கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகளவில் பாம்புக்கடியால் இறப்போரில் பாதிப்பேர் இந்தியர்கள். ஆண்டுதோறும் சுமார் 46,000 இந்தியர்கள் பாம்புக் கடிபட்டுச் சாகிறார்கள். அதைவிட மும்மடங்கினர் உடற்குறையால் வாழ்க்கை முழுக்க அல்லற்படுகிறார்கள்.
இந்தியாவில் சுமார் முந்நூறு வகைப் பாம்புகள் உள்ளன. அவற்றில் பதினைந்து வகை மட்டுமே மனிதர்களைக் கொல்லுமளவு நஞ்சுள்ளவை. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் நாகப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு மட்டுமே நஞ்சுள்ளவை. சாரை, கொம்பேறி, பச்சைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு ('இரண்டு தலைப் பாம்பு') உள்ளிட்ட பிற பாம்புகள் நஞ்சற்றவை.
ஏழைகளே பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஊர்ப் புறங்களில் வாழ்வோர்; அதிலும் குறிப்பாக உழவர்கள். ஆனால், கூடுதல் விழிப்புடன் இருப்பதன் மூலம் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க முடியும்.
(நான்கு நாள்களுக்கு முன்னர் வீட்டுக்கு வெளியில் ஒரு சிறு பெட்டியில் (10 செ.மீ. விட்டம், 7 செ. மீ. ஆழம்) இரண்டு (நஞ்சில்லாத) பாம்புகள் சுருண்டு படுத்திருந்தன. அந்தப் பெட்டியில் எரிவளி அடுப்பு 'வால்வுகள்' ஏழு உள்ளிட்ட சில இரும்புச் சாமான்கள் ஏற்கெனவே இருந்தன!
பெட்டியைக் கையில் எடுத்து ஒரு வாளியில் வைத்து வீட்டில் இருந்து சுமார் அறுபது மீட்டர் தொலைவில் கொண்டுபோய் விட்டோம். அதுவரை அசையாமல் இருந்த பாம்புகள் நாங்கள் அங்கிருந்து அகன்றபின் அவை காட்டுக்குள் சென்று விட்டன.)
உலகில் பாம்புக் கடியால் இறப்போர் அல்லது முடமாவோர் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது உலக நலக் கழகத்தின் (World Health Organization (WHO)) எதிர்பார்ப்பு. இந்தியாவைப் பொருத்தவரை நடுவணரசும் மாநில அரசுகளும் அதிக அக்கறை காட்டினால் மட்டுமே இது நிறைவேறும்.
வீடுகளின் கதவுகள், சன்னல்கள் ஆகியவற்றுக்கு வலைப் பின்னல்களுள்ள கதவுகளைப் பொருத்துவதன் மூலம் பாம்புகள் மட்டுமின்றி நம்மைப் பல நோய்களுக்கு உள்ளாக்கும் கொசுக்களில் இருந்தும் பாதுகாக்கலாம். பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதை உடனடியாகச் செய்வது நாட்டுக்கு நல்ல பலன் தரும்! (ஆனால், செய்து முடித்ததாக வெற்றிக் 'கணக்குக் காட்டுவதையும்' இடைத் தரகர்கள் பணம் கறப்பதையும் தவிர்க்க வேண்டும்!)
அதுபோலவே, உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முழங்கால் வரை பாதுகாப்புத் தரும் மூடணிகளையும் ('பூட்சு') மலிவு விலையில் அல்லது இலவயமாக அரசு தருவது மிகுந்த பலனளிக்கும்.
நஞ்சுமுறிப்பு (anti-venom) மருந்து தான் பாம்புக்கடிக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரே தீர்வு. நாம் முன்னர் குறிப்பிட்ட நான்கு வகை நச்சுப் பாம்புகளின் நஞ்சுகளை ஒன்று சேர்த்து அதிலிருந்து நஞ்சுமுறிப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் நஞ்சுமுறிப்பு தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதில் இருளர் கூட்டுறவு அமைப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன. (இருளர்கள் இந்தியாவின் தொல்குடிகள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்.)
இதில் சிக்கல் என்னவெனில், ஒரே வகைப் பாம்பின் நஞ்சு இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, சிந்துப் பகுதியில் வாழும் கட்டுவிரியனின் நஞ்சு பிற கட்டுவிரியன்களின் நஞ்சைக் காட்டிலும் ஐந்து மடங்கு வீரியமுள்ளது! ஒற்றைச் சக்கர நாகப் பாம்பைப் பொருத்தவரை, மேற்கு வங்கத்தில் உள்ளவற்றின் நஞ்சும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளவற்றின் நஞ்சும் வெவ்வேறு வேதிப் பொருள்களைக் கொண்டவை!
இந்தக் காரணத்தாலும் இருளர் சங்கங்களின் நஞ்சுமுறிப்பு உருவாக்கும் முறைகள் நவீனப்படுத்தப்படாத காரணத்தாலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் நஞ்சுமுறிப்புகள் இந்தியா முழுமையிலும் பயன்படுத்தத் தக்கன அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருளர்களின் செயல்முறைகளை நவீனப்படுத்துவதில் தமிழக அரசு உடனடியாக கவனஞ் செலுத்த வேண்டும் என்கிறார் இருளர் கூட்டுறவுப் பண்ணைகளைத் தொடங்கியதில் பங்கு வகித்த ரோமுலஃச் விட்டேகர் (Romulus Whitaker).
