காலநிலை மாற்றத்தில் பல செயற்கை வழிகளில் குறுக்கிட்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்க விஞ்ஞானிகள் நீண்ட காலம் முயன்று வருகின்றனர். பல ஆய்வாளர்கள் வளி மண்டலத்தில் ஸ்டேட்டோஸ்பியர் அடுக்கில் சல்பர் போன்ற தனிமங்களின் நுண் துகள்களைத் தூவும் முறையை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

விஞ்ஞானிகளின் திறந்த கடிதம்

சூரியனின் வெப்பம் மிகுந்த கதிர்களை நுண் துகள்களைத் தூவி தடுத்து நிறுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும் என்று முன்னாள் நாசா நிறுவனத்தின் விஞ்ஞானியும் 1980களில் புவி வெப்ப உயர்வு பற்றி முன்னெச்சரிக்கை செய்தவருமான புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர் மூத்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன் (James Hansen) தலைமையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.

தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் வெப்ப உயர்வை 2 டிகிரிக்கு கீழ் கட்டுப்படுத்த முடியவில்லை. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியைக் குளிர்ச்சியடையச் செய்ய புவிப் பொறியியல் (Geo engineering) அல்லது சூரியக்கதிர் மேலாண்மையை (solar Radiation Management SRM) நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.sunlight 638வரும் ஒன்றிரண்டு பத்தாண்டுகளில் இந்த முறை பற்றிய முடிவு எடுக்கப்பட வேண்டும். சூரியனின் கதிர்களைத் திசை திருப்பிவிட மேகங்களை அதிக பிரகாசமுடையதாக்கி அதன் மூலம் கூடுதல் வெப்பத்தை சிதறடிக்கும் வழி பற்றியும் சிந்திக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகள் வளி மண்டலத்தில் சல்பர் போன்ற துகள்களைத் தூவி பூமியைக் குளிர வைக்கும் முறையே நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர். இதன் மூலம் சூரிய கதிர்களை சிதறடித்து ஒரு டிகிரி அல்லது அதற்கும் குறைவாக புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.

இதனால் ஏற்படும் பலன் தற்காலிகமானது என்பதால் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எரிமலை வெடிக்கும்போது ஏற்படும் புகை மூட்டம் பூமியை மங்கச் செய்கிறது. இது போல இத்திட்டம் செயல்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. எல்லா அரசுகளும் இதை சரியான முறையில் மேற்கொள்வது பற்றி சந்தேகங்கள் உள்ளன. இதனால் இந்த முறை முழுமையாக இன்னும் ஆராயப்படவில்லை.

பல பில்லியன் டாலர் செலவு

என்றாலும் உலக அரசுகள் புவி வெப்ப உயர்வைக் குறைத்து காலநிலைப் பேரழிவு நிகழ்வதைத் தடுக்க இன்னமும் எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் பல விஞ்ஞானிகளிடையில் உருவாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இம்முறையை ஆராய ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆண்டிற்கு பல பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் இத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா சூழல் அமைப்பு (UNEP) வலியுறுத்தியுள்ளது.

பாதிப்புகள்

புவி வெப்ப உயர்வை 1 டிகிரிக்கு கட்டுப்படுத்துவது என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் நுண் துகள்கள் தூவப்படுவதால் ஓசோன் அடுக்கு பாதிக்கப்படலாம். சூரியனின் மூலம் கிடைக்கும் புவி ஆற்றலில் வேறுபாடுகள் ஏற்படலாம். நாடுகளுக்கு இடையில் சண்டைகள் வரலாம். திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டால் பூமியின் வெப்பம் பல மடங்கு உயரலாம்.

குறுக்குவழிகள் எதுவுமில்லை

காலநிலைச் சீரழிவுகளைத் தடுக்க மனிதன் நினைப்பது போல குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று ஐ நா சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சென் (Inger Andersen) கூறுகிறார். வெப்பத்தைக் குறைக்க இப்போது உள்ள செயல்பாடுகள் எவையும் போதுமானதாக இல்லை. அதனால் மீள முடியாத வெப்ப உயர்வில் வெந்துருக ஆரம்பிப்பதற்கு முன் பூமியைக் குளிரச் செய்ய அவசரமாக எதையேனும் செய்தேயாக வேண்டும் என்று ஜேம்ஸ் ஹேன்சன் கூறுகிறார்.

மாற்று வழியில்லை

இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் காற்று மண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இது எந்த விதத்திலும் உதவாது. இதன் விளைவுகள் பற்றி அறியப்படாத நிலையில் இத்திட்டம் தார்மீகப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பசுமைக்குடில் வாயுக்களை உருவாக்கும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்துவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. சமீபத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதை மெக்சிகோ தடை செய்தது.

இத்திட்டத்திற்கு எதிராக நானூறிற்க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகளவிலான சூரிய புவிப் பொறியியல் தடுப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இத்திட்டம் சூழலைக் காக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாமல் பூமியை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும் பணக்கார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கவர்ச்சிகரமான ஒண்று. உலகின் வெப்பநிலையை நம் விருப்பப்படி கட்டுப்படுத்தலாம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றே என்று சர்வதேச சூழல் சட்ட மையத்தின் (CIEL) காலநிலை மற்றும் ஆற்றல் பிரிவின் துணை இயக்குனர் லில்லி ஃப்யுயர் (Lili Fuhr) கூறுகிறார்.

