அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கிலோ வெளிநாட்டு விதைகளை இரண்டே உரூபாய்க்கு தருவோம்' என்பது அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியாக இன்னும் சில ஆண்டுகளில் மாறலாம். அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் பயிர் விதைகளும் அரசின் பொது வழங்கல் பட்டியலில் வரலாம். 'ஒரு கிலோ நெல்லு கொடுங்க' என உழவர்கள் கடைகளில் சென்று கேட்கலாம். ‘தக்கன தழைத்தல்’ - டார்வினின் இந்தத் தத்துவம் இன்னும் சில நாட்களில் பொய்த்துப் போகலாம். மாற்றம் மட்டுமே மாறாதது என்னும் இவ்வுலகில் 'டார்வின்' மட்டும் விதிவிலக்கா என்ன?
சரி செய்திக்கு வருவோம்! மரபு மாற்று விதைகளுக்கு இந்திய அரசு உரம்போட்டுத் தண்ணீர் தெளித்திருக்கிறது! தக்காளி, கத்தரிக்காய், காலிபிளவர் ஆகிய காய்கள் இன்னும் மூன்று ஆண்டுகளில் மரபு மாற்றுத் தொழில்நுட்பம் மூலம் உற்பத்தி செய்யப்படும் என அறிவித்திருக்கிறது இந்தியா. மைய அரசின் மரபறிவியல் ஒப்புதல் குழு, மரபியல் மேலாய்வுக்குழு ஆகியவற்றின் ஒப்புதலுக்குப் பின் இந்தியாவில் அவை பயிரிடப்படும்.
அரசின் இம்முடிவு வேளாண்மை அறிஞர்களை மட்டுமல்லாது பல வெளிநாட்டு அறிஞர்களையும் வியப்படைய வைத்திருக்கிறது.
ஒரு பக்கம் மரபு மாற்று விதைகளை அமெரிக்கா முதலிய நாடுகள் தீவிரமாக ஆதரிக்கின்றன. பெருகி வரும் உணவுப்பற்றாக்குறையைச் சமாளிக்க இம்முறை உதவும் என்பது அந்நாடுகளின் வாதம். மரபுமாற்று முறையில் பயிர்களின் மரபுகளை மாற்றுவதால் பூச்சிக்கொல்லிகள் குறைந்த அளவிலேயே தேவைப்படும்; இதனால் மண்வளம் பாதுகாக்கப்படும். அருகி வரும் சில பயிரினங்களை மரபு மாற்று முறையில் காப்பாற்ற முடியும் எனப் பல வாதங்களை முன் வைக்கிறது அமெரிக்கா. நோபல் பரிசு பெற்ற 25 அறிவியலாளர்கள், 3400 அமெரிக்க வேளாண் அறிவியலாளர்கள் அமெரிக்காவின் இக்கருத்தை ஆதரிக்கிறார்கள்.
(கொசுறுச் செய்தி: பல நாட்கள் வைத்திருந்து விற்பதற்கு வசதியாக மெதுவாகப் பழுக்கும் 'பிளார் சாவர்' என்னும் மரபு மாற்றுத் தக்காளியை முதன்முதலில் கலிபோர்னிய நிறுவனம்தான் அறிமுகப்படுத்தியது)
வலுக்கும் எதிர்ப்புக்குரல்கள்
இத்தனை இருந்தாலும் எதிர்ப்புக்குரல்களும் பலமாகவே கேட்கின்றன. முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் இல்லாத நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மரபு மாற்றுக் காய்கறிகளைத் தனியே வைத்திருக்கின்றன. இக்காய்களைச் சந்தை விற்பனைக்கு அனுமதித்தாலும் அவற்றின் மீது ஒட்டுத்தாள்கள் ஒட்டப்பட்டு அவை வேறுபடுத்தப்படுகின்றன.
