அழுத்தத்தை அனுபவிக்கும்போது தாவரங்கள் அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தாகத்தால் வாடும் அல்லது பழுதடைந்த செடிகள் இசைக்குழுவில் ஒரு இசைக்குறிப்பு பாடப்பட்டபின் விடப்படும் நிசப்தமான இடைவெளியைப் போல ஒரு மணி நேரத்தில் ஐம்பது பாப் சத்தங்களை எழுப்புகின்றன. இவற்றை அருகில் இருக்கும் உயிரினங்கள் கேட்டு பதில்வினை புரிகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு தாவரத்தின் வாழ்க்கையில் அதன் தலை தாழும் நிலை வரும். இலைகள் பழுப்பு நிறமடையும் கட்டம் ஏற்படுகிறது. அப்போது, சரமாரியாக குமிழ்கள் உருவாகி ஏற்படுத்தும் சத்தத்தைப் போன்ற அல்ட்ரா சானிக் ஓசைகளை அவை எழுப்புகின்றன. அல்ட்ராசானிக் ஒலி என்பது மிக அதிக அதிர்வெண் கொண்ட ஒலி அலை வடிவத்தைக் குறிக்கிறது. தோட்டங்களில் வளர்க்கப்படும் செடிகளுக்கு நீர்ப் பற்றாக்குறை அல்லது உடலில் காயம் ஏற்பட்டால் அவை இத்தகைய ஓசைகளை எழுப்புகின்றன.

தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை

இந்த கண்டுபிடிப்பு பிரமிப்பை ஏற்படுத்துகிறது, சிந்திக்கத் தூண்டுகிறது. நாம் காண்பது போல தாவரங்களின் உலகம் நிசப்தமானது இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சத்தங்கள் அவை வாழும் சூழல் மண்டலத்தை வடிவமைப்பதில் அவற்றுக்கு உதவுகின்றன. தாவரங்கள் நல்ல நிலையில் இருக்கும்போது அவை ஒரு மணி நேரத்தில் ஒரே ஒரு ஓசையை மட்டுமே எழுப்புகின்றன.forest 700ஆனால் அதே தாவரம் அழுத்தத்திற்கு உள்ளாகும்போது ஒரு மணி நேரத்தில் முப்பது முதல் ஐம்பது அல்ட்ராசானிக் ஒலிகளை எழுப்புகிறது என்று டெல் அவிவ் பல்கலைக்கழக பரிணாம உயிரியலாளர் மற்றும் உயிரியல் கோட்பாட்டாளர் பேராசிரியர் லீலாச் ஹேடனி (Prof Lilach Hadany) கூறுகிறார். இந்த ஓசைகளைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் திறனை மற்ற உயிரினங்கள் பெற்றிருக்கலாம் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

உருளைக்கிழங்கு செடியும் புகையிலைச்செடியும்

இந்த ஒலிகளுக்கு எல்லாவகை தாவர விலங்குகளும் பதில்வினை புரிகின்றனவா என்பது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகள் பசுமைக்குடிலில் வளர்க்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் புகையிலைச் செடிகளில் நடத்தப்பட்டது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தாவரங்கள் க்ளிக் மற்றும் பாப் சத்தங்களை விரைவாக வெளியிடுகின்றன.

ஆனால் அவற்றிற்கு நீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது அவற்றின் தண்டுகள் வெட்டப்பட்டால் இந்த ஒலிகள் மூன்று முதல் ஐந்து மீட்டர் தொலைவில்கூட பதிவு செய்யக்கூடியதாக இருந்தது. இவை 40 முதல் 80 கிலோஹர்ட்ட்ஸ் அளவு அதிர்வெண்ணுடன் வெளியிடப்படுகின்றன. மனிதக் காதுகளால் 20 கிலோஹர்ட்ஸ் அளவு வரை உள்ள ஒலி அலைகளை மட்டுமே கேட்க முடியும். இதனால் தாவரங்கள் எழுப்பும் ஒலியை நம்மால் கேட்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உரத்த குரலில் பேசும் தாவரங்கள்

என்றாலும் விட்டில் பூச்சிகள், சுண்டெலி போன்ற சில உயிரினங்கள் இந்த உயர் அதிர்வெண் ஒலியைக் கேட்கும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. இது அவற்றின் நடத்தையில் தாக்கம் செலுத்தலாம் என்று நம்பப்படுகிறது. செல் (Cell) என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரையில் தாவரங்கள் மனிதர்களின் பேச்சைப் போலவே எவ்வாறு உரத்த ஒலியை எழுப்புகின்றன என்பது பற்றி ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர்.

இரண்டு நாட்கள் நீர் இல்லாமல் போனால் இவை அடிக்கடி ஒலி எழுப்புகின்றன. ஐந்து அல்லது ஆறாவது நாளில் தாவரங்கள் வாடத் தொடங்கும்போது இந்த பாப் சத்தங்கள் மெல்ல மெல்ல குறைந்து விடுகின்றன. ஒலிப்பதிவிற்காக விஞ்ஞானிகள் ஒரு செயற்கை நுண்ணறிவு படிமுறைத்தீர்வுக் கருவியை உருவாக்கினர். இதன் உதவியுடன் தாவரங்கள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் அழுத்தத்திற்கான காரணத்தை ஆராய்ந்தனர்.

