கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கவிஜி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மரம் நடுகிறவன் கடவுளுக்கு ஒப்பானவன். அவனே ஆதியை கை நழுவாமல் பற்றி இருக்கிறான். அவன்தான் தீர்க்கதரிசி.
எல்லாமே சுழற்சியின் ஞாபகங்களால் உருவானவை. கோடரி கதை.... விறகு வெட்டி கதைகளை தூரோடு தூக்கி எரியும் காலம் இது. தங்க கோடரி அல்ல... தங்க கோபுரமே கொடுத்தாலும் மரம் வெட்டோம் என்ற சபதமே இந்த பூமியை காப்பாற்றும். தேவைக்கு வெட்டும் போதும் அதற்கு மாற்றாக மரங்களை நட வேண்டும். அது தான் தெய்வ வாக்கு. அல்லது தாக வாக்கு.
மரம் நடுவது ஆர்வத்தில் கூட நடக்கலாம். அதை ஒரு கட்டம் வரை வளர்த்தெடுப்பது தான் ஆழம் நிரம்பியவை. மரங்களே பூமியை தாங்கி பிடித்திருக்கும் பந்த கால்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் அழகு முன்னால் நிற்கும் மரங்கள் தான். சின்ன சின்ன மரங்களின் வழியே சித்திரம் அசைக்கும் வீதி தெருக்கள். வேப்ப மரங்களின் காற்றும் நிழலும் உள்ளம் பூரிப்பவை. வீதிக்குள் நுழையும் போதே ஊரின் உயிர் காத்து நிற்பது போல நிற்கும் புளியமரம்... தினம் தினம் புதிதாக தெரியும். ஊரின் நடுவே ஓங்கு தாங்காக பரந்து விரிந்து கிளை சரிந்திருக்கும் ஆலமரம்... எல்லா நேரமும் மனிதர்களை சந்திக்கும் சிந்தனை திடல். கிணற்றுக்கு போகும் வழியில் இருக்கும் அரச மர அழகு கண்களில் மணி அடிக்க... அரச மர இலைகளில் லட்சம் இதயங்கள் மினு மினுங்கும்.
ஒரு மரம் என்பது இரண்டு தொழிற்சாலைகளுக்கு சமம். ஒன்று ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இன்னொன்று கார்பன்டை ஆக்ஸைடை உரிந்து கொள்ளும். மரமில்லாத மலை சூரிய வெப்பத்தை இன்னும் அதிகமாக இழுத்து தரும் என்பது சூழலியல் விதி. இங்கே நமது வாகனம் வெளியிடும் புகை... இமயமலைக்கு போகும் என்பது சூழலியல் சூட்சுமம். உலகின் மிகப் பெரிய பம்புகள் மரங்கள்தான் என்பதை அறிந்து விட்டாலே.. மரத்தை நேசிக்க ஆரம்பித்து விடுவோம். அத்தனை வேகத்தில் வேரின் மூலமாக நீரை உரிந்து தனக்கு போக மிச்சத்தை ஆவியாக்கி விடும் மாய மந்திர தந்தை இந்த மரம்.
மரத்தை உற்று நோக்குகிறவன்... கண்டிப்பாக அதை வெட்ட முனைய மாட்டான் என்பது நான் கண்ட போதி.
மரத்தை வெட்டும் போது அது வெட்டுபவனுக்காவும் அழுகிறது. வெட்டுபவனின் வாரிசுகளுக்காகவும் புலம்புகிறது. உயிரின் பதறலை கொண்டு அலை பாய்கிறது. கவலை கொள்கிறது. பின் செத்து போகிறது. காலங்களை சுமந்து கொண்டு வாழ்வின் சாட்சியாய் நம்பிக்கையின் வேராய் நிற்கும் மரத்தை வெட்டி வீழ்த்தும் போது.. கால இடைவெளி பற்றிய ஆவணங்களை அழித்தெறிகிறோம் என்று பொருள்.
