கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: புவி அறிவியல்
நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக, அற்புதமாக மூடி வைத்திருக்கிறது. அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை, நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து, பறந்து, பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது. இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது; இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன், ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %; கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %., ஹீலியம் 0.000524 %; மீத்தேன் .0000179 %; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv (0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது.

ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும். இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது. இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம்.
பொதுவாக பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது. ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது.
இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere). இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும். ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன.
அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000 டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான். சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது. இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது. ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.
ஓசோன் (Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு. இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவானபோது ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1,500,000,௦௦௦000 ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன. உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன்)பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால், மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.
ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும். அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும்.
வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட. ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன். இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism) மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது. இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது.
ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு 10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன. 1980களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில் (Spring season) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது. ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும் (Chloroflurocarbons) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.
அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985ல் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின்போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது. ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4% என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள், சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன.
உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16. அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர். 1987ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று Pக்களை முன் வைக்கின்றனர்.
1. Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.
2. People மக்கள்: அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.
3. Prosperity வளங்கள்: ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கும் பாதிப்பு உண்டு பண்ணும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.
மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
2. ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால் போதுமானது.
3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.
6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.
7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும்.
8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.
9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.
10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.
11. குளிர் சாதன அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.
12. சிற்றுந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.
13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.
14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.
15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும்.
16. சிற்றுந்து, கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.
18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.
19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.
20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும்.
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வன்னிப்பிரதேச குடித்தொகை வளர்ச்சியும் குடித்தொகைப் பண்புகளும். 1871 - 1981
இலங்கையின் வன்னிப்பிரதேசம் 7859.3 சதுரக் கிலோமீற்றர் (2924 சதுரமைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப்பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்ற போதிலும் இக்கட்டுரை மேற்படி பிரதேசத்தையே வன்னிப் பிரதேசமெனக் கொள்கிறது. இது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 11 வீதத்தையும் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாக வசதிக்காக பதினைந்து உதவி அரசாங்கஅதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், கிளிநொச்சியில் மூன்றுமாக அமைந்துள்ளது.
குடித்தொகை வளர்ச்சி 1871 முதல் 1981 வரை
இலங்கையின் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட நாடு முழுவதற்குமான குடித்தொகைக் கணிப்பு 1871-இல் இடம்பெற்றது. இதன்பின் 1881, 1891, 1901, 1911, 1921, 1931, 1946, 1953, 1963, 1971, 1981 ஆகிய ஆண்டுகளில் குடித்தொகைக் கணிப்புகள் இடம்பெற்றன. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறவேண்டிய இக்கணிப்புகள் 1941இல் தடைப்பட்டமைக்கு இரண்டாம் உலக மகாயுத்த நெருக்கடி காரணமாக அமைந்தது. எனினும் இக்கணிப்பீடு 1946இல் இடம்பெற்றது. 1951இல் இடம்பெறவேண்டிய கணிப்பு 1953இல் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1963இல் அடுத்த கணிப்பு இடம்பெற்றது. இதன்பின் இலங்கை தமது வழக்கமான கணிப்பாண்டிற்கு 1971இல் திரும்பியுள்ளது. 1991, 2001 இல் இடம்பெற வேண்டிய குடித்தொகைக் கணிப்பு வன்னிப் பிரதேசத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இடம்பெறவில்லை. 2011 ஆம் ஆண்டு தேசியக் குடித்தொகைக் கணிப்பீட்டுடன் கணிப்பிடுவதற்கான ஆரம்பப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1981 முதல் மூன்று தசாப்தங்களாக யுத்த சூழ்நிலையால் உள்ளுர் குடிநகர்வுகள், வெளியூர் குடிநகர்வுகள், வெளிநாட்டு குடிப்பெயர்வுகள் என இடம்பெற்று வந்துள்ளன. இவை எவையும் கால ரீதியான முறையான கணிப்பீடுகளுக்குள் வரவில்லை. 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வன்னியின் இறுதி யுத்தத்தின் போது வன்னியின் மொத்தக் குடித்தொகையும் அகதிகளாக வெளியேறி வவுனியா முகாம்களில் முடக்கப்பட்ட நிலை தோன்றிற்று. உலக வரலாற்றில் குறுங்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முழுமையாக குடித்தொகை வெளியேற்றப்பட்ட நிகழ்வு இங்கேயே இடம்பெற்றுள்ளதெனலாம். அம் மக்கள் இப்பொழுது தான் மீளவும் குடியேறி வருகின்றனர். மீள் குடியேற்றம் முற்றுப்பெறவில்லை. 2011 பெறப்படவுள்ள உத்தியோகபூர்வ குடித்தொகை கணிப்பீட்டின் ஊடாகவே இவைபற்றி முறையாக ஆராயமுடியும். அதுவரை 1981 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடுகளையே உத்தியோக ரீதியாக பயன்படுத்தப்பட வேண்டுமாகையால் அவ் ஆண்டுவரையான தரவுகள் ஊடாகவே இவ் ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.
வன்னிப் பிரதேசத்திற்குரிய குடித்தொகை விபரங்களை 1871 தொடக்கம் 1981 வரை இலங்கைக் குடித்தொகைக் கணிப்பு அறிக்கைகளிலிருந்து பெற முடிகின்றது. தரவுகளின்படி வன்னிப்பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகை 1891 இ 46,774 ஆக இருந்து 1971இல் 2,24,735 ஆக அதிகரித்துள்ளதைக் காணலாம். இது 300 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் இலங்கையின் மொத்தக்குடித்தொகை 323 வீதமாக வளர்ச்சி கண்டது. வன்னிப் பிரதேசத்தை பாகுபடுத்தி நோக்கும்போது 1891இல் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 6916ஆக இருந்த குடித்தொகை 1981 இல் 77200 ஆக அதிகரித்துள்ளது. இது 648 வீத அதிகரிப்பாகும். இதே காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் அதிகரிப்பு 570 வீதமாகவும் மன்னார் மாவட்டத்தின் அதிகரிப்பு 203 வீதமாகவும் அமைந்துள்ளது.
குடித்தொகை மாற்றங்கள்
வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகை சில காலங்களில் குறைவாகவும் இன்றும் சில காலங்களில் அதிகமாகவும் வளர்ச்சி கண்டது. பொதுவாக 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவே இருந்தது. வன்னிப்பிரதேசத்தின் வருடச்சராசரி வளர்ச்சி வீதம் 1931 ஆம் ஆண்டுவரை 0.5 வீதத்திற்கு மேலாக அதிகரிக்கவில்லை. 1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் சில குடிமதிப்பீட்டாண்டிடைக் காலங்களில் வன்னிப் பிரதேசம் முழுவதும் குடித்தொகை இழப்பு ஏற்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இவ் இழப்பு அதிகளவு ஏற்பட்டுள்ளது. 1881 - 1901 இடையிலும் 1911 – 1921 இடையிலும் குடித்தொகை இழப்புகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
1946 ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற குடித்தொகை இழப்புகளுக்கும், குடித்தொகையின் மெதுவான அதிகரிப்பிற்கும் மலேரியா, கலரா போன்ற தொற்று நோய்கள் இப்பகுதிகளில் அக்காலங்களில் பரவியமையே காரணமாகும். அக்காலங்களில் மருத்துவ, விஞ்ஞான தொழில்நுட்ப முன்னேற்றக்குறைவினால் சிசு மரண வீதம், பிரசவத்தாய்மார் மரணவீதம் என்பன அதிகமாக காணப்பட்டன. மேலும் அன்றைய மக்கள், கல்வியறிவுக் குறைவின் காரணமாகச் சுகாதாரமற்ற வாழ்வு வாழ்ந்தனர். ஆரோக்கிய வாழ்வை வழங்கக்கூடிய சுகாதார நிறுவனங்களும் குறைவாகவே காணப்பட்டன. இக்காரணங்களால் 1946 இன் முன்பு இறப்புவீதம் அதிகமாக இருந்தது. எடுத்துக்காட்டாக 1906-1923 வரை தேசிய இறப்புவீதம் 1000 பேருக்கு 30 – 38 என்றவாறு உயர்ந்து காணப்பட்டது. 1946இல் இது 20 ஆகவும் 1947 இல்14 ஆகவும் வீழ்ச்சிகண்டது. 1946 இல் சிசு மரண வீதம் 1000 பிறப்புக்கு 141 ஆக இருந்தது. 1947 இல் 82 ஆக வீழ்ந்தது. பிரசவத்தாய்மார் மரணம் 1946 இல் 1000 பேருக்கு 16 ஆக இருந்தது. 1950 இல் 6 ஆக வீழ்ச்சி கண்டது. எனவே 1946 ஆம் ஆண்டு குடித்தொகை வளர்ச்சிப் போக்கில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
வன்னிப் பிரதேசக் குடித்தொகை 1946 – 1953 குடிமதிப்பிட்டாண்டிடைக் காலத்திலே 48.7 வீதமாக அதிகரித்துள்ளது. இது 7.0 வருடச் சராசரி வளர்ச்சி வீதமாகும். இவ்இடைக்காலத்திலே தேசிய வருடச்சராசரிக் குடித்தொகை வளர்ச்சி வீதம் 3.1 ஆக மாத்திரமே காணப்பட்டது. 1946 – 1953 இடைப்பட்ட கால குடித்தொகை வளர்ச்சியானது வன்னிப் பிரதேசம் முழுவதும் சடுதியானதோர் அதிகரிப்பபைக் காட்டுகின்றது. யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியில் 78.3 வீத அதிகரிப்பும், வவுனியா மாவட்டத்தில் 51 வீதமான வளர்ச்சியும் மன்னார் மாவட்டத்தில் 39 வீத வளர்ச்சியும் 1946 – 1953 குடிமதிப்பீட்டாண்டைக் காலத்தே ஏற்பட்டது. 1931 1946 குடிமதிப்பீட்டாண்டைக் கால வளர்ச்சி ஓரளவு அதிகமாக காணப்படுவதற்கு பத்தாண்டுக்கொருமுறை எடுக்கப்படவேண்டிய குடிமதிப்பு இக்காலத்தே பதினைந்து வருட இடைவெளியில் எடுக்கப்பட்டதே காரணமாகும்.
1946 இன் பின்னர் ஏற்பட்ட சடுதியான குடியதிகரிப்புக்கு பிறப்பு வீதம் நிலையாக இருக்க இறப்புவீதத்திலேற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். இவ் இறப்பு வீத வீழ்ச்சிக்கு 1946 இல் மலேரியா நோய்த்தடைக்காக நாடு முழுமைக்கும் டி.டி.ரி மருந்து தெளிக்கும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதே உடனடிக் காரணமாகும். இதனைத் தவிர நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்ட துரித அபிவிருத்தியும் காரணமாக அமைந்தது. இக்காலத்திலே கிராமங்கள் தோறும் சுகாhதாரவசதிகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுப்புறச் சூழ்நிலைகளைச் சுத்தமாக வைத்திருக்கச் செய்வதில் அரசு கவனம் செலுத்தியது. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால், மதிய உணவு விநயோகம் என்பன குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க துணைபுரிந்தன.
பொதுவாக இலங்கை மக்களது ஆரோக்கியம் பேணப்பட்டதற்கு உணவு மானிய முறை இக்காலத்திலே அறிமுகப்படுத்தப்பட்டமையும் முக்கிய காரணமாகும். இம் முறையினால் மக்கள் அரிசியையும் ஏனைய உணவுப்பொருட்களையும் மலிவாகப் பெறமுடிந்தது. இதனால் மக்களது உணவில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கவே ஆயுட்காலம் அதிகரித்ததோடு ஆரோக்கியமான வாழ்வால் இறப்பு வீதத்திலும் அதிகளவு வீழ்ச்சி ஏற்பட்டது. இக் காலத்திலே இலவசக்கல்விமுறை அறிமுகத்தால் கல்வியறிவு வளர்ந்தமையும், தொற்றுநோய்த்தடை மருந்துகள் பழக்கத்திற்கு வந்தமையும் இறப்புவீத வீழ்ச்சிக்குரிய மேலும் சில காரணங்களாகும். வன்னிப் பிரதேசம் குடித்தொகை 1946 இன் பின்னர் வேகமாக அதிகரித்தமைக்கு இயற்கை அதிகரிப்பு மாத்திரம் காரணமன்று, பெருமளவு இடம்பெற்ற குடிநகர்வும் முக்கிய காரணமாக அமைகின்றது. இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து 1950 ஆம் 1960 ஆம் ஆண்டுகளில் வன்னிப் பிரதேசத்தில் பழைய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைப்புச் செய்து திட்டமிட்ட குடியேற்றங்கள் பெருமளவு ஏற்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாணக் குடாநாடு அதனைச் சேர்ந்த தீவுகள் என்பவற்றிலிருந்தும் ஏனைய அண்மைய பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குடியேற்றத்திட்டங்களில் குடியேறினர். இதனாலும் குடித்தொகை அதிகரிப்பு ஏற்பட்டது. 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே வன்னிப்பிரதேசக் குடித்தொகையின் வளர்ச்சி 72.4 வீதமாக அதிகரித்திமைக்கு இதுவே முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவு குடியேற்றத் திட்டங்கள் அமைக்கப்பட்டமையால் இப்பகுதிகளின் குடிவளர்ச்சி 1953-1963 குடிமதிப்பீட்டாண்டிடைக் காலத்திலே முறையே 117.1 வீதமாகவும் 95.4 வீதமாகவும் காணப்படுகின்றது. 1963-1971 இடைப்பட்ட காலத்திலே குடியதிகரிப்பில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகின்றது. குடும்பக்கட்டுப்பாட்டுத்திட்டத்தால் இயற்கை அதிகரிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இக்காலத்திலே அதிகளவு குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப்படாமையும் இதற்கான காரணங்களெனலாம். எனினும் இவ் இடைக்காலத்திலே தேசிய குடித்தொகையின் வருடச் சராசரி வளர்ச்சி வீதம் 2.2 ஆகக் காணப்பட, வன்னிப் பிரதேசத்தின் குடித்தொகையின் வருடச்சராசரி வளர்ச்சி 4.7 ஆகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குடியடர்த்தியும் பரம்பலும்
வன்னிப் பிரதேசத்தின் 1971 ஆம் ஆண்டுக்குரிய சராசரிக்குடியடர்த்தி சதுரமைலுக்கு 77 பேராகும். இலங்கையின் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியான 508 பேருடன் யாழ்ப்பாணக்குடாநாட்டின் குடியடர்த்தியான 1513 பேருடனும் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். வன்னிப்பிரதேசத்தின் பெருமளவு பரப்பில் காடுகள் பரந்திருப்பதே இதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடித்தொகைத் தரவுகளின்படி 1891 முதல் 1946 வரையான ஜம்பத்தைந்தாண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 6 பேரே அதிகரித்திருந்தனர். 1946 முதல் 1971 வரையான இருபத்தைந்து ஆண்டு காலத்தில் சதுரமைலுக்குரிய குடியடர்த்தியில் 55 பேர் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு இயற்கையான குடியதிகரிப்பும், குடிநகர்வால் ஏற்பட்ட குடி அதிகரிப்பும் இவ் இடைக்காலத்தில் அதிகரித்தமையே காரணமாகும். 1946 இன் பின் வன்னிப் பிரதேசக்குடியடர்த்தி வேகமாக அதிகரித்துவரும் போக்கை காட்டுகின்றது. எனினும் 1971 இல் வன்னிப்பிரதேசத்தின் குடியடர்த்தி யாழ்ப்பாணக் குடாநாட்டுக் குடியடர்த்தியை விட இருபதுமடங்கு குறைவாகவும் உள்ளது. இது 1963 இல் முறையே இருபத்தைந்து மடங்கு குறைவாகவும் எட்டு மடங்கு குறைவாகவும் காணப்பட்டது.
