பெரியார் கடைப்பிடித்து வந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தில் தருக்கப் பொருத்தமற்ற ஓர் அம்சம் குறித்து தமிழ் அறிஞர்களிடம் விவாதிக்க வேண்டும் என்கிற ஒரு சிந்தனை நீண்ட நாள்களாகக் கிடப்பில் இருந்தது. எப்போதாவது இது பற்றிய ஞாபகம் எழுந்தால் இதழில் அதற்கான இடமின்மையும், இதழில் இடமிருந்தால் அது பற்றிய ஞாபகமின்மையும் நேர்ந்து உடனடி முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளே முன்னுரிமை பெற்று இது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. தற்போது அடுத்தடுத்து இரு இதழ்களைக் கொண்டு வரும் சூழல் இதுபற்றி எழுதிவிட வாய்ப்பளித்தது.

‘ஐ’ என்னும் உயிரெழுத்தோடு புணரும் மெய்யெழுத்துகளை ‘கை, ஙை, சை, ஞை, டை’ என எழுதி வர, ‘ணை, லை, ளை, னை’ என்னும் எழுத்துகளை மட்டும் முன்பு தற்போது எழுதுவது போல் அல்லாமல் துதிக்கை கொம்பு அல்லது யானைக் கொம்பு எனப்படும் கொம்பு போட்டு எழுதும் வழக்கம் இருந்தது. அதை நீக்கி, கை, ஙை முதலான எழுத்துகளுக்குப் பொருந்தும் தருக்கம் பிற ண, ல, ள, ன ஆகிய எழுத்துகளுக்குப் பொருந்தாதா எனக் கேட்டு அதன்படி தற்போது நாம் எழுதுவது போன்ற நடை முறை பழக்கத்துக்கு வந்தது. இது சரி.

ஆனால் சிலர் கை, ஙை, சை, ஞை என்று எழுதாமல் கய், ஙய், மய்,.. லய், ளய் என எழுதுவதுடன் ‘ஐ’ என்னும் உயிரெழுத்துக்குப் பதில் ‘அய்’ எனவும் எழுதி வருகின்றனர். இதுதான் என்ன நியாயம், இதற்கு என்ன தருக்கம் என்பதுதான் கேள்வி.

தமிழ் மொழியைப் பொறுத்த வரை உயிரெழுத்து 12, மெய்யெழுத்து 18, உயிர்மெய் எழுத்து 216, ஆயுத எழுத்து 1, மொத்தம் 247 என்பது அடிப்படை. காலத்துக்குக் காலம் எப் போதாவது மாற்றங்கள் பெற்று வரும் தமிழ் அதன் வரி வடிவில்தான் மாற் றம் பெற்று வந்துள்ளதே தவிர, மற்ற படி அதன் அடிப்படை அப்படியே தான் நீடித்து வந்துள்ளது.

இப்படியிருக்க, ‘ஐ’யை நீக்கி ‘அய்’ என்று எழுதுவானேன், இதற் கான தேவை என்ன, இதற்கான நியா யம் என்ன? ண, ல, ள, ன எழுத்துகளில் யானைக் கொம்பைப் பயன்படுத்தி வந்தபோது தட்டச்சுப் பொறிகளில் அதற்கான தனிக்குறி தேவைப்பட்ட தால் அதை நீக்கி, பிற எல்லா எழுத்து களுக்கும் போடும் ‘¬’ குறியைப் போட்டுக்கொள்ளும் ஒரு தேவை இருந்தது. ஆகவே அப்போது அந்த சீர்திருத்தம் தேவைப்பட்டது. அதற்கு ஒரு நியாயம் இருந்தது. ஆனால் இதற்கு என்ன தேவை, நியாயம் இருக் கிறது?

இது நியாயமற்றதாக இருப்பதுடன், இது தொடர்பான வேறு சில கேள்விகளையும் இது எழுப்புகிறது. ஐ-க்குப் பதில் ‘அய்’ என எழுதினால், மாணவர்களுக்குத் தமிழில் உயிரெ ழுத்து எத்தனை என்று சொல்லிக் கொடுப்பீர்கள்? தமிழில் உள்ள எழுத் துகளில் அதன் ஒலிக் குறிப்பில் நெடி லுக்கு இரண்டு மாத்திரையும், குறி லுக்கு ஒரு மாத்திரையும், மெய்யெழுத் துக்கு அரை மாத்திரையும் என்றும், இதன் படி உயிரெழுத்துகளில் நெடில் ஏழுக்கும் இரண்டு மாத்திரை, குறில் ஐந்துக்கும் ஒரு மாத்திரை எனச் சொல்லிக் கொடுக்கிறோமே, இப்படி இருக்க, ஐ-க்குப் பதில் ‘அய்’ போட் டால் அதை ஈடு செய்யுமாக ‘ஐ’ நெடி லுக்கு இரண்டு மாத்திரை என்றால், ‘அய்’-க்கு ஒன்றரை மாத்திரை தானே வரும். இந்த ஒன்றரை மாத்திரை ஒலிக் குறிப்பில் இரண்டு மாத்திரை ஐ-யை ஈடு செய்யுமா. இது தமிழ் அடிப் படையையே கேள்விக்குள்ளாக்காதா, முரண்பாட்டை ஏற்படுத்தாதா.

தவிரவும் தமிழ் உயிரெழுத்தில் ‘ஒள’ தவிர பிற அனைத்தும் தனித்த ஒற்றை எழுத்துகளே. அப்படியிருக்க ‘ஐ’ என்னும் தனித்த ஒற்றை எழுத்தை நீக்கி ‘அய்’ என எழுதுவானேன். தவிர உயிரெழுத்து வரிசையில் ‘ய்’ என்கிற மெய்யெழுத்தைக் கொண்டு வருவ தேன்? இது மாணவர் மத்தியில் குழப் பத்தை ஏற்படுத்தாதா. ஏற்கெனவே உள்ள ‘ஒள’வே ‘ஒ-ள’ எனத் தனித்தனி எழுத்தாக தொடக்க நிலை பயிலும் மாணவர்களால் பாவிக்கப்படுவதும் உச்சரிக்கப் படுவதும் நேர்கிறதே. இப்படி இருக்க இது வேறு புதுக் குழப் பத்தை ஏற்படுத்தாதா?

தவிரவும், தமிழ் மொழியின் தனிச் சிறப்பாக பலவற்றைக் குறிப்டும் அறிஞர்கள், தமிழில் தனி எழுத்துகளே தனிப் பொருள் தரும் தனிச் சொல்லாக விளங்குவதைக் குறிப்பிடு வர். அதாவது, வா, போ, கை, தை, பை, மை, வை, இப்படித் தனிப் பொருள் தரும் தனிச் சொல்லுக்கு நிகரான எழுத்துகளை பய், மய், வய், கய் என எழுதுவது நியாயமா? இது விகாரமாகவும், இலக்கண அடிப் படைக்கு எதிராகவும் இல்லையா? இப் படிப் பல கேள்விகள் இருக்கின்றன.

ஏற்கெனவே தமிழில் பல எழுத் துச் சீர்திருத்தங்கள் ஏற்பட்டு, அதற் கேற்ப தட்டச்சுப் பொறிகள் வடி வமைக்கப்பட்டு, அதற்கேற்பவே தற் போது ஒளியச்சு விசைப் பலகைகளும் வந்துள்ளன.

தட்டச்சுப் பொறியில் பலருக்கும் இருந்த கேள்வி, எல்லா உயிர்மெய் எழுத்துகளுக்கும் பொதுக்குறி பயன் பாடு இருக்க, ‘உ’கரம் ‘ஊ’காரத்துக்கு மட்டும் அப்படிப் பொதுக் குறிகள் இல்லாமல் தனிக்குறிகள் பயன்படுத்த வேண்டியிருக்க அதாவது, கு, கூ, சு, சூ, ஙு, ஙூ, டு, டூ என இருக்க, அதில் மட்டுமாவது சீர்திருத்தம் செய்யவேண் டும் என அப்போது சில அறிஞர்கள் குறிப்பிட, அதற்கான சில மாதிரிகளும் முன் மொழியப்பட்டன.

ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. நவீனயுகம், தொழில் நுட்ப வளர்ச்சி, எழுத்து எழுது கருவியில் எழுதுவது என்பதைவிடவும், எழுத் தைப் பொத்தானை அழுத்திப் பதிவு செய்யும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, தமிழில் இனிமேல் எந்த எழுத்துச் சீர்திருத்தமும் வேண்டாம். அதற்குத் தேவையு மில்லை என்பதே பெரும்பாலான தமிழ் அறிஞர்களின் கருத்தும்.

தவிர, முன் வைக்கப்படும் எந்த யோசனையும் பணியை எளிமைப் படுத்துவதாக இருக்கவேண்டுமே யல்லாது, இடர்ப்படுத்துவதாக இருக்கக் கூடாது. ஆனால் கய், மய், பய் என்று எழுதுவது இடர்ப்படுத்து வதாகவே உள்ளது. காட்டாக, கணிப் பொறி விசைப் பலகையில், கை, பை, மை முதலான எழுத்துகளை ஒளியச்சு செய்ய இரு பொத்தான்களை அழுத் தினால் போதும். அதாவது ‘¬’க்கு ஒன்று, அதனோடு சேரும் எழுத்துக்கு ஒன்று. ஆனால் கய், பய், மய் என்று எழுத்துகளை ஒளியச்சு செய்ய ஒவ் வொரு எழுத்துக்கும் மூன்று, மூன்று பொத்தான்களை அழுத்த வேண்டும். அதாவது அகர உயிர்மெய்க்கு ஒன்று, யவுக்கு ஒன்று, புள்ளிக்கு ஒன்று என மூன்று பொத்தான்கள். இது நம்மை யறியாமல், நமக்கே தெரியாமல் நமது நேரத்தை வாங்கும். பணியும் கூடுத லாகும். இது தேவையற்ற உழைப்பு விரயமும்.

ஆகவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கய், மய், பய் என்று எழுதுபவர்கள் இக்கட்டுரையில் குறிப் பிட்டுள்ளதைத் தாண்டி வேறு எதா வது நியாயம் இருந்தால் சொல்லட் டும். இல்லாவிட்டால் மரபுக்கும், விதிமுறைகளுக்கும் முரணாக விளங் கும் தேவையற்ற இப்பழக்கத்தைக் கைவிட்டு கை, மை, பை என எழுது வதே நியாயமானதும் சாலச் சிறந்தது மாகும்.

Pin It