வெனிசுலா நாடு கடந்த 2004ஆம் ஆண்டு ஏப்பிரல் முதல் மரபுமாற்றுப் பயிரிடலைத் தடுத்திருக்கிறது. அங்கேரி நாடு மரபுமாற்றுப் பயிரிடலையும் இறக்குமதியையும் சட்டம் போட்டு நிறுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் கருத்துகள் அனைத்தும் வடிகட்டிய பொய் என்கிறார் வேளாண் அறிவியலாளர் சார்லசு பென்புருகு. 'இம்முறையால் 5 - 7 விழுக்காடு நட்டம் கூடும்; 5 - 10 மடங்கு களைக்கொல்லி அதிகம் செலவாகும்' என்கிறார் இவர். "ஒட்டு மொத்த ஐரோப்பா கண்டமே புறக்கணித்த மரபுமாற்றுப் பயிர்களை இந்தியா ஆதரிக்கக் கூடாது. மீறி ஆதரித்தால் வட அமெரிக்காவின் சந்தையாக இந்தியா மாறி விடும். இந்தியர்கள் ஆய்வுக்கூட எலிகளாகப் பயன்படுத்தப் படுவார்கள்" என எச்சரிக்கிறார் பிரான்சைச் சேர்ந்த மரபணு ஆய்வாளர் செராலனி. "எலி, ஆடு, முயல் ஆகியவற்றிற்கு மரபு மாற்றுப் பயிர்களை உணவாகக் கொடுத்து ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவ்விலங்குகளின் இரத்த உறைதல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் மாற்றங்கள் காணப்பட்டன. எனவே மரபுமாற்றப்பயிர்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்கிறார் இலண்டன் கிங் கல்லூரிப் பேராசிரியர் அந்தோனியோ.
“அரசின் அறிவிப்பே ஒரு மோசடி”
இயற்கையைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடும் கிரீன் பீசு தன்னார்வ அமைப்பு மரபுமாற்றுப் பயிரிடலைத் தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறது. ‘காலம் காலமாக இருந்து வரும் உணவுச் சங்கிலியை மாற்றுவது தவறானது. வணிகத்தைப் பெருக்க வேண்டுமானால் மரபு மாற்று முறை உதவும். வாழ்க்கைக்கு உதவாது’ என்பது கிரீன் பீசின் கருத்து. இதைப் பற்றி, 'கிரீன்பீசு' அமைப்பைச் சேர்ந்த செய் கிருட்டினனைக் கேட்டபோது, " இந்திய அரசின் அறிவிப்பே ஒரு மோசடி! மரபு மாற்றுப்பயிர்கள் தொடர்பான முடிவுகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தான் எடுக்க வேண்டும். ஏனென்றால் இது நிலம் தொடர்பான சிக்கல்! ஆனால் இப்போது வேளாண்துறை அமைச்சர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுவே தவறானது! " எனப் பொரிந்து தள்ளினார்.
“வடிகட்டிய பொய்”
"ஒரே ஒரு மரபணுவை மாற்றுவதன் மூலம் அதிக மகசூல் கிடைக்கும் என்பதே வடிகட்டிய பொய்! நம் நாட்டில் ஏற்கெனவே மரபுமாற்று முறையில் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் உழவர்களுக்கு அதனால் எவ்விதப் பயனும் இல்லை. சொல்லப்போனால் பருத்தி உழவர்கள் தற்கொலை இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது." என்றவர் "மரபு மாற்றுப் பயிர் நிறுவனங்கள் நெல்லையும் மரபு மாற்றுப் பயிரிடல் முறையில் திட்டமிட எண்ணியுள்ளன. இந்திய அரசு இப்போதே கவனமாகச் செயல்பட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும். கனடா, அர்சென்டினா, வட அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் மட்டும்தான் மரபுமாற்றுப் பயிரிடல் முறை நடைமுறையில் உள்ளது. வேறெந்த நாட்டிலும் இல்லை. மேலும் முதன்மைப் பயிர்களை மரபுமாற்று முறையில் பயிரிட எந்த நாடும் ஒப்புக்கொண்டதில்லை. அமெரிக்கா புளோரிடாவின் முதன்மைப் பயிர் பருத்தி. அங்கு 'பிடி' பருத்திக்குத் தடை உள்ளது. இதே போல் பெரு நாட்டில் உருளைக்கிழங்கும் சீனாவில் சோயாவும் மெக்சிகோவில் சோளமும் மரபுமாற்று முறையில் பயிரிடத் தடை விதித்துள்ளார்கள். நம்முடைய நாட்டிலும் மரபு மாற்றுப் பயிர்களுக்கு முழுமையாகத் தடைகள் வேண்டும்" என்று அவர் விலாவாரியாக விளாசித் தள்ளினார்.
'பிடி' (‘Bt’) என்றால் என்ன?
பேசில்லசுத் துரிசென்சி (‘Bacillus Thurigiensis’) என்பது ஒருவகை புரதம். அப்புரதத்தில் இருந்து பருத்திப் புழுக்களைக் கொல்லும் ஒருவகை மரபீனி பருத்திப் பயிர்களில் சேர்க்கப்படுகிறது. இம்மரபீனி சேர்க்கப்பட்ட பருத்தி வகைகள் 'பிடி' பருத்தி எனப்படுகின்றன.
