பண்டைய தமிழகத்தில் ஓலைகள்தான் மூல ஆவணங்களாக இருந்தன. அதன் நகல்களாகத்தான் கல்வெட்டும் செப்பேடுகளும் இருந்தன என்பது குறித்து முதலில் இங்கு பேசப்பட்டுள்ளது. அதன்பின் ஆதித்த கரிகாலன் கொலை குறித்தத் தரவுகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

அ. ஓலைகள்தான் மூல ஆவணம்

தமிழ்நாட்டில் உள்ள செப்பேடுகளுக்கும் கல்வெட்டுகளுக்கும் மூல ஆவணமாக ஓலைகள்தான் இருந்தன. சங்ககாலத்திலிருந்தே அரசு நிர்வாகத்தின் ஆவணங்களாக ஓலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பிற்காலச் சோழர், பாண்டியர், பல்லவர் காலத்தில் அரசின் நிர்வாகப் பணிகளில் அரசு ஆவணங்களாக ஓலைகள் மிக முக்கியப் பங்காற்றின. அந்த அரசு ஓலைகளை மூலமாகக் கொண்டே செப்பேடுகளும் கல்வெட்டுகளும் தனியாரால் உருவாக்கிக் கொள்ளப்பட்டன. இந்த அரசு ஓலைகள் அரசின் ஆவணக் களரிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன. மத்திய அரசின் ஆவணக்களரி போக நாட்டார் அவைகளும் ஆவணக் களரிகளைக் கொண்டிருந்தன. சில ஊர் அவைகளிலும் ஆவணக்களரிகள் இருந்தன.

சோழர் கால ஆவணங்களில் ஓலையை எழுதியவர் பெயர் இருக்கும். ஓலைகளில் நிலதானத்தை அல்லது பிறவற்றைச் செயல்படுத்திய நாட்டார் அவையினரின் கையெழுத்துகளும், சாட்சிகளின் கையெழுத்துகளும் இருக்கும். ஆவண ஓலை இறுதியான பின் அதில் முத்திரையிடப்படும். ஆவண ஓலைகள் பல வகைப்படும். கோனோலை என்பது அரசனால் சொல்லப்பட்டு அரசனின் அதிகாரியால் அப்படியே எழுதப்படும் ஓலை. இந்தக் கோனோலை ஆவணக் காப்பகத்தில் பட்டோலை என்ற பிரிவில் பாதுகாக்கப்பட்டதால் அது பட்டோலை எனப்படும். அங்குள்ள அதிகாரியின் ஒப்புதல் பெற்று திருமந்திர ஓலை என்ற அதிகாரியால் அது நகல் எடுக்கப்படும்பொழுது திருமந்திர ஓலை எனப்படும். அதில் ஒரு நகல் நாட்டாருக்கு அனுப்பப்படும்பொழுது அது திருமுகம் எனப்பட்டது.

mannar mannan book on adhitha karikalan murderநாட்டார் அமைப்பு:

பண்டைய தமிழ்நாட்டின் அரசு நிர்வாகத்தில் நாடும் அதன் நாட்டார் அமைப்பும் மிக முக்கியமானவை. சேர, சோழ பாண்டிய அரசுகள் ஒவ்வொன்றும் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒரு நாடு என்பது பல ஊர்களையும், சிறு நகரங்களையும் கொண்ட ஒரு முக்கிய நிர்வாக அமைப்பு. ஒரு நாடு என்பதை இன்றைய வட்டம் (தாலுக்கா) எனலாம். ஊர்களுக்கு ஊரவை இருக்கும். பிராமண ஊரவை சபை எனப்படும். நகரங்களில் நகர அவை இருக்கும். இவை அனைத்தையும் நிர்வகிக்கும் மேல் அமைப்புதான் நாட்டார் அவை. மொத்த ஊர்களில் பார்ப்பன ஊர்கள் 20 விழுக்காடு மட்டுமே. அதன் சபைகளில் மட்டுமே பார்ப்பனர் இருப்பர். ஆனால் ஊரவை, நகர அவை, நாட்டார் அவை போன்றவற்றில் அவர்களின் பிரதிநிதிகள் இல்லை. பொதுவாக அரசு நாட்டார் அவையோடு மட்டுமே தொடர்பு கொள்ளும். அரசின் ஆணைகளைச் செயல்படுத்தும் பொறுப்பு நாட்டார்களுக்கே உண்டு. நாட்டார் அமைப்பு என்பது ஊரவை, நகர அவை ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டது.

ஆவணக் களரி:

ஒரு நிலதானத்தை நிறைவேற்ற, கோனோலையாகவோ, திருமந்திர ஓலையாகவோ, திருமுகமாகவோ உள்ள அரசனின் உத்தரவை உரிய அதிகாரிகள் குழு அந்நிலத்திற்குரிய நாட்டாரிடம் ஒப்படைப்பர். அதனை நாட்டார்கள் தாங்களே எதிரில் சென்று வரவேற்று அரசனின் ஓலையை தலைமீது வைத்து வாங்குவர். பின் நாட்டார்கள் அரசனின் உத்தரவில் உள்ளபடி தானத்தை நிறைவேற்ற, முதலில் தான நிலத்தை அளந்து அதன் எல்லைகளை உறுதி செய்வர். பின் தானம் நிறைவேற்றப்பட்ட முறையை விரிவாக எழுதி தங்கள் கையெழுத்துகளோடும், சாட்சிகளின் கையெழுத்துகளோடும் ஒரு புதிய ஓலையை உருவாக்குவர். அது நிலம் கைமாறியதை மக்களுக்கு அறிவிக்கும் ஓலை என்பதால் அறையோலை எனப்பட்டது. பின் அறையோலை அரசுக்கு அனுப்பப்படும். அறையோலையில் மாறுதல்கள் இருந்தால் அவை உரிய அனுமதியோடு கோனோலையில் மாற்றப்பட்டு உரிய கையெழுத்திடப்பட்டு அவை இரண்டும் ஆவணக்களரியில் சேமிக்கப்படும். நாட்டார் அவையின் ஆவணக்களரியிலும் அவை சேமிக்கப்படும்.

செப்பேடும் கல்வெட்டும் மூன்றாம் பிரதி:

அறையோலைதான் அரசின் முறையான ஆவணம். இந்த ஆவணம் பின் கல்வெட்டாகவும் செப்பேடாகவும் மாற்றப்படலாம். எபிகிராபிகா இண்டிகா தொகுதி-3, பக்கம் 345 இன்படி செப்பேடு என்பது ‘திரிபலீ தாம்ர சாசனம்’ எனப்படும். இதற்கு திரு நா. சுப்பிரமணியம், ‘உத்தரவு முதலில் ஓலையிலும், பின் கல்லிலும், அதன்பின் செம்பிலும் எழுதப்படுவதால் செப்பேடு என்பது மூன்றாவது பிரதி ஆகிறது’ என விளக்கம் தந்துள்ளார். ஆனால் கோனோலை அரச உத்தரவின் முதல் பிரதி, இரண்டாம் பிரதி என்பது நாட்டார் அவையின் அறையோலை, செப்பேடு அல்லது கல்வெட்டு என்பன அதன் மூன்றாம் பிரதி எனலாம். கல்வெட்டு அல்லது செப்பேடு என்பன தானம் பெற்றவர் எழுதிக் கொள்பவை. சோழர் காலத்தில் நிலதானம் பெற்ற பெரும்பாலோர் செப்பேடுகளையோ, கல்வெட்டுகளையோ வெட்டிக் கொள்ளவில்லை.

பார்ப்பனர்களும் செப்பேடுகளும்

பார்ப்பனர்கள் செப்பேடுகளை வெட்டி அதில் தங்கள் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் புகுத்தியுள்ளனர். செப்பேடு என்பதில் கோனோலை, வரைவோலை ஆகியவற்றில் இருப்பது போக நிலதானம் பெற்றவரின் அல்லது செப்பேட்டை எழுதியவரின் வழக்கங்களும் நம்பிக்கைகளும் சேர்த்து எழுதப்பட்டிருக்கும். குறிப்பாக பார்ப்பனர் நிலதானம் பெற்ற செப்பேடுகளில் அரசு ஆவணங்களில் உள்ளது போக காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றன எழுதப்பட்டிருக்கும். இவை பார்ப்பன நூல்களின் வழிகாட்டுதல்படியும், தானம் பெற்றவரின் அனுமதியை மட்டும் கொண்டு பார்ப்பனக்கவிஞர் ஒருவரால் எழுதப்பட்டிருக்கும். ஆகவே செப்பேடு என்பது அரசு ஆவணத்தின் நகலாக மட்டும் இல்லாமல் தானம் பெற்றவரின் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் கொண்டிருக்கும் என்பதால் அதனை அரசு ஆவணத்தின் உண்மை நகலாகவும் கொள்ளமுடியாது. செப்பேடாக மாற்றிக் கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர்கள் தவறாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

சோழ பாண்டிய அரசின் ஆட்சிமொழி ‘தமிழ்’:

பார்ப்பனர் அல்லாத மற்றவர்களின் செப்பேடுகளில் புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றவை இருக்காது. சான்றாக சிறிய இலெய்டன் செப்பேடு, திருக்களர் செப்பேடுகள் போன்றனவற்றைச் சொல்லலாம். சோழ அரசின் ஆட்சிமொழி தமிழ் என்பதால் கோனோலை, அறையோலை போன்றன முழுமையாகத் தமிழில்தான் எழுதப்பட்டன. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கோனோலை, அறையோலைப் பகுதிகள் தமிழில்தான் எழுதப்பட்டன. ஆனால் காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றவை பெரும்பாலும் சமற்கிருதத்தில் எழுதப்பட்டன. அவை அரசின் ஆவணங்களோ, அரசின் கருத்துகளோ அல்ல. எனினும் இதனை அறிந்தோ அறியாமையாலோ வரலாற்று ஆய்வாளர்கள் பலரும் இந்த சமற்கிருதத்தில் தானம் பெற்றவரின் அனுமதியின் பேரில் எழுதப்பட்ட அவர்களது நம்பிகைகளையும் வழக்கங்களையும் சோழ அரசின் வரலாறாக அதன் கருத்தாகக் கொண்டு வரலாறு எழுதுவதுதான் இங்கு பெரும் பிரச்சினை.

