மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும்

  நாம் இதுவரை அண்டம் குறித்த ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் நவீனச்சிந்தனை பற்றிய ஒரு சுருக்கமான தரவுகளைப்பார்த்தோம். பண்டைய தொல்கபிலர், கணாதர் ஆகியவர்கள் தோற்றுவித்த எண்ணியம், சிறப்பியம் ஆகிய சிந்தனைப்பள்ளிகளின் கருத்துக்களோடு இந்த நவீனச்சிந்தனைகள் எவ்விதத்தில் ஒப்புமை கொண்டுள்ளன எனப்பார்ப்போம். அண்டம் பற்றிய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்து ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக் கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனைப் மரபால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது.

1.முதலும் இல்லை முடிவும் இல்லை:

 பழந்தமிழ்ச்சிந்தனை:

 deviprasath 268 “இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக் கொள்கையாகும். இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது. ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப் பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது” என எண்ணியம் கூறுவதாகச் சொல்கிறார் இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலை எழுதிய பிரேம்நாத் பசாசு(11).

நவீனச்சிந்தனை:

 அண்டத்திற்கு தொடக்கமோ, முடிவோ இருக்காது எனவும் அது என்றென்றும் இருந்துகொண்டிருக்கும் எனவும் ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை எனவும் சொல்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(12). மேலும் பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது என நவீன அறிவியல் கூறுகிறது. இதே கருத்துக்களைத்தான் மேற்கண்ட வரிகளில் எண்ணியம் கூறியுள்ளது. அண்டத்திற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை எனவும் உலகம் ஊழி ஊழிக்காலமாய் இருந்து கொண்டிருக்கிறது எனவும் இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது எனவும் அதை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை எனவும் எண்ணியம் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார். ஆகவே நவீனச்சிந்தனையும் எண்ணியமும் நான்கு விடயங்களில் ஒப்புமை கொண்டுள்ளன எனலாம். அவையாவன

1)பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது(இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது).

2)அண்டம் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது.

3)அண்டத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.

4)ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை.

2.பொருள்முதல்வாதம்-காரணகாரியக் கொள்கை:

பழந்தமிழ்ச் சிந்தனை:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய பிரச்சினை உலகிற்குரிய முதற்காரணம் என்ற பிரச்சினையாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான் உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்(13). உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு காரணகாரியக்கொள்கை மூலமே எண்ணியர்கள் வந்தடைந்தார்கள். இன்றைய உலகம் பொருளால் ஆனது என்பதால் இந்த உலகத்திற்கு காரணமான ஆதிமூலப்பொருளும் பொருளால்தான் ஆகியிருக்கவேண்டும். ஆகவே உலகத்திற்கான முதற்காரணம் என்பது பொருள்தான் ஆகும் என்பதே காரணகாரியக்கொள்கை மூலம் எண்ணியம் வந்தடைந்த முடிவாகும்.

நவீனச் சிந்தனை:

  இன்றைய நவீனச்சிந்தனையின்படி அண்டத்தின் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் பொருள்தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருள் என்பது இங்கு பொருளிலிருந்து உருவாகும் ஆற்றல் போன்றவற்றையும் குறிக்கும். ஆனால் பண்டைய காலத்தில் இதுபோன்ற முடிவிற்கு வருவதற்கு மிகப்பெரிய அளவிலான அறிவியல் சிந்தனை தேவைப்பட்டிருக்கும். மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபே இம்முடிவை வந்தடையக்காரணம் எனலாம்.

 3.ஆதிமூலப்பொருள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  பிரகிருதி அல்லது முதல்நிலைப்பொருளுக்கு எண்ணியம், “எதுவும் உருவாகும் முன்பே இருந்தது, ஆதிமூலமான அதிலிருந்தே அனைத்துப்பொருட்களும் தோன்றின; இறுதியில் அனைத்துப்பொருட்களும் அதிலேயே கலந்துவிடுகின்றன” எனப்பொருள் கூறுகிறது(14). மேலும் ஊழி ஊழிக்காலமாய் அது இருந்து வருகிறது எனவும் அதற்கு முதலோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது. அதாவது ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளில் இருந்து தான் நாம் காணும் அண்டமும் அதில் உள்ள பொருட்களும் தோன்றின எனவும் இறுதியில் இந்த ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளுக்குள் இந்த எல்லாப் பொருட்களும் கலந்து ஒன்றிணைந்து விடும் எனவும் இந்த ஆதிமூலப்பொருள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் எனவும் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது.

