இன்னும் இரண்டு மில்லியன் பூஞ்சை உயிரினங்கள் பூமியில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது என்று லண்டன் க்யூ (Kew) தாவரவியல் பூங்கா ஆய்வாளர்கள் சமீபத்தில் வெளியிட்ட 2023ம் ஆண்டிற்கான உலக தாவர மற்றும் விலங்குகள் (State of Flora & fauna) நிலை பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது.

மனிதனின் கண்டுபிடிப்பு தேடலில் பூஞ்சையினங்கள் காத்திருக்கின்றன. ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தாவரங்களும் அழியும் ஆபத்தில் உள்ளவை என்பதால் அவை நிரந்தரமாக அழிந்துவிடும் நிலையில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் வலியுறுத்துகின்றனர்.

கண்டுபிடிக்கப்படும் புதிய உயிரினங்களில் மூன்றில் ஒரு பகுதி உயிரினங்களும் மறையும் ஆபத்தில் உள்ளன. மனித உடலில் வயிற்றுப்பகுதி செரிமான மண்டலத்தில் உள்ள மைக்ரோபியோமில் (gut microbiome) உணவு செரித்தல், ஆற்றல் பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தி பெற உதவும் பூஞ்சைகள் வாழ்கின்றன.reishi mushroomsஇந்தப் பூஞ்சைகள் முதல் பூமியில் உள்ள மிகப் பெரிய தரைவாழ் பூஞ்சையினம் வரை காணப்படும் உயிரினங்கள் அவற்றின் உயிர்ப்பன்முகத் தன்மையில் முதுகெலும்பற்ற உயிரினங்களுக்கு அடுத்தபடி இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளன.

இவை காற்று, தாவர விலங்குகளுக்குள், மண் மற்றும் கடலில் பல அளவுகளில் பல வடிவங்களில் வாழ்கின்றன. இவற்றில் 90% இன்னமும் அறிவியலால் அறியப்படாதவை என்று க்யூ ராயல் பூங்கா ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பூமியில் இன்னும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய 2.5 மில்லியன் பூஞ்சைகள் உள்ளன. 155,000 பூஞ்சை உயிரினங்கள் மட்டுமே இதுவரை கண்டறியப் பட்டுள்ளன. “இது மனிதன் இன்னமும் கால் பதிக்காத எல்லை ப்பகுதி (uncharted territory). கடந்த சில ஆண்டுகளாக உலகெங்கும் நம் வாழ்வின் நிலைத்தன்மை, விவசாயம் போன்றவற்றில் இந்த உயிரினங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டு வருகிறது. இவை ஒவ்வொன்றிற்கும் மிக உயிர் வாழ்வில் மிக முக்கிய இடம் உள்ளது.

அண்டவெளியில் கரும்பொருட்கள் பூமியில் பூஞ்சைகள்

இப்போது உயர் தர டி என் ஏ பகுப்பாய்வு வசதிகள் உள்ளன. அறியப்படாத பூஞ்சைகள் பற்றிய ஆய்வுகள் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் அண்டவெளியை ஆராய்வது போல. விண்வெளி ஆய்வில் கரும்பொருட்கள் போல பூஞ்சைகள் என்று ராயல் பூங்காவின் அறிவியல் பிரிவு இயக்குனர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஆண்டனெல்லி (Prof Alexandre Antonelli) கூறுகிறார்.

கண்டறியப்படாத புதிய பூஞ்சை உலகம் பற்றிய இச்செய்தி ஆய்வாளர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது என்றாலும் அவற்றில் பல இனங்கள் அழியும் ஆபத்தில் இருப்பவை என்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2020ல் அடையாளம் காணப்பட்ட சிறப்பு கடத்து திசுக்களைக் கொண்டுள்ள வாஸ்குலர் தாவரங்களில் 70% ஏற்கனவே விரைவில் அழியும் ஆபத்தான நிலையில் (threatened) உள்ளன.

இந்த வகை உயிரினங்களில் 59% இனங்கள் அழியும் ஆபத்தை (Endangered (EN)) நிலையிலும் 24% இனங்கள் இந்த நிலையை விரைவில் அடையும் ஆபத்திலும் வாழ்கின்றன. பூமியில் இதுவரை 350,000 வாஸ்குலர் வகை தாவரங்கள் உள்ளன என்று அறியப்பட்டுள்ளது. 100,000 இனங்கள் இன்னும் கண்டறியப்பட வேண்டியுள்ளது. இவற்றில் மூன்றில் ஒன்று அழியும் நிலையில் உள்ளது.

புதிய உயிரினங்கள் வேறெந்த நிலையிலும் வாழவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் அவை அணைத்தும் அழிவை நெருங்கி விட்டவையாக வகைப்படுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொது மக்கள் புதியவற்றை கண்டுபிடிப்பதை உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் ஊக்குவிக்கின்றனர். புதிய டி என் ஏ மரபணு வரிசைப்படுத்தும் தொழில்நுட்பத்தின் (DNA sequencing technique) புரட்சியால் ஒரு ஸ்பூன் மண்ணில் நூற்றுக்கணக்கான புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் மண் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பும் மண் மாதிரியின் ஒரு ஸ்பூன் மண்ணில் கண்டுபிடிக்கும் புதிய பூஞ்சை ஒன்றிற்கு பெயர் சூட்டும் வாய்ப்பு அதை அனுப்பும் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. 2020 முதல் இத்திட்டத்தின்படி 10,200 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. ஆண்டிற்கு 50,000 புதிய இனங்களை அடையாளம் காண முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

2023ல் க்யூ பூங்கா விஞ்ஞானிகள் பிரேசில் அட்லாண்டிக் பகுதி மழைக்காடுகளில் ஜாம்பி-எறும்புத் தின்னி (zombie-ant fungi) போல trapdoor வகையைச் சேர்ந்த சிலந்தியை உண்ணும் புதிய ஒட்டுண்ணி பூஞ்சையினத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

புதிய இனங்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பே நாம் அவற்றை இழக்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது. ”புதியவை கூடுதலாக கண்டுபிடிக்கப்படுவது மருத்துவம், வேளாண்மை, பொறியியல் மற்றும் மனித நோய்களை இன்னும் மேம்பட்ட முறையில் புரிந்துகொள்ள உதவும். தாவர விலங்குகளை விட டி.என்.ஏ. தொழில்நுட்பம் பூஞ்சைகளை அடையாளம் காண பெரிதும் உதவுகிறது.

