கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒடிசாவின் கடலோரப் பகுதியை ஒரு சூப்பர் புயல் தாக்கிய பிறகு பாறைகளின் கவசத்துடன் உள்ள வனப் பரப்பையும் கண்டல் காடுகளையும் பாதுகாப்பதில் மையப்புள்ளியாக ஒரு கிராமப்புற பெண்கள் குழு கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுகிறது. மகாநதி டெல்ட்டாவில் புகழ்பெற்ற பூரி கோயில் மாவட்டத்தில் கண்டல்பா (Gundalba) கிராமம் மணற்பாங்கான ஒரு கடலோரப் பகுதி.
காட்டை ரோந்து சுற்றும் பெண்கள்
இங்கு உள்ள காட்டை மரம் கடத்துபவர்கள், வெட்டுபவர்களிடம் இருந்து திறனுடன் வேகமாக கையில் உள்ள வலிமையான மூங்கில் குச்சிகளை ஆட்டியும் மரத்தண்டுகளில் தட்டி ஓசை எழுப்பியும் 75 பேர் அடங்கிய பெண்கள் குழு பாதுகாக்கிறது. “குச்சிகளைத் தட்டி பத்து பேர் கொண்ட குழுக்களாக கண்காணிக்கிறோம். காட்டிற்குள் எல்லா இடங்களுக்கும் பரவலாக செல்கிறோம். விசில் ஊதுகிறோம்.
காட்டின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் எங்கள் விசில் சத்தத்தைக் கேட்டு, மரங்களின் தண்டுப்பகுதியில் குச்சிகளை தட்டும் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடுகின்றனர். குழுவினர் இந்த ரோந்து பணியை சுழற்சி முறையில் செய்கின்றனர். இந்த ரோந்துப் பணி உள்ளூர் மொழியில் தெங்கா பஹல் (thenga pahal) என்று அழைக்கப்படுகிறது.
1999 சூப்பர் புயல் வட இந்திய கடற்பகுதியை தாக்கி பேரழிவை ஏற்படுத்திய பிறகு பெர்ஜஹேனியா வான் ஸுராக்ய சமிதி (Pir Jahania Van Surakhya Samiti) என்ற பெயரில் அமைந்த தன்னார்வத்துடன் செயல்படும் இந்த பெண்கள் குழு தொடங்கப்பட்டது” என்று குழுவின் செயலாளர் 52 வயதான சாருலதா பிஸ்வால் (Charulata Biswal) கூறுகிறார்.
கிராமப்புற இயற்கைப் பாரம்பரியத்தை மீட்டதற்காக இக்குழு 2012ல் முதல் ஐ நா வளர்ச்சித் திட்ட இந்தியப் பிரிவு உயிர்ப் பன்மயத் தன்மை விருதை (UNDP India Biodiversity Award) பெற்றது.
இறகுகள் போல கிளைகளை விரித்து நிற்கும் கேஷுவரீனா (Casuarinas) மற்றும் குட்டையான முந்திரி மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லையில் அஸ்டரங்கா (Astaranga) கடற்கரையோரம் உள்ள இந்த கிராமம் கடலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நன்கறிந்த அக்டோபர் 29 1999 புயலால் பெர்ஜஹெனியா (Pir Jahania) கோயிலுக்கு அருகில் உள்ள இப்பகுதியில் சூரிய காந்தி பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இப்போது இங்கு கடலலைகள் கரையை மென்மையாக வருடிச்செல்லும் காட்சியை காணலாம். “ அப்போது வீசிய புயலால் வீடுகள், தோட்டங்கள் அழிந்தன. மண் உவர் தன்மையுடையதாகியது. பல நாட்கள் உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை
குழந்தைகளுக்கு உடைகள் இல்லை” என்று புயலிற்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நினைவு கூறும் பிஸ்வால் “ஆனால் எங்கள் கிராமம் முழுவதும் அழியாமல் இருந்ததற்குக் காரணம் இந்த காடுகளும் கண்டல் செடிகளுமே. அவற்றாலேயே நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். இதற்கு பதில் காடுகளை பாதுகாக்க, உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க நாங்கள் உறுதிபூண்டோம்” என்கிறார். 75 ஹெக்டேர் பரப்புள்ள காட்டை காக்க 2001ல் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் வீதம் 70 பெண்கள் அடங்கிய வன பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது.