மற்ற உயிரினங்களுக்கு உதவும் பாப் ஒலிகள்

இது 100% துல்லியமானதாக இல்லை என்றாலும் இந்த பாப் ஒலிகளில் அடங்கியிருக்கும் தகவல்கள் அதே சூழல் மண்டலத்தில் வாழும் உயிரினங்களுக்கு உதவுகின்றன. இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக எழுப்பப்படுவது பற்றி இன்னும் உறுதியாக எதுவும் தெரியவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது நெருப்பில் எரியும் ஒரு மரக்கட்டை வெளிப்படுத்தும் ஓசைகளைப் போன்றவையே என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எந்த தாவரத்தை விலங்குகள் உண்கின்றன, எந்த பறவை எந்த தாவரத்தின் இலையில் முட்டையிடுகிறது போன்ற விவரங்களை மற்ற உயிரினங்கள் அறிய இந்த சத்தங்கள் உதவுகின்றன என்று ஹேடனி கூறுகிறார். இந்த ஒலிகள் எழுப்பப்படுவதற்கான சரியான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. ஆனால் நீரிழப்பு ஏற்பட்டு தண்டுகள் செயலிழக்க நேரும் குழிவுறுதல் (cavitation) என்ற நிகழ்வின்போது உருவாகும் காற்றுக்குமிழ்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.

இந்த சத்தங்களை வேறெந்த உயிரினம் கேட்கிறதோ இல்லையோ இந்த கண்டுபிடிப்பு வேளாண்மை மற்றும் தோட்ட வளர்ச்சியில் மற்ற உணரிகளுடன் மைக்ரோ போன்களைப் பொருத்தி தாவரங்களுக்கு நீர்ப்பற்றாக்குறை எப்போது ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் நீர்ப்பாசனத்தை மேம்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நீருக்காக குரல் கொடுக்கும் தாவரங்கள்

அழுத்தம் ஏற்படும்போது தாவரங்கள் குரல் கொடுக்கின்றன என்பது மகத்தானது. நினைத்துப் பார்க்க முடியாதது என்று பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகத்தின் உணரி உயிரியல் துறைப் பேராசிரியர் மார்க் ஹோல்டரிட் (Prof Marc Holderied) கூறுகிறார். இந்த ஒலிகள் தகவல் பரிமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டவையாக இல்லாமல் தாவரங்களில் ஏற்படும் உடலியக்கச் செயல்களின்போது உருவாகும் ஒலிகளாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

தாவரங்களுக்கும் காதுகள் உண்டா?

இந்த ஒலிகளை மற்ற உயிரினங்கள் கேட்பதை எதுவும் தடுக்க இயலாது. தாவரங்களுக்கு காதுகள் உள்ளன என்று இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அவை இயக்கவியல்ரீதியாக ஏற்படும் பல தூண்டல்களுக்கு பதிலளிக்கின்றன. அதனால் இத்தகையவற்றில் அல்ட்ரா ஒலியைக் கண்டுபிடிக்கும் கருவிகளைப் பொருத்தி இது பற்றி இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

வறட்சியைத் தாங்கும் திறன்

அதிக சத்தத்தை பல மணி நேரம் ஏற்படுத்தும்போது வறட்சியைத் தாங்கி வளரும் திறனை தாவரங்கள் பெறுகின்றன என்று பார்சலோனா வேளாண் மரபணுவியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர் கார்லோஸ் விஷன்ட் (Carlos Vicient) 2017ல் நடத்திய ஆய்வின் முடிவில் கண்டுபிடித்தார். ஆனால் அவை இயற்கையில் சத்தம் அதிகமாக இருக்கும் சூழலில் மெதுவாக எழுப்பப்படும் ஓசைகளுக்கு பதில்வினை புரிவதில்லை என்று அறியப்பட்டது. இத்தகைய ஒலிகள் தாவரங்களில் இருக்கும் ஆவியாகும் தன்மையுடைய பொருட்களால் ஏற்படலாம் என்று அவர் கருதுகிறார்.

இந்த ஒலிகள் தங்கள் கூட்டாளிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்படவில்லை என்று நம்பப்படுகிறது. என்றாலும் இது பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது இதுவரை நாம் அறியாத தாவர உலகில் நிகழும் பல நிசப்த வாழ்வியல் செயல்களுக்கு நம்மால் விடை காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

மேற்கோள்கள்:

https://www.washingtonpost.com/nation/2023/04/04/plants-make-noises-sounds-ultrasonic/

&

https://www.wsaz.com/2023/03/30/plants-make-sounds-similar-bubble-wrap-popping-study-says/

&

https://www.nature.com/articles/d41586-023-00890-9

&

https://newatlas.com/science/stressed-plants-noises/

&

https://www.theguardian.com/environment/2023/mar/30/plants-emit-ultrasonic-sounds-in-rapid-bursts-when-stressed-scientists-say?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

துல்லியமான ஆய்வுகள், விளக்கங்கள் மற்றும் சரியான நடைமுறைப்படுத்துதலின் மூலம் இன அழிவில் இருந்து ஒரு வண்ணத்துப் பூச்சியைக் காப்பாற்றிய கதை இது.

நீல வண்ணத்துப் பூச்சிகள்

இவற்றின் ஒரு இனம் நீல வண்ணத்துப் பூச்சிகள் (Large blues) என்று அழைக்கப்படும் லைக்கனிடே (lycaenidae) குடும்பத்தைச் சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகள். அளவிலும், வடிவத்திலும் இவை மிகச் சிறியவை. இறக்கைகளை விரிக்கும்போது பொதுவாக பளபளப்பான நீல நிறத்தில் காணப்படும்.

இக்குடும்பத்தில் ஐரோப்பாவில் காணப்படும் ஓர் இனம் பெங்காரிஸ் ஏரியோன் (Phengaris Arion) என்ற இந்த இனம். லைக்கனிடே குடும்பத்தில் மிகப் பெரிய வடிவமைப்பை உடைய வண்ணத்துப் பூச்சி இனம் இதுவே. தும்பைப் பூவின் குடும்பத்தைச் சேர்ந்த டைம் (Thyme) என்ற ஒரு செடியில் இவை முட்டையிடுகின்றன. இதனுடன் மியமிர்கா ஸபுலேட்டி (Myrmica Sabuleti) என்ற ஒரு எறும்பினத்தின் உதவியும் இவை வாழ அவசியமாகிறது.Blue Butterflyஜூலையில் முட்டை பொரிந்து வெலியில் வரும் இதன் புழுக்கள் மூன்று வார காலம் டைம் செடியைத் தின்று வளர்கிறது. இதன் பிறகு அந்த செடியில் இருந்து பிடியை விட்டு கீழே விழும் புழுவின் உடலின் வெளிப்பகுதியில் தேன் போல ஒரு திரவம் ஊறி வருகிறது. இதனால் கவரப்பட்ட எறும்பு பக்கத்தில் வரும்போது காற்றை உட்பக்கமாக இழுத்து பெரிதாகும் புழு பிறகு அதை வெளிவிடுகிறது.

