இந்தியாவில் உயிர்ப் பன்மயத்தன்மை செழுமை மிகுந்த இடங்களில் ஒன்று மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். இங்கு பூமியில் வேறெங்கும் காணப்படாத அபூர்வ உயிரினங்கள் வாழ்கின்றன. இவற்றில் தவளையினமும் ஒன்று. இவற்றில் ஒரு சில வியப்பூட்டும் தவளையினங்களைப் பற்றி இங்கு காண்போம்.

பர்ப்பிள் தவளை

இதன் அறிவியல் பெயர் நாசிகபட்ராகஸ் சக்யாத்ரென்சிஸ். இது கேரளாவில் பாதாளத் தவளை என்றும், மகாபலி தவளை என்றும் அழைக்கப்படுகிறது. இதன் பொதுவான பெயர் பர்ப்பிள் தவளை (Purple frog). கோடை மழையின் கடைசி இரண்டு வாரங்களில் இவை மண்ணிற்கடியில் இருந்து வெளிவருகின்றன. இணை சேர்வதற்காக மட்டுமே பூமியில் இருந்து வெளியில் வரும் இவற்றை சாதாரணமாக எல்லோரும் பார்க்க முடியாது.

இதில் பெண் தவளையை பதால் என்றும், ஆணை குறுவன் என்றும் உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இது தவிர, இதற்கு பன்றி மூக்கு தவளை, ஆமைத் தவளை என்று பல பெயர்கள் உண்டு. இடுக்கி, கட்டப்பனை என்ற இடத்தில் முதல்முறையாக இந்த இனத்தவளையை டாக்டர் சத்யபாமா தாஸ் பிஜு மற்றும் பெல்ஜியம் ஆய்வாளர் பிராங்கி மோசிட் ஆகியோர் கண்டுபிடித்து அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தினர். இக்கண்டுபிடிப்பு பற்றிய ஆய்வுக்கட்டுரை 2003ல் நேச்சர் (Nature) இதழில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த விசித்திர தவளையின் இனப்பெருக்க முறை பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வனவிலங்குகள் மற்றும் உயிர்ப் பன்மயத்தன்மை மீது ஆர்வம் ஏற்படுத்த, அவற்றின் சூழல் முக்கியத்துவத்தை உணர்த்த, பாதுகாக்க உதவும் வகையில் மாநில மலர், விலங்கு, மரம், பறவை என்பது போன்ற அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. பதவிகள் வழங்கப்படுகின்றன.frog 390மணவாட்டி தவளை

பலருக்கும் தவளைகள் மீது அருவருப்பும் பயமுமே இன்றும் உள்ளது. பர்ப்பிள் தவளை போலவே மற்றொரு அபூர்வ தவளையினமே மணவாட்டி அல்லது மணப்பெண் தவளை. இது இன அழிவை சந்திக்கும் இனம். ஆனால் இவை பற்றி இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கு மலபார் பிரதேசத்தில் லாட்டரைட் நில அமைப்புடன் இணைந்ததே இவற்றின் வாழ்க்கை. செங்கல்லால் கட்டப்பட்ட வீடுகளில் உட்புறங்களிலும், குளியலறைகளிலும் ஒரு காலத்தில் இவை சாதாரணமாகக் காணப்பட்டன.

வீடுகளின் உட்புற அமைப்புகள் மாறியதுடன் இவை காணாமல் போகத் தொடங்கின. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கேரளா முதல் மும்பை வரை உள்ள பகுதிகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன. இவை ஃபங்காய்டு தவளை (Fungoid frog), மலபார் மலைத் தவளைகள் என்றும் அழைக்கப்படும் பிரிவைச் சேர்ந்தவை.

பெயர் மாற்றம்

1883ல் முதல்முதலில் இவை பற்றிய செய்திகள் வெளிவந்தன. அன்று இவை ரானா மலபாரிகா (Rana Malavarica) என்று பெயரிடப்பட்டன. பிறகு இது ஹைலா ரானா மலபாரிகா (Hylarana Malabarica) என்று மாற்றப்பட்டது. இப்போது ஹைட்ரோபிலாக்ஸ் மலபாரிகஸ் (Hydrophylax Malabaricus) என்று அழைக்கப்படுகிறது. மணப்பெண் போல உடல் அலங்காரங்கள் காணப்படுவதால், பழைய வீடுகளில் இருண்ட அறைகளில் வாழ்கின்றன. இதனால் இவற்றிற்கு மணப்பெண் தவளை என்ற பெயர் ஏற்பட்டது.

ஊர்தோறும் பல பெயர்கள்

வடக்கு கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் பாரம்பரிய நாட்டிய முறையான தைய்யம் ஆட்டத்தின் போது பயன்படுத்தப்படும் அணிகலன்கள், அலங்காரங்கள் போல இருப்பதால் இவை தைய்யம் தவளை என்றும், காசர்கோடு மாவட்டத்தினரால் அழைக்கப்படுகிறது. கோழிக்கோடு மாவட்டத்தினர் இதை பாறைத்தவளை என்று அழைக்கின்றனர்.

செங்கல் பரப்புகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் இலைகளுக்கு நடுவில், பழங்கால குகைகள், பொந்துகளில் இவை வாழ்கின்றன. இணை சேர மட்டுமே இவை நீரில் இறங்குகின்றன. இவற்றின் உடலமைப்பு வண்ணமயமான ஆடைகளை அணிந்த கல்யாணப் பெண் போல அழகானது. அதிகம் குண்டு இல்லை. அழகான மெலிந்த உடல்வாகு.

வண்ணஜாலம் காட்டும் உடலமைப்பு

உடல் மற்றும் தலையின் மேற்பகுதி பளபளக்கும் செங்கல் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் கறுத்த பொட்டுகள் காணப்படும். மற்ற உடற்பகுதிகளில் கறுப்பு கலந்த அடர் பழுப்பு நிறத்தில் அகலமான அடையாளம் காணப்படுகிறது. அப்பகுதிகளிலும், கை கால்களிலும் வெள்ளை நிற வரிகள் உள்ளன. வயிற்றுப் பகுதி நல்ல வெள்ளை நிறம்.