தேவி (Devi) நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்தில் 103 வீடுகள் உள்ளன. “தொடக்கத்தில் குழுவில் உள்ள பெண்களின் கணவர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இப்போது அவர்களும் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்” என்று வழிகாட்டி மற்றும் பூரி கௌரவ வனத் துறை சரகர் சொவார்கர் பிஹார (Sovakar Behera) கூறுகிறார். ஆண்கள் கரையில் பொருட்களின் விநியோகம், வீடு கட்டுதல், கிராமப் புணரமைப்பில் ஈடுபடுகின்றனர்.
குழுவினர் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை காட்டை ரோந்து சுற்றி வருகின்றனர். வீட்டு வேலைகளை முடித்த பிறகு காலை ஏழரை மணி முதல் காடு காக்கும் பணியைத் தொடங்குகின்றனர். பிறகு வீட்டுக்கு வருகின்றனர். மதிய உணவு உண்கின்றனர். வீட்டை பராமரிக்கும் வேலைகளை செய்து முடித்தபின் பகல் நேர ரோந்துக்கு செல்கின்றனர். ஆனால் பெண்கள் காட்டைப் பார்த்துப் பயப்படுவதில்லை. “காடு என்பது எங்கள் வீட்டின் விரிவாக்கமே. அதனால் நாங்கள் ஏன் பயப்படவேண்டும்?
காட்டின் மீது எங்களுக்கு உரிமையில்லை என்றாலும் நாங்கள் காட்டை பாதுகாக்கிறோம். ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை. உங்கள் குழந்தை கஷ்டப்படுவதை பார்க்க நீங்கள் விரும்புவீர்களா? இவ்வாறுதான் ஒவ்வொரு தாயும் நினைப்பாள். இந்த மரங்கள் எங்கள் காவியங்கள்! இந்த உணர்வு எங்களுக்குள் இயற்கையில் வந்தது. மரங்கள் மற்றும் எங்களின் வாழ்வை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள இது உதவுகிறது” என்று உள்ளுணர்வுடன் பிஸ்வால் கூறுகிறார்.
தற்போது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள குழுவினர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர்.” சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் பலரை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருடர்களை பயமுறுத்த சில சமயங்களில் நாங்கள் குச்சிகளை பயன்படுத்துகிறோம்” என்று குழு உறுப்பினர் ரஹிமா பிபை (Rahima Bibi) கூறுகிறார்.
காடு தரும் நன்மைகள்
மோதல்களைத் தவிர்க்க இதே காட்டை விறகிற்காக பயன்படுத்தும் அருகாமை கிராம மக்களுடன் குழு உறுப்பினர்கள் மேலாண்மை செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்து விறகு சேகரிக்க மாதத்திற்கு ஒரு நாள் ஒடுக்கப்பட்டுள்ளது. வேறொரு நாளில் அருகாமை கிராம மக்கள் விறகு சேகரிக்க கா காட்டிற்கு செல்கின்றனர்.
வழக்கமாக கண்டல்பா கிராமத்தினர் விறகு சேகரித்த மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு அருகாமை கிராம மக்கள் காட்டிற்கு வருகின்றனர். காட்டின் பாதுகாப்பு முழுவதும் குழுவினரிடமே உள்ளது. ஒற்றுமையுடன் வாழும் இந்து முஸ்லீம் சமுதாயத்தினர் இந்த பணியில் ஒன்றுசேர்ண்டு ஈடுபடுகின்றனர். வனப் பரப்பின் முக்கியத்துவம், சிறந்த காற்றுத் தடையாக விளங்கும் கண்டல் காடுகள் உயிரியல் பாதுகாப்பு அரணாக செயல்படுவது பற்றி குழுவினர் மற்ற இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இங்கு உள்ள மரங்கள் உவர் தன்மையுடைய காற்றை வேளாண் நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்கிறது. ஈரப்பதம் உள்ள காற்றை வயல்களுக்குள் விடாமல் பாதுகாக்கிறது. கண்டல் காடுகள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதி முழுவதும் காடுகள் வன உயிரினங்களை பாதுகாக்கின்றன. “சூப்பர் புயலின்போது சுமார் 30,000 கேஸுவரினா மரங்கள் அழிந்தன. கண்டல் காடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 70% பசுமைப் பரப்பு நாசமடநிதது.
கண்டல் செடிகளின் இலைகள் மக்கத் தொடங்கின. ஆனால் அவற்றின் வேர்கள் உயிருடன் இருந்தன. குழுவினர் செடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கேஸுவரினா மரங்கள் இப்பகுதியில் உள்ளூர் மர இனம்” என்று குழுவின் இன்னொரு உறுப்பினர் பிஹெரா (Behera) கூறுகிறார்.
குழுவினர் இப்பகுதியில் காணப்படும் அவய்சினியர் ஒபிஸினாலிஸ் ((Avicennia officinalis), அவய்ஸினர் ஆல்பா (Avicennia alba), இஜிசரஸ் கோனிகுலாட்டம் ( Aegiceras corniculatum), சிரியஸ் டிகாண்ட்ரா (Ceriops decandra), அகாந்த சிலிசிஃபோலியஸ் ( Acanthus illicifolius), ப்ரூக்லியேரா ஜிம்னோரைஸா (Bruguiera gymnorrhiza), எக்ஸோகேரியா அகலாச்சா (Excoecaria agallocha) ஆகிய நதி கழிமுகத்துவாரப் பகுதியில் வளரும் கண்டல் இனங்களை மறு உற்பத்தி செய்தனர்.
மீண்டு வந்த காடு
1985 முதல் வனப் பரப்பு குறிப்பாக கண்டல் காடுகளின் பரப்பு 2.58 சதுர கிலோமீட்டரில் இருந்து 2004ல் 4.21 சதுர கிலோமீட்டராக63% அதிகரித்துள்ளது என்று இந்திய உயிர்ப் பன்மயத் தன்மை விருது கூறுகிறது. காடு உயிருடன் படிப்படியாக மீண்டு வந்தது. பறவைகள் கூடு கட்ட தொடங்கின. அவற்றின் அழைப்புக் குரல்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்தன. இப்போது அதிகமாக உள்ள மான்கள் சில சமயங்களில் வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. மீண்டுவந்த காடு இந்த கிராமத்தை மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக மாற்றியுள்ளது.
காட்டுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒரு பகுதியில் நந்நீர் உள்ளது. புயற்காற்றுகள், கடற்காற்றுகளில் இருந்து காடுகளால் வயல்கள் பாதுகாப்புடன் உள்ளன. எவ்வித பேரிடர்ரையும் சமாளிக்கும் திறனுடன் உள்ள குழுவினர் வனத் துறையின் சமூக வன மேலாண்மை திட்டத்தில் குழுவை பதிவு செய்யும் முயற்சியில் உள்ளனர். வட இந்தியப் பெருங்கடற் பகுதியில் 1877 முதல் 1998 வரை உள்ள 122 ஆண்டு வரலாற்றில் அரபிக் கடலுடன் ஒப்பிடும்போது வங்காள விரிகுடாவில் புயல்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் மே, அக்டோபர், நவம்பரில் புயல்கள் உருவாகின்றன. சராசரியாக ஆண்டிற்கு ஐந்து முதல் ஆறு புயல்கள் வீசுகின்றன. 122 ஆண்டுகால வரலாற்றில் வங்காள விரிகுடாவில் நவம்பரில் புயல்கள் ஏற்படும் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1804 முதல் 1999 வரை உள்ள ஒடிசாவின் கடந்த இரு நூறு ஆண்டு காலத்தில், 7.5 மீட்டர் உயரத்தில் எழும்பிய அலையுடன் 10,000 பேரைக் கொன்ற 1999 அக்டோபர் 28 முதல் 30 வரை வீசிய சூப்பர் புயல் உட்பட 128 புயல்கள் தோன்றியுள்ளன.
வங்கக் கடலில் ஏற்படும் புயல் வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி தோன்றும் புயற்காற்றுகள், உயர அலைகள், உயரும் நீருடன் தொடர்புகொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மோசமான வெள்ளப்பெருக்குகளை விட புயல்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஜடவ்பூர் (Jadavpur) பல்கலைக்கழக கடல் சார் பள்ளியின் (School of Oceanographic) 2019 ஆய்வு கூறுகிறது. விவசாயமே இந்த மாவட்டங்களின் வாழ்வாதாரம். 71% புயல்களால் மகாநதி டெல்ட்டா சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது.