இயற்கை வேளாண்மையை ஆதரிக்கும் நம்மூர்க்காரர்கள், "பல ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த முறையை மாற்றுவது மண்வளத்தைப் பாதிக்கும்; உழவர்கள் விதைகளுக்காகப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டி வரும்" என்கிறார்கள். முதலாளித்துவத்தை வளர்ப்பதே இதன் நோக்கம் என்பது இவர்களின் குற்றச்சாட்டு.
மலட்டுத்தன்மை அடையும் நிலம்:
தமிழ்நாடு உழவர்கள் சங்க மாநிலத்தலைவர் வேட்டவலம் மணிகண்டனிடம் கேட்டபோது "மரபுமாற்றுப் பயிரிடலால் நிலம் மலட்டுத்தன்மை அடைந்துவிடும். மராட்டிய மாநிலத்தில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயிரிட்ட உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். தமிழ்நாட்டில் மரபுமாற்றுப் பயிர்களைப் பயன்படுத்திய உழவர்கள் பலருக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்காகப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தி ஏக்கருக்கு ஐயாயிரம் பணத்தைப் பெற்றுக் கொடுத்தோம். எனவே மரபுமாற்றுப் பயிர்கள் அதிக மகசூல் தரும் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை" என முடித்துக்கொண்டார்.
தடை விதித்துள்ள நாடுகளில் சில : தாய்லாந்து, ஆசுதிரியா, அங்கேரி, வெனிசுலா , பிரான்சு, இரசியா, நியூசிலாந்து
"மரபு மாற்றுப் பயிரிடல் முறை பயிர்களில் பல வகைகள் அழியும் வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பழைய காலத்தில் 120000 அரிசி வகைகள் இருந்தன. 'பசுமைப் புரட்சி'யின் விளைவாகத் தற்போது வெறும் ஐம்பது அரிசி வகைகள் மட்டுமே உள்ளன. இன்னும் மரபு மாற்றுப் பயிரிடலைக் கொண்டு வந்தால் இருக்கும் அரிசி வகைகளும் அழிந்து போகும். சொல்லப்போனால் அன்றாடம் நாம் சாப்பிடும் கத்தரிக்காயில் மட்டுமே இரண்டாயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளன. அரசின் இவ்வறிவிப்பால் இவை எல்லாம் அழிந்து போகும் நிலை ஏற்படும்" என எச்சரிக்கிறார் இயற்கைமுறை வேளாண்மை முறையைப் பின்பற்றும் செல்லையா.
“வழக்கமாக உழவர்கள் ஓராண்டு விளைச்சலில் இருந்து அடுத்த ஆண்டுக்கான விதைகளைப் பெறுவார்கள். ஆனால் மரபுமாற்றுவிதைகளை இப்படிப் பயிரிட முடியாது. மரபுமாற்று விதைகள் 'அறிவுசார் உரிமை'ச் சட்டத்தின் கீழ் வருகின்றன. மரபு மாற்று விதைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும். அவற்றிடம் இருந்து தான் உழவர்கள்
விதைகளைப் பெற வேண்டும். இல்லாவிட்டால் 'எங்களை ஏமாற்றி விதைகளைப் பயிரிட்டிருக்கிறார்கள்' என அந்நிறுவனங்கள் வழக்குத் தொடுக்கும். 1998 ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த ஒரு விவசாயி மேல் இப்படி வழக்குத் தொடரப்பட்டது." எனப் புள்ளிவிவரங்களை அடுக்குகிறார்கள் சமூக ஆர்வலர்கள் சிலர்.
இன்னும் பிரான்சில் உள்ள கேன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் செராலனி, ஒரிசா மாநில ஓமியோபதி மருத்துவர்கள் சங்கத் தலைவர் தத்தா, இயற்கை வேளாண்மை ஆராய்ச்சியாளர் கவிதா குருகந்தி, மரபியல் துறை அறிஞர் பார்கவா, முன்னாள் அமைச்சர் அன்புமணி இராமதாசின் ‘பசுமைத்தாயகம்’ தன்னார்வ அமைப்பு, நடிகைகள் அமலா, உரோகிணி, இயக்குநர்கள் மிசுகின், வசந்து, மருத்துவர் கமலா செல்வராசு என மரபு மாற்றுப் பயிரிடல் முறையை எதிர்ப்போர் பட்டியல் நீளுகிறது.
இப்படிக் கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாம் இருக்க, இந்திய அரசின் தடாலடி அறிவிப்புப் பலரைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
கடைசிச்செய்தி: இந்திய அரசின் அறிவிப்பு வெளியான அதே வாரத்தில் இந்தியா வந்த இலாரி கிளின்டன் மரபுமாற்றுப் பயிரிடலை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் அதற்கு வேண்டிய உதவிகளை அமெரிக்கா செய்யும் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார்.