நவீனச்சிந்தனை:

 அண்டம் பற்றிய தன் முன்மொழிவில் அண்டத்தின் உருவளவு வட, தென் துருவங்களில் சுன்னமாகவே இருக்கும். ஆனால் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்க மாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.(15). மேலும் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். மேலும் அவர் தந்துள்ள அண்டம் பற்றிய படத்தில் வடதுருவத்தில் மாவெடிப்பும், தென் துருவத்தில் மாநெரிப்பும் காட்டப்பட்டுள்ளது. இவைகளின்படி மாவெடிப்புக்கு முன் அண்டத்தின் ஆதிமூலப்பொருளான முதல்நிலைப்பொருள் சுன்ன அளவில் இருக்கும் எனவும் மாவெடிப்பிற்குப்பின் அண்டத்தில் திரள்களும், விண்மீன்களும், கோள்களும், உயிர்களும் உருவாகும் எனவும் அவையனைத்தும் மீண்டும் மாநெரிப்பில் சுன்ன அளவு கொண்டதாக சுருங்கிவிடும் எனவும் அண்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும் எனவும் அதற்கு முடிவோ தொடக்கமோ இல்லை எனவும் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங். அதாவது மாவெடிப்புக்கு முன்பும் மாநெரிப்புக்கு பின்பும் அது இருந்து கொண்டிருக்கிறது என்றே அவர் கூறுகிறார். அதன் மூலம் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். ஆகவே இந்நவீனக்கருத்தைத் தத்துவார்த்த வடிவில் எண்ணியம் எளிமைப்படுத்திக் கூறியுள்ளது எனலாம்.

4.இயக்கமும் பரிணாமமும்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  எண்ணியத்தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது. அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக பரிணாமம் பெற்று வருகிறது என்பதுதான் ஆகும். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவவாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’(16). மேலும் “பரிணாமக்கோட்பாடு(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய கபிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன” எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

நவீனச்சிந்தனை:

  இங்கு ‘பொருள் நிரந்தரமானது’ என்பதற்கு அண்டம் என்றென்றும் இருந்து வருகிறது என்பதே எண்ணியச்சிந்தனையின் பொருளாகும். இதனை நவீன அறிவியல் கூறியுள்ளதை முன்பே பார்த்தோம். பொருள் இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை என்பதும் அது ஒரு வடிவத்திலிருந்து இன்னோன்றாகப் பரிணாமம் அடைந்து வருகிறது என்பதும் எண்ணியத்தின் கோட்பாடாகும். எண்ணியம் மேலே கூறுகிற இயக்கவியலும், பரிணாமக்கோட்பாடும் இன்று நவீன அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இன்றைய நவீனக்கருத்துக்களை அன்றே எண்ணியம் கூறியுள்ளதை ‘செர்பாட்சுகி’ அவர்கள் வியந்து போற்றுகிறார்.

5.வெளி, காலம், இயக்கம்: பழந்தமிழ்ச்சிந்தனை:

 உருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது நூலில், கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக்கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள் எனவும் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் எண்ணியச்சிந்தனை மரபு மொழிந்தது. “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார் வி.கிரபிவின் அவர்கள்(18).

  தொல்காப்பியர் முதற்பொருள் என்பது நிலம் பொழுது ஆகிய இரண்டின் இயல்பு என்பார். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றில் முதற்பொருளிலிருந்துதான் மனிதன், கடவுள் முதலான அனைத்துக் கருப்பொருட்களும் தோன்றுகின்றன எனவும் உரிப்பொருள் நிகழ்வுகள் அங்குதான் நடக்கின்றன எனவும் தமிழ் மரபு கருதியது. ஆகவே வெளி-காலம் என்ற முதற்பொருள்தான் அனைத்திற்கும் அடிப்படை என்ற எண்ணியச் சிந்தனைப்படிதான் தொல்காப்பியர் வெளி, காலம் என்பதை நிலம், பொழுது ஆகியவற்றின் இயல்புகள் எனக்கூறியுள்ளார். மேலும் முதற்பொருள் என்பது வெளி, காலம் ஆகியவற்றின் இயல்பு எனும்பொழுது அது இயக்கத்தையும் இணைத்துக் கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் எண்ணியச்சிந்தனை வெளி, காலம், இயக்கம் ஆகிய மூன்றையும் பருப்பொருளின் கூறுகளாகவும், அவைகளைப் பருப்பொருளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவைகள் எனவும் கருதியது. தமிழ்ச்சிந்தனை மரபின் இச்சிந்தனையை வி.கிரபின் அவர்கள், “புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார். ஆனால் இச்சிந்தனை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனை ஆகும். தமிழ் மரபின் சாதனைகள் இந்திய மரபின் சாதனைகளாகவே கூறப்பட்டு வருகின்றன. இந்நிலை மாறி தமிழ் மரபு ஒரு தனித்த மரபு என்பது வெளிப்பட வேண்டும்.

