கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- அ.ஸ்டீபன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
2025 - புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதியில் ஊடகங்கள் அதிகமாக உச்சரிக்கத் தொடங்கிய சொற்கள் : அமெரிக்கா, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ், ஹாலிவுட் ! ஆம், ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் எதிர்பாராத விதமாக நெருப்புப் பற்றிக்கொள்ளவே, அமெரிக்கா அதிர்ச்சிக்குள்ளானது. அதற்குக் காரணம் நெருப்பு பரவிய அதே வேகத்தில் புயல் காற்றும் வீசத் தொடங்கியதே! பரவும் நெருப்போடு புயல் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.. 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பரவிய நெருப்பு சுமார் 17,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியது. அடர்ந்த காட்டைத் தாண்டி லாஸ் ஏஞ்சலிஸ் நகரமும் தீக்கிரையானது. காடுகள் அழிந்தது மட்டுமின்றி, மனித உயிர்கள், காட்டு உயிரினங்கள், வீட்டு விலங்குகள் நெருப்புக்கு இரையாயின. 1,00,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து புலம் பெயர்த்தப்பட்டனர். கான்கிரீட் காடுகள் எனப்படும் பெரிய பெரிய கட்டடங்களும் வீடுகளும் எலும்புக்கூடாகக் காட்சியளித்தன. பொருளாதார இழப்பு குறித்த வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வெளியானாலும், அவற்றைச் சரியாகக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல. மொத்தத்தில் அணுகுண்டு வீசப்பட்ட நகரம் போல் லாஸ் ஏஞ்சலிஸ் காட்சியளிப்பதாகவும் ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் போல இருப்பதாகவும் ஊடகங்கள் வர்ணித்தன.இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்நகரில் ஊடக வெளிச்சம் அதிகம் பாயும் பகுதியான ஹாலிவுட் நகரமும் நெருப்பில் கருகத் தொடங்கியதே! 1853இல் தொடங்கப்பட்டு. நீண்ட வரலாறைக் கொண்டதுதான் ஹாலிவுட் எனப்படும் அமெரிக்காவின் திரைப்பட நகரம் ! இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகத் திரைப்படத் தொழிற்சாலையில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வரும் இந்நகரம் நெருப்புக்கு இரையானது யாரும் எதிர்பாராத திருப்புமுனை! ஒருசில நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருப்பதாகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் பட்டியலிட்டன.
இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு உதவிக்கரம் நீட்டின. தீயணைப்பு வீரர்கள், தரையூர்திகள், வானூர்திகள் வழியாகவும் தண்ணீரைப் பாய்ச்சிப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரசாயனத் தூளை வானிலிருந்து தெளித்து நெருப்புப் பரவலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வளமையும் வசதியும் படைத்த லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க இயலாமல் போனது.
சரி, இந்தக் காட்டுத்தீ உருவானதற்கும் அது கட்டுக்கடங்காமல் பரவியதற்கும் என்ன காரணம்? இது குறித்து பல்வேறு யூகங்கள், சாத்தியங்கள் முன்னணி ஊடகங்களில் வலம் வந்தன. அவற்றில் ஒரு கருத்து சமூக ஊடகங்களை அதிர வைத்தது. அதாவது, இந்தக் காட்டுத் தீக்கும் ‘சாட்ஜிபிடி’ (ChatGpt) எனப்படும் திறந்த நிலை செயற்கை நுண்ணறிவுக்கும் (Open AI) தொடர்பு உண்டு என்பதே அக்கருத்து. முதலில் சமூக ஊடகங்களில் இந்தக் கருத்தைப் பார்த்ததும், “சமூக ஊடகங்கள் இப்படிப் பரபரப்புக்காக எதையாவது கிளப்பிவிடுகின்றனவோ” என்று தோன்றியது. தேவையில்லாமல், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தச் சமூக ஊடக வலைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் மேலோங்கியது. ஆனால், இது குறித்த விவாதங்கள் ஒருசில முன்னணி ஊடகங்களுக்கும் பரவியதால் இந்தக் கருத்தைப் புறந்தள்ள முடியவில்லை. சரி, இது குறித்து இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று பார்க்க முயன்ற போது சில தரவுகள் கிட்டின.
