எறும்புகளின் கூட்டு வாழ்க்கையில் காணப்படும் ஒரு சுவையான நிகழ்வு இப்போது ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தங்களுடைய வாரிசுகளை பிரசவிக்கும் பொறுப்பை ஏற்கும் பெண் யார் என்பதை வேலைக்கார எறும்புகள்தான் முடிவு செய்கின்றன என்பதுதான் அந்த சுவையான நிகழ்வு. 

ant_378ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த எறும்புக்கூட்டங்கள் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டன. ஸ்பெயின் நாட்டு எறும்புக்கூட்டத்தில் மட்டும் இராணி எறும்பை வேலைக்கார எறும்புகளே தேர்ந்தெடுக்கின்றனவாம். இந்தப் போட்டியில் ஈடுபடும் மற்ற இராணி எறும்புகளை வேலைக்கார எறும்புகளே கொன்றுவிடுகின்றன. ஆனால் இங்கிலாந்து நாட்டின் எறும்புக்கூட்டம் இந்த அளவிற்கு தீவிரம் காட்டுவதில்லை. இராணி எறும்புகளின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அவை கீழ்படிந்து போய்விடுகின்றனவாம். லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் Proceedings of the Royal Society B இதழில் வெளியிடப்பட்டுள்ளன.  

சிலவகை எறும்புகள் பயிர்களை அழித்தொழிக்கும் தன்மை உடையவை. இவை நாடுவிட்டு நாடு  மட்டுமன்றி கண்டம் விட்டு கண்டம் பரவி ஏராளமான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. எறும்புகளின் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக அவற்றின் சமூக கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாகவே அவை கண்டம் விட்டு கண்டம் பரவியுள்ளன. அழித்தொழிக்கும் பண்பில்லாத எறும்புக்கூட்டங்களின் சமூக கட்டமைப்பை தெரிந்துகொள்வதன் மூலம் மாற்று குழுக்களின் சமூக கட்டமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. நான்கு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ள செய்தி: ஸ்பானிஷ் எறும்புக்குழுக்கள் மட்டுமே ஒற்றைக்குடும்ப அமைப்பிலானவை. இங்கு ஒரே ஒரு இராணி எறும்பு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து எறும்புக்குழுக்கள் சிக்கலானவை. அங்கே பல குடும்பங்களின் கலவையாக எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. வாரிசுகளை உற்பத்தி செய்யும் பணியில் பல இராணி எறும்புகள் அனுமதிக்கப்படுகின்றன. 

மனித இனம் உட்பட அனைத்து உயிரினங்களும் சமூக குழுக்களாகவே வாழ்கின்றன. குழுவின் உறுப்பினர்களிடையே சச்சரவும், வாக்குவாதமும் உண்டாவது உறுதி. எறும்புக்கூட்டங்கள் இலட்சக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கவை. இவ்வளவு காலம் அவை வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அவற்றிற்கிடையே கூட்டுறவு இருக்கவேண்டியது மிகவும் அவசியம்.  தங்களுடைய குழுக்களில் ஏற்பட்ட சச்சரவுகளை அவை எவ்வாறு தீர்த்துக்கொண்டன என்பதை ஆராய்வது சுவையானது மட்டுமல்ல, முக்கியமானதும்கூட. கூட்டமாக வாழும் அனைத்து உயிரினங்களிலும், வாரிசுகளை பெற்றுக்கொடுக்கும் உரிமையை யாருக்குக்கொடுப்பது என்பதை முடிவுசெய்வதில் ஓர் ஒழுங்கு காணப்படுகிறது. காலாஹரி பாலைவனத்தில் வாழக்கூடிய மங்கூஸ் குடும்பத்தைச் சேர்ந்த மீர்காட் என்னும் பாலூட்டியின் அனைத்து பெண் உயிரிகளும் இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுத்த சில மீர்காட்டுகள் மட்டுமே வாரிசுகளை பெற்றுக்கொடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இது போன்றே பாலைவனத்தில் வாழும் mole rats இனத்தில் ஒரே ஒரு இராணி எலி மட்டுமே வாரிசுகளை உற்பத்தி செய்யும் உரிமையை பெற்றுள்ளது. 

