சிந்திக்கும் ஆற்றலும், பகுத்தறியும் திறனும் உடைய மனிதன் மாறி விட்டான். அவன் போக்கு மாறியதால் இன்று இயற்கையின் படைப்பில் பூமியைக் காக்க உருவான பல இயல்பான நிகழ்வுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றே ஜெட் ஸ்ட்ரீம். இவை தங்கள் பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும், பீதியூட்டும் வகையில் காலநிலை மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

அறியப்படாத ஜெட் ஸ்ட்ரீம்

புவி வெப்ப உயர்வு என்ற நிகழ்வு பூமியை மோசமாக தாக்கத் தொடங்கி, இப்போது இருபது ஆண்டுகளாகி விட்டன. இதனால் பூமியின் காலநிலை உட்பட பல்வேறு சூழல் நிகழ்வுகளின் இயல்பான போக்கு தாறுமாறாகின்றன. இதன் பலனாகவே சில ஆண்டுகளாக பூமியில் பல்வேறு இடங்களில் பேரிடர் சம்பவங்கள் தொடர்கின்றன. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளில் மிக சமீபத்தில் ஜெட் ஸ்ட்ரீம் போக்கில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெட் ஸ்ட்ரீம் என்றால் என்ன?

ஜெட் ஸ்ட்ரீம் என்பது பூமியில் வடதுருவப் பகுதிக்கு அருகில் எப்போதும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் காற்றோட்டங்கள். குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பாவில் காலநிலையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வடக்கு துருவப் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த காலநிலையையும், தெற்கு பூமத்தியரேகைப் பகுதியில் இருந்து வீசும் உயர்ந்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலையையும் கட்டுப்படுத்தி பிரித்து வைக்கிறது.north atlantic jet streamஆனால் புதிய ஆய்வு முடிவுகளின்படி இதன் இடம் மாறுகிறது. வெப்ப உயர்வைப் பொறுத்து மேலும் வட திசை நோக்கி நகர்ந்து துருவப் பகுதியுடன் இவை நெருங்கிச் செல்கின்றன. இது காலநிலையை மேலும் தீவிரமாகப் பாதிக்கிறது. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு இன்றுள்ள நிலையில் தொடர்ந்தால் 2060ல் இந்த மாற்றங்கள் தீவிரமடையும்.

வடபகுதியில் உருவாகும் ஜெட் ஸ்ட்ரீமின் போக்கில் ஏற்படும் மாற்றம் பூமியில் இப்போது தாளம் தப்பி சென்று கொண்டிருக்கும் காலநிலையை பீதி ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டு போய்விடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடதிசை நோக்கி

இக்காற்று வடக்கு திசை நோக்கி செல்வது ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அரிசோனா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் ஆய்வாளர் பேராசிரியர் மாத்யூ ஒஸ்மான் கூறுகிறார். இதனால் ஐரோப்பா போல குளிர் தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் கடும் வறட்சியும், வெப்ப அலைத் தாக்குதல்களும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தெற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு அமெரிக்காவில் இது தீவிரமாக ஏற்படும். வட அமெரிக்கா மற்றும் ஸ்காண்டிநேவியன் பிரதேசத்தில் பெருமழையும் அதனால் பெரு வெள்ளப்பெருக்குகளும் சாதாரண சம்பவங்களாக மாறும். இப்பகுதிகளில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதையே உறுதிப்படுத்துகின்றன. மேலும் வரும் ஆண்டுகளில் ஜெட் ஸ்ட்ரீம் தீவிரமடைவதுடன் இப்பகுதிகளில் காலநிலை இன்னும் மோசமடையும்.

வட அட்லாண்டிக் ஜெட் ஸ்ட்ரீம்

ஆர்க்டிக் பகுதியில் இருந்து வரும் குளிர்ந்த வாயுவும் தெற்கு பகுதியில் இருந்து வரும் வெப்பம் மிகுந்த வாயுவும் ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் பயணம் செய்து மோதி முட்டிக்கொள்வது ஜெட் ஸ்ட்ரீம் காற்றுகளுடன் சங்கமிக்கும்போதே நிகழ்கிறது. இது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் காற்றை ஒரே பகுதியில் தொடர்ந்து வீச உதவுகிறது.