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவிவெப்ப அதிகரிப்பால் கடல்நீரின் வெப்பநிலை உயர்ந்துகொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன்டைஆக்சைடு வாயு கடல்நீரில் கரைந்துபோவதால் கடல் நீரின் அமிலத்தன்மையும் அதிகரிக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் உலகில் பாதிக்குமேற்பட்ட பவளப்பாறைகள் அழிந்துபோய்விடும் என்பதே அறிவியல் அறிஞர்களின் கருத்து. ஆனால் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெப்பத்தை தாங்கிவளரும் தகவமைப்பை சிலவகை பவளப்பாறைகள் பெற்றிருப்பதால் அழிவின் வேகம் குறைவாக இருக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மாறுபாடுகளால் பவளப்பாறைகள் அழிவை நோக்கி இருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் நாம் நினைப்பதைக் காட்டிலும் பவளப்பாறைகள் மிகவும் உறுதியானவை என்கிறார் ஸ்டீபன் பாலும்பி. இவர் ஸ்டான்ஃபோர்டைச் சேர்ந்த மூத்த சுற்றுச்சூழல் அறிஞர். 2006ம் ஆண்டு இவருடைய குழு பசிபிக் கடலில் அழிவிலிருந்து கிளைத்தெழுந்த பவளப்பாறைகளை ஆய்வு செய்தது. இன்னும் 100 ஆண்டுகளில் கடல்நீரின் வெப்பநிலை பெருமளவு உயரக்கூடும் இல்லையா? அந்த வெப்பநிலையிலும் வளமாகவும் உறுதியாகவும் வளரக்கூடிய பவளப்பாறைகளை இந்தக்குழு கண்டறிந்துள்ளது. இந்த பவளப்பாறைகளில் வெப்பத்தை தாங்கிவளரும் ஆல்காக்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தக்குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் டாம் ஆலிவர், ஓஃபு என்னும் அமெரிக்க தீவில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தத் தீவில் ஏராளமான பவளப்பாறைகள் இருக்கின்றன. இங்கு புவிவெப்பத்தால் அழியக்கூடிய ஆல்காக்களும், புவிவெப்பத்தை தாங்கிவாழும் ஆல்காக்களும் ஒருசேர இருப்பதால் மிக அருமையான ஒரு ஆய்வுக்கூடமாக இந்தத்தீவு அமைந்துபோனது.
வெப்பமண்டல நாடுகளின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு பவளப்பாறைகள் அடிப்படையானவை. பவளப்பாறைகள் zooxanthellae என்னும் ஒருசெல் ஆல்காக்களை சார்ந்து வாழுகின்றன. ஆயிரக்கணக்கான கடல்வாழ் உயிரினங்களும் மீன்வகைகளும் பவளப்பாறைகளில் குடியிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த மீன்களே உணவாகின்றன. புவிவெப்ப உயர்வால் பவளப்பாறைகள் எவ்வாறு வெளுத்துப்போகின்றன என்பதை விளக்கும் கட்டுரை இதே பகுதியில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.
ஓஃபு தீவின் குளிர்ச்சியான கழிமுகங்களில் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் மிகக்குறைந்த அளவில் இருந்தன. ஆனால், இதே தீவின் வெப்பமான பகுதிகளில் வெப்பத்தைத் தாங்கி வளரும் ஆல்காக்கள் அதிக அளவில் இருந்தன. அதாவது வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், தாங்களாகவே ஒதுங்கிக்கொண்டு வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்கள் வாழ இடம் கொடுக்கின்றன என்பதுதான் ஆய்வுகளின் முடிவு.
உலகில் எங்கெல்லாம் ஒஃபு தீவைப்போல வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்கள் மிகுந்துள்ளன என்கிற விவரம் செயற்கைக்கோளைக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் இருந்து சேகரிக்கப்பட்டது. புவியில் எங்கெல்லாம் ஓர் ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 31 செல்சியஸ் ஆக உள்ளதோ, அங்கெல்லாம் வெப்பத்தை தாங்க இயலாத ஆல்காக்கள், வெப்பத்தை தாங்கக்கூடிய ஆல்காக்களுக்கு வழிகொடுத்து ஒதுங்கிக்கொள்வதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிப்பால்கூட இந்த ஆல்காக்கள் அழிவதில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் புவிவெப்பம் 2100ஆம் ஆண்டில் 2 முதல் 4.5 செல்சியஸ் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெப்பத்தை தாங்கி வளரும் ஆல்காக்கள் வெறும் 1.5 செல்சியஸ் வெப்பஉயர்வை மட்டும் ஏற்று வாழக்கூடியவை. என்னதான் வெப்பத்தை ஏற்றுவாழும் ஆல்காக்களால் பவளப்பாறைகள் வெளுத்துப்போவது தடுக்கப்பட்டாலும் மனிதர்களின் தவறுகளால் பவளப்பாறைகளின் அழிவின் வேகம் சற்று தூக்கலாகவே இருக்கிறது. மனிதத் தவறுகளால் இன்னும் 50 ஆண்டுகளில் பலமில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறைகள் அழிந்துபோவது நிச்சயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/05/090520100515.htm
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஷெல் பெட்ரோல் நிறுவனத்தை எதிர்த்த கென்ய கவிஞர் கென் சரோ விவா போல் உலகெங்கும் சூழலுக்காக போராடுபவர்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அரசின் உதவியுடன் நசுக்கி ஒடுக்கப்படுகிறார்கள். இந்தியாவிலும் அதுதான் நடக்கிறது. பொதுவாகவே சூழல் விழிப்புணர்வு அதிகமுள்ள கர்நாடகத்தில் சமீபத்தில் ஒரு கொடூரக் கொலை நடந்துள்ளது. வடிகால் தொழிற்சாலை, மணல் குவாரிகளை எதிர்த்த விவசாயி செல்ல கிருஷ்ணமூர்த்தி (57) அந்நிறுவன முதலாளிகளால் கொல்லப்பட்டிருக்கிறார். இயற்கை வேளாண் முறையில் வாழை பயிரிட்டு வந்த விவசாயி அவர்.
சிக்பல்லாபூர் கிராமப் பகுதியில் விவசாய நிலங்கள், பாசனக் குளங்கள், பினாகினி நதியில் உள்ளூர் வடிகால் தொழிற்சாலை தொடர்ந்து கழிவு நீரை வெளியேற்றி வந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அத்துமீறல் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த நிறுவனத்துக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளார்.
இப்படிச் சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கைக்கு கடந்த நவம்பர் 10ந் தேதி திடீரென்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கௌரி டிஸ்டிலரி நிறுவனத்தின் அத்துமீறல்கள் பற்றி செய்தியாளர் கூட்டத்தில் பேட்டியளிக்க கிருஷ்ணமூர்த்தி தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், கௌரிபித்தனூக் தாலுகாவில் அவர் கொல்லப்பட்டார்.
அவரது தொடர் போராட்டத்தால், கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்தனர். வாரியத்தின் விதிமுறைகளை மீறியதன் காரணமாக டிசம்பர் 19ந் தேதி அந்த வடிகால் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது. ஆனால் அரசு உரிய காலத்தில் செயல்படாததால், ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வாழ்க்கை வலிந்து முடிக்கப்பட்டிருக்கிறது.
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சமூகம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய நான்கு நிறுவனங்களும் உலகை கட்டுப்படுத்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த நான்கிலும் தாக்கத்தைச் செலுத்தக் கூடியது, மக்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது சூழலியலும், சுற்றுச்சூழலும். ஆராய்ச்சி, கல்வித் துறையிலும் சுற்றுச்சூழல் அரசியல், சுற்றுச்சூழல் பொருளாதாரம் போன்ற சிந்தனைகள் தீவிரம் பெறத் தொடங்கியுள்ளன. பாரம்பரியமாகவே இயற்கை சார்ந்த நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டது தமிழ்ச் சமூகம். ஆனால் இன்று முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்கிறோம். உலகமயச் சூழலில் சுற்றுச்சூழல்-சூழலியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துவிட்டன. தேசிய அளவிலான சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் முக்கிய ஆக்கப்பூர்வமான, எதிர்மறையான செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன.
உணவுப் பாதுகாப்பு
பாதுகாப்புச் சோதனைகள் முழுமையாக மேற்கொள்ளப்படாத நிலையில் மரபணு மாற்றப்பட்ட (ஜெனிடிகலி மாடிஃபைட்) பி.டி. கத்தரிக்காயை வணிக ரீதியில் பயிரிட அனுமதிக்க முடியாது என்று மரபணுப் பொறியியல் அங்கீகாரக் குழுவில் உச்ச நீதிமன்றம் நியமித்த மூலக்கூறு உயிரியலாளர் புஷ்பா எம். பார்கவா கூறியுள்ளார். மிகப் பெரிய அளவில் திறந்தவெளி பரிசோதனை நடத்துவது தொடர்பாக மரபணு பொறியியல் அங்கீகாரக் குழுவுக்கு இது தொடர்பாக வந்த கருத்துரு பற்றி, ஜனவரி 14ந் தேதி நடந்த கூட்டத்தில் இது பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியதாக அவர் தெரிவிக்கிறார்.