அப்போது ஏற்படும் சத்தம் எறும்பின் ராணி ஆபத்தில் இருக்கும்போது உண்டாகும் சப்தம் போல இருக்கிறது. தேன் துளியைக் குடித்து போதையேறிய எறும்பு புழுவைத் தன் ராணி என்று நினைத்து அதைக் காப்பாற்ற நேராக தன் கூட்டிற்குக் கொண்டு செல்கிறது. கூட்டில் இருக்கும் மற்ற எறும்புகளும் அதைத் தங்கள் ராணி என்று கருதி அதற்கு முழு சுதந்திரம் அளிக்கின்ற்ன. அடுத்த ஆறுமாத காலம் இப்புழு எறும்புகளின் லார்வாக்களையும் முட்டைகளையும் தின்று வளர்கிறது.

கூட்டில் வந்தபோது இருந்ததை விட நூறு மடங்கு பெரிதாகும் புழு இதற்குள் அந்த எறும்பு காலனியை முழுவதும் தின்று முடிக்கிறது. தொடர்ந்து ஓராண்டு காலம் ப்யூப்பாவாகத் தொடர்கிறது. பின்னர் விரிந்து நீல வண்ணத்துப் பூச்சியாக வெளிவருகிறது.

மர்மமான முறையில் மறைந்த பூச்சியினம்

1979ல் பிரிட்டனில் இந்த வண்ணத்துப் பூச்சி முற்றிலும் அழிந்தது. 1900 முதல் இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க தீவிர ஆய்வுகள் நடந்தன. எறும்புடன் இருக்கும் சொந்தமே இவற்றின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியம் என்று தெரிய வந்தது. மேய்ச்சல் நிலங்கள், பிராந்திய தாவரங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது அங்கு இந்த எறும்பிற்குப் பதில் மற்ற எறும்புகள் குடியேறத் தொடங்கின. இதனால் இவற்றின் வாழ்வு கேள்விக்குறியானது.

1930-1969 காலத்தில் இந்த உயிரினத்தை அழிவில் இருந்து மீட்க ஒன்பது இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. என்றாலும் இவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. 1972ல் வெறும் 325 ஆக இவற்றின் எண்ணிக்கை சுருங்கியது. தொடர்ந்து வந்த ஏழாண்டுகளில் இவை பிரிட்டனில் இருந்தே முற்றிலும் அழிந்து போயின.

பதினெட்டு காரணங்கள்

இந்த அழிவு தொடங்குவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட ஆய்வுகளில் இவற்றின் எண்ணிக்கை குறைவதற்கு 18 காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முட்டையிடும் இடங்கள், புழுவின் அளவு போன்றவை இதில் அடங்கும். இத்தரவுகளைப் பயன்படுத்தி இவற்றின் எண்ணிக்கை குறைவிற்கான காரணங்களைப் பற்றி அறிய ஒரு கணித மாதிரி உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதில் இருந்து வண்ணத்துப் பூச்சியின் வாழ்விற்கு எறும்புகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது. எறும்புகளுடன் தொடர்புடைய செயல்கள் மட்டுமே இவற்றின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது என்று கண்டறியப்பட்டது. எறும்புகள் கொண்டு செல்லும் புழுக்கள் பருவமடைந்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதற்கு உள்ள சாத்தியக்கூறு ஐந்து மடங்கு அதிகரித்தது. டைம் செடிகள் இருக்கும் இடங்களில் இந்த எறும்புகள் வாழ வேண்டியது இன்றியமையாததாக இருந்தது.

செடிகள் இருக்கும் இடங்களில் எறும்புகளும், எறும்புகள் உள்ள இடங்களில் செடிகளும் இல்லாமல் இருந்த காலத்தில் இந்த வண்ணத்துப்பூச்சிகள் பிரிட்டனில் இருந்து காணாமல் போயின. இச்செடிகளைச் சுற்றியுள்ள செடிகளும் எறும்புகளின் வாழ்க்கையைப் பாதித்தது. சுற்றியுள்ள புற்செடிகள் 1.4 சென்டிமீட்டருக்கும் மேல் உயரமாக வளர்ந்தால் பெருக்கமடையும் புற்கள் அதைச் சுற்றி வாழும் எறும்புகளின் புற்றுகள் இருக்கும் நிலப்பகுதியின் வெப்பநிலையைக் குறைக்கிறது.

அப்போது குறைவான வெப்பநிலையில் மட்டுமே வாழும் மற்ற சில எறும்பு இனங்கள் அந்த நிலப்பகுதியைக் கைப்பற்றுகின்றன. இதனால் எறும்புகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது. 1970களில் இதுவே பிரிட்டனில் நிகழ்ந்தது. இதனுடன் சேர்ந்து 1950களில் எதிர்பாராமல் ஐரோப்பாவில் மைசோமெட்டோசிஸ் என்ற தொற்றுநோய் பரவியது. எறும்புகள் வாழ்ந்து வந்த மலைச்சரிவுகளில் இந்நோய் புற்களை உணவாக உட்கொள்ளும் முயல்களை பெருமளவில் கொன்றது.