பூஞ்சைகள் என்றால் ஆரம்பத்தில் நாய்க்குடைகள் மற்றும் லைக்கன்கள் (lichens) எனப்படும் பூக்களற்ற, மஞ்சள் அல்லது சாம்பல் நிறமுடைய, பாறைகள், சுவர்கள், மரங்கள் மீது படர்ந்து வாழும் சிறிய தாவரங்கள் மட்டுமே ஆராயப்பட்டு வந்தன. நம் மைக்ரோபையோமில் ஏராளமான பூஞ்சைகள் உள்ளன என்று இன்று அறியப்பட்டுள்ளது. நமக்கு ஏற்படும் பல நோய்கள் பூஞ்சைகளால் ஏற்படுகின்றன அல்லது சமநிலையற்ற நிலையில் அவை நம் உடலிற்குள் இருப்பதால் தோன்றுகின்றன.

"மண்ணிற்கடியில் வாழும் பூஞ்சைகள் மரங்களை மண்ணோடு பிணைக்கின்றன. மரங்களின் வேர்களுடன் கூட்டுயிரி வாழ்க்கை வாழ்வதற்கான உறவை (symbiotic relationship) இவை ஏற்படுத்திக் கொண்டு பரஸ்பரம் உதவி செய்து வாழ்கின்றன. நீரையும் சத்துப் பொருட்களையும் பகிர்ந்து கொள்கின்றன. இந்த உயிரினங்களின் ஸ்போர்களை இப்போதும் நாம் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்” என்றுராயல் பூங்காவின் மூத்த ஆய்வாளர் எஸ்ட்டர் கயா (Ester Gaya) கூறுகிறார்.

புதிய தாவரங்கள் மற்றும் பூஞ்சையினங்களை அடையாளம் கண்டு அவற்றைப் பற்றி விவரிப்பது உயிர்ப்பன்மயத் தன்மை அறிவியலில் ஒரு முக்கிய சவால். மோசமான அறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இடைவெளியுள்ள கொலம்பியா, நியூ கினி போன்ற 32 தாவர உயிர்ப்பன்மயத் தன்மை இருண்ட இடங்கள் (Plant biodiversity dark spots)அடையாளம் காணப்பட்டுள்ளன.

உலகின் பல இடங்களில் போதுமான அளவில் ஏராளமான தாவரங்கள் இது வரை சேகரிக்கப்படவில்லை. ஆராயப்படவில்லை அல்லது அந்த இடங்களின் உயிர்ப்பன்மயத் தன்மையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் இருந்து புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் ஏராளம் என்பதால் இவை இருண்ட இடங்கள் என்று அடையாளப் படுத்தப்பட்டுள்ளன.

இன்று நாம் அறியாமல் நம்முடன் வாழும் உயிரினங்கள் அழியும் ஆபத்தில் இருக்கும்போது கண்டுபிடிக்கப் படாதவையும் அவற்றை நாம் அறியும் முன்பே அழிந்துவிடும் என்பது மனிதன் உடனடியாக சூழலைக் காக்க உருப்படியாக அவனால் ஆனதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது!

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/10/uncharted-territory-kew-scientists-say-more-than-2m-fungi-species-waiting-to-be-identified-aoe?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இந்தியாவைச் சேர்ந்த Common Banded Awl என்ற வண்ணத்துப் பூச்சியினத்திற்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த கிரன் கண்ணன் ஐக்கிய அரபு எமரேட்டில் அபுதாபியில் இதைக் கண்டுபிடித்த கதை இது.

நம்மைச் சுற்றி உயிர்ப் பன்மயத்தன்மையின் பரந்து விரிந்த ஒரு இரகசிய உலகம் இருக்கிறது. நாம் வாழும் இடத்தில் உள்ள பறவை, விலங்குகளில் இவற்றில் சிறிய ஒரு சதவிகிதத்தை மட்டுமே நாம் காண்கிறோம். உற்றுநோக்கும்போது மட்டுமே இவற்றின் விரிவான காட்சிகளை நம்மால் காணமுடியும்.

ஒவ்வொரு இலையின் அடியில், இரவு நேரங்களில், பாலைவனங்களில் மனித நடமாட்டம் இல்லாத கற்களுக்கு இடையில் குட்டிப் புல்வெளிப் பரப்புகளில் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் எத்தனையோ உயிரினங்கள் வாழ்கின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை தெரிந்து கொள்வதே நாம் வாழும் இந்த உலகை அறிய உதவும் முதல்படி. நமக்குள்ளிருக்கும் உயிர்த்துடிப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அணுவிலும் ஒரு கண்டுபிடிப்பாளர் வாழ்கிறார்.common banded awlஅபூர்வ வண்ணத்துப்பூச்சியினம்

உலகில் ஒரு சில இடங்களில் மட்டுமே இவ்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் இந்த வகை வண்ணத்துப்பூச்சி ஐக்கிய அரபு எமரேட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறை. இரண்டு இறக்கைகளை விரித்து வைத்தால் இதன் நீளம் நான்கு முதல் ஐந்து செண்டிமீட்டர் வரை மட்டுமே. இது தவிட்டு நிறமுடையது.

பெரிய கண்களுடன் இருக்கும் இவற்றின் இறகுகளில் வெள்ளை நிற வரிகள் காணப்படுகின்றன. இவை மாலை மற்றும் இரவில் சுறுசுறுப்புடன் செயல்படுகின்றன. பகலில் சுரக்கும் பட்டு இழைகளைக் கொண்டு இலைகளை ஒட்ட வைத்து மடக்கி அதில் ஒளிந்து கொள்கின்றன. ஆபத்து வந்தால் எதிரியிடம் இருந்து மரக்கிளையில் இருந்து கீழே விழுந்து தப்பிக்க இவை இதே பட்டு இழைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றை முதல்நோக்கில் பார்த்தால் இரவுப்பூச்சிகள் (moth) போலத் தோன்றும்.