ஆண் பெண் தவளைகளுக்கு இடையில் உருவம் மற்றும் அமைப்பில் பெரிய வேறுபாடு இல்லை. உடலின் அடிப்பகுதி மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. முறைத்துப் பார்ப்பது போன்ற கண்களின் பின்புறத்தில் இதே அளவில் உள்ள கேட்கும் திறனுக்கான பகுதி (டிம்பானா) அமைந்துள்ளது. பழைய வீடுகளில் இவை பூசை அறைகளில் கிண்டியின் மீதும், சமையலறையில் கஞ்சிக்கலயத்தின் அருகிலும் காணப்படும்.

ஒரு வீட்டில் பத்து பதினைந்து வரை வாழ்ந்தன. ஆணும் பெண்ணும் சேர்ந்து வீட்டில் நிரந்தரமாக வசிக்கும். ஈரமும் இருட்டும் உள்ள சாணம் மெழுகிய படுக்கையறைகளை இவை தங்கள் சொந்த இடமாக மாற்றிக் கொண்டு வாழும். இவை வருடக்கணக்கில் ஒரே வீட்டில் வாடகை கொடுக்காமல் குடியிருக்கும்! வீட்டில் இருந்து வெளியில் விரட்டினாலும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் மறுபடியும் அதே இடத்துக்கு திரும்ப வரும். தொலைதூரத்திற்கு கொண்டு போய் விட்டாலும் இவை நம்மை விடாது. வீட்டைத் தேடிப்பிடித்து திரும்ப வந்து சேரும்.

பகலில் ஓய்வு இரவில் நடமாட்டம்

இரவில் வெளியில் போய் உணவு தேடும். கொசுக்கள், எறும்புகள், சிறிய பிராணிகளே முக்கிய உணவு. பகல் முழுவதும் வீட்டுக்குள்தான் வாசம். பகலில் வீட்டுக்குள் அவ்வப்போது வந்து போகும் பூனைகள், தேரைகள் இவற்றை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. ஆபத்து என்று உணர்ந்தால் அருவருப்பை ஏற்படுத்தும் ஒருவித துர்நாற்றத்தை வெளிவிட்டு எதிரிகளை விரட்டும்.

இணை சேரல்

மழைக்காலம் வந்தவுடன் நல்ல மழை பெய்து வயல்களில் நீர் தேங்கினால் ஆண் தவளைகள் மெல்ல வீட்டை விட்டு வெளியில் இறங்கும். தூரத்தில் வயலில் நீர் தேங்கியிருக்கும் வசதியான இடத்தைக் கண்டுபிடித்து அங்கே முகாமிடும். காதல் உணர்ச்சி பொங்கும் குரலில் இணை சேர பெண் தவளையை அழைக்கத் தொடங்கும்.

தாடைக்கு அருகில் இருக்கும் குரலெழுப்பும் பகுதியை பெரிதாகத் திறந்து உயர் அதிர்வெண் உடைய சத்தத்தை ஏற்படுத்தும். இந்த காதல் கீதம் நாட்கணக்கில் நீளும். சில நாட்கள் ஆன பிறகு பெண் தவளைகள் ஒவ்வொன்றாக வீட்டை விட்டு வெளியில் வந்து சத்தம் வந்த வயலில் நீரை இலட்சியமாகக் கொண்டு பயணம் தொடங்கும். கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி பெண் தவளைகள் இணைக்கு அருகில் செல்லும்.

உரத்த குரலில் ஓசை எழுப்பிய ஆண் தவளையையே தன் இணையாக பெண் தவளையைத் தேர்ந்தெடுக்கும். ஆண் தவளை, பெண் தவளையின் உடலின் மீது ஏறி அதன் உடற்பாகங்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டு நிற்கும். பெண் தவளையின் ஜெலாட்டின் போன்ற அமைப்புடன் உள்ள பகுதியில் இருக்கும் முட்டைகள் கூட்டத்தில் ஆண் தவளை விந்தணுக்களை விடும். இணை சேர்ந்த பிறகும் பெண் தவளைகளே வீட்டிற்கு முதலில் வரும். சில நாட்கள் கழித்து ஆண் தவளைகள் திரும்பி வரும்.

வாசலைத் திறக்க என்ன தாமதம்?

விடியற்காலையில் திரும்பி வரும் இவை வாசற்படியில் பொறுமையுடன் காத்திருக்கும் காட்சி சுவாரசியமானது. வீட்டுக்காரர்கள் வாசலைத் திறந்தால் “என்ன? கதவைத் திறக்க இவ்வளவு தாமதமா என்ன?” என்ற பாவனையில் பதட்டம் கலந்த ஒரு பார்வையை வீசும். பயமும் தயக்கமும் இல்லாமல் சொந்த வீட்டுக்குள் துள்ளிக் குதித்தபடி ஒரே பாய்ச்சலில் தாவி வீட்டுக்குள் ஓடும்.

அருவருப்பும் வெறுப்பும்

வீட்டில் இருப்பவர்கள் இவற்றிடம் அருவருப்பையோ வெறுப்பையோ காட்டுவதில்லை. இதனால் இவற்றை வீட்டில் இருந்து விரட்டியடிக்க யாரும் மெனக்கெடுவதும் இல்லை. மனிதர்களுடன் இந்த அளவிற்கு இணைந்து வாழும் வேறொரு தவளையினமும் இல்லையென்றே சொல்லலாம். லாட்டரைட்செங்கல் குன்றுகளின் மறைவு இவற்றை இன அழிவிற்கு ஆளாக்கும் அபாயம் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் சேர்ந்து வாழ்ந்த இந்த தவளையினம் காப்பாற்றப்பட வேண்டும்.

பறக்கும் தவளை

மற்றொரு அபூர்வத் தவளையினம் பறக்கும் தவளை (Flying frog/Rhacophorus) malabaricus. இது மரத்தவளை, க்ளைடிங் தவளை (gliding frog) என்றும் அழைக்கப்படுகிறது. மழைக்காடுகளுடன் சேர்ந்த பிரதேசங்களில் மழைக்காலத்தில் இவை காணப்படுகின்றன. இதன் வண்ணமயமான உடலமைப்பு, அதிசயிக்க வைக்கும் அழகு தோற்றத்தினால் பல நேரங்களில் புதிய அற்புத தவளையினத்தை கண்டுபிடித்துவிட்டதாக உள்ளூர் செய்திகளில் இது இடம் பெறுவதுண்டு.

காற்றில் நீந்தும் தவளை

ஒரு கிளையில் இருந்து மற்றொன்றிற்கு இவை காற்றில் நீந்திப் பறக்கக் கூடியவை. இவ்வாறு இவை 9 முதல் 12 மீட்டர் வரை பறக்கும். உடலின் வெளிப்பகுதி நல்ல பச்சை நிறத்துடனும் அடிப்பகுதி மங்கலான மெல்லிய வெள்ளை நிறத்துடனும் காணப்படுகின்றன. பகலில் கண்ணின் மணி கூம்பி ஒரு வரி போலக் காட்சி தரும். பகலில் இலைகளுடன் சுறுண்டு கிடப்பதால் அப்போது இவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இரவில்தான் நடமாட்டம். இரை தேடலும்.

பறப்பது எப்படி?

விரல்களுக்கு இடையில் இருக்கும் சதையை பறக்கும் நேரத்தில் விரிவுபடுத்தி அதிக தொலைவிற்குப் பயணிக்கவும், இறங்கும்போது பாராசூட் மாதிரியில் வேகத்தைக் குறைத்தும் தரையிறங்க இப்பகுதி உதவுகிறது. விரல்களின் நுனியில் இருக்கும் பகுதி இலைகளை, கிளைகளைப் பற்றிப் பிடித்துக் கொள்ள உதவுகிறது. சதைப்பற்றுள்ள பகுதி ஆரஞ்சும், சிவப்பும் கலந்த நிறமுடையது. இதனால் இவை பார்ப்பதற்கு சொக்க வைக்கும் அழகுடையவை.

பார்வைக்கு சாதுவான இவற்றை ஒரு முறை பார்த்தவர்கள் எவரும் பிறகு மறக்க மாட்டார்கள். பச்சை நிறமுடைய உடலும், விரல்களுக்கு இடையில் கடும் சிவப்பு நிறமும் சேர்ந்து இத்தவளைக்கு ஓர் அற்புத அழகைத் தருகிறது. மழையுடன் சேர்ந்துதான் இவற்றின் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. சில சமயங்களில் இவை அருவிகள் மற்றும் மீன்கள் வளர்க்கப்படாத தோட்டக் குளங்களில் இருக்கும் மரக்கிளைகளின் உச்சியில் இணை சேர்வதுண்டு.

இலை நுனியில் முட்டைகள்

முட்டைகளை இலை நுனிகளில் ஒட்டி வைக்கும். ஈரப்பசை இழக்கப்படாமல் இருக்க, பறவைகள் முட்டைகளைக் கொத்திக் கொண்டு போகாமல் இருக்க இந்த ஏற்பாடு. மழை பெய்யும்போது இலைகளில் இருந்து இறங்கி தண்ணீருடன் சேர்ந்து விரிந்து முட்டைகள் தலைப்பிரட்டைகளாக மாறும். சாதாரணமாக ஒருகாலத்தில் காணப்பட்டன என்றாலும் இவை வாழிட இழப்பு காரணமாக அழியும் ஆபத்தில் உள்ளன. தவளைகளின் உலகில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள்! அற்புதங்கள்!

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/which-should-be-our-state-frog-purple-frog-or-manavatti-frog-1.8246187

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இந்தியாவில் கடல் ஆமைகளைப் பாதுகாக்க ஒற்றையாளாகப் போராடியவர் சதீஷ் பாஸ்கர். உயிரினங்களின் வரைபடத்தில் இருந்து ஒரு உயிரினம் மறைந்து போவதைத் தடுக்க பூமியின் வரைபடத்தில் இல்லாத தீவுகள் தேடியலைந்த ஆய்வாளர் என்று வர்ணிக்கப்படும் இவர், கடந்த 2023 மார்ச் 22 அன்று பெங்களூரில் காலமானார்.

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தீவில்

லக்‌ஷ தீவில் மனித வாசம் இல்லாத சுஹேலி (Suheli) தீவில் இருந்து பருவ மழைக்காலத்தில் ஆர்ப்பரிக்கும் கடல் அலைகளில் ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்து பத்திரப்படுத்தி, சென்னையில் இருந்த தன் மனைவிக்கு அவர் ஒரு கடிதம் எழுதி அனுப்பினார்.satish bhaskar 406கேரளக் கரை அல்லது கோவா கரைக்கு அடித்துச் செல்லப்படும் அந்த பாட்டில் கடிதத்தை யாரேனும் கண்டுபிடித்து சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று சதீஷ் நினைத்தார். ஆனால் 1982 ஜூலை 3 அன்று அனுப்பப்பட்ட அந்தக் கடிதம், 24 நாட்கள் 800 கிலோமீட்டர் கடலில் பயணம் செய்து ஸ்ரீலங்காவிற்குப் போனது. அந்தோணி டமேஷியஸ் என்ற மீனவர் கையில் கிடைத்தது. கடிதத்தில் இருந்த வாசகங்கள் அந்த மீனவத் தொழிலாளியை நெகிழச் செய்தது.

தான் யாரென்பதையும், அந்தக் கடிதம் தன்னை எந்த அளவிற்குப் பாதித்தது என்பதையும் எடுத்துக் கூறி ஒரு கவரிங் கடிதத்தை தன் குடும்பப் புகைப்படத்துடன் சேர்த்து அவர் அந்த கடிதத்தை சென்னைக்கு அனுப்பினார். “நீங்கள் குடும்பத்துடன் ஒரு தடவை ஸ்ரீலங்காவிற்கு வர வேண்டும்” என்றும் கவரிங் கடிதத்தில் நேசத்துடன் அவர் அழைப்பு விடுத்தார்.

தனிமையில் அந்தத் தீவில்

அந்த மழைக்காலத்தில் கடலுக்கு நடுவில் ஒரு தீவில் தன்னந்தனியாக வாழும் கணவரின் கடிதத்தை வாசித்த மனைவி பிருந்தாவால் கண்களில் இருந்து பொங்கி வந்த கண்ணீரை அடக்க முடியவில்லை.

சதீஷ் பாஸ்கர் என்ற மனிதன் அந்த பெருமழைக்காலத்தில் எந்த நவீன வசதியும் இல்லாத அந்த தொலைதூர ஒற்றைத் தீவில் தனியாக வாழ்வது எதற்காக என்பதைப் புரிந்து கொண்ட பிரபல பத்திரிகையாளர் ஹாரி மில்லர், கடலில் மிதந்து வந்த அந்த கடிதத்தின் விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தியாக வெளியிட்டார். செய்தியின் தலைப்பு “ராபின்சன் சதீஷ் பாஸ்”.

மனைவி பிருந்தாவையும், பிறந்து மூன்று மாதமே ஆன பெண் குழந்தையையும் சென்னையில் விட்டுவிட்டு, மழைக்காலத்தில் முட்டையிட வரும் க்ரீன் கடல் ஆமைகளைப் பற்றி அரபிக்கடலில் லக்‌ஷ தீவின் தொலைதூரத் தீவிற்குச் சென்று ஐந்து மாதம் தங்கியிருந்து சதீஷ் ஆராய்ந்தார்.

அவர் தங்கிய சுஹேலிக்கு மிக அருகில் மனிதர்கள் வாழும் தீவு கவரெட்டி தீவு. இந்தக் குட்டித் தீவில் இருந்து 52 கிலோமீட்டர் பயணம் செய்தால் மட்டுமே கவரெட்டியை அடைய முடியும். மழைக்காலத்தில் மழை பெய்யும்போது அங்கிருந்து ஒரு படகும் சுஹேலிக்கு வராது. அதனால்தான் சதீஷ் மனைவிக்கு எழுதிய கடிதத்தை பாட்டிலில் அடைத்து கடலலைகள் வழியாக அனுப்பி வைத்தார்!

ஒற்றைக் கதாநாயகன்

இந்தியாவில் கடல் ஆமை ஆய்வுகளின் வரலாற்றில் இது போல ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் வெறும் கதைகள் இல்லை. சாகசம் நிறைந்த அபூர்வமான உண்மைச் சம்பவங்கள்! கதைகள் பல இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சதீஷ் பாஸ்கர் என்ற இந்த நல்ல மனிதரே கதாநாயகன். இந்தியக் கடற்கரைகளிலும், தொலைதூரத் தீவுகளிலும் கடல் ஆமைகளின் போக்கையும், வரவையும் பற்றி ஆராய அலைந்தார்.

இந்தியாவில் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளை இருபது ஆண்டுகளாக ஒற்றையாளாக செயல்பட்டு தன் தோளில் சுமந்தவர் அவர். ஒரு பள்ளிக் குழந்தையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் வாழ்க்கை கட்டுக்கதை போலத் தோன்றும் என்று ஒரு முறை அவர் தெற்கு கோவாவில் தன் வீட்டில் இருந்தபோது கூறினார். 7500 கிலோமீட்டர் நீளம் உடைய இந்தியக் கடற்கரையின் பல இடங்களுக்கும் கால்நடையாகப் பயணம் செய்து ஆராய்ந்தார்.

இந்தியாவில் இருக்கும் சுமார் 670 தீவுகளுக்கு கடல் ஆமைகளைத் தேடிச் சென்றபோது கொலையாளித் திமிங்கலச் சுறாக்கள் வாழும் பல கடற்பகுதிகளை நீந்திக் கடந்துள்ளார். பல சமயங்களில் கொடிய நஞ்சுடைய ஸ்டோன் பிஷ் உட்பட பல நச்சுப்பாம்புகள், காட்டு யானைகளின் தாக்குதல்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். இவருடைய நிஜவாழ்க்கை கட்டுக்கதைகள் கூட தோற்கும் விதத்தில் அமைந்தது.

வரைபடத்தில் இல்லாத தீவுகளுக்கு

கடல் ஆமைகள் இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் போன்ற மனித வாசம் இல்லாத பகுதிகளுக்கே அதிகம் வருகின்றன. 400 மீட்டர் நீளம் 90 மீட்டர் அகலம் உள்ள தீவுகள் பூமியின் வரைபடத்தில் கூட காணப்படுவதில்லை. தங்கள் இனம் அழியாமல் இருக்க கடல் ஆமைகள், இது போன்ற உலகம் அதிகம் அறியாத சிறுதீவுகளையே சார்ந்து வாழ்கின்றன. குடிக்க சுத்தமான தண்ணீர் கூட கிடைக்காத இத்தகைய சிறு தீவுகளிலேயே சதீஷ் தன் ஆய்வுகளை மேற்கொண்டார். 1977ல் இவரது ஆய்வுகள் தொடங்கின.satishbhaskerகுஜராத் கடற்கரை முதல் அதிகம் அறியப்படாத நாட்டின் மிகத் தொலைவில் இருக்கும் பிரதேசங்களில் ஒன்றான மெரோ (Meroe) தீவு வரை பயணித்தார். இந்தோனேஷியாவில் நியூ கினி போன்ற தொலைதூரப் பகுதிகளிலும் கடல் ஆமைகளைத் தேடிப் பயணம் செய்தார். 1984-85 காலத்தில் உலக வன நிதியத்தின் (WWF) இந்தோனேஷியா பிரிவின் அழைப்பை ஏற்று, நியூ கினியின் மேற்கு மூலையில் இருக்கும் பொகல்ஹோஃப் கடற்பகுதியில் ஆய்வுகளை நடத்தினார். கடல் ஆமைகள் எங்கே, எத்தனை, எந்தெந்த இனங்கள் எங்கிருந்து வருகின்றன, இனப்பெருக்க காலம் எப்போது போன்ற விவரங்களைக் கண்டுபிடித்தார்.

கடலைக் காதலித்த ஆய்வாளர்

தந்தை பாஸ்கரன், தாய் பத்மினி தம்பதிகளுக்கு ஒரே மகனாக 1946 செப்டம்பர் 11 அன்று கேரளா எர்ணாகுளம் மாவட்டம் சிராய் என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ராணுவத்தில் மேஜராகப் பணிபுரிந்தார். இந்தியாவில் பல இடங்களில் ஆரம்பக் கல்வி கற்றார். ஷில்லாங் செயிண்ட் எட்மண்ட் கல்லூரியில் இருந்து இண்டர் மீடியட் தேர்ச்சி பெற்றார். சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) மின் பொறியியல் பிரிவில் சேர்ந்தார்.

சென்னையில் இருந்தபோது கடல் மீது ஏற்பட்ட காதலே சதீஷின் வாழ்க்கையை மாற்றியது. சென்னை பாம்புப் பண்ணையின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற ஊர்வன பிரிவு ஆய்வாளர் ராமுலெஸ் விட்டேகருடன் (Romulus Whitaker) பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு இந்தியாவின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வின் தலையெழுத்தையே மாற்றியது. பொறியியல் படிப்பிற்குப் பதில் சதீஷின் கவனம் முழுவதும் பாம்புப் பண்ணை மீதே இருந்தது.

பொறியியல் நூல்களுக்கு பதில் உயிரியல் நூல்களே அவர் மனதைக் கவர்ந்தது! விட்டேகர் அந்த நேரத்தில் முதலைகளின் ஒரு பிரிவு (alligator) பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார். 2010ல் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளுக்காக ஓர் ஆய்வாளரை அப்போது அவர் தேடிக் கொண்டிருந்தார். கடலைக் காதலிக்கும் சதீஷ் பாஸ்கரே அந்த பணிக்காக கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறியியல் படிப்பை முடிக்காமல் கடல் ஆமைகளின் இரகசியங்களைத் தேடி அந்த இளைஞர் புறப்பட்டார்.

சென்னை பாம்புப் பண்ணையின் கள அலுவலர் என்ற நிலையில் செயல்படத் தொடங்கினார். பிறகு இந்திய வன உயிரி நிதியம் (WWF) அவரை பணிக்கு அமர்த்தியது. பாம்புப் பண்ணையில் செயலாளராக இருந்த பிருந்தா பிரிட்ஜிக்க்கை 1981 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைலா, ஐலின், சந்தியா என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

உலகில் உள்ள எட்டு கடல் ஆமை இனங்களில் ஆலிவ் ரெட்லி, க்ரீன், ஹாக்ஸ்பில் (hawksbill), லோஹர் ஹெட், தோல் முதுகு உள்ளிட்ட இனங்கள் இந்தியக் கரைக்கு வருகின்றன.

இவற்றில் லோஹர் ஹெட் இந்தியாவில் எந்த இடத்திலும் முட்டையிடுவதாக இதுவரை அறியப்படவில்லை. மற்றவற்றில் ஆலிவ் ரெட்லி இனமே இந்தியாவிற்கு அதிகம் வருகை தருகின்றன. உலகில் மிக அதிக எண்ணிக்கையில் இவை ஒரிசா கஹீர்மாதா கரையோரப் பகுதிக்கு இனப்பெருக்கம் செய்து முட்டையிட வருகின்றன. ஆனால் 17 ஆண்டு பணியில் சதீஷ், ரெட்லி இன ஆமைகள் பற்றிய ஆய்வுகளில் அதிகம் ஈடுபடவில்லை.

இந்தியாவில் ரெட்லி ஆமைகள் பற்றி பலர் ஆய்வு செய்கின்றனர். ஆனால் மற்ற இனங்கள் பற்றி இவரைத் தவிர வேறு எவரும் அப்போது அதிக கவனம் செலுத்தவில்லை. இதற்குக் காரணம் மற்ற இனங்கள் ஆள் அரவம் இல்லாத தொலைதூரத் தீவுகளுக்கே வருகின்றன. அந்த இடங்களே இவரின் செயல் தளமாக இருந்தது. இந்தியக் கடற்கரையில் க்ரீன் கடல் ஆமைகள் முட்டையிடுவதை 1982ல் லக் ஷதீவு சுஹேலி தீவில் முதலில் ஆராய்ந்தவர் இவரே.

தோல் முதுகு ஆமைகள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு வருவதை இவரே முதலில் கண்டுபிடித்தார். 1978ல் இந்த இன ஆமைகள் இப்பகுதி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வருவதைக் கண்டறிந்து கூறினார். 1991-1995 காலத்தில் அந்தமானில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுத்ரீக் தீவில் பல மாதங்கள் தொடர்ந்து தங்கி இருந்து கடல் ஆமைகளின் இனப்பெருக்க முறைகளைக் கண்டறிந்தார்.

பிற்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடிய ஆய்வுகளுக்கு இதன் மூலம் அவர் அடிப்படை அமைத்துக் கொடுத்தார். சென்னை பாம்புப் பண்ணையே 1990களில் இவருடைய ஆய்வுப் பணிகளுக்கு நிதி வழங்கியது. காலப்போக்கில் நிதி குறைந்ததால் 1995ல் சதீஷ் தன் ஆய்வுகளை இடையிலேயே கைவிட வேண்டி வந்தது. கடல் ஆமைகள் ஆராய்ச்சிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், அதே ஆண்டு குடும்பத்துடன் கோவா சென்று வாழ ஆரம்பித்தார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்

தொழிற்ரீதியாக இவர் உயிரியல் படிக்கவில்லை, பட்டப்படிப்பும் இல்லை. ஒரு அமெச்சூர் ஆய்வாளராகவே வாழ்ந்தார். ஆனால் 1979 நவம்பரில் கடல் ஆமைகளின் பாதுகாப்பு குறித்து வாஷிங்டன் டி.சி.யில் முதல் சர்வதேச மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட இருவரில் ஒருவர் சதீஷ். கடல் ஆமைகள் பற்றிய ஆய்வுகளின் அங்கீகாரமாக 1984ல் ரோலக்ஸ் விருதுடன் ஒரு கைக்கடிகாரமும் பரிசாக இவருக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச கடல் ஆமைகள் சங்கத்தின் (International Sea Turtle Society - ISTW) 30வது ஆண்டு மாநாடு 2010 ஏப்ரலில் கோவாவில் நடந்தபோது அந்த அமைப்பால் அந்த ஆண்டிற்கான ISTW சாம்பியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இன அழிவில் இருந்து ஒரு உயிரினத்தைக் கைப்பிடித்து உயர்த்துவதற்கு, ஒரு மனிதர் அந்த உயிரினத்துடன் அதன் சூழல் மண்டலத்துடன் கொண்ட அர்ப்பணிப்பும் ஆர்வமும் எவ்வாறு உதவும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சதீஷ் பாஸ்கர் என்ற மகத்தான இந்த சூழல் போராளி!

** ** **

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/features/life-story-of-sea-turtle-conservator-satish-bhasker-by-joseph-antony-1.8416327

https://www.seaturtlesofindia.org/satish-bhaskar/

https://en.m.wikipedia.org/wiki/Sea_turtle

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

ஆதிவாசி மக்களுக்காக விறகொடித்துக் கொடுக்கும் யானைகள்; தண்ணீர் தேடி அலைபவர்களுக்கு மண்ணுக்கு அடியில் நீர் இருப்பதைக் காட்டி உதவும் யானைகள்; ஒற்றைப்பட்டுப் போகும் குட்டி யானைகளுக்கு வயிறு நிறைய பால் கொடுக்கும் ஆதிவாசிப் பெண்கள்; கென்யாவில் சாம்புரு (Samburu) வனப்பகுதியில் ஆதிவாசி மக்களுக்கும், யானைகளுக்கும் இடையில் காலம்காலமாக இருந்து வரும் ஆத்மார்த்தமான சொந்தத்தின் கதை இது.

சாகசப் பயணி கிறிஸ்டின் அமுலிவார்

ஆப்பிரிக்க கண்டத்தில் பயணம் செய்த பிரெஞ்சு சாகசப் பெண் பயணி கிறிஸ்டின் அமுலிவார், தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களை வெளியுலகிற்கு எடுத்துச் சொன்னபோதுதான் இதைப் பற்றி உலகம் தெரிந்து கொண்டது. பெண்கள் முன்னேற்றத்திற்காக, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹெர்ப்ளானெட் எர்த் (Herplanet Earth) என்னும் தொண்டு அமைப்பை கிறிஸ்டின் தலைமையேற்று நடத்தி வருகிறார். வீரசாகசங்களின் பெண் உருவம் என்று இவர் அழைக்கப்படுகிறார்.

இவர் தலைமையேற்று நடத்திய பெண்களின் பயணக் கதைகள் புதிய சரித்திரம் படைத்தன. ஆர்க்டிக்கிலும், அண்டார்டிக்கிலும் உறைய வைக்கும் கொடும் குளிர்காற்றையும், ஜோர்டான் பாலைவனத்தில் வெப்பக் காற்றையும், அது உருவாக்கும் புகைப்படலத்தையும் சமாளித்து பெண்கள் பயணம் செய்தனர். இவருடைய பயண அனுபவங்களை வன அறிவு (Wild wisdom) என்ற பெயரில் பெங்குயின் புத்தக நிறுவனம் நூலாக வெளியிட்டபோது, அதுவரை உலகம் அறியாத பல நெகிழ வைக்கும் வனக்காட்சிகள், வியப்பூட்டும் அனுபவங்களை உலக மக்கள் அறிந்து கொண்டனர்.herplanet tribe womanஆத்மார்த்தமான சொந்தம்

கென்யாவில் சாம்புரு ஆதிவாசிகள் இயற்கையுடன் இணைந்து வாழ்கின்றனர். சிறிது கூர்மையாக்கி செவிமடுத்தால் காட்டு யானைகளின் இதயத் துடிப்பைக்கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆதிவாசி மக்களின் மனது யானைகளுக்கும் தெரியும். காட்டில் விறகு சேகரிக்க ஆதிவாசிப் பெண்கள் செல்லும்போது அவர்களுக்காக யானைகள் மரங்களில் இருக்கும் காய்ந்துபோன குச்சிகளையும் கிளைகளையும் ஒடித்து தரையில் போட்டிருக்கும். அதை கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து செல்கிறார்கள் ஆதிவாசிப் பெண்கள். இதைப் பார்க்கும் எவருக்கும் ஆச்சரியம் ஏற்படும்!

தண்ணீர் தேடி

பாலைவனம் போன்ற பகுதிகளில் ஒரு துளி நீருக்காக மனிதர்களும் வன விலங்குகளும் அலைந்து திரிவது வாடிக்கையான ஒண்று. மனிதனைப் போல தங்களுக்கும் ஆறாவது அறிவு இருப்பது போல அந்த சமயத்தில் யானைகள் செயல்படும். சில பிரதேசங்களில் தன்ணீர் இருக்கும் இடம் தெரியும்போது அங்கே யானைகள் கூட்டமாகக் கூடி நிற்கும்.

ஆதிவாசி மக்களுக்கு யானைகளின் மொழி நன்றாகத் தெரியும். ஒட்டகங்கள் மேல் ஏறி ஆயுதங்களுடன் அங்கு சென்று குழி தோண்டிப் பார்ப்பார்கள். அதிசயம்! யானைகள் காட்டித் தந்த இடத்தில் நீர் இருக்கும். ஆதிவாசி மக்களுக்கு நீர் விலைமதிப்பு மிக்கது.

இரவும் பகலும் வனப் பயணம்

2019ல் கிறிஸ்டினின் கென்யப் பயணம் நடந்தது. பகலில் வனக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டு நடப்பார்கள். காட்டில் பயணம் செய்யும்போது பயன்படும் தனிச்சிறப்புமிக்க கூடாரங்களில் இரவு தங்குவார்கள். கூடாரம் கட்டத் தேவையான பொருட்கள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சுமந்து கொண்டு பெண்கள் குழுவுடன் ஒட்டகங்கள் பயணம் செய்யும். பகல் முழுவதும் கடுமையான வெப்பமும், இரவில் நடுங்க வைக்கும் குளிரும் நிலவும் காலநிலை. வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஆதிவாசிகள் குழுவினருடன் செல்வர்.

பதவியைப் பொறுத்து ஆதிவாசி மக்கள் மாலைகளையும் ஆபரணங்களையும் கழுத்தில் அணிந்து கொள்கின்றனர். காலநிலை மாற்றத்தினால் ஆப்பிரிக்காவில் நில அமைப்பில் பல மோசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆதிவாசி மக்களின் நலனுக்காக இவரது குழு நிதி சேகரித்து வழங்கியுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் குழுவினர் ஆதிவாசிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

பாடும் கிணறுகள்

நீருக்காக மக்கள் ஆழமான கிணறுகளைத் தோண்டுவர். நீர் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தால் பிறகு ஒரே ஆட்டம் பாட்டம்தான். அவர்கள் ஆனந்த நடனமாடுவர். பாட்டும் தாளமேளங்களுடன் களை கட்டும்போது தூரத்தில் இருந்து பசுக்களும் வரும். அந்தப் பாட்டுகள் அவற்றிற்கு வழக்கமானவை. தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தால் யானைகள் அந்த இடத்திற்கு துல்லியமாக வந்து நிற்கும். இதெல்லாம் இந்த வனப்பகுதியில் சாதாரணக் காட்சிகள்.

யானை பராமரிப்பு இல்லம்

சில சமயம் குட்டி யானைகள் குழியில் விழுந்துவிட்டால் அவற்றை வெளியில் எடுக்க பெற்றோர் யானைகள் முன்வருவதில்லை. ஆனால் ஆதிவாசி மக்கள் அவற்றை மீட்டு, ரெட்டேட்டி என்ற யானைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்வர். பால் கொடுத்து அவற்றைக் கவனித்துக் கொள்ள, சிறப்பு பயிற்சி பெற்ற ஆதிவாசிப் பெண்கள் அங்கு உள்ளனர்.

ஒரு துளி தண்ணீரை உதட்டில் நனைத்து வறட்சியைப் போக்கக் காத்திருந்தாலும் ஆதிவாசிகள் தண்ணீரைக் கண்டுபிடித்தால் அதை யானைகளும் மற்ற வன விலங்குகளும் அருந்த விட்டுக்கொடுப்பர். விலங்குகளிடம் அந்த அளவு கருணை மிக்க மக்கள். மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையில் இருக்கும் ஆத்மார்த்தமான சொந்த பந்தத்தை எடுத்துக்காட்டும் காட்சிகள் இவை.

அனாதைகளான குட்டி யானைகளை அபயம் கொடுத்து தாங்கள் பெற்ற குழந்தையைப் போல மக்கள் அவற்றை பராமரிக்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. குட்டி யானைகளைப் பார்த்துக் கொள்ள பெண்கள் அடங்கிய தன்னார்வலர் குழு அந்த இல்லத்தில் செயல்படுகிறது. ஆப்பிரிக்காவில் யானைகளை பராமரிக்கும் சேவையில் பெண்கள் தன்னார்வத்துடன் பணிபுரியும் முதல் யானை பராமரிப்பு மையம் இதுவே.

இன்று உலக நாடுகளில் சாகசப் பயணத்தின் அடையாளமாக கிறிஸ்டின் கருதப்படுகிறார். அவர் நடத்தும் ஹெர்ப்ளானெட் எர்த் என்ற அமைப்பு இப்போது சர்வதேசப் புகழ் பெற்றுள்ளது. 2012ல் சிங்கப்பூருக்கு வந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஆறாவது பெண் வீராங்கணை வலேரி பாபி என்ற பெண்மணியை கிறிஸ்டின் சந்தித்தபோது, அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. பிறகு கிறிஸ்டின் தன் வாழ்வை சாகசப் பயணங்களுக்காகவும், பெண்கள் நல முன்னேற்றத்திற்காகவும், வனப் பாதுகாப்பிற்காகவும் அர்ப்பணித்தார். இதன் பலன் இன்று பல உலகம் அறியாத மனித விலங்கு நல அனுபவங்களாக வெளிப்படுகின்றன.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/travel/features/kenya-s-elephants-at-home-in-the-samburu-national-reserve-samburu-tribes-1.8503015

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

ஜோர்டான், ஓமான், அரபு எமிரேட்டுகள், கத்தார், பஹரின் நாடுகளின் தேசிய விலங்கு அரேபியன் ஒரிக்ஸ் (Arabean Oryx) என்று அழைக்கப்படும் பெரிய கொம்புடைய மான் இனம். நடுத்தர அளவுடையது. 1800களுக்கு முன்பு ஆயிரக்கணக்கில் அரேபியப் பாலைவனங்களில் மேய்ந்து திரிந்து வாழ்ந்தன.

பாலைவனத்தில் ஈட்டியையும், வாளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடுவது சுலபமாக இல்லை. ஆனால் நவீன வாகனங்கள், ஆயுதங்களின் வரவுடன் 1930களில் இளவரசர்களும் எண்ணெய்க் கம்பெனிகளின் முதலாளிகளும் வாகனங்களையும், துப்பாக்கிகளையும் பயன்படுத்தி இவற்றை வேட்டையாடத் தொடங்கினர். சில நேரங்களில் வேட்டையில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

ஆபத்தாக மாறிய கொம்புகள்

அரேபிய துணைக்கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட இந்த இனம் 1970களின் ஆரம்பத்தில் அவற்றின் இயற்கை வாழிடங்களில் இன அழிவை சந்திக்கத் தொடங்கின. இவற்றின் நீண்டு வளர்ந்திருந்த கொம்புகள் வேட்டையாடுபவர்களுக்கு டிராபிகளாகக் கொண்டு செல்ல விருப்பமான பொருளாக மாறின. கொம்புகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்று அப்பகுதி நாட்டு வைத்தியத்தில் மூட நம்பிக்கை இருந்தது.arabian oryxஇவற்றை வேட்டையாடுவது சில கலாச்சாரங்களில் பதவி மற்றும் செல்வச்செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்டபோது இவை காடுகளில் இருந்து முற்றிலுமாக மறையத் தொடங்கின. சில தனியார் விலங்குக் காட்சி சாலைகள் மற்றும் காப்பகங்களில் மட்டுமே இவை உயிர் பிழைத்து வாழ்ந்தன.

மீட்பின் தொடக்கம்

எப்படியாவது இந்த உயிரினங்களை அழிவில் இருந்து மீட்க வேண்டும் என்று சர்வதேச தளத்தில் குரல்கள் உயர்ந்தன. 1962ல் அமெரிக்காவின் மிகப் பெரிய விலங்குக் காட்சி சாலையான பீனிக்ஸ் காட்சி சாலையும், சர்வதேச தாவர மற்றும் விலங்கு பாதுகாப்பிற்கான அமைப்பும் (Flora & Fauna International) இணைந்து உலக வனநிதியத்தின் (WWF) நிதியுதவியுடன் பீனிக்ஸ் காட்சி சாலையில் இவற்றின் இனவிருத்திக்கான நடவடிக்கைகளைத் தொடங்கின.

ஒன்பது விலங்குகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆபரேஷன் ஓரிக்ஸ் (Operation Oryx) திட்டம் வெற்றி பெற்றது. 240 பிரசவங்கள் நடந்தன. இங்கிருந்து விலங்குகள் மற்ற காட்சி சாலைகளுக்கும் பூங்காக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. 1968ல் அரேபியாவில் ஓமானில் இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றை அழிவில் இருந்து பாதுகாப்பதற்கென்றே அல் ஐனில் காப்பகம் உருவாக்கப்பட்டது.

காட்டுக்குத் திரும்பிய மான்கள்

1980ல் இந்த விலங்குகளை காடுகளில் சுதந்திரமாக வாழவிடும் அளவுக்கு இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. சாண்டியாகோ காட்சி சாலையில் இருந்து இவை முதலில் ஓமானில் காடுகளில் சுதந்திரமாக வாழ அனுப்பி வைக்கப்பட்டன. இப்போது பல மேற்காசிய நாடுகளிலும் இவற்றைக் காண முடியும். 2000 மான்களைக் கொண்ட இவற்றின் மிகப் பெரிய கூட்டம் சௌதி அரேபியாவில் மகாசாட் அஸ்-சையது வனப்பாதுகாப்பகத்தில் வாழ்கின்றன.

சுற்றும் வேலி கட்டி பராமரிக்கப்படும் இந்தப் பிரதேசத்தின் பரப்பு திருவனந்தபுரம் மாவட்டத்தின் பரப்பிற்கு சமமானது. 2011ல் 1500 ஓரிக்ஸ் மான்கள் அவற்றின் இயல்பான வாழிடங்களில் நிறைந்தன. மற்ற பாதுகாப்பகங்களில் 6000 மான்கள் வாழத் தொடங்கின. சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கம் (IUCN) அழிந்துவிட்ட உயிரினங்களின் பட்டியலில் இருந்து இன அழிவைs சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றிய உலகின் முதல் உயிரினம் இவையே.

மீண்டும் ஆபத்து

பிறகு ஓமான் பாதுகாக்கப்பட்ட பகுதியின் 90 சதவிகிதத்தையும் எண்ணெய்க் கம்பெனிகளுக்கு விற்றது. இதனால் அங்கு இருந்த அரேபியன் ஓரிக்ஸ் சரணாலயத்தை ஐநா தன் பாரம்பரிய பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இருந்து நீக்கியது. இங்கு 1996ல் இருந்த 450 மான்கள் வேட்டையாடல் மற்றும் உயிருடன் பிடித்தல் போன்ற விவேகமற்ற செயல்களால் 2007ல் 65 ஆகக் குறைந்தன.

பூமியில் வாழும் நான்கு ஓரிக்ஸ் இன மான்களில் அரேபியன் இனமே மிகச்சிறியது. ஓரிக்ஸ் இன மான்களில் இவை மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியில் வாழ்கின்றன. இவற்றுக்கு மணலும், காற்றும் நிறைந்த சூழலை சமாளிக்கும் ஆற்றல் உள்ளது. பளபளப்புடன் மின்னும் உடலின் மேற்பகுதி சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் கொளுத்தும் வெப்பத்தின் கொடுமையை இவை சமாளித்து வாழ்கின்றன.

பிளவுபட்ட குளம்புகள் மணலில் சுலபமாக நடக்க இவற்றிற்கு உதவுகின்றன. தண்ணீர் குடிக்காமல் நீண்ட காலம் வாழும் திறனுடைய இவை புதிய மேய்ச்சல் நிலங்கள் தேடி தொலைதூரம் வரை பயணம் செய்கின்றன. காலை மற்றும் மாலையில் சுறுசுறுப்புடன் செயல்படும் இவை பகல் நேரத்தில் கடும் கோடையைச் சமாளிக்க நிழல் இருக்கும் இடங்களில் ஓய்வெடுக்கின்றன. குளம்புகளால் மணலைத் தோண்டி குளிர்ச்சியான இடங்களைக் கண்டுபிடிக்கும் திறமையும் இவற்றிற்கு உண்டு.

தேசிய சின்னமாக வாழும் மான்

30 மான்கள் வரை கூட்டமாக வாழும் இவை சாதகமற்ற சூழ்நிலையில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வாழ்கின்றன. அப்போது ஆண் மான்கள் கூட்டத்தை விட்டு வெகுதொலைவுகளுக்கும் செல்வதுண்டு. வளைகுடா நாடுகள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தேசிய சின்னங்களில் இந்த மானின் படங்களைப் பார்க்கலாம். கத்தார் ஏர்வேஸில் உள்ள அடையாளச் சின்னம் (logo) இந்த மானே. ஓமானில் அல்-மகா விமான நிறுவனம், அல்-மகா பெட்ரோலிய நிறுவனத்தின் அடையாளச் சின்னமும் இதுவே.

ஒற்றைக் கொம்பா இல்லை இரண்டு கொம்புகளா?

பக்கவாட்டிலும் சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தும் இவற்றைப் பார்க்கும்போது இவற்றின் ஒரே அளவுடைய இரண்டு கொம்புகளும் ஒன்று போலத் தோன்றும். வேறு காரணங்களால் ஒரு கொம்பு இல்லாமல் போனால் அது மீண்டும் வளராது என்பதால் அந்த இடம் வெறுமையாக இருக்கும். ஒருவேளை இது புராணங்களில் வர்ணிக்கப்படும் குதிரையின் உடலும் ஒற்றைக் கொம்பும் உடைய யூனிகோன் என்ற விலங்காக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இவை பாலைவனத்தின் யூனிகோன் என்றும் அழைக்கப்படுகின்றன.

இன்று இவை இன அழிவைச் சந்திக்கும் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் வாழ்ந்து வருகின்றன.

மேற்கோள்கள்https://en.m.wikipedia.org/wiki/Arabian_oryx

&

https://www.mathrubhumi.com/environment/columns/all-things-you-need-to-know-about-arabian-oryx-ecostory-1.8367510

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It