உலகில் மிக விலையுயர்ந்த, தேவை அதிகம் உள்ள, உணவுடன் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றே வெள்ளை டிரஃபிள் (White truffle) எனப்படும் இந்தப் பூஞ்சை. இந்த அதிசயப் பூஞ்சை தெற்கு ஐரோப்பாவில் காணப்படுகிறது. இது மிக அதிக நறுமணம் மற்றும் தீவிர ருசிக்குப் புகழ் பெற்றது. டுயூபரேசி என்ற பூஞ்சைக் குடும்பத்தில் டியூபர் மக்னாட்டம் (Tuber magnatum) என்ற அறிவியல் பெயருடைய இது வெள்ளை டிரஃபிள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

ஐந்து அங்குலம் வரை வளரும் இவை அரை கிலோ வரை எடை உடையவை. 2009ல் ஒரு கிலோ பூஞ்சை பத்து இலட்சத்திற்கும் மேல் விலை விற்றது. 1.9 கிலோ வரை எடையுள்ள பூஞ்சை 2021ல் நியூயார்க்கில் 50.68 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மண்ணில் ஒருசில அங்குலம் முதல் அரை மீட்டர் வரை ஆழத்தில் வளரும் இதை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.

அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இவற்றை காடுகளில் இருந்து சேகரிக்க முடியும். ஓக், அசல் நட், ஓக்லர் போன்ற மரங்களின் அடியில் வேர்களில் இருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு பூமிக்கடியில் வளரும். இவை வளரும் மரத்தைப் பொறுத்து இவற்றின் வாசனை வேறுபடும். சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களைக் கொண்டே இப்பூஞ்சை கண்டுபிடிக்கப்படுகிறது.

நாய்களுக்கு சிறு வயது முதலே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்காக நாய்க்குட்டி பால் குடிக்க ஆரம்பிக்கும்போது தாய் நாயின் முளைக்காம்பில் டிரஃபிள் தடவி குட்டிக்கு அதன் வாசனை கற்றுத் தரப்படுகிறது. முன்பு பூஞ்சையைத் தேட பன்றிகளும் பயன்படுத்தப்பட்டன. பூஞ்சை கிடைத்தால் பன்றி அதைத் தின்னாமல் இருக்க அதன் மூக்கைச் சுற்றி ஒரு வளையம் பொருத்தப்படும். பூஞ்சை கிடைக்குமிடத்தை ஒவ்வொருவரும் பரம இரகசியமாகப் பாதுகாக்கின்றனர்.White truffleஏன் விலைமதிப்புமிக்கது?

இது அபூர்வமானது, கிடைப்பதற்கரியது. சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். தேவை மிக அதிகம். இதனால் இது விலை மதிப்புமிக்கது. இத்தாலியில் அவாலக்ன என்ற இடத்தில் ஆண்டுதோறும் மூன்று முறை இதற்காக திருவிழாக்கள் நடக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்சையில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு கிடைக்கிறது. இங்கிருந்து ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் நடக்கும் இதற்கான தேசீய கண்காட்சியில் (National truffle fair) இதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும். இத்தாலியின் பிரபல சமையல் நிபுணர்கள் இங்கு வந்து நேரடியாக சமையல் காட்சிகளை (cooking shows) நடத்துகின்றனர். இது இத்தாலியில் நடைபெறும் ஒரு முக்கிய விவசாயத் திருவிழா.

வரலாற்றுச் சிறப்புகள்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இத்தாலி, பிரான்சில் சமையலிற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் இப்பூஞ்சை ரோமாபுரி காலத்திலேயே பிரமுகர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று என்று நேச்சராலிஸ் ஹிஸ்ட்டாரிகா என்ற நூல் கூறுகிறது. இது விருதாகவும் வழங்கப்பட்டது. மத்திய காலகட்டத்தில் போப் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து சலுகைகளைப் பெற முனிசிபாலிட்டிகள் அவர்களுக்கு இதைப் பரிசாகக் கொடுத்தனர்.

