களை நிலவின் பரப்பில் மோதி விழச் செய்து தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. “இந்த செயற்கைக்கோள்கள் தரையில் மோதி உடைந்து துண்டுகளாக சிதறும்” என்று டரம் (Durham) பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானியும் சமீபத்தில் க்ளாஸ்கோ ஸ்பேஸ் காமின் இது குறித்த நிபுணர் குழு கூட்டத்தை நடத்தியவருமான டாக்டர் ஃபியோனாக் தாம்சன் (Dr Fionagh Thomson) கூறுகிறார்.
நிலவின் வெவ்வேறு இடங்களில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழுந்தால், கட்டிடங்கள், அறிவியல் உபகரணங்கள், நிலவிற்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் கால் பதித்த இடம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்குரிய தூய இடங்கள் போன்றவை சேதமாகும். விநாடிக்கு 1.2 மைல் வேகத்தில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழும்போது நிலவின் பரப்பில் அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.
நிலவில் விஞ்ஞானிகள் நிறுவத் திட்டமிட்டுள்ள உணர் திறன் மிகுந்த கருவிகளுக்கு இவை இடையூறை ஏற்படுத்தும். இந்த மோதல்களால் உருவாகும் பல மீட்டர்கள் தொலைவிற்கு பள்ளங்கள் இருக்கும். இதனால் உருவாகும் தூசு மேகங்கள் தொலைநோக்கிகள், உபகரணங்களை சேதமடையச் செய்யும்.
“நிலவின் பரப்புடன் ஒப்பிடும்போது இது உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை கலாச்சார, அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விழ வாய்ப்பு உண்டு. அதனால் இது பற்றிய திட்டமிடல் அவசியம்” என்று பர்க்பெக் (Birkbeck) இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் இயன் க்ராஃபெர்டு (Prof Ian Crawford) கூறுகிறார். விஞ்ஞானிகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை வளி மண்டலத்தைப் பயன்படுத்தி அகற்றுகின்றனர்.
ஆயிரக்கணக்கான இத்தகைய செயற்கைக்கோள்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் நிலவில் வளி மண்டலம் என்று எதுவும் இல்லை. அதனால் இதற்கு வேறு தீர்வுகளைக் காண வேண்டும். வரும் இருபது ஆண்டுகளில் நானூற்றிற்கும் அதிகமான நிலவு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஆர்ட்டிமிஸ் (Artemis) முகாம், நிலவைச் சுற்றிவரும் லூனார் கேட்வே (Lunar Gateway) நிலையம், சீனாவின் இரண்டாவது நிலவு முகாம் மற்றும் ரஷ்யாவின் நிலவு முகாம் இத்திட்டங்களில் அடங்கும். 2027ல் ஐரோப்பிய விண்வெளி முகமை லூனார் பாத் ஃபைண்டர் (Lunar Pathfinder) செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. இது 2030ல் இயங்கவுள்ள மூன் லைட் (Moonlight) செயற்கைக்கோள்களின் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமையும்.
நிலவில் செயற்கைக்கோள் கல்லறைகள்
விஞ்ஞானிகள் பழுதடைந்த செயற்கைக்கோள்களை அகற்ற மூன்று வழிகளை ஆலோசிக்கின்றனர். ஒரு உந்துதல் அலகுடன் எரிபொருள் உள்ள ஒரு செயற்கைக்கோளை சூரியனை நோக்கி அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழலும்படி செய்யலாம். ஆனால் இதற்கு செலவு அதிகமாகும். மாறாக அதை தொலைவில் உள்ள ஒரு நிலவு சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பலாம். ஆனால் நிலவிற்கு பலவீனமான ஈர்ப்பு விசையே உள்ளது. அதனால் இதை செயல்படுத்துவது கடினம்.