நன்மை செய்யும் இயற்கையின் மீது மனிதன் தொடுக்கும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என்றால் நாளை பூமியின் நிலை என்னவாகும்? வெய்யிலுக்கு நிழல் தரும் குடை போல சூரியனை மறைத்து அதன் கதிர்களைத் திசை திருப்பி விடுவது சுலபமானதில்லை. சூழலை சீரழிப்பதை மனிதன் உடனடியாக நிறுத்தாவிட்டால் அழியும் பூமியில் மனிதன் இது போன்ற தொழில்நுட்பங்களைத் தேடியே ஓட வேண்டும்.

நன்றிhttps://www.theguardian.com/environment/2023/mar/01/sun-rays-cool-overheating-earth-james-hansen-scientists-letter

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் மனித குலம் இன்றுவரை அறியாத பல நூறாண்டுகள் பழமையுடைய மரம் செடி கொடிகள் அடர்ந்த காடுடன் கூடிய மிகப் பெரிய பள்ளம் (sinkhole) ஒன்றை பல மணிநேரப் பயணத்திற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர். ஜிங்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி 630 அடி/192 மீட்டர் ஆழமுள்ள இதன் அடியில் காடு அமைந்துள்ளது. இப்பள்ளம் அமெரிக்கா மிசௌரி மாகாணத்தில் மிசிசிபி நதியின் மேற்குக் கரையில் செயிண்ட் லூயி நகரில் அமைந்திருக்கும் நுழைவாயில் வளைவை (St Luiz Gateway arch) மூழ்கச் செய்யும் அளவிற்கு ஆழமானது.

குகை ஆய்வுகள்

குகைகள் பற்றி அறிவியல்ரீதியாக ஆராயும் ஆய்வாளர்கள் (Speleologists) மற்றும் பொழுதுபோக்கிற்காக இயற்கையில் கரையக்கூடிய சுண்ணாம்புக்கல், டோலமைட், ஜிப்சம் போன்ற கற்களால் அமைந்த நிலப்பகுதிகள் (karsts), குகைகளை ஆராய்பவர்கள் (Spelunkers) மே 6 2022 அன்று இந்த பிரம்மாண்டப் பள்ளம் மற்றும் அதனுள் இருக்கும் வனப்பகுதியைக் கண்டுபிடித்தனர்.giant sinhole 720அழகிய இந்த அமைப்பில் குகைக்கு மூன்று வாசல் காணப்படுகிறது. இதன் அடியில் இருக்கும் காட்டில் 131 அடி/40 மீட்டர் உயரமுள்ள பழமையான மரங்கள் பள்ளத்தின் நுழைவாயில் வரை சூரியஒளியைப் பெற கிளை பரப்பி நீண்டு நிமிர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.

இது மிக மகிழ்ச்சி தரும் செய்தி என்று அமெரிக்க தேசிய குகைகள் மற்றும் கார்ஸ்ட்ஸ் ஆய்வுக்கழகத்தின் (National Caves & Karsts Research Institute NCKRI) இயக்குனர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற குகை நிபுணர் ஜார்ஜ் வெனி (George Venni) கூறுகிறார்.

குகைகளின் தாயகம் தென் சீனா

இந்த ஆய்வுகள் அமெரிக்க ஆய்வுக்கழகம் மற்றும் சீன புவியியல் ஆய்வுக்கழக விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டன. தென் சீனா இதுபோன்ற பள்ளங்கள், குகைகள், கார்ஸ்ட்ஸ் நில அமைப்புகளின் தாயகம் என்றாலும், மனிதன் தீண்டாத அடர்ந்த காடு இதனுள் அமைந்திருப்பது இயற்கையின் விந்தை என்று வெனி கூறுகிறார். கரையும் கற்களாலான நில அமைப்புகள் (Karsts) அடித்தட்டுப் பாறைகள் (bedrocks) சிதைவதால் உண்டாகின்றன.

பள்ளங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

சிறிது அமிலத் தன்மை உடைய மழை நீர் மண்ணின் வழியாக கீழிறங்கும்போது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மேலும் அமிலத் தன்மை அடைகிறது. இது வேகமாக அடித்தட்டுப் பாறை விரிசல்கள் வழியாக செல்லும்போது அவற்றை விரிவடையச் செய்து சுரங்கங்கள், வெற்றிடங்களை உருவாக்குகிறது. காலப்போக்கில் இந்த அமைப்புகள் பெரிதாகும்போது இவற்றின் மேற்கூரை உடைந்து பெரும் பள்ளங்களை (sinkholes) உண்டாக்குகிறது.

உலகில் காணப்படும் பள்ளங்கள்

பிரதேசரீதியில் காணப்படும் புவியியல் அமைப்பு, காலநிலை, மற்ற காரணங்களால் இந்த அமைப்புகள் உருவாகும் விதம் வேறுபடுகிறது. இதுபோன்ற வியப்பூட்டும் அமைப்புகள் பல சீனாவில் உள்ளன. ஆனால் உலகில் பல இடங்களில் ஒன்றிரண்டு மீட்டர் மட்டுமே விட்டமுடைய இத்தகைய அமைப்புகள் காணப்படுகின்றன. 

