கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
பூமியின் வளங்களைப் புகைப்படங்கள் மூலம் அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம் இன்று வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றம், பூமியைப் பற்றிய விவரங்களின் சேகரிப்பு, பூமியின் நில வரைபடங்கள் தயாரிக்கப்பட்டது போன்றவை பூமியைப் பற்றி மேலும் அறிய நமக்கு உதவின. செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டதும், நவீனக் கணினிகளில் ஏற்பட்ட மென்பொருள் வளர்ச்சி இத்துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது
19ம் நூற்றாண்டில் வரைபடங்கள் வரைய ஆரம்பிக்கப்பட்ட பிறகு, தகவல் சேகரிப்புத் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பலூன்கள், விமானங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உயரமான இடங்களில் இருந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. 1960ல் செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி தகவல் சேகரிப்பு தொடங்கியது. கேமராக்களுடன் சேர்த்து தகவல்களைத் திரட்ட பலவிதமான ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன்படி ஒரு பொருள் அல்லது ஒரு பிரதேசத்தைக் குறித்த விவரங்கள் கருவிகளின் உதவியுடன் சேகரிக்கப்படத் தொடங்கின. இத்தகைய தொடர்பின் மூலம் விவரங்களைச் சேகரிக்கும் முறைக்கு உணரிகள், கேமராக்கள், ஸ்கேனர்கள், மின்காந்த கதிரியக்கம் (electro magnetic radiation) பயன்பட்டன.
சூரிய ஒளியின் உதவியால் தொலைத்தகவல் சேகரித்தல் தொடங்கியது. விவரங்கள் சேகரிப்பதற்காக கேமராக்களும், உணரிகளும் பொருத்தப்பட்டுள்ள தளமே ப்ளாட்பார்ம் (platform) என்று அழைக்கப்படுகிறது. பலூன்கள், விமானங்கள், செயற்கைக் கோள்களில் உணரிகள் போல கருவிகளைப் பொருத்தலாம். இவற்றைக் கொண்டு தொலைத்தகவல் திரட்டுதலை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பூமியில் இருந்து குறைவான உயரத்தில் இருந்து எடுக்கப்படும் முறை, ஆகாயத்தில் இருந்து எடுக்கப்படும் முறை மற்றும் செயற்கைக் கோள்களில் எடுக்கப்படும் முறை என இது மூன்று வகைப்படும். இத்தகையவற்றில் கேமராக்கள் மற்றும் உணரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருட்களின் மீது விழுந்து பிரதிபலிக்கும் ஒளியையே கேமரா படமாக எடுக்கிறது. இது தவிர மின்காந்தப் புலத்தை புகைப்படமாக ஸ்கேனர்கள் புகைப்படம் எடுக்கின்றன. பூமியில் இருந்து அல்லது பூமியின் உயரமான இடத்தில் இருந்து பூமியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கும் முறை இதில் முக்கியமானது. கேமராக்களைப் பயன்படுத்திப் புகைப்படங்களை எடுப்பது இதற்கு உதாரணம். பலூன்கள் அல்லது விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் ஆகாயத்தில் இருந்து பூமியின் புகைப்படங்களை எடுப்பது மற்றுமொரு முறை. சற்றேறக் குறைய பரப்பு குறைவாக உள்ள இடங்களின் புகைப்படங்களை எடுக்க இது பயன்படுகிறது. விமானம் கடந்து செல்லும் பிரதேசங்களின் தொடர்ச்சியான புகைப்படங்கள் இதன் மூலம் கிடைக்கிறது. எடுக்கப்படும் ஒவ்வொருப் புகைப்படத்திலும் அதற்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ளப் புகைப்படத்தின் 60%ம் சேர்த்தே எடுக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இருக்க நிறமாலைமானியின் (stereoscope) உதவியுடன் இறுதி செய்யப்படுகிறது. எடுக்கப்படும் புகைப்படங்களின் முப்பரிமான படங்கள் கிடைக்க இது உதவுகிறது. இது, இம்மாதிரி படங்களின் ஓவர்லேப் (over lap) என்று அழைக்கப்படுகிறது.
படங்களில் இருந்து முப்பரிமான வடிவம் கிடைக்க உதவும் உபகரணமே ஸ்டீரியோஸ்கோப். ஒரு பிரதேசத்தை ஒன்று சேர்ந்து பார்ப்பதற்கும், பூமியின் மேற்பரப்பில் மேடு பள்ளங்களைப் பிரித்து அறிவதற்கும் இந்தக் கருவி பெரிதும் பயன்படுகிறது.
செயற்கைக் கோள்கள் வர ஆரம்பித்தபின் இந்தக் குறைபாடுகள் எல்லாம் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன. செயற்கைக் கோள்கள் நடைதளங்களாக (platform) பயன்படத் தொடங்கியதுடன் தொலைத்தகவல் மேலும் திறம்பட்டது. செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ள உணரிகளின் மூலம் தகவல்களை சேகரித்துப் பரிமாறும் முறை வந்தது.
செயற்கைக் கோள்களை புவி சுற்றுவட்டப்பாதை செயற்கைக் கோள்கள், சூரிய சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள் என்று இரு வகைகளாகப் பிரிக்கலாம். பூமியின் சுழற்சியுடன் சுழலும் செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்கள். இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியில் இருந்து ஏறக்குறைய 36,000 கி.மீ உயரத்தில் அமைந்திருக்கும். இவை பூமியின் மூன்றின் ஒரு பகுதியைக் கண்காணித்து, தகவல்களை அனுப்பும் திறன் பெற்றது. புவி சுழற்சியின் வேகத்துடன் சம வேகத்தில் சுற்றுவதால் இவை எல்லா சமயங்களிலும் பூமியின் ஒரே பிரதேசத்தை நோக்கி நிலைநிறுத்தப்படுகின்றன. ஒரு பிரதேசத்தின் நிலையான தகவல்களைத் திரட்ட இவை பெரிதும் பயன்படுகின்றன. இவை தகவல் தொடர்பு, அன்றாடப் பருவநிலையில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.
துருவங்களுக்கு மேற்பகுதியில் பூமியைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களே சூரிய வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் செயற்கைக் கோள்கள். இவை புவி வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோள்களை விடக் குறைவான உயரத்திலேயே சுற்றுகின்றன. இவற்றின் சுற்றுவட்டப் பாதை பூமியின் மேற்பரப்பில் இருந்து ஏறக்குறைய 1000 கி.மீக்கும் குறைவாகவே இருக்கும். புவி வட்டப் பாதையில் சுழலும் செயற்கைக் கோள்களைக் காட்டிலும் குறைவான பரப்பையே இவை கண்காணிக்கின்றன. ஒரு சிறிய பகுதியைப் பற்றிய தகவல்களுக்கு இவை உதவுகின்றன. இயற்கை வளங்கள், நிலப்பரப்பு, இதர வளங்கள், நிலத்தடி நீர் போன்றவை பற்றி தகவல்களைச் சேகரிக்க இவை உதவுகின்றன.
இந்தியா ஏவிய இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள் புவி சுற்றுவட்டப் பாதை செயற்கைக் கோள்களாகும். ஐ. ஆர்.என்.எஸ் வரிசை செயற்கைக் கோள்கள் சூரிய வட்டப்பாதை செயற்கைக் கோள்கள்.
பொருட்கள் வெளியிடும் அல்லது பிரதிபலிக்கும் மின்காந்தக் கதிர்கள் வெவ்வேறு அளவுகளில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பொருளும் பிரதிபலிக்கும் ஆற்றலின் அளவே அப்பொருளின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் (spectral signature) என்று அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டு மண்ணின் ஸ்பெக்ட்ரல் கையொப்பம் தாவரங்களின் கையொப்பத்தில் இருந்து வேறுபட்டது. மின்காந்த நிறமாலையில் வெவ்வேறு அம்சங்களைப் பிரித்தறிய உதவும் வெவ்வேறு வகையான ஸ்கேனர்கள் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டுள்ளன. இவை வெவ்வேறு பொருட்களை ஸ்பெக்ட்ரல் கையொப்பத்தின் அடிப்படையில் பகுத்தறிந்து விவரங்களை சமிஞ்ஞைகள் வடிவத்தில் பூமியில் உள்ள மையங்களுக்கு எண்களாக அனுப்புகின்றன. இவை கணினிகளின் உதவியுடன் விரிவாக ஆராயப்பட்டு படங்கள் வடிவத்தில் மாற்றப்படுகின்றன. இவையே செயற்கைக்கோள் படங்கள் (satellite pictures).
செயற்கைக் கோள்களில் உள்ள உணரிகளால் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எல்லாப் பொருட்களையும் பகுத்தது அறிய முடிவதில்லை. ஓர் உணரியால் பிரித்து அடையாளம் காணக்கூடிய பூமியின் மேற்பரப்பில் உள்ள மிக மிகச் சிறிய பொருளே அதன் சிறப்பு நேர்வுகள் (special resolution). காலநிலை கணிப்பு, கடல் வானிலை அறிவிப்பு, நில வளங்களைப் புரிதல், வறட்சி, வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைக் கண்டறிதல், அடர்ந்த உட் காடுகளில் காட்டுத் தீயைக் கண்டுபிடிக்க, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, பயிர்களின் பரப்பு, பூச்சிகள் தாக்குதல் போன்றவற்றைப் பற்றிய விவரங்கள் சேகரிக்க, எண்ணெய், நிலத்தடி நீர் வளம் உள்ள பகுதிகளின் கண்டுபிடிப்பு போன்ற பல வகைகளில் இவை பயன்படுகின்றன.
தொலைத்தகவல் செய்திகள் மற்றும் இதர ஆய்வுகளை ஒன்றிணைத்து நில வரைபடங்கள் தயாரிக்க, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களை ஏற்படுத்த, அவற்றின் விரிவாக்கத்திற்கு மென்பொருட்கள் பயன்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கே உரிய அமைவிடம் (position) உள்ளது. அதனால் ஒரு பிரதேசத்தின் நில வரைபடம் இந்த அடிப்படையில் தயாரிக்கப்படும்போது அது அமைந்திருக்கும் சரியான அட்சரேகை, கடகரேகை போன்ற விவரங்களையும் எடுத்துக்கூறவேண்டும். இந்தத் தகவல்களை மென்பொருட்கள் உதவியுடன் பெறலாம். ரயில்வே, நதிகள் போன்றவை தொடர்பான திட்டங்களுக்கு இவை பயன்படுகின்றன. இதன் மூலம் மிகக் குறைவாக உள்ள பயணப்பாதை, சுங்கச்சாவடி இல்லாத பாதை, போக்குவரத்து நெரிசல் குறைவாக உள்ள பாதை, உணவகம், மருத்துவமனை போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்தப் படங்கள் உதவுகின்றன. ஒரு பிரதேசத்தில் உள்ள பொருட்களுக்கு இடையில் உள்ள தொடர்புகள் பற்றி, காலம்காலமாக அவற்றுக்கு இடையே இருந்துவரும் தொடர்பு பற்றியும் இந்தப் படங்கள் மூலம் அறியலாம். பயிர்களின் விளைச்சலில் ஏற்படும் மாற்றங்கள், காலநிலை மாற்றங்களுக்கேற்ப பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றி அறிய இவை உதவுகின்றன.
பல இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் விவரங்கள் ஒன்று சேர்க்கப்பட, விரிவாக்கப்பட, இவற்றின் விளக்கப் படங்களை உருவாக்க, இவற்றின் விளைவுகள் பற்றிய மாதிரிப் படங்களைத் தயாரிக்க, நில வரைபடங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் போன்றவை தயாரிக்க இவை பெரிதும் பயன்படுகின்றன.
இருப்பிடம் அறியும் தொழில்நுட்பத்திற்கு இச்செயற்கைக் கோள்களின் படங்கள் உதவுகின்றன. நில அமைப்பு, போக்குவரத்து போன்றவற்றுக்கு இந்த இருப்பிடமறியும் வசதி அவசியம். அமெரிக்காவில் இதற்காக ‘உலக இருப்பிடமறியும் வசதி’ Global Positioning System GPS உள்ளது. பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்களின் அட்சரேகை, தீர்க்கரேகை இடங்கள், உயரம், நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும் இந்த வசதியே இத்தகையவற்றில் மிக முக்கியமானது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 20,000 முதல் 20,200 கி.மீ உயரம் வரை உள்ள சுற்றுவட்டப் பாதைகளில் 6 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் சுற்றி வரும் 24 செயற்கைக் கோள்களின் கூட்டமைப்பே இது. இவற்றின் மூலமே இருப்பிடம் அறியும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் நம் கையில் உள்ள ஏற்பியில் கிடைத்தால் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். மிகக் குறைந்த அளவில் குறைந்தபட்சம் 4 செயற்கைக் கோள்களில் இருந்து வரும் சமிஞ்ஞைகள் கிடைக்கும்போது இந்த வசதியில் இருந்து நமக்கு விவரங்கள் கிடைக்கின்றன. இருப்பிடத்தை மேலும் துல்லியமாக அறிய உதவியாக இந்த செயற்கைக்கோள்களின் கட்டமைப்பில் இப்போது மேலும் கூடுதலாக செயற்கைக் கோள்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இராணுவத் தேவைகளுக்காகத் அமெரிக்கா இந்த கட்டமைப்பைத் தொடங்கியது என்றாலும், 1980 முதல் இது மக்களுக்கு கிடைக்கிறது. இந்திய இருப்பிடம் அறியும் செயற்கைக்கோள் கட்டமைப்பு (Indian Regional Navigation Satellite System – IRNSS) அமெரிக்காவின் இருப்பிடம் அறியும் வசதிக்குப் பதிலாக இந்தியா சுயசார்புடன் நிறுவிய ஒன்று. இந்தியா தவிர பாகிஸ்தான், சீனா, இந்தியப் பெருங்கடல் உட்பட 1500 கி.மீ சுற்றளவு வரை இதன் கண்காணிப்பு உள்ளது. ரஷ்யாவின் க்ளாஸ்மாஸ், ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் கலிலியோ போன்றவை மற்ற நாடுகளின் இருப்பிடம் அறிய உதவும் இவ்வகைக் கட்டமைப்புகள்.