சமையல் சிறப்புகளும் மருத்துவ குணங்களும்

பாஸ்தா, ரிஸோட்டோ, முட்டை, இறைச்சி போன்ற உணவு வகைகளில் சுவையூட்ட இது சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. சமையல் பயன் தவிர, மருத்துவ குணங்களிலும் இது சிறந்து விளங்குகிறது. வீக்கத்திற்கு நிவாரணியாக, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பாற்றல் பெற உதவுகிறது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆண்டி ஆக்சிடெண்ட் குணமுடையது. சமைத்து முடித்த பிறகு சுரண்டி எடுக்கப்படும் இதை மறுபடியும் வேக வைக்க வேண்டியதில்லை.

அதிக காலத்துக்கு இதைப் பாதுகாத்து வைக்க முடியாது. சேகரித்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். முன்பு இது எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி உறுதியான கருத்துகள் இல்லை. புராதன கிரேக்கர்கள், கிரேக்கக் கடவுள் சியூஸ் தேவன் மிக சக்தி வாய்ந்த மின்னல்களை பூமிக்கடியில் அனுப்பும்போதே இது உருவானது என்று நம்பினர். சமீபத்தில் போஸ்னியா ஹெக்ஸோகொவினா பிரதேசத்தில் இது பெருமளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கான தேடல் ஜனரஞ்சகமான ஒரு நிகழ்வாக மாறியது.

பயிர் செய்ய முடியுமா?

இதற்கிடையில் பிரான்ஸில் 2022ல் இதை பயிர் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றன என்று செய்திகள் கூறின. தங்கத்தின் பாதி விலையுள்ள, நாய்களால் மட்டுமே கண்டு பிடிக்கப்படக் கூடிய இந்த அதிஅற்புதமான பூஞ்சை பலவகையான அக்கிரமங்களுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாவதுண்டு.

பயிற்சி பெற்ற நாய்களை கடத்திக் கொண்டு போய் அவற்றை நஞ்சு வைத்துக் கொல்ல வாய்ப்பு உள்ளதால், அவற்றிற்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதைத் தேடிக் கண்டுபிடிக்க அதிக பயிற்சி தேவை. இதனால் இதற்குரிய திறமைகள் தலைமுறைகள் கடந்து இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. சிறிய வயது முதலே குழந்தைகளுக்கு இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பூஞ்சையைக் கண்டுபிடிப்பதற்குள்ள சாத்தியக்கூறில் மூன்றில் ஒரு பகுதி நாயுடையது. மற்றொரு பகுதி தேடும் மனிதருடையது. இன்னுமொரு பகுதி அந்தப் பிரதேசத்தின் இயல்பைப் பொறுத்தது.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/eco-story-column-on-the-fungus-white-truffles-1.8329688

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

15 டிகிரி செல்சியஸில் நுண் பிளாஸ்டிக்குகளை உண்ணும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆல்ப்ஸ் மற்றும் ஆர்க்டிக்கில் இருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சியில் இது திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல நுண்ணுயிரிகள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும் அவை 30 டிகிரி செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பநிலையில் மட்டுமே இயங்குபவை.

இந்த நுண்ணுயிரிகள் தொழிற்சாலைகளில் இவற்றைப் பயன்படுத்த அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இது அதிக செலவு பிடிக்கக் கூடியது. தொழிற்சாலை நடைமுறையில் இது கார்பன் நடுநிலைத் தன்மையற்றது. ஆனால் இப்போடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.plastic bottles 720பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும்

சுவிஸ் பெடரல் கழகத்தின் (WSL) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை, Frontiers in microbiology என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிஸ் கழகத்தின் டாக்டர் ஜோல் ரூத்தை (Dr Joel Ruthi) மற்றும் அவரது குழுவினர் 19 பாக்டீரியா, 15 பூஞ்சை மாதிரிகளை க்ரீன்லாந்து, ஸ்வால்பார்டு (Svalbard) மற்றும் சுவிட்சர்லாந்தில் ஓராண்டு காலம் மண்ணில் புதைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் வளர்த்து ஆராய்ந்தனர்.

திசு வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணுயிரிகள் உட்கொள்ளும் பல்வேறு வகை நுண் பிளாஸ்டிக்குகள் ஆராயப்பட்டன. இந்த நுண்ணுயிரிகள் 13 ஜெனரா (13 genera) வகையைச் சேர்ந்த பைலோ ஆக்டினோ பாக்டீரியா (Phyla actinobacteria), ப்ரோட்டோ பாக்டீரியா (Proteobacteria) ஆகிய பாக்டீரியா வகைகளைச் சேர்ந்தவை.

