கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
சிகப்பு முட்டைக்கோஸை நறுக்கி சூடான வாணலியில் வதக்கும்போது சிகப்பு நிறம் தரும் anthocyanine நிறமி வெப்பத்தால் சிதைவடைந்து அமிலத்தன்மை மறைந்து காரத்தன்மை தோன்றுகிறது. இதனால் சிகப்புநிறம் மறைந்து போகிறது. கொஞ்சம் வினிகர் சேர்த்தால் அமிலத்தன்மை உண்டாகி மறுபடியும் சிகப்புநிறம் தோன்றுகிறது. கொஞ்சம் சமையல்சோடா சேர்க்கும்போது அதுவே நீலநிறமாகிறது.
தேவைக்கு அதிகமாக சூடுபடுத்துவது நல்லது அல்ல. ஏனென்றால் அதிக வெப்பத்தால் தாவரங்களின் செல்சுவர்கள் சுருங்கி அமிலத்தை வெளிவிடுகின்றன. இதனால் வேகவைக்கப் பயன்படும் நீர் அமிலத்தன்மை பெறுகிறது. இதனால் பசுமையான காய்கறிகள் இயற்கையான பச்சை நிறத்தை இழக்கின்றன.
Asparagus என்னும் காய்கறியை நீண்டநேரத்திற்கு சூடுபடுத்துவதால் செல்சுவர்கள் சுருங்கி அமிலத்தை வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக அந்த உணவுப் பொருள் சாம்பல் நிறத்திற்கு மாறுகிறது. ஆனால் கொதிநீரில் இந்த asparagus ஐ போடும்போது செல்களில் மீண்டும் நீர் நிரம்பி பசுமை நிறம் தோன்றுகிறது.
முந்தின நாள் இரவில் பச்சை நிறத்தில் இருந்த பதமான வாழைப்பழம் அடுத்த நாள் காலையில் கனிந்து போவது ஏன்? எத்திலீன் வாயுவின் திருவிளையாடல்தான் இதற்குக் காரணம். பழுக்காத avocado காயுடன் பழுத்த ஓர் ஆப்பிள் பழத்தை காகிதத்தில் சுற்றி வைத்தால் காய் பழமாகும். எளிதான இதுபோன்ற வித்தைகளை அறிந்தால் சமைப்பதும் இனிமையானதே.
சமைப்பதற்குமுன் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்துகொள்வது நல்லது. அமிலங்களில் ஹைட்ரஜன் நேர்மின்னூட்டங்கள் மிகுதியாகவும் ஹைட்ராக்சில் எதிர்மின்னூட்டங்கள் குறைவாகவும் இருக்கும். நீரின் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ pH அளவுகோலைக் கொண்டு அளக்கப்படுகிறது. காய்ச்சி வடிக்கப்பட்ட தூய்மையான நீரின் pH மதிப்பு 7 என்று கொள்ளப்படுகிறது. pH மதிப்பு 7ஐவிட குறைவாக இருந்தால் அந்த நீர் அமிலத்தன்மை உடையது எனவும், pH மதிப்பு 7ஐவிட அதிகமாக இருந்தால் அந்த நீர் காரத்தன்மை உடையது எனவும் தெரிந்து கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழச்சாறு ஒரு சாதாரணமான அமிலம். பிளீச்சிங் தூள் ஒரு சாதாரணமான காரம்.
சமைப்பதற்கு ஆர்வமுள்ளவர்கள் உணவு ஏன் கெட்டுப்போகிறது என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். உணவை தவறாக பக்குவப்படுத்துதல், சேமித்தல் ஆகிய காரணங்களால் உணவு கெட்டுப்போகிறது. உணவை சூடுபடுத்துவதாலும், ஆக்சிஜனுடன் தொடர்பு ஏற்படுத்துவதாலும் உணவு கெட்டுப்போக வாய்ப்பு ஏற்படுகிறது. நம் முன்னோர்கள் உணவுப் பொருளை கெட்டுப் போகாமல் பாதுகாக்க உப்பை பயன்படுத்தினர். சர்க்கரையைப் பயன்படுத்தி பழங்களை கெட்டுப் போகாமல் பாதுகாத்தனர். சில மூலிகைகள், வாசனைப் பொருட்கள், வினிகர் இவையெல்லாம் உணவைப் பாதுகாக்க உதவுகின்றன. இவையெல்லாம் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ நிறைந்தவை.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
நமது அனுமதி இல்லாமலேயே நம்முடைய வாயில் 600 விதமான பாக்டீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உடல் செல்களின் எண்ணிக்கையைப்போல் பத்துமடங்கு அதிகம் என்பது இன்னும் வியப்பானது இல்லையா?
