Ozone Layerஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு ‌தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.

ஓசோன் படலம் எனப்படுவது யாதெனில் நாம் உயிர்வாழ மிக முக்கியமான நம் சுவாச வாயுவான ஆக்சிஜனின் மற்றொரு வடிவம் தான் ஓசோன். மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஓர் ஓசோன் துகள் ஆகும். சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் - நம் கண்ணுக்குத் தெரியாத - மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களுக்கும், தாவரங்களுக்கும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் தன்மை கொண்ட புறஊதாக் கதிர்களிலிருந்து பூமி வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதும், இக்கதிர் பூமியை வந்து அடையாவண்ணம் பார்த்துக் கொள்வதும் தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி ஆகும். 1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோன் என்னும் ஒரு படலம் இது போன்றதோர் உன்னதப் பணியை செய்து கொண்டிருப்பதைக் கண்டறிந்தார்.

ஆனால் 1970-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு முதன்முதலாக ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன் என்பவர் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்துள்ளதைக் கண்டறிந்தார். சிஎஃப்சி என்று கூறப்படும் குளோரோ புளூரோ கார்பன்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் வேதியியல் புகைகளால் ஓசோன் படலம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலைகளின் ஒரு சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. அதாவது, குளிர்சாதனப் பெட்டி, ஏசி உள்ளிட்டவைகளில் இருந்து வெளிவரும் சிஎஃப்சி வாயுகளே ஓசோனில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

பின்னர், ஒசோன் படலத்தைக் காக்கும் நோக்கோடு இதுபோன்ற தீங்கை ஏற்படுத்தும் கருவிகளை மாற்றி வடிவமைத்து தற்போது இவ்வகை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி வருவதால், புவியின் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு ‌தற்போது சீராகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், அண்டார்டிகா வான்பகுதியில் ஏற்பட்ட துளை படிப்படியாக சுருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு வேகமாக சீராகி வருவதால், 2030 ஆம் ஆண்டுக்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்து விடும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நமக்கு ஒரு விடயம் தெளிவாக விளங்குகின்றது, பருவ நிலைக்கு உகந்த, சுற்றுச்சூழலுக்கேற்ப தொழில்நுட்பங்களை இவ் அரசுகளும் அதற்கேற்ப மக்களாகிய நாமும் முன்னெடுத்தால், நிச்சயம் நாமும் அடுத்து அடுத்து வரும் தலைமுறையும் எவ்விதப் பாதிப்பின்றி இவ்வுலகில் வாழலாம்.

- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர், சென்னை

Pin It

atom 628பெரு வெளியே
பிரபஞ்சம்! - அங்கு
அனைத்து அணுக்களும்
ஆவி மற்றும் தூசு நிலையே! - அதுவே
ஹைட்ரஜன், ஹீலியம், கார்பன்
போன்றவை.

அணுவை
ஆக்கவோ, அழிக்கவோ முடியாது!
அணு வளர்ச்சியுராது, நகலெடுக்காது!
தன்னை தானே சீர்செய்யவும் மாட்டாது!

ஆனால்
அணுக்கள் ஒன்றிணைந்து
மூலக்கூறுகளையும்,
மூலக்கூறுகள் ஒன்றிணைந்து
பருப்பொருளையும்
பருப்பொருள்கள் ஒன்றிணைந்து
பிரபஞ்சத்தையும் உண்டுபண்ணும்
இவையாவும் நடந்திடுமே
இயற்வேதியியல் கோட்பாட்டிற்குட்ப்பட்டு!

அணு
நிலையில்லாதது! - தொடர்
இயக்கத்தி லிருப்பது! - தொடர்ந்து
வினைபுரிவது - விளைவு
விசை உண்டாவது!
அது பெருகி - பெரும் புயலாகி
அணுக்கள் கூட்டம் கூட்டமாக
சுற்றி சுழலுவதே
பால்வளித் திரள் - வானவெளியிலே!