புகழ்பெற்ற க்வாஞ்ஜி

எரிமலை வெடிப்பு, வேகமாக வீசும் காற்று போன்றவற்றால் உலகில் இருக்கும் 25% குகை அமைப்புகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன. புவியின் மொத்த நிலப்பரப்பில் 20% இத்தகைய அமைப்புகளால் உருவாக்கப்பட்டவையே. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம், எழில் கொஞ்சும் இதுபோன்ற அமைப்புகளுக்குப் புகழ்பெற்ற க்வாஞ்ஜி ஜுவாங் (Guangxi Zhuang) சுயாட்சி மாகாணத்தில் லே பகுதியில் (Leye county) பிங் (Ping’e) என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இப்பகுதி பள்ளங்கள், பாறைத்தூண்கள், இயற்கையில் அமைந்த நிலப்பாலங்கள் போன்றவற்றினால் செழுமையுடன் விளங்குகின்றன. இதனால் இது ஐநாவின் பாரம்பரியப் பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.giant sinkhole 2சொர்க்கத்தின் வாசல்

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பள்ளம் 1004 அடி/360 மீட்டர் நீளம், 492 அடி/150 மீட்டர் அகலம் உடையது என்று கார்ட்ஸ்ட்கள் பற்றி ஆராயும் புவியியல் கழகத்தின் மூத்த பொறியியலாளர் ஜாங் யுவங்ஹை (Zhang Yuanhai) கூறுகிறார். சொர்க்கத்தின் வாசல் (heavenly pit) என்று பொருள்படும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியில் இப்பள்ளங்கள் டியான்கெங் (tiankeng) என்று அழைக்கப்படுகின்றன.

இந்த அமைப்பின் அடிப்பகுதி மற்றொரு உலகம். ஒரு மனிதரின் தோள்பட்டையளவு உயரத்திற்கு இதன் தரை அமைந்திருக்கிறது என்று இந்த குகைப் பயணத்திற்கு தலைமை வகித்த நிபுணர் சென் லிக்சின் (Chen Lixin) கூறுகிறார். இதுபோன்ற இயற்கைப் புவியமைப்புகள் பாலைவனச் சோலை போன்றவை. விஞ்ஞானம் இதுவரை வெளியுலகிற்கு கண்டறிந்து கூறாத பல உயிரினங்கள் இந்தக் குகைகளில் வாழலாம் என்று லிக்சின் கூறுகிறார்.

பெரணிகள் வாழும் குகை

அமெரிக்கா டெக்சாசின் மேற்குப்பகுதியில் இருக்கும் ஒரு குகையில் வெப்பமண்டலப் பெரணிகள் (ferns) ஏராளமாக வளர்ந்துள்ளன. இவற்றின் ஸ்போர்களை வௌவால்கள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவச் செய்கின்றன. இந்த அமைப்புகள் பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் தருவதுடன் பூமியின் ஆழத்தில் நீர் சேகரிக்கும் தேக்கங்களாக (aquifers) செயல்படுகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய நீர் நிலைகள் 700 மில்லியன் மக்களுக்கு நீர் ஆதார மூலமாக உள்ளது.

மண்ணிற்கடியிலும் மனிதனின் கைவரிசை

ஆனால் இவை சுலபமாக அடையக்கூடிய இடங்களாக இருப்பதால் மக்களால் மாசுபடுத்தப்படுகின்றன. இவை திடக்கழிவுகளால் எளிதில் மாசடையக் கூடியவை. இதுபோன்ற நீர் நிலைகளில் இருந்து கார் பேட்டரிகள், வாகன உதிரி பாகக் கழிவுகள், பேரல்கள், பாட்டில்கள் போன்ற பொருட்கள் அகற்றப்படுவது உண்டு என்று வெனி கூறுகிறார். இப்பகுதியில் இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் இங்கு இருக்கும் பள்ளங்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆய்வுகள்

இதே ஆய்வுக்குழுவினர் முன்பு வடமேற்கு சீனாவின் ஷாங் ஷி (Shaanxi) பிரதேசத்தில் டஜன் கணக்கில் இதுபோன்ற பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். க்வாங்சி (Guangxi) மாகாணத்தில் கூட்டமாக அமைந்த, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட குகைப் பள்ளங்களை (interconnected karsts) கண்டுபிடித்தனர். இவர்களின் ஆய்வுப் பயணம் தொடர்ந்து மேலும் பல அதிசங்களை உலகிற்கு அளிக்கட்ட்டும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

உலகில் உள்ள ஆயிரக்கணக்கான பிரம்மாண்டமான அணைக்கட்டுகளில் மண் படிதல் பிரச்சினையால், வரும் 2050ல் நீர் சேமிக்கும் ஆற்றலில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக அந்த அணைக்கட்டுகள் இழந்துவிடும் என்று ஐநாவின் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஐ நா பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்திற்கான ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு இந்த நூற்றாண்டின் பாதியில் உலகின் மிகப் பெரிய அணைக்கட்டுகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் 1.65 டிரில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் சேமித்து வைக்கும் ஆற்றலை இழந்து விடும் என்று கூறுகிறது.