நவீனச்சிந்தனை:

 “காலம் என்பது ‘வெளி’ என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது” எனப்பொதுச்சார்பியல் கூறுகிறது.(19). ஆகவே வெளி-காலம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு பொருளாக ஆகிறது என்பதன் மூலம் இவை இரண்டும் பொருளின் கூறுகளாகவும் ஆகின்றன. மேலும் நவீனச் சிந்தனையின்படி இயக்கம் இல்லாத பொருளே இல்லை. ஆகவே வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்பதுதான் நவீனச் சிந்தனையின் கருத்தாகவும் உள்ளது. மேலும் அண்டம் என்பது வெளி-காலம் எனப்படும் நாற்பரிமாணப் பொருள் என்பதும் அதில் காலம் நான்காவது பரிமாணம் என்பதும் இந்த அண்டமும் அதில் உள்ள பொருட்களும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டுள்ளன என்பதும் இன்றைய நவீன அறிவியலின் கருத்தாகும். ஆகவே மேற்கண்ட விளக்கங்களின்படி, வெளி, காலம், இயக்கம் என்பன பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற எண்ணியத்தின் சிந்தனையோடு நவீனச்சிந்தனை ஒப்புமை கொண்டுள்ளது எனலாம்.

6.நிகழ்ச்சி: பழந்தமிழ்ச்சிந்தனை

 ஒரு நெறிப் பட்டாங் கோரியல் முடியுங்

            கரும நிகழ்ச்சி இடமென மொழிப’ என்கிறார் தொல்காப்பியர்.

            ‘ஒரு நெறிப்பட்டு, ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சியை இடமென்று சொல்வர்’ என்பதே இதன் பொருளாகும் அதாவது, வினை நிகழ்ச்சியை இடம் என்று சொல்வர் தம் முன்னோர் என்கிறார் தொல்காப்பியர். ‘ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும்’ என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார் என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(20).

 அடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வது பெருவியப்பைத் தருகிறது என்கிறார் க.நெடுஞ்செழியன்,

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்(பொருளியல்-244)

            ‘தேவர் உலகத்திலும், கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலும், மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்றால் காலமும் இல்லை’ என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன். நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார்(21). ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம், காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாகக் கொள்ளலாம். நவீனச்சிந்தனைப்படியும், எண்ணியச்சிந்தனைப்படியும் இடமும் வெளியும் ஒன்றையே குறிப்பதால், நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் வெளியும் இல்லை என தொல்காப்பியர் கூறுவதாக ஆகிறது.

 ஆகவே நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்ற நவீன அறிவியல் கருத்தை தொல்காப்பியர் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாடல் கருத்துக்கள் தொல்காப்பியருக்கு முந்தைய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் அறிஞர்களால் சொல்லப்பட்டவை என்பதை ‘மொழிப’ என்ற சொல் உறுதி செய்கிறது.

நவீனச்சிந்தனை:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது எனக்கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்(22). அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்பதே அவர் கருத்து எனலாம். தமிழ்ச் சிந்தனை மரபும் இக்கருத்தைக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியரின் பாடல்கள் உறுதி செய்கின்றன. ஆகவே இன்றைய வெளி - காலம் குறித்த நவீன அறிவியல் சிந்தனைகள் சிலவற்றை பண்டைய தமிழ்ச் சிந்தனைமரபு பெற்றிருந்தது என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

7.இன்மை: பழந்தமிழ்ச்சிந்தனை:

 “பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

  இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”

என்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.

 ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். மேலும் ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது என்கிறார் க. நெடுஞ்செழியன்(23).

