"மனித, சிம்பன்ஸி ஜினோம்களை பக்கம் பக்க மாக வைத்து ஓப்பிட்டுப்பார்த்தால், மனிதனை உருவாக்கும் "அந்த" அரிய DNA பகுதிகள் எவை என்பது தெரிந்தது

அடிப்படைக் கருத்துகள்

மனிதனுக்கு மிக நெருங்கிய மிருகம் சிம்பன்ஸிதான். இரண்டுக்கும் இடையே 99 விழுக்காடு DNA ஒற்றுமை காணப்படுகிறது.

இரண்டுக்கும் பொதுவான ஒரு இனத்திலிருந்து மனிதனும் சிம்பன்ஸியும் வேறுபட்டு பிரிந்து வெளிவந்த பிறகு, மனித ஜினோமில் முக்கிய மாற்றங்கள் சில நிகழ்ந்தன. அம்மாற்றங்களை மட்டும் கூர்ந்து ஆராய்ந்ததில், மனிதனைத் தோற்றுவித்த DNA பகுதிகள் எவை என்பது தெரிந்தது.

மனிதன், சிம்பன்ஸி இரண்டுக்குமிடையே மிகக் குறைவான DNA வேற்றுமைகள் மட்டுமே காணப்பட்டாலும், வேற்றுமைகள் மலை-மடு வேறுபாடுகளைக் காட்டின. இத்தகைய மாறுதல்களுக்கு அடிப்படையான DNA வேற்றுமைகள் எவை என்பது தெரியவந்துள்ளது.

“அங்கிள் களிமண்ணால சிம்பன்ஸி பொம்மை செய்திருக்கிறேன் பாக்குறீங்களா?”

“எங்கே. காட்டு பாக்கலாம். ஓ... பிரமாதம். அசல் சிம்பன்ஸி போலவே இருக்கிறதே... தரை வரை தொங்கும் கைகள், குட்டைக் கால்கள்... முகம்கூட சிம்பன்ஸிபோலவே இருக்கிறது. முன் துருத்தியவாய், நெற்றியே இல்லாத சப்பைத் தலை.... நான் நினைக்கிறேன், மனித பொம்மை செய்ய ஆரம்பிச்சு அது இப்படி குரங்கா முடிஞ்சிடுச்சி. உடனே சிம்பன்ஸின்னு பேர் வெச்சிட்ட இல்லையா!....

“அங்கிள் இது நிஜமாகவே சிம்பன்ஸி பொம்மைதான். நீங்க வேணும்னா, இதை மனிதனா மாத்திக் காட்டுங்க”

மாமா கொஞ்சம் களிமண்னைப் பிசைந்து எடுத்துக் கொண்டார். மனிதனுக்கு சிம்பன்ஸியை விட இரண்டு மடங்கு பெரிய உடம்பு அல்லவா! முதலில் தொடை, கால் இரண்டையும் நீட்டினார். கையின் நீளத்தைக் குறைத்து தொடைவரை தொங்கவிட்டார். முதுகை நிமிர்த்தினார். தோள்பட்டையை அகலப்படுத்தினார். முடிவாக முகத்திற்கு வந்தார். முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் முகவாய்க் கட்டையையும் வாயையும் உள்ளே தள்ளினார். கீழ்த்தாடையை உதடுக்கு வெளியே வரும்படி கொஞ்சம் இழுத்துவிட்டார். மூக்கு சப்பையாக இரண்டு துளைகள் மட்டுமாக இருந்ததை மாற்றி மனித மூக்குபோல செய்தார். கொஞ்சம் களிமண்ணை தலையில் அப்பி நெற்றியை உயர்த்தி கபாலத்தைப் பெரிதாக்கினார். காது, முறம் மாதிரி இருந்தது. அதை சற்று குறைத்து பின்பக்கமாக சாய்த்துவிட்டார்.

“இப்ப. எப்படி இருக்கிறது?”

“ஓ. ஜோராக இருக்கிறது...”

“அங்கிள் மனிதனுக்கும் குரங்குகளுக்கும் வித்தியாசங்கள் கொஞ்சம்தான் இல்லையா!"

“ஆமாம் முதலை அல்லது கோழி பொம்மையை மனித பொம்மையாக மாற்றுவதைவிட, சிம்பன்ஸி பொம்மையை மனித பொம்மையாக மாற்றுவது ரொம்ப சுலபம்.”

“உனக்குத் தெரியுமா? கொரில்லா, சிம்பன்ஸி, போனோபோ, உராங் உடான் மனிதன் எல்லாம் சேர்ந்து ஒரே குடும்பம்தான். இந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் இன்று இல்லை. அவை எலும்பு பாஸில்களாக உலகமெல்லாம் புதைந்து கிடக்கின்றன”

“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”

“ஆமாம். சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உறுப்பினர்கள் இல்லை. எல்லாம் சேர்ந்து ஒரே இனமாகத்தான் இருந்தது. பின்னர் ஒவ்வொன்றும் தனித்தனியாக ஒவ்வொரு வகை மிருக இனமாக பிரிந்துவிட்டன. அதில் ஒரு பிரிவுதான் மனித இனம்.”

