கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
கடந்த 2015 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஒன்றிணைந்து, புதைபடிவ எரிபொருள் தேவையைக் குறைப்பது குறித்தும், பசுமை இல்ல வாயுக்கள் (greenhouse gases) வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது குறித்தும், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒன்றுகூடி பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் (Paris Climate Accord) கையெழுத்திட்டார்கள்.
உலகளவில் கரியமில வாயு (CO2) அதிக அளவில் வெளியேற்றும் நாடுகளாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனா (27.53%) முதல் இடத்திலும், முதலாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட அமெரிக்கா (14.81%) இரண்டாவது இடத்திலும், இதையடுத்து பொருளாதாரம் எந்த இடத்தில் இருக்கிறது என்பதே தெரியாத இந்தியா (7.26%) மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. பெருவாரியான நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் அமெரிக்க அதிரடியாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ஆம் ஆண்டில் வெளியேறியது.
ஐநா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் அமெரிக்க அதிபர் அதைப் புறக்கணித்தார். "எங்களுக்கு, எங்கள் நாட்டில் உள்ள பென்சில்வேனியாவில் இருக்கும் தொழிலாளர்களின் வேலை தான் முக்கியம். பாரிஸ் ஒப்பந்தம் முக்கியமல்ல" என்று அமெரிக்காவின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார். அப்போது அமெரிக்காவுக்கு உள்ளேயே அவருக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அவர் மீது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
மின்சார கனரக வாகனங்கள்:
நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பது கரியமில வாயுவை வெளியிடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்து போன்றவைகள் இதற்கு அடுத்த நிலையில் இடம் பெறுகின்றன. உலக அளவில் இயங்கும் வாகனங்களில் 97% போக்குவரத்து புதைபடிவ எரிபொருள் மூலமாகவே நடைபெறுகிறது. புதைபடிவ எரிபொருளுக்கு மாற்று சக்தியாக மின்சார ஆற்றலை பயன்படுத்தி இயங்கும் வாகனங்கள் பரவலாக வரத் தொடங்கி விட்டன. தற்சமயம் பயன்பாட்டில் இருப்பது ஏனோ நான்கு பேர் அமர்ந்து செல்லும் பயணிகள் வாகனம் மட்டுமே. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலும் ஓட்டுநர் மட்டுமே அமர்ந்து சொல்வதாக அது இருக்கிறது. அதுவும் சாதாரண மக்கள் இந்த வாகனங்களை வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை அதிகமாக உள்ளது. சொல்லப் போனால் இதனை சொகுசு வாகனம் என்றே அழைக்கலாம். தற்சமயம் பயணிகளின் வாகனங்கள் மட்டுமல்லாமல் கனரக வாகனங்களையும் மின்சாரத்தைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த மோட்டார் இயந்திரங்களை வடிவமைத்து, சோதனைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்க ஒன்றியத்தில் இருக்கும் ஒவ்வொரு மாகாணத்திற்கு என்று தனி அங்கீகாரமும், சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் சட்டத்தில் இருக்கிறது. காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு மிக வேகமாக எதிர்காலத் திட்டங்களை வகுக்கக் கூடிய மாகாணங்களில் ஒன்றுதான் கலிஃபோர்னியா.
கனரக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், வருகிற 2024 ஆண்டுக்குப் பிறகு அதிகளவில் மின்சார கனரக வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனங்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது கலிபோர்னியா அரசாங்கம். அதேவேளையில் 2045 ஆண்டுக்குப் பிறகு அனைத்து கனரக வாகனங்களும் 'Zero Emissions' என்பதைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என்றது California Air Resources Force என்ற காற்று மாசுபடுதலைக் கண்காணிக்கும் ஆணையம்.
சில நிறுவனங்கள் இதனை ஏற்கனவே கருத்தில் கொண்டு களத்தில் இறங்க ஆரம்பித்து விட்டன. ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Daimler Trucks (Mercedes Benz) என்ற நிறுவனம், வட அமெரிக்காவில் முதன் முதலாக 38 பெரிய சற்றே நடுத்தரமான மின்சார கனரக வாகனங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிறுவனத்தின் புதிய மின்சார கனரக வாகன வடிவமைப்பான 'heavy-duty Freightliner eCascadia trucks' என்ற வகையைச் சேர்ந்த வாகனங்கள், ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் மணிக்கு 250 மைல்கள் (400 கிலோமீட்டர்) பயணிக்கக் கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கும். இதில் இருக்கும் மின்கலத்தின் (பேட்டரிகள்) மொத்த கொள்ளளவு 554kWh ஆகும். ஒரு முறை இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய தோராயமாக 120 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு பெட்டகத் துறைமுகமான ஃபோர்ட் ஆஃப் லாங்ஃபோர்ட் - லாங் பீச்சில் (கலிபோர்னியா) இருந்து பிற பகுதிகளுக்கு சரக்குகள் கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் முக்கியமாக சரக்குகளை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்கள், துறைமுகத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை இருக்கும் 24 மைல்கள் நீளம் கொண்ட '710 freeway' என்ற சாலையை 'diesel death zone' என்று அழைக்கின்றனர் உள்ளுர் வாசிகள். தொடர்ந்து இந்த சாலை வழியே பயணிக்கும் கனரக வாகனங்களால் காற்று மாசுபட்டு மேகமூட்டம் போல் சூழ்ந்திருக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் முதலாவது heavy-duty Freightliner eCascadia trucks -ஐ சோதனை நடத்துகிறார்கள் Daimler நிறுவனத்தினர். மின்சார கனரக வாகனங்கள் முழு அளவில் செயல்படுத்தப்படும் காலம் வரும்போது தான் எங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்கும் காலம் வரும் என்கிறார்கள் இந்த சாலையை ஒட்டி அமைந்திருக்கும் நகரவாசிகள்.
ஜெர்மனியின் தொலைநோக்கு பார்வை:
வாகனத் தொழிற்சாலைகளின் முன்னோடி யார் என்றால் அதற்குப் பதில் ஜெர்மனி என்றே வரும். ஜெர்மனி அரசாங்கம் ஒரு படி மேலே சென்று, மின்சார கனரக வாகனங்கள் செல்வதற்கு பிரத்யேக 'மின்சார சாலை' (Electric highway) ஒன்றை வடிவமைத்து உள்ளது. பிராங்புரூட் மற்றும் டிராம்ஸ்டாட் என்ற இரண்டு பகுதிகளுக்கு இடையே, 10 கிலோமீட்டர் தொலைவுக்கு 'இ-ஹைவே' என்ற சாலைகளுக்கு மேலே உயரழுத்த மின் கம்பிகளை அமைத்து, (பார்ப்பதற்கு ரயில் தடம் போன்ற ஒரு வடிவமைப்பு) அதில் சோதனை ஓட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இதனால், அதிகளவில் காற்று மாசுபடுதல் CO2 மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேறுவது தவிர்க்கப்படும். இந்தத் திட்டமானது சீமன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து ஒரு கூட்டு உடன்படிக்கையாக மின்சாரத்தில் ஓடும் இயந்திரம் மற்றும் சாதாரண சாலையில் செல்லும் இயந்திரம் (Hybrid Engine) பொருத்திய கனரக வாகனங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.
இதற்காக ஜெர்மனி அரசாங்கம் €70 மில்லியன் யூரோ செலவிட்டு ஆராய்ச்சிகள் செய்துள்ளது.
கனரக வாகனங்களுக்கே அதிகபடியான புதைபடிவ எரிபொருள் தேவைப்படுகிறது. இந்த புதுமையான வடிவமைப்பில் கனரக வாகனங்கள் வடிவமைக்கப்பட்டு அது வர்த்தக ரீதியாக செயல்படுத்தப்படும் போது CO2 வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியும்.
காலநிலை மாற்றத்தை தடுக்க அதிக நிதி பங்களிப்பு
இன்னும் 4 மாதங்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரவிருக்கிறது. இந்த முறை ஜனநாயகக் கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன், அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். கடந்த வாரம் பென்சில்வேனியாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, தனது அரசு தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 2 ட்ரில்லியன் டாலர்கள் ஒதுக்கப் போவதாக அறிவித்திருந்தார். வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 'net-zero carbon' என்பதை குறிக்கோளாக வைத்து திட்டங்களை வகுப்போம் என்றார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அமேசான் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி ஜெப் பெசோஸ், காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தன்னுடைய நிறுவனம் 10 பில்லியன் டாலர்களை அளிப்பதாக தெரிவித்திருந்தார். அவர் அளித்த நிதி அனைத்தும் Bezos Earth Fund என்ற அமைப்பை உருவாக்கி அதிலிருந்து காலநிலை குறித்த ஆராய்ச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்த கூடிய புதிய தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் என்றார். "காலநிலை மாற்றம் நமது பூமிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் நமது பூமியைப் பாதுகாக்க முடியும். பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறிய நிறுவனங்கள், மாகாணங்கள், நாடுகள், உலகளாவிய நிறுவனங்கள் எல்லோருடைய கூட்டு நடவடிக்கைகள் மூலமாக நாம் காலநிலை மாற்றத்தைத் தடுக்க முடியும். வாருங்கள் எல்லோரும் ஒன்றிணைவோம்" என்றார்.
பல வர்த்தகங்களைக் கையாளும் அமேசான் நிறுவனமும் ஏதோ ஒரு வகையில் காலநிலை மாற்றத்திற்கு காரணமாகத் தான் இருக்கிறது. இவர்களது 'கிளவுட் கம்ப்யூட்டிங் சிஸ்டம்' போன்ற சேவைகளுக்காக தகவல் சேமிப்பு நிலையங்கள் பல்வேறு இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. முக்கியமாக தங்களது இணையதளங்களின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் செல்ல பல்வேறு வகையான போக்குவரத்துகளையும், விமான சேவைகளையும் பயன்படுத்துகிறது அமேசான். இவைகள் எல்லாம் அடிப்படையில் புதைபடிவ எரிபொருள் மூலம் இயக்கப்படுகிறது. அவர் அளித்திருக்கும் நிதியிலிருந்து ஒரு பகுதியாக 'Rivian' என்ற நிறுவனத்தில் இருந்து 100,000 emission-free electric vehicles -களை வாங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காலநிலை மாற்றம் குறித்து தங்களது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது. என்னவென்றால் 'Carbon Negative by 2030' அவர்களின் அனைத்து டேட்டா சென்டர்கள் மற்றும் பிற சேவைகள் அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாமல் அதற்கு மாற்று சக்தியைப் பயன்படுத்தி காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க உதவி செய்வோம் என்றது மைக்ரோசாப்ட்.
அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினாலும், உள்நாட்டில் உள்ள சில மாகாணங்கள் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுவது வரவேற்கத் தக்கது. முதலாளித்துவ நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இந்தியா போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது வருத்தமளிக்கும் செய்தி தான்.
அமேசான், மைக்ரோசாப்ட் போலவே வேறு நிறுவனங்களும், பல நாடுகளும் காலநிலை மாற்றத்தைக் குறித்து தங்களது எதிர்காலத் திட்டங்களை வகுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சொல்வதை நிறைவேற்றும் பட்சத்தில், காலநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க கொஞ்சமாவது அது வழிவகுக்கும். இல்லையென்றால் வெறுமனே மக்களைத் தங்கள் பக்கம் திருப்புவதற்காக இனிப்பு தடவிய சொற்களை கூறியதாகவே இருக்கும்.
(நன்றி:https://www.npr.org/2020/06/26/883634480/californias-landmark-electric-truck-rule-targets-diesel-death-zone)
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
மேசைக்கணினியோ, மடிக்கணினியோ எதுவாக இருந்தாலும், வாங்கும் போதே தவிர்க்கவியலாதவாறு நமக்கு அறிமுகமாவது விண்டோஸ் இயங்குதளம் (Operating System). வீடு, அலுவலகம், கல்லூரி எங்கனும் பயன்படுத்தப்படுகின்ற கணினிகளில் ஏறக்குறைய அனைத்திலும் பயன்படுத்தப் படுவதும் அதுதான். அதேபோல் அதனுடன் இணைந்த மைக்ரோஸாப்டின் (Microsoft) அலுவலகப் பயன்பாட்டிற்கான வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் போன்ற பல மென்பொருட்கள் எந்தவிதப் போட்டியுமின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒரு சிலரைத் தவிர பலருக்கும் விண்டோஸிற்கு ஒரு மாற்று இருக்கலாம் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விஷயம்.
ஒரு புதிய கணினி வாங்குபவருக்கு ஏறக்குறைய பத்து வகையான தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் அதன் இயங்குதளத்தினைத் தேர்ந்தெடுக்க பெரும்பாலும் வாய்ப்புகள் கொடுக்கப் படுவதில்லை. விண்டோஸ் அந்த அளவிற்கு முற்றுரிமை (Monopoly) பெற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு கணினி விற்கப்படும்போதும் அதன் விலையில் ஒரு பகுதி மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு சென்று விடுகிறது.
விண்டோஸிற்கு மாற்றே இல்லையா? சிலர் ஆப்பிளின் மேசின்டோஷ் (Macintosh) இயங்குதளத்தினை ஒரு மாற்றாகக் கருதுவர். எனினும் அதுவும் தனக்கென்று ஒரு ஆளுகையை வைத்துக் கொண்டு தனியுரிமை (Properitariship) கொண்ட ஓர் இயங்குதளமே ஆகும்.
இவைகளைப் போல தனியுரிமையின்றி, முற்றிலும் விலையில்லாமல் ஒரு இயங்குதளம் சமூக ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டுக் கொண்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது ஆச்சரியம் ஊட்டுவதாக இருக்கலாம். எனினும் உண்மை. அந்த இயங்குதளம்தான் லினக்ஸ்.
இயங்குதளம் ஒரு கணினியில் என்னதான் செய்கிறது?
ஒரு இயங்குதளத்தின் வேலைதான் என்ன? கணினியின் உள்ளும் புறமும் அதனொடு தொடர்புடைய வன்பொருட்கள் (Hardware) அனைத்தின் தேவையினையும், மற்ற மென்பொருட்களுக்கு பகிர்ந்தளிப்பதே அதன் வேலை. கணினியின் மைய செயல்பாட்டுப் பகுதி (CPU - Central Processing Unit), நினைவகம் (Memory), கோப்புகளை சேமித்தல் (File Storage), உள்/புற சாதனங்கள் (Input / Output Devices), வலைப்பின்னல் தொடர்புகள் (Network) போன்றவையே அத்தகைய வன்பொருள்கள் அல்லது வன்பொருள் சார்ந்த விஷயங்கள். அதனால் கணினி இயங்கத் தொடங்கியதிலிருந்து துவங்கி, அது அணைக்கப்படும் வரை செயல்பட வேண்டியதிருப்பதுதான் இயங்குதளத்தின் பணி.
இயங்குதளத்தின் வரலாறு
கணக்கிடும் இயந்திரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், கணினியின் காலம் 1800களில் தொடங்குகிறது. 1950கள் வரை ஆராய்ச்சிக் கூடத்திலிருந்தது. 1960 ஆம் ஆண்டுகளில் தொழிலகங்களிலும், இராணுவத் தேவைகளிலும் பயன்படுத்தப்பட்ட மெயின்பிரேம் (Mainframe) கணினியினால் ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கணினி வெளியில் வந்தது. அப்போது கண்டுபிடிக்கப்பட்ட மின்னணு சாதனங்களின் நுழைவு, 1980களில் கணினியை மேசைக்கணினியாக சாதாரண மனிதன் முன் நிறுத்தியது.
1960களில் கணினிகளில் பயன்படுத்தப்பட்ட இயங்குதள மென்பொருட்கள் எவ்வித காப்புரிமையும் பெற்றிருக்கவில்லை. அப்போது அவை பெரும்பாலும் பல்கலைக்கழகங்களில் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் ஐபிஎம் (IBM) போன்ற பெரிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட மென்பொருட்கள் காப்புரிமை பெற்றிருந்தன. ஆனால் கிரகாம் பெல் ஆரம்பித்த நிறுவனமான பெல் லாபரடரிஸ் (Bell Laborotaries), யுனிக்ஸ் (UNIX) என்னும் இயங்குதளத்தினை உருவாக்கி அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது.
1980களில் ஐபிஎம்மின் வன்பொருளுடன், உருவான மேசைக்கணினிகளோடு அறிமுகமானதுதான் மைக்ரோசாப்ட்டின் மென்பொருளான எம்எஸ் டாஸ் (MS DOS). இந்த இரண்டின் ஒருங்கிணைப்பு கணினி உலகில் ஒரு புரட்சியாக அமைந்தது. 1985 இல் விண்டோஸ் இயங்குதளத்தை அறிமுகப்படுத்திய பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் இயங்குதள வளர்ச்சியைப் பொருத்தவரை தனது முன்னோக்கிய பாய்ச்சலை நிறுத்தவேயில்லை.
உலகின் எந்தவொரு மூலையில் ஒரு கணினி விற்கப்பட்டாலும், மைக்ரோஸாப்ட் நிறுவனத்திற்கு ஒரு தொகை வந்து சேர்ந்து விடும் என்ற நிலை, அதன் நிறுவனர் பில் கேட்ஸை உலகின் இரண்டாவது பணக்காரராக ஆக்கி விட்டிருக்கிறது. இதே நேரத்தில் துவக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், வன்பொருளையும், மென்பொருளையும் தனக்கே உரித்தான பண்புகளை வளர்த்துக் கொண்டு, ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டு தனியுரிமை இயங்குதளத்தையே முன்னிறுத்துகிறது.
கட்டற்ற, திறந்த மூல மென்பொருள் (Free and Open Source Software - FOSS)
கணினி மென்பொருள் தளத்தில், முற்றுரிமையும், தனியுரிமையுமாக விண்டோஸும், மேசிண்டோஷும் உருவான காலத்திலேயே, மென்பொருள் உருவாக்கப் போக்கில் வேறொரு கருத்தாக்கம் உருப்பெற்று வளர்ந்து வந்தது. அது கட்டற்ற மென் பொருள்.
கணினி நிரலியற்றியாக (computer programmer) பணியாற்றிய ரிச்சர்ட் ஸ்டால்மன் (Richard Stallman) என்னும் அமெரிக்கர், கட்டற்ற மென்பொருளுக்கான ஒரு அமைப்பினை 1985ல் உருவாக்குகிறார். இலாபநோக்கின்றி செயல்படும் இதன் முக்கிய நோக்கம் மென்பொருள்களை இலவசமாக உருவாக்குவது, வெளியிடுவது, பகிர்வது ஆகியவையே. மேலதிகமாக GNU (GNU Not Linux என்பதன் சுருக்கமே இது) உரிமம் என்ற கருத்தாக்கத்தையும் உருவாக்குகிறார். செயல்படுத்துகிறார்.
லினக்ஸின் உருவாக்கம்
ரிச்சர்ட் ஸ்டால்மன் அதுவரை பெரிய ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கணினிகளுக்கு பயன்பட்டு வந்த யுனிக்ஸ் இயங்குதளத்தைப் போலவே, மேசைக்கணிகளுக்குப் பொருத்தமான ஒரு இயங்கு தளத்தை உருவாக்க முனைந்தார். ஆனால் அவர் உருவாக்கிய இயங்குதளத்தின் கெர்னல் (Kernel) பகுதி வலுவானதாக இருக்கவில்லை. கெர்னல் என்பது ஒரு இயங்குதளத்தின் பல அடுக்குகளில் மையமான அடுக்குப்பகுதி. அதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட அதே முனைப்புடன் செயல்பட்ட லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) என்னும் பின்லாந்து நாட்டைச் சார்ந்த மாணவர், யுனிக்ஸைத் தழுவிய ஒரு புதிய வலுவான கெர்னல் பகுதியை உருவாக்கியிருந்தார்.
ரிச்சர்ட் ஸ்டால்மானும், லினஸ் டோர்வால்டும் இணைந்து ஒரு புதிய இயங்குதளத்தை உருவாக்கி, பின்னவர் பெயரின் முன்பகுதியையும், யுனிக்ஸின் பின்பகுதியையும் இணைத்து, அந்த இயங்கு தளத்திற்கு லினக்ஸ் எனப் பெயரிட்டனர்.
காப்புரிமைக்கு எதிராக காப்பு சுதந்திரம்
லினக்ஸ் இயங்குதளம் GNU உரிமத்தின் கீழ் பதியப் பெற்றது. இந்த உரிமத்தின் விதி இதுதான். இந்த இயங்குதள மென்பொருளை - அதன் மூலக்குறியீடுகளை (source code) - எவர் வேண்டுமானாலும், பிரதியெடுக்கலாம், பகிரலாம், மாற்றலாம், ஏன் விலைக்கு கூட விற்கலாம். ஆனால் அப்படி பகிரப்பட்ட மென்பொருளும் இந்த GNU உரிம விதிகளையே அனுசரிக்க வேண்டும்.
தனியுரிமைக்குப் பாதுகாப்பளிக்கும் காப்பிரைட் உரிமைகளுக்கு மாற்றாக GNU போன்ற காபிலெப்ட் (copy left) உரிமைகளின் அடிப்படையில் பல உரிமங்கள் வந்து விட்டன. உதாரணமாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் விக்கிபீடியா அப்படிப்பட்ட உரிமங்களுள் ஒன்றான கிரியேடிவ் காமன்ஸ் (creative commons) என்ற உரிமத்தைக் கொண்டிருக்கிறது.
லினக்ஸ் இயங்குதளம் பின்னர் சில வணிக ரீதியான நிறுவனங்களாலும், பல மென்பொருள் ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட வணிக ரீதியில்லாத சமுதாயக் குழுக்களாலும் (Community) வளர்த்தெடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வடிவங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
ரெட் ஹேட் நிறுவனம் வெளியிடும் ரெட் ஹேட் (Red Hat) மற்றும் பெடோரா (Fedora), சுசே நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓப்பன் சுசே (Open SUSE), கானோனிகல் (Canonical) நிறுவனத்தால் வெளியிடப்படும் உபுண்டு (Ubuntu), சமுதாயக் குழுக்களால் வெளியிடப்படும் டெபியன் (Debian), லினக்ஸ் மிண்ட் (Linux Mint) போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்த பல்வேறு வகையான வெளியீடுகள் லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் (Distros) என்று அழைக்கப்படுகின்றன.
லினக்ஸை கணினியில் எப்படி நிறுவ வேண்டும்?
முதலில் உங்களுக்குப் பிடித்தமான ஒரு லினக்ஸ் டிஸ்ட்ரோவின் ISO கோப்பினை தரவிறக்கம் (download) செய்து கொள்ள வேண்டும். ஒரு பென் டிரைவிலோ, சிடியிலோ அதை ஒரு bootable disk ஆக பதிந்து கொள்ள வேண்டும். இப்படி bootable disk ஆக உருவாக்க பல முறைகளும், மென் பொருட்களும் உள்ளன. பின் நீங்கள் தயாரித்த bootable disk ஐ கணினியில் இட்டு மறு துவக்கம் (Re-start) செய்தால் உங்களுக்கு தெரிவு செய்வதற்கான ஒரு திரை தோன்றும். அதில் நீங்கள் பதிவிறக்கிய லினக்ஸ் டிஸ்ட்ரோவை பரீட்சித்துப் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது நிறுவ விரும்புகிறீர்களா என்ற தெரிவினை கேட்கும். நிறுவ விரும்பும் தெரிவினைத் தேர்ந்தெடுத்தால் வரிசையாக சில கேள்விகளுடன் நிறுவ ஆரம்பிக்கும்.
அதில் முக்கியமான கேள்வி, ஏற்கெனவே இந்த கணினியில் விண்டோஸ் இயங்கு தளம் இருக்கிறது, அதை அழித்துவிட்டு நிறுவ வேண்டுமா அல்லது அதற்கு பக்கம் பக்கமாக நிறுவ வேண்டுமா என்பதுதான். லினக்ஸை பரீட்சித்துப் பார்க்காமல் விண்டோஸை விட முடியாது என்பதால், நீங்கள் இரண்டாவது தெரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த அரை மணி நேரத்திற்குள் உங்கள் கணினியில் லினக்ஸ் நிறுவப்பட்டு விடும். கணினியை மறு தொடக்கம் செய்யும் போது பூட் லோடர் (Boot loader ) என்ற திரை தோன்றும். நீங்கள் விண்டோஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா, லினக்ஸ் இயங்குதளம் செல்ல வேண்டுமா என்று கேட்கும். லினக்ஸை தேர்ந்தெடுத்து கட்டற்ற மென்பொருள் தரும் சுதந்திரக் காற்றை சுவாசியுங்கள்.
லினக்ஸின் சிறப்பியல்புகள்
விலை: லினக்ஸ் முற்றிலும் விலையில்லாதது. ஆனாலும் அதை உருவாக்கியவர்கள் அது விலையற்றது என்பதை விட அதன் கட்டற்ற தன்மைக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதாவது அதைப் பயன்படுத்தி வளர்த்தெடுக்கும் எவரும் அதன் நிரல்களைப் பகிரும் வகையில் வெளிப்பாட்டுத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே அதன் சிறப்பு.
மென்பொருட்கள்: லினக்ஸை நிறுவும்போதே நாம் அடிக்கடி பயன்படுத்தும் பெரும்பாலான மென்பொருட்களும் அதனுடன் இணைந்து நிறுவப்பட்டு விடும். நீங்கள் விண்டோஸில் பயன்படுத்தும் அனைத்து விதமான மென்பொருட்களுக்கும், மாற்று லினக்ஸிலும் உண்டு. உதாரணத்திற்கு எம் எஸ் ஆபீஸ் ற்குப் பதிலாக லிபர் ஆபீஸ் (Libre Office). சில மென்பொருள்கள் உருவாக்கும் நிறுவனங்கள் இரண்டு இயங்கு தளத்திற்காகவும் தனித்தனியே மென்பொருளை உருவாக்குகின்றன. இது போன்ற மென்பொருள்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
உறுதித்தன்மை: பெரும்பாலான லினக்ஸ் டிஸ்ட்ரோக்கள் சமுதாயக் குழுக்களால் வளர்க்கப்படுவதால் தொடர்ந்த வளர்மாற்றங்களை பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதன் காரணமாக லினக்ஸ் ஒரு உறுதியான மென்பொருளாக உள்ளது. அதாவது இயங்கு தளத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளான தொங்கு நிலை (hanging), சரிவுகள் (crashes) போன்றவை லினக்ஸில் ஏற்படுவது அரிதிலும் அரிது. எனவேதான் உலகம் முழுவதிலும் பலவிதமான பயன்பாடுகளில் உள்ள செர்வர்கள் (server) லினக்ஸ் இயங்கு தளத்திலேயே செயல்படுகின்றன.
வன்பொருள் அனுசரிப்பு: லினக்ஸின் இன்னொரு சாதக அம்சம் அது பழைய பாகங்களைக் கொண்ட கணினிகளில் கூட செயல்படும். மற்ற இயங்கு தளங்கள் போலன்றி மிகக் குறைந்த நினைவகத்தையே பயன்படுத்திக் கொள்ளும். 11 எம்பி நினைவகத்தைக் கொண்ட லினக்ஸ் இயங்குதளம் கூட இருக்கிறது.
பன்முகத் தெரிவுகள் (multiple choices): நீங்கள் கணினியைப் பயன்படுத்தும் நோக்கத்திற்குத் தகுந்தபடி இயங்குதளம் கிடைக்கும். உதாரணத்திற்கு கல்விக்கான பயன்பாடு அதிகமென்றால் அதற்குப் பொருத்தமான இயங்கு தளம் இருக்கின்றது. இது போல லினக்ஸ் இயங்கு தளத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கிறதென்றால், நமது டெஸ்க் டாப் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு Gnome, xfce, mate, cinnamon, kde என பல விதமான தெரிவுகள் உள்ளன. இந்த இரண்டும் பல கலவைகளில் இணைந்து உங்கள் தெரிவுகளை வண்ணமயமாக்கி விடும்.
பாதுகாப்பு: மற்ற இயங்குதளங்கள் போல உபயோகிப்பவர்களைப் பற்றிய தரவுகளை பயன்படுத்திக் கொள்வது என்பது லினக்ஸில் கிடையாது. அதேபோல் லினக்ஸ் இயங்குதளத்தின் நிரல்களின் உறுதித் தன்மையும், வெளிப்படைத் தன்மையும், தொடர்ச்சியான வளர் மாற்றமும் அதனை கணினி வைரஸ்களால் எளிதில் தாக்க முடியாததாக்கி விடுகிறது. எனவே வைரஸுக்கு எதிரான மென்பொருட்கள் எதுவும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு தேவைப்படுவதில்லை.
தொழில்நுட்பம்: அனைத்து விதமான நிரல் எழுதுபவர்களுக்கும் பொருத்தமான ஒரு இயங்கு தளம் லினக்ஸ். Python, C/C++, Java, Perl, Ruby போன்ற அனைத்து விதமான நிரல் மொழிகளையும் அது ஆதரிக்கின்றது.
விண்டோஸிற்கு ஒர் மாற்று
இப்போது நம் முன் ஒரு தெரிவு இருக்கிறது. ஒன்று முற்றுரிமையான இயங்குதளத்தை மட்டுமே இன்னும் சார்ந்து இருந்து, அதன் கட்டுப்பாடுகளுக்குள் மட்டுமே செயல்பட்டு, நமது தரவுகளை நமக்குத் தெரியாமலே இழந்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் நமது கணினி இயக்கத்தை வைத்திருப்பது, மற்றொன்று விலையில்லா இயங்குதளத்தினை ஆதரித்து, கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கு பங்களித்து, சுதந்திரம் என்பதன் உண்மையான பொருளில் கணினியின் இயக்கத்தினை வைத்திருப்பது. முடிவை நாம்தான் எடுக்க வேண்டும்.
- இரா.ஆறுமுகம்,
உதவிப் பொது மேலாளர்,
தமிழ் நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
மணப்பாறை.
(நன்றி: லினக்ஸை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பரும், கணித ஆசிரியருமான ஆத்தூர் திரு.முருகன் அவர்கள்)
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்றைய காலகட்டத்தில் வீட்டுக்கு வெளியே நாம் எந்த திசையில் திரும்பிப் பார்த்தாலும் சரி, CCTV camera -கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். பெருவாரியாக மக்கள் கூடும் இடங்கள் தொடங்கி வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள் இப்படி CCTV camera பொருத்தப் பட்டிருக்கும் இடங்களை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
சில வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் இதுபோல் கேமராக்கள் வைத்திருக்கிறார்கள். அதேவேளையில் காவல் துறையினரின் ஆடையிலும் body camera பொருத்தப்பட்டிருக்கும் நிலை அங்கு இருக்கிறது. இது தொடர்ச்சியாக மக்களின் நடமாட்டத்தைக் கண்காணித்துக் கொண்டே இருக்கும். இதில் பதிவாகும் தகவல்கள் DVR -ல் (digital video recorder) சேமித்து வைக்கப்படும். இது அவர்களின் அலுவலகத்தில் இருக்கலாம் அல்லது 'கிளவுட்' -ல் பல ஆயிரம் மைல்கள் கடந்து எங்கோ ஓரிடத்தில் சேமிக்கப்படலாம்.
ஏதாவது சந்தேகத்திற்குரிய குற்றச் சம்பவங்கள் நடந்திருக்கும் பட்சத்தில் அதில் பதியப்பட்ட தகவல்களை எடுத்து, எந்த நேரத்தில்? எந்த இடத்தில்? யார் வந்தது? என்பதை அவர்களிடம் இருக்கும் tool -களை வைத்து ஆய்வுகள் செய்வார்கள். இந்த ஆய்வுகளை மேற்கொள்ள கால நேரம் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சற்று தெளிவாக இல்லாத படங்கள் வரும் சமயத்தில் ஒரு முடிவினை எடுப்பதற்கு இன்னும் இது அதிகமாகும். இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே 'facial recognition' என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவுகிறது.
CCTV -கள் மூலம் பதிவு செய்யப்படும் தகவல்கள் அனைத்தையும் facial recognition தொழில் நுட்பத்துடன் இணைத்து விட்டால். கேமராக்களில் பதியப்பட்ட காட்சியில் தெரியும் நபரின் கண், மூக்கு, காது, தாடை, உயரம் எல்லாவற்றையும் அளவிட்டு இவர் இன்னார்தான் என்று நொடிப் பொழுதில் காட்டிவிடும். ஏனெனில் அவர்களுடைய database -ல் மில்லியன் கணக்கில் புகைப்படங்கள் இருக்கிறது. அவை எல்லாவற்றையும் algorithm கணக்கீடுகள் மூலம் சேமித்து வைத்திருக்கிறார்கள்.
இது 100% சரியான முடிவைத் தரும் என்று கூற முடியாது. இதிலும் பிழைகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஒருபுறம் இதன் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மறுபுறம் இதில் தனிநபர் சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருக்கிறது என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் வர்த்தகம் 2022ஆம் ஆண்டில் 7.7 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எப்படி செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம்?
Facial recognition தொழில்நுட்பத்திற்கு CCTV camera மட்டும் தான் என்றில்லை. நமது கையில் இருக்கும் கைபேசியின் கேமராவே போதுமானது. சமூக வலைத்தளங்களிலோ அல்லது வேறு எங்கோ நம்மால் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் எல்லாம், எங்கோ ஓரிடத்தில் டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு அதில் டிஜிட்டல் தகவல்களாக மாற்றப்பட்டு இருக்கும்.
உதாரணத்திற்கு பிரபல சமூக வலைத்தளம் பேஸ்புக்-ஐ எடுத்துக் கொள்வோம். 2011ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 'tag suggestions' மூலம் புகைப்படங்களை பதிவேற்றுவது பெரும் வரவேற்பைப் பெற்றது. நாம் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தைப் பார்த்து, படத்தில் இருப்பவர்கள் யார்? என்பதைப் பெயருடன் வரும் சேவையை facial recognition தொழில்நுட்பத்துடன் ஆரம்பித்தது. இந்தத் தொழில்நுட்பம் நமது புகைப்படத்தையோ அல்லது காணொலிக் கட்சிகளையோ பதிவேற்றம் செய்யும்போது, நாம் இருக்கும் இடத்தையும் டேக் செய்து பதிவேற்றும். இப்போது அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் facial recognition நமது படத்தின் மேலிருந்து கீழ் வரை (algorithm) கணிதச் சமன்பாடுகள் மூலம் இவர் இப்படி தான் இருக்கிறார், இவரின் நீளம், உயரம், நிறம், எல்லாவற்றையும் துல்லியமாகப் பதிவு செய்து விடும். இதே போல் நமது நண்பர்களும் செய்திருக்கலாம். இப்போது நண்பரின் புகைப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது. நமது நண்பரின் நண்பர் அந்த புகைப்படங்களைப் பார்க்கிறார். இவர் இன்னார் தான் என்று அதிலுள்ள (மென்பொருள்) செயற்கை நுண்ணறிவு கண்டறிந்து புகைப்படத்தின் கீழே நமது பெயரும் வந்துவிடும். நாமும் அதை விரும்பி 'லைக்ஸ்' செய்வோம். இதனால் தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்று பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆகஸ்ட் 8, 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றம் ஒன்று பேஸ்புக்கின் 'facial recognition' தொழில்நுட்பத்திற்கு எதிராக, தனிநபர் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் அதன் பயனாளிகள் வழக்கு தொடரலாம் என்றது. (நன்றி: npr news).
அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சில பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் check in செய்யும் போது, பயணம் செய்யும் நபரின் முகத்தை வைத்து நுழைவுச் சீட்டை தந்துவிடும் அங்கிருக்கும் தானியங்கி இயந்திரங்கள். எப்படி? நமது பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் அரசாங்கத்திடம் இருக்கிறது. இதனை விமானங்கள் இயக்கும் நிறுவனங்களும் பகிர்ந்து கொள்கின்றன. Facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் இயந்திரங்கள் முகத்தைப் பார்த்து இவர் இன்னார் தான் என்று திரையில் காண்பிக்கிறது. இது எல்லா பயணிகளுக்கும் கட்டாயம் இல்லை. யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். வரிசையில் நிற்கும் நேர்த்தைக் குறைப்பதற்கு இந்த சேவை இருக்கிறது. சில நாடுகளில் இந்த சேவைகள் பயன்பாட்டில் இருந்தாலும், இதனால் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.
இன்றைய நவீன மடிக்கணினிகள், ஸ்மார்ட் போன்களும் கூட இந்த தொழில்நுட்பத்தில் தான் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக நாம் பயன்படுத்தும் கடவுச்சொற்கள் இல்லாமல், நமது முகத்தை வைத்து செல்போனில் உள்ளே நுழையும் பாதுகாப்பு வழிமுறைகள் வந்து விட்டன.
இதுவே சில டேட்டா சென்டர்களில் (தகவல்கள் சேமிக்கும் நிலையங்கள்) அதன் பணியாளர்கள் உள்ளே நுழைவதற்கு பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும், தற்போது முகம் அறிந்து செயல்படும் facial recognition தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பணியாளர்களின் புகைப்படம் ஏற்கனவே தொழில்நுட்பத்துடன் பதியப்பட்டிருக்கும். பணியாளர்கள் கேமராவுக்கு முன்பு நிற்கும்போது, அவரின் முக அடையாளங்களை வைத்து உள்ளே நுழைவதற்கான அனுமதி தருகிறது.
மனித உரிமைகள் அமைப்பின் கோரிக்கையும் மென்பொருள் நிறுவனங்களின் மனமாற்றமும்:
கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருந்த facial recognition தொழில்நுட்பத்தை, தற்போது காவல் துறையினர் பயன்படுத்துவதற்கு ஓராண்டுக்கு தடை விதித்திருக்கிறது மென்பொருள் நிறுவனமான அமேசான். அமேசானின் வெப் சர்வீஸில் உள்ள Rekognition என்ற பிரிவு, பிரத்தியேகமாக facial recognition என்ற தொழில் நுட்ப சேவையை பல வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அமெரிக்க காவல்துறை இவர்களின் தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு பயன்படுத்தி வந்தார்கள். ஜுன் 10ஆம் தேதி அமேசான் வெப் சர்வீஸ் தளத்தின் blog -ல் "தங்களது தொழில் நுட்பம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான ஒழுங்கு, வழிமுறைகள் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் வரை ஓராண்டு காலத்திற்கு இந்த சேவையை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கிறோம். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் மனிதர்களை வதை செய்வது போன்ற செயல்களுக்கு எதிராக தொடர்ந்து இச்சேவை வழங்கப்படும்" என்று தங்களது அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள்.
பொது மக்களிடமிருந்தும் மனித உரிமை ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்கள். அமேசானின் இந்த நடவடிக்கையை ALCU (American Civil Liberties Union) என்ற அமைப்பு வரவேற்றுள்ளது. இந்த அமைப்பில் உள்ள தொழில்நுட்ப தலைவர் Nicole Ozer, "முகம் அறியும் தொழில்நுட்பத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். அமேசான் நிறுவனம் தற்போது தான் இந்த தொழில்நுட்பத்தின் மற்றொரு முகத்தைக் கண்டறிந்துள்ளது. முகம் அறியும் தொழில்நுட்பம் வழக்கத்திற்கு மாறான அதிகாரத்தை அரசாங்கத்திற்குத் தருகிறது. இதனைப் பயன்படுத்தி சாதாரண குடிமக்களைக் கூட அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அங்கெல்லாம் பின்னாடியே சென்று உளவு பார்ப்பது போல் பார்க்கிறது" என்றார். (தரவு: https://www.npr.org/2020/06/10/874418013/amazon-halts-police-use-of-its-facial-recognition-technology)
கடந்த சில ஆண்டுகளாக இதில் ஆராய்ச்சி செய்து வரும் தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுவதும், 'இது தவறான முறையில் பயன்படுத்தப் படுகிறது' என்பதுதான். இந்த தொழில்நுட்பம் கருப்பு நிறமுடைய மக்களை அடையாளப்படுத்துவதில் பெரும்பாலும் தவறான முடிவையே வெளியிட்டிருக்கிறது.
இதன் அடிப்படையில் ஓர் ஆய்வினை மேற்கொண்ட MIT (Massachusetts Institute of technology) இலகுவான தோல் உடைய ஆண்களை எப்போதாவது ஒருமுறை சரியான முறையில் அடையாளப்படுத்தி இருக்கிறது. அதே வேளையில் இலகுவான தோல் உடைய 7% பெண்களை தவறான முறையில் அடையாளப்படுத்தி இருக்கின்றது. இதையே கறுப்பின மக்களிடம் ஆய்வுகளை மேற்கொண்டதில் 35% பெண்களை தவறாக அடையாளப்படுத்தி இருக்கிறது.
அமேசான் நிறுவனம் இந்த முடிவை எடுப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் மற்றொரு தகவல் தொழில்நுட்ப ஜாம்பவானான ஐபிஎம் நிறுவனம் 'காவல்துறைக்கு தமது சேவைகளை அளிப்பதில்லை' என்று முடிவெடுத்திருந்தார்கள்.
ஜூன் 8 ஆம் தேதி ஐபிஎம் நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு கடிதம் மூலம் தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். "ஐபிஎம் நிறுவனத்தின் பொது பயன்பாடு facial recognition தொழில்நுட்பத்தை சட்டம் ஒழுங்கைக் காக்கும் துறைக்கு அளிப்பதில்லை. பெருவாரியான மக்களைக் கண்காணிப்பது, நிறப் பாகுபாடு, வன்முறைகள், மனித உரிமைகளை மீறும் செயல்களுக்கு பயன்படுத்த விடமாட்டோம். செயற்கை நுண்ணறிவு என்பது மிகவும் வலிமையான சாதனம். மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பது தான் இதன் முக்கிய நோக்கம். ஆனால், இது அவ்வாறு பயன்படுத்தப் படவில்லை" என்று கடிதம் ஒன்றை எழுதினார். (தரவுகள்: https://www.ibm.com/blogs/policy/facial-recognition-susset-racial-justice-reforms/)
உலகில் பல்வேறு நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் 300 மில்லியன் CCTV camera -களை வெவ்வேறு நகரங்களில் அரசு செலவில் பொருத்தி இருக்கிறார்கள். இவை அனைத்துமே facial recognition தொழில்நுட்பத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. தோராயமாக நான்கு நபர்களுக்கு ஒரு கேமரா என்ற விகிதத்தில் கண்காணிக்கப் படுகிறது. அமெரிக்காவில் 70 மில்லியன் கேமராக்கள் கண்காணிப்புக்காக உபயோகிக்கப் படுகிறது.
இதனால் குற்றச்செயல் குறைந்திருக்கிறது என்று அரசாங்கம் கூறினாலும், மனித உரிமை மீறல்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனித உரிமைகளை, உயிர்களை, மாண்புகளைக் காக்க வேண்டுமே தவிர மரணத்தை ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு இருப்பின் அவைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஜார்ஜ் பிளாய்டின் மரணம் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் கொள்கை மாற்றத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து இத்தகைய சேவைகளை வழங்க மாட்டோம் என்று கூறி இருப்பது வரவேற்கத் தக்கது. இன்னும் சில முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் facial recognition தொழில்நுட்ப பயன்பாடு குறித்து தங்களது முடிவினை விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
கொரோனா பாதிப்பினால் கல்விக்கூடங்கள் எல்லாம் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுவதற்கான காலம் நெருங்கி விட்டது. இப்போது தேர்வுகளை நடத்துவதிலும் பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளது. சில நாடுகளில் பள்ளிகளுக்கான இறுதித் தேர்வை நடத்தாமல் அவர்களுக்கு ஒரு பொதுவான 'கிரேட்' என்பதைக் கொடுத்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்திருக்கிறார்கள். அதே வேளையில் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் இருக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த சில பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வு முறையைக் கையாண்டு வருகின்றனர்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்களைக் கண்காணிக்க, தேர்வினை நடத்தும் ஆசிரியர்கள் இருப்பார்கள். அதெல்லாம் ஆன்லைன் தேர்வுகளில் இருக்காது. தேர்வுகளை எழுத கல்லூரி வளாகத்திற்குச் செல்லாமல், மாணவர்கள் தங்களது வீடுகளில் இருந்தே தேர்வு எழுதுவார்கள்.
இந்த ஆன்லைன் தேர்வுகளை எழுதுவதற்குத் தான் Proctoring சேவைகள் வழங்கும் மென்பொருள் பல்கலைக் கழகங்களால் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இதிலிருக்கும் பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம் போன்ற குறைகளை சுட்டிக்காட்டி ஆங்காங்கே கேள்விகளும், இதனைத் தடை செய்யக் கோரி புகார்களும் எழுந்துள்ளன.
இந்தியாவில் இந்த மென்பொருள் சேவை அதிகளவில் இல்லை என்றாலும். தற்சமயம் Indian Institute of Management Kasikpur -ல் முதன் முதலாக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தி இருக்கிறார்கள். மேலும் சில சிறிய பல்கலைக் கழகங்கள் நுழைவுத் தேர்வுகளை இதனடிப்படையில் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் பெருவாரியான பல்கலைக் கழகங்களில் இதன் சேவைகளைப் பயன்படுத்தற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
எப்படி இயங்குகிறது Proctoring மென்பொருள்?
இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழி கற்றல் மற்றும் முகம் கண்டறிதல் மூலம் (Artificial intelligence, Mechine language, and facial recognition) வடிவமைக்கப்பட்ட மென்பொருள். இதில் பரிமாற்றம் செய்யும் தகவல்கள் 'Zero - knowledge encryption' என்ற வடிவமைப்பில் இருக்கிறது. அதாவது, இதனைப் பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இதனை வடிவமைத்த நிறுவனத்திற்குத் தெரியாது என்கிறது.
பல்கலைக் கழகங்களால் வடிவமைக்கப்பட்ட தேர்வுத்தாள் இந்த மென்பொருளுடன் பதிவேற்றம் செய்யப்படும். இதனுடைய ஒரு link தேர்வெழுதும் மாணவருக்கு அனுப்பப்படும். தேர்வு எழுதும் மாணவர்களும் தேர்வைக் கண்காணிக்கும் கண்காணிப்பாளரும் இதனைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களது சொந்த மடிக்கணினியில் அல்லது வீட்டுக் கணினியில் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் USB cable வழியே Speaking and recording device மற்றும் webcam இவைகளை மடிக்கணினியில்/கணினியில் இணைக்க வேண்டும். இவைகளை இணைத்து விட்டு மாணவர்கள் வீட்டில் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டால், நீங்கள் தேர்வு எழுத ஆயத்தமாகி விட்டீர்கள்.
மாணவர்களின் முகத்தைப் பார்த்து இந்த மாணவர் தான் தேர்வு எழுதுகிறார் என்பதை முதலில் இது உறுதி செய்யும். தேர்வு எழுதி முடிக்கும் வரையில் உங்களை Proctoring மென்பொருள் கண்காணித்துக் கொண்டு இருக்கும். இது தேர்வு எழுதும் மாணவர்களின் கண்களுக்குத் தெரியாத எந்திரன்.
இந்த நவீன மென்பொருளைப் பயன்படுத்தி தேர்வு எழுதத் தொடங்கியவுடன், தேர்வு எழுதும் நேரம் முடியும் வரையில் மாணவர்கள் பேசுவது, அசைவது, சுவற்றில் இருக்கும் கடிகாரத்தைப் பார்ப்பது - எல்லாவற்றையும் இதில் பொருத்தியிருக்கும் வெப்கேமரா பதிவு செய்து கொண்டே வரும். ஒரு நிமிடத்திற்கு மேல் மாணவர் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்தால் கூட கணினியில் 'red flag' தோன்றி விடும்.
கணினியின் திரையில் மாணவர்கள் வேறு ஏதாவது கூகிளில் தேடினால் கூட 'red flag' வந்துவிடும். தேர்வு எழுதும் மாணவரின் குரலைத் தவிர வேறு யாராவது குரலைக் கேட்டாலும் 'red flag' வந்துவிடும். 'red flag' என்பதன் பொருள் மாணவர்களுக்கு வேற யாரோ உதவுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படும். அதாவது காப்பி அடிக்கிறார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்து விடும் (Suspected). இன்னும் இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் மாணவர்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் தடைப்பட்டால் அந்தத் தேர்வு ஏற்றுக் கொள்ளப்படாது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் இருக்கும் University of Queensland மற்றும் University of Sydney இந்த இரண்டு பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் தேர்வுகளை எழுத Proctoria, ProctorU என்ற இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்தார்கள். தேர்வுகளை எழுதிய மாணவர்கள் எதிர்கொண்ட இன்னல்களை அடிப்படையாகக் கொண்டு, அவ்விரு நிறுவனங்களுக்கு எதிராக 4000க்கும் மேற்பட்ட மக்கள், புகார் கடிதத்தில் கையொப்பமிட்டு இருக்கிறார்கள். அதாவது மாணவர்களின் தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கூறினார்கள்.
மேலும் தேர்வு எழுதும் மாணவர்களின் தகவல்களை எங்கு சேமித்து வைக்கிறார்கள் என்றும். 'பல்கலைக்கழகங்கள் இது போன்ற ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதற்கு முன்னர் அவர்கள் கையாளும் மென்பொருள் குறித்து நாட்டின் 'privacy commission' அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்ற பின்னரே தேர்வெழுத அனுமதித்திருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்கள் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் அமைப்பினர்.
இத்தகைய சேவைகளை வழங்கும் மென்பொருள் நிறுவனத்தினர் கூறும் செய்தி என்னவென்றால். 'ஏற்கனவே பல்கலைக் கழகங்களில் இருந்து அனுமதி பெற்ற பின்தான் எங்களது மென்பொருள்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். வீட்டிலிருந்து தேர்வு எழுதும் போது மாணவர்கள் ஏமாற்றி தேர்வு எழுதலாம் (காப்பி அடித்து) என்பதற்காகவே இவ்வாறு வடிவமைத்திருக்கிறோம். தேர்வெழுதும் மாணவர்களின் தகவல்களை நாங்களே பார்க்க முடியாது, அது எல்லாம் கிளவுட் சர்வீசில் சேமித்து வைக்கப்படுகிறது. மூன்றாவது நிறுவனம் இதில் புகுந்து எந்த தகவல்களையும் எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் எந்தெந்த நாடுகளில் எங்களது மென்பொருள் பயன்படுத்தப் படுகிறதோ அந்தந்த நாடுகளிலுள்ள 'தனிநபர் கட்டுப்பாடுகள்' போன்ற அனுமதிகள் வாங்கிய பின்னரே பயன்பாட்டுக்கு வருகிறது' என்கிறார்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் பெருவாரியான பல்கலைக் கழகங்கள் இத்தகைய மென்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இங்கும் தேர்வெழுதிய மாணவர்கள் சிலர் இந்த மென்பொருள்கள் மீது சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளனர். பல்கலைக் கழகங்களும் சரி, இதனை வடிவமைத்திருக்கும் நிறுவனங்களும் சரி மாணவர்கள் தேர்வினை ஏமாற்றாமல் இருப்பதற்காகவே இவ்வாறு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் மேல்நிலைப் பள்ளிகளில் இருக்கும் 58% மாணவர்கள் 'plagiarism' செய்கிறார்கள் (அதாவது, இணையதளத்தில் இருந்து மற்றொருவர் எழுதிய பதிலை அப்படியே ஒரு வரி விடாமல் காப்பி செய்து, தனது தேர்வுத் தாளில் தானே எழுதியதாக மாற்றுவது. இது பத்திரிகை/எழுத்துத் துறைக்கும் பொருந்தும்) என்றும், இதையே 36% கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் செய்கிறார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற தரவுகளை வைத்து, மாணவர்கள் 'Manipulation' செய்யக்கூடாது என்பதற்காக தங்களது மென்பொருள்களை அதற்கேற்ப வடிவமைப்பு செய்கிறார்கள்.
ஆண்டு இறுதித் தேர்வுகளில் நடைபெறும் ஆள் மாறாட்டம், காப்பி அடித்தல் போன்றவற்றைத் தவிர்க்க இந்த மென்பொருள்கள் பயன்பட்டு வந்தாலும். தனிநபர் சுதந்திரம் குறித்து அதிக கேள்விகள் எழுந்து கொண்டே தான் இருக்கிறது. அதே வேளையில் சரியான இணையத்தளக் கட்டமைப்பு இல்லாத நாடுகளில் இதனைப் பயன்படுத்துவது மிகவும் சிரமம். குறிப்பாக வசதி வாய்ப்புகள் அற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு இத்தகைய வடிவமைப்பில் தேர்வுகள் எழுத பல்கலைக் கழகங்கள் நிர்பந்தம் செய்யும் பட்சத்தில், அது, மேலும் தேர்ச்சி விழுக்காட்டை குறைக்கத் தான் செய்யும்.
ஆங்கிலம் முதன்மை மொழியாக இருக்கும் நாடுகளுக்கு கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலைக்காகவோ செல்லும்போது 'TOEFL' (Test of English as a foreign language) என்ற தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வகையான தேர்வுகளும் biometric centre-களில் நடைபெறும். இந்தத் தேர்வுகளுக்கு செல்லும்போது நாம் அவர்களது தேர்வு நிலையங்களுக்குச் சென்று அவர்களிடம் இருக்கும் கணினியில் எழுதுவது, பேசுவது, கேட்பது போன்ற தேர்வுகளைக் கொடுப்போம். இதில் கணினியில் இருக்கும் கேமரா நம்மை கண்காணிக்காது. அவர்கள் அறையில் இருக்கும் கேமரா தான் நம்மை கண்காணிக்கும். இந்த வகையான தேர்வுகளுக்கும் ஆன்லைன் proctoring தேர்வுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
எந்திரன் படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். மருத்துவ மாணவி ஐஸ்வர்யா ராய் படிக்காமல் தேர்வெழுதச் சென்றிருப்பார். சிட்டி ரோபோ கட்டிடத்தின் மேலே ஏறி அவரது கண்களின் வழியாகப் பதிலை ஐஸ்வர்யா ராய்க்கு காட்டிக் கொண்டிருப்பார். ஐஸ்வர்யா ராயும் அதைப் பார்த்து தேர்வினை எழுதி தேர்ச்சியும் பெற்று விடுவார். ஒருவேளை இத்தகைய சம்பவங்கள் கூட மென்பொருள் நிறுவனங்களுக்கு ஒரு சான்றாக இருந்திருக்கலாம்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம், தேர்வு எழுதும் போது (இறுதித் தேர்வு அல்ல) எங்கள் துறையின் தலைவர் வேடிக்கையாக ஒன்றைக் கூறுவார் "புக்க பார்த்தாவது பேப்பர்ல எழுதுங்கப்பா, அப்பவாவது நீங்க எழுதுறது மனசுல பதியும்" என்பார். அவர் கூறியது காப்பி அடிப்பதற்காக அல்ல... மாறாக எழுதும் போது மனதில் பதிய வேண்டும் என்பதற்காக.
எது எப்படியோ மாணவர்களை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவுடன் கண்களுக்குத் தெரியாத எந்திரன்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தனிநபரின் சுதந்திரம் பாதிக்கும் பட்சத்தில் இவை ஆபத்தானவை.
- பாண்டி
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
- ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
- கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்
- பாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள்
- எரிபொருள் அறிவியல் அறிவோம்! ஏமாளிகளாக ஆகாமல் இருப்போம்!!