அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ம். க்கும். க்குக்கு க்கும். வணக்கம். நா கரிச்சான் பேசுறேன்.
பனிக்காலமில்லையா, தொண்டை கொஞ்சம் கரகரப்பா இருக்கு. உலகம் முழுக்க எத்தனையோ சூழல் நிகழ்வுகள் நடக்கின்றன. எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கணும்கிறதுதான் என்னோட ஆசை. ஆனா பாருங்க, அது ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னதான் இணையம், டிவி, ரேடியோ, நாளிதழ்னு வந்தாலும் மனுஷ அக்கறைகளை வெளிப்படுத்தும் சேதிக எல்லாம் எங்கோ மூலையில, பற்றாக்குறை இடத்தை நிரப்புறதுக்குத்தான் போடறாக. அதுக்காக அதையெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கலாமா. அதான், கொஞ்சம் விசனப்பட்டு நானே தேடிட்டேன். வாருங்க, மேல படிப்போம்...
2004ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கிய ஆழிப் பேரலையை (சுனாமி) யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் இது போன்ற பேரழிவுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கையாகச் செயல்படுவதே வளர்ச்சிக்கு அடையாளம். இதை சிறப்பாக வெளிப்படுத்துகிறது கேரளாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழிப் பேரலை அருங்காட்சியகம். ஆழிப் பேரலைக்கு இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் அருங்காட்சியகம் இது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆலப்பாடு கிராமத்தில் ரூ. 10 லட்சம் செலவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 2004 ஆழிப் பேரலையில் அதிக மக்களை பலி கொடுத்தது ஆலப்பாடு கிராமம்தான்.
ஆழிப் பேரலையின் ஆபத்துகளை விளக்கும் இந்த அருங்காட்சியகம், ஆழிப்பேரலை மூன்றாவது நினைவு நாளை ஒட்டி (26 டிசம்பர் 2007) திறக்கப்பட்டது. ஆழிப் பேரலை எச்சரிக்கைகளுக்கு எப்படி எதிர்வினையாற்ற வேண்டும், சமிக்ஞைகள் மூலம் எதிர்வரும் ஆபத்தின் அளவை எப்படி உணர்ந்து கொள்வது என்று இங்கு விளக்கப்பட்டுள்ளது என்று அருங்காட்சியக ஒருங்கிணைப்பாளர் பிரீதா ஜார்ஜ் தெரிவிக்கிறார். கடலோர மண்டலங்கள் பற்றிய விவரம், கிராம வாழக்கை, ஆழிப் பேரலைக்கு முந்தைய ஆலப்பாடு ஊரின் தோற்றம் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டிசம்பர் 26 நிகழ்வுகளை காட்சிப்படுத்தும் தனிசுவர் பகுதி குழந்தைகளுக்காக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆழிப் பேரலையில் தப்பிய குழந்தைகளின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆழிப் பேரலைக்கு முன் கடலில் ஏற்படும் மாற்றங்களை காட்சிப்படுத்தும் தொடுஉணர் திரைகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமானது என்று உணர்த்துகிறது. இது போன்ற முயற்சிகள் சமூகத்துக்கு பெரும் பயனளிக்கும். அருங்காட்சியகம் அமைக்க ரூ. 10 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொன்னேன் இல்லையா, எந்தச் செலவும் இல்லாம, சுற்றுச்சூழலில் கலந்துள்ள நச்சைக் கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புது முறையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன?
ஆபத்தான டி.டி.ற்றி. நச்சு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் டி.டி.ற்றி. எனும் பூச்சி மருந்து உலகெங்கும் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த டி.டி.ற்றி. நச்சு தாய்ப்பாலிலும் கலந்துவிட்டது. இன்னமும்கூaட உலகின் பல பகுதிகளில் இந்த பூச்சிக்கொல்லி நச்சு உலவி வருகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் டி.டி.ற்றி. நச்சு கலந்திருக்கிறதா என்பதை அறிய இனிமேல் பெரிய ஆய்வுகள் செய்யத் தேவையில்லை. பறவைகளின் முட்டைகளைக் கண்காணித்தாலே போதும். பறவை முட்டை ஓடுகளில் வெள்ளைக்குப் பதிலாக சிவப்பு-பழுப்பு புள்ளிகள் காணப்பட்டால் அப்பறவைகளின் உணவில் டி.டி.ற்றி. கலந்துள்ளது என்பதை அறியலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ராப்டர் எனப்படும் ஊனுண்ணி கழுகு இன பறவைகளிடம் ஆக்ஸ்போர்ட்-கார்டிப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்துள்ளது.