10 ஜெனரா வகையைச் சேர்ந்த பைலோ அஸ்காமிகோடா (Phyla ascomycota), மியூக்கோராமிகோடா (Mucoromycota) பூஞ்சையினங்களும் ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டன.

பிளாஸ்டிக் வகைகள்

மக்கும் தன்மையற்ற பாலி எத்திலீன் (PE), மக்கும் தன்மையுடைய பாலியெஸ்ட்டர், பாலி யூரித்தேன் (Poly Urethane PUR) மற்றும் வணிகரீதியாகக் கிடைக்கும் பாலி ப்யூட்டிலின் அடிபேட் தெரிஃப்ப்தேலேட் (Polybutylene adipate terephthalate PBAT) பாலி லேக்டிக் அமிலம் (PLA) ஆகியவை கலந்த கலவை பயன்படுத்தப்பட்டன.

எந்த நுண்ணுயிரி வகையும் 126 நாட்கள் வைக்கப்பட்டிருந்த பிறகும் பாலி எத்திலீனை மக்கச் செய்யவில்லை. ஆனால் ஆராயப்பட்டதில் 56% நுண்ணுயிரிகள் அதாவது 11 பாக்டீரியாக்கள் மற்றும் 9 பூஞ்சையினங்கள் 15 டிகிரி செல்சியஸில் பாலி யூரித்தேன் பிளாஸ்டிக்குகளை உண்டன. 14 பூஞ்சைகள், 3 பாக்டீரியாக்கள் பாலி ப்யூட்டிலீன் அடிபேட் தெராஃப்ப்தலேட் மற்றும் பாலி லேக்டிக் அமிலம் கலந்த பிளாஸ்டிக் கலவையை உட்கொண்டன.

குறைந்த செலவில் மறுசுழற்சி

இதன் மூலம் நொதித்தலால் நடைபெறும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஆகும் செலவு மற்றும் சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆராயப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகை நுண் பிளாஸ்டிக்கை உட்கொண்டன. மேலும் விஞ்ஞானிகள் Nneodevriesia, Lachnellula ஆகிய பூஞ்சையினங்கள் பாலி எத்திலீனை தவிர மற்ற எல்லா வகை நுண் பிளாஸ்டிக்குகளையும் உட்கொள்கின்றன என்று கண்டறிந்தனர்.

1950களில் இருந்தே பிளாஸ்டிக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தாவர செல்களில் இருக்கும் சில அமைப்புகளை நுண்ணுயிரிகள் ஒத்திருப்பதால் அவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. தாவர செல் சுவர்களை உடைக்கும் செயலின்போது நுண்ணுயிரிகள் பாலிமர்களை மக்கச் செய்யும் நொதிகளை உற்பத்தி செய்கின்றன என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் பீட் ஃப்ரே (Dr Beat Frey) கூறுகிறார்.

பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கும் பூஞ்சைகள்

தாவரங்களில் கிருமிகளை உண்டாக்கும் பூஞ்சைகள் பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கின்றன. இப்பூஞ்சைகள் க்யூட்டினேசிஸ் (Cutinases) என்னும் பொருளை உற்பத்தி செய்யும் திறண் பெற்றுள்ளன. இது தாவரங்களில் இருக்கும் க்யூட்டின் போன்ற பாலிமரை ஒத்திருப்பதால் இவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் 4 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை நன்கு வேலை செய்கின்றன.

பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்யும் நொதிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரி வகைகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் மாசைப் பெருமளவில் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/may/10/microbes-digest-plastics-low-temperatures-recycling?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கோஸ்ட்டரிக்காவில் 16 ஆண்டுகள் ஆண் துணையில்லாமல் வாழும் கன்னி முதலை முட்டையிட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டை 99.9% தாயின் மரபியல் அம்சங்களுடன் கூடிய முழு வளர்ச்சி அடைந்த கருவுடன் உள்ளது. விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உயிரியல் கடிதங்கள் (Journal Biology letters) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.