ஆம். அதுதான் உண்மை. உங்களுடைய வாயில் உள்ள பாக்டீரியா குடும்பமும் உலகின் வேறொருபகுதியில் வாழும் இன்னொருவரின் வாயில் வாழும் பாக்டீரியா குடும்பமும் ஒன்றுபோல் இருப்பது என்பது அதைவிட வியப்பானது. உலகம் முழுவதிலுமிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபிறகு இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
மனிதனின் சிறுகுடலிலும், தோலிலும் குடியிருக்கும் பாக்டீரியாக்கள் பற்றியே இதுவரை ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வந்தன. இப்போது மனிதனின் வாயில் வாழும் பாக்டீரியாக்களைப்பற்றி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நோய்களின் நுழைவுப்பாதை வாய் என்பதால் இந்த ஆய்வு இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஜெர்மனியின் மாக்ஸ்ப்ளங்க் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் டாக்டர் மார்க் ஸ்டோன்கிங் என்பவரும் அவரது குழுவினரும் உலகம் முழுவதிலும் இருந்து உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து வகைப்படுத்தி ஆராய்ந்து வருகின்றனர். ஆரோக்கியமான 120 நபர்கள் புவிப்பரப்பின் ஆறு வேறுபட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து உமிழ்நீர் மாதிரிகள் திரட்டப்பட்டன. செல்லின் முக்கியமான பகுதிப்பொருளாகிய ரிபோசோம்களில் உள்ள 16S rRNA ஜீன்களில் புதைந்துள்ள ரகசியங்களை வெளிக்கொணரும் ஆய்வுகளை ஸ்டோன்கிங் குழுவினர் தற்போது நடத்திவருகின்றனர். வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே உள்ள வேறுபாடுகளையும் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் நோய்கள் இவற்றுடன் உள்ள தொடர்பையும் இன்னும் ஆராய வேண்டியுள்ளது. உணவு, கலாச்சாரம் இவற்றிடையே மனிதர்களிடம் வேறுபாடு இருந்தாலும் அவர்களுடைய வாயில் வாழும் பாக்டீரியாக்களிடையே ஒத்தகுணம் இருப்பதைக் கண்டு ஸ்டோன்கிங் வியக்கிறார்.
உமிழ்நீரை ஆராய்தல் என்பது முகம் சுளிக்கவைக்கும் செயல் என்றாலும், நம்முடைய வாயில் யார் குடியிருக்கிறார்கள் என்பதும் அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன என்பதையும் நாம் தெரிந்துகொள்வது முக்கியமில்லையா? நம்முடைய பிள்ளைகள் கைசுத்தமாகவும், வாய்சுத்தமாகவும் வாழவேண்டியது அதைவிட முக்கியமில்லையா?
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
“நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.
நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்.
மனிதர்களின் உரோமக்கால்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. உரோமக்கால்களில் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடையச் செய்யும் பணியை MSR A and B என்னும் என்சைம்கள் செய்கின்றன. MSR A and B என்சைம்கள் சுரப்பது குறைவடையும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்துபோகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் tyrosinase என்னும் என்சைம் உற்பத்தியாவதும் நின்று போய்விடுகிறது. மயிர்க்கால்களில் மெலனின் சுரப்பதற்கு இந்த tyrosinase எனப்படும் என்சைம்தான் காரணம்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: புவி அறிவியல்
இரவெல்லாம் கண்விழித்துப் படித்துக்கொண்டிருகிறான் மகன். “கொஞ்சநேரம் தூங்குப்பா! அப்புறம் படிக்கலாம்” என்று தாய் சொல்வது இயற்கை. தற்கால பாடத்திட்டத்தில் அதை மகன் மறுப்பதும் இயற்கைதான். ஆனால் தாயின் வேண்டுகோள் அறிவியல் பூர்வமாக உண்மையானதும் நேர்மையானதும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறக்கத்திற்கும் நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்து முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள். உறக்கநிலையில் உள்ள மூளைசெல்களில் எவ்வாறு நினைவாற்றலை மேம்படுத்தும் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அந்த முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
அதாவது, உறக்கத்தின் விளைவாக செல்கள் அளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதும் செல்களுக்கிடையேயான பிணைப்பு உறக்கத்தின்போது வலிமைபெறுகின்றன என்பதும்தான் இந்த புதிய கண்டுபிடிப்பு.
விழிப்புநிலையில் உள்ள மூளையும் உறக்கநிலையில் உள்ள மூளையும் அடிப்படையில் வேறுபட்டது என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஃப்ராங்க். விலங்கினங்களில் செய்யப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதனின் நினைவாற்றல் தொடர்பான புதிர்களை அவிழ்ப்பதற்கும் பயன்படும் என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.