முதலில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் உருவான நாள் முதலே நீர் மேலாண்மை குறித்த பிரச்சனை நிலவி வந்திருக்கிறது. அவ்வப்போது மழை வெள்ளம் ஏற்பட்டாலும் அதை மேலாண்மை செய்யப் போதிய கட்டமைப்பு வசதி இங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வந்திருக்கிறது. தொடக்கத்தில் 75 விழுக்காடு தண்ணீர் இந்நகரின் ஒருசில நீராதாரங்களிலிருந்து கால்வாய் வழியாகப் பெறப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக் காலமாக வட அமெரிக்காவின் கொலொரடோ ஆற்றிலிருந்தே 50 விழுக்காடு தண்ணீர் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. காட்டுத்தீயை எதிர்கொள்ளும் அளவுக்கு இங்கே நீர்க் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. அதாவது, கலிபோர்னியா மாகாணத்தில் போதிய தண்ணீர் இருந்தாலும் பாதிப்புக்குள்ளான பகுதியில் தேவையான அளவுக்குத் தண்ணீர் இல்லை என்கிறார்கள். மேலும் கடந்த மழைக்காலங்களில் இப்பகுதியில் குறைந்த அளவே மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் வறட்சி அதிகரித்துள்ளது. வறட்சி அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பதும் காடுகள் சூடாவதும் தவிர்க்க இயலாதவை.
இப்போது சாட்ஜிபிடிக்கு வருவோம். பொதுவாகவே, சமூக ஊடகங்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கும் மின்சாரம் எவ்வளவு தேவை என்பதை நாம் அறிவோம். நாம் அன்றாடம் பயன்படு;த்தும் கணினி, திறன்பேசி ஆகியவற்றைக் கடந்து, இவற்றின் தலைமைச் செயலகமாக விளங்கும் தரவு மையங்களை (Data centres) நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றை நிர்வகிக்கும் தரவு மையங்கள் மின்சாரத்தில் இயங்கி, அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடை உமிழும் தன்மையுடையவை. இதனால் இவை அதிகமாக வெப்பத்தை வெளியேற்றும் தன்மையுடையவை. இவற்றில் அடங்கியுள்ள எந்திரங்களைக் குளிர்விக்கவும் தேவையான குளிர்நிலையில் இவற்றைப் பராமரிக்கவும் 24 மணிநேரமும் அதிகக் கொள்ளளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவை விட செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவு மிக அதிகம் என்கிறார்கள்;.
Washington Post இதழ் கடந்த 2024ஆம் ஆண்டு தெரிவித்துள்ள ஒரு தகவலின்படி, 100 சொற்கள் அடங்கிய ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய சாட்ஜிபிடி 519 மில்லி லிட்டர் அதாவது ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்கிறது. ஆண்டு முழுவதும் வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினாலே, 27 லிட்டர் தண்ணீர் சாட்ஜிபிடிக்குத் தேவைப்படுகிறது. சற்றே விரிவாகச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்கா வாழ் மக்களில் பத்தில் ஒரு பகுதியினர், அதாவது 16 மில்லியன் மக்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஆண்டு முழுவதும் 43,50,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அப்படியானால், இதன் அதிகபட்சப் பயன்பாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்தப் பின்புலத்தில், லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நீரேற்றம் குறைவதற்கு அதிகரித்துள்ள செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடும் ஒரு காரணம் என்று ஒரு சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் நீர்க் கட்டமைப்புக் குறைபாடுதான் காரணமே தவிர, செயற்கை நுண்ணறிவு காரணமல்ல என்று மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவுதான் இப்பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஊடகங்கள் கூறுவதை நாம் ஏற்பது கடினம். அதே நேரத்தில் இதுவும் ஒரு காரணம் என்று அவர்கள் கூறுவதை முற்றிலும் மறுக்க முடியுமா என்று பார்ப்போம்
ஜனவரி – 2025இல் கிடைத்த சில புள்ளி விவரங்களின்படி,
1) 2024இல் சாட்ஜிபிடிக்கு 300 மில்லியன் வாராந்திரப் பயனாளிகள் இருந்திருக்கிறார்கள்.
2) அமெரிக்காவின் சாட்ஜிபிடி பயனாளிகளின் எண்ணிக்கை 67.7 மில்லியன்.
3) உலகப் பயனாளிகளில் அமெரிக்கா 16 விழுக்காட்டுடன் முதல் இடம் வகிக்கிறது.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 1) லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை, 2) அணைக்க இயலாமல் பரவிய தீ, 3) தண்ணீரை விழுங்கும் செயற்கை நுண்ணறிவு என்று மூன்று புள்ளிகளையும் இணைக்க முயல்கிறார்கள் சமூக ஊடகத்தினர்.