பார்ப்பனியமயமான வரலாறு:

தமிழ்நாட்டின் வரலாறு பெரும்பாலும் இந்தச் செப்பேடுகளின் அரசு ஆவணமில்லாத சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றனவற்றைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் அவ்வரலாறு பார்ப்பனமயமாக்கப்பட்ட வரலாறாக உள்ளது என்பதைப் பலரும் அறியவில்லை. 1890-2009 வரையான 119 ஆண்டுகளில் மைப்படிகள் எடுக்கப்பட்ட ஒரு இலட்சம் கல்வெட்டுகளில் 65000 கல்வெட்டுகள் தமிழ்க்கல்வெட்டுகள். ஆனால் அவை நூலாக வெளிவரவில்லை. நீதிமன்றத் தீர்ப்புப்படி மைசூரிலிருந்து 2022ஆம் ஆண்டு இறுதிவரை 13000 கல்வெட்டுப்படிகள் தான் வந்துள்ளன. மீதி உள்ள கல்வெட்டுகளின் நிலை பற்றித் தெரியவில்லை. அது போன்றே ஓலைச்சுவடிகள் வரலாற்றுக்குப் பயன்படக் கூடியவை. அவற்றிலும் பெரும்பாலானவை அழிந்து வருகின்றன. கல்வெட்டுகளையும் ஓலைச்சுவடிகளையும் படி எடுத்து நூலாக்கி ஆய்வு செய்யும்பொழுதான் தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை அறிய இயலும்.

செப்பேடுகளின் சமற்கிருத மொழியில் எழுதப்பட்ட காப்புச்செய்யுள், புகழ்ச்சி, ஓம்படைக்கிளவி போன்றனவற்றைக் கொண்டு உண்மையான வரலாற்றைக் கண்டறிய இயலாது. அவை அரசின் ஆவணங்கள் அல்ல.

சான்றாதார நூல்: ஆதித்த கரிகாலன் கொலை, இரா. மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், மே-2023. பக்: 47-197, 529-557.

ஆ. ஆதித்த கரிகாலன் கொலை

உடையார்குடிக் கல்வெட்டு தனி நபர் தானக்கல்வெட்டு:

உடையார்குடிக் கல்வெட்டு என்பது இராசராச சோழன் வெட்டிய கல்வெட்டு அல்ல. அது பரதன் எனப்படும் வியாழ கசமல்லப் பல்லவரையன் என்ற தனியாரால் வெட்டப்பட்ட தனிநபர் தானக் கல்வெட்டு. இராசராசன் தனது 2ஆம் ஆட்சியாண்டில் ஆதித்த கரிகாலனைக் கொன்ற மூன்று துரோகிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் உடைமைகளை (அரசால் முன்பே கைப்பற்றப்பட்ட) விற்பனை செய்ய ஊர்ச்சபைக்கு ஆணையிடுகிறான். அதன்படி துரோகிகளின் தம்பியான மலையனூரான், அவன் மகன், அவன் தாயார் ஆகிய மூன்று பேர்களின் நிலத்தை மட்டும் ஊர்ச்சபையிடம் இருந்து விலைக்கு வாங்கிய பரதன் எனப்படும் வியாழ கசமல்லர், அந்த நிலத்தைக் கோவிலுக்குத் தானம் தருகிறார். அவர் தான் தானம் தந்ததை ஆவணப்படுத்த, இந்தக் கல்வெட்டை வெட்டுகிறார்.

பேரரசன் இராசராசனின் திருமுகம்

இக்கல்வெட்டில் சோழப் பேரரசன் இராசராசன், வீர நாராயண சதுர்வேதி மங்கள சபையோருக்கு உத்தரவிட்ட திருமுகம் அப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. அந்தத் திருமுகத்தின் நோக்கம் முன்பே பறித்து வைக்கப்பட்டிருந்த மூன்று துரோகிகள், அவர்களது உறவினர்கள் ஆகியவர்களின் உடைமைகளை விற்பனை செய்வதுதான். துரோகிகளுக்கு, தண்டனைகள் முன்பே தரப்பட்டு விட்டது என்பதால் மூன்று துரோகிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? எப்பொழுது தண்டனை கொடுக்கப்பட்டது? போன்ற தகவல்களை இராசராசன் தனது திருமுகத்தில் தரவில்லை. ஆகவே கொலை நடந்த கி.பி. 971ஆம் ஆண்டு அல்லது அதன் பிந்தைய ஓரிரு ஆண்டுகளுக்குள் துரோகிகளுக்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டு விட்டது. அப்போதே அனைவருடைய உடைமைகளும் பறிமுதல் செய்யப்பட்டு, அவை சபையாரின் பொறுப்பில் விடப்பட்டுவிட்டது. இராசராசன் ஆட்சிக்கு வந்த இரண்டாம் ஆண்டில் (கி.பி. 987) பறிமுதல் செய்யப்பட்டிருந்த அவர்களின் உடைமைகளை விற்பனை செய்வதற்காக இருவரை நியமித்து, அவர்களின் மேற்பார்வையில் அந்த உடமைகளை சபையோர் விற்க, தனது திருமுகத்தில் ஆணையிட்டுள்ளான்.

கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான, சோமன்…., தம்பி இரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராசன், இவன் தம்பி பரமேசுவரனான இருமுடிச் சோழ பிரம்மாதிராசன், இவர்களின் உடன் பிறந்த மலையனூரான், இவர்களின் தம்பிமார்கள், இவர்கள் மூன்று பேரின் மகன்கள், அவர்களின் மனைவிமார்கள், தாயார், அவர்களுடைய தந்தையின் மூத்த சகோதரர்கள், அவர்களின் மகன்கள், இவர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள், இவர்களின் தாயோடு பிறந்த தாய்மாமன்கள், இவர்களின் உடன் பிறந்த பெண்களைத் திருமணம் செய்தவர்கள், இவர்கள் பெற்ற பெண்களைத் திருமணம் செய்தவர்கள் ஆகிய அனைவரின் உடைமைகளையும் சபையோர் விற்பனை செய்ய இராசராசன் தனது திருமுகத்தில் ஆணை தருகிறான்.

அந்தத் திருமுகம் இந்த உடைமைகளைப் பறிமுதல் செய்வது குறித்து எதுவும் பேசவில்லை. அவைகளை விற்பனை செய்வது குறித்தே பேசுகிறது என்பதால் இந்த உடைமைகள் முன்பே பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. துரோகிகளுடையது மட்டுமில்லாமல், அவர்களின் உறவினர்கள் அனைவருடைய சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் துரோகிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டது எனலாம்.

வியாச கசமல்லர் தரும் தகவல்கள்:

இத்தனை உறவினர்களில் துரோகிகளின் தம்பியான மலையனூரான், அவனது மகன், அவனது தாய் ஆகிய மூன்று பேரின் நிலத்தை மட்டுமே வியாச கசமல்லர் வாங்குகிறார். அந்த நிலத்தின் அளவையும், எந்தக் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது என்பதையும், எதற்காகத் தானம் வழங்கப்பட்டது என்பதையும் இக்கல்வெட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டில் இராசராசனின் திருமுகமும், வியாச கசமல்லரின் மேற்கண்ட தகவல்களும் மட்டுமே உள்ளன. வேறு தகவல்கள் இல்லை.

ஆட்சியாண்டுகளும் உண்மை நிகழ்வுகளும்:

பிற்காலச் சோழர் ஆட்சியில் இராசகேசரி, பரகேசரி என பட்டம்பெற்ற இரு அரசர்கள் ஒரே சமயத்திலும் அல்லது தனியாகவும் ஆண்டனர். ஆய்வாளர் சக்திசிரி, வானியல் குறிப்புகளையும் இன்ன பிறவற்றையும் அடிப்படையாக கொண்டு அரசர்களின் ஆட்சியாண்டுகளைக் கணக்கிட்டுள்ளார். இந்த ஆட்சியாண்டுகள் எல்லாவகையிலும் பொருந்திப் போகின்றன.

 பெயர் ஆட்சிக்காலம் (கி.பி) ஆண்டுகள்

1.இராசகேசரி சுந்தர சோழன் 962-979 18

2.பரகேசரி ஆதித்த கரிகாலன் 966-971 5

3.பரகேசரி உத்தம சோழன் 972-987 16

4.இராசகேசரி இராசராசன் 985-1014 29

5.பரகேசரி இராசேந்திரன் 1012-1044 33

இதன்படி கி.பி. 971இல் ஆதித்த கரிகாலன் இறந்த பிறகும் சுந்தர சோழன் கி.பி. 979 வரை, 8 முதல் 9 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். ஆகவே அவர் காலத்திலேயே கொலை செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு விட்டது. ஆகவே மகன் கொலை செய்யப்பட்ட துக்கத்தால் அவர் இறந்தார் எனக் கூற முடியாது. அதுபோன்றே உத்தம சோழன் அல்லது இராசராச சோழன் போன்றவர்களின் மீது பழி சுமத்துவது, பொறுப்பற்ற செயல்.

சோழர் ஆட்சியில் மிக அதிக அளவில் குற்றங்கள் செய்தவர்களாகவும் மிக அதிக அளவில் தண்டனை பெற்றவர்களாகவும் பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள் என தொல்லியல்துறை வெளியிட்ட ‘திருமால்புரம்’ என்ற ஆய்வு நூலும் ‘அருண்மொழி ஆய்வுத் தொகுதி’ என்ற நூலில் உள்ள இல. தியாகராசன் அவர்களின் கட்டுரையும் உறுதி செய்கின்றன.

ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர்கள் சோழ அரசில் உயர் அதிகாரிகளாக இருந்த, பிரம்மாதிராசன் என்ற பார்ப்பனப் பட்டப் பெயரைப் பெற்ற பார்ப்பனர்கள். சோழ அரசின் அதிகாரிகளாக இருந்து கொண்டே ஆதித்த கரிகாலனைக் கொலை செய்து ஏன் அவர்கள் துரோகிகளாக ஆனார்கள் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. இவர்கள் சத்திரியர்களை அழித்த பரசுராமன் என்ற புராணக் கதைமாந்தன் வழி வந்தவர்களாகக் கருதும் நம்பூதிரிகள் என்பதால் சத்திரியனான ஆதித்த கரிகாலனைப் படுகொலை செய்தார்கள் என்பது ஏற்கத்தக்கதல்ல. அதுபோன்றே ஆதித்த கரிகாலன் காஞ்சியை ஆண்டபோது, அங்கு இருந்த பார்ப்பனர்களுக்கும் சோழர்களுக்கும் இடையே ஏற்பட்ட பகைமையால் கரிகாலன் கொல்லப்பட்டான் என்பதும் முழு உண்மையல்ல.

ஆனால் இராசராசன் காந்தளூர்ச்சாலையைத் தாக்கியதிற்கும், கரிகாலனின் படுகொலைக்கும் தொடர்புண்டு.

சான்று நூல்: ஆதித்த கரிகாலன் கொலை, இரா.மன்னர் மன்னன், பயிற்றுப் பதிப்பகம், மே-2023, பக்: 375-460, 383-391, 447-448, 468-471, 520-528.