ஆபத்தான அளவில் நீர் சேமிப்பும் கையிருப்பும்

நீரைத் தேக்கி வைப்பதில் ஏற்படப் போகும் இந்த இழப்பு இந்தியா, சீனா, இந்தோனேஷியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள் பயன்படுத்தும் நீரின் அளவிற்கு சமமானது. இந்த அணைக்கட்டுகள் உலகம் முழுவதும் நீர் மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப் பாசனம் மற்றும் குடிநீர் ஆகியவற்றின் ஆதாரம் என்பதால் இந்த நீரிழப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகின் நீர் சேமிப்பு நாளுக்கு நாள் குறைகிறது. இது உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என்று ஆய்வு மையத்தின் இயக்குனர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் லாடிமி ஸ்மாக்ட்டின் (Vladimir Smakhtin) கூறுகிறார்.kallanai kollidamமண் மேடாகும் அணைக்கட்டுகள்

150 நாடுகளில் இருக்கும் 50,000 பெரிய அணைக்கட்டுகள் ஆராயப்பட்டபோது அவற்றின் நீர் சேமிப்பில் 16% ஆற்றலை அவை ஏற்கனவே இழந்து விட்டன என்பது தெரியவந்தது. இந்நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டின் பாதியில் இந்த இழப்பு விகிதம் 26% ஆக அதிகரிக்கும். இயற்கையில் நதி நீர், சேறு, சகதி மண்ணை சதுப்பு நிலங்கள், கடல்களில் கொண்டு போய் சேர்க்கும். ஆனால் இந்நீரோட்டத்தை அணைக்கட்டுகள் தடுத்து நிறுத்துகின்றன. இதனால் காலப்போக்கில் இங்கு வந்து படியும் மண் சேகரித்து வைக்கப்படும் நீரின் அளவை வெகுவாகப் பாதிக்கிறது.

வயதாகும் அணைக்கட்டுகள்

வருங்காலத்தில் இது மின் உற்பத்தி, நீர்ப்பாசனம், நீர் விநியோகம் போன்றவற்றிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இதனால் வெள்ளப் பெருக்குகள் அதிகரித்து அணைக்கட்டுகளின் கீழ்ப்பகுதியில் வாழும் வன உயிரிகளையும், மில்லியன் கணக்கான மக்களையும் பாதிக்கும். 2050 ஆகும்போது ஆயிரக்கணக்கான அணைக்கட்டுகள் அவற்றின் ஆயுட்காலத்தின் பாதியை முடித்து விடும் அல்லது முழு ஆயுட்காலத்தையும் முழுமை செய்திருக்கும்.

ஆபத்தை ஏற்படுத்தும் வயதான அணைக்கட்டுகள்

பெரிய அணைக்கட்டுகள் மற்றும் நீர்த் தேக்கங்கள் தரைமட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்குமாறு வடிவமைத்துக் கட்டப்படுகின்றன. இவற்றின் அகலம் 5 மீட்டர். மூன்று மில்லியன் க்யூபிக் மீட்டருக்கும் குறையாத அளவில் நீரை சேமிக்கும் ஆற்றல் உடையவையாக இவை உள்ளன. உலகில் இன்றுள்ள அறுபதாயிரம் பெரிய அணைக்கட்டுகளில் பெரும்பாலானவையும் 1960, 1970களில் ஐம்பது முதல் நூறாண்டு ஆயுட்காலத்துடன் வாழும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. இதன் பிறகு இவை ஆபத்தானவையாக மாறிவிடும். இந்த அணைக்கட்டுகளின் கீழ்ப்பகுதியில் வாழும் பாதி மக்களை இது பாதிக்கும்.

காலநிலை மாற்றத்தின் அதிதீவிரப் போக்கினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, வறட்சி போன்ற பேரிடர்கள் மலைப்பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளில் மண் அரிப்பை அதிகரிக்கும். இதனால் அணைகள் நிரம்பி வழிந்து நிலைமையை இன்னும் மோசமாக்கும். இது அணையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி விடும், நீர் சேமிப்பைப் பாதிக்கும். இதனால் ஆற்றல் உற்பத்தி குறையும்.

தீர்வு

பெரிய அணைக்கட்டுகளில் மண் படிதலைத் தடுக்க ஆய்வாளர்கள் பல வழிகளைக் கூறியுள்ளனர். அணைக்கு வரும் நீரை மாற்றுப் பாதை வழியாக கொண்டு வருவதால் படியும் மண்ணை வேறு இடத்திற்கு மாற்ற வழி ஏற்படும். அணையில் இருந்து கீழிறங்கிச் செல்லும் நீரின் பாதையை மாற்று வழியில் திருப்பி விடலாம்.

அணையை இடித்து படிந்த மண்ணை மீண்டும் நதிக்கே செல்லும்படி செய்யலாம். அணைக்கட்டு இருக்கும் இடத்திற்கேற்ப தீர்வுகளைக் கண்டுபிடித்து செயல்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இல்லையெனில் நதிகள் மரணமடைவது போல அணைக்கட்டுகளும் மண் மேடுகளாகி மனிதகுலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

பச்சைப் பசேலென்று மரங்கள், அடர்ந்த காடுகள், பூஞ்சோலைகள், வண்ண வண்ணப் பூக்கள் காணப்படும் பூமி வெளிப்புறத் தோற்றத்திற்கு அழகாகக் காட்சி தருகிறது என்றாலும், அதன் ஆழமான உட்பகுதி எரியும் தீப்பிழம்புகளாக, நெருப்புக் கோளமாக உள்ளது. இதன் வெளிப்பாடே எரிமலைகள். ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’, ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்று பூமி போற்றப்படுகிறது. ஆனால் இதன் உட்பகுதி இன்றும் நெருப்பாக உள்ளது.