இந்த காற்று எப்போதும் ஒரே பகுதியில் தொடர்ந்து வீசுகின்றது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், கடந்த 1000 ஆண்டுகளின் சராசரியைக் கொண்டு கணக்கிட்டால், இது ஏறக்குறைய ஒரே பகுதியிலேயே தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. ஆனால் வெப்பநிலை மாறுவதால் வட துருவப் பகுதியின் சூடு அதிகமாகிறது. இதனுடன் தெற்கில் இருந்து வரும் சூடான காற்று குளிர்ந்த காற்றுடன் மோத நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக காற்றின் பயணப்பாதை மாறுகிறது. இவற்றிற்கு இடையில் இருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் மேலும் வடக்கு நோக்கித் தள்ளப்படுகிறது. இந்த மாற்றமே வரும் காலத்தில் காலநிலை சீரழிவுகளை கற்பனைக்கெட்டாத விதத்தில் பேரிடர்களாக மாற்றமடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

பூமி முழுவதும் பயணம் செய்து கொண்டே இருக்கும் காற்றோட்டங்களான ஜெட் ஸ்ட்ரீம்கள் பூமியின் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா, மத்திய தரைக்கடல் உட்பட உலகின் பல பகுதிகளில் பருவநிலையை நிர்ணயிப்பதில் இவை இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் குளிர்காலத்தில் இக்காற்று ஓட்டங்களே வட மாநிலங்களுக்கு மழை கொண்டு வருகின்றன. பருவமழைப் பொழிவிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

பல நாடுகளிலும் விவசாய முறைகள் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இக்காற்று சாதாரணமாக தரையில் இருந்து 12,000 மீட்டர் வரை உள்ள உயரத்தில் காணப்படுகின்றது. எவரெஸ்ட்டின் வழியாகக் கடந்து செல்லும் ஜெட் ஸ்ட்ரீம் தெற்காசிய ஜெட் ஸ்ட்ரீம் என்று அழைக்கப்படுகிறது. 

அதிதீவிரமடையும் காலநிலை

ஜெட் ஸ்ட்ரீமில் உண்டாகும் மாற்றம் அதிதீவிர வறட்சி, வெப்ப உயர்வை இரு மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது தவிர எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடங்களில் பெருமழையையும், வெள்ளப் பெருக்கையும் இவை அடிக்கடி ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. ஜெட் ஸ்ட்ரீமுடன் சேர்ந்திருக்கும் பகுதிகள் என்பதால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மிக அதிகமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சூழல் சீரழிவினால் பேர் தெரியாத புதிய நோய்கள் நுண்ணுயிரிகள் மூலம் மட்டுமில்லாமல் காலநிலை மாற்றத்தாலும் மனிதனை ஆட்டிப் படைக்கும்போது வெப்ப உயர்வைக் குறைக்க எதையும் செய்யாமல் நாம் அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நம் சவப்பெட்டிக்கு நாமே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இயற்கையின் படைப்பில் அன்னை பூமியில் வேறெந்த கோளிலும் காண முடியாத அற்புத அமைப்புகள் உள்ளன. மலைகள், குன்றுகள், சமவெளிகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், நதிகள் என்று இவை பூமியின் பிறவியில் இருந்து உருமாறி வந்த கால ஓட்டத்தின் நேர்சாட்சிகளாக திகழ்கின்றன. இத்தகைய நில அமைப்புகள் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பூமியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உருவாகும் மாற்றங்கள்.