டி.டி.ற்றி. மற்றும் கால்சியம் குறைபாடு காரணமாகவே பறவை முட்டை ஓடுகளில் புள்ளிகள் தோன்றுகின்றன. முட்டை ஓடுகள் உருவாகக் காரணமாக இருக்கும் கால்சியத்தை இந்தப் பூச்சிக்கொல்லி தடைசெய்வதால், புள்ளிகள் தோன்றுகின்றன. சுற்றுச்சூழலில் டி.டி.ற்றி. மாசு எவ்வளவு கலந்துள்ளது என்பதை கண்காணிக்க பறவை முட்டை ஓடுகளை ஆராயும் இந்த முறை பாதுகாப்பானது, செலவு மிகக் குறைவு. ராப்டர் பறவைகள் இரையின் எலும்புகளையும் உண்பதால், அவற்றுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, அவற்றின் உடலில் டி.டி.ற்றி. நச்சு சேர்ந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.
ஏற்கெனவே, கால்நடைகளின் உடலில் கலந்துள்ள பூச்சி மருந்துகள் காரணமாகவே இந்தியாவில் பிணந்தின்னி கழுகுகள் இனம் அதிவேகமாக அழிந்து வருகிறது. இந்த மருந்துகள் கால்நடைகளின் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பயன்படுத்தப்பட்டன. இப்போது டி.டி.ற்றி. நச்சு ராப்டர் பறவைகளின் உடலில் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டி.டி.ற்றி. உள்ளிட்ட நச்சு பூச்சிக்கொல்லிகள் நாம் சாப்பிடும் தானியங்களின் மீது கொட்டப்படுகின்றன. அவை எந்த விளைவை ஏற்படுத்தும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் நச்சு என்றால், நாம் சுவாசிக்கும் காற்றை டீசல் மாசுபடுத்துகிறது. அதன் பயன்பாட்டை குறைக்க என்ன செய்யலாம்?
சுற்றுச்சூழல் வரி
டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தில்லி மாநில அரசு டீசல் எரிபொருளுக்கு சுற்றுச்சூழல் வரி விதிக்க முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு 25 பைசா வரி விதிக்கப்படும். இந்த வரி மூலம் திரட்டப்படும் தொகை, தில்லியின் 'தூய்மை காற்று செயல்திட்ட'த்துக்கு நிதியாக பயன்படுத்தப்படும். இந்த வரி மூலம் ரூ. 48 கோடி திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தில்லி மாநிலத்தில் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும், தில்லியின் காற்று தரத்தை டீசல் மாசுகள் பாதிக்கும் போக்கை குறைக்கும் வகையிலும் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது.
தனி வரி விதிக்கப்பட்டாலும்கூட, டீசலின் விலை அதிகரிக்கவில்லை. பெட்ரோலைவிட டீசல் விலை 30 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது. வாகனங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குறிப்பிட்ட சாலைகள், பகுதிகளை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் காரில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு குறைவாகச் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரங்களில் பெருகி வரும் வாகன நெரிசல், மாசுபடுத்துதலைக் குறைக்க இது போன்ற கட்டுப்பாடுகள் அவசியம். இந்தியாவில் தில்லியில் முன்மொழியப்பட்டது போன்ற சிறு முயற்சிகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன. இது போதாது, இன்னும் பெருக வேண்டும். அப்படிப்பட்ட பெரும் முயற்சிகளில் ஒன்று மும்பையில் நடந்துள்ளது.
ஒரு மணி நேர மின்நிறுத்தம்
நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த மகாராஷ்டிரத் தலைநகர் மும்பையில் ஒரு மணி நேரம் மின்பயன்பாட்டை நிறுத்தும் பிரசாரம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை இந்த பிரசார செயல்பாடு நடந்தது. பகல் நேரத்தில் நடந்தால் தெரியாது என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தப் பிரசாரம் நடைபெற்றுள்ளது. இந்த பிரசாரத்துக்கு 'பட்டி பந்த்' என்று பெயர் சூட்டப்பட்டது. மும்பையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் புவி வெப்பமடைதல் விழிப்புணர்வுக்காக இப்பிரசாரத்தை மேற்கொண்டனர்.