இ. படுகொலைக்கான உண்மைக் காரணம்

கி.பி. 250 க்கு முன்வரை கேரளா தமிழகத்தின் சேர வேந்தர்கள் ஆண்ட பகுதியாக இருந்தது. கி.பி. 250இல் நடந்த களப்பிரர் படையெடுப்பும் அவர்கள் ஆட்சியும் தமிழகத்திற்கும் இன்றைய கேரளாவிற்கும் பேரழிவைக் கொண்டு வந்தது. கி.பி. 550 வாக்கில் பாண்டிய, பல்லவ அரசுகள் தமிழகத்தில் உருவாகின. கேரளாவில் சிறு குறு அரசுகள் தங்களுக்குள் போராடிக் கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் அங்கு குடியேறிய நம்பூதிரி பார்ப்பனர்கள் கி.பி. 8 - 10 ஆம் நூற்றாண்டுக்குள் கேரள சமூகத்தில் நிலபுலங்களும், பெருஞ் செல்வமும் கொண்ட ஆதிக்கச் சக்தியாக உருவாகி, கேரளாவில் சம்பந்தம் முறை. மறுமக்கள் தாயமுறை போன்ற பல முறைகேடான திருமண முறைகளை, சாதியத்தை, தீண்டாமையைக் கொண்டு வந்து கேரள மக்களை, தங்களது அடிமைகளாக மாற்றியமைத்து உழைப்புச் சுரண்டல் முதல் பாலியல் சுரண்டல்வரை நடைமுறைப்படுத்தி அதன் பலன்களை முழுமையாக அனுபவித்து, செல்வச்செழிப்போடும் சுகபோகமாகவும் வாழ்ந்து வந்தார்கள் (1)

கேரளாவில் தாங்கள் பெருவெற்றி பெற்றதால், அதுபோன்ற ஒரு வெற்றியை, தமிழகம் முழுவதும் கொண்டு வருவது என்பது அவர்களின் நோக்கமாக இருந்தது. அதனால் சோழ, பாண்டிய அரசுகளில் செல்வாக்கு மிக்க அதிகாரிகளாக ஆவது, அதன்மூலம் சோழ பாண்டியர்களுக்கு இடையே பகைமையை உருவாக்கி, தாங்கள் பலமும், செல்வாக்கும் பெறுவது, தங்களது வைதீக பார்ப்பனியத்தையும், கேரளாவைப் போன்ற சாதியத்தையும் இங்கு கொண்டு வருவது போன்ற திட்டங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால் சோழர் ஆட்சி மிகவும் வலிமையானதாக ஆகிக் கொண்டிருந்தது. ஆதித்த கரிகாலன் அதற்கு மேலும் வலிமை சேர்ப்பவனாக இருந்ததோடு, கேரளா முதல் தென்னிந்தியா முழுவதையும் சோழர் ஆட்சியின் கீழ் கரிகாலன் கொண்டு வருவான் என்ற பயம் உருவாகியது. பாண்டியர்களுக்கு எதிரான சேவூர்ப் போரில் அவன் காட்டிய வீரம் கேரள பார்ப்பனர்களை அச்சத்திற்குள்ளாக்கியது (2). அதனால்தான் ஆதித்த கரிகாலன் இறந்த பின், ஆதித்த கரிகாலன் என்ற சூரியன் மறைந்தான் என்கிறார் நீலகண்ட சாத்திரி (3). ஆகவே ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரமும், கூர்மையான அறிவும், அசாத்திய திறமையும், சிறந்த ஆளுமையும் கொண்டவனாக இருந்தான். அதுபோன்றே தனது எதிரிகளை அழித்தொழிப்பதிலும் உறுதியானவனாக இருந்தான். இதுபோன்ற மிகச்சிறந்த அரசனுக்குரிய பண்பு நலன்கள் அவனிடம் இருந்ததால்தான் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளில், படங்களில் பார்ப்பனர்கள் அவனைக் கேவலமாக சித்தரித்து வருகிறார்கள்

காஞ்சியை அவன் ஆண்டபோது பார்ப்பனர்களையும் பொது மக்களில் ஒருவராகவே அவன் நடத்தினான். தவறுகளுக்கு உரிய தண்டனைகளை வழங்கினான். இவை அவன்மேல் பகைமையை உருவாக்கியது. காஞ்சியை ஆண்டதால், கேரளாவில் பார்ப்பனர்களுக்குப் போர்ப்பயிற்சிகளை வழங்கும் காந்தளூர்ச்சாலை போன்ற கடிகைகள் குறித்து அறிந்தவனாகவும், காஞ்சியில் அதுபோன்று மறைமுகமாகச் செயல்பட்ட கடிகைகளைக் கண்காணித்து ஒடுக்கியவனாகவும் அவன் இருந்தான். வீர பாண்டியனுக்கு ஆதரவாக இருந்த கேரளா மீது படையெடுத்து, அதனைச் சோழர் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதும், காந்தளூர்ச்சாலை போன்ற பார்ப்பனர்களுக்கு வேதக்கல்வியோடு போர்ப்பயிற்சிகளையும் வழங்கி வந்த கடிகைகளை (4) அழித்தொழித்து நம்பூதிரி பார்ப்பனர்களை அடக்கி ஒடுக்குவதும் அவன் திட்டமாக இருந்தது. இதனை அறிந்த நம்பூதிரிகள், கேரளாவையும் தங்களையும் பாதுகாத்துக் கொள்ள அவனைப் படுகொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்தார்கள். ஏனென்றால் கேரளா அவர்களது சமூகத்தின் சுகபோக வாழ்வுக்கு மிகத் தேவையானதாக இருந்தது. ஆகவே சோழ அரசின் உயர் அதிகாரிகளாக இருந்த நம்பூதிரி பார்ப்பனர்களின் மூலமே, திட்டம் தீட்டி, சூழ்ச்சி செய்து அவனைக் கொன்றார்கள்.

தங்கள் நோக்கத்தில் அவர்கள் ஓரளவே வெற்றி பெற்றார்கள். இராசராசன் தனது தமையனைக் கொன்றவர்கள் நம்பூதிரி பார்ப்பனர்கள் என்பதையும், சோழ நாட்டிலிருந்து துரத்தப்பட்ட அவர்களது உறவினர்கள் கேரளாவில் தஞ்சமடைந்ததையும், முக்கியமாகக் காந்தளூர்ச்சாலையை, தமக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிற, போர் செய்கிற ஒரு போர்ப்பாசறையாக அவர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதையும் அறிந்தவனாக அவன் இருந்தான். அதனால்தான் அவன் தனது முதல் படையெடுப்பை பாண்டிய நாடு வழியாக நடத்திச் சென்று காந்தளூர்ச் சாலையில் இருந்த அனைத்துப் பார்ப்பனர்களையும் கொன்றழித்தான். கேரளாவில் இருந்த இதுபோன்ற பிற கடிகைகளையும் அழித்தொழித்தான்.

காந்தளூர்ச்சாலையை அழித்ததை அவன் மிக முக்கியமானதாகவும், பெருமைக்குரியதாகவும் கருதியதால்தான் தனது மெய்க்கீர்த்திகளில் அதனை அவன் முதன்மையாகக் குறிப்பிட்டான். பார்ப்பனர்கள் இவற்றை மறைக்க, பல்வேறு முயற்சிகளை வரலாறு முழுவதும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் வெற்றி பெறவில்லை.

பார்வை:

1.சாதியின் தோற்றம், கணியன் பாலன், தொல்கபிலர் பதிப்பகம், சூலை – 2023, பக் 245-291.

2. சோழர்கள், நீலகண்ட சாஸ்திரி, NCBH, புத்தகம்-1 பக்: 207, 208.

3. “ “ “ பக்: 213.

4. சாதியின் தோற்றம், கணியன்பாலன், தொல்கபிலர் பதிப்பகம், சூலை – 2023, பக்: 248, 249.

- கணியன் பாலன்

Pin It

 மனித குல வரலாற்றில் நீண்ட தேடலும் நவீன அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்பும் இவ்வுலகை இன்று அறிவியல் யுகமாய் மாற்றியிருக்கிறது.

 ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்வதற்குக் கூட பெரும் சவாலான சூழலே இருந்தது. தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றிய ஆய்வில் இறங்கினர். இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வியலோடு இயற்கை, சமூகச் சூழலையும் ஆராயத் தொடங்கினர். புவியியல் மாற்றங்கள், வான்வெளிக் கோள்கள், விண்மீன்களின் இயக்க போக்குகள், இரவு பகல் ஏன் தோன்றுகின்றன? என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயன்றனர்.

 இந்த இயற்கை விதியைப் புரிந்து கொண்டவர்களில் தமிழ்மக்கள் தனித்தகுதி உடையவர்களாக விளங்கியிருந்தனர் என்பதை பழங்காலத்தவரின் வாழ்வியல் வழிஅறிய முடிகிறது. குறிப்பாக நிலமும் அதற்கேற்ற பருவகாலமே உயிர்களும் பயிர்களும் வாழ்வதற்குரிய சூழலை வழங்குகிறது என்ற இயற்கையியல் கருத்தைக் கொண்டிருந்தனர்.. அக்கருத்தாக்கமே தொல்காப்பியம் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள் என்ற பொருள்வகைப் பாகுபாடு ஆகும். ஆம்,

 முதல்எனப் படுவது, நிலம் பொழு திரண்டின்

 இயல்பென மொழிப இயல் புணர்ந்தோரே (பாடல்:950)

என்ற தொல்காப்பியரின் இக்கருத்தியலே இன்று இயற்கை, மானிட புவியியல் துறைகளாக (Nature and Human Geography) விளங்கி இது மனிதனுக்கும், இயல்பு அறிவியலுக்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்கிறது. வடக்கே வேங்கட மலையையும் தெற்கே குமரி பகுதியையும் எல்லையாகக் கொண்டதை “வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்று தொல்காப்பிய சிறப்பு பாயிரத்தின் வழியே அறிகிறோம்

 இவ்வெல்லைப் பரப்பில் காடும் காட்டைச் சார்ந்த பகுதியை முல்லை நிலம் என்றும், மலையும் மலையைச் சார்ந்த பகுதியை குறிஞ்சி நிலம் என்றும், வயலும் வயலைச் சார்ந்த பகுதியை மருத நிலம் என்றும், கடலும் கடலைச் சார்ந்த பகுதியை நெய்தல் நிலம் என்றும், கடும் வெப்ப காலத்தில் தோன்றிய (குறிஞ்சி, முல்லை நில திரிபு) நிலப்பகுதியை பாலை என்றும் பகுத்து அறிந்தும் அந்நிலப்பகுதிக்கே உரித்தான பருவ காலச் சூழலை புரிந்துணர்ந்தும் மக்கள் வாழ்ந்துள்ளனர். புவியில் மனிதன் வாழ்வதற்குறிய பிரதானச் சூழல் உருவாவதற்கு நல்ல நிலமும் அதற்கேற்ற பருவ காலமுமே என்றனர். மனிதன் வாழ்வதற்குரிய முதற்பொருள். அவற்றாலேயே யாவும் நிகழ்கிறது என்ற பஞ்ச பூதக் கொள்கையே பழந்தமிழரிடம் வேறூன்றி இருந்துள்ளது.

