கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகம் முழுவதும் உள்ள வேளாண் மண்ணை சிறிதளவு மேம்படுத்தினால் அதிக கார்பனை மண்ணில் சேகரிக்கலாம் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மண்ணை வளமுடையதாக்கினால் விளைச்சல் அதிகரிக்கும்.
இதன் மூலம் மண்ணில் கார்பனை அதிக அளவு சேகரிக்கலாம். ஆனால் அதிக அளவு செயற்கை உரங்களைப் பயன்படுத்தி தீவிர விவசாயம் செய்யப்படுவதால் மண் வளம் புறக்கணிக்கப்படுகிறது. நிலத்தில் போடப்படும் பெரும்பாலான செயற்கை உரங்களும் வீணாகின்றன. இது பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வை அதிகரிக்கிறது.
உலகில் பாதி வேளாண் நிலத்தில் 1% கார்பனை கூடுதலாக சேகரிக்க இப்போது உள்ளதை விட சூழலுக்கு நட்புடைய விதத்தில் வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.இது மண்ணிற்கு ஆண்டிற்கு 31 கிகாடன்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச உதவும். இது உலகளவில் 2030ம் ஆண்டிற்குள் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த இலட்சியமிடப்பட்டுள்ள, ஆண்டிற்கு 32 கிகா டன் கார்பன் டை ஆக்சைடு குறைப்பு என்ற அளவிற்கு நெருக்கமானதே. இந்த ஆய்வுகள் ஐநாவின் சூழல் திட்டத்தின் (UNEP) முன்னாள் தலைமை விஞ்ஞானியும் ஐரோப்பிய சூழல் முகமையின் (EEP)முன்னாள் செயல் இயக்குனருமான ஜாக்கிலேன் மக்லேட் (Jacqueline McGlade) அவர்களின் தலைமையில் நடத்தப்பட்டது.
இதன் மூலம் உலகில் இன்று வளமிழந்திருக்கும் விவசாய நிலங்களின் மேல் மண்ணில் 30% கூடுதல் கார்பனை சேகரிக்க முடியும். மக்லேட் தற்போது மண் வளம் குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு வழங்கும் டவுன்ஃபோர்ஸ் தொழில்நுட்பம் (Downforce technologies) என்ற நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்துகிறார்.
ஒவ்வொரு விவசாயியின் நிலத்திலும் கார்பனின் சேமிப்பு
இந்நிறுவனம் பொதுவெளியில் கிடைக்கும் உலகளாவிய தரவுகள், செயற்கைக்கோள் படங்கள், லைடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெறப்படும் தகவல்களைக் கொண்டு மண்ணில் எவ்வளவு கார்பன் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து விவசாயிகளுக்குக் கூறுகிறது. இந்த நிறுவனம் ஒவ்வொரு விவசாயியும் பயிர் செய்யும் வேளாண் பரப்பில் சேகரிக்கப்பட்டுள்ள கார்பன் பற்றிய தகவல்களை அளிக்கிறது.
விவசாயிகளைத் தவிர மற்ற பொதுமக்கள் மண்ணின் முக்கியத்துவத்தைப் பற்றி இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. காலநிலையில் மண்ணிற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இயற்கையாக பயிர் செய்யும் முறைகளை மாற்றுவது கார்பன் சேகரிப்பை எதிர்மறையானதாக்கி விடும். விவசாய மண்ணே கார்பனை அதிக அளவில் உறிஞ்சுகிறது. சூழலுக்கு நட்புடைய பயிர் முறை குறைந்த செலவில் விவசாயம் செய்யவும் உதவுகிறது.
நீடித்த வளர்ச்சிக்கு இயற்கை விவசாயம்
மிதமிஞ்சிய செயற்கை உரங்கள், வேதிப்பொருட்கள் பயன்பாடு போன்றவை அடங்கிய இன்றைய விவசாய முறையில் இருந்து சூழல் நட்புடைய விவசாய முறைக்கு மாற தொடக்கத்தில் சற்று கூடுதல் செலவாகும் என்றாலும் புதிய முறைக்கு மாறிய இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் நல்ல விளைச்சலை எடுக்கலாம். இந்த மண் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது அதிக ஆரோக்கியம் உடையதாக இருக்கும்.
300,000 பேர் வாழ்ந்துவரும் கென்யாவின் வளமிழந்த 40,000 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள வேளாண் நிலப்பகுதியை பயிர் செய்ய ஏற்றதாக மீட்டெடுக்க 1 மில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு கார்பனை உறிஞ்சியது என்பதைப் பொறுத்து விவசாயிகள் சேகரிக்கப்பட்ட கூடுதல் கார்பனை கார்பன் கிரெடிட் என்ற முறையில் கணக்கிட்டு விற்கலாம்.
கார்பன் கிரெடிட் (Carbon credit) என்பது உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடை விட அதிகம் சேமிக்கப்பட்டு கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறிக்கிறது. இதன் அளவைப் பொறுத்து இது சர்வதேச சந்தையில் மதிப்பிடப்படுகிறது. பின்னர் இது அதிகம் கார்பனை உமிழும் அமைப்புகளுக்கு விற்கப்படுகிறது.
வளமில்லாமல் போன 40% விவசாய மண்
மண் பூமியில் கார்பனை உறிஞ்சும் முக்கிய ஆதாரம். ஆனால் இதுவரை உலகின் குறிப்பிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாய நிலப்பகுதி மண் எவ்வளவு கார்பனை பிடித்து வைத்துக் கொள்கிறது, எவ்வளவு கார்பன் டை ஆக்சைடை உமிழ்கிறது என்பது பற்றி அறிய முடியாமல் இருந்தது. ஐநா புள்ளிவிவரங்களின்படி இன்று உலகில் உள்ள 40% வளமான மண் தரமிழந்துவிட்டது.
புவி வெப்ப உயர்வு தொழிற்புரட்சிக்கு முன்பிருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரையறையை கடந்து கொண்டிருக்கும் நிலையில் காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடைப் பிடித்து ஏதேனும் ஒரு முறையில் சேகரித்து வைக்க கார்பனைக் கைப்பற்றி சேகரித்தல் (Carbbon Capturing System CCS) பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. ஆனால் இத்தொழில்நுட்பங்கள் எந்த அளவு பயன் தரக் கூடியவை என்பது பற்றி இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
தீர்வு என்ன?
விவசாயிகள் பயிர் சுழற்சி முறையைப் பயன்படுத்தி பயிர் செய்தால் மண்ணில் அதிக கார்பனை சேகரித்து வைக்கலாம். க்ளோவர் (clover) போன்ற கால்நடைத் தீவனமாகப் பயன்படும் புல் போன்றவற்றை வேலியோரங்களில் அதிகமாக வளர்க்கலாம். மைக்ரோரைஸல் பூஞ்சைகள் மற்றும் நுண்ணுயிரிகளை அதிகம் பெற்ற, மண்ணில் பல மீட்டர் ஆழத்தில் வேர்களை ஊன்றி வளர்க்கும் புதர்வகைச் செடிகளை (hedgerows) வளர்ப்பதன் மூலம் அதிக கார்பன் மண்ணில் சேமிக்கப்படுகிறது.
ஆனால் தீவிர வேளாண்மைக்காக விவசாயிகள் இந்த வகைத் தாவரங்களை தங்கள் வயல்களில் இருந்து சுலபமாக அகற்றினர். மீண்டும் இவற்றை வளர்ப்பதன் மூலமும், இருக்கும் இவ்வகை செடிகளை அழியாமல் காப்பதன் மூலமும் உயிர்ப்பன்மயத் தன்மை மேம்படும். மேல் மண் அரிப்பு தடுக்கப்படும். நதிகளை மாசுபடுத்த முக்கிய காரணியாக இருக்கும் தீமை செய்யும் வேளாண் கழிவுகள் மண்ணை நஞ்சாக்காமல் பாதுகாக்கும்.
மண் இல்லாமல் மனிதன் இல்லை. மண் என்னும் மதிப்புமிக்க வளம் பூமியில் இருப்பதால்தான் மனிதன் இங்கு வாழ முடிகிறது. மண்ணை மரணமடையாமல் பார்த்துக் கொள்வது மனித குலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு மட்டும் இல்லாமல் புவி வெப்ப உயர்வில் இருந்தும் பூமியைக் காப்பாற்ற உதவுகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த பத்தாண்டுகளில் 1700க்கும் மேற்பட்ட சூழல் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒரு போராளி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புதிய ஆய்வு கூறுகிறது. வாடகைக் கொலையாளிகள், குற்றக்குழுக்கள் மற்றும் சொந்த அரசுகளால் 2012 முதல் 2021 வரை 1733 நிலப் பாதுகாவலர்கள், சூழல் செயல்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளி நாடு
குளோபல் விட்னஸ் (Global Witness) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த கொலைகள் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸ், மெக்சிகோ மற்றும் ஹாண்டுரஸ் நாடுகளில் மற்ற உலக நாடுகளை விட அதிகமாக நடந்துள்ளது. 2012 முதல் இந்த தன்னார்வ அமைப்பு சூழலிற்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடுகிறது.சட் வாடி கொலை
2012ல் இந்த அமைப்பின் தலைமை செயல் அலுவலர் மைக் டேவிஸுடன் கம்போடியாவில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது போராளி சட் வாடி (Chut Wutty) கொல்லப்பட்டார். அதில் இருந்து இந்த அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகின்றது.
செயலற்ற உலகம் - செயல்வேகம் பெற்ற கொலைகள்
2020ல் கொரோனா தொற்றினால் உலகம் செயலற்று முடங்கிக் கிடந்தபோதும் சூழலிற்காக பாடுபடுபவர்களின் கொலைகள் உலகம் முழுவதும் தொடர்ந்தன. அந்த ஆண்டில் மட்டும் சாதனையளவாக 227 பேர் கொல்லப்பட்டனர்.
அதிகார அமைப்புகளுடன் முரண்பட்டு சூழல் காக்க கேள்வி கேட்பவர்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகின்றனர். உலக மக்கட்சமுதாயம் இந்த நிலையை மாற்ற விழித்துக் கொள்ள வேண்டும் என்று மைக் டேவிஸ் கூறுகிறார். இந்த கொலைகளால் குறைந்த வருமானம் உடைய சமூகங்கள், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் உலக மக்கட்தொகையில் 5% மட்டுமே. கொல்லப்பட்ட பிரிவுகளில் இவர்கள் 39%.
காரணங்கள்
சுரங்கத் தொழில், பெருமளவில் மரம் வெட்டும் தொழில் மற்றும் விவசாய விரிவாக்கத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் இத்தகைய குற்றங்களை அதிகம் செய்கின்றன. இதற்கான காரணங்கள் பற்றி உலகம் நன்கறிந்ததே. இயற்கையைப் பாதுகாக்க போராடும் சூழல் மண்டலங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகம் நடைபெறுவதால் இவை வேறு காரணங்கள் சொல்லி மூடி மறைக்கப்படுகின்றன.
மறைந்த சாட் வாடி, இத்தகைய கொலைகள் பற்றிய உண்மையான விவரங்கள் உலகிற்கு தெரியப்படுத்தப்பட வேண்டும், இவற்றைத் தடுக்க வழி காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
புள்ளிவிவரங்கள்
2021ல் காங்கோ மக்கள் குடியரசில் விரங்கா (Virunga) தேசியப் பூங்கா காவலர்களில் எட்டு பேர் உட்பட 200 பேர் கொல்லப்பட்டனர். சுரங்கத் தொழிலும், எண்ணெய் எடுக்கும் வேலையும் அதிகமாக நடப்பதால் சமீப ஆண்டுகளில் இத்தகைய அநீதிகள் இங்கு அதிகமாகி வருகின்றன. கென்யாவில் சூழலியளாளர் ஜோஆனா ஸ்டச்பரி (Joannah Stutchbury) 2021ல் அவருடைய வீட்டிற்கு முன்னால் வைத்துக் கொல்லப்பட்டார்.
பிரேசிலில் நடப்பதென்ன?
கொலம்பியாவின் சூழல் செயல்பாட்டாளர் ஏஞ்சல் மைரோ காட்டஜினா (Angel Miro Cartagena) சூழல் காக்கும் பணியில் 2021ல் கொல்லப்பட்டார். 2022 ஜூனில் செய்தியாளர் டாம் பிலிப்ஸ் (Dom Phillips) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். புகழ்பெற்ற கார்டியன் மற்றும் அஃப்சர்வர் இதழ்களுக்காக சூழல் அநீதிகள் குறித்து மிகத் தீவிரமாக எழுதி வந்தவர் இவர்.
இவருடன் சேர்ந்து, பழங்குடியினர் குறித்த ஆய்வாளர் புருனோ பெராரா (Bruno Pereira) பிரேசில் அமேசான் காடுகளில் ஜவாரி (Javari) பள்ளத்தாக்கில் கடத்திச் சென்று கொல்லப்பட்டார். பிலிப்ஸ் “அமேசானைக் காப்பாற்றுவது எப்படி?” என்ற தலைப்பில் நீடித்த நிலையான வளர்ச்சி பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருந்தார். புருனோ நேர்முகங்கள் காணுவதில் அவருக்கு உதவியாக இருந்தார்.
சில வெற்றிகள்
தென்னாப்பிரிக்கா கிழக்கு கேப் பகுதியில் திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் பகுதியை அழித்து ஷெல் நிறுவனம் எண்ணெய் சுரங்கம் நிறுவுவதை அப்பகுதி பழங்குடியினர் செப்டம்பர் 2022ல் நீதிமன்ற வழக்கு மூலம் தடுத்து நிறுத்தினர். இந்தோனேஷியா சாங்ஹி (Sanghie) தீவுப்பகுதியில் 2022 மே மாதத்தில் மக்கள் ஒன்றுகூடி கனடாவைச் சேர்ந்த நிறுவனம் அவர்களின் வாழிடத்தில் தங்கச் சுரங்கம் தோண்டும் முயற்சியை நீதிமன்றத் தீர்ப்பு மூலம் தடுத்தனர்.
பணக்கார பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களில் கிடைத்த இத்தகைய வெற்றிகளே ஆய்வறிக்கையை தயாரிக்க தன்னைத் தூண்டியது என்று இதன் ஆசிரியர் அலி ஹைன்ஸ் (Ali Hines) கூறுகிறார்.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் பிரேசிலில் 342, கொலம்பியாவில் 322, மெக்சிகோவில் 154, ஹாண்டுரஸில் 170, பிலிப்பைன்ஸில் 217 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமூக அநீதி, ஊழல் போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். ஊழல் அதிகாரிகள், பணம் வாங்கிக் கொண்டு அநீதியை தீர்ப்பாக மாற்றிச் சொல்லும் நீதிபதிகள் போன்றோர் அதிகமாக இருப்பதால், தப்பித் தவறி விசாரணை நடந்தாலும் அது நீதியின் வழியில் செல்வதில்லை என்றும், சூழல் செயல்பாட்டாளர்களுக்கு உரிய அடிப்படை பாதுகாப்பை உலக அரசுகள் வழங்க வேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது. அநீதி செய்யும் நிறுவனங்கள் சட்டரீதியாக பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாக்கப்பட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நகரங்களில் தெருவோர மரம் நடுதல், மழைநீர் சேகரிப்புத் தோட்டங்கள் அமைத்தல், நடைபாதைகளில் செடி வளர்ப்பு போன்றவற்றின் மூலம் பசுமைப் போர்வையின் பரப்பை அதிகரிப்பது நகரங்கள் சூடாவதைத் தடுக்க உதவும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன.
நகர விரிவாக்கம் மற்றும் புவி வெப்ப உயர்வு நகரங்களை நாளுக்கு நாள் வெப்பமடையச் செய்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் 0.05 சி என்ற அளவில் வெப்பநிலை சராசரியாக அதிகரிக்கிறது. நாஞ்ஜிங் (Nanjing) மற்றும் ஏல் (Yale) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2000 முதல் 2021 வரை 2000 நகரங்களின் செயற்கைக்கோள் தரவுகளை கிராமப்புற தரை வெப்பநிலை அளவுகளுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வை நடத்தினர்.
நகரப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை பத்தாண்டிற்கு சராசரியாக 0.56 டிகிரி, இரவு நேர வெப்பநிலை சராசரியாக 0.43 டிகிரி என்ற அளவில் அதிகரித்துள்ளது இந்த ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கிராமப் பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு சராசரியாக பகலில் 0.4 மற்றும் இரவில் 0.37 டிகிரி என்ற அளவில் இருந்தன. நகரங்கள் கிராமப் பகுதிகளை விட 29% வேகமாக சூடாகின்றன என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.நகரங்களின் அளவும் வெப்ப உயர்வும்
நகரங்களின் அளவு அதன் வெப்பமடைதலுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் மாநகரங்கள் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக 0.69 டிகிரி சூடாகியுள்ளன. சிறிய நகரங்கள் 0.41 டிகிரி மட்டுமே வெப்பமடைந்துள்ளன. கண்டங்களைப் பொறுத்தும் நகரங்கள் சூடாவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. மாநகரங்கள் அதிகமாக இருக்கும் ஆசியாவில் பகல் மற்றும் இரவு நேர வெப்பம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நகரங்கள் பகலில் குறைவான அளவே வெப்பமடைகின்றன. ஓசியானா பகுதியில் இருக்கும் நகரங்கள் இரவில் குறைவான அளவு வெப்பமடைகின்றன. ஆனால் ஆசிய நகரங்கள் பகல், இரவு என்று வேறுபாடில்லாமல் வெப்பமடைந்து வருகின்றன. ஆராயப்பட்டவற்றில் 90% நகரங்களில் நகர விரிவாக்கம், காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என்று தெரிய வந்துள்ளது. இங்கு பத்தாண்டுகளில் சராசரியாக மனித செயல்களால் மட்டும் 0.3 டிகிரி வெப்ப உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலை
இந்தியாவில் கடந்த பத்தாண்டில் விரைவான நகரமயமாக்கம் 0.23 டிகிரி வெப்ப உயர்விற்குக் காரணமாக இருந்துள்ளது. ஆனால் கட்டாந்தரையாக இருக்கும் நிலப்பகுதிகள் மரம் செடிகள் நட்டு வளர்க்கப்படும்போது குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை விட இரவில் இது அதிகம் நிகழ்கிறது. அப்போது தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி குளிரச் செய்கின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சிகாகோ மாதிரி
ஐரோப்பாவில் நகரப் பசுமையாக்குதல் மூலம் நகரங்கள் வெப்பமடைவதை சராசரியாக 0.13 டிகிரி சி என்ற அளவில் குறைக்க முடிந்துள்ளது. சிகாகோவில் 1995ல் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதலிற்குப் பிறகு நடைமுறைப் படுத்தப்பட்ட பசுமையாக்கல் திட்டத்தினால் கடந்த பத்தாண்டில் 0.084 டிகிரி வெப்பம் குறைந்துள்ளது.
நகர வெப்பமயமாவதை மேலும் மோசமாகாமல் தடுக்க நகர விரிவாக்கத் திட்டங்களின்போது அவற்றின் பசுமைப் போர்வையை அதிகரிக்கச் செய்ய முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கொள்கை வகுப்பவர்களை வலியுறுத்தியுள்ளனர்.
இயற்கை வழியில் தாவரங்கள் வளர்ப்பதன் மூலம் மேற்கொள்ளப்படும் பசுமையாக்குதல், நகரங்களில் எல்லா காலநிலைகளுக்கும் பயனளிக்கிறது என்று க்ளாஸ்ட்டர்ஷெர் (Gloucestershire) கவுன்சிலின் காலநிலை மேலாளர் ஜான் பெர்க் (Jon Burke) கூறுகிறார். பசுமைப் பரப்பு அதிகரிப்பதால் நகரங்களில் குற்றச் செயல்கள், மனநலக் கோளாறுகள் குறையும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
40% பசுமைப் போர்வை
வெப்பநிலையைக் குறைக்க நகரப்பரப்பில் 40% பசுமை தேவை. ஆள்பவர்கள் இதற்கு உடனடி முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அதிகரித்து வரும் நகர வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்குகளை குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். நகர நிர்வாகங்கள் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்காக செலவிடும் தொகையை விட இதற்குக் குறைவாகவே செலவாகும் என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் இருக்கும் மரங்களை வெட்டி, மனிதன் கட்டியெழுப்பும் கான்க்ரீட் காடுகள் நாளை அவனைக் காக்க முன்வராது. கிராமங்களை அழித்து நகரங்களாக்கி அவன் நாகரீகப் போர்வையால் உருவாக்கும் இடங்களே அவனுக்கு கல்லறையாவதற்கு முன், பசுமைப் போர்வையை ஏற்படுத்த முயலவேண்டும்.
மேற்கோள்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்

- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மரம்
- சூழலியல் மேம்பாட்டில் திமுக அரசு
- மண்வளம் குறைந்தால் மனிதன் அழிவான்
- 2021 ஐந்தாவது வெட்பமான ஆண்டு
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை