அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
பழுதடைந்த செயற்கைக் கோள்களுக்காக நிலவில் இடம் ஒதுக்கப்படவுள்ளது. கடினத் தன்மை வாய்ந்த இந்த செயற்கைக் கோள்களின் பகுதிகள் நிலவின் மேற்பரப்பில் மோதி விழுவதற்கென்று இந்த இடங்கள் பயன்படுத்தப்படும். இந்த இடங்கள் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இருந்து தொலைதூரத்தில் அமைந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நிலவில் குப்பை மேடுகள்
நிலவின் வளமற்ற தரைப்பரப்பில் தளங்கள், சுரங்கப் பணிகள், அறிவியல் ஆய்வுக் கருவிகளை நிறுவுதல் போன்றவற்றிற்காக விண்வெளி முகமைகள், தனியார் நிறுவனங்கள் அனுப்பவுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை வரும் இருபது ஆண்டுகளில் பெருமளவில் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. நிலவின் பரப்பில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பணிகளுக்காக சரியான இடங்களைக் கண்டறிதல், வழி அறிதல் மற்றும் தகவல் தொடர்புக்காக செயற்கைக்கோள் கட்டமைப்புகள் அனுப்பப்பட உள்ளன.
ஆனால் எரிபொருள் தீர்ந்து போகும்போது செயற்கைக்கோள்களை நிலவின் பரப்பில் மோதி விழச் செய்து தரையிறக்குவதைத் தவிர வேறு வழியில்லை. “இந்த செயற்கைக்கோள்கள் தரையில் மோதி உடைந்து துண்டுகளாக சிதறும்” என்று டரம் (Durham) பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானியும் சமீபத்தில் க்ளாஸ்கோ ஸ்பேஸ் காமின் இது குறித்த நிபுணர் குழு கூட்டத்தை நடத்தியவருமான டாக்டர் ஃபியோனாக் தாம்சன் (Dr Fionagh Thomson) கூறுகிறார்.
நிலவின் வெவ்வேறு இடங்களில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழுந்தால், கட்டிடங்கள், அறிவியல் உபகரணங்கள், நிலவிற்குச் சென்ற முதல் விண்வெளி வீரர் கால் பதித்த இடம் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக்குரிய தூய இடங்கள் போன்றவை சேதமாகும். விநாடிக்கு 1.2 மைல் வேகத்தில் பழுதடைந்த செயற்கைக்கோள்கள் விழும்போது நிலவின் பரப்பில் அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும்.
நிலவில் விஞ்ஞானிகள் நிறுவத் திட்டமிட்டுள்ள உணர் திறன் மிகுந்த கருவிகளுக்கு இவை இடையூறை ஏற்படுத்தும். இந்த மோதல்களால் உருவாகும் பல மீட்டர்கள் தொலைவிற்கு பள்ளங்கள் இருக்கும். இதனால் உருவாகும் தூசு மேகங்கள் தொலைநோக்கிகள், உபகரணங்களை சேதமடையச் செய்யும்.
“நிலவின் பரப்புடன் ஒப்பிடும்போது இது உடனடியாக ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது அவை கலாச்சார, அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விழ வாய்ப்பு உண்டு. அதனால் இது பற்றிய திட்டமிடல் அவசியம்” என்று பர்க்பெக் (Birkbeck) இலண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானி பேராசிரியர் இயன் க்ராஃபெர்டு (Prof Ian Crawford) கூறுகிறார். விஞ்ஞானிகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களை வளி மண்டலத்தைப் பயன்படுத்தி அகற்றுகின்றனர்.
ஆயிரக்கணக்கான இத்தகைய செயற்கைக்கோள்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும்போது எரிந்து சாம்பலாகின்றன. ஆனால் நிலவில் வளி மண்டலம் என்று எதுவும் இல்லை. அதனால் இதற்கு வேறு தீர்வுகளைக் காண வேண்டும். வரும் இருபது ஆண்டுகளில் நானூற்றிற்கும் அதிகமான நிலவு பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
நாசாவின் ஆர்ட்டிமிஸ் (Artemis) முகாம், நிலவைச் சுற்றிவரும் லூனார் கேட்வே (Lunar Gateway) நிலையம், சீனாவின் இரண்டாவது நிலவு முகாம் மற்றும் ரஷ்யாவின் நிலவு முகாம் இத்திட்டங்களில் அடங்கும். 2027ல் ஐரோப்பிய விண்வெளி முகமை லூனார் பாத் ஃபைண்டர் (Lunar Pathfinder) செயற்கைக்கோளை அனுப்பவுள்ளது. இது 2030ல் இயங்கவுள்ள மூன் லைட் (Moonlight) செயற்கைக்கோள்களின் கட்டமைப்பிற்கு அடித்தளமாக அமையும்.