இதில் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு என்றாலும், எதிர்காலப் பார்வையில் இதை ஓர் எச்சரிக்கை மணியாகக் கருத வேண்டும். செயற்கை நுண்ணறிவு விழுங்கும் தண்ணீர், அன்றாட அடிப்படைத் தேவைக்கான தண்ணீர், பேரிடர் காலங்களில் தேவைப்படும் தண்ணீர் இவற்றை ஒருங்கிணைத்து பரந்துபட்ட பார்வையில் பார்ப்பது இனிமேல் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு தவிர்க்க இயலாத எதிர்காலப் பாதையில் பயணிக்கிற வேளையில், மாற்று ஏற்பாடுகளைப்பற்றித் தரவு மைய நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது, தண்ணீர் தவிர மாற்று வழிகளில் தரவு மையங்களைக் குளிர்விக்கும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை நிலைத்த மேம்பாட்டுச் (Sustainable development) சிந்தனையில் பயன்படுத்தும் செயல்பாடு அதிகரிக்க வேண்டும்.
மாற்றுச் செயல்பாட்டின் முதல் படியாக, இயற்கை குறித்த மனப்பாங்கு மாற்றம் காலத்தின் கட்டாயம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இயற்கை குறித்த ஆதிக்கப் பார்வையையும் அதைத் திரைப்படங்கள் வழியாக பரவலாக்கம் செய்வதையும் ஹாலிவுட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இயற்கைச் சுரண்டல் மனிதருக்குள்ள அதிகாரம் என்ற கருத்தைத் தவறாமல் முன்வைக்கும் கதையோட்டம், பாம்பு முதல் டயனோசர் வரை அனைத்து உயிரினங்களையும் வில்லன்களாகச் சித்தரிக்கும் போக்கு, அவற்றை அழித்தொழிப்பதே “கிளைமாக்ஸ்” என்ற கற்பனை வறட்சி ஆகியவற்றைத் தவிர்த்து, உயிர்நேய அணுகுமுறையிலான படைப்பாற்றலுக்கு ஹாலிவுட் கதவைத் திறக்க வேண்டும்.
- அ.ஸ்டீபன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வீட்டின் உள் மற்றும் வெளிப்புறங்களில் நிலவும் ஒளி மாசு, இரவு நேரங்களில் குறிப்பாக 65 வயதுக்குட்பட்டவர்களின் அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கிறது. இந்த ஆய்வுகள் அமெரிக்க தேசிய ஆரோக்கியம் குறித்த ஆய்வுகளுக்கான நிதியத்தின் உதவியுடன் நடந்தது. இந்த ஆய்வுகள் இரவு நேர செயற்கை ஒளிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை நியூரோ அறிவியல் முன்னேற்றங்கள் (Frontiers in Neuroscience) என்ற இதழில் வெளிவந்துள்ளது.உள்ளுக்குள் இயங்கும் உயிர் கடிகாரம்
அமெரிக்காவில் 19 மாகாணங்களில் ஒளி மாசு கட்டுப்பாட்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ள போதிலும் பல இடங்களிலும் இது அதிகமாக உள்ளது. தெரு விளக்குகள், சாலை விளக்குகள், ஒளியூட்டப்பட்ட விளம்பரப் பலகைகள் போன்றவை சாலைகளை பாதுகாப்பானதாகவும் நிலப்பரப்பை தெளிவாகக் காட்ட உதவும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும், தடங்கள் இரவு முழுவதும் எரியும் இவ்விளக்குகளின் ஒளி சூழலியல், நடத்தையியல் மற்றும் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் 2012 முதல் 2018 வரை செயற்கைக்கோள்கள் மூலம் பெறப்பட்ட ஒளி மாசின் அளவுகள், அல்சைமர்ஸ் நோய் விவரங்கள் ஆராயப்பட்டன. சர்க்கரை நோய், உயர்ந்த இரத்த அழுத்தம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது இரவு நேர ஒளி மாசு குறைவான அல்சைமர்ஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆல்கஹால், தீவிர நாட்பட்ட சிறுநீரக நோய்கள், மன அழுத்தம், இதய செயலிழப்பு, உடற்பருமன் ஆகியவற்றை விட இரவு நேர ஒளி மாசு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
65 வயதுக்கும் குறைவானவர்களில் வேறெந்த நோயை விட இரவு நேர ஒளி மாசு அல்சைமர்ஸ் நோய்க்கு அதிக காரணமாகிறது. இளம் வயதினர் இந்த மாசினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
“சில வகை மரபணுக்கள் உள்ளவர்கள் உயிரியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக அல்சைமர்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் இரவு நேர ஒளி மாசை எதிர்கொள்ள பலவீனமானவர்களாக வாழ்கின்றனர். நகரப்பகுதிகளில் இளம் வயதினர் அதிகமாக வாழ்வதால் அவர்கள் இரவு நேர ஒளி மாசுக்கு அதிகம் ஆளாக நேரிடுகிறது. நம் உடலுக்குள் இயங்கும் உயிர் கடிகாரத்தை சரி வர இயக்குவதில் இரவு நேர ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது. சுற்றுப்புற சூழலில் ஏற்படும் ஒளியளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நம் மூளையில் செயல்படும் இந்த கடிகாரம் நாம் தூங்குவதையும் விழித்தெழுவதையும் சமிஞ்ஞைகள் மூலம் ஒழுங்குபடுத்துகிறது. இந்த கடிகாரத்தின் சீரிசையை இரவு நேர ஒளி பாதிக்கிறது. இதனால் இளம் வயதினரிடையில் இந்நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரும் ரஷ் (Rush) பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் இணை பேராசிரியருமான டாக்டர் ராபின் வாய்க்ட்-ஸ்யுவாலா (Dr Robin Voigt-Zuwala) கூறுகிறார்.