வன்னிப்பிரதேசத்தின் புவியியல் ரீதியான குடிப்பரம்பல், பொதுவாக தொட்டம் தொட்டமாகக் குடிச்செறிவு அமைந்திருப்பதையே காட்டுகின்றது. இவை பெரும்பாலும் குளங்களை அண்டிய குடியிருப்புகளாகவே அமைந்துள்ளன. மன்னார் தீவு, கட்டுக்கரை குளத்தையண்டிய பகுதிகள், வவுனியா நகரம், கிளிநொச்சி குடியேற்றத்திட்டப்பகுதிகள், முள்ளியவளைப்பகுதி, முல்லைத்தீவு நகரம், என்பனவே குறிப்பிடத்தக்ககுடிச்செறிவு கொண்ட பகுதிகளாகும். குடிச்செறிவு குறைந்த பகுதிகள் குளங்களற்ற பகுதிகளாகவும், காடுகள் அடர்ந்த பகுதிகளாகவும், பெருமளவு பயன்படுத்தப்படாத நிலத்தையடக்கிய பகுதிகளாகவும் காணப்படுகின்றன.
1981ஆம் ஆண்டு குடித்தொகைப் பண்புகள்
1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டின்படி இங்கு ஆய்வுக்குட்பட்ட வன்னிப் பிரதேசக் குடித்தொகை 2,78,800 ஆகும். இது இலங்கையின் மொத்தக் குடித்தொகையின் 1.8 வீதமாகவும், வடமாகாணக்குடித்தொகையின் 25.7 வீதமாகவும் உள்ளது வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் யாழ்ப்பாணக்குடாநாடு 12.8 வீதத்தை உள்ளடக்கியுள்ள போதிலும் இங்கேயே அதிகளவு குடித்தொகை காணப்படுகின்றது. இதற்கு மாறாக வன்னிப் பிரதேசம் வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தை கொண்டிருந்த போதிலும் இங்கு குறைவான குடித்தொகையே உள்ளது. 1981 இல் வடமாகாணக்குடித்தொகையில் 74 வீதத்தினர் குடாநாட்டிலும் 26 வீதத்தினர் வன்னிப்பிரதேசத்திலும் காணப்பட்டனர். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பீட்டின் போது இத்தொகை முறையே 77 வீதமாகவும் 23 வீதமாகவும் காணப்பட்டது. 1901 முதல் 1953 வரை இடம்பெற்ற குடித்தொகை மதிப்புகளின் தரவுகளின்படிசராசரியாக 86 வீதத்தினர் குடாநாட்டிலும் 14 வீதத்தினர் வன்னிப் பிரதேசத்திலும் காணப்பட்டனர்.
கிராம, நகரக் குடித்தொகை
வன்னிப் பிரதேசத்தின் 1981 ஆம் ஆண்டுக்குரிய நகரக்குடித்தொகை 39427 ஆகவும், கிராமக் குடித்தொகை (பெருந்தோட்டம் உட்பட) 185308 ஆகவும் உள்ளது. இது முறையே 17.5 விதமும் 82.5 வீதமுமாகும். இலங்கையின் நகரக்குடித்தொகை வீதமான 22.4 உடன் ஒப்பிடுகையில் இது குறைவாகவே உள்ளது. இலங்கையில் மாநகரசபை, பட்டிகசபை, நகரசபை, என நகரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந் நிர்வாகப் பிரிவின் எவ்லைக்குள் வாழ்பவர்கள் நகரவாசிகளெனக் கணிக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் 89 கிராமசேவகர் பிரிவுக்குட்படும் கிராமங்களும் நான்கு நகரங்களும் உள்ளன. இவற்றுள் வவுனியா நகரசபை அந்தஸ்தையும் ஏனைய மூன்றும் பட்டின சபை அந்தஸ்தையும் பெற்றுள்ளன. நான்கு நகரங்களுள் மன்னார், முல்லைத்தீவு என்பன கரையோரமாகவும் வவுனியா, கிளிநொச்சி என்பன நடுவேயும் அமைந்துள்ளன. வன்னிப் பிரதேசத்தின் மொத்த நகரக் குடித்தொகையில் 52 வீதத்தை வவுனியா மாவட்டம் அடக்கியுள்ளது. வவுனியா பட்டினம் தனியாக 40 வீத நகரக்குடித்தொகையில் மன்னார் மாவட்டம் 28 வீதத்தையும் யாழ்ப்பாண மாவட்டம் வன்னிப்பகுதி 20 வீதத்தையும் அடக்கியுள்ளது.
குடித்தொகை கூட்டு (1981)
குடித்தொகைக் கட்டினுள் அடங்கும் வயதமைப்பு, ஆண் பெண் விகிதம், இனப்பிரிவு, மதப்பிரிவு, வேலைப்பகுப்பு என்பன பற்றிய ஆய்வுகள் சமூக, பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன.
வயதமைப்பு
வன்னிப் பிரதேசக் குடித்தொகையில் வயதமைப்பை நோக்கும் போது இளம்வயதுப் பிரிவினர் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய அம்சமாகக் கொள்ளலாம். 1981 ஆம் ஆண்டுக் குடிக்கணிப்பின்படி இங்கு 42.5 வீதத்தினர் 14 வயதிற்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். 52.7 வீதத்தினர் தொழில் புரியக்கூடிய 15 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டோராவர். மகப்பேற்று வளம்மிக்க 15 – 44 வயதுப் பிரிவினர் 43 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். 60 வயதிற்கு மேற்பட்டோர் 4.8 வீதத்தினராக உள்ளனர். 15 வயதிற்கு குறைந்தவர்களும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சார்ந்திருப்போர் தொகையில் அடங்குவர். தொழில்புரியும் ஒவ்வொரு 100 பேரில் இங்கு 90 பேர் தங்கி வாழ்கின்றார்கள். நாடு முழுவதற்குமான தரவின்படி 100 பேரில் தங்கிவாழ்வோர் 84 பேராகும். தங்கிவாழும் இப்பிரிவினர் பெருமளவு செலவினங்களை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். இலங்கையிலும் ஏனைய வளர்முக நாடுகளிலும் குடித்தொகையில் 40-50 வீதத்தினர் 15 வயதிற்குக் குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் இவ் வயதுப் பிரிவினர் 20 33 வீதத்தினராகவே உள்ளனர்.
இலங்கையிலன் குடித்தொகையில் இளம்வயதுப் பிரிவினர் அதிகம் காணப்படுவதினால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, கல்வி, சுகாதார வசதிகள் என்பவற்றிற்காக அரசுக்குப் பெருமளவு செலவினம் ஏற்படுகின்றது. இது இலங்கை எதிர்நோக்கும் பாரிய பொருளாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவமானதொரு காரணமாகவும் அமைகிறது. 1981 ஆம் ஆண்டு இலங்கையின் குடித்தொகையில் 39.3 வீதத்தினர் 15 வயதிற்குட்பட்டவர்களாக காணப்பட்டனர். பொதுவாக வன்னிப் பிரதேசக் குடித்தொகையிலும் இவ் வீதம் தேசிய வீதத்திலும் சற்று அதிகமாக காணப்படுகின்றது.
ஆண், பெண் விகிதம்
குடித்தொகையில் ஆண்,பெண் பாகுபாடு பற்றிய ஆய்வும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலுக்கு இவ்விபரங்கள் அவசியம் வேண்டப்படுகின்றன. ஆண், பெண் வயதமைப்பும், விகிதாசாரமும் குடித்தொகை வளர்ச்சிக்கான காரணத்தைத் தேடுவோர்க்கு முக்கியமானதாகும்.
வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில்(1981) 1,23,594 ஆண்களும் 1,01,141 பெண்களும் காணப்படுகின்றனர். இதிலிருந்து 22,453 ஆண்கள் பெண்களைவிடக் கூடதலாக இங்கு உள்ளதை அவதானிக்கலாம். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 122 ஆண்கள் என்ற விகிதத்தில் பால் விகிதம் இங்கு அமைந்துள்ளது. இலங்கைக்குரிய அவ் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் என்றவாறு அமைகின்றது. எனவே தேசிய விகிதத்திலும் இங்கு அதிகமாக காணப்படுகின்றது.
குடித்தொகைத் தரவின்படி யாழ்ப்பாண மாவட்ட வன்னிப்பகுதியிலேயே ஆண், பெண் விகிதம் ஆண் சார்பாக அதிகமாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தை வவுனியா மாவட்டம் வகிக்கின்றது. இப்பகுதிகளில் அண்மைக்காலங்களில் அதிகளவு விவசாயக் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் அதிகளவு ஆண்கள் குடிநகர்ந்து வந்தமையே இதற்கு முக்கிய காரணமெனலாம். காடுகளால் சூழப்பட்ட குடியேற்றத்திட்டப்பகுதிகளில் பாதுகாப்பு உறுதியிருப்பதாலும், கல்வி வசதி, சுகாதாரவசதி, போக்குவரத்துவசதி என்பன குறைவாக இருப்பதாலும் குடும்பத்தலைவன் தனது மனைவி பிள்ளைகளை பிறந்த ஊரில் விட்டு வருவதையே விரும்புகின்றான். இதுவே குடியேற்றத்திட்டப் பகுதிகளில் ஆண்கள் குடித்தெகை அதிகமாக இருப்பதற்குரிய முக்கிய காரணமாகும்.
குடியேற்றத்திட்டத்திற்கு மாத்திரமன்றி வர்த்தகம், போக்குவரத்துப் போன்ற தொழிற்றுறைக்காகவும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக்காகவும் ஆண்கள் குடிநகர்வு இங்கு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனைச் சேர்ந்த தீவுப்பகுதிகளிலுமிருந்தே அதிகளவு குடிநகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1981 ஆம் ஆண்டுக் குடித்தொகை மதிப்பு அறிக்கை தரும் பிறந்த இடம் பற்றிய தரவுகளிலிருந்து வவுனியா மாவட்ட குடித்தொகையில் 58 வீதத்தினரும் மன்னார் மாவட்டக் குடித்தெகையில் 71 வீதத்தினரும் அம் மாவட்டங்களுக்கு வெளியே பிறந்தவர்களாகவே உள்ளனர். எனவே வன்னிப் பிரதேசக் குடித்தொகை வளர்ச்சியில் குடிநகர்வு முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகை ஆண் சார்பாக இருப்பதற்கு குடிநகர்வு மாத்திரம் காரணமன்று. பிறப்பில் ஆண்களின் பிறப்பு அதிகமாக இருப்பதும், இறப்பு விகிதத்தில் பெண்களின் பங்கு அதிகமாக இருப்பதும் மேலதிக காரணங்களெனத் தேசிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இனம்
இலங்கை பல இன மக்கள் வாழும் நாடென்பதை வன்னிப்பிரதேசத்திலும் பிரதிபலிக்கின்றது. எனினும் இங்கு சில இனத்தவர்களே செறிந்து வாழ்கின்றனர். இலங்கையில் வாழ்கின்ற ஒவ்வொரு இனத்திற்கும் வித்தியாசமான வரலாற்று, சமூக மதப் பின்னனிகள் உண்டு. 1911 ஆம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டிலிருந்தே தற்பொழுது குறிக்கப்படும் இனப்பிரிவுகளின் அடிப்படையில் தரவுகள் பெறப்பட்டு வருகின்றன. மொழி, மத புவியியற் பின்னணிகள் இனப்பாகுபாட்டில் முக்கியத்துவம் வகிக்கின்றது.