மாறாக எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயற்கைக் கோள்களை நிலவின் மீது மோதி விழுமாறு செய்யலாம். “நிலவுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான கலந்தாலோசனை அமைப்பு (Lunar Activities Consultation (Atlac)) மற்றும் விண்வெளிக் குப்பைகளை ஒருங்கிணைக்கும் பன்னாட்டு முகமைகளுக்கு இடையிலான கமிட்டி (Inter-Agency Space Debris Coordination Committee (IADC)) ஆகியவை இதற்குரிய சிறந்த தீர்வுகளை ஆராய்கிறது” என்று இங்கிலாந்து விண்வெளி முகமையின் ஒழுங்குபடுத்தல் அலுவலக தலைவர் சேரா போயல் (Sarah Boyall) கூறுகிறார்.
“பழுதடைந்த செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி நிலவில் விழச் செய்வதே நடைமுறைக்கு உகந்த தீர்வு. இதன் மூலம் நிலவில் விவேகமற்ற மனித செயல்பாடுகளைத் தடுக்கலாம்” என்று லூனார் பாத்ஃபைண்டர் தயாரிப்பாளர் சர்ரெ லிமிடெட் (SSTL the Surrey-based satellite manufacturer) நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் பென் ஹூப்பர் (Ben Hooper) கூறுகிறார்.
“இதனால் சரியான நேரம் வரும்போது குப்பையாகும் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விழும்படி செய்யலாம்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூன் லைட் திட்ட அலுவலகத் தலைவர் சார்ல்ஸ் க்ரான்ஸ் டவுன் (Charles Cranstoun) கூறுகிறார்.
“செயற்கைக் கோள்கள் மோதும்போது இதனால் பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் நிலவின் அமைப்பு பாதிக்கப்படும்.. முன் கூட்டியே தெரிந்த நிறை, ஜியோமெட்ரி மற்றும் வேகத்துடன் ஒரு பொருள் விழும்போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு உண்டாகும் என்பதை நாம் அறிய முடியும்” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியல் பிரிவு எமரிட்டஸ் (Emeritus) விஞ்ஞானி ஜான் சானெர்கி (John Zarnecki) கூறுகிறார்.
பழுதடையும் செயற்கைக் கோள்களுக்காக நிலவில் கல்லறைகளை ஏற்படுத்தும் இத்திட்டம் நிலவை பாதுகாக்க உதவும். இதனால் மனித விண்வெளி ஆய்வுகள் புதிய ஊக்கம் பெறும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
வியாழனின் கனிமீட் (Ganymede) நிலவின் மீது, பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனசோர்களை கொன்ற விண்கல்லைவிட மிகப்பெரிய விண்கல் விழுந்தது. இதனால் சூரிய குடும்பத்தில் பிரம்மாண்டமான வெளிறிய சாம்பல், வயலட் அல்லது பர்ப்பிள் நிறமுள்ள நிலவான இது தன் அச்சில் ஊசலாடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சடசடவென்று பூமியின் மீது மோதி விழுந்து அதுவரை பூமியை ஆண்ட டைனசோர்களை அழித்த விண்கல்லைவிட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டில் விழுந்த பழமையான இந்த விண்கல் இருபது மடங்கு பெரியது.
இப்பேரழிவால் வியாழனுக்கு உள்ளதாகக் கருதப்படும் நூறு விண்கற்களில் ஒன்றான கனிமீட் நிலவு வாயுக் கோளான வியாழனை விட்டு விலகிச் சென்று சுழல்கிறது. கணினி மாதிரிகளின்படி இந்த விண்கல் 185 மைல் குறுக்களவை உடையது. 60-90 டிகிரி கோணத்தில் கனிமீட்டின் மீது இது மோதியது. இதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தொடக்கத்தில் 1,000 மைல் அகலம் உள்ள பெரும் பள்ளம் அங்கு தோன்றியது. இந்தப் பள்ளம் பாறைகளாலும் தூசுக்களாலும் பகுதியளவு நிரப்பப்பட்டது.
“கனிமீட் நிலவில் காணப்படும் தனித்துவமான குழிகள் இந்த பிரம்மாண்ட விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பொதுமைய வளையங்களின் எச்சங்கள் (remnants of concentric rings) என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. என்றாலும் இந்த தாக்கம் எவ்வளவு பெரியது, வியாழனின் நிலவில் இதனால் ஏற்பட்ட விளைவு பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இங்கு குழிகள் நிறைந்த பகுதி வியாழனில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.