நிலவில் செயற்கைக்கோள் கல்லறைகள்
விஞ்ஞானிகள் பழுதடைந்த செயற்கைக்கோள்களை அகற்ற மூன்று வழிகளை ஆலோசிக்கின்றனர். ஒரு உந்துதல் அலகுடன் எரிபொருள் உள்ள ஒரு செயற்கைக்கோளை சூரியனை நோக்கி அனுப்பி அதன் சுற்றுவட்டப் பாதையில் சுழலும்படி செய்யலாம். ஆனால் இதற்கு செலவு அதிகமாகும். மாறாக அதை தொலைவில் உள்ள ஒரு நிலவு சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பலாம். ஆனால் நிலவிற்கு பலவீனமான ஈர்ப்பு விசையே உள்ளது. அதனால் இதை செயல்படுத்துவது கடினம்.
மாறாக எச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயற்கைக் கோள்களை நிலவின் மீது மோதி விழுமாறு செய்யலாம். “நிலவுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான கலந்தாலோசனை அமைப்பு (Lunar Activities Consultation (Atlac)) மற்றும் விண்வெளிக் குப்பைகளை ஒருங்கிணைக்கும் பன்னாட்டு முகமைகளுக்கு இடையிலான கமிட்டி (Inter-Agency Space Debris Coordination Committee (IADC)) ஆகியவை இதற்குரிய சிறந்த தீர்வுகளை ஆராய்கிறது” என்று இங்கிலாந்து விண்வெளி முகமையின் ஒழுங்குபடுத்தல் அலுவலக தலைவர் சேரா போயல் (Sarah Boyall) கூறுகிறார்.
“பழுதடைந்த செயற்கைக்கோள்களை குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கி நிலவில் விழச் செய்வதே நடைமுறைக்கு உகந்த தீர்வு. இதன் மூலம் நிலவில் விவேகமற்ற மனித செயல்பாடுகளைத் தடுக்கலாம்” என்று லூனார் பாத்ஃபைண்டர் தயாரிப்பாளர் சர்ரெ லிமிடெட் (SSTL the Surrey-based satellite manufacturer) நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் பென் ஹூப்பர் (Ben Hooper) கூறுகிறார்.
“இதனால் சரியான நேரம் வரும்போது குப்பையாகும் செயற்கைக் கோள்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் விழும்படி செய்யலாம்” என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் மூன் லைட் திட்ட அலுவலகத் தலைவர் சார்ல்ஸ் க்ரான்ஸ் டவுன் (Charles Cranstoun) கூறுகிறார்.
“செயற்கைக் கோள்கள் மோதும்போது இதனால் பெருமளவில் அதிர்வுகள் ஏற்படும். இதனால் நிலவின் அமைப்பு பாதிக்கப்படும்.. முன் கூட்டியே தெரிந்த நிறை, ஜியோமெட்ரி மற்றும் வேகத்துடன் ஒரு பொருள் விழும்போது அதன் தாக்கம் எந்த அளவிற்கு உண்டாகும் என்பதை நாம் அறிய முடியும்” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியல் பிரிவு எமரிட்டஸ் (Emeritus) விஞ்ஞானி ஜான் சானெர்கி (John Zarnecki) கூறுகிறார்.
பழுதடையும் செயற்கைக் கோள்களுக்காக நிலவில் கல்லறைகளை ஏற்படுத்தும் இத்திட்டம் நிலவை பாதுகாக்க உதவும். இதனால் மனித விண்வெளி ஆய்வுகள் புதிய ஊக்கம் பெறும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
வியாழனின் கனிமீட் (Ganymede) நிலவின் மீது, பூமியில் பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனசோர்களை கொன்ற விண்கல்லைவிட மிகப்பெரிய விண்கல் விழுந்தது. இதனால் சூரிய குடும்பத்தில் பிரம்மாண்டமான வெளிறிய சாம்பல், வயலட் அல்லது பர்ப்பிள் நிறமுள்ள நிலவான இது தன் அச்சில் ஊசலாடுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சடசடவென்று பூமியின் மீது மோதி விழுந்து அதுவரை பூமியை ஆண்ட டைனசோர்களை அழித்த விண்கல்லைவிட 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டில் விழுந்த பழமையான இந்த விண்கல் இருபது மடங்கு பெரியது.