பசுமைப் புரட்சி மூலம் நமது உணவு இறையாண்மையைக் கட்டுப்படுத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள், 40 ஆண்டுகளுக்குப் பின் அது செல்லுபடியாகாது என்று தெரிந்த பின், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என்ற புது தந்திரத்துடன் இந்தியாவில் நுழைய முயற்சிக்கின்றன. முதல் உணவுப் பயிராக மரபணு மாற்றப்பட்ட கத்தரியை இந்திய வேளாண் சந்தையில் நுழைக்க மான்சாண்டோ முயற்சித்து வருகிறது.
போக்குவரத்து
இந்தியாவில் முதன்முதலில் ரயில் ஓடித் தொடங்கிய தாணே நகரம், தற்போது மற்றொரு வகையிலும் முன்மாதிரியாக மாறுவதற்கு முயற்சித்து வருகிறது. நாட்டிலேயே முதன்முறையாக சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதை அந்நகரில் அமைக்கப்பட உள்ளது.
வாகனங்கள் நகர்வதைவிட, மக்களின் நகர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தாணே நகராட்சி எடுத்த முடிவின் அடிப்படையில் இந்தப் பாதை அமைக்கப்படுகிறது. 82 கி.மீ. நீளம் கொண்ட இந்த சைக்கிள் பாதையில் 52 கி.மீ. பகுதியை அமைப்பதற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. இந்தப் பாதை மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளை இணைக்கிறது.
தாணே ரயில் நிலையம்-கிரீக் சாலை-சாகேத், சாகேத்-பால்கம், ஆனந்த்நகர்-ஓவாலே, மும்பை ரெதி பண்டர் ஆத்மராம் சௌக் முதல் கல்வா வரை இந்தப் பாதை அமைக்கப்பட உள்ளது. இரண்டு கி.மீ. அகலம் கொண்ட இந்த தனிப்பாதை ஏற்கெனவே உள்ள சாலைகள், சேவை சாலைகள், தனியாக பிரிக்கப்பட்ட சாலைகளைக் கொண்டு உருவாக்கப்பட உள்ளது.
சைக்கிள் பாதை மட்டுமின்றி போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண மோனோ ரயில், அதிவேக பஸ் போக்குவரத்து முறை (பஸ் ராபிட் டிரான்சிட் சிஸ்டம்), அதிக பேருந்துகள், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள், ஒரே விகிதத்தில் இயங்கும் சிக்னல்கள் ஆகிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பயணத் திட்டம் என்றழைக்கப்படும் இந்தத் திட்டம் நான்கு கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. கனடாவை மையமாகக் கொண்ட லியா கன்சல்டிங் என்ற நிறுவனம் 2008-2032க்குள் ரூ. 9,419 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டம் தயாரித்துள்ளது.
முதலாளிகளின் நெருக்குதலால் கார்கள் செல்வதற்காக சாலைகள் அமைக்கும் நகரங்கள் மத்தியில், மக்களின் பயணங்கள் மீது கவனம் செலுத்தும் தாணே நகரம் மேற்கொள்ளும் முயற்சிகள் நமக்கு முன்மாதிரி.
- போக்குவரத்து துறையில் மற்றொரு வரவேற்கத்தக்க மாற்றமும் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. தங்களது காரின் எரிசக்தித் திறன் எவ்வளவு என்பதை கார் தயாரிப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய தர நிர்ணய வரையறைப்படி இந்த விவகாரத்தில் தன்னார்வ விதிமுறைகளே போதும், கட்டாயமாக்க வேண்டியதில்லை என்று கார் நிறுவனங்கள் இவ்வளவு காலம் வாதிட்டு வந்தன. இந்த விவகாரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பது தொடர்பாக அமைச்சகங்கள் இடையே பெரிய போரே நடந்தது. கடைசியாக குறைவாக எரிபொருள் செலவழிப்பதற்கான தரநிர்ணயம், எந்தக் கார் அதிக எரிசக்தித் திறன்மிக்கது, இது பற்றிய விவரங்களை கார் விற்கும்போதே தெரிவிக்கும் லேபிள்கள் ஒட்டுவது உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயமாக்குவது என்று முடிவெடுக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் தலையிட்ட பிறகே இந்த விவகாரத்தில் இணக்கமான உடன்பாடு எட்டப்பட்டது.