 காலம் (Time) பற்றிய ஆய்வுகளில் ஐவகை நிலத்துள் வாழ்ந்த மக்கள் வாழ்வியல் ஓராண்டுப் பொழுதாக பருவகாலச் சூழலை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என ஆறு வகையாக பகுத்துணர்ந்தும் ஒரு நாள் பொழுதினை வைகறை, விடியல், நண்பகல், மாலை, யாமம், எற்பாடு என்றும் வகைப்படுத்தி இருந்தனர். இதில் சிறப்பு என்னவென்றால் ஆண்டு பருவமும், நாள் பொழுதின் உட்கூறும் எந்த நிலத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளது என்பதையும் அறிந்திருந்தனர். உதாரணமாக,

 கூதிர் யாமம் என்மனார் புலவர் “ (தொல்காப்பியம்:952) என்று முல்லை நிலத்திற்கு ஆண்டு பருவ காலமாக கார்காலமும், நாள்பொழுதாக மாலை பொழுதையும், குறிஞ்சி நிலத்திற்கு பெரும்பொழுதாக கூதிர்க் காலமும் நாள்பொழுதாக யாமமும் உரித்தானது என்கிறார் தொல்காப்பியர். மானுட வாழ்வை ஆய்ந்த முறையாவும் மக்கள் நிலத்தொடும் பொழுதோடுமே அமைந்திருந்தது. அது மட்டுமன்றி அந்நிலமும், பருவகாலத்திற்கு ஏற்பவே கருப்பொருள்கள் தோன்றியிருந்தன என்றும் தொல்காப்பியர்,

 “தெய்வம் உணாவே மாமரம் புல்பறை

 செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

 அவ்வகை பிறவும் கருவென மொழிப (தொல்காப்பியம்: பாடல் 964)

என்று குறிப்பிடுகிறார். அதாவது நிலமும் அதனையொத்த பருவகாலத்து சூழலுக்கேற்ப தோன்றும் பொருட்களும் சமூக பண்பாட்டு விழுமியங்களும் கருப்பொருளே என்கிறார். நிலத்துள் பண்பாட்டு அடிப்படையில் தோன்றிய வழிபாட்டு முறையும் நிலத்திற்கேற்பவே தோன்றியிருந்ததை,

 மாயோன் மேய காடுறை உலகமும்

 சேயோன் மேய மைவரை உலகமும்

 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

 வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்காப்பியம்: பாடல் 951)

என்கிறார். மாயோன்-காடும் காட்டைச் சார்ந்த பகுதி, சேயோன்-மலையும் மலையைச் சார்ந்த பகுதி: வேந்தன்- வயலும் வயலைச் சார்ந்த நிலப்பகுதி, வருணன்- கடலும் கடலை சார்ந்த பகுதி என ஐவகை தெய்வங்களை முதற்பொருள் என கொள்ளாமல் நிலத்திற்கு ஏற்ப தோன்றிய தெய்வங்கள் எனச் சுட்டி செல்வதை காண முடிகிறது. அதே போல ஒவ்வொரு நிலத்துள் மக்கள் உண்ணும் உணவு, நிலத்துள் வாழும் விலங்குகள், தாவரங்கள், பறவைகள், அடிப்படையாக நிலத்திற்கே உரித்தான தொழில்கள், கலையியலில் யாழ் வாசிக்கும் முறை முதற்கொண்டு ஆராய்ந்து யாவையும் கருப்பொருட்கள் என்கிறார். இது அடிப்படையில் தோன்றி மறைவது என்ற கருத்தையும் கொண்டுள்ளதை நன்கு நோக்க முடியும்.

 வேட்டையாடுதல் - மலை, மாடு வளர்த்தல் - காடு, உழவு - சமவெளி, மீன்பிடித்தல், உப்பு விளைத்தல் - கடல் ஆகிய தொழில்களில் மக்கள் ஈடுபட்டதை காண்கிறோம். ஆக நிலமும் சுற்றுச்சூழலுக்கு ஏற்பவே புவியில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இருந்ததை நன்கறிந்து இலக்கிய படைப்பையும் அவ்வாறு புரிந்துணர்ந்ததையும் இயற்கை கொள்கையாகக் கொண்டிருந்ததையும் அறிகின்றோம்.

பழந்தமிழரின் உயிரினங்களின் தோற்றம் பற்றிய பரிணாமக் கொள்கையை பற்றிய ஆய்வும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

 சார்லஸ் டார்வினின் (charles darwin இயற்கைத் தேர்வு, உயிரினத் தோற்றம், தக்கவைப் பிழைத்தல் பற்றிய கொள்கை பழங்காலத்தினரின் ஆய்வாகவும் அமைந்திருந்தது. அவர்கள் இன்றைய புராண கருத்தியலுக்கு இடம் தரவில்லை மாறாக,

 ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

 இரண்டறிவதுவே அவற்றொடு நாவே

 மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் கண்டவாறே (தொல்காப்பியம்)

என்று புலன் அடிப்படையில் பகுத்தறிவு போக்கில் விளக்கியதை காண முடிகிறது. முறையே தொடு உணர்வு அறியும் திறன் கொண்ட உயிர்கள் ஓர் அறிவை உடையனவாம்உணர்வுடன் வாயினையுடைய உயிர்கள் இரண்டு அறிவை உடையனவாம். உணர்வுடன் வாய் மற்றும் மூக்கினைப் பெற்ற உயிரினம் மூன்றறிவை உடைய உயிரினங்களாம். உணர்வுடன் வாய், மூகு, கண், காதினை உடைய உயிரினங்களாம். இதில் சிறப்பாக உணர்வுடன் வாய், மூக்கு, கண், காது ஆகிய உறுப்புகளை பெற்றிருந்தாலும் தெளிவாக சிந்திக்கும் ஆற்றல் உடைய உயிரினமே மானுட உயிரினம் என்கிறார். பிற உயிர்கள் சிந்தித்தாலும் சமூகக் கட்டமைப்பை உருவாக்கி வாழும் தகுதிப்பெற்ற தலைசிறந்த மானுட இனமே யாவற்றிலும் தனித்த தன்மையுடையது என்றும், இதனை நேரிதின் உணர்ந்தார் கண்டனர் என்றும் கூறும் கூற்று பழங்கால சுமேரிய, கிரேக்க, ரோம, எகிப்திய, மெசபடோமிய, சீன, சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் உணர்த்தும் உயிர்களைப் பற்றிய கருத்தியலே என்பது வெற்றுச் சொல்லும் அல்ல, வெற்று கற்பனைப்போக்கும் அல்ல, மாறாக இயற்கை அறிவியலே (Natural Sciences) ஆகும். இதன் மூலம் சுமார் 2500- ஆண்டுக்கு முற்பட்ட பழந்தமிழர் ஆய்வுச்சிறப்பு தெளிவாக அமைந்திருந்தது என்பதை துணிந்து விளங்கிக் கொள்ள முடியும்.

 இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் மனிதன் ஒவ்வொரு நொடியும் உய்த்துணர்ந்து ஆராய்ந்து கொண்டே வந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. அதற்கான விடையைத் தேடி திரிந்த வரலாற்றுப் போக்கையும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த உலகம் எப்படிப்பட்டது அதன் தோற்றம் என்ன? அது எதனால் உருவானது? இயற்கை புறவெளியில் உள்ள அண்டவெளி பிரபஞ்சத்தின் இயக்கப் போக்குகள் என்ன? ஐம்பூதங்கள் எப்படி தோன்றின? பகலிலும் இரவிலும் பருப்பொருட்கள் தோன்றுவதும் மறைவதுமாக மாறி மாறி நடக்கக்கூடிய நிகழ்ச்சிக்கான காரணம் என்ன? மனிதன் பிற உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? என்பது போன்ற பல ஆயிரக்கணக்கான வினாக்களைக் கொடுத்து அதற்கு பல்வேறு விளக்கங்களையும் தந்துள்ளனர்..

 உலக வரலாற்றில் குறிப்பாக தாலஸ் (Tholes) என்பவர் உலகம் நீரினால் ஆக்கப்பட்டது என்றார். ஆக நீரே உலகில் யாவற்றுக்கும் முதன்மை பொருள் என்றார். அனாக்சிமினிஸ் என்ற அறிஞர் காற்றால் உலகம் ஆனது என்றார் அனாக்சிமண்டர் உருவமற்ற யாரும் பார்க்க முடியாத பொருளாக உலகம் ஆக்கப்பட்டது என்றார் தாலமி பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்தினை முன்வைத்தார்.

 இப்படிப் பல கருத்துக்கள் தோன்றிய அக்காலகட்டத்தில் உலகம் எப்பொருள் ஆளாக்கப்பட்டது என்பதற்கு தொல்காப்பியர்,

 “நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்” என்கிறார். ஆக நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் கலந்து மயங்கி நிற்றலே உலகம் என்று உரைக்கிறார். சுற்றுகின்ற இப்புவியில் ஒன்று மற்றொன்றாய் மற்றொன்று வேறொன்றாய் மாற்றம் என்பதைத் தவிர அனைத்து மாறும் என்ற இன்றைய இயங்கியல் விதி பெரும்பான்மை மக்களுக்கு இன்றும் புரியாத சூழலில் பொது ஆண்டுக்கு முன்னர் சுமார் 2500- ஆண்டுகளுக்கு முன்னரே மானுடனின் அறிவியல் தேடல் இவ்வாறு இருந்ததன் விளைவே இயற்கைப் பார்வையொடு மக்கள் இருந்ததை உணர்த்தும்.

 மேற்கண்ட பாடலில் ஐந்தும் கலந்த மயக்கமாய் உலகம் இருக்கிறது என்ற சொல்லாட்சியில் கலந்த என்ற சொல் ஒன்று மற்றொன்றோடு கலந்து நிற்றல், அதாவது கலந்த மயக்கம் என்ற சொல் ஒன்று மற்றொன்று கலைந்து மயங்கி நிற்பதாக வேதியியல் துறை சொல்லாடலாய் நாம் அணுக முடியும்.

 மாற்றம் நிகழ்ந்த பொருளே அடங்கி இருப்பது நோக்கத்தக்கது உதாரணமாக ஆக்சிசன் ஒரு மடங்கும் ஹைட்ரசன் இரண்டு மடங்கும் இரண்டறக் கலந்தவையே நீர் என்கிறோம். அதை போலவே அனைத்தும் கலந்து மயங்கி நிற்பதே உலகம் என்கிறார் தொல்காப்பியர். ஒன்று மற்றொன்றோடு கலந்து மயங்கிய இவ்வுலகம் இப்பிரபஞ்சம் இருக்கிறது என கூற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பூதங்களையும் தனித்தனியே பார்த்து விளக்கிய காலத்தில் பொதுத்தன்மையை இயற்கைப் பொருட்களை விளக்கிய பழந்தமிழரின் சிறப்பிற்குரியது.