 இங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்கவேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப்பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலையைப்பற்றி பேசுவதே இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப்பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

இன்மையும் நவீனச்சிந்தனையும்:

 அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும்; அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது; அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்பதால், படைத்தவருக்கு இங்கு இடமில்லை என ஸ்டீபன் ஆக்கிங் சொல்வதை முன்பே பார்த்தோம். அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இல்லை; அது என்றும் இருந்து கொண்டிருக்கும் என்ற நவீனச்சிந்தனைக்கான ஒரு தத்துவார்த்தக் கோட்பாட்டு வடிவமே ‘இன்மை’ ஆகும். சுன்ன அளவில் இருக்கும் அண்டம் மாவெடிப்பில் தொடங்குகிறது. திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் உருவாகின்றன. பின் இறுதியில் அண்டம் சுருங்கத்தொடங்கி திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் சிதைந்து அழிந்து இறுதியில் மாநெரிப்பு ஏற்பட்டு அண்டம் சுன்ன அளவாகச் சுருங்குகிறது. ஆக மாவெடிப்பிற்கு முன்பும் மாநெரிப்பிற்கு பின்பும் அண்டம் சுன்ன உருவளவில் இருக்கும். இவை அண்டம்பற்றிய நவீனச் சிந்தனையாகும். ‘திரள்கள்’ என்பதைப் பொருளாக எடுத்துக்கொண்டால் அதற்கு முன்பிருந்த நிலை, அதாவது அண்டம் திரள்களாக இல்லாமல், மாவெடிப்பில் அல்லது சுன்ன அளவில் இருந்த நிலை, ‘இன்மை’ என ஆகிறது. அது போன்றே உயிர் தோன்றுவதற்கு முன்பு சடப்பொருள் தான் இருந்தது. அந்த சடப்பொருளில் இருந்துதான் உயிர் தோன்றியது. ஆகவே உயிர் தோன்றுவதற்கு முன்பிருந்த நிலையை, உயிர் என்பது இல்லாதிருந்த நிலையை ‘இன்மை’ என்பது குறிக்கிறது. ஆக இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக ஆவதற்கு முன்பிருந்த நிலை ஆகும். மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் என தமிழ் மரபு கூறுகிறது. பொருள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது என்பதையும், ஆனால் அது வேறு வேறு பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், ஒரு பொருள் இயக்கவியல் அடிப்படையில் இன்னொரு பொருளாகப் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் மரபு ‘இன்மை’ என்ற கோட்பாட்டு வடிவமாக ஆக்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்டம் என்ற பொருள் என்றும் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் அது எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அது வேறு வேறு பொருளாக பரிணாம முறையில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த ‘இன்மைக் கோட்பாடு’ குறித்தது எனலாம்.

8.அணுக்கள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது இரசிய நூலில் “....நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை” எனச்சொல்வதாகக் கூறுகிறார்(24). சிறப்பியம், நியாயம் முதலியன கணாதர், கௌதமனார் ஆகிய தமிழர்களின் தமிழ்ச் சிந்தனை மரபுகள் ஆகும்.

 அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது…… கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது….. பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் சிறப்பியம் கூறுவதாகச் சொல்கிறார் பிரேம்நாத் பசாசு(25). சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்று கணாதர் நம்பினார். ஆன்மா என்பதும் வளர்ச்சியடைந்த பொருளே. ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே. கணாதர் கோட்பாட்டின்படி ஆன்மா என்ற சொல் கருத்துமுதல்வாத கோட்பாட்டின் வரையறைக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது உறுதி எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 ஆகவே கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது எனவும் அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் உணர்வு, ஆன்மா முதலியன பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே எனவும் பழந்தமிழ்ச் சிந்தனை கருதியது.

நவீனச்சிந்தனை:

  கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அணுக்கள் பகுக்க முடியாதவை என்பதும் அணுவைவிட சிறிய பொருட்கள் இல்லை என்பதும் இன்று தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது. அணுக்களில் நேர்மங்களும்(PROTONS), நொதுமங்களும்(NEUTRONS), மின்மங்களும்(ELECTRONS) உள்ளன என்பதும் இந்த நேர்மங்களும், நொதுமங்களும் இன்னுஞ்சிறிய பொருட்களான பொடிமங்களால்(QUARKS) ஆனவை என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை போக அணுக்களில் விசைத்துகள்கள் இருக்கின்றன என்பதும் பொடிமங்களில் எதிர் பொடிமங்கள் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மிகச்சிறு பொருட்கள் குறித்த கோட்பாடே கற்றை இயங்கியல் ஆகும். ஆகவே அணுக்கள் குறித்த பண்டைய தமிழ்ச் சிந்தனை என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு மேலோட்டமான சிந்தனைபோல்தான் தோன்றுகிறது.