“ஓ. அப்படியா... குரங்குதான் மனிதனாகிவிட்டது என்று இத்தனை நாட்கள் நினைத்துக் கொண்டிருந்தேன் இப்போதுதான் அங்கிள் புரிந்தது, குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஒரே வம்சாவளியில் வந்தவர்கள் என்பது. குரங்கு எங்கிருந்து முளைத்ததோ அங்கிருந்துதான் சிம்பன்ஸி, கொரில்லா, மனிதன் போன்ற இதர விலங்குகளும் முளைத்தன என்பதும் புரிந்துவிட்டது.”

கரெக்ட் ஒரு அடித்தண்டிலிருந்து பிரிந்த பலமரக்கிளைகள் போல.... ஒவ்வொரு கிளையும் ஒரு இனம். மனிதன் அதில் ஒரு கிளை. மனிதனுக்குப் பக்கத்தில் உள்ள கிளை சிம்பன்ஸியின் கிளை! மனிதனுக்கும் சிம்பன்ஸிக்கும் ஒரே மாதிரிதான் தலை, கைகால்களெல்லாம் இருக்கிறது. சுவாசம், இரத்த ஓட்டம், ஜீரணம், மலஜலம் கழித்தல் போன்ற நிகழ்ச்சிகள்கூட கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறது. ஆனால்.... மனிதன் எப்பேர்ப்பட்டவன்! சிம்பன்ஸி என்ன இருந்தாலும் குரங்குதானே.

கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம் சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை, இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்.... இப்படி எத்தனை எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான். இதற்கெல்லாம் காரணமென்ன?

இப்படிப்பட்ட மனித வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது பெருமூளை என்று புத்தகங்கள் கூறும். மூளை மட்டும் இருந்துவிட்டால் போதுமா? அதன் கட்டளைகளை செய்து முடிக்க ஏற்ற உடல் வேண்டாமா?

1. நிமிர்ந்த உடல், இரண்டு கால்களில் நடப்பது, கண்ணிமைக்கும் நேரத்தில் 360 டிகிரி சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக நெட்டுக்குத்தான நிமிர்ந்த உடல். இரண்டே கால்களால் நாலுகால் பாய்ச்சலுக்குச் சமமாக ஓடும் சாமர்த்தியம். நான்கில் இரண்டு விடுதலை பெற்று கைகளாக மாறியதுகூட உடல் நிமிர்ந்ததால்தான்.

2. தட்டையான முகத்தில் கண்களிரண்டும் சமதளத்தில் அமைந்துவிட்டதால் பைனாக்குலர் பார்வை கிடைத்தது. இதனால் நேராக வரும் ஆயுதங்களின் வேகத்தை அறிந்து அதிலிருந்து தப்பமுடிகிறது (இன்று கிரிக்கெட் பந்தை சமாளிப்பதும் இதனால்தான்).

3. கைகளில் கட்டை விரல் மற்ற விரல்களிலிருந்து பிரிந்து நிற்பதால், எல்லா விரல்களின் நுனியையும் தொடு முடிகிறது. இதுவும் ஒரு முக்கியமான மாற்றம். ஊசியைக்கூட சுலபமாக தரையிலிருந்து பொறுக்கி எடுக்க மனிதனைத்தவிர வேறெந்த விலங்காலும் முடியாது. இசைக்கருவி வாசிப்பது முதல், கத்தரிக் கோல் வெட்டுவதுவரை அனைத்துக்கும் பேருதவியாக இருப்பது கட்டைவிரல்தான். ஏகலைவனின் கட்டைவிரலை துரோணர் குருதட்சினையாகக் கேட்டு வாங்கியதன் இரகசியம் இதுதானே.

4. பேச்சு... ஒரு சந்ததியில் பெற்ற வெற்றிக் கனிகளை சந்தததிதோறும் கொண்டு செல்ல உதவியாக இருந்தது பேச்சுத்திறன்தானே. பேச்சினால் மொழியும் இலக்கியமும் அறிவியலும் வளர்ந்தது, பரவியது. மனித உடலிலும், நடத்தையிலும் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னணியாக, வெளிப்படையாகத் தெரியாமல், சூட்சுமமாக இருப்பவை ஜீன் மாற்றங்களே. ஜீன்களில் மாற்றம் நிகழாமல் உடல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பே இல்லை.