 சங்க இலக்கிய பாடலொன்றில் “மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வழி தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பூதத்து இயற்கை போல" என்ற சங்கப்பாடலும் (புறநானூறு பாடல்-2) பஞ்சபூதங்களின் தன்மையையும் ஒன்று மற்றொன்றை இணைத்துக் கூறும் நிலையில் வியப்பிற்குரியதாக இருக்கிறது. ஆக பழந்தமிழர் இயற்கை அறிவியல் சிந்தனையில் தனித்த தன்மையில் புரிந்துணர்ந்தும், அவை வழ்வியலோடு பொருந்த வாழ்ந்தமையையும் தெளிவாக அறிய முடிகிறது.

-  மன்னை முனைவர் பா.பிரபு, பெரி கலை அறிவியல் கல்லூரி, மண்ணிவாக்கம், சென்னை

Pin It

ஆதிகாலப் பொருள்முதல்வாதம்:

போலச்செய்தல் என்பதை அடிப்படையாகக் கொண்ட தொடக்கால மேய்ச்சல் நில மக்களின் உற்பத்திச் சடங்குகள், தொடக்ககால வேளாண்மை மக்களின் வளமைச் சடங்குகள், தாந்திரீகச் சடங்குகள் ஆகிய அனைத்துமே தங்கள் தங்கள் பொருளாதாரத் தேவைகளை ஈடுசெய்ய செய்யப்பட்ட சடங்குகள் என்பதை மேற்கண்ட தரவுகள் உறுதி செய்கின்றன. எனவே ஆதிகால மனிதனின் போலச்செய்தல் செயல்பாடுகளும், அதன் பிந்தைய அநாகரிக மக்களின் இடைக்காலம் வரையிலான (கண ஆட்சிமுறை வலிமையாக இருந்த காலம் வரை) போலச்செய்தலை அடிப்படையாகக் கொண்ட அனைத்து வகையான சடங்குகளும் பொருளாதாரத் தேவைகளுக்காகச் செய்யப்பட்டவை என்பதால் அவை அனைத்தும் பொருள்முதல்வாதத் தன்மை கொண்டவை. ஆகவே அவற்றில் இருப்பது எல்லாம் ஆதிகாலப் பொருள்முதல்வாதம்தான்.

உலகம் முழுவதும் இதே நிலைதான் இருந்து வந்தது. அதுபோன்றே அன்றைய கடவுள்கள் என்போர் மனிதர்கள்தான். அவர்களுக்கு மானுடத் தன்மை அல்லது அரை மானுடத்தன்மைதான் இருந்தது. அவர்கள் இக்காலக் கடவுள்களைப் போன்றவர்கள் அல்ல. மனிதர்கள் தங்களது விருப்பங்களான பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றவே இம்மனிதத் தெய்வங்களை வேண்டினர். அன்று மனிதர்கள், அதாவது இனமுன்னோர்கள்தான் தெய்வங்களாக இருந்தனர் ஆகவே அன்றைய அவர்களது வேண்டுதல் பாடல் முதலான அனைத்திலும் ஆன்மீகமோ, சமயமோ, கடவுளோ இருக்கவில்லை. ஆகவே தொழிலும் வேளாண்மையும் வளர்ச்சி அடைந்து சொத்துடமை உருவாகத் தொடங்கி வகுப்புகளும் வர்க்கங்களும் தோன்றும் வரை அதாவது நாகரிக காலம் தொடங்குவதற்கு முன்வரை ஆதிகாலப் பொருள் முதல்வாதம்தான் இருந்தது. கருத்துமுதல்வாதம் இருக்கவில்லை.

கருத்துமுதல்வாதத்தின் தோற்றம் 

deviprasad chattopathiyayaaஉடல் உழைப்பிலிருந்து முற்றிலும் விலகி, பிறருடைய உழைப்பால் உருவாகும் உபரியை உண்டு வாழும் நிலைமை தோன்றியதாலேயே கருத்துமுதல்வாதம் தோன்றுகிறது. இந்தக் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் என்பன குறித்து ஏங்கெல்சு, “எல்லாத் தத்துவங்களினுடைய அடிப்படையான கேள்வி சிந்தனைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள உறவு பற்றியதுதான். தங்களது உடலின் அமைப்பு குறித்து அறியாதிருந்த அப்பழங்காலத்தில் மனிதர்கள் கனவுகள் தரும் மாயத் தோற்றங்களின் தாக்கத்தால், தங்களது சிந்தனைகளும், உணர்வுகளும் உடலின் செயல்பாட்டினால் விளைவது அல்ல என்றும் அதற்கு உடலிலுள்ள வேறோன்றுதான் காரணம் எனவும் நம்பினார்கள். அந்த வேறொன்றுதான் ஆன்மா எனவும் அது மரணத்தின்போது உடலைவிட்டு வெளியேறி விடுகிறது எனவும் கருதினார்கள். அதன்பின் மனிதர்கள் தங்கள் ஆன்மாவுக்கும் வெளி உலகத்திற்கும் இடையேயான உறவு குறித்து ஆராயத் தொடங்கினார்கள். அந்த ஆய்வின் முடிவில் அதற்குப்பதில் தந்த தத்துவவாதிகள் இரு பிரிவாகப் பிரிந்தனர். ஆன்மாவே இயற்கையைவிட முதன்மையானது எனக் கருதியவர்கள் கருத்துமுதல்வாதிகளாக ஆயினர். இயற்கையே முதன்மையானது எனக் கருதியவர்கள் பல்வேறு பொருள்முதல்வாதிகளாக ஆயினர்” எனக் கூறுகிறார் (21). உடல் உழைப்பிலிருந்து முழுமையாக விலகி இருக்கும்பொழுதுதான் கனவு போன்ற மாயத்தோற்றங்களை உண்மை என நம்பி, ஆன்மா குறித்த கருத்துகள் உருவாகின. ஆனால் உண்மையில் வரலாற்றுத் தேவைகளும் வாழ்க்கைக்கான தேவைகளும் தான் கருத்துமுதல்வாதம் தோன்றுவதற்கும் அது நிலைத்து நிற்பதற்குமான அடிப்படைக் காரணம்.

கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் உருவாக வேண்டும் என்றால் உணர்வானது உலகிலிருந்து விடுபடவேண்டும். இதற்குரிய முன்நிபந்தனை சிந்திக்கும் வர்க்கம் உடல் உழைப்பிலிருந்து விடுபட வேண்டும் என்பதாகும். ஏனென்றால் உழைப்புச் செயல்முறை என்பது இயற்கைக்கும், இயற்கையின் பகுதியாக இருப்பதுமான மனித உடலுக்கும் இடையே நடக்கும் ஒன்றோடொன்றுக்கான வினையின் விளைவாகும். மனிதன் உடலுழைப்பு சார்ந்த பணியில் ஈடுபட்டிருக்கும்வரை இயற்கை அல்லது பொருள்தன்மையுள்ள உலகமானது மனித உணர்வின் மீது அதன் முத்திரையைப் பதிக்கிறது. இதுகுறித்து மார்கசு, ‘முதலாவது உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் பங்கெடுக்கும் செயல். இதில் மனிதன் அவனது விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்கும் இயற்கைக்குமிடையே உள்ள பொருளியல் தன்மையான செயல்களைக் கட்டுப்படுத்துகிறான், ஒழுங்கு செய்கிறான். இயற்கையின் பகுதியாக உள்ள அவன் இயற்கைக்கு எதிராக நிற்கிறான். அவனது கைகால்கள், தலை, உடலின் பல்வேறு உறுப்புகள் ஆகியவற்றை இயக்குகிறான். அவனது நோக்கம் தனது தேவைகளுக்கு ஏற்ப இயற்கைப் பொருளை உருவாக்கிக் கொள்வதாகும்’ என்கிறார் (22). இயற்கையின் பண்புகளைப் புரிந்து கொண்டு தனது உழைப்பின் மூலம் மனிதன் தனக்குத் தேவையான பொருள்களை உருவாக்கிக் கொள்கிறான். ஆகவே உழைப்புச் செயல்முறை என்பது இயற்கையுடன் மனிதன் கொண்டுள்ள உணர்வூர்வான தொடர்பு வடிவம். ஆகவே மனிதன் இயற்கையோடு கொண்டுள்ள உழைப்பு என்ற அந்த உணர்வுபூர்வமான தொடர்பை விடுவிக்காமால் கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் என்பது உருவாக முடியாது.

வர்க்க சமுதாயம் தோன்றிய போது கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் தோன்றியதானது தற்செயலாக நிகழ்ந்த ஒரு சமநிகழ்ச்சியாகக் கருத முடியாது என ஏங்கெல்சு கூறுகிறார் (23). ஏனென்றால் அப்பொழுதுதான் மனித சமூகத்தின் ஒருவர்க்கம் உழைப்பிலிருந்து விடுபட்டு பிறருடைய உழைப்பில் வாழும் சூழ்நிலை உருவாகிறது. அதனால் அந்த ஆளும் வர்க்கம் உழைப்புச் செயல்முறையிலிருந்து விடுபட்டு இருந்ததால் அது இயற்கையோடு இருந்த உணர்வுபூர்வமான தொடர்பிலிருந்து அதாவது உழைப்பிலிருந்து விடுபட்டு கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் சிந்திக்க முடிந்தது. ஆதலால் அப்பொழுதிலிருந்துதான் கருத்துமுதல்வாதம் மலரத் தொடங்கியது. இதனை வேறுவகையிலும் விளக்கலாம். சமுதாயத்தின் தொடக்ககட்டத்தில் ஒரு செயலைச் செய்ய மனித மனது திட்டமிட்டது. பின் அந்த திட்டமிட்ட செயலை பிற மனிதர்களைக் கொண்டு செயல்படுத்தியது. ஆதலால் நாளடைவில் நாகரிக வளர்ச்சி என்பது மனித மனதின் உழைப்பினால்தான் ஏற்பட்டது எனக் கருதும் நிலை உருவாகியது. எனவே ஆளும் வர்க்கத்தின் உணர்வில் மனது அல்லது சிந்தனை என்பது மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றது. அதன் காரணமாக வர்க்க சமுதாயம் முழுவதும் எண்ணம் அல்லது சிந்தனை முதலிடம் பெறுவது என்பதும், கருத்துமுதல்வாதம் உருவாவதும் தவிர்க்க முடியாததாக ஆகியது.