இந்த பிரசாரத்தின் முக்கிய அம்சமாக வீட்டு மின்சார பயன்பாட்டை ஒரு மணி நேரம் நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. நவி மும்பை, கல்பாதேவி பகுதி மக்கள் இந்த பிரசாரத்துக்கு பெரும் ஆதரவு அளித்தனர். இதன்மூலம் சர்ச் சேட், போரிவிலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் 78 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டது என்கிறார் பிரசாரத்தை ஒருங்கிணைத்த நீல் குரேஷி. கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் 'பூமி நேரம்' என்ற பெயரில் பிரசாரம் நடத்தப்பட்டது. அப்போது சிட்னி நகரில் 20 லட்சம் மக்கள் மின் பயன்பாட்டை நிறுத்தியதன் மூலம், 10 சதவிகித எரிசக்தி பயன்பாடு குறைந்தது. அதனால் ஈர்க்கப்பட்டு அதேபோன்ற பிரசாரத்தை மும்பையில் நடத்த நீல் குரேஷி, கெய்த் மேனன், ருஸ்தம் வார்டன், ஷிலாதித்ய சக்கரவர்த்தி ஆகிய நான்கு இளைஞர்கள் தீர்மானித்தனர்.
''ஒவ்வொரு தனி நபரும் மாற்றத்தை உருவாக்க முடியும்'' என்று வலியுறுத்தி மூன்று மாதங்களுக்குப் பிரசாரம் செய்தனர். மின் ரயில்கள், பேருந்துகள், சாலைகள் என மக்கள் கூடுமிடங்களில் பிரசாரம் நடத்தப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் தலா 10,000 பேரிடம் பேசியிருப்போம் என்கிறார் நீல் குரேஷி. மின் பயன்பாட்டை குறைப்பது மட்டுமின்றி மனிதச் சங்கிலி, மெழுகுவர்த்தி பேரணிகள் போன்றவற்றையும் அவர்கள் நடத்தினர். இந்த இளைஞர்களின் பிரசாரத்துக்கு ஆதரவு அளிக்குமாறு மும்பை மேயர் சுபா ரால், நகராட்சி ஆணையர், மும்பை காவல்துறை ஆணையர் ஆகியோரும் கோரிக்கை விடுத்து ஆதரித்தனர். அதிகார வர்க்கத்தினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்கிறார்களே. அந்த வரை பாராட்ட வேண்டியதுதான்.
இப்போ நான் பூச்சி பிடிக்க போவணும். அதுக்குப் பெறவு சேதிகள பிடிச்சுக்கிட்டு அடுத்த மாசம் வாரேன்.
- ஆதி
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகின் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கை 2009 உடன் காலாவதி ஆகும் நிலையில், புதிய உடன்படிக்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை இந்தோனேசியத் தீவான பாலியில் கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் நாம் இருக்கிறோம். கோபன்ஹேகனில் 2009ம் ஆண்டு நடைபெறும் மாநாட்டில் புதிய உடன்படிக்கை இறுதி செய்யப்படும்.
இந்த நிலையில் பாலி பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றதாக இந்திய பிரதிநிதிகளும், வளரும் நாட்டு பிரதிநிதிகள் சிலரும் தெரிவிக்கின்றனர். இது எந்த அளவு உண்மை?
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான சர்வதேச கூட்டு முயற்சிகளை ஒருங்கிணைக்க ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுக்கு இடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகள் இருக்க வேண்டும் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த நோக்கத்தை அடைவதில் அமெரிக்கா, கூட்டாளி நாடுகள் எப்பொழுதுமே தடையாக நிற்கின்றன. நோபல் பரிசு பெற்ற அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர் கியோட்டோ உடன்படிக்கை அமெரிக்க பிரதிநிதிகள் குழுவுக்கு தலைமை வகித்துச் சென்றபோதிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை.
கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாதது மட்டுமின்றி, வாயு வெளியீட்டு கட்டுப்பாடுகளை அமெரிக்கா எந்தக் காலத்திலும் ஏற்கவில்லை. பாலி பேச்சுவார்த்தையிலும் அதுதான் நடந்தது. வளரும் நாடுகளுக்கு வரையறுக்கப்பட்ட எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இது பற்றிய கருத்து பாலி தீவு வரைவு அறிக்கையில் இடம்பெற்ற போதும், இறுதி அறிக்கையில் அது ஒரு அடிக்குறிப்பாக மட்டுமே இடம்பெற்றுள்ளது. கட்டுப்பாடுகள் புறந்தள்ளப்பட்டுவிட்டன.