மனிதனின் அடங்காத தேடல் ஆர்வத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றமே இதற்கு அடிப்படை. புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வாழ்வை மேம்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
இணையதள அச்சுறுத்தல்களைத் தவிர்க்க, பாதுகாப்பான இணையதள இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க இரண்டு அடுக்கு கொண்ட கடவுச்சொல் (Password) அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது என்று கூறலாம். அதிலும் குறிப்பாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், அரசு இணையதளங்கள், மருத்துவ தகவல்கள்/காப்பீடுகள் என்று நமக்கென தனியாக பக்கங்கள்/கணக்குகளை பார்த்துக் கொள்ள இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை Two factor authentication என்று அழைப்போம். பொதுவாக நமக்கு இது தெரிந்தது தான் நம்முடைய முதல் கடவுச்சொல்லை கொடுத்த பிறகு, பயனரின் திறன்பேசிக்கு குறுஞ்செய்தியாக அல்லது மின்னஞ்சல் வாயிலாக நான்கு அல்லது ஆறு இலக்க எண்ணை அனுப்பி சரியான வாடிக்கையாளரை உறுதி செய்ய அந்த எண்ணை உடனடியாக உள்ளீடு செய்ய வேண்டும். கடவு எண்கள் சரியானது என்று தெரிந்ததும் நம்முடைய பக்கம் திறந்து விடும். இணையதளப் பயன்பாட்டை தரும் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிந்துவிடும், ஆம் இவர் நம்முடைய வாடிக்கையாளர் தான் என்று.
2FA முறையில் பழக்கப்பட்டவர்கள் எளிதாக இதனைச் செய்து விடுவார்கள். புதியவர்களுக்கு சிறிய தலைவலி பிடித்த வேலை தான். "Two factor authentication is better than nothing" என்ற ஒரு சொல்லாடல் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் உண்டு.
ஒருவகையில் இது ஒரு பாதுகாப்பான முறை என்றே பல தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகிறார்கள். பல முன்னேறிய நாடுகளில் பரவலாக அனைத்து அன்றாடப் பயன்பாட்டிலும் மக்கள் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை கொடுத்து வருகிறார்கள்.
Cyber security பற்றிய விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் இதன் பயன்பாடு வரும் நாட்களில் உயரக் கூடும்.கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய நேரம் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்து கொண்டிருந்தன. அலுவலகத்தில் இருந்தால் Firewall உள்ள இணைய தொடர்பில் வேலை செய்வதால் வெளி உலகில் இருந்து வரும் தாக்குதல் தடுக்கப்படும். பணியாளர்கள் தங்கள் வீடுகளில் உள்ள இணையதளம் (Internet provider) மூலம் தங்கள் நிறுவனத்துடன் இணைந்து கொள்ள VPN (Virtual Private Network) மூலம் தொடர்பு செய்து இணைந்து கொள்வார்கள். வேலை பாதுகாப்பான முறையில் நடந்து கொண்டிருந்தது. இந்த பாதுகாப்புக்குப் பின்னணியில் அதாவது அந் நிறுவனங்கள் cyber security க்காக பெரிய கட்டமைப்பில் virus, Malware, spyware போன்றவற்றைத் தடுக்க வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வழக்கம் போல ஒரு நாள் காலையில் மின் அஞ்சல் தளத்தை திறக்க முயன்றேன். முடியவில்லை. பல நிறுவனங்கள் மைக்ரோசாப்ட் அவுட்லுக் வைத்திருப்பார்கள். எங்கள் நிறுவனமும் அதை வைத்திருந்தது. "Password protected, Enter your two step verification. Send verification code?" என்று வந்தது. பிறகு உடனடியாக அதனைப் பெற்று உள்ளே நுழைந்தேன். Cyber security பற்றி பக்கம் பக்கமாக பாடம் எடுத்துக் கொண்டு இருந்தது எங்கள் நிறுவனம். எங்களுக்கு ஏற்கனவே தனியாக VPN இருக்கிறது. VPN தொடர்பு செய்தவுடன் எங்களுடைய நிறுவனப் பணியாளர்கள் எங்களது இணையதளத்திற்குச் செல்ல முடியும். இதுவும் தற்போது மாறி விட்டது என்று தகவல்கள் வந்தன. VPN - Connect செய்ய தனியாக verification code அனுப்பும் செயலியை ஒவ்வொரு பணியாளரும் தங்கள் திறன்பேசியில் பதிவிறக்கம் செய்து அதில் வரும் எண்ணை முப்பது நொடிக்குள் கடவுச்சொல் போல் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் கூறப்பட்டது. சிறப்பான பாதுகாப்பு. நிறுவனத்தைக் கடந்து வேறு எவரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
இவ்வாறான இணையதள பாதுகாப்பு முறைமைகளை பல நிறுவனங்கள், அரசு அமைப்புகள் கொண்டு வர இணைய அபகரிப்பாளர்கள் (Hacker) தான் காரணம். இவர்களது வாடிக்கையாளர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஆகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளும் தப்பவில்லை. ஒன்றிய அரசின் இணையதளங்களை இணையதள திருட்டு அபகரிப்பாளர்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டார்கள் என்று செய்தி படித்திருப்போம்.
ஹேக்கர்களின் கனவு உலகமான அமெரிக்காவில், ஒருமுறை பெட்ரோல், டீசலை பகிர்ந்து கொடுக்கும் Colonial pipeline நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பில் நுழைந்து தகவல் கட்டமைப்பை தங்கள் வசம் (Ransomware attack) செய்து ஒருவாரம் காலம் அமெரிக்காவை ஆட்டம் காண வைத்தார்கள் ஹேக்கர்கள். இந்த நிறுவனம் 4.4 மில்லியன் டாலர்கள் பிட்காயின் மூலம் ஹோக்கர்களுக்கு கொடுத்தது. அடுத்து யாரை குறி வைப்பார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒருமுறை இறைச்சிப் பொட்டலம் (Tyson meat factory) செய்யும் நிறுவனத்தை முடக்கி விட்டார்கள். இவ்வாறான தாக்குதல் நடத்திய மூல இடத்தை தேடிய அமெரிக்க உளவுத்துறை அதெல்லாம் ரஷ்யாவில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று அறிக்கை வெளியிட்டது. அதனை மீட்டெடுக்க பிட்காயினை மீட்டெடுக்கும் பணமாக கொடுத்தது அமெரிக்கா.
ஹேக்கர்கள் பெரும் நிறுவனங்களில் எப்படி நுழைய முடியும்? ஏதேனும் ஒரு பொறியை வைத்து உள்ளே நுழைந்து விடுவார்கள். அந்த பொறியில் சிக்குவது அலுவலக மின்னஞ்சல் பெரிய காரணம்.