சிங்கக்கூட்டத்தில் குழுவில் உள்ள அனைத்து பெண் சிங்கங்களும் வாரிசுகளை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படுகின்றன. 'twig ant’ எனப்படும் குருத்து எறும்புகளை லீசெஸ்டர் விஞ்ஞானிகள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு எறும்புக்கூட்டிலும் ஒன்றிற்கு மேற்பட்ட இராணி எறும்புகள் காணப்பட்டன. ஆனால் ஸ்பானிஷ் எறும்புகளிடையே ஒரே கூட்டில் உள்ள பல இராணி எறும்புகளும் இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலைப்பெற்றிருந்தாலும் ஒரே ஒரு இராணி எறும்பு மட்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டது. இந்த இராணி எறும்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை வேலைக்கார எறும்புகள் பெற்றிருந்தன.

ஒரு இராணி எறும்பைத்தவிர பிற இராணி எறும்புகளை அடித்துக்கொல்லுவதும், ஒரே ஒரு இராணி எறும்பு தன்னுடைய வாழ்நாள் முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதும் காணப்பட்டது. வேலைக்கார எறும்புகளின் இந்த ஆதிக்கம் எல்லா குருத்து எறும்புக்குழுக்களிலும் ஒன்றுபோல் இல்லை என்பதுதான் ஆய்வின் முடிவு. ஸ்பானிஷ் எறும்புகளின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து பகுதிகளில் உள்ள எறும்புக்குழுக்களில் காணப்படவில்லை. ஸ்பெயினில் எறும்புக்குழுக்கள் ஒரே குடும்பமாக இருக்கையில் பிற நாடுகளில் பலகுடும்ப எறும்புக்குழுக்கள் காணப்படுகின்றன. குருத்து எறும்புகளின் வியத்தகு இந்த நடத்தைக்கு மரபியல், சூழியல் காரணிகளின் தாக்கம் குறித்து இனிமேலும் ஆராய இருப்பதாக லீசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/11/101102191839.htm 

Pin It

"தக்கவையே வாழும்'' என்பது டார்வினின் சித்தாந்தம். சுற்றச் சூழலுக்கு எது தக்கதாக இருக்கிறதோ அதுவே வெற்றியுடன் வாழும், ஏனையவை இயற்கைத் தேர்வில் வாழத் தகுதியிழந்து மறைந்து, சந்ததிகள் இல்லாமல் அழியும் என்பது டார்வின் விதி. நாய்களைப் பொருத்தவரை டார்வின் குறிப்பிடும் இயற்கைத் தேர்வினை விட மனிதர்களின் செயற்கைத் தேர்வே அவற்றின் பரிணாமத்தை நிர்ணயிக்கின்றன.

dog_298பூனை, நரி, ஓநாய், புனுகு பூனை, கரடி போன்ற விலங்குகளுக்கு நெருங்கிய இனம்தான் நாய்கள். இருந்தாலும் அவற்றின் தலை அமைப்புகளில் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்டிராத அளவுக்கு பிரமிப்பூட்டும் அளவுகளில், வடிவங்களில் நாய்களின் கபால அமைப்புகள் மாற்றமடைந்திருக்கின்றன. இத்தனை மாற்றங்களும் கடந்த சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் உண்மை. 

புல்டாக், பூச், டாபர்மேன், பாமரேனியன், கண்விழி பிதுங்கியிருக்கும் சிக்குவாக்குவா, கோல்லி, ராஜபாளையம் என்று குறைந்தது 500 வகை நாய் வகைகள் உலகில் மனிதனது செயற்கை இனவிருத்தி முறைகளால் தோன்றியுள்ளன. 

நாய் ஒரு மாமிச பட்சனி. ஆனால் தன்மானமுள்ள எந்த ஒரு மாமிச பட்சனியாவது நாயின் தலை அமைப்பைப் பார்க்க நேர்ந்தால் அது அவமானத்தால் குன்றிப் போய்விடும். அந்த அளவுக்கு நாய்களின் தலை இஷ்ட்டத்திற்கு பல டிசைன்களில் மாற்றப்பட்டிருக்கிறது. வேட்டை ஆட வேண்டியதில்லை, கடித்துக் குதறி சாப்பிட வேண்டியதில்லை என்பதால் வீட்டு நாய்களின் வாய், பற்கள், கபாலம் ஆகியவை பிஸ்க்ட், கடலை, தயிர்சாதம் சாப்பிடும் வகையில் மிருதுவாகிவிட்டது. எஜமானனின் செருப்புத்தான் ஒரு நாய் தன் வாழ்நாளில் கடித்துக் குதறும் மிகவும் கெட்டியான பொருள் என்றால் அது மிகையாகாது.

மான்செஸ்ட்டர் பல்கலைக்கழக விலங்கியல் அறிஞர் டிரேக் என்பவர் மாமிசப் பட்சனிகளின் கபாலத்தில் குறிப்பிடத்தக்க 50 வகை அமைப்புகளை அளந்து அவை நாய்களிடம் எப்படி இருக்கிறது என்று கணக்கிட்டுப் பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சிதான் எஞ்சியது. அத்தனை தூரத்திற்கு நாய்களின் கபால அமைப்பு மாறியிருந்தது.

மனிதன் நாய்களின் திறமையை விட அவற்றின் வெளித் தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் டார்வினின் விதியில் சிறு திருத்தம் ஏற்பட்டது. வலுவுள்ளவை வாழும் என்பதற்கு பதிலாக அழகுள்ளவை வாழும் என்று மாறிவிட்டது. இது நாய்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதை தயவு செய்து நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏனெனில் இன்னமும் (நாய்களைத் தவிர) டார்வினின் தக்கவையே வாழும் என்ற கொள்கையே நிலவுகிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

வெயில் காலத்தில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிக்கும்போது மனிதர்களுக்கு வியர்க்கிறது. உடல் வெப்பத்தை வியர்வை எடுத்துக்கொண்டு ஆவியாவதால் உடல் சூடாகாமல் பாதுகாக்கப்படுகிறது. மனிதர்களுக்கு வியர்வை ஒரு பாதுகாப்பு அமைப்பு. ஆனால், பறவைகளுக்கு வியர்ப்பதில்லை. சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு உடல்வெப்பநிலையை மாற்றியமைத்துக் கொள்ள அவைகளின் அலகுகள் உதவுவதாக ஆஸ்திரேலியா, கனடா நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை ஆகஸ்டு மாத American Naturalist இதழில் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பறவைகளின் பரிணாம வளர்ச்சி சுற்றுப்புற வெப்பநிலையை சார்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்பாக உலகெங்கும் காணப்படும் பல்வேறு வகையான பறவைகளின் அலகுகள் ஆராயப்பட்டன. 

bird_356வெப்பச்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளமாகவும், குளிர்சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் குட்டையாகவும் காணப்படுகின்றன. பறவை அலகுகளின் அமைப்பு, தோற்றம் இவையெல்லாம்  உணவைப்பெறுவதற்காகவும், எதிர்பாலினத்தை ஈர்ப்பதற்காகவும் மட்டுமே என்கிற பழைமையான கருத்து இப்போது மெருகூட்டப்பட்டுள்ளது. பறவைகளுக்கு ஒரு ‘ரேடியேட்டரா’க அவற்றின் அலகுகள் செயல்படுகின்றன என்கிற புதிய உண்மை வெளிப்பட்டுள்ளது. 

toucans, African barbets and tinkerbirds, Australian parrots, grass finches, Canadian gamebirds, penguins, gulls and terns உட்பட்ட 214 பறவையினங்கள் அவை வாழும் அட்ச, தீர்க்க ரேகை கோடுகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டன. அவை வாழும் வெப்பதட்ப நிலைக்கேற்ப அலகுகளின் நீளம் அமைந்திருந்தது. குளிர்ச்சியான சூழலில் வாழும் பறவைகளின் அலகுகள் நீளம் குறைவாக இருந்தன. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பறவைகளின் அலகுகள் ஒரு ரேடியேட்டரைப் போன்று செயல்படுவதும், ரேடியேட்டர் தேவையில்லாத பறவைகளின் அலகுகள் நீளம் குறைந்து இருப்பதும் கண்டறியப்பட்டது. 133 ஆண்டு பழமையான ஆலன் விதியின்படி, உலகின் குளிர்பகுதிகளில் வாழும் விலங்குகளின் கைகள், கால்கள், வால், காதுகள் அனைத்தும் அளவில் சிறியனவாக இருக்கும். ஒரு பெரிய பறவைதொகுதியுடன் ஆலன் விதி முதன்முதலாக ஆராயப்பட்டு சரிபார்க்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. 