வன்னிப் பிரதேசம் அதிகளவில் தமிழர் வாழும் பகுதியாகும். தமிழர்களுக்கு வன்னி நிலத்துடன் ஒன்றிய நீண்ட வரலாற்றுப் பின்னணி உள்ளதால் இப்பிரதேசம் தமிழரது பாரம்பரியத் தாயகத்தின் ஒரு பகுதியெனக் கொள்ளப்படுபகின்றது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் 62.2 வீதமானவர்கள் இலங்கைத்தமிழர்களாவர். இவ் வீதம் யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் 79.8 ஆகவும் வவுனியா மாவட்டத்தில் 51 ஆகவும் உள்ளது. வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் இந்தியத் தமிழர் 16.1 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். மலையகப்பெருந்தோட்டங்களுக்குக் கூலித்தொழிலாளர்களாகப் பிரித்தானியரால் தென்னிந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே இவர்களாகும்.
இன்று பெருந்தோட்டத்தில் நிலவும் வேலையில்லாப் பிரச்சனை இனப்பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வன்னிப்பிரதேசத்திற்குக் குடிநகர்ந்து வந்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இவர்கள் வாழ்கின்றனர். இண்மைக்காலங்களில் இவ்வாறு குடிநகர்ந்து வருவோர் தொகை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியச் சோனகர் வன்னிப் பிரதேச மொத்தக்குடித்தொகையில் 12.5 வீதத்தினராவர். இவர்கள் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரிலும், அண்மைய பல கிராமங்களிலும் செறிந்து வாழ்கின்றனர். மன்னார் மாவட்ட மொத்தக் குடித்தொகையில் இவர்களின் பங்கு 26.8 வீதமாகும். மன்னார் வர்த்தகத்துறைமுகமாக விளங்கிய காரணத்தால் இவர்களது குடியிருப்புகள் இங்கு அதிகம் ஏற்பட்டன.
வன்னிப் பிரதேச இனம், வன்னிப்பிரதேசக் குடித்தொகையில் தமிழ் பேசும் மக்கள் 90.9 வீதத்தினராவர். இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர், இலங்கைச்சோனகர், இந்தியச்சோனகர், ஆகியோர் தமிழ் மொழி பேசும் மக்களாகும்.வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவைத்தவிர ஏனைய பகுதிகளில் தமிழ்மொழி பேசும் மக்களே பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் சிங்கள மொழி பேசும் மக்கள் மொத்தக் குடித்தொகையில் 9 வீதத்தினராகும். வவுனியா மாவட்டத்தில் மொத்தக்குடித்தொகையில் இவர்களது பங்கு 16.3 வீதமாகவுள்ளது. மன்னார் மாவட்டத்தின் குடித்தொகையில் 4.6 வீதத்தினர் சிங்கள மக்களாவர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம், மடுறோட் ஆகிய பகுதிகளில் இவர்களது பரம்பல் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தில் மாமடுவ, மடுக்கந்தை. ஈரப்பெரியகுளம், உலுக்குளம், ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் சிங்கள மக்கள் செறிவாக வாழும் பகுதிகளாகும். 1963 ஆம் ஆண்டுக் குடித்தொகை கணிப்பீட்டை ஒப்பிட்டு நோக்கும் போது வன்னிப் பிரதேசத்தில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் மொத்தக் குடித்தொகையில் சிங்களமக்களின் வீதம் அதிகரித்துள்ளதைக் காணலாம்.
மதம்
வன்னிப் பிரதேசம் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பழரதேசமாக இருப்பதால் தமிழரது முக்கிய மதமான இந்துமதத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இந்துக்கள் 58.2 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். யாழ்ப்பாண மாவட்ட வன்னிப் பகுதியில் இந்துக்கள் 87.4 வீதத்தினராகவும், வவுனியா மாவட்டத்தில் 65.4 வீதத்தினராகவும் உள்ளனர். தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளுள் மன்னார் மாவட்டத்திலேயே இந்துமதத்தினர் குறைவாகக் (30 வீதம்) காணப்படுகின்றனர். மன்னார் சர்வதேச வர்த்தகத்துறையாக விளங்கியதும், போர்த்துக்கேயரது கெல்வாக்கின்கீழ் இது நீண்ட காலமாக இருந்து வந்ததும் இங்கு முஸ்லீம், றோமன்கத்தோலிக்க மதங்கள் அதிகளவு பரவ ஏதுவாயிற்று.
மன்னார் மாவட்டத்தின் மொத்தக்குடித்தொகையில் 37.8 வீதத்தினர் றோமன்கத்தோலிக்கர்களாகக் காணப்படுவதற்கு போர்த்துக்கேயரது செல்வாக்கே காரணமாகும். இவர்கள் மன்னார் தீவுப்பகுதி, முசலிப்பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர். வன்னிப் பிரதேசத்தில் மொத்தக் குடித்தொகையில் றோமன்கத்தோலிக்கரும், ஏனைய கிறீஸ்தவர்களும் 20.6 வீதத்தினராக உள்ளனர். வவுனியாவின் மொத்தக் குடித்தொகையில் 12 வீதத்தினராகவுள்ள றோமன்கத்தோலிக்கர்கள் மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாக மீன்பிடிக் குடியிருப்புகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் பெரும்பான்மையினராக உள்ளனர்.
இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் இந்திய, இலங்கைச்சோனகர்களும் மலாயர்களும் முஸ்லீம்களென அழைக்கப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக் குடித்தொகையில் இவர்கள் 13.2 வீதத்தினராவர். முஸ்லீம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் ஒன்றாக மன்னார் மாவட்டமும் கொள்ளப்படுகின்றது. ஒரு மதப்பிரிவினர் தனிப்பெரும்பான்மையினராக இல்லாதமை முக்கி பண்பாகும்.
சிங்களம் பேசும் மக்களிற் பெரும்பான்மையானோர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களாவர். வன்னிப் பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் பௌத்த மதத்தைச் சேர்ந்தோர் 7.9 வீதத்தினராகக் காணப்படுகின்றனர். வன்னிப் பிரதேசத்தில் வவுனியா மாவட்டமே அதிகளவு (14.8 வீதம்)பௌத்தர்களைக் கொண்டுள்ளது. வவுனியா தெற்கு சிங்கள உ.அ.அ பிரிவே பௌத்த மதத்தினரை அதிகளவிற் கொண்ட பகுதியாகும். வன்னிப்பிரதேசத்தின் நகரப்பகுதிகளில் இவர்கள் ஓரளவு செறிந்துள்ளனர். ஏனைய பகுதிகளில் ஆங்காங்கே பரந்து காணப்படுகின்றனர்.
வேலைவாய்ப்பு
வன்னிப் பிரதேச மொத்தக் குடித்தொகையில் 32.1 விதத்தினரே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். தொழில்வாய்ப்பு பெற்றவர்களில் ஆண்களின் பங்கு 93.3 வீதமாகவும் பெண்களின் பங்கு 6.7 வீதமாகவும் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புப் பெற்றவர்களில் 65 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டவர்களாகவும் 35 வீதத்தினர் விவசாயமல்லாத பிற துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் முக்கிய தொழிற்றுறை விவசாயமாக இருந்த பொழுதிலும் மொத்தக்குடித்தொகையில் 20.2 வீதத்தினரே விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயத்தில் ஈடுபட்டிருப்போரில் ஆண்களின் பங்கு 94 வீதமாக உள்ளது. ஆண் உழைப்பாளர்களில் தங்கிவாழ்வோர் தொகை அதிகமாக இருப்பதை இவை உணர்த்துகின்றன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆகியோர் உழைப்பவர்களில் தங்கிவாழ்வோராகக் காணப்படுகின்றனர். இப்பிரதேசத்தின் மொத்தக்குடித்தொகையில் 45 வீதத்தினராகக் காணப்படும் பெண்கள் வீட்டு வேலைகளுடனும் பகுதி நேர வேலைகளுடனும் திருப்தியடைவதால் குறைந்தளவே தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மொத்தப் பெண் குடித்தொகையில் 4.6 வீதத்தினரே தொழில்வாய்ப்பை பெற்றவர்களாவர். இதில் 57.3 வீதத்தினர் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருக்க 42.7 வீதமானோர் விவசாயமல்லாத தொழில்களில் அமர்ந்துள்ளனர்.
முடிவுரை
வன்னிப் பிரதேசக் குடித்தொகைக் கணிப்புகள் உத்தியோக பூர்வமாக 1981 இன் பின்னர் இடம்பெறவில்லை. வன்னியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய யுத்த சூழ்நிலைகளே இதற்கான காரணமாகும். இலங்கை அரசு இப் பிரதேசத்தில் தனது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்திருந்தது. மக்களிற்கான வாழ்வாதார விடயங்களைக் கவனிப்பதற்கான சில கணிப்பீடுகள் இடம்பெற்றன. எடுத்துக்காட்டாக உணவு விநியோகம், மருத்துவ சேவை போன்றவற்றை மேற்கொள்ள சில கணிப்பீடுகளை செய்து வந்துள்ளது. தேசிய மட்டத்தில் 1991, 2001 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட குடித்தொகைக் கணிப்பீடு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவில்லை. 1981 ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்புகளில் இருந்தே வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான உத்தேச மதிப்பீடுகள் பெறப்பட்டு நிர்வாகத் தேவைக்காககப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
வன்னி யுத்தத்தின் இறுதிக் காலகட்டமான 2009 மே மாதம் வன்னி மக்கள் யாவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதிக்கு ஒதுக்கப்பட்டனர். 2009 மே 18 இன் பின் இவர்கள் அனைவரும் வவுனியா இடைத்தங்கல் முகாம்களின் இடம்பெயர்ந்த அகதிகளாக தங்கவைக்கப்பட்டனர். அகதி முகாம்களில் எடுக்கப்பட்ட கணிப்பீட்டின் படி அங்கு 3,17,000 மக்கள் பதிவு செய்யப்பட்டனர்.
வன்னியின் உக்கிர யுத்தம் நடந்த காலமாகிய 2009 மார்ச், ஏப்ரல் மாதங்களில் இங்கு 4,20,000 மக்கள் காணப்பட்டதாக கிளிநொச்சி முல்லைத்தீவு அரசஅதிபர்களும், ஜ.நா நிறுவனத்தின் அறிக்கைகளும் குறிப்பிட்டதோடு இக் கணிப்பீடுகளையே மக்களுக்கான நிவாரணக் கொடுப்பனவுக்கும் பயன்படுத்தினர்.
வன்னி யுத்தம் முடிவடைந்து இரு வருடங்களாகியும் மீள் குடியேற்றம் முறையாக இடம்பெறவில்லை. பெருந்தொகையான மக்களது வீடுகள், பயன்தரு மரங்கள் போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்ட நிலையில் மீள் குடியேற்றம் மெதுவாகவே இடம்பெற்று வருகின்றது. மீள் குடியேற்றம் முறையாக இடம்பெற்று முற்றுப் பெற்ற பின்னரே 2011 ஆம் ஆண்டுக்கான தேசிய குடித்தொகைக் கணிப்பீடுகள் இடம்பெற வேண்டும். இக் கணிப்பீடுகளில் இருந்தே வன்னிக் குடித்தொகையில் 1981 ஆம் ஆண்டின் பின் 30 வருட காலம் நிகழ்ந்த பாரிய மாற்றங்கள், குறிப்பாக குடிமனை அழிவுகள், குடிநகர்வுகள் போன்ற அம்சங்கள் தெரியவரும்.
- விவரங்கள்
- பேரா.வி.முருகன்
- பிரிவு: புவி அறிவியல்
இன்று தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளி மாணவர்களின் கனவும் ஒன்றுதான். எப்படியாயினும் ஒரு பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பட்டம் ஒன்று வாங்குவதுதான். எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், கணினி, சிவில், மெக்கானிகல் என்று பலவிதமான பொறியியல் பாடங்கள் உள்ளன. இப்போது உலக அளவில் ஒரு புதிய பொறியியல் உருவாகிக் கொண்டுள்ளது. இதற்குப் பெயர் புவிப்பொறியியல். ஆங்கிலத்தில் ஜியோ என்ஜினீயரிங் என்று சொல்கிறார்கள். இது இன்னமும் பாடத்திட்டமாக வரும் அளவிற்கு வளர்ச்சி பெறவில்லை.
புவிப்பொறியியல் என்றால் என்ன? பொறியியல் என்றாலே இயற்கையிலேயே பல மாற்றங்களை உருவாக்கி நமக்கு சாதகமாக இயற்கையைப் பயன்படுத்தும் திறன் என்றுதான் பொருள். உதாரணமாக, ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும் நீரை ஓடவிடாமல் தடுத்து தேக்கி வைப்பது, அப்படி தேக்கிய நீரைக் கொண்டு நமக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வது. அப்படிப் பார்த்தால், புவிப்பொறியியலில் என்ன செய்யப் போகிறார்கள்? இயற்கையின் எந்தப் பகுதியை எப்படி மாற்றப் போகிறார்கள்? அதனால் நாம் அடையப்போகும் பயன் என்ன? புவிப்பொறியியல் உலகின் வானிலையே மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு மாற்றியமைத்து, நமது தேவைக்கேற்ப புதிய வானிலையை உருவாக்குவது. இது எதற்காக? மனிதர்களால் கட்டுப்பாடற்ற முறையில் தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவால் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவ்வாறு பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பது மனித குலம் உட்பட அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ முடியாத ஒரு சூழ்நிலையை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டுள்ளது.