இயற்கையின் படைப்பில் பாம்புகளுக்கும் முதன்மையான இடமுள்ளது. எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எலிகள் பெருகினால் நமக்கு உணவுத் தட்டுப்பாடு, எலியால் பரவும் நோய்கள் ஆகியவை பெருகும் (ப்ளேக் - plague உள்ளிட்ட சுமார் பத்து வகை நோய்கள்; இவற்றில் சில நோய்கள் அணில்களாலும் பரவும். விவரங்களுக்கு: https://www.cdc.gov/rodents/diseases/direct.html.
எலிகளால் இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் ஆண்டுதோறும் வீணாகின்றன. வீணாவது பணம் மட்டுமன்று; அந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய உழைப்பு, மின்னாற்றல் உட்படப் பிற ஆற்றல்கள், உற்பத்தியால் நேர்ந்த சூழல் கேடுகள் ஆகிய அனைத்தும் தேவையற்றவை ஆகின்றன.
ஆனால், பாம்பைப் பார்த்தவுடன் அஞ்சி ஓடுவது அல்லது அதை அடித்துக் கொல்வதுதான் நம் உடனடிச் செயல்களாக உள்ளன. எந்தப் பாம்பும் தானாக நம்மைத் துரத்தவோ, கொத்தவோ செய்யாது. அதை நாம் மிதித்தால் அல்லது தாக்கினால் மட்டுமே திருப்பித் தாக்கும். இல்லையேல் நம்மிடமிருந்து தப்பி மறைவதற்கே முயலும்.
எலிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பூனை வளர்க்கலாம் என்பது பரவலான கருத்து. ஆனால் பூனைகள் பல வகைப் பறவைகளையும் ஒழித்துவிடும். (வளர்ப்பு நாய்களும், பூனைகளும் பறவையின அழிப்பில் பெரும்பங்கு வகிப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.) பறவைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன; பூந்தூள் ('மகரந்தம்') சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.
பாம்புகளை மட்டுமின்றி, வீட்டருகே வரும் தவளைகளையும் பலர் கொன்று விடுகின்றனர்; அவற்றைப் பிடிப்பதற்குப் பாம்பு வரும் என்கிற காரணத்தால். ஆனால், தவளைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு மிகவும் நன்மை செய்கின்றன.
உலகில் இயற்கையாகத் தோன்றி வளரும் அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழும் உரிமையும் இயற்கைச் சுழற்சிகள், உணவு வளையங்கள் போன்றவற்றில் பங்கும் உள்ளது. இவை நமக்குப் பல்வேறு விதங்களில் அளப்பரிய உதவி செய்கின்றன. இவற்றைப் பற்றி நாம் அறிந்தது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு. ஆனால், நம் செயல்பாடுகளால் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வகை உயிரினங்களைப் பூண்டோடு ஒழித்து வருகிறோம் என்றும், இதன் விளைவுகள் நம் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டன என்றும் சூழலியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, நாம் வெறுக்கும் உயிரினங்களில் கொசுவும் ஒன்று. உலகிலுள்ள 3,500 வகையான கொசு வகைகளில் ஒரு சில மட்டுமே - குறிப்பாக, அந்தச் சில வகைகளின் பெண் கொசுக்கள் மட்டும் - நம்மைக் கடிப்பதிலும் அதன் மூலம் நோய்களைப் பரப்புவதிலும் பங்கு வகிக்கின்றன. ஆனால், (1) மீன்கள், தட்டான்கள், தவளைகள், சில வகைப் பறவைகள் போன்றவற்றுக்கு உணவாவதன் மூலம் இயற்கையின் உணவு வளையத்தைப் பேணுதல், (2) பல வகை மலர்ச் செடிகளின் பூந்தூள்ச் சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகித்தல், (3) உயிரியத் தொகுதியை (biomass) நீர் நிலைகளில் இருந்து தரைப் பகுதித் திணைக் களங்களுக்கு (terrestrial ecosystem) மாற்றுதல் போன்றவற்றில் கொசுக்களுக்குப் பங்குள்ளது. [உயிரித் தொகுதியை மாற்றுதல் என்பதன் விளக்கம்: கொசுவின் தோற்றுவளரிகள் - 'லார்வாப்' புழுக்கள் - நீர் நிலைகளில் வளர்கையில் அவற்றிலுள்ள அழுகிய புதலிகளை ('தாவரங்களை') உட்கொள்கின்றன. பின்னர், அவை கொசுவாக மாறிப் பறந்து செல்வதால் நீர் நிலைகளில் இருந்த அழுகிய உயிரிப் பொருள்கள் வேறு வடிவில் தரைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உலகளவில் இவ்வாறு கொசுக்களால் மாற்றப்படும் பொருள்களின் எடை சில கோடி கிலோ இருக்கும்!]