இதன்மூலம் ஒருங்கிணைந்த எரிசக்தி கொள்கையில் கூறப்பட்ட தொலைநோக்குப் படி, எரிபொருள் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதன் மூலம் 2030-31ல் 50 சதவீத எரிபொருள் செலவைக் குறைக்கலாம். இதன்மூலம் தற்போது செலவிட்டு வரும் பெட்ரோலில் 65 சதவீதத்தை சேமிக்க முடியும். தற்போது கார்பன் டை ஆக்சைடை உமிழ்ந்து வரும் 70 லட்சம் கார்களை குறைப்பதற்குச் சமம் இது.
மாசுபடுதல்
இந்தியாவில் உள்ள நதிகள் சீர்கேடு அடைந்திருப்பதற்கு கோலிபார்ம் பாக்டீரியா நோய்த்தொற்றுதான் முக்கிய காரணம் என்பதை சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிகம் மாசடைந்த நதி கங்கை. யமுனை, சபர்மதி உள்ளிட்ட நதிகளும் மோசமாக மாசடைந்துள்ளன. டிசம்பர் மாதம் (2008) வெளியிடப்பட்ட அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணீரில் பாக்டீரியா மாசு என்பது கோலிபார்ம் பாக்டீரியாவின் அளவைக் கொண்டே கணக்கிடப்படுகிறது. இந்த மாசுபாட்டுக்கு முக்கிய காரணம் நன்னீருடன் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதே. இதன் பலனாக நீர்மூலம் பரவும் நோய்த்தொற்று பெருகும்.
பாக்டீரியா கலப்பையும் மாசுபாடு என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் முதன்முறையாக ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பதால், நீர் தரம் பற்றிய மதிப்பீடுகளில் இனிமேல் மாற்றம் ஏற்படும். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நாடு முழுவதும் உள்ள 282 நதிகளை கண்காணித்து மாசுபாட்டு அளவை மதிப்பிட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மதிப்பிடும் முறையில், பெரிய மாற்றங்கள் நிகழும்.
பெரும்பாலான நகரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் நதிகளில்தான் கலக்கவிடப்படுகிறது. இதனால் நதிகள் சீர்கேடு அடைவது தெளிவு. நம் நாட்டின் பெரும்பாலான நதிகள் வெறும் சாக்கடைகளாக மாறிப்போவது இதனால்தான். நம்மிடம் தண்ணீர் வரி, கழிவுநீர் அகற்ற வரி என ஒரு பக்கம் கறந்து கொண்டு, மறுபக்கம் அரசு அமைப்புகளே இந்த மாசுபடுத்தும் பணியை சிரமேற் கொண்டு செவ்வனே செய்து முடிக்கின்றன.
ஒவ்வொரு நாளும் முக்கிய நகரங்களில் உற்பத்தியாகும் 33,000 கோடி லிட்டர் கழிவு நீரில் வெறும் 600 கோடி லிட்டர் கழிவு நீர் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே ஏற்றுக் கொள்கிறது. குறைந்த அளவு சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களும்கூட எந்தத் தரத்தையும் கடைப்பிடிப்பதில்லை. எனவே, நதிகள் மாசுபட்டுள்ள அளவை மறுஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசின் நதிகள் பாதுகாப்புத் திட்டத்தை ஒட்டுமொத்தமாகவும் ஒருங்கிணைந்த நோக்கிலும் மாற்றியமைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பேரழிவு
நம் காலத்தின் பயங்கரமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் ஒன்று போபால் விஷ வாயுக் கசிவு. அந்த விபத்து நடந்து வெள்ளி விழாக் காலம் நெருங்கிவிட்ட நிலையிலும், பழைய யூனியன் கார்பைடு நிறுவனத்தில் கைவிடப்பட்ட ஆபத்தான வேதிப்பொருட்கள் இன்னும் அகற்றப்படாமல் அங்கேயே பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன!
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக குஜராத்-மத்தியப் பிரதேச அரசுகள் இடையே மோதல் நிலவுகிறது. இது தொடர்பாக இரு மாநில தலைமைச் செயலர்கள், மத்திய வர்த்தக அமைச்சகம் இணைந்து வேதிப்பொருட்களை அகற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நவம்பர் 8ந் தேதி (2008) உத்தரவிட்டிருந்தது. யூனியன் கார்பைடு நிறுவனத்தில் எஞ்சியுள்ள வேதிப்பொருட்களை ஜனவரி 31ந் தேதிக்குள் குஜராத் அகற்ற வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத்தில் உள்ள அங்கலேஸ்வர் தொழிற்பேட்டையில் உள்ள இன்சினரேட்டரில் பாருக் என்விரோ இன்ப்ரா ஸ்டிரக்சர் லிமிடட் (பி.இ.ஐ.எல்) நிறுவனத்தால் அந்த வேதிப் பொருட்கள் எரிக்கப்பட இருந்தன.