உலக வாழ்க்கையைக் கண்டனம் செய்து நிராகரிக்கும் தத்துவ நோக்கு வாழ்க்கையையே விட்டு விலகிய தத்துவத் தேடலின் விளைவென்றே கூற வேண்டும். பண்டைய கிரேக்கத்தில் அடிமைமுறை வளர்ச்சி பெற்றதும் உண்டானதைப் போலவே, உபநிடதகால இந்தியாவிலும் உலகை அடியோடு வெறுக்கும் போக்கு உருவானது. சுத்த உணர்வு, சுத்த ஞானம் என்றழைக்கப்படும் செயலைவிட்டு விலகிய சிந்தனையே, பொருளால் ஆகிய உலகையும் அதன் மாற்றத்தையும் வெறுக்கும் போக்குக்குக் காரணமாயிற்று. சமுதாயத்தின் ஒரு பகுதி உடல் உழைப்பிலிருந்து முற்றிலும் விலகி, பிறருடைய உழைப்பால் உருவாகும் உபரியை உண்டு வாழும் நிலைமை தோன்றியதாலேயே – அதே போன்று புற உலகின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்ளும் கட்டாயத்தை விட்டு விலகியதாலேயே இந்நிலை உருவாயிற்று. ஏனெனில் உழைப்பின் செயல்பாடு மட்டுமே புறவயமான உணர்வைத் தோற்றுவிக்க வல்லது. வேறுவிதமாகச் சொல்லவேண்டுமானால், கொள்கை செயலிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொண்டது எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (24).

கிரேக்கத்தில் கி.மு. 5ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் சிந்தனை, செயல் ஆகிய இரண்டும் முதன்மையானதாகவே இருந்தன. அவற்றிற்கிடையே முரண்பாடுகள் இருக்கவில்லை. இதிகாசங்களிலும் பிற கவிதைகளிலும் அறிவென்பது தொழிற்படும் அறிவுதான். அறிவது என்பது எவ்வாறு அறிவது என்பதுதான். ஞானம் என்பது தொழிற்படும் திறன் அல்லது உழைக்கும் சக்தி மட்டுமே. உண்மையில் ஞானம் என்பது உண்மையான சிந்தனை, நேர்மையான செயல் ஆகிய இரண்டையும் குறிக்கும் என அன்று கருதப்பட்டது. பின்னாளில் அடிமைமுறை வளர்ச்சி அடைந்த பிறகு உடலுழைப்பு தாழ்வானதாக, கீழானதாகக் கருதப்பட்டது. ஞானம் அல்லது அறிவு என்பது செயலோடு இருந்த தனது உறவை விடுவித்துக் கொண்டது. ஆதலால் இறுதியில் இந்த உலகத்திலிருந்தே தன்னை விடுவித்துக் கொண்டது. கலை என்பது இயற்கையைக் கட்டுப்படுத்துவது, அதன்மூலம் மனிதன் தன்னை விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளும் செயல் என பண்டைய கிரேக்கப் பொருள்முதல்வாதியான டெமாக்கரிட்டசு (Democritus) கருதினார். ஆனால் கிரேக்க அறிஞரும் கருத்துமுதல்வாதியுமான பிளட்டோ, ஞானம் என்பது இயற்கையைப் பற்றிய அறிவல்ல. கருத்துக்களால் ஆன அதி இயற்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டது பற்றிய அறிவு எனக் கூறினார். ஐரோப்பியத் தத்துவ வரலாற்றில் கருத்தே முதன்மையானது என பிரகடனப்படுத்திய முதல் தத்துவவாதி பிளட்டோ. அதற்கு அவருடைய காலத்தில் கிரேக்கத்தில் இருந்த ஆண்டான்-அடிமைச் சமூகம்தான் காரணம் (25).

சட்டங்கள் (Laws) என்ற நூலில் பிளட்டோ அடிமை முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தைப் படைத்திருந்தார். அதில் உயர்குடிமக்கள் உடல் உழைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கலை, கைவினை, வேளாண்மை முதலியன அடிமைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்மூலம் உயர்குடி மக்களின் திளைப்புத்தேவைக்கான அனைத்துப் பொருட்களையும் அளிக்க வேண்டிய பணி அடிமைகளுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்பின் இனி உயர்குடி மக்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் எனவும் புதிய வாழ்க்கைமுறை நம்முடைய வாழ்க்கையில் எத்தகைய சிந்தனையைக் கொண்டு வரும் எனவும் அவர் கேள்வி கேட்கிறார். பின் புதியவாழ்க்கை உருவாக்கும் புதிய சிந்தனை அறிவியலுக்கு மாறானதாகவே இருக்கும். இனிமேல் இயற்கையைச் சோதனைக்கு உருவாக்குவதன் மூலம் மட்டுமே புதிய அறிவு உண்டாகும் என்று எண்ண முடியாது. ஏனெனில் இயற்கையைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கருவிகளும் செயல்பாடுகளும் அடிமைகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன என அவர் பதிலும் தருகிறார். அதாவது புதிய சிந்தனை என்பது அதி இயற்கை அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்டது பற்றிய அறிவு என்பதாகத்தான் இருக்கும் எனவும் அதுவே ஞானம் எனவும் அவர் கூறி தனது கருத்துமுதல்வாதக் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார் (26). அவரது மாணவரான அரிசுடாட்டிலும் கருத்துமுதல்வாதியாகத்தான் இருந்தார்.

உபநிடதகால இந்தியாவிலும் நிலைமை இவ்வாறுதான் இருந்தது. வேளாண்மையும், கலைகளும், கைத்தொழிலும் கீழ்வகுப்பாரின் தொழிலாக ஆகின. ஆளும் வர்க்கமும் அவர்களை அண்டிப் பிழைத்த பூசாரிகளும் உழைப்பின்றி பிறருடைய உழைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தனர். பிளட்டோ செய்ததைப் போலவே தங்கள் வாழ்கைக்கேற்ப தங்கள் சிந்தனையை அவர்கள் சீரமைத்துக் கொண்டனர். இவ்வாறு சிந்தனைக்கும் உழைப்பிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட பிளவே உலகை மறுக்கும் தத்துவம் (கருத்துமுதல்வாதம்) தோன்றக் காரணமாயிற்று. அன்றைய ஆளும் வர்க்கமும் பூசாரிகளும் உழைப்பிலிருந்து விடுபட்டு இருந்ததால் ஆன்மாவை இயற்கையைவிட முதன்மையானது எனவும் இயற்கை ஆன்மாவை விட முதன்மையானது என்பது தவறானது எனவும் கருதினர்.

உழைப்பிலிருந்து விடுபடும்பொழுதுதான் ஆன்மா, கடவுள் போன்ற கருத்துகள் பாதுகாக்கப்படும் என வேதாந்தக் கருத்துமுதல்வாதிகள் நன்கு அறிந்திருந்தனர் எனத்தெரிகிறது. அதனால்தான் தொடக்ககால சட்ட நூலின் ஆசிரியர் பௌதாயணர் வேதங்களும், வேளாண்மையும் ஒன்றை ஒன்று அழிக்கக்கூடியவை எனக் கூறியுள்ளார். மனுவோ பார்ப்பனர்களும் சத்திரியர்களும் வேளாண்மையை செய்யவே கூடாது எனவும் வேளாண்மை அடிமைத்தொழில், அது தீங்கிழைக்கக் கூடியது எனவும் கூறுகிறார். உடல் உழைப்பு என்பது கேவலமானது என்ற கருத்தே மனுபோன்ற வேதாந்திகளின் கருத்தாக இருந்தது. ஏனென்றால் உடல் உழைப்பு பொருள்முதல்வாதச் சிந்தனையைக் கொண்டுவரும் என அவர்கள் கருதினர். ஆனால் வேதாந்திகள் போற்றும் இரிக் வேதத்தின் தொடக்கக் காலப் பாடல்களில் மக்களின் கூட்டுழைப்பு போற்றிப் புகழப்படுகிறது. உணவு, கால்நடைகள், செல்வம் போன்றவற்றைப் பெருக்குவதற்காகக் கடவுள்களும் மக்களோடு சேர்ந்து உழைப்பது என்பது அடிக்கடி சொல்லப்பட்டுள்ளது. பண்டைய இப்பாடல்களில் வேதாந்திகள் வெறுக்கும் கைவினைஞன் தெய்வங்களின் நிலைக்கே உயர்த்தப்படுகிறான். அவன் கைதேர்ந்த தொழிலாளி, உன்னதமான கலைஞன் என அவன் இப்பாடல்களில் புகழப்படுகிறான். அந்தக்காலத்தில் அறிவு அல்லது ஞானம் என்பது உழைப்பை விட்டு விலகியதாகவோ அதனை வெறுப்பதாகவோ இருக்கவில்லை (27). ஆகவே கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது உபநிடதகாலத்தில் இருந்துதான் வட இந்தியாவில் கருத்துமுதல்வாதம் வளரத் தொடங்கியது எனலாம்.

நகர அரசும் தொல்கபிலரும் 

கண ஆட்சிமுறையின் அழிவும் நவீன நகர அரசும்

தொல்பழங்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இனக்குழுக்களிடையே தோன்றிய கண ஆட்சிமுறை அநாகரிக காலத்தின் இடைக்காலம் வரை வலிமையோடு இருந்து வந்தது. ஆனால் அநாகரிக காலத்தின் இறுதிக்கட்டத்தில் வேளாண்மையும் தொழிலும் வளர்ச்சியடைந்து வீரயுகக்காலம் தோன்றுகிறது. வீரயுகக் காலத்தில் கண ஆட்சிமுறை நீடித்த போதிலும் அது பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகிறது. கண ஆட்சிமுறையின் சிறப்பம்சங்களான இரத்த உறவுமுறை, அகமணமுறை, இணைமணம், ஆண்பெண் சமத்துவம், கணத்தின் ஒற்றுமை உணர்வு, முழுமையான சனநாயகம், கண ஆட்சிமுறையில் இருக்கும் ஆட்சிக்குழுக்களான மக்கள் மன்றம், கண சபை, இராணுவத்தலைவன் ஆகிய அனைத்துமே கேள்விக்கும் குழப்பத்துக்கும் உள்ளாகின்றன. தொழில்-வணிக வளர்ச்சியும், சொத்துரிமையும், அந்நியர் குடியேற்றமும், நகரம் உருவாதலும், கொள்ளைப் போர்களும் இன்னபிறவும் சேர்ந்து கண ஆட்சிமுறை அழிந்து ஒரு புதிய ஆட்சிமுறையான நவீனஅரசு உருவாகும் சூழ்நிலை தோன்றிக் கொண்டிருக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக நீடித்திருந்த கண ஆட்சிமுறையின் வீழ்ச்சி பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாறுதல் காலம் என்பது சில தலைமுறைகள் நீடிக்கிறது.