காற்று, அலைகள், நதிகள், மழை, மண், பனிப்பாறைகள், ஓடும் நீர் போன்றவை இவற்றில் ஒரு சில. நிலநடுக்கம், எரிமலை போன்றவை உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள். இத்தகையவற்றால் நாம் இன்று காணும் நிலப்பகுதியும், பெருங்கடல்களும் தோன்றியுள்ளன. கண்டத்திட்டுகளின் ஆற்றலால் (tectonic force) நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. கிடைமட்டம், செங்குத்து திசையில் இது வெளிப்படுகிறது. பூகம்பங்கள் துரித மற்றும் மந்தமான நிலநடுக்கங்கள் என இருவகைப்படும்.

துரிதகதியில் ஏற்படும் எரிமலை, நிலநடுக்கங்களின் பலனாக பூமியின் மேற்பரப்பில் ஏதேனும் ஒரு பகுதி உயர்த்த அல்லது தாழ்த்தப்படுகிறது. தென்னமெரிக்கா சிலியில் 1822ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடற்கரை ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டது. 1891ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கரையின் ஒரு பகுதி 6 மீட்டர் அளவிற்கு தாழ்ந்து போனது. 1993ல் மகாராஷ்டிரா லாத்தூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பெருத்த இழப்புகள் ஏற்பட்டன.

பூமியின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்பகுதியில் பல அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் கரை கடலாக மாறவும், கடல் கரையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் கரை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத் கத்தியவாரில் உயர்த்தப்பட்ட கரைப்பகுதியில் இருந்து கடல்வாழ் உயிரிகளின் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அப்பகுதி ஒருகாலத்தில் கடலாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.hillபூமியின் உட்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் மலைகள் உருவாகியுள்ளன. எதிரெதிர் திசையில் செயல்படும் இரு விசைகள் பொதுவான ஒரு புள்ளியில்/தளத்தில் விசையை செலுத்துவதால் இவ்வாறு நிகழ்கிறது. பூமியின் ஆழமான பகுதியில் இந்த விசைகள் செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து எதிர் திசையில் பெரும் சக்தி பரவுவதால் பூமியின் மேற்பகுதியில் உள்ள பாறைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலப்பகுதி உயர அல்லது தாழ வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளால் சமவெளிகள், பள்ளத்தாக்குகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டு உலகில் பெரிய சமவெளியான நைல் நதி சமவெளி, ஜோர்டான் பள்ளத்தாக்கு. சமமான இரு விசைகள் மூலம் நடுவில் உள்ள பகுதி உயரும்போது பீடபூமி தோன்றுகிறது. இதனால் மலையின் உச்சியில் சமதளப் பகுதி உண்டாகிறது. காற்று, மழை, நகர்ந்து செல்லும் மண், அலைகள் போன்றவற்றால் பள்ளத்தாக்குகள் சமதளப் பகுதிகளாக மாறுகின்றன.

நீரோட்டமே பூமியின் மேற்பகுதியில் அதிக மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம். மலைகளில் உற்பத்தியாகி தாதுக்களை சுமந்து குறிப்பிட்ட திசையில் பயணிக்கும் நீர்ப்பெருக்கே நதி எனப்படுகிறது. அதன் இரண்டாம் கட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இடுங்கிய பள்ளத்தாக்குகள் இதனால் உருவாகின்றன. அதன் இரண்டாம் கட்டப் பயணத்தில் அகண்ட பள்ளத்தாக்குகள் வழி பாய்ந்து செல்கின்றன. பக்கவாட்டில் உள்ள அழுத்தம் காரணமாக அதன் அகலம் அதிகரிக்கிறது.

அதன் மூன்றாவது கட்டப் பயணத்தில் அது நிதானமாக ஓடி வண்டல் மண்ணை சேர்த்து புதிய செழுமையான சமவெளிப் பகுதிகளை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி மணற்பரப்புகளில் காற்றின் சக்தியால் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் பாலைவனப் பகுதியில் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை உருவாகின்றன. பாறைக்கற்கள் பலவிதங்களில் காணப்படுகின்றன. சில அடர்த்தி மிகுந்தவை, சில எடை குறைந்தவை.