ஜினோம்

அமிபா முதல் ஆறுமுகம் வரையிலான அனைத்து உயிரினங்களும், ஜினோமின் அடிப்படையில்தான் வேறுபடுகின்றன. மனிதக் கரு மனிதனாகவும் ஆல விதை ஆலமரமாகவும் ஆவதற்குக் காரணமாக அமைந்துள்ள தகவல் அடங்கிய தொகுதியே ஜினோம். ஜினோம் DNAவால் ஆனது. DNA நீண்ட இழை போன்ற மூலக்கூறு. இதில் கெமிக்கல் எழுத்துக்களாக தகவல் எழுதப்பட்டுள்ளது.

ஜினோம் ஒப்பிடுதல்

திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரையை, கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எழுதிய உரையுடன் ஒப்பிடுவோம். இரண்டுக்கும் திருக்குறளைப் பொருத்த மாட்டில் வேற்றுமைகள் அதிகம் இருக்காது. இருக்கவும் கூடாது. ஆனால் இருவரது உரைகளிலும் ஒற்றுமைகளைவிட வேற்றுமைகளே அதிகம் காணப்படும். வேற்றுமைகளை மட்டும் கண்டுபிடித்து, வேற்றுமைகள் மிகுதியாக காணப்படும் அதிகாரங்களை மட்டும் பிரித்தெடுத்தால் கலைஞருக்கும், பரிமேலழகருக்கும் இடையிலான கருத்து வேற்றுமைகள் என்ன என்பது தெரியும்.

உயிரியல் அறிஞர்கள் ஜினோம்களை ஒப்பிடுவதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். ஜினோமும், ஒருவகையில் தகவல்தானே. உயிரின நூலாக இருப்பதால், இரண்டு நூலை ஒப்பிடுவதுபோல ஜினோமையும் ஒப்பிடுகிறார்கள். மனித ஜினோமை விலங்குகளின் ஜினோமுடன் ஒப்பிடலாம். வேற்றுமை ஒற்றுமைகளைக் கண்டுபிடிக்கலாம். பத்து ஜினோம்களை ஒப்பிட்டு அவற்றில் மனித ஜினோமுக்கு நெருக்கமானது என்பதையும் அவற்றை ஒற்றுமை வரிசையிலும் வைக்கலாம். மனிதனுக்கு அடுத்தபடியாக மிகமிகக் குறைந்த வேற்றுமையுடன் உள்ள ஜினோம் சிம்பன்ஸியினுடையதுதான்.

ஒற்றுமை வேற்றுமைகள்

மனித ஜினோமில் மொத்தமாக 3 பில்லியன் எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்கள் சிம்பன்ஸி ஜினோமிலும் உள்ளன. இரண்டுக்கும் இடையே 15 மில்லியன் எழுத்துகள் மாறியிருக்கின்றன. அதாவது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுத்து பேதங்கள் உள்ளன. மனித ஜினோமை ஈயின் ஜினோமுடன் ஒப்பிட்டால், அளவிலும் எழுத்து பேதங்களிலும் 40 சத வேற்றுமை இருக்கிறது.

பரிணாமம்

சந்ததிகள் தோறும் ஜினோம் கைமாறிக் கொண்டே வருகிறது. கைமாறும் ஒவ்வொரு முறையும் பிழைகள் சேர்ந்துவிடுகிறது. பிழைகள் முக்கியமான தகவலில் ஏற்பட்டுவிட்டால் அதன் காரணமாக அந்த வாரிசு இறந்து போகலாம். அப்படி இறந்துபோனைவை எண்ணிறந்தவை. அதனால் உயிரைக் கொல்லும் பிழைகளைத் தாங்கிய உயிரினத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை. பரிணாமம் என்ற தேர்வில் அவை தோற்றுப்போய் மறைந்துவிடுகின்றன.

வெற்றி பெற்றவைகளிடம் காணப்படும் "பிழைகள்" ஜினோமில் நிலைத்துவிடுகின்றன. சந்ததிகள்தோறும் சேர்த்துக் கொண்ட "பிழைகள்" ஒவ்வொரு இனத்தின் ஜினோமிலும் காணப்படும். அந்தப்பிழைகள் யாவும் ஒரு இனம் கடந்துவந்த பரிணாம சரித்திரத்தின் அடிச்சுவடாக இருக்கின்றன.

