கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர்நிலைகளை ஒட்டியும் இருக்கும், மரங்களில் இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும்.
மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே போவோம் அந்த ஒளியின் நிறத்தில். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தை சுற்றித் திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்கம். இரண்டுமே நம்மை ஆச்சரியத்தால் கட்டிப் போட்டுவிடும். விளக்கு பூச்சி விட்டு விட்டு வெளிச்சத்தை பீற்றி அடிக்கும். அதற்குப் பதில் சொல்வது போல கீழே கிடக்கும் மினுக்கும் வண்டும் அதற்கு ஈடாகவே விட்டு விட்டுப் பிரகாசிக்கும். நிஜமாலுமே அது உண்மைதான். ஆனால் காதல் தூதை முதலில் அனுப்புவர் பெண்ணேதான். பின்னர்தான் ஆண் பதிலுக்கு சம்மதம் தெரிவிப்பார். கீழே கிடக்கும் பெண் பூச்சியை மையம்/மையல் கொண்டுதான் மேலே பறக்கும் ஆண் பூச்சி ஒளியைத் தூதுவிடுகிறது தன் காதலுக்கு. அதற்கு எழுதப் படிக்க, பேசத் தெரியாதல்லவா? காதலுக்கு விழி வழி தான் பேச வேண்டுமா? ஒளி வழியும் கூட பேசலாமே, இணக்கம் தெரிவிக்கலாமே! அதனால் தனக்குத் தெரிந்த மொழியில் தூதுவிடுகிறது பூச்சி.. தன் இணைவுக்கு இணக்கமா என ஒளியால் கேட்கிறது பெண். ஒளியின் வழி மொழியிலேயே ஆணும் சம்மதம் தெரிவிக்கிறது.
இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மின்மினிக்களின் வாழ்க்கை இப்படித்தான். இவைகளின் அளவு 5 to 25 மி.மீ தான். (up to 1 inch).இவைகளில் 2000 வகைகள் உள்ளன. பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே சஞ்சரிக்கும், சிலவகை பகலிலும் வரும். ஆனால் இரவில் இருட்டில் சுற்றுபவர்களுக்குத்தானே விளக்கும், வெளிச்சமும் வேண்டும். அதனால்தான் இந்தப் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுமந்து கொண்டு, அது தரும் ஒளியில் ஆகாயத்தில் அழகாக, அற்புதமாய், தன்னைத் தானே மினுக்கி, மயக்கி வலம் வருகிறது. ஆண் பூச்சியின் மேல் தோல், வண்டின் தோல் போல கடினமாக இருக்கும். பெண்ணோ பரம சாது.. ரொம்ப மென்மையானவளும் கூட. அவளுக்கு தோல் கடினம் கிடையாது. பஞ்சு போல மென்மையாக இருக்கும். அது மட்டுமா, அவள் பறந்து ஓடிவிடாமல் இருக்க, அவளின் இறக்கை உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பெண் முதிர்ச்சி அடைந்துவிட்டால் அவள் தாய்மைப் பொறுப்பேற்க உணவு உண்ணமாட்டாள். அதற்காகவே பறப்பது ஆண் மட்டுமே. பெண்ணுக்கு அந்த விடுதலை இல்லை. அவளின் கரங்கள், பறக்கும் கரங்கள் வெட்டப்பட்டுவிட்டன இயற்கையால். அதிக பட்சம் பெண் பூச்சி ஒரு செடி/புல்லின் மேல் ஏறலாம். ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கால கதியில் ஒளியை விட்டு விட்டுப் பிரகாசிக்கும். பெண் சம்மதம் தெரிவித்த பின், இருவரும் இணை சேருவார்கள்.. பின்னர் இயற்கை நியதிப்படி பெண்மை கருவுரும். பின்னர் அங்கேயே கொஞ்ச நாள் கழித்து பெண், பாதுகாப்பாக முட்டைகளை ஈர மண்ணில் புதைத்து வைப்பாள். முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சுமார் ஒரு வருட காலம், இளம் பிள்ளையாய் சுற்றித் திரியும். கோடை வந்ததும்தான் அவர் இணை சேரும் பக்குவம் அடையும். பெண் இறக்கை இன்றியே காலம் கழிப்பாள்.
அது சரி.. இந்த வெளிச்சம் எப்படி என்கிறீர்களா? அந்த ஒளி மின்மினியின் உடலிலிருந்து உருவாகிறது. மின்மினிப் பூச்சிகள் இளம்பருவத்திலிருந்தே மினுக்கும் தன்மையவை. ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமும் அடங்கி இருக்கிறது. அதுதான் எப்படி இவை இந்த ஒளியால் இறந்து போகாமல் அதனூடேயே வாழ்கின்றன. பொதுவாக, ஒரு பொருள் ஒளிவிடும்போது, அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வரும். அதாவது ஒரு மின் விளக்கில் 90% வெப்பமும், 10% ஒளி மட்டுமே வரும். அப்படி என்றால் இந்த குட்டியூண்டு பூச்சி வெந்து கருகிவிடாதா? இங்கே அப்படி எல்லாம் நடப்பது இல்லை. மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி(cold light) /உயிர் ஒளி (Bioluminescence)என்றே அழைக்கப்படுகிறது. ஏன் தெரியுமா? அந்த ஒளியிலிருந்து இந்தப் பூச்சிகள் ஒரு மந்திரக் கோலை தன் வயிற்றில் வைத்துள்ளன. அதுதான் ஒளியைத் தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும், துளிக்கூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100% ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே..!
ஏனெனில் மின்மினியின் உடலிலிருந்து பார்வை ஒளியலைகள் (Visible light) மட்டுமே உருவாக்கப்படுகின்றன. புறஊதாக்கதிரோ, அகச்சிவப்பு கதிரோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. அது மட்டுமல்ல, அதன் வெப்ப அளவு, பூச்சி எவ்வளவு விரைவில் பிரகாசிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல இருக்கும். விரைவான காலகதி என்றால் வெப்ப அளவு அதிகம். இரு மினுக்குகளுக்கு இடையே, கொஞ்ச நேரம் அதிகமானால், ஒளியின் வெப்பம் கொஞ்சம் குறைவு. இந்த ரிதமால்தான் ஆண்கள் ஈர்க்கப்படுகின்றன. இணை தேட மட்டுமல்ல, சமயத்தில் இரை தேடவும், இந்தப் பூச்சிகள் ஒளியைத் தூண்டிலாகப் போடுகின்றன.
மின்மினியின் வயிற்றுப் பகுதியில் ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளிசெல்கள் (Photcytes) உள்ளன. இதில் லூசிபெரின் என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியில் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து (Trachea) ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது. பின் லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ்(Luciferase) என்ற நொதியினால் இணைந்து ஆக்சிலூசிபெரிலின் (oxyluciferin) என்ற பொருளாக மாறுகிறது. அப்போதே ஒளியையும் கக்குகிறது மின்மினியின் வயிற்று செல்கள்.
luciferin + ATP -------------> luciferyl adenylate + PPi
adenylate + O2 -------------> oxyluciferin +AMP + light
இந்த ஒளியின் அலை நீளம் 510 & 670 நானோ மீட்டர். இதன் நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பசு மஞ்சள், இளஞ்சிவப்பு பச்சை ஆகியவை.ஆனால் இதன் ஒளி விடும் கட்டுப்பாட்டை நிறுத்தி, ஓடச் (On -Off mechanism) செய்பவைகள் நரம்பு செல்கள் + ஆக்சிஜன் வரத்து மட்டுமே. அதன்கடை நிலை லூசிபெரேஸ் மட்டும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது. அதன் மரபணுவும் பிரிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அறிவியல் முன்னேறிய நிலையிலும், நம்மால் மின்மினி போன்ற ஒளியை உற்பத்தி செய்ய முடியவில்லை. லூசிபெரின் உருவாக்கம் இன்னும் முழுமையாய் விஞ்ஞானிகளுக்குப் பிடிபடவில்லை.
முடிவாக ஒரு வரலாற்றுத் தகவல்:
முதல் உலகப்போர் நடந்த காலத்தில், இராணுவ முகாம்களில், மின் விளக்கு வசதி கிடையாது. அப்போது காயம் பட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும், லாந்தர் விளக்கில் மின்மினியைப் பிடித்துப் போட்டு வைத்துக் கொண்டு, சிகிச்சை செய்தனராம். அது போல, இராணுவ வீரர்கள் கடிதம் படிக்க மின்மினியின் உலர்ந்த உடலைப் பொடி செய்து, அதில் உமிழ் நீர் உமிழ்ந்து, கலந்து அதன் ஒளியில் படித்தனராம். இப்போதும் கூட, ஆதிவாசிகளின் இல்லங்களில் இரவில் மின்மினி விளக்குகள்தான் கண்ணாடி பெட்டியில்/லாந்தரில். பழங்கால சீனர்களும், மின்மினியை கண்ணாடி பாட்டிலில் அடைத்து வெளிச்சம் தர பயன்படுத்தினர்.
- விவரங்கள்
- அ.மு.அம்சா
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மேற்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு பகுதியான ஆனைமலைத் தொடரில், அடர்ந்த மழைக் காடுகள் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த மானாம்பள்ளி என்ற கானகப் பகுதிக்கு இயற்கை அன்பர்கள் குழு, இரு நாட்கள் பயணமாக காட்டுயிர் ஆசிரியர் திரு முகமது அலி அவர்களின் தலைமையில், இயற்கை வரலாறு அறகட்டளையின் தலைவர் டாக்டர் வசந்த் ஆல்வா அவர்களின் ஏற்பாட்டின் பேரில், பௌர்ணமி நிலவு கானக கூட்டத்திற்காக, காலை நேரத்தில் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டோம்.
சுற்று சுழல் பற்றி மக்களிடம் உள்ள விழிப்புணர்வு,சுழல்மாசுபடுவதில் உள்ள பண்பாட்டு சீரழிவு,சுழல்பாதிக்கபடுவதில் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்க மக்களை விட ஏழைகளால் பாதிப்பு குறைவு பற்றியும்,அவை சார்ந்த அனுபவங்களை, ஆழமான பார்வையில் - தமிழ்நாட்டில் சமூகம் சார்ந்த காட்டுயிர் ஆய்வில் முதன்மையானவரும்,காட்டுயிர் இதழ் ஆசிரிருமான திரு முகமது அலி அவர்களின் அறிவு சார்ந்த பேச்சின் ஊடே பயணம் களை கட்டியது.
இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட வால்பாறை சரகத்தை நோக்கி நகர்ந்த பொழுது, வால்பாறை மலைக்காடுகளால் சூழப்பட்ட பகுதி அல்ல -தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட, மழைக்காடுகள் அமைந்த பகுதியாகதான் எங்கள் கண்களில்பட்டது. ஏனென்றால் "எங்கெங்கு காணினும் தேயிலை தோட்டங்களே" இருந்தன. "யானைகள் அட்டகாசம்", "யானைகள் ஊருக்குள் புகுந்தன", போன்ற செய்திகள் எவ்வளவு அறியாமைமிக்கது என்பதை இந்த தேயிலை தோட்டங்ககளை பார்க்கும் பொழுது எங்களால் உணர முடிந்தது.காடுகள் சிறுத்தும், தோட்டங்கள் பெருத்தும், இருப்பதால் வன விலங்குகள் குறைந்தும், அழிந்தும், தப்பி பிழைத்த உயிர் இனங்கள் குறிப்பாக யானைகள் உணவிற்காகவும், குடிநீருக்காகவும் எங்கு செல்லும்? அவை சார்ந்த பிரச்சனைகளை அசை போட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது.
பல அரிய தாவரங்கள் மற்றும் விலங்குகளை தன்னகத்தே கொண்ட இப்பகுதில் சில வகை மரங்களையும் பறவை இனங்களையும் கண்டு களித்துடன் அதன் சிறப்புகளை பற்றி ஆசிரியரிடம் கேட்டோம். குறிப்பாக தாகை செடிகள் (fern) எனப்படும் பெரணிகள் டைனோசர் காலத்தில் இருந்து இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு உயரமான கோங்கு மரத்தின் அடியில் நின்று கொண்டு உரை ஆற்றியது எங்களது அறிவுக்கு பரவசத்தை ஊட்டியது. மேலும் பெரணிகளை(fern) ஆனைமலை காடுகளில் இருந்துதான் நீலகிரி காடுகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது பற்றி ஆசிரியர் கூறிய விதம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.
மானாம்பள்ளி ஆற்றங்கரையோர கானக விடுதிக்கு,அந்தி சாயும் நேரத்தில் வந்து சேர்ந்தோம். பறவைகளின் ஒலிகளும், கானகத்து பூச்சிகளின் ஒலிகளும் மனதை இரம்மியமாக்கியது. ஆற்றங்கரையின் மேல் பகுதியில் வட்டமிட்டு அமர்ந்து காட்டுயிர் அன்பர்களின் அறிமுக கூட்டம் ஆரம்பித்தது. இயற்கை பாதுகாப்பு, இயற்கையை அறிந்து கொள்ளுதல், மட்டுமின்றி இயற்கையை இரசிக்கவும் கற்று கொள்ள வேண்டும் எனத் தொடங்கி இயற்கை வரலாற்று அறகட்டளையின் எதிர்கால திட்டங்கள்,அதற்கான அன்பர்களின் பங்களிப்பு, அவரவர் வாழ்வியலில் நடைமுறை பழக்க வழக்கங்கள், காட்டிற்குள் செல்லும் போது பின்பற்ற வேண்டிய அம்சம்கள் பற்றி விரிவாக பேசப்பட்டது.
இரவு சூழ்ந்தது, நிலவு வெளிச்சம் இரவை பனி படர்ந்த பகலாக மாற்றியது. நிலவொளியில் எங்களது அறிவு பயணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கானகத்து ஒலிகளில், 'சிள்' வண்டுகளின் சத்தம் திடீரென்று நின்றது, அனைவரும் அமைதியானோம். எங்கோ ஓரிடத்தில் மந்தியின் குரல் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. ஆற்றில் நீரின் சலசலப்பு கேட்டது. அனைவரும் காதுகளை கூர்மையாக்கினோம். ஆற்றங்கரை யின் எதிர் திசையில் இருந்து கடா மானின் சத்தம், அக்கானகத்தின் குறிப்பிட்ட தூரம் வரை எதிரொலித்தது, சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தது. நாங்கள் பரவசம் அடைந்தோம்.அனைவரும் ஆசிரியரின் முகத்தை நோக்கினோம். "நன்றாக கவனியுங்கள்" என்று கூறி ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கி காட்டினார்.
மரம் அறுப்பதைப் போன்ற ஒரு விதச் சத்தம் சில நிமிடங்கள் நீடித்தது. 'சிறுத்தை' என மெல்லிய குரலில் ஆசிரியர் கூறியதும், அனைவரது உடலிலும் மின்சாரம் பாய்வது போல பரவசமும், பயம் கலந்த மகிழ்சியும் உண்டாயிற்று.
சிறுத்தை தன் உணவு வேட்டைக்காக கடாமானை(Sambar(deer)குறி வைத்து நகர்ந்து செல்லும் இந்நிகழ்ச்சி- எங்களது அருகில் நடக்கும் இச் சம்பவம் சில மணித்துளிகள் நீடித்தது. அற்புதமான இச்சம்பவம் எங்களது கானக பயணத்தின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. வெகு நேரம் கழித்து இம்மகிழ்ச்சிலே உறங்கபோனோம்.
அதிகாலை ஆற்றங்கரையில் சிறுத்தையின் காலடி தடத்தைப்பார்த்து மகிழ்ந்து,இரசித்து,அதே இடத்தில இயற்கை கேள்வி-பதில் நிகழ்ச்சியை காட்டுயிர்ஆசிரியர் நடத்தினார்.
பூனை குடும்பத்தில் புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன் கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை, மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது.சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள் ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட மூல காரணம்.மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடிக்கும் என நம்பபடுகிறது. இந்நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும் என காட்டுயிர் ஆசிரியரிடம் கேட்டோம். நம் மக்கள் அனைவரும் இயற்கையை அறிவியல் ரீதியாக அறிந்து கொண்டு, உயிர் இலக்கணத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வருத்தத்துடன் சொல்லி முடித்தார். மக்கள் அறிந்து,புரிந்து கொள்ளும் காலத்தை அளந்து பார்த்தால்- சிறுத்தை என்ற சொல் இருக்கும் சிறுத்தை இருக்காது.
பயணம் முடிந்தது, கானகத்தை விட்டு வெளியேறி, நாங்கள் வால்பாறை சரகத்தை விட்டு கடக்கும் பொழுது, மனம் தளர்ந்து, ஒரு விதச் சோகத்துடனே பொள்ளாச்சி திரும்பினோம். இனி எதிர் காலத்தில் இதுப் போன்ற மிச்சம் மீதி இருக்கின்ற கானக செல்வங்களையும் காப்பாற்ற முடியுமா? பாதுகாக்க முடியுமா? அடுத்த தலைமுறை இதை அனுபவிக்க முடியுமா? அல்லது நாம் தான் அடுத்த முறையும் இதை காண முடியுமா? என்ற ஏக்கத்துடன் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் கையசைத்து கலைந்து போனோம்!!!
அ.மு.அம்சா (
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கூந்தங்குளம், வேடந்தாங்கல் போன்ற பெரிய சரணாலயங்களில் மட்டுமின்றி கொல்லுக்குடிப்பட்டி, கரிக்கிளி உள்ளிட்ட கிராம மக்களும் பறவைகளை ஆழ்ந்து நேசிக்கின்றனர். இயற்கையும், பறவைகளும் நமக்கு உதவுவதை நன்கு உணர்ந்துள்ள இம்மக்கள், பறவைகளுக்கு இணக்கமாகச் செயல்படுவதைப் பார்க்கும்போது மனம் நெகிழ்கிறது. சகஜீவனை புரிந்து கொண்ட உணர்வு மேலோங்குகிறது.
இயற்கையை சுரண்டாமல் பாதுகாப்பது, நீர்நிலைகளைப் பாதுகாப்பது போன்ற பாரம்பரிய பழக்கங்கள் நம்மிடம் ஓங்கி இருந்ததையே மேற்கண்ட கிராமங்கள் உணர்த்துகின்றன. நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய பண்டைத் தமிழர்கள் அங்குள்ள பல்லுயிரியத்தை காப்பதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.
நவீன வசதிகள் வளர்ந்துவிட்டபோதும், இந்த மக்களின் மனது பெருமளவு மாறவில்லை என்பதையே இந்த நேசம் உணர்த்துகிறது.
மேற்கண்ட சரணாலயங்கள் அமைந்துள்ள கிராம மக்களின் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளால்தான் சரணாலயங்களும், அங்கு வரும் பறவைகளும் பாதுகாப்பாக உள்ளன. உள்ளூர் மக்கள் மனம் மாறிவிட்டால், இயற்கை பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.
இந்தப் பாரம்பரியத்தை வேடந்தாங்கல், மேற்கு வங்கத்தில் உள்ள ஜாக்யநகரில் பார்க்க முடிகிறது. உள்ளூர் மக்களே பறவைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, பறவைகள் அவர்களோடு இணக்கமாக வாழ்வதை கூந்தங்குளம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் பார்க்க முடிகிறது.
“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழும். பறவைகள் இன்றி மனிதர்கள் வாழ முடியாது.” --- சாலிம் அலி.
தமிழக பறவை சரணாலயங்கள் - முக்கிய விபரங்கள்
சரணாலயம் |
மாவட்டம் |
பரப்பு ஹெக்டேர் |
ஆண்டு |
1. வேடந்தாங்கல் |
காஞ்சிபுரம் |
30 |
1836 |
2. வேட்டங்குடி |
சிவகங்கை |
38 |
1977 |
3. கரிக்கிளி |
காஞ்சிபுரம் |
61 |
1989 |
4. பழவேற்காடு |
திருவள்ளூர் |
46,102 |
1980 |
5. கஞ்சிரங்குளம் |
ராமநாதபுரம் |
104 |
1989 |
6. சித்ரங்குடி |
ராமநாதபுரம் |
48 |
1989 |
7. உதயமார்த்தாண்டம் |
திருவாரூர் |
45 |
1991 |
8. வடுவூர் |
தஞ்சாவூர் |
128 |
1991 |
9. கரைவெட்டி |
பெரம்பலூர் |
280 |
1997 |
10. வெள்ளோடு |
ஈரோடு |
77 |
1997 |
11. மேல்செல்வனூர் கீழ்செல்வனூர் |
ராமநாதபுரம் |
593 |
1998 |
12. கூந்தங்குளம் |
திருநெல்வேலி |
129 |
1994 |
- விவரங்கள்
- ஆதி வள்ளியப்பன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சிட்டுக்குருவிகள்
எங்கள் வீட்டுக்கு வருவதை
நிறுத்திவிட்டன
- ஆதி வள்ளியப்பன்
(மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் நாள்)
சில ஆண்டுகளுக்கு முன் சென்னை பறவை நோக்கும் பந்தயத்தில் (Bird Race) பங்கேற்றபோது, சென்னையில் வாழும் பறவை வகைகளை கணக்கெடுக்கும் வேலையில் நானும் சில நண்பர்களும் ஈடுபட்டிருந்தோம். ஒரே நாளில் காலையில் இருந்து மாலை ஆறு மணிக்குள் எத்தனை வகை பறவைகளை குறிப்பிட்ட எல்லை பரப்புக்குள் பதிவு செய்கிறோம் என்பதே அந்தப் போட்டி. கிட்டத்தட்ட 49 பறவைகளைப் பார்த்துவிட்டோம். “கவலைப்படாதீர்கள் இன்னும் ஒரு பறவைதானே, போட்டியின் இறுதி நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் சிட்டுக்குருவியை பார்த்துவிட்டால் 50 ஆகிவிடும்” என்று நம்பிக்கையுடன் கூறினார், எங்களை வழிநடத்திச் சென்ற ரயில்வே துறையில் பணிபுரிந்து வரும் பறவை ஆர்வலர் ஜெயசங்கர். காக்கை போன்ற சாதாரண பறவைகளை காலையில் புறப்பட்ட உடனே பார்த்துவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கும் இடமெல்லாம் படபடவென்று இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை அன்றைக்கு தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
அதிர்ஷ்டவசமாக நான் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த மந்தைவெளி ராஜா தெருவுக்கு அருகேயிருந்த ராஜா கிராமணி தோட்டம் என்ற சிறிய சந்தில் அப்போது 10 - 12 சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன. அந்த சிறிய சந்துப் பகுதி சாதாரண, எளிய மக்கள் வாழும் பகுதி. இப்படியாக சென்னையில் சில பகுதிகளில் இன்னமும் சிட்டுக்குருவிகள் எஞ்சி இருக்கின்றன.
சிட்டுக்குருவிகள் குறித்த எனது ஞாபகங்கள் மனதின் ஓரத்தில் எப்போதும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன. முழுக்க முழுக்க நகரத்திலேயே வாழ்ந்த எனக்கு, சிட்டுக்குருவி மனதுக்கு மிகவும் நெருக்கமான பறவை என்று சொல்லலாம். சிட்டுக்குருவிகள் குறித்த எனது நினைவுகள் மிகவும் சிறிய வயதிலேயே தொடங்கிவிட்டன. திருச்சி தில்லைநகர் ராம் நகர் காலனியில் நான் வளர்ந்த 80களின் தொடக்கத்தில், எங்கள் வீட்டு கம்பி ஜன்னல் வழியாக தினசரி உள்ளே பறந்து வந்து, எங்களது வீட்டுப் பரணில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள், இதர பொருள்களுக்கு இடையே வைக்கோலால் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்தது ஒரு சிட்டுக்குருவி குடும்பம். அதே வீட்டின் மற்றொரு பிரிவில் இருந்த மின்பெட்டி இடைவெளியில் பல சிட்டுக்குருவிகள் கூடமைத்து, குஞ்சு பொரித்து சந்தோஷமாக வாழ்ந்துள்ளன. அந்த நேரத்தில் என் தம்பி பிறந்திருந்தான் என்பதால், அந்த சிட்டுக்குருவிகள் என் ஞாபக அடுக்குகளில் ஆழமாக பதிந்துவிட்டன.
1980களின் இறுதியில் திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியில் நாங்கள் குடியேறியிருந்தோம். அந்த வீட்டில் காற்று வருவதற்காக அறையின் மேற்பகுதியில் விடப்பட்டிருந்த வென்டிலேட்டர் செவ்வக ஓட்டை வழியாக உள்ளே வந்த ஒரு சிட்டுக்குருவி ஜோடி, உள்அறையின் மேற்பகுதியில் அதேபோல இருந்த மற்றொரு செவ்வக வடிவ ஓட்டை பகுதியில் வைக்கோல் வைத்து கூடு கட்டியது. உள் வெண்டிலேட்டரில் அவை கூடு கட்டியதற்குக் காரணம், எதிரிகளிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் அந்தக் குருவிகளுக்கு தைரியம் சற்று அதிகமாத்தான் இருந்திருக்க வேண்டும். அவையும் பிறக்கப் போகும் அவற்றின் குஞ்சுகளும் ஒரு சில செ.மீ. நகர்ந்தாலும் கீழே விழுந்துவிடக் கூடிய நிலைமையிலும், தைரியமாக கூடு கட்டி வாழ்ந்தன. ஏனென்றால் அவ்வளவு குறைவான இடம்தான் அங்கே இருந்தது. வென்டிலேட்டர் துளை வழியாக தினசரி அவை உள்ளே வந்து, கூட்டுக்குப் போவதற்கு இடையில் எங்கள் வீட்டு மின்விசிறி இருந்தது. எங்கள் குடும்பத்தில் குருவிகள் வரும் நேரத்தில் மின்விசிறியை போடாமலிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். எதிர்பாராத ஒரு நாளில் மாலை, இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் மின்விசிறி வேகமாகச் சுழன்று கொண்டிருந்தபோது உள்ளே பறந்து வந்த தாய்க் குருவி, மின்விசிறியின் வேகத்தை கணிக்காமல் அடிபட்டு சிதறிவிட்டது. எங்களுக்கு அது மிகப் பெரிய வருத்தத்தைத் தந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை. எங்கள் வீட்டுக்குள் கூடமைத்த கடைசி சிட்டுக்குருவி அதுதான். அதற்குப் பிறகு சிட்டுக் குருவிகள் எங்கள் வீட்டுக்குள் வரவில்லை.
சிட்டுக்குருவி (House sparrow, Passer domesticus)
சிட்டுக்குருவி 15 செ.மீ நீளம் கொண்டது. ஊர்க்குருவி என்றும் இதை அழைப்பது உண்டு. முன்பு நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்பட்டது. ஆணின் தலை, பிடரி, முதுகு, வால்மேல் போர்வை இறகுககள் பழுப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறம். மேல் முதுகும் இறக்கைகளும் கரும்பழுப்புக் கோடுகள் கொண்ட செம்பழுப்பு நிறம். பெண், சாம்பல் தோய்ந்த உடலின் மேற்பகுதியில் மஞ்சள் தோய்ந்த பழுப்புக் கோடுகளைக் கொண்டது.
இனப்பெருக்கக் பருவத்தில் ஜோடியாகத் திரியும். இது பின்னர் குழுவாக ட்சிஇ, இட்சி, ட்சிஇ எனக் குரல்கொடுத்தபடி பெருங்கூட்டமாக பறக்கும். தானியங்கள், புழு பூச்சிகள், முளைகள், மலர் அரும்புகள், தேன், இளந்துளிர், வீட்டு புறக்கடை கழிவுகள் உள்ளிட்டவற்றை உண்ணும். நீலகிரியில் இப்போது பரவலாகக் காணப்படும் இது, அண்மைக் காலம் வரை 1000 மீ. உயரத்துக்கு மேல் மலைப்பகுதிகளில் காணப்பட்டதில்லை. அதற்குக் கீழ் பகுதிகளில்தான் வசித்து வந்தது.
உணவுப் பழக்கத்தை போலவே கூடுகட்டுவதிலும் வரையறை ஏதுமின்றி வீட்டுக் கூரை, சுவரில் உள்ள பொந்து, கிணற்றின் இடுக்குகள் (பல முறை நேரில் பார்த்திருக்கிறேன்) என வசதியுள்ள இடங்களில் புல், வைக்கோல், குப்பைக் கூளம், பஞ்சு கொண்டு 3, 5 முட்டைகள் வரை இடும். சிட்டுக்குருவி அடுத்தடுத்து இனப்பெருக்கம் செய்யும், இடைவெளி ஏதுமில்லை.
நம்மால் வீட்டு விலங்காக ஊருக்குள் அழைத்து வரப்படாத உயிரினங்களில் ஒன்று சிட்டுக்குருவி. வாழ உகந்த சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் பல உயிரினங்கள் காட்டிலிருந்து ஊருக்குள் இடம்பெயரும். “குருவிக் கூட்டை கலைப்பது பாவம்” என்று கருதி அவற்றை தொந்தரவு செய்யாமல் இருந்த பண்பு நம் சமூகத்தில் இருந்தது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே அறிமுகமாகும் சிட்டுக்குருவிகள் நம்முடைய சினிமா பாடல்கள், குழந்தை பாடல்கள், கவிதைகள், கதைகள் என பல்வேறு வகைகளில் பதிவு பெற்றுள்ளன. இப்படி நம்மோடு ஒன்றறக் கலந்து வாழ்ந்து வந்த சிட்டுக்குருவி இனம், மனிதர்களின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் - தொழில்நுட்பம் காரணமாக அழிவை நோக்கி சென்று வருகிறது. சிட்டுக்குருவிகளின் அழிவு என்பது, உண்மையிலேயே பயங்கரமான நிலைக்குச் செல்லாதபோதும், அந்த அழிவு சிறியதாக இருக்கும்பட்சத்திலும்கூட, அது சுற்றுச்சூழல் சீரழிவின் மிக முக்கியமான சுட்டிக்காட்டி என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இப்படிப்பட்ட எச்சரிக்கை சமிக்ஞைகளை புறக்கணிப்பது நமது சூழல் மேலும் சீரழியவும், நமது ஆரோக்கியம் மேலும் மோசமடையவுமே வழிவகுக்கும்.
சிட்டுக்குருவிகளின் அழிவுக்குக் காரணமாகக் கருதப்படும் பல்வேறு காரணங்களை நோக்கும்போது இது நமக்குத் தெளிவாகப் புரியும். சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான மிக முக்கிய காரணமாக செல்ஃபோன் அலைகள் என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இதை நிரூபிப்பதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம், ஆய்வு இல்லை. பிரிட்டனில் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்ஃபோன் அலைகள்தான் காரணம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் ஏதுமற்ற நிலையில், அதே காரணம் அப்படியே இங்கே பொருந்தும் என்று கூற முடியாது. ஆனால், குருவிகளின் அழிவுக்குக் கூறப்படும் மற்ற காரணங்கள் முக்கியமானவை. தீப்பெட்டிகளை அடுக்கியது போன்ற வெளிக்காற்று உள்ளே புக முடியாத ஏ.சி. பொருத்தப்பட்ட வீடுகள், கட்டடங்கள் கண்ணாடி, அலுமினியம் பதிக்கப்பட்டு முற்றிலுமாக மூடப்படுகின்றன. இதனால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போகிறது.
மேலும் செடிகள், பயிர்களின் மீது பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பூச்சிகள், சிறு புழுக்கள் இறந்துவிடுகின்றன. சிறு புழுக்கள்தான், முதல் 15 நாளைக்கு குஞ்சுகளின் முக்கிய உணவு. அது இல்லாவிட்டால், குஞ்சுகள் வளர்வது தடைபடும். மேலும் பயிர்களின் மீது பூச்சிக் கொல்லிகள் தெளிப்பதால் தானியங்கள் நஞ்சாகிவிடுகின்றன. இதுவும் சிட்டுக்குருவிகளை பாதிக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள "மீதைல் நைட்ரேட்" என்ற மாசுப் புகை சிட்டுக்குருவிகளின் உணவான பூச்சிகளைக் கொல்கிறது என்றொரு தகவலும் உண்டு.
முன்னைப் போல இல்லாமல் தானியங்கள் சாக்கு மூட்டைகளுக்கு பதிலாக, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனால் தானியங்கள் எங்குமே சிதற வாய்ப்பில்லை. முன்பெல்லாம் லாரியில் நெல், தானியங்கள் ஏற்றப்பட்டு அவை செல்லும் வழியெல்லாம் சிறிதளவு தானியம் சிதறிக் கொண்டே போகும். இவற்றை பறவைகள் கொத்திக் கொண்டிருக்கும். திருச்சி காந்தி மார்கெட் போன்ற பகுதிகளில் தானியங்கள் சிதறிக் கிடக்கும் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை அதிகமாகப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைக்கு இந்த நடைமுறைகள் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டதால், சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைப்பது தடைபட்டு விட்டது. இப்படியாக நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை உணர முடிகிறது. ஆனால் இதை நிரூபிப்பதற்குத் தேவையான அறிவியல் ஆதாரங்கள், ஆராய்ச்சிகள் தற்போது இல்லை. இதை விரிவாக நடத்த வேண்டி உள்ளது. அதேநேரம் கிராமப் பகுதிகளில் சிட்டுக்குருவிகள் குறையவில்லை என்பதை மூத்த பறவை ஆர்வலர் க.ரத்னமும், வாழ உகந்த இடங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறையவில்லை என்பதை பறவை ஆராய்ச்சியாளர் எஸ்.கோபி சுந்தர் போன்றோரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
முந்தைய தலைமுறையினர் சிட்டுக்குருவிகளையோ, அவை கூடுகட்டுவதையோ தொந்தரவாக நினைக்காமல் இருந்தனர். அவர்களது வாழ்க்கை நடைமுறைகளும் அவற்றுக்கு உதவும் வகையிலேயே இருந்தன. வீட்டில் உலை வைக்க இருந்த கொஞ்சம் அரிசியையும் சிட்டுக்குருவிகளுக்கு போட்டதற்காக செல்லம்மாவிடம் பாரதியார் திட்டு வாங்கியிருக்கிறார். தனக்குப் பிரியமான சிட்டுக்குருவிகளை, தனது பாடல்களிலும் பாரதியார் பல முறை குறிப்பிட்டுள்ளார். மஞ்சள்தொண்டை சிட்டுக்குருவியை ஆசையாக விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பின், அந்தக் குருவியின் நிறம் வித்தியாசமாக இருந்தது சாலிம் அலியின் மனதில் கேள்வியை எழுப்பியது. அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து சென்ற சாலிம் அலி, உலகின் மிக முக்கியமான பறவையியலாளர் ஆனார். இப்படி மேதைகளின் வாழ்க்கையிலும் சிட்டுக்குருவிகள் முக்கிய பங்காற்றியுள்ளன.
இன்றைய தலைமுறையோ சிட்டுக்குருவிகள் என்றொரு உயிரினம் தங்களிடையே வாழ்ந்தது என்பது பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் இருக்கின்றனர். சென்னை புத்தகக் கண்காட்சியில் பூவுலகின் நண்பர்கள் அரங்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கைவிடப்பட்ட தூக்கணாங்குருவிக் கூடுகளை எடுத்து வந்து மாட்டியிருந்தோம். அதைப் பார்த்த பெரும்பாலான குழந்தைகள், அது என்னவென்று விசாரித்தனர். குழந்தைகளுக்கு இயல்பாகவே புதிய விஷயங்களை, உயிரினங்களை, அவற்றின் பழக்கவழக்கங்களை அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த ஆர்வத்தை வளர்க்க பெற்றோர்கள், ஆசிரியர்கள் தவறிவிடுகிறார்கள்.
யானை, புலி போன்ற பெரிய உயிரினங்களின் அழிவு மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தாவிட்டாலும்கூட, சமூகத்தின் மத்தியில் சிறிய அதிர்வுகளையாவது ஏற்படுத்துகிறது. ஆனால் சிட்டுக்குருவிகள் போன்ற நமது சுற்றுச்சூழலின் நலனை சுட்டிக்காட்டுகிற சிறுபறவைகளின் அழிவு நமது சமூகத்தில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை.
எப்படியோ, சிட்டுக்குருவிகளின் அழிவு அதல பாதாளத்துக்குச் செல்லவில்லை என்பது நிஜம். ஆனால் தமிழகத்தில், இந்தியாவில் ஏற்கெனவே தொடங்கிவிட்ட சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, அந்த இனத்தின் வீழ்ச்சி மட்டுமல்ல; நமது சூழல் வாழத் தகுதியற்றதாக மாறி வருவதன் முக்கியமான அறிகுறி. இதை கவனிக்கத் தவறுவதும், புறக்கணிப்பதும், நாளை நமது ஆரோக்கியத்தை, உடல்நலத்தை, வாழ் சூழலை, பூவுலகை முற்றிலும் சீரழிப்பதாக மாறிவிடக் கூடும். இன்றைக்கு சிட்டுக்குருவி, நாளை மனிதன்; இதுவே சிட்டுக்குருவி இனத்தின் அழிவு நமக்கு மறைமுகமாக உணர்த்தும் செய்தி. சிட்டுக்குருவிகளின் பாதுகாப்பு, விழிப்புணர்வுக்காக உலக சிட்டுக்குருவிகள் நாள் மார்ச் 20ந் தேதி அனுசரிக்கப்படுகிறது.
சிட்டுக்குருவிகளை காக்க நாம் என்ன செய்யலாம்?
உள்ளூர் தாவரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். அதுதான் இயற்கையான சூழல் சமநிலையை பாதுகாக்கிறது. பூச்சிக்கொல்லிகள், வேதி உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். இவை நுண்ணுயிரிகள், நன்மை செய்யும் பூச்சிகள், புழுக்களை அழிக்கின்றன. சிட்டுக்குருவிகளை இது பாதிக்கிறது.
எளிதில் வளரக் கூடிய வெளிநாட்டுத் தாவரங்கள் பசுமை பாலைவனங்களையே உருவாக்குகின்றன. இவை உள்நாட்டு உயிரினங்களுக்கு உணவையோ, மற்ற சூழல் கைமாறுகளையோ செய்வதில்லை. எனவே, பராமரிக்க எளிதாக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை வளர்ப்பது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.
சிட்டுக்குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு உணவு அளிக்கலாம். தானியங்களை மட்டுமே அளிக்க வேண்டும். உப்பும் எண்ணெயும் மிகுந்த, மக்கிய, மீதமான உணவுப் பொருள்களை கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். கம்பு, அரிசி, கோதுமை போன்றவற்றை தரலாம். வெயில் காலங்களில் தண்ணீர் வைக்கலாம்.
கட்டடங்களில் பறவைகள் கூடு கட்ட வசதியாக இடம் விட்டு கட்டலாம். ஒரு சிறிய அட்டைப்பெட்டியில் சிட்டுக்குருவி நுழையும் அளவுக்கு ஓட்டையிட்டு, எதிரிகள் அணுகாத உயரத்தில் வைத்துவிட்டால், அதுவே அவற்றின் வீடாகிவிடும்.
சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பு - நீங்களும் பங்கேற்கலாம்
சிட்டுக்குருவிகளை முறைப்படி பாதுகாக்கும் நோக்கத்தோடு, இந்த சிட்டுக்குருவிகள் தினத்தில் நாடு முழுவதும் அவற்றை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இதில் நீங்களும் பங்கேற்கலாம். தொடர்புக்கு: www.citizensparrow.in இந்த முன்முயற்சியை பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகமும், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகமும் இணைந்து முன்னெடுத்துள்ளன. எளிமையான சில கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் சிட்டுக்குருவிகளை அழிவில் இருந்து காப்பாற்ற நீங்களும் பங்களிக்க முடியும்.
தமிழக சிட்டுக்குருவிகள் பற்றி ஆவணப் பட இயக்குநர் கோவை சதாசிவம் அருமையானதொரு ஆவணப் படத்தை “சிட்டு” என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார். தொடர்புக்கு: 99650 75221. இந்த சிட்டுக்குருவிகள் தினத்துக்கு சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் பல்வேறு போட்டிகள், நிகழ்ச்சிகளை நடத்துகிறது. தொடர்புக்கு: 94440 49492,
(நன்றி: அறிவியல்பூர்வமான தகவல்களின் அவசியத்தை வலியுறுத்தி, உடனடியாக அவற்றை தந்த எழுத்தாளரும் காட்டுயிர் ஆராய்ச்சியாளருமான ப.செகநாதனுக்கு)
- ஆதி வள்ளியப்பன் (
- வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள்
- பறவை நோக்குதல்
- நாராய் நாராய்...
- துருவப் பகுதியில் உயிரினங்கள்
- விலங்குகளும் வண்ணங்களும்
- உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!
- பாவோபாப் - ஓர் அதிசய மரம்
- மணம் வீசும் பொருள் தரும் கஸ்தூரிமான்
- நிற்பதுவே… நடப்பதுவே… பறப்பதுவே…
- காட்டுக்குள் நடை பயணம்
- நீலகிரியின் நிலை....
- காட்டைப் பிளக்கும் சாலைகள் நிகழ்த்தும் கொடூரக் கொலைகள்
- நான், நீ, நாம் - இது பாக்டீரியா மொழி
- காட்டுயிர்களும் மூடநம்பிக்கைகளும்
- கானமயில்
- மயில்களை கொல்ல வேண்டாம்
- இலவங்கப் பட்டை - சில தகவல்கள்
- மாயமாகும் மயில்களின் உலகம்
- வாரணம் ஆயிரம்; வழி செய்வோம்
- இயற்கை கொடுத்த வரம்