காலநிலை மாற்றம், வேதிமாற்றம் காரணமாக பாறாங்கற்கள் உருமாற்றம் அடைகின்றன. எடை அதிகமுள்ள பாக்சைட், சுண்னாம்புக்கல் போன்றவை வேதிமாற்றங்களுக்கு உட்படுவதில்லை. உயர்ந்து நிற்கும் மலைகள், குன்றுகள் உருவாக இவை காரணமாகின்றன. இத்தகைய வடிவங்கள் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் என மூன்று வகைப்படும்.

உருவாகும் சூழ்நிலையைப் பொறுத்து மடக்கு மலைகள், எரிமலையால் உருவான மலைகள், வெளிப்புறக் காரணங்களால் உருவாகும் மலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இமயமலை, ஐரோப்பாவில் ஆல்ப்ஸ், தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் போன்றவை மடக்கு மலைகளே.

நதி, காற்று, பனிக்கட்டிகள் போன்றவற்றின் வெப்ப தட்ப செயல்களால் நிலப்பகுதியில் இருப்பவை ஒன்றுசேர்ந்து அகற்றப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்படுவதால் நீலகிரிக் குன்றுகள், ராஜ்மஹல் குன்றுகள் போன்ற குன்றுகள் உண்டாகியுள்ளன. அருகில் உள்ள பகுதியைக் காட்டிலும் உயர்ந்து நிற்கும் தக்காணம் போன்ற பீடபூமிகள் உருவாகின்றன.

 சூழ்நிலையைப் பொறுத்து கண்டத்திட்டுகளின் மாற்றத்தினால் உயர்த்தப்பட்டு உருவாகும் மலைகளும், பீடபூமிகளும் மண் அடிந்து சமதளப் பரப்பாக்கப்படுவதன் மூலம், இயற்கை மாற்றங்களால் தாழ்வான பள்ளங்கள் மண் மூடப்பட்டு சமவெளிப் பரப்புகள் உருவாகின்றன. நதிகள் சுமந்து வரும் மண் போன்றவற்றைக் கொண்டு சேர்ப்பதால் செழுமைமிக்க கங்கை சமவெளி போன்ற வண்டல் மண் சமவெளிகள் தோன்றுகின்றன.

அன்னை பூமியின் அதிசயிக்கத்தக்க படைப்புகளில் இந்த நில அமைப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவை. அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு உயிரினங்கள் தோன்றி பரிணாமம் அடைந்து வாழ்ந்து வருகின்றன. மில்லியன்கணக்கான ஆண்டுகளில் உருமாற்றம் அடைந்து உருவான இவற்றைப் பாழாக்காமல் காக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

காலநிலையில் திடீரென்று மாற்றங்கள் ஏற்படுவதும், தொடர்ந்து புயல், பெருமழை பொழிவதும் இன்று அடிக்கடி நிகழும் சம்பவங்களாகி விட்டன. அரபிக் கடலிலும், வங்காள விரிகுடாவிலும் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் பல சமயங்களில் காலநிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின்றன. வானிலை முன்னறிவிப்புகளில் இதை அடிக்கடி நாம் கேட்பதுண்டு. 

பூமியில் உருவாகும் அழுத்த வேறுபாடுகளே காற்று போன்ற இயற்கை நிகழ்வுகளுக்குக் காரணம். அழுத்தம் என்பது பூமியில் ஏற்படும் அதன் எடையையே குறிக்கிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட பரப்பில் வாயு மண்டலத்தில் காற்று உருவாக்கும் எடை. இதுவே அந்த இடத்தின் காற்றழுத்தம். பூமியின் ஈர்ப்புவிசை காரணமாக இந்த அழுத்தம் பூமியுடன் சேர்ந்து செயல்படுகிறது. வாயு மண்டலத்தில் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளுக்கு வெப்பநிலை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது.