பிரிந்த காலம்

சிம்பன்ஸி, மனிதன் ஆகிய இரண்டின் ஜினோம் புத்தகமும், பொதுவான ஒரு ஜினோம் புத்தகத்திலிருந்து பிரிந்தவையே. இரண்டிலும் மூலநூலின் பகுதிகளும், பிரிந்த பிறகு இரண்டும் சேகரித்துக்கொண்ட பகுதிகளும் காணப்படும். இவற்றை, பிழைகள் திருத்தங்கள் அடிப்படையில் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

மூலநூலிலிருந்து மனித நூல் பிரிந்தபிறகு ஏற்பட்ட மாற்றங்களை சிம்பன்ஸி நூலுடன் ஒப்பிடுவதன் மூலம் எந்தத் தகவல் மாற்றங்களால் மனிதன், மனிதனானான் என்பதைக் கண்டுபிடிக்கலாம். தயவு செய்து நூல் என்பதை ஜினோம் என்று மாற்றிக் கொள்ளவும்.

சிறப்பான பிழைகள்

பரிணாம ஓட்டத்தில், ஜினோமில் பிழைகள் எங்குவேண்டுமானாலும் ஏற்படலாம். வழக்கமாக எழுத்துப் பிழைகளால் உயிரினங்களுக்கு மிகப்பெரிய பாதகங்கள் ஏற்படுத்துவதில்லை. அத்தகைய பிழைகளை மௌனப் பிழைகள் என்பார்கள். உயிரினங்கள் சிறந்து விளங்கக் காரணமாக இருந்த பிழைகளை மௌனப் பிழைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவை குவிந்திருக்கும் இடம் மற்றும் அவை நிகழ்ந்த கால இடைவெளி. ஜினோமில் முக்கியமான தகவல்கள் அடங்கிய இடத்தில் குறுகிய கால இடைவெளியில் பிழைகள் ஏற்படும்போது பரிணாமம் துரிதமாக நடைபெறும். அறிவியல் வல்லுநர்கள் கம்யூட்டர் புரோக்ராம்களின் உதவியுடன் ஜினோமை ஒப்பிட்டு அடுக்கடுக்காக பிழைகள் மலிந்த இடங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

கேந்தரின் போல்லார்டு

இவர் கலிபோர்னிய பல்கலைக்கழக உயிரிபுள்ளியல் ஆய்வாளர். மனிதக் குடலில் வாழும் பேக்டிரியாக்களின் பரிணாம மாற்றங்களை ஜினோம் ஓப்பீடு மூலம் கணக்கிடுகிறார். மனித – சிம்பன்ஸி இனத்தின் ஜினோம் ஒற்றுமை வேற்றுமைகளையும், மனித சிம்பன்ஸி இனங்கள் பிரிந்த பிறகு மனித ஜினோமில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளையும் சேகரித்து ஒப்பிடுகிறார்.

பிழைமலிந்த இடம்

கேத்தரின் போல்லார்டு மனிதன், எலி, சுண்டெலி, சிம்பன்ஸி, கோழி ஜினோம்களை ஒப்பிட்டுக் கொண்டிருந்தபோது மனித ஜினோமில் குறிப்பிட்ட பகுதியில் பிழைகள் மலிந்து கிடப்பதைப் பார்த்தார். அப்பகுதியை Human Accelerated Region 1 (HAR I) என்று குறிப்பிடுகிறார். HAR I பகுதியில் வெறும் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே சிம்பன்ஸி, மனிதன் மற்றும் கோழிக்குப் பொதுவாக இருந்தன. கோழிகளிலிருந்து பிரிந்த கடந்த 300 மில்லியன் ஆண்டுகளில் சிம்பன்ஸி-மனித ஜினோமில் ஏற்பட்ட மாற்றங்கள் 118.

ஜினோமில் HAR I ஹார் 1 பகுதியில் காணப்படும் ஜீன் தகவல்கள் என்ன? என்று ஆராய்ந்ததில் அது வேறு எந்த உயிரினத்திலும் காணப்படாத புதுத் தகவல் என்பதும், இது மனித மூளையில் வேலை செய்வது என்பதும் தெரிய வந்தது. மனித ஜினோமை மேலும் அலசியதில் 6 முக்கியமான பிழை மலிந்த பகுதிகள் கேத்தரின் போல்லார்டுக் கிடைத்தன.

HAR I – பெருமூளையை உருவாக்குவதில் முக்கிய பங்குவகிக்கிறது. விந்து செல்கள் தோற்றுவிப்பதிலும் ஈடுபடுகிறது.

FOxp2 - பேச்சுத் தொடர்பான ஜீன். ஓசை, உச்சரிப்பை கட்டுப்படுத்துவது.

AMY1 - மாவுப் பொருளை செரிக்க வைக்கும் என்ஸைமை உருவாக்குதல். மூளைக்கு அவசியமான அதிக குளுக்கோஸை பெற்றுத்தருகிறது.

ASPM - மற்ற மிருகங்களைவிட பலமடங்கு பெரிய மூளையை உருவாக்கிக் கொடுக்கிறது.