இப்படி
நாளொரு வண்ணமும்
பொழுதொரு மேனியுமாக
சுழலும் அணுத்திரளின்
மையமே சுட்டெரிக்கும்
சூரியன்! - அது உமிழ்வதே
உயர் ஆற்றல் கொண்ட
கதிர்வீச்சு!
சுழலும் அணுத்திரளின்
புறத்தினின்று சிதறிய சில்களே
புதன், சுக்ரன், பூமி
செவ்வாய், குரு, சனி மற்றும் யூரேனஸ்
போன்ற கோள்கள்!

இவ்வாறு
சூரியனும் - அதிலிருந்து
சிதறுண்ட கோள்களும்
எரி கற்களும், வால்மீன்களும்
கொண்ட கூட்டு குடும்பமே
சூரிய குடும்பமாகும்! 

சூரியனுக்கும் அதைச் சுற்றும் கோள்களுக்கும்
உள்ள தூரத்தை பொறுத்தமைவதே
கோள்களின் வெப்பநிலை!
அந்த வெப்பத்தை பொறுத்தமைவதே
கோள்களின் பௌதீக நிலை!
வாயு, திரவ, திட மென்றும்!
வெப்பம், குளிரென்றும்!
மழை, வெயிலென்றும்!
இப்படி உருவானதே
கோளுக்கொரு பருவநிலை
எட்டு கோள்களுக்கும்!

அன்னை பூமி என்பது
இவ்வெட்டில் ஒன்றே!
ஆச்சரியம் என்னவென்றால்
இப்பூமியில் மட்டும்தான்
சாதகங்கள் பலப்பல - உயிர்கள்
தோன்றவும், வளரவும், விருத்தியடையவும்!

உயிரென்றால் என்ன?
பருபொருள் உயிர் கொண்டதெப்படி?
உயிரென்றால் இயக்கமா?
ஆறு கூட இயங்குகிறதே!
உயிரென்றால் வளர்ச்சியா?
மலை கூட வளர்கிறதே!
உயிரென்றால் சத்தமிடுவதா?
இடி கூட முழங்குகிறதே!
உயிரென்றால் தன்னை போன்றே
ஒன்றை தருவதா?
பாறை கூட ஒன்று இரண்டாகிறதே!
உயிரென்றால் என்ன?

உயிரை காண முடியுமா?
கண்டால் தொட்டு உணர முடியுமா?
தொட்டால் நுகர முடியுமா?
நுகர்ந்தால் சுவைக்க முடியுமா?
சுவைத்தால் செரிக்க முடியுமா?
உயிரென்றால் என்ன?

உயிரென்பது யாதெனின் - அது
பருப்பொருளின் பண்புத் தொகையே!
அவையாவன
வளர்ச்சியுருதல், நகலெடுத்தல், சீர்செய்தல்!

சிறு செடி வளர்ந்து மரமாகிறது
காய்த்து கனிந்த மரம் விதை மூலம் தன்னை நகலெடுக்கிறது
வெட்டுண்ட கிளைகள் தன்னைத்தானே சீர்செய்து பூத்து சிரிக்கின்றது
எனவே தாவரம் என்ற பருப்பொருளுக்கு உயிருண்டு!

எனவே
உயிரென்பது செயலிலிருப்பது!
உயிரென்பது இயக்கத்திலிருப்பது!

இப்படி
ஓர் அணு ஈரணுவாகவும்
ஈரணு பலவணுவாகவும்
பலவணு மூலக்கூறுகளாகவும்
உருப்பெற்றதே பருப்பொருள்!

பருப்பொருள் தக்க சமயத்தில்
பண்புத்தொகை பெற்று
தரித்ததே மரபணு! - அதுவே
உயிரணு!

மரபணு
அது வளர்ச்சியுறும் - தன்னைத்தானே
நகலெடுக்கும்!
பழுதுப்பட்டால் சீர்செய்யும்!

இதுவே
அணு மரபணுவான கதை!
இதுவே
பருப்பொருள் உயிர்ப்பண்பு பெற்ற கதை!
இதுவே
ஓரணு உயிரணுவான கதை!

- செந்தமிழ்ச் செல்வன்

Pin It

இன்று திரையரங்குகளில் நாம் பெரும்பாலும் இரண்டு பரிமாணத்தில் திரைப்படம் காண்கிறோம். சில திரைப்படங்கள் முப்பரிமாணத்தில் வெளியாகின்றன. இன்னும் முன்னேறி, நாம் அதிகபட்சம் ஏழு பரிமாணத் திரைப்படங்களை சில நாடுகளில் பார்க்கிறோம்.