வண்ணமயமான நிறங்கள் இவற்றிற்கு இல்லாததால் பெரும்பாலான வன உயிரியல் புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த வண்ணத்துப்பூச்சியின் மீது ஆர்வம் இல்லை. கிரன் சமீபத்தில் வழக்கம்போல அபுதாபி மனமகிழ் பூங்காவில் கண்ணுக்குப் புலப்படாத சிறிய உயிரினங்களைத் தேடி நடந்து கொண்டிருந்தார்.

அந்த பூங்காவில் பல வேப்ப மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பூக்கும் காலம் அது. எங்கும் வேப்பம்பூக்களின் நறுமணம். திடீரென்று இரவுப்பூச்சி போல ஏதோ ஒன்று பூக்களில் இருந்து பூக்களுக்கு தாவித் தாவி பறப்பதை கிரன் கண்டார். நேரத்தை வீணாக்காமல் உடனே மொபைலில் அதை படமெடுத்தார்.

அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் நன்கு அறிந்த கிரன் அதற்கு முன் அப்பகுதியில் இது போல ஒன்றைப் பார்த்ததில்லை. இந்த வகை வண்ணத்துப்பூச்சியை காண்பது அதுவே முதல்முறை. இது பற்றிய அறிவும் இதில் நிபுணத்துவம் பெற்ற வளைகுடாப்பகுதியில் சில இன வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டுபிடித்த அனுபவம் பெற்ற நண்பர் பினிஷ் ரூபஸின் (Binish Roobbas) உதவி கிடைத்தது. அது காமன் பேண்டெட் அவுல் என்று உறுதி செய்யப்பட்டது.

உயிர்ப் பன்மயத்தன்மை பற்றிய விவரங்கள் அடங்கிய இநேச்சரலிஸ்ட் (inaturalist) என்ற தகவல் தளத்தில் கிரன் இது குறித்த விவரங்களைத் தேடினார். வளைகுடாவில் இதற்கு முன்பு வேறொரு இடத்திலும் இவை காணப்பட்டதற்கான பதிவுகள் இல்லை என்று தெரிய வந்தது.

வாழிடப் பரப்பின் விரிவாக்கம்

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் காணப்படும் இவை எவ்வாறு வளைகுடாவிற்கு வந்தன? ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் உயிரினங்கள் மற்ற பகுதிகளுக்கும் தங்கள் வாழிடப் பரப்பை விரிவுபடுத்துகின்றன. இது வாழிட விரிவாக்கம் எனப்படுகிறது. ஒரு உயிரினம் அதன் இயல்பான புவி வாழிடத்தில் இருந்து வேறு ஒரு வாழிடத்திற்கு தங்கள் வாழ்வின் சுற்றுப்புறத்தை விரிவுபடுத்துவதையே இது குறிக்கிறது.

பல சமயங்களிலும் உயிரி ஆக்ரமிப்பு என்ற ரீதியில் பல உயிரினங்கள் படர்ந்து வளர்ந்து நிறைந்து தனது இயல்பான வாழிடத்தில் காலம்காலமாக வாழும் உள்ளூரைச் சேர்ந்த உயிரினங்களை அழிக்க முயல்வதுண்டு. உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றில் இதற்கு வெங்காயத் தாமரை, ஆப்பிரிக்க ராட்சச நத்தை, பழுப்பு மரப்பாம்புகள் போன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.

ஆனால் இது போன்ற எல்லா உயிரினங்களும் ஆக்ரமிப்பு உயிரினங்களாக இருப்பது இல்லை. குடியேறிய வாழிடச் சூழலை சொந்தச் சூழல் போல கருதி அதைப் பாதுகாக்கும் உயிரினங்களும் உள்ளன. இது எந்த விதத்திலும் சூழலிற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உயிரினமாக உள்ளது.

அபுதாபி சூழல் முகமையில் (Environment Agency EPA) பூச்சியியல் நிபுணர் டாக்டர் அனிதாவின் பரிந்துரை இந்த வண்ணத்துப்பூச்சிக்கு அபுதாபியில் பாஸ்போர்ட் கிடைக்க உதவியது. இதனைத் தொடர்ந்து கிரனுக்கு ஐக்கிய அரபு எமரேட்டில் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் முன்பு காணப்படவில்லை என்ற அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்துதல் கிடைத்தது.

ஆனால் இது பதிவு செய்யப்பட வேண்டுமென்றால் அபுதாபியில் இவை இனப்பெருக்கம் செய்கின்றன, அங்குள்ள சூழலுடன் பொருத்தப்பட்டு வாழ்கின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இவற்றின் வாழிடத்தை அடையாளம் காண்பது கடினம். இவற்றிற்கு வாழ்வு தரும் விருந்தோம்பி தாவரத்தை (host plant) கண்டுபிடிப்பதே இதில் முதல் படி. கிரனுக்கு இதற்கான தீர்வு நண்பர்களிடம் இருந்து கிடைத்தது.

எண்ணெய் மரத்தின் இலைகள்

எண்ணெய் மரம் என்று அழைக்கப்படும் மிலேட்டியா பீனாட்டா (millettia pinnata) என்ற செடியின் இலைகளே லார்வாக்களின் முக்கிய உணவு. இது பொங்கம் மரம் (pongam) என்றும் அறியப்படுகிறது. இத்தாவரம் ஐக்கிய அரபு எமரேட்டில் குடியிருப்பு மற்றும் சாலையோரங்களில் வளர்க்க இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இது துபாய் தாவரவியல் சவுக் (plant souq) தோட்டத்திலும் உள்ளது. பூங்காவில் வண்ணத்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துடன் சேர்ந்து இந்த செடியின் நான்கு மரங்கள் இருப்பது தெரிந்தது. ஆனால் இலைகள் தலைக்கு மேல் உயரத்தில் இருந்தன. இதனால் இதை கிரனால் நுணுக்கமாக ஆராய முடியவில்லை.

