வெடித்து
வெளி வந்த பிறகு
முளைத்தலை
மறைத்தல் முடியுமோ
தளிராகும் பொழுதினில்.

கொதிக்கின்ற
குழம்பின் மணம்
கொசு பத்தி
வாசத்தில் மாறுமோ
நறுமணப் பொய்களை
நயம்படச் சொன்னாலும்.

கருக் கொண்ட பிறகு
சேலையில் சிருக்காரித்தால்
மறையுமா தாய்மையின்
வளர்தல் தான் தரணியில்.

சீப்புகளை
அபகரித்து விட்டு
திருமணங்கள்
நின்றுவிட்டதான
புரட்டுக் கற்பிதங்களால்
வரலாறுதான் காணாமலாகுமா
கண் மூடிய தருணத்தில்.

ஒலி வாங்கிகளை
துண்டித்துவிட்டு
ஒலிக்கும் உரிமைக் குரல்
மறையுமென
பிரயாசைப்படுகிறது
சட்ட சாசனத்தின் மீதேறி
செங்கோலைப் பிடித்து சிறப்பதாக
காலத்தைக் கடத்திவிடும்
போக்கின் புது யுக்தியில்
கடன் வாங்கிய
கால்களை மறக்கும்
பழகிய பாசிசத்தால்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.