கியோட்டோ உடன்படிக்கையை ஏற்க மறுத்த அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகள் அளவிடத்தக்க கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அப்பொழுது வலியுறுத்தியது. பாலி பேச்சுவார்த்தையிலும் அமெரிக்க இதையே வலியுறுத்தியது. கடைசியாக, மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் வளரும் நாடுகள் பங்கேற்கும், அது அளவிடத்தக்கதாக அமையத் தேவையில்லை என்று இந்தியா வலியுறுத்திய கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
உலகை கடுமையாக மாசுபடுத்தி வரும் வளரும் நாடுகள், மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் நேரடியாகப் பங்கேற்கத் தயாராக இல்லை. மாறாக, வளரும் நாடுகளில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதை போலிக் காரணமாகக் கூறி வருகின்றன. வளரும் நாடுகளின் மீது காலனி ஆதிக்கம் செலுத்தி இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களை வளர்த்துக் கொண்ட மேற்கு நாடுகள், 21ம் நூற்றாண்டிலும் அதைத் தொடர முயற்சிக்கின்றன.
பாலித் தீவு பேச்சுவார்த்தையும் அதையே பிரதிபலிக்கிறது. வளரும் நாடுகளின் பிடிவாதத்தால் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை தொடக்கப்புள்ளியில் நிற்பது போலவே தெரிகிறது. வளரும் நாடுகளின் இந்த ஆதிக்க உணர்வை ஜி 77 கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் இணைந்து வளரும் நாடுகள் எதிர்க்க வேண்டும்.
ஆனால் அமெரிக்க பிடிவாதத்தால் தெளிவான வரையறைகளை உருவாக்காமலேயே பாலி பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. இதை வெற்றி என்று கூறத் தோன்றவில்லை.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா எல்லா காலமும் மறுத்து வருகிறது. இந்தியாவும் அந்த வழியையே பின்பற்றுகிறது. அதைத்தான் பாலி பேச்சுவார்த்தையிலும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையின் முடிவுகள் அதையட்டியே அமைந்துள்ளன. இதை வெற்றி என்று கூற முடியுமா?
காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. ஆனால் அதை மட்டுப்படுத்த வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேவையில்லை. இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும் என்பது உயிர் போகத்தான் போகிறது, மெதுவாக சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று கூறுவது போல இருக்கிறது.
இதுபோன்ற நமது மனப்பான்மைகள் மாறவேண்டும். காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான். அதிலும் குறிப்பாக ஏழைகள், ஒடுக்கப்பட்டோர்தான் அதிகமும் பாதிப்பைச் சந்திப்பர். ஏற்கெனவே பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகிவரும் விளிம்புநிலையில் உள்ளோர், சுற்றுச்சூழல் ரீதியிலும் ஒடுக்கப்படுகின்றனர். இது பற்றி சொல்லாடலை உருவாக்கி, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுதத வேண்டும்.
(1992 ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ரியோ பூமி மாநாடு என்றழைக்கப்பட்ட மாநாட்டில் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1997ம் ஆண்டு கியோட்டோ உடன்படிக்கை உருவானது.)
இ.பி.டபிள்யு.
காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்த உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.பி.சி.சி. நான்காவது மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு கூட்டப்பட்ட பாலி பேச்சுவார்த்தை 'எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மை'யையே வெளிப்படுத்துகிறது. ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவையின் 'வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடையே பொதுவான அதேநேரம் வேறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது' என்ற அடிப்படைக் கொள்கை விட்டுக்கொடுக்கப்படவில்லை. காலநிலை மாற்ற மட்டுப்படுத்தும் சர்வதேச பேச்சுவார்த்தையில் கடந்த முறையைப் போல அமெரிக்கா விலகவில்லை.
ஆனால் இந்தியா இன்னமும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயாராகவில்லை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் வரலாற்று ரீதியிலும், நடப்பு ரீதியிலும் வளரும் நாடுகளுக்கு அதிக பொறுப்பு உள்ளது என்பது உண்மையே. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இதை வலியுறுத்த வேண்டும். ஆனால் அதேநேரம் மட்டுப்படுத்தும் முயற்சிகளில் வளரும் நாடுகள் நடவடிக்கை எடுக்கட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை பயன்தராது.