பூமியின் மேற்பகுதி பல கண்டங்கள் அல்லது தகடுகளால் ஆனது. இவை அனைத்தும் எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. முக்கியமான 15 தகடுகள் கண்டங்களை நகர்த்தும் ஆற்றல் பெற்றவை. இவற்றில் இந்தியப் பெருங்கண்டம் வடகிழக்குப் பகுதியை நோக்கி மெல்ல நகர்கிறது. கடற்கரைப் பகுதிகளில் இருக்கும் தகடுகளும், நிலப்பகுதியில் இருக்கும் தகடுகளும் ஒன்றோடொன்று மோதும் பகுதிகளில் எரிமலைகள் அதிகம் காணப்படுகின்றன. பசுபிக் பெருங்கடல், வட அமெரிக்கா, தென் அமெரிக்காவின் மேற்குப்பகுதி, ஜப்பானின் கடற்கரைப் பகுதி, இந்தோனேஷியாவின் கடற்கரைப் பகுதி போன்றவை இவற்றில் முக்கியமானவை. இவற்றின் வடிவம் ஒரு குதிரை லாடம் வடிவத்தில் உள்ளது. இப்பகுதி புவியியல் ரீதியாக ‘நெருப்பு வளையப் பகுதி’ (Ring of fire) என்று அழைக்கப்படுகிறது. இங்கு கண்டங்களின் மோதல் காரணமாக எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இது தவிர அட்லாண்டிக் பெருங்கடலின் மத்தியப் பகுதி, பசுபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதி ஆகியவற்றில் பிளவுகள் உருவாகின்றன. இப்பிளவுகள் (ridges) கடலின் மத்தியில் ஏற்படுகின்றன. இவை குறைந்தபட்சம் 50,000 கி.மீ நீளமுடையவையாக உள்ளன. இவற்றால் கடற்கரையின் பகுதி இரண்டாகப் பிளந்து அங்கு புதிய தரைப் பகுதி உருவாகிறது. இங்கும் எரிமலைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பூமியின் உட்பகுதிக்குள் செல்லச் செல்ல அங்கு பாறைக் குழம்புகள் காணப்படுகின்றன. இதன் வெப்பநிலை மிக அதிகம். இதனால் வெப்ப சுழற்சி (thermal convention) ஏற்படுகிறது. பூமியின் ஆழத்தில் இருக்கும் இந்த எரிகுழம்பு மேலும், கீழுமாக சுழலும்போது, வெளிநோக்கி அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியின் மேற்பகுதியில் நகர்ந்து கொண்டிருக்கும் கண்டங்கள் மோதி எரிமலைகள் உருவாகின்றன.volcano 720கண்டங்கள் ஒன்றோடொன்று மோதும்போது அவற்றில் கடினமான பகுதி கீழாகவும், லேசானது மேலாகவும் செல்கின்றன. உள்நோக்கிச் சென்று பகுதி வெப்பத்தால் உருகிய நிலையில் குழம்புடன் வெளிநோக்கிப் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. கடற்பகுதியில் ஏற்படும் பிளவுகளால் எரிமலைகள் ஏற்பட்டு அவை தீவு போல மாறுவதும் உண்டு. கடலின் நடுவில் ஏற்படும் எரிமலைகளில் சிலிகா என்ற தாதுப்பொருள் மிகக் குறைவாக இருக்கும். இரும்பு, மக்னீசியம் போன்ற பொருட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதனால் எரிகுழம்பின் திரவத்தன்மை நீர் போல உள்ளது. பூமியின் தரைப்பகுதிக்குள் இருக்கும் வரை இந்தக் குழம்பு மேக்மா என்றும், பூமிக்கு மேல் வந்தபின் இது லாவா என்றும் அழைக்கப்படுகிறது. இக்குழம்பு சுமார் 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பம் கொண்டதாக இருக்கும்.

சிலிகா குறைவாக உள்ள எரிமலைகள் மறுபடி அதே இடத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது. இவற்றில் எரிமலைக் குழம்பு துவாரங்கள் வழியாகவே வெளிவரும். இது ஆங்கிலத்தில் volcanic vent என்று அழைக்கப்படுகிறது. இத்துவாரங்கள் வழியாக அவ்வப்போது எரிமலைக் குழம்பு கக்கிக் கொண்டே இருக்கும். இந்தத் துவாரங்கள் புனல் போன்ற ஒரு வடிவத்தில் காணப்படுகிறது. இவ்வாறு வெளியில் வரும் குழம்பு அடுக்குகளாக வெளிவருகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் வேறு அடுக்குகள் தோன்றுகின்றன. இவை எல்லாம் சேர்ந்து ஒரு கவசம் போல மாறுகிறது. இதனால் இவ்வகை எரிமலைகளுக்கு (shield volcano) என்று பெயர். இதனால் இவ்வாறு உருவாகிய எரிமலைகள் எளிதில் ஒருவர் மேலே ஏறிச் செல்லும் வகையில் கேடயம் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும்.