டைனசோர் முட்டை

முதலைகளின் பொதுவான மூதாதையர்களான டைனசோர்களும் ஒரு காலத்தில் இவ்வாறே ஆணின் துணையில்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு சுயமாக இனப்பெருக்கம் செய்வது Facultative parthenogenesis என்று அழைக்கப்படுகிறது. பறவைகள், மீன்கள், பல்லிகள், பாம்புகளின் சில இனங்களில் கன்னித் தன்மையுடன் புதிய வாரிசுகள் உருவாகியுள்ளது பற்றி முன்பே அறியப்பட்டுள்ளது. ஆனால் முதலையினத்தில் இது நிகழ்வது இதுவே முதல்முறை.american crocodileஆண் இனத்தின் விந்தணு உதவியில்லாமல் முட்டை கருவுறுவதையே இந்த நிகழ்வு குறிக்கிறது. க்ராக்கடிலஸ் அக்யூக்கஸ் (Croccodylus Acucus) என்ற இந்த முதலை இரண்டு வயதாக இருக்கும்போது பிடிக்கப்பட்டு கோஸ்ட்டரிக்கா விலங்கு காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக இது தனிமையில் வாழ்கிறது.

பதினான்கில் ஒன்று

2018 ஜனவரியில் காட்சி சாலை ஊழியர்கள் முதலை வாழும் இடத்தில் 14 முட்டைகளைக் கண்டுபிடித்தனர். இவை எவையும் பொரியவில்லை. ஆனால் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

கருவில் இருந்த உயிரியின் இதயத்திசுக்கள் தாயின் ஓட்டில் உள்ள செல்களுடன் ஒப்பிட்டு மரபியல் ரீதியாக ஆராயப்பட்டது. கருவில் இருந்த சிசு தாயைப் போலவே 99.9% ஒத்திருந்தது. இதன் மூலம் ஆண் துணையில்லாமலேயே இந்த கரு முட்டை உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வகை சுய இனப்பெருக்கம் மிக அரிதாகவே நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு உயிரினம் சாதகமற்ற சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும்போது இணையில்லாத நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு ஆளாகின்றன. அப்போது இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/jun/07/scientists-record-first-known-virgin-birth-in-female-crocodile-in-costa-rica?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

சிங்கம் பல உலகக் கலாச்சாரங்களில் சக்தி, வலிமை, கம்பீரம், அதிகாரம் மற்றும் செழுமையின் சின்னமாகக் கருதப்படுகிறது. தங்கள் கூட்டத்தில் இருப்பவர்களை, தாங்கள் வசிக்கும் பகுதியின் எல்லையைப் பாதுகாப்பதில் எப்போதும் முனைப்புடன் இருப்பதால் இவை பல நாடுகளின் அடையாளச் சின்னங்களில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆப்பிரிக்கா, இந்தியாவில் ஒரு காலத்தில் அதிக அளவில் வாழ்ந்துவந்த இவை இப்போது ஆப்ப்ரிக்காவின் சில பிரதேசங்கள், இந்தியாவில் குஜராத் கிர் வனங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கின்றன. இன அழிவைச் சந்திக்கும் அச்சுறுத்தல் உள்ள ஒரு வனவிலங்கு என்றாலும், இவை பண்ணைகளில் வளர்க்கப்பட்டு இவற்றின் உடற்பாகங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கூண்டில் சிங்கங்கள்

2016-2019ல் 3,300 சிங்கங்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. இவற்றின் எலும்புகள், உடற்பகுதிகள் வியட்நாம், லாவோஸ், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் பெரும்பகுதியும் சட்டப்பூர்வ அங்கீகாரத்துடனேயே நடந்தது. ஒரு ஆண்டிற்கு 1500 உடல் பாகங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.lion 466ஒரு காலத்தில் ஆப்பிரிக்கா முழுவதும் வாழ்ந்த இவற்றின் 80 சதவிகிதமும் இப்போது சஹாராவிற்கு தெற்கில் வாழ்கின்றன. இவற்றின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி டான்ஜானியாவில் வாழ்கின்றன. இங்கு வாழும் சிங்கங்களின் எண்ணிக்கை 15,000. சமீபகாலத்தில் ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் இருந்து மறைந்த இவை, இன அச்சுறுத்தல் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய வைத்தியத்தில் புலியின் எலும்புகளை கொதிக்க வைத்து அதில் இருந்து உண்டாக்கப்படும் மருந்துகள் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகளில் வாதம், மூட்டுவலிக்கு மருந்தாகவும், இனப்பெருக்கத் திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இதில் எந்தவிதமான அறிவியல் உண்மையும் இல்லை.