விழிப்புநிலையில் இருக்கும் ஒரு விலங்கின் மூளை நியூரான்களில் உயிரி-இரசாயன மாற்றங்கள் நிகழ்வது இல்லை என்றும், உறக்க நிலைக்கு மாறிய விலங்கின் மூளையில் நினைவாற்றலை மேம்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் ஏற்படுவது வியப்பிற்குரிய செய்தி என்கிறார் பேராசிரியர் ஃப்ராங்க்.
இதே பொருள் குறித்து சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் நுஸ்பாம் என்பவரும் ஆராய்ந்துள்ளார். பிரச்சினை சிக்கலானதாகவும் தீர்வுகாண இயலாததாகவும் இருக்கும்போது கொஞ்சநேரம் தூங்கி எழுந்தால்போதும். தீர்வு தெளிவாகிவிடும். இரவின் ஆழ்ந்த உறக்கம் நினைவாற்றலை தேக்கிவைக்கும் திறனை மேம்படுத்துகிறது. இதுமட்டுமல்லாமல் பகல்நேரத்தில் மறந்துபோன செய்திகளைக்கூட மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்து விடுகிறது. உறக்கத்தின் மகிமை இதுதான். இதைத்தான் சிக்காகோ பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பேராசிரியர் ஹோவர்ட் நுஸ்பாம் அவர்களின் உறக்கம், நினைவைத் தேக்கிவைத்தல் இவற்றிற்கிடையே உள்ள உறவை மெய்ப்பிக்கும் சோதனை படிக்கச் சுவையானவை.
ஒலிநாடாவில் பதிவுசெய்யப்பட்ட உரையின் தெளிவற்ற ஒலிமீட்பை மூன்று குழுக்களாக இருந்த கல்லூரி மாணவர்களை கேட்கச் செய்தார். முதல் குழு முதன்முறையாக அந்த உரையின் 21 சதவீத சொற்களை மட்டுமே புரிந்துகொண்டனர். ஒரு மணிநேர பயிற்சிக்குப் பிறகு அதே குழு 54 சதவீத சொற்களை புரிந்துகொண்டது. இது சாதாரணமாக கற்றல் போன்ற ஒரு நிகழ்வுதான்.
இரண்டாவது குழுவினரை காலை 9 மணிக்கு ஒரு முறையும், இரவு 9 மணிக்கு மற்றொருமுறையும் அந்த உரையை கேட்கச் செய்தார். இந்த மாணவர் குழு 31 சதவீத சொற்களை நினைவில் வைத்திருந்தனர். ஒர் இரவின் நிம்மதியான உறக்கத்திற்குப் பின்னர் இந்தக் குழுவின் சொற்களை நினைவில் வைத்திருக்கும் திறன் 40 சதவீதமாக உயர்ந்தது. மூன்றாவது மாணவர் குழுவிடம் மாலை 9 மணிக்கும், மீண்டும் உறக்கத்திற்குப் பிறகு காலையிலும் இதே சோதனை நடத்தப்பட்டது. சொற்களைத் தேக்கி வைக்கும் திறன் இந்தக்குழுவிடம் அதே 40 சதவீதமாக இருந்தது. உறக்கம் நமக்குத் தேவையில்லாத செய்திகளை அழித்து தேவையான செய்திகளை வலுப்படுத்தி நினைவலைகளாக மூளையில் பதியச் செய்கிறது.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- நினைவாற்றல்
- கடல்மட்டம் தாழ்வாக இருந்தது உண்மையா?
- பூமி வெப்பமடைந்தால் மாரடைப்பு, சுவாசக் கோளாறுகளால் இறப்போர் எண்ணிக்கை கூடும்
- தாகம் - ஒரு அறிவியல் பார்வை
- சரகன் என்னும் மாமேதை
- அழ வைக்கும் வெங்காயம்.
- வயதானால் மூளை மழுங்குமா?
- இசை பயின்றால் அறிவுத் திறன் பெருகும்
- சிறிய பயணிகள், பெரிய பயணம்
- தெய்வங்களும், முரட்டு தெய்வங்களும்.
- கால்நடைகளுக்கும் அக்குபங்சர் மருத்துவம்
- விளையும் பயிர் முளையிலே
- நில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்
- மிதக்கும் பன்னாட்டு ஆய்வகம்
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- ராமேஸ்வரத்தில் நில நடுக்கம் ஏன்?
- ஈறுகெட்ட நாகரிகம்
- பூமிக்கு அடியில் ஆராய்ச்சி
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?