விழுந்த இடத்தில் உண்டான தாக்கத்தால் ஏற்பட்ட கூடுதல் எடை கனிமீட்டை நிலைகுலையச் செய்தது. அதை அதன் அச்சை சுற்றி ஊசலாட வைத்தது" என்று ஜப்பான் கோப் (Kobe) பல்கலைக்கழகத்தின் கோள்கள் பிரிவு விஞ்ஞானி டாக்டர் நயாயூக்கி ஹராட்டா (Dr Naoyuki Hirata) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
நிலவின் சேய்மைப் பகுதியில் (far side) விண்கல் விழுந்ததை கணினி மாதிரிகள் உறுதி செய்கிறது. பூமியின் நிலவைப் போல கனிமீட் வியாழனின் ஈர்ப்பு அலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலவு நிரந்தரமாக தன் ஒரு பகுதியை மட்டுமே எப்போதும் வியாழனுக்கு காட்டுகிறது. புதன் கோளை விடப் பெரிய, 3,000 மைல்கள் அகலம் உடைய கனிமீட் நிலவில் இந்த விண்கல் விழுந்ததால் உண்டான தாக்கம் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் நிலவின் உண்மையான தரைப்பரப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தரைக்கடியில் இருந்ததாக கருதப்பட்ட உப்பு நீர்க் கடல் உள்ளிட்ட பல அமைப்புகளை இந்த விண்கல் மோதல் பாதித்தது. ஐரோப்பிய விண்வெளி முகமையால் 2023ல் வியாழன் மற்றும் அதன் நிலவுகளை ஆராய அனுப்பப்பட்ட ஜூஸ் (Juice) விண்கலன் இது பற்றி மேலும் ஆராய்வதுடன் இந்த ராட்சத வாயுக் கோளின் நிலவுகளில் உயிர்கள் வாழ அவசியமான நீர், ஆற்றல் மூலங்கள் பற்றியும் ஆராயவுள்ளது.
“மோதலால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டின் பழமையான தரைப்பரப்பில் உருவான துவாரங்களை இன்றும் காணமுடியும். இது பற்றி மாதிரிகளைக் கொண்டு ஆராய்வது கடினம். கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி கடிகாரத்தின் முட்களைத் திருப்புவது போல கனிமீட்டில் ஏற்பட்ட வடுக்களுக்கான விளக்கங்களைத் தேடுவது கடினமானது. ஜூஸ் கலன் இது பற்றி ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் துண்டுகளாக இருக்கும் தரைப்பரப்பின் படங்கள் விரைவில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்கல் விழுந்ததால் மீண்டும் நிலவின் வடிவம், அதன் ஈர்ப்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோள்கள் பிரிவு ஆய்வாளர் பேராசிரியர் லீஃப் லெச்செர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.
வியாழன் மற்றும் அதன் மகத்தான நிலவுகள் பற்றி குறிப்பாக கனிமீட் நிலவு பற்றி ஜூஸ் கலன் விரைவில் அனுப்பவுள்ள புதிய விவரங்களுக்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
சனிக் கோளை 128 புதிய நிலவுகள் சுற்றி வருகின்றன என்று விண்வெளியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனிக் கோளுக்கு இப்போது 274 நிலவுகள் உள்ளன. சூரிய குடும்பத்தில் மிக அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெருமையை இந்தக் கோள் பெற்றுள்ளது. இது வரை அதிக நிலவுகளைக் கொண்டிருந்ததால் வியாழன் “நிலவுகளின் அரசன்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது சனிக் கோள் மொத்தம் 274 நிலவுகளுடன் உள்ளது. இது சூரிய குடும்பத்தில் மற்ற எல்லா கோள்களும் பெற்றிருக்கும் நிலவுகளின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு.
முன்பு இதே ஆய்வுக் குழுவினர் கனடா பிரான்ஸ் ஹவாய் தொலைநோக்கியை (Canada France Hawaii telescope) பயன்படுத்தி சனியின் 62 நிலவுகளை அடையாளம் கண்டனர். மங்கலாகத் தெரிந்த அவற்றின் மூலம் சனிக் கோளிற்கு மேலும் கூடுதல் நிலவுகள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். 2023ல் மேலும் உற்றுநோக்கல்கள் நடந்தன.