பூமத்திய ரேகைக்கு இரண்டு பக்கங்களிலும் நிலவும் வெப்ப மண்டலப் பகுதிகள் எப்போதும் உயர்ந்த வெப்பம் உள்ள பகுதிகள். இதனால் இந்த இடங்களில் காற்றின் அழுத்தம் குறைவாகக் காணப்படுகிறது. அதாவது காற்றின் எடை குறைவாக இருக்கிறது. இந்தப் பிரதேசம் பூமியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி. பூமத்திய ரேகையின் இரண்டு பக்கங்களிலும் 5 டிகிரி அட்சரேகை பரப்பில் உள்ள காற்றின் அழுத்தத்தை நிர்வகிக்கும் பகுதியாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.monsoonஇப்பகுதி உட்பட பூமியில் ஏழு காற்றழுத்தப் பகுதிகள் உள்ளன. மூன்று லேசான காற்றழுத்தப் பகுதிகள், நான்கு உயர்ந்த அழுத்தம் உள்ள பகுதிகள் என்பவை அவை. 60 டிகிரிக்கும் 70 டிகிரிக்கும் இடையில் உள்ள பகுதியில் பூமியின் வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் காற்றழுத்தம் குறைவாகக் காணப்படும் பகுதிகள் உள்ளன. இவை துணைக் காற்றழுத்தக் குறைவுப் பகுதிகள் எனப்படுகின்றன. வட மற்றும் தென் கோளப் பகுதிகளில் 35 டிகிரி, 30 டிகிரி பரப்பளவில் இப்பகுதிகள் காணப்படுகின்றன. இவை துணை வெப்ப ஈர்ப்பு காற்றழுத்தப் பகுதிகள் எனப்படுகின்றன.

இந்தப் பகுதிகளில் இருந்தே பூமத்திய ரேகைப் பகுதிக்கு காற்றுகள் வீசிக் கொண்டிருக்கின்றன. இவையே வணிகக் காற்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. இங்கிருந்து துணை காற்றழுத்தக் குறைவுப் பிரதேசங்களுக்கும் காற்று வீசுகின்றது. இவை மேற்கத்தியக் காற்று என்று அழைக்கப்படுகின்றது.

துருவப் பிரதேசங்கள் வெப்பநிலை மிகக் குறைவாக உள்ள இடங்கள். இங்கு காற்றின் எடை அதிகம். இந்தப் பிரதேசத்தில் இருந்து காற்று, குறைந்த அழுத்தம் உள்ள 60 டிகிரி அட்சரேகைப் பகுதிகளை நோக்கி வீசுகிறது. நீரோட்டம் போல அழுத்தம் அதிகம் உள்ள இடத்தில் இருந்து குறைவாக உள்ள இடத்திற்கு காற்று வீசுகிறது. அழுத்தத்தை அளவிட அழுத்தமானி (பாரோமீட்டர்) பயன்படுத்தப்படுகிறது. மில்லிபார் என்ற அலகால் இது அளக்கப்படுகின்றது. ஆனால் 1986ம் ஆண்டிற்குப் பிறகு அழுத்தத்தை அளக்க ஹெக்டோ பாஸ்கல் என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது.

கடல் மட்டத்தில் காற்றின் அழுத்தம் 76 செ மீ. இது 1013.2 ஹெக்டோ பாஸ்கல். இத்தாலிய விஞ்ஞானி டாரிசெல்லி காற்றழுத்தமானியை உருவாக்கினார். கடலின் மேற்பரப்பில் காற்று ஏற்படுத்தும் அழுத்தம் ஒரு கண்ணாடிக்குழாயில் 76 சென்டி மீட்டர் உயரத்தில் பாதரசத்தை தாழ்வாக நிறுத்தப் போதுமானது என்று அவர் கண்டுபிடித்தார். வட மற்றும் தென் கோளப் பகுதிகளுக்கு இடையில் சூரியனின் பயணத்தின் காரணமாக பூமியின் மேற்பரப்பில் காற்றழுத்தப் பகுதிகள் லேசாக வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் வீசுகின்றன.