கடந்த ஓராண்டாகவே பல நிறுவனங்கள் தங்களின் மின்னஞ்சல் முறைக்கு இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பரவலாகக் கொண்டு வந்து விட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தங்கள் நிறுவனங்களைத் தாண்டி வேறு இடங்களில் இருந்து மின்னஞ்சல் வந்தால் அதனை மேற்கோள் கொடி காட்டி நமக்கு எச்சரிக்கை விடுக்கும். தெரிந்த ஆட்களிடம் இருந்து வந்திருக்கிறது என்பதை உறுதி செய்து நாம் படிக்க வேண்டும்.
சரி, நாம் சமூக வலைத்தளங்களுக்கு வந்து விடுவோம். இன்றைய காலகட்டத்தில் அரசியல் மேடைகளுக்கும், அரசின் அறிவிப்புகளுக்கும், பிரபலங்களின் இருப்பிடத்தைக் காண்பதற்கும், செய்தி நிறுவனங்களின் செய்திப் பகிர்வுக்கும் முதன்மையான ஓரிடம் இருக்கிறது என்றால் அது சமூக வலைத்தளங்களில் தான் என்பது நமக்கு நன்றாகத் தெரியும். மேலே குறிப்பிட்ட எல்லோரும் ஒரு நிறுவனம் சார்ந்து இயங்குபவர்கள். அதனால் அவர்களை எளிதாக சமூக வலைத்தள நிறுவனங்கள் சரிபார்ப்பு செய்துவிட முடியும். அவர்கள் பெயரில் வேறொருவர் போலி கணக்குகள் தொடங்க முடியாது. தொடங்கினாலும் அது போலி என்று தெரிந்துவிடும். பொதுமக்கள் எல்லோரும் இங்கு பயனாளர்களாக இருக்கும் தளத்தில் அனைவரையும் எப்படி நம்பத் தகுந்தவர்களாக சமூக வலைத்தள நிறுவனங்கள் பார்க்கும்?
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற பெரும் சமூக வலைத்தளங்கள் தங்கள் உட்கட்டமைப்பில் ஹேக்கர்கள் நுழையாமல் இருக்க பல அடுக்கு எதிர்ப்பு நிரல்கள் வைத்திருக்கும். இது அனைத்தும் பயனாளர்கள் பக்கத்திற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட, சரிபார்க்கப்பட்ட (verified account) பயனாளர்கள் இதிலிருந்து தப்பித்து விடலாம் என்றாலும் சில ஹேக்கர்கள் அதையும் தூக்கி விடுவார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுடைய டிவிட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி விட்டார்கள். ஓரிரு நாட்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கத்தை மீட்டெடுத்தது அரசு. ஹேக்கர்கள் தான் முடக்கி விட்டார்கள் என்று அவரே தெரிவித்து இருந்தார். நல்லவேளை அணில் இதில் எந்த இடையூறும் செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தாரா என்று நமக்குத் தெரியாது.
அவர் மட்டுமா… விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் பக்கத்தையும் ஹேக்கர்கள் பதம் பார்த்து விட்டார்கள். இவருடைய டிவிட்டர் பக்கம் டிவிட்டரால் சரிபார்க்கப்படாத பக்கம். தனிநபர் தகவல்களை உடனடியாக திருடப்படும் வாய்ப்புகள் இதனால் மிக மிக அதிகம். என்னுடைய டிவிட்டர் பக்கம் களவாடப்படுள்ளது என்று அவரே ஃபேஸ்புக் மூலம் தெரிவித்தார். உடனடியாக அவரே அவருடைய பெயரில் மற்றொரு கணக்கைத் தொடங்கி இதில் என்னைப் பின் தொடருங்கள் என்றார். பிறகு இவரது கணக்கும் திரும்ப கிடைக்கப் பெற்றது.
பேஸ்புக் கணக்குகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை டிசம்பர் 2021ல் முதலில் அமெரிக்காவில் கொண்டு வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே 2018ல் இதன் சோதனை ஓட்டம் தொடங்கி விட்டது. ஆனால் 2022ல் தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதுகாப்பு பயனை அளிக்க முன்வந்தது பேஸ்புக். அதுவும் யாருடைய கணக்குகள்/பக்கங்கள் முடக்கப்படும் என்று தெரிந்து அவர்களை வகைப்படுத்தி அவர்களுக்காக செய்து கொடுத்தது. கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கணக்குகள் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையில் இருப்பதாக தெரிவிக்கிறது பேஸ்புக்.
டிவிட்டர் நிறுவனமும் இதுபோன்ற இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை 2021ல் கொண்டு வந்தது. டிவிட்டரை ஈலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு வரை 2.6% சுறுசுறுப்பான பயனாளர்கள் இதைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதே வேளையில் 76% பயனாளர்கள் குறுஞ்செய்தி வாயிலாக இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் இதை ஈலான் மஸ்க் நம்பவில்லை. அவர் அறிவு உயிர் நாடி ஆச்சே. தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் போலியாக இப்படி குறுஞ்செய்தி அனுப்புகிறது என்றார்.
அவர் டிவிட்டரை வாங்கும் வேளையில் 5% போலி கணக்குகள் இருக்கிறது, இதனை நீக்கினால் மட்டுமே டிவிட்டரை வாங்குவேன், இல்லையெனில் ஒப்பந்தத்தை கைவிட்டு விடுவேன் என்று மிரட்டினார். ஆனால் அந்த மிரட்டல், வேலைக்கு ஆகவில்லை. நீதிமன்றம் சென்றது அப்போதைய டிவிட்டர். பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்றார். ஆம், டிவிட்டரில் போலி Bot Account இதனை நீக்க அவர் படாத பாடு படுகிறார். அதற்காக ஒருமுறை அவரே தனது டிவிட்டர் பக்கத்தை தனிப்பட்ட முறையில் (private lock) பூட்டி வைத்தார்.
ஈலான் மஸ்க் அவர்களுக்கு இருக்கும் அறிவியல் அறிவோடு வணிக அறிவும் அதிகம். டிவிட்டரில் (Verified account) சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் பாகுபாடு பார்ப்பதாகக் கருதினார். அதென்ன பத்திரிக்கையாளர் வெளியிடும் செய்தி மட்டும் தான் உண்மையா. அவர்கள் பேசுவது எல்லாமே சரியா? பொது மக்களுக்கும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வழங்கப்பட வேண்டும் என்றார். இதைக் கேட்ட நமக்கு மகிழ்ச்சி அளித்தது. ஆமா அதுல பாகுபாடு இருக்கிறது என்று பலர் நினைத்தார்கள். "Free speech for everyone" என்று தொடங்கிய அவர் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகளுக்கு மாதா மாதம் சந்தா செலுத்த வேண்டும். ஏற்கனவே உங்கள் கணக்குகள் சரிபார்ப்பு செய்யப்பட்டது என்றால், நீங்களும் சந்தா சொலுத்துவது கட்டாயம் என்றார். இதைக் கேட்ட பல பத்திரிக்கையாளர்கள் கொதித்து எழுந்தார்கள். பிரபல டிவிட்டர் பத்திரிக்கையாளர் ராஜகுமாரி "ஒரு சல்லி பைசா தர மாட்டேன்" என்றார்.