 ஆனால் பொருட்கள் கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் ஆனவை என்ற கருத்தும், பருப்பொருட்கள் அனைத்தும் அணுக்களின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் அணுக்களால் உருவாகின்ற பருப்பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்ற கருத்தும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உருவாகும் இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது என்ற கருத்தும், சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்ற கருத்தும், பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் ஆன்மா (ஆன்மா என்பது இங்கு உயிர் எனப்பொருள்படும்) என்ற கருத்தும் நவீன சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளது எனலாம். அணுக்கள், பொருட்கள் குறித்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் இக்கருத்துக்கள் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள அறிவியல் சிந்தனைப் பள்ளியால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

9.உலக அமைப்பு: பழந்தமிழ்ச்சிந்தனை:

 ‘அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது. தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்பதே உலகம் பற்றிய எண்ணியப்பார்வை என பெர்னார்டு அவர்கள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு அவர்கள்(26).

நவீனச்சிந்தனை:

ஒரு செல் உயிரி முதல் மனிதன்வரை:

 பேரா.சு. மணி அவர்கள் எழுதிய மனித ஜினோம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. உயிர் என்பது ஒரு வேதியியல் நிகழ்வுதான். ஆதியில் ஓர் உயிர் தோன்றி தழைத்து பரிணமித்து நிலைப்படுவதற்கு ஆதாரமாக இருந்த அறிவு டி.என்.ஏ. வில் மும்மூன்று சொற்களின் வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் டி.என்.ஏ. தோன்றுவதற்கு முன்பே உயிர் தோன்றிவிட்டது. அதனைத் தோற்றுவித்தது ஆர்.என்.ஏ. ஆகும். தன்னைச்சுற்றிலுமுள்ள வேதியியல் பொருட்களை சேகரித்து அவற்றைப்பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு தன்னைப்போலவே இன்னொன்றையும் உருவாக்கும் அசாத்தியப்பண்பு ஆர்.என்.ஏ. வுக்கு இருக்கிறது. ஆகவே அதுவே முதல் உயிரி ஆகும். ஆனால்

ஆர்.என்.ஏ. க்கள் நிலையற்றவை. உருவான உடனே சிதைந்துவிடும். ஆகவே தகவல்களைச் சேகரிக்க கெட்டியான டி.என்.ஏ.க்களை உயிரி உருவாக்கிக் கொண்டது. ஆக உயிரி பரிணாம வளர்ச்சியில், டி.என்.ஏ.க்களை தகவல் நிலைக்களங்களாகவும், புரோட்டின்களைத் தமது செயல் இயந்திரங்களாகவும், ஆர்.என்.ஏ.க்களை இவை இரண்டுக்கும் இடையே செயல்படும் இடைப்பணியாளனாகவும் அமைத்துக்கொண்டது. ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரி பரிணம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆகியுள்ளது.

 வாக்கியத்தின் முற்றுப்புள்ளியை விட 100 மடங்கு சிறியதாக மனித செல் இருந்தாலும் ஒரு முழுமையான தொழிற்சாலை போல் அது செயல்படுகிறது. தேவையான திட்டம், ஆற்றல், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, நகலெடுத்தல் போன்ற அத்தனை நிகழ்வுகளும் இதில் நடைபெறுகின்றன. ஒரு செல்லில், அதன் மையத்தில் உட்கரு, அதில் குரோமோசாம், அதில் டி.என்.ஏ. மூலக்கூறு ஆகியன இருக்கும். அந்த மூலக்கூறில் மனித உடலை வடிவமைத்து உருவாக்குவதற்கான 3 பில்லியன் எழுத்துக்களால் ஆன தகவல்கள் இருக்கும். அத்தகவல்களை புத்தகமாக ஆக்கினால், 300 பக்கமுள்ள ஆயிரம் புத்தகங்கள் ஆகிவிடும். இந்த தகவல்களைக் கொண்டுதான் நமது கரு பல இலட்சங்கோடி செல்களை உருவாக்கி சுமார் ஒரு இலட்சம் உதிரி பாகங்களைக்கொண்ட நமது உடலைத் தானாகவே தயார் செய்து கொள்கிறது. 40 வயதுள்ள மனித உடலில் சுமார் 100 டிரில்லியன்(இலட்சங்கோடி) செல்கள் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இத்தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித டி.என்.ஏ. மூலக்கூறில் 25000 தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு தகவலும் ஒரு கட்டுரை வடிவத்தில் உள்ளது. இந்தத்தகவல்கள் அனைத்தையும் சேர்த்து ஜினோம் எனவும், ஒவ்வொரு தகவலையும் ஜீன் எனவும் அழைக்கிறோம்.(27)