இதன் தொடக்க காலகட்டத்தில் வேளாண்மை, தொழில் ஆகியவற்றின் வளர்ச்சிக்காகவும், தனிமனித ஆசைகளுக்காகவும், குழப்பத்தால் ஏற்பட்ட அவநம்பிக்கையாலும் சடங்குகளின் எண்ணிக்கையும் பூசாரிகளின் தேவையும் மிகமிக அதிகமாகிறது. ஆகவே இதன் தொடக்கத்தில் பூசாரிகள் அதிக வருமானமும் வலிமையும் பெறுகிறார்கள். ஒரு கட்டத்தில் குழப்பங்கள் முடிவுக்கு வந்து நகரமும் நகர அரசும் உருவாகிறது. இரத்த உறவுள்ள குலங்கள் பல ஒன்று சேர்ந்துதான் நகரத்தை உருவாக்குகின்றன. ஆனால் நகரம் முழுமையடையும்பொழுது குலம், கணம் முதலியன இல்லாதுபோய், கண ஆட்சிமுறைக்கான முன்பு சொன்ன சிறப்பம்சங்கள் அனைத்தும் இல்லாதுபோய் ஒரு புதிய நவீன அரசு உருவாகிறது. அத்துடன் சொத்துரிமையும், ஒருதார மணமும், குடும்பமும், புறமணமுறையும், ஆணுக்குப்பெண் அடிமையாதலும், பரத்துமையும், பொதுமகளிர் முறையும், ஏழையும் செல்வந்தனும், சிறு விவசாயும் பெருநிலக்கிழாரும், ஆண்டான் அடிமையும், தொழில் பிரிவுகளும், வர்க்கங்களும், வகுப்பும் உருவாகின்றன. இவைகளும் அரசும் ஒன்றுக்கொன்று இணையானவை. ஒன்றில்லாமல் ஒன்றிருக்க இயலாது.

நகர அரசுகளும் பேரரசுகளும்:

தொடக்கத்திலேயே வேளாண்மையைச்சார்ந்து இருப்பவர்கள் குறைவாகவும், தொழில் வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்து இருப்பவர்கள் அதிகமாகவும் இருக்கும்பொழுது கிரேக்கத்தைப் போன்று ஆண்டான் அடிமை அரசு உருவாகிறது. இதற்கு மாறுபட்டு வேளாண்மையைச் சார்ந்து இருப்பவர்கள் அதிகமாகவும், தொழில், வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்து இருப்பவர்கள் குறைவாகவும் இருக்கும்பொழுது தமிழகத்தைப் போன்று வரம்புக்குட்பட்ட முடியாட்சி உருவாகிறது. இந்த இருவகையிலும் நகர அரசு என்பது நகர அரசாகவே மிக நீண்ட காலம் நீடிக்கும் பொழுது தொழில்நுட்பம் பெருகி, உற்பத்தி பேரளவில் வளர்ச்சியடைந்து, வணிகம் உலகளாவிய அளவில் நடைபெற்று, இந்த நகர அரசு என்பது வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசாக ஆகிறது. இந்த நகர அரசுகள் சுயமான சுதந்திரமான சிந்தனைகளை உடையனவாகவும், சனநாயகத்தன்மையைப் பெற்றனவாகவும், பொருள்முதல்வாத மெய்யியலையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் கொண்டனவாகவும், நிறையப் புதிய கண்டு பிடிப்புகளைப் செய்பவனாகவும் இருக்கின்றன எனக் கூறுகிறார் கார்டன் சைல்டு (Gordon childe). அதே சமயம் இந்த நகர அரசுகள் பேரரசாக ஆகும்பொழுது அவை புதியதாக எதனையும் உருவாக்குவதோ கண்டுபிடிப்பதோ இல்லை என்பதோடு அவை மக்களிடையே மூட நம்பிக்கைகளையும் மதக் கருத்துக்களையும், பிற்போக்குச் சிந்தனைகளையும் பரப்பி மக்களின் அறிவியல் தொழில்நுட்பச் சிந்தனைகளைக் கட்டுப்படுத்துகின்றன எனக் கூறுகிறார் (28). பேரரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆள இவை போன்ற மதக்கருத்துகள் மூடநம்பிக்கைகள் பிற்போக்குச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன.

உலகளவில் சுமேரிய நகர அரசுகளும், கிரேக்க நகர அரசுகளும் புகழ்பெற்றவை. மெசபடோமியாவின் சுமேரிய நகர அரசுகளையும் அதன்பின் அங்கு உருவான அக்கேடியன் பேரரசு, பாபிலோனியப் பேரரசு, அசீரியப் பேரரசு, பாரசீகப்பேரரசு போன்றனவற்றையும் விரிவாக ஆய்வுசெய்துதான் கார்டன் சைல்டு மேற்கண்ட முடிவுகளைக் கண்டறிந்துள்ளார். தமிழக நகர அரசுகளையும் வட இந்தியாவின் மகதப் பேரரசையும் ஆய்வு செய்து இந்நூலாசிரியரும் அதே முடிவுக்குத்தான் வந்துள்ளார் (29). ஆகவே வளர்ச்சியடைந்த சிறுகுறு நகர அரசுகள் என்பன பேரரசுகளைவிட மக்களுக்கானவைகளாகவும், வளர்ச்சிக்கானவைகளாகவும், முற்போக்குச் சிந்தனைகளையும் சனநாயகத் தன்மையையும் கொண்டனவாகவும் இருந்துள்ளன என்பதை வரலாறு பலவகையிலும் மெய்ப்பித்துள்ளது. நகர அரசுகள் வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாக உருவாகும்பொழுது பூசாரி வகுப்பை முழுமையாக அழித்து ஒழித்து விடுகின்றன என்பதையும் வரலாறு உறுதி செய்கிறது. அதே சமயம் பேரரசுகள் பூசாரி வகுப்பை வளர்த்தெடுத்துப் பாதுகாக்கின்றன. பேரரசுகள் மக்களைக்கட்டுப்படுத்த பூசாரிகள் தேவைப்படுகின்றனர்.

வட இந்திய வரலாறும் கருத்துமுதல்வாதமும்:

வட இந்தியாவில் கி.மு. 800 வரை ஆரிய இனக்குழுவில், கணஆட்சிமுறை இருந்து வந்தது. ஆகவே அக்காலம்வரை அவர்களிடத்தில் ஆதிகாலப் பொருள்முதல்வாதம் இருந்துகொண்டிருந்தது எனலாம். கி.மு. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வட இந்திய ஆரிய இனக்குழுக்கள் கிழக்கு நோக்கி பயணம் செய்து கங்கைப் பகுதியில் நிலைகொள்கிறார்கள். அப்பொழுதுதான் பெரிய அளவில் இரும்பு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது. வேளாண்மையும் தொழிலும் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. சொத்துடமையும், தொழில் பிரிவுகளும், வகுப்புகளும் வர்க்கங்களும் சிறுகுறு நகர அரசுகளும் உருவாகத் தொடங்குகின்றன. இதன் காரணமாக ஆளும் வகுப்பும், அவர்களை அண்டிப்பிழைக்கும் பூசாரிவகுப்பும் உழைப்பிலிருந்து விடுபடத் தொடங்குகின்றன. அதன்விளைவாக கி.மு. 7ஆம் நூற்றாண்டில் கருத்துமுதல்வாதச் சிந்தனைகளைக் கொண்ட உபநிடதங்கள் உருவாகின்றன. உபநிடதங்களில் பொருள்முதல்வாதச் சிந்தனைகளும் இருக்கின்றன. உபநிடதங்கள் குறித்து பொக்கே, ‘உபநிடதங்களில் ஒழுங்கான கட்டமைப்பு இல்லை. கூறியது கூறல், முன்னுக்குப்பின் முரணான கருத்து விளக்கம் ஆகியன எங்கும் எதிலும் மலிந்து கிடக்கின்றன…. அக உணர்வு எழுச்சியால் இயற்றப்பட்ட உபநிடதங்கள் எல்லாவித பொருண்மைகளையும் பரிசோதனைமுறையில் புரட்சிகரமாக சிந்திக்க முயன்றவை’ எனக் கூறுகிறார் (30).

வட இந்தியாவில் கி.மு. 7ஆம் 6ஆம் நூற்றாண்டளவில் 16 சனபதங்கள் எனப்படும் சிறுகுறு அரசுகள் இருந்தன என சொல்லப்பட்ட போதிலும் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் புத்தர்காலத்தில் மகதம், கோசலம் ஆகிய இரண்டு அரசுகளே ஓரளவு வளர்ச்சிபெற்ற அரசுகளாக இருந்தன. இந்த இரு அரசுகளைச் சுற்றிலும் ஏராளமான பழங்குடி அமைப்புகள் இருந்தன. முன்னேறிய தொல்லினப்பழங்குடி அமைப்புகளாக அங்கர்கள், வச்சிகள், சாக்கியர்கள், காசிகள், கோய்லர்கள், மல்லர்கள் ஆகியோர் இருந்தனர் எனக் கூறுகிறார் சட்டோபாத்தியாயா (31). ஆனால் அடுத்த நூறு ஆண்டுக்களுக்குள் மகதம் கோசலத்தையும் இன்னபிற தொல்லினப்பழங்குடி அமைப்புகள் அனைத்தையும் தோற்கடித்து ஒரு பேரரசாக உருவாகியது. அதாவது இந்த சிறுகுறு நகர அரசுகள் வளர்ச்சியடைவதற்கு முன்பே அனைத்தும் இல்லாதுபோய் பேரரசு உருவாகியிருந்தது. இந்தச் சூழ்நிலை பூசாரி வகுப்பு வளர்ச்சியடைவதற்கும் அது ஒரு தனிவகுப்பாக உருவாவதற்குமான ஒரு கெடுவாய்ப்பினை வழங்கியது. எனினும் புத்த, சமண மதங்களின் வளர்ச்சியால் அவர்கள் பெரிதளவான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள். மௌரியர்கள் மகதப் பேரரசை ஆண்ட போது அவர்களின் நிலை மிகவும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்ட பூசாரி வகுப்பான, பார்ப்பன வகுப்பு (புசியமித்திரன் தலைமையில்) தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டது. பின் தனக்கான நூல்களையும், இதிகாச இலக்கியங்களையும், புராணங்களையும் உருவாக்கிக் கொண்டதோடு, வைதீக பார்ப்பனியத்தையும், சாதியத்தையும், சமற்கிருத மயமாக்கலையும் கொண்டுவந்தது. பண்டைய வேதகால நூல்கள் உட்பட அனைத்தையும் தங்களின் கண்ணோட்டத்தில் இடைச்செருகல்களாலும், திருத்தங்களாலும் நீக்கல்களாலும் நிரப்பியது. எதிர்மறை கருத்துள்ள எண்ணியம் (சாங்கியம்) போன்ற பொருள்முதல்வாத மெய்யியலைக் கொண்ட நூல்கள் அனைத்தும் அழிவுக்குள்ளாகின. இதன்பின் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த குப்தப்பேரரசு வைதீக பார்ப்பனியத்துக்கும், பார்ப்பனர்களுக்கும், சமற்கிருத மொழிக்குமான பொற்கால ஆட்சியாக இருந்தது. அன்று சாதியம் வட இந்திய சமூகத்தில் வன்முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டது. பின் இந்த வைதீக பார்ப்பனியமும் சமற்கிருதமயமாக்கலும், சாதியமும் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டன. ஒட்டுமொத்தமாக வேதகாலத்தில் இருந்து, இந்தியா என்பது ஒரு ஆன்மீக, சனாதன பூமியாக, வைதீக பார்ப்பனிய பூமியாக, நால்வர்ண சாதிய பூமியாக, சமற்கிருத மொழியின் பூமியாக இருந்து வந்ததாகக் கதைகட்டப்பட்டது. அக்கதை இன்றுவரை வரலாற்று ஆசிரியர்கள் உட்பட அனைவராலும் நம்பப்பட்டு வருகிறது. ஆன்மீக பூமியான இந்தியாவின் அடிப்படை கருத்துமுதல்வாதம்தான் எனவும் இங்கு பொருள்முதல்வாத கருத்துக்கே இடமிருந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது.