இது போன்ற அதிதீவிர நிகழ்வுகளால் சமூகங்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. “மூல வளங்களை சிறந்த முறையில் மேலாண்மை செய்ய இளம் தலைமுறையினர் எங்களுடன் இணையவேண்டும்” என்று பிஸ்வால் கூறுகிறார். காடு காக்கும் ஒடிசாவின் பெண்கள் போராட்டம் உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
மேற்கோள்: https://india.mongabay.com/2019/03/a-womens-squad-in-odisha-defends-its-forest-for-20-years/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மன அழுத்தத்தை குறைக்க கொடுக்கப்படும் புரோசாக் (Prozac) போன்ற மருந்துப் பொருட்கள் நீர் நிலைகளை மாசுபடுத்துவதால் மீன்களின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நடத்தை பாதிக்கப்படுகிறது; இது அவற்றின் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
உலகளவிலான மருந்துப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பொருட்களின் எச்சங்கள் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர் நிலைகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. கழிவு நீர் பாதைகள் வழியாக நன்னீருடன் கலக்கும் இவை சூழல் மண்டலங்களையும் உயிரினங்களையும் பாதிக்கிறது. செரட்டோனினின் அளவை அதிகரித்து மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கஒ பயன்படும் குறைவான அடர்த்தி உடைய ஃப்யூயெக்செட்டின் (Fluoxetine) மற்றும் பொரோசாக் போன்ற மருந்துகள் மீன்களின் உடல்நிலையைப் பாதிக்கிறது.
இது ஆண் மீன்களின் விந்தணு வலிமையைக் குறைக்கிறது என்று விலங்குகளின் சூழலியல் (Animal Ecology) என்ற இதழில் வெளிவந்துள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. இந்த ஆய்வுகள் போசிலியா ரெட்டிகுலாட்டா என்ற அறிவியல் பெயருடைய ரைன் போ அல்லது மில்லியன் மீன் என்று அழைக்கப்படும் கப்பி (Guppy) மீன்களில் நடத்தப்பட்டது.
இவை வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாக வாழும் ஒரு மீனினம். இவை ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மீனினமாகக் கருதப்படுகிறது. “இந்த மீனினத்தின் பல தலைமுறைகளை இது போன்ற மருந்துப்பொருள் மாசுகள் பாதிக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வேதிப்பொருட்கள் நீர் நிலைகளில் கலக்கிறது. ப்யூயெக்செட்டின் மருந்து பரவலாக எல்லா இடங்களிலும் மாசாக கலந்துள்ளது என்பதால் இம்மருந்து ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இத்தகைய மருந்துகளின் அளவு குறைவான அடர்த்தியில் இருந்தாலும் அது மாசடைந்த நீரில் இவ்வகை மீன்களின் வாழும் திறமைக்கு எச்சரிக்கை விடுக்கிறது” என்று ஆய்வுக்கட்டுரையின் துணை ஆசிரியரும் ஆஸ்டிரேலியா விக்டோரியா மெல்பெர்ன் மோனாஷ் (Monash)பொது ஆராய்ச்சிகளுக்கான பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானியுமான டாக்டர் யூப்பாமா எச் (Dr Upama Aich) கூறுகிறார்.
3,600 கப்பி மீன்களில் இந்த ஆய்வு நடந்தது. இந்த மீன்கள் சரளைக்கற்கள் மற்றும் நீர் வாழ் தாவரங்கள் உள்ள தொட்டிகளில் வைத்து ஆராயப்பட்டன. ஐந்தாண்டுகள் நடந்த இந்த ஆய்வுகளின்போது ஆய்வாளர்கள் ஒரு லிட்டர் நீரில் சுழியம், குறைந்த அளவு, 31.5 நானோகிராம்கள் மற்றும் உயர்ந்த அளவாக 316 மில்லிகிராம் என்ற வெவ்வேறு அடர்வுள்ள ப்யூயெக்செட்டின் மருந்தைக் கலந்து ஆராய்ந்தனர். இந்த அளவுகள் இயற்கையான சூழ்நிலையில் காணப்படுபவை.