 3 பில்லியன்(பில்லியன்-100கோடி) ஆண்டுகள் வரை அமீபா போன்ற ஒற்றைச்செல் உயிரினங்கள் தான் உலகில் வாழ்ந்தன. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் கூட்டுசெல் உயிரிகள் தோன்றின. 500 மில்லியன் ஆண்டுகளுக்கு(மில்லியன்-10இலட்சம்) முன்பு கேம்பிரியன் யுகத்தில் பூச்சிகளின் வாரிசுகளான கால் முளைத்த மீன்களிடமிருந்து முதுகெலும்பிகள் உருவாகின. டைனோசர்கள் வாழ்ந்த 200 மில்லியன் ஆண்டுவாக்கில் இந்த முதுகெழும்பிகளின் வாரிசுகளான ஊர்வனவற்றிலிருந்து உருவானவைகள்தான் பாலூட்டி விலங்குகள். 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பாலூட்டி விலங்குகளிடமிருந்து பிரிந்தவைகள்தான் ஏப்புகள். ஏப்புகளிடமிருந்து சிம்பன்சிகளும், கொரில்லாக்களும் தோன்றின. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிம்பன்சிகளிடமிருந்து மனித மூதாதை தோன்றினான்(28). அந்த மனித மூதாதையிடமிருந்து 1.5 மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு மனிதன் தோன்றினான். சிம்பன்சியும் மனிதனும் 98 விழுக்காடு ஒப்புமை உடையவர்கள் ஆவர். ஈ ஆனாலும், மனிதன் ஆனாலும் இருவரும் ஒரே பொது உயிரினத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என்பதும், அந்தப்பொது மூதாதை எந்தவிதத்தில் தனது கருவின் உருவத்தை வடிவமைத்ததோ அதே விதத்தில்தான் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைய உயிரினங்களும் வடிவமைத்து வருகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன(29). மனித ஜினோம். 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு செல் உயிரி இன்று 100 டிரில்லியன் செல்கள் கொண்ட மனிதனாகப் பரிணாம முறையில் உருவாகியுள்ளான்.

 செல்கள் யாருடைய கட்டளையையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்காமல் தம்முடைய ஜினோமிலிருந்து அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டு தம் கடமைகளைத்தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தமக்குள்ளேயே இருக்கும் விளக்கமான திட்டமிட்ட கட்டளைக்கோவையின் அடிப்படையில் அவை செயல்படுகின்றன(30). அதனால்தான் ஒரு செல்கரு தன்னிடமுள்ள கட்டளைக்கோவையின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டு பத்துமாதத்தில் ஒரு குழந்தையாக உருவாகிறது. நமது மூளை பரிணாம வளர்ச்சியில் ஜினோமால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அது ஜினோமைவிட சிக்கல்மிக்க வளர்ச்சிபெற்ற கருவியாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இன்று ஆகியுள்ளது. ஜினோம் ஏற்கனவே விதிக்கப்பட்ட திட்டப்படி இயங்குகிறது. ஆனால் மூளை அனுபவ அடிப்படையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் செயல்படுகிறது. இந்த உலக அமைப்பில் இயற்கை உருவாக்கியதில் மிகமிக உயர்ந்த, மிகமிக அதீத அறிவுகொண்ட, பன்முகத்திறனும் தேர்ச்சியும் பெற்ற, நெகிழ்வுத்தன்மையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் அனுபவ அறிவுத்திறனும் உடைய, அசாதாரணமான பண்புகள் கொண்ட, ஒரு நுணுக்கமான, சிறப்புமிக்க, அதியற்புதமான பொருள்தான் மனித மூளை ஆகும்.

ஒப்புமை விளக்கம்:

1.அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது.