இடத்தை அடையாளப்படுத்திய கிரன் மறுநாள் முயற்சியைத் தொடர்ந்தார். திடீரென்று எங்கிருந்தோ இரை பிடிக்க வந்த குளவி ஒன்று (wasp) மடங்கியிருந்த இலையைச் சுற்றிலும் எதையோ தேடியது. சாதாரணமாக வண்ணத்துப் பூச்சிகளின் லார்வாக்களைப் பிடிக்க அல்லது அவற்றின் உடலில் துளை போட்டு முட்டையிடவே இரை பிடிக்கும் உயிரினங்கள் இவ்வாறு திரிவதுண்டு.

யுரேகா நிமிடம்

இலையில் ஒரு புழுவின் நிழலை கிரன் பார்த்தார். இலை உயரத்தில் இருந்ததால் அதைப் பறிக்க அவரால் முடியவில்லை. உயரமான ஒருவர் அந்தச் செடியின் கிளையை உடைத்துக் கொடுத்தார். வீட்டிற்குச் சென்று பரிசோதித்தபோதுதான் வண்ணத்துப்பூச்சியின் லார்வாதான் அது என்பது உறுதியாயிற்று. உண்மையில் அது கிரனின் வாழ்வில் ஒரு யுரேக்கா நிமிடம்.

இதன் மூலம் இந்த வகை வண்ணத்துப்பூச்சிகள் ஐக்கிய அரபு எமரேட்டில் இனப்பெருக்கம் செய்து வாழ்கின்றன என்பதை கிரன் நிரூபித்தார். இதன் லார்வாக்களைக் கண்டுபிடிப்பது கடினமான செயல். பகல் நேரத்தில் இலைகளை மடக்கி ஒளிந்து கொண்டிருக்கும் லார்வாக்கள் இரவில் மட்டுமே உணவு உண்ண வெளியில் வருகின்றன. இரண்டு இலைகளைச் சேர்த்து ஒட்டி வைத்திருக்கும் இவை ஒளிந்திருக்கும் இடம் சாதாரணமாக கண்ணில் படுவதில்லை.

ஆபத்து என்று உணர்ந்தால் கீழே இருக்கும் புல்வெளிப் பரப்பில் விழுந்து தப்பித்துக் கொள்ளும். ஒரு புதிய உயிரினம் தன் வாழிட எல்லையை அரேபிய வளைகுடாப் பகுதிக்கு விரிவுபடுத்தியிருக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டியது. வண்ணத்துப்பூச்சியை கிரன் அபுதாபி சுற்றுச்சூழல் முகமையில் டாக்டர் அனிதாவுக்கு அனுப்பி வைத்தார். முகமையில் இருந்து இதன் ஸ்பெசிமன் மரபணு பரிசோதனைகளுக்காக வெளிநாட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆய்வு முடிவுகள் கிரனின் கண்டுபிடிப்பை உறுதி செய்தது. முகமையின் ஸ்பெசிமன் சேகரிப்பில் இது அங்கீகாரம் பெற்ற வரலாற்றுப் பதிவாக மாறியது. ஹஸாரா க்ரோமஸ் (Hasara chromus) என்ற அறிவியல் பெயருடைய இந்த உயிரினத்தின் இனப்பெருக்கத்தை அரேபிய மண்ணில் முதல்முறையாக பதிவு செய்த பெருமை கிரனுக்குக் கிடைத்தது.

இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்று முகமையின் தரைவாழ் உயிரினங்கள் மதிப்பீடு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் மேலாளர் டாக்டர் சலீம் ஜேவ்ட் (Dr Salim Javed) கூறுகிறார். இதுவரை எமரேட்டில் உள்நாட்டிற்கு சொந்தமான மற்றும் குடிபெயர்ந்த ஐம்பது வகை வண்ணத்துப்பூச்சிகள் உள்ளன.

கிரன் போன்றவர்கள் சாதாரணமானவர்களிடம் இருந்து எதையும் வித்தியாசமாகப் பார்க்கும் இயல்புடையவர்கள். பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றி முறைப்படி ஆராய முயல்கின்றனர். அது பற்றித் தெரிந்தவர்களைத் தொடர்பு கொள்கின்றனர். தீவிரமாக ஆராய்ந்து ஆதாரங்களுடன் புதிய உயிரினங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.

ஒவ்வொரு நாட்டின் உயிர்ப் பன்மயத் தன்மையின் செழுமைக்கு வளம் சேர்க்கின்றனர் என்று பினிஷ் ரூபஸுடன் இணைந்து ஐக்கிய அரபு எமரேட் வண்ணத்துப்பூச்சிகள் என்ற நூலை எழுதிய இணை முன்னணி ஆசிரியர் ஃப்யூல்னர் (Feulner) கூறுகிறார்.

காலநிலை மாற்றம், அதைத் தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் இந்த உயிரினங்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆனால் இவற்றின் எண்ணிக்கையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், குறைவு பற்றி துல்லியமான ஒரு நிகழ்நிரல் தரவுவிவரம் இல்லை. இந்த வகை உயிரினங்களை காலநிலை மாற்றத்தின் அடையாளமாகக் காண வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு இன வண்ணத்துப்பூச்சியின் லார்வாவும் ஒவ்வொரு குறிப்பிட்ட செடியின் இலைகளை மட்டுமே உணவாக உண்கின்றன.

உயிர்ப் பன்மயத்தன்மை அழிந்தால் அது இந்த உயிரினங்களின் அழிவிற்கு காரணமாகும். மிதமிஞ்சிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காலம் தப்பிப் பெய்யும் மழை, கடுமையான கோடை, ஆக்ரமிப்பு உயிரினங்கள் போன்றவை இவற்றைப் பாதிக்கின்றன.