ஆனால் உண்மையில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு முப்பரிமாணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

இதையும் தாண்டி இன்று அறிவியல் உலகில் ஐந்து பரிமாணம் வரை விவரிக்கின்றனர். இதைத் தான் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அவர்கள் சொல்லி இருப்பார். அந்த ஐந்து பரிமாணங்கள் என்பவை யாவை, அவை எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன போன்ற கேள்விகளுக்கு இங்கு விடைகளைக் காண்போம்

நீங்கள் இன்டெர்ஸ்டெல்லர் படம் பார்த்திருப்பீர்களானால், அதில் ஆங்காங்கே, எதிர்கால மனிதர்கள் ஐந்து பரிமாணம் மூலம் அந்தக் குழுவை தொடர்பு கொள்வதாய் வரும். அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் Cooper மற்றும் ரோபோட் TARS உடன் gargantua கருந்துளையினுள் விழுந்து விடுவார். அதன் பின் அவர் ஒரு ஐந்து பரிமாணப் பகுதிக்குள் கண் விழிப்பார். அந்த ஐந்து பரிமாணம் மூலம் இறந்த காலத்தில் உள்ள தன்னையும், தன மகளையும் காண்பார் மற்றும் தன மகளுடன் ஈர்ப்பு விசையின் மூலம் தொடர்பு கொள்வார். இது எப்படி சாத்தியம் என உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து படியுங்கள்.

satelite planetபரிமாணங்களைப் பற்றி நாம் கலந்துரையாடுவதற்கு முன்பு நாம் இந்தப் பிரபஞ்சத்தின் பிரதான அளவான "புள்ளியை" எடுத்துக் கொள்வோம். ஓர் ஒற்றைப் புள்ளி பற்றிய கோட்பாடுகளை நாம் நம் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அதனை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

பரிமாணம் 1 :

ஒரு கோட்டினை கற்பனை செய்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு கோடு, நேரானது அல்லது சற்று கோணலானது . இரு புள்ளிகளை இணைக்கும் ஒரு கோடு. ஆனால் அந்த கோட்டிற்கு அகலம் கிடையாது. எளிதாகச் சொல்வதென்றால் அப்படியொரு உருவம் அல்லது பொருள் உண்மையில் இருக்க இயலாது. ஏனெனில் நாம் இந்த உலகத்தை காணும் விதத்தில் ஒரு பரிமாணப் பொருட்களை காண இயலாது. மேலும் நாம் காணும் எந்த ஒரு பொருளும் கண்டிப்பாக நீளம் மற்றும் அகலத்தைக் கொண்டிருக்கும்.

பரிமாணம் 2:

இது ஒரு குறிப்புச் சட்டகத்தைக் குறிக்கும் (datum reference frame). அதாவது நாம் எந்த ஒரு பொருளையும் நேர்கோட்டில் காண்போமானால் இந்த சட்டகத்தைப் பெறலாம். உதாரணமாக, திரை, தொலைக்காட்சிப் பெட்டி , தரை, தளம், மேஜை மேற்பகுதி மற்றும் பல .. மேலும் அகலமே இல்லாத ஒரு கோட்டினை கற்பனை செய்வதை விட இது மிக சுலபமே. இருந்தாலும் இப்படிப்பட்ட குறிப்புச் சட்டகமும் உண்மையில் இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. அதாவது முன் கூறியது போல் இதனையும் நம்மால் காண இயலாது என எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இவ்வுலகில் நாம் காணும் எதுவும் சிறிதளவாவது ஆழத்தினைக் கொண்டிருக்கும்.