இப்பேரழிவால் வியாழனுக்கு உள்ளதாகக் கருதப்படும் நூறு விண்கற்களில் ஒன்றான கனிமீட் நிலவு வாயுக் கோளான வியாழனை விட்டு விலகிச் சென்று சுழல்கிறது. கணினி மாதிரிகளின்படி இந்த விண்கல் 185 மைல் குறுக்களவை உடையது. 60-90 டிகிரி கோணத்தில் கனிமீட்டின் மீது இது மோதியது. இதனால் ஏற்பட்ட தாக்கத்தால் தொடக்கத்தில் 1,000 மைல் அகலம் உள்ள பெரும் பள்ளம் அங்கு தோன்றியது. இந்தப் பள்ளம் பாறைகளாலும் தூசுக்களாலும் பகுதியளவு நிரப்பப்பட்டது.
“கனிமீட் நிலவில் காணப்படும் தனித்துவமான குழிகள் இந்த பிரம்மாண்ட விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பொதுமைய வளையங்களின் எச்சங்கள் (remnants of concentric rings) என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. என்றாலும் இந்த தாக்கம் எவ்வளவு பெரியது, வியாழனின் நிலவில் இதனால் ஏற்பட்ட விளைவு பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இங்கு குழிகள் நிறைந்த பகுதி வியாழனில் இருந்து வெகுதொலைவில் உள்ளது.
விழுந்த இடத்தில் உண்டான தாக்கத்தால் ஏற்பட்ட கூடுதல் எடை கனிமீட்டை நிலைகுலையச் செய்தது. அதை அதன் அச்சை சுற்றி ஊசலாட வைத்தது" என்று ஜப்பான் கோப் (Kobe) பல்கலைக்கழகத்தின் கோள்கள் பிரிவு விஞ்ஞானி டாக்டர் நயாயூக்கி ஹராட்டா (Dr Naoyuki Hirata) கூறுகிறார். இது பற்றிய ஆய்வுக் கட்டுரை சயண்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
நிலவின் சேய்மைப் பகுதியில் (far side) விண்கல் விழுந்ததை கணினி மாதிரிகள் உறுதி செய்கிறது. பூமியின் நிலவைப் போல கனிமீட் வியாழனின் ஈர்ப்பு அலைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நிலவு நிரந்தரமாக தன் ஒரு பகுதியை மட்டுமே எப்போதும் வியாழனுக்கு காட்டுகிறது. புதன் கோளை விடப் பெரிய, 3,000 மைல்கள் அகலம் உடைய கனிமீட் நிலவில் இந்த விண்கல் விழுந்ததால் உண்டான தாக்கம் பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்று கருதப்படுகிறது.
இதனால் நிலவின் உண்மையான தரைப்பரப்பு முற்றிலும் நீக்கப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தரைக்கடியில் இருந்ததாக கருதப்பட்ட உப்பு நீர்க் கடல் உள்ளிட்ட பல அமைப்புகளை இந்த விண்கல் மோதல் பாதித்தது. ஐரோப்பிய விண்வெளி முகமையால் 2023ல் வியாழன் மற்றும் அதன் நிலவுகளை ஆராய அனுப்பப்பட்ட ஜூஸ் (Juice) விண்கலன் இது பற்றி மேலும் ஆராய்வதுடன் இந்த ராட்சத வாயுக் கோளின் நிலவுகளில் உயிர்கள் வாழ அவசியமான நீர், ஆற்றல் மூலங்கள் பற்றியும் ஆராயவுள்ளது.