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2010/06/100623104428.htm

Pin It

பூக்களின் உலகம் அழகானது. பட்டாம் பூச்சிகளின் அழகு விந்தையானது. பறவைகளும் கவர்ச்சியானவை. இந்த வரிசையில் மீன்களின் உலகமும் அலாதியானது. பவளப்புற்றுப் பகுதிகளில் கடற்பாசிகள் அழகு கூட்டுகின்றன. பலவண்ண மீன்கள் அணியணியாய் பவளப்புற்றுகளினூடே துடுப்பசைத்து நீந்திச் செல்கையில் உலகின் வனப்புமிகுந்த ரோஜாத் தோட்டம் நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கடல் சூழல் அற்புதமானது. மீன்களின் உலகத்தில் சிறுபயணம் போகலாம் வாருங்கள்.

பரிணாமத்தின்போது இயற்கை மும்முறையாவது இறக்கைகளை பிறப்பித்திருக்கிறது. பூச்சிகள் (தாம்) முதன்முதலில் இறக்கையுடன் பறக்கத் துவங்கின. பல இலட்சம் வருடங்களுக்குப் பிறகுதான் பறவைகள் தோன்றின. இறகுகள் பறவைகளுக்கே உரியவை. மூன்றாவது முறையாக பாலூட்டிகள் (வெளவால்கள்) பறக்கத் துவங்கின. அனால் இறக்கைகளில்லாமல். புஜம்,  முழங்கை, கை இவற்றுக்கிடையில் அமைந்த ஜவ்வுதான் பறப்பதன் உபகரணம். ஆகாயத்தில் காற்றைப் பின் தள்ளிப் பறக்கலாம். கடலிலும் நன்னீர்ப் பறவைகளிலும் நீரைப் பின்தள்ளி முன்னேறலாம். இதன் பெயர் நீச்சல். தவளைகள் தாவும், பல்லிகள் ஊர்ந்து போகும். பூனையும் மனிதனும் நடப்பவை. பறவைகள் நடக்கும், நீந்தும், பறக்கும். மீன்கள் நீந்தும். இவை எல்லாமே முதுகெலும்பிகள், நாற்காலிகள். நகர்தலுக்காக, சூழலுக்கேற்ப, வாழிடத்துக்கேற்ப நான்கு கால்களும் தகவமைத்துள்ளன.

மீன்களின் துடுப்பும் பறவைகளின் இறக்கையும் மனிதனின் கைகளும் அடிப்படையில் ஒரே மாதிரியானவை. இயற்கைச் சிற்பி வடிவமைத்த அற்புத உறுப்புகள்! மீன்களின் உடலை மூடிப் பொதித்து பாதுகாக்கச் செதில்கள் உள்ளன. பறவைகளுக்கு இறகுகள், மனிதனுக்கு உரோமம். ஆதி மனிதனின் உடல் முழுவதும் உரோமமிருந்தது. நாகரிக மனிதன் உடைகளுக்குப் பழகிய பிறகு உரோமம் அழகு சார்ந்த விஷயமாகவும் கருதப்பட்டது. இமைகளிலும், நாசித்துளைகளிலும் மயிநீட்சியின் தேவை இன்னும் உணரப்படுகிறது. பாலின வேறுபாட்டைக் காட்டி இருதரப்புக் கவர்ச்சியை ஏற்படுத்துவதிலும் மயிர் வளர்ச்சிக்கு முக்கிய பங்குண்டு.

பூமிப்பரப்பில் எல்லாவுயிர்களுமே உறவுக்காரர்கள். மனிதனும் பாக்டீரியாவும் தூரத்துச் சொந்தம். தூரம் கொஞ்சம் அதிகம். மனிதனும் குரங்கும் நெருங்கிய உறவினர்கள்; ரத்த சம்மந்தம். குரங்குகள் மனிதனின் முன்னோர் அல்ல. குரங்கும் மனிதனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்! இரத்த வெதுவெதுப்பு என்றால் உங்களுக்குப் புரியும். உங்களுக்கும் எனக்கும் பறவைக்கும் காயம்பட்டால் சிந்தும் குருதியில் வெதுவெதுப்பு இருக்கும். பாம்பு, பல்லி, தவளை, மீன் இவற்றின் இரத்தத்தில் இந்த வெதுவெதுப்பு கிடையாது. மேனாட்டினர் குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள். அன்பைப் பரிமாறிக்கொள் வெதுவெதுப்பைப் பகிர்வதாய்ச் சொல்வார்கள். நீதான் என் வாழ்க்கையில் எல்லாமே என்பதற்குப் பதிலாக என் வாழ்க்கையின் சூரிய வெளிச்சம் நீதான்’ என்பார்கள்.