காலநிலை மாற்றம் 'பாயத் தயாராக இருக்கும் பிசாசைப் போன்றது'. தூண்டிவிடப்பட்ட பிறகு அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்தியாவும் மட்டுப்படுத்தும் முயற்சியில் அளவிடத்தக்க மேற்கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவில் கொள்கை மாற்றங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதுடன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச பேச்சுவார்த்தைகளில் தன் இடத்தை தெளிவுபடுத்த வேண்டும்.
காலநிலை மாற்றம் முக்கியத்துவம்
ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகின்றனர். இவ்வளவு காலம் கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இருந்து வந்த ஆஸ்திரேலியாவில், ஆட்சி மாற்றத்தை நிர்ணயிப்பதாக காலநிலை மாற்றப் பிரச்சினை உருவாகியுள்ளது.
அமெரிக்கா முன்னாள் அதிபர் அல் கோர், காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுகள் குழுவுக்காக அதன் தலைவர் ராஜேந்திர குமார் பச்சௌரி ஆகியோர் நோபல் அமைதிப் பரிசு பெற்றுள்ளனர்.
கியோட்டோ உடன்படிக்கை தொடர்பான விவாதத்தின்போது, அமெரிக்க வாழ்க்கை முறையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது. குளிரை எதிர்க்க அதிக புதைபடிம எரிபொருள் தேவை என்கிறது கனடா. பொருளாதார வளத்துக்கு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே சார்ந்திருப்பதால், கச்சா எண்ணெய்க்கு வரி விதித்து கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது சவுதி அரேபியா. தனித்தனியாகப் பார்க்கும்போது இந்த அக்கறைகள் சரியானவை போலத் தோன்றலாம். ஆனால் காலநிலை மாற்றத்தைப் பொருத்தவரை இவையெல்லாம் பயங்கர எதிர்விளைவுகளை உருவாக்கக் கூடியவை. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உடனடியாக மட்டுப்படுத்தும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய கூட்டமைப்பு, தென்னாப்பிரிக்கா, சீனா போன்றவை வலியுறுத்துகின்றன.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிய சர்வதேச உடன்படிக்கையை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஆக்கப்பூர்வமான பங்கேற்பை இந்தியா உறுதி செய்ய வேண்டும். அதற்கு இப்பிரச்சினை குறித்து நாட்டில் விரிவான பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். புவி அதிவிரைவாக வெப்பமடைந்து வரும் நிலையில், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மட்டும் பெரும் பயன் தராது. அளவிடத்தக்க மாற்றங்களை இந்தியா ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.
டவுன் டு எர்த்
வளரும் நாடுகளின் சுயநல முகம் மீண்டும் பாலியில் வெளிப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் 1990களில் தொடங்கி தற்போது வரை நீண்டாலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கைகள் எதுவும் கையெழுத்தாகவில்லை. எல்லாம் தொடக்கப்புள்ளியிலேயே நிற்கிறது. இந்தக் காலத்தில் பசுமையில்ல வாயு வெளியீடு அதிகரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் விளைவுகள் பயங்கர நிலையை எட்டி வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தப் பேரழிவை தடுக்க முடியாது.
இவ்வளவுக்கும் பாலி பேச்சுவார்த்தை சர்வதேச உடன்படிக்கையை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை மட்டுமே, அந்தப் பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா தன் பிடிவாதத்தை அரங்கேற்றியுள்ளது.
கார்பன் டை ஆக்சைடு வெளியீடு எப்பொழுது உச்சத்தை அடையும், எப்பொழுது சரியத் தொடங்கும் என்பதற்கான கால வரையறையை நிர்ணயிக்க இந்த ஒப்பந்தம் தவறிவிட்டது. கார்பன் டைஆக்சைடு வெளியீட்டை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும், குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த அளவு பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயம் இந்த பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படவில்லை. பணக்கார அல்லது கார்பன் கடன் நாடுகள் பசுமையில்ல வாயு வெளியீட்டு கட்டுப்பாட்டு இலக்குகளை சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலம் கண்டடைவது. சட்டத்துக்கு கட்டுப்பட்ட, தண்டனை விதிக்கத்தக்கதாக இருக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகளின் தொடக்கத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது
இதற்கு சர்வதேச உடன்படிக்கைகள் மூலம், கட்டுப்பாட்டு இலக்குகள் நிர்ணயித்து, வாழ்க்கை முறையில் அளவிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதே உலக நாடுகளின் விருப்பம். ஆனால், தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளவில்லை. 30 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்கா வரலாற்று ரீதியிலும், நடப்பிலும் 25 சதவிகித பசுமையில்ல வாயுக்களை வெளியிட்டு வருகிறது. காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தும் முதல் சர்வதேச உடன்படிக்கையான கியோட்டோ உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் வெளியேறியது. எல்லா காலமும் தன்னார்வ நடவடிக்கைகள் எடுத்தால்போதும், காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்தலாம் என்று வலியுறுத்தி வருகிறது. அந்த அம்சம் பாலி பேச்சுவார்த்தையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வளரும் நாடுகளை அடக்க அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தையிலும் இதே ஆதிக்க போக்கை அமெரிக்கா நீட்டிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் வளரும் நாடுகள் இதை இணைந்து எதிர்க்க வேண்டும்.