“மோதலால் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கனிமீட்டின் பழமையான தரைப்பரப்பில் உருவான துவாரங்களை இன்றும் காணமுடியும். இது பற்றி மாதிரிகளைக் கொண்டு ஆராய்வது கடினம். கணினி மாதிரிகளைப் பயன்படுத்தி கடிகாரத்தின் முட்களைத் திருப்புவது போல கனிமீட்டில் ஏற்பட்ட வடுக்களுக்கான விளக்கங்களைத் தேடுவது கடினமானது. ஜூஸ் கலன் இது பற்றி ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் துண்டுகளாக இருக்கும் தரைப்பரப்பின் படங்கள் விரைவில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விண்கல் விழுந்ததால் மீண்டும் நிலவின் வடிவம், அதன் ஈர்ப்பு மண்டலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோள்கள் பிரிவு ஆய்வாளர் பேராசிரியர் லீஃப் லெச்செர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.
வியாழன் மற்றும் அதன் மகத்தான நிலவுகள் பற்றி குறிப்பாக கனிமீட் நிலவு பற்றி ஜூஸ் கலன் விரைவில் அனுப்பவுள்ள புதிய விவரங்களுக்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
சனிக் கோளை 128 புதிய நிலவுகள் சுற்றி வருகின்றன என்று விண்வெளியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சனிக் கோளுக்கு இப்போது 274 நிலவுகள் உள்ளன. சூரிய குடும்பத்தில் மிக அதிக நிலவுகளைக் கொண்ட கோள் என்ற பெருமையை இந்தக் கோள் பெற்றுள்ளது. இது வரை அதிக நிலவுகளைக் கொண்டிருந்ததால் வியாழன் “நிலவுகளின் அரசன்” என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது சனிக் கோள் மொத்தம் 274 நிலவுகளுடன் உள்ளது. இது சூரிய குடும்பத்தில் மற்ற எல்லா கோள்களும் பெற்றிருக்கும் நிலவுகளின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு.
முன்பு இதே ஆய்வுக் குழுவினர் கனடா பிரான்ஸ் ஹவாய் தொலைநோக்கியை (Canada France Hawaii telescope) பயன்படுத்தி சனியின் 62 நிலவுகளை அடையாளம் கண்டனர். மங்கலாகத் தெரிந்த அவற்றின் மூலம் சனிக் கோளிற்கு மேலும் கூடுதல் நிலவுகள் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர். 2023ல் மேலும் உற்றுநோக்கல்கள் நடந்தன.
“128 புதிய நிலவுகள் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் சனியின் இடத்தை இனி மேல் வியாழன் ஒருபோதும் பெறமுடியாது. 5 பிப்ரவரி 2024 புள்ளிவிவரங்களின்படி வியாழனை 95 நிலவுகள் உறுதிசெய்யப்பட்ட சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றிவருகின்றன” என்று தாய்வான் அகடிமியா ஷின்ஷர் (Academia Sincia) அமைப்பின் விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கழகத்தின் முன்னணி ஆய்வாளரும் முதுகலை முனைவர் பட்ட மாணவருமான டாக்டர் எட்வர்டு ஆஷ்ட்டன் (Edward Ashton) கூறுகிறார்.
சனியின் புதிய நிலவுகள் சர்வதேச விண்வெளியியல் சங்கத்தால் (International Astronomical Union IAU) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புதிய நிலவுகளுக்கு எண்களும், எழுத்துக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு விரைவில் காலிக் (Gallic), நோர்ஸ் (Norse) மற்றும் கனடியன் இனியுட் (Canadian Inuit) கடவுள்களின் பெயர்கள் கொடுக்கப்படும். இவை மூன்றும் வெவ்வேறு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொன்றும் தனித்துவமான புராணக் கதைகள், கடவுளர்கள், கலாச்சாரக் கதைகளைக் கொண்டவை. காலிக் என்பது கெல்டிக் (celtic) ஆதிவாசிகளிடம் இருந்து தோன்றியது. இது இப்போதைய பிரான்சின் கோல் (Gaul) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தோன்றியது. இயற்கை, ஆண் மற்றும் பெண் கடவுள்கள் மற்றும் வீரச் செயல்கள் புரிந்த ஆளுமைகளைக் கொண்டது.