உடல் வெதுவெதுப்பை இழந்துவிட்டால் சடலம். ‘கொடூரமான கொலை’என்பதை ஆங்கிலம் பேசுபவர்கள் ‘குளிர்க் குருதிக் கொலை என்பார்கள். உடலின் வெப்பத்தை ஒரே சீராக வைத்துக் கொள்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் தேவை; நிறைய சக்தி செலவாகும். உடல் வெப்பநிலையைச் சூழலே கட்டுப்படுத்த அனுமதித்துவிட்டால் சிரமமில்லை. சக்தி மிச்சமாகும். மேனாட்டினரின் உணவில் பெரும்பகுதி உடல் வளர்ச்சிக்குப் போகிறது. வெப்பப் பிரதேசத்தில் வாழும் நமக்கு உடல் வெப்பத்தை சீர்படுத்துவதிலேயே அதிக சக்தி (சத்து) கரைந்துவிடுகிறது. பிரதமான வெப்பநிலையில் உழைப்பும் உற்பத்தியும் அதிகமாகவே இருக்கும். கதை எழுதுபவர்களும் கலைஞர்களும் கோடை ஓய்விடங்களைத் தேடிச் செல்வதன் இரகசியம் வேறொன்றுமில்லை. வெப்ப இரத்த விலங்குகளினுடையதைவிட குளிர் இரத்த விலங்குகளின் இறைச்சி ஆரோக்கியமானது. பாதுகாப்பானது. தொகுப்பு குறைந்தது. நீர்வாழ் உயிரினங்களை கடலிலும் நன்னீரிலும் கிடைக்கும் மீன் முதலிய விலங்குகளை நாம் விரும்பி உண்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

மீன் என்றால் என்ன? அடிப்படையில் மீன் நீர்வாழ் உயிரினம். உயிரியல் அடிப்படையில் வரையறுத்துச் சொல்வதானால் செதில்களால் மூடப்பெற்று செவுள்களால் மூச்சுவிடுகிற, துடுப்புக்கொண்ட, நீர்வாழ் குளிர் இரத்த முதுகெலும்பி வணிக நோக்கில் நீர்நிலைகளிலிருந்து கிடைக்கப்பெறும் எல்லா விலங்கு உயிரினங்களையும் மீன் என்கிறார்கள். இரால், நண்டு போன்றவை கணுக்காலிகள்; கணவாய் மெல்லுடலி; கடல் அட்டை முட்தோலி; ஆமைகள் ஊர்வன; டால்பின், திமிங்கிலம் போன்றவை பாலூட்டிகள் (குட்டிகளை ஈன்று தரும்) நுரையீரலால் காற்றைச் சுவாசிப்பவை. எத்தனை ஆழத்தில் நீந்தினாலும் உயிர்க்காற்றைப் பெற நீர்ப்பரப்புக்கு மேல் அவ்வப்போது தலைகாட்டியாக வேண்டும்!

மீன்கள் பல நூறுவகைப்பட்டவை. வடிவிலும் அளவிலும் உணவு முறையிலும் மாறுபட்டவை. லாம்ப்ரே போன்ற மீன்கள் தாடையில்லாதவை. உணவைக் கவ்விக் கடித்து மென்று அரைத்து உண்ணத் தாடையும் பற்களும் தேவை. வேட்டையாடும் விலங்குகளைப் பொறுத்தவரை தாடைகள் என்பவை Ôஅசையும் சொத்து’ சுறா, திருக்கை இனங்கள் குருத்தெலும்பிகள். சில மீன்கள் செதிலற்றவை. உலகில் 29,400 மீனினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏராளம் மீன்களை இனிதான் அடையாளப்படுத்த வேண்டும். உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 0.01 விழுக்காடுதான் (ஆயிரத்தில் ஒருபகுதி) நன்னீர். ஆனால் மீனினங்களில் 40 விழுக்காடு இங்குதான் வாழ்கின்றன. இந்தியாவில் வாழும் 2500 மீனினங்களில் 930 இனங்கள் நதிகள், ஏரி, குளங்களில் வாழ்பவை இவற்றில் 350 இனங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