காடுகளை அழித்தல் தன் வீட்டுக்கே தீ வைத்தலுக்கு சமம் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். புலி இருக்கும் காடே வளமான காடு. புலிகள் இருக்க புதர்கள் வேண்டும். யானைகள் காட்டின் பேரழகு. காடு அழிய அழிய கோவிலில் பிச்சையெடுக்கும் யானைகளின் எண்ணிக்கை பெரும்பாவமென அரங்கேறத்தான் செய்யும். காட்டின் பிரமாண்டத்தை கையேந்த விடும் இந்த மானுடத்தை... விதிகளின் விழிகள் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தனக்கு தேவை என்பதைத் தாண்டி... பண்டமாற்று முறை கொஞ்சம் சிரமம் என்பதைத் தாண்டி... பணம் புழங்க துவங்கிய பிறகு... எங்கோ எவனுக்கோ ஆரம்பித்த பித்து.. முறுக்கேறி முறுக்கேறி.. மூச்சு முட்டி....கழுத்தை நெரித்து.. இதோ வெறும் பத்து பணக்காரனுக்காக மட்டுமே இந்த உலகம் தினம் தினம் தன் கண்களை மூடிக் கொண்டே குருட்டுப் பூனையாய் கிடைத்த விட்டத்தில் எல்லாம் எட்டிக் குதித்து கொண்டிருக்கின்றன. போகிற போக்கில் பலி ஆகும் யாவும்.... கூட மரமும் ஆகிறது. சிந்திக்கும் மனமோ வேகிறது.
அவிநாசி சாலையில் இருந்த மரங்களை வெட்டிய பாவத்தை இப்போது அனுபவிக்கிறோம். கோவையில் இத்தனை வெயில் எந்த காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில் என்று எதிர்காலம் இனி சொல்லும். வெயிலின் வெக்கைகளில் எல்லாம் உயிரோடு சருகான இலைகளின் கோபம் இல்லாமலா போகும்.
சரி தேவைக்கு சில போது மரங்களை அகற்ற வேண்டி தான் இருக்கிறது. அதற்கும் மாற்று விழி இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவது. ஆனாலும் அதிலும் சிக்கல் இல்லாமல் இல்லை. மரங்களை வேரோடு பிடுங்கி வேறு பக்கம் நடுவதில்.... நம் மண்ணின் மரங்கள் மட்டுமே வேர் பிடித்து உயிர் பிடித்து மீண்டும் வளர்கின்றன.... மற்ற மரங்கள் பட்டு போகின்றன என்று அறிய வருகையில்.. மண்ணுக்கும் மரத்திற்குமான உறவை புரிந்து கொள்ள முடியும். மண்ணின் இயல்பை.. அதன் பாரம்பரியத்தை.. அதன் பண்பை உணர்த்த இதை விட நாம் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை. மரமாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் அதனதன் மண்ணில் இருக்கும் போதுதான் வேர் பிடித்த வாழ்வு சாத்தியமாகிறது. பத்துக்கு பாதியையாவது இந்த வழியில் காப்பாற்ற முடிந்தால் அதை செய்தல் தான் முறை.
என் மலை உச்சியில் மரத்தோடு மரமாக நின்று கத்தி விளையாடிக் கொண்டிருக்கும் என்னை எப்போதாவது நான் காண நேர்கையில் இப்படித்தான் தோன்றும். ஒரு பெரு மழை அசைத்து பார்க்கும் என் உயிர்ப்பின் சுவடுகளை நான் உணரும் தருணம் தான் இயற்கையின் கொடை. யாருக்காவது இறைவனின் கொடை என்றும் தோன்றலாம். இயல்பாகவே காடும் காடு சார்ந்த வாழ்வை விரும்புகிறவன் நான். என்னை போன்றோருக்கு மரம் மனிதனை விடவும் பெரியது. நமக்கு முன்பே இந்த பூமியில் உருவான திரு.. திருமதி அது. அதற்கான வெகுமதி அதை வணங்காவிடினும் வெட்டாமல் இருப்பது தான். அதற்கு உயிர் இருக்கிறது. அது வேலை செய்கிறது. அது நம்மை கண்காணிக்கிறது. அதற்கு மொழி இருக்கிறது. மௌனம் கூட இருக்கிறது. உற்று நோக்குகிறவனுக்கு அது கடவுளாகவும் இருக்கிறது. அதனால் தான். மரத்தைக் கண்டால்... மஞ்சள் துணியை சுற்றி சாமியாக்கி விடுவோரை அவர்களின் மூட நம்பிக்கைகளையும் தாண்டி மனம் விரும்புகிறது. ஒரு மரத்தை காக்க ஒரு கடவுள் தேவைப்பட்டால் இன்னொரு கடவுளையும் உருவாக்கலாம் என்பது மர நீதி. மரம் எல்லாவற்றையும் விட பெரியது. வேர் பிடித்து கிளை பரப்பி இலைகள் விட்டு துளிர்கள் விட்டு... காய்த்து பூத்து.....வெயில் பிடித்து.... மழை குடித்து.. காற்று அசைத்து... பறவை பட்சிகள் புழு பூச்சிகள் வாழ இடம் கொடுத்து...என நிழலும் நிஜமுமாக நிற்கும் மரத்தை ஒப்பிட்டு மனிதனை மர மண்டை என்றால் அது நியாயம் இல்லை தானே.
எப்போதும் மரம் அசையும் காற்றுடன்.....எப்போதும் குடை மறந்த மழையுடன்...எப்போதும் மனம் நிறைந்த குளிர்ச்சியுடன் கழிந்த பால்யத்தை இப்போது நினைத்தாலும் மனமெங்கும் மழை தான். விழியெங்கும் கதை தான். எப்போது திறந்தாலும் ஓடி வரும் ஓடையில் படக்கென்று படுத்து நாயைப் போல வாய் வைத்து நீர் குடித்தவன்..... இன்று பிளாஸ்டிக் போத்தலில் வாங்கி மகானைப் போல குடிக்கிறேன். குலை நடுங்க...... குரல்வளை பிடுங்க... தாகம் மிரளும் தத்துவம் என்னை சூழ்கிறது.
கண் உறுத்தும் வறட்சிக்கு முன் ஓ வென குற்ற உணர்ச்சியோடு நிற்கிறேன். நானும் கூட இதற்கு காரணம்தான். உள் மனம் சத்தமிட்டு கூறுகிறது. நானும் இந்த காற்றை மாசு படுத்தி இருக்கிறேன். மரங்களுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறேன். பிளாஸ்டிக் கோப்பைகளை மற்ற குப்பைகளோடு சேர்த்துப் போட்டிருக்கிறேன். சாக்லேட் கவர்களை.......கொரியர் கவர்களை......கூச்சமே இல்லாமல் சாலையில் போட்டு போயிருக்கிறேன். கொஞ்ச காலம் முன்பு வரைகூட கறி வாங்க... மீன் வாங்க.. காய்கறி வாங்க... வெறும்கையோடு சென்று.... வாங்கியவைகளை பாலிதீன் கவர்களில் வாங்கி வந்திருக்கிறேன். வெட்கி கவிழ்கிறேன். துக்கித்து உணருகிறேன். உள்ளுக்குள் எழும் அசைவை எந்த மர அசைவால் நிறுத்த.
இயல்பாகவே மண்ணுக்கும் மரத்துக்கும் துரோகம் செய்வது தவறென்று நினைக்கும் மானுடத்தை இழக்க வைத்திருக்கிறது..... இன்றைய நவீனம்.
ஒரு சொட்டு நீருக்காக அண்டை மனிதனின் ரத்தம் குடிக்கும் மரணத்தனம் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை. அதற்கு முன் விழித்துக் கொள்ள வேண்டும். மரங்களின் கரம் பற்றிய மனிதன் பிழைத்துக் கொள்கிறான்.
சூட மரம்... சவுக்கை மரம்... பூ மரம்... தண்ணிக்கா மரம்... தைல மரம்... முகர வீங்கி மரம்... தேக்கு மரம்...ஈட்டி மரம்... என நினைவுகளில் அசையும் மரங்களின் ஈர காற்றில் இதயம் நிரம்புகிறது. மரங்களில் இதயம் வரைந்தது போதும்.... இளைய சமுதாயமே.... மரத்தை இதயத்தில் வரைவோம்.
எனது கவிதை ஒன்றோடு கட்டுரையை முடிக்கிறேன்.
"மரம் தொலைத்த வேதனை
மனிதனுக்கு இல்லாமல் இருக்கலாம்
கூடு தொலைத்த பறவைக்கு
கூடுதல் கவலை அது..."
- கவிஜி
- விவரங்கள்
- இரா.வெங்கட்ராகவன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் சூழலியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வருவதில் உறுதியாக செயலாற்றி வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலியலில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த பரப்பில் 20.31 விழுக்காடு. உலகிலுள்ள முக்கியமான 36 உயிர்ப் பன்மை மிக்க தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 165 வகையான மீன் இனங்களும், 76 வகையான நீர் நில வாழ்வன, 177 வகையான ஊர்வன, 454 வகையான பறவைகள் மற்றும் 187 பாலூட்டிகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.
வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாத்து சூழலியல் சமத்துவத்தை பேணுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள், 2 வன உயிரின காப்பகங்கள் என தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவமான சூழலியல் தன்மையை கொண்டுள்ளது.பசுமை தமிழ்நாடு இயக்கம்
திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்து வனப் பரப்பை அதிகரிப்பதிலும், புதிதாக பறவைகள் மற்றும் வன உயிரினக் காப்பகங்கள் உருவாக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.08 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்தும் வகையில் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் 261 கோடி உள்ளூர் மர வகைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈர நில இயக்கம் – ராம்சார் குறியீடு
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பருவ நிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நில இயக்கம் ஆகியவற்றையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிவது இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்களின் மேம்பாட்டிற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எடுத்த பெரும் முயற்சிகளால் தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை, கரிக்கிலி, பிச்சாவரம், வேடந்தாங்கல், கூந்தன்குளம், மன்னார் வளைகுடா, வெள்ளோடு, உதயமார்த்தாண்டபுரம், வேம்பனூர் ஆகியவை ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஒரே ஆண்டில் 10 இடங்கள் என தமிழ்நாட்டில் இதுவரை 13 இடங்கள் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வளைகுடா கடற்பசு காப்பகம்
தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் மிகவும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி Dugong எனப்படும் ஆவுளியா ஆகும்.
கடல்மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் இந்த ஆவுளியா இனம் அண்மை காலங்களில் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தேவாங்கு சரணாலயம்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்குகளை அருகி வரும் உயிரினமாக பட்டியலிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதியில் தேவாங்குள் வாழ்ந்து வருகின்றன.
வேட்டையாடுதல் மற்றும் காடுகளின் அழிவால் தேவாங்குகள் அழிந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்கும் வகையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு.
அகத்தியர் மலை யானைகள் காப்பகம்
தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலை, கோயம்புத்தூர் மற்றும் திருவில்லிபுத்தூரில் யானைகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. ஆசிய யானைகளின் வாழ்விட மேம்பாட்டிற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள வன வாழ்விடங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.
பறவைகள் சரணாலயங்கள்
கழுவெளி பறவைகள் சரணாயலம்
பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகளுக்கு வசிப்பிடமாக விளங்கும் தமிழ்நாட்டின் ‘மசாய் மரா’ என்று அழைக்கப்படும் கழுவெளி சதுப்பு நிலம் பழவேற்காடு ஏரிக்கு அடுத்து தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரியை உள்ளடக்கியது. விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் 5,161.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக கழுவெளியை பறவைகள்சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்
திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து நஞ்சராயன் குளத்தை உள்ளடக்கிய 125.88 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய பகுதியை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது திமுக அரசு.
வன உயிரின சரணாலயங்கள்
காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 686.405 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய காப்புக்காடுகளை தமிழ்நாட்டின் 17-வது சரணாலயமாக ‘‘காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்’ என்று உருவாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்கோளக் காப்பகம் வரை தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின சூழலை ஏற்படுத்துகிறது.
அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.
இவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் தமிழ்நாட்டின் வன உயிரின பாதுகாப்பு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.
- இரா.வெங்கட்ராகவன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு ஆண்டும் மனிதர்கள் 50 பில்லியன் டன் மண்ணையும், கற்களையும் பூமியில் இருந்து சுரண்டுகின்றனர் என்று சமீபத்திய ஐநா ஆய்வு கூறுகிறது. நீரிற்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் சுரண்டப்படும் பொருள் மண்ணே.
மதிப்பில்லாத மண்
ஆனால் நீர் போல அரசுகள் மற்றும் தொழிற்துறை இதை முக்கிய மூலவளமாகக் கருதுவதில்லை. இந்தப் போக்கு விரைவில் மாற வேண்டும். கூடுதல் கண்காணிப்பு, விநியோகச்சங்கிலி, எடுக்கப்படும் மண் மூலம் இழக்கப்படும் தாவர விலங்கினங்களுக்கு சமமான இழப்பீடு, சமத்துவமற்ற மண் சுரண்டலிற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ நா அறிக்கை வலியுறுத்துகிறது.
கட்டுமானம் முதல் தகவல் தொடர்பு வரை
தொழிற்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானம் முதல் தகவல் தொடர்புத்துறை உட்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதாரமாக இருப்பது மண்ணே. இந்நிலையில் மண் குறித்த அடிப்படைப் புரிதலும், அதன் மதிப்பும் உணரப்பட வேண்டும் என்று ஐ நா ஆய்வுக் குழு வலியுறுத்துகிறது.மனித குலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மண்ணை நம்பியே இருக்கும்போது அது அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்ற பொருளாக மதிக்கப்பட வேண்டும் என்று ஐநா சூழல் திட்டத்தின் உலக வள தகவல் தரவு மைய (Global Resource Information Database) இயக்குனரும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான பாஸ்கல் பெடுஸி (Pascal Peduzzi) கூறுகிறார்.
மற்ற வளங்கள் போலவே மண்ணும் கட்டுப்பாடு இல்லாமல் சுரண்டப்பட்டால் அது மறைந்து போகும். இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது.
மண்ணை மதிக்கத் தெரியாத மனிதன்
மற்ற தாதுப்பொருட்கள் போலவே மண்ணும் கருதப்பட வேண்டும். பூமியில் தாதுக்கள், நீர், எண்ணெய் மற்றும் வாயு போன்றவற்றிற்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பும், முக்கியத்துவமும் மண்ணிற்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நியூ கேஸில் (Newcastle) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு ஆசிரியர் கிறிஸ் ஹாக்னி (Chris Hackney) கூறுகிறார்.
கருந்துளை
ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கினால் மண் வணிகம் குறித்த தகவல்கள் பெரும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. மண் வியாபாரம் தொடர்பான தரவுகளைச் சுற்றிலும் ஒரு கருந்துளை (blackhole) நிலவுகிறது. இது தொடர்பான உலக மதிப்பிடல் தகவல் வலையமைப்பின் (Global Aggregates information network) புள்ளிவிவரங்களின்படி மண்ணை ஆதாரமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு கடந்த ஆண்டு 4.9% உயர்ந்துள்ளது.
2020ல் 42.2 பில்லியன் டன் என்ற அளவில் இருந்து இது 2021ல் 44.3 பில்லியன் டன்களாக அதிகரித்துள்ளது. உலகளவில் சுரண்டப்படும் மண் குறித்த துல்லியமான விவரங்கள் கிடைக்கவில்லை. அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அளவைப் பற்றி மட்டுமே விவரங்கள் கிடைக்கின்றன என்று ஐ நா கூறுகிறது.
மண் சுரண்டினால் சூழல் அழியும்
வரையறை இல்லாமல் தொடரும் மண் சுரண்டலால் உயிர்ப்பன்மயத் தன்மைக்கு இழப்பு ஏற்படுகிறது. புயல்களின்போது இயற்கை அரணாக இருக்கும் மண் குன்றுகள், மேடுகள் அழிவதால் வெள்ளப்பெருக்கு அபாயம் அதிகரிக்கிறது. இது மீனவர் சமுதாயத்தைப் பாதிக்கிறது. எரிபொருள் தகராறுகளுக்கும் வழிவகுக்கிறது. காலநிலைச் சீரழிவிற்கும் முக்கிய காரணமாகிறது. கான்க்ரீட் உற்பத்தி, உலகில் அதிகளவில் கார்பன் உமிழும் தொழிலாக மாறியுள்ளது.
தாவர விலங்கினங்களின் அழிவு
மண் மற்றும் சரளைக்கற்கள் சுரண்டலினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவப்புப் பட்டியல் தாவர விலங்கினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினங்களின் எண்ணிக்கை 24,000 இனங்களுக்கும் கூடுதல். என்றாலும் இன்னமும் மண்ணிற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
மண் என்னும் மகத்தான இயற்கைச் செல்வம் ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கும், சட்டரீதியிலான கட்டமைப்புகளுக்கும் இடையில் உள்ள விரிசல்களுக்கும் பிளவுகளுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறது என்று மண் ஆய்வாளர், மண் சொல்லும் கதைகள் (Sand stories) என்ற அமைப்பின் ஆசிரியர் மற்றும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவரான கரன் பெரேரா (Kiran Pereira) கூறுகிறார்.
மாற்றுவழிகள்
மண் சுரண்டலைத் தடுக்க மாற்று வழிகள் உள்ளன என்று அறிக்கை கூறுகிறது. கட்டுமானப் பொருட்கள், மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2050ம் ஆண்டிற்கு முன் உலக மக்கட்தொகை 10 பில்லியனைத் தாண்டும். அப்போது உலக மக்களில் 70% பேர் நகரங்களிலேயே வாழ்வர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மண் மீதான மனிதனின் மோகம் வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவில்
தர நிர்ணயமும் விதிமுறைகளும் ஒழுங்காகப் பின்பற்றப்படாத இந்தியா போன்ற நாடுகளில் மண்ணிற்கு கிராக்கி அதிகம் உள்ளது. இந்தியாவில் மட்டும் 2020 முதல் மண் சுரண்டல் தொடர்பான வன்முறைகள் மற்றும் விபத்துகளில் அரசு ஊழியர்கள் உட்பட நானூறுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.
கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வியட்நாம் மெக்காங் (Mekong) டெல்ட்டாவில் கொரோனா கொள்ளைநோய் காலத்தில் சட்டவிரோத மண் சுரண்டல் அதிகரித்துள்ளது.
மண் எடுத்தல் தொடர்பான சர்வதேச விதிமுறைகள் உருவாக்கப்பட்டால் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரசுகளால் எளிதில் செயல்படமுடியும் என்று கிறிஸ் ஹாக்னி கூறுகிறார்.
மண் சுரண்டினால் மனிதன் அழிவான்
மிதமிஞ்சிய நிலத்தடி நீரை எடுப்பதால் டெல்லி, பாக்தாத் உட்பட உலகில் பல நகரங்களும் மண்ணிற்கடியில் புதைந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மண் சுரண்டலை இதேபோல் தொடர்ந்தால் நாளை ஆறு, குளம், ஏரி போன்ற இயற்கை நீர்நிலை அமைப்புகளே இல்லாமல் போய்விடும். மண் என்னும் மகத்தான வளத்தின் மதிப்பை உடனடியாக மனிதன் உணராவிட்டால் அவனை அழிக்கும் மாபெரும் பேரிடராக விரைவில் அது மாறும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் வெப்பமான ஆண்டாக 2021 இருந்தது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புவி வெப்ப உயர்விற்குக் காரணமான கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் ஆகிய வாயுக்களின் அளவில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று ஐரோப்பிய யூனியனின் கோபர்நிகஸ் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்யும் மையத்தின் (Copernicus Climate Change Services) ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடந்த ஏழு ஆண்டுகள் சாதனை அளவு வெப்பம் நிலவிய ஆண்டுகள். 2021ல் சராசரி புவி வெப்பநிலை உயர்வு 1.1-1.2 செல்சியஸ் அதிகரித்தது. காலநிலை மாற்றம் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூற்றை 20% அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸிற்குள் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன் பலன்கள் 2030ம் ஆண்டிலேயே தெரிய வரும்.பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தியதால் உயரும் பூமியின் வெப்பம் வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்குகள் முதல் சைபீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காட்டுத்தீ வரையுள்ள சம்பவங்கள் கார்பன் உமிழ்வின் அளவை அதிகரிக்கக் காரணமானது.
வரும் ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2021ல் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேனின் அளவு வெகுவாக அதிகரித்தது.
தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளில் மீத்தேன் அளவில் அதிகரிப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகளால் உறுதியாகக் கூற முடியவில்லை.
கடந்த கோடையில் ஐரோப்பாவில் இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகியது. இது பிரான்ஸ், ஹங்கேரி ஆகிய நாடுகளில் பல விளைபொருட்களின் அழிவிற்கும் காரணமானது. ஜூலை ஆகஸ்ட்டில் ஏற்பட்ட வெப்ப அலைத் தாக்குதல் துருக்கி, கிரீஸ் நாடுகளில் வனப்பகுதிகளை தீக்கிரையாக்கியது
ஜூலையில் மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருநூறிற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் வரலாறு காணாத பெருமழை, அதனால் பெரும் வெள்ளப் பெருக்குகள் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்வை நரகமாக்கியது. இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் வீசிய புயல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதே நிலை தொடர்ந்தால் நாளை மனிதன் வாழ பூமி என்றொரு கோள் இருக்குமா என்பது சந்தேகமே.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- திரைசீலை விழுந்த காலநிலை உச்சி மாநாடு
- புவி வெப்ப உயர்வு: அடைபடும் சாளரங்கள்
- Fukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன?
- மரண பள்ளத்தாக்கில் பதியப்பட்ட பூமியின் அதிகபட்ச வெப்பமும், கலிபோர்னியாவின் காட்டுத் தீ காலமும்
- கடல் பகுதிகளை அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மொரிஷியஸ் தீவுகள்
- சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020 (EIA 2020) ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?
- இ.ஐ.ஏ 2020 எதிர்ப்புகள் வலுப்பெறுமா?
- சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்
- 5 டிரில்லியன் பொருளாதாரம்: நாம் கொடுக்கப் போகும் விலை என்ன?
- பிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்
- சுற்றுச்சூழல் - அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
- கனிம எரிபொருள் துறையும், சீரழியும் சுற்றுச்சூழலும்
- பேரழிவினால் நிலை குலைந்திருக்கும் ஆஸ்திரேலியா!
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து