முயல்கள் இறந்ததால் சிக்கலான ஒரு தொடர்வினை ஏற்பட்டது. உண்பதற்கு முயல்கள் இல்லாமல் போனதால் புல்வெளிப் பரப்புகள் அதிகமானது. அங்கு இருந்த மண்ணின் வெப்பநிலை குறைந்தது. எறும்புகள் மறைந்தன. வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன. காலநிலை மோசமானது. விளைவாக நீல வண்ணத்துப் பூச்சிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 1974ல் நீண்ட மழைக்காலத்தில் முட்டையிடத் தேவையான நாட்கள் குறைந்தன. 1975ல் ஏற்பட்ட நீண்ட வறட்சி நிலைமையை மேலும் மோசமாக்கியது.

எண்ணிக்கைக் குறைந்து 1979 ஆனபோது பிரிட்டனில் இந்த பெரிய நீல வண்ணத்துப் பூச்சியினமே இல்லாமல் அழிந்து போனது. துல்லியமான கணிப்புகள், கணித மாதிரி மற்றும் சரியான தரவுகளின் ஆய்வு ஆகியவற்றின் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்பட்டது. பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அப்போது பல காரணங்கள் சொல்லப்பட்டன.

வலைகளைப் பயன்படுத்தி பூச்சிகளைச் சேகரிப்பவர்கள் சந்தேகக் கண்களுடன் பார்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களைத் தடுக்க மைதானங்களைச் சுற்றிலும் வேலிகள் எழுப்பப்பட்டன. உண்மையில் இது புல் மேய வந்த விலங்குகளை உள்ளே நுழைய விடாமல் தடுத்தது. புற்கள் வளர்ந்து பெருகி பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. தவறான கணிப்புகள் எவ்வாறு பிரச்சனைகளை மேலும் மோசமாக்கும் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு.

பாதுகாப்புத் திட்டம்

ஆய்வுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற அறிவு, தரவுகளின் உதவியுடன் நீல வண்ணத்துப் பூச்சி பாதுகாப்புத் திட்டம் (Project Large blue butterfly) தொடங்கப்பட்டது. டைம் செடிகள் வளரும் 52 இடங்கள் முன்பிருந்த நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கு எறும்புகள் வாழ்வதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வெகுவிரைவில் எறும்புகள் அவற்றின் வாழிடத்திற்குத் திரும்பி வந்தன. 1973-74ல் எறும்புகளே இல்லாத இடங்களில் ஒரு சில ஆண்டுகளில் அவை சூப்பர் காலனிகளாக பெருக்கமடைந்தன.

பூச்சிகளை திரும்பி கொண்டு வருவதற்குரிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. இந்த இடங்களுக்கு 1983ல் ஸ்வீடனில் இருந்து எறும்புகள் கொண்டு வரப்பட்டன. 2008ல் முப்பதிற்கும் மேற்பட்ட இடங்கள் வண்ணத்துப் பூச்சிகளால் நிறைந்தது. 2009ல் மிகப் பெரிய காலனிகளில் ஐயாயிரத்திற்கும் கூடுதலான வண்ணத்துப் பூச்சிகள் வாழத் தொடங்கின. இது அதற்கு முன்பு உலகம் முழுவதும் இருந்த இந்த பூச்சிகளின் என்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகம்.

மற்ற ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனின் பாதையை பின்பற்றத் தொடங்கின. பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. பன்னாட்டு இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) இன அழிவைச் சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலில் இருந்து இந்த வண்ணத்துப் பூச்சியினம் குறைவான ஆபத்தை சந்திக்கும் உயிரினங்களின் பட்டியலிற்கு மாற்றப்பட்டது. இதே முறையைப் பின்பற்றி இன அழிவைச் சந்திக்கும் மற்ற வண்ணத்துப் பூச்சி இனங்களை அழியும் நிலையில் இருந்து மீட்கும் முயற்சிகள் தொடங்கின.

சரியான தரவுகளின் சேகரிப்பும் விளக்கங்களும் சரியான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால் சூழல் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதற்கு மீண்டு வந்த இந்த வண்ணத்துப் பூச்சியினம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

மேற்கோள்https://www.mathrubhumi.com/environment/columns/extinction-story-of-large-blue-butterflies-and-their-comeback-eco-story-1.8488024

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

கடல் சூழல் மண்டலத்தில் மிக முக்கிய அங்கம் திமிங்கலங்கள். கடற்சூழலின் ஆரோக்கியத்திற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நாளும் குறைந்து வரும் இவற்றின் எண்ணிக்கை கடல்வாழ் உயிரினங்களைப் பாதிக்கிறது. கடல் சூழலைத் தகர்க்கிறது. பாலூட்டிகளான இவை வெப்ப இரத்த பிராணிகள்.

வேட்டையின் வரலாறு

புராதன காலம் முதல் திமிங்கல வேட்டை நடந்து வருகிறது என்றாலும் கடந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் இறைச்சி, உடலில் உள்ள கொழுப்பு, எலும்புகளைப் பயன்படுத்தி அணிகலங்கள் போன்றவற்றிற்காக பெரும் எண்ணிக்கையில் வேட்டையாடப்பட்டதால் பெருமளவில் இவற்றின் எண்ணிக்கை குறைந்தது. இதன் விளைவாக 1946ல் திமிங்கல வேட்டைக்கு உலக நாடுகள் ஒன்றுசேர்ந்து தடை ஏற்படுத்தின.