கடலோரப் பிரதேசங்களுக்கும், கடல்களுக்கும் இடையில் காணப்படும் இடமாற்றம் காற்றழுத்தப் பிரதேசங்கள் இடம் மாறக் காரணமாக அமைகிறது. ஜூலை மாதத்தில் வட கோளப் பகுதியிலும், ஜனவரி மாதத்தில் தென் கோளப் பகுதியிலும் கரையோரப் பகுதிகள் அதிக அளவில் வெப்பமடைகின்றன. இதற்கு ஜூன் 21 அன்று உத்தராயணக் கோட்டிற்கு மேல் பகுதியிலும், டிசம்பர் 22 அன்று தட்சனாயணப் பகுதிக்கு மேல் பகுதியிலும் சூரியன் இருப்பதே காரணம்.

அந்த சமயத்தில் இப்பகுதிகளுக்கு மேல் லேசான காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகின்றன. வட கோளப் பகுதியில் கரைப்பகுதிகள் லேசான காற்றழுத்தப் பிரதேசங்களாக ஆகும்போது தென் கோளத்தில் கரைப்பகுதிகள் ஈர்ப்பு விசையினால் ஏற்படும் அழுத்தப் பிரதேசங்களாக மாறுகின்றன. இந்நிகழ்வு எதிர்மாறாகவும் நிகழ்கின்றது. சுற்றிலும் உள்ள பிரதேசத்தைக் காட்டிலும் அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள்.

 இதனால் அழுத்தம் அதிகமாக உள்ள பகுதியில் இருந்து அழுத்தம் குறைவாக உள்ள பகுதிக்கு காற்று வலிமையுடன் வீசுகிறது. இது மலைகளால் தடுக்கப்பட்டு கிழக்குப் பகுதியில் நல்ல மழைப் பொழிவு ஏற்படுகிறது. பூமியின் சுழற்சி, புவியின் மேற்பரப்பில் கானப்படும் இயற்கை அமைப்பு போன்றவை காற்றின் வலிமை மற்றும் அது வீசும் திசையில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. காற்றின் திசையைக் கட்டுப்படுத்தும் மறைமுக விசை ஒன்று பூமியில் செயல்படுகிறது. இது கோடியோலிஸ் விசை என்று அழைக்கப்படுகிறது.

 பிரெஞ்சு கணித மேதை கஸ்டோ டிகோடியோலிஸ் என்பவரே இதைக் கண்டுபிடித்தார். பயணித்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு பொருளின் பயண திசையும் வட கோளப் பகுதியில் வலது திசையிலும், தென் கோளத்தில் இடது திசை நோக்கியும் இருக்கும் என்பது இக்கோட்பாட்டின் அடிப்படைக் கொள்கை. இதைப் பற்றி ஆராய்ந்து தீவிரமாக சிந்தித்த ஃபெரல் என்ற அமெரிக்க விஞ்ஞானி இக்கொள்கையை மேலும் விரிவுபடுத்தினார்.

 பூமியின் சுழற்சியால் காற்றின் திசை, வட பகுதியில் வலது நோக்கி சாய்ந்தும், தென் பகுதியில் இடது நோக்கி சாய்ந்தும் வீசுகிறது என்று ஃபெரல் விதி கூறுகிறது. காற்று நிலையானது, நிலையற்றது, பிராந்திய ரீதியிலானது, அடிவானக் காற்று என்று பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வணிகக் காற்று, மேற்கத்தியக் காற்று போன்றவை எப்போதும் ஒரே திசையில் இருந்து மற்றொரு திசையை நோக்கி வீசும் நிலையான காற்றுகள். புயற்காற்றுகள் நிலையற்ற காற்றுகள்.

 வாயு மண்டலத்தின் கீழ்பகுதியில் இருக்கும் டோப்போஸ்பியரில் உருவாகும் அதி தீவிரமான காற்றழுத்த நிலை அடிவானக் காற்றுக்கு எடுத்துக்காட்டு. வெப்ப மண்டலப் பகுதியில் உருவாகும் காற்றில் வங்காளக் கடலில் உருவாகும் காற்றுதான் மிகப் பெரியது. அக்டோபர் நவம்பர் மாதங்களிலும், ஏப்ரல் மே மாதங்களிலும் இவை தோன்றுகின்றன.