“உறக்கம் மற்றும் உயிர் கடிகாரத்தின் இயக்கத்தை ஒளி கட்டுப்படுத்துகிறது. மோசமான தூக்கத்தால் இந்த நோய் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இரவு நேரம் தீவிரமான ஒளியுள்ள இடத்தில் வாழ்வது, குறைவான தூக்கம், பகல் நேரத்தில் அதிக உறக்கநிலை பாதிப்பு, தரமற்ற தூக்கம் பற்றிய அதிருப்தி போன்றவற்றை ஏற்படுத்துகிறது” என்று நியூயார்க் மவுண்ட் சைனாய் (Mount Sinai) அல்சைமர்ஸ் மைய நிபுணர் சாமுயெல் காந்தி (Samuel Gandy) கூறுகிறார்.
“தரமான நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம். இரவு நேர ஒளி மாசு மூளையின் செயல்பாட்டில் குறுக்கிடுகிறது. மூளையின் ஆரோக்கியத்துக்கு உதவும் தூண்களில் ஒன்றான உறக்கம் பற்றிய இந்த ஆய்வு முக்கியமானது” என்று பென்சில்வேனியா பல்கலைக்கழக பென் நினைவாற்றல் ஆய்வு மையத்தின் இணை இயக்குனர் டாக்டர் ஜேய்சன் காலாவிஷ் (Dr Jason Karlawish) கூறுகிறார்.
“சாளரங்கள் வழியாக வரும் ஒளி, சூரிய ஒளி, சமூக, ஆரோக்கியத் துறையில் வேறுபாடுகள், வீட்டுக்குள் இருக்கும் ஒளியால் ஏற்படக்கூடிய பாதிப்பு, கிராம, நகர்ப்புற ஒளி மாசு வேறுபாடு போன்றவற்றை மேலும் தீவிரமாக ஆராய வேண்டும்” என்று அமெரிக்காவில் உள்ள மேயோ (Mayo) க்ளினிக்கல் நரம்பியல் நிபுணர் டேவிட் நாக்மேன் (David Knopman) கூறுகிறார்.
ஒளி மாசால் உருவாகும் தீமைகளை தடுக்க கறுப்பு நிறத் திரைச்சீலைகளைப் பயன்படுத்துதல், முகக்கவசங்களை பயன்படுத்தி கண்களை மூடிக் கொள்வது போன்ற எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மக்கள் அனைவரும் பின்பற்ற இந்த ஆய்வுகள் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/us-news/article/2024/sep/06/light-pollution-alzheimers-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக உணவு முறையை நீடித்த நிலையான வளர்ச்சி உடையதாக மாற்றினால் ஆண்டிற்கு பத்து டிரில்லியன் டாலர் அளவு பொருளாதார நன்மை ஏற்படும். மனித ஆரோக்கியம் மேம்படும். காலநிலை மாற்றத்தின் தீவிரம் குறையும். இதனால் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயிர் நிலங்களை வன உயிரினங்கள் கூடுதலாக வாழும் இடங்களாக மாற்றுவர். பயிர் நிலங்கள் கார்பனை உறிஞ்சும் தொட்டிகளாக (Carbon sinks) மாறும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.
அழிவை உண்டாக்கும் உணவு முறைகள்
இப்போது உள்ள உற்பத்தி முறைகள் நன்மைகளை விட ஆரோக்கியம், சூழல் வள இழப்புகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உணவு முறைகளால் ஏற்படும் இழப்புகள் பற்றிய முதல் விரிவான ஆய்வு இதுவே. இன்று நடைமுறையில் இருக்கும் உணவு முறை மருத்துவம் மற்றும் சூழலில் மறைந்திருக்கும் செலவுகளை (hidden costs) ஏற்படுத்துகின்றன.மறைந்திருக்கும் செலவுகள் என்பவை ஏற்கனவே நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ள பயனர் வாங்குதல் அல்லது பதிவு பெறுதல் செயல்முறைக்கு வரும்வரை அவரிடம் இருந்து மறைக்கப்படும் கட்டணங்கள் அல்லது செலவுகளைக் குறிக்கிறது. இதனால் கூடுதல் மதிப்பை உருவாக்குவதைக் காட்டிலும் இன்று உள்ள உணவு முறைகள் அதிக இழப்பையே உண்டாக்குகிறது.
