கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் அனைத்தும் வடக்கு ஆசியா, ஐரோப்பாவில் இருந்து வந்தவை என்று கூற முடியாவிட்டாலும் 20 அல்லது 25 சதவிகித பறவைகள் வேறு இடங்களில் இருந்து வருபவைதான். வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகள் உட்பட அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்களும் உள்ளூர் பெயர்களும் உண்டு. இந்தப் பெயர்கள் மூலம் நமது பாரம்பரியத்திலும், அந்த கிராம மக்களின் வாழ்விலும் இப்பறவைகள் கலந்துவிட்டதை உணர முடிகிறது.
வேடந்தாங்கலுக்கு வரும் பெரும்பாலான பெரும்பறவைகள், கோடை காலங்களில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்கின்றன. வலசை காலத்தில் வேடந்தாங்கல் வரும் இவை இங்கு கூடமைத்து குஞ்சு பொரிக்கின்றன. கூடமைக்கும் இடமே பறவைகளின் தாயகம் என்பார் காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன். இந்த பறவைகளை உள்நாட்டு வலசைப் பறவைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொதுவான நம்பிக்கை மாறாக சிறு பறவைகளே பெரும்பாலும் தூர தேசங்களில் இருந்து இங்கு வருகின்றன. கிளுவை, ஊசிவால் போன்ற வாத்துகள், வாலாட்டிகள் (Wag Tails), உப்புக்கொத்திகள் (Plovers), உள்ளான்கள் (Sandpiper), ஆற்று ஆலாக்கள் (Terns) போன்றவை அவை. அளவில் சிறியவை என்பதால் கூர்மையான இரு கண்ணோக்கி கொண்டே இவற்றை தெளிவாகப் பார்க்க முடியும்.
இங்கு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரண்டு விஷயங்களில் முதலாவது, Black lbis எனப்படும் அரிவாள்மூக்கனின் உள்ளினமான அன்றில் பறவையை குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. ஏரிக்கு எதிர்ப்புறம் தண்ணீர் பாய்ச்சப்பட்டிருந்த வயல்களில் வெள்ளை அரிவாள்மூக்கன்களுடன் கலந்து அவை இரை தேடிக் கொண்டிருந்தன. சங்க காலம் முதல் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தப் பறவையை பார்க்க முடிந்தது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அருவாமூக்கன் எனப்படும் இந்த கொக்கு வகையில் தமிழகத்தில் மூன்று உள்ளினங்களைப் பார்க்க முடியும்.
அன்றில் பறவை தூரப்பார்வைக்கு கறுப்பு நிறத்தில் இருந்தாலும், உச்சந்தலை ரத்தச்சிவப்பாக, உடல் அடர்பழுப்பு நிறத்தில் இருப்பதை உற்றுநோக்கினால் அறியலாம். வேடந்தாங்கல், கரிக்கிளி சரணாலயங்களுக்கு நூற்றுக்கணக்கில் இவை வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது ஆச்சரியம், கூடு கட்டுவதற்காக மஞ்சள் மூக்கு நாரைகளும், சில அரிவாள் மூக்கன்களும் தொடர்ச்சியாக ஒன்று மாற்றி ஒன்றாக பச்சையான சிறு மரக்கிளைகளை முறித்துச் சென்றதே.
இயற்கையின் கட்டளைக்கு ஏற்ப தங்கள் இனத்தை விருத்தி செய்ய இப்பறவைகள் கூடமைக்கின்றன. சாதாரணமாக கூடமைக்க பறவைகள் சிறு மரக்கிளைகள், சுள்ளிகளை அலகில் கொத்திப் பறப்பது வழக்கம். ஆனால் மஞ்சள் மூக்கு நாரைகள் பச்சை மரக்கிளைகளை, சிலநேரம் காய்ந்த மரக்கிளைகளை அலகால் முறித்துச் செல்கின்றன. இந்த செயல்பாட்டை கவனிப்பது சுவாரசியமாக இருந்தது.
சில பறவைகள் கிளையை முறிக்க முடியாமல் மாறிமாறி ஒவ்வொரு கிளையாக அலகை திருப்பி எது வசதியாக கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. இயற்கை உந்துதலின் காரணமாகவே இந்தச் செயல்பாடு நிகழ்கிறது.
வலசை காலம்
வேடந்தாங்கலில் வலசை பருவகாலம் தொடங்கும் நாள் நவம்பர் 15 என்று கருதப்படுகிறது. 2007ம் ஆண்டு அந்த நாளில் 10,000 முதல் 15,000 பறவைகள் வந்திருந்தன. வலசை வரும் பறவைகள் குளிர்காலத்தை கழிக்க ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாள். குறிப்பிட்ட இடத்துக்கு மீண்டும் மீண்டும் வரும் தன்மை கொண்டவை, தென்மேற்குப் பருவ மழையைப் போல.
வேடந்தாங்கலில் இதுவரை 115க்கும் மேற்பட்ட பறவை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை நீரைச் சார்ந்து வாழும் நீர்ப்பறவைகளே.
2006 ஜனவரியில் சென்றபோது 20 பறவை வகைகளை எங்களால் அடையாளம் காண முடிந்தது. முந்தைய ஆண்டு சரியான மழைப்பொழிவு இல்லாததால் ஐந்தாயிரத்துக்கும் குறைவான பறவைகளே வந்தனவாம். அந்த ஆண்டு பத்தாயிரக்கணக்கில் கூடியிருந்தன. 2007 டிசம்பரில் சென்றபோதும் அதே எண்ணிக்கையிலான பறவை வகைகளைக் கண்டோம். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. காரணம் அது வலசை காலத்தின் தொடக்கம்.
2007ம் ஆண்டில்
2007ம் ஆண்டு டிசம்பர் முதல் வாரத்தில் வேடந்தாங்கல் சென்றபோது அன்றில் பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. நத்தை குத்தி நாரைகள், கூழைக்கடாகள், உண்ணி கொக்குகள். பெரிய கொக்குகள் அதிக எண்ணிக்கையில் கூடியிருந்தன. வலசை காலம் தொடங்கும் போது டிசம்பர் மாதத்தில் கூழைக்கடாக்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. வேடந்தாங்கலில் வழக்கமாக பெரும் எண்ணிக்கையில் கூடும் மஞ்சள் மூக்கு நாரைகளின் வருகை நாங்கள் சென்றிருந்த 2ம் தேதிதான் அந்தப் பருவத்தில் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பறவைகள்:
மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork), கூழைக்கடா (Grey Pelican), கரண்டிவாயன் (Spoonbill), அரிவாள்மூக்கன் (White lbis), பெரியகொக்கு (Large Egret), நத்தைக்குத்தி நாரை (Openbilled Stork), பாம்புத்தாரா (Indian Darter) உள்ளிட்டவை.
அரிவாள் மூக்கன் – னின் அலகு கீழ்ப்புறமாக கதிர் அரிவாளைப் போல முன்னால் வளைந்திருக்கும். சேற்றில் பூச்சிகள், நத்தைகள் உள்ளிட்டவற்றை அலகால் குத்தியெடுத்து உண்ணும். அரிவாள் மூக்கனின் அலகும், கால்களும் கறுப்பு நிறம், உடல் வெள்ளை நிறம் என எதிரெதிர் நிறங்களைப் பெற்றிருக்கும்.
கரண்டிவாயன் என்ற பெயரைக் கேட்டவுடனேயே, ஏதோ கிண்டல் செய்கிறார்கள் என்று தோன்றுகிறதா? கரண்டிவாயனின் அலகுகள் சமையல்காரர்கள் பயன்படுத்தும் அகப்பை கரண்டிகள் இரண்டை மேலும் கீழுமாக வைத்தது போலிருக்கும். தலைப்பிரட்டை, தவளை, நீர்ப் பூச்சிகள் போன்றவற்றைப் பிடித்து தலையை மேற்புறமாகத் தூக்கி இரையை விழுங்கும். இது பார்க்க புதிய அனுபவமாக இருக்கும். வளர்ந்த கரண்டிவாயன்களின் தலைப்பகுதிக்கு பின்புறம் குடுமி போன்ற சில இறகு முடிகள் இருக்கும். இந்த கொண்டை முடிகள் அதன் அழகைக் கூட்டும்.
உணவுப் பழக்கம் காரணமாகவே மேற்கண்ட இரு பறவைகளுக்கு அலகு இப்படி அமைந்துள்ளது.
பாம்புத்தாரா ஒரு நீர்ப்பறவை. பெரும்பாலான நேரம் நீரில் நீந்திக் கொண்டிருக்கும். உடல் அளவில் நீர்க்காகத்தை ஒத்திருந்தாலும் இதன் கழுத்து நீண்டிருக்கும். உடல் பளபளக்கும் கறுப்பு-பழுப்பு நிறம். நீண்ட கழுத்து பழுப்பு நிறம். தலை மட்டும் வெளித்தெரியும் வகையில் தண்ணீரில் உடலை மறைத்து நீந்தும். அப்பொழுது நீண்ட கழுத்து பாம்பு போல வெளியே நீண்டிருக்கும். இதனால் தான் அப்பெயர் பெற்றது. அம்புபோல் கழுத்தை சட்டென்று நீட்டி மீனைப் பிடிக்கும். மீனே இதன் முக்கிய உணவு.
இளஞ்சிவப்புத் தலையுடன் காணப்படும் மஞ்சள் மூக்கு நாரையின் இறகுகள் கரும்பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு கலந்து பளிச்சென்று இருக்கும். மரத்துக்கு மேலே பறந்து வந்து ஒரு கணம் நிதானித்துவிட்டு, பின்னர் இந்தப் பறவை அமரும் அழகே தனி.
நத்தை குத்தி நாரை, மஞ்சள்மூக்கு நாரை போலவே இருந்தாலும் தலை நிறமற்றும், அலகு இடைவெளியுடனும், இறகுகள் இளஞ்சிவப்பு வண்ணமின்றியும் உள்ளன.
கூழைக்கடாவுக்கு வழக்கமாக அடி அலகின் கீழே பை இருக்கும் என்றாலும். இங்குள்ள Spot billed or Grey Pelican என்ற கூழைக்கடா வகைக்கு பெரிய பை இருப்பதில்லை. இதன் அலகு அமைந்துள்ள விதம், அதன் முகத்தை சிரித்த முகம் போல தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
பளிச்சென்ற வெண்நிறத்தில் புசுபுசுவென இறக்கைகளுடன் காணப்படும் உண்ணிக் கொக்கு கூட்டமாக பறந்து செல்வது விமான சாகசக் காட்சிகளை நினைவுபடுத்தும்.
வீட்டுக் காக்கைகளைப் போல, நீர்க்காகங்கள் என்ற வகை உண்டு. கொண்டை நீர்க்காகம் (Indian Shag), சிறிய நீர்க்காகம் (little Cormorant) என இரு வகைகள் இங்கு அதிகமாக உள்ளன. சிறிய நீர்காகம் கூட்டமாக மீன்பிடிக்கும். நீர்க்காகங்களுக்கு எண்ணெய் சுரப்பி இல்லாததால் நீந்தும் போது இறக்கைகள் நனைந்துவிடும். கொண்டை நீர்க்காகங்கள் வெயிலில் இறக்கைகளை காய வைப்பதை தெளிவாகப் பார்க்கலாம்.
வேடந்தாங்கலின் கவர்ச்சிகரமான பறவைகள் மஞ்சள்மூக்கு நாரை, கூழைக்கடா, நத்தைகுத்தி நாரை, கரண்டிவாயன் ஆகியவையே. பருவகாலம் உச்சமடையும்போது இந்த நான்கு பறவைகளையும் அதிக எண்ணிக்கையில் பார்க்கலாம். அரிவாள்மூக்கன் (வெள்ளை), அன்றில் பறவை, நீர்க்காகங்கள், பாம்புத்தாராக்கள் போன்றவற்றையும், ஊசிவால் வாத்து (Pintailed Duck), கிளுவை (Commen Teal), நாமக்கோழிகள் (Common Coot), தாழைக்கோழி (Moorhen), முக்குளிப்பான (Dab Chick) போன்ற சிறு நீந்தும் பறவைகளையும் பார்க்கலாம்.
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
தமிழகத்தில் பன்னிரெண்டு இடங்கில் பறவை சரணாலயங்கள் உள்ளன. இவை அனைத்தும் நீர்நிலைகளில் அமைந்தவைதான். வலசை வரும் பறவைகள் பெரும்பாலும் நீர்நிலைகளிலேயே தங்குகின்றன. பொதுவாகவே அதிக பறவை வகைகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை நீர்நிலைகள். பல்வேறு பறவைகளுக்கு இரை தரும் அமுதசுரபியாய் அவை உள்ளன. ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே நீர்ப்பறவைகள் கூடு கட்டுகின்றன. கூட்டங்கூட்டமாக ஒரே இடத்தில் கூடுகட்டும் வழக்கம் நீர்ப்பறவைகளின் தனிப்பண்பு.
தாராளமாக இரை கிடைக்கும் இடங்கள், கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய பாதுகாப்பான மரங்கள் இருக்கும் நீர்நிலைகளில் அவை ஆயிரக்கணக்கில் கூடுகின்றன. அப்படிப்பட்ட சில நீர்நிலைகள் சரணாலயங்களாக மாற்றப்பட்டுள்ளன.
நீர்நிலைகளுக்கு உள் சூழலியல் – பல்லுயிரிய முக்கியத்துவத்தைப் பொருத்து ‘ராம்சர் மாநாடு’ அந்தஸ்து வழங்கப்படுகிறது. முக்கிய பாரம்பரியச் சின்னங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்படுவதைப் போல, நீர்நிலைகளுக்கு ராம்சர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த அந்தஸ்தைப் பெற்ற நீர்நிலைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
சுற்றுச்சூழல் சீர்கேடு, வாழிடச் சூழலில் ஏற்படும் பாதகமான மாற்றங்கள் காரணமாக நீர்ப்பறவைகள் புதிய இடங்களை தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. ஒரு சரணாலயத்திலே குறிப்பிட்ட சில பறவைகளின் வருகை அதிகரிப்பு காலப்போக்கில் மாறுகிறது.
வேடந்தாங்கல், கூந்தங்குளம், கரிக்கிளி, வடுவூர், திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள கிளியூர் ஏரி போன்று பறவைகள் கூடும் இடங்களுக்கு பறவை நோக்க சென்றுள்ளேன். காட்டுயிர்கள் மீது ஆர்வம் அதிகரித்தபோதும், காடுகளுக்குச் சென்று அவற்றின் வாழ்க்கையை நேரடியாக நோக்கும் வாய்ப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்தது. ஆனால் எல்லா காலமும் பறவைகள் நோக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்து வந்தது. நகரத்தில் வாழ்ந்து கொண்டே இயற்கையோடு நெருக்கத்தை பராமரிப்பதற்கான சிறந்த வழிகளில் பறவை நோக்குதல் முக்கியமானது.
என் திருச்சி வீட்டுத் தோட்டத்திலேயே தினசரி 10 வகை பறவைகளை பார்க்க முடிந்தது. அதேநேரம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பறவை சரணாலயங்களுக்குச் செல்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். ஒவ்வோர் ஆண்டும் வடகிழக்குப் பருவமழை வந்த பின் இந்தப் பழக்கம் தொடர்ந்தது.
பறவைகளை நோக்குவதற்குத் தேவையான இரு கண்ணோக்கியும் வாங்கியிருந்தேன். காட்டுயிர்கள், பறவைகளைப் படமெடுப்பதிலும் எனக்கு ஆர்வம் இருந்தது.
சென்ற இடமெல்லாம் பல பறவைகளுக்கு ஆளாளுக்கு ஒரு பெயர் கூறுவார்கள். ஏற்கெனவே காதில் விழுந்த பெயர்களை பார்க்கும் பறவைகளுக்கு சூட்டி விடுவார்கள். கொக்கையும் நாரையையும் ஒன்று என்பார்கள். இதழ்கள், செய்தித்தாள்களில் எழுதும் போதும், படம் வெளியிடும்போதும் பலர் ஆங்கிலப் பெயரை குறிப்பிடுகிறார்கள். அல்லது தவறான தமிழ்ப் பெயரைத் தருகிறார்கள். வழக்குப் பெயர் என்ன? சரியான தமிழ்ப் பெயர் எது என்று கவனம் செலுத்துவதில்லை.
சில பறவைகள் தூரத்தில் இருந்து பார்க்க ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும், மிக நுணுக்கமான வகையில் வேறுபட்டிருக்கும். முக்கிய அடையாளங்களைக் கொண்டு பறவைகள் பிரித்தறிந்தால் தான், அவற்றின் உணவு உள்ளிட்ட இதர பழக்கவழக்கங்களை சரியாக உணர முடியும். இதற்காகத்தான் பறவைகளின் சரியான பெயர்களை அறிய முயற்சிக்கப்படுகிறது.
பறவைகளைப் பற்றி உள்ளூர் மக்களிடம் விசாரிப்பது அவசியமே. அத்துடன் அவற்றை சரியாக அறிய பறவைகளின் முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டும். அலகு, கால், உடல், சிறகுத்தொகுதி, உணவுப்பழக்கம், கூடு அமைந்துள்ள இடம் உள்ளிட்ட அம்சங்களை பறவை புத்தகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண வேண்டும்.
தொடக்க காலத்தில் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் எனக்குத் தெரியாது. அவற்றின் பழக்கவழக்கங்களை பார்ப்பதில் கவனம் செலுத்துவேன். அப்பகுதிக்கு வரும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்க முயற்சிப்பேன். பிறகு புலவர் க.ரத்னத்தின் தமிழ்நாட்டுப் பறவைகள் குறித்த தமிழ்ப்புத்தகம், விஸ்வமோகன் பட் எழுதி நேஷனல் புக் டிரஸ்ட் (N.B.T.) வெளியிட்ட ‘ஜாய் ஆப் பேர்ட்வாட்சிங்’, தமிழ்நாடு சுற்றுலாத் துறை வெளியிட்ட வேடந்தாங்க-வாட்டர் பேர்ட் சேஞ்சுவரி, சாலிம் அலியின் ‘பறவை உலகம்’, கூந்தங்குளம் பற்றி உலகை இயற்கை நிதியம் (WWF) வெளியிட்ட சிறு வெளியீட்டைக் கொண்டு பறவைகளை அடையாளம் காண பழகிக் கொண்டேன்.
மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்றழைக்கப்படும் பறவையை பலரும் செங்கால் நாரை என்பார்கள். இது தவறு. ஆங்கிலத்தில் White Stork என்றே இப்பறவை அழைக்கப்படுகிறது. தமிழில் செங்கால் நாரை. குளிர் காலத்தில் தமிழகத்துக்கு வலசை வரும் இப்பறவை அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. அதனால் இதைப் பார்ப்பது அவ்வளவு எளிதல்ல. பலருக்கும் நாரைகளைப் பற்றித் தெரிந்திருக்கிறதோ இல்லையோ, சத்திமுற்றப் புலவர் குறிப்பிடும் செங்கால் நாரை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதன் வீச்சு விரிவானது என்றாலும், அறியாமையால் பல நேரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சள் மூக்கு நாரை உள்ளூர் வலசை பறவை. வேடந்தாங்கல், கூந்தங்குளம், பழவேற்காடு உள்ளிட்ட சரணாலயங்களில் இது பெருமளவு கூடுகிறது. இந்தப் பறவைகளை பெரும் எண்ணிக்கையில் பார்க்கலாம்.
ஒரு சூழல் செழிப்பாக, உயிர்வளத்துடன் வளங்குன்றா வளர்ச்சியை தரும் தன்மையுடன் இருக்கிறதா, மாசுபட்டிருக்கிறதா – சீர்கெட்டிருக்கிறதா என்பதை அறிய பறவைகள் சிறந்த அடையாளம்.
பறவைகளை நோக்குதல் மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்கு போலவே அடையாளப்படுத்தப்பட்டு விட்டது. காட்டுயிர் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களும் பறவைகளை நோக்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
பறவை நோக்குதல் வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. இது காட்டுயிர் அறிவியலின் ஒரு பிரிவு. பறவைகளின் உணவுப் பழக்கவழக்கம், செயல்பாடுகள், நடமாட்டங்களை கவனிப்பது பல்வேறு நுணுக்கமான விஷயங்களை உணர்த்தும். பறவை நோக்குதலின் பிரதான நோக்கம், அவற்றின் அழகைப் பார்த்து வியப்பதல்ல. பழக்கவழக்கத்தை ஊன்றி நோக்குவதும், அதன்மூலம் பல்லுயிரிய சுழற்சியில் அவற்றின் பங்கேற்பைப் புரிந்து கொள்வதுமே அடிப்படை நோக்கம். பறவையியல் என்பது ஓர் அறிவியல் துறை. அதன் நீட்சியே பறவை நோக்குதல்.
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.
உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.
அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல்.
அந்தப் பாடல் –
நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி...
-என்று போகிறது.
இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளி வாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப் படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.
மக்கள் - பறவைகள் இடையிலான உறவு இப்படி பண்டை காலம் தொட்டே தமிழ் நிலத்தில் உறுதியான பிணைப்பாக தொடர்ந்து வந்துள்ளது. அந்த உறவுக்கான சாட்சியத்தை தமிழகத்தின் பல்வேறு சரணாலயங்களில் பார்க்கலாம்.
(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்)
பறவைகள் வலசை போதல்
குளிர் காலங்களில் மேற்கு நாடுகள் பனியால் மூடப்படும்போது, சில பறவை இனங்கள் கிழக்கில் உள்ள வெப்பமண்டல நாடுகளுக்கு இரை தேடி வலசை வருகின்றன.
வலசை வரும் பறவைகளின் பிரதான தேவை உணவு. அவற்றின் உறைவிடங்கள் எல்லாம் பனியில் உறைந்து உணவுக்கு வழியில்லாதபோது, சூழ்நிலைகள் சாதகமாக உள்ள கிழக்கு நாடுகளுக்கு அவை வலசை வருகின்றன. ஆர்டிக், சைபீரியா போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரம் கி.மீ பறந்து வருகின்றன. வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. நீர்வாத்து, செங்கால் நாரை, உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் இரைதேட மட்டுமே நமது சரணாலயங்களை நாடுகின்றன.
தமிழக பறவை சரணாலயங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் வெண்கொக்கு, வக்கா, அரிவாள் நாரை, கூழைக்கடா போன்றவை நம் நாட்டுப் பறவைகள்தான். இவை கோடை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவை. இவை உள்ளூர் வலசை பறவைகள் (Inland Migraed Secies) எனப்படுகின்றன.
இமயமலையின் பனிப்பகுதிகள் அருகே வசிக்கும் பட்டைத்தலை வாத்து, குஜராத்தின் கட்ச் பகுதியில் வசிக்கும் பூநாரைகள் பழவேற்காடு ஏரி, கோடிக்கரை சதுப்புநிலத்துக்கு வருகின்றன. சிறகி எனப்படும் நீர்வாத்தும் பெருமளவில் தமிழக ஏரிகளுக்கு வருகிறது.
இப்படி வரும் பறவைகள் அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பன்னெடுங்காலம் தொட்டே இந்தப் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. மேலே கூறியது போல பண்டைத் தமிழ் இலக்கியங்கில் வலசை வரும் பறவைகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் பறவைகள்
பறவைகள், வலசைபோதல், கூடு கட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், உணவு உள்ளிட்டவை பற்றி ஆராய்ச்சி செய்வது ஒரு நவீன காலப் பழக்கமே. இந்தத் துறை கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இது தொடர்பான குறிப்புகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பண்டைத் தமிழர்கள் பறவை வலசை போதல், அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்துள்ளனர். கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் பறவைகள் பற்றிய விரிவான வர்ணனைகள் கிடைக்கின்றன.
நிலங்களை ஐந்தாகப் பகுத்திருந்ததே, இயற்கை பற்றி தமிழர்கள் கூர்மையான அறிவைக் கொண்டிருந்ததற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு நிலத்தையும் திணை, முறையாகப் பகுத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயற்கைக் கூறுகளையும் வகுத்திருந்தனர்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 67வது பாடலில் பூநாரைகள் (Flamingo) பற்றிய குறிப்பு வருகிறது. உலகெல்லாம் வியக்கும் பூநாரைகளின் உணவுப் பழக்கம். வலசை போதல் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி அம் பெருந்துறை ஆயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின்
-என்று போகிறது அந்தச் செய்யுள்.
‘குமரி நீர்நிலையில் காணப்படும் நுண்ணுயிரியை உண்ட பின், வடக்கில் உள்ள இமயமலைக்கு நீ வலசை போகிறாய்’ என்று இந்தச் செய்யுள் குறிப்பிடுகிறது. இன்றளவும் பூநாரைகள் குஜராத்தில் இருந்து கோடிக்கரை, பழவேற்காடு ஏரி பகுதிகளுக்கு வலசை வந்து செல்கின்றன.
இது போன்ற இயற்கைப் பதிவுகள் தற்போதைய இலக்கியங்களில் மிகமிகக் குறைவாக இருக்கிறது என்று காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.
நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் காட்டுயிர் மூடநம்பிக்கைகள், விழிப்புணர்வு இன்மை பற்றி காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி ‘நெருப்புக் குழியில் குருவி’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.
காக்கைகளில் குடும்பப் பிரிவினைகள் உண்டு. தன் குடும்பத்தைத் தவிர இதர காக்கைகளுடன் அவை வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை. அற்புதமாகப் பாடும் பறவைகளில் பலரையும் கவர்ந்தது குயில். குயிலைப் பார்க்காதவர்கள் கூட அதன் குரலை கேட்டிருப்பார்கள். இப்படி மயக்கும் மனோகர குரலால் பாடுவது ஆண் குயில்தான். காதல் செய்வதற்கு பெண்ணுக்கு விடுக்கும் அழைப்பு இது. ஆனால் பாடகிகளுக்கு ‘இசைக்குயில்’ என்று பெயர் வைக்கிறார்கள். எவ்வளவு மோசமான முரண் இது. எரித்தாலும் புத்துயில் பெறும் பீனிக்ஸ் என்றொரு பறவையே கிடையாது என்பது போன்று பல்வேறு கருத்துகளைப் பற்றி அப்புத்தகம் பேசுகிறது.
மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் தமிழ் எழுத்தாளர்களிடம் நிலவும் இயற்கை பற்றிய ஆழ்ந்த அறிவின்மையை வெளிப்படுத்துகின்றன. இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தான். நமது பாரம் பரியத்தை மிக வேகமாக இழந்துவிட்டோம். சமூகத்தில் முன்னோடிச் சிந்தையாளர்கள் என்று கருதப்படும் எழுத்தாளர்களிடமும் இது போன்ற வறட்சி காணப்படுவது நல்ல அறிகுறியல்ல.
சாம்பல் கொக்கு (Eastern Grey Heron)
வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி சரணாலயங்களில் இந்தப் பறவை பெருமளவில் இனப் பெருக்கம் செய்கிறது.
ஆழமில்லாத நீர்நிலைகளில் கொக்குகள் (Egret) வேகமாக நகர்ந்து இரையைத் தேடும். அதற்கு நேர்மாறாக சாம்பல் கொக்குகள் நுட்பமாக பதுங்கி நகரக் கூடியவை. மிக மெதுவாக, நீரிலிருந்த கால்களை சப்தம் எழுப்பாமல் வெளியே எடுத்து, நீரை அசைக்காமல் மீண்டும் கால்களை உள்ளே வைக்கும். சப்தமெழுப்பாமல் இரை தேடும் பண்பு கொண்டது இப்பறவை.
பரணரின் அகநானூறு 276வது செய்யுள், சாம்பல் கொக்கின் இரை தேடும் பண்புக்கு ஒப்பாக, இரவில் திருட வீட்டுக்குள் நுழையும் திருடனின் நகர்தலை குறிப்பிட்டுள்ளது.
நீளிரும் பொய்கை இரை வேட்டெழுந்த
வாளை வெண்போத்து அனய, நாரை தன்
அடியநி வறுதலஞ்சிப் பயப்பய
கடியிலன் புகூம் கள்வன் போல
-அகநானூறு 276 – மருதம் – பரணர்
மேற்கண்ட செய்யுள்கள் மூலம் நீர்ப்பறவைகள் வலசை போதல் உள்பட கூர்மையாக உற்று நோக்கப்பட்ட அவற்றின் பழக்கவழக்கங்களை அந்தக் காலத்தில் இருந்தே தமிழர்கள் பதிவு செய்து வந்துள்ளது தெரிகிறது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆர்க்டிக் பகுதிகளில் பெரிய மரம் செடி கொடிகள் கிடையாது. ஏதோ கொஞ்சம் குற்றுச் செடிகள், பூண்டுகள், சின்ன சின்ன மூலிகைகள், லைக்கன்ஸ் மற்றும் பாசிகள் நிறைய உண்டு. இவைகள் இணைந்ததுதான் துந்திரா பிரதேசம். வடக்கே செல்லச் செல்ல, தாவரங்களைப் பராமரிக்க வேண்டிய வெப்பம் மிகக் குறைவு. அதன் அளவு, அடர்வு, உற்பத்தி, வகைகள் என அனைத்தையும் குளிர் காலி செய்து விடுகிறது. இங்கு வளரும் குற்றுச் செடிகளும் கூட அதிக பட்சம் 2 மீ உயரம் வரைதான் இருக்கும். லைக்கன்ஸ் மற்றும் பாசிகள்தான் அடர்வாக உருவாகின்றன. அதன் பெயர் செட்ஜ்ஜஸ்(sedges). ரொம்ப குளிரான பகுதிகளில், தரை மொட்டையாய் இருக்கும் சில புற்கள் இருக்கலாம். ஆர்க்டிக் பாப்பி என்ற மஞ்சள் நிற பூ பூக்கும் செடி உண்டு.
துந்திரா பகுதியில் தாவர உண்ணிகளும் உண்டு. துருவ முயல், லெம்மிங் (Lemming), புனுகு எருது, கலைமான்கள் உண்டு. துருவ முயல் குளிர் அதிகமாகும் காலங்களில் தரைக்கு அடியில் குழிபறித்து உறங்கும். காது மட்டும் கொஞ்சம் நீளமாக இருக்கும். புனுகு எருதின் உடலிலிருந்து புனுகு வாசனை வரும். இந்த வாசனை பெண்ணைக் கவருவதற்காகவே. ஆனால் இந்த விலங்குகளை எல்லாம், ஆர்க்டிக் நரியும், ஓநாயும் வேட்டையாடி உண்ணும். துருவக்கரடியும் கூட மற்ற விலங்குகளை அடித்து உண்ணும். ஆனாலும் கூட பொதுவாக துருவக்கரடிக்கு, கடல் வாழ் விலங்கினங்களின் மேல்தான் கொள்ளைப் பிரியம். கடலிலும், பனிப்பகுதிக்குள்ளும் நுழைந்தே வேட்டையாடும்.
ஆர்க்டிக் நரி வெள்ளையாகவே இருக்கும். பொதுவாக ஆர்க்டிக் பகுதியில் வாழும் அனைத்து விலங்குகளும் வெள்ளையாகத்தான் இருக்கின் றன. துருவ நரிக்கு அடர்த்தியான தோலும், அதன் கீழே கொழுப்பும், தோலின் மேல் அடர்வான நீண்ட முடியும், குளிர் மற்றும் பனிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. இது பொதுவாக லெம்மிங் (lemming), வோல் என்னும் சிறிய கொரிப்பான், முட்டைகள், போன்றவற்றை சாப்பிடும். சமயத்தில் தாவரங்களையும், பெர்ரியையும் விதைகளையும் கூட உண்ணும். உணவு அதிகம் கிடைத்தால் பனித் தரையில் பதுக்கி, பாதுகாப்பாக வைத்திருந்து உண்ணும். அதே சமயம் உணவுத் தட்டுப்பாடு என்றால், மற்ற விலங்குகள் விட்டுச் சென்ற உணவையும், பெரிய விலங்குகளின் கழிவுப் பொருட்களையும்/மலத்தையும் கூட சாப்பிடும்.
ஆர்க்டிக்கில் வாழும் லெம்மிங் என்னும் கொரிப்பான் சிறியது. 30 -110 கிராம் எடைதான் இருக்கும். 7 -15 செ. மீ நீளம் இதன் உடல். உடல் சிறிதாக வால் நீளமானதாக இருக்கும். இவை தாவர உண்ணிகள். மற்ற துந்திர விலங்குகள் போல இவை குளிர்கால உறக்கம் மேற்கொள்வதில்லை. எந்த நேரமும் துறுதுறுதான். புல்லைப் பறித்து முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆர்க்டிக் பகுதியில் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கடல் வாழ் விலங்குகள் இப்பகுதிகளுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. சீல், (கடல் பசு ) வால்ரஸ்(கடல் சிங்கம்), பலீன் திமிங்கலம், வெள்ளைத் திமிங்கலம் நீலத் திமிங்கலம் என்ற பெரிய கொலைகார திமிங்கலம் மற்றும் மேல்தாடை நீண்டு தந்தமான நார் திமிங்கலம் என ஏராளமான விலங்குகள் ஆர்க்டிக் கடலில் வாழ்கின்றன. நார்த்திமிங்கலத்தின் உடல் 5 மீ நீளம். ஆனால் இதன் தந்தம் சுமார் 3 மீ நீளம் உள்ளது.
அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3.6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4 ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர்ச் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான். அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் சிறியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான். அதன் அளவு 1.3 செ. மீ தான். அதனால் பறக்க முடியாது. அண்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன.
அண்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன. இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி, மார்ச்) பார்க்கலாம். ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.
ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்ற குட்டிப் பறவைதான் உலகிலேயே அதிக தூரம் வலசை வரும் பறவையாகும். இது ஆர்க்டிக் வட்டமான துந்திராவில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. எங்கிருந்து எங்கு வலசை போகிறது தெரியுமா? வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் பறந்து ஓடி விடுகிறது. இதன் தூரம் எவ்வளவு என்று சொன்னால் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சுமார் 35,000 கி. மீ. தொலைவை. ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் இது. ஆனால் இந்த பறவையின் அளவு சுமார் ஒரு அடி நீளம்தான். இந்த அற்புதப் பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது.
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்
- கடல் எனும் விந்தை
- வாழ வழி விடுவோம் விலங்குகளுக்கும்
- பறவைகள் பற்களின்றி எப்படி உண்கின்றன?
- சிறுத்தை புலிகள் - சிக்கல் அவிழ்கிறது