1900களில் இலட்சக்கணக்கில் இருந்த புலிகளின் எண்ணிக்கை குறைந்து வெறும் 1,000 ஆகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் புலியின் உடற்பாகங்களை ஏற்றுமதி செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் புலிக்குப் பதில் சிங்கத்தின் எலும்புகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. இப்போது ஆப்பிரிக்க சிங்கங்கள் இன அழிவை எதிர்நோக்கும் உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்க சஃபாரி

தென்னாப்பிரிக்கக் காடுகளில் இப்போது இயற்கைச் சூழலில் 3,500 சிங்கங்கள் மட்டுமே வாழ்கின்றன. கூண்டுகளில் வளர்க்கப்படும் இவற்றின் எண்ணிக்கை சுமார் 10,000. ஜொஹானஸ்பர்க் மற்றும் பிற இடங்களில் சஃபாரி பூங்காக்களில் இவற்றிற்கு தீவனம் போட, படமெடுக்க, சிங்கக்குட்டிகளை கொஞ்சி விளையாட, அவற்றுடன் நடக்க சுற்றுலாப் பயணிகளிடம் பூங்கா உரிமையாளர்கள் பணம் வசூலிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் செயல்படும் 300 பண்ணைகளில் தனி நபர்களின் கைவசம் இருக்கும் இந்த சிங்கங்களை சுட்டுக் கொல்ல, அவற்றின் தலை, தோல், எலும்புகள், நகங்கள் போன்றவற்றை வேட்டையாடுபவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு பரிசுப் பொருட்களாகக் கொண்டு செல்ல உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களை பயணிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கின்றனர்.

போலி சமாதானம்

சட்டப் பின்துணையுடன் இவ்வாறு வளர்த்து விற்பதால் காட்டில் இருக்கும் சிங்கங்கள் திருட்டுத்தனமாகப் பிடிக்கப்படாமல் பாதுகாப்புடன் வாழும் என்று வேட்டையை நடத்துபவர்கள் வாதாடுகின்றனர். ஆனால் இதற்கு எதிர்மாறாகவே செயல்கள் நடக்கின்றன. பன்னாட்டுத் தேவைகள் அதிகரிப்பதற்கேற்ப இதற்கு தடைகள் விதிக்கப்படாமல் இருக்கும் காலம் வரை காடுகளில் இருந்தே இவை பிடிக்கப்படுவது தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2007ம் ஆண்டிற்குப் பிறகு இவற்றின் எலும்பு ஏற்றுமதி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. இதனுடன் சேர்ந்து வளர்க்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. விலங்குநல ஆர்வலர்களிடம் இருந்து சிங்கங்களை வளர்ப்பதற்கு எதிரான குரல்கள் வலுப்பெற்றதுடன் 2021ல் இவற்றை வளர்க்க முழுமையான தடை விதிக்கப்படும் என்று தென்னாப்பிரிக்க சூழல் அமைச்சரகம் அறிவித்துள்ளது.

பெரும் செலவில் வளர்க்கப்படும் சிங்கங்கள்

மருத்துவ செலவு, ஊழியர் சம்பளம், மின் வேலி செலவு ஆகியவற்றைத் தவிர ஒரு சிங்கத்தை வளர்க்க 5000 டாலர் செலவாகிறது. எவ்வாறென்றாலும் வளர்த்து விற்பவர்களுக்கு இவற்றின் எலும்புகள் மட்டுமே அவசியம். இதனால் இவற்றின் ஆரோக்கியத்தைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

இந்த ஏற்றுமதி சட்டப்பூர்வமாகத் தொடரும் வரை அதன் மறைவில் ஏராளமான எலும்புகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் ஏற்றுமதி செய்யப்படும் என்பது நிச்சயம். சட்ட அங்கீகாரத்துடன் சேர்ந்தே இந்த வியாபாரம் நடக்கிறது என்பதே இதை தடை செய்ய உள்ள பெரும் பிரச்சனை. தென்னாப்பிரிக்காவில் சிங்கங்களைக் கொல்லும் இடங்கள் யாரும் அங்கு செல்ல முடியாத அளவில் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