பரிமாணம் 3:

ஒரு கோட்டிற்கு அகலத்தை அளித்தால் அது ஒரு குறிப்புச் சட்டகமாக மாறும். அதேபோல் ஒரு குறிப்புச் சட்டகத்தை ஓர் ஆழத்திற்கு அல்லது ஓர் உயரத்திற்கு மேம்படுத்தும் போது, அது நாம் அதிகமாகப் பார்த்து பழகிய ஒரு பொருளாக மாறுகிறது. இங்கு நீங்கள் இன்னும் சில இயற்பியல் அளவீடுகளைக் கூறலாம். அனால் அவை நான்காம் பரிமாணத்தில் விவரிக்கப்படும்.intersteller movie

பரிமாணம் 4:

இங்கு நான்காம் பரிமாணம் என்பது நேரம். ஆம் அது நேரம் தான். நான் முன் கூறியது போல் இந்தப் பூமியில் நீளம், அகலம், மற்றும் உயரம் அல்லது ஆழம் உள்ளது போல் நேரமும் உள்ளது. ஆனால் இந்த பூமியினுள் நீங்கள் இருக்கும் வரை உங்களால் நான்காம் பரிமாணத்தை உணர முடியாது அல்லது அது மிகக் கடினம். ஏனெனில் உங்களால் இங்கு நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இதனைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம் கூறுகிறேன்.

நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். அதற்கு முதலில் நீங்கள் அவருக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும். அடுத்து எங்கு எப்பொழுது சந்திக்கப் போகிறீர்கள் என தெரியப்படுத்த வேண்டும். அதாவது இடம் அல்லது வெளி உதாரணமாக வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு உணவகத்தில் சந்திப்பதாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்களால் உங்கள் நண்பரை முழு நேரமும் அங்கு காண முடியாது. ஆகையினால் நீங்கள் ஒரு நேரத்தை முடிவு செய்து உங்கள் நண்பரை அதே நேரத்திற்கு வரச் செய்து சந்திப்பீர்கள் அல்லவா... இங்கு நீங்கள் உங்களையே அறியாமல் மூன்றாம் பரிமாண‌த்துடன் நேரத்தை நான்காம் பரிமாணமாக சேர்க்கிறீர்கள். ஆனால் உங்களால் இந்த நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதாவது உங்களால் மற்ற பொருட்களின் நீளம், அகலம் மற்றும் உயரத்தைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும் ஆனால் நேரம் அதுவாகவே ஒரு முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

தற்பொழுது அந்த உதாரணத்திற்குச் செல்லுங்கள்... நீங்கள் வெள்ளிக்கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை மாலை 4 மணிக்குச் செல்கிறீர்கள்... தற்போது உங்கள் நண்பர் அங்கு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் வெள்ளிக்கிழமை மாலை காத்திருந்து விட்டு சென்று இருப்பார். இப்பொழுது உங்களால் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியும் என கற்பனை செய்து கொள்வோம், நீங்கள் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இருக்கிறீர்கள். உங்கள் நண்பர் அங்கு இல்லை. ஆனால் உங்களுக்கு அவரை எங்கு சென்று பார்க்க வேண்டும் எனத் தெரியும். ஆகையினால் நீங்கள் உங்களது நேரத்தை மாற்றியமைத்து வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குச் சென்று உங்கள் நண்பரை சந்திக்கிறீர்கள். அறிவியல் ரீதியாக இது இன்னும் சாத்தியமில்லை எனினும் இது கற்பனையே.

பரிமாணம் 5:

இங்கு நாம் ஈர்ப்பு விசையைப் பற்றி பேசப் போகிறோம். இதனைப் புரிந்து கொள்ள இதுவரை நீங்கள் படித்த நான்கு பரிமாணங்களை சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள்.

இது நேரம் பன்மடங்காக்கப்பட்ட ஒரு பரிமாணம் எனலாம். ஏனெனில் இதில் உங்களால் ஒரே நேரத்தில் உங்கள் வாழ்க்கையின் பல கட்டங்களைச் சேர்ந்த பதிவுகளை ஒரே நேரத்தில் காண இயலும்.

முன் கூறப்பட்ட உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் நீங்கள் உங்கள் நண்பரைச் சந்திக்கவில்லை. ஏனெனில் நீங்கள் ஒரு நாள் கழித்துச் சென்று இருக்குறீர்கள். ஆனால் உங்களுக்கும் அவருக்கும் ஒரு புரிதல் உள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரம் மற்றும் நாள் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். ஆகையினால் உங்களால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று ஈர்ப்பு விசையின் மூலம் அவருக்கு நாள் மற்றும் நேரத்தை மாற்றிக் கூற முடியும் அல்லது உங்களை சரியான நேரத்திற்குச் செல்லும்படி எச்சரிக்கை செய்ய இயலும் .

