மனிதர்களுக்குப்பிடித்தமான உணவுப்பட்டியலில் இப்போது தவளையின் கால்களும் சேர்ந்து கொண்டன. விளைவு.....தவளையினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் சொல்கிறது அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள்.

நோய்களின் தாக்கம், வாழ்விடங்கள் இழப்பு, புவிவெப்ப உயர்வு போன்ற அச்சுறுத்தல்களினால் தவளையினம் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கிறது. இப்போது உணவிற்காக அவை கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும், சட்டபூர்வமாக இது தடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை வரைமுறையின்றி உணவிற்காக அழிக்கும் போக்கு இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கும். உணவுச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கும் இந்த செயல் சட்டத்தின் இரும்புக்கரங்களால் தடுக்கப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே தவளையின் கால்களை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிற காலம் மலையேறிப் போய்விட்டது. ஐரோப்பாவின் பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலைகளில் கூட தவளைக்கால்கள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான ஆசிய நாட்டவர்கள் தவளைக்கால்களின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தவளைக்கால்களை விரும்பிச் சாப்பிடுவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் தவளைகள் உண்ணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பான தகவல்தான். இந்தோனேசியா மட்டுமே தவளைகளை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தோனேசியாவின் உள்ளூர் பயன்பாடு ஏற்றுமதியைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். ஓர் ஆண்டின் சில பருவங்களில் உள்ளூர்த் தேவைகளுக்காக தவளை பிடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போது ஆண்டு முழுவதும் சர்வதேச சந்தையில் தவளைக்கால் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.

இன்னும் படிக்க:

http://www.sciencedaily.com/releases/2009/01/090120195731.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசடைந்துவிட்டதால் பூக்களின் மணம் பரவும் தூரம் பாதிக்கப்பட்டிருப்பதாக உயிரி வேதியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வாசனை மூலக்கூறுகள் காற்றில் எளிதாக பரவக்கூடியவை. ஆனால் மாசடைந்த காற்று வாசனை மூலக்கூறுகளுக்கிடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திவிடுகின்றன. இதன் விளைவாக மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சியினங்கள் பூக்களின் மிகஅருகில் சென்றால் மட்டுமே வாசனையை உணரமுடிகிறது. இனப்பெருக்கத்திற்கு உதவும் பூச்சியினங்களை ஈர்க்கும் வாசனை தூரம் மூன்றில்  ஒரு பங்கு குறைந்துபோய்விட்டது.

poo_00பத்தடி தூரத்தில் பூக்களின் மணத்தை நுகர்ந்த வண்டினம் இப்போது மூன்றடி தொலைவு சென்றால் மட்டுமே பூக்களின் மணத்தை நுகரமுடியும். பூக்கள் என்றுமே ஐ லவ் யூ சொன்னதில்லை. பூக்களை வைத்துக்கொண்டு மனிதன் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி பல்லைக் காட்டுகிறான். அவனுடைய செயல்பாடுகளால் பூக்கள் மணமிழந்து வருகின்றன.

காற்று மாசடைவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தால் வெகுவிரைவில் நாம் ரோஜாக்களின் மணத்தை அறியமுடியாமல் போகலாம் என்கிறார் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ் என்பவர். வளிமண்டல மாசுகள் பூக்களின் மணம் பரவும் விதத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்ந்து வருகிறார் இந்த அறிஞர். கார்கள், தொழிற்சாலைகள் இவையெல்லாம் புகையை காறி உமிழ்கின்றன. தொழிலகங்களும், கார்களும் காறித்துப்பும் புகை காற்றில் கலந்து வாசனை மூலக்கூறுகளின் வில்லனாக மாறிவிடுகின்றன என்பது இவரது கண்டுபிடிப்பு.

நமக்கு பூக்களின் மணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பூச்சியினங்களுக்கு...? மனிதர்கள் பூக்களை முகரமுடியாவிட்டால், பூக்களுக்கு ஏதும் இழப்பில்லை. ஆனால் பூச்சியினங்கள் பூக்களின் வாசனையை முகருவதில் இடையூறு ஏற்படுமானால் பூக்களின் குலம் அழிந்துபோகுமல்லவா? பூச்சியினங்கள் பூக்களை கண்டறிய அதிகநேரம் எடுத்துக்கொள்கின்றன. வாசனை மிகுந்த பூக்களை தேடியலைவதில் மிகுந்த நேரத்தை செலவிடும் பூச்சியினங்கள், மிகக் குறைந்த நேரம் மட்டுமே பூந்தேனை உட்கொள்ளுவதற்கு செலவிடும். இதனால் மகரந்தச்சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகும். இதற்கு மாற்றுவழி என்ன? தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிப்பதுதான் ஒரே வழி என்கிறார் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/videos/2008/0807-pollution_killing_flowers_fragrance.htm

-தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

dolphinகொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா என்பது பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது. யூனிவர்சிட்டி ஆஃப் பஃப்பெல்லோவைச் சேர்ந்த டேவிட் ஸ்மித் என்பவர் டால்ஃபின், குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

டால்ஃபினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதை அவர் குறிப்பிடுகிறார். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It

மலைகளின் ஆண்டாக தனியாக ஒரு ஆண்டை அறிவித்திருக்கிறது ஐக்கிய நாடுகளின் சபை. மக்களிடமிருந்து எப்படியாவது மலைகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்கிற அவசியத்தின் விளைவாகவே இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது. மலைத் தொடர்களும், அவற்றின் அழகும் கம்பீரமும் நாள் கணக்கில் நின்று ரசிக்கத்தக்கவை. நீளமான கடற்கரையைப் போலவே, நீளமான மலைத் தொடர்களையும் கொண்ட சிறப்பு நமது தமிழகத்திற்கு உண்டு.

அழகும் வளமும் நிறைந்த ஏராளமான மலைப் பகுதிகளைப் பெற்றிருந்தாலும் அவற்றை எந்த அளவிற்குத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறோம் எனும் கேள்வி இன்று நம் முன்னே எழுந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டு வரை மலைகளையும், நிலப்பரப்புகளையும், கடல்களையும் காப்பாற்றியது ஒரு பெரிய காரியமே அல்ல. அது இயந்திரங்கள் இல்லாத காலம். இன்றைய காலமோ இயந்திரங்களின் காலம். மனிதகுலத்தின் நன்மைக்காகத் தான் இயந்திரங்கள் என்றாலும் அவை இயற்கைக்கு விரோதமாகவே பெரிதும் அரங்கேறி வருகின்றன.

தமிழகத்து மலைப்பகுதிகள் அனைத்தும் மிகவும் அடர்ந்த அல்லது ஓரளவு அடர்ந்த மரங்களைக் கொண்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. அடர்ந்து உயர்ந்த மரங்கள் நிறைந்த மலைப் பகுதிகளில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் வாழ்கின்றன. சிறு சிறு மலைக் காடுகளிலும் பல்வேறு வகையான விலங்குகள் வாழ்கின்றன. விலங்குகளுக்குச் சொந்தமானவை காடுகள். ஆனால் பல்வேறு விதங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவற்றின் வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. மலைப்பகுதிகளுக்கும் மனிதர்கள் புழங்கும் பகுதிகளுக்கும் இடையிலான மலையடிவாரப்பகுதி, மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருவதைத் தமிழகத்தின் பெரும்பாலான மலைப்பகுதிகளில் காணமுடிகிறது.

யானைகளின் காட்டிற்கும் மனிதர்களின் வயல்வெளிகளுக்கும் இடைவெளியின்றிப் போய்விட்டதன் விளைவாகவும் மலைப்பகுதிகளின் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை போன்றவற்றாலும் காட்டு விலங்குகள் - குறிப்பாக யானைகள் - காட்டைவிட்டு வெளியேறி வயல்வெளிகளைத் துவம்சம் செய்வதும் சில நேரங்களில் மின் கம்பிகளில் சிக்கி மாண்டு போவதும் நடந்து கொண்டிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கான மலையடிவாரப்பகுதிதான் அதிகமாகக் கவனம் செலுத்திப் பாதுகாக்க வேண்டிய, மரங்களையும் திட்டமிட்டு வளர்க்க வேண்டிய பகுதியாகும். ஆயினும், நமது மலையடிவாரங்களில் நடப்படும் மரங்களைவிட மலைப்பகுதிகளில் வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை அதிகம். இன்றைய இயந்திர உலகில் ஒரு மரம் இரண்டே நாளில் கதவாகவும், சன்னலாகவும் மாறி விடுகிறது. ஆனால் ஒரு விதையை மரமாக்க இயற்கை எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க நமக்கு நேரம் இருப்பதில்லை.

விளைய வைத்து அறுத்துக் கொள்ளும் அவகாசமும் திட்டமும் இல்லாமற் போய்விட்டதன் காரணமாகவே பலநூறு ஆண்டுகளாக விளைந்திருக்கும் காடுகளின் மீது நாம் கை வைக்க ஆரம்பித்து விட்டோம். மிகப் பெரிய மலைத் தொடர்களை நாம் பெற்றிருப்பது போல் தெரிந்தாலும் நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் போன்றவற்றின் மலைப்பகுதிகளை விட நமது மலைவளப் பகுதி குறைவானதே யாகும். தொலைநோக்குப் பார்வையில், இந்தக் குறைவான மலைப் பகுதிகளை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

குளிர் மலைப்பகுதிகளான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் வசதி மிக்கவர்கள் நிலம் வாங்கிப் போடும் வேகத்தைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் அப்பகுதிகள் மாளிகைகள் நிறைந்த மண் மேடுகளாகக் காட்சியளிக்குமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலாப் பயணிகள் வீசியெறியும் கூளங்களால் - குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் - மேற்குறிப்பிட்ட மலைப்பகுதிகள் மாசடைந்து வருகின்றன. தன்னார்வ அமைப்புகளும் அரசும் எவ்வளவோ முயன்று பணி செய்தும், மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் அதிக அளவு சென்றடைந்து கொண்டிருக்கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றிலும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களே அதிக அளவில் கரை ஒதுங்கியிருப்பதைக் காணலாம்.

காலங்காலமாக மலைக்காடுகளில் வாழ்ந்து வரும் மக்களால் மலைகளுக்கும் அதன் காடுகளுக்கும் எந்த இடையூறும் நேர்ந்ததில்லை. காராளக் கவுண்டர்கள், முடுகர்கள், சோளகர்கள், இருளர்கள், புலையர்கள் போன்ற மலைவாழ்ப் பழங்குடி மக்கள் தமிழகத்தின் பல்வேறு மலைப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்தின் எந்தச் சுவடும் இன்று வரை அவர்களுக்குத் தெரியாது என்பது கசப்பான உண்மையாகும். கோவை மாவட்டத்தின் அட்டுக்கல் மலைப்பகுதி இருளர்களையும், கல்கொத்தி மலைப்பகுதி முடுகர்களையும், திருமூர்த்தி மலைப்பகுதி புலையர்களையும், தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியின் தொங்கலூத்து, கலசப்பாடி, கருக்கம்பட்டி ஆகிய கிராமங்களின் காராளக் கவுண்டர்களையும் இவர்களைப் போன்ற இன்னும் பல்வேறு மலைவாழ் மக்களையும் பார்க்கிற எவருக்கும் இந்த உண்மை புரியவரும்.

தாம் வாழும் மலைகளே மலைவாழ் மக்களின் உலகமாக இருக்கிறது. பாறைகளும் மரங்களும் ஓடைகளுமாகப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட மலைமக்கள் அப்பகுதிகளுக்கு, கரட்டியூர் அம்மன் படுகை, கோம்புத்துறை, குமரிப்பாறை, தங்கவலச கருப்புசாமி கோயில், பூதநாச்சித் தேருமலை என்றெல்லாம் பெயர்களைச் சூட்டி தங்களுக்குள் அடையாளம் காட்டிக் குறிப்பிட்டு அங்கெல்லாம் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்தந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது, உலகின் தட்பவெப்ப நிலையைப் பாதுகாப்பது, அருகிக் கொண்டே வரும் வன உயிர்களைப் பாதுகாப்பது, வனங்களில் வாழ்ந்தே பழகிப் போன, வனங்களிலேயே வாழ விரும்புகிற மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பது, பல கோடிக்கணக்கான மரங்களைப் பாதுகாப்பது என்கிற கோணத்தில்தான் மலைகளைப் பாதுகாப்பது என்கிற ஐ.நா. சபையின் பிரகடனத்தை ஒவ்வோர் அரசும் ஒவ்வொரு மனிதனும் புரிந்துகொள்ள வேண்டும்.

- ஜெயபாஸ்கரன்

Pin It