சூழல் கேடுகளால் வேளாண்மை பல வகைகளில் மிக அதிகம் பாதிக்கப்படுகிறது. இது பின்னர் அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பது வெளிப்படை. பொருளாதார வசதி அதிகம் உள்ளோர் சூழலைக் கெடுப்பதில் அதிகப் பங்கு வகிக்கின்றனர். உழவர்களும் வேதி நஞ்சுகளையும் உரங்களையும் பயன்படுத்துவதன் மூலமும் பிற வகைகளிலும் உயிரினப் பன்மயத்தை ஒழித்தல், நில - நீர் வளங்களை மாசுபடுத்துதல் ஆகிய சூழல் கேடுகளுக்குக் காரணிகளாக உள்ளனர்.
ஆனால், இவையனைத்துக்கும் அடிப்படைக் காரணம் முதலாண்மைப் பொருளாதார முறைமையே என்பது தெளிவு. ஆகவே, அதை அடியோடு மாற்றாதவரை நம் துன்பங்கள் அதிகரிக்குமேயொழியக் குறைய மாட்டா!
பாம்புகள் பற்றிய பல தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Aathira Perinchery, "India Has a Big Problem: Its Snake Anti-Venoms May Not Work Properly", The Wire, 2019 Dec 06, https://thewire.in/the-sciences/snakebites-anti-venom-irula-cooperative-cobra-krait-viper-romulus-whitaker.
கொசுக்கள் பற்றிய தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Daniel AH Peach, "The secret world of mosquitoes reveals their larger role in our environment", Scroll, 2019 Dec 04, https://scroll.in/article/945673/the-secret-world-of-mosquitoes-reveals-their-larger-role-in-our-environment
- 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)
- விவரங்கள்
- வி.களத்தூர் பாரூக்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக்
கொள்வார் பயன்தெரி வார்"
நன்றியின் பயனை பனையின் பயனோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் நம் வள்ளுவர். தென்னை மரம் கிபி 2ம் ஆண்டிற்கு பின்தான் இங்கு அறிமுகமானது. ஆனால் பனை மரம் அதற்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
"தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான்
பனையை விதைத்தவன் பார்த்துவிட்டுச் சாவான்"
கிராமங்களில் புழங்கும் சொல்வழக்கு இது. பனைமரங்கள் பண்டைய காலம்தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றெனக் கலந்திருக்கின்றன. பனைமரத்தில் இருந்து ஏதாவது ஒரு பொருள் மனிதனுக்கு எப்படியாவது பயன்பட்டு வருகிறது. அந்த அளவில் அதிக பயன்களை அது கொண்டிருக்கிறது. பண்டைய இலக்கியங்களை ஓலைச்சுவடிகள் மூலம் பாதுகாத்தது முதல் கோடை காலங்களில் நாம் விரும்பி சாப்பிடும் நுங்கு வரை பனை மரங்களில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் பனைமரங்கள் சிறந்து விளங்குகின்றன. பயிரிடப்படாமல் இயற்கையிலேயே தானாக வளரும் தன்மையை பனை மரம் பெற்றிருக்கிறது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. இளம் பனைகள் வடவி என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வர்த்தக மதிப்பு ரூ. 200 கோடி ஆகும்.
முளைத்து கிழங்குவிட்ட பனை விதை மிகச் சிறந்த சிற்றுணவாகப் பயன்படுகிறது. அதில் அதிக அளவு நார்ச் சத்துகள், தாதுப் பொருட்கள் உள்ளன. பனையிலிருந்து கிடைக்கப் பெறும் பதநீர் ஒரு குளிர்ச்சி தரும் பானமாக இருக்கிறது. பதநீரைக் காய்ச்சினால் பனைவெல்லம் என்று சொல்லக்கூடிய கருப்பட்டி கிடைக்கிறது. இது சிறந்த மருத்துவ குணம் கொண்ட இனிப்புப் பொருளாக இருக்கிறது.
அதேபோல் பனஞ்சோறு உடல் நலம் தரும் நீராகாரம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச் சத்துக்கள், சுண்ணாம்பு, இரும்பு, கரிநீரகி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள். இதுபோக நுங்கு, பதநீர், பனங்கற்கண்டு போன்றவைகளும் பனையிலிருந்து கிடைக்கின்றன. பனை ஓலைகளைக் கொண்டு கூடைகள், தொன்னைகள், குதிர்கள், பெட்டிகள், பாய்கள் போன்றவற்றை செய்யலாம். பனை ஓலையில் வைக்கப்படுகின்ற பொருட்கள் எளிதில் கெட்டுப் போகாது என்பது அதற்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களுக்கும் வாழ்வைத் தருகிறது பனைமரம். காடுகள் அழிந்து வருவதால் பல உயிரினங்களின் ஆதாரமாக பனைமரம் விளங்குகிறது. பனையின் வேர்ப் பகுதியில் எறும்புகளும், பூச்சிகளும் பல சிறு செடிகளும் வாழ்கின்றன.