1904-1987 காலகட்டத்தில் 14 இலட்சம் திமிங்கலங்கள் கொல்லப்பட்டன. அண்டார்டிகாவில் 1964ல் நீலத் திமிங்கலங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டது. அப்போது 20,000 நீலத் திமிங்கலங்கள் இருந்தன. இப்போதும் இதே எண்ணிக்கையிலேயே அவை உள்ளன. இருநூறு ஆண்டுகள் வாழும் இவற்றின் இனப்பெருக்கம் மிக மெதுவாகவே நடைபெறுகிறது. ஒரு முறை நஷ்டமானால் கடல்சார் சூழல் மண்டலத்தை அதே நிலைக்கு மறுபடியும் கொண்டு வருவது சுலபமானதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.whale 466ஆராய்ச்சி என்ற பெயரில்

ஆராய்ச்சி என்ற பெயரில் ஜப்பானில் இப்போதும் இவற்றை வேட்டையாடுவது தொடர்கிறது. தடை நடைமுறையில் இருந்தபோதும் 1986 முதல் 25,000 திமிங்கலங்கள் கொல்லப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அவை கண்டிப்புடன் பின்பற்றப்படுவதில்லை.

பணத்தைப் பயன்படுத்தியே ஜப்பானும் நார்வேயும் தங்களுக்கு சாதகமாக மற்ற நாடுகளின் வாக்குகளை விலைக்கு வாங்குகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மனிதனின் பொழுதுபோக்கு ஓர் உயிரினத்தின் அழிவு

பல நேரங்களில் ஒரு த்ரில்லுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. பிடிக்கும் திமிங்கலங்களின் இறைச்சி கால்நடைகளுக்குக்கூட தீவனமாக போடப்படுகிறது. இழக்கப்பட்டால் மீட்டெடுக்க முடியாத இந்த அற்புத உயிரினங்களின் இறைச்சி அங்கு இந்த அளவிற்கு மதிப்பில்லாத பொருளாக்கப்படுகிறது. இதற்கு இடையில் திமிங்கல வேட்டையை மீண்டும் தொடரப் போவதாக ஜப்பான் சமீபத்தில் அறிவித்துள்ளது.

திமிங்கல வேட்டை என்னும் கொடூரம்

இரண்டு மூன்று குதிரைகளை ஒரு ஈட்டியில் கோர்த்து ஒரு டிரக்கில் கட்டி இரத்தம் கொட்டக் கொட்ட இழுத்துக்கொண்டு போவதைக் கற்பனை செய்து பாருங்கள். இப்படிதான் திமிங்கல வேட்டையும் நடக்கிறது. பல சமயங்களில் ஓட ஓட விரட்டிவிட்டு களைப்படைந்த நிலையை அவை அடைந்த பிறகே வேட்டையாடப்படும் திமிங்கலத்தின் மீது கூர்மையான அம்பு எய்யப்படுகிறது.

பெரும்பாலான திமிங்கலங்களும் ஒற்றை அம்பு பட்டு சாவதில்லை. பிடிக்கப்பட்ட திமிங்கலத்தை வேட்டைக் கப்பல்களுக்கு இழுத்துக் கொண்டு வந்து அவை ஏற்றப்படுகின்றன. வால் பகுதியில் அம்பு எய்யப்பட்டிருந்தால் தலைப்பகுதி நீருக்குள் மூழ்கியிருக்குமாறு அவை கப்பலின் மேற்பகுதிக்கு இழுக்கப்படுகின்றன. அப்போது அவை மூச்சுவிட முடியாமல் திணறுகின்றன. அந்த நிலையிலேயே அவை கொல்லப்படுகின்றன.

இது தவிர பெரிய மீன் பிடி வலைகளில் சிக்கி, கடலில் கொட்டிக் கிடக்கும் மாசுகள் உடலிற்குள் செல்வதால் இவை இறந்து போகின்றன. பாலூட்டும் திமிங்கலங்களின் உடலுக்குள் செல்லும் நஞ்சு அவற்றின் குட்டிகளுக்கும் நோய்களை ஏற்படுத்துகிறது. நெரிசல் மிகுந்த கப்பல் போக்குவரத்து உள்ள வழிகளில் ஏற்படும் ஒலி மாசு, கடல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் மீ ஒலிக்கருவிகள் (sonar), வேதிப்பொருட்கள், கடல்களில் நிறுவப்படும் காற்றாடிகள், காலநிலை மாற்றம் போன்றவை இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கின்றன.

மிதவை உயிரினங்களும் திமிங்கலங்களும்

பூமியில் வாழும் ஏதேனும் ஓர் உயிரின வகையின் ஒட்டுமொத்த எடையைக் கணக்கிட்டால் மிதவை உயிரினங்களே (Krill) முதலிடம் பெறுகின்றன. இதன் அளவு சுமார் 40 கோடி டன். கடலில் வாழும் சிறிய உயிரினங்களான இவற்றின் ஒட்டுமொத்த எடை இது. இந்த உயிரினங்களில் பாதியளவை உணவாக உட்கொள்ளும் உயிரினங்களில் திமிங்கலங்களே முதன்மையானவை.

நீலத் திமிங்கலம் உண்ணும் உணவு

ஒரு நீலத் திமிங்கலம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 4 கோடி மிதவை உயிரினங்களை உண்கிறது. இந்த திமிங்கலங்கள் இல்லாமல் விட்டால் மிதவை உயிரினங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகும். இதனால் ஏற்படக்கூடிய சூழல் பிரச்சனைகள் கற்பனைக்கு எட்டாத பயங்கரமானவை.
இது போல திமிங்கலங்களின் இறந்த உடல்களும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள அவற்றின் உயிரற்ற உடல் ஆழ்கடல் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கும். ஒரு திமிங்கலம் உயிரிழந்தால் 407 வகையான உயிரினங்கள் அதன் இறந்த உடலை உண்பதற்காக ஒன்று சேர்கின்றன.

கார்பன் உறிஞ்சும் திறன்

இவற்றின் மலத்தில் உள்ள சத்துகள் வளி மண்டலத்தில் இருக்கும் கார்பன்ஐ உறிஞ்சியெடுக்கும் பைட்டோ ப்ளாங்டன்களின் (phytoplanktons) வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. இதற்கு நான்கு இலட்சம் டன் கார்பனை வளி மண்டலத்தில் இருந்து அகற்றும் திறன் உள்ளது.