பூமியின் இந்த வெப்பமடைதலை எப்படியேனும் குறைக்க வேண்டும். அதுவும் குறிப்பாக, கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு பதிலாக வெப்பநிலை உயர்வை மட்டும் எப்படி குறைப்பது என்பதுதான் நோக்கம், சூரியனில் இருந்து பூமிக்கு வந்தடையும் ஒளியை எப்படி குறைப்பது அல்லது மனிதர்களால் கட்டுப்பாடில்லாமல் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எப்படி எடுப்பது. இந்த வழிக்கான முயற்சிதான் புவிப்பொறியியல் என்பது,தொழிற்புரட்சி ஏற்பட்ட காலங்களில் இருந்து நமது பூமியில் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு அல்ல. இதற்கு முக்கிய காரணம் வரம்பு முறையின்றி அதிகளவில் பெட்ரோலிய எரிபொருள்களை மனிதர்கள் எரிப்பதுதான் தொழிற்சாலைகள் இயங்க எரிபொருள்கள் தேவை, வாகனங்களுக்கும் பெட்ரோலிய எரிபொருட்கள் தேவை. மின்சாரம் உற்பத்தி செய்ய அவை தேவை. இப்படி நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். சொல்லப்போனால் ஒரு நாட்டின் வளர்ச்சியே பெட்ரோலியப் பொருள்களை நம்பித்தான் உள்ளது. பெட்ரோலிய எரி பொருள்களை எரிக்கும் போது, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுகிறது. இப்படி வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு தான் இன்று நமக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.
கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்களால் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் பெரும் பகுதி பூமியின் வளி மண்டலத்திலேயே தங்கிவிட்டன. தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன் வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவு 180 பி.பி.எம், (இந்த எண் என்னவென்று புரியாவிட்டால் பரவாயில்லை, பிபிஎம் என்பது PRTS PAR MILLION என்பது. அதாவது வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுக்களையும் எடுத்துக் கொண்டு அதை 10 லட்சம்பங்குகளாய் பிரித்தால் அதில் 180 பங்கு கார்பன் என்பது இந்த எண்ணில் பொருள், இன்று இந்த வாயுவின் அளவு 380 பிபிஎம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இன்னமும் தொடர்ந்து அதிகரிக்கும் 300 பிபிஎம் க்கு மேலிருந்தால் பூமியின் இன்றிடுக்கு சுற்றுபுறச் சூழல்கள் பெரிதும் மாறிவிடும் நிலை ஏற்படும். கடந்த 65,000 ஆண்டுகளாக பூமியின் வளிமண்டலத்தில் இந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகளின் அளவு எப்போதும் இருந்ததில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. பூமியின் வெப்பநிலை இதனால் அதிகரித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து பூமியின் வெப்பநிலை ஏறிக்கொண்டே போனால் பூமியின் உயிரினங்கள் வாழ்வதே கேள்விக்குறியாகிவிடும்.
இதற்கு என்ன செய்ய வேண்டும்? கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை குறைப்பதுதான் தீர்வு. ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. தீர்வு என்னவென்று தெரிந்தபிறகு அதைச் செய்வதில் என்னச் சிக்கல்? இரண்டு வழிகளில் கார்பன் வாயு வெளியிடப்படுவதைக் குறைக்கலாம். முதல்வழி தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இரண்டாவது வழி புதிய தொழில் நுட்பத்தை உபயோகித்து வெளியிடப்படும் கார்பனின் அளவை குறைக்க வேண்டும்.
முதல் வழியைப் பின்பற்றினால் ஒரு நாட்டின் வளர்ச்சியே குறைந்து விடும். இரண்டாவது வழி அதிகமாக செலவாகும் வழி யார் இந்த செலவை ஏற்றுக்கொள்வது? தொழில்வளர்ச்சியின் பயன்களை நுகர்வோர் என்ற முறையில் பொதுமக்கள் மீது ஏற்றிவிட்டால் பொதுமக்களின் கோபத்தையும், அதிருப்தியையும் ஒரு அரசு சம்பாதிக்க நேரிடும். மாறாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்களான பன்னாட்டு முதலாளிகள் இந்த செலவை ஏற்றுக்கொண்டால் அவர்களின் லாபம் பெருமளவு குறைந்துவிடும். இந்த இரண்டிற்கும் வளர்ந்த நாடுகள் ஓப்புக் கொள்ளவில்லை.
கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகள் வளர்ந்த நாடுகள்தான். குறிப்பாக உலக மக்கள் தொகையில் 4 சதவீதம் உள்ள அமெரிக்கா தான் சுமார் உலகின் 25 சதவீத கார்பன் வாயுவை வெளியிடுகிறது. சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பலமுறை கூடியும் இதற்கு ஒரு நல்ல செயல்திட்டத்தை எட்ட முடியவில்லை. காரணம் பொருளாதாரச் சிக்கல்தான்.
தொழிற்புரட்சி தொடங்கிய காலத்திற்கு முன்பிறந்த அளவிற்கு கார்பன் டை ஆக்ஸைடு குறைய வேண்டுமானால் வருடத்திற்கு 1 டிரில்லியன் டாலர்கள் (சுமார் 50 லட்சம் கோடி ரூபாய்கள்) செலவழிக்க வேண்டும். இந்த அளவிற்கு செலவு செய்யாமல் மிகக் குறைந்த அளவு செலவிலேயே பூமிவெப்பமடைவதை நிறுத்த முடியுமா? அப்படி ஒரு வழி இருப்பதாக வளர்ந்த நாடுகளில் சிலர் நம்புகின்றனர். அந்த வழிதான் இந்த புவிப்பொறியியல் அல்லது ஜியோ என்ஜினீயரிங்.
கார்பன் டை ஆக்ஸைடு கட்டுப்பாடற்ற முறையில் வெளியிடப்படுவதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. பூமியின் வெப்பநிலை உயரக்கூடாது அவ்வளவு தானே, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடப்படுவதை கட்டுப்படுத்துவது என்ற முயற்சியை விட்டு சமாளிப்பது என்று பாருங்கள். அதற்கு என்ன வழி உள்ளது? இரண்டு வழிகள் நம்பப்படுகின்றன. ஒன்று பூமியை வந்தடையும் சூரிய ஒளியைக் குறைப்பது, மற்றொரு வழி வெளியிடப்பட்ட கார்பனை வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுத்து விடுவது. இந்த வழிகளை செய்துவிட்டால், கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளிப்படும் அளவை நாம் கட்டுப்படுத்த தேவையில்லை.
இதற்கு பல வழிகள் சொல்லப்படுகின்றன. சூரியனில் இருந்து பூமியை வந்தடையும் ஒளியில் 2 சதவீதம் குறைத்து விட்டால் போதும், பூமியின் வெப்பநிலையை பழைய நிலைக்கே கொண்டு வந்துவிடலாம். இதற்காக பிரம்மாண்டமான மேகங்களை உருவாக்கலாம். 300 கப்பல்களைக் கொண்டு தொடர்ந்து மாபெரும் புரொப்பெல்லர்களின் உதவியுடன் கடல் நிலத் துகள்களை வானில் தெளிப்பது. அவை வளிமண்டலத்திற்கு சென்று பெரும்மேகங்களாக மாறிவிடும், பூமிக்கு ஒரு மாபெரும் குடையாக மாறிவிடும். மற்றொரு வழியில் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகள் (ஹோஸ் பைப்புகள்) மிக உயர்ந்த இடங்களில் நிறுவுவது. ஒவ்வொரு துப்பாக்கி மூலமும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 8 லட்சம் சிறிய தகடுகளை வானில் செலுத்துவது. இதுசுமார் 10 வருடங்களுக்கு தினமும் 24 மணிநேரம் செய்வது. இந்தத் தகடுகள் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் மிதக்கும் இவையும் குடைபோல் சூரிய ஒளியை தடுத்து நிறுத்திவிடும். மற்றொரு வழி வானில் பெரும் அளவில் விமானங்களின் துணைகொண்டு கந்தகத்துகள்களை தூவுவது. இந்த கந்தகத் துகள்கள், பூமியை வந்தடையும் ஒளியை விண்ணுக்கே திருப்பி அனுப்பிவிடும். மாலை நேரத்தில் வானம் ரத்த சிவப்பாக இருக்கும். பகல் வேலையும் நீலநிற வானத்திற்குப் பதிலாக நல்ல வெண்மையான மேகமாக இருக்கும். இவையெல்லாம் சூரிய ஒளியை தடுப்பதற்கான வழிகள்.
மனிதர்களால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் தங்கவிடாமல் எடுப்பது எப்படி? இதற்கும் பல வழிகள் கூறப்படுகின்றன. கடலில் பிளாங்டன் என்ற ஒருவகை உயிரினம் உள்ளது. அவை கார்பன் டை ஆக்ஸைடை அதிகளவில் உண்ணக்கூடியவை. அவை வளர்வதற்கு இரும்புச்சக்தி தேவை. எனவே கடலில் பெரிய அளவில் இரும்புத் துகள்களைத் தூவுவது.
இந்த வழிகள் நடைமுறையில் சாத்தியமா? இப்படி செய்வது சரியா? பெரும்பாலான அறிவியல் வல்லுநர்கள் இந்த முறைகளை ஏற்றுக் கொள்வதில்லை. வானிலை, தட்ப வெப்பநிலை இவைபற்றிய நிறைய விவரங்கள் முழுமையாக தெரியவில்லை. இந்த நிலையில் புவிப்பொறியியலில் செயல்படும் முறைகளை அமல்படுத்தினால் அவை என்ன விளைவுகள் உண்டாக்கும் என்று தெரியாது. ஆகவே இந்த முயற்சிகளை கைவிட வேண்டும், என்றுதான் பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இதுபோன்ற வழிகளை சிந்திப்பதற்குக் காரணம் என்ன? ஒன்று மிகக் குறைந்த செலவு. மற்றொன்று இந்த வழிகளை செயல்படுத்த அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் தேவையில்லை. ஒவ்வொரு நாடும் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப செயல்பட முடியும். அரசே தேவையில்லை, தனியார் நிறுவனங்களே இச்செயல்களை செய்ய முடியும் என்று நம்புகின்றனர். இதில்தான் வேறொரு ஆபத்து உள்ளது.
ஒரு காலக்கட்டம் வரை, புவி வெப்பமடைதலை தவிர்ப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு வாயு வெளியிடுவதைக் குறைப்பதுதான், ஒரே வழி என்று கருதப்பட்டது. அதற்கு மாறாக சூரிய ஒளியைக் கட்டுப்படுத்துவதோ அல்லது வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ஸைடை வளிமண்டலத்தில் இருந்து எடுப்பது என்ற சிந்தனைகளே தவறு என்று கருதப்பட்டது. வானிலையை தங்கள் விருப்பத்திற்கு மாற்றலாம் என்ற கருத்தே அருவருப்பாகப் பார்க்கப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பியாலும் அறிவியல் வல்லுனர்களின் மதிப்பை பெருமளவில் பெற்றுள்ள அறிவியல் அமைப்புகளே, சற்று இந்தக் கருத்துகளுக்கு ஆதரவாக வருகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்யும் அரசு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கின்றன. பல தனியார் நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஆதரவும் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், பன்னாட்டு முதலாளிகளின் சார்பாக புவிவெப்பமடைதல் என்பதே உண்மையில்லை, என்று வாதிட்டவர்கள்.
உதாரணமாக அமெரிக்க எண்டர்பிரைசஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் ஒன்றுள்ளது. புவிவெப்பமடைதலைப் பற்றியும், அதனால் ஏற்படும் வானிலை மாற்றங்களைப் பற்றியும் சர்வதேச அமைப்பு வெளியிடும் அறிக்கையை எதிர்த்து எழுதப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சிக், கட்டுரைக்கும் 10,000 டாலர்கள் தரப்படும் என்று கூறிய நிறுவனம் இது. இந்த நிறுவனம் புவிப்பொறியியலில் பெரும் ஆர்வம் காட்டுகிறது. ஆக இந்தப் புவி பொறியியலுக்கு பெருகிவரும் ஆதரவு வேறு கோணத்தில் இருந்து வருகிறது. புவிப் பொறியியல் இருந்து வரும் அனைத்து தீர்வுகளும் ஒரு தனியார் நிறுவனமே செய்யக்கூடியவை. நிச்சயமாக சில நாடுகள் மட்டுமே செய்யக்கூடியவை அதாவது, உலக வானிலையைக் கட்டுப்படுத்துவது என்பது கைக்குள் வந்துவிடும் சொல்லப்போனால் அணுகுண்டுகளைப் போல் வானிலையும், மேலைநாடுகளுக்கு ஒரு ஆயுதமாக மாறும் நிலை உண்டு.
***
கட்டுரையாளர் சென்னை விவேகானந்தா கல்லூரி, இயற்பியல் துறை பேராசிரியர்
(இளைஞர் முழக்கம் ஜூன் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- இரா.சிவசந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
வளங்களின் வரையறை, வகைப்பாடு, வள அபிவிருத்தி என்பதன் பொருள் மற்றும் தமிழர் நிலத்தின் வளங்களும் பயன்பாடும்.
1.0 மனித வாழ்வுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பயன்படுபவை யாவற்றையும் வளங்கள் எனலாம். இயற்கையாகக் கிடைப்பவற்றை மனிதன் தன் அறிவாலும் தெழில்நுட்ப விருத்தியாலும் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போது அவை வளங்களாகக் கருதப்படுகின்றன. மனிதனது தேவைகள் அளப்பரியன. அவற்றை நிறைவு செய்வதற்கு மனிதன் பல்வேறுபட்ட வளங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. தனி மனித தேவைகள் போன்றே ஒரு நாட்டினதும் பிரதேசத்தினதும் சமூகத்தினதும் தேவைகள் வரையறை அற்றவை. ஆனால் வளங்கள் வரையறைக்கு உட்படுபவை. இதனால் பொருளியலாளர்கள் வளங்கள் அருமை, தெரிவு, பரிமாற்றம் எனும் அம்சங்களைக் கொண்டுள்ளன என்பர்.
1.1 பொதுவாக வளங்களை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம்.
01) பௌதிகவளம் அல்லது இயற்கை வளம் (Physical resource or Natural Resource)
02) மனித வளம் அல்லது பண்பாட்டு வளம் (Human Resource or Cultural Resource)
1.2 பௌதிக வளத்தை இரசாயனவியலாளர்கள்
01) உயிரியல் வளம் (Organic Resource)
உதாரணம்:- (காடுகள்,விலங்குகள்)
02) உயிரற்ற வளம் (Inorganic Resource)
உதாரணம்:- (நீர், கனிமங்கள்)
என வகுப்பர்
1.3 பொருளியலாளர்கள் வளங்களை நுகர்வுத்தன்மை அடிப்படையில்
01) புதுப்பிக்கக் கூடிய வளம் (Renewable Resource)
உதாரணம:-(நீர்,வளி)
02) புதுப்பிக்க முடியாத வளம் (Non-renewable Resource)
உதாரணம்:- (கனிமம்,காடுகள்)
என வகைப்படுத்துவர்.
1.4 சூழலியலாளர்கள் பௌதிகவளத்தை
01) நில மண்டல வளம் (Lithosphere Resource)
உதாரணம் (மண்,கனிமம்)
02) நீர் மண்டல வளம் (Hydrosphere Resource)
உதாரணம்:- (ஏரி,சமுத்திரம்)
03) வளிமண்டல வளம் (Atmosphere Resource)
உதாரணம்:-(காற்று,மழை)
04) உயிர் மண்டல வளம் (Biosphere Resource)
உதாரணம்:-(காடுகள்,விலங்குகள)
என வகைப்படுத்துவர்.
பௌதிக வளங்களும்(சூழல்), பண்பாட்டு வளங்களும்
2.0 புவியியலாளர்கள் மனித இனத்தின் வளர்ச்சி வரலாறானது சூழலுக்கும் மனிதனின் அறிவு வளர்ச்சிக்குமிடையே நிகழ்ந்த போராட்ட வரலாறு என்று கூறுவதோடு சூழலை முதன்மைப்படுத்தும் சூழலாதிக்கவாதக் கோட்பாடுகளையும் மனித நடவடிக்கைகளை முதன்மைப்படுத்தும் மானிடஆதிக்கவாத கோட்பாடுகளையும் முன் வைக்கின்றனர். மனித இனத்தின் அறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி படிப்படியாக எவ்வகையில் வளத்தைப் பயன்பாட்டிற்கு உட்படுத்தி வந்ததென்பதையும் வருகின்றதென்பதையும் முறைப்படி விளக்குகின்றனர். புவியியலாளர் சூழலை அமைவு, அமைப்பு, தரைத்தோற்றம், காலநிலை, மண், இயற்கைத்தாவரம், விலங்கினவாழ்வு என வகைப்படுத்தி மனிதன் இவற்றில் செல்வாக்கு செலுத்துவதனையும் இவற்றால் மனிதன் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுவதனையும் விபரிப்பதோடு இரண்டிற்கு இடைப்பட்ட நிலையும் உண்டு எனவும் விளக்குகின்றனர்.
3.0 பண்பாட்டு வளம் (மனித அறிவும் தொழில்நுட்பமும்)
வளங்கள் பற்றி விபரிக்கும் அறிஞர்கள் பலர் மனித வளமே உலகிலே கிடைக்கும் எல்லா மூல வளங்களையும் விடச் சிறந்தது என்கின்றனர். வளம் என்பது அறிவியல் கலாசாரத்தின் செயற்பாடே என சில அறிஞர்கள் குறிப்பிடுகின்;றனர். புவியில் பரந்துள்ள இயற்கை நிலைமைகளை வளங்களாக மாற்றுவதற்கு மனிதஅறிவு வளர்ச்சி இன்றியமையாதது. மனிதஅறிவு எனும் போது கல்விகற்ற தொழில்நுட்ப அறிவு கொண்ட சமூகத்தை குறித்து நிற்கின்றது. ஒரு நாடு அபிவிருத்தியடைய அந்நாட்டு மக்கள் இயற்கைவளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற அறிவு கொண்டவர்களாக இருத்தல் அவசியம். இல்லாதுவிடின் அந்நாட்டில் காணப்படும் வளங்கள் மறைவளங்கள் (LATENT RESOURCES) என்ற நிலைமையிலேயே காணப்படும். உதாரணமாக, கிறீஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே பெற்றோலியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் தொழில்நுட்ப விருத்தியால் பெற்றோல் வடிகட்டும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் வாகனங்கள் இயக்குவதற்கு அதனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்ப அறிவின் விருத்தியின் பின்னருமே அவை வளமாக மாற்றப்பட்டன.
இறப்பர் மரம் அமேசன் காடுகளில் இயற்கையாக வளரும் தாவரம். இறப்பர் மரத்திலிருந்து பால் பெற்று தொழில்நுட்ப முறைகளைப் புகுத்தி ரயராக, ரியூப்பாக பயன்படுத்தலாம் என்ற அறிவு வளரும் வரை அவை மறைவளமாகவே இருந்துள்ளன. இவ்வாறு இன்றும் பல வளங்கள் எமது அறிவு விருத்தியின்மையால் பயன்பாட்டிற்கு உட்படாது இருத்தல் கூடும். எதிர்காலத்தில் மேலும் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பங்களால் அவற்றின் பயன்பாடு கண்டுபிடிக்கப்படலாம். அது வரை அவ்வளம் ஒரு மறைவளமாக அல்லது உள்ளார்ந்த வளமாகவே இருக்கும். இதிலிருந்து மனித அறிவு, தெழில்நுட்ப விருத்தி என்பனவே முக்கியமான வளம் என்பது பெறப்படுகின்றது. ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தர நிலமைகளைக் கொண்டும் அளவிடப்படுகின்றது. இதன்படி பின்வரும் சூத்திரம் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை வளத்துடனும் தொழில்நுட்ப அறிவுடனும் இணைந்த கலாசார மேம்பாட்டுடன் தொடர்புபடுத்தி விளக்குகின்றது.
SL = RxC / P
இதில் R என்பதில் விவசாயம், கைத்தொழில், சேவைகள் என்பவற்றின் அபிவிருத்திக்குரிய வளங்கள் உள்ளடங்குகின்றன. C என்பது தெழில்நுட்பத்தின் இணைந்த மனித கலாசாரத்தைக் குறிக்கின்றது. P என்பது நாட்டின் மொத்த மக்கள் தொகையையும் SL என்பது தனிநபர் வாழ்க்கைத்தரத்தையும் குறிக்கின்றது. புதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலோ, புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டாலோ மொத்த உற்பத்தி அதிகரிக்கும் என்பதைச் சூத்திரம் விளக்குகின்றது.
3.1 மனிதன் வளங்களின் உற்பத்தியாளனாகவும், நுகர்வோனாகவும் விளங்குகின்றான். இயற்கை, வளமாக மாறவேண்டுமாயின் மனிதனின் உழைப்பு இன்றியமையாதது. அவ் உழைப்பு உளஞ் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ அமையலாம். உழைப்பினால் பெறும் அனுபவங்கள் உற்பத்தியை வினைத்திறன் மிக்கதாக்கின்றன. இவ்வாறே மனித நாகரிகங்கள் வளர்ந்துள்ளன. நாகரிக வளர்ச்சியில் மனித உடல் உழைப்புக் குறைய உள உழைப்பே அதிகரித்து வந்துள்ளதை காண்கின்றோம். உள சக்திவள அதிகரிப்பிற்கு உடல் உறுதியானதாகவும் ஆரோக்கியம் உள்ளதாகவும் இருத்தல் அவசியம். உள ஆரேக்கியத்துக்குக் கல்வியும் தொடர்ந்த பயிற்சிகளும் அவசியம். மனித வள அபிவிருத்தியானது மனிதனின் நல் ஆரோக்கியத்திலும் முறையான கல்வியிலுமே தங்கியுள்ளது.
3.2 மனிதன் உழைப்பது நுகர்வுக்காகவே. எனவே மனிதனின் தேவைகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.
01) அடிப்படைத் தேவைகள்
02) ஏனைய தேவைகள்
அடிப்படைத் தேவைகள் எனும் போது உணவு, உடை, உறையுள் என்பனவாக அமையும். இவ் அடிப்படை தேவைகளுடன் மனிதன் திருப்தியடைவதில்லை. மனிதனுக்கு ஆடம்பரமாகவும், வசதியாகவும் வாழும் விருப்பு உண்டு. மனித அறிவு வளர வளர இதுவும் வளரும். “அடிப்படைத் தேவைகள் நிறைவுற்றதும் மனித மனம் மேலதிக தேவைகளை உருவாக்கிக் கொள்ளும்” என்கிறார் ஒரு அறிஞர். இதனாலேயே மனிதன் தனது அறிவை மேலும் விருத்திசெய்து வினைத்திறனுள்ள வளஉற்பத்தியாளனாக மாறுகின்றான். இவ்வாறே உற்பத்தி நுகர்வு என்பவற்றின் இயக்கம் ஒரு தொடர்சங்கிலி போன்றதே - இதனை மனிதஅறிவின் வளர்ச்சியே துரிதப்படுத்துகின்றது.
4.0 பௌதிக வளமும் குடித்தொகையும்
குடித்தொகையின் தரத்திற்கு (Ouality) முக்கியத்துவம் கொடுக்கும் போது அதனை மனிதவளம் எனவும், தொகையைக்; (Quantity) கணக்கெடுக்கும் போது அதனைக் குடித்தொகை எனவும் கூறலாம். மேற்படி குடித்தொகையை பௌதிக வளங்களுடன் ஒப்பிடும் போது உலகளாவிய ரீதியில் அல்லது நாடு பிரதேசம் என்ற ரீதியில் மூன்று குடித்தொகை நிலமைகள் உருவாகின்றன. அவையாவன.
01) மிதமான குடித்தொகை (OPTIMUM POPULATION)
02) குறைவான குடித்தொகை (UNDER POPULATION)
03) மிகையான குடித்தொகை (OVER POPULATION)
குடித்தொகையின் அளவு, பரம்பல், அமைப்பு, கல்விநிலை, தொழில்நுட்பம், என்ற அம்சங்கள் ஒரு நாட்டின் குடித்தொகை எனும் போது கவனம் கொள்ள வேண்டியவையாகும். ஒரு நாட்டின் குடித்தொகை எவ்வாறு அந்த நாட்டிலுள்ள பௌதிக வளத்தைப் பயன்படுத்துகின்றது என்பதைப் பொறுத்தே அந்த நாடானது மிதமான, குறைந்த, மிகையான குடித்தொகை நிலையைக் காட்டுகின்றதா என்பதைத் தீர்மானிக்க முடியும்;.
மிதமான குடித்தொகையெனில் நாட்டிலுள்ள மொத்தக் குடித்தொகை நல்ல வாழ்க்கைத் தரத்தைப் பெற்று வாழக் கூடிய அளவிற்கு அந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி வரும் நிலையினைக் குறிப்பதாகும். இம்மிதமான தன்மை புதிய வளங்களை கண்டுபிடிக்கும் போது அல்லது தொழில்நுட்பத்தின் தரம் அதிகரிக்கும் போது மாற்றத்திற்கு உட்படும். வளமும் தொழில்நுட்பமும் நிலையாக இருக்கும் போது குடித்தொகை அதிகரிப்பின மக்கள் வாழ்க்கைத் தரம் குறையும். இது மிகையான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். வளங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட தொழில்நுட்பமும் வளரந்துவர அதற்கேற்ப குடித்தொகை அதிகரிக்காது விடின் அது குறைவான குடித்தொகை நிலையைத் தோற்றுவிக்கும். அதாவது அந்நாடு இருப்பதைவிட கூடிய குடித்தொகையைத் தாங்கக் கூடியதான நிலமையில் இருக்கும்.
(உதாரணம்:- பிறேசில், கனடா, அவுஸ்ரேலியா. போன்ற நாடுகள் பெருமளவு வளங்களைப் பயன்படுத்தக் கூடிய அளவுக்கு குடித்தொகை அளவினைக் கொண்டிருக்கவில்லை.)
மேற்படி நிலமைகள் ஒரு நாட்டிற்கு மாத்திரம் உரியனவல்ல. நாட்டிற்குள்ளேயுள்ள பிரதேசம், குறிச்சி போன்ற சிறு அலகுகளுக்கும் பொருந்தும்.
5.0 மனிதனும் அபிவிருத்தியும்
அபிவிருத்தியின் அடிப்படைகள்
மைக்கேல் ரொறாடோ (Michal Torado) எனும் பொருளியல் அறிஞர் உண்மையான அபிவிருத்தியெனில் பின்வரும் மூன்று அம்சங்களில் கவனம் கொள்ள வேண்டுமென்கிறார்.
01) வாழ்வின் தேவை (LIFE SUSTENANCE)
மனிதனுக்குச் சில அடிப்படைத்தேவைகள் நிறைவு பெறவேண்டும். இவை இன்றி அவன் வாழ முடியாது. அவையாவன உணவு, உடை, உறையுள், சுக நலன், பாதுகாப்பு என்பனவாகும். இவை இல்லை எனில் அல்லது குறைவாக இருப்பின் அங்கு குறைவிருத்தி நிலவுகின்றதென்றே கூற வேண்டும். இவற்றை முதலாளித்துவ நாடு என்றால் என்ன? சோஷலிச நாடு என்றால் என்ன? கலப்புப் பொருளாதார நாடு என்றால் என்ன? மனிதனுக்கு வழங்கியே தீர வேண்டும் என்றார். இவ்வாறான அடிப்படை பொருளாதார தேவைகளை வழங்க முடியாத எந்த ஓர் நாடும் அபிவிருத்தி அடைந்ததாக கொள்ளமுடியாது.