விலங்குநல சட்டங்கள் எல்லாவற்றையும் இங்கு காற்றில் பறக்கவிட்டு இந்த இடங்கள் செயல்படுகின்றன. பல இடங்களில் சட்டம் அனுமதித்துள்ள எண்ணிக்கையை விட பல மடங்கு அதிக விலங்குகள் ஒரே இடத்தில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் அடைத்து வைக்கப்படுகின்றன. பல நோய்கள் பாதித்து எலும்பும் தோலுமாக வாழ்கின்றன. இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இவை வளர்க்கப்படுகின்றன.

மனித விலங்கு மோதல்

சிறிய குட்டிகள் கூட தாயிடம் இருந்து பிரித்து வளர்க்கப்படுகின்றன. டான்ஜானியாவில் மனித விலங்கு மோதல் அதிகம். பாதுகாக்கப்பட்ட பகுதிகளுடன் ஒட்டி அமைந்துள்ள மனிதர்கள் வாழும் இடங்களில் விலங்குகள் நுழைகின்றன. உயிர் மற்றும் உடமையைக் காப்பாற்றிக் கொள்ள இவை பிடிக்கப்படுகின்றன, கொல்லப்படுகின்றன. இதன் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களும் பன்னாட்டு வணிக மையங்களில் விற்கப்படுகின்றன.

வனவிலங்கு மோதல் நடக்கும் இத்தகைய 77 சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் 96% சமூகங்கள் சிங்கங்களின் தாக்குதலுக்கு ஆளாகும் பகுதிகள். இவர்களில் பாதி பேர் தங்களைத் தாக்கும் சிங்கங்களைத் திருப்பித் தாக்கிக் கொல்கின்றனர். மொசாம்பிக்கில் கள்ளத்தனமாக நடக்கும் சிங்க வேட்டையே அங்கு வாழும் இவற்றின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியாவில் ஒரு காலத்தில் இந்த உயிரினங்கள் வளர்ப்பு விலங்குகளாக பராமரிக்கப்பட்டு வந்தன.

சிங்கத்தின் பாதங்களும் பற்களும்

மனித விலங்கு தாக்குதலின் போது கொல்லப்படும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் பொருட்கள் பிராந்திய நாட்டுப்புற வைத்தியம், பன்னாட்டு வணிகச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இவற்றின் பாதங்கள், பற்கள் பெருமைக்குரிய சின்னங்களாக வீடுகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. 2010 முதல் மொசாம்பிக்கில் இருந்து பிடிக்கப்பட்ட உடற்பாகங்களில் 50% வியட்நாம், தென்கிழக்கு ஆசியாவிற்கு கடத்தப்பட இருந்தவை.

இதே காலத்தில் டான்ஜானியாவில் கடத்தல்களில் 1,555 உடற்பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இதில் பெரும்பாலானவை இவற்றின் பாதங்களே. பன்னாட்டு அழுத்தம் காரணமாக இவற்றை வளர்ப்பது தடை செய்யப்பட்டால் இப்பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மாற்றம் கொண்டு வருமா அமெரிக்காவின் தடை?

பொழுதுபோக்கிற்காக இவற்றை சுட்டுக்கொன்று தலை மற்றும் இதர உறுப்புகளை பரிசுப்பொருட்களாக (trophy) கொண்டு வர அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. சிங்க வேட்டையைக் குறைக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து வரும் வேட்டைக்காரர்கள் அரை லட்சம் டாலர் வரை கட்டணமாகக் கொடுத்து வேட்டையாடி சிங்கத்தின் தலையைக் கொண்டு செல்வது நிறுத்தப்படுவதால் இவற்றை வளர்ப்பது அதிக லாபம் தராத தொழிலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமையும் என்று நம்பப்படுகிறது.

காட்டுக்கு அரசன் என்ற பெருமையுடன் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த இந்த கம்பீரமான உயிரினம் இன்று மனிதச் செயல்களால் கூண்டுகளில் அடைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. உயிருக்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை மாறும் என்று நம்புவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/the-industry-which-exports-lion-parts-is-still-active-in-africa-eco-story-1.8543295

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It