இதன் பிறகு பல தலைமுறைகளில் மருந்துப் பொருளின் தாக்கத்தால் ஆண் மீன்களின் நடத்தை, உடல் நிலை, பெறப்பட்ட பண்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆராயப்பட்டன. மருந்தின் குறைந்த அளவு மீனின் உடல் நிலையை வெகுவாகப் பாதிக்கிறது. இணை சேரும் போது மற்ற ஆண் மீன்களுடன் சண்டையிடும் ஆற்றல், இணைசேரும் திறன் போன்றவற்றை இந்த மாசு பாதிக்கிறது. நாளடைவில் இது மீனின் நிலை நிற்புக்கே ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இம்மாசு விந்தணுக்களின் வேகத்தைக் குறைக்கிறது. பெண் மீனை கருவுற வைக்க உதவும் செதில் போன்ற கானபோடியம் (gonopodium) என்ற உறுப்பின் நீளத்தை அதிகரிக்கிறது. மருந்துப்பொருள் மாசு மீனின் செயல்பாட்டில் இயல்பாக நிகழும் வேறுபாடுகளைக் குறைக்கிறது. மீனை ஆபத்தான முறையில் நடந்து கொள்ளச் செய்கிறது. இது சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப வாழும் அவற்றின் ஆற்றலைப் பாதிக்கிறது.
“பொதுவாக மருந்துகள் குறைவான அளவில் இருக்கும்போதே வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இதனால் குறைவான அளவு மருந்துகள் கலந்திருந்தாலும் அவை தீவிரமாக வேலை செய்கின்றன” என்று விக்டோரியா சூழல் பாதுகாப்பு முகமையின் (EPA) சூழலியல் சார் ஆபத்துகள் மற்றும் அதிகரிக்கும் மாசுப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராயும் பிரிவின் முதண்மை விஞ்ஞானி டாக்டர் மின ஸாரிஸ்ட்டோ (Dr Minna Saaristo) கூறுகிறார்.
இந்த அமைப்பு விக்டோரியாவில் உள்ள நான்கு ஆறுகள், நீர் நிலைகள் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கலந்துள்ள பதினெட்டு பொது மருந்துகளை ஆராய்ந்தது. மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள், இரத்த அழுத்தம், இதய நோய்கள், எப்பிலெப்சி மருந்துகள், காஃபின், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் மற்றும் ஆல்கஹாலுடன் பழச்சாறு கலந்த பானங்கள் போன்றவை சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
பிடிக்கப்படும் மீன்களில் பொதுவாக காணப்படும் மருந்துப் பொருட்களையும் சூழல் முகமை ஆராய்ந்தது. சிவப்பு பெர்ச் (Red Perch) மீனின் உடலில் மன அழுத்தத்தை குறைக்கப் பயன்படும் வென்லாஃபாக்சைன் (Venlafaxine) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 150 மைக்ரோ கிராம் என்ற அளவில் கலந்திருந்தது.
ஈல் (Eel) மீனின் உடலில் சத்துகளற்ற உணவினால் ஏற்படும் வைட்டமின் பற்றாக்குறையைப் போக்க, பெண்களின் கர்ப்பகாலத்தில் பயன்படும் செர்ட்ரலைன் (sertraline) என்ற மருந்து ஒரு கிலோகிராமுக்கு 100 ம்யூ (μg/kg) என்ற அளவில் கலந்திருப்பது இந்த ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது. கழிப்பறைகளில் கழிவுடன் மருந்துகளையும் கலந்து அகற்றக்கூடாது. இதற்குப் பதில் மக்கள் தேவையற்ற, காலாவதியான மருந்துகளை விற்பனையாளரிடமே திரும்பி கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இது நம் நீர் நிலைகளில் நீந்தி வாழும் மீன்களை நீண்ட காலம் வாழ வைக்கும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வாறு செய்தால் மட்டுமே பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த அற்புத உயிரினங்களை நாளைய தலைமுறையினரும் பயன்படுத்த முடியும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
குற்றங்கள் நிகழும் இடங்களில் ஆண்களின் ஆரோக்கியம் காக்க உதவும் “இதயத்திற்காக மரங்கள்” (Parks for Heart) என்ற திட்டம் அமெரிக்கா ஃபிலடெல்ஃபியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இயற்கையின் மாயாஜாலம் என்று கருதப்படுகிறது. குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் இது தூய காற்றுக்கு மட்டும் இல்லாமல் இதய நலம் காக்கவும் உதவுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.
இதனால் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அடர்த்தியான மரம் செடி கொடிகள் இருக்கும் இடங்கள் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தை நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறது. பசுமையிடங்கள் ஒருவரின் ஒட்டுமொத்த உடற்தகுதி, மன நலம் மற்றும் சமூக நலத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
2025ம் ஆண்டிற்குள் நகரின் எல்லா இடங்களிலும் இருக்கும் பசுமைப் பரப்பை 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்ற நோக்கத்துடன் 2009ல் ஃபிலடெல்ஃபியா பசுமைப் பணிகள் (Greenworks Philadelphia) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இழந்த பசுமையை மீட்க ஆயிரம் கால்பந்தாட்ட மைதானங்கள் அளவு நிலப்பரப்பில் மீண்டும் பசுமையை உருவாக்கும் குறிக்கோளுடன் நகர அமைப்பு இப்போது பணிபுரிகிறது.