தனிமனித முயற்சிகள் இருந்தால் மற்றவர் கண்களுக்குப் புலப்படாத இயற்கையின் பல அதிசயங்கள் நம் கண்களுக்குத் தெரியும். கிரன் போன்றோரின் தேடல்களுக்கு வசதிகள் நிறைந்த ஆய்வுக்கூடங்கள் பரிசோதனைக் கருவிகள் தேவையில்லை. ஆராயும் மனப்பான்மை, ஆர்வம் இருந்தால் நாம் ஒவ்வொருவருமே இயற்கையை ஆராய்ந்து அதில் ஒளிந்துள்ள அற்புதங்களைக் கண்டறிய முடியும். இதன் மூலம் அழியும் இயற்கையை மட்டும் இல்லாமல் சூழல் பேரிடர்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

** ** **

மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/features/common-banded-awl-have-been-recorded-in-abu-dhabi-for-the-first-time-1.8820391

&

https://www.thenationalnews.com/uae/2023/05/19/butterfly-native-to-india-wings-its-way-to-the-uae-for-the-first-time/

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It

இங்கிலாந்தில் தேவாலயங்கள் வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் இடங்களாக மாறியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. வௌவால் காலனிகளால் ஏற்படும் சேதங்களை சரி செய்ய இங்கிலாந்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயங்களுக்கு ஐந்து மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நுழைவாயில்

வடக்கு நார்ஃபெ (Norfolk) பகுதியில் உள்ள தோர்னம் (Thornham) உட்பட பெரும்பாலான தேவாலயங்களில் திருப்பலி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருக்கும் சாயும் வசதியுடைய நீண்ட பெஞ்சுகளை இப்பகுதியில் அதிகமாகக் காணப்படும் பிபிஸ்ட்ரல் (pipistrelle) வகை வௌவால்கள் தங்கள் வீடாக்கிக் கொண்டுள்ளன. தேவாலயங்களில் சுவர்கள் சேரும் பகுதியில் இருக்கும் மூலை முடுக்குகள், சிறிய விரிசல்கள் இந்த சிறகுள்ள பாலூட்டிகளுக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளன.

பிபிஸ்ட்ரெலஸ் பிபிஸ்ட்ரெலஸ் (Pipistrellus pipistrellus) என்ற அறிவியல் பெயருடைய இவற்றின் உடல் பெருவிரல் அளவே உள்ளது. நாள்தோறும் வெதுவெதுப்பான மாலையில் இருள் படரும்போது இவை உத்திரங்களில் இருந்து வெளிவருகின்றன. “இந்த உயிரினங்கள் தேவாலயங்களை விரும்புகின்றன” என்று ஒரு தேவாலயத்தின் வார்டன் ஜானெட் நீடம் (Janet Needham) கூறுகிறார்.bat 601“தேவாலயம் வௌவால்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ளது. அங்கு இவை முக்கிய உணவான பூச்சிகளை உணவாகப் பெறுகின்றன. எதிரிகளின் பயமின்றி இங்கு வாழ்கின்றன. மழையால் பாதிப்பு இல்லை. தேவாலயங்கள் இருள் நிறைந்தது. இதனால் இவை இங்கு விருப்பத்துடன் வாழ்கின்றன” என்று கிழக்கு ஆங்கிலியா (East Anglia) பகுதிக்கான தேவாலயங்களில் வாழும் வௌவால்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அலுவலர் டயானா ஸ்பென்சர் (Diana Spencer) கூறுகிறார்.

பாலிதீன் உறைகள்

தோர்னம் (Thornham) உட்பட இங்கிலாந்தில் உள்ள எல்லா செயிண்ட் தேவாலயங்களில் நீண்ட பெஞ்சுகளில் விழும் வௌவால்களின் கழிவுகள் பாலிதீன் உறைகளைப் பயன்படுத்தி சேகரித்து அகற்றப்படுகிறது. பழம் பெருமை மிக்க சில தேவாலயங்களில் இவற்றின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்பட்ட குழப்பம் தேவாலயங்களை மூடும் அச்சுறுத்தலை உருவாக்கியது.

கழிவுகள் பெருகின. தேவாலயங்களில் இருந்த இங்கிலாந்து நாட்டின் மறு உருவாக்கம் பற்றிய எட்டாவது ரோமன் காலத்தைச் சேர்ந்த பழமை மிகுந்த ஆவணங்கள் சேதமாகத் தொடங்கின. இந்நிலையில் தேவாலயங்களில் வௌவால்களைப் பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் (Bats in the Churches scheme) தோற்றுவிக்கப்பட்ட ஐந்து மில்லியன் பவுண்ட் நிதியுதவியிலிருந்து நிதி வழங்கப்பட்டது.

இத்திட்டம் 2019ல் தொடங்கப்பட்டது. நார்ஃபெல்க் பேனின்ஹம் (Banningham) பகுதியில் செயிண்ட் பாடல்ஃப்ஸ் (St Botolph) உள்ளிட்ட தேவாலயங்களில் வௌவால்களால் ஏற்பட்ட குழப்பம் அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட மனித விலங்கு மோதலால் உண்டான சேதத்தை சரிசெய்ய இத்திட்டம் உதவியது. “மக்கள் தேவாலயங்களில் வாழும் இந்த சிறிய உயிரினங்களை வெறுக்கவில்லை. அவற்றால் உருவாகும் குழப்பத்தையே விரும்பவில்லை” என்று ஸ்பென்சர் கூறுகிறார். கோடைகாலம் உச்சத்தில் இருக்கும்போதே இவை இனப்பெருக்கம் செய்கின்றன. அப்போது தேவாலயத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் சேவைகளை நடத்துவது கடினமாக இருந்தது.

ஆனால் இப்போது வௌவால் பெட்டிகள், உயரத்தில் வெதுவெதுப்பாக சூடு தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உட்புறக் கூரைகள் போன்றவற்றால் இந்த இறகுள்ள பாலூட்டிகள் தேவாலயத்தின் முதன்மைப் பகுதிக்கு வருவது குறைக்கப்பட்டுள்ளது. வௌவால் பாதுகாப்பு நிதியைப் பயன்படுத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேவாலயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

வௌவால் பாதுகாப்பு அறக்கட்டளை, இங்கிலாந்தின் தேவாலயங்கள் அமைப்பு (The Church of England), இயற்கை இங்கிலாந்து (Natural England), வரலாற்று இங்கிலாது (Historic England) மற்றும் தேவாலய பாதுகாப்பு அறக்கட்டளை (The Churches Conservation Trust) ஆகிய ஐந்து அமைப்புகள் ஒன்றுசேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் இரண்டு தேவாலயங்கள் மூடாமல் பாதுகாக்கப்பட்டன.

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழமையான மேற்கூரைகள் இது வரை இத்திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளன. தேவாலயங்களில் மகத்தான அரியவகை நீண்ட சாம்பல் நிற காதுகளைக் கொண்ட வௌவால் இனம் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றது. ஆயிரம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே வாழ்வதாகக் கருதப்படும் இவை இப்போது சம்மர்செட் (Somerset) தேவாலயத்தில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விதானங்கள் மற்றும் பாதுகாப்பு உறைகள் சேதப்படாமல் இருக்க வெற்றிட சுத்திகரிப்பு கருவிகள், தூரிகைகள் போன்றவை இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 743 தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் இங்கிலாந்தில் இருக்கும் 18 இன வௌவால்களில் 12 இனங்கள் இந்த இடங்களில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கை குறைந்ததால் இவை சட்டப்படி பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இப்போது தேவாலயங்கள் தேசிய அளவில் வௌவால்களின் எண்ணிக்கை, வாழிடம் பற்றிய முக்கிய விவரங்களை தரும் இடங்களாக மாறியுள்ளன.

இதன் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் இந்த உயிரினங்களைப் பற்றி மிக அதிக அளவில் அறிய முடிந்தது என்று ஸ்பென்சர் கூறுகிறார். மத்திய நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த தேவாலயங்கள் அதிகம் உள்ள நார்ஃபெல்க்யில் குறிப்பாக தோர்னம் என்ற இடத்தில் சூழலியலாளர், வௌவால் தன்னார்வலர் மற்றும் தேவாலயங்களில் வௌவால்களின் நடவடிக்கைகளை ஆராயும் ஃபில் பார்க்கர் (Phil Parker) வௌவால்களின் எண்ணிக்கையை அறிய வௌவால் பெட்டிகளில் கேமராக்களைப் பொருத்தி ஆராய்ந்தார்.

பல நாட்கள் இவர் தேவாலயங்களில் இரவு முழுவதும் தங்கி ஆய்வுகளை நடத்துவதுண்டு. இங்கு உள்ள தேவாலயங்களில் சப்ரானோ பிபிஸ்ட்ரெல் (soprano pipistrel), long-eareds, பொது பிபிஸ்ட்ரெல் (common pipistrelles) மற்றும் செரட்டின்கள் (serotines) என்னும் நான்கு வகை வௌவால்கள் காணப்படுகின்றன. வளர்ச்சியடைந்தவை மேற்கூரைக்கு அருகில் உயரமாகப் பறக்கும்போது இளம் வௌவால்கள் பெஞ்சுகளின் மீது தாழ்வாகப் பறக்கும்.

புரிந்து கொண்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் அருகில் வந்து அமர்ந்து நம்மைப் பார்க்கும். அருகாமையில் இவற்றைப் பார்ப்பதே இயற்கை நமக்கு அளிக்கும் மிகப் பெரிய மரியாதை. ஒரு காலத்தில் பாழடைந்த இடங்களில் மட்டுமே வாழ்ந்து வந்த இவை இன்று வாழிட அழிவு, வெப்ப உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் மனித நடமாட்டம் அதிகமுடைய ஆலயங்கள் போன்ற இடங்களில் குடியேறி வாழத் தொடங்கி விட்டன.

சூழல் சமநிலையில் முக்கியப்பங்கு வகிக்கும் இவற்றை பாதுகாக்க இங்கிலாந்து தேவாலயங்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள் உயிரினப் பாதுகாப்பில் உலகிற்கு ஒரு முன் மாதிரி.

மேற்கோள்https://www.theguardian.com/environment/2023/oct/09/how-englands-churches-are-making-an-uneasy-peace-with-the-bats-in-their-belfries-aoe?

Pin It

சிரிக்க வைத்தும் சந்தோஷப்படுத்தியும் காண்பவர்களின் மனம் கவர்பவை கொலையாளித் திமிங்கலங்கள். இவை ஓர்க்கா (Orca) என்றும் அழைக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டு முதலே காட்சிப் பொருட்களாகவும், மற்ற அவசியங்களுக்காகவும் மனிதன் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினான்.

1970களில் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன. பிடிக்கப்பட்டவற்றில் பல திமிங்கலங்கள் காட்சிப்பொருளாக செயற்கை நீர்நிலைகளில் விடப்பட்டன. இவை அதிபுத்திசாலிகள் என்பதால் இவற்றை பயிற்சி கொடுத்து காட்சிப்படுத்துவது எளிது.

கிஸ்காவில் இருந்து ஆரம்பம்

கிஸ்கா என்ற புகழ்பெற்ற கொலையாளித் திமிங்கலம் விடுவிக்கப்படுவதற்கு முன்பே மரணமடைந்தது. லலீடா ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமிங்கலங்களில் ஒன்று. அக்டோபர் 1979ல் அட்லாண்டிக் கடற்பகுதியில் ஐஸ்லாந்திற்கு அருகில் கிஸ்கா (Kiska) என்ற பெண் திமிங்கலம் அதன் மூன்றாவது வயதில் பிடிக்கப்பட்டது. உலகில் தனிமையில் வாடிய முதல் திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் இது, கனடா நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இருக்கும் மெரைன் லேண்ட் (Marine land) என்ற கடல்வாழ் உயிரினங்களின் காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் அங்கு இது தனிமையில் வாழ்ந்தது. அப்போது அடைக்கப்பட்ட கண்ணாடிக் கூண்டில் இடித்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இதன் படங்கள் உலகம் முழுவதும் உள்ள சூழல் ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது மார்ச் 9, 2023ல் பாக்டீரியா தொற்றினால் மரணமடைந்தது.killer whale orcaலலீடா (Lolita) என்ற பெண் திமிங்கலம் உலகில் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பிடிக்கப்பட்டநிலையில் வாழும் திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இது 1970ல் பசுபிக் கடலில் ப்யூகிட் சவுண்ட் (Puget Sound) என்ற இடத்திற்கு அருகில் பிடிக்கப்பட்டது. 57 வயதான இதை விடுதலை செய்வது பற்றிய செய்திகள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது 52 ஆண்டுகள் ப்ளோரிடா கடல் காட்சிக்கூடத்தில் காட்சிப் பொருளாக வாழ்கிறது. இதன் ஆரோக்கியம் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இதை விடுதலை செய்ய காட்சிக்கூட நிர்வாகிகள் முடிவு செய்தனர். பயிற்சி கொடுத்து பராமரிக்கப்படும் உலகின் மிக வயதான கொலையாளித் திமிங்கலம் இதுவே. விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு இதன் உடல் நலத்தைக் கண்காணிக்க வாஷிங்டனுக்கும் கனடாவிற்கும் இடையில் இருக்கும் ஒரு கடல் சரணாலயத்தில் தங்க வைக்க திட்டமிடப்பட்டது. 1966ல் பிறந்த லலீடா ஆண்டுக்கணக்கில் காட்சிக் கூடத்தில் ஊழியர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தது. இதனால் சரணாலயத்தில் வைத்து திமிங்கல நிபுணர்களால் இதற்கு இரை பிடிக்கக் கற்றுத் தரப்பட்டது. புதிய சூழ்நிலையில் தன்னை இது தகவமைத்துக் கொள்ளும்வரை இதன் நடவடிக்கைகளை நிபுணர்கள் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

லலீடாவின் தாய் என்று கருதப்படும் ஓஷன் சன் (Ocean sun) என்ற 90 வயதிற்கும் மேலான திமிங்கலம் தன் கூட்டத்துடன் இப்போதும் கடலில் சுதந்திரமாக வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. விடுதலை செய்யப்பட்ட லலிடா தாயைச் சந்திக்கும் முன்பே உடல் நலக் குறைவினால் மரணமடைந்தது.

ஜானி டெப் (Johnny Depp), லின்சி லோஹன் (Lindsay Lohan), ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford), எல்ட்டன் ஜான் (Elton John), ஜூலியா லெவி (Julia-Levy) போன்ற பல பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இத்திமிங்கலத்தின் விடுதலைக்காக எர்த் லேண்ட் என்ற அமைப்புடன் இணைந்து போராடினர். ஆனால் சுயநலம் மிக்க சிலரின் மனிதத் தன்மையற்ற செயல்களால் இது போல கைதியாக்கப்படும் பல திமிங்கலங்களும் மனிதச் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே உயிரை விடுகின்றன.

கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை டால்பின் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள். சிறிய கூட்டங்களாக வாழ்கின்றன. ஆண் திமிங்கலங்களின் உடல் எடை 9,800 கிலோ வரை இருக்கும். பெண் திமிங்கலங்களின் உடல் எடை ஆணை விடக் குறைவாக இருக்கும். கண்ணாடியைப் பார்த்து தங்களை அடையாளம் கண்டுபிடிக்கும் அபூர்வ ஆற்றல் உடைய ஒரு சில உயிரினங்களில் இவையும் ஒன்று.

கண்ணாடிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு காட்சிப்பொருட்களாக வாழும் இவற்றின் விடுதலைக்காக சூழல் போராளிகள் நீண்ட காலம் போராடி வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு 1860களில் கூண்டில் அடைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது தொடங்கியது. இந்த வகையில் இரண்டு பெலூகா (beluga) திமிங்கலங்களே முதலில் லாஃப்ரடோர் கடற்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு நியூயார்க் காட்சிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இவற்றை சர்க்கஸ் கம்பெனி முதலாளி டி டி பேர்னம் வாங்கினார். 1870களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏராளமான பெலுகா திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை சர்க்கஸ் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் சில மட்டுமே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தன.

ஜூலை 1865ல் நியூயார்க்கிற்கு வந்த இரண்டு பெலுகா திமிங்கலங்கள் காட்சிக்கு நடுவில் இறந்தன. 1930களில் பயிற்றுவிக்கப்பட்ட டால்பின்கள் காட்சிப்பொருட்களாக புகழ் பெறத் தொடங்கின. அப்போது முதல் பாட்டில் மூக்கு (bottle nose) திமிங்கலங்கள் காட்சிப் பொருட்களாயின. கூண்டுகளில் அடைக்கப்படும் இவை சில சமயங்களில் தாக்குதல் குணத்தையும் வெளிப்படுத்துவது உண்டு.

கடல்நீர் மாசு, வேட்டைக்காரர்கள் போன்றவற்றில் இருந்து காட்சிக்கூடங்களில் செயற்கை நீர்நிலைகளில் இவை பாதுகாப்புடன் வாழ முடியும் என்றாலும், இது இவற்றிற்கு மனிதன் வழங்கும் தூக்குத் தண்டணையாகவே கருதப்படுகிறது. இன்று கோடிக்கணக்கில் பணம் ஈட்டித் தரும் ஒரு தொழிலாகவே இது போன்ற செயற்கை நீர்நிலைகளில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது நடக்கிறது.

எதிர்ப்புக் குரல்கள்

1970களின் பாதியுடன் கூண்டுகளில் அடைத்து இந்த உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவதை எதிர்த்து கடும் விமரிசனங்கள் எழுந்தன. தொடர்ந்து 1972ல் கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. வாஷிங்டன் கொலையாளித் திமிங்கலங்களைப் பிடிப்பதை தடை செய்த முதல் மாகாணமாக மாறியது. 1976ல் இது நடைமுறைக்கு வந்தது.

ஆனால் உலகளவில் இவற்றை சிறைப்படுத்தி செயற்கை நீர்நிலைகளில் காட்சிப்படுத்துவது இன்றும் பல நாடுகளில் தொடர்கிறது. 1940களில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது பிரபலமாக இருந்தது. இந்த உயிரினங்களின் வாழிடச் சூழலை செயற்கையாக உருவாக்குவது சுலபமானதில்லை என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தும்போது இவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய ஓர் ஆய்வு சில உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

டால்பின் மற்றும் திமிங்கலங்கள் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 மைல் வரை பயணம் செய்பவை. செயற்கையாக உருவாக்கப்படும் நீர்நிலைகளில் இதில் ஒரு சதவிகிதம் கூட பயணிக்கும் வசதி இவற்றிற்கு இருப்பதில்லை. மன இறுக்கம், அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான பிரச்சனைகளை இவை எதிர்கொள்கின்றன.

பாட்டில் மூக்கு டால்பின்கள் செயற்கை நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது உயிரிழக்க 6% அதிக வாய்ப்பு உள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட கொலையாளித் திமிங்கலங்கள் உலகெங்கும் பெருமளவில் உயிரிழக்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2015ல் 39 காட்சிக்கூடங்கள் இருந்தன. இவை 2019ல் 76 ஆக அதிகரித்துள்ளன.

இதுவரை உள்ள புள்ளிவிவரங்கள்படி உலகம் எங்கும் 174 காட்சிப்பொருட்களாக இருந்த கொலையாளித் திமிங்கலங்கள் மரணமடைந்துள்ளன. அமெரிக்காவில் இருக்கும் கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் மட்டும் பயிற்சி பெற்ற 18 கொலையாளித் திமிங்கலங்கள் சிறைபட்டு வாழ்கின்றன.

கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை இதுவரை மனிதர்களைத் தாக்கியதாக செய்திகள் இல்லை. பிரம்மாண்டமான கிரேட் வொயிட் சுறாக்களை (Great white shark) உணவாக உட்கொள்ளும் ஒரே ஒரு உயிரின வகை இவை. இவை நீலத் திமிங்கலங்களை தாக்குவதுண்டு. 14 கொலையாளித் திமிங்கலங்கள் கூட்டமாக சேர்ந்து நீலத் திமிங்கலத்தைத் தாக்கிய செய்திகள் உண்டு.

பெங்குவின்கள், சீல்கள், மற்ற திமிங்கலங்களை உணவாக இவை உட்கொள்கின்றன. சமூக விலங்குகளான இவை கூட்டமாகச் சேர்ந்தே எதிரியைத் தாக்குகின்றன. இவை பெரிய திமிங்கலங்களை வேட்டையாடுவதால் கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை டால்பின் குடும்பத்தில் பிரம்மாண்ட உடல் அமைப்பு உடையவை. உடலின் நிறம் கறுப்பும் வெள்ளையும் கலந்து காணப்படும். கருவுற்று 17 மாதங்களுக்குப் பிறகே இவை பிரசவிக்கின்றன. ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன.

இரண்டு ஆண்டுகள் வரை குட்டிகள் தாய் தந்தை பராமரிப்பில் வாழ்கின்றன. கடலில் 100 முதல் 500 அடி ஆழம் வரை நீந்தும் திறன் பெற்றவை. ஆனால் கூண்டில் அடைக்கப்பட்ட இவற்றிற்கு இத்தகைய சுதந்திரம் இல்லை. இவற்றின் நீளம் 23 முதல் 32 அடி வரை இருக்கும். சராசரி ஆயுட்காலம் 50 முதல் 80 ஆண்டுகள்.

பல திரைப்படங்களில் இவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. 2013ல் வெளிவந்த ப்ளாக் ஃபிஷ் (Black fish) என்ற திரைப்படம் ஆர்லாண்டோ கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் இரண்டு பயிற்சியாளர்களைக் கொன்ற 36 வயதில் மரணம் அடைந்த உலகின் மிகப் புகழ்பெற்ற திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் டிலிகம் (Tilikum) என்ற கொலையாளித் திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. 1993ல் வெளிவந்த ஃப்ரீ வில்லி (Free villy) என்ற திரைப்படம் கேக்கோ (Keiko) என்ற திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கொலையாளித் திமிங்கலத்தின் மீது காட்டும் பாசத்தால் அதை தப்பிக்க வைப்பது பற்றிய கதை இது. 1993ல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது.

கிரேட் வொயிட் சுறாக்களை கதாநாயகர்களாக கொண்டு ஸ்டீபன்ஸ் ஸ்பில்பெர்க் போன்றோர் எடுத்த மூன்று திரைப்படங்களின் தொடரான 'ஜாஸ்'. உலகம் எங்கும் பிரபலமாக திரையிடப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள். இவை சமூக விலங்குகள் என்பதால் கூட்டத்தை விட்டுப் பிரிந்தால் தனிமையை அனுபவிக்க நேரிடுகிறது.

சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) வகைப்பாட்டின்படி இவை அதிக ஆபத்தை எதிர்கொள்ளாத உயிரினங்களின் (Least concerned LC) பட்டியலில் உள்ளன. ஆண் திமிங்கலங்கள் 10 மீட்டர் வரை நீளம் உடையவை. பெண் திமிங்கலங்களின் நீளம் 8.5 மீட்டர். கிரீன்லாந்து போன்ற நாடுகளில் இவை இப்போதும் வேட்டையாடப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

உலகம் முழுவதும் இப்போது 50,000 கொலையாளித் திமிங்கலங்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. மீன் பிடி வலைகளில் சிக்கிக் கொள்வது, உணவுப் பற்றாக்குறை, கடல் மாசு, மிதமிஞ்சிய கப்பல் போக்குவரத்து போன்றவை இவை இன்று சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனைகளில் சில.

இயற்கை சமநிலையை காக்க உதவும் இந்த அதிசய உயிரினங்கள் அழிந்தால் கடல் சூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். நாளை அது மனித நலத்திற்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கோள்கள்

https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-orcas-the-killer-whales-1.8450785

&

https://killerwhales.fandom.com/wiki/Kiska

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It