பழந்தமிழக நகர அரசுகளும் பொருள்முதல்வாதமும்:

பழந்தமிழகத்தில் கி.மு. 2500க்கு முன்பே இரும்புக்காலம் தொடங்கியிருந்தது. இரும்பு எஃகு பொருட்கள் உலகம் முழுவதும் அன்றே தமிழகத்திலிருந்து ஏற்றுமதியாகின. உலகில் முதல்முறையாக 1100 முதல் 1300 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் இரும்பை உருக்கி இரும்பு எஃகுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக பழந்தமிழர்கள் இருந்தார்கள். இதன்பின் 1000 அல்லது 1500 வருடம் கழித்துத்தான் உலகில் இருந்த பிறநாட்டு மக்கள் இரும்பை உருக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டார்கள் (32). அன்றே வெண்கல உற்பத்தியிலும் தமிழர்கள் தலைசிறந்தவர்களாக இருந்தனர். கி.மு. 1500 வாக்கில் ஆதிச்சநல்லூர் ஒரு தொழிற்துறை நகராக இருந்தது. அன்றே பழந்தமிழகத்தில் ஆங்காங்கு சிறுகுறு நகர அரசுகள் உருவாகியிருந்தன. அதே காலகட்டத்தில் தமிழர்கள், தமிழ்க்குறியீடுகளை தங்களின் தமிழ்மொழிக்கான எழுத்தாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். கி.மு. 1000 வாக்கில் பழந்தமிழகத்தில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகள் உருவாகியிருந்தன. கி.மு. 800 வாக்கில் தமிழ்க்குறியீடுகளில் இருந்து வளர்ச்சிபெற்ற தமிழி எழுத்து உருவாகியிருந்தது. அதற்கு முன்பே சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்களாக ஆகி, தாங்களும் தங்கள் குடிகளான வேளிர்களும் ஒன்று சேர்ந்து, தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி ஒன்றை உருவாக்கி, தங்களைத்தவிர வேறு யாரும் வேந்தர்களாக ஆகமுடியாது என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்கிக் கொண்டனர் (33). தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணி என்ற இந்தக்கட்டமைப்பு 1000 வருடங்களுக்கு மேல் நீடித்தது. அன்றே தமிழர்கள் உலகளாவிய கடல்வணிகத்தையும், ஐக்கியக்கடற்படையையும் கொண்டவர்களாக இருந்தனர். இந்தியாவின் கிழக்கு மேற்குக்கடற்கரைகளையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தங்கள் வணிகக்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

பழந்தமிழகத்தில் இருந்த நகர அரசுகளும் கண ஆட்சிமுறையின் அழிவிலிருந்துதான் உருவாகின. ஆனால் இங்கு உருவான தொடக்க கால நகர அரசுகளில் வேளாண்மையைச் சார்ந்தவர்கள் அதிகமாகவும், தொழில் வணிகம் இன்னபிறவற்றைச் சார்ந்தவர்கள் குறைவாகவும் இருந்ததால் இங்கு இருந்த நகர அரசுகளில் வரம்புக்குட்பட்ட முடியாட்சி உருவாகி இருந்தது. ஆதலால் இங்கு ஆண்டான் அடிமைமுறை உருவாகவில்லை. இதன் காரணமாக நகர அரசுகள் உருவான காத்திலிருந்தே பொருள்முதல்வாத மெய்யியல்தான் பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இருந்து வந்தது. மூவேந்தர்கள் உருவான பிறகும் பழந்தமிழகத்தில் தந்தைக்குப்பிறகு மூத்தமகன் என்ற அரசுரிமைமுறை பின்பற்றப்படவில்லை. வேந்தர் குடும்பங்களில் இருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர அரசை ஆண்டனர். அனைவருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். ஆதலால் இங்கு பேரரசுகள் உருவாகவில்லை. நகர அரசுகள்தான் மிக நீண்டகாலமாக இருந்துவந்தன. கி.மு. 1000க்கு முன்பிருந்தே ஓரளவு வளர்ச்சிபெற்ற நகர அரசுகளாக இருந்ததன் காரணமாக, பழந்தமிழக நகர அரசுகள் கார்டன் சைல்டு (V.Gordon Childe) கூறுவதுபோல், சுயமான சுதந்திரமான சிந்தனைகளை உடையனவாகவும், சனநாயகத் தன்மையைப் பெற்றனவாகவும், பொருள்முதல்வாத மெய்யியலையும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினையும் கொண்டனவாகவும், நிறைய புதிய கண்டு பிடிப்புகளைப் செய்பவனாகவும் இருந்தன.

பழந்தமிழகமும் தொல்கபிலரும்:

வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டதாக பழந்தமிழகம் இருந்த சூழ்நிலையில்தான் தமிழ் அறிவு மரபின் தந்தை எனக் கருதப்படும் தொல்கபிலர் கி.மு. 800 வாக்கில் பழந்தமிழகத்தில் தோன்றினார். கி.மு. 750 வாக்கில் எண்ணியம் (சாங்கியம்) எனப்படும் புகழ்பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தோற்றுவித்தார். கி.மு. 1000க்கு முன்பிருந்தே பொருள்முதல்வாத மெய்யியல் பழந்தமிழகத்தில் வளர்ச்சி பெற்று வந்து கொண்டிருந்ததின் காரணமாகத்தான் கி.மு. 750 வாக்கில் எண்ணியம் என்ற ஒரு வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாத மெய்யியலைத் தொல்கபிலரால் தோற்றுவிக்க முடிந்தது. கிரேக்கத்தில் வளர்ச்சி பெற்ற நகர அரசுகள் இருந்த போதிலும் இதுபோன்ற வளர்ச்சி பெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் அங்கு தோன்றவில்லை. அதற்கு அங்கு ஆண்டான் அடிமைமுறை இருந்ததே காரணம். கி.மு. 5ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு ஒரு கட்டத்தில் ஏதென்சு அரசில் 90,000 அத்தீனியர்களும், 3, 65,000 அடிமைகளும், 45,000 குடியேறியவர்களும் இருந்தனர் (34). நகரக்குடிகளான அத்தீனியர்கள் உழைப்பிலிருந்து விடுபட்டவர்களாக இருந்ததும், அடிமைகளை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவை இருந்ததாலும் அங்கும் கருத்துமுதல்வாதம் சாக்ரடிசு, பிளட்டோ காலத்திற்கு முன்பே தோன்றி விட்டது. ஆதலால் கிரேக்க நகர அரசுகளில் தோன்றிய பொருள்முதல்வாத மெய்யியல், தொல்கபிலரின் எண்ணியம் போன்ற வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியலாக உருவாக இயலவில்லை.

வட இந்தியாவில் நகர அரசுகள் உருவாகி வளர்ச்சியடைவதற்கு முன்னரே அங்கு மகதப் பேரரசு உருவாகி விட்டது. ஆதலால் வட இந்தியாவில் தொல்கபிலரின் எண்ணியம் போன்ற வளர்ச்சிபெற்ற பொருள்முதல் மெய்யியல் தோன்ற வாய்ப்பு இருக்கவில்லை. நகர அரசுகள் வளர்ச்சி பெறாததால்தான் அங்கு பூசாரி வகுப்பு இருக்க முடிந்தது. வளர்ச்சிபெற்ற நகர அரசுகள் அனைத்தும் பூசாரி வகுப்பை அடியோடு அழித்துவிடுவதை வரலாறு உறுதி செய்துள்ளது. சங்க காலத்தில் பூசாரி வகுப்பு என்ற ஒரு தனி வகுப்பு இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் வழிபாடு நடத்தலாம், சடங்குகள் செய்யலாம் என்ற நிலைதான் இருந்து வந்தது. சங்ககாலத்தில், புலையர் முதல் அந்தணர் வரை பலரும் வழிபாடும், சடங்குகளும் செய்துவந்தனர். வளர்ச்சிபெற்ற கிரேக்க நகர அரசுகளிலும் ஓரளவு அந்நிலைதான் இருந்துவந்தது. ஆதலால் பழந்தமிழகத்தின் சமூகச் சூழ்நிலைதான் தொல்கபிலரின் எண்ணியத்தையும், பக்குடுக்கை நன்கணியாரின் அணுக் கொள்கையையும், கணாதரின் சிறப்பியலையும் (வைசேடிகம்), கௌதமனாரின் அளவியலையும் (நியாயவியல்), ஆசிவகம் போன்றவற்றையும் தோற்றுவிக்கக் காரணமாக இருந்துள்ளது எனலாம். எண்ணிய மெய்யியல் தோன்றிய பின் தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்களும், கலை இலக்கிய நூல்களும் பேரளவில் பழந்தமிழகத்தில் தோன்றின. ஆனால் கெடுவாய்ப்பாக காலவெள்ளத்தில் அவை அனைத்தும் அழிந்து போயின. தத்துவார்த்த கலை, அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இலக்கிய நூல்களில் 5 விழுக்காட்டுக்கும் குறைவான சங்க இலக்கிய நூல்களே தற்பொழுது கிடைத்துள்ளன.

பார்வை:

21. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, படைப்பாளிகளின் பதிப்பகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 187.

22. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 882.

23. “ “ “ பக்: 880, 881.

24. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, படைப்பாளிகளின் பதிப்பகம், தமிழில் வெ. கிருசுணமூர்த்தி, 2010, பக்: 165, 166.

25, 26, 27 “ “ “ பக்: 168-170.

28, 29. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-2 பக்: 539-543.

30. இந்திய வரலாற்றில் பகவத் கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே. சுப்பிரமணியன், விடியல் பதிப்பகம், சனவரி-2016 பக்: 81.

31. உலகாயதம், தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, NCBH, சூன்-2010, பக்: 612, 613.

32. ஆயுத தேசம், இரா.மன்னர் மன்னன், பயிற்று பதிப்பகம், 2021, பக்: 14-44.

33. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-1 பக்: 82-85, 90-91, 429-436, 450,

34. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH, சனவரி-2023 புத்தகம்-1 பக்: 259

- கணியன் பாலன்

Pin It