டிவிட்டரில் ப்ளு டிக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்கு என்றால், அது ஒரு தன்மானப் பிரச்சினை என்றே பலரும் கருதுகின்றனர். இதனை முதலீடாக நினைக்கிறது டிவிட்டர். அதன் ஒரு முன்னோட்டம் தான் இனிமேல் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறையை சந்தாதாரர்கள் மட்டும் பயன்படுத்த முடியும். யாரெல்லாம் பணம் செலுத்தி சரிபார்ப்பு செய்யப்பட்டது போல் மாற்றி இருக்கிறார்களோ, அவர்களுடைய கணக்குகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். ஏற்கனவே நீங்கள் "டிவிட்டர் ப்ளு" இல்லாமல் இரண்டு அடுக்கு சரிபார்ப்பு கடவுச்சொல் முறையைப் பயன்படுத்தி வந்தால், இனி உங்களுக்கு வழங்கப்படாது என்று அறிவித்தது டிவிட்டர்.
டிவிட்டரின் அறிவிப்பைத் தொடர்ந்து பேஸ்புக் மெட்டா நிறுவனமும் கட்டணம் செலுத்தும் சந்தா முறையை அறிமுகம் செய்யவிருக்கிறது. சோதனை ஓட்டமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் "Meta Verified" என்ற பெயரில் தொடங்கும். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டு சமூக வலைத்தளங்களிலும் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்குகள் வேண்டும் என்றால் மாதம் $11.99 (for website), $14.98 iOS Android app களுக்கும் என்று தெரிவித்து இருக்கிறது. எல்லையற்ற தேடல், பரந்து விரிந்த பார்வை பரிமாற்றம், குறிப்பாக வாடிக்கையாளர் நிலையத்தில் சந்தாதாரர்கள் நேரடியாகப் பேசலாம்.
நாம் கவனித்து இருப்போம் சமூக வலைத்தளங்களுக்கு வாடிக்கையாளர் நிலையம் கிடையாது. பயனாளர்களுடன் தொலைபேசி உரையாடல் நடத்தும் ஒரு கட்டமைப்பு எந்த சமூக வலைத்தளங்களிலும் கிடையாது. இனிமேல் கட்டணம் செலுத்தி பேஸ்புக் சரிபார்ப்பு செய்யப்பட்ட கணக்காக மாற்றினால் அது நடக்கும்!
பல பில்லியன் டாலர்கள் வருமானமாக ஈட்டும் சமூக வலைத்தளங்களில் கூடுதலாக சந்தாதாரர்கள் முறையைக் கொண்டு வருகிறது. பேஸ்புக் கடந்த சில ஆண்டுகளில் $600 பில்லியன் டாலர்கள் பங்குச்சந்தையில் இழந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
OTT தளங்களில் தொடக்கக் கட்டணம் கூட பேஸ்புக் இனிமேல் வாங்க இருக்கும் கட்டணத்தை விட குறைவு. பதினான்கு டாலர்கள் செலுத்துவதால் நமக்கு என்ன கிடைக்கும் என்று தோன்றுகிறதா? புகழ்பெற்ற மனிதர்களுக்கு புகழ். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு அதே வேடிக்கை. ஆனால் கூடுதல் பாதுகாப்பு.
அப்படியென்றால், இனிமேல் பேஸ்புக்கில் இரண்டு அடுக்கு கடவுச்சொல் முறைக்கும் இந்தக் கட்டணம் கட்டாயம் என்று விரைவில் அறிவிக்கும்.
இணையதள பாதுகாப்பு, கட்டணம் இல்லாமல் எளிதாக கிடைக்காது. முதலில் பயனாளர்களை பழக்கப்படுத்தி விட்டு, பின்னாட்களில் அதற்கு கட்டணம் என்ற கட்டமைப்பே கார்ப்பரேட் நிறுவனங்களின் செய்வினை விளையாட்டு.
- பாண்டி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, நம்மால் பரவலாக அறியப்பட்ட ஒரு தகவல் தொழில்நுட்ப சொல்லாடல் என்றே கூறலாம். இது மனிதர்களால் செய்ய முடியாது என்று பொருள் கிடையாது. மனிதர்களால் செய்யக் கூடியதை இயந்திர மொழி உதவியுடன் அதை மிகைப்படுத்தி நேர்த்தியுடன் நமக்காக செய்து கொடுப்பது. மனிதர்களின் அறிவை, சிந்தனையை, மொழியைப் பயன்படுத்தி அதனை இயந்திர மொழியுடன் வலிமையான மென்பொருளை, தகவல் சேமிப்பை உருவாக்கி, பிறகு அதனையே நம் தேவைக்கு ஏற்ப எளிதாகப் பயன்படுத்தும் அளவுக்கு கொடுப்பது.
முறையே இது மென்பொருள் இயங்கி செயல்படும் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளம், சமூக வலைத்தளங்கள், ரோபோக்கள் (எந்திரன்கள்), கணினி விளையாட்டுகள், அலெக்சா, சிரி போன்ற செவிவழித் தேடல்கள், சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்வது, தானியங்கி ஊர்திகள் (Autonomous Vehicle), மொழிபெயர்ப்பு செயலிகள், வரைபட செயலிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதையும் தாண்டி நீங்கள் எதையாவது சிந்திக்கிறீர்களா? ஆம் நமக்காக தேர்வுகளையும் எழுதவிருக்கிறது. அதுமட்டுமா நீங்கள் எழுத்தாளராக அல்லது கவிஞராக வேண்டும் என்று நினைத்தால் அதையும் செய்ய ஆயத்தமாகி விட்டது, செயற்கை நுண்ணறிவு. இனிமேல் நீங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் கவிஞராக மாறலாம், மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் எழுதலாம். நீங்கள் அல்ல, உங்கள் பெயரில் கவிதைகள் எழுதிவிடும் செயற்கை நுண்ணறிவு. மகுடேஷ்வரன் போல தமிழ் பகுப்பாய்வு செய்யலாம், பத்திரிக்கையாளர்? அதையும் செய்யக் காத்திருக்கிறது. எதையாவது செய்தி போல எழுத நினைத்தால் நமக்காக செய்தியையும் எழுதிக் கொடுக்கும். சங்கித்தனத்திற்கு இடமில்லை, ஏனெனில் பொய் செய்திகளை அது எழுதிக் கொடுக்காது.கடந்த 20 ஆண்டுகால தகவல் தொழில்நுட்ப வரலாற்றில் மாறாமல் இருப்பது தேடல் இயந்திரத்தின் தேடல் முறை என்றே சொல்லலாம். இணையதள தேடல் இயந்திரத்தில் நாம் தேடுவது ஏதோ ஒரு இணையதள தொடுதலை நமக்கு பரிந்துரை செய்யும். இதுவே தான் மாறாமல் இருக்கிறது. தற்போது தேடல் இயந்திரத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற போட்டி தொடங்கி விட்டது.
இணையதள தேடலில் 85% மேலாக கூகுள் நிறுவனத்திடம் இருக்கிறது. மீதமுள்ள பதினைந்து விழுக்காடு மட்டுமே பிற தேடல் நிறுவனத்தில் இருக்கிறது. தேடல் இயந்திரத்தில் அதிகப்படியான நிறுவனங்கள் கிடையாது. மொத்தமாக விரல் விட்டு எண்ணும் அளவுக்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதில் பிரபலமான நிறுவனங்கள் இவை:
Google, Microsoft edge and Bing, Duck duck go, Yahoo, Baidu, Ecosia, Wayback Machine, Wolfram Alpha, Safari, Yandex, Ask, Naver, Million Shot.
இணையதள தேடல் இயந்திரத்தின் அடுத்த முயற்சியாக முன்னணி பெரும் தகவல் தொழில்நுட்ப ஆளுமையான மைக்ரோசாப்ட் நிறுவனம் பிப்ரவரி 7, 2023 அன்று தனது Bing தேடு தளத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட செயற்கை ChatGPT மென்பொருள் நுண்ணறிவு பயன்பாட்டை வாசிங்டன் மாநிலத்தில் இருக்கும் தனது முதன்மை அலுவலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த புதிய தேடுதளம் நம்மோடு பேசுவது போன்ற "Chatbot Technology" வடிவமைப்பு கொண்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் OpenAI என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு புதிய தொடக்க நிறுவனத்துடன் ஓராண்டு காலமாக இணைந்து உருவாக்கிய புதிய நுண்ணறிவு தொழில்நுட்ப தேடு தளத்தை உருவாக்கியது. 2019ல் OpenAI புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து கூட்டாக இந்த முயற்சியை மேற்கொண்டது மைக்ரோசாப்ட்.
சரி, பொதுவாக நாம் எதையாவது தேட வேண்டும் என்றால் உடனே கூகுள் அண்ணாச்சியின் உதவியை நாடுவோம். கூகுள் தான் இணையதள தேடல் இயந்திரத்தின் முன்னோடி மற்றும் வலிமையான சந்தையைக் கொண்டது. நாம் தேடும் சொற்களுக்கு ஏற்ப அதனோடு ஒட்டிய இணையதளத்தை நமக்குக் காட்டும். இதை மாற்றி அமைக்கிறது ChatGPT செயற்கை நுண்ணறிவு கொண்ட மைக்ரோசாப்ட் பிங்க்.
எடுத்துக்காட்டாக நீங்கள் மும்பைக்குச் செல்ல வானூர்தி தேடினால் ChatGPT உங்களுக்கு டிக்கெட் itinerary உருவாக்கி அதை சரி பார்க்கச் சொல்லும். (சோழர்கள் வரலாற்று ஆய்வுகள் பற்றி கேட்க நினைத்தால் ஆய்வுகளைத் தேடி வேறு எங்கும் செல்லாமல் அதுவே கொடுத்து விடும்! சோழர்கள் பற்றிய கட்டுரை சுடச்சுட நீங்களே எழுதிவிட முடியும்! இல்லை உங்களுக்காக எழுதி கொடுத்து விடும் செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் வரக் கூடும்.) பதினைந்தாம் நூற்றாண்டில் புதிய உலகைக் கண்டறிந்த கொலம்பஸ் ஏன் அமெரிக்கா வந்தார்? (அமெரிக்க தொல்குடிகள் தான் கொலம்பஸைக் கண்டு பிடித்தார்கள் என்று ஒரு நகைப்பு கூட உண்டு) என்று கேட்டால் அதற்கும் பதில் வைத்திருக்கிறது.
உங்களுக்கு மோனாலிசா போன்ற வரையப்பட்ட புகைப்படம் தேவைப்பட்டால் உங்களுக்காக வரைந்து கொடுக்கிறது. ஏற்கனவே இருக்கும் புகைப்படங்களைத் தரவில்லை, மாறாக புதிதாக வரைந்து கொடுக்கும்.
ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல மனுஷ்ய புத்திரன் போல் கவிதைகள் வேண்டும் என்றால் சில நூறு கவிதைகள் அதுவே எழுதிக் கொடுக்கும், கட்டுரைகள் எழுதும். முறையே இது புத்தகங்கள், காணொளிக் காட்சிகள் அடிப்படையில் பயனாளிகளுக்கு எழுத்து வடிவமைப்பில் பதில் அளிப்பது போன்று தான் உருவாக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஆய்வு நிறுவனமாக தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு OpenAI நிறுவனம் 2020ல் GPT-3 என ஒன்றை அறிமுகம் செய்தது. இது பயனாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் கிடைக்கப் பெற்றது. பின்னர் இதிலிருந்து மேலும் மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் உருவாக்கியது தான் ChatGPT.
பொதுவாகவே அறிவியல் தொழில்நுட்பம் நமது வேலைகளை எளிதாக மாற்றுவது தான் அடிப்படை. அப்படியென்றால் மாணவர்கள் இதை பயன்படுத்த மாட்டார்களா? பயன்படுத்தினார்கள். யாரென்றால் கல்லூரி, பள்ளி மாணவர்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கும், ஆய்வுகள் செய்து கொடுப்பதற்கும் இதை ஓராண்டு காலமாக பெரிய அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குத் தெரியாமல் போகுமா? எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த அளவிற்கு ஆங்கிலச் சொற்கள் தெரியும் என்பது அவர்களது ஆசிரியர்களுக்குத் தெரிந்திருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவரால் முதுகலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள் போல எப்படி எழுத முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் எழ இதன் பின்னணியில் செயற்கை நுண்ணறிவு அண்ணாச்சி இருப்பது தெரிந்திருக்கிறது. விடுவார்களா பல பள்ளிகள் கல்லூரிகளின் முதல்வர்கள் இதைப் பயன்படுத்தக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டார்கள். "Do not use ChatGPT are any other automated writing tools for school papers. This is cheating and will not be tolerated. If you are caught using ChatGPT are any other automated writing tools for school papers that will be a serious consequences."
ஆனால் இதை மாணவர்கள் பயன்படுத்தவே கூடாது என்று பள்ளி நிர்வாகமும் கல்லூரி நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்; தெரியாததை தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதையே காப்பி செய்து தன்னுடைய படைப்பாக வெளியிடக்கூடாது. இது மாணவர்களின் கற்பிக்கும் திறனை மழுங்கடிக்கும், புதிய சிந்தனைகளை உருவாக்கவில்லை என்று தெரிவித்திருந்தது நியூயார்க் நகர கல்விக் கூட்டமைப்பு.
ChatGPT செயற்கை நுண்ணறிவு எப்படி இது போல் எழுத முடிகிறது? 90களில் இது தொடங்கப்பட்டபோது வணிகம் சாராத அதாவது லாப நோக்கமற்ற நிறுவனமாகவே தொடங்கப்பட்டது. பரவலாக உள்ள அனைத்து புத்தகங்களையும் என்சைக்ளோபீடியா தகவல்களையும் துல்லியமாக சேமித்து வைத்து, அதனை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப பதில் வழங்கும் படியாக மேம்படுத்தப்பட்டது. பின் நாட்களில் இதன் தேவை அதிகரிக்கவே மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் பணம் முதலீடு செய்ததால் இதன் வலிமை இன்னும் கூடியது. யாரோ ஒருவர் நமக்காக நம் வேலையை எளிதாக செய்து முடிக்கிறார் என்றால், நாம் அதை பயன்படுத்துவோம் தானே? இதையே வணிக நோக்கில் உற்று நோக்கினால் என்னவாகும்? இதைத்தான் மைக்ரோசாப்ட் செய்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தவறாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி ChatGPT மென்பொருள் அமைப்பிடம் எழுந்தபோது. அவர்கள் இதை நாங்கள் ஊக்குவிக்கவில்லை என்று பதில் அளித்தார்கள். "We don't want chat GPT to misleading purposes in school or anywhere else. So we are already developing mitigation to help anyone identify text generated by that system" - OpenAI கூறியது.
அண்மையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து வைத்த மைக்ரோசாப்டின் முதன்மை அலுவலர் சத்யா நாடல்லா என்ன கூறினார் என்றால் "மென்பொருட்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் நாம் அதை மறுவடிவமைப்பு செய்யவிருக்கிறோம். செயற்கை நுண்ணறிவினை மனிதர்கள் விருப்பப்படி விதிமுறைகளுக்கு உட்பட்டு உருவாக்க வேண்டும். இதை ஆய்வகத்தில் செய்யப் போவதில்லை. வெளி உலகில் சென்று செய்ய வேண்டும்"
மைக்ரோசாப்ட் தற்போது இதனை கணினி வடிவமைப்பாக மட்டுமே வெளியிட்டுள்ளது, அதுவும் மைக்ரோசாப்ட் பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும். திறன் பேசியில் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் திறன்பேசி செயலிகள் மூலம் இதன் பயன்பாடு வெளிவரும் என்று அறிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட்.
இத்தகைய செயற்கை நுண்ணறிவின் புதிய வடிவமைப்பில் காப்புரிமை சிக்கல் எழாமல் இல்லை. புகைப்படங்கள், புத்தகங்கள் என்று உரிமை பெறாமலேயே பயன்படுத்திய வழக்கு இருந்திருக்கிறது.
வழக்கமான தேடுதளத்திற்கும் புதிய ChatGPT மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் தேடு தளத்திற்கும் வேறுபாடு என்ன என்று நானே பிங் தேடல் இயந்திரத்தில் "மனுஷ்ய புத்திரன் கவிதைகள்" என்று ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கேட்டேன். தற்போது உலகளவில் ஆளுமைகள் பற்றி தொகுப்பு இல்லை என்று கூறியது. ஆனாலும் என்னிடம் சில கவிதைகள் உங்களுக்காக இருக்கிறது என்று திரையில் காட்டியது பிங்.
"கடலில் தேவை கலைஞர் சிலை
சூரியன் உதித்தது காலை
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லை
அதி காலை மணி 5:30"
ஆஹா… இதை நானும் எனது நண்பர்களுக்கு நான் எழுதியது என்று அனுப்ப போகிறேன்.
மைக்ரோசாப்டின் இந்த புதிய முயற்சி கூகுள் அண்ணாச்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. இறுதியாக கூகுள் நிறுவனம் தனது கூகுள் தேடலில் செயற்கை நுண்ணறிவை விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது. அதன் பெயர் பிராட்.
- பாண்டி
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: தொழில்நுட்பம்
எதிர்வரும் பிப்ரவரி 6 ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி என்ற இருவரும் திருமணம் செய்யவிருக்கிறார்கள். இதற்கும் கட்டுரை தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?
காலையில் அவர்களின் திருமணம் முடிந்த பிறகு, மாலை மெட்டாவெர்ஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அது என்ன மெட்டாவெர்ஸ்?!
மெட்டாவெர்ஸில் அவர்களின் திருமண விருந்தினர்கள் மெய்நிகர் (virtual) நிலையில் கலந்து கொள்ளலாம். இது அவர்கள் திருமண வரவேற்பு நிகழ்வின் காணொளிக் காட்சியை இணையத்தில் கண்டு ரசிப்பதை போன்றதல்ல.
அவர்கள் இணையத்தில் நுழைந்து, ஹாரிபாட்டரின் (Harry Potter) ஹாக்வார்ட்ஸ் கோட்டைக்கு (Hogwarts castle) வந்து விடுவார்கள். வீடியோ கேம் போல அவர்கள் மணமக்களின் அலங்காரத்தோடு கூடிய அவதார் (Avatar) பயன்படுத்திக் கொள்வார்கள். அங்கு சாப்பாட்டு மேசையில் காத்திருப்பார்கள். உங்களுக்கு அழைப்பு இருந்தால் நீங்களும் இணையத்தில் நுழைந்து ஒரு அவதாரை தேர்ந்தெடுத்து அவர்களோடும் மற்ற விருந்தினர்களோடும் அளவளாவலாம். ஆனால் உணவு மட்டும் கிடைக்காது. திருமணப் பரிசாக அன்பளிப்பு வவுச்சர்கள் மூலமாகவோ, Gpay மூலமாகவோ வழங்கலாம். கிரிப்டோவாக (crypto) கூட வழங்கலாம் என்று அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு விசேடம் என்னவென்றால் காலம்சென்ற மணமகளின் தந்தையாரின் அவதாரை உருவாக்கி அதில் நடமாட விடுகிறார்கள். மணமகன் ஏற்கனவே பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வந்ததால் அவருக்கு இது எளிதாகத் தெரிகிறது.
உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் திருமண வரவேற்பை தங்களது நண்பர்கள் பார்ப்பதற்கு வசதியாக இப்படி ஏற்பாடு செய்ததாகக் கூறுகிறார். மேலும் தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த டிரேசி (Traci) என்பவரும் டேவ் காக்னான் (Dave Gagnon) என்பவரும் இதேபோல மெட்டாவெர்ஸ் திருமணம் முடித்தது பெரிய செய்தியாக இருந்தது.
இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிறீர்களா? இதுதான் இனி சமூக ஊடகங்களின் ஒரு வடிவமாக இருக்கப் போகிறது. தொழில்நுட்பம் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது.
அண்மையில் ஃபேஸ்புக்கின் மார்க் ஸூக்கர்பெர்க் இதைத் தெளிவாக எடுத்து வைத்திருக்கிறார். இதற்காகவே தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா (Meta) என்று மாற்றியிருக்கிறார். மைக்ரோசாப்ட் கூட மெஷ் (Mesh) என்னுமொரு மெய்நிகர் அனுபவத்திற்கான ஒரு தளத்தினை உருவாக்கி வருகிறது. கூகுளும் ஆப்பிளும் கூட தனித்தனியே இத்தகைய முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இந்த மெட்டாவெர்ஸ் சமூக நிகழ்வுகள் மட்டுமல்லாது கல்வி, மருத்துவம், வணிகம், பொழுதுபோக்கு என்று அனைத்துத் துறைகளிலும் பயன் அளிக்கப் போவதாக இருக்கிறது.
மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் சத்ய நாடெல்லா போன்ற தலைமை செயல் அதிகாரிகளின் பேச்சுக்களில் இருந்து மெட்டாவெர்ஸ் என்பது இணையத்தின் எதிர்கால வடிவம் என்று தெரிகிறது. இப்போது மெட்டாவெர்ஸை பற்றிப் பேசுவது என்பது எழுபதுகளில் இணையத்தை பற்றிப் பேசுவது போலாகும். அப்போது, இணையம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவராலும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனது நண்பர் ஒருவர் அப்போது இணையம் என்பது ஒரு பெரிய நூலகமாக இருக்கும் என்று சொன்னார். ஆனால் இணையம் அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. எவ்வளவோ சேவைகளை அது வழங்குகிறது என்பது பின்னாளில் உறுதியாகிப் போன ஒன்று.
மெட்டாவெர்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னேறி வரும் பல்வேறு தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பினால் விளைவது. அதிகரிக்கப்பட்ட யதார்த்தம் (Augmented Reality), மெய்நிகர் யதார்த்தம் (Virtual Reality), பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவை இந்த மெட்டாவெர்ஸை முன்னோக்கி செலுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால் மெட்டாவெர்ஸ் என்பது பல விதமான மக்கள், தங்களுக்குள்ளும், டிஜிட்டல் பொருள்களோடும், தங்களுடைய மெய்நிகர் மாதிரிகள்(virtual models), அதாவது அவதார்களை வைத்து உறவாடும், எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிற மெய்நிகர் சூழல்களின் (virtual environment), ஒரு வலைப்பின்னல் (network) எனலாம்.
மெட்டாவெர்ஸ் என்னும் இந்த சொல், அறிவியல் புனைவுக் கதைகள் எழுதும் 'நீல் ஸ்டீபன்சன்' என்பவரது 1992 இல் வெளியான "ஸ்நோ கிராஷ்" (Snow Crash) என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டது. அதில் வரும் கதாபாத்திரம் இதேபோல அவதார்களைப் பயன்படுத்தி சமூகத்தில் ஊடாடுகிறது; கடைகளில் பொருட்களை வாங்குகிறது; எதிரிகளை அழித்து ஒழிக்கிறது.
"மனித அனுபவத்தை விட உயர்ந்த" என்று பொருள்படும் மெட்டா (meta) என்ற சொல்லும் யுனிவர்ஸில் (universe) வரும் வெர்ஸ் என்ற சொல்லும் இணைந்து உருவான ஒரு இரட்டைப்பதமே மெட்டாவெர்ஸ்.
மெட்டாவெர்ஸூக்கு மூன்று அடிப்படையான அம்சங்கள் தேவை. ஒன்று, இருத்தல் (presence). அதாவது ஒரு மெய்நிகர் வெளியில் (virtual space) மெய் நிகராக உலாவும் மற்றவர்களுடன் (virtual others) இருப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது. இதற்குப் பெரிதும் உதவுவது தலையில் பொருத்திக் கொள்ளும் காட்சிக் கருவிகள் (head mounted displays).
இரண்டாவது, பரஸ்பர செயல்படும் தன்மை (inter operability). அதாவது ஒரு மெய்நிகர் நிலையிலிருந்து, மற்றொன்றிற்கு தனது மெய்நிகர் பொருட்களுடன், (அதாவது அவதார்கள், டிஜிட்டல் பொருட்கள்) எளிதில் செல்வதும் திரும்ப வருவதுமான ஒரு சூழல்.
மூன்றாவது, தரப்படுத்துதல். (Standardization). இதுவே பல்வேறு தளங்களும் சேவைகளும ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் பரஸ்பர தன்மைக்கு உதவி செய்வதாக அமையும். இதற்கு கை கொடுப்பதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.
மெட்டாவெர்ஸ் இணையத்தின் எதிர்கால வடிவம் என்று சொன்னாலும், மாறுபட்ட கருத்துக்களும் இருக்கின்றன. இப்போது நாம் பயன்படுத்தும் இணையம் Web 2.0. எதிர்காலத்தில் வர இருப்பது Web 3.0. இப்போதுள்ள இணையத்தில் உள்ளடக்கங்கள் நம்மைப் போன்ற பயனர்களால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் நிறுவனங்கள் அதைக் கட்டுப்படுத்தவும், பணமாக்கிக் கொள்ளவும் அவற்றுக்கு வசதிகள் இருக்கின்றன. ஆனால் இனி வரும் இணையத்தில் (Web 3.0) உள்ளடக்கமும் நம்மால் உருவாக்கப்படும். அதைக் கட்டுப்படுத்துவதும், பணமாக்கிக் கொள்வதும் கூட பயனர்களால் முடியும். இதற்கும் முழுவதும் உதவுவது பிளாக்செயின் தொழில்நுட்பம் தான்.
மெட்டாவெர்ஸ்ஸை முன்னோக்கி கொண்டு செல்ல உதவும் ஒரு எஞ்சினாக இந்த எதிர்கால இணையம் Web 3.0 இருக்கும் என்று கூறுகிறார்கள்.
மெட்டாவெர்ஸ், கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரம் கிராமம் வரை வந்து விட்டது. நாமும் அதற்கு தயாராகத்தான் வேண்டும்.
- இரா.ஆறுமுகம்
- உங்கள் வீட்டிலும் ஒரு சூரிய மின் நிலையம்
- மரபணு மாற்றம் (CRISPR-Cas9) தொழில்நுட்பம் - 2020 வேதியியல் நோபல் பரிசு
- போயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன?
- பிளாக்செயின் தொழில் நுட்பம் (Blockchain Technology): தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புரட்சி
- புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஊக்கப்படுத்தும் தொலைநோக்குத் திட்டங்கள்
- ஏன் லினக்ஸ்-க்கு மாற வேண்டும்?
- Facial Recognition தொழில்நுட்பமும் அதன் சர்ச்சைகளும்
- ஆன்லைன் தேர்வுகளை கண்காணிக்கும் Proctoring எனும் செயற்கை நுண்ணறிவு
- 'ZoomBombing' எனும் இணையதள வெறித்தனம்
- தகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்
- எதிர்கால தகவல் தொழில்நுட்ப சந்தையை ஆக்கிரமிப்பு செய்யவிருக்கும் Quantum Computers
- அறிவியல் பிரச்சாரம் செய்வோம்...!
- இது யாரு பண்டிகூட்டா? - டிஜிட்டல் பெருச்சாளி
- நிறமுள்ள ஒளியால் வெண்ணிற ஒளியில் ஏற்படும் நிறமாற்றம்
- நுண் பாக்டீரியாக்களின் மூலம் கிராஃபைன் நானோ பொருட்கள் உற்பத்தி
- சூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்
- நீர்த்திவலையின் இயல்பை விளக்கும் புதிய அறிவியல் விதி
- கிலோகிராமின் வரையறை மாறுகிறது
- பாலினம் கண்டறியப்பட்ட விந்தணுக்கள்: எச்சரிக்கை தேவை
- கறவை மாட்டுப் பண்ணையத்தில் விந்தணுக்களின் பாலினம் கண்டறியும் தொழில்நுட்பம்