அதிக பாதிப்பை உருவாக்கும் எரிமலைகள் ஆங்கிலத்தில் composit valcanos என்று அழைக்கப்படுகின்றன. இவற்றின் எரிமலைக் குழம்பில் சிலிகாவின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால் இதன் கடினத் தன்மை சுலபமாக நீர் போலப் பாயமுடியாத அளவு கடினமாக இருக்கும். இவற்றில் அலுமினியம் போன்ற தாதுக்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால் இத்தகைய எரிமலைகளில் எரிமலைக் குழம்பு அதிக அளவில் வெளிவருவதில்லை. ஆனால், இவை வெளியே தரைப்பகுதியில் இருக்கக்கூடிய பாறைகளை உடைத்துக் கொண்டு மிகுந்த வேகத்துடன் வெளிவருகின்றன. சிறிதளவே எரிமலைக் குழம்பு வெளியில் வந்தாலும் இது பீறிட்டு வெளிவரும். இதனால் ஏற்படும் பாதிப்பு அதிகம். இவை கண்டங்களின் மோதலால் ஏற்படுகின்றன. பசுபிக் பெருங்கடலின் தரைப்பகுதியில் அதிகம் உள்ளன. இவை 50 முதல் 250 கி.மீ வரை ஆழத்தில் உருவாகக் கூடியவை. அதனால் பீய்ச்சியடிக்கப்படும் எரிமலைக் குழம்பின் வேகம் மிக அதிகமாக இருக்கும்.

அதிக வேகத்துடன் குழம்பு வெளியே வருவதால் உள்ளே இருக்கும் வாயுக்களையும் இது வெளியே சுமந்து கொண்டு வருகிறது. இத்தகைய எரிமலை சீற்றத்தின்போது உருவாகும் சத்தம் பல மைல்கள் தூரத்திற்குக் கேட்கக் கூடியதாக இருக்கிறது. இவற்றில் எரிமலைக் குழம்பு துவாரங்கள் வழியாக வெளியே வராமல் முட்டிக்கொண்டு பீறிட்டு வருவதால் தரையின் பகுதி ஒரு மலை போல உப்பி விடுகிறது. இத்தகைய எரிமலைகளின் பக்கவாட்டுப் பகுதிகள் எல்லாவற்றிலும் ஒரு மரத்தின் கிளைகளைப் போல வழிந்து அதன் வழியாக எல்லாம் எரிமலைக் குழம்பு ஒழுகும். இந்த எரிமலைகள் மிக அதிக உயரமானவையாக உருவாகின்றன. எடுத்துக்காட்டு இந்தோனேஷியாவில் உள்ள டாம்ப்போலோ, கரகாட்டோ, எரிமலை மெராபி.

பூமியின் ஆழத்தில் எங்கோ புதையுண்டு கிடக்கும் தீப்பிழம்புப் பாறைகளையும், எரிகற்களையும் பூமியின் தரைப்பகுதிக்குக் கொண்டு வரும் அற்புத இயற்கை நிகழ்வே எரிமலை. இது சாதாரணமான ஓர் இயற்கை நிகழ்வு என்பதில் இருந்து, ஓர் இயற்கைப் பேரிடராக மாறுவதற்கும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக அமைகின்றன. எரிமலை பாதிப்பு உள்ள நாடுகளான இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், இத்தாலி, வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரைப் பகுதி, கரீபியன் தீவுகள், ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் 2010 முதல் இவை இயற்கைப் பேரிடராக அறிவிக்கப்பட்டன. 2010ல் ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை பல மைல் தூரத்திற்குப் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் விமானங்கள் செல்லும் வான்பாதைகள்கூட பாதிப்புக்கு உள்ளாயின. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. வணிகரீதியிலான ஒரு விமானம் 10 முதல் 12 கி.மீ உயரத்தில் பறக்கக் கூடியது. அந்த அளவு உயரத்தில் இந்த எரிமலை வெடிப்பால் உருவான வாயுக்களின் கலவை புகைமண்டலமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. விமான என்ஜின்களே பாதிக்கப்படும் அளவிற்கு இது இருந்தது. பொருளாதார இழப்பும் பெரிய அளவில் ஏற்பட்டது. இது தவிர புகையில் அடங்கியிருந்த சாம்பல் துகள்கள் பல கிலோமீட்டர் வரை பரவியது. எரிமலை வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் வசித்த மக்களால் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதனால் பலர் உயிரிழந்தனர். பயிரிட்ட பயிர்கள் மீது இந்தச் சாம்பல் ஒரு போர்வை போல மூடிக்கொண்டது. அவை முற்றிலுமாக அழிந்தன. பல ஆண்டுகளுக்கு இந்தப் பகுதிகளில் பயிர் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது. விலங்குகளும் பாதிக்கப்பட்டன. 500 முதல் 1400 டிகிரி வரை வெப்பத்துடன் எரிமலை வெடித்துச் சிதறும்போது பரவி அவை செல்லுமிடங்களில் எல்லாம் அழிவை ஏற்படுத்தியது. இப்பாதிப்புகளில் இருந்து எதுவும் எளிதில் தப்ப முடியவில்லை.