பெட்ரோலியம் கண்டுபிடிப்பும் திமிங்கலங்களும்

பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த உயிரினங்கள் என்றோ பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும். மார்கரின் (Margarine) என்ற கொழுப்பின் கதை இதனுடன் தொடர்புடையது. ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், சமுதாயத்தில் கீழ் தட்டில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளைக் கண்டுபிடிக்குமாறு நெப்போலியன் பிரெஞ்சு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒன்றைக் கண்டுபிடிப்பவருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி உருவாக்கப்பட்ட ஓர் உணவுப்பொருளே இது. கால்நடைக் கொழுப்பு, கொஞ்சம் சோடா, பால் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை சேர்த்து திடவடிவத்தில் உண்பதற்குத் தகுதியான ஒரு கொழுப்பை பிரெஞ்சு வேதியியலாளர் ஹிப்போலிட் மீஜ் மீரீஸ் (Hippolyte Meege-Mouriees) உருவாக்கினார். இதற்காக 1869ல் மூன்றாம் நெப்போலியனிடம் இருந்து பரிசு பெற்றார்.

பிரெஞ்சுகாரர்களுக்கு இது அவ்வளவாகப் பிடிக்கவில்லை யென்றாலும் ஐரோப்பியர்களிடம் இது பிரபலமடைந்தது. இன்று இதில் இருந்து விலங்கு கொழுப்புகள், தாவர எண்ணைகள் உண்டாக்கப்படுகின்றன. பாதுகாத்து வைக்கவும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லவும் குறைந்த கால அளவில் விரைவாக ஆற்றலைப் பெறவும் மற்ற பல தேவைகளுக்காகவும் இது இப்போது பயன்படுகிறது.

லாபம் தரும் தொழில்

19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தெருக்களிலும் வீடுகளிலும் வெளிச்சத்திற்காக திமிங்கலங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பே முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. திமிங்கல வேட்டையைப் போலவே திமிங்கலக் கொழுப்பும் லாபம் தரும் தொழிலாக மாறியது. பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படத் தொடங்கியதுடன் இந்த நிலை மாறியது. திமிங்கலக் கொழுப்பின் இடத்தை மண்னெண்ணெய் பிடித்தது.

அதிக அளவில் உண்டாக்கப்பட்ட இந்த கொழுப்பிற்கான புதிய தேவைகளையும் சந்தைகளையும் இவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கத் தொடங்கின. இப்படி மீண்டும் திமிங்கலக் கொழுப்பின் பயன்பாடு அதிகரித்தது. உணவு எண்ணெய்களில் இதன் விலை குறைய ஆரம்பித்தது. பெரிய ஒரு படகை திமிங்கலம் பிடிக்கும் படகாக மாற்றுவது சுலபமானதாக இருந்தது. விலை குறைந்ததால் எல்லோரும் திமிங்கலத்தைப் பிடிக்கும் படகுகளை வாங்க ஆரம்பித்தனர்.

யூனிலிவரின் கதை

உற்பத்தி அதிகரித்ததால் இதன் விலை மேலும் குறைந்தது. இதை விற்பவர்கள் கொழுப்பை அதிக அளவில் வாங்கிக் குவித்தனர். பிரிட்டிஷ் லிவர் மற்றும் டச்சு நிறுவனம் யூனி திமிங்கலக் கொழுப்பைக் கெட்டியாக்கி அதில் இருந்து மார்கரினை உருவாக்கும் வேதிமுறையைக் கண்டுபிடித்தன. தங்களுக்குள் போட்டி போட்டு அதனால் வியாபாரத்தை நஷ்டமாக்க விரும்பாத இந்த இரண்டு நிறுவனங்களும் யூனிலிவர் என்ற பெயரில் ஒரே நிறுவனமாக இணைந்தன.

இந்த நிறுவனமே இன்று 1.5 இலட்சம் ஊழியர்கள் மற்றும் ஐயாயிரம் கோடி டாலர்களுக்கும் கூடுதல் சொத்தும் உள்ள யூனிலிவர். 1935ல் உலகில் உருவாக்கப்படும் திமிங்கலக் கொழுப்பின் 84 சதவிகிதமும் மார்கரின் உருவாக்கப் பயன்பட்டது. நார்வே உற்பத்தி செய்த திமிங்கலக் கொழுப்பு முழுவதையும் யூனிலிவர் வாங்கிக் கொண்டது. அதை ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலைக்கு அனுப்பினர்.

பிரிட்டனில் திமிங்கலக் கொழுப்பு

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. இதற்குள் இந்த கொழுப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியது. பிரிட்டனில் இதை கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்யும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருட்களின் பட்டியலில் சேர்த்தனர். ஜெர்மனி திமிங்கல வேட்டைக்காக புதிய இடங்களைத் தேடி, தேடுதல் குழுக்களை அண்டார்டிகாவிற்கு அனுப்பியது. போர் முடிவுக்கு வந்ததுடன் இதன் முக்கியத்துவம் மெல்ல மறையத் தொடங்கியது.stop whalingபோரில் தோற்ற ஜப்பானும் திமிங்கல வேட்டையும்

திமிங்கல வேட்டை தார்மீகமாக சரியானது இல்லை என்று கருதப்படலாயிற்று. ஆனால் 1945ல் நேசநாடுகளால் தோற்கடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான ஜப்பானிய மக்கள் பட்டினியில் இருந்து தப்ப திமிங்கல வேட்டையைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதிக இறைச்சியை உற்பத்தி செய்ய வேண்டும். அதன் மூலம் இறைச்சியின் விலையைக் குறைத்து சாப்பிட வேண்டும்.