LCT - பாலிலுள்ள லேக்டோஸ் சக்கரையை செரிக்கச் செய்யும் ஜீன். இதனால் பால் மூலம் கிடைக்கும் சீஸ், தயிர் வெண்ணெய், நெய் முதலியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. மற்ற விலங்குகள் பால பருவம் முடிந்த பிறகு பால் குடிப்பதில்லை.

HAR-2 மணிக்கட்டு, கட்டைவிரல் இரண்டையும் கருவளர்ச்சியின்போது தூண்டி செயல்படுத்துவது.

- முனைவர் க.மணி

Pin It

 

Androgynousநாம் ஒருவரைப் பார்த்தவுடன் அவர் ஆணா பெண்ணா என்பதை எப்படி பிரித்தறிகிறோம்? நமது மூளையில் இந்த வேறுபாடுகள் எவ்வாறு உணர்த்தப்படுகின்றன? இது ஒரு சுவையான ஆய்வு. மாண்ட்ரீல் பல்கலைக்கழக உளவியல் அறிஞர் இது பற்றிய ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

படத்தில் காணும் androgynous தோற்றம் கொண்ட நபரின் நிறம், முகத்தில் உள்ள சில குறிப்பிட்ட பாகங்கள் இவற்றைக் கொண்டுதான் மனித மூளை ஆண்பெண் வேறுபாடுகளை விரைவாக பிரித்தறிகிறது. புருவங்கள் வாய்ப்பகுதி இவற்றில் காணப்படும் பளபளப்பினாலும் நமது மூளை ஆணையும் பெண்ணையும் தெரிந்து கொள்கிறது.

Human faceகுமரப்பருவத்தில் மூக்கு, தாவாய், வாய், தாடை, கண்கள் ஆகிய உறுப்புகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை நமது மூளை வெகுவிரைவாக உள்வாங்கிக் கொள்கிறது.

30 நபர்களிடம் 300 Caucasian முகங்களின் புகைப்படங்களைக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் இருந்து கண்கள், வாய் இவற்றைச் சுற்றிலும் காணப்படும் பளபளப்பு பாலினத்தை பிரித்தறிவதில் மூளைக்கு உதவி செய்கின்றது. இதுவரை கண் இமைகளுக்கும் புருவத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் கொண்டு பாலினத்தை மூளை வேறுபடுத்தி அறிவதாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி வாய், கண்கள் இவற்றை சுற்றியுள்ள சிவப்பு, பச்சை நிறங்களைக் கொண்டு பாலினம் பிரித்தறியப்படுகிறது. சிவப்பு மற்றும் பச்சை நிறங்களின் சேர்க்கையினால் கருமைநிறம் தோன்றும் என்பது நமக்குத் தெரியும்.

ஆண்-பெண் கூறுகளை உள்ளடக்கிய androgynous முகத்தின் நிறம் சிகப்பாக இருந்தால் ஆண் என்றும் பசுமையாக இருந்தால் பெண் என்றும் நம்முடைய மூளை பிரித்தறிகிறது. ஆனால் வாய்ப்பகுதியை பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக உணரப்படுகிறது. சாதாரணமாக பெண்களின் வாய் சிவப்பு நிறத்தில் இருப்பது ஒரு காரணம். ஓர் ஆணின் கண்புருவத்தைச் சுற்றியுள்ள பகுதி இருளாக இருக்கும். தோல் தடிமனாக இருப்பதே இந்த இருள் நிறத்திற்கு காரணம். இதே போன்று மேலுதடும் தாவாயும் உரோமங்கள் வளரும் பகுதி என்பதால் கருமையாக இருக்கும்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

Egyptபண்டைய எகிப்து ஜாடிகளில் ஆல்கஹால் பானங்களுடன் மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு எகிப்து பகுதியில் உள்ள ஜீபெல் அட்டா என்னும் பகுதியில் கி.பி 300 க்கும் கி.பி 500 க்கும் இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்த ஒரு பழமையான ஒயின் ஜாடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாடியின் உட்புற படிவுகளை வேதியியல் பகுப்பாய்வு செய்தபோது ரோஸ்மேரி மற்றும் பைன் மரத்தின் பிசின் படிவுகள் காணப்பட்டன. தற்காலத்தில் நாம் மருந்துடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுப்பதுபோல் பழங்கால எகிப்தியர்கள் சர்க்கரைக்குப் பதிலாக ஒயின் சேர்த்திருப்பதை அறிய முடிகிறது.