இந்த யுக்தியையே இன்டெர்ஸ்டெல்லர் திரைப்படத்தினில் கூப்பர் அந்த ஐந்து பரிமாணக் கட்டமைப்பில் செய்து கொண்டு இருப்பார். அதாவது அனைத்தும் கையை விட்டுப் போன பிறகு அவருக்கு மட்டுமே தெரியும், எப்பொழுது அவரது மகளுடன் தொடர்பு கொண்டால் அவரால் அந்தக் கட்டமைப்பினுள் உள்ள கற்றை இயங்கியல் தகவல்களைப் பரிமாற இயலும் என்று. அந்தத் தகவல்கள் ஐந்தாம் பரிமாணமான ஈர்ப்பு விசையின் மூலம் மோர்ஸ் கோட் வழியாக பரிமாறப்படும். அந்தத் தகவல்கள் மூலம் மனிதர்கள் சனி கிரகத்தைச் சுற்றி ஒரு காலனியை ஏற்படுத்தி வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

வரும் கட்டுரைகளில் இன்டெர்ஸ்டெல்லர் படத்தினில் வரும் இன்னும் பல கோட்பாடுகளை விரிவாகக் காண்போம். மேலும் இது பற்றிய உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

- வி.சீனிவாசன்

Pin It

chennai flood 601

கடலூரில், சென்னையில் தொடர்மழை, மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு, வெள்ளப்பெருக்கு 50க்கும் மேற்பட்டோருக்கு மேல் பலி, முதலமைச்சர் இரங்கல், பிரதமர் மக்களுடன் துணையாய் நிற்கும் என உறுதி இவை நாம் வருடாவருடம் இந்தியாவில் ஏதோ ஓர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொழுது கூறும் அதே புளித்துப்போன ஆறுதல்... பொதுவாகவே இந்தியாவில் எந்த விட இயற்கை பேரிடர்களுக்கு அதை எதிர் கொள்ளுவது பற்றிய அறிவு மிகவும் குறைவு.

எடுத்துக்காட்டிற்கு மலைப்பிரதேசங்களான ஊட்டி,நிலகிரி போன்ற பகுதிகளில் வருடா வருடம் சில மாதங்களில் மலைச்சரிவு நடந்தே தீரும். அதை எதிர்கொள்ள எவ்வாறு மக்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள்.. Disaster Management System மக்களிடம் சென்றடைந்துள்ளதா இல்லை அதிகார மட்டத்திற்கு இதைப்பற்றிய முழு அறிவு உள்ளதா? மண் சரிவை தடுக்க சுவர் எழுப்பதலுடன் முடிந்துவிட்டது இவர்கள் பணி .. மாறாக போலியான நிலச்சரிவு நடைபெறுவது போன்று ஒத்திகை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதா? மண் சரிவில் சிக்கியவர்களை விரைவில் மீட்பது? மண்சரிவில் மீட்கும் போது ஏற்படும் பாதிப்புகள்? மண் சரிவிற்கு பின்பான புணர்வாழ்வு, மண்சரிவில் இருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளை கொண்டு தவறுகளை சரி செய்தல் போன்றவை நடை பெறுகின்றனவா எனில்.. இல்லை என்பதே பதில்..

இன்றைய இணைய உலகில் கருத்துக்கள் விரைவில் மக்களை சென்றடையும் என்பதால் வெள்ளத்தை எதிர்கொள்வதை பற்றிய இக்கட்டுரையும் ஓர் சிறு முயற்சியே...  இக்கட்டுரை வெள்ளத்தின் பொழுது மக்கள் பாதுக்காப்பாக இருப்பதை மைய்ப்படுத்தியே வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டுரைக்கு செல்வோம்,

வெள்ள பாதுகாப்பு பற்றி செல்வதற்கு முன்பு வெள்ள எச்சரிக்கை பற்றி சிலவற்றை பார்ப்போம்..

Flash Flood Warning (F.F.W) - திடீர் வெள்ளம் :

F.F.W என்பது திடீர் வெள்ளத்தை குறிப்பதாகும்.. இவ்வகையான  அறிவிப்பு விடுக்கும் பொழுது மக்கள் தாழ்வான வெள்ள அபாயகர பகுதிகளிலுருந்து உயரமான பாதுக்காப்பான  நோக்கி உடனடியாக நகர வேண்டும்.

பொதுவாக இவ்வகை வெள்ளம் சில மணிநேரங்களில் நடைபெறும்

இவ்வகை வெள்ளம் மழை பெய்யா இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது..

Flood Warning (F.W) - வெள்ள அபாயம்:

சாதாரண மழையினால் ஏற்படும் வெள்ளத்தை குறிக்கும் அபாய எச்சரிக்கை.. குறிப்பாய் மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பின் தரப்படும் வெள்ள அபாய எச்சரிக்கை இது..

Flood Watch:

வெள்ளம் ஏற்படுவதற்கான சூழல் சாதகமாக இருப்பதை குறிக்கும் சொல். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் வெள்ளம் வராமலும் இருக்கலாம்.

Flood Advisory:

வெள்ளம் நிகழும் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட காலத்தில் என குறிப்பிட்டு கூற உதவும் சொல். இவ்வகை அபாயத்தை கருத்தில் கொண்டு பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளவில்லையெனில் உயிர்சேதம் , பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்...

வெள்ள பாதுகாப்பு என்பது மூன்று வகைகளாக மேற்கொள்ளப்படுகிறது.

1)வெள்ளத்திற்கு முன் (Before Flood)

2)வெள்ளத்தின் பொழுது (During Flood)

3)வெள்ளத்திற்கு பின் (After Flood)

வெள்ளத்திற்கு முன்:

சில நேரங்களில் வெள்ளப்பெருக்கு முன்பாகவே கணிக்க படலாம். ஆதலால் வெள்ளத்தினை எதிர்கொள்ள நமக்கு சிறிதுநேரம் கிடைக்கும். இந்த வெள்ளத்தினை எதிர்கொள்ளும் திட்டம் சரியாக இருப்பின் பல நேரங்களில் உயிர் சேதம்,பொருட் சேதம்  தவிர்க்க உதவிகரமாய் இருக்கும்..

Communication Plan :

வெள்ளம் பற்றிய நிலைமையினை தொடர்ச்சியாய் அறிந்து கொள்ள ஓர் நபரிடம் தொடர்பில் இருப்பது அவசியம்.. பாதுகாப்பான இடம், வெள்ளம்பற்றிய பாதிப்புகள் பற்றி அறிய இவை முக்கிய பங்காற்றுகின்றன.

Emergency Kit:

அவசரகால தேவைகளான உணவு பொருட்கள் , தண்ணீர் , மருந்துகள் போன்றவை ந்தபட்சம் மூன்று நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இவை தவிர்த்து டார்ச், முதலுதவி பெட்டி, ரப்பர் காலனி,கையுறை,வானொலி என தேவையானவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Risky Area:

ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கும் பொழுது எது பாதுகாப்பான வழி, பயண முற, பயணிக்கும் இடம் என அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

Notification:

அரசு தரும் தொடர்ச்சியான வெள்ள நிலைமைகள் பற்றிய செய்திகளுடன் தொடர்பில் இருத்தல் அவசியம்..

Preparing Home :

மணற்பைகள் மூலம் நீர் உட்புகா வண்ணம் அடுக்கலாம். ஆனால் இதற்கு நாம் எதிர்பார்க்கும் நேரத்தை விட கூடுதல் நேரம் பிடிக்கும்

மழைநீர் சாக்கடையுடன் கலப்பதை தவிர்த்தல் நலம்.

Flood Insurance வீடுகளுக்கு போடுதல்

வளர்ப்பு பிராணிகள் மேல் அக்கறையுடன் கவனித்தல்.

Charge Electronics :

செல்போன்,ரேடியோ இவை முழுமையாக சார்ஜ் செய்யுங்கள்.