 அறிவுக்குட்பட்டும், காரணகாரியத்துடனும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், மேன்மையான அறிவு வளர்ச்சியோடும் உலகம் இயங்கி வருகிறது என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. உலகில் ஒரு செல் உயிரி தோன்றியது முதல் இன்றைய மனிதன் உருவாகியது வரையான வளர்ச்சி என்பது, உலகம் காரண காரியத்தோடும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், அறிவைப் பயன்படுத்தியும் வளர்ந்துவந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்கிறது.

2.தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிறது எண்ணியம். ‘ஒரு செல் உயிரி தோன்றியது முதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது தானே உருவாகி, பரிணாம முறையில் தானே அடைந்த வளர்ச்சிதான்’ என்பதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்துள்ளன.

3.”தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது”. என எண்ணியம் சொல்வதாகக் கூறுகிறார் பெர்னார்டு.

 (1).‘தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை’ என்கிறது எண்ணியம். நமது செல்களின் செயல்பாடுகள் மேற்கண்டவாறுதான் உள்ளன. அவை தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை குறையின்றி செய்து முடிக்கின்றன. அதுபோன்றே எல்லா செல்களுக்கும் செயல் நோக்கம் இருக்கிறது. (2).“தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது”. என்கிறது எண்ணியம். இங்கு சொல்லியிருப்பது பெரும்பாலான செல்களுக்கு பொருந்துகின்றன. ஒரு கரு செல் ஒரு குழந்தையை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொண்டு செயல்படுகிறது என்பது உறுதி. (3).”காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது, என்ன வினையாற்ற வேண்டும் என்ற குறிப்பு உள்ளது, தேர்ந்த அமைப்பாகச்செயல்படுகிறது” என்கிறது எண்ணியம். செல்லில் என்ன செய்யவேண்டும் என்ற வரையறையும் அதைச்செய்வதில் ஒருவித ஒழுங்கும் இருக்கிறது. செல்லில் உள்ள ஜினோம் என்பதில் செல்கள் செயல்படுவதற்கான கட்டளைக்குறிப்புகள் உள்ளன. அக்கட்டளைக் குறிப்புகளைப் பயன்படுத்தி செல்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகின்றன. ஆக எண்ணியத்தின் கருத்துக்கள் செல்களின் நடவடிக்கைகளோடு பொருந்திப் போகின்றன எனலாம்.

4.’உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு’ என்கிறது எண்ணியம். நவீன அறிவியல் கருத்தும் மேலுலக ஆற்றலை ஏற்பதில்லை. உலகம் தொடக்கமோ முடிவோ இல்லாமல் தொடர்ந்து இயங்கிவருகிறது என்பதை நவீன அறிவியல் பலவிதங்களிலும் உறுதி செய்துள்ளது.

5.’நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ எனக்கூறுகிறது எண்ணியம். ஒரு செல் உயிரிமுதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையில்தான் இருந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது. யாருடைய உதவியும் இன்றி, தானாகவே உயிர்கள் உருவாகியுள்ளன என்பதையும் நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது.

 பெர்னார்டு என்பவர் கூறிய எண்ணியத்தின் உலக அமைப்பு குறித்த கருத்துக்களில் பெரும்பகுதி நவீன உயிரியல் அறிவியலோடு ஒப்புமை கொண்டுள்ளன என்பதை மேலே தந்த விளக்கங்கள் உறுதி செய்கின்றன.

முடிவு:

1.முதலும் இல்லை முடிவும் இல்லை, 2. காரணகாரியக்கொள்கை, 3. ஆதிமூலப்பொருள், 4.இயக்கவியலும், பரிணாமும், 5.வெளி, காலம், இயக்கம். 6.நிகழ்வு, 7.இன்மை, 8.அணுக்கள், 9.உலக அமைப்பு ஆகிய தலைப்புகளில் நவீனச்சிந்தனையும் பழந்தமிழ்ச்சிந்தனையும் பல வகைகளில் ஒப்புமை கொண்டுள்ளன என்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டன. பழந்தமிழ்ச்சிந்தனை என்பது கிரேக்க நகர அரசுகள் போன்று நன்கு வளர்ச்சியடைந்த வணிக நகர அரசுகளின் 2000 ஆண்டுகளுக்கு முந்தையகாலகட்டச் சிந்தனை ஆகும். அதன் அடிப்படையாக கிமு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. பழந்தமிழ்ச்சமூகம் வேளாண்மை, தொழில், வணிகம், அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. பகுத்தறிவு, காரணகாரியக்கொள்கை, தர்க்கவியல், பொதுஅறிவு போன்றவற்றை வளர்த்தெடுத்து அவற்றை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொண்ட, ஒரு வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளியாக பழந்தமிழ்ச் சிந்தனைமரபு இருந்தது. தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய தத்துவார்த்த தமிழ் அறிவியல் அறிஞர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் அவற்றின் அடித்தளமாக இருந்தன. இவைகளின் காரணமாகவே பழந்தமிழ்ச் சிந்தனைமரபின் கருத்துக்கள் தத்துவார்த்த அடிப்படையில் எளிமைப் படுத்தப்பட்டதாக இருந்த போதிலும் நவீனச்சிந்தனையோடு பலவிதங்களிலும் ஒப்புமை கொண்டிருக்கிறது எனலாம்.

 கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளே இன்றைய மேற்குலகச் சிந்தனைகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளுக்கு மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழ்ச்சிந்தனை மரபு இருந்து வந்துள்ளது. பலவிதங்களில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபு கிரேக்க சிந்தனை மரபுக்குச் சமமாகவும் சிலவிதங்களில் அதற்கு மேம்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் அவை தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியப் படையெடுப்புகளாலும், வடஇந்திய ஆரியச்சிந்தனைகளாலும் மூடி மறைக்கப்பட்டு மீள முடியாதவாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. 50 – கி.பி. 250), பேரரசுக்கொள்கையின் காரணமாக பழந்தமிழ்ச்சிந்தனை மரபு மிகவும் பலவீனமாக ஆகியிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர்களான களப்பிரர் படையெடுப்பாலும், அவர்களின் ஆரம்பகால வன்முறை ஆட்சியாலும் இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டு ஒரு சிறுபகுதி ‘ஆகமம்’ போன்றவற்றில் சமற்கிருதமயமாக்கப்பட்டது. தமிழின் அறிவியல் சிந்தனை மரபின் அழிவிற்கு சமற்கிருதமயமாதலும், வைதீகக் கருத்துக்களும் மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.

 கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் தெற்காசியாவின் வணிகமொழி என்ற தகுதியை தமிழ் மொழி இழந்தது போலவே, கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் ஒரு அறிவியல் மொழி என்ற தகுதியை இழந்தது. அவ்விடத்தை சமற்கிருதம் எடுத்துக்கொண்டது(உலக அளவில் வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் இருந்த தமிழ் இன்று மக்கள் மொழி என்ற நிலையையும் கூட இழக்கும் அவலநிலை இருக்கிறது). அதன் காரணமாக கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழில் இருந்த அனைத்துத் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் பாதுகாக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் அழிந்து போயின. அறிவியல், இசை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுகளில் இருந்துதான் வட இந்தியச் சிந்தனை கடன் வாங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய நூலும், சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே. தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதோடு அதற்கு முன்னரே கி.மு. 1500 முதல் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இன்று உறுதியாகியுள்ளது. கீழடி அகழாய்வு தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதை உறுதி செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து நடக்கும் அகழாய்வுகளும் பிற ஆய்வுகளும் தமிழின் தொன்மையை மட்டுமல்ல அதன் தத்துவார்த்த அறிவியல் சிந்தனை மரபையும், வட இந்தியச்சிந்தனையின் பல முன்னேறிய தத்துவார்த்த அறிவியல் சிந்தனையின் மூலம் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுதான் என்பதையும் வெளிக்கொண்டு வரும் என்பது உறுதி.

        முற்றும்.

பார்வை:

11.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 117-119.

12.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 194

13.தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, உலகாயதம், தமிழில் எஸ். தோதாத்ரி, NCBH, சூன்-2010 பக்: 578-581.

14.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 116-117.

15.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 189.

16.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 785.& இந்தியத்தத்துவம் ஓர் அறிமுகம், சட்டோபாத்தியாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, படைப்பாளிகள் பதிப்பகம், பக்: 201.202.

17.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 115.

18.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798.

19.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 73.

20.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 105.

  1. “ “ “ பக்: 105, 106. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 800, 801.

22.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 47.

  1. ஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-51.

24.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798, 799.

25.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 105-106.

  1. “ “ “ பக்: 116.

27.மனித ஜினோம், பேரா. க. மணி, சூலை-2015, பக்: 2-7.

  1. “ “ “ பக்: 45-50.
  2. “ “ “ பக்: 269.
  3. “ “ “ பக்: 265-267.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It