“128 புதிய நிலவுகள் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சனியின் இடத்தை இனி மேல் வியாழன் ஒருபோதும் பெறமுடியாது. 5 பிப்ரவரி 2024 புள்ளிவிவரங்களின்படி வியாழனை 95 நிலவுகள் உறுதிசெய்யப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிவருகின்றன” என்று தாய்வான் அகடிமியா ஷின்ஷர் (Academia Sincia) அமைப்பின் விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கழகத்தின் முன்னணி ஆய்வாளரும் முதுகலை முனைவர் பட்ட மாணவருமான டாக்டர் எட்வர்டு ஆஷ்ட்டன் (Edward Ashton) கூறுகிறார்.
சனியின் புதிய நிலவுகள் சர்வதேச விண்வெளியியல் சங்கத்தால் (International Astronomical Union IAU) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய நிலவுகளுக்கு எண்களும், எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் காலிக் (Gallic), நோர்ஸ் (Norse) மற்றும் கனடியன் இனியுட் (Canadian Inuit) கடவுள்களின் பெயர்கள் கொடுக்கப்படும். இவை மூன்றும் வெவ்வேறு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொன்றும் தனித்துவமான புராணக் கதைகள், கடவுளர்கள், கலாச்சாரக் கதைகளைக் கொண்டவை. காலிக் என்பது கெல்டிக் (celtic) ஆதிவாசிகளிடம் இருந்து தோன்றியது. இது இப்போதைய பிரான்சின் கோல் (Gaul) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தோன்றியது. இயற்கை, ஆண் மற்றும் பெண் கடவுள்கள் மற்றும் வீரச் செயல்கள் புரிந்த ஆளுமைகளைக் கொண்டது.
நார்ஸ் புராண நம்பிக்கை ஜெர்மனியின் நார்ஸ் பகுதியில் தோன்றியது. கடவுள்கள், மாவீரர்கள் இதில் முக்கியமானவர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை, இயற்கை, ஆன்மாக்கள் ஆகியவற்றை பாரம்பரியமாகக் கொண்டதே கனடாவின் இனியுட் புராண நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளின் படி சனியின் புதிய நிலவுகளுக்கு பெயர்கள் சூட்டப்படும்.
கோள்களின் முதண்மை நிலவுகளுக்கு அவை சுற்றிவரும் வட்டப் பாதைகளின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஒழுங்கற்ற நிலவுகளுக்கு பழைய புராணங்களின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. வழக்கமாக சனியின் நிலவுகளுக்கு இதன் அடிப்படையில் பெயர் வைக்கப்படும். பெரும்பாலான நிலவுகளும் நார்ஸ் கூட்டத்தில் உள்ளன.
பல கடவுள்களை வணங்கும் பாரம்பரியமான வைக்கிங் (Viking) நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த பெயர்கள் ஆராயப்படுகிறது. நிலவுகளின் பாதையை வானில் கண்டறிய உதவும் ஷிஃப்ட் மற்றும் ஸ்டாக் தொழில்நுட்பத்தை (shift and stack technique) பயன்படுத்தி இந்த நிலவுகள் கண்டறியப்பட்டன. இத்தொழில்நுட்பத்தின் மூலம் நிலவுகளின் தொடர் படங்கள் பெறப்படுகின்றன. இவை ஒன்றிணைக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. நிலவுகள் பிரகாசமாக மாறுகின்றன.
இதனால் ஆய்வாளர்கள் வான்வெளியில் இவற்றின் பாதையை சுலபமாக அடையாளம் காணமுடியும். புதிய, 128 நிலவுகளும் ஒழுங்கற்ற, உருளைக்கிழங்கு வடிவமுடையவை. ஒரு சில கிலோமீட்டர் அளவுடையவை. “இந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தில் நிலவுக்கான வரையறை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தும். இது வரை ஒரு நிலவு என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரையறை இல்லை.
