கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ப.பிரபாகரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதியினை கண்டுப்பிடித்ததன் மூலம், இதுகாறும் அதில் நிலவி வந்த கணிதவியல் சமன்பாட்டுச் சிக்கலை, அறிவியல் அறிஞர்கள் தற்செயலாக எளிமைப்படுத்தியிருக்கிறார்கள்.
தனித்ததொரு நீர்த்திவலையினை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது, அந்த நீர்த்திவலை, அதன் மீது செயல்படுத்தப்படும் மின்புலவிசையின் எந்த எல்லைவரை உடையாமல் தாக்குப் பிடித்து நிற்கும் என்பது இயற்பியல் ஆய்வுலகில் இதுவரை கண்டறிய முடியாத வரம்பெல்லைக்குள் இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது அந்த இயற்கை அல்லது இயற்பியல் விதி கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த இயற்கை நிகழ்வில் இதுகாறும் நிலவிவந்த கோட்ப்பாட்டுச் சிக்கல் எளிமைப்பட்டுள்ளது.
ஆய்வதற்கரிய இந்த இயற்கை நிகழ்வைக் குறித்த பல்வேறு ஆய்வுகள் கடந்த பத்தாண்டுகளாகவே நிகழ்ந்து வருகின்றன. நீர்த்திவலையை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது, மின்புலத்தின் எந்த அளவுவரை அது உடையாமல் இருக்கிறது என்பது தான் ஆய்வின் அடிப்படை. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்நிகழ்வு எண்ணிக் காண்பதற்கு எளிமையாகத் தோன்றினும், இந்நிகழ்வினை விளக்கக்கூடிய நுணுக்கமான கணித விதிகள் ஏதும் இதுவரை கண்டறியப்படாமலேயே இருந்தது. தற்பொழுது அவ்விதி கண்டறியப்பட்டுள்ளது. நீர்த்திவலையைப் பற்றிய இந்தப் புதிய விதி, விண்வெளி ஆய்வு முதல், நிறை நிறமாலையியல் (mass spectroscopy), உயர்தர அச்சு (high resolution printing), காற்றை தூய்மைப்படுத்துதல் (air purification), மூலக்கூறு ஆய்வுகள் (molecular studies) போன்ற பலவற்றிலும் பல்வேறு முன்னேற்றங்களை காண்பதற்கு வழியமைக்கப் போகிறது.
“எங்களுடைய இந்த ஆய்வு முடிவுக்கு முன்னர், மின்புலத்தில் வைக்கப்ப்பட்ட நீர்த்திவலையின் நிலைத்தன்மையை கணக்கிடுவதற்கு மிகவும் கடினமான பல்வேறு முறைகளை அறிவியல்-பொறியியல் அறிஞர்கள் மேற்கொண்டிருந்தார்கள்” என்று மாசச்சூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT – Massachusetts institute of technology), இயற்பியலும் பொறியியலும் பயிலும் மாணவரான ஜஸ்டின் பெரோசு (Justin Beroz) தெரிவித்தார்.
“எளிய தாள்-கோல் உதவியைக் கொண்டே, எவரும் இதனை எளிமையாகக் கணக்கிட்டு உடனடியாகப் புரிந்து கொள்ள முடியும்” என்று அவர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார். இயற்பியல் துறையறிவு இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் இச்சமன்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு சற்றுக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம்.
பெரோசும் அவரது கூட்டாளிகளும் இணைந்து வெளியிட்டுள்ள அவர்தம் ஆய்வறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளச் செய்திகள் ஏற்கனவே இயற்பியல் ஆய்வுலகில் பல்லாண்டு காலமாகவே ஆய்வு செய்யப்பட்டு வந்த ஒன்றுதான் எனினும், அது பெரும்பாலோனோரால் அறியப்பட்டிருக்கவில்லை.
விண்ணிலிருந்து மழைத்துளிகள் வீழும்போது, புயல்மேகங்களில் (storm clouds) உருவாகும் மின்புல விசைகள் அவற்றின் மீது செயல்படுவதனால் அவை மின்புலத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இதைத்தவிர, உயர் மின்னழுத்த கம்பிகளின் வழியே செல்லும் மின்சாரத்தின் விளைவாக உண்டாகும் மின்புலத்தினாலும் அவை பாதிக்கப்படலாம்.
நீர்த்திவலைகளை கோள வடிவத்தில் இறுக்கி பிணைத்து வைத்திருப்பது நீரின் பரப்பு இழுவிசைதான் (surface tension). திரவத்த்திவலையை மின்புலத்திற்கு உட்படுத்தும்போது, திரவத்துளியின் புறப்பரப்பின் வழியே மின்னழுத்தம் செயல்படுவதனால் நீர் மூலக்கூறு தனது பிணைப்புவிசையை மெல்லவிழக்கிறது. இறுக்குவிசையின் பிடி தளர்வதனால், நீர் மூலக்கூறு (H2O) அதன் கோள வடிவத்திற்கு எதிர்த்திசையில் இயங்கி இரண்டாகப் பிரியும்போது, திரவத்துளிக்குள் மின்னூட்டம் உருவாகிறது.
அண்மைக்காலங்களில், நுண்ணீர்மை அளவுகளின் (microfluidics) அடிப்படையில் (நானோ மீட்டர் அளவில் - 10 -9 லிட்டர்) செயல்படும் அறிவியல் கருவிகளைக் கொண்டு மேற்கொள்ளப்படும் நீரின் இத்தகையப் பண்புகளைப் பற்றி ஆயும் அறிவியல் சோதனைகள் அதிகரித்துள்ளன. ஆனால் நீரின் இந்தப்பண்பினை, அதாவது மின்புலத்திற்கு உட்படும் நீர்த்திவலையின் நிலைப்புத் தன்மையைப் மிகச்சரியாக கணக்கிடுவதில், அறிவியல் அறிஞர்கள் இதுகாறும் எளிமையான வழியைக் கண்டறிய முடியாத நிலையிலேயே உள்ளனர். அதற்கு காரணம், கோட்பாட்டு முடிவுகளுக்கும் (THEORITICAL) சோதனை முடிவுகளுக்கும் (EXPERIMENTAL) இடையேயான வேறுபாடேயாகும். அதாவது, கணிதச் சமன்பாட்டின் மூலம் பெறப்பட்ட முடிவின்படி, ஒரு குறிப்பிட்ட மின்புலத்தில் நீரித்திவலை உடைய வேண்டும். அவ்வாறு உடையும் அந்த மின்புலத்தின் எல்லையை வினைத் தொடங்காற்றல் (threshold energy) என்பர். ஆனால், பரிசோதனை செய்யும்போது, அந்த வினைத்தொடங்காற்றலில் நீர்த் திவலை சில சமயங்களில் உடைந்தும் சில சமயங்களில் உடையாமலும் நிலைத்த கோள வடிவத்திலேயே இருக்கின்றது.
”நீர்த்திவலையின் மீது செயல்படும் மின்புலம் மிக வலிமையாக இருக்கும்போது, அந்த மின்விசையை சமன் செய்யக்கூடிய ஒரு வடிவத்தை திரவத்திவலையினால் கண்டறிய முடியாத நிலையில் அது உடைந்து விடுகின்றது; இதைத்தான் தற்போது நாங்கள் கண்டிறிந்துள்ளோம்” என பெரோசு குறிப்பிடுகிறார்.
இரு உலோகத்தகடுகளின் மின்புலத்திற்கு நடுவே வைக்கப்பட்ட நீர்த்திவலையின் உடையும் பண்பு, அதிவேக காமிராவைக் கொண்டு (high-speed camera) ஆய்வினை படம்பிடித்தபோது கண்டறியப்பட்டுள்ளது.
நீர்த்திவலையின் மீது செயல்படும் மின்புலத்தின் அளவு ஒரு கட்டத்தில் அந்நீர்த்திவலையை உடைக்க முனைகிறது. உடைவதற்கு முன், அந்த நீர்த்திவலையின் வடிவம் கோள வடிவத்திலிருந்து உடையும் நிலைக்கு உருமாறும் (critical stable shape) அந்தக் கடைசிப் புள்ளியை ஆய்வாளர்கள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளார்கள். நீர்த்திவலையின் அந்தக் கடைசி நிலைப்பு எல்லையை, ஆளும் இயற்கை விதி ஒரு மின்னாற்றல் விதியென (power law) அறிஞர்கள் விளக்குகின்றனர். இந்த மின்னாற்றல் விதியானது, நீர்த்திவலையை உடைக்கும் அந்தச் செயல் தொடங்காற்று மின்புலப்புள்ளியைப் பற்றி விளக்குகிறது.
நீர்த்திவலையின் பருமனையும் ஆரத்தையும் மையமாகக் கொண்டு இந்த மின்னாற்றல் விதி கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதற்கு முன்னர், நீர்த்திவலையின் உயரத்தையும், ஆரத்தையும் கொண்டு நீர்த்திவலையின் நிலைப்பு எல்லையை விளக்க முயற்சிக்கபட்டது.
கடந்த நூறாண்டு காலமரபில் நீர்த்திவலையின் நிலைப்பு எல்லையை விளக்க அதன் உயரத்தையே தேர்ந்தெடுத்தனர் என பெரோசு குறிப்பிடுகிறார்.
நீர்த்திவலையின் வடிவம் மாறும்போது, அதன் உயரமும் மாறுகிறது. இது, அதன் நிலைப்பு எல்லையை விளக்கும் கணிதச் சமன்பாட்டை சிக்கலாக்குகிறது. ஆனால், மின்புலத்திற்கு உட்படும் நீர்த்திவலையின் உயரம் எவ்வாறு மாறியமைந்தாலும், அதன் பருமன் மாறாமல் தொடர்ந்து நிலையாகவே இருக்கின்றது.
நீர்த்திவலையின் பரப்பு இழுவிசை (droplet surface tension), மின்புல வலிமை (electric field strength), ஊடக மின்புலவிடுதிறன் (air electric permittivity), நீர்த்திவலையின் ஆரம் (radius) போன்ற நான்கு அளபுருக்களோடு நீர்த்திவலையின் பருமனையும் (volume) சேர்த்து மொத்தம் ஐந்து அளபுருக்களைக் கொண்ட புதியச் சமன்பாட்டின் மூலம், நீர்த்திவலையின் நிலைப்பெல்லை விளக்கப்படுகிறது என ஆய்வுக்குழு குறிப்பிடுகிறது.
பல்வேறு அறிவியல் துறைகளில் எங்களுக்கிருந்த நீண்டகால கோட்பாட்டுப் புரிதல் பயிற்சியின் அடிப்படையிலேயே இத்தகைய சாதனையை புரிய முடிந்தது என்பதனை எவரும் உய்த்தறிய முடியும். மேலும் நீர்த்திவலைப் பற்றிய இந்தப் புதியக் கண்டுபிடிப்பானது, மின்னூற்பு (மின்விசையைக் கொண்டு பாலிமர் இழைகளை உருவாக்கும் முறைக்கு இப்பெயர் கொடுக்கப்படுகிறது - (electrospinning), நிலைமின்னியல் வடிகட்டல் (electrostatic filtration) , பால்மப்பகுத்தல் (demulsification) போன்ற தொழிற்துறை செயல்முறைகளில் பல முன்னேற்றங்களை கொண்டு வரப் போகிறது.
”கோட்பாட்டளவில் பார்க்கும்போது, நீர்த்திவலையின் இந்த மின்புலப்பண்பினை விளக்குவதில் உள்ள கணிதவியல் சிக்கலை, இக்கண்டுபிடிப்பு தற்செயலாக எளிமைப்படுத்தியிருக்கிறது” என்று பெரோசு குறிப்பிடுகிறார். இந்தப் புதியக் கண்டுபிடிப்பு Physical Review Letters எனும் பன்னாட்டு இயற்பியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.
(‘Sciencealert’ இணையதளத்தில், 22 சூன் அன்று வெளியாகியிருந்த கட்டுரையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு)
தமிழில் : ப.பிரபாகரன்
- விவரங்கள்
- ப.பிரபாகரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
எதிர்வரும் நாளில் ’கிலோகிராம்’ என்பதற்கான அறிவியல் வரையறை மாறுகின்றது. இந்த அறிவிப்பின் உண்மையான பொருள் என்ன?
கிலோகிராம் என்ற அலகிற்கான அறிவியல் வரையறை உருவாக்கப்பட்டு இவ்வாண்டோடு 130 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அந்த வரையறைக்கு தற்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அளவியலில் இதுநாள் வரையிலும் கிலோகிராம் என்ற அலகிற்கு நாம் உருவாக்கி வைத்திருந்த எந்தவொரு வரையறையைக் காட்டிலும் மிகத் துல்லியமான ஒரு வரையறையாக, 20 மே 2019 முதல் நடைமுறைக்கு வரும் இந்தப்புதிய வரையறை இருக்கப்போகிறது. இருப்பினும் இது முடிவல்ல.
அமெரிக்க ஐக்கிய நாட்டு, இண்டியானா மாகாணத்தின் வேர்சைல்ஸ் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிறை மற்றும் அளவீடுகள் மாநாட்டில், (Conference on Weights and Measures) பழைய கிலோகிராமிற்கான வரையறையை மாற்றுவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
(பழைய கிலோகிராம் இறந்ததே..! புதிய கிலோகிராம் வாழ்கவே..!! என்பது அம்மாநாட்டின் கோசம்).
அம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அறிவியல் வழிப்பட்ட அளவிடும் முறையான அளவீட்டியலைப் பற்றி, நம் காலத்திலும் கூட பெரும்பாலான மக்கள் சிந்திப்பதில்லை.
ஆனால், இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது உலகை அளந்து அறிவதற்கான ஒரு அறிவியல் அமைப்புமுறை என்பது மட்டுமல்ல. அறிவியல் அறிஞர்கள் இந்த அளவீட்டு முறைமைகளைபயன்படுத்தி தான் தங்களுடைய உற்றுநோக்கல் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அண்டத்தை பற்றி இன்று நாம் அறிந்துவைத்துள்ள, அறிவியல் விதிகளுக்கு உவப்ப, அளவீடுகளும் மிகத் துல்லியமாகவும் அதே சமயத்தில் காலத்திற்கு காலம் இடத்திற்கு இடம் மாற்றத்திற்கும் உட்படாத மாறிலியாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஆனால், இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பன்னாட்டு அலகீட்டு முறைமையில் (International System of Units) உள்ள ஏழு அலகுகளில், மின்சாரத்தை அளவிடுவதற்கான ஆம்பியர், வெப்பநிலையை அளவிடுவதற்கான கெல்வின், ஒரு பருப்பொருளில் பொதிந்துள்ள நிறையினை அளவிடுவதற்கான மோல் மற்றும் கிலோகிராம் ஆகிய நான்கு அலகுகள் இயற்பியல் மாறிலியின் அடிப்படையில் வரையறுக்கப்படவில்லை.
பன்னாட்டு நிறை மற்றும் அளவீட்டு அமைப்பின் ஓய்வு பெற்ற இயக்குனர் (International Bureau of Weights and Measures (BIPM)) தெர்ரி குயின் (Terry Quinn) இது குறித்து விளக்கிய போது “ அளவீட்டியலில் பயன்படுத்தப்படும் அலகுகள் இயற்பியல் மாறிலிகளின் அடிப்படையில் அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படுவதன் நோக்கம், கால-வெளி மாற்றத்திற்கு உட்படாமல், எக்காலத்திலும் நீடித்த நிலையான வரையறையாக இருக்க வேண்டும் என்பதே. அவ்வாறு வரையறுக்கப்படுபவை, உலகம் முழுவதிலும் உள்ள அறிவியல் அறிஞர்களால் எளிமையாக கையாளப்படும் வகையிலும் இருக்க வேண்டும்” என்றார்.
சான்றாக, ஒளி வெற்றிடத்தில், ஒரு வினாடியின் 1/299792458 நேரத்தில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர் என அளவியலில் வரையறுக்கப்படுகிறது. அதைப்போல, ஒரு சீசியம் அணு 9,192,631,770 முறை அலைவுறுவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் காலம் ஒரு வினாடி என வரையறுக்கப்படுகிறது. அதைப்போல ஒரு கிலோகிராம் என்பதற்கான வரையறையும் வெறும் பேச்சளவிலான வரையறையாக இல்லாமல் ஓர் இயற்பியல் மாறிலி கிலோகிராமாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கிலோ கிராம் என்பதற்கான இயற்பியல் மூல மாதிரி 1889 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, 9:1 என்ற விகிதத்தில், பிளாட்டினம் மற்றும் இரிடியத்தால் உருவாக்கப்பட்ட சிறப்பு உலோக உருளையின் நிறையே ஒரு கிலோகிராம் என வரையறுக்கப்பட்டது. இந்தச் சிறப்பு உலோக உருளை அனைத்துலக நிறை மற்றும் அளவீட்டியல் நிறுவனங்களின் (BIPM headquarters) தலைமையிடங்களில் வைக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு படித்தர அலகீட்டு முறைமையில் (SI units), ஓர் பருப்பொருளை அடைப்படையாக வைத்து வரையறுக்கப்பட்ட அலகான இதுதான், கிலோகிராமிற்கான ஒரே அடிப்படை அலகாகும். தேசிய தர அளவீட்டிற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பன்னாட்டு நிறை மாதிரிக் குடுவையின் பிரதிகளை (உலகம் முழுவதும் 6 அதிகாரப்பூர்வ பிரதிகள் உள்ளதாக, BIPM குறிப்பிடுகிறது) பிரான்சில் உள்ள பிளாட்டினம்-இரிடியம் நிறைமாதிரிக் குடுவையின் நிறையோடு (mass) அவ்வப்போது ஒப்பிட்டு ஆய்வுச் செய்யப்படும்.
அவ்வாறு ஆய்வு செய்தபோது, வியப்பிற்குரிய சில செய்திகள் கிடைத்தன. வெவ்வேறு இடங்கள்லிருந்து கொண்டு வரப்பட்ட பிளாட்டினம்-இரிடியம் நிறைமாதிரியின் பிரதிகளின் நிறையினை அளவிட்டபோத, அவற்றின் நிறை, பிரான்சில் உள்ள அந்த உண்மையான பன்னாட்டு படித்தர நிறைமாதிரி உருளையின் (International Prototype of the Kilogram -IPK) நிறையிலிருந்து வேறுப்பட்டிருந்ததை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். வெவ்வேறி இடங்களில் இருந்த பன்னாட்டு படித்தர நிறைமாதிரி உருளைகள் அதன் உண்மையான நிறையை இழந்திருக்கிறதா அல்லது பாரிசில் வைக்கப்பட்டுள்ள உண்மையான பிளாட்டினம்-இரிடியம் நிறை மாதிரி உருளையின் (IPK) நிறை அதிகரித்திருக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. உருளைகளுக்கு இடையேயான நிறை வேறுபாடு அளவிடுவதற்கரிய மீச்சிறு மைக்ரோகிராம் அளவில் இருந்தாலும் கூட, அறிவியல் அதை ஒப்புக்கொள்ளாது. அறிவியலின் துல்லியத்தன்மைக்கு அது ஏற்புடையதல்ல.
(NIST (National Institute of Standards and Technology)-யில் வைக்கப்பட்டுள்ள ஒரு IPK. இது இரண்டு மணி சாடி அமைப்பில் உள்ளது)
ஆகையினால், கடந்த சில ஆண்டுகளாகவே அளவீட்டியல் அறிவியல் அறிஞர்களிடையே நிறையை அளவிடுவதற்கு ஒரு புதிய துல்லியமான படித்தர அலகு தேவை என்று பேச்சு எழுந்தது. இறுதியாக, பிளாங்க் மாறிலியின் (Planck constant) அடிப்படையில் நிறையின் அலகினை மறு வரையறை செய்வது என முடிவெடுக்கப்பட்டது. பிளாங்க் மாறிலி என்பது, ஒரு ஃபோட்டானின் ஆற்றலுக்கும் அதிர்வெண்ணிற்கும் இடையேயுள்ள தகவு என வரையறுக்கப்படுகிறது. இதன் மீத்துல்லியமான மதிப்பு கடந்த ஆண்டில் கண்டறியப்பட்டது.
குயின் இதுகுறித்து விளக்கும்போது, “ஒளியின் வேகத்திற்கும் சீசியம் அணு வெளியிடும் ஒத்ததிர்வெண்ணிற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் இயற்பியல் மாறிலியான பிளாங்க் மாறிலியின் அடிப்படையில், ஒரு கிலோகிராமை நம்மால் இப்பொழுது வரையறுக்க முடியும்” என்றார். பிளாங்கி மாறிலியின் அலகு kgm2s-1என்பதனால், ஒளியின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு மீட்டரையும், சீசியம் அணுவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் அணுக்கடிகாரத்தின் அடிப்படையிலான விநாடியையும் நாம் முதலில் வரையறுத்துக்கொண்டு பிறகு கிலோகிராமை வரையறுக்கிறோம் என்று மேலும் அவர் விளக்கிக் கூறினார்.
எனவே, புதிய வரையறையின்படி ஒரு கிலோகிராம் என்பது, 6.626 069… × 10–34 என்ற பிளாங்க் மாறிலியின் துல்லிய மதிப்பினை பன்னாட்டு படித்தர அலகீட்டில் குறிப்பிடும்போது, (SI unit) கிடைக்கும் s–1m2kg என்பதாகும். இது J s-என்ற ஆற்றல் அலகிற்கு சமமானது.
கிலோகிராம் அளவீட்டியலில் செய்யப்பட்டிருக்கும் இந்தப்புதிய வரையறையினால் பொதுமக்கள் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் உணரமாட்டார்கள். அதாவது, இந்தப்புதிய வரையறைக்கும் முன்பும் பின்பும் ஒரு கிலோகிராம் ஆப்பிளின் எடை ஒரு கிலோகிராமகத்தான் இருக்கப்போகிறது. ஆனால் அளவீட்டியலில், குறிப்பாக அறிவியல் அறிஞர்களிடையே இது பெரிய மாற்றத்தை விளைவிக்கும். ஏனெனில், அடிப்படை படித்தர அலகுகளில் ஏற்படும் மாற்றம், அதனைச்சார்ந்து இயங்கும் வேறு பல அலகுகளிலும் மாற்றத்தை தோற்றுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நிறை அலகிற்கான இந்தப்புதிய துல்லியமான வரையறையை அடிப்படையாகக் கொண்டு, ஆம்பியர், மோல் போன்ற சார்பு அலகுகளும் இன்னும் துல்லியமாக வரையறுக்கப்படும். கிலோகிராமிற்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்தப்புதிய வரையறையின் விளைவினால், அறிவியல் அலகுகளை கற்பிப்பதில் நல்லபுரிதலும் நேர்த்தியும் மேலும் அதிகரிக்கும் என அறிவியல் அறிஞர்கள் நம்புவதாக குயின்ஸ் தெரிவித்தார்.
அளவீடுகளின் துல்லியத் தன்மையை உச்சபட்ச அளவில் செம்மைப்படுத்துவதற்குரிய வழிகளை இது திறந்து விட்டிருக்கிறது. அறிவியலில் பயன்படுத்தப்படும் மீச்சிறு மற்றும் மீப்பெரு அளவுகளை மிகத்துல்லியமாக அளப்பதற்கும் அதன்மூலம் அறிவியலில் துல்லியத் தன்மையை மேலும் செம்மைப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இது அமையும்” என்கிறார், குயின்.
அளவீட்டியலின் பழைய சகாப்தம் முடிந்து போவதற்கும், ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதற்கும் இது வழிவகுத்திருக்கின்றது.
புறச்சூழலினால் பெரிதும் பாதிப்படையா வண்ணம், பாதுகாக்கப்பட்ட கவிகை கட்டுமானத்தினால் செய்யப்பட்ட இரண்டு மணிச்சாடிகளில் வைத்து ஒரு சிறிய உலோகத்துண்டினை (பிளாட்டினம்-இரிடியம் உலோகத்துண்டு) பல ஆண்டுகளாக ஒரே மாதிரியான கட்டுச்சூழலில் வைத்து பேணுப்பட வேண்டியது, பன்னாட்டு படித்தர நிறைமாதிரிக்கு (IPK) மிக அவசியமான நிபந்தனை. நிறைமாதிரியின் இத்தகைய உயர் துல்லியத்தை நாம் மெச்சுகின்றோம். ஆனால் அறிவியல் அறிஞர்கள் எப்பொழுதும் அறிவியல் அறிஞர்களாகவே செயல்படுகின்றனர்.
”எதிர்வரும் அடுத்த பத்தாண்டுகளில் படித்தர நிறைமாதிரிக் குடுவையின் நிறை எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதும் ஆய்வு செய்யப்படவுள்ளது” என்று குயின் தெரிவிக்கிறார். இக்கருத்து, தற்பொழுது புதிதாக கொடுக்கப்பட்டிருக்கும் நிறை வரையறைக்கு சற்று சவாலனதாக இருக்கலாம்.
ஆய்வுக்கு உட்படுத்தப்படும் இக்காலகட்டத்தில், நிறை மாதிரிக் குடுவை தனது நிறையை உண்மையிலேயே இழக்கிறது என்பது கண்டறியப்படால், பின்பு நாம் அதை உறுதிப்படுத்தி விடலாம். பழமைக்கும் புதுமைக்குமான சற்றே சிக்காலான இச்சூழலில், கிலோகிராமின் புதிய வரையறை எல்லோராலும் எளிதாகப் புரிந்து கொள்ளப்படும் என்ற குயின் கூறுவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் விளையாடும் லீகோ (Lego) கட்டுமான அடிக்கூறுகளைக்கொண்டே, பிளாங்க் மாறிலியை கணக்கிடும் ஒரு எளிய தராசினை குயின் வடிவமைத்திருக்கிறார். அத்தராசு பிளாங்க் மாறிலியை 5 விழுக்காட்டிற்கு துல்லியமாக அளக்கக் கூடியதாம். பள்ளிக்குழந்தைகள் அத்தராசினை வைத்து குதூகலமான விளையாட்டில் திளைப்பார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். கிலோகிராமிற்கான இந்தப் புதிய வரையறை உலக அளவீட்டியல் தினமான 20 மே 2019 முதல் நடைமுறைக்கு வருகின்றது.
(Sciencealert இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.
தமிழில்: ப.பிரபாகரன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
கறவைப் பண்ணைகளில் கிடேரிக் கன்றுகளை மட்டும் பிறக்கச் செய்வதன் மூலம் காளைகளின் எண்ணிக்கை குறையலாம். இதன் மூலம் இனவிருத்திக்கு பயன்படுத்தப்படும் காளைகளில் மரபணு அடிப்படையிலான பன்முகத் தன்மை குறைய வாய்ப்புள்ளது. ஆகவே இதை சீர் தூக்கிப் பார்த்து இந்த தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
‘விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பத்தின்’ நோக்கம் காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும் தனியே சலித்தெடுத்து அவற்றை சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் செலுத்தி சினை முட்டையை கருவூட்டச் செய்து கிடேரிக் கன்றை மட்டுமே இப்பூமியில் பிறக்கச் செய்வதே ஆகும்.
இந்த கட்டுரையில் கிடேரி கன்றுகளின் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதாலும், கிடா கன்றுகளின் பிறப்பு வீதத்தைக் குறைப்பதாலும் எதிர் காலத்தில் துளிர் விட வாய்ப்புள்ள சவால்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
கருத்தரிப்புக்காக ஆகும் செலவு அதிகரிக்கலாம். செலவு அதிகமாக இருப்பதால் இந்த வகையான விந்தணுக்களைக் கொண்டு கருவூட்டல் செய்யும் போது தக்க வல்லுநர்களை அழைக்க வேண்டியிருக்கும். அது மேலும் செலவுகளை அதிகரிக்கும். வல்லுநர்களுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
காளைகளின் எண்ணிக்கை குறைவதால் மரபணு பன்முகத் தன்மை குறையலாம். இதனால் உள்ளினச் சேர்க்கை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எதிர்கால சந்ததிகள் மரபணு சார்ந்த சில இன்னல்களுக்கு ஆளாகலாம். கிராமப்புறங்களில் காளைகள் குறைவதால் இனவிருத்திக்காக விவசாயிகள் தற்சார்பை இழக்க வேண்டியிருக்கும்.
காளைக் கன்றுகளை பிறப்பிலேயே கட்டுப்படுத்துவது என்பதை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. வணிகம் ஒரு பக்கம் அழுத்தத்தைக் கொடுத்தாலும் அறத்தையும் காக்க வேண்டியுள்ளது என்பதை மறக்கக் கூடாது.
ஆக இந்த தொழில்நுட்பத்தை பரிட்சார்த்த அடிப்படையில் அமல்படுத்தி அதன் சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்த பின்னரே களத்தில் முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாகும்.
- செந்தமிழ்ச் செல்வன்
- விவரங்கள்
- செந்தமிழ்ச் செல்வன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி காலி
(Sperm Sexing or Semen Sexing Technology in Dairy Cattle Farming: Surgery Success But Patient Died)
கிடேரிக் கன்றுகளை மட்டுமே பிறக்கச் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் அமைந்த ஆராய்ச்சியில் பிறந்ததே இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறியும் தொழில்நுட்பம்” (Sperm Sexing / Semen Sexing Technology) என்பதை முந்தைய கட்டுரையில் அறிந்தோம். இயற்கை ஒரு கன்று கிடாவாக (ஆணாக) பிறப்பதற்கும், கிடேரியாக (பெண்) பிறப்பதற்கும் உள்ள சாத்தியக் கூற்றை சமமாகவே (50%-50%) வைத்திருக்கிறது. அப்படித்தான் இயற்கை இது வரை ஆண் மற்றும் பெண்ணின் எண்ணிக்கையை அல்லது விகிதாச்சாரத்தை (Gender Ratio) மனிதன் உள்ளிட்ட இதர பாலூட்டிகளில் முடிந்தவரை சமமாக வைத்துள்ளது. நிற்க!
ஆனால் இந்த “விந்தணுக்களின் பாலினத்தை கண்டறிதல்” எனும் தொழில்நுட்பத்தின் நோக்கமென்பது இப்பூமியில் பிறப்பெடுக்கும் ஒரு கன்று பெண்ணாயிருப்பதற்கான (கிடேரி) சாத்தியக்கூறை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதத்தை நோக்கி உயர்த்துவதே ஆகும். இப்படி ஆண் மற்றும் பெண் பாலினத்தின் பிறப்பு விகிதத்தை அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு மாற்றுவதன் மூலம் மனிதன் தனக்கு வேண்டிய பாலினத்திற்கு ஆதரவாகவும், தனக்கு வேண்டாத பாலினத்திற்கு எதிராகவும் செயல்படுகிறான். இதற்கு அவன் பிரதானமாக விளிக்கும் காரணமென்னவென்றால் பொருளாதாரம்! பொருளாதாரம்!! பொருளாதாரம்!!!
பசுவின் கருப்பையில் உருப்பெறும் கருமுட்டையின் (Zygote) பாலினத்தை தீர்மானிப்பது அந்த கருமுட்டை உருவாக காரணமாயிருந்த விந்தணுவின் வகையை பொருத்தது என்பதையும் முந்தைய கட்டுரையின் வாயிலாக அறிந்தோம். காளையின் விந்துவில் ”X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்கள் உள்ளதென்றும், கிடேரி கன்று உருவாக பசுவின் சினைமுட்டை (Ovum / Egg) காளையின் ”X” வகை விந்தணுவால் கருத்தரிக்கப்பட வேண்டும் என்பதையும் கண்டோம்.
ஆக நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொலிக்காளையின் விந்துவை லாவகமாக சேகரித்து அவற்றிலிருந்து ”X” மற்றும் “Y” வகை விந்தணுக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து பின்னர் அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட ”X” வகை விந்தணுக்களை மட்டும் சினை ஊசி மூலம் பசுவின் கருவறைக்குள் புகுத்தி சினைமுட்டையை கருவுறச் செய்து பெண் (கிடேரி) கருமுட்டையை (Female Zygote) உருவாக்குதலே ஆகும். அது பின்னர் பெண் கருவாக (Female Embryo) வளர்ந்து, பெண் கன்றாக (Female Calf) மண்ணில் பிறப்பெடுக்கும். இந்த நெடும் பயணத்தின் முக்கிய கூறு என்னவென்றால் கோடானுகோடி விந்தணுக்களைக் கொண்ட “காளையின் விந்துவிலிருந்து “X” வகை விந்தணுக்களை மட்டும்” சல்லடை போட்டு பிரித்தெடுப்பதே ஆகும். இங்கு தான் தொழில்நுட்பத்தின் உதவி தேவைப்படுகிறது! அந்த தொழில்நுட்பம் தான் என்ன?
”X” வகை விந்தணுக்களை ”லேசர்” சல்லடை கொண்டு சலித்தெடுத்தல்:
இரண்டு வகை விந்தணுக்களான “X” மற்றும் “Y” விந்தணுக்கள் தங்களுக்கிடையே தலை வடிவம் (Head Shape), மொத்த எடை (Sperm weight), தலையில் சுமந்துள்ள மொத்த ‘குரோமோசோம்களின்’ அளவு (Quantity of Chromosome Content), மின்னூட்ட பண்பு (Charging Property) உள்ளிட்ட பண்புகளில் வேறுபடுகிறது. இந்த வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு “X” மற்றும் “Y” விந்தணுக்களானது ”மிதந்தோடும் செல்லின் பண்புகளை ஆராயும் கருவி” (Flow Cytometer) மூலம் தனித்தனியாக பிரிக்கப்படுகிறது.
இந்த முறையில் காளையிடமிருந்து லாவகமாக “கறக்கப்பட்ட” விந்துவானது ஒரு நுண்குழாய் வழியாக செலுத்தப்படுகிறது. அந்த நுண்குழாய் துளையின் அளவு (Diameter of the Hole) எப்படி இருக்கும் என்றால் அந்த குழாய் வழியாக கோடானுகோடி விந்தணுக்கள் அனைத்தும் ‘இரைபயணம்’ மேற்கொள்ளும் எறும்புகளை போல் ஒன்றன்பின் ஒன்றாக மட்டுமே செல்லமுடியும் எனும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படியாக மேலிருந்து கீழிறங்கும் விந்தணுக்கள் ஒவ்வொன்றும் நுண்குழாயின் மூக்குத் துவாரத்தில் இருந்து செலுத்தப்படும் “லேசர்” ஒளியில் குளித்து ஒளியை பிரதிபலிக்கின்றது. அவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளியின் அளவானது விந்தணு கொண்டுள்ள குரோமோசோமின் அளவை பொருத்து அமைகிறது. இவ்வாறு (பால்)’இனம்’ கண்டறியப்பட்ட விந்தணுக்களை தனித்தனியாக எளிதாக சேகரிப்பதற்காக அவை ஒவ்வொன்றும் மின்னூட்டம் பெறச்செய்யப்படுகிறது. அப்படி மின்னூட்டம் பெறச் செய்யும் போது “X” வகை விந்தணுக்கள் நேர் மின்னூட்டத்தையும் (Positive Charge), “Y” வகை விந்தணுக்கள் எதிர் மின்னூட்டத்தையும் (Negative Charge) பெறுகிறது. இவ்வாறு மின்னூட்டம் பெற்ற விந்தணுக்கள் தனித்தனியாக வெவ்வேறு குப்பிகளில் சேகரிக்கப் படுகிறது. ஆக இந்த தொழில்நுட்பத்தில் ”X” மற்றும் “Y” விந்தணு கலவையை கொண்ட விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் ”X” மற்றும் “Y” விந்தணுக்களானது தனித்தனியாக இரண்டு குப்பிகளில் பிரிக்கப்படுகிறது. சில சமயங்களில் ஏதொவொரு காரணத்தால் விந்தணுக்கள் சரிவர ‘இனம்’ கண்டறியப்படாமலும், அதனைத் தொடர்ந்து விந்தணுக்கள் எந்தவொரு மின்னூட்டத்தையும் பெறாமலும் வெளிவருவதுண்டு. இவ்வகை விந்தணுக்கள் மூன்றாவது குப்பியில் சேகரிக்கப்படுகிறது. இவற்றில் இறந்த விந்தணுக்களும் அடங்கும்.
தொழில்நுட்பத்தால் சோடைபோகும் விந்தணுக்கள்
இயற்கைமுறை கருவூட்டலில் (Natural Insemination) கோடானுகோடி விந்தணுக்கள் காளையின் ஆண்குறியிலிருந்து பசுவின் கருப்பை வாயில் (Os Cervix) பீச்சியடிகப்படுகிறது. அவை ஒவ்வொன்றின் வாழ்நாள் எவ்வளவு தெரியுமா? 24 மணி நேரம் மட்டுமே! அந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் நுழைந்து சினை முட்டையை கண்டு ஹாய் சொல்லி கருத்தரித்து விட வேண்டும். நேரம் செல்ல செல்ல விந்தணுவின் ஆற்றல் குறைந்துக் கொண்டே வரும். ஒரு வேளை கருத்தரிப்பிற்கு முன்னரே முழு ஆற்றலையும் விந்தணு இழந்துவிடுமானால் அந்த கணமே அந்த விந்தணுவும் இறக்க நேரிடும். ஆக விதையிலிருந்து விடுப்பட்ட விந்தணுக்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானதாகும். “பசுவை காளைக்கு விடும்” போது இந்த விந்தணுக்கள் மனிதனின் பார்வைக்கு படுவதில்லை. சூரிய வெளிச்சமும் இவைகளின் மீது பாய்ச்சப்படுவதில்லை. இந்த விந்தணுக்கள் கூடு விட்டு கூடு மட்டுமே பாய்கிறது. இந்த வகை விந்தணுக்களின் ஆற்றல் முழுவதும் சினை முட்டையை கருத்தரிப்பதை நோக்கி மட்டுமே செலவிடப்படுவதால் இயற்கைமுறை கருவூட்டலில் கருத்தரிக்கும் திறன் அதிகமாக இருக்கும்.
மாறாக, செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பத்தில் காளையிடமிருந்து விந்தணுக்களை சேகரிக்கும் போதும், பின்னர் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படும் போதும் பகுதியளவு ஆற்றல் வீணாக செலவிடப்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அதை தொடர்ந்து விந்தணுக்களின் தரம் உறுதி செய்யப்பட்டப் பின்னர் அவைகள் திரவ நைட்ரஜனில் (Liquid Nitrogen) உறை நிலையில் (Frozen Stage) பயன்பாட்டிற்காக பல வருடங்கள் சேமித்து வைக்கப்படுகிறது. இப்படி செய்யும் போது விந்தணுக்களிலுள்ள பயன்படுத்தப்படாத மீதியுள்ள உள்ளார்ந்த ஆற்றலும் அப்படியே உறங்கிய (Hibernation) நிலையில் தேக்கி வைக்கப்படுகிறது. எப்போது இந்த உறை விந்தணுக்கள் (Frozen Semen) சினை ஊசி மூலம் ஆய்வகத்திலிருந்து பசுவின் கருப்பையை வந்தடைகிறதோ அப்போது அவைகள் இந்த மீதமுள்ள பகுதியளவு ஆற்றலை பயன்படுத்தி சினைமுட்டையை கருத்தரிக்க வேண்டியுள்ளது. இப்படி அரைகுறை ஆற்றலை மட்டுமே கருத்தரிப்புக்காக பயன்படுத்த வேண்டியிருப்பதால் செயற்கைமுறை கருவூட்டலில் விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் (Fertility) இயற்கைமுறை கருவூட்டலை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. கூடு விட்டு கூடு மட்டுமே பாய்ந்து கருத்தரிக்க வேண்டிய விந்தணுக்களை மனிதன் கையாளும் போது அவற்றை வெளிச் சூழலுக்கு அம்பலப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. விளைவு? விந்தணுக்களின் கரித்தரிக்கும் திறன் குறைந்து விடுகிறது. ’செயற்கைமுறை கருவூட்டலில் பசு சினை பிடிக்கவில்லை… பசுவை காளைக்கு விடும் போது உடனே சினை பிடிக்கிறது…’ என்றெல்லாம் புலம்புவது இதனால் தான்.
இயற்கைமுறை கருவூட்டலிலும், செயற்கைமுறை கருவூட்டலிலும் பசுவின் கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் “X” மற்றும் “Y” என இரண்டு வகை விந்தணுக்களும் கலந்திருக்கும். பசுவின் சினை முட்டை இவ்விரண்டு வகை விந்தணுக்களில் எந்த வகை ஒன்றாலும் கருத்தரிக்கப் படலாம். ஆகவே தான் பிறக்கப் போகும் கன்று ஆணாக (கிடா) இருப்பதற்கும் பெண்ணாக (கிடேரி) இருப்பதற்குமான சாத்தியக் கூறு சம அளவில் (50%:50%) உள்ளது. ஆனால் ”பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களை” பயன்படுத்தும் போது கருப்பையை வந்தடையும் விந்தணுக்களில் பெரும்பாலும் “X” வகை விந்தணுக்கள் மட்டுமே இருப்பதால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட அதிகமாகவும், ஆணாக (கிடா) இருப்பதற்கான சாத்தியக் கூறு 50 சதவீதத்தைவிட குறைவாகவும் இருக்கிறது.
இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது என்னவென்றால் பிறக்கப் போகும் கன்று பெண்ணாக பிறப்பதற்கான சாத்தியக் கூறு 70 சதவீதமாகவும் இருக்கலாம். 80 சதவீதமாகவும் இருக்கலாம். 90 சதவீதமாகவும் இருக்கலாம். அதாவது 50 சதவீததிற்கு மேல் 100 சதவீதத்திற்கு கீழ் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டிப்பாக 100 சதவீதமாக இருக்காது. இதற்கு காரணம் இன்றுள்ள தொழில்நுட்பத்தில் “X” வகை விந்தணுக்கள் என்று பிரித்தெடுக்கப்படும் விந்தணுக்கள் அனைத்தும் “X” வகையாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக “Y” வகை விந்தணுக்களும் கணிசமாக கலந்து உள்ளது என்பதே கள நிலவரம். இதற்கு காரணம் “X” வகை விந்தணுக்களை துல்லியமாக பிரித்தெடுப்பதிலுள்ள ’தொழில்நுட்ப’ சவால்களும், சிக்கல்களுமே ஆகும். இவைகளனைத்தும் காலப்போக்கில் களையப் படலாம். கூடவே வேறு சில புதிய சவால்களும் முளை விடலாம். ஆக இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நிகழும் இந்த மல்யுத்தம் ஒரு தொடர்கதை என்பதில் ஐயமில்லை.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால் “X” வகை விந்தணுக்களை காளையின் விந்துவிலிருந்து “லேசர்” சல்லடை மூலம் பிரித்தெடுக்கும் போது விந்தணுக்கள் தங்களின் ஆற்றலை இழப்பதுடன் பல்வேறு வகையில் அயர்ச்சிக்கும் (Stress) உள்ளாகிறது. இத்துடன் நில்லாமல் பிரித்தெடுக்கப்பட்ட “X” வகை விந்தணுக்களை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வரை அவற்றை உறை விந்தாக மட்டுமே சேமித்து வைக்கப்பட வேண்டியிருக்கிறது. இது மேலும் மேலும் விந்தணுக்களுக்கு அயர்ச்சியை கொடுக்கிறது. இவ்வாறு காளையிலிருந்து பீறிட்ட விந்தணுக்கள் பசுவின் கருப்பையில் சினை முட்டையை முத்தமிடும் முன்பே சக்தியிழந்து கண்ணயர்வதால் இவைகளின் கருத்தரிக்கும் திறன் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. விளைவு? பிறக்கப்போகும் கன்று பெண்ணாக (கிடேரி) இருப்பதற்கான சாத்தியக் கூறு கருத்தளவில் (Theoretically) 50 சதவீதத்திற்கு மேல் இருந்தாலும் கள அனுபவம் சொல்வதென்னவென்றால் பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் மிகவும் குறைந்து இருக்கிறது என்பதே ஆகும்.
“கிடேரி மோகத்திற்காக” மனிதன் காளையின் விந்துவை கையாள முற்படும் போது விந்தணுக்களின் கருத்தரிக்கும் திறன் குறைகிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். பெண் கன்றுக்கு ஆசைப்பட்டு சினை முட்டையின் கருத்தரிப்பிற்கே அல்லவா நாம் உலை வைக்கிறோம்? இப்படி விந்தணுக்களின் வீரியத்தை குறைத்து விட்டு வேறென்ன சாதனையை நாம் சாதிக்க எத்தனிக்கிறோம்?
இயற்கையாக உள்ள கிடா (ஆண்) – கிடேரி (பெண்) கன்றின் பிறப்பு விகித்தை மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? இத்தொழில்நுட்பத்திலுள்ள அறம் மீறலுக்கான சாத்தியக்கூறு (Possibility of Violation of Ethics) என்னென்ன? என்பவை பற்றி அடுத்த கட்டுரையில் அறிவோம்! விவாதிப்போம்!!
- செந்தமிழ்ச் செல்வன்
- பால் அருந்தாத வெர்கீஸ் குரியன் வெண்மை புரட்சியின் தந்தையாக உருவெடுத்த வரலாறு (1921-2012)
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்: ஓர் அறிமுகம்
- பாலில் ஆக்ஸிடோசின் வர வாய்ப்புள்ளதா?
- ஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017
- கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி
- பித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்
- பாக்டீரியாக்கள் – கழிவறைகள் – தொழிலாளர்கள்
- எரிபொருள் அறிவியல் அறிவோம்! ஏமாளிகளாக ஆகாமல் இருப்போம்!!
- நியூட்டனின் விதிகளும் கிணற்றின் ஆழமும்
- சூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்
- பயர்பாக்ஸ் தரும் பயனுள்ள குறுஞ்செயலிகள்
- ஃபிரீ சாப்ட்வேர் – ஓர் அறிமுகம்
- வாட்சப்பை முந்தும் டெலிகிராம்
- Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?
- இணையத் திருவிழா
- ஸ்மார்ட் போனில் தகவல்களை ஸ்மார்ட்டாக வைத்திருக்க 8 கட்டளைகள்
- ஜெட் இன்ஜின் - மனிதனை பறக்க வைத்த இயந்திரம்
- ஸ்மார்ட் போன் வாங்கப் போகிறீர்களா?
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?