 குறிப்பிட்டப் பருவங்களில் வீசும் இவை பருவக்காற்று என்றும் அழைக்கப்படுகின்றது. பகலில் வீசும் கடற்காற்றும், இரவில் வீசும் கரைக்காற்றும் குறைந்த நேரத்திற்கு வீசும் காற்றுக்கு உதாரணம். சராசரியாக நீண்ட நேரம் வீசும் காற்று, பருவமழைக் காற்று எனப்படுகின்றது. இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் முதல் பகுதி வரை தென்மேற்கில் இருந்து வீசும் காற்று மூலம் நல்ல மழை கிடைக்கிறது.

 ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும் வீசும் காற்று பிராந்தியரீதியில் வீசும் காற்று எனப்படுகின்றன. இவை மிகச் சிறிய நிலப்பகுதியில் மட்டுமே வீசும் இயல்புடையவை. இது அந்தக் குறிப்பிட்ட பகுதியின் அன்றாட வானிலை, காலநிலையைப் பாதிக்கிறது. லூ, ஃப்ப்ன்,சியூக், நார்வெஸ்ட்டர், மின்ஸ்ட்ரெல், டொனார்டு போன்றவை இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப் பகுதியில் வீசும் காற்றுக்கு எடுத்துக்காட்டு.

 தென்றலாகவும், புயலாகவும் வீசும் காற்றின் கதை சுவாரசியமானது. இயற்கையின் படைப்பில் காற்றின் கதை வியப்பூட்டும் ஒரு விந்தையான நிகழ்வே!

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியில் இதுவரை நடந்துள்ள கூட்டப் பேரழிவுகளில் மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. பூமியில் 87% உயிரினங்கள் அப்போது அழிந்தன. இன்று பூமியில் நாம் காணும் உயிரினங்கள் அன்று மிச்சம் மீதியிருந்த 13% உயிரினங்களில் இருந்து உருவானவையே. இதற்கு என்ன காரணம் என்று இதுவரை பல ஆய்வுகள் நடந்தன.

கூட்ட மரணம்

மாபெரும் கூட்ட மரணம் (great dying) என்று அழைக்கப்படும் பெர்மியன் கால நிகழ்வு, வரலாற்றில் மிகக் கொடூரமான பேரிடர்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலநிலை மாற்றமே இதற்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் அறிந்திருந்தனர். இதனுடன் சைபீரியா பகுதியில் ஒரு எரிமலை வெடித்துச் சிதறி அதன் கரும்புகையும் சாம்பலும் பூமி முழுவதையும் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மூடியது.

இதுவே அந்த காலநிலை மாற்றத்திற்கான காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவங்கள் உயிரினங்களின் மரணத்திற்கு எவ்வாறு காரணமானது என்று விவரிக்க ஆய்வாளர்களால் இதுவரை முடியவில்லை.man in desertவாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதற்குப் பின் இருக்கும் இரகசியங்களை கண்டுபிடித்துள்ளனர்.

மீண்டும் சம்பவிக்குமா?

பூமி இன்னொரு அதி பயங்கரமான காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் மிக மோசமான நுழைவாயிலில் கால் எடுத்து வைத்துள்ளது. இச்சூழ்நிலையில் பெர்மியன் காலகட்டத்தில் உண்டான கூட்டப் பேரழிவு பற்றிய விவரங்கள் வருங்காலத்தில் நேரிடப் போகும் அச்சுறுத்தல்களை சமாளித்து வாழ உதவும் என்று ஆய்வுக்குழு தலைவர்களில் ஒருவரான கடலியல் ஆய்வாளர் ஜஸ்டிஸ் பென் கூறுகிறார்.