02) சுய மதிப்பு (SELF RESPECT)
ஒருநாடோ, தனிமனிதனோ இருக்கும் சூழலில் சுயமதிப்பு, கௌரவம், (RESPECT, DIGNITY, HONOUR) நிலவவேண்டும். இவை இல்லையெனில் அபிவிருத்தி இல்லையென்றே கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றார்.
03) சுதந்திரம் (FREEDOM)
இது குறிப்பது அரசியல் கருத்துச் சுதந்திரத்தையாகும். சமூக நெருக்குதல், அறியாமை, மேலாதிக்கம் என்பன இல்லாதிருத்தல் வேண்டும். மேலும் எந்தச் சித்தாந்தத்தையும் பின்பற்றும் சுதந்திர உரிமை நாட்டிற்கும் மனிதனுக்கும் இருக்;கவேண்டும். இவை இல்லையாயின் அங்கு அபிவிருத்தி இல்லை என்றே கொள்ள வேண்டும்.
மேற்படி அம்சங்களையும் மனிதவள அபிவிருத்தி பற்றிப் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டும் என மக்கேல் ரொடாறோ வலியுறுத்திக் கூறுகின்றார்.
டட்லி சியர்ஸ்;]; (Dudely Seers )எனும் பொருளியல் அறிஞர் அபிவிருத்தி பற்றி பிரஸ்தாபிக்கும் போது பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றார்.
ஒரு தேசம் அபிவிருத்தி அடைந்துள்ளதெனக் கருதுவதாயின் அங்கு
1. வறுமையைப் போக்க என்ன நடந்தது?
2. வேலை இன்மையைப் போக்க என்ன நடைபெற்றது?
3. அங்கு நிலவும் பல்வேறுபட்ட சமமின்மையான நிலமைகளை நீக்குவதற்கு என்ன நடந்தது?
என்ற கேள்விகளை எழுப்பவேண்டுமென்றும் கணிசமான அளவில் இவை குறைவடைந்து வந்தால் சந்தேகத்திற்கிடமின்றி அந்நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றதென்று கூறலாம் எனக் கூறுகின்றார். இவற்றுள் ஒன்றோ, இரண்டோ பாதகமாக இருக்குமாயின் அந்த நாட்டின் தலா வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்திருந்தாலும் அந்நாடு அபிவிருத்தி அடையவில்லையென்றே கூற வேண்டும் என்கிறார். இதன் மூலம் தனியே பொருளாதார வளர்ச்சி அபிவிருத்தி அல்ல. அபிவிருத்திக்கு பல்பரிமாணம் உண்டு என வலியுறுத்துகின்றார்.
பிலிப்ஸ் எச்.ஹோம்ஸ் (Philip. H.Coombs)
01) பொது அல்லது அடிப்படைக்கல்வி விருத்தி
(எழுத்தறிவு பெறுதல், ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் கல்வியை அபிவிருத்தி செய்தல்.)
02) கல்வியால் குடும்ப மேம்பாடு காணல்(குடும்ப வாழ்வின் தரத்தை உயர்த்துதல், சுகநல வாழ்வு, ஊட்டச்சத்து மேம்பாடு, மனைப்பராமரிப்பு, குழந்தைப்பராமரிப்பு, குடும்பத்திட்டமிடல்)
03) சமூக மேம்பாட்டு கல்விவளர்ச்சி
(உள்ளுர், சர்வதேச நிறுவனங்களின் வளர்ச்சி, அரசாங்க அரசசார்பற்ற நிறுவனங்களின் வளர்ச்சி, கூட்டுறவு வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் திட்டங்கள்)
04) தொழில்சார் கல்வி வளர்ச்சி
(பயிற்சி அதிகரித்தல், கருத்தரங்குகள், பயிலரங்குகள், தொழில்சார் பயிற்சிகளை பல மட்டங்களிலும் வழங்குதல்)
கல்வி அபிவிருத்தியின் ஊடான அபிவிருத்தி அம்சங்களில் ஒரு நாடோ பிரதேசமோ கவனம் செலுத்தும் போ மனித வள அபிவிருத்தி ஏற்படுமென எச்.ஹோம்ஸ் வலியுறுத்துகின்றார்.
தமிழர் நிலத்தின்; வளங்களும் பயன்பாடும்.
விவசாயத்திற்குரிய பௌதிக வளம்.
நிலவளம், நீர்வளம், மண்வளம் போன்றன விவசாயப் பயன்பாட்டிற்கு இன்றியமையாத பௌதிக வளங்களாகும். தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் அதிக உயர வேறுபாடற்ற சமநிலமாகவே காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டிலிருந்து படிப்படியாக உயரத்திற் குறைந்துவரும் இலங்கையில் வடசமவெளி மற்றும் கிழக்கு சமவெளிகளிற் பெரும்பாகத்தை இப் பிரதேசம் அடக்கியுள்ளது. பொதுவாக இப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை கரையோரத் தாழ்நிலமென்றும் உள்ளமைந்த மேட்டுப்பாங்கான நிலமென்றும் பிரிக்கலாம். கரையோரத் தாழ்நிலம் ஏறத்தாழ 100 அடிக்குட்பட்ட உயரத்தைக் கொண்டு இப்பிரதேசத்தின் பரந்த பரப்பை அடக்கியுள்ளது. உள்ளமைந்த மேட்டுநிலம் 100 அடிக்கு மேற்பட்டும் 300 அடிக்கு உட்பட்டும் காணப்படுகிறது. இது வடக்கே அகன்றும் கிழக்கே ஒடுங்கியும் உள்ளது. இம் மேட்டுநிலத்தில் குறிப்பிடக்கூடிய மலைகள் இல்லாவிடினும் ஆங்காங்கே பல எச்சக்குன்றுகளும் வெளியரும்பு பாறைகளும் காணப்படுகின்றன.
தரைத்தோற்ற அமைப்புக்கேற்ப உயர்ந்த பகுதிகளிலிருந்து உற்பத்தியாகிவரும் ஆறுகள் வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்குத் திசைகளை நோக்கிப் பாய்கின்றன. இப்பிரதேசத்தில் 61 ஆறுகள் காணப்பட்ட போதிலும் மகாவலி கங்கையைத் தவிர ஏனையவற்றில் வருடம் முழுவதும் நீரோட்டம் இருப்பதில்லை. இங்கு காணப்படும் ஆறுகளில் பெரும்பாலானவற்றில் மழைகால நீரோட்டம் காணப்படுவதால் இவை பருவகால ஆறுகளென வழங்கப்படுகின்றன. இதனாலேயே ஆற்றை மறித்து அணைகட்டி நீர்த்தேக்கங்கள் உருவாக்கி விவசாயத்திற்கு பயன்படுத்தும் பாசனமுறை இப்பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது. அண்மைக்காலங்களில் பழைய குளங்கள் பல புனரமைக்கப்பட்டும், புதிய குளங்கள் பல உருவாக்கப்பட்டும் இப்பகுதிகளில் விவசாய குடியேற்றத் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் அம்பாறை, திருகோணமலை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நிறைய உள்ளன.
இப் பிரதேசத்திலே யாழ்ப்பாணக்குடாநாடு உள்ளடக்கிய வடமேற்கு பகுதியின் புவி அமைப்பு மயோசின் கால சுண்ணாம்புப் பாறைப்படையைக் கொண்டுள்ளதால் தரைக்கீழ் நீர்வளம் மிக்க பகுதியாக அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் குடித்தொகை செறிவாக இருப்பதற்கு தரைக்கீழ் நீர்வளமே பிரதான காரணமாகும். வருடம் முழுவதும் கிணற்று நீர் பெற்று இங்கு விவசாயம் செய்தல் நீண்ட காலமாக இடம்பெற்று வருகின்றது. இப்பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியின்(வன்னி) கிழக்கு,மேற்கு கரையோர மணற்பாங்கான பகுதிகளிலும் உள்ளமைந்த வண்டல்மண் பகுதிகளிலும் ஓரளவு தரைக்கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாடு போலன்றி குளங்களில் நீர் இருக்கும் காலங்களிலேயே வன்னியில் ஓரளவு தரைக்கீழ் நீரை பெறமுடிகிறது.பெருமளவுக்கு குடிநீர் பெறுவதற்கே இவை பயன்படுத்தப்படுகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசம், வருடம் ஏறத்தாழ 1800 மி.மீ (75 அங்குலம்) இற்கு குறைந்த மழைவீழ்ச்சி பெறும் வறண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ளது. பொதுவாக இங்கு வருடம் முழுவதும் சராசரியாக உயர்வான வெப்பநிலையான 28 பாகை சென்ரிகிறேட் அளவு நிலவுகிறது. வருடாந்த வெப்ப ஏற்றத்தாழ்வு 21 – 32 பாகை செ.கி ஆக அமைகின்றது. இங்கு வருடத்தின் நான்கு மாதங்களுக்கே குறிப்பிடக்கூடிய மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறுகின்றது. இப்பிரதேசத்தின் வருட சராசரி மழைவீழ்ச்சி 1500 மி.மீ ஆகும். மழைவீழ்ச்சிப் பரம்பலில் பிரதேச வேறுபாடுகள் உள. மன்னார், அம்பாறை மாவட்டங்களின் தென்பகுதிகள் குறைந்தளவிலான 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ வரை மழை பெற, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகள் உயர்ந்தளவான 1800 மி.மீ அளவு மழையைப் பெறுகின்றன. எனினும் 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ வரை மழைபெறும் பரப்பளவே அதிகமாகும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிற் பெரும்பாகமும் 1200 மி.மீ தொடக்கம் 1500 மி.மீ மழை பெறும் பகுதிகளாக உள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மாவட்டங்கள் முழுவதும் மன்னார், அம்பாறை, மட்டக்களப்பு, மாவட்டங்களிற் பெரும்பாகமும் வருடத்திற்கு சராசரியாக 1200 மி.மீ தொடக்கம் 1800 மி.மீ மழை பெறும் பகுதிகளாகவே அமைகின்றன.
இப் பிரதேசம் வடகீழ் மொன்சூன் காற்றினாலும், சூறாவளி நடவடிக்கைகளினாலும் ஒக்டோபர் முதல் ஜனவரி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவு மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. வருடம் முழுவதும் கிடைக்கப்பெறும் மொத்த மழைவீழ்ச்சியின் 70வீதம் நான்கு மாத காலத்தினுள்ளேயே பெறப்படுவது முக்கிய அம்சமாக உள்ளது. இம் மழைவீழ்ச்சியே இப் பிரதேசத்தின் காலபோக விவசாயச் செய்கைக்கு உதவுகின்றது. மார்ச் முதல் மே வரை மேற்காவுகையினாலும் குறைந்தளவு சூறாவளி நடவடிக்கையினாலும் சிறிதளவு மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சிறுபோகச் செய்கைக்கு இம் மழைவீழ்ச்சி ஓரளவுக்கு உதவுகின்றது. யூன் முதல் ஆகஸ்ட் வரை இங்கு அதிக வறட்சி நிலவுகின்றது. இக் காலத்தே வீசும் தென்மேற்கு மொன்சூன் இலங்கையின் ஈரவலயத்திற்கு மழையைக் கொடுத்து இப்பகுதிகளில் வறண்ட காற்றாக வீசுகின்றது. இவ் வறண்ட காற்றை வடக்கே சோழகக் காற்று என்றும் கிழக்கே சோழகக்கச்சான் காற்று என்றும் வழங்குவர்.
இப் பிரதேசத்தில் யாழ்ப்பாணக்குடாநாடு தவிர ஏனைய பகுதிகளில் பெரும்பாகத்தில் வறண்ட பிரதேசத்தின் முறையான மண் வகையான செங்கபில நிற மண் பரந்துள்ளது. இம் மண் வகை தொல்காலப் பாறைகளிலிருந்து விருத்தியடைந்ததாகும். விவசாயச் செய்கைக்குப் பொருத்தமான வளமான மண்ணான இது மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் ஓரளவுக்கும் வவுனியா, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் பெருமளவுக்கும் பரந்துள்ளது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை கரையோரத்திற்கு சிறிது உள்ளாக சிவந்த மஞ்சல் லட்சோல் மண், செங்கபில நிறமண் என்பன உள்பரப்பிற்கும் கரையோரப் பகுதிக்கும் இடையே பரந்துள்ளன. யாழ்ப்பாணக்குடாநாட்டின் மத்திய பகுதியிலும் பரந்துள்ள இம்மாதிரியான மண்வகை செம்மண் என வழங்கப்பட்டு குடாநாட்டில் வளமான மண்ணாக கருதப்படுகின்றது. மன்னார் தொட்டு முல்லைத்தீவுக்கு கரையோரமாகவும், யாழ்ப்பாணக்குடாநாட்டின் கரையோரமாகவும் உவர்மண் பரந்துள்ளது. புல் வளருவதற்கே பொருத்தமான இம் மண்வகை விவசாயத்திற்குப் பயன்பட அதிக இரசாயன உரம் பயன்படுத்தப்பட வேண்டும். மட்டக்களப்புக்கு வடக்கேயும் திருகோணமலைக்குத் தெற்கேயும் சுண்ணாம்புக்கலப்பற்ற கபில நிற மண் பரந்துள்ளது. வளம் குறைந்த இம்மண் பரந்தளவு புல் வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவை தவிர வடக்கேயும், கிழக்கேயும் காணப்படும் ஆற்றுப்படுக்கைகளிலும் அவற்றின் வெள்ளச்சமவெளிகளிலும் வளம் மிக்க வண்டல் மண் படிவுகள் பரந்துள. மன்னார்தீவு, பூனகரிமுனை, யாழ்ப்பாணக்குடாநாட்டின் கிழக்குப்பகுதி, முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையான கிழக்கு கரையோரப் பகுதி ஆகியவற்றில் அண்மைக்கால மணற்படிவுகள் பரந்துள்ளன. பொங்குமுகப் படிவுகளான இவை தென்னைச் செய்கைக்குப் பொருத்தமானவை.மணற் குவியலாகக் காட்சி தந்த இவை கட்டுமான வேலைக்காக பெருமளவு அகழப்பட்டுவருவதால் கடல்நீர் தரையினுள் புகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
நிலப்பயன்பாடு
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் உழைக்கும் மக்களில் 60வீதத்தினர் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பகுதிகளில் பாரம்பரியமாக விவசாயமே முக்கிய பொருளாதார நடவடிக்கையாக இருந்து வருகின்றது. விவசாயத் துறையில் புகுத்தப்பட்ட புதிய தொழில்நுட்ப முறைகள் இப்பகுதி விவசாயிகளிடையே வேகமாகப் பரவியுள்ளன. இப்பிரதேசம் அடங்கியுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாகப் பிரிக்கலாம். தோட்டச்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும், நெற்செய்கையோடு தொடர்பான நிலப்பயன்பாடு எனவும் இவற்றை வகைப்படுத்தலாம்.