இப்போது புதிய நிலவுகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு எல்லை ஏற்பட்டுள்ளது. சனி, யுரேனஸ், நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளைக் கண்டறிய பயன்படும் இப்போதுள்ள தொழில்நுட்பமே புதிய நிலவுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உள்ள சிறந்த தொழில்நுட்பம்” என்று எட்வர்டு ஆஷ்ட்டன் கூறுகிறார். இந்த சிறிய நிலவுகளை உற்றுநோக்குதல் மூலம் சூரிய குடும்பத்தில் முன்பிருந்த நிலையற்ற சூழ்நிலை பற்றி அறியமுடியும்.
அப்போது கோள்கள் நிலையற்ற சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றின. சர்வசாதாரணமாக மோதல்கள் நடந்தன. புதிய நிலவுகள் கொத்து போல குழுவாக உள்ளன. ஒரே மாதிரியாக இருக்கும் இவற்றில் பெரும்பாலானவையும் கடந்த நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பொருட்கள் மோதி சிதறியதால் உருவானவை. இவை அணைத்தும் பெரிய, கோளிற்கு அருகில் இருக்கும் நிலவுகளை நோக்கிய கோணத்தில் அமைந்துள்ள கோள வடிவ வட்டப் பாதைகளைக் கொண்டுள்ளன.
“இவை அணைத்தும் முன்பு இருந்த நிலவுகளின் சிதறடிக்கப்பட்ட சிறிய வடிவங்களே. இவை மற்ற சனியின் நிலவுகள் அல்லது கடந்து சென்ற விண்கற்களின் வன்முறையான மோதல்களால் உடைந்து உருவானவை” என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விண்வெளியியலாளர் பேராசிரியர் ப்ரெட் க்ளாட்மென் (Prof Brett Gladman) கூறுகிறார். பல நிலவுகளின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளுதல் சனியின் வளையங்களின் தோற்றம் பற்றி அறிய உதவும்.
கோளின் முரட்டுத்தனமான ஈர்ப்புவிசையால் இழுத்து அகற்றப்பட்ட ஒரு நிலவால் இவை உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய விண்வெளி முகமை ஹீரா (Hera) ஆய்வுக்கலனை செவ்வாயைக் கடந்துசென்று டேமோஸ் (Deimos) என்ற ஏழு மைல் குறுக்களவு உள்ள அதன் சிறிய நிலவை 300 கிலோமீட்டருக்கு அருகில் பறந்துசென்று ஆராய அனுப்பியுள்ளது.
செவ்வாயில் ஏற்பட்ட ஒரு பெரிய தாக்கம் அல்லது செவ்வாயால் ஈர்க்கப்பட்ட ஒரு விண்கல் மோதியதால் இந்த நிலவு உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. செவ்வாயின் ஃபோபோஸ் (Phobos) என்ற பெரிய நிலவையும் ஹீரா படமெடுக்கும். பிறகு ஹீரா டெமோஃபோஸ் (Dimorphos) என்ற விண்கல்லை நோக்கி செல்லும். மூன்றாண்டுகளுக்கு முன்பு நாசாவின் பாதுகாப்பு அமைப்பு இந்த விண்கல் மீது வேண்டுமென்றே மோதியது.
இந்த மோதலின் தாக்கம் பற்றி ஹீரா ஆராயும். இதன் மூலம் வருங்காலத்தில் பூமியின் மீது மோதவரும் ஆபத்தான விண்கற்களின் பாதையை வேறு பக்கம் திருப்பி அனுப்பும் ஆய்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. புதிய நிலவுகளின் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் விண்வெளியியலில் புதிய அறிவுகளைப் பெற நமக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2025/mar/11/astronomers-discover-128-new-moons-orbiting-saturn?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- வீட்டின் மீது விழுந்த விண்கல்
- பூமியை நோக்கி வரும் புதிரான விண்வெளிப் பொருள்
- கொதிக்கும் கடல்
- யுரேனஸைத் தேடி
- கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் திட்டம்
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் ஓர் அலசல் - 2
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - ஓர் அலசல்
- விண்வெளி வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் உள்ளாடைகள்
- உயிர்கள் வாழ உதவுமா வெள்ளிக் கோளின் மேகங்கள்...?
- சூழல் காக்க உதவும் மர செயற்கைக்கோள்கள்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.