எரிமலையில் இருந்து கிளம்பிய புகையும் சாம்பலும் பூமியில் வாயு மண்டலத்தின் வெப்பநிலையை திடீரென அதிகரிக்கச் செய்தது. இதன் விளைவாக நிலவாழ் உயிரினங்கள் குறிப்பாக பெரிய வடிவமுடையவை மூச்சு முட்டி உயிரிழந்தன. கடல்வாழ் உயிரினங்களின் அழிவிற்கும் ஆக்சிஜன் குறைவே காரணம். ஆனால் இது மற்றொரு விதத்தில் சம்பவித்தது.

வெப்பநிலை உயர்ந்ததுடன் கடல்வாழ் உயிரினங்களின் பசி அதிகமானது. இதனால் இவற்றின் ஆக்சிஜன் பயன்பாடு அதிகரித்தது. படிப்படியாக கடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது. கடல்வாழ் உயிரினங்களும் ஆக்சிஜன் கிடைக்காமல் பெருமளவில் கொல்லப்பட்டன. கரையிலும் கடலிலும் முக்கியமாக பெரிய உடலமைப்பு உடைய உயிரினங்களே இத்துயர சம்பவத்தில் கொல்லப்பட்டவை. பெர்மியன் ட்ரையாசிக் காலகட்டத்தில் இருந்த வெப்பநிலை விரைவில் வரவிருக்கும் வெப்பநிலையும் ஏறக்குறைய சமமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எதிர்காலம் எப்படி இருக்கும்?

இதை அடிப்படையாக வைத்து பூமியில் நிகழப் போகும் வெப்பநிலை உயர்வு மூலம் ஏற்படவுள்ள பிரச்சனைகளை கணினி மாதிரிகள் உதவியுடன் ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். ட்ரையாசிக் காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களின் மாதிரிகள் மூலம் வரப் போகும் பூமியின் உயரும் வெப்பநிலையில் ஏற்படப் போகும் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

25 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான அதே சூழ்நிலை வருங்காலத்தில் ஏற்படப் போகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ட்ரையாசிக் காலத்தில் சைபீரியா எரிமலையில் இருந்து உமிழப்பட்ட புகை சாம்பலுக்கு சமமான அளவில் புதைபடிவ எரிபொருட்கள் உமிழும் பசுமைக்குடில் வாயுக்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. இன்று உள்ள நிலையில் கார்பன் டை ஆக்சைடு உட்பட உள்ள வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்தால் பூமியில் வெப்பநிலை 11 டிகிரி செல்சியர்ஸ் வரை உயரும்.

2100ல் பூமி

இது நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். குறிப்பாக கடலில் உயிரினங்களின் ஆக்சிஜன் பயன்பாடு 70% அதிகரிக்கும். கடலின் அடித்தட்டில் 40% பகுதிகளில் ஆக்சிஜன் சிறிதும் இல்லாத நிலை உண்டாகும். பூமத்திய ரேகைப் பகுதியில் உள்ள காலநிலையே இந்த நிலை உருவாகும்போது துருவப் பகுதிகளிலும் இதே சூழல் ஏற்படும். ட்ரையாசிக் யுகத்தில் இருந்தது போல கடலில் பூமத்திய ரேகைப் பகுதிகளில் வாழும் உயிரினங்களில் சில துருவப் பகுதிகளுக்கு குடி பெயர்ந்து நிலைமையை சமாளித்து வாழும்.

ஆனால் துருவப்பகுதி உயிரினங்கள் இந்த காலநிலையுடன் பொருந்தி வாழ முடியாமல் அழிவை சந்திக்கும். 2100 ஆகும்போது ட்ரையாசிக் காலத்தில் இருந்த புவி வெப்பநிலையின் 25% வெப்ப உயர்வை பூமி நேரிடும். 2300ல் இது 35 முதல் 50% வரை அதிகரிக்கும். இந்த சமயத்தில் ஆக்சிஜன் குறைவு உட்பட்ட பாதிப்புகளை உயிரினங்கள் அனுபவிக்க ஆரம்பிக்கும். அச்சமூட்டும் இந்த ஆய்வு முடிவுகள் மனிதன் திருந்த உதவுமா?

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It