நார்ஸ் புராண நம்பிக்கை ஜெர்மனியின் நார்ஸ் பகுதியில் தோன்றியது. கடவுள்கள், மாவீரர்கள் இதில் முக்கியமானவர்கள். பிரபஞ்சத்தில் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளவை, இயற்கை, ஆன்மாக்கள் ஆகியவற்றை பாரம்பரியமாகக் கொண்டதே கனடாவின் இனியுட் புராண நம்பிக்கை. இந்த நம்பிக்கைகளின் படி சனியின் புதிய நிலவுகளுக்கு பெயர்கள் சூட்டப்படும்.
கோள்களின் முதண்மை நிலவுகளுக்கு அவை சுற்றிவரும் வட்டப் பாதைகளின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஒழுங்கற்ற நிலவுகளுக்கு பழைய புராணங்களின் அடிப்படையில் பெயர்கள் வைக்கப்படுகின்றன. வழக்கமாக சனியின் நிலவுகளுக்கு இதன் அடிப்படையில் பெயர் வைக்கப்படும். பெரும்பாலான நிலவுகளும் நார்ஸ் கூட்டத்தில் உள்ளன.
பல கடவுள்களை வணங்கும் பாரம்பரியமான வைக்கிங் (Viking) நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த பெயர்கள் ஆராயப்படுகிறது. நிலவுகளின் பாதையை வானில் கண்டறிய உதவும் ஷிஃப்ட் மற்றும் ஸ்டாக் தொழில்நுட்பத்தை (shift and stack technique) பயன்படுத்தி இந்த நிலவுகள் கண்டறியப்பட்டன. இத்தொழில்நுட்பத்தின் மூலம் நிலவுகளின் தொடர் படங்கள் பெறப்படுகின்றன. இவை ஒன்றிணைக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. நிலவுகள் பிரகாசமாக மாறுகின்றன.
இதனால் ஆய்வாளர்கள் வான்வெளியில் இவற்றின் பாதையை சுலபமாக அடையாளம் காணமுடியும். புதிய, 128 நிலவுகளும் ஒழுங்கற்ற, உருளைக்கிழங்கு வடிவமுடையவை. ஒரு சில கிலோமீட்டர் அளவுடையவை. “இந்த கண்டுபிடிப்பு வருங்காலத்தில் நிலவுக்கான வரையறை பற்றிய சர்ச்சையை ஏற்படுத்தும். இது வரை ஒரு நிலவு என்றால் என்ன என்பது பற்றிய தெளிவான வரையறை இல்லை.
இப்போது புதிய நிலவுகளை கண்டுபிடிப்பதற்கு ஒரு எல்லை ஏற்பட்டுள்ளது. சனி, யுரேனஸ், நெப்டியூனை சுற்றி வரும் நிலவுகளைக் கண்டறிய பயன்படும் இப்போதுள்ள தொழில்நுட்பமே புதிய நிலவுகளைக் கண்டுபிடிப்பதற்கும் உள்ள சிறந்த தொழில்நுட்பம்” என்று எட்வர்டு ஆஷ்ட்டன் கூறுகிறார். இந்த சிறிய நிலவுகளை உற்றுநோக்குதல் மூலம் சூரிய குடும்பத்தில் முன்பிருந்த நிலையற்ற சூழ்நிலை பற்றி அறியமுடியும்.
அப்போது கோள்கள் நிலையற்ற சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றின. சர்வசாதாரணமாக மோதல்கள் நடந்தன. புதிய நிலவுகள் கொத்து போல குழுவாக உள்ளன. ஒரே மாதிரியாக இருக்கும் இவற்றில் பெரும்பாலானவையும் கடந்த நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பொருட்கள் மோதி சிதறியதால் உருவானவை. இவை அணைத்தும் பெரிய, கோளிற்கு அருகில் இருக்கும் நிலவுகளை நோக்கிய கோணத்தில் அமைந்துள்ள கோள வடிவ வட்டப் பாதைகளைக் கொண்டுள்ளன.
“இவை அணைத்தும் முன்பு இருந்த நிலவுகளின் சிதறடிக்கப்பட்ட சிறிய வடிவங்களே. இவை மற்ற சனியின் நிலவுகள் அல்லது கடந்து சென்ற விண்கற்களின் வன்முறையான மோதல்களால் உடைந்து உருவானவை” என்று பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக விண்வெளியியலாளர் பேராசிரியர் ப்ரெட் க்ளாட்மென் (Prof Brett Gladman) கூறுகிறார். பல நிலவுகளின் இயக்கவியலைப் புரிந்துகொள்ளுதல் சனியின் வளையங்களின் தோற்றம் பற்றி அறிய உதவும்.