பனையின் வேர்ப்பகுதியில் விழும் தாவரங்களின் விதைகள் பனையை சுற்றியே வளர்கின்றன. இயற்கையிலேயே அரச மரங்கள், ஆலமரங்கள் பெரும்பாலும் பனையை ஒட்டியே வளர்கின்றன. பனையின் நடுப்பகுதியில் ஓணான்களும், பல்லிகளும் வாழ்கின்றன. பனையின் கழுத்துப் பகுதி மற்றும் பனையின் ஓலைகளில் பல வகையான வௌவால்களும், சிறு சிறு குருவிகளும் வாழ்கின்றன. ஒரு வௌவால் ஒரு இரவுப் பொழுதில் பல நூற்றுக்கணக்கான ஈக்களையும், கொசுக்களையும் பிடித்து உண்டு வருவதால் அதனால் விவசாயம் செழிக்க உதவுகிறது. இதுபோக அணில்கள், பருந்துகள், தூக்கணாங்குருவி போன்றவைகள் கூடுகட்டி வாழ்வதற்கான இடமாக பனைமரம் இருக்கின்றது.
இதுபோன்று பனைமரங்களின் பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதனால்தான் தமிழர்களின் மரமாக பனை மரம் இருக்கிறது. தமிழர்களின் இலக்கியங்களிலும், சித்த மருத்துவத்திலும் பிரதான இடத்தை அது பெற்றிருக்கிறது. பனையின் பெயரைக் கொண்டு பல கிராமங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. பனங்குடி, பனையூர், பனைமரத்துப்பட்டி ஆகியவைகளை உதாரணமாகக் கொள்ளலாம். வழிபாட்டிற்குரிய மரமாகக்கூட சில இடங்களில் பனை மரங்கள் விளங்குகின்றன.
தமிழர்களோடு இணைந்து பிணைந்திருந்த பனை மரத்தை தமிழர்கள் கைவிட்டு விட்டார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. சமீபத்தில் ருத்ர தாண்டவம் ஆடிய கஜா புயல் இதை நன்கு உணர்த்தியுள்ளது. புயலின்போது நிறைய மரங்கள் வீழ்ந்தன; வேரோடு சாய்ந்தன. தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் கம்பங்கள் என எந்த ஒன்றையும் கஜா புயல் விட்டு வைக்கவில்லை. ஆனால் பனை மரங்கள் அந்த புயலைத் தாண்டியும் சாயாமல் நின்றதைப் பார்க்க முடிந்தது. எத்தனை பெரிய காற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றலை பனை மரம் பெற்றிருக்கிறது. புயல் பாதித்த மாவட்டங்களில் அதிகளவு பனை மரங்களை வளர்த்திருந்தால் அல்லது முன்பு இருந்த மரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் புயலால் இந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது.
இனி வரும் காலங்களிலாவது பனை மரங்களை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அழியும் நிலையில் இருக்கும் பனை மரங்களைப் பாதுகாக்க முடியும்.
- வி.களத்தூர் பாரூக்
- விவரங்கள்
- கணியூர் சேனாதிபதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நாட்டிலுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் என் கண்ணின் இமைகளைப் போல பாதுகாப்பேன் என்று கூறும் தலைவர்களுக்கு மத்தியில், நான் ஆட்சிக்கு வந்தால் அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என்று கூறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் தான் தற்போதைய பிரேசில் அதிபர் ஜெய்ர்போல்சனாரோ.
அமேசான் காடுகளில் கடந்த நான்கு வாரங்களாக கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீ உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஏனெனில், பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்குதான் உற்பத்தியாகிறது. அதேபோல, உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வதும் இந்தக் காடுகள்தான். அதனால் தான் அமேசானில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பிரேசிலை மட்டுமில்லாது, உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும் என்பதால் தான், பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமேசானில் எரிந்து வரும் தீயை அணைக்க 20 மில்லியன் டாலர் வழங்குவதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
எரியும் தீக்குப் பின்னர் ஒரு பெரிய வணிக அரசியல் உள்ளது என்று பிரேசில் நாட்டு சூழலியலாளர்களே கூறுவதை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாது. அது என்ன என்பது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்...
அமேசான் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என 2018ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜெய்ர்போல்சனாரோ கூறியது தான், இன்று எரியும் அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என்கின்றனர்.
இவரின் கவர்ச்சியான வாக்குறுதி, விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், வன வளங்களை வேட்டையாடும் மாஃபியா கும்பல்கள், பூமியைக் கிழித்து எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் எனப் பலரையும் கவர்ந்திருந்தது. பிரேசிலிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களுக்கு அமேசான் காடுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்படியான பேராசைகளிலிருந்துதான் பிரச்சினை தொடங்கியது.
2019 ஜனவரியில் பிரேசிலின் புதிய அதிபராகப் பதவியேற்ற ஜெய்ர்பொல்சானேரோ, அமேசானின் ஏராளமான இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு யாரோ சில பூர்வகுடி மக்கள் எதிர்ப்பதால் அவற்றை வீணாக்கி விடக்கூடாது என்று சொல்லி, வனச் சுரண்டலுக்கான அச்சாரமிட்டார். 20 வருடங்களுக்குப் பின்பு, அமேசான் காடுகளில் சுரண்டல் மீண்டும் தலை தூக்கியது. இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக ஓப்பன் டெமாக்ரசி மற்றும் இண்டிபெண்டென்ட் ஆகிய இரண்டு இதழ்களும் செய்திகள் வெளியிட்டன. அதில் அமேசான் காடுகளை அழிப்பதே ஜெய்ர்போல்சனாரோவின் திட்டம் என்பதை சூழலியலாளர்கள் ஆமோதிக்கின்றனர்.
மேலும், இந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பொதுவாகவே காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம் தான். ஆனால், இம்முறை மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும் விட இந்த வருடம் காட்டுத் தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதி செய்கிறது. இந்தக் காட்டுத் தீ பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. ஜெய்ர்போல்சனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக் காட்டியது. இதற்காக, இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணி நீக்கம் செய்தது பிரேசில் அரசு.
ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்கு சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். 'அது நடந்த சில நாட்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருட்டிருக்கிறது, அது மனிதர்களால் ஏற்பட்டது தான்' என்றும், 'அமேசான் மழைக் காடுகள், கோடை காலத்தில் கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக் கூடியவை அல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்க காடுகளைக் கொண்டது. அங்கு காட்டுத் தீ ஏற்படக் காரணம் மனிதர்களே' என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
அமேசான் மழைக் காடு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகி விட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும், பெருவிவசாயிகளும் தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றி செய்வதற்குத் தகுந்த வகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ வளர்ந்து விட்டது. அவர்கள் பற்ற வைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை என்று பிரேசிலைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்மணி கூறியுள்ளார்.
ஆனால், அதிபர் ஜெய்ர்போல்சனாரோவின் எண்ணம் காடழிப்பு அல்ல! அமேசான், AAA திட்டத்தின் கீழ் சென்றுவிடக்கூடாது என்பதுதான். AAA திட்டம் என்பது, இயற்கைப் பாதுகாப்பு திட்டம். அமேசான் காடுகள் தொடங்கி அண்டெஸ், அட்லாண்டிக் கடல் வரை 135 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பை இந்தத் திட்டம் பாதுகாக்கும். இந்தத் திட்டத்தை Gaia Amazonas என்ற அமைப்புடன் பல NGO- மற்றும் பிற நாட்டு அரசுகள் முன்னெடுத்துள்ளனர். இவர்களிடம் அமேசான் சென்று விடக்கூடாது என்பதில் நிலையாக நிற்கிறது ஜெய்ர்போல்சனாரோவின் அரசு. அதனால் தான், அமேசான் நதிப் படுகையில் ஒரு நீர்மின் ஆலை, ஒரு பெரிய பாலம், BR-163 தேசிய நெடுஞ்சாலையின் நீட்டிப்பு போன்ற வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும். அப்போதுதான் அந்தப் பகுதியை எந்த ஒரு பிரச்சினையும் இன்றி பிரேசில் தேசிய எல்லைக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இல்லையேல் AAA திட்டத்திற்காக உலக நாடுகள் தரும் அழுத்தத்தை பிரேசிலால் சமாளிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பெரும்பாலும் ஜெய்ர்போல்சனாரோவின் ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள் தான் இதற்குக் காரணம் என்று தெரிவிக்கின்றனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக் கொள்ள பற்ற வைக்கப்பட்ட சிறிய நெருப்பு கட்டுக்கடங்காமல் இப்போது பெரும் நெருப்பாக எரிகிறது என்கின்றனர்.
ஒரு நாட்டை உருவாக்கி விடலாம், ஆனால் காட்டை உருவாக்க முடியாது என்ற இயற்கையின் நியதியை அறியாத அடிமுட்டாள்களா இவர்கள்?
பிரேசிலில் காடழிப்புக்கு எதிராக உள்ள சட்டங்கள்
1965-ல் கொண்டு வரப்பட்ட பிரேசிலின் காடுகள் கொள்கையின்படி (Brazil’s Forest Code of 1965) விவசாயிகள் அமேசான் காடுகளில் நிலங்களை வாங்கி சொந்தம் கொண்டாட முடியும். ஆனால், அதில் 20 சதவிகித நிலத்தில் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்த சட்டத்தைக் கொண்டு வந்த ராணுவ சர்வாதிகார அரசு 1988-ல் முடிவுக்கு வந்தது.
அதன் பிறகு அமலான புதிய அரசியலமைப்புச் சட்டம் மூலம் அமேசானில் வாழும் பூர்வகுடி மக்களுக்கு அவர்களின் நிலத்தின் உரிமை திருப்பிக் கொடுக்கப்பட்டது. மேலும், அந்த இடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் வருவதை விரும்பாவிட்டால், அதை மறுக்கும் உரிமையும் அம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த காலகட்டத்திற்குள் பல பாதிப்புகள் நிகழ்த்தப்பட்டு விட்டன.
2012-ல் மீட்டெடுக்கப்பட வேண்டிய காடுகளின் அளவைக் குறைத்தும், காடழிப்புக் குற்றங்களுக்குத் தண்டனைகள் குறைக்கப்பட்டும் சட்டத் திருத்தம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதைப் பிரேசிலின் உச்ச நீதிமன்றம் 2018-ல் உறுதி செய்தது.
இந்தியரின் பெருமை!
அமேசான் நதியில் எண்ணெய் வளம் இருப்பதை அறிந்து அங்கு எண்ணெய்க் கிணறுகள் தோண்டும் பணி கடந்த 1970ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது நதிக்கு அடியில் மற்றொரு பெரிய நதி ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து எண்ணெய் வளம் குறித்த ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, மற்றொரு நதியைப் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இது 'வாலியாஹம்சா' என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது. சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, 'ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது.
- கணியூர் சேனாதிபதி
- விவரங்கள்
- சுதேசி தோழன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கொல்லாமரம் என பேச்சு வழக்கில் அழைக்கப்படும் முந்திரி மரமானது, தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலை பூர்வீகமாகக் கொண்டது. 1560 ஆம் ஆண்டில், போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவுக்கு எடுத்து வரப்பட்ட மரம் இது.
பொதுவாக வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் இம்மரம் வளரும் தன்மை உடையது.
தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக அளவில் வணிக ரீதியாக பயிரிடப்படுகிறது.
Anacardium - அனகார்டியம் என்பது கொல்லாம்பழம் எனப்படும் முந்திரிப்பழத்தின் உருவத்தை விளக்கும் பெயராகும். Ana – என்பதற்கு மேல்நோக்கிய என்று அர்த்தம். Cardium என்பது இதயத்தைக்குறிக்கிறது. தலைகீழான அல்லது மேல்நோக்கிய இதயத்தின் அமைப்புடைய பழம் உள்ள மரம் என்று பொருள் தருகிறது.
கொல்லாம்பழம் ஒரு வகையான போலிப்பழமாகும். இது பச்சைநிற காயாக இருந்து பின்னர் மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில் பழுக்க கூடியது. உண்பதற்கு சுவையானது மற்றும் நீர்ச்சத்து மிகுந்தது.
பல இடங்களில் நட்டு வளர்த்து லாபம் சம்பாதிக்கும் வெறும் வணிகப் பொருளாக மாறிவிட்ட கொல்லாமரம் சாகுபடி. அத்தகைய கொல்லாமரம் இயற்கையாக தேரியில் குடியேறி செழித்து வளர்ந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருந்தாலும், பாதுகாப்பற்ற முறையில் அழிந்து வரும் இடமாக உள்ளது தேரிக்குடியிருப்பு என்ற கிராமத்தில்தான்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குதிரைமொழி என்ற தேரிக்குடியிருப்பு கிராமம்.
இக்கிராமத்தில் முன்னோர் வழிபாட்டு முறையில் கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழாவும், பங்குனி உத்திர திருவிழாவும் வெகுஜன உழைக்கும் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. உழைக்கும் வர்க்க மக்கள் எப்போதுமே தன் முன்னோர்களை நினைவில் வைத்து கொண்டாடுபவர்கள் என்பதற்கு இத்திருவிழாக்களே சாட்சி.
இக்கிராமத்தின் தனித்துவமான பழக்க வழக்கங்கள் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. பிறந்த குழந்தைகளுக்கு எப்போதும் இக்கிராமத்தில் மக்கள் தொட்டில் கட்டுவது இல்லை.
திருமண நாட்களில் வீடுகளில் நடைபெறும் முகூர்த்த அரிசி அளக்கும் நிகழ்ச்சியில், நாழியில் அளக்கப்படும் அரிசி அங்குள்ள தேரிச்சாமி (தேரி என்ற மணல் பகுதியை சாமியாக வணங்குதல்) கோவிலில் வைத்து சமைத்து ஊர் மக்கள் அனைவருக்கும் சமபந்தி போஜனம் இன்றளவும் நடைபெறுகிறது.
தேரி மணல்தான் தெய்வம் என்று வாழும் மக்கள் உள்ள இக்கிராமத்தில் கொல்லாமரங்களே நிலத்தடி நீரின் சேமிப்பு கலனாக விளங்குகின்றன.
Reserved forest எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுததியாக தேரிக்குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள தேரிக்காட்டுப்பகுதி அமைந்துள்ளது.
இங்கு தேரிமணல் பனைமரம் உயரத்திற்கு குவிந்து கிடக்கிறது. இம்மணல் குன்றின் மேல் தக்கிமுக்கி ஏறி உயரத்திலிருந்து சறுக்கினால் அதுவே ஒரு அலாதியான விளையாட்டாக சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் மாறிவிடும் தன்மையது. தேரி என்ற மணல் தாய் தன் பிள்ளைகளை எப்போதும் அணைத்துக் கொள்வதால் நம் உடல் சிவப்பாகும், உள்ளம் செம்மையாகும்.
பார்ப்பதற்கு பாலைவனம் போல் தெரிந்தாலும் இது நிலத்தடி நீர் நிறைந்த செம்மண் நிலம் என்பதே உண்மை. இரண்டு தேரிமணல் குன்றுகளின் நடுவில், செழுமையான செம்மண் சமவெளிப்பகுதியும் அமைந்துள்ளது.
இப்பகுதியை பார்க்கும்போது அதன் நிலஅமைப்பு வித்தியாசமாகவும், பனைமர உயர தேரிமணலின் மீது வளர்ந்து நிற்கும் கொல்லாமரம் வியப்பையும் தருகிறது.
உற்ற நண்பன் விராலிச்செடி:
கொல்லாமரங்கள் நிற்கும் இடமெங்கும் அதன் உற்ற தோழனாக நிலைத்து நிற்பது விராலிச்செடி. இதன் வேர்கள் மிகவும் உறுதியாக தேரிமணலைப் பற்றியிருக்கின்றன. தேரிக்காட்டில் மணல் அரிப்பைத் தடுக்கும் தோழர்கள் கொல்லாமரமும், விராலிச்செடியும் என்று சொன்னால் அது மிகையல்ல.
சிகப்பு பழம்:
கொல்லாமரத்தின் பூ காய்க்க ஆரம்பித்தவுடன் முதலில் முந்திக்கொண்டு வருவது (முந்திரிக் கொட்டை போல முந்தாதே என்ற சொல் வழக்கு இந்நேர்வில் நாம் அறிந்து கொள்வது) அதன் விதை ஆகும். இவ்விதை பச்சையாக இருக்கும்போது ‘அண்டி” என அழைக்கின்றனர் இக்கிராம மக்கள். அதன்பிறகு அண்டிக்கும், காம்புக்கும் இடையில் கொல்லாம்பழம் உருவாகிறது. தலைகீழாக தொங்கும் வவ்வாலைப்போல காற்றினில் அழகாக அசைந்தாடும் கொல்லாம்பழத்தை பார்க்க பார்க்க அழகு.
முதலில் பச்சை நிற காயாக இருந்து பின்னர், மஞ்சள் மற்றும் சிகப்பு வண்ணங்களில், பழமாய் கிடைக்கிறது கொல்லாம்பழம் .
மஞ்சள் நிற கொல்லாம்பழங்கள் காய்க்கும் மரங்கள் எண்ணிக்கையில் அதிகமாக தேரிப்பகுதியில் உள்ளது.
ஒரு மஞ்சள் நிற பழத்தை பிழிந்தால், ஒரு டம்ளர் சாறு கிடைக்கும் அளவிற்கு பெரியது இம்மஞ்சள் நிற பழங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் கோடையை தாக்குப்பிடித்து வளரும் சிகப்பு பழம் காய்க்கும் மரங்கள் அதீத சுவை கொண்ட கொல்லாம்பழங்களை தருகிறது. சிகப்பு என்றாலே மக்களுக்கு அதிகம் நன்மை தரக்கூடியது என்பதற்கு கொல்லாமரங்களும் ஓர் சாட்சி.
இக்கிராமத்தை முக்கால்வாசி தேரிமணல் சூழ்ந்து கொண்டுள்ளது. தேரிமணலால் சூழப்பட்ட தீபகற்பம் போல் தேரிக்குடியிருப்பு கிராம வரைபடம் உள்ளது. இதன் மத்தியிலே தார் பாலைவனம் போல் பரந்து விரிந்து கிடப்பது தான் பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு.
பெரும்பாலான வீடுகளின் ஒருபக்கம் பாதியளவு தேரிமணலில் மூழ்கிப்போயிருப்பதை நாம் நேரில் காண இயலும். இங்கு இருக்கும் ஒரு மேல்நிலைப் பள்ளியும் தேரிப்பகுதியிலேயே அமைந்துள்ளது.
தேரிமணலில் வயதானவரும், இளைஞர்களும் குழந்தைகள் போல, தத்தக்கா… பித்தக்கா நடைநடந்து தாழம்போட்டு தான் கடந்துவரஇயலும். மணலின் அடர்த்தியில் இருகால்களும் புதைந்து கொள்ளும்.
எந்த நிற ஆடை உடுத்தி தேரிமணலில் உலா வந்தாலும், ஆடைகள் அனைத்தும் செம்மையாக சிகப்போடு ஐக்கியமாகி விடுகின்றன.
தற்போதைய நிலை:
தேரியில் மக்கள் குடியிருந்ததால் தேரிக்குடியிருப்பு என பெயர் பெற்றது இக்கிராமம். தற்போது, மழையின் அளவு குறைந்ததால் தேரிமணலில், நிலத்தடி நீராதாரம் குறைந்து வரும் சூழ்நிலையிலும், இக்கிராமத்தில் சுவையான நிலத்தடி நீர் குறைந்த அளவு குடிநீராக கிடைத்து வருகிறது. ஆனால் அது குடிநீருக்கும், விவசாயத்திற்கும் போதுமானதாக இல்லை.
இங்கே உள்ள பொட்டல்குளத்திற்கு தண்ணீர் வந்தே பலவருடமாகிறது. தேரிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குளங்களும் வாய்க்கால்களும் வானம் பார்த்தபடி ஏங்கிக் கிடக்கின்றன.
மண் அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீருக்கு அரணாய் இருந்த விராலிச் செடிகளும், கொல்லாமரங்களும் பெருமளவில் சமூக விரோதிகளால் அழிக்கப்பட்டு வருவதாலும், அதிலும் குறிப்பாக விராலிச்செடிகள் வேரோடு பிடுங்கப்பட்டு மூலிகை விற்பனை என்ற பெயரில் எடுத்துச் செல்லப்படுவதாலும் இங்குள்ள சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தேரிக்குடியிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வனத்துறையும் தமிழக அரசம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தேரிக்காட்டை மணல் மாபியாக்களிடமிருந்து பாதுகாக்கவும் ( திருநெல்வேலி மாவட்டத்தின் பல பகுதிகளில் தேரிமணல் பெருமளவில் தோண்டப்பட்டு தேரிப்பகுதியே கட்டாந்தரையாக மாற்றப்பட்டுள்ளது) மீண்டும் நிறைய கொல்லாமரங்களை நட்டு பராமரித்து, தேரிமணலை நிலைநிறுத்தவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் குரலாய் ஒலிக்கிறது.