இதற்கு மக்கள் வேட்டைப் படகுகளை அதிக அளவில் வாங்கி திமிங்கல வேட்டையைத் தொடர வேண்டும் என்று அப்போது ஜப்பான் நாட்டை நிர்வகித்த ஜெனரல் டக்லஸ் மாகார்தர் (General Douglas MacArthur) அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து அங்கு திமிங்கல வேட்டை மீண்டும் தொடர்ந்தது. இந்த சமயத்தில் மார்கரின் கொழுப்பை தாவர எண்ணெயில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் முறையை பல நிறுவனங்கள் கண்டுபிடித்தன. இதனால் கொழுப்பின் பயன்பாடு குறையத் தொடங்கியது.

இன்றைய நிலை

இன்று சர்வதேச அளவில் திமிங்கல வேட்டை மிக மோசமான செயலாகக் கருதப்படுகிறது. சர்வதேச திமிங்கல கமிஷன் (International Whaling Commision IWC) இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை இவை வேட்டையாடப்படும் காலத்திற்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டுவர பாடுபடுகிறது.
என்றாலும் ஜப்பான் மற்றும் நார்வே ஆய்வுப் பணிகளுக்காக என்ற பெயரில் வேட்டையைத் தொடர்கின்றன. இதில் நார்வே முதலிடத்தில் உள்ளது.

பன்னாட்டு அழுத்தங்களுக்கு நடுவிலும் வணிக நோக்கங்களுக்காக வேட்டையை மீண்டும் தொடங்கப் போவதாக ஜப்பான் அண்மையில் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த அற்புத உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுவது அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் கையில் உள்ளது என்று திமிங்கல நிபுணர்கள் கருதுகின்றனர். மனிதனின் குறுக்கீடுகளால் ஏற்கனவே மில்லியன்கணக்கான உயிரினங்கள் பூமியில் இருந்தே முற்றிலும் அழிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில் இந்த உயிரினங்கள் கொல்லப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டு இவை சுதந்திரமாக ஆர்பரிக்கும் கடலில் நீந்தும் காலம் வரும் என்று நம்புவோம்.

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/all-you-need-to-know-about-whales-and-their-importance-eco-story-1.8526232

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

யானைகளுக்கும் திமிங்கலங்களுக்கும் ஏன் புற்றுநோய் வருவதில்லை? மருத்துவத்தின் மிகப் பெரிய புதிர்களில் ஒன்றிற்கு விடை காண விஞ்ஞானிகள் முயல்கின்றனர். இது பற்றிய புரிதல் மனித புற்றுநோய் சிகிச்சையில் பெரிதும் உதவும். சில உயிரினங்கள் புற்றுநோய் வராமல் வாழும் போது வேறு சிலவற்றிற்கு புற்றுநோய்க் கட்டிகள் வந்து குறைவான ஆயுளுடன் வாழ்கின்றன.

100 முதல் 200 ஆண்டுகள் வரை வாழும் இயல்புடைய அம்பு தலை திமிங்கலங்கள் (Bowhead whales) உட்பட திமிங்கலங்கள் மிகக் குறைந்த அளவிலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. ஆனால் நாய், பூனைகளில் இதுவே அவற்றின் அகால மரணத்திற்கு முதன்மைக் காரணமாக உள்ளது. நரிகள், சிறுத்தைகள் புற்றுநோயின்றி வாழும்போது ஆடுகளும், மான்களும் இதனால் உயிரிழக்கின்றன. எலி, சுண்டெலிகளுக்கு இந்நோய் வருகிறது.

மனித உயிர் பறிக்கும் புற்றுநோய்

ஆண்டிற்கு 10 மில்லியன் பேரின் உயிர் பறிக்கும் புற்றுநோய் மனித உடல்நலத்திற்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பெரிய உடலமைப்புடன் வாழும் திமிங்கலம், யானை போன்றவை எண்ணற்ற உடற்செல்களைப் பெற்றுள்ளன. இந்த செல்கள் ஒவ்வொன்றும் தூண்டப்பட்டு புற்றுநோய்க் கட்டிகளாக மாறலாம். அவ்வாறு நிகழ்ந்தால் இவை உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ வேண்டியிருக்கும். ஆனால் இவற்றிற்கு புற்றுநோய் வருவதில்லை.elephant herdஇது பற்றிய கருத்தை முதல்முதலாக இங்கிலாந்து நாட்டின் புள்ளியியல் நிபுணர் ரிச்சர்டு பீட்டோ (Richard Peto) வெளியிட்டார். இதனால் இக்கோட்பாடு பீட்டோவின் முரண்பாடு (Peto’s paradox) என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி கேம்ப்ரிட்ஜ் வெல்கம் சாங்கர் (Wellcome Sanger) ஆய்வுக்கழக விஞ்ஞானிகள் லண்டன் விலங்கியல் சங்கம் (Zoological Society London ZSL) உள்ளிட்ட பல ஆய்வுக்கழக நிபுணர்களுடன் இணைந்து ஆராய்ந்தனர்.

புற்றுநோய் செல் ஆய்வு

உடல் செல்லில் உள்ள டி.என்.ஏ தொடர்ச்சியாக திடீர் மாற்றங்களுக்கு உட்பட்டு கட்டுக்கடங்காத முறையில் பிளவுபட்டு பெருக்கமடைவதே புற்றுநோய் எனப்படுகிறது. உடலின் எதிர்ப்பாற்றல் இதைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைகிறது என்று ஆய்வுக்குழுவின் தலைவர் அலெக்ஸ் காகன் (Alex Cagan) கூறுகிறார். அதிக செல்களைக் கொண்டுள்ள விலங்குகள் புற்றுநோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

நிறமிகளைப் பயன்படுத்தி நுண்ணோக்கியின் மூலம் ஆராய்ந்தபோது புற்றுநோய் செல்கள் இரண்டு பரிமான அளவில் (2d) நீல நிற உட்கருவுடனும், சைட்டோப்ளாசம் சிவப்பு நிறத்திலும், டி என் ஏ லென்ஸ்மீட்டரைப் (foci) பயன்படுத்தி ஆராய்ந்தபோது பச்சை நிறத்திலும் இருப்பது தெரிய வந்தது.