மீன் ஒரு குளிர் இரத்தப் பிராணி. சில விதிவிலக்குகளும் உண்டு. சில சூரை இனங்கள், சில சுறா இனங்கள், பட்டாம்பூச்சி அயிலை போன்றவை மீன்கள் நீர்வாழ்வன. நீண்ட நேரம் நீருக்கு வெளியே உயிரிடனிருக்கும் சில மீன்களும் உண்டு. மரமேறும் பெர்ச் மீன் ஒரு உதாரணம். இவை தரைக்கு வருகையில் தவளையைப் போன்று தோலால் மூச்சுவிடும், உணவுப் பாதையுடன் இணைந்திருக்கும் சவ்வுப் பைகளில் காற்றை இழுத்தும் மூச்சுவிடும்.

சாதாரண மீன்கள் ஒலி எழுப்புவதில்லை. சையானிடே குடும்பத்தைச் சார்ந்த மத்தள மீன் ஒலி எழுப்பும். மீன்களின் கேள்வித் திறன் இனத்திற்கு இனம் மாறுபடுகிறது. நீச்சல் பைகள் (காற்றுப் பைகள்) சில இனங்களில் கேள்விப் புலனுக்கு உதவுகின்றன. கடலின் ஆழத்தில் 700 மீட்டருக்கு கீழே வெளிச்சம் துப்புரவாக இராது. இங்கு வாகும் பெருமளவு மீன்களும் ஒலி உமிழ்பவை. ஒளி உமிழும் செல்களினால் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இரைகளை கவர்ந்திழுக்க, இணைகளை அழைக்க... இப்படி நிறைய நோக்கங்களை இந்த ஒளிரும் செல்கள் நிறைவேற்றுகின்றன. மீன்களால் ஒலி, ஒளி மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதல்ல. தென் அமெரிக்காவில் கத்தி மீன்களும் ஆப்பிரிக்காவில் யானை மீன்களும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. 20 முதல் 600 வோல்ட் மின்னழுத்தம் வரை Ôநான் அடிச்சா தாங்கமாட்ட, வீடு போயி சேரமாட்ட’ என்று எதிரிகளை எச்சரிப்பதற்கும் இரைகளை இமைப்பொழுதில் லபக்கென்று விழுங்குவதற்கும்தான் இந்த அதிர்ச்சி வைத்தியம்!

இனப்பெருக்கம் செய்வதில் கில்லாடி மீன் ஹில்ஷா. இருபது சென்டிமீட்டர் நீளம் கொண்ட ஹில்ஷா மீன் பதினாறு இலட்சம் முட்டைகளை ஏக காலத்தில் இட்டுத்தள்ளும். குஞ்சுகளை பேணுவதில் 25 விழுக்காடு மீன் இனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்கின்றன. குஞ்சு மீன்களைப் பேணுவதில் தந்தை மீன்கள்தாம் பெரும் பொறுப்பை எடுத்துக் கொள்கின்றன.

பூக்களும் பட்டாம்பூச்சிகளும் நிலத்தில் அழகு சேர்ப்பதுபோல் கடலில் மீன்கள் அழகு கூட்டுகின்றன. பவளப்புற்றுகள் இயல்பான நிறம் சூசாந்தெல்லே என்றும் பாசிகளால் உருவாகின்றன. இங்குள் கர்தினால் மீன், தூண்டில் மீன், பட்டாம்பூச்சி மீன், கிளிமீன், டாம்செல், ராஸ் மீன்கள் எல்லாமே பிரகாசமான நிறங்கள் கொண்டவை. பாதுகாப்பு மற்றும் இரைதேடும் காரணங்களுக்காக மீன்களின் முதுகுப் பகுதியில் பிரகாசமான நிறமும் அடிப்பகுதியில் வெளிறிய நிறமும் கொண்டிருக்கும். மீனை மேலிருந்து பார்த்தால் ஆழக்கடலின் இருண்ட நிறத்தோடு பொருந்தும், கீழிருந்து பார்த்தால் மேற்கடலின் வெளிறிய நிறத்தோடு பொருந்தும்.