Proceedings of the National Academy of Sciences தன்னுடைய ஏப்ரல் 13 ஆம் தேதியிட்ட இதழில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கி.மு.1850 ஐச்சேர்ந்த எகிப்திய காகித சுவடிகளில் பல்வேறு நோய்களுக்கு மூலிகைகளுடன் ஒயின் கலக்கப்பட்டு கொடுக்கப்பட்டதாக இலக்கியச்சான்றுகள் உள்ளன. ஆனால் அந்த ஆரோக்கிய பானத்தின் சிறுதுளிகூட இதுவரை கிடைக்கப்பெறாமல் இருந்துவந்தது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் இது ஒரு அரிய கண்டுபிடிப்பு என்கின்றனர். இந்த ஆய்வில் இரண்டு புராதனமான ஜாடிகள் ஆராயப்பட்டன. முதல் ஜாடி கி..மு.3150 ஐச்சேர்ந்தது. எகிப்தின் மேற்குப்பகுதியில் உள்ள அபிடோஸ் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது ஜாடி கி.பி. நான்காவது நூற்றாண்டிற்கும் ஆறாவது நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்தது. தெற்கு எகிப்தின் ஜீபெல் அட்டா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்தியர்களின் முந்தைய மற்றும் பிந்தைய கலாச்சாரத்தை சோதித்தறிய இந்த மாதிரிகள் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஜாடிகளில் ஒயின் இருந்ததை நிரூபிக்க liquid chromatography tandem mass spectrometry என்னும் தொழில் நுட்பத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தினர். இதன்மூலம் ஜாடிகளின் உட்புறத்தின் படிவுகளை ஆராயமுடியும். ஆய்வின் முடிவில் ஒயின் இருந்ததற்கு ஆதாரமாக டார்டாரிக் அமிலத்தின் சுவடுகள் தெரியவந்தன. அடுத்ததாக solid phase microextraction என்னும் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி ஆராய்ந்தபோது ஜாடியில் இருந்த படிவுகளில் மூலிகைகளின் சேர்மங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அபிடோஸ் ஜாடியில் கொத்துமல்லி, புதினா, sage, பைன் மரப்பிசின் ஆகியவை காணப்பட்டன. ஜீபெல் அட்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஜாடியில் பைன் மரப்பிசினும் ரோஸ்மேரியின் படிவுகளும் காணப்பட்டன.

இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகளை செய்யும்போது இந்த மூலிகைகளைப் பற்றிய கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்கிறார் இந்த திட்டத்தின் ஆய்வாளர் பேராசிரியர் மெக் காவர்ன்.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, புளிப்பு மற்றும் துவர்ப்பு என்று ஆறுவித சுவைகளை நமது நாக்கு அறியக்கூடியது என்று சொல்வதுண்டு. மேலைநாட்டவர்களின் மொழிகளில் சுவைகள் ஐந்து மட்டும்தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். இது இப்படியிருக்க ஜப்பானியர்கள் "யுமாமி" என்ற ஒரு சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்கள் விளக்கம். இதையறிந்ததும் ஆங்கிலத்தில் சேவரி (Savory) என்று புது சுவை உணர்வை அவர்கள் மொழியில் சேர்த்துக் கொண்டார்கள். உண்மையில் நமது நாக்கு 25 க்கும் மேற்பட்ட சுவைகளை உணரக்கூடியது. அத்தனைக்கும் நம் தமிழில் பெயர்கள் இல்லை.

Tasteஇனிப்புச் சுவையுடைய சக்கரைப் பொருள்கள் உடலும் மூளையும் தொடர்ந்து வேலை செய்வதற்குத் தேவையான எரிசக்தியை வழங்குகின்றன. உப்புச்சுவை இரத்தத்திற்கு வேண்டிய "எலெக்ட்ரோலைட்" எனப்படும் உலோக அயனிகளை வழங்குகிறது. இரத்தத்தில் உப்பு அளவு குறைந்தால் இதயம் தாறுமாறாகத் துடிக்க ஆரம்பித்துவிடும். சேவரி அல்லது யுமாமி என்று அழைக்கப்படும் மாமிசச் சுவை (தமிழில் இதற்கு இணையான சொல் இல்லை) உடலுக்கு உரம் தரும் புரதத்தை வழங்கும் பொருள்களுக்குச் சொந்தமானது. எனவே இனிப்பு, உவர்ப்பு, சேவரி (சைவ உணவுப் பழக்கமுடையவர்களுக்கு பருப்பிலிருந்து அந்தச் சுவை கிடைக்கிறது) ஆகிய மூன்றையும் நாம் விரும்பிச் செல்கிறோம்.

மனிதன் வேட்டைக்காரனாக வாழ்ந்த காலத்தில் இம்மூன்று சுவைகளையும் நாடி ஒடித் திரிந்ததில் ஒரு காரணமிருக்கிறது. அன்று அவனுக்கு கரும்பாலையோ, உப்பளங்களோ, பிராய்லர் கோழிக்கடைகளோ கிடையாது. உடம்பில் உயிர் தரித்திருக்க வேண்டுமானால் மேற்கூறிய மூன்று சுவைகளும் அவனுக்கு முக்கியம். இன்றும் அதே மூன்று சுவைகள் நம்மை ஆட்டிப் படைப்பதால் அளவின்றி அவற்றைப் புசித்து சக்கரைநோய், மனப்பதற்றம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் துன்புறுகிறோம்.