கியோட்டோ உடன்படிக்கையில் விதிக்கப்பட்ட கட்டாய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை. அதனால் அதுபோன்ற கட்டுப்பாடுகள் தேவையில்லை. பணக்கார நாடுகளை எதிர்ப்பது கடினம் என்று வளரும் நாடுகளும் கூறுவது ஆக்கப்பூர்வமான நடைமுறை அல்ல. இதுபோன்ற சமரசம் அமெரிக்காவுக்கே நன்மை பயக்கும். உலகுக்கு தீமை பயக்கும்.
பாலி பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கட்டத்தில் வளரும் நாடுகள் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடு என்னவென்றால், அளவிடத்தக்க, அறிவிக்கத்தக்க, பரிசோதனை செய்யத்தக்க மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது, வளரும் நாடுகள் கார்பன் டைஆக்சைடை மட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் வலியுறுத்தின. இந்தியாவின் வலியுறுத்தலை அடுத்து உகந்த மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வளரும் நாடுகள் எடுக்கும் என்று பாலி பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொள்ளப்பட்டது.
- ஆதி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நமது உடலில் தோலையும் தசையையும் நீக்கிவிட்டால் மிஞ்சுவது எலும்புக்கூடுமட்டுமே. எலும்புக்கூட்டிற்கு எலும்புச் சட்டம் என்று பெயர்.
உடலுக்கு ஆதாரமாகவும் தசை நரம்புகளுக்கு பற்றுக்கோடாகவும் இருப்பது எலும்புக்கூடுதான். மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதும் இந்த எலும்புச் சட்டம்தான். எலும்பில் 50% நீரும், 33% உப்புக்களும், 17% மற்ற பொருட்களும் உள்ளன. எலும்பில் கால்சியம் பாஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக்கூடிய தாதுப்பொருள் மற்றும் தீயில் எரிந்துபோகும் கரிமப்பொருளும் உள்ளன. நமது உடல் நலத்திற்கு வேண்டிய கால்சியம் எனும் இரசாயனப்பொருட்கள் எலும்புகளில்தான் சேமித்து வைக்கப்படுகிறது.
எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி இருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு மூட்டுகள் என்று பெயர்.
மூட்டுகள் இரண்டு தன்மைகள் உடையனவாக இருக்கின்றன. முதலாவது அசையும் மூட்டு. இரண்டாவது அசையா மூட்டு. இடுப்பிலும் மண்டையிலும் காணப்படும் எலும்புகள் அசையாத மூட்டுகள். அசையும் மூட்டுகளில் நான்கு வகைகள் உள்ளன. பந்துக்கிண்ண மூட்டு, கீல் மூட்டு, வழுக்கு மூட்டு, செக்கு மூட்டு என்று அவைகளுக்குப்பெயர்.
அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ தேய்வோ ஏற்படாமல் இருப்பதற்காக, எலும்புகளின் முனைகள் குருத்தெலும்புகளால்மூடப்பட்டு, அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் இருக்குமாறும் அதில் ஒரு வழுவழுப்பான திரவம் சுரக்குமாறும் அமைக்கப்பட்டுள்ளது. மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவக்கூடும். அவ்வாறு நழுவாமல் இருக்க மூட்டுகள் உறுதியான தசைநார்களால் கட்டப்பட்டுள்ளன.
தகவல்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இணையத்தை பயன்படுத்துவோர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. மத்திய தரைக்கடலில் துண்டிக்கப்பட்டிருந்த கேபிள் இணைப்புகள் கடந்த வாரம் சரிசெய்யப்பட்டுவிட்டன. உலகம் முழுவதும் கடலுக்கடியில் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தாலும், மத்திய தரைக்கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ள கேபிள்கள் முக்கியமானவை. ஏனெனில் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களை இணைக்கும் கேபிள்கள் இந்த நெருக்கடி நிறைந்த பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன.
2008 ஜனவரி 30 ஆம் தேதியன்று கிழக்கு மத்திய தரைக்கடலில் அலெக்ஸாண்டிரியா மற்றும் எகிப்துக்கு அருகில் மூன்று கேபிள்களில் இரண்டு துண்டிக்கப்பட்டன. இதனால் இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் 75 சதவீதம் பாதிக்கப்பட்டது. சில வாரங்களுக்குள் பழுது சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் டிசம்பர் 19 ஆம் தேதியன்று மூன்று கேபிள்களில் இரண்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சிசிலிக்கும் டுனீஷியாவுக்கும் இடையில் அந்த மூன்றாவது கேபிளும் சேதமடைந்திருந்தது.
எகிப்து முழுவதும் இதனால் இணையதள சேவை பாதிக்கப்பட்டது. குரல்சேவை 50 சதவீதம் குறைந்துபோனது. மேலும் மத்தியக் கிழக்கு நாடுகளிலும் இந்தியாவிலும் அலைக்கற்றையின் அளவில் குறைவு ஏற்பட்டது. சேதத்தின் காரணம் முழுமையாக அறியப்படவில்லை. சூயஸ் கால்வாய் வழியாகச்சென்ற கப்பலின் நங்கூரம் ஒன்று கேபிளை துண்டித்திருக்கலாம் என்ற கருத்து வெளியானபோது எகிப்திய அதிகாரிகள் அதை மறுத்தனர். இதற்கு முன்பாக நீருக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் விளைவாக கேபிள்கள் சேதமடைந்தது உண்டு. இப்போதும்கூட அதுவே காரணமாக இருந்திருக்கலாம். மத்திய தரைக்கடல் பகுதி நகரும் தட்டுகளுக்கு இடையே இருப்பதால் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரிட்டிஷ் நிலவியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்தப்பிரதேசத்தில் நில நடுக்கத்தின் அளவு இதற்கு முன்பாக ரிக்டர் அளவுகோளில் 8.0 ஆக உணரப்பட்டுள்ளது. இந்த அளவு நிலநடுக்கம் கேபிள்களில் சேதத்தை ஏற்படுத்த போதுமானது. தரைவழியாக கேபிள் அமைத்தால் நிரந்தரத்தீர்வு கிடைக்கும் ஆனால் அதில் அரசியல் சிக்கல் இருக்கிறது. ஐரோப்பாவில் இருந்து துருக்கி, ஈரான், ஈராக், செளதி அரேபியா வழியாக கேபிள்களைப் போடலாம். இதற்கு ஈராக், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தடையில்லாத கேபிள் இணைப்பு தேவை என்றால் நாம் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும் போலிருக்கிறது.
- மு.குருமூர்த்தி
- உடல் பருமனாகிப் போவதற்கு காரணம் என்ன?
- நீரில் இருந்து நிலத்திற்கு.
- வேளாண்மையின் பகைவன்
- டிஜிட்டல் படுதாக்களில் ஜிலுஜிலுக்கும் சீமான்கள்
- நிலை குலைந்துவரும் மலைத் தொடர்கள்
- என்ன சொல்லப் போகிறோம் யானைகளுக்கு?
- தாவரங்களின் இனப்பெருக்கம்
- சுவையறிய உதவும் வாயில் வாழும் பாக்டீரியாக்கள்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- பூமி வெப்பம் அடைவது ஏன்?
- தாவரங்களின் தோள் கொடுக்கும் தோழர்கள்
- 'அப்பன் குதிருக்குள் இல்லை' பாதிப்புகளை மறைக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்
- டாடா நானோ கார்: சின்னஞ்சிறு பயங்கரம்
- 'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்
- கடத்தலால் அழியும் காட்டுயிர்கள்
- பாயத் துடிக்கும் பன்னிரண்டு நோய்கள்
- சி.எஃப்.எல். பல்புகளோடு போராடும் குமிழ் பல்புகள்
- சூழலைக் காக்கும் பீமா மூங்கில்
- கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் வழிகள்
- வீட்டிற்குள்ளே சூழல் பாதுகாப்பு
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.