இதனால் வருங்கால இயற்கை வளங்களை நாம் இன்று கடனாக வாங்கி செலவிடுகிறோம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் மூன்றில் ஒரு பங்கு பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்விற்கு உணவு முறைகளே காரணம். இது இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.7 டிகிரி செல்சியர்ஸ் வெப்ப உயர்வை ஏற்படுத்தும். வேளாண்மையில் இது தீயவிளைவை உண்டாக்கும் சுழற்சிக்கு காரணமாகும்.
உயர் வெப்பநிலை மேலும் அதி தீவிர காலநிலை மாற்றங்களை உண்டாக்கும். அறுவடையில் இது பெரும் சேதத்தை ஏற்படுத்தும். உணவுப் பாதுகாப்பின்மை மருத்துவ முறைகளின் சுமையை அதிகரிக்கும். இந்த உண்மைகளைப் பொருட்படுத்தாமல் மனித குலம் இப்போது செயல்படுவதைப் போல தொடர்ந்தும் செயல்பட்டால் 2050ம் ஆண்டிற்குள் 640 மில்லியன் பேர் எடைக் குறைவால் பாதிக்கப்படுவர். உடற்பருமன் 70% அதிகரிக்கும்.
“உணவு முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, மறுசீரமைப்பது போன்றவை அரசியல்ரீதியாக சவாலானது என்றாலும் அது மிகப்பெரிய பொருளாதார மற்றும் ஆரோக்கிய நன்மைகளைத் தரும்” என்று இது பற்றி ஆராய்ந்த பன்னாட்டு ஆய்வாளர் குழு கூறுகிறது. 2006ல் பிரிட்டிஷ் அரசால் முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணர் சர் நிக்கோலஸ் ஸ்டேர்ன் தலைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் செலவுகள் பற்றி ஆராய்ந்த குழு அறிக்கை (Stern review) இதையே வலியுறுத்தியது.
“உலக உணவு முறையே வருங்காலத்தில் பூமியில் மனிதனின் வாழ்வைப் பிடித்து வைத்திருக்கிறது. உரங்கள், பூச்சிக்கொல்லிகள், பெருமளவில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து விவசாயம் செய்யும் ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறைக்கு கொடுக்கப்படும் மான்ய உதவிகள் பயிர் நிலங்களை கார்பனை உறிஞ்சும் இடங்களாகவும், வன உயிரினங்கள் வாழத் தகுதியான இடங்களாகவும் மாற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு திசை திருப்பிவிடப்பட வேண்டும். உண்ணும் உணவில் மாற்றம் ஏற்படுத்துவது மற்றொரு முக்கிய அம்சம்.
தீமை தரும் உமிழ்வுகளைக் குறைக்க உதவும், திறனை மேம்படுத்தும் புதிய தொழில்நுட்பங்களில் அதிக முதலீடு செய்யப்பட வேண்டும். 2050ம் ஆண்டிற்குள் உணவுப் பாதுகாப்பின்மை குறையும்போது உலகில் இன்று பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் சத்துப் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும். 174 மில்லியன் குறைப் பிரசவங்கள் தடுக்கப்படும். 400 மில்லியன் விவசாயிகள் வேளாண்மையின் மூலம் போதுமான வருமானத்தைப் பெற முடியும்.
இதனால் தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பிருந்தது போல புவி வெப்ப உயர்வு 1.5 டிகிரியாக கட்டுப்படுத்தப்படும். பயிர் நிலங்களில் வளம் மிக்க நைட்ரஜன் சத்து இழக்கப்படுவது (Nitrogen run-off) தடுக்கப்படும்” என்று பாட்ஸ்டம் காலநிலை ஆய்வுக்கழகத்தின் (Potsdam Institute for Climate Impact Research ) ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான ஜோஹன் ராக்ஸ்டெர்ம் (Johan Rockström) கூறுகிறார்.