இந்த நீதிமன்றப் போராட்டத்தால் 1984ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை 350 மெட்ரிக் டன் (டன்=1000 கிலோ) வேதிப் பொருட்கள் அங்கேயே இருந்தன. அணுகுண்டுகளுக்குச் சமமான வேதிப்பொருட்களை இப்படி ஓரிடத்தில் இருந்து வேறிடத்துக்கு கடத்தும் வேலையையே மத்திய அரசு இவ்வளவு காலமாகச் செய்து வருகிறது. எங்கு எரித்தாலும் பாதிக்கப்படப் போவது சுற்றுப்பகுதிகளில் வாழும் மக்கள்தான். விஷ வாயுக் கசிவுக்குக் காரணமாக இருந்த நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனையும் இன்னமும் கைது செய்யவில்லை, நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேதிப் பொருட்களையும் வெளியேற்றவில்லை. இதுதான் முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் சேர்ந்து நடத்தும் சுற்றுச்சூழல் பயங்கரங்களுக்கு நம் நாட்டில் கிடைக்கும் நீதி.
புவி வெப்பமடைதல்-காலநிலை மாற்றம்
உத்தராகண்டில் மிக அதிக வெப்பநிலை நிலவுவதால் வசந்தகால மலர்கள் முன்பே பூத்துவிட, வசந்த கால கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளன. கோகா என்றழைக்கப்படும் வசந்தத்தை வரவேற்கும் இந்த விழா, ஜனவரி மாத இறுதியில் நடைபெறும். வசந்த காலத்தை வரவேற்கும் விழாவின்போது குழந்தைகள் அதிகாலையிலேயே எழுந்து புரன், பெய்ன்யா, பையுன்லி போன்ற மலர்களைப் பறித்து வருவது வழக்கம். "காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மலர்கள் கிடைப்பதில்லை. மலர்கள் இல்லாமல்தான் விழாவைக் கொண்டாடி வருகிறோம்" என்கிறார் இப்பகுதியிலுள்ள ஷெர்சி கிராமத்தின் ஆஷா கந்தூரி. ஒரு சிலர் கடுகுப் பூக்களை வைத்து விழாவைக் கொண்டாடியுள்ளனர்.
காடுகள், மரங்களுடன் குழந்தைகள் நேரிடையாக உறவாட இந்த விழா வாய்ப்பு தருகிறது. சூரியன் உதிக்கும் முன்பே மலர்களைப் பறித்து வரும் சிறுவர்கள் அவற்றை வீட்டு வாசலுக்கு முன்பே கொட்டுவார்கள். நல்ல பயிர்விளைச்சல், பருவமழை, குடும்பச் செழிப்பு போன்றவற்றுக்காக வேண்டிக் கொள்வார்கள். இது மட்டுமின்றி, வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பது நிற்கவில்லை என்றால் கால்நடைகள், வேளாண்மை என இப்பகுதியிலுள்ள அனைத்து இயற்கை வளங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாள்கள் தெரிவிக்கிறார்கள்.
- ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்
- திட்டமிடப்பட்டு அழிக்கப்படும் இயற்கை மரபுசார் விவசாயம்
- மீன் இனத்தை அழிக்கும் CO2
- கரியமில வாயுவின் இன்னொரு முகம்
- புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
- பற்றி எரிகிறது பூமி
- முல்லை பெரியாறு அணை - ஓர் பார்வை
- பாழாகும் பாலாறு
- அண்டார்க்டிகாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்
- பூமியின் 1.2% நிலப்பகுதியை காப்பாற்றினால்…
- டர்க்கானாவின் மக்கள்
- இயற்கையின் ஆடம்பர விளைவு
- எரிமலை வெடிப்பை முன்கூட்டியே கண்டறிய உதவும் மரங்களின் இலைகளும் செயற்கைக்கோள் படங்களும்
- ஆடுகளுடன் போர் செய்த ஒரு நாட்டின் கதை
- நிறம் மாறும் அண்டார்டிகா
- ஆழ்கடலில் அதிசய எரிமலைகளின் கண்டுபிடிப்பு
- நஞ்சுள்ள பட்டாணி நாளைய உலகின் உணவாகுமா?
- பவளப் பாறைகளுக்கு மரங்களால் ஒரு புது வீடு
- இந்தியாவில் லித்தியம்
- உலகின் குப்பைத் தொட்டியா அட்டகாமா பாலைவனம்?
- குட்டையாகும் ஆல்ப்ஸ் மலை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.