இப்பிரதேசத்தின் மொத்த நிலப்பரப்பில் 6.1 வீதத்தையும் மொத்தக் குடித்தொகையில் 36 வீதத்தையும் உள்ளடக்கிய யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதியே தோட்டச் செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய்கின்றார்கள். மிகவும் சிறிய அளவிலான துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிரச் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகையான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள்ளப்படுவதில்லை. இதன் காரணமாக யாழ்ப்பாணக்குடாநாட்டுப் பகுதி செறிவான குடித்தொகையை கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமைலுக்கு 3000 இற்கு மேற்பட்டோர் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ 1025 சதுர கி.மீ பரப்பைக் கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமான பகுதி மணல், பாறை ஆகியவற்றையும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ளதால் பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமையவில்லை. மக்களுக்குப் பயன்படுகின்ற 60 வீதமான நிலப்பகுதியில் மூன்றிலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உள்ளன. பனை, தென்னை ஆகிய மரப்பயிர்கள் மற்றொரு மூன்றிலொரு பகுதியிற் காணப்படுகின்றன. எஞ்சிய பகுதியே நெற்பயிரும், தோட்டப் பயிரும் செய்கை பண்ணப்படும் விவசாயப்பகுதியாகும். அண்மைக்காலங்களில் விவசாய நெல்வயல் நிலங்கள் தோட்டநிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் தோட்ட நிலங்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகின்றது.
இப்பகுதித்தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், திணை வகைகள், வாழை ஆகியன பெருந்தொகையாக விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உபஉணவுத் தேவையின் கணிசமான பங்கு யுத்தத்திற்கு முன்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டு உற்பத்தியாலேயே பூர்த்தி செய்யப்பட்டது. உதாரணமாக இலங்கையில் வெங்காயச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 38 வீதத்தையும், மிளகாய்ச் செய்கைக்குட்பட்ட பரப்பளவில் 15 வீதத்தையும் யாழ்ப்பாணக்குடாநாடே உற்பத்திசெய்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயிகள் புதிய தொழில்நுட்ப முறையினை புகுத்துவதில் பேரார்வம் கொண்டவர்கள். தோட்டச்செய்கைக்கு நீர் இறைக்கும் இயந்திரம,; செயற்கை உரம், கிருமிநாசினி என்பனவற்றை பெருமளவு பயன்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரித்துள்ளார்கள். குடித்தொகை அதிகரிப்பும், தோட்டச் செய்கை அதிகரிப்பும் தரைக்கீழ் நீர் வளத்தை மிகையாகப் பயன்படுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. தரைக்கீழ் நீரின் மிகையான பயன்பாட்டினால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் உவர்நீர் பகுதிகள் அதிகரித்து வருகின்றன. தரைக்கீழ் நீர்வளத்தை பேணுவதற்கு கிடைக்கும் மழை நீரில் பெரும்பகுதி தரையின் கீழ் செல்வதற்கு வழி காணவேண்டும். இதற்கு இப்பகுதிகளின் நீர்த் தேக்கங்கள் ஆழமாக்கப்படுதலும், நீர்த்தேக்கங்களில் தூர் அகற்றுதலும், புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படுதலும் அவசியம். மேலும் இங்கு காணப்படும் பல கடனீரேரிகள் நன்னீர் ஏரிகளாக மாற்றப்படுவதாலும் நற்பயன் விளையும். இந்நடவடிக்கையால் நீர், நிலவளம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.
யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏனைய பகுதிகளின் (வன்னி) நிலப்பயன்பாட்டை தாழ்நிலப்பயன்பாடு மேட்டுநிலப்பயன்பாடென வகைப்படுத்தலாம். மேட்டுநிலப்பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தியடையவில்லை. தாழ்நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்றுவடிநிலப்பகுதிகளிலும் நீர்த்தேக்கத்தினை அண்டிய பகுதிகளிலும் வண்டல்மண், களிமண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகுதிகளிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம்பரிய கிராமிய விவசாய நிலப்பயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலப்பயன்பாடும் வௌ;வேறான பண்புகளைக் கொண்டமைந்துள்ளன. மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை,மட்டக்களப்பு பகுதிகளின் கரையோரமாக பழைய விவசாய நிலப்பரப்புகள் பரந்துள. முன்னர் காடு சூழ்ந்திருந்து நில அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்ட உள்ளமைந்த பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் அமைக்கப்பட்டு அபிவிருத்தி அடைந்துள்ளன.
1935ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நில அபிவிருத்திச் சட்டத்தின் பின்னர் இப்பகுதிகளில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக்கு குடியேற்றத்திட்டம், பாரிய குடியேற்றத்திட்டம், கிராமவிஸ்தரிப்புத் திட்டம், மத்தியவகுப்பார் குடியேற்றத்திட்டம், இளைஞர் குடியேற்றத்திட்டம் ஆகியனவாக இவை அமைக்கப்பட்டுள்ளன. குடியடர்த்தி மிக்க பகுதிகளில் இருந்து மக்களை நகர்த்தவும் நிலமற்றோருக்கு நிலமளிக்கவும் வேலையற்றிருப்போருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் குடியேற்றத்திட்ட உருவாக்கம் ஓரளவு உதவியுள்ளது. அம்பாறையில் கல்லோயாத்திட்டம், மட்டக்களப்பில் உன்னிச்சைக் குளத்திட்டம், மன்னாரில் கட்டுக்கரைக்குளத்திட்டம், கிளிநொச்சியில் இரணைமடுக்குளத்திட்டம், வவுனியாவில் பாவற்குளத்திட்டம், என்பன மாவட்டத்திற்கொன்றான உதாரணங்களாகும். இப்பகுதிகளிலே படித்த இளைஞர்களுக்கென உப உணவு உற்பத்தித் திட்டங்கள் பல ஏற்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த முத்தையன்கட்டு இளைஞர்திட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்த விஸ்வமடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதியில் திருப்தியைத் தருவதாக விருத்தியடைந்துள்ளன. பொதுவாக இப்பிரதேசத்திலே குள நீர்ப்பாசன அடிப்படையில் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தி விவசாய உற்பத்தியை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் நிறைய உள. இந் நடிவடிக்கைகள் குடியடர்த்தி மிக்க யாழ்ப்பாணக்குடாநாடு, மற்றும் வன்னிக் கரையோரப் பகுதிகளிலிருந்து இப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்தவும் உதவும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் மொத்த நிலம் ஏறத்தாழ 202 977 (2007) கெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளைபரப்பில் 25வீதமாக அமைகின்றது. இப்பிரதேசத்தின் மொத்தநெல் விளைபரப்பில் 75 வீதத்தைக் கிழக்கு மாகாணம் உள்ளடக்கி உள்ளது. மொத்த நெல்விளைநிலத்தில் 44.4 வீதம் பருவகால மழையை நம்பிய மானாவாரி நிலங்களாக உள்ளன. ஏனையவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுத்துள்ளன. பாசனவசதியுடைய நிலங்களில் வருடத்தில் இரு தடவை நெல் விளைவிக்கப்படும். இவ்வாறான விளை நிலப்பரப்பு 28 வீதமாக அமைகிறது. பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல்விளைபரப்பு பருவமழையை நம்பியதாகையால் பருவமழை பிழைத்துவிடும் காலங்களில் நெல் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. நெற்செய்கையில் நிலவும் இந்த நம்பிக்கையற்ற நிலையை மாற்றவும் சிறு போகத்தின்போது அதிகளவு நெல்லை விளைவிக்கவும் ஏலவேயுள்ள விளைநிலப்பரப்பிற்கு பாசனவசதிகள் அதிகரிக்கப்படுதல் அவசியம்.
இப்பகுதி நெற்செய்கையில் புதிய தொழில்நுட்ப முறைகள் புகுத்தப்பட்டுள்ளன. இப்பிரதேசங்களில் உழவு இயந்திரப் பாவனையே பெருமளவு நிலவுகின்றது. சிறந்த கலப்பின உயர் விளைச்சல் தரும் நெல்லினங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் இரசாயன உரம், கிருமிநாசினி, களைகொல்லி, என்பனவற்றின் உபயோகம் நிறைய உள்ளது. விவசாயிகளின் நலனை உத்தேசித்து அரசாங்கமும் பல உதவிகள் அளித்து வருகின்றது. கடன் உதவி, உத்தரவாத விலைத்திட்டம், சந்தைப்படுத்தும் வசதி, விவசாய ஆலோசனை பெறக்கூடிய அமைப்புகளை உருவாக்குதல் என்பன இவற்றுட் குறிப்பிடத்தக்கன. இவை காரணமாக இப்பகுதிகளில் நெல் விளைச்சல் வருடாவருடம் அதிகரித்து வருகின்றது. சராசரி நெல் விளைச்சல் ஏக்கருக்கு 42 புசலேயாகும்.
மன்னாரில் ஏக்கருக்கு 60 புசல் வரை கிடைக்கின்றது. பொலனறுவையில் ஏக்கருக்குரிய சராசரி உற்பத்தி 80 புசலாக உள்ளது. பாசன வசதிகள் அதிகரிக்கப்படுவதாலும் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதனால் விளையக்கூடிய பயன்களை விவசாயிகளுக்கு உணரவைப்பதாலும் ஏக்கருக்குரிய உற்பத்தியை இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க இயலும். இப்பிரதேச விவசாய செய்கையில் நீர்ப்பற்றாக்குறையே முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனைத் தீர்ப்பதற்கு புதிய நீர்த்தேக்கங்கள் வாய்ப்பான இடங்களில் அமைக்கப்படுதலும் தூர்ந்த நிலையிலுள்ள குளங்களை புனரமைத்தலும் ஏலவேயுள்ள குளங்களின் நீர்க் கொள்ளளவை கூட்டுதலும் அவசியம். மகாவலி திசைதிருப்புத் திட்டம் கிழக்கே மாதுறுஓயா சார்ந்த பகுதிகளின் விருத்திக்கு வாய்ப்பாக அமையும். வடக்கே திசை திருப்ப திட்டமிட்டுள்ள மகாவலிகங்கை நீர் வடபகுதி நிலங்களுக்கும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படுமாயின் இப்பகுதிகளின் விவசாயம் பெருமளவு விருத்தியுறும் என்பதில் ஜயமில்லை.
கனிப்பொருள் வளம்.
இலங்கையில் கனிப்பொருள் வளம் பொதுவாகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதனைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகளும் குறைவே, தமிழர் பாரம்பரியப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சில வாய்ப்பான நிலைமைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் சுண்ணக்கல், களி, உப்பு, இல்மனைற் - மொனசைற், சிலிக்கா, மணல் முதலான கனிப்பொருட்கள் காணப்படுகின்றன. நிலநெய் பெறக்கூடிய சாத்தியக் கூறும் ஆராயப்பட்டு வருகின்றது. புத்தளம் தொடக்கம் பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு வடமேற்கேயுள்ள பகுதிகள் மயோசின் காலத்தே தோன்றிய சுண்ணக்கல் படிவுகளைக் கொண்டு காணப்படுகின்றன. ஏறத்தாழ 2000 கி.மீ பரப்பில் பரந்துள்ள இப்படிவுகள் பலநூறு மீற்றர் ஆழம் வரை காணப்படுகின்றன. புத்தளம், மன்னார் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குப் பகுதிகளில் இவை மேற்பரப்புப் படிவுகளாக அமைந்துள்ளன. இச் சுண்ணக்கல் படிவுகள் பெருந்தொகையாக அகழப்பட்டு காங்கேசன்துறை, புத்தளம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆலைகளில் சீமேந்து உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்டன.