ஜாக்பாட்

செல்களை லாட்டரி சீட்டு போலக் கருதினால் எந்த அளவிற்கு நம்மிடம் அதிக சீட்டுகள் இருக்கின்றனவோ அந்த அளவு நமக்கு ஜாக்பாட் அடிப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இங்கு ஜாக்பாட் என்பது புற்றுநோய் என்ற பரிசே என்று விலங்கியல் சங்க தொற்றுநோயியலாளர் சைமன் ச்பிரோ (Simon Spiro) கூறுகிறார். இதன்படி பார்த்தால் சில வகை திமிங்கலங்கள் ஒரு வயதிற்கு முன்பே இறந்துவிட வேண்டும்.

ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. மனிதர்கள் டிரில்லியன் செல்களை மட்டுமே பெற்றிருக்கின்றனர். ஆனால் திமிங்கலங்களில் இது போல நான்கு மடங்கு செல்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் இந்த விலங்குகளுக்கு மனிதர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகம்.

யானைகள் முதல் எலிகள் வரை

யானைகள் சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்கின்றன. ஆனால் ஏராளமான திடீர் மாற்றங்களுக்கு ஆளாக்கப்பட வாய்ப்புள்ள அவை புற்றுநோயால் பாதிக்கப்படுவதில்லை.

இப்புதிருக்கு விடை காண விஞ்ஞானிகள் லண்டன் விலங்குக் காட்சி சாலையில் இயற்கையாக உயிரிழந்த சிங்கங்கள், புலிகள், ஒட்டகச்சிவிங்கிகள், வரி வால் லிமர் வகைக் குரங்குகள் (ring tailed lemurs), மரநாய்கள் (ferrets) மற்றும் வேறு ஒரு மையத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட இறைச்சியை உண்ணும் அளவு வலுவுள்ள பல் அமைப்பை உடைய 30 ஆண்டுகள் வரை வாழும் மோல் எலிகள் (naked mole rats) போன்ற விலங்குகளை ஆராய்ந்தனர். ஆனால் இவை நோயால் பாதிக்கப்படுவதில்லை.

திடீர் மாற்றங்களின் எண்ணிக்கை

ஒவ்வொரு விலங்கின் உடலில் இருந்தும் விஞ்ஞானிகள் குடல் க்ரிப்ட் (intestinal crypt) செல்களைப் பிரித்து அவற்றின் மரபணு வரிசையை ஆராய்ந்தனர். இவை குருத்தணு செல்களால் நிரந்தரமாக மாற்றமடைபவை. இவை மரபணு வரிசையை ஒப்பிட உதவுகின்றன. இதைப் பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் நிகழும் திடீர்மாற்றங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

இந்த எண்ணிக்கை விலங்கினத்திற்கு ஏற்ப மாறியது. நீண்டநாள் வாழும் விலங்குகளில் இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தது. குறைந்த நாள் வாழும் உயிரினங்களில் திடீர் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகின்றன. மனிதர்களில் ஆண்டிற்கு 47 திடீர் மாற்றங்கள் நிகழ்கின்றன. எலிகளில் இது 800. மனிதனின் சராசரி ஆயுட்காலம் 83.6 ஆண்டுகள். எலியின் ஆயுட்காலம் 4 ஆண்டுகள்.

திடீர் மாற்றங்களின் வேகம்

ஆனால் இவ்விலங்குகளின் ஆயுட்காலம் முடிந்தபின் 3200 திடீர் மாற்றங்கள் நடைபெற்றன. இது எல்லா விலங்குகளிலும் ஒரே அளவாக இருந்தது விஞ்ஞானிகளை வியப்படையச் செய்தது. இதற்கு முதுமையடைதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. டி.என்.ஏ. மரபணுவில் நடைபெறும் திடீர் மாற்றங்களை நீண்ட நாள் வாழும் விலங்குகள் எவ்வாறு மெதுவாக நடத்துகின்றன என்பது பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என்று காகன் கூறுகிறார்.

வேலைக்கார எறும்புகளும் ராணி எறும்புகளும்

ஆயுட்காலத்திற்கும் திடீர் மாற்றங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றி குறைந்த மற்றும் நடுத்தர வாழ்நாள் உள்ள விலங்குகளில் குறிப்பாக பாலூட்டிகளில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இவை தாவரங்கள், பூச்சிகள் மற்றும் ஊர்வனவற்றில் நடத்தப்படவுள்ளது. சமூக வாழ்க்கை நடத்தும் எறும்புகளில் வேலைக்கார எறும்புகள் மற்றும் ராணி எறும்புகள் ஒரே மாதிரியான மரபணு வரிசையைப் பெற்றுள்ளன.

ஆனால் ராணி எறும்புகள் 30 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகள் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்கின்றன. வேலைக்கார எறும்புகளை விட ராணி எறும்புகள் டி.என்.ஏ. பழுதுகளை திறம்பட செயல்படுத்துவது இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

புதிய மாற்றங்கள் ஏற்படுமா?

புற்றுநோய் ஆய்வுகளில் குறைந்த ஆண்டுகள் மட்டுமே வாழும் எலிகள் மற்றும் அவற்றின் மாதிரிகளே பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் அதன் முடிவுகள் சிறந்தவையாக இருக்காது. இனி வருங்காலத்தில் நீண்ட ஆயுட்காலம் உடைய விலங்குகளைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் எதிர்ப்பாற்றல் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மாற்றங்கள் நடைபெறும் வேகம், முதுமை மற்றும் கட்டிகள் இவற்றிற்கு இடையில் உள்ள தொடர்பு புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முதுமையால் உருவாகும் மோசமான பாதிப்புகளைக் குறைப்பதற்கும் இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/society/2023/apr/08/medicine-greatest-mysteries-why-dont-whales-get-cancer?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It