கோளின் முரட்டுத்தனமான ஈர்ப்புவிசையால் இழுத்து அகற்றப்பட்ட ஒரு நிலவால் இவை உருவாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐரோப்பிய விண்வெளி முகமை ஹீரா (Hera) ஆய்வுக்கலனை செவ்வாயைக் கடந்துசென்று டேமோஸ் (Deimos) என்ற ஏழு மைல் குறுக்களவு உள்ள அதன் சிறிய நிலவை 300 கிலோமீட்டருக்கு அருகில் பறந்துசென்று ஆராய அனுப்பியுள்ளது.
செவ்வாயில் ஏற்பட்ட ஒரு பெரிய தாக்கம் அல்லது செவ்வாயால் ஈர்க்கப்பட்ட ஒரு விண்கல் மோதியதால் இந்த நிலவு உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. செவ்வாயின் ஃபோபோஸ் (Phobos) என்ற பெரிய நிலவையும் ஹீரா படமெடுக்கும். பிறகு ஹீரா டெமோஃபோஸ் (Dimorphos) என்ற விண்கல்லை நோக்கி செல்லும். மூன்றாண்டுகளுக்கு முன்பு நாசாவின் பாதுகாப்பு அமைப்பு இந்த விண்கல் மீது வேண்டுமென்றே மோதியது.
இந்த மோதலின் தாக்கம் பற்றி ஹீரா ஆராயும். இதன் மூலம் வருங்காலத்தில் பூமியின் மீது மோதவரும் ஆபத்தான விண்கற்களின் பாதையை வேறு பக்கம் திருப்பி அனுப்பும் ஆய்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. புதிய நிலவுகளின் கண்டுபிடிப்பு வருங்காலத்தில் விண்வெளியியலில் புதிய அறிவுகளைப் பெற நமக்கு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2025/mar/11/astronomers-discover-128-new-moons-orbiting-saturn?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
அண்மையில் ஜார்ஜியாவில் ஒருவர் வீட்டின் மீது வந்து விழுந்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வானில் ஒரு நெருப்புப் பந்து போல காட்சியளித்த அந்த விண்கல் ஜார்ஜியாவில் உள்ள மக் டனால்ப் (McDonough) என்ற நகரில் இருந்த வீட்டின் மீது வந்து விழுந்தது.
ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் (UGA) சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விண்கல்லில் அடங்கியிருந்த பொருட்களை ஆராய்ந்தபோது அது 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கண்டறிந்தனர். இது அந்த விண்கல் பூமியை விட 20 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதைக் காட்டுகிறது.
“குறிப்பிட்ட இந்த விண்கல் பூமியின் வளி மண்டலத்திற்கு வந்து மக்டனால்ப் நகரத்தின் தரையில் விழும் முன்பு ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தது” என்று ஜார்ஜியா பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர் ஸ்காட் ஹாரிஸ் (Scott Harris) கூறுகிறார். மக்டனால்ப் விண்கல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய விண்கல் செவ்வாய் கோளிற்கும் அப்பால் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது.
மிகப் பெரிதாக இருந்த இது அரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த பிரம்மாண்ட விண்கல் ஒன்றின் ஒரு சிறு பகுதியுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதன் ஒரு சில துண்டுகள் பூமியின் சுற்று வட்டப் பாதையைக் கடந்து பூமிக்கு வருவதற்கு முன்பு சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் ஒரு வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. 2025 ஜூன் 26 அன்று இந்த விண்கல் பூமியில் வந்து விழுந்தது.
3 அடி அல்லது ஒரு மீட்டர் அகலம் உள்ள இது மணிக்கு 29,000 மைல் அல்லது 47,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது என்று நாசா விண்கல் சூழல் அலுவலகம் (NASA's Meteoroid Environment Office) கூறுகிறது. அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதியில் ஒரு நெருப்புப் பந்து 240 இடங்களில் தென்பட்டது என்று அமெரிக்க விண்கல் சங்கம் (American Meteor Society) கூறுகிறது.
விண்கல் விழும் முன்பு பெரும் சத்தத்தைக் கேட்டு பலர் அது ஒரு நிலநடுக்கம் என்று தவறாக நினைத்தனர் என்று ஸ்மித்ஸோனியன் இதழ் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் செய்தி வெளியிட்டது. "பூமியின் வளி மண்டலத்தில் பயணம் செய்யும் போது அதன் வேகம் குறைந்தது. தரையை நெருங்கியபோது உடைந்து சிதறியது. என்றாலும் அப்போதும் அது பெரும் வேகத்துடன் பயணித்தது. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நமது வளி மண்டலம் இத்தகையவற்றின் வேகத்தைக் குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் 50 காலிபர் ஷெல் அல்லது 14 அடி ஷெல் துப்பாக்கியை (caliber shell) போல இரண்டு மடங்கு பெரிய இந்த விண்கல் குறைந்தபட்சம் விநாடிக்கு ஒரு கிலோமீட்டர் அல்லது 0.6 மைல் வேகத்தில் பயணித்தது. பத்து கால்பந்தாட்ட மைதானங்களை ஒரு விநாடியில் ஓடிக் கடப்பதற்கு சமமானது இது.
மக்டனால்ப் நகரின் வீட்டு மேற்கூரையின் மீது இந்த விண்கல் பளீரென்ற ஒளியுடன் ஒரு நேர்க்கோட்டில் வந்து விழுந்தது. சாளரங்கள், குளிர் சாதன வசதிகளை சேதப்பட்டுத்தியது. வீட்டின் முதன்மை அறையின் தரையில் பள்ளம் ஏற்பட்டது. குறைந்த தொலைவில் இருந்து சுட்டால் உண்டாகும் ஒரு துப்பாக்கியின் பேரோசை இது விழும்போது உண்டானது என்று ஸ்மித்ஸோனியன் இதழ் கூறுகிறது.
விழுந்த வேகத்தில் விண்கல் பொடியாக்கப்பட்ட நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. விண்வெளி தூசு அறை முழுவதும் சிதறியது. விண்கல்லின் 0.8 அவுன்ஸ்/23 கிராம் எடையுள்ள துண்டுகளை ஒளி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கியைப் (optical and electron microscopy) பயன்படுத்தி விஞ்ஞானிகள் பகுப்பாய்வு செய்தனர். இந்த பகுப்பாய்வில் இருந்து இது கல்லால் ஆன ஒரு விண்கல் (chondrite) என்று தெரிய வந்தது.
ஆய்வாளர்கள் விண்கல்லின் பாறைத் துண்டுகளை மேலும் ஆராயத் திட்டமிட்டுள்ளனர். விழுந்த விண்கல்லின் கூடுதல் பகுதிகள் கார்ட்டஸ்வில் (Cartersville) என்ற இடத்தில் உள்ள டெலஸ் அறிவியல் அருங்காட்சியகத்தில் (Tellus Science Museum) காட்சிப்படுத்தப்படும். ஜார்ஜியா வரலாற்றில் இது ஆவணப்படுத்தப்பட்ட 27வது சம்பவம். இதற்கு முன்பு ஐந்து முறை விண்கற்கள் இங்கு விழுந்துள்ளன.
விண்கற்களின் வருகை ஒரு சில பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிறது. ஆனால் கடந்த இருபது ஆண்டுகளாக இது போன்ற சம்பவம் ஏற்படவில்லை. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இப்போது அதிகரித்துள்ளதால் இந்த வான் பொருட்கள் விழும்போது அவற்றை மக்கள் சேகரித்து ஆய்வாளர்களுக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டுள்ளது.
விண்வெளியில் தொலை தூரத்தில் இருந்து பூமிக்கு வரும் விண்கற்கள் நாம் வாழும் பூமியின் தோற்றம், அதன் வரலாறு பற்றிய அரிய பல தகவல்களை நமக்குத் தரும் என்று விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பூமியை நோக்கி வரும் புதிரான விண்வெளிப் பொருள்
- கொதிக்கும் கடல்
- யுரேனஸைத் தேடி
- கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் திட்டம்
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் ஓர் அலசல் - 2
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - ஓர் அலசல்
- விண்வெளி வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் உள்ளாடைகள்
- உயிர்கள் வாழ உதவுமா வெள்ளிக் கோளின் மேகங்கள்...?
- சூழல் காக்க உதவும் மர செயற்கைக்கோள்கள்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.