யுத்தத்திற்கு முன் நாட்டின் மிகப்பெரிய சீமேந்து ஆலை காங்கேசன்துறையிலேயே அமைந்திருந்தது. சீமேந்து உற்பத்தி தவிர கண்ணாடி உற்பத்தி, கடதாசி உற்பத்தி, சீனி சுத்திகரிப்பு, நீர் சுத்திகரிப்பு, தோல் பதனிடல் போன்றவற்றுக்கும் சுண்ணக்கல் பயன்படுகின்றது. இப்பிரதேசத்தில் பெருந்தொகையாகக் காணப்படும் இன்னொரு கனிப்பொருள் களியாகும். ஆற்றுப்பள்ளத்தாக்குகள், குளங்களை அண்டிய பகுதிகள், கழிமுகங்கள் ஆகிய பகுதிகளில் களிப்படைகள் பரவலாக உள. செங்கட்டி, ஓடு முதலியவற்றை உற்பத்தி செய்யவும், சீமேந்து உற்பத்திக்குரிய துணைப்பொருளாகவும் களி பயன்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவு கல்லோயா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆலைகள்; செங்கட்டி, ஓடு ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. களியைப் பயன்படுத்தி மட்பாண்டப் பொருட்களும் குடிசைத்தொழில் அடிப்படையில் பரவலாகப் பல கிராமங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இப்பிரதேசம் நெடிய கடற்கரையையும் பல குடாக்களையும் கடலேரிகளையும் கொண்டிருப்பதோடு வறண்ட பகுதியாகும், நாட்டின் வேறு எப்பாகத்திலுமில்லாதவாறு பல உப்பளங்கள் இப்பிரதேசத்தில் பரந்துள. ஆனையிறவு, நிலாவெளி, சிவியாதெரு, இருபாலை, கரணவாய், கல்லுண்டாய், முல்லைத்Pவு முதலிய இடங்களில் உப்பு உற்பத்தி செய்யமுடியும். இப்பகுதியிலுள்ள உப்பளங்களில் ஆனையிறவு உப்பளமே மிகப் பெரியதாகும். இவ் உப்பள உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு பரந்தனில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றும் இயங்குகிறது. இல்மனைற் படிவுகளும் ஓரளவு மொனசைட், றூரைல், சேர்க்கன் படிவுகளும் புல்மோட்டை, குதிரைமலை, திருக்கோவில் முதலிய கடற்கரையோரப் பகுதி மணற் பரப்புகளில் பரந்துள்ளன. இவை அகழப்பட்டு அங்குள்ள ஆலையில் சுத்தம் செய்யப்பட்டு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிகழ்வு நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இல்மனைற் படிவுகளோடு சிறிதளவு றூரைல் சேர்க்கன் படிவுகள் கலந்து காணப்படுகின்றன. சிலிக்காமணல் சாவகச்சேரியிலும் பருத்தித்துறை தொட்டு திருகோணமலை வரை கடற்கரையோரமாகப் பரந்தும் காணப்படுகின்றது.
சிலிக்கா மணலைப் பயன்படுத்தி கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை ஒன்று நாகர் கோயிலில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை தவிர கட்டிடத் தேவைக்கு வேண்டிய கல், மணல் முதலியன இப்பகுதிகளில் பெருமளவுக்குப் பெறக்கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட புவிச்சரித ஆய்வுகள் இப்பகுதிகளில் நிலநெய்வளம் இருக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உண்டென தெரிவிக்கின்றன. அரசாங்கமும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றும் சேர்ந்து இதற்கான அகழ்வாராய்ச்சி களை அண்மைக்காலத்தில் ஆரம்பித்துள்ளன. இவ் ஆய்வுகள் வெற்றியளிப்பின் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இது அமையக்கூடும்.
மேலே குறிப்பிட்ட கனிப்பொருட்களை அடிப்படையாகக் கொண்ட சீமேந்துக் கைத்தொழில், இரசாயனக் கைத்தொழில், மட்பாண்டக் கைத்தொழில், ஓட்டுக் கைத்தொழில், கண்ணாடிக் கைத்தொழில் ஆகியவற்றை விஸ்தரிப்பதற்கும், அபிவிருத்தி செய்வதற்கும் இன்னும் பல பகுதிகளில் புதிய ஆலைகள் அமைப்பதற்கும் நிறைய வாய்ப்புகள் இப்பிரதேசத்தில் உள்ளன.
இப் பிரதேசத்தில் விவசாய வள அடிப்படையிலான பல கைத்தொழில்களும் நிறுவப்படலாம். வாழைச்சேனை கடதாசி உற்பத்தி ஆலை, கந்தளாய், கல்லோயா சீனி உற்பத்தி ஆலைகள், திருகோணமலை மா அரைக்கும் ஆலைகள் என்பன குறிப்பிடத்தக்கன. யாழ்ப்பாணக் குடாநாடு சுருட்டுக் கைத்தொழிலுக்கு பெயர் பெற்ற இடமாக நீண்ட காலமாக விளங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு பனை, தென்னை, வளங்களைப் பயன்படுத்தி கிராமங்கள் தோறும் குடிசைக்கைத்தொழில் அடிப்படையில் பலவகையான பாவனைப் பொருட்களும், அலங்காரப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இலங்கையில் தென்னைச் செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 6வீதத்தை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்குகின்றன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் இப்பிரதேசத்தின் தென்னைச்செய்கைக்குட்பட்ட நிலப்பரப்பில் 60வீதத்தை அடக்கியுள்ளன. பனைவளம் இப்பிரதேசத்தின் முக்கிய வளங்களுள் ஒன்றாக அமைகின்றது. இலங்கையில் மொத்தம் 70,000 ஏக்கர் பரப்பில் பனைவளம் உள்ளது. இதில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் 57,00 ஏக்கர் (82 வீதம்) பரப்பைக் கொண்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதியில் மாத்திரம் 42,000 ஏக்கர் பரப்பில் (60 வீதம்) பனைவளம் காணப்படுகிறது. யாழ்ப்பாணக்குடாநாட்டு பகுதிவாழ் மக்கள் பாரம்பரியமாக பனை வளத்திலிருந்து அதிக பயன் நுகர்ந்து வருகின்றனர்.
வளமற்ற நிலங்களில் வளரக்கூடிய இப்பனையில் இருந்து 80 இற்கு மேற்பட்ட பயன்கள் பெறலாமென தாலவிலாசம் எனும் நூல் கூறும். அக்கால மக்களின் உணவு, குடிபானத் தேவைகளின் ஒருபகுதியை பனைமரம் பூர்த்தி செய்தது. வீடு கட்டுவதற்கு மரமும் ஓலையும் பனைமரத்திலிருந்தே பெறப்பட்டன. விறகாயும் இதுவே பயன்பட்டது. ஆகவே அன்றைய யாழ்ப்பாணத்துக் கிராம மக்கள் பனையுடன் ஒன்றித்த வாழ்வை மேற்கொண்டிருந்தனர். பிற்காலத்தில் ஓரளவுக்கே பனைவளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. பனைவளப் பயன்பாட்டினை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசு பனம்பொருள் அபிவிருத்திச் சபை என்றதோர் அமைப்பினைத் தோற்றுவித்துள்ளது. இவ் அமைப்பு பனைவளப்பயன்பாடு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதோடு பல வேலைத்திட்டங்களை கிராமங்கள் தோறும் உருவாக்கி வருகின்றது. பனைவள அடிப்படையிலான குடிசைக்கைத்தொழில் வளர்ச்சிக்கு இந் நிறுவனம் பெரும் பணியாற்றும் என எதிர்பார்க்கலாம். பனைவளத்தைப் பயன்படுத்தி கைவண்ணப் பொருள் உற்பத்தி, சீனி உற்பத்தி, மதுபான உற்பத்தி, போன்றன அண்மைக்காலத்தில் நன்கு விருத்தியடைந்து வருகின்றன.
கடல் வளம்
கடல் வளத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்தலாமாயினும் இங்கு மின்பிடித்தலுக்காகவே இவ்வளம் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. எதிர்காலத்திலே மனிதனின் உணவுத் தேவையில் கணிசமான பங்கினை கடல் வளமே அளிக்குமென நம்பப்படுகின்றது. இலங்கையின் மீன்பிடித்தொழிலின் விருத்திக்கு அடிப்படையான பௌதிக வாய்ப்புகளை வடக்கு கிழக்கு மாகாணங்களே பெருமளவு கொண்டுள்ளன. 1100 மைல் நீள நெடிய கடற்கரையோரத்தை கொண்ட இலங்கையின் கண்டத்திட்டின் பரப்பளவு 12,000 சதுரமைல்களாகும். இதில் 73 வீத பரப்பளவு வடகிழக்கு மாகாணம் சார்ந்துள்ளது. தென்னிந்தியா வரை பரந்துள்ள வடபகுதி கண்டத்திட்டு மட்டும் நாட்டின் மொத்தக் கண்டத்திட்டுப் பரப்பளவில் 57 வீதத்தைக் கொண்டுள்ளது. வட கண்டத்திட்டில் அமைந்துள்ள பேதுரு கடல்மேடை, முத்துக் கடல்மேடை, உவாட்ஸ் கடல்மேடை, என்பன மீன்வளம் மிக்க பகுதிகளாகும். ஆழமற்ற இக்கடல் மேடைகளில் சூரிய ஒளி அடித்தளம் வரை ஊடுருவிச் செல்ல இயல்வதால் மீனுணவான நுண்ணுயிர்களின் வளர்ச்சி இப்பகுதிகளில் அதிகமாகும். இதுவே மீன்வளம் அதிகளவு காணப்படுவதற்குக் காரணமாய் அமைகின்றது. இப்பிரதேசக் கடற்கரையோரங்கள் குடாக்களையும், கடனீரேரிகளையும், பெருமளவு கொண்டுள்ளதால் மீன்பிடித்துறைமுகங்கள் ஏற்படுத்தவும் வசதியை அளிக்கின்றன. தென்மேற்கு மொன்சூன் வேகமாக வீசும் திசைக்கு ஒதுக்குப்புறமாக இப்பிரதேசம் அமைந்துள்ளதாலும் வடக்கு மொன்சூன் மென்மையாக வீசுவதாலும் வருடம் முழுவதும் இப்பகுதிகளில் மீன்பிடித்தல் இடம்பெறுவதற்குரிய சாதகமான நிலை உண்டு.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் வருடத்திற்கு 12,56980 அந்தர் உடன் மீனும் 1,10099 அந்தர் பதனிடப்பட்ட மீனும் பெறப்படுகின்றது. இலங்கையின் மொத்த உடன் மீன் உற்பத்தியில் இப்பிரதேசம் 52வீதத்தையும் பதனிடப்பட்ட மீன் உற்பத்தியில் 90வீதத்தையும் யுத்த காலத்திற்கு முன்னர் வழங்கிற்று. மீன்பிடித்தொழில் தவிர மன்னாரில் முத்துக்குளித்தலும், மட்டக்களப்பு பகுதிகளில் இறால் பிடித்தலும, யாழ்ப்பாணப் பகுதிகளில் கடலட்டை பதனிடுதலும் குறிப்பிடக்கூடிய வருமானத்தையளித்து வருகின்றன. கடலுணவு உற்பத்தியிலும் மீன்பிடித் தொழிலுக்கு வேண்டிய உபகரண உற்பத்தியிலும் காரைநகரில் அமைந்துள்ள சீநோர் நிறுவனம் குறிப்பிடத்தக்க பணியாற்றி வருகின்றது.
இப்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலின் புராதன முறைகளே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை நவீனமயப்படுத்தப்படின் மீன்பிடித் தொழில் பெருமளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இயந்திர வள்ளங்களின் பாவனையை அதிகரித்தல், மீன்பிடித்தலில் புதிய முறைகளை பயிற்றுவித்தல், புதிய மீன்பிடி உபகரணங்களை மீன்பிடி தொழிலாளர்கள்; இலகுவில் பெற வழிவகை செய்தல், மீன்பிடித் துறைமுகங்களை அதிகரித்தல், மீனைப் பழுதடையாது பாதுகாக்கும் வசதிகளையும் போக்குவரத்து வசதிகளையும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படின் மீன்பிடித் தொழில் இப்பகுதியின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததோர் தொழிலாக அபிவிருத்தியுறுமென்பது திண்ணம். இது தவிர விலங்கு வேளாண்மையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள. பால் உற்பத்தி, இறைச்சி உற்பத்தி, தோல் பதனிடுதல் போன்ற தொழிற்றுறைகள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகளவு விருத்தியடையக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்திலே கல்வித்திறன், தொழில்நுட்ப ஆற்றல் கொண்ட பண்பாட்டில் சிறந்த மக்கள் வாழ்கின்றார்கள். இவர்கள் இப்பிரதேசம் கொண்டுள்ள பொருளாதார வளங்களைத் திட்டமிட்ட முறையில் முறையாகப் பயன்படுத்தினால் விவசாயமும், கைத்தொழிலும் பெருமளவு விருத்தியுறும். தமிழர் தம் பிரதேச அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு அயராது உழைப்பார்களேயாயின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தை சுயநிறைவுப் பொருளாதார வளம் கொண்ட பகுதியாக மாத்திரமன்றி பல்வேறு மேலதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய பூமியாக மாற்ற முடியும்.
ஆக்கம்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்
(புவியியற்றுறை பேராசிரியர்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்
E-mail:
Mobile: 0777 266075
- சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும்.
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாயத் தொழிற்றுறைக்கான விரிவாக்கம்
- இலங்கைத் தமிழர் பாரம்பரியப் பிரதேசம் - விவசாய அபிவிருத்தியும் நீர்வளப் பயன்பாடும்
- இலங்கையின் தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மாற்றுச் சக்தி வளங்கள்
- வானம் ஏன் நீல நிறத்தில் தோற்றமளிக்கின்றது?
- மார்கழி மாதம் ஓசோன் ரகசியம் - உங்களுக்குத் தெரியுமா?
- நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்
- 'கடி' மன்னன் மனிதனே
- பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
- சூறாவளி எப்படி உருவாகிறது?
- நிறம் காண திணறும் மூளை
- ஏறு பூட்டாமல் சோறு சாப்பிடலாம்
- வெறுங்கால் ஓட்டம்.....வேகமான ஓட்டம்
- மனிதன் தோன்றியது எப்படி?
- ஆணா... பெண்ணா... வேறுபடுத்தி அறிவது எப்படி?
- இனிக்கும் ஒயினில் கசக்கும் மூலிகை
- சுவைகள் ஆறு அல்ல இருபத்தைந்து
- சமையலும் இரசாயன மாற்றமும்
- வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- உரோமம் நரைப்பது ஏன்?