சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி இருந்த நீர் நாய்கள் இன்று அரிதாகிவிட்டன. நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்ட இந்த நீர் நாய்கள் பல்வேறு  சீதோசன நிலைகளிலும் வாழக் கூடியது.

சுமார் 10 ஆண்டுகள் வரை வாழும் இவை, பிறந்து இரண்டு ஆண்டு முதல் குட்டி போடத் துவங்கும். பிறந்து இரண்டு மாதம் தொடங்கி நீரில் நீந்துகிறது. பெரும்பாலும் மீன்களையே உண்டு வாழும். இது தவிர தவளை, நண்டு போன்றவற்றையும் உணவாக எடுத்துக் கொள்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு வகையான நீர் நாய்கள் வாழ்கின்றன. குறிப்பாக கடலில் வாழும் நீர் நாய்கள் பசிபிக் பெருங்கடலில் அதிகமாக காணப்படுகின்றன.

நீர் நிலைகளின் தரத்தை அங்கு வாழும் நீர் நாய்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். நீர் நாய்கள் வாழாத இடம் இயற்கை சுழற்சியில் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்திக்கொள்ளலாம்.

அதிகப்படியான மீன் பிடிப்புகளால் இவை பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் இவற்றின் தோல்களுக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. 2000 -ல் மட்டும் சுமார் 326 நீர் நாய்களின் தோல்கள் வட இந்தியாவில் கைப்பற்றப்பட்டன. இவற்றை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் நம் ஊரை சுற்றி இருக்கும் குளம், ஏரிகளில் கூட இவை விளையாடுவதைக் காண முடியும். மிகவும் எளிமையாக பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்களைக்கூட நாம் இழந்து வருகிறோம்.

Pin It

Lion_tailed_Macaqueமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழும் அரிய விலங்கு சோலைமந்தி (ஆங்கிலத்தில் Lion Tailed Macaque). IUCN கணக்கெடுப்பின்படி இந்த வகைக் குரங்கு 2500க்கும் குறைவாகவே உள்ளன. உலகின் வேறு எங்கும் பார்க்கமுடியாத இந்த விலங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக வனப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலும் பழங்கள், பூக்களின் மொட்டுகள், கொட்டைகள் மற்றும் ஒரு சில பூச்சி வகைகளை உண்டு வாழும் இந்த வகை குரங்கு பத்து கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். சிங்கத்தில் வால் போல இதன் வாலும் நீண்டு இருக்கும். முகத்தில் பிடரி மயிர் காணப்படும்.

சாதாரண குரங்குகளைப் போல இவை மனிதர்கள் இடத்தில் நெருங்குவதில்லை. வனம் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளவதால் இவற்றின் வாழ்க்கை முறையில் மிகவும் சிரமங்கள் ஏற்படுகின்றன. மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இவை மிச்சம் இருப்பதால் துரிதமான சில நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இவற்றைக் காப்பாற்ற முடியும். குறிப்பாக வனத்துறையினர் புதிய மரக்கன்றுகளை நடும்போது இவற்றின் உணவுச் சூழ்நிலைக்கு ஏற்றார்போல மரக்கன்றுகளை நட வேண்டும். இந்த விலங்குகளின் போக்குவரத்தில் இடையூறு ஏற்படாதவண்ணம் போக்குவரத்தை வனப்பகுதிக்குள் கட்டுப்படுத்த வேண்டும்.

Pin It

தமிழ்நாட்டிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது பழனி மலைத் தொடர்ச்சி. நிறைய மலைக் கிராமங்களையும் கொடைக்கானல் நகரையும் உள்ளடக்கியது இந்த மலைத் தொடர்ச்சி. இதில் சுமார் 700 சதுர கி.மீ வனப்பரப்பு உள்ளது. இது தவிர காப்பித் தோட்டங்களும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது. இந்த பழனி மலைத் தொடர்ச்சியில் உள்ள வனப்பரப்பு பாதுகாக்கப்பட்ட  வனமாகவோ அல்லது வனக் காப்பகமாகவோ தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.

ஏராளமான உயிரினங்கள் இந்த மலைப்பகுதியில் உயிர் வாழ்கின்றன. குறிப்பாக மலை அணில்(Grizzled squirrel), வரையாடு (Nilgiri Thar), கேளையாடு (Muntjac), யானை, சீத்தல்(Chital), சிறுத்தைப் புலி(Leopard), கரடி மற்றும் ஒரு சில இடங்களில் அரிதாக புலியும் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பறவைகளிலும் பல விதமான பறவைகள் இந்த மலைப் பகுதிகளில் வாழ்கின்றன. குறிப்பாக இருவாச்சி(Hornbill) என்ற அரிதான பறவைகள் இங்கு உள்ளன.

இந்த மலைத் தொடர்ச்சியின் பல்வேறு இடங்களில் செழுமையான நீர் நிலைகளும் உள்ளன. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய அருவியும் தமிழ்நாட்டின் அதிக உயரமான அருவியுமான தாலையார் அருவி இங்கு உள்ளது. அதிகமாகும் போக்குவரத்தாலும்,  மரங்கள் வெட்டப்படுவதாலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டுவந்து போடும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் இந்த மலைப் பகுதி சீர்கேடடைந்து வருகிறது. கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்த்தால் பெருமளவு மாசுபடுவதைத் தவிர்க்க முடியும்.

Palani Hills Conservation Council என்ற அமைப்பு பழனி மலைப் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு தேனி வளர்ப்பு முறை பற்றி சொல்லித் தருவதோடு அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுகிறது. இந்த மலைப் பகுதியில் மிச்சமிருக்கும் வனப்பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனில் நிறைய முயற்சிகளை செய்தாக வேண்டும். இணையத்தளம்: www.palnihills.org/

Pin It

மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே இந்த பூமியில் தவளைகள் தோன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதாவது கோடி ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது இந்தத் தவளை இனம். இதை விட ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் இந்தத் தவளைகளில் மட்டும் மொத்தம் ஆறாயிரத்திற்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்தத் தவளைகள் பூகம்பம் வருவதை முன் கூட்டியே அறிந்துகொள்ளும் திறமை கொண்டவை. 
 
frog_312தவளைகள் நிலத்திலோ அல்லது நீர் நிலைகளிலோ குழிகள் அமைத்தோ அல்லது பாறைகளின் இடுக்குகளிலோதான் வாழ்ந்து பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு தவளை இனம் கூடு கட்டி வாழ்கிறது என்றால் நம்புவீர்களா ?!!! ஆம் நண்பர்களே..!! சில மாதங்களுக்கு முன்பு தென் இந்தியாவில்தான் இந்த அறிய வகை தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகை தவளைகள் மிகவும் வினோதமான முறையில் புற்களினாலான கூடுகள் அமைத்து வாழ்கின்றன என்பது ஆய்வின் அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
 
தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் வாழும் சில தவளை இனங்கள் எலியை விட மிக வேகமாக ஓடும் திறமை பெற்று இருப்பதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. ஒரு முறை தென் ஆப்பிரிக்கா காட்டுப் பகுதிகளில் ஆய்விற்காக பிடித்து வரப்பட்ட தவளைகளை, எலிகள் அடைக்கப்பட்ட ஒரே கூண்டில் போட்டு அடைத்திருக்கிறார்கள். அப்பொழுது பயத்தில் தவளைகள் அதிக ஓலி எழுப்பியதால் வேறு வழியின்றி தவளைகளின் பெட்டியை மாற்றுவதற்காக திறந்த பொழுது ஒரு தவளையும், எலியும் வெளியில் தப்பி ஓடிய பொழுது எலியை விட அதி வேகத்தில் தவளை ஓடுவது கண்டு வியந்த கண்டுபிடிப்பாளர்கள், மீண்டும் பல சோதனைகள் செய்து பார்த்ததில் எலியை விட தவளைகளின் வேகம் அதிகம் இருப்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.
 
இந்தத் தவளை இனம்தான் இப்படியென்றால் இதைவிட இன்னொரு தவளை இனத்தின் செயல் மிகவும் வியப்பிற்குரியது. அது என்னவென்றால் இந்த இனத்துத் தவளைகள் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் உறங்கும் திறமை உள்ளவையாம். பலருக்கு சில கேள்விகள் இதில் எல்லாம் ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக உறங்கினால் உணவிற்காக என்ன செய்கின்றன என்று. இந்தத் தவளைகள் சுவாசிப்பதின் மூலம் தங்களின் உணவுகளை சரி செய்து கொள்கின்றன என்று ஓர் ஆய்வு கூறுகிறது
 
மனிதனுக்கு வரும் புற்றுநோய், இருதய நோய்களை தீர்ப்பதற்கான ஒரு பொருளாக தவளையின் தோலை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது உபரித் தகவல். இந்தத் தகவல்களை விட மிகவும் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால் பொதுவாக தவளைகள் பூச்சிகளைத் தின்பதை நாம் பார்த்திருக்கிறோம் அல்லது கேட்டு இருக்கிறோம். ஆனால் வட ஆப்பிரிக்கக் காடுகளில் காணப்படும் நீர் நிலைகளில் உள்ள சில தவளை இனம் பாம்புகளையே முழுவதும் முழுங்கும் அளவிற்கு திறமையும் உருவமும் கொண்டிருக்கின்றன. இந்தவகை தவளைகளின் உமிழ் நீரில் மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு விஷத் தன்மை இருக்கிறதாம்.

- பனித்துளி சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It