தேரிக்காட்டு கொல்லாம்பழத்திற்கு மணப்பாடு மல்லிகையான மீன்கள் இன்றளவும், பண்டமாற்று முறையில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
ஏற்கனவே தவறான இடத்தில் அதாவது நீர்பிடிப்பு பகுதியான உடன்குடி தருவைக்குளத்தில் மணலை நிரப்பி அதன் மேற்பரப்பில் அனல்மின்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால், குளத்தை மண்போட்டு மூடிவிட்ட நிலையில் நிலத்தடி நீராதாரம் திருச்செந்தூர் வட்டார கிழக்கு பகுதி கிராமங்களில் இல்லாமலே போய்விட்டது.
இந்நிலையில் கடற்கரையிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் மேற்கே அமைந்துள்ள தேரிக்குடியிருப்பு போன்ற கிராமங்களிலும் குளங்களில் வறட்சி என்பது, நீர்; மேலாண்மை என்ற ஒன்று ஆளும் அரசுகளால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது.
ஏற்கனவே தூத்துக்குடி கோவை போன்ற நகரங்களில் தண்ணீர் விநியோகத்தை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்த ஆளும் அரசாங்கம் கிராமங்களை பாலைவனமாக்காமல் விடமாட்டோம் என கங்கனம் கட்டிக்கொண்டு அழிவுப்பூர்வமான ஆட்சியை நடத்துகிறது.
தோழர் தமிழ்ச்செல்வனின் ‘ஜிந்தாபாத் ஜிந்தாபாத் “ எனும் புத்தகத்தில் வரும் வரிகள் இந்த தேரிக்காட்டு கொல்லாமரங்களுக்கும் பொருந்தும்.
"60 ஆண்டு கால இந்திய சுதந்திரம் தொழிலாளிகளுக்கு இந்திய திருநாட்டின் அச்சாணி நாம்தான் என்கிற பெருமித உணர்வை ஏற்படுத்தவில்லை. பிரச்சனை பண்ணாம ஒழுங்கா சட்டப்படி வேலை செய்யாட்டி வேலை போயிடும். குழந்தை குட்டிகள் தெருவிலே நிற்கும் என்கிற அச்ச உணர்வையே இந்திய சுதந்திரம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வாரி வழங்கியிருக்கிறது”.
அச்ச உணர்வு மனிதனை வேண்டுமானால் எளிதில் பீடித்துக்கொள்ளலாம். ஆனால் மரங்களை அவ்வுணர்வால் ஏதும் செய்ய முடியாது என்றே இக்கிராம மக்களும் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களின் கண்முன்னே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் பத்திரமாக வளர்வதாக நினைத்த, நிலத்தடி நீருக்கு நாம்தான் ஆதாரம் என்று பெருமிதம் கொண்ட கொல்லாமரங்கள் மழையின்றியும், நீரின்றியும் மணல் கொள்ளையாலும் வதங்கிப் போய் நிற்கின்றன.
ஆம், ஒரு கொல்லாமரம் கொலை செய்யப்படுகிறது நம் கண்முன்னே. அதாவது சுதந்திர இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வளரும் கொல்லாமரம்.
- சுதேசி தோழன்
- பசுவினங்களும் பால் உற்பத்தியும்: நேற்று, இன்று, நாளை
- விலங்குகளில் செயற்கை முறை கருவூட்டல்
- இன்றைய வணிகக் கோழி உருவான அறிவியல்
- சீமைக் கருவேல மர அழிப்பில் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
- நாம் ஏன் யானைகளை நேசிக்கிறோம்?
- திசைகாட்டி தாவரம் தெரியும்?
- வேப்பமரத்தில் பால் வடிவது அம்மன் சக்தியாலா?
- மரத்தை வெட்டு எனும் முழக்கம் ஏன்?
- தூக்கணாங்குருவியின் சமூக வாழ்க்கை
- நம் உயிராதரங்களான காடுகளைப் பாதுகாக்க வாருங்கள்!
- சுற்றுப்புற வளமையில் காகத்தின் பங்கு
- இன்றைய உலகில் அயன மழைக் காடுகளின் சீரழிவும் பிரச்சினைகளும்
- பாரம்பரியத்தை பறைசாற்றும் பனைமரம் பாதுகாக்கப்படுமா?
- வானகமே... இளவெயிலே... மரச்செறிவே...!
- மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு - செய்ய வேண்டியவை என்ன?
- தாவரங்களுக்கு உணர்வு உண்டா?
- தூக்கணாங்குருவி
- அழிவை நோக்கி நீலகிரி அறிக்குருவி (Nilgiri Pipit)
- தேசம் எங்கும் நாசகாரி பயிர்கள்!
- பிஞ்சு வெளவாலுடன் ஓர் இரவு