கூடுதல் பேட்டரிகளை கைவசம் வைத்துக்கொள்ளுங்கள்.

Leave:

வெள்ளம் உங்கள் வீட்டை சூழும் என தெரிந்தால் விரைவில் வெளியேறுங்கள்.

During Flood :

தண்ணீர் அளவும், வேகமும் அனைத்து சூழலையும் மாற்றிவிடும் வல்லமை கொண்டது. ஆதலால் வெள்ளத்தால் சிக்கினால் வானொலி , தொலைக்காட்சி மூலம் வெளியேறுவதற்கான தகவலை பெறுங்கள்.

Get to Higher Ground :

வீட்டின் உயரமான பகுதியில் தங்குங்கள். வெள்ளம் ஓடும் இடத்தில் நிற்பதை தவிருங்கள்.

Obey Evacuate Orders:

வெளியேறுவதற்கான திட்டம் அறிவிக்கபட்டால் அதை முறையாய் பின்பற்றுங்கள்.

Electrical Safety :

மின்சார பெட்டி தண்ணீரில் மீழ்கி இருந்து spark, cracking sound , popping போன்ற ஒலிகள் கேட்டால் உடனே வெளியேறுங்கள்...

Avoid Flood Water:

6 inch தண்ணீர் போதுமானது உங்களை வீழ்த்த ...

வெள்ளம் ஓடும் நீரில் வண்டிகளை ஓட்டாதீர். வண்டியினை சிறிதாக திருப்பினும் அடித்து செல்லப்படுவீர்.

நீருக்கு அடியில் பல அபாயங்கள் இருப்பதால் போதுமான பாதுகாப்பு இல்லாமல் இறங்காதீர்கள்.

After Flood :

சண்டையில் கிழியாத சட்டை போல , வெள்ளத்தால் பாதிப்படையா வீடுகள் இல்லை.  புணர்வாழ்வு (Rehabilitation) என்பது முக்கியமான விடயம்.

Stay Informed:

வெள்ளத்திற்கு பின்  நிலைமைகள் அறிந்து பயணியுங்கள்..

நீரினை கொதிக்க வைத்து குடியுங்கள்..

மின்சார கசிவு , எரிவாயு சிலிண்டர் கசிவு ஆகியவை பற்றி ஆய்வு செய்து பின் வீட்டினில் பயணிங்கள்..

Avoid Flood waters :

வெள்ளத்தால் தேங்கிய நீரில் நிற்பது பல ஆபத்துக்களை உள்ளடக்கியது.. விசப்பூச்சிகள் முதல் மின்சார பாதிப்பு, நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு வரை உள்ளது.

Avoid Disaster Area:

பாதிக்கப்பட்ட இடத்தில் அனுமதி இல்லாமல் நுழையாதீர்..

Signs:

விழிப்புணர்வு அட்டைகள் இருப்பின் அதனை மதியுங்கள்..

Wait for all clear:

தங்குவதற்காக இடம் மாற்றி அமைக்கப்பட்டால் அங்கேயே அதிகாரிகள் கூறும் வரை தங்குங்கள்..

இவ்வாறு வெள்ளத்தின் பாதிப்பினை பலவகையான முறையில் கையாள வேண்டும். ஆனால் கடலூர் வெள்ளமோ சென்னை மழையினால் ஏற்பட்ட வெள்ளமோ இந்த மேல் குறிப்பிட்ட செயல்கள் செய்யப்பட்டதா என்பதை சிந்திப்பது அவசியமாகிறது. ஊழல் , லஞ்சம் போன்றவற்றால் பதவி பெற்ற அதிகாரிகளால் நிரம்பியுள்ள இவ்வகையான துறைகளில் வெள்ளப்பாதுகாப்பு பற்றி அறிவு குறைவாகவே இருக்கும். சுற்றுச்சூழல் துறை இது போன்ற துறைக்கு மற்றுமொர் எடுத்துக்காட்டு. ஆக இந்நிர்வாகத்தின் செயல்பாடுகளை நாம் கேள்விக்கு உட்படுத்தும் பட்சத்தில் நிர்வாகம் எவ்வாறு மக்கள் நலன் என்பதில் இருந்து விலகி மக்கள் விரோதமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Pin It