பசுமையிடங்களுக்கும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பல உடல் நல பாதிப்புகளை குறைக்க உதவும் இயற்கைத் தீர்வுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை சமீப ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. இதயக் கோளாறு தொடர்பாக ஏற்படும் மரணங்களைத் தடுக்க குறிப்பாக ஆண்களிடம் பசுமையிடங்கள் முக்கிய பங்கு வகிப்பதை அண்மையில் டிரக்ஸெல் (Drexel) பல்கலைக்கழக டோன்சைஃப் (Dornsife) பள்ளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டது.
இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஆரோக்கியம் மற்றும் இடங்கள் ஒன் செக் (Health and Place (1✔) ) என்ற இதழில் வெளிவந்துள்ளது.
மேம்பட்ட மன நலம் பெற பசுமை இடங்கள் அதிகம் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். பணிபுரியும் இடங்களுக்கு பசுமையிடங்கள் வழியாக செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.
2008 முதல் 2015 வரை உள்ள காலத்தில் பூங்காக்கள், மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதயக் கோளாறுகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது என்று பசுமையிடம் மற்றும் இதய நோய்கள் என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
“இதய நலம் மேம்படுவதன் மூலம் குற்றச்செயல்கள் குறைய வாய்ப்புள்ளது. சிக்கலான சமூக நலத்தின் பல்வேறு கூறுகளுக்கும் செயற்கை பசுமையிடங்கள், தனிநபர்களின் ஆளுமை அடையாளங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டால் பசுமையிடங்கள் அதிகமுள்ள சமூகப் பகுதிகளால் அனைவரும் நலம் பெறலாம்” என்று டோன்ஸைஃப் பள்ளியின் முனைவர் பட்டதாரியும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியருமான லீஸ்கை நாசி (Leah Schinasi) கூறுகிறார். அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளுக்கு இதயக் கோளாறுகளே முக்கியக் காரணம்.
இதய நோய்களால் மட்டும் அங்கு ஆண்டுக்கு 702,880 பேர் உயிரிழக்கின்றனர் என்று சி டி சி (CDC) ஆய்வு அமைப்பு கூறுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வறுமை, இனப்பாகுபாடு, மக்கட்தொகை அடர்த்தி பற்றிய தரவுகளை ஆய்வாளர்கள் அமெரிக்க சமூக ஆய்வுகள் கணக்கெடுப்பிற்கான ஆணையத்திடம் இருந்து பெற்றனர்.
2009ல் ஃபிலடெல்ஃபியா மேயராக இருந்த மைக்கேல் நட்டர் (Michael Nutter) பசுமைப் பணிகள் ஃபிலடெல்ஃபியா (Greenworks Philadelphia) என்ற திட்டத்தை 2025ம் ஆண்டிற்குள் நகரின் ஒவ்வொரு பகுதியிலும் 30% பசுமையிடங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிவித்தார். 2008ல் நகரில் 20% பசுமைப் பகுதிகள் இருந்தன. பசுமையிடங்களுக்கு அருகில் இருந்தால் மன மகிழ்வு, செய்யும் வேலையில் உற்சாகம் மற்றும் வாழ்க்கையில் மன நிறைவு அதிகரிக்கிறது.
பசுமைப் பகுதியில் தனிநபர்கள் நேர்மறை உணர்வுகளை அதிக அளவில் பெறுகின்றனர். பூங்காக்கள் இதயநோய்களுக்கு எதிரான வாழ்வின் வழிமுறையாக செயல்படுகின்றன. பசுமையிடங்களால் ஏற்படும் ஏராளமான நன்மைகளை இந்த ஆய்வு மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது” என்று டோன் ஸைஃப் பள்ளி பொது உடல் நலப் பிரிவு முனைவர் பட்டதாரி மாணவரும் ஆய்வில் முக்கியப் பங்காளியுமான வான்யூ வாங் (Wanyu Huang) கூறுகிறார்.
பூங்காக்கள், நதிகள், ஏரிகளுக்கு அருகில் வசிப்பதால் அதி தீவிர மன அழுத்தம் குறைகிறது. இதனால் அறிவாற்றல் குறைபாடு, டிமென்சியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இலைகள் உயிர் காக்க உதவும் அற்புதங்கள். மரங்கள், பசுமை ஆகியவை அழுத்தக் குறைவு, கோடையில் குளிர்ந்த காற்றை வெளியிடுகிறது. அமைதியான சூழலை உருவாக்குகிறது.
ஒலி மாசைக் குறைக்கிறது. இது பற்றிய சமூகங்களின் பாதுகாப்புக்கு பசுமையிடங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று ஆழமாக ஆராயப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூங்காக்களுக்கு பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் செல்கின்றனர். பூங்காவிற்கு செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அங்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.
இதனால் மரம் செடி கொடிகள் உள்ள இடங்கள் பெண்களை விட ஆண்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுக் குழு கூறுகிறது. பசுமை அதிகம் உள்ள இடங்களில் பெண்கள் செல்வதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். இயற்கை தரும் நன்மைகள் அனைவருக்கும் சுலபமாக கிடைக்க வேண்டும். அப்போது மனிதன் சந்திக்கும் இன்றைய பிரச்சனைகளுக்கு நேர்மறையான நிரந்தர நல்ல தீர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மற்ற வகை மாசுகள் போல செயற்கையாக ஒளியூட்டுதலையும் கருத வேண்டும். மனிதன் உருவாக்கும் செயற்கை வெளிச்சத்தின் தாக்கம் இயற்கை உலகை அழிக்கும் மாசாக மாறியுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காலநிலை மாற்றத்துடன் ஒப்பிடக்கூடிய பிரச்சனையாக இந்த ஒளியூட்டுதலின் (lighting) அளவும் அதன் தீவிரத் தன்மையும் ஆண்டிற்கு 2% என்ற அளவில் அதிகரிக்கிறது என்று எக்ஸிடர் (Exeter) பல்கலைக்கழக உயிரியலாளர்கள் நடத்திய ஆய்வு கூறுகிறது.
விடியும் முன்பே இரை தேடும் பறவைகள்
பல்வேறு உயிரினங்களில் பரவலாக ஹார்மோன்களின் அளவு, இனப்பெருக்கச் சுழற்சிகள், செயல் புரியும் பாணிகள் மற்றும் எதிரிகளுக்கு இரையாகும் பலவீனத் தன்மை ஆகியவை இந்த மாசால் பாதிக்கப்படுகின்றன என்று இது பற்றி நேச்சர் சூழலியல் பரிணாமம் (Nature Ecology and Evolution) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர்.
பூச்சிகளின் மகரந்த சேர்க்கையில் குறைவு, வசந்த காலத்தில் முன்கூட்டியே மரங்களில் மொட்டுகள் தோன்றுவது, கடற்பறவைகள் கலங்கரை விளக்கங்களை நோக்கி பறந்து வருவது, கடல் ஆமைகள் விடியும் சூரியனின் ஒளியைத் தேடி கரை உள்பகுதிகளில் பிரகாசிக்கும் ஹோட்டல்களை நோக்கி வருவது உள்ளிட்ட பல சீர்கேடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் முந்தைய 126 ஆய்வுகளை ஆய்வு செய்து செயற்கை ஒளியால் ஏற்படும் தாக்கத்தை மதிப்பிட்டனர்.
பரிசோதிக்கப்பட்ட அனைத்து வகை விலங்குகளிலும் இரவு நேர செயற்கை ஒளியால் மெலட்டானின் (melatonin) என்னும் உறக்கச் சுழற்சியை (sleep cycles) ஒழுங்குபடுத்தும் ஹார்மோனின் அளவு குறைவாகக் காணப்பட்டது. இரவு மற்றும் பகல் நேர உயிரினங்களின் (nocturnal and diurnal creatures) நடத்தை பாணிகள் மாறுகின்றன. பெரும்பாலும் இரவில் இரை தேடும் கொறிக்கும் வகை பிராணிகள் குறைந்த கால அளவிற்கே செயல்திறனுடன் செயல்படுகின்றன.
