இன்றைக்கு அறிவியலாளர்கள் சிரமப்பட்டு, கண்டு பிடிக்கும் பல உண்மைகளை நமது சனாதன மதப் பெரியவர்கள் தங்களுடைய தொலைநோக்குக் கூர்ந்த அறிவுத் திறத்தால் அறிந்து கொண்டிருந்தார்கள். அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு பல எளிய நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் இன்றும் நன்மைகளைத் துய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலைநாட்டு அறிவியலாளர்கள் இந்து மதப் பழக்க வழக்கங்களை ஆராயும் போது, அறிவியல் வளராத அந்தக் காலத்திலேயே இப்படியொரு நுணுக்கமான நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்த நமது முன்னோர்களின் மேதைமையை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்ப்போம். மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சோர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது.

          இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி  நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          இன்றைய அறிவியலாளர்கள் இது போன்று நம் இந்து மதப் பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் அம்சங்களை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்து மதத்தை அறிவியல் மதம் என்று பாராட்டுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          மேற்கண்ட விளக்கங்களைப் பெறுவதற்கு நீங்கள் பெரிய மதாச்சாரியரையோ மதப் பிரச்சாரகரையோ நாட வேண்டியதில்லை. இந்து மதத்திலுள்ள 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் இவ்விளக்கங்களைச் சரளமாகத் தருகின்றனர். இந்துக்கள் மட்டுமல்ல; இப்பொழுது கிருத்துவர்களும் இவ்விளக்கங்களைத் தர ஆரம்பித்து விட்டனர். மார்கழி மாதம் அதிகாலையில் சென்ற கிருத்துவ பஜனைக் குழுவினரிடம் விசாரித்த போது ஓசோனின் அருமை பெருமைகளைப் பற்றி விரிவாக விளக்கினார்கள். ஓசோனினால் கிடைக்கும் நன்மைகளைப் பங்கு போட கிருத்துவர்களும் போட்டிக்கு வந்து விட்டார்கள்.

          ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? ஓசோன் என்பது ஒரு நச்சு வாயு. அது மனிதனின் சுவாச அமைப்பைப் பாழ்படுத்தும். மனிதனை மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் தீங்கானது. விலங்குகளுக்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் தீங்னானது. தாவரங்களுக்கு மட்டுமல்ல, ஜடப் பொருட்களான ரப்பர், துணிவகைகள் ஆகியவற்றிற்கும் தீங்கானது. அது எப்படி எந்த அளவிற்குத் தீங்கானது என்பது ஆர்.டி.ராஸ் (R.D.Ross) என்பவர் தொகுத்து Van Nostrand Reinhold Company (New york / Cincinati / Toranto / London / Melbourne) வெளியிட்டிருக்கும் Air Pollution and Industries (தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்) என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் உள்ள சில விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 மனிதனுக்குக் கேடு

          1.காற்றில் ஐந்து கோடியில் ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சு திணறத் தொடங்கும்.

          2. காற்றில் ஒரு கோடியில் மூன்று பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சுக் குழாயில் வலி எடுக்கும்; களைப்பு ஏற்படும்; தலைவலி உண்டாகும்.

          3. காற்றில் பத்து லட்சத்தில ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் சிலர் மரணமே கூட அடைந்து விடுவார்கள்.

          4. பொதுவாக ஓசோனைச் சுவாசித்தால் முதுமைத் தன்மை விரைவாக ஏற்படும். (பக்கம் 242)

விலங்குகளுக்குக் கேடு

          மனிதனுக்கு ஏற்படும் கேடுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பொருந்தும். (பக்கம் 44)

தாவரங்களுக்குக் கேடு

          காற்றில் பத்து கோடியில் மூன்று பங்கு ஓசோன் இருந்தால் இலைகள் பழுப்படையும். இலை நரம்புகள் வலுவிழக்கும். (பக்கம் 44,46,49)

ஜடப் பொருட்களுக்கும் கேடு

          காற்றில் பத்து கோடியில் ஒரு பங்கு ஓசோன் இருந்தால் ரப்பரின் மேற்பகுதியில் வெடிப்பு ஏற்படும். நூல் மற்றும் துணிகள் நைந்து விடும். (பக்கம் 25)

           இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் ஓசோன் காற்றில் நிறைய இருப்பதாகவும் அது உடல் நலனுக்கு நல்லது என்றும் எப்படி கதை கட்டினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

          அறிவியலும் மதங்களும் என்றைக்குமே எதிரிகள் தான். அறிவியல் உணமையை மேலும் மேலும் ஆராயும். அது கசப்பாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கும். மதங்களோ மூட நம்பிக்கைகளை வளர்க்கத்தான் பாடுபடும். அறிவியல் மூட நம்பிக்கைகளை அடித்து நொறுக்கி முன்னேறிவிட்டால், அதுவரைக்கும் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகளுக்கு மதச் சாயம் பூசி உள்வாங்கிக் கொள்ளும். வரலாறு முழுவதும் இப்படித் தான் நடந்திருக்கிறது.

          ஓசோன் கதை என்னவென்றால், அது மூன்று அணுக்கள கொண்ட உயிர்வளி; வீரியம் மிக்கது என்று படித்தவுடன், ஏமாற்றுக் கலையைத் தவிர வேறு எதையுமே ஆராய விரும்பாத, வேறு எதிலுமே நிபுணத்துவம் பெற விரும்பாத மதவாதிகள் அது உடல் நலுனுக்கு நல்லது என்று தாங்களாகவே முடிவு கட்டி விட்டாரகள். அதை எந்த இடத்தில் மத உரிமை கோருவது என்று தீவிரமாக யோசித்தார்கள். அவர்களுடைய கண்களில் மார்கழி மாத அதிகாலை பளிச்சென்று தென்பட்டது.உடனே மார்கழி மாத அதிகாலையில் ஓசோன் இருக்கிறது; அதைச் சுவாசித்தால் உடலுக்கு நல்லது என்று கதை கட்டி விட்டார்கள். மத நிறுவனர்களின் (முட்டாள்களின்) மேதாவிலாசத்தை மதப் பிரச்சாரகர்கள் (அயோக்கியர்கள்) மதத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் (காட்டுமிராண்டிகளிடம்) சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

          இன்று மிகப் பலர் மார்கழி மாத அதிகாலையில் கோயிலுக்குப் போவது காற்றில் கிடைக்கும் ஓசோனைச் சுவாசிக்கத் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரிடையானது. மார்கழி மாதம் மட்டுமல்ல; எந்த மாதத்திலும் காற்றில் ஓசோன் இருப்பதில்லை. இது மதவாதிகளின் கட்டுக் கதையே.

          இது போல் மதம் அறிவியலைச் சார்ந்து இருக்கிறது என்றும் மதம் அறிவியலை விட மேம்பட்டது என்றும் கூறும் அனைத்து விவரங்களும் அயோக்கியத்தனமான பொய்களே. ஓசோன் விஷயத்தில் மிக எளிதாக விளக்க முடிகிறது. மற்ற விஷயங்களிலும் ஆழமாக ஆராய்ந்தால் மதவாதிகள் செய்யும் புரட்டு தெளிவாகத் தெரியும்.

          அது சரி! மதவாதிகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மக்கள் மதிமயக்கத்தில் இருக்கும் வரையில் தான் சுரண்டல் கொள்ளையை நடத்த முடியும். மக்கள் தெளிவு பெற்றால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து. மதங்கள் எப்பொழுதுமே சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் துணையாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டும் வர்க்கத்தினர் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு இராணுவத்தையும் காவல் துறையையும் விட மதவாதிகளையே அதிகம் சார்ந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் மதவாதிகள் மக்களை மயக்க விதவிதமான புரட்டுகள் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் மதவாதிகள் உங்களுடன் கணக்கு தீர்த்துக் கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

பூமியின் தரைக்குக் கீழே 25 கிமீ அடியில் ஏகப்பட்ட அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது. அதைச் சுற்றியுள்ள பாறைகள் தண்ணீரை நசுக்கியபடியுள்ளன. அதனால் தண்ணீரானது வழுக்கும் கிரீஸ் மாதிரி மாறிவிடுகிறது. பாறைகள் இதனால் ஒன்றன் மேல் ஒன்று சுலபமாக நழுவி நகருகின்றன. லேசான விசை கொடுத்தாலும்கூட உடனே நிலநடுக்கம் ஏற்படுகிறது.rocks_317

நிலாவும் சூரியனும் நேர்க்கோட்டில் வரும்போது அவை தரையை இழுக்கின்றன. சில பாறைகள் நழுவி நில நடுக்கங்கள் ஏற்பட அந்த இழுப்பே போதும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழக நிலவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

சேன் ஆன்டிரிஸ் பிளவு என்பது பூமியின் தரையில் காணப்படும் தழும்பு போன்ற கீரல். இந்தத் தழும்பு தரையின் அடியிலிருந்து மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இதன் உயரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் வளர்ச்சிக்குக் காரணம் நிலாவின் இழுப்பே என்று சொல்கிறார்கள்.

படத்தில் பார்ப்பது அந்தத் தழும்பின் ஒரு சின்ன பகுதிதான். அதன் முழுநீளத்தையும் இங்கே காட்ட முடியாது. அம்மிக் குழவி மாதிரி காணப்படும் பாறைகள் என்றோ நடந்த எரிமலைக்குழம்பினால் உருவானவை.

- முனனவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

தன்னுடைய மூதாதையர்களைவிட இன்றைய மனிதனே வலிமையானவன் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஸ்டீபன் ரோ தன்னுடைய குழுவினருடன் நடத்திய ஆராய்ச்சியில் தற்கால மண்டை ஓடுகளும், நமது மூதாதையரின் மண்டை ஓடுகளும் இயந்திரவியல் அடிப்படையில் ஆராயப்பட்டன. மிகவும் வலிமையாக கடிக்கும் ஆற்றல் பெற்றவன் இக்கால மனிதனே என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது. Proceedings of the Royal Society B என்னும் இதழில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்கால மனிதர்கள் வலிமையாக கடிக்கும் ஆற்றலை இழந்துவிட்டார்கள் என்றும் தாடைகளும், தாடை தசைகளும் பலவீனமடைந்துவிட்டன என்றும் இதுவரை கருதப்பட்டுவந்தது. பல்வேறு சாதனைங்களைக் கொண்டு உணவை சமைத்து உண்பதும், மென்மையான உணவுப்பொருட்களை உண்ணுவதும் காரணமாக கூறப்பட்டுவந்தது. ஆனால் இதுபோன்ற கருத்துகள் எல்லாம் ஆதாரமற்றவை என்கிறார் ஆஸ்திரேலிய விஞ்ஞானி ரோ. மனிதர்களின் பல்லில் இருக்கும் எனாமல் தடிமனானது என்றும் கடினமான உணவை வலிமையுடன் கடிப்பதற்குத் தேவையான உறுதியை இந்த எனாமல் பூச்சு பெற்றிருப்பதாகவும் ரோ கூறுகிறார். ரோ தன்னுடைய ஆய்வில் மனிதனின் கபாலத்துடன் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் சிம்பன்ஸி, கொரில்லா, ஒராங்குட்டான், கிப்பன் ஆகிய நான்கு விலங்குகளின் கபாலங்களை ஆராய்ந்தார். மேலும் புதை படிமங்களில் இருந்து பெறப்பட்ட Australopithecus africanus and Paranthropus boisei  என்னும் ஆதிமனிதர்களின் மண்டை ஓடுகளின் அமைப்பையும் ஆய்விற்கு எடுத்துக்கொண்டார். இந்த இரண்டு ஆதிமனித இனமும் கொட்டைகளைத் தின்று வாழ்ந்த மனிதர்களாக கருதப்படுபவர்கள்.

man_bite_340

ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மண்டை ஓடுகளின் டிஜிட்டல் மாதிரிகள் முப்பரிமாண பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன. Computerized axial tomography தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்த மண்டை ஓடுகள் ஒரு கற்பனையான கடின பொருளை பற்களின் பின்பகுதியில் கடிப்பதுபோன்ற காட்சி உருவாக்கப்பட்டது. தாடையில் கொடுக்கப்படும் விசை பரவும் இடங்கள் குறிக்கப்பட்டன. தாடைகளின் எந்திரலாபத்தை ஆராய்ந்தபோது இன்றைய மனிதனின் கடிக்கும்திறன் மனிதக்குரங்குகளைக் காட்டிலும் 40 முதல் 50 சதவீதம் வலிமையானது என்று கணக்கிடப்பட்டது. கடிக்கும் ஒவ்வொரு முறையும் இன்றைய மனிதன் ஒரு கொரில்லாவை விடவோ, சிம்பன்ஸியை விடவோ வலிமையாக கடிக்கிறான். கொட்டைகளைக் கொறித்துக் கொண்டிருந்த Australopithecus africanus and Paranthropus boisei முதலிய ஆதிமனிதர்களின் கடிக்கும் ஆற்றலுக்கும் இன்றைய மனிதனின் கடிக்கும் ஆற்றலுக்கும் உடல் அளவில் வேறுபாடு இருந்தாலும், கடிக்கும் ஆற்றலில் பெரிய வேறுபாடு காணப்படவில்லை..

நெம்புகோல் தத்துவம்தான் இதன் விளக்கம் என்கிறார் விஞ்ஞானி ரோ. தாடை எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பதையும், ஆதாரதானமாக இருக்கும் மூட்டு அமையும் இடம் இவற்றைப் பொருத்தும் கடிக்கும் வலிமை கணக்கிடப்படுகிறது. இத்துடன் தசைநாண்களின் அமைவிடம், அவை அமைக்கப்பட்டிருக்கும் முறை இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் ரோ. கொட்டைகளை உடைப்பதிலும், மாமிசத்தை மெல்லுவதிலும் மனித தாடை வலிமையாக இருந்தாலும், நீண்ட நேரத்திற்கு இலைகளையும், மூங்கில் குருத்துக்களையும் மெல்லுவதற்கு ஏற்றதாக நம்முடைய தாடை இல்லையாம். இந்த வகையில் நாம் நம்முடைய மூதாதையரைவிட வலிமை குறைந்தவர்களே!

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100622095116.htm

Pin It

உலகத்தில் அசுர வேகத்தில் நாளுக்கு நாள் அறிவியலின் வளர்ச்சி முன்னேற்றம் கண்டாலும் இயற்கையான பல நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் பயன் இன்றிதான் இந்த வளர்ச்சிகள் உள்ளது. இதில் யாரும் எதிர்பாராமல் ஏற்படும் பூகம்பம், சுனாமி போன்ற ஆபத்தான இயற்கையான நிகழ்வுகள்தான் மனித இனதிற்கு பெரிதும் அச்சுறுதலாக இதுவரையில் இயலுமா என்று கேட்டால் இயலாத ஒன்றுதான்.

frog_320சரி இந்த அபாயங்கள் வருவதற்கு முன்பு ஒருவேளை எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் எதுவும் அறிவியலின் வளர்ச்சியில் சாதித்து இருக்கிறோமா என்று கேட்டால் அதற்கும் இதுவரை சரியான பதில் இல்லை. அந்த வகையில் இந்தப் பதிவு அதைப் பற்றியதுதான்.

ஒருவேளை பூகம்பம் அல்லது சுனாமி இது போன்ற பெரும் அழிவுகள் வருவதற்கு முன்பு நமக்குத் தெரிந்தால் அதில் இருந்து பெரும்பாலான மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இயலும். அந்த வகையில் இப்பொழுது பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய சக்தி எங்கு இருக்கிறது என்று ஆய்வு செய்ததில் நம்மை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் பல விடயங்கள் கிடைத்திருக்கிறதாம். ஆம் நண்பர்களே..! பூகம்பம் வருவதை ஐந்து நாட்களுக்கு முன்பே அறியக்கூடிய திறன் தவளைகளுக்கு உண்டு என்று, பாரீசைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ரசெல் கிரான்ட் தலைமையிலான குழு ஆய்வு அறிக்கை நிரூபித்து இருக்கிறார்களாம்.

உலகத்தில் மனித இன அழிவிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கும் தாக்கங்களில் பூகம்பமும் ஒன்று. இதைப் பற்றி பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் உலகத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இறுதியாக பூகம்பம் ஏற்படப் போவதை குறைந்தது 5 நாட்களுக்கு முன்னதாக தவளைகள் அறியக்கூடும் என்று பிரான்சில் நடந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை உறுதி செய்து ஜூவாலஜி ஜர்னல் என்ற இதழ் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஆய்வில் தவளை பூகம்பம் வருவதை எப்படி உணர்வதாக நீங்கள் அறிந்தீர்கள் என்று கேட்டதற்கு, அந்தக் குழு “இத்தாலியின் லாகுய்லா நகரில் கடந்த ஆண்டு ஏப்ரலில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் 500 பேர் பலியாகினர். 60,000 பேர் தங்களின் உடமைகள் வீடுகளை இழந்து தவித்தனர். அந்தப் பகுதியில் பூகம்பத்துக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வரை வசித்த தவளைகள், பூகம்பம் ஏற்பட்ட தினத்தில் ஒன்று கூட இல்லாமல் அங்கிருந்து சென்றிருப்பது தெரியவந்து இருக்கிறது. அதை வைத்து தவளைகளுக்கு பூகம்பத்தை முன்கூட்டி அறியும் திறன் உள்ளதா என்ற கோணத்தில் ஆய்வு நடந்தது. பூகம்பம் ஏற்படுவதற்கு முன் பூமியில் இருந்து வெளியாகும் ஒருவித வாயு, துகள்களை வைத்து ஆண் தவளைகளால் பூகம்பத்தைக் கணிக்க முடியும் என அதில் தெரிய வந்தது. குறைந்தது 5 நாட்களுக்கு முன்பே ஆண் தவளையால் பூகம்பம் ஏற்படப் போவதை உணர முடியும். இதை வைத்து முன்கூட்டி பூகம்ப எச்சரிக்கை விடுக்க முயற்சிக்கலாம்” என்று அவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.  

இதற்கு முன் நடந்த ஆராய்ச்சிகளில், பூகம்பத்துக்கு முன் புவியீர்ப்பு அலைகள் அல்லது ரேடியோஆக்டிவ் வாயு வெளிப்படுதல் ஆகியவற்றைக் கொண்டு பூகம்பம் ஏற்படப் போவதை முன்கூட்டி அறியலாம் என்று கூறப்பட்டது. எனினும், அதுபற்றி தெளிவான நிலை இல்லை. அவை அனைத்தும் சரியான எந்த தகவலும் தராததால் யாரும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தது. ஆனால் இப்பொழுது இந்த தவளையின் ஆய்வு அறிக்கை அனைவருக்கும் நம்பிக்கை தருகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பனித்துளி சங்கர் (  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It