அமாவாசை, தீபாவளியும் சேர்ந்து வரும் இரவில் ஆந்தையை பலி கொடுத்தால் வாழ்வில் வளம் வந்து சேரும் என்ற செய்தியால், ஒரு ஆந்தையை ரூ. 10,000 வரை விலை கொடுத்து வாங்கி, 200க்கும் மேற்பட்ட ஆந்தைகள் பலியிடப்பட்டுள்ளன - மாலை மலர்

 தொழில் நட்டத்தில் இருந்து மீள்வதற்காக ரூ. ஒன்றரை லட்சம் ரூபாய் வரை  விலை கொடுத்து வாங்கி ஆந்தைகள் பலியிடப்படுகின்றன. இதற்காக ஆந்தைகள் கடத்தல். - தினகரன்

இவற்றுடன் "ஆஸ்திரேலியப் பறவை, மனித முகம் கொண்ட அபூர்வப் பறவை" என்ற தலைப்புடன் வெண்ணிற ஆந்தையின் இறக்கையை விரித்துப் பிடித்தபடி ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை நாளிதழ்களில் பார்த்திருக்கலாம். இதைப் படிக்கும்போது ஆந்தையை பலி கொடுத்தால் வளம் வந்து சேருமா? ஆந்தைகள் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகின்றனவா? மனித முகம் கொண்டவையா என்பது போன்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.

முற்றிலும் இல்லை என்பதுதான் பதில். சுற்றுசூழல் அறியாமை நிலவும் நம் நாட்டில், பணம் சேர்க்க எதை வேண்டுமானாலும் பலி கொடுக்க மனிதர்கள் தயாராகி விட்டார்கள். அபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன். உலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகளைப் பார்க்கலாம். 1. புள்ளி ஆந்தை (Spotted Owlet), 2. கூகை (அ) வெண்ணாந்தை (Barn Owl), 3. கொம்பன் ஆந்தை ((Great Horned Owl)

புள்ளி ஆந்தை சாலையோர மரங்கள், மாந்தோப்புகள், பாழடைந்த கட்டடங்களில் வாழும் இயல்புடையது. நகர்ப்புறம் சார்ந்தும் வாழும். தனக்கென வாழ்விட எல்லையை ஏற்படுத்திக் கொள்ளும். சாம்பல் பழுப்பு நிற உடலில் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்டது. உருண்டையான தலையில் காதுத் தூவிகள் எழுந்து நிற்கும். கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் முக்கிய உணவு சுண்டெலி, புழு பூச்சிகள், தத்துக்கிளி, ஒணான், சிறு பறவைகள். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மார்ச் வரை. மரப்பொந்துகளில் 3-4 முட்டை இடும். வேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.

கூகை அல்லது வெண்ணாந்தைதான் அடிக்கடி நாளிதழ்களில் இடம்பிடிக்கும் "ஆஸ்திரேலியப் பறவை"! கூகைகள் மட்டுமல்ல, எந்த வகை ஆந்தையும் வலசை (Migaration)) செல்வதில்லை. இது நம் நாட்டுக்கே உரித்தான அழகான பறவை. கூகைகள் ஆஸ்திரேலியப் பறவையோ, மனித முகம் கொண்டவையோ அல்ல. அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும். கரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்திக் கருக்கலில் கூட்டை விட்டு புறப்படும் முன் எழுப்பப்படும் ஒலி காரணமாக Screetch Owl என்ற பெயரும் உண்டு. இரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்பட்டது.

ஆந்தைகள் இரவில் நடமாடும் இரவாடிப் பறவைகள் (Nocturnal). இரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும். ஒரு எலி ஓர் இரவில் இரண்டு லிட்டர் நெல்லை வீணாக்கும் தன்மை கொண்டது. இதனால் நாட்டின் 20 சதவீத உணவு உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. ஆந்தைகள் நான்கு விரல் கூர் உகிர்களால் எலி, சுண்டெலிகளைப் பிடித்து அலகால் தூக்கிச் செல்லும். ஆனால் ஆந்தைகள் ஒரே இரவில் 3-4 எலிகளை அப்படியே விழுங்கிவிடும். சிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும். கூகைகள் ஆண்டு முழுவதும் மரப் பொந்துகளிலும் பாழடைந்த கட்டடங்களிலும் 4-7 முட்டைகள் இடும். மனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று. மூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன. கூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.

ஆந்தை இனங்களில் உலகிலேயே பெரிதானது கொம்பன் ஆந்தை. பருத்த தோற்றத்துடன் பழுப்பு நிற உடலில் வெளிர் மஞ்சள், ஆழ்ந்த பழுப்புக் கோடுகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவ கண்களையும் தலையின் இருபுறமும் நீண்டு நிற்கும் இறகுக் கொம்புகளும் இதன் தெளிவான அடையாளங்கள். பெரிய சண்டை சேவல் அளவில் இருக்கும்.

தமிழகம் எங்கும் ஊருக்கு வெளியே உள்ள குன்றுகள், சிறு காடு மேடுகள், ஆற்றங்கரையோர மரங்களில் கொம்பன் ஆந்தை வசிப்பதைப் பார்க்கலாம். மற்ற ஆந்தைகளுக்கு மாறாக பகல் நேரத்தில் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது. அதேவேளையில் மர நிழல், பாறை இடுக்குகளில் அமர்ந்திருக்கும். எலி, சுண்டெலி, தவளையை உணவாகக் கொள்ளும். சராசரியாக ஒரு நாளைக்கு எட்டு எலிகள் வரை உட்கொண்டு உழவர்களுக்கு நன்மை புரிகிறது. மண்மேடுகளிலும், புதர் ஓரக் குழிகளிலும், பாறை மீதும் 4 முட்டைகள் வரை இடும். இனப்பெருக்க காலம் நவம்பர் முதல் மே வரை.

ஆந்தை சிறப்புகள்

கூருணர்வு (Sensitive): ஆந்தை போன்ற இரவாடிப் பறவைகளின் பார்வைத் திறன் மிகுந்த கூருணர்வு மிக்கது. நமது கண்களோடு ஒப்பிட்டால் ஆந்தைகளின் கண்கள் 5 மடங்கு பெரியவை. எனவே, இவற்றின் பெரிய கண் பாவை மிகச் சிறிய வெளிச்சத்தையும்கூட உள்வாங்கி உணரும் ஆற்றல் கொண்டது. இதனால் இரவில் நடமாடும் ஆந்தைகளால் எதையும் கூர்ந்து அறிய முடிகிறது.

கழுத்து: ஆந்தைகளின் கழுத்து மிகவும் துவளக் கூடியது. மனிதர்கள், மற்ற பாலூட்டிகளின் தலைகள் இரண்டு மூட்டுகளால் கழுத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. ஆந்தைகளின் தலையோ ஒரே மூட்டால் இணைக்கப்பட்டுள்ளது. தவிர, இதன் ஒவ்வொரு கழுத்து முள்ளெலும்பும் கணிசமாக இடம்பெயரக் கூடியது. இதனால் தலையை முழுமையாக 360 டிகிரி திருப்பும் திறன் இதற்கு உண்டு.

சூழலை சமநிலையுடன் பாதுகாப்பதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. நாமும் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டிய அவசர சூழ்நிலையில் உள்ளோம். சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பழைமை கருத்துகள், பக்தியின் பேரால் நிலவும் மூடநம்பிக்கைகளை ஆகியவற்றை அகற்றிவிட்டு, அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் மட்டுமே ஆந்தைகளின் வாழ்க்கையும், நமது வாழ்க்கையும் சிறக்கும். இல்லை என்றால், எதிர்காலச் சந்ததிகள் பாடம் செய்யப்பட்ட அவற்றின் உடலை மட்டுமே பார்க்கக் கூடிய நிலை உருவாகலாம்.

பூமி மனிதனுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. மற்ற அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம். சுயநலத்துக்காக மனிதன் அவற்றை சுரண்டிக் கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒரு நாள் மற்ற உயிரினங்களுக்கு முன்னதாகவே நமது அழிவு தொடங்கி விடலாம்.

(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)

Pin It

சமீபத்தில் சத்தியமங்கலம் காட்டை ஒட்டிய பகுதியிலுள்ள போதிப்படுகை (கே.குடி, கர்நாடகா) அருகே சென்று கொண்டிருந்தபோது, தூரத்திலிருந்து பார்த்தபொழுது கேளை ஆடு போன்ற தோற்றத்துடன் ஒரு மான் நின்றது. முதலில் அதை கேளையாடு (Bark­ing deer) என்று நினைத்தாலும் கூர்ந்து பார்த்ததில் அதன் கொம்பின் வடிவம், சற்று அகன்ற மார்பு, சற்று நீண்ட கழுத்தை ஆகியவற்றை வைத்து அது நான்கு கொம்பு மான் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த மான் இனம் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிடும் தன்மை கொண்டது. அது நான்கு கொம்பு மான்தான் என்று தெரிந்தவுடன் என்னை விரைவாகத் தயார்படுத்திக் கொண்டு, படம் எடுக்கத் தொடங்கினேன்.

முப்பாதாண்டுகளுக்கு முன்னால் சத்தி வனக்கோட்டத்தில் உள்ள பீர்கடவு, கொத்தமங்கலத்திலிருந்து ராஜன் நகர் செல்லும் சாலையின் மேற்கே தென்படும் சிறிய குன்றில் எண்ணிக்கையில் குறைந்த நான்கு கொம்பு மான் கூட்டமொன்று தொடர்ந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. விலங்குகளின் மீது ஆர்வம் கொண்டவரும் அவற்றை கூர்ந்து கவனித்து வந்தவருமான முன்னாள் வேட்டைக்காரர் சின்னச்சாமி என்பவர், ஒரு முறை ஜெர்சி மாடு கன்று ஈன்றதைப் பார்த்துவிட்டு, "அதன் கண்ணைப் பாருங்கள், குள்ளமான் கண்ணைப் போலுள்ளது" என்று என்னிடம் கூறினார். குள்ளமான் என்று அவர் குறிப்பிட்டது இந்த நான்கு கொம்பு மானைத்தான்.

கன்றின் கண்ணுக்கு ஒப்புமையாக கூறும் அளவுக்கு அந்தக் காலத்தில் இந்த மான் அதிகமாக இருந்தது மட்டுமின்றி, மக்கள் பார்வையிலும் பட்டுள்ளது இதிலிருந்து தெரிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இந்த மானின் எண்ணிக்கை வேகமாகச் சரிந்துவிட்டாலும், தற்போது வனத்துறையின் வேட்டைத் தடுப்பு செயல்பாடுகளால் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இந்த மான் இனம் தற்போது கண்ணில் பட ஆரம்பித்திருப்பதை வைத்து இதை உறுதிப்படுத்தலாம்.

சத்தியமங்கலம் காட்டுயிர் சரணாலயத்தில் உள்ள தலைமலைப் பகுதியில் இந்த மான் தற்போது அருகிவிட்டது. மாவட்ட வன அலுவலர் ராமசுப்ரமணியம், உலக இயற்கை நிதியத்தின் பூமிநாதன், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சிலர் இந்த மானைப் பார்த்துள்ளனர். இந்தப் பின்னணியில்தான் நானும் அந்த மானைப் பார்த்தேன். தமிழகத்தில் முதுமலை பகுதியில் உள்ள சர்க்கிள் சாலை, மசினகுடி, காங்கரசு மட்டம், சிரியூர் பகுதிகளில் இந்த மான் அரிதாகக் காணப்படுகிறது. ஆராய்ச்சியாளர் ஆறுமுகமும் டாக்டர் கலைவாணனும் இந்த மானை இப்பகுதியில்  பார்த்துள்ளனர்.

வழக்கமாக மான்களுக்கு இரண்டு கொம்புகளே இருக்கும். இந்த மானுக்கு இரண்டு ஜோடிகளாக நான்கு கொம்புகள் உண்டு. காட்டில் இதைப் பார்ப்பது கடினம். ஆசியாவிலியே சிறிய இரலை மான் இனம் இது. எண்ணிக்கை மிகக் குறைவு, அதிக மிரட்சியும், நழுவும் தன்மையும் கொண்டது. சாதாரணமாக இணையாகவோ, குட்டிகளுடனோ காணப்படும். தமிழகம், தமிழகத்தை ஒட்டிய கர்நாடக காட்டுப் பகுதிகள், குஜராத் கிர் காடு, ஒரிசாவில் இந்த மான் வாழ்கிறது. திறந்தவெளிகளிலும், மலைச்சரிவுள்ள காட்டுப் பகுதிகளிலும், ஓடை, ஆற்றோரப் பகுதிகளிலும் இதைக் காணலாம்.

இதன் மயிர்ப்போர்வை மஞ்சள் கலந்த மர நிறத்திலும், அடிப்பகுதி வெளிறியும் இருக்கும். மழைக்காலத்தில் நிறம் சற்று அடர்த்தியாகவும், குளிர்காலத்தில் நிறம் சற்று மங்கலாகவும் காணப்படும். நின்ற நிலையில் இதன் உயரம் தோள்பட்டை வரை 60 செ.மீ, 20-25 கிலோ எடையுடன் இருக்கும்.

பெண்ணுக்கு கொம்பு கிடையாது. ஆண்களுக்கு பொதுவாக நான்கு கொம்புகள் உண்டு. சிலவற்றுக்கு ஊட்டச்சத்து குறைவு, வாழுமிடத்தைப் பொருத்து இரண்டு கொம்புகள் மட்டும் இருக்கலாம். இரண்டு பெரிய கொம்புகள் இரண்டு காதுகளுக்கு இடையிலும் 8 - 10 செ.மீ நீளத்திலும், அடுத்து இரண்டு சிறிய கொம்புகள் பெரிய கொம்புகளுக்கு முன்னதாக முன்னந் தலையில் 1 முதல் 2 செ.மீ அளவுக்கு வளர்ந்திருக்கும். ஆண் குட்டிகளுக்கு பிறந்த சில மாதங்கள் கழித்து பெரிய கொம்புகள் வளரும். அடுத்து சில மாதங்கள் கழித்து அது உட்கொள்ளும் ஊட்டச்சத்துக்குத் தகுந்தவாறு 14, 15 மாதங்களில் இரண்டு சிறு கொம்புகள் வளரத் தொடங்கும். அரிதாக சிலவறறுக்கு இந்த சிறிய கொம்புகள் வளராமல் போவதுண்டு.

வெளிமான் அல்லது பிள்ளாய் (Blackbuck – an­telope) போன்றவற்றின் கொம்புகளைப் போல் அல்லாமல், இவற்றுக்கு கொம்பின் நுனி நேராகவும் கூர்மையாகவும் இருக்கும். இதன் கொம்புகள் உதிர்ந்து முளைப்பதில்லை. ஆனால் இனச்சேர்க்கை காலத்திலும், இடம் கைப்பற்றுவதற்காகவும் ஆண் மான்களிடையே ஏற்படும் சண்டையின்போது கொம்புகள் ஒடிவது உண்டு. அந்த நேரங்களில் மூர்க்கத்தனமாகச் சண்டையிடும். நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர் அருந்த வரும் தன்மை கொண்டது. எனவே, நீரற்ற பகுதிகளில் இதை அதிகமாகப் பார்க்க முடியாது. வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் வாழும் தன்மை கொண்டது. திறந்த வெளிக் காடுகளில் நன்கு வளர்ந்த புற்களுக்கு இடையில் தங்கும் இயல்புடையது. வெளிமான் போல கூட்டமாக இருக்காது. இலைகள், புற்கள், வேர்முடிச்சுகள், பழங்கள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.

சூலை - செப்டம்பர் மாதங்களில் இணைசேரும். சினைக்காலம் 7 - 8 மாதங்கள். ஜனவரி - பிப்ரவரி குட்டிகள் ஈனும் காலம். ஒன்று முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும். இதன் ஆயுட்காலம் சுமார் 10 ஆண்டுகள். புலி, சிறுத்தை, செந்நாய், மலைப்பாம்பு ஆகியவை இவற்றின் முக்கிய எதிரிகள். ஆனால் அவற்றைவிட பெரிய எதிரிகள் காடழிப்பும், மனிதத் தொந்தரவுகளும்தான். அரிய இனமான நான்கு கொம்பு மான்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வனத்துறையின் முழுமையான பாதுகாப்பு, வெளி மனிதர்களின் இடையூறு இல்லாதிருப்பது அவசியம்.

(இக்கட்டுரையை எழுதிய ஒளிப்படக் கலைஞர் டி.ஆர்.ஏ. அருந்தவச் செல்வன் பிரபல காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர். காடுகளில் அதிகம் சுற்றியவர். அவரது அரிய நேரடி அனுபவம் இங்கு கட்டுரையாகி இருக்கிறது.)

(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)

Pin It

சிறுத்தைப் புலிகளை பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னால்  சிறுத்தைக்கும் சிறுத்தைப் புலிகளுக்குமான வேறுபாட்டைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. சிறுத்தைகள் இன்று இந்திய வனப் பகுதிகளில் இருந்து முழுவதுமாக அழித்து ஒழிக்கப்பட்டு விட்டது. இன்றைய இந்திய வனப் பகுதிகளில் இருப்பது சிறுத்தைப்புலி மட்டுமே. சிறுத்தைகள் தென் ஆப்ரிக்க புகுதியில் தொடங்கி இந்திய வனம் வரை பரவி இருந்தது. அனால் இன்று ஆப்ரிக்காவில் மற்றும் ஈரானில் (மிக குறைந்த அளவில் ஆசியா சிறுத்தைகள் இங்கு மட்டுமே) மட்டுமே உள்ளது. மாறாக சிறுத்தைப் புலி தென் ஆப்ரிக்க தொடங்கி இந்திய வனம் மட்டுமல்லாது ரஷ்யாவின் கிழக்கு பகுதி முதல் கம்போடிய , லாவோ பகுதி வரை பரவி உள்ளது. ஆனாலும் தொடர் வேட்டைகளால் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.

leopard_360சிறுத்தை உடலில் கரும் புள்ளிகள் உடல் முழுவதும் இருக்கும். ஆனால் சிறுத்தைப் புலியின் உடலில் தலை மற்றும் கழுத்து பகுதியில் கரும் புள்ளிகளும், உடல் பகுதியில் ரோஜா இதழ்களின் மடிப்பு போன்ற கரும் பட்டைகளும் (பல கோண வடிவம் ) இருக்கும். சிறுத்தை அளவுக்கு சிறுத்தைப் புலிகளால் ஓட முடியாது.

அதே போல சிறுத்தைப் புலிகள், ஜாக்வார் (ஜாக்வார் - இதற்கு சரியான தமிழ் பெயர் இருந்தால் வாசகர்கள் தெரியப்படுத்தவும்) போல இருந்தாலும் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. ஜாக்வார் உடலில் இருக்கும் பல்கோண வடிவ கரும் பட்டைகள் சிறுத்தைப் புலிகளை விடப் பெரியதாக இருக்கும்.

165 செ.மீ நீளமும் 80 செ.மீ உயரமும் இருக்கும் சிறுத்தைப் புலி, 91 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். தன் உடலின் எடையை விட இரண்டு மடங்கு அதிக எடை கொண்ட உணவை மரத்தின் மேல் கொண்டு செல்லும் வலிமை உடையது. பொதுவாக மரத்தில் மேல் அமரும் சிறுத்தைப் புலி, தன் உணவை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க, மரத்தின் மேல் கொண்டு செல்லும். சிறுத்தைப் புலிகளின் வாழ்விடங்களைப் பொருத்து அவற்றின் நிறத்தில் சிறிய மாறுபாடு காணப்படும். நிறக் குறைபாடு காரணமாக, உடல் முழுவதும் கருமை  நிறத்தில் இருக்கும் சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை என்றழைக்கப்படுகிறது.

பொதுவாக சிங்கமும் புலியும் ஒரே வனப்பகுதியில் வாழாது. சிங்கம் வாழ சமவெளிப் பகுதியும், புலிகள் வாழ அடர்ந்த காடுகளும் தேவைப்படுகிறது. ஆனால் சிறுத்தைப் புலி இந்த இரண்டு விலங்குகளும் வாழும் வனப் பகுதிகளில் வாழும் தன்மை பெற்றது. நான்கு மாத பேறுகாலத்தில் இரண்டு முதல் நான்கு குட்டிகள் வரை போடும். ஆனால் அவற்றின் ஐம்பது சதவீதம் மட்டுமே முதல் வருடத்தைக் கடக்கின்றன.

உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் பெறும் சிறுத்தைப் புலிகளை வேட்டைகளில் இருந்து பாதுகாத்தால் மட்டுமே இயற்கையை சமநிலையில் வைத்திருக்க முடியும்.

- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

புலிகளின் பாதுகாப்பு பற்றி சமீப காலங்களில் அதிகம் வலியுறுத்தப்படுவது வரவேற்கத்தக்கது என்றாலும், ஏன் புலிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற புரிதல் தெளிவாக விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக, "கூண்டில் அடைத்து வைத்தே புலிகளை பாதுகாத்துவிட முடியும்போது அதற்கு ஏன் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று ஒரு கேள்வி கூட வருகிறது. மேலும் புலிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற மிருகங்களுக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் எழக் கூடும். 

புலிகளின் பாதுகாப்பிற்கு முதலில் சொல்லப்படும் காரணம், இந்த உலகில் இல்லாத ஒரு உயிரினத்தை நம்மால் பாதுகாத்து விட முடியாது. இருக்கும்போதே இந்த உயிரினத்தை பாதுகாத்துவிட வேண்டும். இது மேம்போக்கான காரணமாக இருந்தாலும் அறிவியல் சொல்வது வேறு. புலிகளின் பாதுகாப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அவற்றின் குணங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். 

  • புலி தனித்து வாழும் மிருகம்.
  • புலிகள் தனக்கென்று ஒரு எல்லையை காட்டில் தீர்மானித்துக் கொள்கிறது. சிறுநீர் கழிப்பதன் மூலமும், மரங்களில் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்ற புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது.
  • தனக்குக் கிடைக்கும் உணவின் தேவைகளைப் பொருத்து (மான், காட்டெருமை, காட்டுப்பன்றி மற்றும் பல) தன்னுடைய எல்லைகளைத் தீர்மானிக்கிறது.
  • உணவு எளிதாகக் கிடைக்குமிடங்களில் எல்லையை சுருக்கவும், உணவு அரிதாக கிடைக்கும் இடங்களில் எல்லையைப் பரப்பவும் கற்றுக்கொள்கிறது.
  • எனவே புலிகள் பாதுகாப்பாக வாழ போதுமான உணவு அவசியமாகிறது. இதனால் புலிகள் பாதுகாக்கப்படும்போது புலிகளின் உணவு சார்ந்த மற்ற உயிரினங்களும் பாதுகாக்கப்படுகிறது. அந்த உயிரினங்கள் வாழ அவற்றின் உணவு சார்ந்த தேவைகளும் பாதுகாக்கப்படுகிறது. இது உணவுச் சங்கிலி அறுபடாமல் இருக்க உதவுகிறது.
  • எப்போதாவது அரிதாக இணை சேருகிற புலி ஒரு வார காலத்தில் பிரிந்து செல்கிறது.
  • புலிகள் வாழ அடர்ந்த வனப் பகுதியும், நீர்த் தேவைகளும், மனித இடையூறுகள் அற்ற பகுதியும் தேவைப்படுகிறது. 

வேட்டையாடுவதன் மூலம் புலிகள் அழிக்கப்படுவதால் உணவுச் சங்கிலி முற்றிலுமாக அறுபடும். வனத்தின் உண்மைத் தன்மை குறையும். நூறு சதவிகிதம் தரமான வனம் தன்னுடைய தரத்தை இழக்கத் தொடங்கும். பின் வனம் சுருங்கத் தொடங்கும். வனம் சுருங்கச் சுருங்க மழை குறையும். மழை குறைந்தால் நீர்ப் பற்றக்குறை ஏற்பட்டு உலகம் அழிவை நோக்கி வேகமாக நகரத் தொடங்கும். 

எனவே புலிகளையும் மற்ற விலங்கினங்களையும் வேட்டையாடுவதைத் தவிர்த்து, வனமும், விலங்குகளும், பறவைகளும் மற்ற அனைத்து உயிரினங்களும் காக்கப்படுவது அவசியமாகிறது.

இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது. மனிதனுக்கு மட்டுமல்ல; புலிகளுக்குமானது.

- பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It