கி.மு.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானியின் பெயர்தான் சரகன். இன்று உலகம் முழுவதும் ஆராயப்படும் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட மாமேதை இவர்.

சில குழந்தைகள் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும் இருப்பார்கள். வேறுசிலர் பிறக்கும்போதே உடற்குறையுடன் பிறப்பார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்தான் காரணம் என்று முன்பெல்லாம் கருதி வந்தனர். ஆனால் சரகன் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் தாயின் சினை முட்டையும், தந்தையின் உயிரணுவுமே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்று உலகிற்கு அறிவித்தார்.

உடலுக்கு நோய்வந்தபின் ஓடித்திரிவதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்று ஆரோக்கிய வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர்தான் இந்த சரகர். ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்யும் முன்பாக அவருடைய சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு தெரிந்து வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறியவரும் இவர்தான்.

மனித உடலின் அமைப்பையும், உடல் உறுப்புகளின் தன்மையையும் ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்திலேயே உடலில் உள்ள எலும்புகள், பற்கள் பற்றிய எண்ணிக்கையைக் கண்டறிந்தவர் இவர். மனித இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் அது 13 இரத்தக்குழாய்களின் உதவியால் உடல் முழுவதும் தொடர்பு கொண்டுள்ளது என்றும், எண்ணற்ற இரத்தக்குழாய்கள் மனித உடலில் உள்ளன என்றும் ஆராய்ந்து அறிவித்தார்.

நம்முடைய உடலின் எடை, உருவ மாற்றம், உணவு செரித்தல் போன்றவை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துப்பொருட்களைப்பொறுத்தே மாறுபடுவதாகவும், இவற்றின் அடிப்படையிலேயே மருத்துவம் செய்யவேண்டும் என்றும் கூறியவர்தான் சரகர்.

இரண்டாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்துறையின் அடிப்படை நூலாக விளங்கிவரும் “சரச சம்ஹிதை” என்னும் நூலை “அக்னிவேசன்” என்னும் அறிஞர் எழுதினார். சரகன் முழுவதும் படித்து ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னரே இந்த நூல் வெளியிடப்பட்டதாம்.

நன்றி: கலைக்கதிர்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

onian“அவன் கிடக்கிறான் வெங்காயம்” என்று அலட்சியமாக சொல்லிவிடலாம். ஆனால் கண்ணீர் விடாமல் அந்த வெங்காயத்தை வெட்டுவது முடியாது.

வெங்காயம் Allium குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். வெங்காயத்தை வெட்டும்போது செல்கள் உடைபடுகின்றன. வெங்காயத்தில் உள்ள alliinases என்னும் என்சைம்கள் சிதைவடைந்து amino acid suphoxides களை உற்பத்தி செய்கின்றன. அமினோ ஆசிட் சல்பாக்ஸைடுகள் மேலும் சிதைவடைந்து சல்ஃபீனிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. சல்ஃபீனிக் அமிலம் நிலையற்றது. எனவே இவை syn-propanethial-S-oxide என்னும் வாயுவாக மாறி காற்றில் பரவுகிறது. கண்களை அடையும் இந்த வாயு கண்ணில் உள்ள நீர்ப்பசையுடன் சேர்ந்து கந்தக அமிலமாக மாறுவதால் கண்களில் உள்ள நரம்பு முனைகளில் எரிச்சல் உணர்வு தூண்டப்படுகிறது. அமிலத்தின் வீரியத்தைக் குறைப்பதற்காக கண்ணீர்ச் சுரப்பிகள் இயங்கி கண்ணீரை சுரக்கின்றன. இறுதியில் கண்ணீரின் உதவியால் எரிச்சலை உண்டாக்கும் கந்தக அமிலம் வெளியேற்றப்படுகிறது.

பெருமளவில் நீரை வெங்காயத்துடன் சேர்ப்பதால் எரிச்சலூட்டும் syn-propanethial-S-oxide வாயுவைத் தவிர்க்கலாம். ஓடும் நீரில் வெங்காயத்தை வெட்டுதல், ஈரப்படுத்தி வெட்டுதல் ஆகிய நுணுக்கங்களாலும் கண்ணீர் விடாமல் வெங்காயம் வெட்டலாம்.

வெங்காயத்தின் வேர்ப்பகுதியில் எரிச்சலை உண்டுபண்ணும் வாயு அடர்த்தியாக இருப்பதால் வேர்ப்பகுதியை கடைசியாக வெட்டலாம். மிகவும் கூர்மையான கத்திகொண்டு வெங்காயத்தை வெட்டுவதால் வெங்காயத்தின் செல்களுக்கு ஏற்படும் சேதம் குறைக்கப்படுகிறது. இதனால் எரிச்சலூட்டும் வாயு வெளிப்படுதலும் குறைக்கப்படுகிறது.

சல்ஃபீனிக் அமிலம் வெளிப்படுவது Allium குடும்பத்தைச்சேர்ந்த தாவரங்களுக்குள் வேறுபடுகிறது.

ஜீன்களை செயலிழக்கச் செய்யும் உயிரி தொழில்நுட்பம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்ணீரில்லா வெங்காயம் நியூசிலாந்தில் உள்ள பயிர் மற்றும் உணவு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விந்தை 2008 ஜனவரி 31 ம் தேதியன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

brainpowerவயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.

வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள். மிகக்குறைந்த அளவில் மதுகுடிப்பதால் இதயநோயின் பாதிப்புகள் குறைவதாகவும் ஆனால் மூளை சிறியதாகிப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் Framingham Heart Study நிறுவனம் சராசரி வயது 60 ஐக்கொண்ட 1,839 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த நபர்களின் மனைவியர்கள், குழந்தைகளையும் ஆய்விற்கு இந்த நிறுவனம் உட்படுத்தியது. 1999 க்கும் 2001க்கும் இடையில் இவர்கள் அனைவரும் எம்.ஆர்.ஐ . ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒவ்வொரு வாரமும் இவர்கள் எடுத்துக்கொள்ளும் மதுவின் அளவு, வயது, பாலினம், கல்வி, உயரம், எடை, இரத்த அழுத்தம் இவைகளின் அடிப்படையில் இதய பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் அளவிடப்பட்டன.

ஆண்கள் பெண்களைவிட அதிக அளவில் மது குடிப்பவர்களாக இருந்தார்கள். குடிக்கும் மதுவின் அளவும், மூளையின் கன அளவும் எதிர்விகிதத்தில் இருந்தது. அதாவது அதிகமாக மதுகுடிப்பவர்களின் மூளை சிறியதாகப் போய்க்கொண்டிருந்தது.

பெண்கள் குறைவாக மது அருந்துபவர்களாக இருந்தும்கூட, மூளை சிறியதாகிப்போகும் தன்மை பெண்களிடம் அதிகமாக காணப்பட்டது. அவர்களுடைய சிறிய உருவம், பெண்ணுடலில் மதுவின் தாக்கம் போன்ற உடலியல் காரணங்கள் கூட இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம்.

இதிலிருந்து மிகக்குறைவான அளவில் மது குடிக்கும் பழக்கம் இருந்தாலும், மூளையின் அளவு சிறியதாகப் போய்க்கொண்டிருக்கும் என்பதுதான் உண்மை.

எப்படிப் பார்த்தாலும் மதுவினால் தீமையே விளைகிறது என்பது மட்டுமே முடிவான முடிவு.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It

 

musicமூளையின் இடது வலது பாகங்களை ஒருசேர பயன்படுத்தும் ஆற்றல் சாதாரண மனிதர்களைவிட வாத்தியக் கலைஞர்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண மனிதர்களைவிட நன்கு பயிற்சிபெற்ற வாத்தியக் கலைஞர்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்களாம். திறமையான கலைஞர்கள் தமது சிந்தனைகளை பல முனைகளிலும் ஒருசேர செலுத்துவதிலும் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வாத்தியக் கலைஞர்கள் தொழில் ரீதியாக படைப்புத் திறனைக் கொண்டிருப்பதால் இது சாத்தியமாகிறது.

வாத்தியக் கலைஞர்கள் இசையை வெளிப்படுத்தும்போது வெவ்வேறு வரிவடிவங்களை ஒரே சமயத்தில் இரண்டு கைகளையும் பயன்படுத்தி வெளிப்படுத்துவதை நாம் கவனித்திருக்கிறோம்.

இசைக்குறியீடுகளை படிப்பது என்பது இடதுபக்க பெருமூளையின் வேலை. இசைக்கலைஞர் தன்னுடைய கற்பனைத்திறனை அத்துடன் இணைத்து வாசிப்பது என்பது வலதுபக்க பெருமூளையின் வேலை.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள், இந்த ஆய்வை செய்வதற்கு, எட்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாமல் பயிற்சி பெற்ற இருபது மாணவர்களையும், இசைப்பயிற்சி பெறாத இருபது மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். பியானோ, காற்றுக்கருவிகள், கம்பிக்கருவிகள், தோல் கருவிகள் ஆகிய வாத்தியங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களும், அனைத்து வயதுப்பிரிவினர், இருபாலர், வெவ்வேறு கல்வித் தகுதியுடைய மாணவர்களும் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.

இரண்டு நிலைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. முதல் ஆய்வில் பலவகையான வீட்டு உபயோக பொருட்கள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. எழுதப்பட்ட ஒரு சொல்லும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சொல்லுக்கும் பொருளுக்குமான தொடர்பைக் கூறுவதில் கலைஞர்கள் மற்றவர்களை விட சிறந்து விளங்கினர். அதுமட்டுமில்லாமல் வீட்டு உபயோக பொருட்களுக்கு புதுப்புது உபயோகங்களையும் இசைக்கலைஞர்கள் கூறினர்.

இரண்டாவது ஆய்வில் பொருட்களின் உபயோகம் ஒரு வார்த்தையால் தொடர்பு படுத்தப்படும்போது பெருமூளையின் முன்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டது. மூளையின் கார்டெக்ஸ் பகுதியில் ஆக்ஸிஜனேற்றத்தின் அளவு அதிகமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், இசைக்கலைஞர்களின் அறிவுத்திறன் (IQ) அளவீடு செய்யப்பட்டபோது, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி

Pin It