உணவு முறை மாற்றங்களுக்கு ஆண்டிற்கு உலக உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.4% வரை செலவாகும் என்று ஆய்வுக்குழு கணித்துள்ளது. பொருளாதாரத்தில் உணவுத் துறையே மிகப் பெரிய பங்கு வகிக்கிறது என்று முந்தைய ஆய்வுகளில் ராக்ஸ்டெர்ம் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்திருந்தனர். பூமியால் தாங்கக்கூடிய வரையறையை உடைத்தெறிந்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் நிலப்பகுதி பயன்பாட்டில் மாற்றம், உயிர்ப் பன்மயத்தன்மை அழிவு, 70% நந்நீர் வளம் குறைய உணவுத் துறையே முக்கியக் காரணியாக அமைகிறது.
இந்த ஆய்வறிக்கை பாட்ஸ்டம் கழகம், உணவு மற்றும் நிலப் பயன்பாட்டிற்கான கூட்டமைப்பு (The Food&Land use Coaalition), ஈட் எனப்படும் ஸ்டாக்ஹோம் உணவு முறை ஆய்வு கூட்டமைப்பு (EAT, a holistic food-system coalition of the Stockholm Resilience Centre), வரவேற்பு அறக்கட்டளை (the Wellcome Trust), ஸ்ட்ராபெரி அமைப்பு (Strawberry Foundation) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் பொருளாதாரப் பள்ளி உள்ளிட்ட கல்விக்கூடங்களின் நிபுணர்கள் இணைந்து தோற்றுவித்த உணவு முறைகள் மற்றும் பொருளாதார கமிஷனால் ((Food systems Economics commission) தயாரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம், மனித ஆரோக்கியம், சத்துகள் மற்றும் இயற்கை வள மூலங்களால் உணவுத்துறையில் மறைக்கப்படும் செலவுகளின் மதிப்பு 15 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனித குலத்தின் திறனைப் பொறுத்து காலப்போக்கில் இந்த செலவுகள் எவ்வாறு மாறலாம் என்பதை கணித்துக் கூற ஆய்வாளர்கள் புதிய மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
2023ல் அதிகாரப்பூர்வ பதிவேடுகளின் கணக்கீடுகளுக்கு அப்பால் உலகளவிலான உணவுப்பொருட்களின் மதிப்பு பத்து டிரில்லியன் டாலர்களுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறிய ஐநா உலக உணவுக் கழக அறிக்கையின் தொடர்ச்சியே இந்த ஆய்வறிக்கை.
“உணவு முறை மாற்றத்திற்கான பிராந்திய மற்றும் உலகளவிலான பொருளாதார வாய்ப்புகளை இந்த ஆய்வு முதல்முறையாக எடுத்துக் கூறுகிறது. உணவு முறைக்கான மாற்றம் சுலபமானதில்லை. ஆனால் உலகளவில் மாற்றம் நிகழவில்லை என்றால் அதனால் அதிகரிக்கும் செலவுகள் வருங்காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இது நாளை மனிதகுல நன்மைக்கு பெரும் ஆபத்து” என்று ஆக்ஸ்போர்டு சுற்றுச்சூழலியல் மாற்றத்திற்கான ஆய்வுக் கழகத்தின் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் லார்ட்உ (Dr Steven Lord) கூறுகிறார்.
மனிதன் மாறவில்லை என்றால் உயிர் வாழ அவன் உற்பத்தி செய்யும் உணவு முறைகளால் உருவாகும் இழப்புகளே எதிர்காலத்தில் அவனை அழிக்கும் ஆயுதமாக மாறும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- த.செயராமன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
புவி வெப்பமடைதலால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது குறித்து, பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இப்போது உருகி வருகின்றன. மெல்ல மெல்ல கடல் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவு விரைவில் கடலுள் மூழ்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. மாலத்தீவு தன் மக்களைக் குடியேற்றிப் பாதுகாக்க வெளிநாட்டில் இடம் வாங்குகிறது. 2050- க்குள் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் பல நாடுகளின் நிலப்பகுதிகள் கடலுள் மூழ்குவதால் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தா இடம் மாற்றப்பட இருக்கிறது. அதை ஒட்டிய கடற் பகுதியில் ஓராண்டுக்கு 1.5 சென்டிமீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 2050 இல் ஜகார்த்தா கடலில் மூழ்கும் என்று ஆய்வாளர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் கணித்துள்ளார்.இந்தோனேசியாவின் சில பகுதிகளில் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து,250 அளவில் ஜகாத் தான் முற்றிலுமாக காணாமல் போகும். அவ்வாறெனில், ஜகார்தாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, கொச்சி போன்ற நகரங்கள் ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிற்கு கடலில் மூழ்கும் என்று தினமலர் ஏடு 7 நவம்பர் 2021 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடல் மட்ட நீர் உயர்வால் 50 பெரிய கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. 2030-க்குள் மும்பை, கொல்கத்தாவுக்கு தெற்கே உள்ள சுந்தரவனக் காடுகள், கொல்கத்தா, ஒடிசாவில் கட்டாக், குஜராத் கடற்கரையோர நகரங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்குக் கடலுக்குள் மூழ்கும். 2100-ல் கடற்கரை நகரங்கள் அனைத்துமே கடலுள் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.
இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள் கடலுள் மூழ்கி விடும். ஏனெனில், ஒரு வருடத்திற்கு 270 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் 7 மீட்டர் உயர்ந்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய்க்கும் நடுவில் பசிபிக் கடலில் உள்ள துவாலு (Tuvalu) என்ற தீவு -நாடு மிகப்பெரும் அச்சத்தில் இருக்கிறது. அதிலிருந்த ஒன்பது தீவுகளில் இரண்டு தீவுகள் மூழ்கி விட்டன. மீதி உள்ளவை கடல் மட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளன. மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், ஃபிஜி தீவுகள், சமோவா தீவுகள் - அனைத்தும் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தூரத்தில் இல்லை.
இந்திய நகரங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா (National Aeronautics and Space Administration) ஓர் எச்சரிக்கையை அளித்துள்ளது. 2050-இல் 12 இந்திய நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று கூறியுள்ளது. அதுவும் 2.7 மீட்டர் அளவு ஆழத்துக்கும் கீழ் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
2024 ஆகஸ்ட் 4 அன்று மாலைமலர் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. 2040-ல் சென்னையின் நிலப்பரப்பில் 7% கடலுள் மூழ்கும் என்று தெரிவிக்கிறது.
1987 - 2021 க்கு இடைப்பட்ட காலக்கடடத்தில், சென்னை கடல் மட்டம் 6.79 மில்லி மீட்டர் உயர்ந்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் 2,100-ஆம் ஆண்டளவில் 74. 7 செ.மீ அளவிற்குக் கடல் மட்டம் உயரும் என்று கணக்கிட்டுள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் அறிவியல் -தொழில்நுட்பம் -மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP - The Centre for Study of Science, Technology and Policy) , சென்னை தீவுத்திடல், மயிலாப்பூர், தமிழ்நாடு அரசின் நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சென்னை துறைமுகம் உள்ளிட்டவை கடலுள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் மூழ்க இருப்பதாகக் கூறப்படும் 7.29% நிலப்பகுதி என்பது 86.6 சதுர கிலோமீட்டர் ஆகும். 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 9.65% , அதாவது சென்னையின் 114.31 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும்.
இவ்வாறு கடல் மட்டம் உயரும் வேகம் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது அதிகரித்து வருகிறது. 2040-ல் தூத்துக்குடியில் 10% மூழ்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 3029.33 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடலுள் மூழ்கும் என்று கணித்துள்ளனர்.
காவிரிப் படுகையின் நிலை என்ன?
காவிரிப் படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கி தாழ்ந்து கொண்டிருக்கிறது (subsidence ); அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நகரங்களைப் பற்றி பேசும் ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் காவிரிப் படுகை பற்றிப் பேசுவதில்லை. இதில் வியப்பு என்னவென்றால், காவிரிப்படுகை மக்களும், காவிரி படுகையைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகளும் இது குறித்து சிந்திப்பதில்லை.
காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இந்த மூன்று அடி உயரம் என்பது விரைவில் கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து போகும். காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் நிலம் தாழ்ந்திருக்கிறது என்பது உண்மை. ஓஎன்ஜிசி யின் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எண்ணெய் -எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது.
வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் (2020) புதிய கிணறுகளை அமைக்க அனுமதிக்காத நிலையில், பழைய கிணறுகளை மராமத்து செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு ஒவ்வொரு கிணற்றிலும் 45 முதல் 60 நாட்களுக்கு ஓ.என்.ஜி.சி. வேலை செய்கிறது. பழைய எண்ணெய்க் கிணற்றின் வாய்க்குள் சற்றே சிறிய குழாய்களைச் செலுத்தி, 1500 மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டில் திருப்பி, பக்கவாட்டுக் கிணறுகளை அமைக்கிறது. அக்கிணறுகள் 3 கிலோ மீட்டர் ஆழம் வரை செலுத்தப்படுகின்றன. ஷேல் அல்லது களிப்பறையில் அக்கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
காவிரிப் படுகைக்கு அருகாமையில் உள்ள ஆழமற்ற கடற்பகுதி, ஆழமான கடற் பகுதியில் வேதாந்த நிறுவனமும், ஓ எம் ஜி சி நிறுவனமும் பல நூறு எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க முன்னமே உரிமங்களைப் பெற்றிருக்கிறார்கள். கடலுக்குள் கிணறுகளை அமைத்தாலும் அது காவிரிப் படுகையை மிகப்பெரும் அளவிற்குப் பாதிக்கும்.
நிலத்தைக் குடைந்து எண்ணெயையும், எரிவாயுவையும் தண்ணீரோடு சேர்த்து பெருமளவுக்கு தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருப்பதால் முன்னமே காவிரிப் படுகையின் நிலப்பரப்பு தாழ்ந்து போயிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் எண்ணெய் - எரிவாயு மற்றும் தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சி எடுக்குமானால், காவிரிப்படுகையில் நிலம் உள்வாங்குதல் விரைவு படுத்தப்படும்.
இதுபோன்றே ஆந்திராவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகள் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் 3 அடி முதல் 6 அடி வரை நிலப் பகுதிகள் தாழ்ந்து போயிருக்கின்றன. இது மிகப்பெரும் கவலையை அப்பகுதி சூழலியலாளர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. ஜி கிருஷ்ணராவ் என்ற ஆந்திர பிரதேச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூகோளவியலாளர், கிருஷ்ணா - கோதாவரிப் படுகையின் உயரம் தாழ்ந்து போவது குறித்து ஆய்வு செய்தார். ஜி. கிருஷ்ணராவ் கிழக்குக் கோதாவரி பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி வரை நிலப்பகுதி உள்வாங்கி இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார் ( The Hindu, 23 July 2017 ) . இதை ஆய்வு செய்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள படுகை ஆய்வுகள் நிறுவனம் (Delta Studies Institute) தெளிவாக காணக்கூடிய அளவில் நிலத்தில் மாற்றங்கள் ( noticeable land changes) இருப்பதாக அறிக்கை அளித்தது. கிருஷ்ணா - கோதாவரி படுகையில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ அது காவிரிப் படுகையிலும் நிகழ்ந்திருக்கிறது.
சான்றாக, மயிலாடுதுறை உள்ளிட்ட பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் 165 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரையின் நிலவியலை ஆய்வு செய்து, அதன் புவியியல் அமைப்பு குறித்து, அது ஒரு "தாழ்வான கடற்கரை மண்டலம்" (the low elevation coastal zone) என்றும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விடவும் தாழ்வாக இருக்கிறது (below sea level) என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (Times of India, 19 July 2023). காவிரிப் படுகையில் பல கிராமங்கள் கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றன என்பதை அறிய பலருக்கும் வியப்பாக இருக்கும். சில பகுதிகள் மட்டும் 5 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன. காவிரி படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் ஓர் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கிறது ("submergence due to land subsidence" Times of India, 19 July 2023). அது மட்டுமின்றி, படுகையின் பல இடங்கள் கடல் மட்ட அளவிற்கே, சமமாக இருக்கின்றன ( 0 m level).
இந்நிலையில் நம் முன் உள்ள கேள்வி இதுதான். கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லாத காவிரிப் படுகையில், மேலும் நிலம் உள் வாங்கினால், அதே நேரம் கடல் மட்டமும் உயர்ந்து வந்தால், காவிரிப் படுகை என்னவாகும்? காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் போய்விடும் என்பதை எவராவது நமக்கு உணர்த்த வேண்டுமா? இப்படி ஓர் அபாயம் இருக்கிறது என்பதை இன்னமும் நாம் உணரவில்லை.
பேரழிவும், பெருந்துயரும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். இன்று நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மண்ணால் மூடப்பட்டிருக்கிறது. நாளை காவிரிப்படுகை பேரழிவுத் திட்டத்தால் நிலம் உள்வாங்கப்பட்டு கடல் நீரால் மூடப்படும். இரண்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? வரலாற்றுப் புகழ் மிக்க, தமிழர்களின் பண்பாடு செழித்த , ஏராளமான தொல்லியல் சான்றுகளைத் தன் வயிற்றுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கக் கூடிய, இன்றளவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் உணவுக்கலமாக இருக்கக்கூடிய, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய, இந்த காவிரிப்படுகையை இழந்து விட்டால் தமிழினம் வாழுமா?
இன்று வயநாடு, நாளை காவிரிப்படுகை! காவிரிப்படுகையின் இருப்பு தமிழினத்தின் இருப்புக்கு அவசியம்!
- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு & நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?
- உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புவி வெப்ப உயர்வு
- மழைக் காடுகளைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு புதிய நம்பிக்கை
- புவி வெப்ப உயர்வைக் குறைக்க உதவும் மண்
- சூழலுக்காக உயிர் கொடுத்தோர்
- சூடாகும் நகரங்கள்
- எர்த்ஷாட் விருது இந்தியாவிற்கும்