பறவைகள் நாளின் தொடக்கத்திலேயே பாடத் தொடங்குகின்றன. இரையாக உண்ண புழுக்களைத் தேடுகின்றன. ஒளி மாசு கண்ணுக்குத் தெரியாத பூச்சிகளை படையெடுத்து வரச் செய்கிறது. என்றாலும் ஆய்வு முடிவுகள் அனைத்தும் எதிர்மறையானவை அல்ல. சில பிரதேசங்களில் காணப்படும் சில இனத் தாவரங்கள் இரவு நேர ஒளியால் நன்மை அடைகின்றன. சில தாவரங்கள் வேகமாக வளர்கின்றன. சில வகை வௌவால்கள் செழித்து வாழ்கின்றன.
“ஆனால் சுட்டுப் பொசுக்கும் ஒளியுடன் எரியும் பல்புகள் அல்லது வேகமாகச் செல்லும் காரின் விளக்கொளியால் பூச்சிகள் போன்ற சில குறிப்பிட்ட உயிரினங்கள் ஒட்டுமொத்த அழிவை சந்திக்கின்றன. நுண்ணுயிரிகள், முதுகெலும்பற்றவை, தாவரங்கள், விலங்குகள் என்று எல்லா உயிரினங்களிலும் இதன் தாக்கம் பரவலாக காணப்படுகிறது.
இருட்டைக் கண்டு இன்னும் அஞ்சும் மனிதன்
நினைக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் ஒளியூட்டுவதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். செயற்கை ஒளி மாசு என்பதும் காலநிலை மாற்றம் போல மிக மோசமான சூழல் சீரழிவே. செயற்கை ஒளியூட்டல் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் வேகமாக அதிகரித்து வருவதால் இது பற்றி தீவிரமாக ஆராயப்படுகிறது. இதற்கான சான்றுகள் ஆதாரப்பூர்வமானவை.
புவியியல் ரீதியாக இப்பிரச்சனை எந்த அளவு விரைவாக பரவி வருகிறது என்பதை இரவில் எடுக்கப்படும் பூமியின் செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. செலவு பிடிக்கும் மென்மையான ஆம்பர் பல்புகள் (soft amber bulbs) வெண்ணிற ஒளி தரும் மலிவு விலை ஒளி உமிழ் விளக்குகளால் (LEDs) மாற்றப்பட்டு விட்டன. இதனால் செயற்கை ஒளியின் தீவிரம் அதிகமாகி விட்டது.
மென்மையான ஆம்பர் பல்புகள் என்பவை மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறமுடைய ஒரு பிசின். ஒளி ஊடுருவும் தன்மையுடைய இது மற்றொரு பொருளுடன் உராயும்போது மின்னேற்றம் பெறுகிறது. சூரிய ஒளியைப் போல விரிவான நிறமாலையைக் கொண்டிருப்பதால் ஒளி உமிழ் விளக்குகளின் வெண்ணிற ஒளி உயிரியல் ரீதியாக பிரச்சனைக்குரியது. இப்பிரச்சனையில் அரசுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர்.
ஒளி உமிழ்வை ஏற்படுத்திவிட்டு அது பற்றி நாம் சிந்திப்பதேயில்லை. செயற்கை ஒளியை எங்கு, எப்போது தேவை என்பதை முடிவு செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தைப் போல இல்லாமல் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கண்டால் அது ஒளியூட்டலுக்கு ஆகும் செலவைக் குறைக்கும். பொருளாதார பயன் தரும். ஒரு சில விளக்குகளை மட்டும் பயன்படுத்தினால் குறைவான அளவு மின்சாரம் மட்டுமே செலவாகும். உமிழ்வு குறையும். சூழல் பாதுகாக்கப்படும். ஆனால் இதற்கு மனிதர்களின் மனப்போக்கு மாற வேண்டும். இருட்டைப் பார்த்து நாம் இன்னும் அஞ்சுகிறோம். இதனால் வெளிச்சத்தை ஏற்படுத்தி பயத்தைப் போக்க நினைக்கிறோம். அவசியத்திற்கு அதிகமாக இரவை பகல் போல ஆக்க விரும்புகிறோம். இந்த போக்கு மாறினால் இவ்வகை ஒளி மாசினால் உண்டாகும் அழிவிலிருந்து உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் எக்ஸிட்டர் பல்கலைக்கழக சூழல் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கழகத்தின் பேராசிரியருமான கெவின் காஸ்ட்டன் (Kevin Gaston) கூறுகிறார். பூமியை வாழ விடுவதும் அழிப்பதும் மனிதர்களாகிய நம் கைகளில்தான் உள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை