ஒடிசாவின் கடலோரப் பகுதியை ஒரு சூப்பர் புயல் தாக்கிய பிறகு பாறைகளின் கவசத்துடன் உள்ள வனப் பரப்பையும் கண்டல் காடுகளையும் பாதுகாப்பதில் மையப்புள்ளியாக ஒரு கிராமப்புற பெண்கள் குழு கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுகிறது. மகாநதி டெல்ட்டாவில் புகழ்பெற்ற பூரி கோயில் மாவட்டத்தில் கண்டல்பா (Gundalba) கிராமம் மணற்பாங்கான ஒரு கடலோரப் பகுதி.
காட்டை ரோந்து சுற்றும் பெண்கள்
இங்கு உள்ள காட்டை மரம் கடத்துபவர்கள், வெட்டுபவர்களிடம் இருந்து திறனுடன் வேகமாக கையில் உள்ள வலிமையான மூங்கில் குச்சிகளை ஆட்டியும் மரத்தண்டுகளில் தட்டி ஓசை எழுப்பியும் 75 பேர் அடங்கிய பெண்கள் குழு பாதுகாக்கிறது. “குச்சிகளைத் தட்டி பத்து பேர் கொண்ட குழுக்களாக கண்காணிக்கிறோம். காட்டிற்குள் எல்லா இடங்களுக்கும் பரவலாக செல்கிறோம். விசில் ஊதுகிறோம்.காட்டின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் எங்கள் விசில் சத்தத்தைக் கேட்டு, மரங்களின் தண்டுப்பகுதியில் குச்சிகளை தட்டும் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடுகின்றனர். குழுவினர் இந்த ரோந்து பணியை சுழற்சி முறையில் செய்கின்றனர். இந்த ரோந்துப் பணி உள்ளூர் மொழியில் தெங்கா பஹல் (thenga pahal) என்று அழைக்கப்படுகிறது.
1999 சூப்பர் புயல் வட இந்திய கடற்பகுதியை தாக்கி பேரழிவை ஏற்படுத்திய பிறகு பெர்ஜஹேனியா வான் ஸுராக்ய சமிதி (Pir Jahania Van Surakhya Samiti) என்ற பெயரில் அமைந்த தன்னார்வத்துடன் செயல்படும் இந்த பெண்கள் குழு தொடங்கப்பட்டது” என்று குழுவின் செயலாளர் 52 வயதான சாருலதா பிஸ்வால் (Charulata Biswal) கூறுகிறார்.
கிராமப்புற இயற்கைப் பாரம்பரியத்தை மீட்டதற்காக இக்குழு 2012ல் முதல் ஐ நா வளர்ச்சித் திட்ட இந்தியப் பிரிவு உயிர்ப் பன்மயத் தன்மை விருதை (UNDP India Biodiversity Award) பெற்றது.
இறகுகள் போல கிளைகளை விரித்து நிற்கும் கேஷுவரீனா (Casuarinas) மற்றும் குட்டையான முந்திரி மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லையில் அஸ்டரங்கா (Astaranga) கடற்கரையோரம் உள்ள இந்த கிராமம் கடலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நன்கறிந்த அக்டோபர் 29 1999 புயலால் பெர்ஜஹெனியா (Pir Jahania) கோயிலுக்கு அருகில் உள்ள இப்பகுதியில் சூரிய காந்தி பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இப்போது இங்கு கடலலைகள் கரையை மென்மையாக வருடிச்செல்லும் காட்சியை காணலாம். “ அப்போது வீசிய புயலால் வீடுகள், தோட்டங்கள் அழிந்தன. மண் உவர் தன்மையுடையதாகியது. பல நாட்கள் உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை
குழந்தைகளுக்கு உடைகள் இல்லை” என்று புயலிற்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நினைவு கூறும் பிஸ்வால் “ஆனால் எங்கள் கிராமம் முழுவதும் அழியாமல் இருந்ததற்குக் காரணம் இந்த காடுகளும் கண்டல் செடிகளுமே. அவற்றாலேயே நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். இதற்கு பதில் காடுகளை பாதுகாக்க, உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க நாங்கள் உறுதிபூண்டோம்” என்கிறார். 75 ஹெக்டேர் பரப்புள்ள காட்டை காக்க 2001ல் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் வீதம் 70 பெண்கள் அடங்கிய வன பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது.
தேவி (Devi) நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்தில் 103 வீடுகள் உள்ளன. “தொடக்கத்தில் குழுவில் உள்ள பெண்களின் கணவர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இப்போது அவர்களும் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்” என்று வழிகாட்டி மற்றும் பூரி கௌரவ வனத் துறை சரகர் சொவார்கர் பிஹார (Sovakar Behera) கூறுகிறார். ஆண்கள் கரையில் பொருட்களின் விநியோகம், வீடு கட்டுதல், கிராமப் புணரமைப்பில் ஈடுபடுகின்றனர்.
குழுவினர் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை காட்டை ரோந்து சுற்றி வருகின்றனர். வீட்டு வேலைகளை முடித்த பிறகு காலை ஏழரை மணி முதல் காடு காக்கும் பணியைத் தொடங்குகின்றனர். பிறகு வீட்டுக்கு வருகின்றனர். மதிய உணவு உண்கின்றனர். வீட்டை பராமரிக்கும் வேலைகளை செய்து முடித்தபின் பகல் நேர ரோந்துக்கு செல்கின்றனர். ஆனால் பெண்கள் காட்டைப் பார்த்துப் பயப்படுவதில்லை. “காடு என்பது எங்கள் வீட்டின் விரிவாக்கமே. அதனால் நாங்கள் ஏன் பயப்படவேண்டும்?
காட்டின் மீது எங்களுக்கு உரிமையில்லை என்றாலும் நாங்கள் காட்டை பாதுகாக்கிறோம். ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை. உங்கள் குழந்தை கஷ்டப்படுவதை பார்க்க நீங்கள் விரும்புவீர்களா? இவ்வாறுதான் ஒவ்வொரு தாயும் நினைப்பாள். இந்த மரங்கள் எங்கள் காவியங்கள்! இந்த உணர்வு எங்களுக்குள் இயற்கையில் வந்தது. மரங்கள் மற்றும் எங்களின் வாழ்வை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள இது உதவுகிறது” என்று உள்ளுணர்வுடன் பிஸ்வால் கூறுகிறார்.
தற்போது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள குழுவினர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர்.” சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் பலரை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருடர்களை பயமுறுத்த சில சமயங்களில் நாங்கள் குச்சிகளை பயன்படுத்துகிறோம்” என்று குழு உறுப்பினர் ரஹிமா பிபை (Rahima Bibi) கூறுகிறார்.
காடு தரும் நன்மைகள்
மோதல்களைத் தவிர்க்க இதே காட்டை விறகிற்காக பயன்படுத்தும் அருகாமை கிராம மக்களுடன் குழு உறுப்பினர்கள் மேலாண்மை செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்து விறகு சேகரிக்க மாதத்திற்கு ஒரு நாள் ஒடுக்கப்பட்டுள்ளது. வேறொரு நாளில் அருகாமை கிராம மக்கள் விறகு சேகரிக்க கா காட்டிற்கு செல்கின்றனர்.
வழக்கமாக கண்டல்பா கிராமத்தினர் விறகு சேகரித்த மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு அருகாமை கிராம மக்கள் காட்டிற்கு வருகின்றனர். காட்டின் பாதுகாப்பு முழுவதும் குழுவினரிடமே உள்ளது. ஒற்றுமையுடன் வாழும் இந்து முஸ்லீம் சமுதாயத்தினர் இந்த பணியில் ஒன்றுசேர்ண்டு ஈடுபடுகின்றனர். வனப் பரப்பின் முக்கியத்துவம், சிறந்த காற்றுத் தடையாக விளங்கும் கண்டல் காடுகள் உயிரியல் பாதுகாப்பு அரணாக செயல்படுவது பற்றி குழுவினர் மற்ற இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இங்கு உள்ள மரங்கள் உவர் தன்மையுடைய காற்றை வேளாண் நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்கிறது. ஈரப்பதம் உள்ள காற்றை வயல்களுக்குள் விடாமல் பாதுகாக்கிறது. கண்டல் காடுகள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதி முழுவதும் காடுகள் வன உயிரினங்களை பாதுகாக்கின்றன. “சூப்பர் புயலின்போது சுமார் 30,000 கேஸுவரினா மரங்கள் அழிந்தன. கண்டல் காடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 70% பசுமைப் பரப்பு நாசமடநிதது.
கண்டல் செடிகளின் இலைகள் மக்கத் தொடங்கின. ஆனால் அவற்றின் வேர்கள் உயிருடன் இருந்தன. குழுவினர் செடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கேஸுவரினா மரங்கள் இப்பகுதியில் உள்ளூர் மர இனம்” என்று குழுவின் இன்னொரு உறுப்பினர் பிஹெரா (Behera) கூறுகிறார்.
குழுவினர் இப்பகுதியில் காணப்படும் அவய்சினியர் ஒபிஸினாலிஸ் ((Avicennia officinalis), அவய்ஸினர் ஆல்பா (Avicennia alba), இஜிசரஸ் கோனிகுலாட்டம் ( Aegiceras corniculatum), சிரியஸ் டிகாண்ட்ரா (Ceriops decandra), அகாந்த சிலிசிஃபோலியஸ் ( Acanthus illicifolius), ப்ரூக்லியேரா ஜிம்னோரைஸா (Bruguiera gymnorrhiza), எக்ஸோகேரியா அகலாச்சா (Excoecaria agallocha) ஆகிய நதி கழிமுகத்துவாரப் பகுதியில் வளரும் கண்டல் இனங்களை மறு உற்பத்தி செய்தனர்.
மீண்டு வந்த காடு
1985 முதல் வனப் பரப்பு குறிப்பாக கண்டல் காடுகளின் பரப்பு 2.58 சதுர கிலோமீட்டரில் இருந்து 2004ல் 4.21 சதுர கிலோமீட்டராக63% அதிகரித்துள்ளது என்று இந்திய உயிர்ப் பன்மயத் தன்மை விருது கூறுகிறது. காடு உயிருடன் படிப்படியாக மீண்டு வந்தது. பறவைகள் கூடு கட்ட தொடங்கின. அவற்றின் அழைப்புக் குரல்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்தன. இப்போது அதிகமாக உள்ள மான்கள் சில சமயங்களில் வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. மீண்டுவந்த காடு இந்த கிராமத்தை மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக மாற்றியுள்ளது.
காட்டுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒரு பகுதியில் நந்நீர் உள்ளது. புயற்காற்றுகள், கடற்காற்றுகளில் இருந்து காடுகளால் வயல்கள் பாதுகாப்புடன் உள்ளன. எவ்வித பேரிடர்ரையும் சமாளிக்கும் திறனுடன் உள்ள குழுவினர் வனத் துறையின் சமூக வன மேலாண்மை திட்டத்தில் குழுவை பதிவு செய்யும் முயற்சியில் உள்ளனர். வட இந்தியப் பெருங்கடற் பகுதியில் 1877 முதல் 1998 வரை உள்ள 122 ஆண்டு வரலாற்றில் அரபிக் கடலுடன் ஒப்பிடும்போது வங்காள விரிகுடாவில் புயல்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் மே, அக்டோபர், நவம்பரில் புயல்கள் உருவாகின்றன. சராசரியாக ஆண்டிற்கு ஐந்து முதல் ஆறு புயல்கள் வீசுகின்றன. 122 ஆண்டுகால வரலாற்றில் வங்காள விரிகுடாவில் நவம்பரில் புயல்கள் ஏற்படும் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1804 முதல் 1999 வரை உள்ள ஒடிசாவின் கடந்த இரு நூறு ஆண்டு காலத்தில், 7.5 மீட்டர் உயரத்தில் எழும்பிய அலையுடன் 10,000 பேரைக் கொன்ற 1999 அக்டோபர் 28 முதல் 30 வரை வீசிய சூப்பர் புயல் உட்பட 128 புயல்கள் தோன்றியுள்ளன.
வங்கக் கடலில் ஏற்படும் புயல் வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி தோன்றும் புயற்காற்றுகள், உயர அலைகள், உயரும் நீருடன் தொடர்புகொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மோசமான வெள்ளப்பெருக்குகளை விட புயல்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஜடவ்பூர் (Jadavpur) பல்கலைக்கழக கடல் சார் பள்ளியின் (School of Oceanographic) 2019 ஆய்வு கூறுகிறது. விவசாயமே இந்த மாவட்டங்களின் வாழ்வாதாரம். 71% புயல்களால் மகாநதி டெல்ட்டா சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது.
இது போன்ற அதிதீவிர நிகழ்வுகளால் சமூகங்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. “மூல வளங்களை சிறந்த முறையில் மேலாண்மை செய்ய இளம் தலைமுறையினர் எங்களுடன் இணையவேண்டும்” என்று பிஸ்வால் கூறுகிறார். காடு காக்கும் ஒடிசாவின் பெண்கள் போராட்டம் உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
மேற்கோள்: https://india.mongabay.com/2019/03/a-womens-squad-in-odisha-defends-its-forest-for-20-years/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்