கிரேட் பாரியர் ரீஃப் பகுதியில் வாழும் குண்டுப் பாப்பா மீன்தான் (ஷிண்ட்லேரியா ப்ரெவிபிங்குயிஸ்) உலகிலேயே மிகச்சிறிய மீன்வகை. பருவ வயதில் இதன் அதிகபட்ச நீளம் ஏழே மில்லி மீட்டர். மிகக் குறைந்த ஆயுசுள்ள மீன் பவளப்புற்றுகளில் வாழும் மிக்மி கோபி. வெறும் 59 நாள் ஆயுள். இந்தோனேசிய பசிபிக் பாய்மீன் (இஸ்டியோஃபோரஸ் ப்ளாடிடீரஸ்) நீச்சலில் அதிவேகம் காட்டுகிறத. மணிக்கு 110 கிலோ மீட்டர்! ரிங்க்கோடோன் டைபஸ் என்னும் திமிங்கல சுறாக்கள் குருத்தெலும்பி வகையில் நீளமானவை. 18 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. முதுகுநாண் உள்ளவற்றில் நீளமான இனம் துடுப்பு மீன் (ரெகாவிகஸ் க்ளெனே) 17 மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. எடை அடிப்படையில் சூரிய மீனுக்கு தான் (மோலா மோலா) முதலிடம். 2300 கிலோ!

இராட்சத ஆக்டோபஸ்கள் 5 மீட்டர் வரை வளர்கின்றன. அதிகபட்ச எடை 34 கிலோ. பழங்கதைகளில் வருவதுபோல் இவை இராட்சதத் தன்மை கொண்டவையல்ல. மென்மையானவை. வெட்கி, அஞ்சி ஒதுங்குபவை. சில இராட்சதக் கணவாய் மீன்கள் சுமார் 20 மீட்டர் நீளமும் (ஆறு வழிச்சாலையின் அகலம்) 1000 கிலோ எடையும் கொண்டவை. முதுகு நாணற்ற கடல் இனங்களில் பெரிது இதுதான். ஆம் கடலின் பாதாளங்களிலும் சில மீன்கள் வாழ்கின்றன. கஸ்க் ஈல் எனப்படும் மீனை 8,370 மீட்டர் ஆழமுள்ள போர்டோ ரிகோ கடற் பாதாளத்தில் பிடித்துள்ளனர். பாதாளக் கடலின் விசேஷம் என்ன? காரிருள், பிராணவாயு பற்றாக்குறை,

உணவு பஞ்சம், உயர் அழுத்தம் கடுங்குளிர் இவைதான் அங்குள்ள தனித்துவமான சூழல். கடலில் ஆழத்துக்குப் போகப் போக அழுத்தம் அதிகரிக்கும் காற்று  மண்டலத்தின் அழுத்தம் கடல்மட்டத்தில் ஒரு அலகு என்று எடுத்துக் கொண்டால் பத்து மீட்டர் ஆழத்துக்கு ஒரு அலகு அழுத்தம் அதிகரிக்கும். எட்டாயிரம் மீட்டர் ஆழம் என்றால் எண்ணூறு மடங்கு அழுத்தம்! மீன்கள் பொதுவாக புரதம் மிகுந்தவை கொழுப்பு குறைந்தவை. ஆனால் மேற்கடலில் (கரைகடலில்) வாழும் சார்டின் (சாளை) எரிங் போன்ற இனங்களில் கொழுப்பு அதிகம். மீன் கொழுப்புகள் அபாயம் குறைந்தவை மட்டுமல்ல, பிற கொழுப்புகள் ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கவல்லவை. ஒமேகா- 3- கொழுப்பு அமிலம் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.  

உலக அளவில் மீன் சாப்பிடுபவர்களில் இதய நோய் பாதிப்பு குறைவுதான். ஸ்டர்ஜன் மதிப்பு கூட்டிய மீன் பண்டத்துக்கு கவியார் (caviar) என்று பெயர் உலக அளவில் விலையுயர்ந்த உணவு இததான். ஒரு கிலோ கவியாரின் மதிப்பு 700 அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாயில் 35,000-. ஈரான்தான் கவியாரை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.  இதற்கு அடுத்தபடியாக வரும் மீன் பதார்த்தம் சுறா துடுப்பின் நார்ப் பொருளிலிருந்து தயாராகும் சூப். பாடம் செய்த சுறாத் துடுப்பின் நார்கள் (இழைகள்) ஒரு கிலோ முப்பதாயிரம் ரூபாய் வரை பெறும். சிங்கப்பூர், ஹாங்காங் சந்தைகளில் இதற்கு ஏக கிராக்கி, இரால், நண்டு தோடுகளிலிருந்து பெறப்படும் கைடின், கைடோசான், க்ளுகோஸமைன் ஆகிய மூன்று பொருட்களுக்கும் ஏராளம் ஆனவப் பயன்பாடும் மருத்துவப் பயன்பாடும் உண்டு.

மீன்களில் காற்றுப் பைகளும் உண்டு. நன்னீர் மீன்களின் உடலளவில் ஏழு விழுக்காடு அளவும், கடல் மீன்களுக்கு ஐந்து விழுக்காடு அளவும் காற்றுப் பைகள். இஸின் கிளாஸ் என்னும் பொருள் இதிலிருந்து கிடைக்கிறது. பீர் மதுபானத்தைத் தூய்மைப்படுத்த இஸின் கிளாஸ் பயன்படுகிறது. பாகவத புராணம் திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றாக மச்சாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. (மச்சம்=மீன்) மனுவையும் ஏழு முனிவர்களையும் காக்க திருமால் மீனாக அவதரித்ததாக பாகவதம் சொல்கிறது. இராட்சத பல்லி இனங்களான டைனோசர்களின் தோற்றத்துக்கு ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்னரே மீன்கள் தோன்றியிருக்க வேண்டும்.

லாடிமேரியா சலும்னி என்கிற வாழும் தொல்லியிரினத்தை முதன்முதலாக 1938இல்தான் கண்டுபிடித்தனர். தென் ஆப்பிரிக்காவின் சலும்னா ஆற்றின் முகத்துவாரத்தில் கிடைத்த இந்த மீனுக்கு ஏராளம் சிறப்புகள் உண்டு. தோடு போன்ற செதில்களுக்குப் பதிலாக கவசம், தரையில் ஊர்ந்து செல்ல உதவும் துடுப்புகள், காற்றைச் சுவாசிப்பதற்கான பைகள்... தரைவாழ், முதுகு நாண் விலங்குகளின் முன்னோர்கள் மீன்கள்தாம் என்பதற்கான ஆதாரங்களில் இவை முக்கியமானவை.

நானூற்று அறுபது கோடி ஆண்டுகளில் (பூமிப்பந்தின் வயது) பல்வேறு தருணங்களில் கட்டுப்பாடற்ற இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொன்மையான   உயிரினங்கள் பூண்டோடு அழிந்திருக்கின்றன. இராட்சதப் பல்லிகளின் அழிவு ஒரு உதாரணம். இயற்கைப் பேரிடரின் விளைவாக டைனோசார், டீரோசார், இக்தியோசார் முதலிய பல்லியினங்கள் அழிந்திருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர் மீனின் பல்லுயிர்வளம் அழிய வாய்ப்பிருக்கிறதா? இருக்கவே இருக்கிறது!

புவி வெப்பமாதல், துருவப் பனிப்பாறைகள் உருகிவழிதல், கடல் மாசுபடுதல், மிகை மீன்பிடித்தல், கட்டுப்பாடின்றி கடல்வளத்தை கொள்ளையிடுதல் என்பதாக நீண்ட வரிசையில் பிரச்சினைகள் அணிவகுத்து நிற்கின்றன. நிலம் சார்ந்த உயிரினங்களைப் போலவே மீனினங்களும் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. நாம் இல்லாமல் மீன்கள் வாழ்ந்துகொள்ளும்; மீனில்லாமல் மனிதனால் வாழ முடியாது. சூழலியலையும் பல்லுயிர் வளங்களையும் காப்பதில்தான் மனிதகுலத்தின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

(பூவுலகு மார்ச் 2010 இதழில் வெளியானது)

Pin It