ஐஸ்கிரீம் வேண்டும் ஆனால் அதில் சக்கரையிருக்கக் கூடாது, ஊறுகாயில் உப்பு உறைக்க வேண்டும் ஆனால் அதில் உப்பு இருக்கக்கூடாது, மாமிசச் சுவைவேண்டும் ஆனால் சைவமாக இருக்கவேண்டும் என்று எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. இது சாத்தியமா?

நாம் நாக்குக்கு அடிமைதான். அதிலிருந்து நம்மால் விடுபட முடியாது. நாக்கின் பிடியிலிருந்து தப்பிக்க ஒரு வழியிருக்கிறது. துளி சக்கரை போட்டாலும் அது இரண்டு கரண்டி சக்கரையின் இனிப்பைத் தரவேண்டும்; சிட்டிகை உப்பிலிருந்து கால்கரண்டி உப்பின் கரிப்பு கிடைக்க வேண்டும்; மாமிசமே இல்லாமல் மாமிச சுவையை ஏதாவது தரவேண்டும். இப்படி ஒரு தந்திரம் கிடைத்து விட்டால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், எடை கூடுவது போன்ற பிரச்சனையில்லாமல் நாம் இஷ்டம்போல சாப்பிடலாம். எப்படி சக்கரைக்கு அதிகமாக இனிப்பைத் தருவது? உப்புக்கு எப்படி அதிக உவர்ப்பைத்தருவது, மாமிசத்திற்கு எப்படி திகட்டும் அளவுக்கு அதிக சுவையூட்டுவது.. ?

மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உப்பினை இப்போது பிரியாணி போன்ற புலால் சமையல்களில் சேர்த்துக் கொள்கிறார்கள். அஜினோமோட்டோ என்றால் உங்களுக்கு உடனே தெரியும். அஜினோமோட்டடோ தரும் சுவையைத்தான் சேவரி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். அஜினோமோட்டோ மாமிசச் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதுபோல சக்கரையின் இனிப்பை தூக்கலாக்க ஒரு பொருள் இருந்தால் இரண்டு கரண்டி சக்கரை போடுமிடத்தில் அரைக் கரண்டி அல்லது அதற்கும் குறைவை போட்டுச் சமாளிக்கலாம்.

சேக்கரைன், அஸ்பார்ட்டேம் போன்றவை செயற்கையாக இனிப்பைத் தருபவை. அவை பொய்யானவை. அவை தரும் இனிப்பு சக்கரைபோல இருப்பதில்லை, இதனால்தான் சக்கரை நோய்க்காரர்கள் வேண்டா வெறுப்பாக செயற்கை இனிப்பைப் பயன்படுத்துகிறார்கள்.

சுவை மொட்டுகள்

பள்ளிக்கூடப் புத்தகங்களில், நாக்கின் படம்போட்டு, அதில் பல பகுதிகளை கோடிட்டுக்காட்டி இந்த இடத்தில் இனிப்பு, இங்கே கசப்பு, இங்கே காரம்.. என்று குறிப்பிட்டிருப்பார்கள். அடிநாக்கில் கசப்பு உணர்வு இருப்பதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கும். அப்படி நாக்கில் சுவைகளுக்கான மேப் எதுவும் இல்லை என்று சார்லஸ் ஸூக்கர் (1996 Charles Zuker, Professor of Biology. University of California) என்பவர் கண்டுபிடித்தார். நாக்கில் எல்லா இடத்திலும் எல்லா சுவைகளையும் அறியமுடியும்; இனிப்பு. புளிப்பு, கசப்புக் கென்று தனித்தனி இடங்கள் ஏதும் ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெரிவித்தார். நம் நாக்கின் மேல்பரப்பு சுற சுறப்பாக இருக்கிறதல்லவா, அவையாவும் மொட்டு வடிவ மேடுகள். அவற்றை சுவை அரும்புகள் அல்லது சுவை மொட்டுகள். ஒவ்வொரு சுவை மொட்டிலும் நூற்றுக்கணக்கான செல்கள் உள்ளன. அச்செல்கள் மூலம் நாம் ஆறு அல்ல 25 வகை சுவைகளை அறிகிறோம்.

Taste

ஒவ்வொரு சுவைக்கும் தனியாகச் செல்கள் உண்டு. அதாவது ஒரு செல் ஒரு சுவையை மட்டும் அறியும். அதன் வேலை உணவில் உள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து தகவலை மூளைக்கு அனுப்புவது. ஒரு மொட்டு ஒரு சுவைக்கு என்பதும். குறிப்பிட்ட நாக்குப்பகுதி ஒரு சுவையை மட்டும் அறியும் என்பதுதான் தவறான கருத்து. நாக்கில் எல்லா பகுதியிலும் உள்ள எல்லா மொட்டுகளிலும் 25 வகை சுவைகளை அறிவதற்கான செல்கள் உள்ளன.