உலக அளவில் நடந்த மிகப் பெரிய 10 எரிமலைப் பேரிடர்களை நோக்கினால், அந்நிகழ்வுகள் எல்லாவற்றிலும் 10,000 முதல் 40,000 பேர் வரை உயிரிழக்க இப்பேரிடர்கள் காரணமாக இருந்துள்ளன. இந்தோனேஷியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் ஏறக்குறைய 92,000 பேர் உயிரிழந்தனர். எரிமலை இருக்கும் இடங்களுக்கு அருகில் இருந்த கிராமங்கள் பலவும் முழுமையாக எரிமலையால் அழிக்கப்பட்டன. எல்லா எரிமலைகளையும் இது போல பேரிடர்களாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 2004ல் சுனாமிக்குப் பின் உடனே எரிமலை வெடித்தது. ஆனால், அதன் சீற்றம் மிகவும் குறைவாக இருந்தது. பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த எரிமலை கடலோரப் பகுதியில் இருந்து விலகி கிழக்குப் பகுதியில் தள்ளி அமைந்திருந்தது. குடியிருப்புப் பகுதிகள் எதுவும் அங்கு இல்லை. பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அதனால், ஓர் எரிமலையின் அருகாமையில் குடியிருப்புப் பகுதிகள் இருக்கும் நிலை, எந்த வகையான வெடிப்பு ஏற்படுகிறது, எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வருகிறது போன்றவற்றைப் பொறுத்தே ஓர் எரிமலை வெடிப்பு ஒரு பேரிடராக மாறுகிறது.

பூமியில் எரிமலைகள் வெடிக்கக்கூடிய பகுதிகளை புவியியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதில் செயற்கைக் கோள்களின் பங்கு மகத்தானது. ஒரு எரிமலை எங்கு உருவாகும், அது அவ்வாறு உருவாவதில் இருந்து எவ்வாறு கண்காணிப்பது போன்ற துறைகளில் அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், முன்கூட்டியே எரிமலை வெடிப்பைப் பற்றி கணித்துக் கூறுவது கடினம். வளிமண்டலத்தில் உள்ள மின்காந்தத் துகள்களில் இது சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஓர் எரிமலை வெடிப்பதற்கு முன் அது சில வாயுக்களை வெளியிடுகிறது. இந்த வாயுக்களை முன்கூட்டியே கண்டுபிடித்து அதன் மூலம் எரிமலை வெடிக்கும் அபாயம் உள்ளதா என்பதைப் பற்றி முன்கூட்டிக் கூறுவது என்பது பற்றிய ஆய்வுகள் நடைபெறுகின்றன. இந்த வாயுக்களைக் கொண்டு பூமியின் காந்த அதிர்வுகளை வைத்து ஓர் எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கூற முடிந்தாலும் கூட, வெடித்தபின் அது எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி இன்னமும் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. அமெரிக்காவிலும், இன்னும் பல நாடுகளிலும் சுனாமி வருவதற்கு முன் கொடுக்கப்படும் முன்னறிவிப்புகள் போல எரிமலையைப் பற்றியும் முன்னறிவிப்புகள் தரப்படுகின்றன. வானிலை அறிக்கை சொல்வதைப் போல எரிமலை வெடிப்புகள் பற்றியும் அறிக்கைகள் வழங்கப்படுகின்றன.

எரிமலைகள் உருவாகக் கூடிய இடங்களில் சில நிறங்கள் கொடுக்கப்பட்டு அவற்றின் தீவிரம் எடுத்துக் காட்டப்படுகிறது. சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருந்தால், அவை மிகத் தீவிர பாதிப்புகளை உருவாக்கக் கூடியவை என்று பொருள். மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சாதாரணமானது, என்றாலும் அது பற்றி சிறிய முன்னெச்சரிக்கை தேவை என்று பொருள். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வெடித்துச் சிதறி மறைந்துபோன எரிமலைகள் பச்சை போன்ற நிறங்களில் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய எரிமலைகள் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

பூமியின் மேற்பகுதியில், எந்தப் பகுதிகளில் எரிமலை வரக்கூடிய வாய்ப்பு உள்ளது, அது எந்த அளவுக்குத் தீவிரமானது என்று கணித்திருந்தாலும், சீற்றம் வர வாய்ப்பு இருக்கிறது என்ற அளவில்தான் முன்னெச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. எந்த அளவில் அதன் சீற்றம் இருக்கும், பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்படும் என்பது பற்றி முன்கூட்டியே அறிவிக்கும் அளவு நாம் இன்னும் முன்னேறவில்லை. இது பற்றி ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன.

எந்த ஒரு இயற்கை நிகழ்வும் மனிதனுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. நிலநடுக்கம் ஏற்படும்போது வலுவான கட்டிடங்களைக் கட்ட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது. சுனாமி வரும்போது கடலோரத்தில் கடலாத்திக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. இருக்கும் காடுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியது.

எந்த ஒரு இயற்கைப் பேரிடர் என்றாலும் அதன் பிற்கால விளைவுகளாக பல நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன. பல சேதங்களை இவை ஏற்படுத்தினாலும் இவற்றால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பில் 70%க்கும் மேலான பகுதி எரிமலைகளால்தான் உருவாகியுள்ளன. இவை இல்லை என்றால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உருவாகியிருக்க முடியாது. ஹவாய் தீவுகள் தோன்றியே இருக்காது.

இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் மகாராஷ்டிராவில், மும்பை முதல் குஜராத் வரை உள்ள பகுதிகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகளால் உருவானவையே. இது ஆங்கிலத்தில் Deccan drafts என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மலைப்பகுதிகள் எல்லாம் எரிமலைக் குழம்பினால் உருவான பஸால்ட் என்ற ஒருவகைப் பாறைகளால் உருவானவையே. இவற்றை உடைத்தே அஜந்தா எல்லோரா குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 5 லட்சம் சதுர கி.மீ அளவு எரிமலைகள் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் உருவாகியுள்ளன. இப்போது இப்பகுதிகள் பூமியின் தரைப்பகுதிகளாக உள்ளன. எரிமலைகள் இங்கு தோன்றியதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லாதவிதத்தில் இப்பகுதிகள் முழுவதும் மக்களின் ஆக்ரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திற்கு அடுத்து வந்த கிரிக்கேசியஸ் காலகட்டத்தில் எரிமலைகள் இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவின் சில பகுதிகளில் அதிக சீற்றத்துடன் காணப்பட்டன. இவை இவ்வாறு தொடர்ச்சியாக 300,000 ஆண்டுகள் சீற்றத்துடன் இருந்தன. இந்த அளவுக்கு உருவான எரிமலைகள் டைனோசர்களையே அழித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தக்காண பகுதியில் பசால்ட் எரிமலைப் பாறைகளால் கருப்பு பருத்தி மண்வகை (black cotton soil) உருவானது. இங்கு பருத்தி வகைகள் அதிகம் விளையக்கூடிய சத்துள்ள மண் உள்ளது. ரோமானிய ஆதிக்கம் மிகுந்திருந்த காலத்தில் இத்தாலியில் எரிமலைகள் ஒட்டியிருந்த பகுதியில் நாகரீகம் தோன்றியது. இதற்குக் காரணம் எரிமலைக் குழம்பால் உருவாகும் மண் வளம் நிறைந்தது என்பதே. விளைச்சல் நன்றாக இருக்கும். எரிமலைகள் தோன்றி மறைந்த நாடுகளில் கனிமவளம் அதிகம் காணப்படுகிறது. எரிமலைகள் பூமிக்குள் பல மைல்கள் உள்ளே இருக்கும் தாதுப்பொருட்களை வெளியே கொண்டு வந்து சேர்க்கின்றன. ஆந்திராவில் அனந்தபூர் மாவட்டத்தில் வஜ்ரக்ரூர் பகுதியில் வைரம் கிடைப்பதற்கும் எரிமலைகளே காரணம்.

எரிமலைக் குழம்பை வெளிக்கொண்டுவரும் குழாய்ப் பாதைகளை கின்டர்லைக் குழாய்கள் என்று புவியியல் வல்லுநர்கள் அழைக்கின்றனர். இவை புனல் வடிவம் உள்ள குழாய்கள். பூமித்தாய் தனக்கு ஏற்படும் சிறு அசதியை எரிமலை என்ற நிகழ்வின் மூலம் வெளிப்படுத்தினாலும், அவை கூட மனிதனுக்கு நன்மைகள் பல செய்வதாக அமைகின்றன. இயற்கையை நாம் சிறிதுசிறிதாக அழிக்கும்போது அதனால் ஏற்படக்கூடிய பேரிடர்கள் எந்த அளவுக்கு அதே இயற்கைச் செல்வங்களை அழிக்கின்றன என்கிற பரிதவிப்பை நமக்கு ஏற்படுத்துவதும் இது போன்ற பேரிடர்கள்தான். பூமிக்குள் நடக்கக்கூடிய சிறு நிகழ்வாக இவை இருந்தாலும், இவை வெடித்துச் சிதறி டைனோசர்களை அழித்ததால்தான் மனித சமுதாயம் தோன்றியது. டைனோசர்களுடன் மனிதனால் நிச்சயமாகப் போட்டி போட்டு வாழ முடியாது, வாழ்ந்திருக்கவும் முடியாது. இயற்கையின் எல்லா நிகழ்வுகளும் மனிதனை வாழ வைப்பதற்கே என்பதை இவை உணர்த்துகின்றன. 

எரிமலை வெடிப்பு என்பது காணக் கண் கோடி வேண்டும் என்று சொல்லுமளவுக்கு ஓர் அற்புத நிகழ்வு. அதன் சீற்றத்தை நேரில் பார்த்தவர்களுக்கு அது ஏற்படுத்திய இனம் புரியாத பேரானந்தத்தை உணர முடியும். வானத்தின் வர்ணஜாலங்கள் போல இவை பூமியின் வர்ணஜாலம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தோன்றி, இருந்து, பின்னர் மறைகிறது. ஆனால், அவை பல பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன. எரிமலைகள் நமக்குத் தந்த பாடங்களை, அவை தரும் நன்மைகளை மனித சமுதாயத்தின் நன்மைக்காகப் பயன்படுத்தினால் மேலும் நாம் வளரலாம். வாழலாம்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It