சுவை உணரும் செல்களின் மேற்புறத்தில் உள்ள சவ்வில் சுவையை அறிவதற்கான புரதங்கள் நிறைய உள்ளன. பாயாசத்தில் முந்திரிப்பருப்பு மிதப்பதுபோல (கொஞ்சம் அதிகமாகவே) சுவை அறியும் புரதங்கள் செல்லின் வெளிச் சவ்வில் மிதந்தபடியுள்ளன. இப் புரதங்களின் முப்பரிமான வடிவம் ஒரு கிண்ணம்போன்றது. ஒரு சுவைக்கு ஒரு கிண்ணம் என்று 25 சுவைகளுக்கும் தனித்தனி கிண்ணங்கள் உள்ளன. தேனை நக்கும்போது குறிப்பிட்ட கிண்ணத்தின் பள்ளத்தில் சுவைக்குக் காரணமான மூலக்கூறு வந்து உட்காரும். சாடிக்கு ஏற்ற மூடி போல புரதமும் அதன் சுவை மூலக்கூறும் ஒன்றுடன் ஒன்று டக் கென்று பொருந்திக்கொள்கின்றன. பூட்டும் சாவியும், காலும் செருப்பும் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். இதனால் இந்தக் கிண்ணங்களை "ஏற்பி" என்கிறார்கள். அறிஞர் ஸூக்கர், நாக்கிலுள்ள சுவை ஏற்பிகளை எல்லாம் பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது மனிதருக்கு 25 வகைக்கும் மேற்பட்ட ஏற்பிகள் இருப்பதை அவர் அறிந்தார். அதனடிப்படையில் நம்மால் அத்தனைவகை சுவைகளையும் அறிய முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். அவற்றை நாம் தொகுத்து ஆறு அல்லது ஐந்து சுவை வகைகளாகப் பிரித்துக்கொள்கிறோம். உண்மையில் கன்னல், தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா ஆகியவை அனைத்தும் இனித்தாலும் அவற்றில் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அல்லவா இருக்கின்றன.

இந்தக் கட்டுரையின் முக்கியமான இடத்திற்கு வந்துவிட்டோம். ஸூக்கர் சுவை ஏற்பி மூலக்கூறுகளை கூர்ந்து ஆராய்ந்தபோது ஒவ்வொன்றின் கிண்ணப்பகுதியிலும் இரண்டு அறைகள் இருப்பதைப் பார்த்தார். ஒரு அறை சுவைக்குக் காரணமான சக்கரை, உப்பு, அமிலம், கசப்பு, துவர்ப்புச் சுவைகளின் மூலக்கூறுகள் அமர்வதற்காகவும் அருகே உள்ள இன்னொரு சிறிய அறை சுவையில்லாத ஆயினும் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காகவும் இருப்பதைக் கண்டுபிடித்தார். அஜினோமோட்டோ என்ற உப்பு தன்னளவில் சுவையற்றதாக இருந்தாலும் மாமிச உணவில் கலந்ததும் மாமிசத்தின் சுவை பன்மடங்கு கூடுவதன் இரகசியம் இதுதான்.

இதன்படி பார்த்தால், இயற்கையில் சுவைகளைக் கூட்டுவதற்கென்றே பல பொருள்கள் இருக்கும்போலத் தோன்றுகிறது. இல்லாவிடில் ஏன் சுவை உணரும் ஏற்பிகளில் இரட்டை அறை அமைப்பு இருக்கவேண்டும்?

மேலும் ஆராய்ச்சிகள் மேற் கொண்டால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறையில் அமரக்கூடிய சுவைத்தூண்டிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம். சக்கரை முதலான பொருள்களின் சுவைகளை பலமடங்காக அதிகரிக்கச் செய்யலாம். மேலும் முயன்றால் கசப்பின் வீச்சையும் தணிக்கலாம். அதன்பிறகு எல்லோர் வீட்டிலும் மாதம் 5 கிலோ சக்கரைக்கு பதிலாக கால் கிலோதான் வாங்குவார்கள். துளி உப்பு போதும் என்று திருப்தியடைவார்கள். கசப்பையும் வெறுக்காமல் உண்பார்கள். மொத்தத்தில் மனிதன் உணவினால் கெட்டுப்போகாமல் வாழ்நாள் (சிறிதனாலும்) நோயின்றி வாழ்வான்.

நன்றி: சைன்டிஃபிக் அமெரிக்கன்.

முனைவர். க. மணி 
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

Pin It